Archive for திரை

Vettaiyan

வேட்டையன் – ஒன்று ரஜினிக்கான வணிகப் படம் என்று இயக்குநர் யோசிக்கவேண்டும். அல்லது நல்ல படம் என்று யோசிக்கவேண்டும். இரண்டையும் யோசித்தால் என்னாகும்?

முதல் பாதி பரபர. இடைவேளைக்கான ப்ளாக்கைக் குழந்தை கூட யூகிக்கும் என்றாலும் அந்தக் காட்சி நன்றாகவே இருந்தது. ஏனென்றால் அந்தக் காட்சியின் முக்கியத்துவம். இது போன்ற ஒரு கதையில் நடித்ததற்காகவே ரஜினியைப் பாராட்டவேண்டும் என்கிற அளவுக்கு முக்கியமான காட்சி. எல்லாவற்றையும் பக்காவாக செட் செய்துவிட்டு இரண்டாம் பாதியில் போட்டு வறுத்தெடுத்துவிட்டார்கள்.

இடைவேளை வரை என்கவுண்ட்டர் செய்வது ஏன் தவறே இல்லை என்று பொதுப்புத்தியில் ஆழமாக நிலைநிறுத்திவிட்டு, ஒரே காட்சியில் அது தவறு என்று கொண்டு போனால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

இடைவேளைக்குப் பிறகான படம் அமிதாப் vs ரஜினி என்று இருக்கும் என நினைத்துப் பார்த்தால், அமிதாப் ரஜினியின் வாலாகிவிடுகிறார். இதில் ஜோக்கர் வேடத்தில் ஃபகத். பாவம்.

சமீப கால இயக்குநர்களைப் பிடித்தாட்டுவது டிவிஸ்ட் என்னும் வியாதி. அதற்காகத் திரைக்கதையைக் கோட்டைவிடுகிறார்கள். யார் வில்லன் என்று முதலில் காட்டாமல் இருக்க இது என்ன த்ரில்லர் படமா? யார் வில்லன் என்று நமக்குத் தெரிவதற்குள் பாதி உயிர் போய்விடுகிறது. இதே தவறுதான் அண்ணாத்தே படத்திலும். ஒரு திரைப்படத்துக்கு ஒரு ஹீரோ என்றும் ஒரு வில்லன் என்றும் இருப்பது எப்போதுமே பலம்.

அடுத்த பிரச்சினை, ரஜினியை வைத்துக்கொண்டு நீட்டுக்கு எதிராகப் பேசுவதிலும் இயக்குநருக்குச் சிக்கல். நீட்டை ஆதரித்தாலும் சிக்கல். எனவே சுற்றி வளைத்து கோச்சிங் செண்ட்டர்களைக் குறி வைக்கிறார்கள். படம் கோச்சிங் செண்டருக்கு எதிரானதா நீட்டுக்கு எதிரானதா என்பதிலும் இயக்குநருக்குத் தெளிவில்லை.

கல்வியில் சமத்துவம் என்றால் அரசே நடத்தும் பல தேர்வுக்கும் அது பொருந்தவேண்டும். இயல்பில் அது சாத்தியமே இல்லை. ஏதோ ஒரு கட்டத்தில் நுழைவுத் தேர்வுகளை நீங்கள் தவிர்க்கவே முடியாது. கல்வியில் சமத்துவத்தை ஆதரிக்கிறோமா, நீட்டை எதிர்க்கிறோமா அல்லது கோச்சிங் செண்டரின் ஏமாற்றுத் தனத்தை எதிர்க்கிறோமா என்று இயக்குநருக்குக் குழப்பமோ குழப்பம்.

என்கவுண்ட்டருக்கு எதிரான திரைப்படம் என்றால் உண்மையில் திரைக்கதை ரஜினி vs அமிதாப் என்றிருந்திருக்கவேண்டும். நல்ல வாய்ப்பையும் களத்தையும் தவற விட்டிருக்கிறார் இயக்குநர்.

ரஜினி படம் என்று பார்த்தால் ரஜினிக்கான மாஸ் சீனோ, புல்லரிப்புக் காட்சியோ ஒன்று கூட இல்லை. ரஜினியின் நடிப்புக்கேற்ற காட்சிகளும் இல்லை. இதைவிட அராஜகம், ரஜினியும் இல்லாமல், அமிதாப்பும் இல்லாமல், ஃபகத்தும் இல்லாமல் படம் முழுக்க ஏகப்பட்ட காட்சிகள்.

ரஜினிக்கு நடக்க முடியவில்லை. அதை எப்படி சமாளித்துப் படமெடுக்க என்று இயக்குநருகுத் தெரியவில்லை. இந்தக் காலப் படத்தில் ஏன் இத்தனை சண்டைக் காட்சிகள்?

ஒரு பெண் கொல்லப்படுவதை அதிகம் முறை மீண்டும் மீண்டும் காட்டப்பட்ட சாதனைத் திரைப்படமாக இது இருக்க வாய்ப்பு அதிகம். எத்தனை தடவைப்பா காமிப்பீங்க? இந்தப் பெண் சாகும் காட்சியில் உயிர்கொள்ளும் திரைப்படத்தை அராஜகமாகக் கொன்றுவிட்டார் இயக்குநர்.

என்கவுண்ட்டருக்கு எதிரான படம் என்ற போர்வையில் நீட்டுக்கு எதிரான படமாகவும் அது இருந்து அது ரஜினி படமாகவும் இருக்கவும் ஆசைப்பட்டு அதில் கார்ப்பரேட் எதிர்ப்பையும் சேர்த்து ஒரு தட்டில் பரிமாறினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது திரைப்படம். இத்தனை குழப்பங்களுடன் வந்தால் ஒரு படம் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது வேட்டையன்.

ஒரு தடவை பார்க்கலாம்.

Share

Hadinelentu kannada movie

ஹதினேழென்ட்டு (K) – 2022ல் வந்த கன்னடத் திரைப்படம். தொடக்க நொடி முதல் இறுதி நொடி வரை இத்தனை பரபரப்பான ஆனால் தீவிரமான கதையைச் சொல்லும் ஒரு திரைக்கதையை நான் பார்த்ததில்லை என்றே சொல்ல வேண்டும். உலிதவரு கண்டந்தே, காந்தாரா போன்ற திரைப்படங்களைத் தந்த கன்னடத் திரையுலகம் பெருமை கொள்ள இன்னுமொரு படம். ஜாதி ரீதியாகப் பிராமணர்களுக்கு இப்படம் வருத்தத்தை ஏற்படுத்தும் என்றாலும், எந்த ஒரு ஜாதியையும் விட்டு வைக்காமல், சந்தர்ப்பவாதிகள் எங்கெங்கும் நிறைந்திருக்கிறார்கள் என்பதையும் அவர்களுக்கு உள்ளேயே ஆங்கே மனிதமும் இருக்கிறது என்பதையும் ஒருங்கே சொல்லும் இதைப் போன்ற திரைப்படங்கள் மிகக் குறைவு. யூடியூபில் சப்டைட்டிலுடன் கிடைக்கிறது. உடனே பார்த்து விடுங்கள்.

Share

Ragu Thatha Tamil movie review

ரகு தாதா – ஹிந்தி எதிர்ப்பில் சொந்தச் செலவில் சூனியம்.

படம் இடைவேளை வரை சுமார். அதன் பிறகு அறுவை. படத்தின் ப்ளஸ் என்று பார்த்தால், நடிகர்களின் நடிப்பு. அனைவருமே நன்றாக நடிக்கிறார்கள். அதிலும் அண்ணன் மற்றும் அண்ணியின் நடிப்பு குறிப்பிடவேண்டியது. படத்தின் மேக்கிங் நன்றாக இருக்கிறது. இயக்குநர் அரசியல் ஜல்லியைக் கைவிட்டால் பெரிய அளவில் வர வாய்ப்பிருக்கிறது. படத்துக்கு ரகு தாதா என்று பெயர் வைத்திருப்பது சிறப்பு.

ஹிந்தி எதிர்ப்பை வைத்துக்கொண்டு எப்படி அரசியல் கட்சிகள் ஜல்லி அடிக்கின்றனவோ அதே போல் இயக்குநரும் அடித்த ஜல்லி கொஞ்ச நஞ்சமல்ல. ஹிந்தி ஒழிக என்று கத்துகிறார்கள். ஆனால் கடைசியில் எங்கே ஹிந்தி ஒழிகன்னு நாங்க சொன்னோம், ஹிந்தித் திணிப்பு ஒழிகன்னுதானே சொன்னோம் என்று சொல்லி காமெடி செய்கிறார்கள்.

ஆனாலும் இயக்குநர் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளத் தவறவில்லை.

பெரிய கொள்கைவாதியாக ஹீரோவைக் காண்பிக்கும் இயக்குநர், பெரிய அரசியல் பிரசாரப் படம் போல என்று நினைத்துப் பார்க்கும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தருகிறார். எப்படி கொள்கைவாதிகள் வாய் கிழியப் பேசினாலும் உள்ளுக்குள் அவர்கள் பெண்ணியத்தின் எதிரிகளாகவும் அடிப்படைவாதிகளாகவும் இருப்பார்கள் என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறார். இதைத்தானே நாங்களும் சொல்கிறோம் என்று என்னை சந்தோஷப்பட வைத்துவிட்டார். அதிலும் அந்த ஹீரோ ஈவெராவை அடிக்கடி மேற்கோள் காட்டுபவர். மேற்கோள் மட்டும் காட்டுபவர்.

இதை இயக்குநர் ஹீரோவுடன் மட்டும் நிறுத்தவில்லை. ஹீரோயினையும் இந்தச் சிப்பிக்குள் அடைத்துவிட்டார். அத்தனை கோஷம் போட்டு ஹிந்திக்குத் தார் பூசும் பெண், தனக்கு ஒரு தேவை என்று வந்ததும் ஹிந்தி கற்கத் தயாராகிறாள். இதைத்தானே நாங்களும் சொல்கிறோம் மொமண்ட் 2.

ஹிந்தி தன் புத்திக்கு ஒத்துவரவில்லை என்பதும் அந்தப் பெண் கொள்கைச் சிங்கம் ஊழலுக்குத் தயாராகிறது. பேப்பரை மாற்றி ஹிந்தித் தேர்வில் ஜெயிக்கிறது. இதைத்தானே நாங்களும் சொல்கிறோம் மொமண்ட் 3.

படத்தில் ஹிந்தி பேசும் அனைவரும் அத்தனை நல்லவர்கள். யதார்த்தவாதிகள். இ.நா.சொ. மொமெண்ட் 4 மற்றும் சொந்தச் செலவில் சூனியம் மொமெண்ட் 2.

ஹிந்திக்காரன் தனக்குத் தேவை என்றால் சுத்தமாகத் தமிழைக் கற்றுப் பேசுகிறான். அவனுக்குத் தமிழ் மேல் எந்த வெறுப்பும் இல்லை. எல்லா மொழிகள் மேலும் அவனுக்குக் காதல் இருக்கிறது. இ.நா.சொ. மொமெண்ட் 4.

கதாநாயகி கல்கத்தா போக முடிவெடுப்பதன் காரணம், பப்ளிஷர் அங்கதான் இருக்காங்களாம். இவள் எழுதுவது தமிழில். அங்கே என்ன பதிப்பாளர் இருக்கிறார்? கொடுமை. கதாநாயகி இன்னொன்றும் சொல்கிறாள். இவளது எழுத்து இந்தியா முழுமைக்கும் பரவவேண்டுமாம். அப்ப ஹிந்தி படி! இ.நா.சொ. மொமெண்ட் 5.

படத்தில் இரண்டு பிராமண கதாபாத்திரங்கள். ஒரு பிராமண கேரக்டர் கதாநாயகியின் தோழி. அவள் மேல் குறையே சொல்ல முடியாது. அத்தனை நல்லவள்! இன்னொரு பிராமண கதாபாத்திரம் ஹிந்தி சபாவின் ஆசிரியர். அவர் மேலும் குறை சொல்ல ஒன்றுமில்லை. அவர் ஹிந்தித் திணிப்பை எங்கேயும் செய்யவில்லை. ஹிந்தி சொல்லித் தருகிறார், அவ்வளவுதான். ஆனால் ஹீரோயின் தமிழ் வெறிகொண்டு அந்த இடத்தை அடித்து நொறுக்குகிறாள். ஏன், அந்த இடத்தைப் பூட்டுப் போட்டால் மட்டும் போதாதா? ஹிந்தி ஒழிப்பிற்கு முன்னணியில் நிற்கும் கதாநாயகியின் தாத்தா தன் பேத்திக்குத் திருமணம் என்று வரவும், சபா நடக்கட்டும் என்று சொல்லிவிடுகிறார். என்ன அருமையான திருப்பம்!

உண்மையில் ஹிந்தித் திணிப்பைச் செய்வது வங்கி. அங்கே சம்பளத்துக்காக வாய் பொத்தி, ஹிந்தித் தேர்வுக்குத் தயாராகும் கதாநாயகி, ரௌடித்தனமெல்லாம் செய்வதில்லை. வங்கியை அடித்து உடைப்பதில்லை. வேலையை விடுகிறேன் என்று வாய் தவறிக் கூட சொல்வதில்லை. ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புக் கொள்கைப் பிடிப்பு என்றால் சும்மாவா!

இது ஹிந்தி எதிர்ப்புத் திரைப்படம் என்று மக்களை நம்ப வைத்தது பற்றிப் புகாரில்லை. ஆனால் யாரோ இயக்குநரையும் நம்ப வைத்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இது ஹிந்தித் திணிப்பை எதிர்ப்பதாகச் சொல்லி, கொள்கை அரசியல் என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றுபவர்களின் முகத்திரையைக் கிழிக்கும் திரைப்படம். 🙂

Share

Chattambi (M)

மகாநதி திரைப்படத்தில் கமலை ஆசை காட்டி மோசம் செய்வது ஒரு மலையாளி. அதில் நடித்ததும் ஒரு மலையாளி. கொச்சின் ஹனீஃபா.

சட்டம்பி என்றொரு மலையாளத் திரைப்படம். 2022ல் வெளியான படத்தை நேற்றுதான் பார்த்தேன். சுமாரான படம்.  நாம் எப்படி மலையாளிகளைக் காண்பிக்கிறோமோ அதே போல் தமிழர்களை பாண்டி என்று அழைக்கும் இன்னுமொரு திரைப்படம். இதில் ஹீரோ மட்டும் ஒரு தமிழனை நம்புகிறான். ஆனால் ஹீரோவின் எதிரி ஹீரோவிடம் தமிழனை நம்புவதற்குப் பதிலாக (கெட்டவார்த்தை) என்று சொல்கிறான். அதையும் மீறி ஹீரோ தமிழனை நம்புகிறான். கடைசிக் காட்சியில் அந்தத் தமிழன் ஹீரோவைப் பணத்துக்காக நயவஞ்சமாக, ஹீரோவின் தலையில் கல்லைப் போட்டுக் கொல்கிறான். அந்தத் தமிழன் பாத்திரத்தில் நடித்திருப்பது தமிழ் நடிகர் சோம சுந்தரம். மிக நல்ல நடிகர். நடிப்புக்கு மொழி அவசியமே இல்லை என்று அவர் எப்போதும் உரக்கச் சொல்வார் என்று நம்புகிறேன், ஜி என்ற வார்த்தையைக் கேட்டாலே எரிச்சலா வருது என்று சொல்லி நடித்ததும் நடிப்பு மட்டுமே என்று சொல்வார் என்று நம்புவதைப் போல.

Share

ஜமா

ஜமா – இத்தனை தீவிரமான படமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. பல குறைகள் இருக்கின்றன. முதலில் நிறைகளைப் பார்த்துவிடலாம்.

இயக்குநருக்கு ஒரு தீவிரமான திரைப்படம் என்றால் என்ன என்று தெரிந்திருக்கிறது. தன் கதையின் மீதும் காட்சிமொழியின் மீது நம்பிக்கை இருக்கிறது. பெரிய அளவில் முத்திரை பதிப்பதற்கான அழுத்தமான தடயங்கள் தெரிகின்றன. சாதிக்க வாழ்த்துகள்.

இந்தக் கதை அவதாரம் திரைப்படத்தை நினைவூட்டுவதாகச் சிலர் எழுதி இருந்தார்கள். என்னளவில், இல்லை என்றே சொல்வேன். பெண் வேடம் கட்டும் ஒற்றை இழையைத் தவிர, இரண்டுக்கும் தொடர்பே இல்லை. இன்னும் சொல்லப் போனால், எடுத்துக்கொண்ட களம் என்ற வகையில், அவதாரத்தைவிட இத்திரைப்படம் எள்ளளவு கூட அங்கும் இங்கும் அலைபாயவில்லை. அவதாரம் படத்தில் இருந்தது போன்ற, கொலை, கற்பழிப்புக் காட்சிகள் இதில் இல்லை.

இளையராஜாவின் பின்னணி இசை பல இடங்களில் அபாரம். ஆனால் கூத்துக்கு ஏற்ற பாடல் ஒன்று கூட இல்லை. அவதாரம் போன்ற ஃபீல் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இப்படி இயக்குநர் யோசித்துவிட்டாரோ என்னவோ. கடைசியில் கதாநாயகன் தலையில் அம்மனைச் சுமந்து வரும் காட்சியில் ஒரு பாடல் வைத்திருக்கலாம்.

நம் மண்ணின் மரபான பக்தியை இத்திரைப்படம் வெகு சிறப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கிறது. இன்றைய இயக்குநர்கள் பக்தியைக் காட்டினால் அது ஹிந்து மதத்துக்கு ஆதரவு தெரிவித்ததாகிவிடும் என்ற போலி முற்போக்குத்துவத்தில் மயங்கிக் கிடக்க, இத்திரைப்படம் அவ்வகைக்குள் சிக்கவில்லை என்பது பெரிய ஆறுதல்.

இன்னொரு முக்கியமான ஆச்சரியம், பல காட்சிகள் படு யதார்த்தம். நம் கிராமத்தில் நேரில் நடப்பது போன்ற ஓர் உணர்வு. இத்தனைக்கும் நடிப்பவர்கள் அத்தனை பேரும் முகம் தெரியாத நடிகர்கள். அசத்திவிட்டார்கள். உறுத்திக்கொண்டு தெரியும் சென்னை வட்டார வழக்கு போல் அல்லாது, இயல்பான, தேவையான அளவுக்கான வட்டார வழக்கு கூடுதல் பலம்.

ஆனாலும் ஏன் ஒரு திரைப்படமாக இது முழு அனுபவத்தைத் தரவில்லை? அற்புதமான பல நீண்ட காட்சிகளுக்கு இணையான அமெச்சூர் காட்சிகளும் இருப்பது. ஒரே இடத்தில் கதை சுற்றி சுற்றி வருவது போதாது என்று, ஒரே ரீதியிலான வசனங்கள். அதுவும் குறிப்பாக முதல் முக்கால் மணி நேரம் ரொம்பவே இவை அதிகம்.

இது கதை காதல் கதையா, ஜமா உரிமைக் கதையா என்கிற தேவையற்ற குழப்பம் இன்னொரு மைனஸ். ஜமாதான் கதை என்றான பிறகு, கதை கொள்ளும் வேகம் முன்பகுதியில் இல்லை.

ஹீரோவாக வரும் நடிகர் ( இயக்குநரே நடித்திருக்கிறார்) உயிரைக் கொடுத்து நடிக்கிறார் என்றாலும், பல காட்சிகளில் ஏனோ ஒட்டவில்லை. குருவி தலையில் பனங்காய் வைத்தது போன்று ஆகிவிட்டது. இது மிகப்பெரிய சறுக்கல்.

சேத்தன் மிக அருமையாக நடித்திருக்கிறார். ஆனாலும் நாசரோ பிரகாஷ்ராஜோ நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதேபோல் ஹீரோவின் அப்பா கேரக்டருக்கும் இன்னொரு நல்ல நடிகரை தேர்ந்திருக்கவேண்டும். இந்த மூன்று விஷயத்தில் நடந்ததுதான் படத்தை இன்னொரு தளத்துக்குக் கொண்டு போகாமல் கைவிட்டு விட்டது.

துணை நடிகர்களின் இயல்பான நடிப்பு இத்திரைப்படத்துக்கு பெரிய பலம். அவர்களே இப்படத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். அவர்களுக்காகவாவது இத்திரைப்படத்தை அவசியம் பாருங்கள்.

இயக்குநருக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

பிரைமில் கிடைக்கிறது.

Share

கல்கி 2898 AD

கல்கி 2898 AD – மகத்தான படைப்பாக வர வாய்ப்பிருந்தும் அதை இழந்துவிட்ட ஒரு படம். கடைசி 1 மணி நேரம் படம் பிரம்மாண்டம். ஆனால் முதல் இரண்டே கால் மணி நேரம் பேசியே கொன்றுவிட்டார்கள். அதிலும் பிரபாஸ் அறிமுகக் காட்சியை இத்தனை நீளமாக எந்த அறிவார்ந்த இயக்குநரும் யோசித்திருக்க மாட்டார்.

கிட்டத்தட்ட இன்னொரு குருக்ஷேத்திரப் போரை யோசித்ததெல்லாம் நல்ல கற்பனைதான். அமிதாப் கலக்கல். பிரபாஸ் சொதப்பல். மற்ற யாருக்கும் பெரிய வேடமில்லை. முக்கிய ஹீரோவான கிராபிக்ஸ் அட்டகாசம். பல ஆங்கிலத் திரைப்படங்களில் நாம் பார்த்ததுதான் என்றாலும் இந்தியா இதைச் செய்யும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

முதல் பாகத்தை முடித்த இடம் புல்லரிப்பு. இரண்டாம் பாகத்தில் கர்ணன்தான் கதாநாயகன், நல்லவன் என்று எதையாவது சொல்லி நம்மைச் சாகடிக்காமல் இருக்கவேண்டும். குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்லுங்கள். மார்வெல் திரைப்படங்களைப் பார்த்துப் பழகிய குழந்தைகளுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.

Share

குருவாயூர் அம்பல நடையில்

குருவாயூர் அம்பல நடையில் (M) – இருபது வருடங்களுக்கு முன்பு வந்த நந்தனம் மலையாளிகளால் கொண்டாடப்பட்டது. பிரிதிவிராஜ், நவ்யா நாயரின் முதல் படம். அதைத் தேவையே இல்லாமல் நாஸ்டால்ஜியாவுக்காகத் தொட்டுக்கொண்டு ஒரு காமெடிப் படம். ஒரேடியாக வாய் விட்டுச் சிரிக்கும்படியாகவும் இல்லை. வெறுப்பாகவும் இல்லை. லாஜிக் மறந்துவிட்டுப் பார்த்தால் கொஞ்சம் பிடிக்கலாம். முன்கணிக்கக்கூடிய எளிய திரைக்கதை. ஆனாலும் கடைசி இருபது நிமிடங்கள் சுவாரஸ்யம்தான். யோகிபாபு அறை வாங்கும் காட்சி நல்ல சிரிப்பு.

தமிழ்நாட்டு வசூலுக்காக இதிலும் தமிழ்ப்பாட்டு உண்டு. அழகிய லைலா பாடல்‌ என்பதால் ஒன்றும் ஒட்டவில்லை.‌ ஏன் இளையராஜாவின் பாடல்கள் இதற்குத் தேவை என்று முன்பே மஞ்ஞும்மெல் பாய்ஸுக்குத் தெரிந்திருக்கிறது.

ஒருமுறை பார்க்கலாம். ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.

Share

கிருஷ்ண சந்திரன் பேட்டி

கிருஷ்ண சந்திரனின் (மலையாளப்) பேட்டியைப் பார்த்தேன். மனதை மயக்கும் பல தமிழ்ப் பாடல்களை (அள்ளி வெச்ச மல்லிகையே, ஏதோ மோகம்) 80களில் ராஜாவின் இசையில் பாடியவர். பேட்டியில் அருவி போலக் கொட்டுகிறார். மனதில் எவ்விதக் களங்கமும் இல்லாதவர்கள் மட்டுமே இப்படிக் கடகடவெனக் கொட்ட முடியும் என்று தோன்றியது.

யேசுதாஸ் உங்களது வளர்ச்சியைத் தடுத்தாராமே என்று கேட்கப்பட்ட கேள்விக்குச் சொல்கிறார், “இதைக் கேட்கும்போது ஒரு பக்கம் சிரிப்பும் இன்னொரு பக்கம் கோபமும் வருகிறது. காலையில் 7 மணிக்கு யேசுதாஸ் படி இறங்கினால், இரவாகி வீட்டுக்கு வரும் முன்பு ஒரு நாளில் 14 பாடல்கள் வரை பாடுவார். நான் பிஸியாக இருந்தபோது 4 பாடல்கள் வரை ஒரு நாளில் பாடி இருக்கிறேன். அதுவே எத்தனை அழுத்தமான வேலை என்று எனக்குத் தெரியும். அப்படி இருக்க இன்னொருவருக்கு எதிராக சதி செய்ய யேசுதாஸுக்கு எங்கே நேரம்? யேசுதாஸை நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும் அவர் எத்தனை நல்ல நேர்மையான மனிதர் என்று” என அடுக்கிக்கொண்டே போகிறார். கிருஷ்ண சந்திரன் பாட வரும் முன்பே யேசுதாஸ் மலையாளிகளின் கான கந்தர்வனாகிவிட்டார். கிருஷ்ண சந்திரன் சினிமாவில் பாடுவதற்கு முன்பே யேசுதாஸுக்கு நேரடிப் பழக்கம். யேசுதாஸின் கச்சேரிகளில் தம்புரா கூட ஒரு முறை வாசித்திருக்கிறாராம்.

திரையுலகம் எப்படி காஸிப்புகளில் மூழ்கித் திளைக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். என்ன பிரச்சினை என்றால், அத்தனையுமே காஸிப் என்று ஒதுக்கிவிடவும் முடியாது என்பதுதான்.

80களின் பிற்பகுதியில் மனோ பிரபலமாகப் பாடத் தொடங்கிய பின்பு, குமுதம் இதழில் காஸிப்பாகச் செய்தி வெளியிட்டிருந்தார்கள். அத்தனை வாய்ப்பும் மனோவுக்குப் போவதால் எஸ்பிபி மனோ மேல் கடுப்பில் இருக்கிறார் என்று. எஸ்பிபி மறைந்தபோது மோட்ச தீபம் ஏற்றினார் மனோ.

Share