Archive for திரை

நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்)

எனது ‘நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள்’ புத்தகங்களுக்கு நான் எழுதிய முன்னுரை இங்கே. முதல் பாகம் ரூ 140. இரண்டாம் பாகம் ரூ 170. இரண்டு புத்தகங்களையும் சேர்த்து ஆன்லைனில் டயல் ஃபார் புக்ஸ் மூலம் ஆர்டர் செய்ய: https://dialforbooks.in/product/1000000030652_/ (தனித்தனியாகவும் வாங்கிக் கொள்ளலாம்.)

போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ்: 044-49595818 | 9445901234

வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய (மெசேஜ் மட்டும்): டயல் ஃபார் புக்ஸ்: 9500045609

பாகம் 2க்கான முன்னுரை:

தமிழ்த் திரையுலகம் புதிய அலை இயக்குநர்களின் வருகைக்குப் பின்பு மிக வேகமாக ஹிந்து – ஹிந்துத்துவ – இந்திய வெறுப்புக்குள் தீவிரமாகப் பயணிக்கிறது. ஹிந்துக்களைக் கிண்டல் செய்யும் ஒரு காட்சி இல்லை என்றால் சென்சார் சான்றிதழ் கிடைக்காது என்னும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பும் நிலைமை இப்படித்தான் இருந்தது என்றாலும், எவ்வித அரசியலும் அற்ற படங்களும் வந்துகொண்டிருந்தன. ஆனால் இன்று எந்த ஒரு படத்திலும் தேவையே இல்லாமல் ஹிந்துக்களைக் குறை சொல்வது என்பது வேண்டுமென்றே திணிக்கப்படுவதைப் பார்க்கலாம்.

தமிழ்த் திரையுலகம் இந்த வகையான ஹிந்து எதிர்ப்புச் சொல்லாடல்களை மூன்று வகைகளில் பயன்படுத்துகிறது. ஒன்று மிக நேரிடையான அரசியல் படங்கள். காலா, ஜிப்ஸி போல. அடுத்ததாக, படத்தில் குறியீடுகளைப் பரப்புவது. ஆர்.கே.நகர் போல. அடுத்ததாக, தேவையே இல்லாமல் காட்சிகளையோ அல்லது வசனத்தையோ வைப்பது. ப்ரேம் ப்யார் காதல் (கதாநாயகன் அணிந்திருக்கும் ஒரு டீ ஷர்ட்டில் சிலுவையுடன் பிலீவ் மி என்று இருக்கும்) அல்லது சிலுக்குவார்பட்டி சிங்கம் போல. அல்லது கொஞ்சம் கூட முக்கியமற்ற ஒரு நடிகர் ஒரு வசனத்தைச் சொல்லிவிட்டது போவது. இப்படிப் பல முனைத் தாக்குதல்களில் இறங்கி இருக்கிறது தமிழ்த் திரையுலகம்.

இவையெல்லாம் சாதாரணமாக நடப்பது, அதற்கு தேவையற்ற கவனம் தருகிறோம் என்று சிலர் சொல்வதைக் கேட்கிறேன். திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் எத்தனை மெனக்கடலுடன் எத்தனை பேர் ஈடுபாட்டில் வருகிறது என்று புரிந்தால் இப்படிச் சொல்ல மாட்டார்கள்.

என் நண்பர் ஒருவர் சொன்ன விஷயம் அது. அவர் ஒரு ஹிந்து அமைப்புக்கு உதவும் சிறிய கிளை அமைப்பில் பொறுப்பில் இருக்கிறார். அவரது அலுவலகத்தை ஒரு படம் எடுக்கப் பயன்படுத்திக்கொள்ளக் கேட்டிருக்கிறார்கள். அலுவலகமும் அதிகம் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டார்கள் போல. அந்த அலுவலகத்தின் வரவேற்பு மேஜையில் ஒரு விவேகானந்தர் சிலை இருக்குமாம். அது வரக்கூடாது என்று படத்தின் இயக்குநர் சொல்லி இருக்கிறார். படக்குழு அந்த விவேகானந்தர் சிலையை எடுத்து ஓரமாக வைத்துவிட்டது. பின்னர் பின்னணியில் கார்ல் மார்க்ஸ் படம் வரவேண்டும் என்று சொல்லி அங்கே மார்க்ஸை ஒட்ட வந்திருக்கிறார்கள். அப்போதுதான் அலுவலகத்துக்கு உறைத்திருக்கிறது, இதையெல்லாம் யோசிக்காமல் சம்மதித்துவிட்டோமே என்று. அந்தப் படம் வெளியாகவில்லை என்பது ஒரு நிம்மதி. ஆனால் இதில் இன்னொரு சோகமும் உள்ளது. அந்த இயக்குநர் போகும்போது அழகான அந்த விவேகானந்தர் சிலையைக் கொண்டு போய்விட்டாராம்! அதாவது படத்தின் சட்டகத்துக்குள் விவேகானந்தர் வரத் தேவையில்லை. கார்ல் மார்க்ஸ் வரவேண்டும். ஆனால் விட்டுக்கு விவேகானந்தர் சிலை வேண்டும்!

எனவே ஒரு காட்சியில் ஒருவர் நாமம் போட்டு வருகிறார் என்றாலோ அல்லது உத்திராட்சை அணிந்து வருகிறார் என்றாலோ அல்லது எவ்வித அடையாளமும் இன்றி வருகிறார் என்றாலோ அல்லது பின்னணியில் ஏதேனும் ஒரு படம் இருக்கிறது என்றாலோ அது எதுவுமே தற்செயல் அல்ல. மிகத் தெளிவாக யோசித்தே வைக்கப்படும் ஒன்றுதான். நாம் அதை எதிர்கொண்டாகத்தான் வேண்டும்.

சிலர் கேட்டார்கள், முன்பெல்லாம் திரைப்படத்தில் வில்லனுக்கு கிறித்துவப் பெயர்கள் வருகின்றனவே என்று. உண்மைதான். ஆனால் அவற்றுக்கும் இன்று நிகழ்வதற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. அன்று நிகழ்ந்ததன் பின்னால், திரைப்படத்தில் தொற்றிக்கொண்டிருந்த (இப்போதும் இருக்கும்) ‘வழக்கத்தை அப்படியே பின்பற்றுவது’ என்ற எண்ணம் மட்டுமே. இதே திரைப்படங்களில் அனாதை ஆசிரமம் என்றாலே கிறித்துவ ஆசிரமங்கள் காட்டப்படுவதைப் பார்க்கலாம். இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம், இதன் பின்னணியில் எவ்விதக் கருத்துத் திணிப்பும் இல்லை என்பதை. ஆனால் இன்று வரும் திரைப்படங்களில் வரும் ஹிந்து எதிர்ப்பு மிகத் தீவிரமான உள்நோக்கத்தோடு, அரசியல் நோக்கத்தோடு புகுத்தப்படுகிறது. இதுதான் வித்தியாசம். எனவே அரசியல் நோக்கத்தோடு செய்யப்படும் விஷயத்தை அதே அரசியல் நோக்கத்தோடுதான் எதிர்க்கவேண்டும். இதில் நடுநிலை என்பதும் கலை என்பதும் அடிபட்டுப் போய்விடும். எந்தப் படம் அரசியல் சார்பின்றி கலையைப் பேசுகிறதோ அந்தப் படத்தை மட்டுமே கலையை மட்டும் கொண்டு எடை போட முடியும்.

ஏன் தமிழ்த் திரையுலகம் இப்படி இருக்கிறது? மிகப் பெரிய கேள்வி இது. படத்தை யார் தயாரிக்கிறார்கள், அவர்களது நோக்கம் என்ன என்பதை யோசிப்பதில்தான் இதற்கான பதில் இருக்கிறது. அனைத்துத் தயாரிப்பாளர்கள், அனைத்து இயக்குநர்கள் என அனைவரின் அரசியல் நிலைப்பாடும் ஹிந்து எதிர்ப்பாக இருக்கிறது என்பது முதல் காரணம். இதனால் புதியதாக வரும் இயக்குநர்கள் கூட இந்த ‘வழக்கத்துக்கு’ ஆட்பட்டாக வேண்டியது அவசியம் என்பது இரண்டாவது காரணம். பின்பு அவர்களும் இதே பழக்கத்தில் ஊறிப் போய்விடுகிறார்கள் என்பது நம் அவலம்தான். எத்தனை திட்டினாலும் ஹிந்துக்கள் ஒரு அமைப்பாகத் திரளவே போவதில்லை, அத்தனை தூரம் அவர்களை மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறது திராவிட அரசியல் என்பது அடுத்த காரணம்.

இதற்கெல்லாம் விடிவுகாலம் இல்லையா? இருக்கிறது. தொடர்ச்சியாக இது போன்ற திரைப்படங்களைப் பற்றிப் பேசி மக்களிடம் கொண்டு போவது முக்கியமானது. சிலர் சொல்கிறார்கள், சென்சாரைக் கொண்டு இப்படங்களை முடக்கவேண்டும் என்று. நான் அதை ஏற்கவில்லை. கருத்துச் சுதந்திரம் என்பது முக்கியமானது. நாம் கருத்தை கருத்தால்தான் முறியடிக்க வேண்டும். அதற்குச் சில வருடங்கள் ஆகலாம். சில பத்து வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் முயன்றுதான் ஆகவேண்டும்.

இன்று OTT எனப்படும் ஸ்ட்ரீமிங் தளத்தின் மூலம் படங்களை வெளியிடும் வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது. இங்கேயும் இது போன்ற படங்கள்தான் வரும் என்றாலும், இதற்கு எதிர்த்தரப்புப் படங்கள் வருவதில் பெரிய சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கலாம். இதைப் பயன்படுத்திக்கொள்வது இன்னொரு வாய்ப்பு.

ஒட்டுமொத்த திரையுலகமும் அரசியல் மற்றும் மதக் குறியீடுகளின் பின்னால் போய் ஒரு நல்ல திரைப்பட அனுபவமே இல்லாமல் போய்விட்டது. இது தமிழக மக்களுக்கு நிச்சயம் ஒரு எரிச்சலைத் தரும். அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்வது இன்னொரு வாய்ப்பு. அதற்கு நாம் தொடர்ந்து இத்திரைப்படங்களின் பின்னணி பற்றியும், இத்திரைப்படத்தின் உண்மையான நோக்கம் பற்றியும் பேசிக்கொண்டிருக்க வேண்டும். அது முக்கியம். இப்படிப் பேசுவதால் ஒரு பலனும் இல்லை என்று சிலர் சொல்லலாம். அதில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம். அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயல்படுவது, தீவிரமாக இதைப் பற்றி எழுதுவது – இவைதான் நம் முன்னே இருக்கும் ஒரே வாய்ப்பு. அதைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

‘திரௌபதி’ என்ற ஒரு திரைப்படம் இன்று பலருக்கும் பல எரிச்சலைக் கொண்டு வந்திருக்கிறது. திரௌபதி திரைப்படம் சொல்லும் அரசியலில் எனக்குச் சில மாற்றுக் கருத்துகள் உண்டு. ஆனால் இத்தனை நாள் ஹிந்து மதத்தைக் குறை சொல்லிய படங்களுக்கு இருந்த அதே உரிமையை ஒரே ஒரு ‘திரௌபதி’ பயன்படுத்தவும் எத்தனை பதற்றம் பாருங்கள். நாம் இதைத்தான் செய்யவேண்டும். ‘கொளஞ்சி’ என்ற ஒரு திரைப்படத்தைவிட, அதைச் சாடி வெளியிடப்பட்ட குறும்படம் அதிகம் பரவலானது. நம் முன்னே உள்ள சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்வது என்பது இதுதான்.

திராவிட, கம்யூனிஸ அரசியல் தொடர்ந்து பல வருடங்களாக இந்த ஹிந்து மத எதிர்ப்பை ஒரே அணியில் நின்று ஆதரித்தும் பரப்பியும் வந்திருக்கின்றன. திரைப்படங்கள் தொடத் தகாதவை என்ற எண்ணம் கொண்டிருந்த ஹிந்து இயக்கங்கள் இத்திரைப்படங்களில் இருந்து விலகி இருந்தது அவர்களுக்கு இன்னும் வசதியாகப் போனது. இன்று அதன் பலனைப் பார்க்கிறோம். இந்த நிலை மாறத்தான் வேண்டும்.

நாம் எதிர்பார்ப்பது ஹிந்துக்களைப் போற்றும் திரைப்படங்களையோ கிறித்துவ இஸ்லாமிய மதங்களைத் திட்டும் படங்களையோ அல்ல. நியாயமான படங்களை. நியாயமான விமர்சனங்களை. உள்ளே ஹிந்து வெறுப்பை வைத்துக்கொண்டு அதையே நடுநிலை என்றும் முற்போக்கு என்றும் வெறுப்பைப் பரப்பாத படங்களை. எல்லாக் கருத்துக்கும் இடம் இருக்கும் ஒரு சமமான களத்தை. இதுதானே நியாயமான ஆசையாக இருக்கமுடியும்? இதைச் செய்வதில் என்ன பிரச்சினை இருக்கமுடியும்? கேட்க எளிதாக இருக்கிறதல்லவா? ஆனால் யதார்த்தம் கசப்பானது.

இது போன்ற திரைப்படங்களில் வரும் குறியீடுகளைப் பற்றிப் பலரிடம் சொல்லியபோது அவர்கள் சொன்னார்கள், ‘இதுவரை எங்கள் கண்ணில் இது பட்டதே இல்லை’ என்று. ஒரு திரைப்படப் பாடலில் வரும் ஆபாசமான அங்க அசைவுகளைக் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கப் பழக்கப்பட்டுவிட்டது போல, இக்குறியீடுகளையும் தாண்டிச் செல்லப் பழக்கப் பட்டிருக்கிறோம். அதை எடுத்துச் சொல்லும்போதுதான் பலருக்கும் புரிகிறது. இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும்போது உங்களுக்கும் அப்படி ஒருவேளை தோன்றினால், இப்புத்தகத்தின் நோக்கம் நிறைவேறும்.

நான் கண்ணில் பட்ட படங்களை மட்டுமே பட்டியலிட்டிருக்கிறேன். தேடி தேடிப் பதிவிடவில்லை. அப்படிச் செய்தால் நான் கிட்டத்தட்ட அனைத்துப் படங்களையும் புகார் சொல்ல வேண்டி இருக்கலாம் என்ற அச்சம்தான் காரணம். ஒருவேளை இன்னும் உங்களுக்கு ஆதாரங்கள் போதாமல் இருக்கலாம். இன்னும் அடுத்தடுத்துப் படங்கள் வரத்தான் போகின்றன. அவற்றைப் பற்றி நான் எழுதத்தான் போகிறேன். மீண்டும் மீண்டும் சந்திப்போம்.

இந்த நேரத்தில் தமிழில் சில நல்ல முயற்சிகளைத் தந்த சில இயக்குநர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். கே.பாலசந்தர் பல ஹிந்து எதிர்ப்புப் படங்களைத் தந்திருந்தாலும் ‘கல்யாண அகதிகள்’ படத்தின் தைரியமான இறுதிக் காட்சிக்காகப் பாராட்டப்படவேண்டியவர். அதேபோல் தமிழ் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இவர் பல விதங்களில் ஹிந்துக்கள் ஆச்சரியப்படும் வகையில் படங்களை எடுத்தவர், கடும் நாடகத்தனமாக இருந்தபோதிலும். அதேபோல் ஏ.நாகராஜன். இவரும் பாராட்டுக்குரியவர். இந்தத் தொடர்ச்சியை நாம் இழந்திருக்கிறோம். அதை மீட்டெடுக்கவேண்டும்.

பாகம் 1க்கான முன்னுரை:

வலைப்பதிவுகள் தொடங்கி ஃபேஸ்புக் மற்றும் பல வலைத்தளங்களில் எழுதிய திரைப்படம் தொடர்பான கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது. ஒரு திரைப்படம் எப்படி நடுநிலையானது இல்லையோ அதேபோல் என் விமர்சனமும் நடுநிலையானதல்ல. இதுவே இந்த விமர்சனங்களின் அடிநாதம். இப்போதெல்லாம் திரைப்படங்கள் மிக நேரிடையாகவே விஷத்தைத் தம்முள் கொண்டு வருகின்றன. அப்படிப்பட்ட திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாக மட்டுமே பார்ப்போம் என்பது முட்டாள்தனம். இனியும் ‘படம்தானே’ என்று சொல்வதில் பொருளில்லை. துளிவிஷம் என்றாலும் அதைக் கண்டுகொள்வது முக்கியமானது. அதையே இப்புத்தகம் செய்ய நினைக்கிறது. சோஷியல் மீடியா உலகத்தில் ஒரு திரைப்படம் வெளிவந்த அரை மணி நேரத்தில் ஆயிரம் விமர்சனங்கள் சிறியதும் பெரியதுமாக வந்துவிடும் இக்காலத்தில், இக்கட்டுரைகள் விரிவான விமர்சன வகைக்குள் போகாமல், இப்படங்களில் இருக்கும் அரசியலையும் குறியீடுகளையும் அதன் நடுநிலையின்மையையும் மட்டுமே பார்க்கின்றன. பெரும்பாலான விமர்சனங்கள் திரைப்படம் வந்த சில மணி நேரங்களுக்குள் எழுதப்பட்டவை. இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பகுதி ஒன்றும் வெளிவரும். அதில் வரும் கட்டுரைகளையும் சேர்த்துப் பார்த்தால் ஒரு அப்பாவி திரைப்பட ரசிகனை இந்தத் திரைப்பட உலகம் எப்படி ஒரு அரசியல் பார்வையாளனாக மாற்றி இருக்கிறது என்று புரியலாம்.

இப்புத்தகத்தில் வரும் கட்டுரைகள் சிலவற்றில் அரசியல் கலக்காத படங்களை ஒரு திரைப்படம் என்ற வகையில் மட்டுமே விமர்சித்திருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ளலாம். நாம் எதிர்பார்ப்பது நியாயமான, எல்லோருக்கும் பொதுவான விமர்சனம் உள்ள ஒரு திரைப்படத்தை மட்டுமே. அன்றி, ஹிந்து மதத்தையோ இந்தியாவையோ விமர்சிக்காத திரைப்படங்களை அல்ல. ஹிந்து மதம் என்றதும் வசதியாக விமர்சிப்பதும் மற்ற மதங்கள் என்றதும் அமைதி காப்பதும் அல்லது புகழ்வதுமான இரட்டை நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

பின்குறிப்பு: கிண்டிலில் கிடைக்கும்!

Share

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜாவில் அறிமுகம் ஆனபோது காது ரெண்டும் எனக்கு ஜிவ்வென்று இருந்தது. இசை கேட்டு இல்லை, பொறாமையில்! ராஜா வெறியனான எனக்கு ரஹ்மானைத் திட்டித் தீர்ப்பதில்தான் ஆனந்தம் இருந்தது. ஆனால் செல்லும் இடமெல்லாம் ரஹ்மான் பாடல்தான். பட்டிதொட்டி எங்கும் அவரது பாடல்களே. தியேட்டரில் மாணவர்கள் அவரது பாடலுக்குப் போட்ட ஆட்டமெல்லாம் அதுவரை நான் பார்க்காதவை. ஏ.ஆர்.ரஹ்மானின் அத்தனை கேசட்டையும் முதல்நாளே வாங்கிக் கேட்டுவிடுவேன். எத்தனை முறை என்ற கணகெல்லாம் இல்லை. அப்பாடல்கள் மனப்பாடம் ஆகும் வரை.

ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் பத்து வருடங்களில், வண்டிச் சோலை சின்ராசு தவிர, அவரது அனைத்துப் படங்களின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்தான். வண்டிச் சோலை சின்ராசு கூட எனக்கு சூப்பர் ஹிட்தான் – பரோட்டா பாட்டு உட்பட.

கடந்த பதினைந்து வருடங்களாக அந்த ஏ.ஆர்.ரஹ்மானைக் காணவில்லை. காரணங்கள் பல இருக்கலாம். ரஹ்மானின் மனமுதிர்ச்சி உட்பட. அந்தப் பரபரப்பு, அந்த ஹிட், தியேட்டரில் அந்த ஆட்டம் இவை எதுவுமே இல்லை. இது ஒரு குறையா என்றால் இல்லை. ஆனால், இளையராஜா வெறுப்பாளர்கள் அடிக்கும் கூத்தைப் பார்த்தால், இதையெல்லாம் மீண்டும் மீண்டும் வம்புக்காகவாவது சொல்லவேண்டும் போல் இருக்கிறது.

இளையராஜாவின் கடந்த இருபது வருடங்களில் வந்த பாடல்களில் உள்ள நுணுக்கங்களைக் கேட்டு ரசித்தால், ராஜாவின் பாடல் ஹிட்டாகவில்லை என்பார்கள். இன்று ரஹ்மானுக்கு அதே நிலை என்றால், ரஹ்மானின் பாடலில் உள்ள நுணுக்கத்தோடு ஓடி வருகிறார்கள். இதைத்தான் முன்னோடும் வாய்க்கால் பின்னோடும் என்றார்கள்.

அதிலும் கடந்த பத்து வருடங்களில் ஒரு சில ஆல்பங்கள் தவிர, சில பாடல்களைக் கேட்கக்கூட முடியவில்லை. அத்தனை ஸ்ட்ரீயோடைப். ராஜாவின் ஸ்ட்ரீயோடைப்பை அலசும் விற்பன்னர்களுக்கு ரஹ்மானின் ஒரே போன்ற பாடல்களைக் கேட்கும்போது காது அடைத்துப் போய்விடுகிறது என்று நினைக்கிறேன்.

இப்போதும் ரஹ்மானின் பாடல்களைத் தொடர்ந்து கேட்டால், அவரது ஹிட்டாகாத பாடல்கள் உட்பட, கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிக்க ஆரம்பித்துவிடும். ராஜா ரசிகர்களும் கடந்த இருபது வருடங்களில் இதைத்தான் செய்தும் சொல்லியும் வந்தார்கள். அப்போது கிண்டலாகப் பேசினார்கள். இப்போது வரிசையில் நிற்கிறார்கள், பெரிய பலாப்பழத்துடன்.

Share

சில மலையாளத் திரைப்படங்கள்

Spoilers ahead.

ஈட (ம) – மலையாளப் படங்கள் பொதுவாக மெல்ல நகரும் படங்கள் என்றால், இப்படம் மெல்ல மெல்ல மெல்ல நகரும் படம். ஹிந்துத்துவவாதிகளைச் சேர்ந்த ஒரு பையனும் (ஆனால் தீவிரமான ஹிந்துத்துவவாதி அல்ல), தீவிர கம்யூனிஸ்ட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலிக்கிறார்கள். தீவிர கம்யூனிஸ்ட், தீவிர ஹிந்துத்துவவாதி என்று சொன்னால் கூடப் போதாது. இருவரும் கண்ணூர்க்காரர்கள்! தொடர்ந்து மாறி மாறி அரசியல் கொலைகள் செய்யும் ‘பழக்கம்’ உள்ளவர்கள். யார் உயிர் யாரால் எப்போது போகும் என்று தெரியாது. அப்படியான இடத்தில் ஒரு காதல். இரண்டு தரப்பையும் நியாயமாக காண்பிக்க இயக்குநர் முயன்றாலும், கம்யூனிஸப் பாரம்பரியத்தை அவர் விட்டுக்கொடுக்கவில்லை. உதாரணமாக, அன்பும் காதலும் உள்ள ஒரு ஹிந்துத்துவவாதி, ஹிந்துத்துவக் கொள்கைக்காக ஜெயிலுக்குப் போக ஒத்துக்கொள்ளும் ஒரு ஹிந்துத்துவவாதி, ஹீரோவுக்குப் பிடித்தமான நண்பனான ஹிந்துத்துவவாதி கம்யூனிஸ்ட்டுகளால் கொல்லப்படும் செய்தி மட்டுமே வருகிறது. அவரது பிணம் மட்டுமே காட்டப்படுகிறது. பதிலுக்குப் பழிவாங்க ஹிந்துத்துவவாதிகள் கையெறி குண்டுகள் செய்கிறார்கள். ஹீரோயினின் அண்ணனான, அன்பே உருவான கம்யூனிஸ்ட்டு கொல்லப்படுவதை வெறும் செய்தியாகச் சொல்லவில்லை. ஹிந்துத்துவவாதிகள் ஓட ஓட விரட்டிக் கொல்வதைக் காண்பிக்கிறார்கள். அதிலும் அந்த அண்ணனை நம் ஹீரோ எச்சரிக்கிறான். இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்த கம்யூனிஸ்ட் தைரியமாக அரசியல் கொலையை எப்போதும் எதிர்நோக்கியே இருக்கிறான். ஓட ஓட விரட்டிக் கொல்லப்படுகிறான். அத்தனை வெட்டியும் எங்கே அவன் பிழைத்துவிடுவானோ என்று ஹிந்துத்துவவாதிகள் அவன் உடலெங்கும் மண்ணையும் தூவிவிட்டுப் போகிறார்கள். கம்யூனிஸ்ட்டுகளை அன்பே உருவாகக் காண்பிக்கிறார்கள். ஹிந்துத்துவவாதிகளுக்கு இடதுகை ட்ரீட்மெண்ட்தான். ஹிந்துத்துவவாதி தரப்பில் இருந்து ஹீரோ நியாயம் பேசுகிறான். இதெல்லாம் எதற்கு என்கிறான். ஆனால் கம்யூனிஸ்ட்டு தரப்பில் இருந்து யாரும் வாயையே திறப்பதில்லை. கம்யூனிஸ்ட் அரசியலுக்குள்ளே இருக்கும் பாதகமான விஷயங்களையும் சின்ன சின்ன காட்சிகளில் சொல்கிறார்கள். கம்யூனிஸ்ட் ஒருத்தன் ஹிந்துத்துவர்களின் நண்பனான ஹீரோவுக்கு அடைக்கலமெல்லாம் தருகிறான். கடைசியில் ஹீரோவை கம்யூனிஸ்ட்டுகள் ஓட ஓட விரட்டிக் கொல்லப் பார்க்கிறார்கள். நியாயமாகக் காட்டி இருக்கிறார்களே என்று நினைத்துவிடாதீர்கள். அது எல்லாத் திரைப்படங்களிலும் வரும் க்ளைமாக்ஸ் காட்சியில் விரட்டைப் போலவும் சண்டையைப் போலவும்தான் உள்ளது. ஹிந்துத்துவவாதிகள் அரசியல்படுகொலை செய்வதைப் போல இல்லை. இந்த அளவுக்காகவது எடுத்திருக்கிறார்களே என்று தோன்றுவதும் சரிதான். அதே நேரத்தில், எதை எப்படி எடுக்கிறோம், எதை எப்படி விடுக்கிறோம் என்பதில் உள்ள நிலைப்பாட்டையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இருபத்தைந்து வயதுப் பையனும் இருபது வயசுப் பெண்ணும் ஏன் எப்போதும் அவார்ட் பட ஹீரோ ஹீரோயின் போலக் காதலிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு சிரிப்பில்லை, ஒரு கட்டிப்பிடித்தல் இல்லை, ஒரு மலர்ச்சி இல்லை. ஆனால் ஹீரோ ஷேன் நிகம் (ஷெய்ன் நிகம்!) நடிப்பு அட்டகாசம். மலையாளம் திறமையுள்ள நடிகர்களின் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அடுத்த பத்து வருடங்களில் கிடைக்கப் போகும் எல்லா விருதுகளும் மலையாள நடிகர்களுக்கே போகப் போகின்றன. மொழி மாஃபியா என்று அப்போது கதறிப் பயனில்லை.

நால்பத்தியொண்ணு (ம) – ஒரு கம்யூனிஸ்ட் இன்னொரு கம்யூனிஸ்ட்டை சபரிமலைக்குக் கூட்டிப் போகிறான். கூட்டிக்கொண்டு போகும் கம்யூனிஸ்ட் தீவிர கம்யூனிஸ்ட். கடவுள் நம்பிக்கை, பாரம்பரியம், பண்பாடு என எதிலும் நம்பிக்கை இல்லாதவன். லெனினும் மார்க்ஸும் சொன்னது மட்டுமே வாழ்க்கை என்று வாழ்பவன். பாரம்பரியத் திணிப்புக்காகத் தன் திருமணத்தையே துறந்தவன். இன்னொரு கம்யூனிஸ்ட்டோ கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஒரு ஹிந்து ஆதரவாளரைக் கொன்றவன். கட்சி வேறொருவனை ஜெயிலுக்கு அனுப்ப, பார்வையற்ற தன் மகளுக்காக வெளியே இருப்பவன். பெரிய குடிகாரன். இவன் குடியைத் திருத்த சபரிமலைக்குப் போகும் ஒரு முடிவை கட்சி எடுக்கிறது. சிந்தாவிஷ்டயாய சியாயமளே படத்தின் அதே யோசனையை அரசியல் ரீதியாக அணுகி இருக்கிறார்கள். குடிகார கம்யூனிஸ்ட் தான் சபரிமலைக்குப் போகவேண்டும் என்றால், தீவிர கம்யூனிஸ்ட்டும் உடன் வரவேண்டும் என்கிறான். நம்பமுடியாத இந்த ஒரு திருப்பம் நிச்சயம் ஒரு சிரிப்பை வரவழைக்கிறது. இருவரும் போகிறார்கள். பின்பு என்ன ஆகிறது என்பதுதான் படம். கம்யூனிஸ்ட்டுகள் ஒருத்தனைத் திருத்த ஏன் இப்படிப் பைத்தியக்காரத்தனமாக யோசிக்கிறார்கள் என்பது நியாயமான கேள்வி. பதில் ஒன்றுதான், அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் அல்லவா! ஆனால் சமீபத்தில் நடந்த சபரிமலைப் பிரச்சினையில் கம்யூனிஸ்ட்டுகள் கூடப் பாரம்பரியத்தின் பக்கம் நின்றது நினைவுக்கு வரலாம். அதை ஒட்டித்தான் இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இயக்குநருக்குப் பெரும் குழப்பம். யாரைத் திட்டுவது, யாரைக் கைவிடுவது என்பதில். எதோ ஒரு குன்ஸாக பேலன்ஸ் செய்து படம் எடுத்திருக்கிறார். தீவிர கம்யூனிஸ்ட் கடைசி வரை தன் பிடிப்புகளில் இருந்து விலகுவதில்லை. கடவுள் என்பதற்கான வரையறை என்ன என்பதற்கு அவனுக்கு யார் யார் மூலமெல்லாமோ விடை கிடைக்கிறது. ஆனாலும் அவன் கம்யூனிஸ்ட்டாகவே இருக்கிறான். குடிகார கம்யூனிஸ்ட் மனம் திருந்துகிறான். ஆனால் உடல்நலமில்லாமல் சபரிமலையிலேயே செத்துப் போகிறான். கடைசியில் வரும் இயக்குநரின் குரல் சொல்கிறது, ஒரு பகுத்தறிவுவாதியாக இல்லாவிட்டால் இப்படி ஒரு முடிவை எடுத்து, இறந்து போன கம்யூனிஸ்ட்டுக்கு இத்தனை பணத்தையும், அதனால் பார்வையற்ற மகளுக்குப் பார்வையும் கிடைக்கச் செய்திருக்க முடியுமா என்று. அதாவது தீவிர கம்யூனிஸ்ட் பொய் சொல்லி குடிகார கம்யூனிஸ்ட்டின் குடும்பத்துக்கு அவன் மரணத்துக்குப் பிறகு அரசாங்கத்தின் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருகிறான். இந்த சமயோசிதப் பொய்க்கு ஏன் ஒருத்தன் கம்யூனிஸ்ட்டாகவோ பகுத்தறிவு வாதியாகவோ இருக்கவேண்டும்? சாதாரணமாக யாருக்குமே அந்த நேரத்தில் தோன்றுவதுதானே? உண்மையில் நியாயம் பார்க்கும் கம்யூனிஸ்ட் இதைச் செய்யக் கூடாது. பொதுவான தர்மம் என்பதைத் தன் நோக்கில் பார்க்கும் ஆன்மிகவாதி வேண்டுமானால் செய்யலாம்! ஆனால் இயக்குநர் தலைகீழ் நியாயம் கற்பிக்கிறார். அதோடு மனம் திருந்திய ஒரு கம்யூனிஸ்ட் சபரிமலைக்குப் போனதால் செத்துப் போகிறான் என்று புரிந்துகொள்ளவும் இடம் தருகிறார். யாரை அனுசரித்து நடந்துகொள்ளவேண்டும் என்பதில், குழப்பத்தைத் தாண்டிய புத்திசாலித்தனமும் தெரிகிறதுதான்.

சுமாரான படம்தான். செக்யூலரிஸ மத ஜல்லிக் காட்சிகளும் உண்டு. தீவிர ஐயப்ப பக்தர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் கடுப்பாகிவிடுவார்கள். ஆனாலும், சபரிமலையைக் காண்பிக்கும் காட்சிகளுக்காகப் பார்க்கலாம். குழப்பமாகத்தான் இயக்குநர் யோசிக்கிறார் என்றாலும், இப்படியாவது யோசிக்கிறார்கள் மலையாளத்தில். தமிழைப் போல அல்ல.

*

அஞ்சாம் பாதிரா (ம) – அட்டகாசம். தமிழில் ராட்சசன் மட்டும் வரவில்லை‌ என்றால் இப்படத்தைக் குற்ற உணர்ச்சியுடன்‌ பார்க்க வேண்டி இருந்திருக்கும். இப்படம்‌ பல இடங்களில், கதையில் ராட்சசனையும் நிபுணனையும் கொஞ்சம் சைக்கோவையும் நினைவூட்டுகிறது. இது‌போன்ற படங்களுக்கு ஃப்ளாஷ்பேக் எத்தனை முக்கியம் என்பதை ராட்சசனும் இப்படமும் நினைவூட்டுகின்றன. கிறித்துவ தேவாலயங்களில் நடக்கும் பாலியல் பிரச்சினைகளை அப்படியே ஹிந்து சாமியார்களாகக் காட்டி எடுப்பதுதான் தமிழ்த் திரை உலகத்தின் வழக்கம். இப்படம் மலையாளப் படம் என்பதால் அந்தக் கிறுக்குத்தனத்தை எல்லாம் செய்யவில்லை. தமிழ்ப் படங்களில் ஹிந்து மதம் சித்திரிக்கப்படுவதை அணுகுவதைப் போல ஏன் மலையாளப் படங்களை அணுகத் தேவையில்லை என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம். இப்படியான படங்களும் மலையாளத்தில் வருகின்றன. இதைப் படித்துவிட்டு இப்படம் மத ரீதியான படம் என்று நினைத்து விடவேண்டாம். சைக்கோ த்ரில்லர் படம். பொறுமையாகப் பார்க்கவும்.

*

பாபம் செய்யாதவர் கல்லெறியட்டே (ம) – சுமாரான படம். ஒரு புருஷனுக்குப் பல பொண்டாட்டிகள். ஒரு பொண்டாட்டிக்குப் பல காதலர்கள். 18+ கதை, ஆனால் 13+ படம். மிகப்பெரிய குண்டைக்கூட, இந்தா‌ வாழைப்பழம் என்று தருகிறார்கள். மெல்லிய நகைச்சுவை படம் முழுக்கவே இருக்கிறது. ஹீரோயின் நடிப்பு பிரமாதம். அங்காமாலி டைரீஸ், வைரஸ் மூலம் மலையாளப் படங்களுக்குள் வந்தவர்களுக்கு இப்படம் ஒத்துவராது. பொறுமையுடன் பார்க்கவேண்டிய வசனத் திரைப்படம். ஹிந்துத்துவவாதிகள் அந்த ஃபாதர் கதாபாத்திரத்துக்காகப் பார்க்கலாம். தமிழில் இப்படி எடுத்தால் ஜெமினி மேம்பாலத்தை ஸ்தம்பிக்க வைத்துவிடுவார்கள் – கிறித்துவர்கள் அல்ல, அரசியல்வாதிகள்! பாவம் செய்யாதவர்கள் முதல் கல்லை எறியுங்கள் என்று சொல்லி ஒரே வெள்ளையாக அடித்துவிட்டார்கள். பாவம் செய்திருந்தாலும் பரவாயில்லை, கல்லெறிங்கடா என்று தோன்ற வைத்துவிட்டது இறுதிக்காட்சிகள்!

*

சூஃபியும் சுஜாதயும் (ம) – ஹிந்துத்துவவாதிகள் நெஞ்சு வெடித்துவிடக்கூடாது என்பதற்காகவே முதல்‌காட்சியில் சூஃபி செத்துப் போய்விடுகிறான். அடுத்த காட்சியில் ஹிந்துவுக்கு சுஜாதா வாழ்க்கைப்பட்டுவிடுவதையும் காண்பித்துவிடுகிறார்கள். ஆனாலும் நெஞ்சு வெடித்துத்தான் போகிறது. பாங்கொலி கேட்கும்போதெல்லாம் ஆடுகிறாள். தொழத் தயாராகிறாள் சுஜாதா. சூஃபியோ பாங்கு சொல்கிறான், சுஜாதாவைக் கட்டிப்பிடிக்கிறானே ஒழிய ஹிந்துக் கடவுளைக் கும்பிடுவதில்லை. ஏனென்றால் சுஜாதா ஒரு ஹிந்து. அவள்தானே தொழவேண்டும்! சுஜாதாவாக வரும் அதிதி ராவின் கண்கள் கலங்கடிக்கின்றன. ஜெயசூர்யா கேரக்டரின் பெயரை இளிச்சவாயன் என்று வைத்திருக்கலாம். படத்தின் பெயரையே கூட சூஃபியும் இளிச்சவாயனும் என்றே கூட வைத்திருக்கலாம். பாதிக்குப் பின் வரும் ஜெயசூர்யாவின் காட்சிகள் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. பாங்கொலி‌ போக மீதம் இருக்கும் நேரத்தில் படத்தில் வசனங்களும் வருகின்றன. இன்னுமொரு ‘நடுநிலை’ திரைப்படம்.

*

Forensic (M). Very cruel one. A serial killer murders children for a pathetic motive. Worst one. Serial killing of children, my God, horrible. 🙁 Never try to watch it. Its worse as a movie too. A movie I want to forget. Director sucks. Hope some sense prevails at least in his next project.

*

Kappela (Malayalam) – பதற வைக்கும் இன்னொரு படம். இரண்டு பதற்றம். ஒன்று, திரைப்படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரை தொடரும், திரைக்கதை தரும் பதற்றம். இன்னொன்று, வழக்கமான ஒன்றுதான். ஒரு அப்பாவி அழகான கிறித்துவப் பெண்ணை அப்பாவி போல் நடித்து ஏமாற்றி விற்கப் பார்க்கும் ஒரு ஹிந்துவிடம் இருந்து ஒரு ரௌடி காப்பாற்றும் கதை. இயக்குநர் பெயரை கூகிள் செய்து பார்த்துக் கொள்ளவும். அவர் பெண்ணைக் காப்பாற்ற உதவுபவராகவும் நடிக்கிறார். ஸ்ரீநாத் பாசிக்காகவும் திரைக்கதை மற்றும் அதைக் கையாண்ட விதத்துக்காகவும் பார்க்க வேண்டிய படம். எனக்கு ஒரு குறை, நல்ல ரௌடியின் மதம்தான் தெரியவில்லை. கிறித்துவராக அல்லது முஸ்லிமாக இருக்கலாம் என நினைக்கிறேன். இன்னொரு முறை பார்த்தால் கண்டுபிடித்து விடுவேன். ஆனால் பார்க்க மனம் ஒப்பவில்லை. கலைக்கு (ஹிந்து) மதம் (மட்டும்) கிடையாது என்பவர்கள் ஒன்றிப் போய்ப் பார்க்கலாம். ஏனென்றால் எல்லாமே தற்செயல்தானே!

பின்குறிப்பு: ஒன்றுமில்லாத‌ படத்தைத் தூக்கிப் பிடிப்பதில்லை. அடிப்படையில் நேர்மையற்ற படங்கள் எனக்குத் தேவையில்லை. மத ரீதியான ஆராய்ச்சிக்காகத்தான் இனி படமே பார்க்கப் போகிறேன். எவ்வித மதத்தையும் விட்டு வைக்காமல் விமர்சிக்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தை ஒரு லாபத்துக்காக தூக்கிப் பிடிக்காத படங்களை மட்டுமே கலை என்ற வகையில் அணுகுவேன். இப்படி நூறு பேர் செய்யாவிட்டால் தமிழ் சினிமா போலிகளின் உலகமாகவே தொடரும்.

*

Share

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்தப் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய பிரச்சினை. அதாவது முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது வீசப்பட்ட குண்டுகளில் பல வெடிக்காமல் இருந்து, இப்போது அவை திடீரெனக் கிடைக்கும்போது வெடிக்கின்றன. அதனால் ஏற்படும் உயிர்ச்சேதத்தைப் பற்றிய கதை. சில நாடுகளில் இது முக்கியமான பிரச்சினை. இப்பிரச்சினையை இந்தியாவுக்கு ஏற்ற வகையில் மாற்ற நினைத்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் இத்தகைய வெடிக்காத குண்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்டதில்லை. ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இதுபோன்ற பெரிய குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றைச் செயலிழக்கச் செய்வது பெரிய பிரச்சினையாக இருக்கும். பல்லாயிரக் கணக்கான மக்கள் அந்த இடத்தை விட்டே அப்புறப்படுத்தப்படுவார்கள். சில குண்டுகள் வெடித்து மக்கள் இறந்தும் போயிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இது பெரிய பிரச்சினையாக இதுவரை வந்ததில்லை. எனவே இது நமக்கு வேறு ஒரு ஊரின் பிரச்சினையாகத் தோன்றிவிடுகிறது. இந்த குண்டு வெடித்தால் எத்தனை ஆயிரம் பேர் கொல்லப்படுவார்கள் என்பது பற்றி நமக்குப் புரியாததால், இந்தியாவின் அப்படி நிகழ்ந்தது இல்லை என்பதால், நாம் இந்தப் படத்துடன் ஒன்ற மறுத்து விடுகிறோம். படமும் நம்முள் அந்தப் பதற்றத்தைக் கடத்தவில்லை.

அதேபோல் இத்தனை ஆயிரம் பேரைக் கொல்லப்போகும் ஒரு குண்டை இந்திய அரசு இப்படித்தான் அலட்சியமாகக் கையாளும் என்று நமக்குள் ஒரு கம்யூனிச மூளையின் சிந்தனை திணிக்கப்படுகிறது. அந்த கம்யூனிச மூளை இப்படத்தை எழுதிய எழுத்தாளராக இருக்கலாம் அல்லது இயக்குநராக இருக்கலாம் அல்லது தயாரிப்பாளராக இருக்கலாம். இப்படி நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கத்தியைப் போல எப்போதும் நம் அரசு நம்மைக் கொல்லத் தயாராக இருக்கிறது என்று சொல்வதை இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயக நாட்டில் குறைகளே இல்லை என்பதல்ல. ஆனால் குறைகளின் நடுவே மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்கிறார்கள் என்று வலிந்து உருவாக்கப்படும் சித்திரம் ஏற்கத்தக்கதல்ல. ‘முற்போக்காளர்’களின் முதன்மையான நோக்கமே இந்த சித்திரத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ உருவாக்குவதுதான்.

திரைப்படம் என்று வந்து விட்டால் நம் ‘முற்போக்காளர்கள்’ அன்பு அக்கறை என்றெல்லாம் எழுதித் தள்ளுகிறார்கள். ஆனால் இதே கம்யூனிசம் உலகம் முழுக்க ஒன்றரை கோடி பேரை, ஒன்றல்ல இரண்டல்ல ஒன்றரை கோடி பேரைக் காவு வாங்கியிருக்கிறது ஹிட்லரின் இன ஒழிப்பின்போது மாண்ட மக்களுக்கு இணையான எண்ணிக்கையில் கம்யூனிஸத்தால் மக்கள் உலகம் முழுக்கக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  அதைப்பற்றி இவர்கள் பேசுவது இல்லை என்பது மட்டுமல்ல, அந்தக் கோட்பாட்டை விதந்தோதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குண்டு வெடித்தால் 1,000 முதல் 2,000 அப்பாவிகள் செத்துப் போவார்கள் என்று புலம்பும் ஒரு தோழர், வருடம்தோறும் மாவோயிஸ்டுகளால் இந்தியா முழுக்கக் கொல்லப்படும் குடிமக்களைப் பற்றி யோசித்துப் பார்ப்பதில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதம் இந்தியா முழுக்கக் கொன்று போடும் அப்பாவி இந்தியர்களைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. ஒருவன் வலி இன்னொருவனுக்குத் தெரியவேண்டும் என்று வக்கணையாகப் பேசும் தோழர் கதாபாத்திரம், இத்தகைய கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிர் இழக்கும் மனிதர்களைப் பற்றி வாயே திறப்பதில்லை. எனவே இதில் சொல்லப்படும் கருத்துக்கள் அத்தனையுமே வெறும் புனைவு சார்ந்ததாக மட்டுமே ஆகிவிடுகிறது. உண்மையைச் சார்ந்ததாக மாறுவதில்லை. ஆனால் அடிப்படையோ உண்மை சார்ந்த நிகழ்வு என்று சொல்கிறார்கள். எனவேதான் நம்மால் இந்தப் படத்துடன் ஒன்ற முடிவதில்லை.

முதல் திரைப்படம் என்ற வகையில் இந்த திரைப்படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை பெரிய நம்பிக்கையைத் தருகிறார். படம் எடுக்கப்பட்ட விதம் மிக நன்றாக இருக்கிறது. மிகச் சரியான கதையைக் கையில் எடுத்து இந்தப் படத்தை இயக்கி இருந்தால் இப்படம் பெரிய அளவு பேசப்பட்டிருக்கும். நமக்கு அனுபவப்பட்ட ஒரு கதையை எடுத்துக்கொள்ளாதது முதல் மைனஸ். அதில் காதல் வர்க்க ஜாதி வேறுபாடு என்று எல்லாவற்றையும் சேர்த்து, எதையும் தீவிரமாகக் காட்டாமல் போனது இரண்டாவது மிகப்பெரிய மைனஸ்.

இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் யாமகுச்சி என்ற ஒரு ஜப்பானியர் வருகிறார். அவர் இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவராகச் சொல்லப்படுகிறது.  ஒரு வரலாற்று அடிப்படையைக் கொண்டு உருவாக்கப்பட்ட படத்தில் வரும் இந்தக் கதாபாத்திரமும் உண்மையான ஒன்றாக இருந்திருக்கவேண்டும். ஆனால் முழுக்க இது புனைவு என்று தெரிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அதுமட்டுமல்ல, இந்த ஜப்பானியர் தன் மகள் குறித்த ஒரு கதை சொல்கிறார். உலகம் முழுக்க பிரபலமான அந்தக் கதை நாகசாகியில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட ஒரு குண்டு தந்த புற்றுநோயைச் சுமக்கும் பெண்ணைப் பற்றியது.  ஸடகோ ஸஸகி என்னும் அந்தச் சிறுமி 1000 காகிதப் படகுகள் செய்தால் உடல்நிலை சரியாகி விடும் என்று அவளுடன் படிக்கும் இன்னொரு சிறுமி சொல்கிறாள். இந்தப் பெண்ணும் படகுகள் செய்கிறாள். அந்தப் பெண்ணின் தந்தைதான் இந்தப் படத்தில் வரும் ஜப்பானியர் என்றும் இரண்டு நோபல் பரிசுகள் பெற்றவர் என்றும் காட்டப்படுகிறது. உண்மையில் அந்தப் பெண்ணின் தந்தைக்கு நோபல் பரிசு எதுவும் வழங்கப்படவில்லை. இரண்டு முறை நோபல் பரிசுகள் பெற்றவர்கள் பட்டியலில் எந்த யாமாகுச்சியும் கிடையாது. அதேபோல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி என்ற இரண்டு குண்டு வீச்சிலும் உயிர் பிழைத்த யாமாகுச்சி என்பவருக்கு நோபல் பரிசு தரப்படவில்லை. அவரது மகள் ஸடகோ ஸஸகி அல்ல. இத்தனை குழப்பமான ஒரு கதாபத்திரத்தை ஏன் க்ளைமாக்ஸில் கொண்டு வந்தார்கள் என்று புரியவில்லை. உண்மைக்கு அருகில் என்றால் அது உண்மையில் உண்மைக்கு அருகில் இருந்தாக வேண்டும்.

காகிதப் படகுகள் செய்யும் பெண்ணின் கதை இரண்டு நிமிடமே வந்தாலும் அது நெஞ்சை உருக்குகிறது. ஏனென்றால் அதில் நெஞ்சை உருக்கும் உண்மை உள்ளது. இந்தப் படம் தோற்றதும் இந்த இடத்தில்தான்.

படத்தின் ஹீரோ தினேஷ் மிக நன்றாக நடிக்கிறார். சில காட்சிகளில் அதீத நடிப்பு. தோழர் தோழர் என்று அழைத்துக் கொண்டே வரும் ரித்விகாவின் கதாபாத்திரம் காமெடியான கதாபாத்திரமாகவே எஞ்சுகிறது. யாரைப் பார்த்தாலும் தோழர் என்று அழைக்கிறார். போலீசை விட தோழர்கள் இரவு பகல் பார்க்காமல் மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று பார்ப்பதெல்லாம் பெரிய நகைச்சுவையாக மட்டுமே இருக்கிறது. முதலாளி வர்க்கம் உலக மக்களை ஒருவர் விடாமல் காவு வாங்கக் காத்துக் கொண்டிருக்கிறது என்பது போன்ற கம்யூனிச வெற்று அலப்பறைகளை எல்லாம் இனியும் தாங்கிக்கொள்ள முடியாது. இதற்கு முன்பும் தமிழ்த் திரையுலகம் தாங்கிக்கொண்டதில்லை என்பது வேறு விஷயம்!

ஒரு வித்தியாசமான திரைப்படம் என்றால் அதில் எப்படியாவது தெருக்கூத்து தொடர்பான காட்சிகள் வந்துவிடவேண்டும் என்ற பொதுப்புத்தியில் இருந்து நம் இயக்குநர்கள் எப்போது வெளியே வரப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இதிலும் ஒரு தெருக்கூத்துக் காட்சி வருகிறது. அந்தத் தெருக்கூத்துக் காட்சி அதனளவில் மிகச் சிறப்பாக இருக்கிறது என்றாலும் கூட, இது போன்ற திரைப்படங்களில் இப்படிப்பட்ட காட்சிகளைப் புகுத்துவது ஒரு க்ளிஷேவாகி எரிச்சலை மட்டுமே வரவழைக்கிறது.

தமிழ் இயக்குநர்கள் தாங்கள் எடுக்கும் எல்லாத் திரைப்படங்களிலும் அரசியல் குறியீடுகளையும் அரசியல் தொடர்பான பின்னணிகளையும் தேவையே இல்லாமல் புகுத்துவதன் மூலம் உண்மையான அரசியல் திரைப்படம் வருவதைத் தடுக்கவே போகிறார்கள். இதனால், திரைப்படத்தை எவ்விதக் கோட்பாடும் இன்றிப் பார்க்க விரும்பும் பொது ரசிகர்களைத் தங்களிடமிருந்து விலக்கி வைக்கப் போகிறார்கள். எல்லாப் படங்களிலும் அரசியல் என்பது ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்திற்கான கொள்ளி. இதை இவர்கள் வைக்காமல் விடப் போவதில்லை.

நன்றி: ஒரேஇந்தியா

Share

சுட்டுப் பிடிக்க உத்தரவு – கபட நாடகம்

சுட்டுப் பிடிக்க உத்தரவு – கபட நாடகம்

கோவை தொடர் குண்டுவெடிப்பு என்பது தமிழ்நாட்டில் எத்தனை முக்கியமான தீவிரவாத நிகழ்வு என்பது எல்லாருக்கும் தெரியும். சிதைந்த வேனும் வெடிக்க காத்திருந்த காரும் அத்தனை மறக்கக் கூடியதல்ல. இத்தனை முக்கியமான ஒரு நிகழ்வைப் பின்னணியாக வைத்து ஒரு படம் வருகிறது என்றால், அது எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்? எப்படிப்பட்டதாக இருக்கக்கூடாது என்று தெரியவேண்டுமானால் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ பார்க்கலாம்.

1998 Coimbatore bombings.gif
Nine convicted in Coimbatore blast case released - The Hindu

ஒரு முக்கியமான நிகழ்வை, ஒரு மாநிலத்தையே உலுக்கிய நிகழ்வை மையமாக வைத்து முக்கியமான திரைப்படங்கள் உலகம் முழுக்க வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு சாபம் இருக்கிறது. உண்மையைச் சொல்வதைவிட யாரையாவது தாஜா செய்யவேண்டும் என்றால் அதற்காக இந்தக் கருவை எடுத்துக்கொண்டு, மனசாட்சியை அடகு வைத்துவிட்டுப் படம் எடுப்பது. அந்த அளவுக்கு தாஜா அரசியல் இங்கு ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அரசியலிலும் திரை உலகிலும்.

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தின் கோர முகத்தை கோயமுத்தூரில் பார்த்தோம். இஸ்லாமியர்களை எப்போதும் உச்சி மோந்து அன்பு செலுத்தும் கருணாநிதி கூட இந்தக் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தீவிரமான நடவடிக்கை எடுத்தார் என்று திமுகவினரே சொல்வார்கள். இதைக் குறை சொல்லியும் பல திமுக ஆதரவு இஸ்லாமியர்கள் இன்று வரை பதிவுகள் இடுவதைக் காணலாம். ரஜினி சம்பந்தமே இல்லாமல் ஒரு அறிக்கை தந்தார். திமுகவைச் சேர்ந்த இஸ்லாமியர்களே ரஜினி சொன்னது மடத்தனம் என்றும், இந்தக் குண்டுவெடிப்புக்கு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்களே காரணம் என்று ஒப்புக்கொண்டதும் வரலாறு. இதுகுறித்து ரஜினி இன்று வரை வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது வேறு விஷயம். இப்படி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பின்னணியைக் கொஞ்சம் கூட வரலாற்றுப் பிரக்ஞையோ பொறுப்போ இல்லாமல் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இப்படத்தில் ஒரு தீவிரவாதக் குழு கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்த்த திட்டமிடுகிறது. அவர்கள் உடை பாவனை பேச்சு எல்லாம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் போலவே இருக்கிறது. ஆனால் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆறு தீவிரவாதிகளின் பெயர்களைக் கூடச் சொல்லாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு தீவிரவாதியின் பெயர் முபாரக் என்று வருகிறது என நினைக்கிறேன். தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பைத் தடுத்து நிறுத்தி வெற்றி பெறுகிறது தமிழகக் காவல்துறை.

பயங்கரவாதிகளுக்கு உதவும் ஒருவரது பெயர் தெளிவாகச் சொல்லப்படுகிறது. ஹிந்து. இது உண்மையாக இருக்கவே வாய்ப்பும் அதிகம். அதை மறுப்பது என் நோக்கமல்ல. ஆனால் தீவிரவாதிகளின் பெயர்கள்? இயக்குநர் அந்தச் சமயத்தில் தாஜா அரசியல் மற்றும் செக்யூலரிசத்தின் உச்சத்துக்குப் போய்விட்டார். அத்துடன் நிற்கவில்லை. இந்தத் தீவிரவாதத் தாக்குதலை முறியடிக்கும் இன்ஸ்பெக்டரின் பெயர் இப்ராஹிம்! இயக்குநர் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பார் என்பது நிச்சயம்.

படத்தில் இரண்டு முறை ஒரு வசனம் வருகிறது. இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தால் மசூதியில் தொழுபவர்கள் இறந்து போய்விடுவார்கள் என்று. அதாவது இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படமல்ல என்று இயக்குநர் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறாராம். இத்தனை உண்மைகளைக் கவனம் எடுத்து வலிந்து வலிந்து சொன்ன இயக்குநருக்குப் பயங்கரவாதிகளின் பின்னணியை விவரிப்பதில் மட்டும் செலக்டிவ் அம்னீஷியா வந்துவிடுகிறது. ஒரு தீவிரவாத நிகழ்வை அப்படியே படம் எடுப்பதில் என்ன பிரச்சினை? அது எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கும் மதத்துக்கும் எதிரான படமாகும்? உண்மையில் இப்படி யோசிப்பதே அந்த மதத்தினருக்குச் செய்யும் அநீதி அல்லவா? இப்படி யோசிப்பவன் தானே நியாயமானவனாக இருக்கமுடியும்? ஆனால் இங்கே அவன் கட்டம் கட்டப்படுவான். எனவேதான் இயக்குநர்கள் எதிர்த்திசைக்குப் போகிறார்கள்.

இத்தனை பெரிய குண்டுவெடிப்பை காவல்துறை தடுத்து நிறுத்த ஒரு நாடகம் நடத்துகிறார்கள். அந்த நாடகம் – ஐயகோ. குண்டுவெடிப்பைக் காட்டிலும் கொடூரமானதாக இருக்கிறது. இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று கூட இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா யோசிக்கவில்லை. அவரது நோக்கம் உண்மையைப் பதிவு செய்வதல்ல, மாறாக ஒரு நாடகத்தைச் சொல்வதுதான் என்பது உறுதியானபின்பு அவர் ஏன் இதைப் பற்றிக் கவலை கொள்ளப் போகிறார்!

தமிழ்நாட்டுத் திரையுலகம், உண்மையான நிகழ்வைப் பின்னணியாக வைத்து அரசியல் ரீதியான தீவிரமான படம் எடுப்பதில் இன்னும் வயதுக்கு வரவில்லை என்று சொல்லலாமா? இப்படியும் சொல்லிவிடமுடியாது. இதுவே ஹிந்துக்களுக்கு எதிரான திரைப்படம் என்றால் எல்லாவிதமான திறமைகளையும் ஒரே நேரத்தில் இறக்கிப் படமெடுப்பார்கள் என்பது உறுதி. உண்மையான நிகழ்வை அப்படியே பதிவு செய்யாமல், தங்களது மன ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் புகுத்தி ஒரு படம் எடுத்தால் அங்கே கலை செத்துப் போய்விடும். ஆனால் முற்போக்காளர் பட்டமும் பணமும் கிடைக்கும். எது தேவை என்பதை இயக்குநர்கள் தெளிவாகவே முடிவு செய்துவிடுகிறார்கள்.

ஆனாலும் நாம் சில நன்றிகளைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ஒன்று, இந்தக் குண்டுவெடிப்பைத் திட்டமிடும் தீவிரவாதிகளின் பின்னணியைக் காண்பிக்கவில்லை என்பது போலவே, இந்த குண்டுவெடிப்பு நியாயமான தேவையான ஒன்றுதான் என்ற அளவுக்கு இயக்குநர் யோசிக்காமல் இருந்திருக்கிறாரே, அதற்கு முதல் நன்றி! இரண்டு, குண்டுவெடிப்பைத் தகர்க்க உதவும் இஸ்லாமிய போலிஸுக்கு உதவும் மற்றவர்கள் ஹிந்துக்கள். அவர்களையும் இஸ்லாமியர்களாகவோ கிறித்துவர்களாகவோ யோசிக்காத இயக்குநருக்கு நன்றி சொல்லவேண்டாமா! இயக்குநர் இதையெல்லாம் யோசித்து மனதில் வைத்து அடுத்த படத்தில் இன்னும் பதினாறு அடி பாய வாழ்த்துவோம்.

Share

ஆர்.கே.நகர் திரைப்படம்

ஆர்.கே.நகர் – பொருட்படுத்தத் தகாத ஒரு படம். முழுமையாகப் பார்ப்பதே பெரிய கொடுமை. இப்படிப் படம் எடுக்கும் லட்சணத்தில் நம் இயக்குநர்களுக்குத் தங்கள் திரைப்படங்களில் குறியீட்டை வைக்கவும், அரசியலைக் கிண்டல் செய்யவும் மட்டும் ஆசை வந்துவிடுகிறது. மனசாட்சியைக் கழற்றி வைத்துவிட்டுக் கதை வசனம் எழுதுகிறார்கள்.

ஆர்.கே. நகர் என்ற பெயரே நமக்குச் சொல்லும், இது அரசியல் படமாக இருந்தால் எதைப் பற்றிப் பேசவேண்டும், எந்தக் கட்சிகளைப் பற்றிப் பேசவேண்டும் என்று. இந்தப் படத்தில் அதைப் பற்றிய மூச்சே இல்லை. பின்னணியாகப் பள்ளி சிறுவர்களின் சீரழிவே கதை. ஆனால் காட்டப்படும் காட்சிகள் எல்லாம் அரசியல் தொடர்பானவை. சந்தான பாரதி ஒரு கவுன்சிலர். செல்வாக்கு மிக்க கவுன்சிலர். தமிழ்நாட்டில் செல்வாக்கு மிக்க கவுசின்லர், அடிதடி கவுன்சிலர், ரௌடி கவுன்சிலர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருக்கமுடியும்? அதைக்கூட விடுங்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக நிச்சயம் இருக்க முடியாது? பாஜக காரராக இருக்க வாய்ப்பில்லைதானே? இந்தப் படத்தில் வரும் சந்தான பாரதி நெற்றியில் குங்குமத் திலகமிட்டு வருகிறார். காவி வேட்டி கட்டி வருகிறார். எந்தக் கழக அரசியல்வாதி காவி வேட்டி கட்டிக் கொண்டு திரிகிறார்? இவர்களுக்குக் கழக அரசியல்வாதிகளைக் காண்பிக்க பயம்.

அத்தோடு நிற்கவில்லை. சந்தான பாரதியும் வாஜ்பேயியும் இருக்கும் ஒரு புகைப்படம் ஒரு காட்சியில் பின்னணியில் வருகிறது. குறியீடாம்! இதிலும் திருப்தி அடையவில்லை இயக்குநர் சரவணன் ராஜன். இந்த சந்தான பாரதி கோவில் நிலத்தை ஆட்டையைப் போடுகிறார். தமிழ்நாட்டில் யார் கோவில் இடத்தை ஆட்டையைப் போட்டிருப்பவர்கள்? யார் தொடர்ந்து 50 வருடங்களாக ஆட்சியில் இருப்பவர்கள்? இயக்குநர் பச்சைக் குழந்தை என்பதால் இதெல்லாம் தெரியாது. கைச்சூப்பிக்கொண்டு, அப்படியே மக்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இப்படத்தை எடுத்திருக்கிறார். அப்படியும் திருப்தி வரவில்லை குழந்தை இயக்குநருக்கு. கோவில் சொத்தை ஆட்டையைப் போடுவதைத் தடுக்கும் ஒரு கட்சியின் உதவிக்குப் போகிறார் கோவில் பட்டர். அவருக்கு உதவுபவர்கள் பக்தியில் நம்பிக்கையில்லாத ஆனால் நல்லவர்களாம்!

இந்த இயக்குநருக்கும் இதன் தயாரிப்பாளரான வெங்கட் பிரபுவுக்கும் ஏன் ரஜினி மேல் இத்தனை காண்டு, வெறுப்பு எனத் தெரியவில்லை. சந்தான பாரதியை ரஜினியின் கதாபாத்திரமாக்கி திட்டித் தீர்க்கிறார்கள். போர் வரும்போது வருவேன் என்ற வசனத்தை சந்தான பாரதி சொல்கிறார். சந்தான பாரதி கவுன்சிலர் என்றால் ரஜினியை எப்படித் திட்டுவது என்பதற்காகவே சந்தான பாரதியை ஒரு நடிகர் என்று காட்டி இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்று காட்டினால் கவுன்சிலராகக் காட்ட முடியாதே என்பதற்காக சின்ன நடிகர் என்று காட்டிவிட்டார்கள். எவ்வளவு கற்பனைப் பஞ்சம் பாருங்கள். அதாவது வசனமும் காட்சிகளும் மட்டும் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகருக்கானவை! அவரோ ஒரு கவுன்சிலர்! ஒரு காட்சியில் சந்தான பாரதி ரஜினியுடன் இருக்கும் படம் வருகிறது. அதாவது சந்தான பாரதியும் வாஜ்பேயியும் புகைப்படத்தில் வரும் அதே காட்சியில் இந்த சந்தானபாரதி – ரஜினி படமும் அதற்கு இணையாக வருகிறது. குறியீட்டுக்குள் குறியீட்டுக்குள் குறியீடாம். இதில் சந்தான பாரதியை எந்திரன் போல கிராஃபிக்ஸ் செய்து ஃப்ளக்ஸ் எல்லாம் பின்னணியில் குறியீடாக வருகிறது. இரண்டு முறை ‘நீ என்ன எம்ஜியாரா?’ என்ற வசனம் வருகிறது.

ஒழுங்காக ஒரு படம் எடுக்க முடியவில்லை. ஆக்ரோஷமான அரசியல் சட்டையர் எடுக்க வக்கில்லை. தமிழ்நாட்டில் கோலோச்சும் கட்சிகளை விமர்சித்து, தாக்கி, தீவிரமான அரசியல் படம் எடுக்க துணிவில்லை. ஆனால் வாய் மட்டும் இருக்கிறது இவர்களுக்கு.

Share

தாராள பிரபு – விமர்சனம்

18+ கதையைக் கையாளும் திரைப்படம்.

விக்கி டோனர் என்ற ஹிந்திப் படத்தை எந்த அளவுக்குக் கூறு போட முடியுமோ அந்த அளவுக்குக் கூறு போட்டிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து. ஒரு திரைப்படத்தை ரீமேக் செய்யும்போது அதை அப்படியே எடுத்தாலும் (பின்க் – நேர்கொண்ட பார்வை) சரி, முடிந்த அளவுக்கு மாற்றி எடுத்தாலும் சரி, அதை வன்கொலை செய்துவிடும் திறமை நம் தமிழ் இயக்குநர்களுக்கு இருக்கிறது. ஆனால் அதில் குறியீடுகளைப் புகுத்துவதில் மட்டும் களைப்படைவதில்லை.

விபூதி வைத்துவிடும் ஒரு அம்மா. பையன் (ஹரீஷ் கல்யாண்) வீட்டுக்கு வெளியே வந்ததும் அதை உடனே அழிக்கிறான். இதைக் காட்டுவதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது நம் இயக்குநர்களுக்கு. சந்தோஷம் மட்டும் அல்ல, வேறு எதோவும் இருக்கிறது. (‘பிரேம் ப்யார் காதல்’ படத்தில் இதே ஹரீஷ் கல்யாண் தேவையே இல்லாமல், சிலுவை அணிந்த டீ ஷர்ட்டுடன் வந்தார்!) விவாகரத்தான பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறான் தன் மகன் என்று தெரிந்ததும் அம்மா சொல்லும் வசனம், “நீ மதம் மாறி கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட பிரச்சினை இல்லை. இது எப்படிடா?” இந்த வசனத்துக்கு நியாயம் சேர்ப்பது போல, அந்தக் குடும்பம் ஒரு ஆர்த்தடக்ஸ் குடும்பமும் அல்ல. ‘நாங்கலாம் ரொம்ப முன்னேறிட்டோம்’ என்று வசனம் வேறு வருகிறது. இந்தக் குடும்பம் ஒரு சிங்கிள் பேரண்ட்டால் வளர்க்கப்படும் குடும்பமும் கூட!

படமாகப் பார்த்தால் – விவாகரத்தான பெண் என்று வைத்திருப்பது பெரிய மைனஸ். ஹிந்தியிலும் இப்படித்தான். ஆனால் ஹிந்தியில் focus வேறு. தமிழில் வேறு வகையாக எடுத்ததில் படமே பெரிய அளவில் அடி வாங்கி இருக்கிறது. ஒரு விவாகரத்தான பெண்ணுக்கு, தன் கணவன் விந்துக் கொடையாளராக (ஸ்பெர்ம் டோனர்) இருப்பதில் என்ன பெரிய பிரச்சினை என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு வருகிறது. இதனால் ஒரு பெரிய பரபரப்பு வராமல் போகிறது. குழந்தையே முக்கியம் என்று சரியாக ஹீரோயின் பாத்திரத்தை வடிவமைத்த இயக்குநர், தன் கணவர் விந்துக் கொடையாளர் என்றால் அந்தப் பெண் அதிர்ச்சி அடையவேண்டிய அளவுக்கும் அந்தக் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்க வேண்டும். ஆனால் அதில் இயக்குநர் கோட்டை விட்டுவிட்டார்.

அதே போல் ஒரு வேலை கிடைப்பதற்காக ஹீரோ இப்படியெல்லாம் செய்கிறான் என்கிற காரணங்கள் எல்லாம் தேவையே இல்லாதவை. அதிலும் அத்தனை தடவை விந்துக் கொடை கொடுத்த பின்பு! திருமணத்துக்கு ஒரு கன்னடக் குடும்பமும் தமிழ் பாரம்பரிய சைவைக் குடும்பமும் (பிராமணர்கள் என்று நேரடியாகக் காட்டவில்லை!) பேசிக்கொள்ளும் வசனங்கள் எல்லாம் தேவையே இல்லாதவை. அடுத்த மைனஸ், க்ளைமாக்ஸ். புன்னகையை வரவழைக்கும் அதே ஹிந்தி க்ளைமாக்ஸ்தான் என்றாலும், தமிழில்  இந்தக் காட்சி அடிப்படையே கேள்விக்குள்ளாகிறது. தன் கணவன் மீது எரிச்சலில் இருக்கும் மனைவி முன்பு அவனது 49 குழந்தைகளையும் அவள் பார்க்கும்போது மனம் மாறுவதாகக் காட்டுவதெல்லாம் நம்பக்கூடியதாக இல்லை.

தன் குழந்தையே தனக்குக் கிடைப்பது போல் எடுத்திருப்பதெல்லாம் அபத்தம். ஹிந்தியிலும் இப்படித்தான். ஆனால் இதை ஹிந்தியில் கடைசியில் வைத்தார்கள். தமிழில் இதை முன்னரே கொண்டு வந்து அது தொடர்பான பாசக் காட்சிகளை எல்லாம் செருகிவிட்டார்கள். ஹிந்தியிலும் சரி, தமிழிலும் சரி, உண்மையில் இப்படி எடுத்திருப்பது படத்தின் ஆதாரக் கருத்துக்கே எதிரானது.

படத்தில் வேறு சில பிரச்சினைகளும் உள்ளன. விந்துக் கொடை தொடர்பான அறிவியலுக்குப் புறம்பான கருத்துகள். தத்து எடுப்பது என்பது பக்கத்துக் கடையில் போய் காய்கறி வாங்கிக் கொண்டு வருவது போல எளிதானது என்று காட்டுவது. தன் விந்து மூலம் பிறந்த குழந்தையைத் தெரிந்து கொள்வது. இப்படிப் பல காட்சிகள் கதைக்காகப் புனையப்பட்டுள்ளன.

படத்தின் ப்ளஸ் என்ன? 18+ படம், ஆனால் காட்சிகளில் ஆபாசமில்லாமல் எடுத்திருக்கிறார்கள். ஹரீஷ் கல்யாண் நடித்திருந்தும் ஆபாசமில்லாமல் இருக்கிறது என்பது அதிர்ச்சிதான். அதுமட்டுமல்ல, ஹரீஷ் கல்யாண் மிக நன்றாக நடித்திருக்கிறார். இப்படி ஒரு ஹீரோவும் தமிழுக்குத் தேவைதான். கௌதம் கார்த்திக் போன்றவர்கள் மிக ஆபாசமாக நடிக்க, ஓரளவுக்கு ரசிக்கும்படியான இளமையான ரொமாண்டிக் படங்கள் என்ற அளவில் நின்றுகொள்ளும் விவேகம் ஹரீஷ் கல்யாணுக்கு இருக்கிறது.

விவேக் வரும் காட்சிகள் கலகலப்பாக இருக்கின்றன. ஹிந்துக் கடவுளை வழிபடும் ஆன்மிக வாதியாக வந்தும் ஹிந்துக் கடவுள்கள் யாரையும் திட்டவில்லை. இதுவும் ஒரு அதிர்ச்சிதான். ‘எங்கயோ போயிட்டீங்க’ சிவாஜி மிகச் சில காட்சிகள் வந்தாலும், அவருக்கு இது முக்கியமான படமாக இருக்கும்.

18+ கதையை எடுத்துக்கொண்டு ரகளையான திரைக்கதையை அமைத்திருக்க வேண்டும். ஆனால் படம் தொடக்கம் முதலே தேவையே இல்லாமல் மெல்லப் போகிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் அழுது வடிகிறது. கலகலப்பான தொடக்கம், இறுக்கமான இறுதி என்று எடுத்திருந்தால் கொஞ்சம் எடுபட்டிருக்கும். அடிப்படைகளையே சிதைக்கும் திரைக்கதையாலும் இயக்கத்தாலும் படம் அடிபட்டுப் போய்விட்டது.

பின்குறிப்பு: மதுவந்தி நடித்திருக்கிறார். செல்ஃபி வீடியோவில் எப்படி சம்பந்தமே இல்லாமல் பேசுகிறாரோ அப்படியேதான் படத்திலும். இவர் ஏன் வருகிறார், இவர் யார் என்பதெல்லாம் த்ரில்லர் படம் அளவுக்கு சஸ்பென்ஸாக இருக்கிறது.

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share

செத்தும் ஆயிரம் பொன்

சின்ன வயதிலேயே குடும்பத்தோடு விரட்டிவிட்ட பாட்டியைத் தேடி வரும் பேத்தியும் பாட்டியும் உண்மையைப் புரிந்துகொண்டு ஒன்றாகச் சேரும் கதை. பாட்டி ஒப்பாரி வைப்பவள். பேத்தி சினிமா மேக்கப் ஆர்ட்டிஸ்ட். பேத்திக்கு ஐந்து வயதாக இருக்கும்போதே கல்யாணம் செய்து வைக்க முயலும் பாட்டி. அந்தக் கல்யாணப் பையன் பேத்தியின் அத்தைப் பையன் தான். அவன் சடலங்களுக்கு அழகு செய்பவன்.

படத்தில் பிடித்ததைச் சொல்லிவிடலாம். இரண்டு காட்சிகள் மிக நன்றாக வந்துள்ளன. கூத்தியாளுடன் சல்லாபிக்கப் போகும் ஒருவன் அந்த இரவில் அவள் மேலேயே சரிந்து இறந்துபோக அங்கேயே இறுதிச் சடங்கு நடக்கிறது. அப்போது அவனது மனைவிக்கும், அவனது தொடுப்பிற்கும் நடக்கும் சண்டை. இந்தக் காட்சி நன்றாக வந்திருக்கிறது.

இறுதிக் காட்சிக்கு முந்தைய காட்சியில் சினிமாவில் மேக்கப் போடும் ஒரு காட்சி வருகிறது. அது இயல்பான காட்சியாக இருக்கிறது.

இந்த இரண்டு காட்சிகளை விட்டுவிட்டால், படம் முழுக்க எதோ ஒரு செயற்கைத்தனம் துருத்திக்கொண்டே இருக்கிறது. ஒன்று காட்சியில், அல்லது நடிகர்களின் நடிப்பில், அல்லது செயற்கையான வசனங்களில். இப்படி எதோ ஒன்று செயற்கையாக இருக்கிறது. சில நடிகர்கள் நன்றாக மதுரை வட்டாரத் தமிழ் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று நெல்லைத் தமிழில் பேசிவிடுகிறார்கள். கிராமத்து மக்கள் ஆங்கிலம் கலக்க மாட்டார்கள் என்பதால் தமிழைப் புகுத்தி இருக்கிறார்கள். ஆங்கிலம் பேசாமல் அதே சமயம் எப்படி இயல்பான தமிழில் பேசுவார்கள் என்பதைத் தெரிந்துகொண்டிருக்கலாம். பாட்டியைப் பார்க்க வரும் பேத்தி ஏன் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மேக்கப் கிட்டையும் கையிலேயே சுமந்துகொண்டிருக்கிறார் என்பதெல்லாம் புரியவே இல்லை.

ஸ்ரீலேகா என்ற தொலைக்காட்சிக் கால நாடக நடிகை பாட்டியாக நடித்திருக்கிறார். இவர் நாடகங்களில் கூட நன்றாக நடிக்கமாட்டார். இந்தப் படத்திலும் அப்படியே.

உண்மையிலேயே ஒப்பாரி வைப்பவர்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர்கள் வைக்கும் ஒப்பாரி இயல்பாக இருக்க, ஸ்ரீலேகா வைக்கும் ஒப்பாரியும் அதில் வரும் வசனங்களும் மிகச் செயற்கையாக இருக்கின்றன. ஒட்டவே இல்லை.

பேத்தியாக வரும் நிவேதிதா நன்றாக நடித்திருக்கிறார். மாடர்ன் பெண் என்பதால் சிகரெட் பிடிக்கிறார். கிராமத்தில் இருக்கும் பெண்ணுக்கு சிகரெட் பிடிக்க கற்றுத் தருகிறார். பாட்டி சுருட்டே பிடிப்பாள் என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள்.

இறுதிக் காட்சியில் பாட்டி செத்துப் போக பேத்தி கிராமத்துக்கு வந்து ஒப்பாரி வைக்கிறாள்.

சில படங்களை யார் ஏன் இயக்குகிறார்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கும். இப்படியான படங்களை எடுப்பவர்களை நினைத்துப் பார்ப்பேன். தியேட்டர் கிடைக்கப் போவதில்லை. போட்ட பணம் வரப் போவதில்லை. ஆனால் எதோ ஒரு ஆர்வத்தில் எடுக்கிறார்கள். அதைப் பாராட்ட வேண்டும். இந்தப் படமும் அந்த வகையறாதான்.

படத்துக்குப் பின்னணியாகக் காட்சிகள் வரவேண்டும். அதில் விவரணைகள் வரவேண்டும். விவரணைகளைக் காட்டுவதற்காகவே படத்தை எடுத்தால் என்னாகும் என்பதை இந்தப் படத்தில் பார்க்கலாம். கிராமத்தில் நிகழும் சாவை ஒட்டி நடக்கும் காட்சிகளைத் தத்ரூபமாகக் காண்பிக்கிறேன் என்று முதல் 25 நிமிடங்களில் நம்மைச் சோதித்துவிட்டார்கள். அதிலும் செயற்கையான நடிப்பு, செயற்கையான வசனம் வேறு. இதில் பாதியில் ஒரு குழந்தையைக் கொன்று அதற்கு யார் சாயம் பூசுவது என்ற மனப் போராட்டத்தை விவரிக்கிறேன் என்று படுத்திவிட்டார்கள். கொடூரமான கற்பனை இதெல்லாம்.

கலைத் திரைப்படம் என்பது எதையாவது கதையாகச் செய்து, அதன் பின்னணியை சம்பந்தமே இல்லாமல் விரிவாகக் காண்பிப்பது அல்ல. அதில் இயல்பும் உயிரும் இருக்கவேண்டும். இந்த இரண்டுமே இந்தப் படத்தில் இல்லை.

Share