Archive for திரை

எந்திரன் – சன் டிவி – தொடரும் குமட்டல்

இந்தக் கட்டுரை தமிழ்ஹிந்து தளத்தில் வெளியாகியிருக்கிறது. வாசிக்க இங்கே சொடுக்கவும்.

http://www.tamilhindu.com/2010/10/suntv-n-enthiran-the-abominable-nexus/

நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘யார் இந்தியாவின் நிஜமான சூப்பர் ஸ்டார்’ என்னும் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. இந்தியாவெங்கும் இருந்து மக்கள் எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. 88% பேர் ரஜினிதான் நிஜமான சூப்பர் ஸ்டார் என்று சொல்லியிருந்தார்கள். 3% பேர் அமிதாப், 3% பேர் ஷாருக், 3% பேர் சல்மான் – ஏறக்குறைய இப்படி இருந்தது மக்களின் தீர்ப்பு. ரஜினியின் திரைப்படங்களுக்கு ஏன் இந்த பிரபல்யம் என்று அலசத் தொடங்கினார்கள். அமிதாப், ஷாருக் போன்ற நடிகர்களிலிருந்து ரஜினி எப்படி மேலேறிச் செல்கிறார் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். 1970களில் அமிதாப் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது கிடையாதாம். தனது படங்கள் வெளியானபோதுகூட அதைப் பற்றிப் பேசமாட்டாராம். ஆனால் இப்போதெல்லாம் தனது படங்களுக்கு விளம்பரம் செய்ய வருவதும், ஏதேனும் தொலைக்காட்சித் தொடரில் (டாக் ஷோ) தோன்றினால் அதற்கான முன்னேற்ற நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதும் இயல்பாகிவிட்டது. தங்களது படங்கள் வெளியாகும்போது ஷாருக்கும் சல்மானும் பெரிய பெரிய பிரமோக்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் ரஜினி ஈடுபடுவதில்லை என்று சொன்னது அந்தத் தனியார்த் தொலைக்காட்சி சானல்.

ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. ஒருநாள் முழுக்க சன் டிவியில் ரஜினி தோன்றி கிளிமாஞ்சாரோ பாடலைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார். ரஜினி வாக்கு கொடுத்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இதனை ரஜினியே மேடையில் சொன்னார். எந்திரன் திரைப்படம் சன் பிக்சர்ஸின் கையில் வந்தபோது, இதற்கான பிரமோக்களில் தான் பங்கேற்பதாக ரஜினி வாக்குக் கொடுத்திருந்தாராம். ஆனால் படம் முடிந்ததும், அந்த பிரமோ என்பது தன் குணத்துக்குச் சற்றும் பொருந்துவல்ல என்பது ரஜினிக்கு உறைத்திருக்கிறது போல. அதிலிருந்து பின்வாங்கி விட்டார். ஆனால் அதனையும் கலாநிதி மாறன் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டாராம். ரஜினி ஒரு மேடையில் ஏறிவிட்டால் எப்படி உணர்ச்சிவசப்பட்டு விடுவார் என்பது நாம் அறிந்ததே. எந்திரன் வெளியீட்டு மேடைகளில் அவர் கலாநிதிமாறனைப் புகழ்ந்த விதமும் அப்படியே. அதற்கான வணிகக் காரணங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. வணிகக் காரணங்கள் மட்டுமே எப்போதுமே ரஜினியை நிர்ணயித்துவிடுவது வருத்தமளிக்கும் ஒன்றுதான்.

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் என்னும் ஒற்றை கம்பெனியின் ராட்சதப் பிடிக்குள் தமிழ்த் திரையுலகம் சிக்கிக் கொண்டுவிட்டது. அதிலிருந்து வெளியேறும் வழி என்னவென்று பார்த்தால், அங்கே வரவேற்கக் காத்துக்கொண்டிருப்பவர்கள் கருணாநிதி குடும்பத்தின் வாரிசுகள். வங்குவத்தி வங்குவத்தின்னு கோவிலுக்குப் போனா அங்க ரெண்டு வங்குவத்தி திங்கு திங்குன்னு ஆடிச்சாம் கதைதான் இப்போது இங்கே நடந்துகொண்டிருக்கிறது. கருணாநிதி பேரன்கள் கையில் ரஜினி சிக்காமல் சன் பிக்சர்ஸில் அவர் மாட்டிக்கொண்டது ஒரு வகையில் அவருக்கு நல்லதுதான். ஆனால், மணிரத்னத்தின் வீட்டில் குண்டு விழுந்த பின்பு, தமிழ்நாட்டிலேயே குண்டு வெடிப்புகள் நடக்கின்றன என்பது சட்டென நினைவுக்கு வந்து, ஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஏன் இன்னும் எதுவும் கேட்காமல் இருக்கிறார்? தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா?

இதில் போதாக் குறைக்கு சன் பிக்சர்ஸ் தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளை தனது கைப்பிடியில் வைத்துக்கொள்ள விரும்புவதாகவும், அதற்குப் போட்டியாக கருணாநிதியின் பேரன்களே களமிறங்கி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. உழைப்பு, தொழில், முன்னேற்றம் என்றெல்லாம் காரணங்கள் சொன்னாலும், பதவியும் ஊடகமும் தரும் செல்வாக்கில்லாமல் இதுவெல்லாம் சாத்தியமில்லை என்பதை எந்த ஒரு பாமரனும் உணரமுடியும். ஒரு குடும்பத்தின் கைப்பிடிக்குள் தமிழ்த் திரையுலகம் இப்படி சிக்கிக்கொள்வது ஆரோக்கியமானதல்ல. இதுபோக, சன் டிவிக்கோ கலைஞர் டிவிக்கோ திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கான உரிமம் கொடுப்பதில் நடக்கும் கூத்துகள் தனி. இன்றைய கருணாநிதியின் அரசியல் புலத்துக்கு முன்னால், சன் பிக்சர்ஸின் ஊடகப் புலத்துக்கு முன்னால் எந்த இயக்குநரால், எந்த நடிகரால் எதிர்த்து நின்றுவிட முடியும் என நினைத்துப் பாருங்கள். ரஜினி போன்ற உச்ச நடிகரே இப்படி வீழ்ந்து கிடந்தால், மற்றவர்களின் பரிதாப நிலை நமக்குப் புரியும்.

suntv-endhiran

முன்பெல்லாம் ரஜினி படம் வெளியாகிறது என்றாலே சில படங்கள் அந்த சமயத்தில் வெளிவராது. இதன் காரணம் ரஜினி என்னும் உச்ச நடிகரின் படத்தோடு போட்டி போடுவது அவசியமற்ற வேலை என்பதுதான். இது தயாரிப்பாளர்களும், நடிகர்களும், இயக்குநர்களும் தாங்களாக எடுக்கும் ஒரு முடிவு. இன்று அப்படியல்ல. நீங்கள் போட்டி போட நினைத்தாலும், உங்களுக்கு தியேட்டர் கிடைக்காது. அதை மீறி வெளியிட்டால் உங்கள் திரைப்படம் சன் டிவியின் திரை விமர்சனம் (இப்போது இந்தப் பகுதி பெரும் நகைச்சுவைப் பகுதியாகிவிட்டது வேறு விஷயம். நேற்று வரை சன் பிக்சர்ஸ் தயாரித்த தில்லாலங்கடி திரைப்படம்தான் திரை விமர்சனம் பகுதியில் முதல் இடம் என்று கேள்விப்பட்டேன். நான் இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை என்பதால், ஒரு நண்பர் சொல்லித்தான் இது எனக்குத் தெரியவந்தது) பகுதியில் குதறப்படலாம். தனது ஒரு படம் குதறப்பட்டதை எதிர்த்து பேசிய சத்யராஜ் இன்றெல்லாம் வாய் திறப்பாரா என்று கூடத் தெரியாது. ஏனென்றால் அன்று சன் டிவி ஒரு சானல் மட்டுமே. இன்று திரையுலகில் அது ஒரு சக்ரவர்த்தி. டிவி, திரைப்படம் என்பது போதாதென்று, தினமும் 10 லட்சம் பிரதிகள் விற்கும் ஒரு பத்திரிகை, இது போக வார இதழ்கள், இந்தியாவெங்கும் பண்பலை – இவர்களை எதிர்த்துப் பேச உண்மையான தைரியம் இருக்கவேண்டும் அல்லது முட்டாளாக இருக்கவேண்டும். இந்த நிலை இப்படியே நீடிப்பதைத்தான் ரஜினி விரும்புகிறாரா என்ன?

இதில் எந்திரன் வெளியீடு என்று சொல்லி சன் டிவி அடிக்கும் கும்மாளம் குமட்டலை வரவழைக்கிறது. முன்பும் எத்தனையோ ரஜினி படங்கள் வந்திருக்கின்றன. இதே ரசிகர்கள் பாலாபிஷேகம், பீராபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். அது ஒரு குறிப்பிட்ட சிறிய எல்லைக்குள் அங்கங்கே நடந்த ஒரு விஷயமாக அமுங்கிவிடும். ஆனால், இன்று சன் டிவி அதற்குத் தரும் அங்கீகாரம் அதன் எல்லையை மிகவும் விரிவாக்கி, தமிழர்களே இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் முண்டங்கள்தான் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு நடிகருக்கு இப்படி நடப்பதெல்லாம் பெரிய எரிச்சல் தரும் விஷயங்கள். இது ஒரு ரசிகரின் அல்லது சில ரசிகர்களின் தனிப்பட்ட விஷயமல்ல. சமூகம் எப்படி திரைப்படத்தினால் புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. முன்பே இது குறித்துப் பலர் பேசியிருக்கிறார்கள். இந்த முறை இதனையும் சன் டிவி மார்க்கெட்டிங் உத்தியாக்கிவிட்டது. ரஜினி படத்துக்காக பால் குடம் எடுப்பதும், 1500 படிகள் கொண்ட கோவிலுக்கு முழங்காலில் நடந்து படியேறிப் போவதும், பாலாபிஷேகம் செய்வதும், தேர் இழுப்பதும், ரசிகர்கள் பச்சைக் குத்திக் கொள்வதும், அலகு குத்திக் கொள்வதும் – என்ன ஒரு சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? இதனைத் தொடர்ந்து ஒரு சாகசமாக ஒரு முக்கியமான சானல் தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தால், வளரும் இளைஞர்கள் மனதில் இதெல்லாம் நல்ல விஷயம் என்பதாகப் பதிந்துவிடாதா? ஆனால் இதையெல்லாம் யோசிக்கும் நிலையில் இல்லை சன் பிகசர்ஸ். அதன் இலக்கு தான் போட்ட 150 கோடிக்கு நிகராக எத்தனை மடங்கு லாபம் சம்பாதிக்கமுடியும் என்பது மட்டுமே.

suntv-endhiran

ரஜினி போன்ற நடிகர்கள் இந்த குமட்டல்களையெல்லாம் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது இன்னொரு குமட்டல். படம் வெளி வந்த பின்பாவது ரஜினி இது குறித்துப் பேசுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தான் சொல்லியும் ரசிகர்கள் கேட்பதில்லை என்னும் சாக்கு போக்கெல்லாம் எடுபடாது. ஜெயலலிதா ரஃபி பெர்னாட்டுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இப்படித்தான் சொன்னார். தான் எத்தனை முறை சொல்லியும் தன் காலில் அமைச்சர்களும் தொண்டர்களும் விழுகிறார்கள் என. காலில் விழுந்த இரண்டு அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பியிருந்தால், அடுத்த எந்த அமைச்சர் காலில் விழுந்திருப்பார்? ரஜினியும் தனக்கு பாலாபிஷேகம் செய்யும், தேர் இழுக்கும் ரசிகர்களை எல்லாம் சரியாகக் கண்டித்திருந்தால் அவர்களும் நிச்சயம் கேட்டிருப்பார்கள்.

தன் மகள் கல்யாணத்துக்கு நிச்சயம் வரக்கூடாது எனச் சொல்லி, அதனைச் செய்துகாட்டவும் தெரிந்த ரஜினிக்கு இது ஒன்றும் பிரமாதமான காரியமல்ல. ரஜினிக்கு இப்படி நடக்கும்போது, ரஜினியாக வரத் துடித்துக்கொண்டிருக்கும் இளைய தளபதிகளும், அல்டிமேட் ஸ்டார்களும் இதனையே நகலெடுக்கவே விரும்புவார்கள். அப்படி ரஜினி செய்யாவிட்டால், இன்றைக்கு ரஜினிக்கு அவர் ரசிகர்கள் செய்துகொண்டிருப்பது தமிழ்நாட்டின் திரை கலாசாரமாக மாறும். எனவே ரஜினியே இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும். அஜித் தனது பேருக்கு முன்பாக இனிமேல் அல்டிமேட் ஸ்டார் என்றெல்லாம் போடக்கூடாது என்று சொன்னார் சமீபத்தில். கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. இதேபோன்ற ஒரு சுய பரிசோதனையை ரஜினி செய்யவேண்டும்.

ரசிகர் மன்றங்களால் சில நற்பணிகள் அங்கங்கே நடக்கிறது என்றாலும், பெரிய அளவில் இந்த ரசிகர் மன்றங்கள் என்ன சாதித்தன என்பது தெரியவில்லை. எந்த ஒரு நடிகரும் ரசிகர் மன்றத்தை நம்பி இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனால் வெளியில் எந்த ஒரு நடிகரும் இதனைச் சொன்னதில்லை. ரஜினி தனது எல்லா ரசிகர் மன்றங்களையும் கலைத்துவிட்டு, அதில்கூட முன்மாதிரியாக இருக்கலாம் ரஜினி. நடிப்பு என்பது ஒரு தொழில். திரைப்படமும், நடிப்பும் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றால், அதனைப் பாருங்கள், பாராட்டிவிட்டுச் செல்லுங்கள், அது போதும் என்று ரஜினி அறிவித்தால்தான் என்ன?

எந்திரன் வெளியீட்டை ஒட்டி மேடையில் பேசிய அத்தனை நடிகர்களும் தங்கள் ரசிகர்களையே நகலெடுத்தார்கள். ஒவ்வொரு நடிகரும் ஒரு விசிலடிச்சான் குஞ்சாக வந்துவிட்டுப் போனார்கள். இவர்களுக்கெல்லாம் தன்முனைப்பு என்ற ஒன்றே இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றியது. நடிகர்களின் வழியேதான் ரசிகர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. தன்மானமுள்ள நடிகர்களாகத் தங்களை முன்னிறுத்திக்கொண்டு முன்பு குரல் கொடுத்த நடிகர்கள் எல்லாம் ஓடிப் போன சுவடே தெரியவில்லை.

suntv-endhiran

ரஜினி முன்பெல்லாம் புகை பிடிப்பவராகப் பல படங்களில் தோன்றுவார். ஸ்டைல் என்பதே தன் அடையாளம் என்று ரசிகர்களை அவர் அடைந்த விதமே இந்த புகையின் வழியாகத்தான் எனலாம். திடீரென்று பாமக குரல் கொடுத்தது. ரஜினியால் பல இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று. ஒரு படி மேலே போய் ரஜினியை அக்கட்சி மிரட்டியது என்றே சொல்லவேண்டும். ரஜினி புகை பிடிப்பது போன்ற படங்கள் வந்தால் அதனை வெளியிட விடமாட்டோம் என்றார்கள். உண்மையில் இது ஜனநாயகத்துக்கு எதிரானது. ரஜினி புகை பிடிக்கும் படங்களால் இளைஞர்கள் கெடுகிறார்கள் என்று நீங்கள் பிரசாரம் செய்யலாம். அமைதி வழியில் அதனை எதிர்த்துப் போராடலாம். தொடர்ந்து ரஜினியுடன் பேசலாம். ஆனால் அப்படி வரும் படத்தைத் திரையிட விடமாட்டோம் என்பது அராஜகம். ரஜினி இதற்குப் பணிந்து போனார். வணிகக் காரணங்கள். அடுத்த படத்தில் சுயிங்கம் மென்று கொண்டு வந்தார்.

புகை பிடிப்பதால் இளைஞர்கள் கெட்டுவிடுவார்கள் என்று போராட்டம் நடத்திய பாமக இன்று ஏன் விரல் சூப்பிக்கொண்டிருக்கிறது? ஒரு நடிகருக்கு நடக்கும் இத்தனை குமட்டல்களையும் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது? சன் டிவியில் பரப்பல்களைப் பார்த்து வெறுமனே அமைதியாக இருப்பது ஏன்? எந்திரன் கருணாநிதியின் ஆசியையும் பெற்று விட்டது என்பதற்காகவா? ஒரு சமுதாயத்தையே சீரழிக்கும் விதமாக தொடர்ந்து சன் டிவி ரஜினி ரசிகர்களைக் காட்டிக்கொண்டிருப்பது குறித்து பாமக வாய் திறக்காதது ஏன்? நாளை கிடைக்கவிருக்கும் சீட்டும் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காகவா? இப்படி ரசிகர்கள் என்னும் போர்வையில் ஒரு சமுதாயத்தின் மக்களைக் கீழ்மைப்படுத்துவது தவறு என்று ரஜினிக்கு எதிராகப் பாமக இன்று எதுவும் பேசாமல் கள்ள மௌனத்துடன் இருப்பது, அது சன் பிக்சர்ஸைப் பாதித்து, அரசியலில் தன்னையும் பாதித்துவிடும் என்பதற்காகவா?

முதலில் ரஜினி ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். படத்துக்கான மார்க்கெடிங் போர்வையில் சன் டிவி நிகழ்த்திக்கொண்டிருப்பது ரஜினியின் சுயமரியாதையின் மீதான தாக்குதலே அன்றி வேறல்ல. தனது ரசிகர்களின் சர்க்கஸ்களைக் காட்டிக்கொண்டிருப்பதன் மூலம் தன்னைக் கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ரஜினி உணரவில்லை என்றால், பொதுமக்களின் மத்தியில் ரஜினியின் இமேஜ் நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும். அது ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகிவிட்டது என்பதும் ஓரளவு உண்மையே. ரஜினி என்னும் தனிமனிதரின் மனித இருப்புக்கும், இப்போது நடந்துகொண்டிருக்கும் அவலங்களுக்கும் தொடர்பே இல்லை என்பது பலருக்குத் தெரியும். அதை எல்லோருக்கும் தெரிந்ததாக ஆக்க ரஜினி முயல்வது அவருக்கு நல்லது. இல்லை என்றால் ஒரு தன்மானமற்ற கும்பலை நாளைய சந்ததியாக உருவாக்கி வைத்துவிட்டுப் போவதில், என்னதான் சன் டிவியின் எரிச்சலூட்டும் அதீத பரப்புரை காரணமாக இருந்தாலும், ரஜினிக்கு பெரும் பங்கு உண்டாகியிருக்கும். பின்பு அதனை நீக்குவது என்பது பெரும்பாடாகிவிடும். சன் டிவியின் கேவலப்படுத்தும் ப்ரமோக்களுக்கு ரஜினி உடனே ஒரு முற்றுப் புள்ளி வைப்பது நல்லது. 60 வயதுக்குப் பிறகு, ஒரு சூப்பர் ஹிட் எந்திரனுக்குப் பிறகு, இனி சன் பிக்சர்ஸில் ரஜினி நடிக்காமல் இருந்தால், அவருக்கோ நாட்டுக்கோ ரசிகர்களுக்கோ என்ன ஒரு பெரிய நஷ்டம் இருந்துவிடப் போகிறது?

நடிகராகத் தன் பலத்தை ரஜினி அறிந்துகொள்வது அவர் சார்ந்திருக்கும் திரையுலகத்துக்கும், அவரது ரசிகர்களான நாளைய தலைமுறைக்கும் நல்லது.

Share

எந்திரன் – பெரிதினும் பெரிது கேள்

எனது எந்திரன் விமர்சனம் தமிழ்பேப்பர் இணையத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. வாசிக்க இங்கே சொடுக்கவும். http://www.tamilpaper.net/?p=258

டெல்லி எருமை என்று திட்டினால் கோபம் வரும், அதையே கொஞ்சம் மாற்றி பசு போல என்று சொன்னால் பெருமையாக நினைத்துக்கொள்வார்கள் என்பார்கள். அதேபோல, காதில் பூ சுற்றிப் படம் பார்க்கச் சொன்னால் கோபப்படுவார்கள். அதையே அறிவியல் புனைகதை என்று சொல்லிப் பார்க்கச் சொன்னால், அந்தப் படம் நன்றாகவும் இருந்துவிட்டால், பெருமையாகப் பார்த்துவிட்டுப் போவார்கள். எந்திரன் – அறிவியல் புனைகதையின் வழியே நம் காதில் பூ சுற்றுகிறது. இதுவரை ஆங்கிலப் படங்கள் சுற்றி வந்த அதே பூவை ஒரு தமிழ்ப்படம் சுற்றுகிறது. அது நமக்குத் தெந்திருந்தும், வியப்பு ஏற்படாமலில்லை. ஏனென்றால் 150 கோடி பெறுமானமுள்ள பூ இது.

பொதுவாகவே ரஜினியின் திரைப்படங்களில் அவர் தமிழ்நாட்டு ஜேம்ஸ்பாண்டாகவும் சூப்பர்மேனாகவும்தான் வலம் வருவார். ஒரு அடி அடித்தால் பத்து பேர் எப்படி எகிறி விழுவார்கள் என்று சீரிய திரை விமர்சகர்களும் ஆய்வாளர்களும் ரஜினியை மட்டும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அறிவியல் புனைகதை என்று சொல்லி அதற்கு சாமர்த்தியமான ஓர் அடித்தளத்தைக் கொடுத்து அவர்கள் வாயையும் அடைத்துவிட்டார் ஷங்கர். ஆனாலும் அவர்கள் சும்மா இருக்கப்போவதில்லை. இப்படத்தில் இருக்கும் அறிவியல் ஓட்டைகளையும், கலாசாரப் பழமைவாதத்தையும், சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் காட்சிகளையும் எப்படியாவது கண்டுபிடித்து எழுதுவார்கள். நாம் ரோஜாவை ரோஜாவாக அணுகுவோம்.

அறிவியல் புனைகதை என்னும் அடித்தளத்தை அமைத்துக்கொண்டு, தனது ஆதர்ச சூப்பர் ஹீரோவான ரஜினியை என்னவெல்லாம் செய்ய வைக்க முடியுமோ அதையெல்லாம் செய்து பார்க்க ஆசை கொண்ட ஷங்கர், அதில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார். ஒன்றிரண்டு காட்சிகளில் அந்த ஆசை கொஞ்சம் மீறிப்போய், விட்டலாச்சாரியா படங்களுக்கு அருகில் சென்றாலும்கூட, தொழில்நுட்ப வல்லமையைக் கொண்டு அதனைச் சமன் செய்கிறார். பொதுவாக இதைப் போன்ற படங்களையெல்லாம் கமலை வைத்து மட்டுமே பார்த்துப் பழகிப் போன ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவர் இப்படி வருவதைப் பார்த்து எந்தக் காட்சியில் கை தட்டவேண்டும் என்பதைக் கூட அறியாமல் மெய்ம்மறந்து பார்க்கிறார்கள்.

படப்பிடிப்பில்…

ஏற்கெனவே பல நேர்காணல்களில் ரஜினி சொன்னது போல எதிர்பாத்திரம் அவரை அதிகம் ஈர்க்கிறது என்பதை இப்படத்திலும் காணமுடிகிறது. கடைசி 45 நிமிடங்கள் ரஜினி எடுக்கும் விஸ்வரூபம் அசரச் செய்கிறது. ரஜினிக்கு இணையாக அக்காட்சிகளில் தொழில்நுட்பமும் இசையும் கொள்ளும் எழுச்சி, நாம் ஓர் இந்தியப் படத்தை, அதுவும் தமிழ்ப்படத்தைப் பார்க்கிறோமா அல்லது அமெரிக்கத் தரத்திலான ஹாலிவுட் படத்தைப் பார்க்கிறோமா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்திவிடுகிறது.

தங்களது படங்களில் வரும் பாடல் காட்சிகளில் கிராபிக்ஸை ஊறுகாய் போல மட்டுமே தமிழ் இயக்குநர்களுக்குப் பயன்படுத்தத் தெரியும் என்ற வசைச்சொல் பல காலமாக இருந்தது வந்தது. அதனை ஓரளவு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் போக்கியது. இத்திரைப்படம், தமிழ்த் திரைப்படங்களில், கிராபிக்ஸில் பெரிய சாதனையையே நிகழ்த்தியிருக்கிறது.

பெரிதினும் பெரிது கேள் என்பதை ஷங்கர் தன் வழியில் புரிந்துகொண்டிருக்கிறார். இரண்டு ரஜினி போதாது என்று நினைத்தாரோ என்னவோ, கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்குத் திரையெங்கும் ரஜினியின் உருவங்கள். ஒரு ரஜினி ரசிகனுக்கு இது வாழ்நாள் ட்ரீட்டாக இருக்கும். அத்தனை ரஜினியைப் பார்த்து ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் மூழ்கிப் போன நான் இன்னும் அதே நினைப்பிலேயே இருக்கிறேன்.

திரைக்கதையின் வேகத்தில் எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கும் ஷங்கர் இந்தப் படத்திலும் ஏமாற்றவில்லை. அடுத்தடுத்து வரும் காட்சிகளின் வேகம் பிரமிப்பைத் தருகிறது. நிர்வாணமான பெண்ணை ரோபோ தூக்கி வரும் காட்சி ஒரு எடுத்துக்காட்டு. ரோபோவின் நம்பகத்தன்மை நிமிடத்துக்கு நிமிடம் மாறும் காட்சி அது. அதேபோல் இன்னொரு கவிதையான காட்சி என்றால், ரோபோ கவிதை சொல்லும் காட்சி.

படத்தில் சில காட்சிகள் தேவையில்லாமல் நுழைந்து எரிச்சலை ஏற்படுத்துகின்றன. கொசு வரும் காட்சி, ஐஸ்வர்யா ராயை ரோபோ கடத்தும்போது வரும் கார் சேஸிங் காட்சி, கிளிமாஞ்சாரோ பாடலுக்கு முன்னால் கலாபவன் மணி வரும் காட்சி போன்றவை. அதேபோல் நம்மை அசர வைக்கும் காட்சிகளும் உண்டு. திரையெங்கும் ரஜினி உருவங்கள் ஆக்கிரமிக்கும் காட்சி, நல்ல ரோபோவாக ரஜினி விகல்பமில்லாமல் நடிக்கும் காட்சிகள் போன்றவை. அதிலும் மறக்கமுடியாத ஓரிடம், ரஜினியின் உடலைச் சுற்றி அம்மன் போல வேல் கத்தி சூலம் போன்றவை நிற்கும் காட்சி. ஷங்கரின் கற்பனை உச்சத்தைத் தொட்ட இடம் இது.

பெரிய மாஸ் ஓப்பனிங் இல்லாமல், ஓப்பனிங் பாடல் இல்லாமல், பஞ்ச் டயலாகுகள் இல்லாமல் இந்நாட்களில் ஒரு ரஜினி படம் வரமுடியும் என நிரூபித்திருக்கிறது இப்படம். வில்லனை எதிர்த்து சண்டை போடாமல் ரஜினி ஓடும் காட்சியும் கூட இதே ரகம்தான். எல்லாவற்றையும் ரஜினி ரசிகர்களுக்காக வட்டியும் முதலுமாகச் செய்து தீர்க்கிறார் ரோபோ ரஜினி.

ரோபோ கெட்டவனாக மாறும்போது, மாறும் ரஜினியின் நிறமும் அவரது உடல்மொழியும் மிரட்டுகின்றன. ரஜினியை சூப்பர் மேனாகப் பார்க்கும் சிறுவர்கள் இந்தப் படத்தை தங்கள் வாழ்நாள் முழுக்க மறக்காமல் வைத்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

அங்கங்கே தனித்துத் தெரியும் பளிச் வசனங்கள் சுஜாதாவை நினைவூட்டுகின்றன. ரோபோஸெப்பியன்ஸ், நக்கல்-நிக்கல் போன்றவை சில உதாரணங்கள். ரோபோவை அறிமுகப்படுத்தும் காட்சியில் சட்டென ஒரு ராகத்தைப் பாடும் ஒரு முதியவரும், கடவுள் இருக்காரா இல்லையா என ஒலிக்கும் குரலும் சந்தேகமேயின்றி சுஜாதாவேதான். ஏ.ஆர். ரகுமானின் இசையும், ரத்னவேலுவின் ஒளிப்பதிவும், ஓர் உலகத்தரமுள்ள திரைப்படத்துக்கு எப்படி ஒத்துழைக்கவேண்டுமோ அப்படி அமைந்திருக்கின்றன.

இதே படத்தில் கமல் நடித்திருந்தால் அது வேறொரு பரிமாணத்தை எட்டியிருக்கும். கூடவே கமலின் சில தன்முனைப்பு எரிச்சல்களும் சேர்ந்திருக்கும். இயக்குநரின் நடிகரான ரஜினி நடித்ததில், இப்படம் வேறொரு பரிமாணத்தைப் பெற்றுவிட்டது. கூடவே ரஜினியின் மாஸும் சேர்ந்துகொண்டதில், இப்படம் மிகப் பெரிய பிரம்மாண்டத்தைக் கண்முன் நிறுத்திவிட்டது.

மொத்தத்தில் எந்திரன் – தி மாஸ்.

Share

எந்திரன் – சுரேஷ்கண்ணனுக்கு நன்றி!

சுரேஷ்கண்ணனுக்கு நன்றி!

பொதுவாக சுரேஷ்கண்ணன் ரஜினி படம் வருவதற்கு முன்பு ஒரு தடவைதான் திட்டுவார். இந்த முறை இரண்டு மூன்று முறை திட்டியதாலோ என்னவோ படம் எக்கசக்கமாக நன்றாக இருந்துவிட்டது. ரஜினி ரசிகர்கள் ஒவ்வொருவரும் சுரேஷ் கண்ணனுக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள். வணிக சினிமாவுக்கு எதிராக அவரது போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். அடுத்தடுத்த ரஜினி படத்துக்கும் இப்படி அவர் திட்டி பதிவெழுதி, எஸ்பிபி முதல் பாட்டு பாடினால் எப்படி ரஜினி படம் ஹிட்டாகிவிடுமோ அதுபோல, இவர் திட்டினாலே ஹிட்டாகிவிடும் என்னும் உண்மையை நிலைநிறுத்தக் கேட்டுக்கொள்கிறேன்.

படம் – சான்ஸே இல்லை. ரஜினியின் தீவிர ரசிகர் ஷங்கரைப் பார்க்க நேர்ந்தால் நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்துவிடுவார்.

படம் பற்றிய எனது உணர்வு ரீதியான ரஜினி ரசிகனின் விமர்சனம் தமிழ் பேப்பரில் நாளை வெளிவரும். கோட்பாட்டு ரீதியான விமர்சனங்களை சுரேஷ்கண்ணன்கள் எழுதுவார்கள். இப்படியாக விமர்சகர் சுரேஷ்கண்ணன் ஒரு குறியீடாகவும் மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ் பேப்பரில் நாளை பார்க்கலாம்.

Share

ஏ.ஆர். ரகுமானின் பேட்டியும், நிறுத்தப்பட்ட எனது கமெண்ட்டும்

இந்த சிறிய விஷயத்தை ஒரு பதிவாகப் போடுவதற்கே அசிங்கமாகத்தான் உள்ளது. ஆனாலும் பதிந்து வைப்போம் என்பதற்காக இதனைப் போட்டு வைக்கிறேன்.

ஏ.ஆர். ரகுமானின் பேட்டி உதயம் என்ற வலைப்பதிவில் (http://kalyanje.blogspot.com/2010/04/blog-post.html) வெளிவந்திருந்தது. வாசித்துவிட்டு, நேற்று முன் தினம் நான் ஒரு சிறிய கமெண்ட்டைப் போட்டேன். பேட்டி குறித்த நெகடிவ் கமெண்ட் அது. அது அங்கு வெளியிடப்படவில்லை. அந்த கமெண்ட்டைப் போய் ஏன் நிறுத்தப் போகிறார்கள் என்று நினைத்து நேற்று மீண்டும் இன்னொரு கமெண்ட் போட்டேன், எனது கமெண்ட் ஏன் வரவில்லை ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சினையா என்று கேட்டு. அதுவும் இதுவரை வெளிவரவில்லை.

நான் போட்ட கமெண்ட்டுகளைச் சேமித்து வைத்துக்கொள்ளவில்லை. நான் போட்ட முதல் கமெண்ட் இப்படி இருந்தது.

நல்ல காமெடியான பேட்டி. ஏ.ஆர். ரகுமான் இவ்வளவு மோசமாகப் பேட்டி கொடுத்து இதுவரை நான் பார்த்ததில்லை.

//தமிழில் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி படம் இல்லையென்றால், படம் ஃபிளாப் ஆகிறது. படத்திற்குப் பதிலாக ஆல்பம் பண்ணலாம். படம் பண்ணும்போது என்னாகிறதென்றால், பாட்டு நன்றாக போட்டுக்கொடுத்துவிட்டு ஒரு எதிர்பார்ப்பையும் கிளறி விட்டுவிட்டபின் தியேட்டருக்கு வந்து பார்த்துவிட்டு திட்டிவிட்டுப் போகிறார்கள். ‘ஏன் இந்தாளு இந்தப்படத்துக்கு மியூசிக் போட ஒத்துக்கிட்டாரு, இவனை நம்பி படம் பார்க்க வந்தால், இது என்ன இப்படி இருக்கு?’ என்று கேட்கிறார்கள். அப்படியல்லாமல், இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் படம் கிடைத்தால் கண்டிப்பாகத் தமிழில் படம் பண்ணுவேன். நான் பட்ஜெட் பற்றிப் பேசவில்லை. ஐடியா பற்றிப் பேசுகிறேன். நூறு கோடியில்தான் படம் பண்ண வேண்டும் என்றில்லை. ஒரு கோடியிலும் இருக்கலாம். பத்து லட்சத்திலும் இருக்கலாம். ஆனால், புதிதாகப் பார்வையாளர்களுக்கு ஏதாவது வேண்டும்.//

சரி, கேட்டுக்கிட்டோம்.


இதுதான் நான் போட்ட முதல் கமெண்ட், ஏறக்குறைய இப்படித்தான் இருந்தது.

இரண்டாவதாக நான் போட்ட கமெண்ட், ஏறக்குறைய இப்படி.

நான் போட்ட கமெண்ட் வெளிவரவில்லை. ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சினையா அல்லது மட்டுறுத்தலா?


இதுவும் வெளிவரவில்லை.

ஏ.ஆர். ரகுமானின் பேட்டி மீது வைக்கப்படும் மிக மேலோட்டமான குற்றச்சாட்டுக்கூட வெளியிடப்படாமல் ஏன் இருக்கவேண்டும்? அந்த அளவுகூட எதிர்ப்பை விரும்பவில்லை பதிவர் என்பது தெரியவில்லை. திரைத்துறையில் இருப்பதால் அதீத கவனம் எடுத்துக்கொள்கிறாரோ என்னவோ. அல்லது பாராட்டுகள் மட்டும் காதில் கேட்டால் போதும் என்கிற எண்ணமா எனத் தெரியவில்லை.

எல்லாம் அவன் செயல்!

Share

அங்காடித் தெரு – நாம் வாழும் தெரு

வெகு சிலமுறை நான் சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருக்கிறேன். எல்லாம் நம்ம ஊருப் பசங்க என்பதைக் கேட்டு, பெருமையுடன் காணச் சென்ற எனக்கு அங்கே முதலில் தோன்றியது குழந்தைத் தொழிலாளர் சட்டம் இருக்கிறதா என்பதுதான். பின்னர் அதுவே பழகிவிட்டது. ஒருதடவை ஒரு பையனிடம் என்னப்பா வயசு என்ற கேட்டபோது பதினாறு என்று சொல்லிவிட்டு, உடனே சட்டென்று மாற்றி பதினேழு என்று சொன்னான். ஆனால் அவன் வயது உண்மையில் 14வது இருக்குமா என்ற சந்தேகம் வந்தது எனக்கு. பதினாறுன்னு சொன்னாலும் பதினேழுன்னு சொன்னாலும் ரெண்டும் ஒண்ணுதான் என்றேன். அந்தப் பையன்களை நினைக்கும்போது பாவமாக இருக்கும். எனக்குத் தோன்றும் பாவம் வெறும் ஒரு வரிப் பாவம். ஆனால் வசந்தபாலன் இவர்களுக்குப் பின்னே இருக்கும் உலகத்தையே காட்டிவிட்டார். சென்னையில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் இந்தப் படம் ஏதோ ஒருவகையில் நிச்சயம் பாதிக்கும். அடுத்த முறை சரவணா ஸ்டோர்ஸ் போன்ற இடத்துக்குச் செல்பவர்களது எண்ணம், பார்வையில் கொஞ்சமாவது மாற்றம் இருக்கும். இந்தப் பசங்களோட கஸ்டமர் சர்வீஸ் மோசம் என்றெல்லாம் யாரும் சொல்வார்களா எனக்கூடத் தெரியவில்லை.

செந்தில் முருகன் ஸ்டோர்ஸின் களமும் ரெங்கநாதன் தெருவும் ஒரு மிகப்பெரிய வில்லனைப் போலத் தோற்றம் அளிக்க வைக்கும் முயற்சியில் வசந்தபாலன் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்க்கையின் சிரிப்பில் தென் தமிழ்நாட்டு இளைஞர்கள் செந்தில் முருகன் ஸ்டோர்ஸால் விழுங்கப் படுகிறார்கள். அங்கே அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், காதல், காமம், கும்மாளம் என எல்லாவற்றையும் இத்திரைப்படம் சிறப்பாக முன்வைக்கிறது. நான் கடவுள் திரைப்படத்தில் பிச்சைக்காரர்களின் உலகத்தில் நமக்குத் தெரியாத பலவற்றை நாம் பார்த்ததுபோல, இத்திரைப் படத்தில் இது போன்ற இளைஞர்களுக்கு நடக்கும் நமக்குத் தெரியாத பல்வேறு காட்சிகள் நம் கண்முன் விரிந்து நம்மைப் பதற வைக்கின்றன.

ஒவ்வொரு சிறிய காட்சியையும் முக்கியக் கதையோடு இணைப்பதில் இயக்குநர் காட்டியிருக்கும் ஆர்வம் பழைய உத்தி. சம்பந்தமில்லாமல் வரும் காட்சிகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் தன்னம்பிக்கையைக் காட்டுவதற்கோ, அல்லது பின்னர் கதாநாயகன் நாயகிக்கு உதவுவதற்கோ சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது தெரிந்துவிடுகிறது. இதுபோன்ற சில குறைகள் நிறையவே இருக்கின்றன. படத்தின் பின்பாதியில் கொஞ்சம் இழுவை அதிகம். தேவையற்ற, செயற்கைத்தனம் கூடிய வசனங்கள் உண்டு. படம் முடிந்த பின்பு மீண்டும் இழுக்கப்படும் திரைப்பட உச்சக்கட்டக் காட்சி உண்டு. உச்சக்காட்சி என்ற ஒன்றில்லாமல் தமிழர்களுக்கு முழுத்திரைப்படம் பார்த்த உணர்வு வராது என்பதாலோ என்னவோ வசந்தபாலன் இப்படி செய்திருக்கவேண்டும். அதிலும் நல்ல ஒரு உத்தியைக் கையாண்டிருக்கிறார். படத்தோடு தொடர்பே இல்லாத ஒரு கிளைமாக்ஸை முதலிலேயே காட்டிவிட்டு, உச்சக்காட்சிக்கு முன்னரே வந்துவிடும் உச்சக்காட்சி மனோபாவத்தைக் குறைத்துவிட்டார்.

கதாநாயகியின் தங்கை பெரியவளாகும் கதையெல்லாம் சுற்றி அடிக்கிறது. இக்காட்சி இல்லாமலேயே, கதாநாயகி கதாநயாகனை மீண்டும் எற்பதற்கான சரியான முகாந்திரங்கள் உள்ளன. ஜெயமோகனின் கூர்மையான வசனங்கள் அசத்துகின்றன. கதாநாயகன் கதாநாயகியிடன் மிகக் கோபமாகப் பேசும் வசனமே போதுமானது கதாநாயகி மனம் மாறுவதற்கு. கதாநாயகியின் தங்கை வரும் காட்சிகளெல்லாம் வலிந்து சேர்க்கப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது. அதிலும் அந்தப் பெண் இருக்கும் வீடு – தமிழ்த் திரையுலகில் அது யார் வீடாக இருக்கமுடியும்? அந்தப் பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். தீட்டு என்று சொல்லி வீட்டுக்குள் சேர்க்கமாட்டேன் என்கிறார்கள். நாய் கட்டிப்போட்டிருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் தட்டுமுட்டுச் சாமான்களோடு அவள் கிடக்கிறாள். ஆமாம், அது பிராமண வீடு.

பின்னணி இசையைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் கர்ண கொடூரம் என்றுதான் சொல்லவேண்டும். இல்லை என்றால் நம்பிக்கைத் துரோகம் என்று சொல்லலாம். இத்தனை ஆழமான, உணர்வு ரீதியான படத்துக்கு பின்னணி இசை செய்யும் மாபாதகத்தை மன்னிக்கவே முடியாது. ஒரு காட்சி தரவேண்டிய சோகத்தை, பதற்றத்தை இசை வழியாகத் தந்துவிட நினைத்து இசையமைப்பாளர்(கள்) செய்யும் குரங்குச் சேட்டைகளை என்னவென்று சொல்ல. தலையெழுத்து. இரண்டு பாடல்கள் கேட்க இனிமையாக உள்ளன.

கதாநாயகன் நன்றாக நடித்திருக்கிறார். அடுத்த படங்களில் புருவத்தை இப்படி நெறிக்கவேண்டியதில்லை. கதாநாயகி – அசத்தல். இவர் கற்றது தமிழ் படத்தில் நடித்தவர் என நினைக்கிறேன். அந்தப் படத்திலேயே நன்றாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் அசுரப் பாய்ச்சல். சிரிப்பு, வெட்கம், கோபம் எல்லாவற்றையும் நினைத்த மாத்திரத்தில் முகத்தில் கொண்டு வருகிறார். இதுவே படத்தின் பலம். என்னைக் கவர்ந்த விடுகதை நீனா, மின்சாரக் கனவு கஜோல், சிதம்பரத்தில் அப்பாசாமி நவ்யா நாயர் வரிசையில் அங்காடித் தெரு அஞ்சலியும் சேர்ந்துகொள்கிறார்.

நடிகர்களைப் புறந்தள்ளிவிட்டு இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளும் சிறப்பாக நடிக்கத் தொடங்கிவிட்டார்கள். பெரும் குணச்சித்திர தொழில்முறை நடிகர்களே அசரும் வண்ணம் நடிக்கிறார்கள். அவள் பெயர் தமிழரசி படத்தில் தியடோர் பாஸ்கரனும் வீரச்சந்தானும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். இந்தமுறை பழ. கருப்பையா. இப்படத்தில் அண்ணாச்சியாக வந்து அட போட வைக்கிறார்.

இன்னொரு பலம் ஜெயமோகன். பல வசனங்கள் மிகக்கூர்மையாக உள்ளே இறங்குகின்றன – காட்சியோடு. காட்சியோடு இறங்கும் வசனம் என்பதுதான் முக்கியம். காட்சி உக்கிரமாக இல்லாமல் வசனம் மட்டும் முழித்துக்கொண்டு நிற்கும் படங்கள் பாலசந்தர்த்தனப் படங்களாக எஞ்சிவிடும். அந்த அபாயம் இப்படத்துக்கு நேரவில்லை. எத்தனை ஆழமாக எழுதினாலும் எப்போதும் ஜெயமோகனுக்குள்ளே விழித்திருக்கும் பெரும் நகைச்சுவையாளர் ஒட்டுமொத்த படத்தையே ஹைஜாக் செய்துவிட்டார் என்றே சொல்லவேண்டுன். நான் கடவுள் படத்தில் எப்படி இதே நகைச்சுவையாளர் படத்தை வேறு தளத்துக்கு மாற்றினாரோ அப்படி இங்கேயும் மாற்றுகிறார். ஜெயமோகன் கதை வசனம் எழுதும் படத்தில் இதுவும் முக்கியமான படமாக இருக்கும். ஒன்றிரண்டு இடங்களில் வரும் தேவையற்ற வசனங்கள், இயக்குநரால் மக்களின் புரிதலுக்காக சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.

நிச்சயம் நல்ல படம். இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் வெட்டித் தள்ளியிருந்தால் மிக நல்ல படமாக இருந்திருக்கும். விருதுத் திரைப்படங்கள் போன்ற திரைப்படங்களைப் போலவே, இது போன்ற நல்ல திரைப்படங்களும் தேவை. அந்த வகையில் இத்திரைப்படம் முக்கிய இடத்தைப் பெறும். சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெரு முதலைக் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் இப்படத்தைப் பார்த்தால் என்ன உணர்வு அடைவார்கள் என்பதை யோசிக்க யோசிக்க இப்படம் இன்னும் பிடிக்கத் தொடங்குகிறது.

(இந்த விமர்சனத்தை இட்லிவடைக்கு அனுப்பியிருந்தேன். அவர் திடீரென்று காணாமல் போய்விட்டதாலும், இதை இதுவரை வெளியிடாததாலும் நானே வெளியிடுகிறேன். வழக்கம்போல இட்லிவடைக்கு நன்றி!)

Share

படித்துறையில் ஒருநாள்

இப்பதிவை வெளியிட்டுள்ள இட்லிவடைக்கு நன்றி.

இப்பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

ஏன் இட்லிவடையில் தொடர்ந்து எழுதுகிறீர்கள், நாந்தான் இட்லிவடை என்றெல்லாம் கேட்கவேண்டாம். 🙂 எனக்கு இட்லிவடை யாரென்பதுகூடத் தெரியாது. நம்புபவர்கள் நம்பிக்கொள்ளலாம். தேவைப்படும்போதெல்லாம், ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 7 பேர் படிக்கும் இட்லிவடை பதிவில் தொடர்ந்து எழுதவேன் என்றும் சொல்லிக்கொள்கிறேன்!

படித்துறையில் ஒருநாள்

எல்லாமே வித்தியாசமாக இருந்தது. ஒரு வசனத்தைப் பேச நூறு தடவை முயன்றார்கள். எப்படி சலிக்காமல் இதே வசனத்தைப் பேசுகிறார்கள் என்று முதலில் ஆச்சரியத்தோடும், பிறகு சலிப்போடும், அதன் பிறகு எரிச்சலோடும் பார்த்துக்கொண்டிருந்தேன். ஓர் இயக்குநர் ஒரு படம் எடுத்தவுடன் எப்படி பைத்தியம் ஆகாமல் இருக்கிறார் என்கிற ஆதாரமான சந்தேகம் வந்தது. பக்கம் பக்கமாக வசனம் பேசித் தள்ளிய சிவாஜியை நினைத்து வியப்பாக இருந்தது. சந்திரமுகி கதாபாத்திரத்துக்கு பின்னணி பேசியவருக்கு இதுவரை நான் கோவில் கட்டாததை நினைத்துக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

இயக்குநர் சுகாவின் படித்துறை படத்தின் டப்பிங்குக்குச் சென்றிருந்தேன். ‘பதறண்டாம் கேட்டேளா, நீங்களும் டப்பிங் பேசணும்’ – திடீரென்று சொன்னார் சுகா. இது என்ன ஒரு மேட்டரா என நினைத்துக்கொண்டு சென்றபின்புதான் தெரிந்து, வேண்டாத வேலையில் இறங்கிவிட்டோமோ என்று. அங்கே ஹீரோ ஒவ்வொரு வசனமாக மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தார். அடுத்து என்னை பேசச் சொன்னார்கள். ஐந்து வார்த்தை உள்ள ஒரு வசனம். மீண்டும் மீண்டும் பேசினேன். படிக்கிற காலத்துல இப்படி படிச்சிருந்தா இன்னும் பத்து மார்க் கூட கிடைச்சிருக்கும் என்று என் அப்பா சொல்வது போல எங்கோ கேட்டது. எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. வார்த்தை க்ளியரா இல்லை என்றார் சுகா. இப்ப க்ளியரா இருக்கு, ஆனா எமோஷனலா இல்லை. எமோஷனலா இருக்கு, ஆனா நம்ம ஊர் பாஷ இல்லயே. இப்ப எல்லாம் சரியாத்தான் இருக்கு, ஆனா வசனத்த நீங்களே எழுதிட்டீங்க, நான் எழுதினத பேசினா நல்லாயிருக்கும். இப்படி பல. வசனம் ரொம்ப நீளமா இருக்கு என்று சொல்லலாமா என்று நினைத்தேன்! அடுத்த தடவை முதலில் டப்பிங் வைத்துவிட்டு, அப்புறம் படம் எடுக்கச் சொன்னால் ஈஸியாக இருக்குமே என்றெல்லாம் தோன்றியது. ஒரு வழியாக ஐந்து வார்த்தை வசனத்தைப் பேசி முடித்தேன். (என்ன பேசினேன் என்பது எனக்கு நினைவில்லை. அந்த வசனம் படத்தில் வந்தால் அதை மீண்டும் மனப்பாடம் செய்துகொள்ளவேண்டும்! வரலாறு நமக்கு மிகவும் முக்கியம்.) அடுத்து கொஞ்சம் நீண்ட வசனம். ஆமாம், 7 வார்த்தைகள் இருக்கும் என நினைக்கிறேன். அப்படி இப்படி என்று என்னவெல்லாமோ எப்படியெல்லாமோ சொல்லிப் பார்த்தேன். உண்மையில் கதை எழுதுவதும், கட்டுரை எழுதுவதும், கவிதை எழுதுவதும், முக்கியமாக படத்தை விமர்சனம் செய்வதும் அதுவும் அதனைக் கிழிப்பதும்தான் எவ்வளவு எளிமையானது.

வாய்விட்டே சொன்னேன், ஒரு படத்தை எடுத்த பின்னால டைரக்டருக்கு கோட்டி பிடிக்காததே சாதனதாங்கேன். ஒருவர் சொன்னார், பத்து படத்தையும் பாத்தவன் கதய யோசிச்சேளா என்று. சரிதான் என நினைத்துக்கொண்டேன். இன்னொரு காட்சியில் ஒரு நோயாளி முனகும் சத்தத்தைக் கொடுக்கவேண்டும். இவ்வளவு சத்தமா பேச முடிஞ்சா அவன் ஏன் ஆஸ்பத்திரிக்கு வராங்கிய. சரி என்று கொஞ்சம் குரலைக் குறைத்தேன். இவ்வளவு மெதுவா பேசினா ஒண்ணும் கேக்காது. மீடியமாகப் பேசினேன். இதுல பேச்சே வரக்கூடாது, வெறும் எக்ஸ்பிரஸந்தான். இது படத்தில் 20 செகண்டு வந்தால் அதிகம். அதற்கு ஒரு முப்பது தடவை முயற்சித்தார்கள். நீங்க மூச்சு விடும்போது ஆளு உள்ள இழுக்கான், நீங்க இழுக்கும்போது ஆளு வெளிய விடுதான். சின்க் ஆல பாருங்க. ஒரு வழியாக சின்க் ஆனது. பெருமூச்சு ஒன்றை விட்டேன். இப்ப நா எப்படி வேணா மூச்சு விடலாம் கேட்டியளா. வேறொரு கதாபாத்திரம் பேசிக்கொண்டிருக்கும்போது, டி டி எஸ்ஸில் கேட்கும் சின்ன எக்ஸ்பிரஸனுக்கு இவ்வளவு உழைப்பு.

உண்மையில் சினிமா உழைப்பின் மொழி. எந்த ஒரு மோசமான படத்தின் பின்னாலும் நிச்சயம் உன்னதமான உழைப்பு இருந்தே தீரும், ஏதோ ஒரு வடிவில். அதோடு சேர்ந்து படமும் சிறப்பாக அமையும்போது எல்லாமே உன்னதமாகிவிடுகிறது. தவறும்போது எல்லாமே உதாசினப்படுத்தப்பட்டுவிடுகிறது.

ஓர் உதவி இயக்குநர் சொன்னார். (எனது விமர்சனங்களை படித்திருக்கிறார் போல) இனிமே எழுதும்போது இதெல்லாம் மனசுல இருக்கும்ல என்று. விமர்சகர்கள் மோசமான ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று அவர் தெரிந்துகொள்வார். உண்மையில் இரு தரப்புமே நியாயங்களைக் கொண்டுள்ளது. உழைப்பின் உன்னதத்தோடு வரும் திரைப்படம் ஒன்று மிகவும் விமர்சிக்கப்படும்போது திரைப்படத்துடன் நேரடியாகப் பங்குகொண்டவர்கள் அடையும் நிம்மதியின்மை நிச்சயம் உண்மையானது. ஆனால் விமர்சனம் என்பது இதையெல்லாம் என்றுமே பொருட்படுத்தாமல் இயங்கிவருகிறது. ஏனென்றால் விமர்சனம் என்பது ஓர் ஒப்பீடு மட்டுமே. ஒப்பீடாலேயே தொடர்ந்து மாதிரிகள் கட்டமைக்கப்படுவதால் விமர்சனம் உழைப்பை மெல்லப் புறந்தள்ளுகிறது. ஆனால் விமர்சகன் ஒருவன் படம் எடுக்கும் விதத்தை முழுக்க முழுக்க கூடவே இருந்து பார்த்தானால் அவனது பார்வை இன்னும் கூர்மையடைவதோடு, எதை ஏன் எப்படி சொல்கிறோம் எனபதைவிட எதை எப்படிச் சொல்லக்கூடாது என்பது நிச்சயமாகப் புலப்படத் தொடங்கும் என்று தோன்றியது. பாலுமகேந்திரா சுகாவுக்கு முன்பு எழுதிய கடிதத்தில் ‘என்ன பலன் என்று தெரியாமலேயே கடும் உழைப்பைக் கோரும் ஊடகம் திரைப்படம்’ என்ற பொருள்பட எழுதியிருந்தாராம். கடும் உழைப்பைக் கோரும் ஒரு திரைப்பட அனுபவத்தை இன்று நேரில் பார்த்தேன். நான் இன்று பார்த்தது நூறில் ஒரு பங்கு கூட இல்லை என்பதுதான் இதில் முக்கியமானது. இன்றைக்குப் பார்த்ததாவது மூளையை அழுங்கடிக்கும் விஷயம்தான். டப்பிங்குக்கு முன்னதாக படத்தின் வேலைகள் கோரும் க்ரியேட்டிவிட்டி உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் தேவையான உழைப்பை நாம் இதிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.

இன்னும் சில முக்கல் முனகல்களைச் சொன்னேன். டப்பிங் முடிந்தது எனக்கு. கிட்டத்தட்ட 2 மணி நேரத்தில் நான் பேசியது மொத்தம் 2 நிமிடங்கள் இருக்கலாம்! சரி போகலாம் என்றார் சுகா. விருது எப்போ தருவாங்க என்று கேட்டேன். பை கொண்டாந்திருக்கேளா என்றார். இல்லை, கொடுத்த உடனே வேண்டாம்னு மறுக்கணும், கவிஞம்லா என்றேன்.

சுகா இப்படத்தை இயக்குகிறார் என்பது ஓர் ஆர்வம். இன்னொரு ஆர்வம் இளையராஜாவின் இசை குறித்தானது. சுகா இசை என்றால் என்ன என்று தெரிந்தவர். அதாவது இசையோடு தொடர்புடைய விஷயங்கள் தெரிந்தவர் என்றல்ல நான் சொல்வது. நேரடியாகவே இசை என்றால் என்ன என்பதை பற்றிய நல்ல அறிவு உள்ளவர். ஆர்மோனியம் வாசிக்கத் தெரிந்தவர். கர்நாடக ராகங்களில் தேர்ச்சி உள்ளவர். அதனால் அவர் இளையராஜாவோடு பணிபுரிந்து வரும் திரைப்படத்தின் பாடல்கள் குறித்த அதீத ஆர்வம் எனக்கிருந்தது. மூன்றாவதான ஆர்வம் இத்திரைப்படம் நெல்லையோடு தொடர்புடையதென்பது. நான்காவதான ஆர்வம் இப்படத்தில் எஸ்.ராமகிருஷ்ணனும் நாஞ்சில் நாடனும் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள் என்பது.

தேரோடும் என்னும் ராமகிருஷ்ணன் எழுதிய பாடலைக் கேட்டேன். முதல் முறை கேட்டபோது இசையின் ஆழம் என்னை அசர வைத்தது. (எனக்கு இசை என்றாலே என்னவென்று தெரியாது. எனது கருத்து எனது ரசனை சார்ந்தது மட்டுமே.) பாம்பே ஜெயஸ்ரீயும் சுதா ரகுநாதனும் பாடியிருக்கும் இப்பாடல் இளையராஜாவின் முக்கியமான பாடல்களில் ஒன்றாக அமையும். எஸ்ராவின் தமிழ் அழகாக வெளிப்பட்டுள்ளது. அதேபோல் நா. முத்துக்குமார் எழுதியிருக்கும் நீரோடும் எனத் தொடங்கும் (என நினைக்கிறேன்!) பாடல் இன்னொரு அசத்தலான பாடலாக இருக்கும். இந்த இரு பாடல்களைக் கேட்டபோது, குணா, மகாநதி, தேவர் மகன் காலத்தில் இளையராஜா இசை அமைத்த மிகச் சிறந்த பாடல்களின் நினைவு வந்தது. இசையில் தொடங்குதம்மா (ஹே ராம்), உனைத் தேடும் ராகமிது (பொன்மலை), கண்ணில் பார்வை (நான் கடவுள்) வரிசையில் இப்பாடல்கள் இரண்டும் அமையும் எனபதில் ஐயமே இல்லை.

படத்தை அங்கங்கே பார்த்த வகையில், எல்லாருமே புதிய முகங்கள் என்பது தெரிந்தது. மற்றபடி என்ன கதை என்பதெல்லாம் விளங்கவில்லை. ஆனால் ஆர்வம் மட்டும் விண்ணோங்கி வளர்ந்துவிட்டது. படத்தின் ஹீரோ டப்பிங் தியேட்டரில் ஓரத்தில் கீழே உட்கார்ந்திருந்தார். இன்னும் பெயர் வைக்கப்படாத பையன். அடுத்த படத்துல எங்களையே பாத்து நீங்க யாருன்னு கேப்பான் என்றார் நண்பரொருவர். இப்படம் பெரும் வெற்றிபெற்று அக்கேள்வியை அவர் நிஜமாகவே கேட்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

ஆர்யா தயாரிக்கும் படம் இது. ஆர்யா இன்று டப்பிங் தியேட்டருக்கு வந்திருந்தார். படம் தொடங்கிய தினத்தில் இருந்து இன்றுதான் இரண்டாவது முறையாக வந்திருக்கிறார் என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். முதல் படம் இயக்கும் இயக்குநருக்குத் தேவையான சுதந்திரம் சுகாவுக்குக் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு நல்ல படம் வர நினைக்கும் ஆர்யாவை நினைத்தும் சந்தோஷமாக இருந்தது.

சரி சுகா பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தேன். வானத்தில் சரியும் சூரியன் ரம்மியமாக இருந்தது. இனி ஆட்சியைப் பிடிக்கவேண்டியது மட்டும்தான் பாக்கி.

Share

நாயி நிரலு – கன்னடத் திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் – 05)

லோக் சபா சானலில் நாயி நிரலு (நாயின் நிழல்) என்ற கன்னடப் படம் நேற்று ஒளிபரப்பானது. எஸ். எல். பைரப்பாவின் நாவலை கிரிஷ் காசரவள்ளி இயக்கியிருக்கிறார்.

நேற்று படத்தைப் பார்த்தபோது, இது ஒரு சிக்கலான நாவல் போலத் தோன்றுகிறதே என்று நினைத்தேன். குறுநாவலே ஒரு திரைப்படத்துக்கான சிறந்த வடிவம் என்பது நேற்று மீண்டும் உறுதிப்பட்டது. ஒரு நீண்ட நாவலில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய நீளும் காலங்களும், தொடர்ந்த கதைத் திருப்பங்களும் திரைப்படத்தில் ஓர் அயர்ச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும். கிரிஷ் காசரவள்ளி போன்ற இயக்குநரின் கைகளில் சிக்கியதால், அது ஓரளவு தப்பித்தது என்றும் சொல்லவேண்டும்.

நாவலின் மையமான மறுபிறப்பு (நன்றி: விக்கிபீடியா) என்கிற நம்பிக்கையிலிருந்து இப்படம் விதவையான ஒரு பெண்ணின் மையமாக மாறியிருப்பதைக் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது. ஒரு நாவலைத் திரைப்படமாக்கும்போது, இயக்குநர் தனக்குத் தேவையான சுதந்திரத்தை எடுத்துக்கொண்டே தீரவேண்டும். அந்த வகையில் இயக்குநர் இத்திரைப்படத்தில், நாவலில் சொல்லப்பட்ட சில காட்சிகளைத் தவிர்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. அதனால் இத்திரைப்படத்தின் மையம், ஒரு விதவைப் பெண்ணின் மீது குவிகிறது. அதன் பின்னூடாக ஒரு சிறந்த மாமனாரின் சித்திரம் மேலெழுவதையும் பார்க்கமுடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மாமனாரின் சித்திரத்தைப் பற்றித் தெளிவாக எழுதமுடியாது. சிறந்த விற்பன்னராகவும், தன் மீது தீராத விசாரணையும் கொண்டவராகவும் வரும் இவரது பாத்திரத்தைப் படத்தைப் பார்த்துத்தான் புரிந்துகொள்ளமுடியும்.

ஏற்கெனவே நான் பார்த்த காசரவள்ளியின் Kraurya (கதை சொல்லி) திரைப்படம் பாவனைகள் இன்றி மிக நேரடியாகப் பேசிய படம். நாயி நிரலு பாவனைகள் அற்ற படம்தான் என்றாலும், மிக நேரடியான திரைப்படம் என்று சொல்லமுடியாது. படத்தைப் பார்ப்பவர்கள் தாங்களாக உருவாக்கிக்கொள்ளவேண்டிய தீர்மானங்களுக்கு நிறைய இடம் இருக்கிறது. ஒருவர் இத்திரைப்படத்தை மறுபிறப்புத் தொடர்பான நம்பிக்கைகள் சார்ந்த திரைப்படம் என்ற வகையில் பார்க்கலாம். இன்னொருவர் இத்திரைப்படத்தை விதவைகளின் உணர்வுகள் சார்ந்த திரைப்படம் என்று பார்க்கலாம். இன்னும் ஒருவர் இத்திரைப்படத்தை குடும்பத்துக்குள்ளான உணர்வுகளின் பிரச்சினையாகவும், ஒரு தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் போராட்டமாகவும் பார்க்கலாம். இன்னொருவர் சமூகத்துக்கும் அது உண்டாக்கி வைத்திருக்கும் சம்பவங்களுக்குமான வெளியாகப் பார்க்கலாம். இவையெல்லாமே இப்படத்தில் அடங்கியிருக்கிறது என்றாலும், கிரிஷ் காசரவள்ளி நாவலில் எஸ்.எல். பைரப்பாவின் நாவலில் இருந்து சில குறிப்பிட்ட பகுதிகளை நீக்கிவிட்ட வகையில், இதனை விதவைகளின் உணர்வுகள் சார்ந்த பிரச்சினையாகவே என்னால் பார்க்கமுடிகிறது.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு இளம் விதவையுடன் வாழும் பிராமணக் குடும்பத்தைச் சுற்றி நடக்கிறது கதை. இளம் பிராமண விதவைதான் என்றாலும் அவளுக்கு வயதுக்கு வந்த, கல்லூரியில் படிக்கக்கூடிய மகள் உண்டு. சிறு வயதிலேயே திருமணம் ஆகிப் பிள்ளை பெற்றிருக்கக்கூடிய வாய்ப்புகள் அக்காலத்தில் உள்ள நிலையில், இந்த வயதுக்கு வந்த மகள் என்பதும், அவளது தாய் இளமையான விதவைத் தாய் என்பது முக்கியம் பெறுகிறது. வயதான, படுத்த படுக்கையாகக் கிடக்கும் மாமியார், குடும்பத்தைச் சுமக்கும் மாமனார். இறந்து போன தன் மகனின் மறுபிறப்பாக ஒருவன் பக்கத்து கிராமத்தில் பிறந்திருக்கிறான் என்று யாரோ ஒருவரின் மூலம் அறிகிறார் மாமனார். தன் மனைவியின் தொடர் வற்புறுத்தலுக்குப் பின்பு அவனை வீட்டுக்கு அழைத்து வருகிறார். படுத்த படுக்கையாகக் கிடக்கும் மாமியார் குணம் பெறுகிறார். தன் மகன்தான் அவன் என்று உறுதியாக நம்புகிறார் அவர். ஊரும் நம்புகிறது. ஆனால் விதவைப் பெண்ணோ வந்தவன் தன் கணவனல்ல என்று நினைக்கிறாள். ஊரும் மாமியாரும் வந்தவன் அவள் கணவனே என்று நம்பச் சொல்கிறது. ஒரு கட்டத்தில் அவளுக்கு அவனைப் பிடித்துப் போகிறது. அவளைத் தன் கணவனாக ஏற்றுக்கொள்கிறாள். இங்கே தொடங்குகிறது கதையின் பிரச்சினை.


விதவைப் பெண்ணுக்கும் வந்திருக்கும் இளைஞனுக்கும் ஏற்படும் உறவில் அவள் கருத்தரிக்கிறாள். மாதா மாதம் தலைமுடியை சிரைத்துக்கொள்ளும் சடங்கை இனிச் செய்ய மாட்டேன் என்கிறாள் விதவைப் பெண். இனி தான் விதவையல்ல என்று முடிவெடுக்கிறாள். இதுவரை தன் மகன் என்று நம்பி அவனை வீட்டை விட்டு அனுப்பக்கூடாது என்று சொன்ன மாமியார், அவனை வீட்டை விட்டுப் போகச் சொல்ல, அதுவரை தன் கணவன் என்று நம்பாமல் இருந்த விதவை பெண் அவனை வீட்டை விட்டு அனுப்பக்கூடாது என்று முடிவெடுக்கிறாள். வீட்டுக்கு அவனை அழைத்து வந்த தானே பிரச்சினையின் காரணம் என்று நினைக்கிறார் மாமனார்.

தன் மாமா வீட்டில் இருந்து படித்துவரும் விதவைப் பெண்ணின் மக்ள் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அதிர்கிறாள். இத்தனைக்கும் விதவைப் பெண்களுக்கு மொட்டையடிக்கக்கூடாது, சமயச் சடங்குகள் கூடாது என்ற கருத்தோடு வளர்ந்த பெண் அவள். தன் அம்மா கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவளுக்குப் பெரும் அதிர்ச்சியும், கோபமும் ஏற்படுகிறது. இத்தனைக்குப் பின்னும் அவளால் தன் அம்மாவை வெறுக்கமுடியவில்லை. தன் தந்தையாக வந்திருப்பவனை விரட்டிவிட்டால் தன் அம்மா தனக்குக் கிடைத்துவிடுவாள் என நினைக்கிறாள். ஆனால் அவனை வீட்டை விட்டு அனுப்ப அவளது அம்மா சம்மதிக்கவில்லை.

ஊராரின் நிர்ப்பந்தத்தால், யாருமற்ற ஒரு தீவுக்கு, தன் கணவனுடன் செல்கிறாள் அந்த விதவைப் பெண். தான் திருமணம் செய்துகொண்டும் விதவைப் பெண்; விதவைப் பெண்ணாக இருந்தும் திருமணம் ஆனவள் என்னும் குழப்பம் அவளைத் துரத்துகிறது. தான் சுமங்கலியும் அல்ல, அமங்கலியும் அல்ல என்பதுதான் உண்மை என்று நினைக்கிறாள். இதற்கிடையில் மகளின் கோபம் உச்சத்துக்குச் செல்கிறது. ஒரு கேஸ் கொடுத்து தன் தந்தை என வந்திருப்பவனை சிறையில் வைக்கிறாள். அதனால் அவன் கோபம் கொள்கிறான். தன்னைப் பார்க்கவரும் கர்ப்பிணி மனைவியைப் பார்க்க மறுக்கிறான். அவன் யாருமற்ற தீவில் போது, ஓடக்காரப் பெண்ணின் மீது மையல் ஏற்படுகிறது. அதனைப் பயன்படுத்தி, அந்தப் பெண்ணை வைத்து, தன்னைக் கெடுக்க வந்ததாகப் பொய் சாட்சியம் சொல்லச் சொல்லி, அவனை நிரந்திரமாக உள்ளே வைக்கிறார்கள். இரண்டு வருடம் சிறைத்தண்டை என்று தீர்ப்பு வருகிறது. அக்கோபத்தில் தனக்குப் பிறந்த பெண்ணையும் பார்க்க மறுக்கிறான் அவன்.

திரும்பி வருவானா வரமாட்டானா என்கிற நிலையில் அதே தீவிலேயே தங்க தீர்மானிக்கிறாள் ஒரு மகளைப் பெற்றிருக்கும், ஒரு கணவனைப் பெற்றிருக்கும் அந்த விதவைப் பெண்.

இந்த நீண்ட கதைப் பின்னல் கொண்ட இத்திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதிவரை, எல்லா சட்டகங்களிலும் ஒருவித சோகத் தன்மையை மையச் சரடாகக் கொண்டிருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஏதோ ஒரு சோகம் நம்மைத் தொட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அது தனது மகன் பற்றிய ஒரு தாயின் சோகமாக இருக்கலாம். இளம் விதவைக்கு அக்காலத்துச் சமூகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் தரும் அழுத்தமாக இருக்கலாம். தாய்க்கும் மகளுக்குமான போராட்டமாகவோ, தனது மனதுக்குள்ளேயே தான் செய்துவிட்ட செயலை நினைத்து கிழவர் செய்துகொள்ளும் தர்க்கமகாவோ அது இருக்கலாம். இப்படித் தொடரும் சோகமே இத்திரைப்படத்தின் நிறம்.

இத்திரைப்படத்தின் மிக முக்கியமான காட்சிகள் சிலவற்றைப் பற்றிச் சொல்லவேண்டும்.

தனது மகன் திரும்ப வந்துவிட்டான் என்று நினைத்துக்கொண்டு அவனோடு பாசமாகப் பழகும் ஒரு முதிய தாய், தன் மகனுக்காக தன் மருமகளை, விதவைக் கோலத்தை விடுத்து, ஒரே ஒரு தடவை வண்ணப் புடைவை ஒன்றை உடுத்திக்கொள்ளச் சொல்லிக் கெஞ்சும் காட்சி. மருமகள் தொடர்ந்து மறுக்கிறாள். ஆனால் தாயோ விடுவதாக இல்லை. மெல்ல மெல்ல அவள் மனதை மாற்றி, அவளை வண்ணப் புடைவை அணிவிக்கச் செய்கிறாள். ஆனால் பின்னர் மருமக்ளுக்கும் தன் மகனுக்கும் உறவு ஏற்பட்டுவிட்ட நிலையில், ஒன்றுமே செய்யமுடியாதவளாக மருமகளைப் பிடித்து உலுக்குகிறாள். அப்போது மருமகள் வைத்துக்கொண்டிருக்கும் சவுரி கையோடு வந்துவிடுகிறது. அப்போது அந்த முதிய தாய் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் சொல்லும் செய்திகள் ஏராளம்.

இன்னொரு காட்சி, மகளும் தாயும் சந்திக்கும் இடம். எப்படி தன் தாய் இருக்கவேண்டும் என்று நினைத்தாளோ அப்படி தாய் மாறியிருக்கிறாள். ஆனால் இந்த மாற்றம் வந்த விதம் வினோதமானது. இதனை ஏறக அந்த மகளால் முடியவில்லை. எப்படியாவது தன் தாயை மீட்கவேண்டும் என்று நினைக்கிறாள். அழகான வண்ணப் புடைவையுடன், தலை நிறைய முடியுடன், பூவுடன் அம்மாவைப் பார்க்கும்போது அவள் அழகாக இருப்பது தெரிகிறது. ஆனால் அந்த அழகுக்குப் பின் ஏதோ ஒரு வினோதம் இருப்பதை அவளால் ஏற்கமுடியவில்லை. எத்தனையோ கேட்டும் தந்தையாக வந்திருப்பவனை, தன்னைவிட வயதில் சிறிய தந்தையை, வெளியில் அனுப்ப மறுக்கிறாள் தாய். அதுவரை சமயச் சடங்குகளுக்கு எவ்வித மதிப்பும் தராத அந்த மகள், அவ்வருடம் தனது தந்தையின் மரண தினத்தை சிறப்பாகச் செய்துமுடிக்கிறாள். தனது தாயை ஏதோ ஒரு வகையில் பழிதீர்த்துவிட்ட மன நிம்மதி அவளுக்குக் கிடைக்கிறது.

படத்தின் உச்சகட்டக் காட்சி மிக முக்கியமானது. தாயும் மகளும் பேசிக்கொள்கிறார்கள். மகளின் கையில் தன் தாய்க்குப் பிறந்த குழந்தை இருக்கிறது. மகள் தன் தாயிடம் எப்போதும் கேட்டுவந்த அதே கேள்வியை மீண்டும் கேட்கிறாள். ‘வந்தவனை அப்பா என்று நீ நிஜமாகவே நம்பினாயா?’ என்று. இந்தக் கேள்வி கேட்கப்படும்போதெல்லாம் அதனைத் தவிர்க்கும் தாய் அப்போது பேசுகிறாள். ”ஊரெல்லாம் வந்தவனை உன் அப்பா என்றார்கள். ஆனால் என் கணவன் என்று ஏற்க மறுத்தார்கள். உன் பாட்டி அவனைத் தன் மகனாக நினைத்தாள். ஆனால் என் கணவனாக ஏற்க மறுத்தாள். ஊருக்கும், பாட்டிக்கும் எல்லாருக்கும் ஒரு பார்வை இருந்தது. எனக்கும் ஒரு பார்வை இருந்தது.” இடைமறித்து மீண்டும் மகள் கேட்கிறாள். ‘நீ அவனை அப்பா என்று நம்பினாயா’ என்று. அப்போது அவள், ‘ஒரு போதும் நான் நம்பியதில்லை’ என்கிறாள். பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறாள் மகள். இக்காட்சியின் வழியே நீளும் மனப்பிரதிகள் ஏராளம். இக்காட்சியே அதுவரை படத்தைப் பீடித்திருந்த பெரும் சோகத்துக்கும், நீள நீளமான காட்சிகளுக்கும் ஒரு அர்த்தத்தைக் கொடுக்கிறது. இக்காட்சியில் வரும் கூர்மையான வசனங்கள்தான் இப்படத்தை விதவைகளின் மனப்போராட்ட பிரதியாகவும் மாற்றுகிறது.

தகப்பனாக மறுபிறப்பில் வரும் அவன் பிறந்தது முதலே ஏதோ ஒரு மனக்கோளாறில் இருப்பதாகவே காட்டப்படுகிறது. மிக முக்கியமான நேரங்களில், அவன் குயிலுடன் பேசிக்கொண்டிருக்கிறான். தனது தந்தையின் பெயரை மட்டும் சரியாகச் சொன்னதால், அவன் மறுபிறவி என்று நம்பிவிடுவதாக இத்திரைப்படத்தில் காட்டப்படுகிறது. அவன் சில கேள்விகளுக்குச் சரியாகவும், பல கேள்விகளுக்குத் தவறாகவும் பதில் சொல்கிறான். ஆனாலும் கிராம மக்கள் அவன் சரியாகச் சொல்லும் பதிலை மட்டும் எடுத்துக்கொண்டு, அவன் மறுபிறவிதான் என்று தீர்மானிக்கிறார்கள். ஆனால் நாவலில், அவன் மறுபிறவிதான் என்பதற்கான சில காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்று விக்கிபீடியா சொல்கிறது. கிரீஷ் காசரவள்ளி ஒரு நேர்காணலில் இதனை உறுதிப் படுத்துகிறார். நாவல் ஒருவனின் மறுபிறப்பை மையப்படுத்த, தான் கருப்பும் அற்ற வெள்ளையும் அற்ற நிறங்களில் உலவும் மனிதர்களை உருவாக்கியதாகச் சொல்கிறார்.

ஒரு நாவல் திரைப்படமாக்கப்படுவதில் உள்ள சவால்கள், சங்கடங்கள் இத்திரைப்படத்திலும் தெரிகின்றன. ஆனால் நல்ல திரையாக்கம், அருமையான ஒளிப்பதிவு, யதார்த்தமான நடிப்பு என்று மிகக் கச்சிதமாக அமைந்திருப்பதால், படத்தின் ஒவ்வொரு காட்சியும் பொலிவு பெற்றுவிடுகிறது. இதுவே இத்திரைப்படத்தை முக்கியமானதாகவும் மாற்றுகிறது, நம்மைப் பார்க்கவும் வைக்கிறது.

Share

Death of a President – பரிபூரண சுதந்திரத்தின் உச்சம்

சோனியா காந்தி ஜூலை 2009ல் கொலை செய்யப்பட்டுவிட்டார். யார் எதற்காகக் கொன்றார்கள் என ஆராய்கிறது சிபிஐ. கொலை செய்தவர்கள் யாராக இருக்கும் என்று யோசிக்கும்போது, இலங்கைத் தமிழர்களின் பட்டியலை முதலில் பார்க்கத் தொடங்குகிறது சிபிஐ.

இப்படி ஒரு திரைப்படத்தை இந்தியாவில் யோசிக்கவாவது முடியுமா எனத் தெரியவில்லை.

ஓர் அதிபரின் மரணம் என்னும் ஆங்கிலத் திரைப்படம் இதனைச் சாதித்திருக்கிறது. இத்திரைப்படம் ஆவணப்பட உத்தியில் இயக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் புஷ் கொல்லப்பட்டுவிடுகிறார். அதனை விசாரிக்கும் எஃ பி ஐ, புஷ்ஷின் மெய்க்காப்பாளர்கள், அமைச்சர்கள், எஃபிஐ அதிகாரிகள், சந்தேகத்திற்கு உரிய கலவரக்காரர்கள் உள்ளிட்ட எல்லாரையும் விசாரிக்கிறது. அவர்கள் நடந்தவற்றை விவரிக்க விவரிக்க காட்சிகள் உருப்பெறுகின்றன. ஆவணப்படத் தன்மையில் இப்படம் இயக்கப்பட்டுள்ளது மிகப் பெரிய பலமாக அமைகிறது.

சிகாகோவில் வணிகர்களின் கூட்டத்தில் பங்கேற்க வரும் ஜார்ஜ் புஷ்ஷை எதிர்த்து பெரிய கூட்டம் மறியல் செய்கிறது. அதை மீறி புஷ் அக்கூட்டத்தில் சிறப்பாகப் பேசுகிறார். அக்கூட்டம் முடிந்ததும் சிகாகோ மக்களைப் பார்த்துப் பேசும் புஷ் சுடப்படுகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறக்கிறார். ஜார்ஜ் புஷ் பேசும் இடத்துக்கு எதிரே இருக்கும் பலமாடி உணவகத்திலிருந்தே யாரேனும் சுட்டிருக்கவேண்டும் என்று கருதும் எஃபிஐ, அங்கே பணிபுரியும் அலுவலர்களின் பட்டியலைப் பார்க்கிறது. அங்கிருக்கும் முஸ்லிம்களை முதலில் சந்தேகிக்கத் துவங்குகிறது. முதலில் சந்தேகத்துக்கு உள்ளாகும் ஒரு முஸ்லிம் தனது தரப்பைக் கூறுகிறார். அவரது சகோதரர் ஈராக்கில் போரில் இறந்ததுக்குக் காரணம் புஷ்தான் என்று அவரது தந்தை நம்புகிறார். புஷ் கொல்லப்பட்டதும், அவரது தந்தை தன் மகனுக்கு கடிதம் ஒன்றை எழுதிவிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார். இன்னொரு முஸ்லிம்தான் கொலைகாரனாக இருக்கவேண்டும் என்று எஃபிஐ முடிவு செய்கிறது. கைரேகைத் தடங்கள் ஒத்துப் போவதாலும், அவர் ஆஃப்கானிஸ்தான் சென்றிருப்பதாலும் அவர்தான் கொலையாளியாக இருக்கமுடியும் என்று முடிவெடுக்கிறது எஃபிஐ.

யாரையேனும் கொலையாளி என்று முடிவு கட்டவேண்டிய அழுத்தம் எஃபிஐக்கு. அவர் முஸ்லிமாகவும், ஆஃப்கானிஸ்தானுக்குச் சென்றவராகவும் இருந்தால், அவரை அல்க்வைதாவுடன் எளிதில் தொடர்புபடுத்திவிட முடியும் என்று நினைக்கிறது எஃபிஐ. 11 ஜூரிகள் அடங்கிய சபை இவரையே குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கிறது. அவர் இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவெடுக்கிறார். இவரது மேல்முறையீட்டை இழுத்தடிக்கிறது எஃபிஐ. குற்றவாளியின் வழக்கறிஞர் இந்த இழுத்தடிப்பைக் கேள்வி கேட்கிறார். விசாரணை தொடர்கிறது என முடிகிறது திரைப்படம்.

எது உண்மை, எது கற்பனை என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு, படம் முழுதும் விரவிக் கிடக்கும் ஆவணப்படத் தன்மை நம்மை ஆச்சரியப் படுத்துகிறது. உண்மையில் ஜார்ஜ் புஷ் இப்போது உயிரோடு இருக்கிறாரா அல்லது உண்மையில் கொன்றுதான்விட்டார்களா என்று ஒரு நிமிடம் நம்மை யோசிக்க வைத்துவிடுகிறது திரைப்படத்தின் கச்சிதமான ஆக்கம்.

குற்றவாளி யாராக இருக்கலாம் என்னும்போது முதலில் முஸ்லிம்களின் பட்டியலைத்தான் பார்த்தோம் என்கிறது எஃபிஐ. இது ஒரு இனத்துக்கு எதிரான நடவடிக்கை என்று பார்க்கவேண்டாம், அந்த நேரத்தில் அங்கே இருந்துதான் தொடங்கமுடியும் என்கிறார் அவர். இதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், ஒரு முஸ்லிமை, இத்தனை பெரிய கொலைக்கு வெறும் கைரேகையை மட்டுமே வைத்து பொறுப்பாக்க முனைவது, அமெரிக்காவின் மனத்தின் அடியில் உறைந்துகிடக்கும் அல்க்வைதா பயத்தை படம்பிடித்துக் காட்டுகிறது. கைரேகை நிபுணர் ஒருவர் சொல்கிறார், கொலை செய்தவனின் கைரேகை பொதுவாகத் துப்பாக்கியில் கிடைக்காது; நீங்கள் பார்க்கும் திரைப்படங்களில்தான் இப்படிக் காண்பிப்பார்கள், ஆனால் உண்மை அதுவல்ல என்று. இதையும் சேர்த்துக்கொண்டு பார்த்தால் எஃபிஐயின் அவசரத்தையே இயக்குநர் (Gabriel Range) காண்பிக்க நினைத்திருக்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இயக்குநர் சொல்ல வருவது, அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தேவையான, கடுமையாக்கப்படவேண்டிய சட்டங்களைப் பற்றி. அந்த நோக்கில் அவர் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

குற்றவாளி என்று அறியப்படும் முஸ்லிமின் மனைவியும் விசாரணையில் தன் கருத்தைச் சொல்கிறார். ஆஃப்கானிஸ்தானில் அல்க்வைதா அணியில் தன் கணவர் பலவந்தமாகச் சேர்க்கப்பட்டார் என்றும், உடல்நிலை சரியில்லை என்று அவர் நடித்ததால் விடுவிக்கப்பட்டுவிட்டார் என்றும், இதனை யாரிடமும் சொல்லவேண்டாம், பாகிஸ்தான் சென்றதாக மட்டும் சொன்னால் போதும் என்று அவர் சொன்னதாகவும் இவர் சொல்கிறார். உண்மையான ஒரு விசாரணையில் ஏற்படும் குழப்பத்தை திரையில் கொண்டுவருவதில் இக்காட்சியில் பூரணத்துவத்தை எட்டியிருக்கிறார் இயக்குநர். இதைப் பார்க்கும் ஒருவர் குற்றவாளி உண்மையில் யார் என்னும் குழப்பத்தோடே திரைப்படம் பார்க்க வேண்டியிருந்திருக்கும்.

இத்திரைப்படத்தின் வழியாக நாம் காண்பது அமெரிக்கா தரும் சுதந்திரத்தை. முதலில் இது போன்ற ஒரு படத்தை எடுத்தது, இரண்டாவதாக குற்றவாளி என்று சொல்லப்படும் முஸ்லிமுக்கு ஆதரவாகப் பேசும் வழக்கறிஞரின் கேள்விகள், அடுத்ததாக புஷ்ஷுக்கு எதிராகக் காட்டப்படும் கலவரக்காரர்களின் மறியல்களும் கூச்சல்களும். எல்லாவற்றிலும் சுதந்திரம். இதையே இத்திரைப்படம் நமக்கு முகத்தில் அடித்தாற்போல் காண்பிக்கிறது. இந்தியாவில் இது சாத்தியமாகுமா என்ற ஏக்கத்தை உருவாக்கிவிடுகிறது திரைப்படம்.

ஒரு தலைவரின் கொலையை விசாரிப்பது என்பது நாம் கதை போலச் சொல்லப் பிறர் அதனை அப்படியே புரிந்துகொள்வது அல்ல. நாம் எதிர்பார்க்காத திசைகளிலெல்லாம் பயணிக்கும் காற்றைப் போன்றது அது. ராஜிவ் காந்தி கொலை வழக்கின் சிறப்பு அதிகாரியாக இருந்த ரஹோத்தமனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னதையெல்லாம் கேட்டபோது, ஒரு வழக்கின் பல்வேறு புதிர்கள் எப்படி விடுவிக்கப்படுகின்றன என்றும், விடுவிக்கப்பட்ட அதே புதிர்கள் எப்படி மீண்டும் சிக்கலாகிக்கொள்கின்றன என்றும் ஒரு சேரப் பார்க்கமுடிந்தது. ராஜிவ் காந்தி கொலை வழக்கு பற்றிய சிடி ஒன்றையும் ரஹோத்தமன் வெளியிட்டிருக்கிறார். அதைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுவேன்.

நேரில் காண்பது என்னவோ ஒரு குண்டு வெடிப்பு அல்லது தோட்டா. அதற்குப் பின்னர் சிதறிக் கிடக்கும் பல்வேறு செய்திகளை அள்ளிக் கூடையில் போடும் காவல்துறையின் ஒரு பரிமாணத்தை வெற்றிகரமாகத் திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர்.

Share