Archive for திரை

சூது கவ்வும் விமர்சன அபத்தம்

அபிலாஷ் எழுதிய இந்த விமர்சனம் ஜூன் மாதம் உயிர்மையில் வந்தது. சூது கவ்வும் திரைப்படத்தைவிட அபத்த நகைச்சுவையாகப் பட்டது. ஒரு படத்தைப் புகழவேண்டும் என்று முடிவு கட்டி, அதில் வரும் சாதாரணக் காட்சிகளைக்கூடப் புகழ்ந்து தள்ளுவதும் (சாரு இப்ப்டித்தான் செய்வார், ஆனால் சாருவின் திரைப்பட விமர்சனம், நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறதோ இல்லையோ, நிச்சயம் உருப்படியானதாக இருக்கும். வார்த்தைகளில் விளையாடும் ஏமாற்றெல்லாம் இருக்காது) எதாவது ஒன்றிரண்டு ஹங்கேரிய மங்கோலிய இயக்குநர்களின் பெயர்களை உள்ளே இழுத்துவிடுவதுமென இலக்கியப் பத்திரிகைக்கான சம்பிரதாயங்களில் இருந்து சிறிதும் விலகாத விமர்சனம் இது. 

இந்த மாத உயிர்மையில் வாசகர் கடிதம் பகுதியில் திருமாவளவன் என்பவர் சரியாக இவ்விமர்சனத்தைப் பற்றிக் கருத்துரைத்துள்ளார். திருமாளவன் இன்னும் கொஞ்சம் ஆழமாக இவ்விமர்சனத்தின் அலட்டல்களையும் செயற்கைத்தனத்தையும் சொல்லியிருக்கலாம்.

இவ்விமர்சனத்தைப் படித்த சூது கவ்வும் இயக்குநர் தனக்குத் தெரியாததெல்லாம் அபிலாஷுக்குத் தெரிந்திருப்பது பற்றி நிச்சயம் அதிர்ச்சியும் கவலையும் கொண்டிருக்கக்கூடும். ஏனென்றால் இந்த விமர்சகர்கள் ஒரு படத்தைப் பாராட்டினால் அடுத்த படத்தைக் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்கவிட்டுவிடுவார்களே! பாவம் நலன். அதிலும் திடீரென்று அபிலாஷ் தத்துவ நோக்கில் அடித்துச் செல்லும் வரிகள் எல்லாம் – நெஜமாவே முடியலை! 

இன்னொரு முக்கியமான விஷயம், சூது கவ்வும் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த அபத்த விமர்சனத்தைப் படித்தபின்பும் எனக்கும் சூது கவ்வும் இன்னும் பிடித்தமானதாகவே இருக்கிறது என்றால், அப்படத்தின் சாதனையைப் புரிந்துகொள்ளுங்கள். சூது கவ்வும் அபத்த நகைச்சுவை என்றால், இவ்விமர்சனம் அபத்தம்.

Share

பரதேசி பற்றி நாலு வரி

 

* தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் பிரச்சினையை பிரதிபலிக்கவேண்டிய படம், கிறித்துவ மதமாற்றத்தைச் சொல்லும் படமாக வந்ததில், ஓர் ஹிந்துத்துவ ஆவணமாக ஆகிப் போனதில், வருந்தவா மகிழவா எனத் தெரியவில்லை.

* டேனியலுக்கு இப்பேற்பட்ட துரோகத்தை, அநியாயத்தை பாலா செய்திருக்கவேண்டாம்.

*முதல் பாதியில் நடிப்பு அதீதம். இசை அதீதம். பார்க்க சகிக்கவில்லை. முதல் பாதியில் படத்தில் ஒன்றும் இல்லை. இரண்டாம் பாதியோ வெறும் தொகுப்பாகப் போய்விட்டது. 

* நாஞ்சில் நாடனுக்கும் செழியனுக்கும் அந்த மூதாட்டிக்கும் (என்ன ஒரு யதார்த்தம்) வாழ்த்துகள்.

Share

வழக்கு எண் அறிவுமதி காமெடி

 

அறிவுமதி மனுஷ்யபுத்திரன் கடும் விவாதம் என்றார்கள். கடைசியில் பார்த்தால் மனுஷ்யபுத்திரன் மட்டுமே விவாதிக்கிறார். அறிவுமதி கெஞ்சுகிறார். பின்பு கோபப்படுகிறார். இந்தக் கெஞ்சலும் கோபமுமே  மனுஷ்யபுத்திரனின் கருத்துகளில் உள்ள உண்மைக்கு அச்சாரமாக அமைந்துவிடுகிறது.

ஒரு திரைப்படத்தை ஒருவர் விமர்சிக்கிறார் என்றால், அது மிகவும் சுதந்திரமானதாகவும், நேர்மையானதாகவும் இருக்கவேண்டும். ஆனால் அறிவுமதி சொல்வதென்ன? இந்த ஃபீல்டுக்குள்ள வந்துட்டீங்க, இங்க ரொம்ப கஷ்டப்படறோம், கொஞ்சம் பார்த்துப் போடுங்க என்பது போன்ற வாதங்களை. கறாரான விமர்சகர் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையே இல்லை. அதிலும் மனுஷ்யபுத்திரன் குத்து படத்தையோ தூள் படத்தையோ விமர்சிக்கவில்லை. தமிழர்களால் உச்சி மோந்து கொண்டாடப்படும் ஒரு படத்தின் போலித் தன்மையைச் சுட்டிக் காட்டவேண்டியது அவசியம் என்ற அளவில் இதனைச் சொல்கிறார். இணைய விமர்சகர் மகாதேவன் செய்வதும் (சுரேஷ்கண்ணன் இப்ப அவுட் ஆஃப் பார்ம்) இதையே. ஆனால் அறிவுமதி சொல்வது என்ன? இப்போதுதான் படம் எடுக்கிறோம், இப்போதுதான் கதை எழுதுகிறோம், இனிமே சரியா வரும் என்பது போன்ற சப்பைக்கட்டுகளை.

இளையராஜாவும் பாரதிராஜாவும் இல்லையென்றால் நாங்கள் வந்திருக்கவே முடியாது என்கிறார் அறிவுமதி. இது சாதிய பின்புலத்திலும் சமூகப் பின்புலத்திலும் புரிந்துகொள்ளத் தக்கது. இதனையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு விமர்சனத்தை முன்வைக்கவேண்டுமானால், அது கலையை நீக்கிவிட்டு, அந்தக் கலையை யார் பயன்படுத்தினார்களோ அவர்களது சாதிக்காகவும் அவர்களது சமூக நிலைக்காகவும் தாராள மனப்பானமையுடன் பேசப்பட்டதாகிவிடும். அறிவுமதி விரும்புவதை அதைத்தான். அது அவரது கொள்கை நிலைப்பாடு. அதற்கும் விமர்சனத்துக்கும் தொடர்பு இருக்கவேண்டிய தேவை இல்லை.

ஆனால் மனுஷ்யபுத்திரனோ காலச்சுவடோ இப்படிச் செயல்படக்கூடாது. அழகர்சாமியின் குதிரையைக் கிழித்துவிட்டார்கள் என்கிறார் அறிவுமதி. அந்தக் குப்பையைக் கிழிக்கத்தான் முடியும். நல்ல முயற்சி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டால் நல்லது என்று நினைப்பவர்கள் இருக்கக்கூடும். ஆனால் அதை மட்டுமே சொல்லிவிட்டுச் சென்றுவிடமுடியாது என்பதுதான் உண்மை. எடிட்டர் மோகன் தெளிவாகச் சொல்கிறார், விமர்சனம் கலெஷனைப் பாதிக்கக்கூடாது என்று. அறிவுமதியும் இதே வியாபாரத்தைத்தான் வேறு வேறு மொழிகளில் சொல்கிறார். எடிட்டர் மோகனின் நேர்மை முக்கியமானது. வியாபாரமே குறிக்கோள் என்பதை ஒப்புக்கொள்வதில் சலனமில்லை. ஆனால் அறிவுமதி இலக்கியத்துக்கும் வியாபாரத்துக்கும் ஒரு நிலைக்கோட்டை வரையவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார். எனவே தத்தளிக்கவும் செய்கிறார். எடிட்டர் மோகன் தனிப்பட்ட முறையில் கூப்பிட்டுச் சொல்லுங்க என்கிறார். இது இன்னும் மோசமானது. ஒவ்வொரு இயக்குநரும் இப்படி தனிப்பட்ட முறையில் கூப்பிட்டுத் திட்டப்பட்டால் என்னாகும் என்பதை வியாபாரி எடிட்டர் மோகன் யோசிக்கவேண்டும். கொஞ்சம் கருணை காட்டுங்கள் மோகன். அறிவுமதியும் மனுஷ்யபுத்திரனைத் தனியே கூப்பிட்டுச் சொல்லியிருக்கலாம் என்பதை சொல்லாமல் எடிட் செய்துவிட்டீர்களே மோகன்!

கமலை மனுஷ்யபுத்திரன் விற்றார் என்பதால் அவருக்கு விமர்சனம் செய்யத் சொல்லத் தகுதியில்லை என்றும் சொல்கிறார் அறிவுமதி. இதை காமெடி என்று தாண்டிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. மனுஷ்யபுத்திரனை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் எதையாவது சொல்லவேண்டிய பதற்றத்தில் அறிவுமதி உளறிக்கொட்டியதாக மட்டுமே இதனைச் சொல்லமுடியும். எஸ்ராவின் விழாவில் ரஜினியை அழைத்தது நிச்சயம் வியாபாரமே. ஆனால் அவர் வியாபாரம் செய்கிறார் என்பதற்காகவே இலக்கிய ரீதியிலான முக்கியமான கருத்தை முன்வைக்கத் தகுதியில்லாமல் ஆகிறார் என்பது சரியல்ல. 

வழக்கு எண் போன்ற ஒரு சாதாரண படத்தை சாதாரண படம் என்று மக்களுக்குச் சொல்லவேண்டிய கடமை விமர்சகர்களுக்கு உள்ளது. இதைப் பார்த்து வருத்தப்படுபவர்கள் படம் எடுக்காமல் இருக்கட்டும் அல்லது விமர்சனத்தைப் பொருட்படுத்தாமல் இருக்கட்டும். விமர்சகர்களே பொங்கி எழுங்கள். 🙂 தமிழின் விடிவுகாலமே வழக்கு எண் என்ற லொட்டை படம்தான் என்னும்போதும் விமர்சகர்கள் வாய்மூடிக்கொண்டிருக்க அது என்ன ரஜினி படமா? கூல்!

Share

மங்குனி இயக்குநர்களும் மகாதேவனும்

முன்குறிப்பு: இந்தத் தலைப்பை வைத்துத்தான் கட்டுரையை ‘நிழல்’ இதழுக்கு அனுப்ப நினைத்தேன். ஆனால் கைகூடவில்லை. எனவே இங்கே இந்தத் தலைப்பு வைக்கப்படுகிறது!

 

இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித் தரப்படும். (ஆர்டரின் பேரில் புதிதாகவும் செய்து தரப்படும்.) இந்தக் கட்டுரையின் முதல் வரி அல்ல இது. இதுதான் புத்தகத்தின் பெயரே. எழுதியவர் பி.ஆர். மகாதேவன். இந்தப் புத்தகத்தைப் படிக்கப்போகும் தமிழ் இயக்குநர்கள் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு, என்ன நேர்ந்தாலும் டென்ஷன் ஆகக்கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டு படிப்பது நல்லது. ரத்த அழுத்தத்துக்காக குளிகைகளை விழுங்கும் இயக்குநர்கள் இந்தப் புத்தகம் அருகில் வராமல் இருப்பதே நல்லது. தமிழகம் போற்றும் எந்த ஒரு வணிகப்பட இயக்குநருக்கும், கலை இயக்குநருக்கும் இது பொருந்தும். விமர்சனம் என்று வந்துவிட்டால் யாரை விமர்சிக்கிறோம் என்பதல்ல பொருட்டு. நேர்மையாக விமர்சிக்கிறோமா, நாம் விமர்சிப்பதில் ஓர் அடிப்படை நியாயம் ஒரு தார்மிகமும் உள்ளதா என்பது மட்டுமே பொருட்டு என்று வைத்துக்கொண்டு, யாரையும் விட்டுவைக்காமல் எவ்வித சமரசமும் இல்லாமல் வெளுத்து வாங்குகிறார் மகாதேவன்.

இங்கே பதிவு செய்யப்படவேண்டிய ஒரு முக்கியமான விஷயம், இந்த மகாதேவன் திரையுலகத்துக்குள் புக விரும்புகிறார் என்பது. இந்தப் புத்தகம் அதற்கு உதவும் என்று அவர் நம்புவதாகவும் தெரிகிறது. ஆனால் எனக்கென்னவோ இந்தப் புத்தகமே அவருக்கு எதிரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இதுவும் ஒரு கொடுப்பினையே. மகாதேவனுக்கு வாழ்த்துகள்.

எட்டு முக்கியமான திரைப்படங்களை எடுத்துக்கொண்டு, அவற்றின் பிரச்சினைகள் என்ன என்ன, அவை எப்படி திரைக்கதையாக்கம் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று விளக்குகிறார். ஒரு சிறிய காட்சியைக்கூட விட்டுவைப்பதில்லை. கதையையே மாற்றவேண்டுமானாலும் சிறிதும் தயங்குவதில்லை. (தான் எந்த விதத்திலும் கதையை மாற்றவில்லை என்று தன் நிலையை நியாயப்படுத்த அவர் முனையக்கூடும்.) முக்கியமான விஷயம், தான் விமர்சிக்க எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு படத்துக்கும் மேம்பட்ட தனது திரைக்கதையையும் பதிவு செய்கிறார்.

இந்தப் புத்தகத்தில் அலச அவர் எடுத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்கள்: நந்தலாலா, அங்காடித் தெரு, ஆடுகளம், அழகர்சாமியின் குதிரை, தெய்வத் திருமகள், ஏழாம் அறிவு, எங்கேயும் எப்போதும், நான் கடவுள். இந்தத் திரைப்படங்களை அலச அவர் எடுத்துக்கொள்ளும் மிக முக்கியமான விதி – எல்லாப் படங்களையும் கலைப்படங்களாக மாற்ற முனைவதில்லை. கலைப்படங்களே தமிழின் மிக முக்கியமான படங்களாக இருக்கவேண்டும் என்றுதான் மகாதேவனும் விரும்புகிறார். என்றாலும் வணிகப்படங்களை எடுத்துக்கொண்டு அவற்றில் ஏன் கலைத்தன்மை இல்லை என்று விவரிக்கத் தொடங்கி இல்லாத ஊருக்குப் போகாத வழியை அவர் காண்பிப்பதில்லை. வணிகப்படங்களின் மேம்பாடாக அவர் சொல்லும் திரைக்கதையும் வணிகப்படங்களை ஒத்ததாகவே உள்ளது. அடிப்படையில் வணிகப்படங்களை அவர் ஏற்காவிட்டாலும், அவற்றின் அடிப்படைக் கதையையும் அதற்கேற்ற பிசகாத ஒரு திரைக்கதையையும் முன்வைப்பதன்மூலம் மேம்பட்ட வடிவத்தைக் கொடுக்க இயலும் என்பதுதான் அவர் சொல்ல வருவது. இதனைப் புத்தகம் நெடுகிலும் எவ்வித சறுக்கலும் இன்றிக் கடைப்பிடிக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

அதேபோல் எவ்விதக் கவனிப்பும் இன்றிக் கேட்பாரற்ற திரைப்படங்களை எடுத்துக்கொண்டு அவற்றின் குறைகளைச் சொல்ல முனையவில்லை. ஓரளவுக்கு மக்கள் வரவேற்பையும் ஓரளவுக்கு இலக்கியக் கவனிப்பையும் பெற்ற படங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு அவற்றின் மேம்பாட்டுத் திட்டங்களை முன்வைக்கிறார். இதனால் மிக எளிதாக தனது திரையறிவு பற்றிய அஸ்திவாரத்தை நிறுவிக்கொள்கிறார். தான் ஓர் இலக்கியவாதியாகத் திரைப்படத்தை அணுகுகிறோம் என்கிற பெருமிதம் இருப்பதை முன்னுரையிலேயே உணர்ந்துகொண்டுவிடமுடிகிறது.

ஆனால் ஒருவகையில் முன்னுரையே இவருக்கு எதிரான அஸ்திரமாகத் திரும்பக்கூடும். முன்னுரையில் இவரது வாதங்கள் எல்லாமே ஒரு படைப்பு எப்படிக் கலையாக வேண்டும் என்பதன் பொருட்டே உள்ளது. ஆனால் திரைப்பட அலசல்கள் என்று வரும்போது வணிக ரீதியான படங்களை அதே அலைவரிசையில் எதிர்கொள்ளத் தொடங்கிவிடுகிறார். முன்னுரையைப் படித்துவிட்டு திரைப்பட அலசல்களை எதிர்கொள்ளும் வாசகன் மிக எளிதாக ‘கலையை அடிப்படையாக கொண்ட விமர்சகரின் திரைக்கதை ஏன் மீண்டும் வணிகக்குப்பைக்குள் செல்கிறது’ என்ற கேள்விக்குள் சென்றுவிடமுடியும். இதற்கான பதிலை மகாதேவனின் தொடர் திரைக்கதை அலசல்கள்தானே தருகின்றனவே ஒழிய, முன்னுரை தரவில்லை.

இந்த நூலின் வழியாக மகாதேவன் எதிர்கொள்ளப் போகும் இன்னொரு விமர்சனத்தைப் பற்றிப் பார்க்கலாம். ஒரு படைப்பை ஒரு இயக்குநர் எடுக்கிறார். அது அவரது படைப்பு. அதில் நிறை குறைகள் இருக்கலாம். ஆனால் அந்தப் படைப்பு அப்படைப்பாளியின் சுயம் சார்ந்தது. (காப்பி அடிக்கப்படும் படங்களுக்கு இது பொருந்தாது.) அவரது சுதந்திரம் சார்ந்தது. இதை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் உண்டு. இதே உரிமையில்தான் மகாதேவன் செயல்படும் இடமும் இருக்கிறது. ஆனால் அப்படைப்பாளி அப்படி எடுக்கக்கூடாது, இப்படி எடுக்கக்கூடாது என்று சொல்லும் உரிமை விமர்சகனுக்கு இல்லை. அதேபோல் படைப்பாளியின் திரைக்கதையில் உள்ள ஓட்டையை தன் திரைக்கதை மூலம் எப்படிச் சரி செய்யலாம் என்று சொல்ல முனையும்போது, ஒட்டுமொத்தக் கதையையே எப்படி மாற்றுவது என்று சொல்ல முனைவதும் சரியானதல்ல என்றே தோன்றுகிறது. திரைக்கதைகளின் பழுது நீக்கம் ஒரு கட்டத்தில் கதையின் பழுது நீக்கமாகிறது.

இந்தப் பிரச்சினையைப் புத்தகத்தில் அலசப்படும் ஒவ்வொரு திரைப்படத்தின் மேம்பட்ட திரைக்கதையிலும் காணமுடிகிறது. நந்தலாலாவின் கதையில் யார் யாரைத் தேடவேண்டும் என்று முடிவெடுக்கிறார். அங்காடித் தெருவின் கதையே மாறிப் போகிறது. ஆடுகளத்திலும் இப்படியே. அழகர்சாமியின் குதிரையில் கதையைக் கொஞ்சம் மாற்றினாலும், பாஸ்கர் சக்தியின் மூல சிறுகதையோடு அதை ஒட்ட வைப்பதன்மூலம், தனது கதை மாற்றலுக்கு ஒரு நியாயத்தைக் கற்பித்துக்கொள்கிறார் நூலாசிரியர். தெய்வத்திருமகள் கதையிலும் இதனை அதன் மூல வடிவோடு ஒப்பிட்டு மேம்படுத்த முனைந்துவிடுகிறார். நான் கடவுளின் கதையே மாற்றம் பெறுகிறது. இதன் அடிப்படையாக மகாதேவன் சொல்வது, ஒவ்வொரு கதையின் அடிப்படையையும் நான் மாற்றவில்லை, மாறாக அதன் போக்கில் செய்யும் மாற்றம் மூலம் அதை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றியே பேசுகிறேன் என்பது. அதாவது ஒவ்வொரு கதையும் என்னதான் ஒரு படைப்பாளியின் சுதந்திரம் என்றாலும், அதன் அடிப்படை ஒரு விதிக்குள் கட்டுப்பட்டதே என்றும், விதியை மீறிய ஆட்டம் கதைக்கு ஆகாது என்றும் வாதிடுகிறார்.

விதியை மீறும் ஆட்டம் என்பதே ஒரு கலையின் முன்னகர்வைக் கொண்டுவரும். இந்த இடத்தில் நான் மகாதேவனுடன் கடுமையாக வேறுபடுகிறேன். உதாரணத்துக்கு ஆடுகளம் படத்தை எடுத்துக்கொள்வோம். அதில் எப்படி ஒரு குருவை அப்படிச் சித்திரிக்கலாம் என்றும், ஒரு குரு என்பவர் அப்படிச் செயல்படமாட்டார் என்றும் வாதிட்டு குரு சார்ந்து ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் அக நம்பிக்கைகளுக்குள் இறங்கிவிடுகிறார். ஆனால் ஒரு குரு என்பவரை ஒரு படைப்பாளி எப்படிப் படைக்கவேண்டும் என்பது அவரது சுதந்திரம் அல்லவா. துரோகம் செய்யாத குரு உலகத்தில் இல்லையா என்ன? அல்லது அப்படி ஒரு கற்பனையை உருவாக்கக்கூடாதா? இது போன்ற உளச்சிக்கல்களே இந்நூலாசிரியரின் பிரச்சினைகளாக உள்ளன. இன்னொரு மனப்பதிவு, இந்நூலில் தொடர்ந்து பதிவு செய்யப்படும் கிராமத்து மனிதர்கள் பற்றியது. கிராமத்து மனிதர்கள் பற்றிய ஒரு பதிவை இவராக மனத்தில் உருவாக்கிக்கொண்டு, ஒரு திரைப்படத்தில் வரும் கிராமத்து மனிதர்கள் பற்றிய காட்சி அந்தப் பதிவுக்கு மாறானதாக இருக்குமானால், அதனை விமர்சிக்கத் தொடங்கிவிடுகிறார். எல்லா மனிதர்களையும் போல கிராமத்து மனிதர்களும் எல்லா நிறங்களும் கலந்த கலவைகளே. அங்காடித் தெரு பற்றிய விமர்சனத்தில், முலையைக் கசக்கும் கங்காணியைப் பொறுத்துக்கொண்டு எப்படி ஒரு கிராமத்துப் பெண் அமைதியாக இருப்பாள் என்கிறார். அதே திரைப்படத்துக்கு இவர் முன்வைக்கும் மேம்பட்ட திரைக்கதை வடிவத்தில் வரும் காட்சியில், கிராமத்து அம்மா முன்பு அதே கங்காணியால் திருடனாக நிற்க வைக்கப்படும் மகனைப் பார்த்தும், அந்தக் கிராமத்துப் பெண் சீறாமல் தலையைக் கவழ்ந்துகொண்டு, தன் நிலையை நினைத்துக்கொண்டு போகிறாள். அது எப்படி ஒரு கிராமத்தில் இருந்து வந்த இரு பெண்கள் இரு மாதிரியாகச் செயல்படமுடியும்? இதிலேயே இருக்கிறது மகாதேவனுக்கான விடை. ஒவ்வொரு படைப்பாளியும் தன் மனிதர்களைத் தன் தர்க்கத்துக்குள்ளே படைத்துக்கொள்ள முடியும். அது அவனது சுதந்திரம். அந்த சுதந்திரம் என்பது வாழ்க்கையின் மிக ஆதாரமான யதார்த்தத்தை மீறக்கூடாது என்பது மட்டுமே. மாறாக, இந்த யதார்த்தம் எந்தவித குண இயல்புகளையும் கட்டுப்படுத்தாது. கட்டுப்படுத்த முடியாது.

இந்தப் புத்தகத்தில் வரும் அனைத்துக் கட்டுரைகளையும் மகாதேவன் தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறார். அக்கட்டுரைகளின் தொகுப்பே புத்தகமாக்கப்பட்டுள்ளது. வலைப்பதிவின் கட்டற்ற சுதந்திரம் இல்லையேல், இது போன்ற கட்டுரைகள் எந்த இதழில் வந்திருக்கும் என்ற ஆச்சரியம் தோன்றாமலில்லை. கட்டற்ற சுதந்திரமே இணையத்தின் வரமும் சாபமும். வரம் என்று இக்கட்டுரைகளை எடுத்துக்கொண்டால், சாபம் என்று இக்கட்டுரைகளில் வரும் சில வார்த்தைப் பிரயோகங்களைக் குறிப்பிடவேண்டும். தணிக்கை செய்யப்படாத பச்சை எழுத்து தரும் அதிர்ச்சி, வலைப்பதிவைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு ஏற்படாது. அதனையே தொடர்ந்து எழுதும் வலைப்பதிவர்களுக்கும் ஏற்படாது. ஏனென்றால் அதில் என்ன தவறு என்ற மனப்பதிவு ஆழமாக ஏற்பட்டிருக்கும். அடிமையில் மோகம் போல. அதிலிருந்து விலகி ஒரு புத்தகமாகப் படிக்கும்போது அந்த மொழி தரும் அதிர்ச்சி சொல்லமுடியாதது. இந்த அபாயத்தை முன்வைத்தே பல இயக்குநர்கள் இந்தப் புத்தகத்தைப் புறக்கணிக்கவோ பழிக்கவோ கூடும். இதனை இந்நூலாசிரியர் தவிர்த்திருக்கலாம்

இந்நூலில் வரும் இன்னொரு எளிமையான தவறு – தனது தர்க்கத்தை ஓர் எடுத்துக்காட்டு மூலம் விளக்கிக் காட்டுவது. எடுத்துக்காட்டுகள் வெறும் எடுத்துக்காட்டுகளே அன்றி அவை உண்மை அல்ல. இதனாலேயே ஒரு மிகப்பெரிய விஷயம் ஒன்று ஓர் எளிமையான எடுத்துக்காட்டு மூலம் விளக்கப்படும்போது அதன் உணர்ச்சிகரமான மூலம் எல்லாவற்றையும் இழந்து வெறும் வார்த்தையாகிவிடுகிறது. இதனை எதிர்கொள்பவர்கள் இன்னொரு எடுத்துக்காட்டின் மூலம் எதிர்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள். இதனால் விவாதம் என்பது மூலத்தின் கருவிலிருந்து விலகி எங்கேயோ சம்பந்தமற்ற ஒரு வெளியில் நிகழ்ந்துகொண்டிருக்கும். பட்டிமன்றங்களில் நாம் அடிக்கடி இதனைப் பார்க்கலாம். எதை விவாதிக்கவேண்டுமோ அதனை விட்டுவிட்டு அது தொடர்பாகச் சொல்லப்பட்ட எடுத்துக்காட்டுகளில் முட்டி மோதிக்கொண்டிருப்பார்கள். இதனையும் நூலாசிரியர் தவிர்த்திருந்திருக்கலாம்.

அதேபோல் நூலாசிரியர் செய்யும் இன்னொரு தவறு, யதார்த்தம் என்ற ஒன்றை தனக்கு நேரும் தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து கட்டமைப்பது. இதில் உண்மை இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட அனுபவங்களிலிருந்தே யதார்த்தமின்மைக்குட்பட்ட பல நிகழ்வுகளும் உருவாகின்றன என்ற இன்னொரு எளிய உண்மையை வைத்துப் பார்த்தால், தனிப்பட்ட அனுபவங்கள் என்பவை எப்படி வெறும் தனிப்பட்ட அனுபவங்களாகவே எஞ்சிவிடுகின்றன என்பதைப் பார்க்கலாம். தனிப்பட்ட அனுபவங்கள் பொதுக் கருத்தாக முகிழவேண்டுமானால், அது யாரால் சொல்லப்படுகிறது என்பதும் முக்கியம். மகாதேவன் பாணியிலேயே ஓர் எடுத்துக்காட்டு மூலம் சொல்லவேண்டும் என்றால், காந்தி அல்லது அம்பேத்கரின் தனிப்பட்ட அனுபவத்தின் முக்கியத்துவத்தை யோசிக்கச் சொல்வது ஓர் எளிய வழி. ஒரு தனிப்பட்ட சாதாரண மனிதனுக்கு ஏற்படும் அனுபவமும், அனுபவம் என்ற அளவில் அதற்கு இணையானதே என்றாலும், அதன் வீச்சு எப்படித் தேங்குகிறது என்பதை அறியலாம். இந்த எடுத்துக்காட்டைச் சொல்வதுகூட, ஓர் எடுத்துக்காட்டு என்பதும், தனிப்பட்ட அனுபவமும் பொதுக்கருத்து என்ற பொதுவெளியில் (சில சந்தர்ப்பங்களைத் தவிர்த்துப் பெரும்பாலான நேரங்களில்) எத்தனை உள்ளீடு அற்றது என்பதைச் சொல்லவே.

மகாதேவன் எழுதியிருக்கும் ஒவ்வொரு திரைப்பட விமர்சனத்துக்கும் மேம்படுத்தப்பட்ட திரைக்கதைக்கும் பதிலாக சில விஷயங்களைச் சொல்லமுடியும். பல இயக்குநர்கள் அப்படி விரும்பவும் கூடும். இப்படி ஒரு விவாதம் உருவாவதும் நல்லதே. ஒரு புத்தகத்தின் தேவையும் இதுதான்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்நூலில் பலம் என்ன? இந்நூலின் பலம், நூலாசிரியரின் நேர்மை. இன்னொன்று, நூலாசிரியரின் சுயம். இந்த இரண்டுமே இந்தப் புத்தகத்தை உயிர்ப்புள்ளதாக்குகின்றன. இந்த இரண்டுமே இந்தப் புத்தகத்தை ஓர் இலக்கியப் பிரதியாக்குகின்றன. இந்த இரண்டும்தான் இந்தப் புத்தகம் குறித்த விவாதத்தை முன்னெடுக்கப்போகும் காரணிகளாகவும் இருக்கும். ஒருவகையில், மகாதேவன் திரைப்பட விமர்சனத்தை முன்வைக்கும்போது இலக்கியவாதியாகவும், திரைக்கதை எழுதும்போது திரைப்படவாதியாகவும் மாறுவதைப் பார்க்கமுடிகிறது. ஓர் எழுத்தாளரின் சுயமான சிந்தனை என்பது மிகவும் முக்கியமானது. சுயத்தோடு கூடிய கடும் உழைப்பு மிகப்பெரிய வாசல்களைத் திறக்கக்கூடியது. இதுவே ஓர் எழுத்தாளனுக்கு இலக்கிய முக்கியத்துவத்தை அளிக்கவல்லது. நேர்மையுடன் கூடிய சுயம் என்பது எல்லாவித நிறை குறைகளுடனும் வசீகரம் மிக்கது. இந்த வசீகரமே இந்நூல்.

இந்நூல் விடுக்கும் செய்தி என்று பார்த்தால், இப்படித் தொகுக்கலாம். தமிழில் நான்கைந்து படங்களைக் கழித்துவிட்டுப் பார்த்தால் [வீடு, சந்தியா ராகம், உன்னைப் போல் ஒருவன் (கமல் படம் அல்ல! ஜெயகாந்தனின் படம்), ஹே ராம் (இது கமல் படம்தான்!)] உலக அளவிலான திரைப்படங்கள் வந்ததில்லை என்றே சொல்லவேண்டும். கொஞ்சம் கறார்தன்மையை விட்டுவிட்டுப் பார்த்தால் இன்னொரு 10 படங்கள் தேறலாம். முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், அழியாத கோலங்கள் போன்றவை. ஆனால் நமக்கிருக்கும் திறமைக்கு நாம் கொஞ்சம் முனைந்தால் சிறப்பான படங்களை மிகச் சிறப்பான படங்களாக மாற்றலாம். இதுதான் மகாதேவன் சொல்ல வருவது. சொன்னவிதம் கொஞ்சம் கவலரப்படுத்துவதாக இருந்தாலும், அதிலிருக்கும் உண்மை நம்மை அமைதிப்படுத்துகிறது. மெல்லச் சொன்னால் புரிவதில்லை என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. இதனை ஒரு வாசகன் புரிந்துகொள்ளக்கூடும். இயக்குநர்கள் புரிந்துகொள்ள கொஞ்சம் திறந்த மனம் வேண்டும். அந்த திறந்த மனத்தை நோக்கிய முதன்மைப் புள்ளிகளில் ஒன்றாக இப்புத்தகமும் அமையவேண்டும். அமையும் என்றே நம்புகிறேன்.

Share

மேல்விலாசம் – மலையாளத் திரைப்படம்

 

சுமாராக இருக்கும் என்று நினைத்துத்தான் இந்த மலையாளப் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். 9 நாள்களில் எடுக்கப்பட்ட படம் என்றும், 90 லட்சத்தில் எடுக்கப்பட்ட படம் என்று கூகிள் சொல்லவும், இப்படி விளம்பரத்துக்காகவும், சாதனைக்காகவும் எடுக்கப்பட்ட படங்களின் லட்சணங்கள் எப்படி இருக்கும் என்ற ஓர் அனுபவம் தந்த எச்சரிக்கையே இப்படி ஒரு முன்முடிவு வந்ததற்குக் காரணம்.

அதிலும் சுரேஷ் கோபியும் பார்த்திபனும் நடிக்கிறார்கள் என்றதும் என் அச்சம் பலமடங்கு கூடிவிட்டது. போடா புல்லே என்று சொல்லாமல் சுரேஷ் கோபி நடித்த படங்கள் எல்லாமே நன்றாக இருக்கும் என்றாலும், அவர் போடா புல்லே சொல்லாத படங்கள் வெகு குறைவு என்பதே என் அச்சத்துக்குக் காரணம். பார்த்திபன் என்ற பெயரே போதும் பயந்து நடுங்க.

இத்தனையையும் மீறியே இந்த மலையாளப் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். என்ன அறுவையாக இருந்தாலும், வேற்று மொழி என்பதால் மலையாளப் படத்தைப் பார்த்துவிட முடிகிறது. எனவே இதனையும் பார்த்துவிடலாம் என்று பார்க்கத் தொடங்கினேன்.

ஆனால் தொடங்கிய பத்து நிமிடங்களில் இந்தப் படம் கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது. சுரேஷ் கோபியின் அலட்டாத நடிப்பும், (சுகர் வந்து முகம் இறுகிப் போன) பார்த்திபனின் இறுக்கமான நடிப்பும் படத்தைப் பிடிக்கச் செய்துவிட்டது. ஒரே அறைக்குள் நடக்கும் கதை. மேஜர் மார்ஷல் என்ற விசாரணையைப் பற்றிய படம். பார்த்திபன் தன்னைவிட மூத்த அதிகாரி ஒருவரைக் கொன்றுவிடுகிறார். இருவரைச் சுடுகிறார், ஆனால் ஒருவர்தான் மரணமடைகிறார். இன்னொருவர் தப்பித்துவிடுகிறார். தாந்தான் சுட்டதாக ஒப்புக்கொள்ளும் பார்த்திபன் மீதான விசாரணையில், டிஃபெண்ஸ் தரப்பில் ஆஜராகி, அவர் ஏன் சுட்டார் என்பதற்கான காரணங்களைக் கண்டடைகிறார் சுரேஷ் கோபி.

எதிர்பாராத ஒரு காரணம் சொல்லப்படும் தருணத்தில் அந்தப் படம் மிகவும் பிடித்துப் போய்விடுகிறது. ஏதேனும் செண்டிமெண்ட்டாக ஒரு காரணம் இருக்குமென்று நினைத்தேன். பாதி படம் கடக்கையில், வேகமாக பார்த்திபன் ஓடி, தனனிவிட உயர்ந்த ரேங்க்கில் இருக்கும் அதிகாரி தோற்கக் காரணம் ஆவதும், அதனால் எரிச்சலடையும் உயரதிகாரி பார்த்திபனை ரேக்குவதும், அந்தக் கோபத்தில்தான் பார்த்திபன் கொன்றிருப்பார் என்றும் நினைத்தேன். அல்லது இதனை ஒட்டிய காரணங்கள் பின்பு விரிவாகும் என்று நினைத்தேன். விரிவாகியது. அனைத்துக்கும் காரணம், பார்த்திபன் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரர் என்பது.

தன்னைவிட நன்றாக ஓடும் பார்த்திபன், தனக்குக் கீழ் வேலை பார்ப்பவன் என்பதைவிட தன்னைவிடத் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்பதே உயரதிகாரியை வெறுப்படைய வைக்கிறது. அவர் பார்த்திபனைத் தொடர்ந்து ஏசுகிறார். தோட்டி என்றும், பறையன் என்றும், பறையனிண்டே மோன் என்றும் ஏசுகிறார். இவரோடு சேர்ந்துகொண்டு இன்னொரு உயர்சாதி அதிகாரியும் பார்த்திபனை ஏசுகிறார். ஒரு கட்டத்தில் பார்த்திபனின் தாயைத் தகாத வார்த்தை கொண்டு ஏசுகிறார்கள். கோபமடையும் பார்த்திபன் துப்பாக்கியால் சுடுகிறார். ஓர் அதிகாரி இறந்துபோகிறார். இன்னொரு அதிகாரி தோள்பட்டையில் குண்டு பாய்ந்து, உயிர் பிழைத்துக்கொள்கிறார்.

இவை அனைத்தும் ஒரே அறையில் சுரேஷ் கோபி செய்யும் விசாரணைகளில் வெளிப்படுகின்றன. ஒரு காட்சிகூட நேரடிக் காட்சி கிடையாது. எல்லாமே விசாரணைகள் மட்டுமே. உயர்சாதி உயரதிகாரி மமதையோடு பேசுகிறார். தரவாடித்துவம் (பாரம்பரியம்) இல்லாதவனெல்லாம் ராணுவத்துக்கு வரப்போய்த்தான் ராணுவ மரியாதையே போய்விட்டது என்கிறார். தனது பாரம்பரியம் எங்கே, இவன் எங்கே என்று பார்த்திபனை தூஷிக்கிறார். இவரது தரவாடித்துவத்தைப் பல கேள்விகளில் சிதறடிக்கிறார் சுரேஷ் கோபி. இக்காட்சி பத்து நிமிடங்கள் வரலாம். திரையில் இப்படி ஒரு காட்சி வருவது அதிசயம் என்றே கொள்ளவேண்டும். ஜாதியைச் சொல்லாமல், மேம்போக்காகப் பேசும் படங்களே நமக்குப் பழக்கமானவை. இந்தப் படத்தில் அப்படியெல்லாம் இல்லாமல், உயர்சாதித் திமிர் மிக அழகாக அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அபூர்வம்.

தாழ்த்தப்பட்ட சாதிக்காரரான பார்த்திபனே, உயர்சாதி அதிகாரிக்காக மரணமடையும் ஒரு ராணுவக்காரரின் மகளைத் தத்தெடுத்து வளர்ப்பது. ஆனால் தனக்காக உயிரிழந்த ராணுவக்காரருக்கு உயர்சாதி அதிகாரி எதுவுமே செய்வதில்லை. இதுதானா தரவாடித்துவம் என்று கேட்கிறார் சுரேஷ் கோபி. உயர்சாதி இதற்குச் சொல்லும் பதில் – அது அவன் கடமை.

இன்னொரு சுவாரஸ்யம், இப்படம் தமிழில் வந்துவிட்டது என்கிற கூகிள். உள்விலாசம் என்ற பெயரில். ஏற்கெனவே மேல்விலாசம் என்ற படம் தமிழில் உள்விலாசம் என்ற பெயரில் வரும் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் வந்ததாகத் தெரியவில்லை. வந்திருந்தால், இந்த பறையன், தோட்டி, உயர்சாதி வசனங்கள் தமிழில் என்னவாகின என்றறிய ஆவலாக உள்ளது. தமிழில் இந்தப் படத்தைப் பார்ப்பது ஒரு கொடுங்கனவு போலத்தான் இருக்கும். ஆனாலும் யாரேனும் தமிழில் பார்த்தால் அதைப் பற்றிச் சொல்லுங்கள்.

உணர்ச்சிமயமான நாடகத்தனமான இறுதிக்கட்ட காட்சியோடு படம் முடிவடைகிறது. சுட்டது தவறுதான் என்று பார்த்திபனுக்கு மரண தண்டனையை மார்ஷல் விதிக்கிறது. நேர்மையான அதிகாரியான வழக்கை நடத்தும் அதிகாரி தனது தீர்ப்பை பார்த்திபனிடம் சொல்லிவிட்டு, உண்மையை நோக்கி வணக்கம் சொல்வதாகச் சொல்லி சல்யூட் அடிக்கிறார். இதற்கிடையில் உயர்சாதி அதிகாரிக்குப் பதவி உயர்வும் கிடைக்கிறது. யதார்த்தம்.

படத்தின் குறைகள் என்ன என்று பார்த்தால், இப்படத்தைத் தமிழிலும் வெளிடவேண்டும் என்பதற்காக, சரியாக மலையாளம் பேசத் தெரியாத, தமிழ்போல் மலையாளம் பேசும் நடிகர்களான பார்த்திபனையும், தலைவாசல் விஜய்யையும் நடிக்க வைத்தது. மலையாளத்தைக் கடித்துக் குதறுகிறார்கள். மற்ற படங்களில் மற்ற மலையாள நடிகர்கள் பேசும் தமிழைக் காட்டிலும் இது பேதம் என்பது உண்மையே. ஆனாலும் இவர்கள் தமிழ் பேசுவது போன்றே உள்ளது. ஒரே அறை தரும் அலுப்பு. ஆனாலும் இந்த அலுப்பை இயன்றவரைப் போக்கும் அளவுக்கு வேகமான திரைக்கதை உண்டு என்றே சொல்லவேண்டும். படத்தின் ப்ளஸ், சுரேஷ் கோபியின் சுத்தமான வசனம் பேசும் முறை. படத்தின் பலமே அதுதான் என்று தெரிந்துகொண்டு தெளிவான மலையாளத்தில் அழகாகப் பேசுகிறார். பொதுவாகவே இவர் இப்படித்தான் பேசுவார் என்றாலும், இந்தப் படத்துக்கு இது அப்படியே பொருந்திப் போகிறது. பாடல்களோ, அசட்டு காமெடிகளோ எதுவுமே இல்லை. ஆகச்சிறந்த படம் என்றோ மாற்றுத் திரைப்படம் என்றோ கூற முடியாது. ஆனால் நல்ல படம். நிச்சயம் பார்க்கலாம். ராணுவத்துக்குள்ளே நடக்கும் தகிடுதத்ங்களைச் சொல்லும் படம் என்பதால் முக்கியமான படமும் கூட. 

Share

வாகை சூட வா

வாகை சூட வா பற்றிய எனது விமர்சனம் தமிழோவியத்தில் வெளியாகியுள்ளது. படிக்க இங்கே சொடுக்கவும்.

Share

அந்தர்ஜலி யாத்ரா

டிசம்பர் 4, 2006 அன்று சுரேஷ்கண்ணன் பதிவில் பின்னூட்டமாக எழுதியது. வசதி கருதி இங்கே. 🙂

படத்தின் ஆரம்பக் காட்சிகள் வெகு சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. படத்தோடு இயைந்து ஒலிக்கும் பின்னணி இசை படத்தின் பரிமாணத்தைப் பலமடங்கு கூட்டிவிட்டது. ஆனால் சத்ருகன் சின்ஹாவின் தேர்வை நான் ஏற்கவில்லை. வேறு நடிகர் யாரையாவது போட்டிருக்கலாம். அவர் சிறப்பாக நடித்திருந்தார் என்பதில் ஐயமில்லை. "கருவேலம்பூக்கள்" படத்தில் ராதிகா போல இப்படத்தில் சத்ருகன் சின்ஹாவின் உடல் நிறம் ஒத்துழைக்கவில்லை. அந்தக் கிழவர் ஏன் கங்கை நதிக்கரையில் தனித்து விடப்படுகிறார் என்பது விளக்கப்படவில்லை. ஆரம்பக் காட்சிகளில், அவர் உயிரிழக்கக்கூடும் என்று அவசரப்பட்டு அங்கு அழைத்துவரப்படுகிறார் என்று ஜோதிடரும் மருத்துவரும் சொல்லிக்கொள்கிறார்கள். பின் அவர் உடல்நிலை தேறத் தொடங்கியதும் அவரும் மணப்பெண்ணும் ஏன் அங்கேயே தனித்துவிடப்படுகிறார்கள் என்பதில் தெளிவில்லை. வெட்டியான் ஒருவன் இத்தனை கேள்விகளுடனும் தர்க்கங்களுடன் படைக்கப்பட்டிருப்பதே ஒரு யதார்த்தம் மீறிய புனைவுதான். அதுவும் கதை நடப்பதாகச் சொல்லப்படும் காலகட்டத்தில். ஆனால் அந்த சுதந்திரம் இயக்குநருக்கு இருப்பதை ஒத்துக்கொள்ளவேண்டும்.

வெட்டியானுக்கும் அந்த மணப்பெண்ணும் இருக்கும் நெருக்கம் மனதளவில் மட்டுமா இல்லை உடலளவிலுமா என்பது பூடகமாக விடப்பட்ட விஷயம். நான் உடலளவிலும் இருந்தது என்றே எடுத்துக்கொள்கிறேன். அவர்கள் இருவரும் தனித்துக்கிடக்கும் இரவுக்கு மறுநாள் காலை அந்த மணமகள் கங்கையில் தலைமுழுகக் குளிக்கிறாள். அந்தக் கிழவரைப் பார்க்கும்போது அவளுக்கு ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. மேலும் வெட்டியான் அவளைப் பார்க்கும் அடுத்த காட்சியில் அவளை "காம சொரூபிணி" என்கிறான். அப்போது அந்த மணப்பெண் வெட்டியானை நோக்கி, "இன்று ஒருநாள் இரவு காத்திரு" என்கிறாள். கடைசியில் அவளை வேசி என்றும் விபசாரி என்றும் கிழவர் திட்டும்போது அவள் மன்னியுங்கள் என்று அழுகிறாள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது அவள் அவனிடம் உடலளவில் தன்னை இழந்திருக்கவேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

பல விஷயங்களைப் பூடகமாக விட்டிக்கும் இயக்குநர், முடிவை ஒரு கங்கையின் வெள்ளத்தில் கரைத்திருப்பது ஏற்கமுடியாததாக உள்ளது. பல பிரச்சினைகளைக் காட்டிவிட்டு யதார்த்தம் என்கிற போர்வையில் ஒரு வெள்ளத்தில் படத்தை முடிப்பதை எப்படி ஏற்கமுடியும்?

உயர்ஜாதி ஹிந்துக்களின் ஜாதி வேஷத்தைக் காட்டும் காட்சி நாடகத்தனையுடன் கூடியது. அதற்கு முன்னரே பல காட்சிகள் உயர்ஜாதி ஹிந்துக்களின் ஜாதி வேஷத்தையும் பணத்தின் மீதான மோகத்தையும் தன் காரியத்தை நிறைவேற்றிக்கொள்ள கடவுளின் பெயரைத் துணைக்குத் தேடுவதையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகின்றன. குறிப்பாக, அந்தக் கிழவரை மணம் செய்துகொள்ள தன் மகளைத் தேர்வு செய்யும் பிராமணர், ஜோதிடரைத் தனக்கு உதவுமாறு நிர்ப்பந்திக்கிறார். வெட்டியான் பின்னொரு காட்சியில் அந்தப் பெண்ணின் தந்தைக்குப் பல வெள்ளியும் பொன்னும் கிடைக்குமெனக் காரணம் கூறுகிறான். மணம் செய்விக்கும் பிராமணர்களுக்கும் பொன்னும் வெள்ளியும் கிடைக்குமெனச் சொல்லப்படுகிறது. இப்படிப் பல காட்சிகளில் வேதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் ஏமாற்றிப் பிழைக்கும் உயர்சாதி ஹிந்துக்களின் தோற்றங்கள் இயல்பாகக் காண்பிக்கப்பட்டுவிட, வெட்டியானிடமே காசு கேட்பதாகக் காட்டப்படும் காட்சி நாடகத்தன்மையைத் தன்னுள் கொண்டுவிடுகிறது. அதிலும் அந்த வெட்டியான் காசை வீசி எறிந்துவிட்டுச் சென்றுவிட, அத்தகப்பனார் காசைக் குனிந்து எடுக்கிறார். கேமரா அந்தக் காசையும் அதை எடுக்க முயலும் அத்தகப்பனின் கையையும் காட்டுகிறது. இது நாடகக் காட்சியின் உச்சகட்ட சட்டம் (fரமெ.) அதாவது இக்காட்சி யதார்த்தமும் நாடகத்தன்மையும் கலந்தே வெளிப்படுகிறது. இக்காட்சியில் பின்னாலிருக்கும் இயக்குநர் முன்னால் வந்துவிடுகிறார். இதனால் இக்காட்சியின் யதார்த்த நம்பகத்தன்மை சற்றே குறைந்துவிடுகிறது. இதையே வெட்டியான் கதாபாத்திர வடிவமைப்புக்கும் பொருத்தலாம். அங்கே இயக்குநரின் (அல்லது நாவலாசிரியரின்) முகமே முன்னுக்கு வருகிறது, யதார்த்தத்தைப் பின்னுக்குத் தள்ளி. அதேபோல் அந்தப் பெண் கிழவரிடமிருந்து சாவியைப் பிடுங்கி எறிய, அவர்கள் அதை எடுக்க அடித்துக்கொள்ளும் காட்சி. இதை இன்னும் சிறப்பாக, இத்தனை காட்சிகளின்றி படமாக்கியிருக்கலாம். பின்னர் அப்பெண் தன் தந்தையிடம் கேட்கிறாள், "மகன்கள் என்ன ஆனார்கள் என்று." அவர் "அவர்கள் திரும்பவே இல்லை" என்கிறார். இந்த இரண்டு வசனங்களே போதுமானது. அவர்கள் அடித்துக்கொண்டு ஓடுவதும் ஒருவரை ஒருவர் பின் துரத்துவதும் அதை லாங் ஷாட்டில் காண்பித்துக்கொண்டே இருப்பதும் பழமையான காட்சிமுறைகள். (படம் வந்தது 1988-இல்.) இதேபோல் தான் சதியில் எரிவதாக அவளாக நினைத்துப் பார்த்து அழும் காட்சி. எல்லாவற்றையும் காட்சிமூலம் காட்டித்தான் பார்வையாளரை உணரச்செய்யவேண்டும் என்பதில்லை. அவளின் மன உணர்வுகள், எனக்கு பயமாயிருக்கு போன்ற வசனங்கள் இதை ஏற்கனவே பார்வையாளருக்கு அளித்துவிட்டிருக்க, அவள் சதியில் எரிவதாக நினைப்பதை காட்சிப்படுத்தியிருக்க வேண்டியதில்லை.

மிக முக்கியமான காட்சிகள் படத்தில் ரசிக்கத்தக்கவையாக உள்ளன. அந்த மணப்பெண்ணின் தந்தையும் ஜோதிடரும் பேசிக்கொள்ளும் காட்சிகள். கிழவர் தனது புது மனைவியை முத்தமிட (அல்லது முகத்தை நெருங்கி நோக்க) முயலும் காட்சியில் அப்பெண் அழுவது. தன் முகத்தை நீரில் பார்த்துவிட்டு அந்தக் கிழவர் தன்னை அழகந்தானே என்று அந்தப் பெண்ணிடம் கேட்பது. பின்னணி இசையை ஒலித்துக்கொண்டு அந்தக் கிழவரைச் சுற்றி ஆடும் ஒரு கூட்டம். இப்படிப் பல காட்சிகள்.

சதி என்னும் வழக்கத்தைப் பற்றிய இப்படம் அதை எதிர்நோக்கும் ஒரு பெண்ணின் மன உணர்வுகளை மிகச்சிறப்பாக பிரதிபலித்தது. அவள் "எனக்கு பயமா இருக்கு" என்று சொல்லுமிடங்கள் சதியை எதிர்நோக்கும் பெண்ணின் உணர்வை ஒருசேரக் கொண்டு வந்துவிடுகின்றன.

கௌதம் கோஷின் இத்திரைப்படம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சில விருதுகளை வென்றிருக்கிறது. நிச்சயம் தகுதியான திரைப்படமே.

மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றியும் பாராட்டுகளும்.

Share

மங்காத்தா

மங்காத்தா விமர்சனம் – தமிழோவியத்தில் வெளியாகியுள்ளது. படிக்க இங்கே சொடுக்கவும்.

Share