Archive for திரை
மெர்ஸல் – விஜய்யின் அரசியல் ஆசை
வொய் ப்ளட், ஸேம் ப்ளட்
“இன்னைக்காவது பாட ஆள் கிடைச்சாங்களா?”
“இண்டஸ்ட்ரியே அலறுது சார். உங்க பாட்டை பாடறதுன்னா சும்மாவா?”
“ஐ டோண்ட் லைக் திஸ் மஸ்கா அண்ட் ஆல்… ஆள் கிடைச்சாச்சா இல்லியா? இல்ல யூ நீட் மி டூ சிங் திஸ் டூ?”
“இன்னைக்கு ஒருத்தன் வர்றேன்றுக்கான் சார். சீனியர் சிங்கர்ஸ்ல ஜெயிச்ச பையனாம், பாவம்.”
“என்ன பாவம்?”
“ஒண்ணுமில்ல சார். இதோ பையன் வந்துட்டான்.”
“கெட் ரெடி ஃபாஸ்ட். போய் ரெடி பண்ணிட்டு கூப்பிடுங்க.”
—
“சார், ரொம்ப திணர்றான் பையன்.”
“என்னய்யா இது. தமிழ்நாட்டுல என் பாட்டை பாட ஆள் இல்லியா?”
“ஆனா இவன் பாடிருவான் போல இருக்கு…”
“இஸிட்?”
“ஆமா, ரொம்ப ட்ரை பண்றான். ரெண்டு தடவை வாந்திகூட வந்திடுச்சு..”
“வாட், வாந்தி வந்திடுச்சா? யூ மஸ்ட் கீப் மீ இன்ஃபார்ம்ட் திஸ்…”
“இல்ல சார், இப்பதான் சார் வாயலெடுத்தான், அதான் ஓடி வந்தேன்.”
“வா பையனைப் பார்க்கலாம்.”
—
“வாந்தி வந்திடுச்சாமே?”
“ஆமா சார், ஸாரி ஸார்.”
“நோ நோ. இட்ஸ் ரியலி குட். பெர்ஃபெக்ட் ரூட் யூ நோ… ஜஸ்ட் ட்ராவல்… டொண்ட் கிவப்…”
“சார்…”
“யெஸ், என் பாட்டு பாடறது சும்மா இல்லை… அப்படியே அடி வயித்துல இருந்து எக்கிப் பாடணும்…”
“ஆமா சார், ஒரு தடவை வயித்தை பிடிச்சிக்கிச்சு.”
“தட்ஸ் தி ஃபர்ஸ்ட் ஸெட்ப் யூ நோ. பிடிச்சிக்கிட்டு இருக்கும்போது வலியோட அப்படியே சத்தமா உரக்க ரொம்ப சத்தமா பாடினா…”
“ரத்தம் வந்திடும்…”
“எக்ஸாட்லி. யூ ப்ரேவோ மேன்.”
“ரெண்டு வாட்டி வாந்தி வந்திருக்கு சார், இன்னும் ரத்தம் வரலை சார். ஆனா வந்திரும் சார், எனக்கு நம்பிக்கை இருக்கு”
“டோண்ட் கிவ் அப் மேன். தட்ஸ் பேஸ்ஸன். சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ். கீப் ராக்கிங். ஜஸ்ட் லௌட்லி. டோண்ட் கிவ் அப். ஹேவ் கர்ச்சீஃப்?”
“நாலஞ்சு கொடுத்திருக்காங்க சார்…”
“கைல வெச்சிக்கோ. மைக் என்ன ஆனாலும் பிரச்சினை இல்லை. குரல் குரல் குரல் அதுல மட்டுமே கவனம். சுதி சேரலை அது இதுன்னு நோ இமாஜினேஷன். எல்லாம் ஹம்பக். பித்தலாட்டாம். ஜஸ்ட் தின்க் அவுட் ஆஃப் தி பாக்ஸ். கத்து. எனர்ஜி இஸ் தி சீக்ரெட்…”
“ஓகே சார்…”
“எங்க கத்து…”
“ஓகேவா சார்…”
“இல்ல. ஐ நீட் நீட் ஸம்வாட் மோர்… யூ ஸி, ப்ளட் வரலை. ஸோ சம்திங் மிஸ்ஸிங்.”
“இப்பவும் வாந்தி வருது சார்…”
“லுக்கிங் கிரேட். பட் என்னவோ ஒண்ணு… ஐ டொண்ட் நோ… தடுக்குது… ஸீ, ப்ளட் அது வரணும்…”
“இன்னொரு தடவை பாடினா வந்திடும் சார்…”
“அப்ரிஷியேடட். அகைன், கமான்…”
“ஆனா சார்…”
“நோ செகண்ட் தின்கிங் ப்ளீஸ். ஐ டோண்ட் லைக் இட். நெவர் எவர் கிவப்…”
“இல்ல சார், இந்த முதல் பாட்டே கடைசி பாட்டாயிடுமோம்னு…”
“ஸோ வாட் மேன்… ஒரே பாட்டுல வெர்ல்ட் ஃபேமஸ் யூ நோ… வாட் எல்ஸ் யூ ஆர் லுக்கிங் ஃபார்?”
“ஓ…”
“யெஸ் மேன். இந்தப் பாட்டு பாட ஆள் கிடைக்காம இல்லை. நானே பாடுவேன். ஃபக்கிங் சிம்பிள் சாங் யூ நோ. பாடவா பாடவா பாக்கிரியா? ஒன்றரை டன் வெயிட் வாய்ஸ்… யூ வாண்ட் டு ஹியர்?”
“இல்ல சார்…”
“ஓ மை காட். எவ்ரிதிங் ஐ நீட் ஃப்ரெஷ். தினமும் ஃப்ரெஷ் வாய்ஸுக்காக ஐ புட் மி இன் ஃபையர் யூ நோ. ஒவ்வொரு பாட்டும் ஒரு விதம்… யூ ஃபர்ஸ்ட் அண்டர்ஸ்டாண்ட் தட்…”
“ஓகே சார்…”
“ஓகே. கமான். இட்ஸ் வெரி ஈஸி. ஜஸ்ட் ஒன் டைம் ப்ளட். அடி வயித்துல இருந்து உன் குடலெல்லாம் பிச்சி வாய் வழியா வெளிய வர்றதா நினைச்சுட்டு கத்து மேன். கமான். கெட் ரெடி. இட்ஸ் ரியல்லி அ ஃபண்டாஸ்டிக் மெலோடி. இதுக்கே திணரியேப்பா…”
“ஐம் ரெடி ஸார்…”
“தட்ஸ் தி ஸ்பிரிட். ஆல் ரெடி. ஸ்டார்ட்… எங்க பாடு… வேலையில்லாஆஆஆஆ…. பட்ட தாரீஈஈஈஈஈஈ….”
குரங்கு பொம்மை, காஸி அட்டாக், விவேகம், ஜாலி எல் எல் பி 2
குரங்கு பொம்மை – பார்க்கலாம். பொறுமையுடன். பாரதிராஜா வெகு யதார்த்தம். விதார்த் வழக்கம்போல பலவீனம். க்ளைமாக்ஸ் அவசியமற்ற இழுவை மற்றும் கொடூரம். சாதாரண கார் ஓட்டுநர்கூட கொலை செய்வார், கை கால் வெட்டுவார் என்பதெல்லாம் அராஜகமான சிந்தனை. யதார்த்தமும் இன்றி, அதற்காக முற்றிலும் வணிகத் தன்மையும் இன்றிச் செல்கிறது படம். பதற வைக்கவேண்டிய க்ளைமாக்ஸ் தராத பதற்றத்தைத் தந்த காட்சி – ஒரு சிறுமி தன் தந்தைக்கு பதிலாக தானே ஒருவரைக் கயிற்றால் அடித்துக்கொண்டே இருப்பது.
-oOo-
காஸி அட்டாக் ஹிந்திப் படம் பார்த்தேன். நல்ல முயற்சி. கடைசி காட்சிகளில் கொஞ்சம் இழுவை, புல்லரிப்பு, வீடியோ கேம் விளையாட்டுகள் போன்ற காட்சிகள் எல்லாம் கலந்து இருந்தாலும், பார்க்கலாம். ‘எல்லையில் வீரர்கள்’ (என்னைப் போன்ற) உணர்வாளர்கள் கை கால் மயிர்களை வழித்துவிட்டுப் பார்ப்பது நலம். இல்லையென்றால் மயிர்க்கூச்செரிந்துகொண்டே இருக்கும். இப்படியும் படம் எடுத்ததற்காகவே பாராட்டலாம்.
இதில் இரண்டு சந்தேகங்கள். தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்.
1. நீர் மூழ்கிக் கப்பலின் கேப்டன் கப்பலுக்குள்ளேயே பணியின் போது இறந்துவிட்டால், அப்படியே கடலில் விட்டுவிடுவார்களா?
2. படம் முடிந்து இறுதியில் உண்மைகளைப் பட்டியல் இடும்போது, பாகிஸ்தான் தனது கடற்கண்ணிவெடி (கடற்கன்னி அல்ல!) வெடித்துதான் தன் நீர்மூழ்கிக்கப்பல் காஸி அழிந்ததாகச் சொன்னது என்று காண்பிக்கிறார்கள். இதைப் பற்றிய மேலதிக இந்திய பாகிஸ்தான்சார் தகவல்கள் உண்டா?
-oOo-
விவேகம் பார்த்தேன். ஒரு மணி நேரம் எப்படியோ தாங்கிக் கொண்டேன். அதற்குமேல் மிடில. சமீபத்தில் பார்த்த மிகப் பெரிய மொக்கைகளில் சத்ரியனுக்கு அதீத செலவுடன் சவால் விட்டு நிற்கிறது விவேகம். நல்ல பிரம்மாண்டமான கொடுமை. அஜித் ரஜிகர்களுக்குப் பிடிக்கும் என்ற விமர்சனம் இனி வந்தால் பம்மிவிட முடிவெடுத்திருக்கிறேன். அஜித் ரசிகர்கள் இப்பாவியை மன்னித்துவிடுங்கள்.
இடைவேளையில் ஒரு சொறிக் காக்கா பிரமாண்டமாக வருகிறது. அது ஃபீனிக்ஸாம். செம மாஸ்.
எனக்குப் பிடித்த அழகான காஜோலை அஞ்சலிதேவி ரேஞ்சுக்கு காண்பித்த இயக்குநரை எத்தனை திட்டினாலும் தகும்.
-oOo-
ஜாலி எல் எல் பி2 படம் பார்த்தேன். முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை பரபரவென்று இருந்தது. நல்ல டிராமா. முன்னா பாய் எம்பிபிஎஸ் வகையறா படம். ஹிந்தியில் இது போன்ற படங்களில் மாஸ்டர் பண்ணிவிட்டார்கள் போல. சில இடங்களில் அதீத நாடகத்தன்மையை ரசிக்க முடியுமானால் உங்களுக்கும் பிடிக்கலாம்.
-oOo-
நிபுணன்
நிபுணன்
அருண் வைத்தியநாதனின் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படம் வந்த உடனேயே அதைப் பார்க்கவில்லை. பார்க்க நினைத்தேன், ஆனால் ஏனோ விட்டுப் போய்விட்டது. அதை அப்படியே மறந்தும்போய்விட்டேன். ஆறு மாதம் கழித்து ஒரு நண்பர், கிட்டத்தட்ட ஃபேஸ்புக் நரசிம்ம ராவ், என்னிடம் ஃபேஸ்புக் சாட்டில் அந்தப் படத்தைப் புகழ்ந்தார். இவரே புகழ்கிறாரே என்று ஒரு பக்கம் அதிர்ச்சி, இன்னொரு பக்கம் மகிழ்ச்சி. உடனே அந்தப் படத்தைப் பார்த்தேன். குடும்பத்துடன் எல்லோரும் சேர்ந்து பார்க்கத் துவங்கினோம். சில நிமிடங்களிலேயே என் மகனைப் பார்க்கவேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அந்த அளவுக்குப் படத்தின் தாக்கம். படம் முழுக்க இருந்த ஒரு திக்திக் தன்மை, அலட்டாத ஸ்டைலிஷ் உருவாக்கம் எனப் படம் மிக நன்றாக இருந்தது. அதிகம் பேசப்படவேண்டிய பிரச்சினை ஒன்றை அதன் சீரியஸ்நெஸ் கெடாமல் கத்திமேல் நடப்பது போன்ற படமாக்கல் சாதாரண விஷயமல்ல.
அவரது அடுத்த படம் பெருச்சாளி (மலையாளம்), தரைக்கு இறங்கி எடுத்த படம். 🙂 இப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது, இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்ற எண்ணமே. ஆனால் இப்படம் நல்ல ரீச்சைப் பெற்றிருந்தது. மிக நன்றாக ஸ்டைலிஷாக எடுக்கும் படங்களுக்கும் இத்தகைய படங்களுக்கும் வசூல் ரீதியாக உள்ள வேறுபாடு, திரையுலகில் எப்போதும் இருப்பதுதான்.
நிபுணன் திரைப்படம் த்ரில்லர் வகை என்பதாலும் சீரியல் கில்லர் வகைக் கதை என்பதாலும் இந்த இரண்டையும் எதோ ஒரு வகையில் சரியாகக் கையாண்டிருக்கிறது. என்றாலும் ஸ்டைலிஷ் தன்மையே அதிகம். படம் பார்க்கும்போது நம் கவனம் எங்கேயும் சிதறுவதில்லை. இது ஒரு த்ரில்லர் படங்களுக்கு மிகவும் தேவையான ஒரு தன்மை. படம் முடிந்ததும் நாம் அலசலாம் ஆராயலாம். ஆனால் பார்க்கும்போது நம்மைக் கட்டிப் போடவேண்டும். அதை இப்படம் பெருமளவுக்குச் செய்திருக்கிறது. பெருச்சாளி படம் போன்ற ‘தரை ரேஞ்சுக்கு இறங்கி’ச் செய்யும் லாஜிக் அற்ற காட்சிகள் மிக மிகக் குறைவே.
திரைக்கதையை ஏனோ தானோ என்று அமைக்காமல் ஒழுங்காக ஹோம் வொர்க் செய்து மெருகேற்றி, ஒவ்வொரு கேள்வியையும் தாங்களே கேட்டுக்கொண்டு அதற்குச் சரியான பதிலையும் படத்தில் வைத்து, பெரிய அளவிலான சந்தேகங்களே வராத அளவுக்குப் படத்தை உருவாக்கி இருக்கிறது நிபுணன் டீம். திரைக்கதையில் ஆனந்த் ராகவின் பங்களிப்பும் உள்ளது. படத்தில் வசனங்கள் பல இடங்களில் ஷார்ப். சுஜாதாவின் வாசனை சில இடங்களில். அதை தனியே துருத்தித் தெரியாதவாறு படத்தோடு போகிற போக்கில் செய்திருப்பது ரசனையாக உள்ளது. (ரத்தம் உறையாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருளைச் சொல்லும் காட்சியும் கொலையை உள்ளே வந்து பாருங்க என்று பிரசன்னா அர்ஜூனை அழைக்கும்போது அர்ஜூன் பதில் சொல்லும் காட்சியும் உதாரணங்கள்.)
அர்ஜூன் அட்டகாசமாக நடிக்கிறார். பிரசன்னா, வரலக்ஷ்மி போன்றவர்கள் தங்கள் தேவையை உணர்ந்துகொண்டு அதை மட்டும் செய்திருக்கிறார்கள். யாரும் ஓவர் ஆக்டிங் செய்யவில்லை என்பது ஆறுதல். மொத்தத்தில் ஒரு டீசண்டான படம் என்று உறுதியாகச் சொல்லலாம்.
எங்கேயெல்லாம் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று பார்த்தால், இடைவேளைக்குப் பிறகு ஒரு தொய்வு, லேசான தொய்வுதான், வருகிறது. அது ஃப்ளாஷ் பேக் காட்சியால் வருகிறது என்றாலும், அதைத் தவிர்க்கமுடியாது என்றாலும், அதற்குப் பிறகு வேகமெடுக்கும் படம், மீண்டும் க்ளைமாக்ஸில் தொய்வடைகிறது. யார் என்பதை கடைசி வரை தெரியாமல் வைத்திருக்காமல் அதற்கு முன்பே அந்தக் கதாபாத்திரத்தின் பெயரையெல்லாம் சொல்லி விடுகிறார்கள். ஆளை மட்டுமே கடைசியில் காட்டுகிறார்கள். நமக்குத் தெரிந்த ஒருவர்தான் கொலையாளியோ என்ற எண்ணம் தமிழ்ப்பட ரசிகர்களுக்கு இருப்பது இயல்பதுதான். அப்படி இப்படத்தில் எதுவும் இல்லாதது ஒருவகையில் சரிதான் என்றாலும் இன்னொரு வகையில் ஏமாற்றமாகவும் இருந்தது. அதேசமயம், நாம் எதிர்பாராத ஒருவரைக் கொலையாளி என்று காட்டி இருந்தாலும் இந்த ஏமாற்றம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்பதையும் புரிந்துகொள்ளமுடிகிறது. இது கொஞ்சம் சிக்கலான விஷயம்தான். பிடிக்காத விஷயம் என்று பார்த்தால், அர்ஜுனுக்கு பார்க்கின்சன்ஸ் நோய் என்று காண்பித்து, முக்கியமான காட்சிகளில் எல்லாம் அவருக்கு வலது கை செயல்படாமல் போவது. இதை மிக எளிதாக ஊகித்துவிட முடிவதாலும் அது அப்படியே நடப்பதாலும், அக்காட்சிகள் எல்லாம் 60களின் தமிழ்ப்பட உத்தி போலத் தோன்றியது. படத்தில் மற்ற எந்த காட்சிகளும் இப்படி இல்லாத நிலையில், உதாரணமாக ஹீரோ மற்றும் ஹீரோவின் நண்பர்களின் குடும்பத்தைக் கொல்வது மிரட்டுவது போன்ற எந்த அபத்தங்களும் இல்லாதபோது, இதுபோன்ற காட்சிகளும் இல்லாமல் இருந்திருக்கலாம். அதேபோல், கொஞ்சம் ஆசுவாசம் செய்யும் காட்சிகள் கூடுதல் இருந்திருக்கலாம். இது ஒரு குறை அல்ல என்றாலும், படத்தின் ரீச்சுக்கு இது உதவும். உதாரணமாக, கொலையாளி பற்றித் துப்பு சொல்லும் ஒருவர் பிரசன்னாவை கான்ஸ்டபிள் என்று அழைக்கும் காட்சி. தனியே உருத்தாமல் இது போன்ற காட்சிகள் தரும் கலகலப்பு ஒரு வணிகப் படத்துக்கு மிகவும் முக்கியமானதே.
வெட்டியாகப் பணத்தைப் போட்டு தரைரேஞ்சுக்கு எடுக்கிறேன் என்று சொல்லி நம்மைப் படுத்தும் படங்களுக்கு மத்தியில் தெளிவாக திட்டமிடப்பட்டு திரைக்கதை அமைக்கப்பட்டு நன்றாக எடுக்கப்படும் படங்கள் நிச்சயம் வரவேற்கப்படவேண்டியவை. இவையே தமிழ்த் திரையுலகை வாழவைக்கப் போகும் ஆக்சிஜன். அந்த வகைத் திரைப்படமாக வந்திருக்கிறது நிபுணன்.
பின்குறிப்பு: படத்தின் மிகச்சிறந்த காட்சி எதுவென்றால், இடைவேளைக்குப் பிறகு வரும் ஒரு நிமிடக் காட்சிதான்.
படத்தின் இயக்குநருக்கு ஒரு சைன் ஆஃப் மெசேஜ் – கபாலி ரேஞ்சுக்கு அடுத்த படத்தை எடுக்க வாழ்த்துகள். 😛
மூன்று குறிப்புகள்
மூன்று குறிப்புகள்:
டசக்கு டசக்கு பாடல். நேற்றுதான் பார்த்தேன். இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஹரீஷ் பெராடியின் (உச்சரிப்பு?) ரசனையான ஆட்டம் கண்ணை விட்டு அகலவே இல்லை. விஜய் சேதுபதியை முந்துகிறார். ஹரீஷ் ஆடுவாரா என்ற அதிர்ச்சியை தாண்டுகிறது இவர் இவ்வளவு கெத்தாகவும் ஆடுவாரா என்ற ஆச்சரியம். இந்த வருடத்தின் சிறந்த குத்துப் பாடலாக இருக்கலாம்.
மீசைய முறுக்கு. சுமாரான மொக்கைப் படம். ஆனால் என்னவோ பிடித்திருக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது? எனக்கே புரியவில்லை. படம் முழுக்க கல்லூரியில் இருப்பது போன்ற உணர்வு. படிப்பதை மட்டும் காட்டவில்லை. முன்பெல்லாம் படிக்கவும் செய்தோம். ஹிப்ஹாப் தமிழா என்ற பெயரைக் கேள்விப்பட்டிருந்தாலும் இப்படத்தில்தான் அவரைப் பார்க்கிறேன். எதோ ஒரு இன்னசென்ஸி ஈர்க்கிறது. டைரக்ஷன், இசை, நடிப்பு என எதுவுமே அட்டகாசம் இல்லை என்றாலும் எதுவுமே மோசமும் இல்லை. நன்றாகவே நடிக்கிறார், ஆடுகிறார். மூன்று பாடல்கள் பிரமாதம். இதில் வரும் ஒரு காட்சி, மா கா பா (மகப?) ஆனந்தின் இரண்டு நிமிடக் காட்சி. இவரையும் இப்படத்தில்தான் கேள்விப்படுகிறேன். ஆர்ஜே, அவ்வப்போது நடிகர் போல. என்ன ஒரு ஸ்பாண்டேனியஸ் காமெடி. விழுந்து விழுந்து சிரித்தேன். இதற்காக ஒட்டுமொத்த படத்தையும் பார்க்க முடிவெடுத்தால் அது உங்கள் விதி.
தற்காப்பு என்றொரு படம் பார்த்தேன். பி.வாசு ஷக்தியை விக்கியில் ட்ரிக்கர் ஸ்டார் ஷக்தி என்று போட்டிருக்கிறார்கள். பிக்பாஸ் குசும்பா பட்டமா எனத் தெரியவில்லை. படம் மொக்கை என்றாலும், இப்படத்துக்கும் விக்ரம் வேதாவுக்கும் உள்ள ஒற்றுமையை யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு கதைக்கான ட்ரீட்மெண்ட் படத்தை எங்கே வைக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
நாங்கள்
நாங்கள் என்றொரு திரைப்படம் வந்தது. 1992ல். சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம். 1991ல் நான் மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு வீடுமாற்றிக்கொண்டு வந்துவிட்டோம். ஆனாலும் மதுரையின் மீதிருந்த காதலும் ஈர்ப்பும் குறையாமல் இருந்த காலகட்டம். எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் மதுரைக்குப் போய்விடுவேன். அங்கே இருந்த நண்பர்களுடன் படத்துக்குச் செல்வது ஒரு பொழுதுபோக்கு. அந்தமுறை எந்த நண்பரும் வீட்டில் இல்லை. நாங்கள் இருந்த வளைவுக்குச் சென்று அங்கிருந்தவர்களைப் பார்த்துவிட்டு, அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு, வேறு என்ன செய்வது என்று தெரியாமல், நான் மட்டும் தனியாகக் கிளம்பி மதி தியேட்டரில் ‘நாங்கள்’ படம் பார்க்கப் போனேன். இந்தப் படத்தைப் பார்க்க ஒரே காரணம், இளையராஜா.
சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு, ‘பாடு குயில்களே பாச மலர்களை’ பாடலைக் கேட்டபோது, அதுவரை மறந்திருந்த பாடல் நினைவுக்கு வந்தது. அப்படியே நான் மதுரைக்குச் சென்றது, படம் பார்த்தது என எல்லா நினைவுகளும். மதுரையில் அந்த வயதில் பார்த்தபோதே அந்தப் படம் படு குப்பை என்ற எண்ணம் வந்ததை நினைத்துக்கொண்டேன். அப்போது தீபிகா மகாபாரதத்தில் மிகப் பிரபலமாகி இருந்தார். அவர், சிவாஜி, பிரபு என ஏகப்பட்ட பேர் இருந்தும், இருந்ததாலேயே படுகுப்பையாக அந்தப் படம் இருந்தது.
இந்த நாங்கள் திரைப்படம் நான்கைந்து நாள்களுக்கு முன் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சரி, பழைய நினைவுகளுக்காகவும், ‘பாடடி குயிலே’ பாடலுக்காகவும் பார்ப்போம் என்று பார்க்கத் துவங்கினேன். இந்தப் படத்தை எப்படி அந்தக் காலத்தில் பொறுமையாகப் பார்த்தோம் என்ற ஆச்சரியம் எனக்கு இன்னும் தீர்ந்த பாடில்லை.
இன்னொரு அதிர்ச்சி, வசனம் மகேந்திரன். மகேந்திரன் எப்படி இப்படி ஒரு மோசமான படத்துக்கு மோசமான வகையில் வசனம் எழுதினார் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். ஒருவேளை வேறொரு மகேந்திரனாக இருக்குமோ என்று விக்கியில் பார்த்தால், கதை மகேந்திரன் என்றிருக்கிறது. ஆனால் வசனம் மகேந்திரன் என்று படம் சொல்கிறது. என்னதான் மோசமான கதையாக இருந்தாலும் மகேந்திரன் போன்ற ஒருவர் எவ்வித ஒரு ‘பளிச்’சும் இல்லாமல் இப்படி வசனம் எழுதமுடியுமா என்ற சோகம் இந்த நிமிடம் வரை தீர்ந்தபாடில்லை. அந்த வயதிலேயே மகேந்திரன் எனக்கு மிகப் பிடித்த இயக்குநர். இருந்தும் அன்று மதுரையில் படம் பார்க்கும்போது எப்படி மகேந்திரன் பெயரைத் தவற விட்டேன் என்பதுவும் பிடிபடவில்லை. 🙂