Archive for புத்தகப் பார்வை

சைக்கிள் முனி – என் பார்வை


சைக்கிள் முனி, சிறுகதைத் தொகுப்பு, இரா. முருகன், கிழக்குப் பதிப்பகம்.


ஒன்பது சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் அடங்கிய தொகுப்பு.

முதல் கதை சாயம். கதை சொல்லும் நேர்த்தியில் இக்கதையே மற்றக் கதைகளை விட முன்னுக்கு வருகிறது. மற்றக் கதைகளெல்லாம் ஒரு “கதையை” தன்னகத்தே கொண்டிருக்கும்போது “சாயம்” மட்டுமே கதையில்லாத, ஒரு காட்சி விவரிப்பையும் அதைத் தொடர்ந்து எழும் சந்தேகங்கள், கேள்விகள், பதில்கள் என்பதை உள்ளிட்ட மன நிகழ்வுகளாகவும் விரிகிறது. கதை சொல்லியின் பார்வையில் கதை நிகழ்வதால் இது மிகவும் யதார்த்தமாகவும் இருக்கிறது. கடைசி வரியில் ஒரு புன்னகை நம் இதழ்களில் விரிவதையடுத்து இந்தக் கதை மனதுள் ஒட்டிக்கொள்கிறது.

“சில்லு” அறிவியல் புனைகதை. அறிவியல் யுகத்தில் நடக்கும் சில்லுப் பதிப்பில் தவறு என்கிற கற்பனையே அழகுதான். மூன்றாம் அத்தியாத்தோடு கதை முடிந்திருந்தால் ஒரு “நச்” கதையாக இருந்திருக்கும். (ஆனால் கதைக்கு வேறொரு பரிமாணம் கிடைத்திருக்கும்!) அதற்குப் பின்னும் கதை வளர்ந்துகொண்டு போவது தேவையா என்ற கேள்வி எழுகிறது. அதேபோல் கதை செல்லும் வேகமும் நம்மைக் கொஞ்சம் அந்நியப்படுத்துகிறது.

“சைக்கிள் முனி” கதையில் முனி பேசுகிறது. பாலன் கடைசியில் “உங்க மகளை விட்டு வேலைக்கு அனுப்பாதீங்க” என்னும்போது முனி பேசுவதை நம்பும் பாலனின் சித்திரம் கண்முன் வருகிறது. வறுமையைச் சொல்கிறது.

“கருணை” கடைசியில் ஒரு அதிர்ச்சியை முன்னிறுத்தி அதை வைத்து நடக்கும் கதை. முடிவைக் கொண்டு முதலில் சொல்லப்படும் விஷயங்களை ஊகித்து பச்சாபத்தை வரவழைத்துக்கொள்ளவேண்டிய, அதிகம் பயன்படுத்தப்பட்ட வடிவம். “காலையில் பசியாறாமல் வந்திருக்கவேண்டாம்” வரியின் அழகும் “இடது தோள்பட்டையில் உன் நகம் பதிந்த தடம் அப்படியே இருக்கட்டும்” வரியின் அழகும் ஒட்டுமொத்தக் கதையில் இல்லை.

“முக்காலி” கதை பாங்காக்கில் நடக்கும் சா·ப்ட்வேர் ஆர்டர் பிடிக்கும் ஒருவனின் கதை. “மூன்று விரல்” நாவலில் வரும் ஒரு அத்தியாத்தைத் தனியே எடுத்து வைத்தது போன்று இருக்கிறது. ” ஓ.கே. ஓ.கே. அப்ப பையன் வேணுமா?” என்கிற வரி மறக்கமுடியாத வரி. “மூன்றுவிரல்” நாவலை மறந்துவிட்டுப் பார்த்தால் இந்தச் சிறுகதை

நல்ல ஒன்றே. சா·ப்ட்வேர் நிபுணன் அடிக்கவேண்டியிருக்கும் ஜல்லியை நகைச்சுவைத் தெறிப்புகளூடே கண்முன் கொண்டு வருகிறது.

“ஒண்டுக் குடித்தனம்” – பேய் விடாமல் மனிதனைத் துரத்தும் மிகுபுனைவு. சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் மிக சுமாரான கதையாக இதைத்தான் சுட்டவேண்டும்.எந்தவொரு விரிவும் ஆழமும் இல்லாமல் வெறுமனே சொல்லப்பட்டிருக்கிறது. மற்றக் கதைகளில் தெறிக்கும் நகைச்சுவையும் இதில் இல்லை.

“பாருக்குட்டி” . சிறுவயதில் குலசேகர பாண்டியனும் கதை சொல்லியும் மலையாளம் படித்த பாருக்குட்டியின் ப்ரெஸ்ட் கேன்சருக்கான ஆபரேஷனில் …. நீக்கப்பட்டதோடு கதை முடிகிறது. ….. என்றுதான் ஆசிரியரும் சொல்கிறார்! கதையில் அங்கங்கே தெறிக்கும் நகைச்சுவை இரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக “தான் அல்பமாகப் பன்னிரண்டு ரூபாய் அறுபது பைசா கடன் வாங்கிய வரலாற்றை” எழுதச் சொன்னதையும்

“கடலின் அக்கர கோனாரே”வையும் சொல்லவேண்டும்.

“ஸ்டவ்” ஜோசியம் சொல்கிறது. மடத்தனத்தை எள்ளலோடு சொல்லும் கதை என்றாலும் கதையில் நம்பகத்தன்மை கொஞ்சம்கூட இல்லாததால் அதிகம் இரசிக்கமுடியவில்லை.

“தரிசனக்கதை”யில் தெய்வத்தின் அலுப்பு நல்ல சுவாரஸ்யம். “மெக்கானிக் வர்ற வரைக்கும் கொட்டு கொட்டுன்னு முழிச்சிக்கிட்டு” இருப்பதும் “நான் எப்ப சொன்னேன்?”ம் அசத்தல் வரிகள். பூசாரி குறிசொல்லியதற்கெல்லாம் தெய்வத்தைச் சுட்டுவது பற்றிய மிக நுட்பமான அழகான விவரிப்புகள். நல்ல சிறுகதை. “ஸ்டவ்” போலவே இதுவும் ஒரு

நம்பகமில்லாத ஒன்றை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆனால் கதையின் நடையும் தெய்வத்தின் புலம்பலைச் சொல்லும்விதமும் “தெய்வம் பேசியது” என்று இன்னும் பலர் சொல்வதைக் கேட்கமுடிவதாலும் கதையில் ஒன்றிவிடமுடிகிறது.

“சாயம்”மும் “தரிசனக்கதை”யும் சிறுகதைத் தொகுப்பைப் படித்த பின் மனதில் தங்குகின்றன. “ஸ்டவ்”வும் “ஒண்டுக்குடித்தனம்”மும் சுத்தமாக விலகி நிற்கின்றன.

“வாயு” குறுநாவல் முகம்சுழிக்க வைக்கும் பல பிரயோகங்களைக் கொண்டிருந்தாலும் இரசிக்கும்படியாகவே இருக்கிறது. குளோரியா அம்மாளின் வறுமை கதையினூடாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களைக் கூர்மையாக உள்வாங்கிக்கொள்ளும் திறன் கதையில் தெரிகிறது. “கழிவறை உபயோகித்தவர்கள், சுத்தம் செய்து காகிதத்தில் துடைத்துப்போட்டு வெளியேறும்போது ஈர மினுமினுப்போடு தெரியும் கைகளை குளோரியா அம்மாள் அறிவாள்” அதில் ஒன்று. (ஆண்கள் கழிப்பறையைச் சுத்தம் செய்ய மற்ற நாடுகளில் பெண்களை அனுமதிக்கிறார்களா?)

கதைகள் முழுவதிலும் உள்ள ஒரு பொதுத்தன்மை நகைச்சுவை. இதுவே இரா.முருகனைத் தனித்தும் காட்டுகிறது. எல்லாக் கதைகளிலும் தெறித்துவிழும் ஒற்றை வரிகள், சம்பாஷணைகள் மெல்லிய நகைச்சுவையை வரவழைத்துவிடுகின்றன. அதேபோல் கதைகளில் வரும் சம்பவ விவரிப்புகளும் கதாபாத்திர விவரிப்புகளும் கூடுதலும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் தேவையான அளவு சொல்லப்பட்டிருக்கிறது. கதைகளின் வேகமும் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய இன்னொரு விஷயம். வேகம் என்று சொல்லும்போது ஒரு வார்த்தையில் ஒட்டுமொத்த சூழலைக் கண்முன் கொண்டு வரும் உத்தி அலுப்பை ஏற்படுத்துவதையும் சொல்லவேண்டும். வெளிநாடுகளில் வாழ்ந்த அனுபவம் சில கதைகளில் உதவியிருக்கிறது. கதையின் களத்தை “ஸ்டவ்” மாதிரியோ “ஒண்டுக்குடித்தனம்” மாதிரியோ இல்லாமல் யதார்த்தச் சூழ்நிலையிலோ அல்லது கொஞ்சம் அதிகமான நம்பகத்தன்மையுடனோ தேர்ந்தெடுத்தால் இதைவிட சிறப்பான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இரா.முருகனிடமிருந்து நிச்சயம் வரும் என்று சொல்லலாம்.

Share

தூவானம் – அ.யேசுராசாவின் பத்திகளின் தொகுப்பு – என் பார்வை


தூவானம், அ.யேசுராசா, மூன்றாவது மனிதன் பப்ளிகேஷன், கொழும்பு


“விமர்சன மனநிலைக் கண்ணோட்டம் என்னிடம் எப்போதும் இருந்துவருகிறது. அது அடிமனதிலும் பதிந்து வெளிப்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்குமென்றுதான் சொல்லலாம். படைப்பாளிகளிடம் இத்தகைய நிலை இருக்கவேண்டுமென்றுதான் நான் எதிர்பார்க்கிறேன்” – அ.யேசுராசா.

பொதுவாகவே பத்திகள் படிக்க சுவாரஸ்யமானவை. அவை தொடர்ந்து வாசகனுக்கு நிகழ்காலத்தின் நிகழ்வுகளையும், எழுதுபவனின் அனுபவத்தையும், ஒரு படைப்பின் அறிமுகத்தையும் விவாதத்தையும் முன்வைக்கின்றன. சமூகக்கோபங்களைப் பத்திகளில் பரவலாகக் காணலாம். காலங்கடந்து அந்தப் பத்திகளையோ பத்திகளின் தொகுப்பையோ வாசிக்கும்போது அவை ஒரு பதிவாகவும் அமைவதைக் காணலாம். சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் இதே வேலையைச் செய்துவருகிறது. திசை வாரவெளியீட்டில் அ.யேசுராசா எழுதிய பத்திகளின் தொகுப்பே “தூவானம்.”

பத்தி எழுத்துகள் ஆழமான விமர்சனமல்ல என்ற முன்னுரையோடே தொடங்குகிறது நூல். அ.யேசுராசாவின் பத்திகளில் எழுத்தாளர்கள் கண்டறியப்பட்டிருக்கிறார்கள். ஓவியம் போன்ற கலைகள் இலங்கையில் கண்டுகொள்ளப்படவில்லை என்பதான கோபம் இருக்கிறது. சிங்களம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நல்ல திரைப்படங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. நல்ல கவிதைகள் பற்றிய பதிவு இருக்கிறது. மிகவும் தெளிவான சிக்கலற்ற மொழியால் எழுதப்பெற்ற பத்திகள் அடங்கிய சுவாரஸ்யமான தொகுப்பு “தூவானம்.”

உமாவரதராஜன் என்னும் இலங்கை எழுத்தாளரைப் பற்றிய குறிப்பொன்றில் சுஜாதா அவரைப் பற்றிச் சொன்னதையும் பதிவு செய்திருக்கிறார் அ.யேசுராசா. தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளை யேசுராசா தொடர்ந்து வாசித்திருக்கிறார். அங்கங்கே தேவையான இடங்களில் குறிப்புகளைக் தந்துவிட்டுச் செல்கிறார்.

ஓவியம் பற்றிய குறிப்பில் இலங்கையில் ஓவியம் இலங்கைத் தமிழர்களிடையே பெரும் பரவலைப் பெற்றிருக்கவில்லை என்று சொல்லும் யேசுராசா சிங்களர்கள் மத்தியில் ஓவியக்கலை செழித்து வளர்கிறது என்று குறிக்கிறார். தமிழ்நாட்டில் ஓவியத்தின் பரவல் என்னவென்பதை என்னால் யூகிக்கமுடியவில்லை. நவீன ஓவியங்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்த பயிற்சிகள் தமிழ்நாட்டில் எந்த அளவில் தரப்படுகிறது என்று யோசித்தாமானால் நாமிருக்கும் நிலைமையின் மோசம் புரியும்.

தூர்தர்ஷனில் கலைப்படங்கள் என்னும் பதிவு மிக சுவாரஸ்யமானது. தூர்தர்ஷனில் மாநில மொழித்திரைப்படங்கள் வரிசையில் எல்லா மொழிகளிலும் இருந்து கலைப்படங்களைத் தேர்ந்தெடுத்து முன்பு ஒளிபரப்பினார்கள். அது தூர்தர்ஷனின் பொற்காலம். ஆங்கில துணைத் தலைப்புகளுடன் (Sub title) ஒளிபரப்பாகிய அத்திரைப்படங்களைத் தவறாமல் பார்த்தவர்களின் இரசனை கொஞ்சம் மேம்பட்டிருக்கும் என்பதில் ஐயமே இல்லை. அப்போது ஒளிபரப்பான “அக்கரே”, “காற்றத்தே கிளிக்கூடு”, “புருஷார்த்தம்”, “சிதம்பரம்” போன்ற மலையாளப்படங்களையும் கன்னடம், வங்காளம் உள்ளிட்ட பல மொழிகளில் உள்ள பல கலைப்படங்களையும் பார்த்து அது பற்றிய தனது கருத்துகளைப் பதிந்திருக்கிறார் யேசுராசா. உலகின் பல்வேறு மொழிகளிலிருந்தும் வெளிவரும் பல்வேறு கலைப்படங்களைப் பற்றிய பார்வை யேசுராசாவிற்குத் திரைப்படங்கள் பற்றிய கூர்மையான, ஆழமான புரிதலை ஏற்படுத்தியிருப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. சிங்களப் படங்கள் பற்றிய பதிவிலும் இதே நேர்த்தியைக் காண முடிகிறது.

கவிதைகள் பற்றிய பதிவில், “இலங்கைப் பத்திரிகையின் வாரவெளியீடுகளிலும் சஞ்சிகைகளிலும் தரமற்ற படைப்புகளே கவிதைகள் என்கிற பெயரில் – இடம் நிரப்பிகளாகவும் – வெளியிடப்படுகின்றன” என்கிறார். அதற்கு அவர் யூகிக்கும் காரணம், “இக்கவிஞர்களில் பலரும் பெரும்பாலும் வாசிப்புப் பழக்கம் அற்றவராகவே இருப்பார்கள். அவர்களின் கண்களில் கிடைக்கக்கூடிய கவிதைகளில் பெரும்பாலானவை இத்தன்மையனவாக இருப்பதும் அவற்றையே முன்னுதாரனமாகக் கொண்டு இவர்கள் எழுத முனைவதும் ஒரு முக்கியக்காரணியாகலாம் என்று நினைக்கிறேன்” என்கிறார். தமிழ்நாட்டிற்கும் அவர் குறித்திருக்கும் நிலையிலிருந்து அதிக மாறுபாடில்லை. “விரிவும் ஆழமும் தேடி”யிலும் சுந்தரராமசாமி கிட்டத்தட்ட இதே கருத்தையே

முன்வைக்கிறார். வவுனியா திலீபன் என்னும் கவிஞரைப் பற்றிய பதிவில் “தென்னகக் கவிஞர்களான நா.காமராசன், மு.மேத்தா, வைரமுத்து போன்றோரின் பாதிப்பிலிருந்து விடுபட முடியாதவாறு தவிப்பதும்” தெரிகிறது என்பதை ஒப்புகிறார். (திலீபனின் கவிதைத் தொகுப்பில் கவித்துவமான வரிகள் என்று சொல்லி யேசுராசா சொல்லியிருக்கும் வரிகளில் எந்தவிதமான கவித்துவமும்

தென்படவில்லை. அவை வெறும் வசன கவிதைகளாகத்தான் இருக்கின்றன. அதையும் கோடு காட்டியிருக்கிறார் யேசுராசா.)

கவிதைகள் பற்றிய கருத்துகள், கலைப்படங்கள் பற்றிய பதிவுகள், அப்போதைய நிகழ்வுகளும் அதை ஒட்டிய நினைவுகளும் என “தூவானம்” படிக்க சுவாரஸ்யம் மிக்கதாகத்தான் இருக்கிறது. தெளிவான நடை ஒரு பலம். சில விஷயங்களின் பின்புலம் (தமிழ்நாட்டு வாசகர்களுக்குப்) பிடிபடாமல் போகும் அபாயம் இருக்கிறது. “க.நா.சு. சில குறிப்புகள்” என்ற எம்.ஏ.நு·ப்மானின் கட்டுரையைப் பற்றிக் குறிப்பிடும்போது கைலாசபதியின் மீதான நு·ப்மானின் குறிப்பினை

எடுத்தாள்கிறார். யேசுராசா, கைலாசபதியின் உறவு எத்தகையது என்பது புரியாததால் குழப்பமே மிஞ்சுகிறது. இதேபோல் “வாசகரெல்லாம் வாசகரல்ல” என்ற பதிவில் ஒரு எழுத்தாளர் பேசியதைப் பற்றிய அங்கதம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்த எழுத்தாளர் அவர், என்ன பிரச்சனை என்பது போன்ற விவரங்கள் இல்லை. இவையெல்லாம் பொதுவாக, “பத்தி”களின் தோல்விகள் போல. குறும்பா பற்றிய பதிவில் இப்படிச் சொல்கிறார். “இலக்கிய உலகில் நிலவி வரும் குழு மனோபாவத்தினால் குறிப்பிட்ட காலம் வரை இவர் (ஈழத்து மஹாகவி) உரிய இடத்தைப் பெறவில்லை. எம்.ஏ.நு·ப்மான், சண்முகம் சிவலிங்கம் ஆகியோர் அக்கறை எடுத்துச் செயற்பட்டதன் விளைவாக அவரது நூல்கள் பல வெளிவந்ததோடு அவரது கவிதா ஆளுமையின் முக்கியத்துவமும் தற்போது நிலைநாட்டப்பட்டுள்ளது” என்கிறார். என்ன விதமான குழு மனப்பான்மை நிலவியது என்பது பற்றிய புரிதல் எனக்கில்லை. இலக்கிய உலகில் குழுமனப்பான்மையும் போட்டியும் எல்லாவிடத்தும் இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.

“வாசகரெல்லாம் வாசகரல்ல” பத்தியில் “குமுதம், ராணி, கல்கி, ஆனந்தவிகடன் இரசிகர்கள் – சாண்டில்யன்களை, புஷ்பா தங்கதுரைகளை, சுஜாத்தாக்களை, இராஜேந்திரகுமார்களை, குரும்பூர்க் குப்புசாமிகளைத்தான் இரசிப்பார்கள்” என்று போகிற போக்கில் சொல்லிப்போகிறார். சுஜாதாவின் இலக்கியப் பங்கு விவாததிற்குரியது என்றாலும் குரும்பூர்க்குப்புசாமிகளுடன் சேர்க்கும் நிலையில் இல்லை என்பதே உண்மை. மேலும் ஆசிரியரே உமா வரதராஜன் பற்றிய பதிவில் சுஜாதாவை

மேற்கோள் காட்டுகிறார். அப்போது “குரும்பூர் குப்புசாமி”ப் பட்டியலில் இல்லாத சுஜாதா சில பக்கங்கள் (வாரங்கள்) கழித்து எப்படி அப்பட்டியலில் சேர்ந்தார் என்பதை யேசுராசாதான் சொல்லவேண்டும்.

ஒட்டுமொத்தத்தில், இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கலாமோ என்று யோசிக்க வைக்கும், சுருங்கச் சொல்லப்பட்ட பதிவுகள். கூரான விமர்சனங்கள். நவீன கவிதைகளைப் பற்றிய சிறந்த புரிதல். கலைப்படங்கள் மற்றும் கலைகளைப் பற்றிய அறிமுகங்கள். இவையே “தூவானம்” எனலாம்.

மிகப்பிடித்த சில வரிகளும் மேற்கோள்களும்.

“எழுதுகிறவரெல்லாம் எழுத்தாளரல்ல என்பது போல், வாசிக்கிறவனெல்லாம் வாசகன் அல்ல”-ஜெயகாந்தன் சொன்னதாக மேற்கோள்.

“பொதுவாக நான் கதைகள் எழுதும்போது, வெறுமனே கற்பனை நயத்தைக் கருதி எழுதுவது வழக்கமேயன்றி ஏதேனும் ஒரு தர்மத்தைப் போதிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுதும் வழக்கமில்லை. தர்மபோதனைக்கு வியாஸங்கள் எழுதுவேன். கதையென்றெடுத்தால் கற்பனைப் புனைவையே அதில் நான் முக்கியமாகக் கருதுவேன்.” — பாரதி சொன்னதாக மேற்கோள்.

பயணம்

=======

காலிலே தைத்த

…..முள்ளினைக் கழற்ற

ஒரு

கணம் திரும்பவும்

…..காதலியோடு என்

ஒட்டகம் எங்கோ

…..ஓடி மறைந்தது!

ஒரு கணம்

…..திரும்பிய கவனம்;

ஒரு நூற்றாண்டாய்

…..நீண்டது பயணமே.

மேலே சொன்ன கவிதை, சுதந்திர போராட்டத் தலைவர்களில் ஒருவரான மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவரது சுயசரிதையில் எழுதியதின் மொழிபெயர்ப்பு. “ஒரு கணம் திரும்பிய கவனம்” என்கிற வரி பல்வேறு அர்த்த விரிவுகளை தன்னுள் ஏற்படுத்துவதாகச் சொல்கிறார் யேசுராசா. எனக்கும்.

பின்குறிப்புகள்:

[1] இந்தப் புத்தகத்தை எனக்கு அனுப்பித் தந்த லண்டன் பத்மநாப ஐயருக்கு நன்றி பல.

[2] புத்தகத்தில் “ஏகாப்பட்ட” அச்சுப்பிழைகள்.

Share

இரத்த உறவு – நாவல் – யூமா. வாசுகி

===================================================

தமிழினி பதிப்பகம், 342, டிடிகே சாலை, ராயப்பேட்டை, சென்னை-600014.

====================================================

இதுதான் நான் முதன்முதலாக வாசிக்கும் யூமா. வாசுகியின் நாவல். அதனால் முன்னேற்பாடுகள் எதுவுமில்லாமல் வாசிக்க முடிந்தது.

இரத்த உறவு – குடிகார, கொடுமைக்காரத் தந்தை மற்றும் இரக்கமற்றவர்கள் நிறைந்த குடும்பத்தில் தாயும் மகளும் இரு மகன்களும் படும் பாட்டை, இரத்த உறவுகளால் ஏற்படும் மனவலியை, சித்திரவதையை அதீத உணர்ச்சிகளோடு மிகச் சொல்லி முன்வைக்கிறது.

எடுத்த எடுப்பிலேயே மூத்த அண்ணனின் மரணம் சம்பவிக்க ஒருவித இறுக்கச் சூழலுக்குள் நம்மை அழைத்துக்கொண்டுவிடுகிறது நாவல். இந்த இறுக்கச் சூழலும் சோகமும் அதீத உணர்ச்சியும் கடைசி வரை நாவலில் கூடவே வருகிறது. ஒரு சில இடங்களில் சலிப்பு ஏற்படும் அளவிற்குக் கூடவே விடாமல் துரத்துகிறது.

குடிகாரத் தந்தை. தன் செலவுக்கெல்லாம் தம்பி மனைவியிடம் காசு வாங்குவதால் தம்பி மனைவிக்கும், நல்ல நிலைமையில் இருக்கும் தம்பிக்கும் அடங்கியே வாழ்கிற தந்தை. தன் மனைவியை விட தன்னைப் பெற்ற அம்மாவையே அதிகம் விரும்பும் தந்தை. மனைவி, மகன் மற்றும் மகளின் நன்மையை, அவர்களின் வாழ்க்கையை, அவர்களில் கனவை எல்லாவற்றையும் புறக்கணிக்கும் அளவிற்குத் தன் நிலையில் இல்லாத தந்தை. கையில் கிடைத்ததை எடுத்துக் கண்மண் தெரியாமல் அடிக்கும் அவரது செய்கைகள் மகன், மகள் மற்றும் மனைவி மீது மட்டுமே செல்லுபடியாகின்றன. அத்தனைக்குப் பின்னரும் அம்மாவும் மகனும் மகளும் அப்பாவிடம் அன்பு மழை பொழிகிறார்கள். நாவல் நெடுகிலும் இதுதான் முக்கியக்கதை . கிளைக் கதையாக சுற்றுப்புறத்தில் வாழும் மனிதர்களின் கதைகளும் சிறு வயதுத் தம்பிகளின் வாழ்க்கையும் அவர்களின் உலகமும் சொல்லப்படுகின்றன.

சிறுவர்களின் உலகம் இந்த அளவுக்கு விஸ்தாரமாகவும் அழகாகவும் அதிக விவரணைகளோடும் சொல்லப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அவர்களின் பொழுதுபோக்குகளாகச் சொல்லப்படாத விளையாட்டுகளே இல்லை. பொன்வண்டு வளர்ப்பதிலிருந்து காந்தித் தாத்தாப் பஞ்சைப் பார்த்து பாஸா ·பெயிலா எனக் கேட்பது வரை எல்லா விளையாட்டுகளுமே சொல்லப்பட்டிருக்கிறது. சில இடங்களில் நினைவலைகள் படிக்கிறோமோ என்று சந்தேகத்தை எழுப்பும் அளவிற்கு, தேவையில்லாமல், நுழைத்தே ஆகவேண்டும் என்கிற எண்ணத்துடன் சில அத்தியாயங்கள் எழுதப்பட்டிருக்கிறதோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

பாட்டியின் உலகமும் பாட்டியின் வசனங்களும் படு யதார்த்தம். ஒரு கொடுமைக்காரப் பாட்டி கூடவே இருக்கிற மாதிரியான தோற்றத்தை உருவாக்கிவிடுகிறார் ஆசிரியர்.

அக்கா. நாவலின் மிக முக்கியமான கதாபாத்திரமும் மிக அதிகமாகத் தியாகம் செய்து, தியாகம் செய்வதற்காக மட்டுமே படைக்கப்பட்ட பாத்திரம். தம்பிகளின் மீது அன்பைப் பொழிந்து, தம்பிகளுக்குத் தாயாக, தாயை விட மேலாகப் பணிவிடை செய்யும் பாத்திரம். பொறுமையின் உச்சம். அந்தப் பெண்ணின் வயது பதிமூன்று. அக்கா பாத்திரத்தின் பொறுமையும் தியாக உணர்வும் தமிழ்த்திரைப்படங்களின் அதீத உணர்ச்சியையும் சகிக்க முடியாத பொறுமையின்மையையும் நமக்கு ஏற்படுத்துகிறது. ஆசிரியர் அனுபவித்த கதையாகவோ (கதை சமர்ப்பணம் வாசுகி அக்காவிற்கு என்று வருகிறது. கதையில் அக்கா பாத்திரத்தின் பெயரும் வாசுகியே) அல்லது நேரில் நின்ற நெருங்கித் தொடர்ந்த உறவாகவோ இருக்கலாம். நாவல் என்ற அளவில் அக்கா கதாபாத்திரத்தைப் பார்க்கும்போது மிகுபடச்சொல்லி அதீத உணர்வைத் தூண்டும் ஒரு சாதாரணத் தமிழ்ப்படத்தின் ஒரு கதாபாத்திரமாகவே உணரமுடிகிறது. அத்தனை அடித்துத் துரத்தும் அப்பாவிடம் பொறுமையாய் மிகச் சகிப்புத் தன்மையுடன் வீட்டுக்கு வாங்கப்பா என்னும்போது கதையின் நம்பகத்தன்மை குறைகிறதோ என்று எண்ணுமளவிற்கு அக்கதாபாத்திரத்தின் தன்மை மிகையாக ஊட்டப்படுகிறது. தியாக வடிவத்தின் மறு உருவே அக்கா என்னும்படியாக இருக்கும் ஒரு நாவலை 2004ல் படிக்கும்போது ஒரு செயற்கைத்தன்மையும் கதையை வாசிக்கிறோம் என்கிற கரையாத் தன்மையும் மேலோங்குகிறது.

பெரியப்பாவின் தற்கொலையும் பெரியப்பாவை பெரியம்மா அடிக்கும் காட்சிகளும் என கதாபாத்திரங்களுக்கு இரத்தம் வராத அத்தியாயங்கள் மிகக்குறைவு.

கதை முழுவதும் அப்பா, அம்மா, அக்கா, தம்பி மற்றும் பாட்டி போன்ற பொதுச்சொல்லே சொல்லப்படுவது நல்ல உத்தி.

கதையின் இடையிடையே வருகிற மாந்தீரிக யதார்த்தப் பாணியிலான – அப்படித்தான் நினைக்கிறேன்! – பக்கங்கள் (எனக்குப்) புரியா கதியில் பயணிக்கின்றன.

கதை நெடுகிலும் வரும் எழுவாய்-பயனிலை மாற்றி அமைக்கப்பட்ட வாக்கியங்களும் தன் பங்குக்குச் செயற்கைத் தன்மையை ஏற்படுத்துகின்றன. இந்த ஒன்றை விடுத்துப் பார்த்தோமானால் யூமா. வாசுகியின் நடையே நாவலின் பெரும்பலம். ஆனாலும் ஒரு நாவலை முழுவதுமாகத் தூக்கிப் பிடிக்க நடை மட்டுமே போதுமானதா என்பது யோசிக்கவேண்டிய விஷயம்.

கதையில் வரும் துணைக் கதைமாந்தர்களின் இயல்பான வசனங்களும் வாழ்க்கையும் கதையின் இன்னொரு பலம். கதையின் முடிவில் அம்மாவும் அக்காவும் தம்பிகளும் அப்பாவின் மரணத்துக்குப் பின்னர் நல்ல வாழ்வை நோக்கிச் செல்லும்போது “அப்பாடா” என்று மனதுள் தோன்றுவது, சில சமயங்களில் அலுப்பைத் தந்தாலும் விஸ்தாரமாகச் சொன்ன நடையின் வெற்றியே.

நாவலின் முடிவில், சோகமயமான, உணர்ச்சிப் பிழம்பான ஒரு தமிழ்த்திரைப்படத்தைப் பார்த்த உணர்ச்சியே மேலோங்குகிறது.

Share

ஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன்

–ஹரன்பிரசன்னா

===============================================================

ஏழாம் உலகம், நாவல், ஜெயமோகன், யுனைடட் ரைட்டர்ஸ் பதிப்பகம், 130/2, அவ்வை

சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை – 86.

===============================================================

ஜெயமோகனின் நாவல்கள் எந்தத் தளத்தில் இயங்கினாலும் அந்தத் தளத்தில் ஆழ ஆழச்சென்று அது இயங்கும் சூழலின் மனிதர்களை இரத்தமும் சதையுமாகக் கண்முன் நிறுத்தும். அவர்களின் வட்டார மொழி நம்மை அவர்களின் உலகத்திற்குள் இட்டுச் செல்லும். தமிழ்நாடு-கேரள எல்லையில் பேசப்படும் தமிழுமல்லாத, மலையாளமுமல்லாத, இரண்டும் கலந்த மொழிதான் ஏழாம் உலகத்திலும் கையாளப்பட்டிருக்கிறது. விஷ்ணுபுரம் மற்றும் பின் தொடரும் நிழலின் குரலை ஒப்பிடும்போது ஏழாம் உலகம் எளிதான நடையிலிருக்கிறது.

ஜெயமோகனின் ஆறாவது நாவல் இது. பழநியில் குறைப்பிறவிகளைப் பிச்சை எடுக்க வைப்பதை ஒரு தொழிலாக நடத்தும் பண்டாரத்தையும் குறைப்பிறவிகளையும் மையமாக வைத்துக் கதை சுழல்கிறது. நம்மையும் சுழற்றுகிறது. கதையின் களமும் போக்கும் நம்மை பதறச்செய்கிறது, அருவருப்புக் கொள்ளச் செய்கிறது, மனதுள் புகுந்து பதிலற்ற கேள்விகளை எழுப்புகிறது. 1986களில் நிகழ்வதாக வரும் கதையின் நிகழ்ச்சிகள் நாம் நாகரீகம் அடைந்தவர்கள்தானா என்ற கேள்வியை தவறாமல் எழுப்புகிறது. நம்மைச் சுற்றிய, நாம் கவனிக்கத் தவறிய மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றிய பிரக்ஞையை உருவாக்குகிறது. எப்படி நாம் கவனிக்காமல் போனோம் என்கிற பதைபதைப்பையும்

உருவாக்குகிறது.

குறைப்பிறவிப் பெண்ணான முத்தம்மையை இன்னொரு குறைப்பிறவியோடு அணையச் செய்து, பிறக்கும் குறைப்பிறவியை பழநியில் வைத்து பிச்சை எடுக்க வைக்கிறார்கள். இதையே தொழிலாக நடத்தும் இன்னொரு பார்ட்டிக்குக் கைமாற்றுகிறார்கள். பெரிய அளவில் நடக்கிறது வியாபாரம். அதிகம் குறையுள்ள, பார்க்கவே பயங்கரமாக இருக்கும் பிறவி அதிக விலைக்குப் போவார். பிறந்த குறைப்பிறவியை தாய்ப்பாசத்தோடு முத்தம்மை கொஞ்சும் இடங்களும் தன் குழந்தையை ஒரு தடவையாவது கொஞ்சிவிடவேண்டும் என்று விரும்பும் முத்தம்மையை அணைந்த குருடனும் நாவலின் பல இயல்பான பாத்திரங்களின் ஒரு பகுதி.

இப்படியான மிக அவருவருப்பான சூழலுள் நகரும் கதையினூடே ஒன்றிற்குள் ஒன்றாகப் பிணைந்து கிடைக்கிறது எழுத்தாளரின் நகைச்சுவை உணர்வு. அதற்குப் பெரும்பலமாக அமைகிறது வட்டார வழக்கு. முத்தம்மை தனக்குப் பிறக்கும் குறைப்பிறவி மகனுக்கு “ரசனிகாந்து” என்று பெயர் வைத்துக் கொஞ்சுவதும், நிரபராதி என்கிற வார்த்தை குய்யனுக்குப் பிடித்துப்போக நேரம்கிடைக்கும் போதெல்லாம் நிரபராதி எனப் பயன்படுத்துவதும் அதைக்கேட்டு எரிச்சலில் ராமப்பன் சீறுவதும்- என விரிகிறது கதையில் நகைச்சுவை. இவையெல்லாமே வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு, யாரோ ஒரு

எஜமானனுக்காக கையேந்திப் பிச்சையெடுக்கும் வாழ்வு வாழ்பவர்களின் வறுமை சூழலில் இயல்பாக வருகிறது. போலீஸ் கேஸில் இருந்து தப்பிக்க பெருமாள் எருக்கிற்குத் தாலி கட்ட, எருக்கு பெருமாளைக் காணும்போதெல்லாம் “இஞ்சேருங்க” என்றழைக்கும் இடமும் பெருமாள் கொதிக்கும் இடமும் அசத்தல்.

பண்டாரம் முதல் பெண்ணுக்காக வரன் பேசிக்கொண்டிருக்க, அக்காவின் நகைகளையெல்லாம் திருடிக்கொண்டு ஓடிப்போகிறாள் இரண்டாவது பெண். பண்டாரம் நிலை குலைந்து போனாலும் ஒருவாரியாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு முதல் பெண்ணுக்குக் கல்யாணம் செய்துவைக்கிறார். ” நான் இண்ணி தேதிவரை ஒருத்தருக்கு ஒரு கெடுதல் நினைச்சிட்டில்ல.. உன்னாணை ஏக்கி…. நான் ஒரு ஆளிட்ட கெடுத்து ஒரு சொல்லு சொன்னதா நீ கேட்டேண்ணாக்க என்னைய, இப்படி – இப்படி கூப்பிடு” என்று பண்டாரம் தன் மனைவி ஏக்கியம்மாவிடம் சொல்லும் வசனம் கதையின் வரும் இயல்பான வசனங்களில் ஒரு மைல்கல். தான் செய்வது குறைப்பிறவியை வைத்துச் செய்யும் தொழில் என்றாலும் மற்ற எல்லா மனிதர்களைப் போலவே பண்டாரமும் பேசுகிறார். நிஜமாகவே இப்படித்தான் இருக்கிறது உலகம். “நாம யாருக்கும் ஒரு கெடுதல் செய்யலை” என்று சொல்லாதவர்களே இல்லை.

விரை பெருத்துத் தொங்கும் அகமது ஆங்கிலத்தில் பேசுவதும் சட்டம் பேசுவதும் கோயிலுக்குப் பூசை செய்யும் போத்தி கர்ப்பகிரகத்துக்குள்ளேயே வெற்றிலைத் துப்புவதும் கோவிலில் பிச்சையெடுக்கும் குறைப்பிறவியான முத்தம்மையை ஒரு தடவை முழுதாகப் பார்க்க ஆசைப்படுவதும் நிகழ்முரண்கள்.

பண்டாரம் முருக பக்தராக இருக்கிறார் என்றாலும் நாவல் நெடுகிலும் குறைப்பிறவிகள் மத்தியில் தெய்வம் கேலிப்பொருளாக்கப்பட்டிருக்கிறது. “ஆண்டவன் பாத்துக்கிடுவான்” என்று ஒரு குறைப்பிறவி சொல்லும்போது இன்னொருவர் “ஆண்டவன் மோண்டான்” என்பதும் ஒரு பாலியல் தொழிலாளி படிகளில் கீழேயிறங்கிவரும்போது, மேலே யாருடா இருக்கா என்ற கேள்விக்கு “மேல முருகன் இருக்கான்” என்ற பதிலுமாக குறைப்பிறவிகள் தெய்வத்தின் மீது பற்றில்லாதவர்களாகவும் நிறைய நிந்தனை செய்பவர்களாகவுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவை கதாபாத்திரங்கள் சொல்பவையாகவும் சரியாகவும் கையாளப்பட்டிருக்கிறது.

குறைப்பிறவிகள் மத்தியில் பேசப்படும் மொழி ஆபாசம் கலந்த மொழியாக இருந்தாலும் எங்குமே நெருடவில்லை என்பது வட்டார வழக்கின் பலம். சர்வ சாதாரணமாகப் பேசிக்கொள்ளும்போது கூட உறவுமுறை குறித்த கேள்விகளும் ஆபாச வார்த்தைகளும் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. அவையெல்லாமே அவர்களின் அன்னியோன்யத்தின் அடையாளமாகவும் பொழுதுபோக்கின் ஒரு பகுதியாகவும் நாவலைக் கடக்கிறது.

தன்னிச்சையாகப் பாட்டுப்பாடும் குறைப்பிறவிகளுள் ஒருவரான மாங்காண்டி சாமியும் , கிழவியும், தாணுப்பிள்ளையின் மனைவியும் சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள்.

காலில்லாத பெண்ணை இரவுக்கு அழைத்துச்செல்லும் போலீஸ், அந்தப் பெண்ணை திரும்ப அழைக்கச் செல்லும் பண்டாரத்திடம் பணம் பிடுங்குவதும் அவரை அடிப்பதும் இந்தத் தொழிலிலும் பண்டாரம் படும் அல்லலைக் காண்பிக்கிறது. அஹமதுவின் கமெண்ட்டுகள் கேரள அரசியலைப் பற்றிய அவனது குமுறலைச் சொல்கிறது. ரஜினிகாந்த் போஸ்டரும் நான்கு இலக்க தொலைபேசி எண்ணும் எம்.ஜி.யார் பற்றிய சம்பாஷனைகளும் 1986ஐ நினைவுக்குக் கொண்டுவருகின்றன.

ஒருமுறையாவது குறையற்ற ஒருவனுடன் அணைந்து குறையற்ற குழந்தை பெற ஆசைப்படும் முத்தம்மை, மலக்குவியலில் “ஒடயாரே இவன் வேண்டாம். ஒத்த வெரலாக்கும் ஒடயாரே” என்று கூவித் தோற்று “என்றெ பொன்னு தெய்வமே” என்னும்போது முற்றிலும் நம் பார்வையில் வராத ஒரு உலகத்தின் ஒட்டுமொத்த தோற்றமும் வளைய வருகிறது. ஏழாம் உலகம் என்பதற்கான விளக்கமும் ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாகச் சொல்லப்படுகிறது.

கதை அதற்கான நடையை அதுவே தேர்வு செய்துகொள்வது இயல்புதான் என்றாலும் மற்ற ஜெயமோகனின் நாவல்களில் காணப்படும் சவாலான நடையில்லாதது அவரது கதையைத் தொடர்ந்து வாசிக்கும் நுட்பமான வாசகர்களுக்குக் கதையின் பலவீனமாகத் தோன்றும். “பெரும்பாலும் நேரடி அனுபவ அடிப்படை மட்டுமே இதில் உள்ளது. ஆகவே நாவலின் களம் மிகச் சுருங்கிவிட்டது. வேறு வழியில்லை” என்கிறார் ஜெ.மோ. அதனால்தானோ என்னவோ நாவல் அதிகம் சம்பாஷணைகளைக் கொண்டதாகவும் வர்ணனைகள், தற்சிந்தனைகள் அற்றதாகவுமாகி ஒரு எளிய நாவல் என்கிற தோற்றத்தைத் தந்துவிடுகிறது.

காடு நாவல் மிகச்சிறப்பான நடையையும் சரியாகப் பயன்படுத்தப்பட்ட வட்டார வழக்கையும் கொண்டிருந்தாலும் அதிலிருந்த ஒரு வெறுமை ஏழாம் உலகத்தில் களையப்பட்டிருக்கிறது.

கதையில் வரும் மலையாள வார்த்தைகளுக்கும் பிரத்யேக வட்டார வழக்கிற்கும் பிற்சேர்க்கையாக பொருள் கொடுத்திருக்கிறார்கள். அதைப் பற்றிய குறிப்பு ஒன்றை நாவல் ஆரம்பிப்பதற்கு முன்பு கொடுத்திருந்தால் வசதியாக இருந்திருக்கும். நாவல் படிப்பவர்கள் புரியாமலே படித்துவிட்டுக் கடைசிப் பக்கத்தைப் பார்க்கும்போது வார்த்தைகளுக்கு விளக்கம் இருக்கும். இதனால் என்ன பயன்? அடுத்த பதிப்பிலாவது முதல் பக்கத்தில் ஒரு குறிப்பைத் தருவது நல்லது. இதுவரை மற்ற நாவல்களில் இல்லாத இந்தப் பிற்சேர்க்கை பாராட்டிற்குரியது.

Share

புலிநகக்கொன்றையினூடாக என் தாத்தாவின் நினைவுகள்

 
என்னுள்ளே என் தாத்தாவின் நினைவுகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன என்றேதான் நம்புகிறேன். என் தாத்தாவின் ஆளுமைகளை நினைக்க ஆரம்பித்தாலே மிக அதிக உணர்ச்சிவசப்படுதலுக்குள்ளாகி புல்லரிப்பு ஏற்படுவது எனக்கு எப்போதும் ஏற்படுமொன்று. இன்று எனக்கிருக்கும் அறிவுக்கு அடித்தளம் இட்டவர் என் தாத்தா. அதனால் இன்று நானிருக்கும் எந்தவொரு நிலைக்கும் அவர்தாம் மிகப்பெரிய தூண்டுதல். குடும்ப சமாச்சாரங்களில் என் தாத்தாவின் சில வீழ்ச்சிகளைப் பார்த்திருந்தாலும் காலநகர்வில் மனதுள் நிற்பதென்னவோ என் தாத்தாவைப் பற்றிய பிரமிப்புத்தான்.

நினைவலைகளை யார் யார் எழுதவேண்டுமென்பதில் என்னளவில் சில வரையறைகள் உள்ளன. அதனால் நினைவலைகள் என்று எழுதுவதை இயன்றவரையில் தவிர்ப்பது என் இயல்பு. இன்று என்னால் தவிர்க்க இயலாமல் போனதாகத்தான் உணர்கிறேன். அதற்குப் பி.ஏ. கிருஷ்ணன் காரணம். புலிநகக்கொன்றை காரணம். விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், பாலிதீன் பைகள், ஜெ.ஜெ.சில குறிப்புகள் வரிசையில் என்றென்றும் மறக்கவியலாத ஒரு நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரிகிறது. நாவலைப்பற்றிப் பிறிதொரு சமயம்.

என் தாத்தா, ஆர்க்கால் N. வெங்கட்ராமராவ், என்னுடன் விட்டுச்சென்ற அவரின் சில பால்யகால நினைவுகள் இன்று என்னைப் புரட்டிப் போட்டுவிட்டன. வேறெதையும் யோசிக்க விடாது என்னைப் பற்றிக்கொண்டுவிட்டன. இரண்டரை வருடங்களுக்கு முன்னால் இறந்துபோன அவரை புலிநகக்கொன்றையின் சில பக்கங்களில் நான் பார்க்க நேர்ந்தது, கொஞ்சம் விசும்பலுடன்.

என் தாத்தா நிறைய முறை எனக்குச் சொன்ன நினைவுகளுள் ஒன்று வ.வே.சு. ஐயருடனான அவரது பால்யகால பரிமாற்றங்களை.

என் தாத்தாவின் பூர்வீகம் சேர்மாதேவி. (சேரன்மகாதேவி). திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஒரு கிராமம். அங்கு வ.வே.சு.ஐயர் ஒரு பள்ளி நடத்தி வந்தார். அந்தப் பள்ளியில் வ.வே.சு. ஐயரையும் அவரது மனைவியையும் ஏறக்குறைய தினமும் சந்திக்கும் மாணவர்களுள் என் தாத்தாவும் ஒருவர். வ.வே.சு. ஐயரின் ஆங்கிலப்புலமையை என் தாத்தா மெச்சியது நினைவுக்கு வருகிறது. அவரது ஆங்கில உச்சரிப்பு ஆங்கிலேயர்களின் உச்சரிப்புப் போன்றே இருக்குமென்றும் அதைப் பயன்படுத்தி ஆங்கிலேயன் போல மாறுவேடம் பூண்டு ஆங்கிலம் பேசி போலீஸிடமிருந்து தப்பித்ததாகச் சொல்வார் என் தாத்தா.

எப்போதெல்லாம் வ.வே.சு. ஐயரின் மனைவியை மாணவர்கள் சந்திக்கிறார்களோ அப்போதெல்லாம் மாணவர்களுக்கு, தங்கள் தோட்டத்திலிருந்த மாமரங்களிலிருந்து மாம்பழம் பறித்துத் தருவாராம் வ.வே.சு. ஐயரின் துணைவியார்.

வர்ணாசிரம முறையை வ.வே.சு. பின்பற்றவேண்டிய நிர்பந்தம் வந்ததையும் வேறு வழியில்லாமல் அதை அவர் ஒப்புக்கொண்டார் என்றதையும் தானே அதை நேரில் பார்த்ததுண்டு என்றும் என் தாத்தா சொல்லியிருக்கிறார்.

பின்பொரு சமயம் வ.வே.சு. ஐயர் குற்றாலம் சென்றபோது அவரது மகன் அருவியில் தவறி விழுந்ததாகவும் அவரைக் காப்பாற்ற வ.வே.சு ஐயரும் குதித்ததாகவும் அதில் இருவருமே பலியானதாகவும் என் தாத்தா சொல்லி, “வ.வே.சு ஐயர் நீச்சல்ல கில்லாடி.. அவர் ஒருதடவை கப்பல்லேர்ந்து மாறுவேஷத்துல தப்பிச்சு கடல்ல ரொம்பத் தொலை நீந்தியே வந்தாராம். அப்படி இருந்தும் அவரால தப்பிக்க முடியல. மகனைக் காப்பாத்த போய் அவரும் செத்துட்டார்” என்று சொல்வார்.

க்ளப்பிலும் மரத்தடியிலும் வ.வே.சு. ஐயர் பற்றிய பேச்சு வந்தபோது இதைப் பற்றி எழுத நினைத்திருக்கிறேன். நினைவிலிருந்ததை எழுதுவதில் தயக்கம் இருந்தது. என் தாத்தா சொன்னதை நான் மறந்து, எதையாவது மாற்றி எழுதிவிட்டால் அதனால் வரும் அவப்பெயர் அவருக்குப் போகவேண்டாம் என்று நினைத்தும் எழுதாமலிருந்தேன்.

பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை நாவலில் என் தாத்தா எனக்குச் சொன்ன வ.வே.சு. ஐயர் பற்றிய குறிப்புகள் எல்லாமே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. என் தாத்தா சொன்னதில் அல்லது நான் கிரகித்துக்கொண்டதில் சிற்சில முரண்பாடுகள். (என் தாத்தா சரியாகச் சொல்லி நான் மறந்திருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம்.) அருவியில் தவறி விழுந்தது வ.வே.சு.ஐயரின் மகனல்ல. மகள். சுபத்ரா. வ.வே.சு. ஐயரும் அவரது மகளும் இறந்தது குற்றால அருவியிலல்ல. பாபநாசம் அருவியில். இதைத் தவிர மற்ற எல்லாமே – வ.வே.சு. ஐயரின் பள்ளியில் தரப்பட்ட பயிற்சிகள், பள்ளியின் சூழல், பள்ளியைச் சுற்றியிருந்த தோப்புகள், வர்ணாசிரம பிரச்சனைகள் – கதையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பக்கங்களைப் படித்தபோது இந்த விஷயங்களை எனக்குச் சொன்ன என் தாத்தாவின் நினைவுதான் இருந்தது.

வ.வே.சு. ஐயரின் ஆங்கில உச்சரிப்புப் பற்றியும் மாறுவேடம் பூண்டு நீந்தித் தப்பித்தது பற்றியும் நாவலிலில்லை. இதுவும் உண்மையாக இருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம் என நம்புகிறேன்.

Share

கிருஷ்ணன் வைத்த வீடு – வண்ணதாசன்

12 சிறுகதைகளால் ஆன ஒரு தொகுப்பு. சிறுகதைகள் ஆன தொகுப்பு என்பதை விட அழகான முத்துக்களால் ஆன ஒரு மாலை என்று சொல்லலாம். அத்தனையும் அழகான கதைகள். வண்ணதாசன் (கல்யாண்ஜி) ஒரு கவிஞரும் கூட. அவரது கவிதைகள் பற்றிய அறிமுகம் தேவையில்லை. எனக்கு மிகப் பிடித்த கவிஞர்களுள் முதன்மையானவர்

வண்ணதாசன். முழுக்க முழுக்க யதார்த்த தளத்திலான கவிதைகள். தீவிரபோக்குக் கவிதைகளெல்லாம் இல்லாமல் நேரடியாய்ப் பார்க்கும் விஷயங்களை, உறுத்தாத, இயல்பான உவமைகள் கொண்டு, மிக யதார்த்தமான கவிதைகள் அவரது பலம்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் முழுவதிலும் இதே மாதிரியான கவிதையின் படிங்களைக் காணலாம். ஒன்றிரண்டு கதைகள் எந்தவொரு கதையையும் சொல்லாமல், நிகழ்ச்சி விவரிப்புகளாகவும் கதைக்கள விவரிப்புகளாகவும் கண்முன் விரிகின்றன. ஒரு சம்பவத்தை கண்முன் பார்த்த மாதிரியான அனுபவத்தை விட்டுச்செல்கின்றன.

கதைகளின் பெரிய பலம் மற்றும் காரணம் மனிதர்களின் மன உணர்வுகளைப் படம் பிடிப்பதுதான். நேரில் பார்த்த சம்பவங்களையும் கற்பனைகளையும் கலந்து, கட்டுரையா கதையா என்ற சந்தேகம் வராமல், கதையாக்கும் வித்தையை மிக அழகாகச் செய்திருக்கிறார் வண்ணதாசன்.

கிட்டத்தட்ட அனைத்து கதைகளும் திருநெல்வேலியில்தாம் நிகழ்கின்றன. நெல்லைதான் வண்ணதாசனுக்குச் சொந்த ஊர். சொந்த ஊரை விட்டுவிட்டு வெளியில் சென்று கதை எழுத முயற்சிக்கவில்லை. எது இயல்பாக வருகிறதோ அதைச் செய்திருக்கிறார். அதனால்தான் கதைகள் முழுவதிலும் நெல்லை மண்ணின் வாசம் வீசுகிறது.

அவரே முன்னுரையில் சொல்கிறார்.

“சென்னையில் இருக்கும்போது எழுதியவை, அல்லது சென்னையில் இருந்துவிட்டு வந்த நிலையில் எழுதியவை இந்தக் கதைகள். ஏதோ ஓரிரண்டு கதைகளில், ஓரிரண்டு வரிகளில் ஓடுகிற மின்சார இரயில் மட்டும் நான் சென்னையிலும் இருந்த அடையாளத்தைச் சொல்லக் கூடும்.

இருந்த இடம் வாழ்ந்த இடம் ஆகாது.

எல்லா இடத்திலும் இருக்கவும் எல்லா இடத்திலும் வாழவும் விரும்புகிற அதே மனம், இன்னொரு விதத்தில் ஒரே இடத்தில் இருக்க விரும்புகிறது என்பதும், எல்லா இடத்திலும் வாழ முடியாது தவிக்கிறது என்பதும் நிஜம். பிடாரனின் பிராம்புக் கூடையிலிருந்து தற்செயலாகத் தப்பித்த பாம்பு, கூடைக்குள் திரும்புகிற வழி தொலைந்து, ஒளிந்து

கொள்கிற அவசரத்தில், பழக்கமற்ற தரையோரங்களில், சரசரத்து ஓடி, முட்டி முட்டி முடை தேடுகிற நிஜம் அது. இந்த விதத் தவிப்பிற்கும் விருப்பத்திற்கும் இடையில்தான் உறவும் வாழ்வும் தொடர்ந்து என் மீது கவிகிறது. அல்லது நான் உறவின் மீதும் வாழ்வின் மீதும் கவிகிறேன். இந்தவிதமான வாழ்வும் உறவும் ஊடாடுகிற மனநிலையில் எழுதப்பட்டவையே இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள்”

பாம்பு உவமை ஒரு எடுத்துக்காட்டு. இது மாதிர் நிறைய உவமைகள் கதைகள் முழுவதிலும் விரவிக்கிடக்கின்றன. சித்திரத்தைக் கண்முன் கொண்டு வர விழையும் அந்த உவமைகளைத் தொகுத்து எழுதினால் அது சிறந்த கவிதைகளைப் படித்த உணர்வைத் தரும் என்பது என் எண்ணம்.

கதையில் சில அழகான கவிதைப் படிமங்களும் விரவிக்கிடக்கின்றன. கதைகளின் தலைப்பே கவிதைத்துவமாகத்தான் இருக்கிறது. உள்புறம் வழியும் துளிகள், கூண்டுக்கு வெளியே ஒரு புல்வெளி, ஒரு நிலைக்கண்ணாடி… சில இடவல மாற்றங்கள், விதை பரவுதல், மின்மினிப்பூச்சி வெளிச்சத்தில் ஒரு தாத்தாவின் முகம் – இவையெல்லாம் கவிதைத்துவமான தலைப்புகள்.

கதைகளிலும் இதே மாதிரியான, தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்ட கவிதை போன்ற வரிகள் விரவிக்கிடக்கின்றன.

“வாசல் தூண்கள் கார்த்திகை தினத்து இருட்டுக்கென்று வருடம் பூராவும் ஒரு அழகை ஒளித்து வைத்திருக்குமோ என்னமோ” (ஆறாவது விரல் கதையில்)

“ஓடுகிற தண்ணீருக்குள் நடு ஆற்று மணலில் கை புதைப்பது மாதிரி, நானும் என்னுடைய விரல்களை அரிசிக்குள் வெதுவெதுப்பாய் புதைத்துக்கொள்ள விரும்பினேன்” (ஆறாவதுவிரல் கதையில்)

“நூறு வருஷத்துக்கு முந்தின மண்டபம் சரிந்து கடலுக்குள் பாசியும் சிப்பியும் அப்பிக் கிடந்த கல்தூண்போல இருந்த அண்ணாச்சியின் முகம் அதைக் கேட்டதும் பரவசமாகச் சிரித்தது” (ஊரும் காலம் கதையில்)

“உயர்த்தின ஒவ்வொரு டம்ளர் உள்சுவரிலும், மிச்சமிருந்த குளிர்பானத்துளிகள் வழிந்து கீழ் இறங்கிக்கொண்டிருந்தன” (உள்புறம் வழியும் துளிகள் கதையில்)

“அலை ஒதுக்கின கிளிஞ்சலை விடவா கடல் அழகு” (சின்னு முதல் சின்னு வரை கதையில்)

“அறுபது வருஷ மழையும் பாசியும் கண்ட அருமையான ஓடுகள்” (சின்னு முதல் சின்னு வரை கதையில்)

இதுமாதிரி ஏகப்பட்ட படிமங்கள் கதை முழுவதும் காணக்கிடைக்கின்றன. இயல்பான நெல்லை வட்டார வழக்கும், விளி முறைகளும், ஊரைப்பற்றிய வர்ணனைகளும், வாதாங்கொட்டை, நந்தியாவட்டை, வேப்பம்பூ, சீம்பால் போன்ற வார்த்தைப் பிரயோகங்களும், நெல்லையில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்களின் பெயர்களும், நெல்லையின் தேரோட்டம் பற்றிய குறிப்புகளும் கதைகளில் அணிச்சையாக வந்துபோகின்றன. அவை நம்மை வசமிழக்கச் செய்து கதைக்குள் இழுத்துக்கொள்கின்றன. எல்லோரையும் போலவே தாமிரபரணியும் தேரோட்டமும் ஆசிரியரை நிரம்பப் பாதித்திருக்கிறது.

சில இடங்களில் தேவையில்லாத வர்ணனைகள் இருந்து, தனியே துருத்திக்கொண்டும் தெரிகின்றது. எடுத்துக்காட்டாய், “தாயின் மார்க்காம்பிற்கும் மின்பொத்தானின் அமைப்புக்குமான ஒற்றுமையின் தூண்டுதல் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்” (சின்னு முதல் சின்னுவரை கதையில்) என்பது போன்ற அவசியமற்ற உவமைகளைச் சொல்லலாம்.

வாழ்க்கையின் எல்லா சின்ன சின்ன, ஆனால் வெகு அழுத்தமான கணங்களைக் கூட வெகு அழகாகப் படம் பிடித்திருக்கிறார் வண்ணதாசன்.

“அப்பாவின் சட்டை ஆணியில் கிடந்ததைப் பார்த்துவிட்டு நான் பயங்கரமாக அழுதது, அப்பாவின் காரியத்திற்காக அழுததை விடவும் கூடுதலாக இருந்தது” என்ற வரியில் பொதிந்திருக்கும் உண்மை மற்றும் வலியின் ஆழம் அதிகம். இதை உணர்ந்தவர்களால்தான் எழுதவோ இரசிக்கவோ முடியும்.

நல்ல கதையைப் படிக்க நினைப்பவர்களும், எழுத்தாளர்களாக முயற்சிப்பவர்களும் இந்தச் சிறுகதைகளை அவசியம் வாசிக்கவேண்டும். ஒரு புதிய கோணத்தை, இந்தக் கதைகள் தரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

அதிலுள்ள பன்னிரண்டு கதைகளில், என் பார்வையில் சிறந்ததாகச் சின்னுமுதல் சின்னுவரை கதையைச் சொல்லுவேன். அதிலுள்ள ஒரு சில வரிகளைக் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் இந்தக் கட்டுரை நிறைவு பெறாது.

“டயோசீசன் பள்ளிக்கூடம் தாண்டி, சர்ச் தாண்டி, வாய்க்கால் தாண்டி, இறைச்சிக்கடை எல்லாம் தாண்டி, தைக்காத்தெரு பள்ளிவாசல் தாண்டி, ஒரு சந்துக்குள் போக வேண்டி இருந்தது. இவள் “சை.. சை.. ” என்று மூக்கைப்

பிடித்துக்கொண்டே வந்தாள். கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போகிற கைப்பிள்ளைக்காரிகளையும், வயசாளிகளையும் …..” (சின்னுமுதல் சின்னுவரை கதையில்)

விமானதளத்தில் காத்திருக்காமல், எமிக்ரேஷன் செக்கிங் இல்லாமல், காசு செலவில்லாமல் என் வீட்டுக்குப் போயிட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு. அந்த ஆஸ்பத்திரிக்குப் பின்னாடிதான் என் வீடு இருக்கிறது.

***

Share

மேல் பார்வை – சுந்தரராமசாமி – சிறுகதைத் தொகுப்பு

 

=====================

நிர்மால்யா வெளியீடு,

48, முதலியார் தெரு,

கிருஷ்ணன் கோவில்,

நாகர்கோவில் – 629001

=====================

சுந்தரராமசாமி பல்வேறு காலகட்டங்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். ஒன்பது சிறுகதைகள் இருக்கின்றன. மற்றச் சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து இந்தத் தொகுப்பு மாறுபட்டிருப்பதற்கு ஒரு காரணம், இதிலுள்ள கதைகள் எழுதப்பட்ட வருடங்கள். 1953 தொடங்கி 1990 வரையிலான வருடங்களில் வெவ்வேறு காலங்களில்

எழுதப்பட்ட கதைகள் புத்தகத்தை அலங்கரிக்கின்றன.

எழுதத்தொடங்கும்போது சுந்தரராமசாமியின் எழுத்து மிக வித்தியாசமானதாக இருந்துவிடவில்லை என்பதை அறிய முடிகிறது. ஆனால் 1990ம் ஆண்டில் எழுதப்பட்டு இந்தியாடுடேவில் வெளியாகிய மேல்பார்வை கதையில் அவரது எழுத்தின் நவீனம் தெரிகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் அவரது எழுத்து எப்படி மாறிக்கொண்டேயிருந்திருக்கிறது என்பதை அவதானிக்க விரும்புகிறவர்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.

முதல் கதையாகத் தண்ணீர். 1953ல் எழுதப்பட்டது. மழையில்லாமல் வாடும் பயிர்களுக்குத் தண்ணீரில்லை. ஆனால் அந்த வருடத் தெப்போற்சவத்துக்காகத் தண்ணீர் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை அறிந்து கொதித்தெழும் மக்கள் மறைத்துவைக்கப் பட்டிருந்த நீரின் வரப்பை உடைத்து பயிருக்குத் திருப்பி விடுகிறார்கள். போலீஸ் வந்து ‘கலகக்காரர்களைக்’ கொண்டு செல்கிறது. கதை இவ்வளவுதான். சில இடங்களில் அழகான அங்கதம் தெரிகிறது. நெல்லை வட்டார வழக்கு எல்லாக் கதைகளிலும் மாதிரி இதிலும் அழகாகக் கையாளப்பட்டிருக்கிறது.

அடுத்த கதை கோவில் காளையும் உழவு மாடும். 1955ல் எழுதப்பட்டது. தொலைதூரத்திலிருந்து வரும் கிழவன் ஒருநாள் இராத்தங்க கோவில் பண்டாரத்திடம் அனுமதி கேட்கிறான். பின் நிரந்தரமாகத் தங்கி விடுகிறான். அந்தக் கிழவன் யாருக்கும் தெரியாமல் தன்னந்தனியாளாய் கிணறு தோண்டுகிறான். உடம்பு மிக மோசமாகி, தான் தோன்றிய கிணற்றில் ஊறிய நீரைப் பருகிவிட்டு, கண்ணை மூடுகிறான். கதை விவரிக்கப்பட்ட விதம் மிக அழகு. கூடவே இருக்கும் பண்டாரத்தின் மன மாற்றங்களும் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்த கதை சன்னல். 1958ம் வருடம் எழுதப்பட்டது. எல்லாக் கதைகளைப் படித்த பின் மனதுக்குள் ஊடுருவிக்கொண்டு, கீழே இறங்க மறக்கும் கதைகளுள் முதன்மையானது சன்னல் கதை. படுத்த படுக்கையாகக் கிடக்கும் ஒருவனின் மன ஓட்டங்கள் தான் கதை. ஒரு குளவி நெஞ்சில் விழுந்துவிட, கத்த முடியாமல், கை கால் அசைக்க முடியாமல் அவன் பதறும் காட்சிகள் படிப்பவர்கள் மனதுக்குள் பெரும் போராட்டத்தை ஏற்படுத்திவிடுகின்றன. அப்படியிருக்கும் அந்த ‘அவனுக்கு’ ஒரே ஒரு ஆறுதல் சன்னல். சன்னல்தான் உலகம். சன்னல் வழியாக வெளியில் நிகழும் காட்சிகளைக் காண்பது மட்டுமே அவனுக்கு வாழ்க்கை. மூங்கிலை வண்டு ஓட்டை போடுவதையும், ரோஜாவைத் திருடிப் பால்செம்பில் போட்டுக்கொள்ளும் பால்காரி மகளையும், கன்றுகளாக நட்ட வாழைகள் மரமாகிச் செழித்து நிற்பதையும் பார்த்துப் பார்த்துச் சந்தோஷிக்கும் அவனது வாழ்க்கையில் ஒரு இடி விழுகிறது. சன்னல் வழியாக வீசும் தணுப்புக் காற்று உடலுக்காது எனத் தடுப்புச் சுவர் எழுப்புகிறார்கள். அவனது அழுகையோடு கதை முடிகிறது. வாச்கர்கள் மட்டும் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம். கதையின் எளிமையும் உணர்வும் மனது மறக்காத கதையாக்குகின்றன. (இதே கதையை சல்மாவும் அவரது நேர்காணலில் பாராட்டியிருந்தார்.)

அடுத்தது ஸ்டாம்பு ஆல்பம். (1958) பள்ளி மாணவர்களுக்கு மாணவப்பருவத்தில் ஏற்படும் அசூயையையும் அதன்காரணமாக நிகழும் சில நிகழ்வுகளையும் சொல்லும் கதை. தனது ஸ்டாம்பு ஆல்பத்தை விட இன்னொருவனின் ஸ்டாம்பு ஆல்பம் அழகாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்வதைப் பொறுக்காமல் எரித்துவிடும் சிறுவன் அதற்காக வருந்துகிறான். தாந்தான் எரித்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டுவிடுவோமோ என்று பயப்படுகிறான். எரித்த தவறுக்காக வருந்தி, தனது ஆல்பத்தை மனமில்லாமல், இன்னொருவனுக்கு விட்டுக்கொடுக்கிறான். எந்தவிதச் சிக்கலுமில்லாமல் எளிமையாகப் பயணிக்கும் கதை. சிறுவர்களின் பேசும் விதமும் பேச்சும் வெகு நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

சீதைமார்க் சீயக்காய்த்தூள். பணத்துக்காக சீதையை ‘எடுப்பாக’ வரையச் சொல்லும் கதை. அங்கதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. வறுமையிலும் நியாயம் பேசும் கலைஞன் காட்டப்பட்டிருக்கிறான். வட்டார வழக்குத்தான் கதையை தூக்கிப்பிடிக்கிறது. மற்றபடி கதையில் ஆழமாக ஒன்றுமில்லை. ஆனாலும் எழுதின வருடம் 1959 என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

சன்னல் கதையை அடுத்து மனதைத் தொடும் இன்னொரு கதை. எங்கள் டீச்சர். (1962). மிக நெருக்கமானத் தோழிகளாக இருக்கும் இரண்டு டீச்சர்கள் ஒரு சின்ன நிகழ்வில் பிரிகிறார்கள். மோசமான வகுப்பைத் தனது திறமையால் ஒரு டீச்சர் முதன்மையாகத் தூக்கி நிறுத்த, இன்னொரு டீச்சர் பொறாமையில், கேள்விகளைச் சொல்லித் தந்து முதன்மை பெறச் செய்துவிட்டாள் குற்றம் சாட்டுகிறார். நேர்மையான டீச்சர் நொறுங்கிப் போகிறார். வெளியூரில் கேள்விகள் தயாராகும் அடுத்த தேர்வில் தனது மாணவர்களை மீண்டும் முதன்மை பெறச் செய்து தனது

நேர்மையையும் தனது மாணவர்களின் திறமையையும் நிரூபிக்க ஆயத்தமாகிறார். எதிர்பாராத விதமாக அந்தத் தேர்வில் தவறிழைக்கும் தனது மாணவிக்கு, மறைமுகமாகச் சொல்லித் தர முனையும்போது கையும் களவுமாகப் பிடிக்கப்படுகிறார். தவறை ஒத்துக்கொண்டு வேலையை விட்டே போய்விடுகிறார் நேர்மையான டீச்சர். கதையில் இரண்டு

டீச்சர்களுக்கிடையேயான அன்னியோன்யமும் நட்பும், ஒரே ஒரு அசூயையில் (பொறாமை)அது உடைந்து போவதும் எந்தவித மேல்பூச்சுகளும் இல்லாமல் யதார்த்தமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. தனது மாணவி மீண்டும் வென்றே

ஆக வேண்டும் என்ற நினைப்பில், “நேரமிருக்கிறது. சரி பார்” என இரண்டு மூன்று முறை நிர்பந்திக்கும்போது நமக்கே அந்த டீச்சரின் மீது பச்சாதாபம் தோன்றி விடுகிறது. நடையின் வெற்றி.

விகாசம். 1990ல் எழுதப்பட்ட கதை. கண் தெரியாத ராவுத்தருக்கு ஒரு திறமை. நொடியில் கணக்குப் போடுவார். அவர் இல்லையென்றால், ஓணத்தின் பரபரப்பான ஜவுளி வியாபாரத்தைச் சமாளிக்க முடியாது என்கிற அளவுக்கு அவரின் தேவை இருந்தது. எதிர்பாராத விதமாய் அவருக்குப் பெரிய இடி ஒன்று கால்குலேட்டர் வடிவில் வந்து சேர்கிறது. அவரை பெயர்த்துகிறது கால்குலேட்டர். அவரின் முக்கியத்துவம் குறைவதாக உணர்கிறார். சிப்பந்திகள் தொகையைச் சொல்ல, முதலாளி கால்குலேட்டரைத் தட்ட, வியாபாரம் கனஜோராக நடக்கிறது. யாரோ ஒரு சிப்பந்தி விலையைத் தவறாகச் சொல்ல, அதை திருத்துகிறார் ராவுத்தர். தவறாகச் சொல்லப்படுவது கால்குலேட்டருக்குத் தெரியாது என்பதை உணர்கிறார் முதலாளி. ஸ்டாக் விவரம், கரண்ட் பில் என்று கட்டவேண்டும் என்பன போன்ற விவரங்களைச் சரியாகச் சொல்கிறார் இராவுத்தர். கால்குலேட்டர் வருவதற்கு முன்பு ‘கால்குலேட்டராக’ இருந்த இராவுத்தர் அதன் வரவுக்குப் பின்னர் மானேஜராகிறார் என்பதோடு முடிகிறது கதை. தன்னை மிஞ்ச ஆள் கிடையாது என்ற போது இராவுத்தரின் நக்கலும் குத்தலும் திமிரும், திடீரென ஒருநாள் அவரது பேத்தி, அவரை விட வேகமாகக் கணக்கைச் சொல்ல, அதிரும் இடமும் அதற்குக் காரணம் கால்குலேட்டர் என்று அறிந்து அதைத் தொட்டுப் பார்த்துப் பயப்படும் இடமும் அருமை. கால்குலேட்டர் எல்லாக் கணக்கையும் செய்யத் தொடங்கும்போது நக்கல், குத்தல் பேச்சில்லாமல் நடைபிணமாகிறார். கால்குலேட்டர் செய்ய முடியாத காரியங்களை அவர் செய்யத் தொடங்கும்போது மீண்டும் நக்கல், குத்தல் எல்லாம் வந்து சேர்கிறது அவருக்கு. கடைசியாக, “இப்போ இப்ராஹிம் ஹசன் ராவுத்தர் கணக்கு மிஷின் இல்லே. மானேஜர். ஆண்டவன் சித்தம்” என்று இராவுத்தர் சொல்வது நச் கமெண்ட்.

அடுத்த கதை மேல்பார்வை. 1994-95ம் ஆண்டுக்கான இந்தியாடுடே ஆண்டுமலரில் வெளியான கதை. இதுவரை கதைகளில் இல்லாதிருந்த கதைக்களம் பற்றிய விவரிப்புகள் அதிக அளவில் இடம் பெறுகின்றன. எழுத்தில் நவீனம் தெரிகிறது. கூடைப்பந்தாட்டம்தான் கதை. அதன் நடுவர் ஒரு பெண். மைதானத்தில் அந்தப் பெண்ணின் வேகத்தால் கிராம மக்கள் வசீகரிக்கப்படுகிறார்கள். கடைசியில் அதிகம் உணர்ச்சிவசப்பட்ட கிழவி ஒருத்தி, ஆட்டத்தில் நடக்கும் தவறை சுட்டிக்காட்டி, சரியான தீர்ப்பைச் சொல்லும் நடுவர் பெண்ணுக்குப் பாராட்டைத் தெரிவிக்கிறாள். ஆட்டத்தைப் பார்க்கும் கிழவியின் கமெண்ட்கள் கிராமத்தை கண்முன் கொண்டுவருகின்றன. இந்தக் கதையில் வரும் சில வரிகளைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும். “செப்பனிடப்பட்ட ஒரு படியின் மீது சிமெண்ட் காய்வதற்கு முன் கெட்ட வார்த்தை ஒன்றை ஒரு கை எழுதி வைத்திருக்கிறது. அதன் இருப்பு கஷ்டம். அதைப் பார்ப்பதைத் தவிர்ப்பதில் அடையும் தோல்வி அதைவிடக் கஷ்டம்”. பலமுறை நான் அனுபவித்த விஷயம் இது.

பக்கத்தில் வந்த அப்பா. கடைசி கதை. 1987ல் எழுதப்பட்டது. தொலைபேசி பிரபலாமாகாத காலத்தில் அப்பாவுக்குத் தொலைபேசி அழைப்பு வருகிறது. சிறுவயது மகன் கூடச் செல்கிறான். அப்பாவுக்குத் தொலைபேசியில் பேசத் தெரியாமல் போகவே மகன் பேசுகிறான். அவனது பெரியப்பா இறந்த செய்தியை அப்பாவுக்குச் சொல்கிறான். அப்பா இடிந்து போகிறார். வரும் வழியெல்லாம் அழுது புலம்புகிறார், தன் பாசமான அண்ணன் மறைவுக்காக. வீட்டுக்கு வந்து இடிந்து போய் உட்கார்ந்துவிடுகிறார். மகன் தாந்தான் அப்பாவுக்கு உதவினதாய் எல்லோரிடமும் சொல்லிப் பெருமை பட்டுக்கொள்கிறான். ஆனால் அப்பா அதைச் சொல்லாமல், அவரது அண்ணன் மறைவுக்காக வருந்துவது அவனுக்கு வருத்தமாக இருக்கிறது. அந்தச் சிறுவனின் அக்கா அவன் பொய் சொன்னதாக அவனைக் கேலி செய்கிறாள். மனம் நொந்து போன அவன் இப்படிச் சொல்கிறான்: ” இன்னொரு பெரியப்பா வருவாரே.. அவர் செத்துப்போகும்போது போன் வரும். அப்பவும் நான் அப்பாக்கூடப் போவேன். அப்பத்தெரியும் உனக்கு”. ஒரு சிறுவனின் மன ஓட்டங்கள் சொல்லப்பட்ட விதம் கதையின் பலம். நேர்த்தியான நடை. அப்பாவின் குணநலன்களும் அம்மாவும் அக்காவும் அப்பாவைக் கிண்டல் செய்வதும், தானும் அவர்களைப் பார்த்துப் படித்து அப்பாவைக் கிண்டல் செய்வதும், பின்னர் தனக்குப் பெரியத்தனம் வந்துவிட்டதாகத் தானே நினைத்துக்கொள்வதும் என அந்தச் சிறுவனின் மனஓட்டம் நம்மை வசீகரித்துக்கொள்கிறது.

எல்லாக் கதைகளும் நன்றாக இருந்தாலும் சன்னல் கதையும் எங்கள் டீச்சர் கதையும் பக்கத்தில் வந்த அப்பாவும் மனசுக்குள்ளேயே தங்கிவிடுகின்றன. இந்தப் புத்தகத்தில், என் பார்வையில் இந்த மூன்று கதைகளும் சிறந்த கதைகள்.

Share

சிதம்பர நினைவுகள்-பாலசந்திரன்சுள்ளிக்காடு

சிதம்பர நினைவுகள்-பாலசந்திரன்சுள்ளிக்காடு
–என் பார்வை

ஒருமுறை குமுதம் ஜங்கஷனில் மகாநடிகன் என்ற தலைப்பில் சிதம்பரநினைவுகள் புத்தகத்தில் பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய சிவாஜி பற்றிய கட்டுரையைப் பிரசுரித்திருந்தார்கள். அதைப் படித்த பின் (சிவாஜி மீது கொண்டுள்ள மிகப்பெரிய ஆர்வத்தால் ) அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. கடந்த முறை இந்தியா சென்ற போது வாங்கி, ஒரு வாரத்திற்கு முன்புதான் படித்தேன்.

மகாநடிகன் பற்றிய பாலனின் (பாலசந்திரன் சுள்ளிக்காடு) கட்டுரையைப் படித்த பின்பு மலையாளிக் கூட்டுக்காரனிடம் அவரைப் பற்றிக் கேட்டேன். எழுத்தாளர் என்றும் ஏதோ ஒரு படத்தில் ஹீரோ என்றும் சொன்னான். (தற்கால மலையாளக் கவிதைகள் புத்தகத்தில் ஜெயமோகன் பாலனைப் பற்றிச் சொல்லும்போது அவர் அரவிந்தனின் போக்கு வெயில் படத்தில் நடித்ததாகச் சொல்கிறார்.)

சிதம்பர ஸ்மரண என்ற மலையாள மூலத்தை சிதம்பர நினைவுகளாக கே வி சைலஜா மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பின் நேர்த்தி சிதம்பர நினைவுகளுக்கு பெரிய பலம்.

இனி புத்தகத்திலிருந்து.. ….

முதல் நினைவே சிதம்பரம் கோயிலுக்குள் நிகழ்ந்ததாக இருக்கிறது. பிள்ளைகள் ஆதரிக்கத் தயாராய் இருந்தும் அவர்களுக்குத் தொல்லை தரவிரும்பாத இரண்டு வயதான பெற்றோர்களைப் பற்றியது. கொஞ்சம் அவர்களின் வாழ்க்கையை விவரித்துவிட்டு, வயதான காலத்தில் ஒருவருக்கு ஒருவர் தரவாய் இருப்பதைச் சொல்லிவிட்டு கடைசியில் இப்படி முடிக்கிறார்.

“பிரியத்தில் பின்னிப் பினைந்து குழந்தைகளைப் போல அடி வைத்து நடக்கும் அந்த முதிர்ந்த தம்பதிகளில் யார் முதலில் இறந்து போயிருப்பார்கள்.

ரங்கசாமியா? கனகாம்பாளா? “

மனதில் வேதனை படர்வதைத் தவிர்க்க இயலாத அந்த முடிவு வரிகள் பாலனின் டச்.

“பைத்தியக்காரன்”என்ற நினைவுகளில் பழைய நண்பன் தற்போதைய பைத்தியக்காரனைப் பற்றிச் சொல்கிறார். அவனைக் கொண்டுபோய் குளிப்பாட்டி புதிய aaடைகள் அணிவித்து ஹோட்டலில் மசால் தோசை வாங்கிக்கொடுத்து.. .

“ஒரு ஹோட்டலில் போய் உட்கார்ந்து மசால் தோசை கொண்டு வரச்சொன்னேன். சாப்பாட்டைப் பார்த்தபோது மோகனின் கண்கள் மின்னின. பசிதான் பரம சத்தியம். பைத்தியம் கூட பசிக்குப் பிறகுதான் என்பது எனக்குத் தெளிவாய்ப் புரிந்தது”

கடைசியில் அந்த பைத்தியத்தை என்ன செய்வது என்று தெரியாமல் யோச்¢க்கிறார் பாலன்.

“திருச்சூரில் இருக்கும் என் நண்பனும் மனோதத்துவ நிபுணருமான ரமேஷிடம் கொண்டு விட்டுவிடலாமா? அவன் வேலை செய்வது பைத்தியக்கார அஸ்பத்திரியில்தான். இல்லையெனில் பாதி ராத்திரியில் மார்த்தாண்டவர்ம பாலத்தில் உச்சியில் கொண்டு போய் மோகனனை கீழே ஆலுவா ஆற்றின் மத்தியில் தள்ளி விட்டு எல்லாவற்றிற்குமாய் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடலாமா? அப்படி மோகனனை உலகத்திலிருந்தும் உலகத்தை மோகனனிடமிருந்தும் மீட்டு விமோசனம் கொடுக்க முடியுமா?

இல்லை அதெல்லாம் செய்ய என்னால் முடியாது……

….. அவனை ஆலுவா பஸ் ஸ்டாண்டில் நிர்தாட்சண்யமாக விட்டுவிட்டு அடுத்த பஸ்ஸில் ஏறி நான் எர்ணாகுளத்திற்கு வந்துவிட்டேன்”என்று தொடர்கிறது நினைவு. கடைசியில் அந்த மோகனன் இறந்துவிட்டதாகத் தகவல் கிடைக்கிறது பாலனுக்கு.

நூல் முழுதும் பாலனின் வறுமையும் இயலாமையும் விரிந்து கிடைக்கின்றன. நடந்தவற்றைக் கொஞ்சம் கூட மாற்றாமல் பதிவு செய்யும் நேர்மை புத்தகத்தின் முதுகெலும்பு. ஒரு திருவோணத்திருநாளன்று கையில் காசில்லாமல் நண்பனிடம் கேட்டு அவனிடமும் இல்லாததால் , பசிதாங்க முடியாமல் பிச்சை எடுக்கும் அளவிற்குப் போனதாகச் சொல்கிறார். (நண்பனிடம் காசு கேட்கும்போது நடக்கும் சம்பாஷணையின் உச்சத்தில் நண்பன் பாலனுக்கு அறிவுரைகள் சொல்கிறார்: “பாலா.. நீ குருவா நினைச்சிருக்கியே அந்த கடம்பனிட்டையும் சச்சிதானந்தத்தையும் கெ.ஜி. சங்கரன் பிள்ளையையும் அவர்களெல்லாம் ஒழுங்காய்ப் படித்து பாஸாகி நல்ல உத்தியோகத்திற்கும்போய் வாழ்க்கையைப் பத்திரப் படுத்திக்கொண்டுதான் அரசியல் பேசுகிறார்கள். அதைக்கேட்டு உன்ன மாதிரி இருக்குற சில புத்திகெட்டவர்கள் வெறி நாய்கள் போல ஏண்டா சுத்தறீங்க? அந்த சச்சிதானந்தனும் கடம்பனிட்டமும் சங்கரன் பிள்ளையும் ஓணத்துக்கு குடும்பத்தோடு அப்பளம் பழம் பாயாசத்துடன் சுகமாய் விருந்து உண்பார்கள். உன்னைப் பத்தி நெனக்கக்கூட மாட்டாங்கடா..” ) ஓணத்தினத்தன்று வெளியில் திண்ணையில் சோறு போடும் ஒரு வீட்டில் சாப்பாட்டை உண்ண முற்படும்போது அந்த வீட்டுப்பெண் அவள் அம்மாவிடம் “அம்மா அது பிச்சைக்காரனில்ல. பாலசந்திரன் சுள்ளிக்காடு என்கிற கவிஞன். கடம்பனிட்டோடு எங்கள் காலேஜுக்கு கவிதை வாசிக்க வந்தார்”என்கிறாள். மதிப்பும் மரியாதையையும் விட பெரியது பசியும் சோறும்தான் என்று சாப்பிடுகிறார் பாலன்.

வீட்டின் ஆதரவில்லாமலும் வேலையில்லாமலும் படிக்கவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது மனைவி கர்ப்பமாகிவிடுகிறார். (“விடுமுறை நாட்களில் ஒரு ஸ்னேகிதன் வீட்டுக்கு நானும் விஜயலக்ஷ்மியும் ஒன்றாய்ப் போயிருந்தோம் அதன் பலன் இது”) மிகுந்த யோசனைக்குப்பின் தர்க்கங்களுக்குப் பின் (ஒரு சமயத்தில் கருகலைக்க மறுக்கும் மனைவியின் கழுத்தை நெறிக்கக்கூடத் தயாராகிறார்) தன்மனைவியை கருகலைக்க சம்மதிக்க வைக்கிறார். பிறக்காது போன மகனுக்காக ஒரு கவிதையும் உண்டு.

“உலகின் முடிவு வரை பிறக்காமல்
போக இருக்கும் என் மகனே
நரகங்கள் வாய் பிளந்தழைக்கும்போது
தவிப்போடு கூப்பிட யார் இருக்கிறார்கள்
உன்னைத்தவிர-ஆனாலும்
மன்னித்துவிடு என் மகனே”

மகா நடிகனாய் சிவாஜியை விவரிக்கும்போது கொஞ்சம் உயர்வாய்ப் புகழ்கிறாரோ என்று தோன்றுகிறது. ஒட்டுமொத்த புத்தகத்திலும் இப்படித் தோன்றியது இந்த ஒரு கட்டுரையில் மட்டும்தான். மற்ற இடங்களிலெல்லாம் உண்மையைப் பதிவு செய்த பாலன் சிவாஜி பற்றி சொல்லும்போது மட்டும் செயற்கைத்தனத்தைக் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பது யோசிக்கவேண்டியதும். கூட வந்த நண்பர் சிவாஜியிடம் வீரபாண்டிய கட்டபொம்மனிலிருந்து ஒரு டயலாக் சொல்லக் கேட்க பாலன் இப்படித் தொடர்கிறார்.

“சிவாஜி கணேசன் சிறிது நேரம் கண்மூடி கைகூப்பி அமர்ந்திருந்தார். பிறகு மெதுவாகக் குனிந்து இடதுகையால் வேட்டியின் தலைப்பைப் பிடித்து மெதுவாக நிமிர்ந்தெழுந்து சட்டென விஸ்வரூபமெடுத்தது போலத் திரும்பி நின்றார். நாங்கள் மிரண்டு போனோம். உயரம் குறைவான வயதான எங்களிடம் இவ்வளவு நேரம் இயல்பாய் பேசிக்கொண்டிருந்த சிவாஜி கணேசனல்ல அது. மனித ஆத்மாவை நடுநடுங்க வைத்த வீர பாண்டிய கட்டபொம்மன் தான் அது. சூரியன் அஸ்தமம் ஆகாத பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியான ஜாக்சன் துரைக்கு நேராக தி தமிழக வீர பௌருஷத்தின் சிங்க கர்ஜனை முழங்கியது…..

………ஒரு இளம் சூட்டினை லஜ்ஜையோடு நான் உணர்ந்தபோது தான் என்னுடைய உள்ளாடைகள் நனைந்தது எனக்குத் தெரிய வந்தது”

1995இல் யாத்ரா மொழி படத்தின் விவாததிற்குச் சென்ற போது பேசியதாகச் சொல்கிறார். வயதான சிவாஜி இவ்வளவு தூரம் பாதிக்கிறார் என்றால் பாலன் அறுபதுகளின் சிவாஜியைக் கண்டிருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்று யோசித்த்தேன்.

முகம் என்ற கட்டுரையில் சேல்ஸ் செய்ய வரும் பெண்ணின் இடையைத் தடவ முற்பட்டு, அவள் பாலனைக் கன்னத்தில் அறைவாங்கியதைச் சொல்லும்போதும் காணும்போதே பாலியல் இச்சையைத் தூண்டும் ஒரு பெண்ணிடம் இருந்து விலகி இருக்க முற்படுவதும் அவளின் தற்கொலைக்குப் பின் பிணமாகக்காணும்போதும் போஸ்ட்மார்ட்டத்திற்குப் பின் மொட்டைத்தலையும் உடையணியாத உடலுமாய்க் கண்டதைச் சொல்லும்போதும் பாலனும் சாமான்யன் என்று தெரிகிறது.

வீட்டு வாடகைக்கூட கொடுக்கமுடியாத ஒரு கவிஞனைக்காணும்போது பாலனின் கோபங்கள் வெளியாகின்றன.

மார்த்தா அம்மா என்ற நீக்ரோப் பெண் ஆசிரியையை தென் ஆப்பிரிக்காவில் ஒரு புத்தகக்கண்காட்சியில் எதேச்சையாகச் சந்திக்கிறார் பாலன். அந்தப் பெண்மணி அவள் வீட்டில் பாலனுக்கு காபி விருந்தளிக்கிறாள். அப்போதுதான் பாலன் அந்தப் பெண்மணியின் கைகளில் சில விரல்கள் இல்லாமலிருப்பதைக் காண்கிறார். வெலவெலத்துப்போய் என்ன வென்று கேட்கும்போது,

“போரில் என் ஒவ்வொரு மகனாய்க் கொல்லப்பட்டபோதெல்லாம் அவர்களின் நினைவாக ஒவ்வொரு விரலாய் எங்கள் வழக்கப்படி நானே வெட்டிக்கொண்டேன். பத்துவிரலும் வெட்டப்பட்டு, சில கால் விரல்களையும் இழந்த தாய்மார்கள் கூட எங்கள் இனத்தில் உண்டு”என்கிறாள்.

கடைசி கட்டுரை நோபெல் பரிசு அரங்கிலிருந்து….நோபெல் பரிசு எனக்குக் கிடைத்தாலும் கூட நான் வாங்கமாட்டேன் என்று சொல்லும் பாலன் காரணமாய், “டால்ஸ்டாய் என்ற மகா புருஷனுக்குக் கொடுக்காமல் ஷெல்லி ப்ருதோம் என்ற அல்ப மனிதனுக்கு நீங்கள் இலக்கியத்திற்கான முதல் நோபெல் பரிசைக்கொடுத்தீர்களே! டால்ஸ்டாய் என்ற அந்த மகாகலைஞனுக்கு கொடுக்காத நோபெல் பரிசை, அவனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகச் சாதாரணமான ஒரு எழுத்தாளனான நான் ஏற்றுக்கொள்ள முடியாது”என்கிறார்.

கமலாதாஸைச் சந்தித்த ஒரு கட்டுரையும் உண்டு.

புத்தகத்தைப் படித்த முடித்த போது தோன்றிய எண்ணம்; அனுபவங்கள்தான் மனிதனை மிகச் சிறந்த கலைஞனாக்குகின்றன. பாலன் அந்த வகை.

கடைசியாய் பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு கவிதை ஒன்று.

தற்கால மலையாளக் கவிதைகள்-தொகுத்து மொழிபெயர்த்தவர் ஜெயமோகன், வெளியீடு-கனவு, 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600 024. தொலைபேசி எண்: 4801603.

நின்று போன கைக்கடிகாரம்

நேற்றிரவு என் கைக்கடிகாரம் நின்று போயிற்று.
களிம்பேறிப் போன ஓர் இதயம்
இனி அதில் துடிக்காது

தங்கை பிறக்க நிமிடம் தந்ததும்
பாட்டி இறக்க முகூர்த்தம் குறித்ததும்
இந்த கைக்கடிகாரமே.
ஜாதகத்தின் காரணமும்,
வாழ்வின் இலக்கணமும்,
இந்தக் கைக்கடிகாரமே.

தூக்கத்திற்கு முன் செவி கூர்ந்தால்
இதிலிருந்து இணை ஜீவனின் மூச்சிணைப்பைக் கேட்கலாம்
குண்டடி பட்ட பறவையின் சிறகடிப்பைக் கேட்கலாம்
இருளிலும் மினுங்கும் பச்சை ஊசிகளுக்கு
அன்னிய கிரகங்களுடன் உள்ள தீய உறவை எண்ணி
நான் பிரமிப்படைகிறேன்.

டிக் டிக், டிக்-டிக்…
அடிமைகள் கல் உடைக்கும் சத்தம்.
யாகக் குதிரைகளின் குளம்போசை
திக்விஜயிகளின் இரத்தம் தோய்ந்த சாந்தி மந்திரம்
தீர்க்க தரிசிகளின் குற்றுயிரான நாடித் துடிப்பு

டிக் டிக், டிக்-டிக்….
அகதிகளின் காலடியோசை.
மரணம் வழியாக வெற்றி நோக்கி
தற்கொலைப் படைகளின் கனவுநடை!
வெற்றிகொள்ளப்பட்ட வாழ்விற்கு மேலே
எதிரிப் படைகளின் காவல் தாளம்.

நேரமாகவில்லை போலும்
நேரமாகவில்லை போலும்!
மெல்லிய ஊசிகள் சந்திக்கும் கணம்.
ஜனங்களைத் தூக்கிலிட தீர்ப்பளித்த
கோர்ட் கலைகிறது

நான் இனிமேல் காலத்தின் வாதியோ பிரதிவாதியோ அல்ல
நேற்றிரவில் நின்று போயிற்று என் கைக்கடிகாரம்.

***

புத்தகம்: சிதம்பர நினைவுகள்
வெளியீடு: காவ்யா
14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம்,
கோடம்பாக்கம், சென்னை-600 024.
தொலைபேசி எண்: 4801603.

Share