Archive for அஞ்சலி

வெங்கட் சாமிநாதன் – கண்ணீர் அஞ்சலி

பத்து வருடங்களுக்கு முன்பு வெங்கட் சாமிநாதனை எனக்குப் புத்தகங்கள் வழியாகவே மட்டும் தெரியும். திண்ணையில் அவரது கட்டுரைகளை வாசித்திருந்தேன். இலக்கிய கலை தொடர்பான அவரது கட்டுரைகளில் அவரது அனுபவங்களையும் பரந்த ஞானத்தையும் கண்ட நான் அவரது அரசியல் தரப்பை சரியாக முடிவுசெய்யாமல் விட்டிருந்தேன். எனி இந்தியன் பதிப்பகத்துக்காக வெங்கட் சாமிநாதனின் புத்தகங்களைப் பதிப்பிக்க முடிவு செய்திருந்தார்கள். அது தொடர்பாக அவரிடம் பேசி அவர் தரும் கட்டுரைகளைக் கொண்டுவந்து ஒழுங்கு செய்யவே நான் அவரை முதன்முதலாகச் சந்திங்கச் சென்றேன். நெல்லையிலிருந்து சென்னைக்கு வந்த புதிது என்பதால் பலமுறை அழைத்து வழிகேட்டு அவரது வீட்டுக்குச் சென்றேன்.

வீட்டின் வராண்டாவில் சாய்வு நாற்காலியில் வேட்டி கட்டிக்கொண்டு துண்டு போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். அது முதன்முறை ஒரு எழுத்தாளருடனான சந்திப்பு போலவே இல்லை. மிக அன்பாக உபசரித்தார். என் வீட்டைப் பற்றி, குடும்ப சூழல் பற்றி, ஊரைப் பற்றிப் பல விஷயங்களைக் கேட்டுக்கொண்டார். மாமி காப்பி கொண்டுவந்து கொடுத்தார். எத்தனை மறுத்தும் குடித்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்தி வெசா குடிக்க வைத்தார். அவர் தந்த கட்டுரைகளின் பிரதிகளைப் பெற்றுக்கொண்டேன். சில கட்டுரைகளை மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். எல்லாவற்றையும் ஒழுங்கு செய்து மெய்ப்புப் பார்க்கத் தொடங்கி ஐம்பது பக்கங்கள் பார்த்ததும் அவரை அழைத்து ‘வீட்டுக்கு வரலாமா’ என்று கேட்டேன். என் சந்தேகங்களையெல்லாம் மஞ்சள் நிற ஹைலைட்டரில் குறித்துக்கொண்டு வீட்டுக்குப் போனேன்.

vesa_haranprasanna1

வழக்கம்போல மாமி காப்பி கொண்டு வந்து கொடுத்தார். வெசா ‘சந்தேகங்களை போனிலேயே கேட்டிருக்கலாமே’ என்று சொல்லிக்கொண்டே என்னிடமிருந்த குறிப்புகளையெல்லாம் ஒருதடவை பார்த்துவிட்டு ‘என்னய்யா, முப்பது வருஷம் கழிச்சு எனக்கு தமிழே தெரியாதுன்னு சொல்ல வந்திருக்கீறாய்யா’ என்றார். சிரித்துக்கொண்டேதான் சொன்னார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்படியெல்லாம் இல்லை சார் என்றேன். ‘அதான் மஞ்சள் மஞ்சளா போட்டிருக்கிறே’ என்று சொல்லிவிட்டு அவரது மனைவியிடம் ‘தமிழ் தெரியலைன்னுட்டார். பேசாம இங்கிலீஷ்லயே எழுதிக்கிட்டு இருந்திருக்கலாம்’ என்றார். நான் ‘இல்ல சார், வரிகளெல்லாம் தொங்கல்ல இருக்கமாதிரி இருக்கு’ என்றேன். கொஞ்சம் நேரம் யோசித்துவிட்டு ‘நீயே திருத்திக்கோய்யா’ என்றார். அவற்றைத் திருத்தி மீண்டும் அவருக்கு அனுப்பி வைத்தேன். ‘இனிமே ப்ரூஃப் பார்க்கறப்போ என்னைக் கேக்கவேண்டாம்யா, நீரே திருத்திக்கோரும். தமிழ் உஸ்தாத்யா நீர்’ என்றார். பின்னர் அவரது புத்தகங்களின் தலைப்புகளெல்லாம் சரியாக இல்லை என்றேன். எனக்காக யோசித்து அவர் வைத்ததுதான் ‘யூமா வாசுகி முதல் சமுத்திரம் வரை’ என்ற தலைப்பு. ‘இந்தத் தலைப்பு ஓகேவாய்யா’ என்றார்.

அதன்பின் எனக்குத் தெரிந்ததெல்லாம் அன்பே உருவான ஒரு தாத்தாவின் உருவம் மட்டுமே. எப்போது சென்றாலும் காப்பி குடிக்காமல் அனுப்பமாட்டார். மாமி என் தலை தெரிந்ததுமே காப்பியுடன் வந்து நிற்பார். ‘மாமிக்கு ஒம்ம மேல பாசம்யா. நான் கேட்டா தரமாட்டா’ என்பார். மாமியும் அதே வேகத்தில் பதில் சொல்வார். பார்க்கவே அழகாக இருக்கும். ஒருமுறை துக்ளக் இதழை உடனே வாங்கிக்கொண்டு வரவில்லை என்று இருவருக்கும் சண்டை. ‘துக்ளக்கை புதன் கிழமையே படிக்கணுமா, வியாழக்கிழமை படிச்சா ஆகாதா’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். சோவின் மீது மிகப்பெரிய அபிமானம் வைத்திருந்தார் வெசா.

அதன்பின் புத்தகங்கள் தொடர்பாக அவரை அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. கணினியில் இகலப்பை, என் எச் எம் ரைட்டர் மூலம் டைப்படிப்பது எப்படி என்றெல்லாம் கேட்பார். கம்ப்யூட்டர் உஸ்தாத் என்பார். எனக்கு ஒண்ணுமே தெரியாது சார் என்றாலும் விடமாட்டார். போனில் அழைத்து வரலாமா என்று கேட்டால் ‘சும்மாதான்யா இருக்கேன், எப்பவேணும்னா வாங்க’ என்பார். நான் அப்போது எழுதிக்கொண்டிருந்த உலக / இந்தியத் திரைப்படங்கள் பற்றிப் பார்த்துவிட்டு ‘எனக்கும் சொல்லுங்க’ என்றார். அதிலிருந்து எப்போது திரைப்படம் ஒளிபரப்பானாலும் அவருக்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்புவேன். சில படங்களைப் பார்த்துவிட்டு போன் செய்து ‘எப்பவோ பாத்ததுய்யா. நீர் மெசேஜ் அனுப்பலைன்னா பாத்திருக்கமாட்டேன்’ என்றெல்லாம் சொல்வார். இப்படியாக வெசா ஒரு நண்பர் போல ஆகிப்போனார். அவரிடம் என்ன பேசவேண்டும், எப்படி பேசவேண்டும் என்ற வேடங்களெல்லாம் மறைந்துபோனது. அவரும் யாரைப் பற்றியும் அவர் நினைக்கும் கருத்துகளை ஒளிவுமறைவின்றி சொல்லுவார். நானும் என் கருத்துகளைச் சொல்லுவேன். வெசா கருணாநிதி பற்றியும் அண்ணாத்துரை பற்றியும் திராவிட, கம்யூனிஸ்ட்டுகள் பற்றியும் கொண்டிருந்த வெறுப்பை எப்போதும் மறைத்ததில்லை. பேச்சிலும் சரி, எழுத்திலும் சரி.

அ.மார்க்ஸ் வெசாவின் எழுத்து மலம் துடைக்கத்தான் லாயக்கு என்று சொல்லி அதை இருமுறை மேடையில் செய்து காட்டியதாகச் சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘ஆமாய்யா. ரெண்டு தடவைய்யா. அங்க மேடைல இருந்த யாரும் கேக்கலைய்யா’ என்றார். ஒரு மூத்த எழுத்தாளரும் அங்கே இருந்ததாகவும் அவரும் அதைப் பற்றி ஒரு கேள்விகூட கேட்கவில்லையென்றும் வருத்தத்துடன் சொன்னார். அந்த மூத்த எழுத்தாளர் வாழ்வின் விழுமியங்களில் நம்பிக்கை உடையவர் என்பது வெங்கட்சாமிநாதனின் எண்ணம். எனவேதான் அவருக்கு அவ்வருத்தம். ஒருமுறை அந்த மூத்த எழுத்தாளரைப் பார்க்க நேர்ந்தபோது அதைப் பற்றிக் கேட்டதாகவும், அவர் தான் அதை ஏற்கவில்லை என்று சொன்னதாகவும் சொன்னார். ஆனால் பொதுவில் சொல்லவில்லை என்பதையும் சொன்னார் வெசா.

vesa_haranprasanna2

வெசா எழுதிய ‘அக்ரஹாரத்தில் கழுதை’ பற்றிக் கேட்டேன். ‘படம் உங்ககிட்ட இருக்கா சார். இருந்தா பாத்துட்டு தந்துடறேன்’ என்றபோது, ‘நல்ல படமா பாக்கீரே, ஒமக்கு எதுக்குய்யா அந்தக் கொடுமை’ என்றார். ‘படத்தைக் கெடுத்தான்யா. சரி, ஒண்ணும் சொல்றதுக்கில்லை. என்னையும் இழுத்துவிட்டு… பழைய கதைய்யா… இப்ப எதுக்கு. ஆச்சா. புத்தகமாவும் வந்துச்சுய்யா’ என்றார். ‘டெல்லில எங்கயாச்சும் படம் இருக்கும். என்கிட்ட காப்பி இல்லை’ என்றார். அதற்குப் பல வருடங்கள் கழித்து நான் டெல்லி புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தபோது ஓர் இரவில் ஒரு சானலில் அக்ரஹாரத்துக் கழுதை ஒளிபரப்பானது. உடனே அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். பெட்டர் யூ ஸ்லீப் என்று ரிப்ளை அனுப்பினார். நான் முழுப்படத்தையும் பார்த்தேன். மறுநாள் தொலைபேசியில் அழைத்து ‘கொடுமைதான் சார்’ என்றேன். ‘அது ஒரு காலம்ய்யா’ என்றார். பேசிமுடித்துவிட்டு புத்தகக் கண்காட்சிக்குக் கிளம்பி லிஃப்ட்டில் கீழே இறங்கிவந்தால் அதே ஹோட்டலில் வெங்கட் சாமிநாதன் ரிஷப்சனில் உட்கார்ந்திருக்கிறார். என்னால் நம்பவே முடியவில்லை. ‘என்ன சார் இங்க’ என்றேன். இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கி இருந்துகொண்டே போனிலும் மெசேஜிலும் உரையாடியிருக்கிறோம். எதோ நாடகக் கமிட்டி ஒன்றின் தேர்வுக்காக வந்திருக்கிறார் போல. இரவு வந்து உங்களைப் பார்க்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அவர் அன்றே சென்னை செல்வதாக இருந்தது. போனில் அத்தனை பேசிவிட்டு மறுநாள் காலையில் அதுவும் டெல்லியில் அவரைப் பார்த்த இன்ப அதிர்ச்சி இன்னும் மீளவில்லை.

எனி இந்தியன் பதிப்பித்த புத்தகங்களுக்கான ராயல்டியை அவருக்கு அனுப்பி வைத்திருந்தோம். கிட்டத்தட்ட 30,000 ரூபாய்க்கும் மேல் இருக்கும் என நினைவு. மறுநாள் அவரை அழைத்து ராயல்டி வந்துவிட்டதா என்று கேட்டேன். எ ஸ்வீட் சர்ப்பரைஸ் என்றார். தனக்கு இதுவரை யாருமே இத்தனை பெரிய தொகையை அதுவும் ஒரே செக்கில் ராயல்டி தந்ததில்லை என்றார். மிகவும் ரகசியமாக ‘கோபால் ராஜாராம், பிகே சிவகுமார்கிட்டல்லாம் கேட்டுட்டீராவெ’ என்றார். அவங்களுக்குத் தெரியாம நான் எப்படி சார் தரமுடியும் என்றேன்.

அவர் சென்னையில் இருந்தவரை அடிக்கடி போன் செய்து பேசுவேன். எப்போது அழைத்தாலும் அப்போது மூன்று வயதே ஆகியிருந்த என் மகனின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். சரியான வாலு போலய்யா என்பார். என் நண்பர் டாக்டர் பிரகாஷ் திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அபிராமைப் பார்த்ததும் உடல்வளைத்து மிக வளைத்து மிக மிக வளைத்து கிட்டத்தட்ட எல் போல வளைந்து அவனுக்கு வணக்கம் சொன்னார். சுற்றி இருந்த அத்தனை பேரும் அவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். என் அம்மாவுக்கு அவர் யாரென்றே தெரியாது. நாங்கள் கொடுத்த மரியாதையிலிருந்து அவர் பெரிய எழுத்தாளர் என்று மட்டும் புரிந்திருந்தது. இன்றுவரை என் அம்மாவுக்கு அவர் ‘குனிஞ்சு வணக்கம் சொன்னாரே அவரா’ என்பதுதான். அனைவரையும் சந்திப்பது என்பது வெசாவுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம்.

கூகிள் குழுமம் ஒன்றில் அவரும் இருந்தார். அதில் தினம் தினம் மடல் உரையாடல்கள் நடந்த வண்ணம் இருக்கும். ‘எப்படிய்யா எல்லாருக்கும் இவ்ளோ நேரம் இருக்கு’ என்று எல்லோரையும் கேட்டுக்கொண்டே இருப்பார். பெரியவர் சிறியவர் வேண்டியவர் வேண்டாதவர் வேறுபாடின்றி திறமையைக் கண்டதோறும் அதனைப் புகழ்வார். எத்தனை தெரிந்தவர் என்றாலும் அவரால் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்றைக் கேட்டாலும் கண்டாலும் சீறுவார். சமீபத்தில் மிக சமீபத்தில்கூட மிக நல்ல நண்பரை அப்படிக் கடிந்துகொண்டார். கனவிலும் சமரசத்தை ஏற்காத மனிதர் வெசா. அவரது சீற்றம் எனக்கு அச்சுறுத்தலாகக்கூடத் தெரிந்தது. ஏன் இத்தனை சீற்றம் என்று. அப்போது நானும் அரவிந்தன் நீலகண்டனும் பேசிக்கொண்டோம் ‘சிங்கம்யா. வயசானாலும் சிங்கம்’ என்று. கடைசிவரை சமசரத்தின் நுனிகூடத் தொடாத சமரசத்தின் நிழல்கூடப் படியவிடாத ஒரு மனிதர் அவர். அவர் அவரையொத்த எழுத்தாளர்கள் வாழ்ந்த காலத்திலேயே அழிந்துவரும் நேர்மை இனமொன்றின் பிரதியாகத்தான் இருந்தார். அந்தப் பிரதி இன்று முற்றிலும் அழிந்துவிட்டது. இனி வெசா எவ்வகையிலும் சமரசமற்ற எழுத்தாளரின் பிரதியாகவே எக்காலத்திலும் நினைவுகூரப்படுவார்.

திராவிட இயக்கத்தின் போலித்தனங்கள், கம்யூனிஸத்தின் அடாவடிகளையெல்லாம் வெசா எக்காலத்திலும் ஏற்கவில்லை. எந்த ஒன்றைப் பற்றிப் பேசினாலும் அவர் திராவிட இயக்கத்தின் தீமையைச் சொல்லாமல் ஓய்ந்ததில்லை. அதற்கான ஆயிரம் ஆயிரம் காரணங்கள் அவரிடம் இருந்தன. அவரை முதன்முதலில் சந்தித்தபோதே இக்குரலை நான் கேட்டேன். ‘சரியான பிராமண வெறியரா இருப்பாரோ’ என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் சாதியின் பற்றில் துளிக்கூட கரையாதவர் அவர். சாதியின் கீழ்மைகள் எங்கிருந்தாலும் எச்சாதியில் இருந்தாலும் அதைச் சுட்டிக்காட்டத் தயங்காதவர். இனியொருவர் இப்படி செயல்படமுடியுமா என்பதே ஐயம்தான். இன்றைய உலகம் என்பது சமரசங்களின் உலகம் என்றாகிவிட்டது. குறைவான சமரசம் தவறில்லை என்றாகி, குறைவான சமரசம் இல்லாமல் வாழமுடியாது என்றாகிவிட்டது. சமசரசங்களுக்கான நியாயங்களைப் பட்டியலிடவும் தயாராகிவிட்டோம். இதை இழிசெயலாகவே வெசா என்றும் கருதினார். வெசாவின் வாழ்க்கைப்பாடம் என்பதே எனக்கு இதுதான். என்னால் இன்றுவரை இப்படி இருக்கமுடியவில்லை. நாளையும் இருக்கமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு மனிதராக வெசா இருந்தார் என்பதை நான் வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் அறிவேன். வெசா உலகுக்கு விட்டுச் செல்வதும் இந்த சமரசமற்ற நேர்மையைத்தான்.

வெங்கட்சாமினாதனின் மனைவி இறந்தபோது துக்கம் கேட்க அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். எத்தனை அன்னியான்னியமாக இருந்தவர்கள் என்பது எனக்குத் தெரியும். வெசா இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதும் இனி அவர் எப்படி தனியாக வாழப்போகிறார் என்பதுமே என் எண்ணமாக இருந்தது. வெசா வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். உடன் க்ரியா ராமகிருஷ்ணன் இருந்தார். எனக்கு கிரியா ராமகிருஷ்ணனைத் தெரியாது. தன் மனைவி சட்டென ஐந்து நிமிடத்தில் இறந்ததைப் பற்றி வெசா சொல்லிக்கொண்டிருந்தார். ‘இனிமே எங்க இருக்கப்போறீங்க சார்’ என்று கேட்டேன். அன்றைய நிலையில் அக்கேள்வி எத்தனை அபத்தமானது என்று பிற்பாடு மிக மிக வருந்தியிருக்கிறேன். அத்தோடு நிற்கவில்லை என் அபத்தம். அவர் சொன்னார் ‘பையன் தன்கூட வரச்சொல்றான்யா. எனக்குத்தான் இந்த வீட்டைவிட்டுப் போக இஷ்டமில்லை’ என்றார். அப்போது அவர் மடிப்பாகத்தில் இருந்தார். அவரது மகன் பெங்களூருவில். என் அப்பாவுக்கும் இதேபோன்ற எண்ணம் இருந்தது. திருநெல்வேலியை விட்டு வரக்கூடாது என்ற எண்ணம். அது தந்த எரிச்சலா அல்லது வெசாவிடம் எனக்கிருந்த தாத்தா போன்ற பிம்பமா எதுவெனத் தெரியவில்லை, சட்டென்று சொன்னேன் ‘வயசானவங்களோட பிரச்சினை சார் இது. இங்க தனியா எப்படி இருப்பீங்க, பையன்கூட போங்க’ என்று சொல்லிவிட்டேன். சொன்ன மறுநொடியிலிருந்து என் மனம் அரிக்கத் தொடங்கியது. இதோ இந்நிமிடம் வரை அந்த குற்ற உணர்ச்சி இருக்கிறது. எந்த சந்தர்ப்பத்தில் அதுவும் யாரைச் சொல்லி இருக்கிறோம். அவர் பெங்களூரு செல்வதாக முடிவான உடனே எனக்கு போன் செய்து சொன்னார். அப்போது இதையெல்லாம் சொல்லி மன்னிப்புக் கேட்டுவிடலாமா என்று யோசித்தேன். ஆனால் அவர் அதையெல்லாம் நினைவு வைத்திருப்பாரா என்ற சந்தேகமும் இருந்தது. கடைசிவரை மன்னிப்பே கேட்கவில்லை. கிரியா ராமகிருஷ்ணன் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார் என்றும் யோசிப்பதுண்டு. வெசா பெங்களூருக்கு போனபின்பும் தொடர்ந்து போன் செய்து பேசுவேன். எப்படி இருக்கிறார், அங்கே வாழ்க்கை எப்படி இருக்கிறது, மகனும் மருமகளும் எப்படி கவனித்துக்கொள்கிறார்கள் என்று பலவற்றைக் கேட்பேன்.

சிறிது நாள் போன் செய்யாமல் இருந்து பின்னர் அழைத்தால் ‘என்னய்யா மறந்துட்டீரா. பேஸ்புக்ல போடு போடுன்னு போடறீரே’ என்று தொடங்கி ‘என்னய்யா மனுஷன் அரவிந்தன் நீலகண்டன். படிச்சிட்டே இருப்பாராய்யா’ என்று தொட்டு ‘ஆச்சா. அப்ப அப்ப போன் பண்ணுமய்யா’ வரை பேசிவிட்டுத்தான் வைப்பார். எப்போது அவர் அழைத்தாலும் ‘நீங்கள்லாம் பிசியா இருப்பீங்க. நான் கிழவன்யா’ என்றுதான் தொடங்குவார். சமீபத்தில் அழைத்து எனி இந்தியன் பதிப்பித்திருந்த அவரது புத்தகங்களைக் கேட்டார். எப்படியோ தேடிப்பிடித்து வாங்கிக்கொடுத்தேன். அத்தனை நன்றி சொன்னார்.

ஒரு மாதத்துக்கு முன்பு அழைத்து சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தேன். என் புத்தகம் பற்றிப் பேச்சு வந்தது. புத்தகம் வந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் அவருக்கு அனுப்பவில்லை. உடனே அனுப்பச் சொன்னார். அனுப்பி வைத்தேன். சில நாள்களுக்கு முன்பு அழைத்து ‘சர்ப்பரைஸா இருக்கட்டும்னு சொல்லலய்யா. கணையாழில ரிவ்யூ வருது. உங்க புத்தகம் வேணும்னுட்டாங்க. அதான் இப்ப சொல்லவேண்டியதாப்போச்சு. அனுப்பி வையும்யா’ என்றார். ‘காலை அந்த வாறு வாறுரீரே, கதைல ஏன்யா இவ்ளோ சோகம்’ என்றார். அத்தனை சோகமா இருக்குன்றதே நீங்க சொல்லித்தான் தெரியும் என்றேன். உடனே அவரது ரிவ்யூவை எனக்கு அனுப்பி வைத்தார். அவரது விமர்சனம் வந்ததே நான் செய்த அதிர்ஷ்டம் என்று ஒரு வழக்கமான பதிலை அனுப்பி வைத்தேன். நான் சொன்னது உண்மைதான், என் அதிர்ஷ்டம்தான் அவரது விமர்சனம் சாதேவிக்குக் கிடைத்தது. ஆனால் அதைப் பற்றி எழுதி, அவர் எழுதிய விமர்சனத்துடன் என் தளத்தில் வெளியிட எண்ணி இருந்தேன். சென்ற வாரமே அதைச் செய்திருக்கவேண்டியது. ஸ்கேன் செய்த பக்கங்களின் அளவு பெரியதாக இருந்ததால் கொஞ்சம் சோம்பேறித்தனம் வந்துவிட்டது. ஆனால் இன்றோ வெசா இல்லை.

சில உலகத் திரைப்படங்களின் சிடியை கொடுத்திருக்கிறேன். சில புத்தகங்களைக் கொடுத்திருக்கிறேன். உடனே அழைத்து ‘என்னய்யா ஆளு நீ. இதையும் பாத்துட்டு படிச்சுட்டு எப்படிய்யா ரஜினியை புகழ முடியுது’ என்பார். முடியுதே சார் என்பேன். முடியக்கூடாதேய்யா, எதாவது ஒண்ணுதான சரியா இருக்கமுடியும் என்பார். உண்மையில் வெசா இதுதான். அவரால் இரண்டாக இருக்கமுடியாது. மீனுக்குத் தலையும் பாம்புக்கு வாலும் காட்டமுடியாது. பதவிக்காகவோ பணத்துக்காகவோ தன் நிலையிலிருந்து சற்றும் கீழிறங்க முடியாது. இனி இப்படி ஒருவரை காலம் நமக்கு அளிக்கவேண்டும் என்பதே நம் விருப்பமாகவும் வேண்டுதலாகவும் இருக்கவேண்டும். http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60609292&edition_id=20060929&format=html இந்தக் கட்டுரையை வாசியுங்கள், வெசாவின் ஒரு துளி என்றாலும் அது நீக்கமற நிறைந்துள்ளது. ஞானரதத்தில் வந்த இலக்கியச் சண்டைகள், யாத்ராவில் வந்தவை என அவரது காலத்தில் எழுதி அவர் விட்டுச்சென்றவை என்றைக்கும் புறக்கணிக்க இயலாத இலக்கியப் பிரதிகளாக இருக்கும். வெசா திராவிட எதிர்ப்பாளர் என்றும் கம்யூனிஸ எதிர்ப்பாளர் என்றும் தனிநபர் தாக்குதல்களைச் செய்பவர் என்றும் காதில் விழுவதெல்லாம் தங்கள் கொள்கையின் கீழே நின்று ஒலிக்கும் மேம்போக்கான குரல்களே. இக்குரல்களில் அவர்கள் உண்மையான வெசாவைக் கடந்து செல்ல முயல்வார்கள். வெசா கடுமையாக எழுதுபவரே அன்றி ஆபாசமாக எழுதியவரல்ல. கடுமையான விமர்சனம் என்பது இலக்கியத்தின் ஆதார சுருதி. அதை வெசா போன்று பலர் செய்யாமல் இருப்பதுதான் பிரச்சினையே அன்றி, பிரச்சினை வெசா அல்ல.

இதையெல்லாம் இன்று இழந்திருக்கிறோம். இத்தனையையும் மீறி மனம் என்னவோ இனி ‘ஆச்சா’ ‘என்னய்யா’ ‘கிழவன்யா’ என்ற குரலையோ விகசிப்பு, விழுமியம், விடம்பனம் போன்ற வார்த்தைகளையோ வெசாவிடமிருந்து பார்க்க/கேட்கமுடியாது என்பதையே நிறைவுசெய்யமுடியாத இழப்பாக நினைத்துக்கொள்கிறது. ஒரு பிதாமகனுக்குரிய கம்பீரத்துடனும் நேர்மையுடனும் இறைவனடி சென்றிருக்கும் வெசா என்றும் என் நினைவில் இருப்பார். அவருக்கு என் கண்கள் பனிக்க அஞ்சலி. இனியாவது இன்று உறங்கமுடியுமா என்று பார்க்கிறேன்.

Share

Vaali – Some thoughts

தொடக்கக் குறிப்பு: இது வாலியைப் பற்றிய ஆய்வு அல்ல. எனவே ஒத்திசைவு ராமசாமிகள் (http://othisaivu.wordpress.com/2012/03/10/post-100/) கொஞ்சம் விலகி நிற்கவும். 😉

இரண்டாம் குறிப்பு: நான் இங்கே வாலி எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கும் பாடல்களில் சில வாலி எழுதாமல் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. அதை ஒரு புள்ளி விவரப் பிழை என்று மட்டும் கொள்ளவும். உண்மையில் பல திரையிசைப் பாடல்களை யார் எழுதியது என்று கண்டுபிடிப்பதே பெரிய சிரமமாக இருந்தது. அதோடு வாலியும் ராஜாவும் சேர்ந்து பணியாற்றிய பாடல்கள் நினைவில் வந்து அருவிபோல் கொட்டுகின்றன. (வார்த்தைகள் முட்டுகின்றன! வாலி!) ஒரு பாடலை நினைக்குபோது அதிலிருந்து அதிலிருந்து என பலப்பல பாடல்கள். ஆய்வுக் கட்டுரை அல்ல என்று சொல்லிவிட்டதாலும் என் மனத்திலிருந்து எழுதுவதாலும் நினைவிலிருந்த வரிகளை மட்டுமே இங்கே குறிப்பிடப் போகிறேன்.

மூன்றாம் குறிப்பு: நான் வாலியை வந்தடைந்தது இளையராஜாவின் வழியாகத்தான். எனவே நான் எழுதப்போகும் இந்தப் பதிவு தொடர்ச்சியாக இளையாராஜவைப் பற்றியும், எனவே வைரமுத்துவைப் பற்றியும் பேசும் வாய்ப்பு உண்டு. எம் எஸ் வி மற்றும் கேவி மகாதேவன் இசையில் வாலி பல நல்ல பாடல்களை எழுதியிருக்கிறார். நல்ல பாடல்கள் தவிர மற்ற பாடல்கள் பற்றித் தெரியாததால் நான் அவற்றைத் தொடவில்லை. 1976லிருந்து 2000 வரை என வைத்துக்கொண்டாலும், 24 வருடங்களில் வாலியை வரையறுத்தாலே அதன் முன்பின்னாக நாம் நீட்டித்துக்கொள்ளமுடியும் என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து படிக்க…

Share

மலர்மன்னன் – சில நினைவுகள்

மலர்மன்னன் இறந்துபோவதற்கு இரண்டு நாள்கள் முன்புதான் என்னிடம் பேசியிருந்தார். அவர் எழுதி, திரிசக்தி பதிப்பகம் வெளியிட்டிருந்த வந்தேமாதரம் நூல்களை விற்பது தொடர்பாகவும் அதை மார்கெட் செய்வது தொடர்பாகவும். இரண்டு நாளில் அவரது மரணச் செய்தி வந்தது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, மலர்மன்னன் என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருந்தேனே ஒழிய, அவருடன் பழக்கமெல்லாம் இருந்ததில்லை. இப்போதும்கூட மலர்மன்னனுடன் நெருங்கிப் பழகியவன் என்றெல்லாம் சொல்லமுடியாது. சில வருடங்களுக்கு முன்பு ஹிந்துத்துவ நண்பர்கள் என்னிடம் சொன்ன மலர்மன்னனாகத்தான் அவர் எனக்கு பெயரளவில் அறிமுகமானார். அவரைப் பற்றிய எனது மனப்பதிவு அவர் கடும் பிராமண சாதிய ஆதரவாளர் என்பதே. அதே மனப்பதிவோடுதான் அவர் எழுதிய புத்தகங்களை நான் வாசித்தேன். அதே தீர்மானத்தோடுதான் அவர் எழுதிய புத்தகங்களையும் புரிந்துகொண்டேன். நான் எழுதிய புத்தக விமர்சனம் கூட அதே நிலைப்பாட்டில்தான் இருந்தது. அதைத் சரியாகப் புரிந்துகொண்ட மலர்மன்னன் அதற்கு ஒரு பதிலும் எழுதியிருந்தார்.

நான் மலர்மன்னனை முதலில் சந்தித்தது, எனி இந்தியன் பதிப்பகம் சார்பாக கலந்துகொண்ட சென்னை புத்தகக் கண்காட்சியில். உண்மையில் அவரை அதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதுமில்லை. கையில் ஒரு புத்தகத்துடன் அதை விற்பனைக்கு வைக்கமுடியுமா என்று கேட்டு வந்தார். நான் எனி இந்தியன் உரிமையாளர்களிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று சொன்னேன். அவரே கோபால் ராஜாராமுடன் பேசுவதாகச் சொன்னார். அவர் சென்ற பிறகு, எனக்கு அருகில் இருந்த விருட்சம் அழகியசிங்கர், அவர் யாரென்று தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்றேன். அவர்தான் மலர்மன்னன், கோபால் ராஜாராமுக்கெல்லாம் தெரியும், முன்பு கால் என்று பத்திரிகை நடத்தியிருக்கிறார், தற்போது முண்டா பழங்குடியினர் பற்றி அவர் எழுதியிருக்கும் கண் விழித்த கானகம் என்னும் நாவலை விற்க உங்களிடம் கேட்கிறார் என்றார். நாவலுக்கு பெயர் கண் விழித்த கானகமா, எப்படிங்க யார் வாங்குவா என்றேன். இப்படித்தான் முதன்முதலில் மலர்மன்னனை அறிந்துகொண்டேன். (இன்னும் நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை. இனி படிப்பேன்.)

அடுத்த அறிமுகம் – காலச்சுவடு நடத்திய கூட்டம் ஒன்றில், அவர் தனது கருத்துகளைக் கடுமையாக முன்வைத்தபோதுதான். ஃபிலிம் சேம்பர் அரங்கில் நடந்த கூட்டத்தில், சல்மா பங்குபெற்ற மேடை ஒன்றில், வழக்கம்போல மதச்சார்பின்மை என்ற பெயரில் ஹிந்து இயக்கங்களுக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. (இதைத் தவறு என்று சொல்லவில்லை, என் கருத்தாக மட்டும் சொல்கிறேன்.) பின் வரிசையில் எனக்கு அருகில் அமர்ந்திருந்த பிராவஹன் அக்கருத்துக்களை மிகக் கடுமையாக எதிர்த்தார். எழுந்து நின்று சத்தம் போட்டார். அதைவிட உரத்தகுரலில் முதல் வரிசையில் இருந்து ஒரு குரல் வந்தது. அது மலர்மன்னனின் குரல். கண்ணன் மேடையேறி என்னென்னவோ சமாதானங்கள் சொல்லிப் பார்த்தார். ஆனால் மலர்மன்னனும் பிரவாஹனும் ஓயவே இல்லை. எனவே அம்மேடை பாதியில் நிறுத்தப்பட்டது. அம்மேடையில் கிருஷ்ண ஆனந்தும் இருந்ததாக நினைவு. இதைப் பற்றி அடுத்த காலச்சுவடு இதழில் சல்மா, கண்ணன், மலர்மன்னன், பிரவாஹன் எல்லாருமே எழுதியிருந்தார்கள் என நினைக்கிறேன். அப்போதெல்லாம் மலர்மன்னன் வெண்ணிற பைஜாமாவில் வருவது வழக்கம்.

அதற்குப் பின்பு மலர்மன்னனைப் பற்றி நான் கேள்விப்பட்டவை எல்லாம் நல்லதாக இல்லை என்பதே உண்மை. அவையெல்லாம் உண்மையா புரட்டா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அதை எனக்குச் சொன்ன நண்பர்கள் நிச்சயம் பொய் சொல்பவர்களோ புரட்டாளர்கலோ அல்ல என்பது உறுதி. அதுமட்டுமல்லாமல், அவர்களே மலர்மன்னன் மேல் மிகுந்த மரியாதை உடையவர்களாகத்தான் இருந்தார்கள், அத்தனைக்குப் பிறகும்.

இந்த அடிப்படையில்தான், கிழக்கு வெளியிட்ட திமுக உருவானது ஏன் என்ற, மலர்மன்னன் எழுதிய நூலை வாசித்தேன். இத்தனை மனச்சாய்வுக்குப் பிறகும், அந்த நூல் மிகவும் பிடித்திருந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. திமுகவை எதிர்க்க, மலர்மன்னனின் சாய்வு மிகச் சரியாகப் பொருந்திப் போய்விட்டதும், அதோடு என் அரசியல் சாய்பு பொருந்திப் போய்விட்டதும் காரணம் என யூகிக்கிறேன். அதைவிட எனக்கு மிகவும் பிடித்திருந்தது, மலர்மன்னனின் எழுத்து நடை. மிகத் தெளிவானது, குழப்பமில்லாதது. சில இடங்களில் நக்கலுடன் கூடியதும்கூட. இது அவரது புத்தகத்தை மிக விரைவாக வாசிக்க வைத்தது. மலர்மன்னனின் புத்தகங்களெல்லாம் விற்பனை ஆகுமா என்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. ஆனால் அவரது புத்தகம் ஓரளவு நன்றாகவே விற்பனை ஆனது, ஆகிக்கொண்டிருக்கிறது என்பதுதான் நடைமுறை உண்மையாக இருக்கிறது.

காந்தியைப் பற்றிய தீவிர ஹிந்துவின் பார்வையாக (நான் அதை ஹிந்துத்துவாவின் பார்வை என ஏற்கவில்லை) மலர்மன்னன் எழுதிய கட்டுரைகள், அதன் சாய்வை மையமாக வைத்தே மிக முக்கியமானவையாகின்றன. நவகாளி பற்றித் தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட மலர்மன்னின் கட்டுரை மிக அசத்தலாக இருந்தது. இதை அப்போதே பலருடன் பகிர்ந்துகொண்டேன்.  அதேபோல் காந்தியையும் கோட்சேவைப் பற்றிய பதிவும் முக்கியமானது. (இதை இன்று தேடியபோது டோண்டுவின் பதிவில் கிடைத்தது. டோண்டுவுடன் எனக்குப் பழக்கமில்லை. ஒன்றிரண்டு முறை ஹாய் சொல்லியிருக்கிறேன். அவரும் மறைந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.)  மலர்மன்னன் காந்தியை மோகன் தாஸ் என்றே குறிப்பிட்டு வந்திருக்கிறார். இன்றைய ஹிந்து இஸ்லாம் பிரச்சினைக்கு காந்தியே காரணம் என்று நம்பியிருக்கவேண்டும்.

இப்படி மலர்மன்னன் பற்றிய என் புரிதல் இருந்த நேரத்தில், மலர்மன்னனின் ஆர்ய சமாஜம் கிழக்கு வெளியீடாக வெளிவந்தது. மலர்மன்னனுக்காகவே அந்த நூலை வாசித்தேன். மிகவும் பிடித்திருந்தது. அதற்கு ஒரு மதிப்புரை போல ஒன்றை எழுதினேன். மலர்மன்னன் அதற்குப் பதில் எழுதியிருந்தார். வழக்கம்போல என் பார்வை, மலர்மன்னன் ஒரு பிராமண ஆதரவாளர் என்பதை மையமிட்டதாக இருந்தது. அதை அவர் ஏற்கவில்லை.

இந்நிலையில் திராவிட இயக்க நூற்றாண்டு வந்தது. இதை ஒட்டி மூன்று அல்லது நான்கு புத்தகங்கள் கொண்டு வர கிழக்கு பதிப்பகம் முடிவு செய்திருந்தது. ஒரு புத்தகம் ஒரு தலித்தின் பார்வையில் இருந்து, இன்னொரு புத்தகம் ஒரு திமுக ஆதரவாளரிடமிருந்து. இன்னொரு புத்தகம் ஹிந்துத்துவப் பார்வையிலிருந்து. ஹிந்துத்துவப் பார்வையில் இருந்து வரவேண்டிய புத்தகத்தை மலர்மன்னன் எழுதினால் நன்றாக இருக்கும் என்று பத்ரியிடம் சொன்னேன். எனது தனிப்பட்ட ஆசை, அது பிராமணப் பார்வையிலிருந்தும் வரவேண்டும் என்பதே. ஆனால் இதை நான் மலர்மன்னனிடம் சொல்லவில்லை. மலர்மன்னனுடன் பணி புரிவதில் சில சிக்கல்கள் உண்டு என்பதே ஒரு பொதுக்கருத்தாக இருந்தது. அதைமீறி அவர் அப்புத்தகத்தை எழுதினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன். அவருடன் பேசுவது, அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதை நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். அப்போதுதான் அவரிடம் நான் தனிப்பட்டமுறையில் முதன்முறையாகப் பேசினேன்.

நான் அவர் புத்தகங்களுக்கு எழுதிய விமர்சனங்களை நினைவு கூர்ந்தார். நம்ம, நாம என்றே பேசினார். ஒரு ஜி வட்டம் உருவாகிவிட்டதை உணர்ந்தேன். அவர் எழுதி ஏற்கெனவே வெளிவந்த திமுக உருவானது ஏன் புத்தக எடிட்டிங்கில் அவருக்கு சில மனக்குறைகள் இருந்தன. அவற்றைச் சொன்னார். இம்முறை அப்படி நேராமல் பார்த்துக்கொள்ளலாம் என்றேன். இந்தப் புத்தகம் குறித்து பத்ரியைச் சந்தித்துப் பேச வந்தார்.

அவர் பத்ரியைச் சந்திக்கவந்தபோது அது மலர்மன்னன்தானா என்ற சந்தேகம் வந்துவிட்டது. அந்த தாடி மட்டும் இல்லை என்றால் நிச்சயம் குழம்பியிருப்பேன். வெறும் காவி வேட்டி மட்டுமே கட்டியிருந்தார். மேலே ஒரு காவித் துண்டு. என்ன ஜி இப்படி என்றேன். எல்லாத்தையும் விட்டாச்சு, சந்நியாசம் வாங்கிட்டேன், உங்களுக்குத் தெரியாதா என்றார். கையில் இருந்த வாட்ச்சைக் காட்டி, ஒரு நண்பர் அன்பா கொடுத்தார்ன்றதால இதை கட்டிக்கிட்டு இருக்கேன், சந்நியாசிக்கு எதுக்கு வாட்ச் சென்றார். திராவிட இயக்கத்தை எக்ஸ்போஸ் செய்யணும் ஜி என்றேன். அப்படி முன்முடிவோடல்லாம் எழுதவேண்டியதில்லை என்றார். எனக்கு சப்பென்று ஆகிவிட்டது. எனக்கு இருந்த பயம், மற்ற பார்வைகளில் இருந்து வெளிவரும் புத்தகங்கள் மிகவும் சரியான பார்வையோடு இருந்து, ஹிந்துத்துவக் கண்ணோட்டத்தில் வரும் மலர்மன்னனின் புத்தகமும் திராவிட இயக்கத்துக்கு ஏதோ ஒரு வகையில் ஆதரவு அளித்துவிட்டால் என்னாவது என்பதுதான். மலர்மன்னனின் அந்த பதில் எனக்கு அப்படி ஒரு எண்ணத்தை வரவழைத்துவிட்டது. என்ன என்ன செய்யவேண்டும் என்பதையெல்லாம் முதல் மீட்டிங்கிலேயே முடிவுசெய்துவிட்டார். இரண்டே நாள்களில் வேலையையும் ஆரம்பித்துவிட்டார்.

அதற்குப் பின்பு அவர் என்னிடம் தனியாகப் பேசியபோது என் பயம் முற்றிலும் அகன்றது என்றே சொல்லவேண்டும். திராவிட இயக்கமே ஒரு ஃபேக் என்றார். புத்தகம் பெயரே இப்படி வெச்சிரலாம் ஜி என்றேன். சிரித்துக்கொண்டார். என்ன பிரசன்னா, புத்தகம் வந்தா கடுமையா எதிர்ப்பாங்களா என்றார். எதுத்தா அதுக்கும் பதில் எழுதிடலாம் என்றார். என்ன என்ன எதிர்ப்புகள் வருமோ அதற்கெல்லாம் இப்போதே சேர்த்து புத்தகத்தில் எழுதிடுங்க ஜி என்றேன். ஓ அப்படி சொல்றீங்களா என்றார்.

முதல் அத்தியாத்தை எனக்கும் பத்ரிக்கும் அனுப்பினார். அடுத்தடுத்து அத்தியாயங்கள் வந்துகொண்டே இருந்தன. ஐந்து அத்தியாயங்கள் வரை படித்துக் கருத்துச் சொன்னேன். பின்னர் படிக்கவில்லை. விட்டுவிட்டேன். புத்தகமாக வந்ததும் படித்துக்கொள்கிறேன் ஜி என்றேன். நீங்க படிச்சு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் என்றார். என்னால் படிக்க முடியாமலேயே போனது. சோம்பேறித்தனமன்றி வேறு காரணங்கள் இல்லை. ஸாரி மலர்மன்னன் ஜி. 🙁

திராவிட இயக்கத்தை ஒட்டி கிழக்கு கொண்டு வர நினைத்த புத்தகங்களில் வெளிவந்தது இந்த ஒரே ஒரு புத்தகம் மட்டுமே. மற்ற புத்தகங்களை எழுத ஒப்புக்கொண்டவர்கள் அல்லது அதைப் பற்றிப் பேசியவர்கள் யாருமே அதை முழுமூச்சாகக் கையில் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு புத்தகமாக வெளிவருவதன் அவசியம் பற்றியோ, அது தரப்போகும் நீண்ட காலத் தாக்கம் பற்றியோ தெளிவாகப் புரிந்துகொண்டவர் மலர்மன்னன் மட்டுமே.

அந்தப் புத்தகம் எழுதுவதற்குப் பல புத்தகங்களின் நகல்கள் வேண்டுமென்று மலர்மன்னன் கேட்டார். பெரும்பாலான புத்தகங்களைத் தந்துதவியவர் ம.வெங்கடேசன். அரிதான புத்தகங்களெல்லாம் வெங்கடேசனிடமிருந்தன. வெங்கடேசன் ஒரு புத்தகக் களஞ்சியம். வெங்கடேசன் பற்றி ஒரே ஒருமுறை மலர்மன்னனிடம் சொன்னேன். வெங்கடேசனைத் தெரியும் என்றார். மலர்மன்னனின் நன்றிக்குறிப்பில் வெங்கடேசன் பெயரைச் சேர்க்கச் சொல்லவேண்டும் என நினைத்துக்கொண்டேன். புத்தகம் வெளிவரும்போது சொல்லிக்கொள்ளலாம் என்று அப்போதைக்கு அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் புத்தகம் வெளிவரும்போது வெங்கடேசன் பெயரைச் சேர்க்கச் சொல்லமுடியாமல் போய்விட்டது. மலர்மன்னனே சேர்த்திருக்கவேண்டும் என்றும் சொல்லமுடியாது. ஏனென்றால் நான் வாங்கித் தந்த பெரும்பாலான புத்தகங்கள் வெங்கடேசன் தந்தவை என்று மலர்மன்னனுக்குத் தெரியாது. புத்தகம் வெளிவந்ததும் இது பற்றிச் சொன்னேன். அப்படியா, நீங்க மொதல்லயே சொல்லிருக்கலாமே என்றார். ஆமா ஜி, என் தப்புதான் என்றேன். இப்ப என்ன பண்றது என்றார். அடுத்த பதிப்பில் சேர்க்கலாம் என்றேன். சரி என்றார். வெங்கடேசனுக்கு இது எதுவுமே தெரியாது. தன் பெயர் வரவேண்டும் என்றெல்லாம் நினைக்கக்கூடிய மனிதர் அல்ல வெங்கடேசன். ஆனால் எனக்குத்தான் குற்ற உணர்ச்சியாக இருந்தது. குற்ற உணர்ச்சியுடனேதான் வெங்கடேசனுக்கு திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் புத்தகத்தை அனுப்பி வைத்தேன். அதிலும் மலர்மன்னன் இறந்த செய்திகேட்டபோது மிகவும் நொந்துபோய்விட்டேன். 🙁

திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் என்ற பெயரைவிட திராவிட இயக்கம் பொய்யும் புரட்டும் என்ற ரேஞ்சுக்குத்தான் பெயர் வைக்க மலர்மன்னன் விரும்பினார். பத்ரி அதை ஏற்கவில்லை என நினைக்கிறேன். நான் ஏற்கவில்லை என்றும் அவரிடம் சொன்னேன். புனைவும் உண்மையும்னா கொஞ்சம் மெல்ல தடவிக்கொடுக்கிற மாதிரி இருக்காது என்று கேட்டார். அதெல்லாம் சரியா வரும் ஜி என்றார். பத்ரியிடம் முடிவை விட்டுவிட்டார். கடந்த முறை இருந்த கசப்பனுவங்கள் எல்லாம் அவருக்கு மறைந்திருந்தது. மிக எளிமையான மனிதராக, ஒரு எடிட்டிங்கின் தேவையெல்லாம் புரிந்து நடந்துகொண்டார். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. காந்தியைப் பற்றி அவர் புத்தகம் எழுதினால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் யோசித்து வைத்திருந்தேன். அது நடக்காமல் போய்விட்டது.

சென்னை புத்தகக் கண்காட்சியின்போது வந்திருந்தார். அவரது வந்தே மாதரம் புத்தகத்தையும் விற்பனைக்கு வைத்திருந்தோம். ரொம்ப நன்றி பிரசன்னா என்றார். நான் விற்பனையில் படு மும்மரமாக இருந்தேன். அவர் சொல்வதையெல்லாம் மனதால் வாங்கிக்கொள்ளாமல் சரி சரி என்று சொல்லிக்கொண்டிருந்தேன். என்ன என்னவோ சொன்னார். அவருடன் வந்திருந்த ஒரு சகோதரியை அறிமுகப்படுத்தினார். அவரைப் பற்றியும் என்னவோ சொன்னார். என்னவென்று இப்போது நினைவுக்கு வரவில்லை. யாரோ ஓர் இசை ஆளுமையின் பேத்தி என்ற நினைவு. அந்தப் பெண்மணி, மலர்மன்னனின் ஆதரவில்தான் தன் வாழ்க்கையே நடக்கிறது என்றும், மலர்மன்னன் அடைக்கலம் தந்தார் என்றும் சொன்னார். அடைக்கலம் என்ற வார்த்தையைக் கடுமையாக மறுத்தார் மலர்மன்னன். எனக்கு நீ உதவி செய்றம்மா என்று அவர் சொல்ல, அதை அவர் மறுக்க, அவர்கள் இருவரும் அங்கேயே விவாதிக்கத் தொடங்கினார்கள். 

இறந்து போவதற்கு இரண்டு தினங்கள் முன்பு பேசும்போது, நான் திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் புத்தகத்தைப் படித்துவிட்டேனா எனக் கேட்டார். படிச்சுக்கிட்டே இருக்கேன் என்றேன். எதாவது விமர்சனம் வந்தா சொல்லுங்க என்றார். புத்தகம் பற்றி அவருக்கு வரும் விமர்சனங்களையெல்லாம் எங்களுக்கு அனுப்பி வைப்பார். அவர் எழுத்து புத்தகமாக வருவதில் பெரிய ஆர்வம் அவருக்கு இருந்தது. 

மோடியின் குஜராத் புத்தகத்தைக் கொடுக்க கடந்த வாரம் பிஜேபியின் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே செயல்வீரர்கள் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. மோடியின் குஜராத் புத்தகத்தின் முக்கியத்துவம் பற்றி பொன் ராதாகிருஷ்ணன் சொன்னார். அப்போது அங்கே இருந்த இல. கணேசன், ‘கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட இன்னொரு முக்கியமான புத்தகம் திராவிட இயக்கம் புனைவும் உண்மையும். நான் படித்துவிட்டேன். நம் பார்வையில் அசைக்கமுடியாத ஆதாரங்களுடன் வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தை எழுதியவர் மலர்மன்னன். அந்தப் புத்தகத்தையும் அனைவரும் படிக்கவேண்டும்’ என்றார். இதைப் பற்றி மலர்மன்னனிடம் சொல்ல நினைத்திருந்தேன். அதற்குள் அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

மலர்மன்னனின் இழப்பு ஹிந்த்துத்துவ நோக்கில் பெரிய இழப்பு. அவர் பிராமணவாதி என்பது என் முன்முடிவு. அவரோட பேசிய (பழகிய அல்ல) நாள்களில், அந்த முன்முடிவு தவறு என்று சொல்லும்படியாக எதுவும் நடந்துவிடவில்லை. அதேபோல் அது சரியானது என்னும்படியாகவும் எதுவும் நடந்துவிடவில்லை என்பதே அதைவிட முக்கியமானது. ஆனால் சந்தேகமே இல்லாமல் நல்ல ஹிந்துத்துவவாதி. ஒரு சாதியவாதி எப்படி நல்ல ஹிந்துத்துவவாதியாக இருக்கமுடியும் என்ற குழப்பங்கள் எனக்கு உண்டு. ஆனால் அவருக்குள் அந்த முரண் இருக்கவே இல்லை. ஒருவேளை என் முன்முடிவு தவறாகவும், அவர் சாதியவாதியாக இல்லாத ஒரு நிஜ ஹிந்துவாக இருந்திருக்கக்கூடும். எப்படி இருந்தாலும், என் கருத்துகளை என் கருத்துகள் என்று மட்டும் எடுத்துக்கொள்ளவும். ஜி என்று அவரை விளிக்கும் ஒரு மனிதரை அவர் உடனே விரும்பினார். அவர் ஹிந்துக்களின் மீதும் ஹிந்துத்துவத்தின் மீதும் தீராக் காதல் கொண்டிருந்தார். கிறித்துவ மதமாற்றமும், இஸ்லாமிய பயங்கரவாதமும் அவருக்கு இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கின. சித்தர்களைப் பற்றிய பெரிய ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தது. அவர் வீட்டருகில் இருக்கும் ஒரு சித்தரின் சமாதிக்கு என்னை வருமாறு அழைத்திருக்கிறார். ஒரு நல்ல மனிதர். அவரது இழப்பு ஈடு செய்யமுடியாதது. அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.

Share

பரமக்குடி சொல்லும் செய்திகள்

வாசிக்க: http://www.tamilpaper.net/?p=4086

Share

ராஜமார்த்தாண்டன் – மனதின் கலைஞன்

கட்டுரையை வாசிக்க – தமிழ் ஹிந்து.காம் செல்லவும்.

Share

ஒரு நண்பனின் கதை இது

முன்குறிப்பு: இது கையறுநிலையில் எழுதப்பட்ட சுயபுலம்பல் மட்டுமே.

ஜெயகாந்தன் ஒருதடவை ‘இறந்தவனைக் கண்டு அழும் மனிதன் ஒவ்வொருவனும் தன் இறப்பை அதில் கண்டே அழுகிறான்’ என்ற ரீதியில் எழுதியிருந்தார். இதுகுறித்து நிறைய யோசித்திருக்கிறேன். இதில் எங்கோ உண்மையிருக்கிறது, ஆனால் அது சரியாகச் சொல்லப்படவில்லை என்றும் தோன்றியது.

நேற்று (17-11-2008) காலையே ஒரு மரணச் செய்தியாக, நண்பன் ஒருவனின் அகால மரணச் செய்தியாக, மிகப்பெரிய இடியைப் போல வந்திறங்கியது அச்செய்தி. என் வயதுதான். ப்ளஸ் 1, ப்ளஸ் 2 என்னுடன் படித்தான். நல்ல சிகப்பில், நிறைய முடியுடன், கொஞ்சம் பூசினாற் போல், மிக அழகாக இருப்பான். கல்லூரியில் பலர் இயற்பியல் எடுக்க, நான் மட்டும் வேதியியல் எடுத்தேன். அவன் மட்டும் கணிதம் எடுத்தான்.

நான் பத்தாம் வகுப்பு படித்தது மதுரையில். பதினொன்றாம் வகுப்புக்கு திருநெல்வேலியில் உள்ள மதிதா இந்துக்கல்லூரியில் சேர்ந்தேன். அங்கேதான் அவன் பரிச்சயம் ஆனது. எல்லா மாணவர்களும் தனித்தனியாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்க, அவன்தான் முதன்முதலில் நான்கைந்து பேர் சேர்ந்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்தியவன். அதேபோல், அந்த கூட்டம் அதிகமாகிவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தவன். அவன் அம்மா அவனுக்கு விதவிதமாகச் செய்து தந்து அனுப்புவார்கள். ஒருகட்டத்தில் மதியம் வரை காத்திராமல் முதல் இடைவேளையிலேயே அதனை உண்ண ஆரம்பித்தோம். எங்கள் உணவிலிருந்து அவனுக்குத் தருவோம்.

உண்டுவிட்டு, மதிதா இந்துக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியைச் சுற்றி வருவோம். சும்மா செல்லாமல் கடலை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு போகலாம் என்று சொல்வான். வாழ்த்து அட்டை விற்கும் கடையில், காதலர்களுக்கான வாழ்த்து அட்டையைக் காண்பிப்பான். குறைந்த ஆடைகளில் உடலுறவுக்கு அழைக்கும்விதமாக ஆணும் பெண்ணும் அந்த வாழ்த்து அட்டைகளில் இருப்பார்கள். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வருவோம்.

அவனுக்கு நெய்ச்சோறும் வெல்லமும் மிகவும் பிடிக்கும். யாராவது அதைக் கொண்டுவந்தால், அவன் கொண்டுவரும் சப்பாத்தி அல்லது பூரியைக் கொடுத்துவிட்டு அதை வாங்கிக்கொள்வான்.

நண்பர்களுக்குள் ஓட்டிக்கொள்வது என்பதைத் தொடங்கி வைத்தது அவன்தான். என்னுடன் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே, திடீரென்று கட்சி மாறி, ‘இப்ப உங்கட்சி இல்ல, அவங்கட்சி’ என்று சொல்லி, அதுவரை எதையெல்லாம் சப்போர்ட் செய்தானோ அதையெல்லாம் எதிர்த்துப் பேசுவான். ஒவ்வொரு சமயம் வகுப்புக்குள் நுழையும்போதே, ‘நான் இன்னைக்கு அவன் சைட்ல’ என்று சொல்லிக்கொண்டே வருவான்.

மழை பெய்து ஓய்ந்திருக்கும் வேளையில், எங்களில் யாரேனும் ஒருவர் தோள்மீது கைபோட்டு பேசிக்கொண்டே சென்று, ஏதேனும் மரத்தடிக்குக் கீழே சென்றவுடன், மரத்தடியில் கிளையை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு ஓடுவான். அவன் ஓடிவிடுவான். இலைகளில் சேர்ந்திருக்கும் நீரெல்லாம் அவன் அழைத்துக்கொண்டு சென்ற நண்பன் மீது விழ, மற்ற நண்பர்கள் பெருங்குரலெடுத்துச் சிரிப்பார்கள்.

நாங்களெல்லாம் கிரிக்கெட் என்று அலைந்துகொண்டிருக்க, அவன் ஸ்டெஃபியின் மிகத் தீவிர ரசிகனாக இருந்தான். ஒவ்வொரு ஓபன் டென்னிஸின் பைனல்ஸ் ஸ்கோரையும் ஒப்பிப்பான். திடீரென்று ஒருநாள், தனக்கு இனிமேல் ஸ்டெபி கிராஃப் பிடிக்காது என்றும் மோனிகா செலஸ்தான் பிடிக்கும் என்றும் அறிவித்தான். அப்படி எப்படி மாறமுடியும் என்றால், அது அப்படித்தான் என்று சாதித்தான். அத்தோடு ஸ்டெபி கிராபிற்கு விளையாடவே தெரியாது என்றெல்லாம் சொல்லி திட்ட ஆரம்பித்தான். எங்களுக்கெல்லாம் தலை சுற்றியது.

தமிழை வாசிப்பதில் எனக்கும் அவனுக்கும் பெரிய போட்டியே நடக்கும். அவன் தொலைக்காட்சி, வானொலிகளில் வாசிப்பவர்கள் போல வாசிப்பான். ஏதேனும் ஓரிடத்தில் திடீரென்று திக்கினாலோ, நிறுத்தக்கூடாத இடத்தில் நிறுத்தினாலோ நான் அவனைப் பார்த்துச் சிரிப்பேன். நான் வாசிக்கும்போது நான் எப்போதெல்லாம் தவறு விடுகிறேன் என்பதைக் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்திருப்பான்.

பள்ளிவாசம் முடிந்து நாங்கள் கல்லூரிக்குச் சென்றோம். எல்லாரும் பேசி வைத்து, இயற்பியல் என்றெழுதினார்கள், விண்ணப்பபடிவத்தில். நான் வேண்டுமென்றே வேதியியல் என்று எழுதினேன். இத்தனைக்கும் வேதியியலை விட இயற்பியலில் அதிகம் மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். அவன் கணிதம் என்று எழுதினானா என்பது நினைவில்லை. ஆனால் அவனுக்குக் கணிதம்தான் கிடைத்தது.

ஒருவருடம்தான் கல்லூரியில் படித்தான். அதற்குள் ஸ்டாஃப் நர்ஸ் கோர்ஸ் கிடைத்துவிட்டது. ஹைகிரவுண்டில் சேர்ந்துவிட்டான். எங்களுக்கெல்லாம் வருத்தமாக இருந்தது. அவன் இதற்காக அழுதே விட்டான். ஆனாலும் எங்கள் நட்பு அறுந்துவிடவில்லை. அது வேறொரு புதிய பரிமாணத்துடன் கிளைத்தெழுந்து செழித்தது என்றே சொல்லவேண்டும்.

அவனுக்கு ஹைகிரவுண்டில் விதவிதமாக நண்பர்கள் அறிமுகமானார்கள். எல்லோரையும் எங்கள் நண்பர்களாக்கினான். வாராவாரம் நாங்கள் அவனைப் பார்க்கப் போவோம். அதுவரை பெண்கள், கிரிக்கெட், கிண்டல் என்றே பேசிக்கொண்டிருந்த நாங்கள், வயதின் வளர்ச்சியில், காமம், உடலுறவு என்று பேச ஆரம்பித்திருந்தோம்.

அவன் ஸ்டாஃப் நர்ஸாக இருந்ததால், இந்த விஷயங்களைப் பற்றி விதவிதமாகச் சொன்னான். ஸ்டாஃப் நர்ஸ் படிக்கும் பெண்களைப் பற்றிய அவன் மதிப்பீடு, டாக்டர்களுக்கும் அங்கு வேலை பார்க்கும் ஸ்டாஃப் நர்ஸ்களுக்குமான உறவு என்றெல்லாம் என்னென்னவோ சொல்லுவான். நாங்கள் எப்படி பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது அவன் சொல்லுவதை நம்புவதா வேண்டாமா என்றெண்ணி பிறகு வேறு வழியில்லாமல் நம்புவோமோ அப்படித்தான் இதனையும் நம்புவோம். அவன் சொன்னவை ஏராளம். முதலிரவில் ஆண் பெண் கலவியில் ஏற்படும் பிரச்சினைகள், (‘அது அத்தனை லேசுன்னு நினைக்காத..’ என்றுதான் ஆரம்பிப்பான். நிறைய சொல்லுவான். அதையெல்லாம் இங்கே எழுதமுடியாது.) பெண்களின் பிரச்சினைகள், ஆணின் பிரச்சினைகள் என்றெல்லாம் விவரிப்பான்.

நாங்கள் எங்கள் நண்பர்களில் ஒருவன் வீட்டில் பிஎஃப் பார்த்தபோது, ஹைகிரவுண்டிலிருந்து வந்தான். ஸ்டாஃப் நர்ஸில் படிப்பவர்கள் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பார்கள். இரவில் வார்டன் ஹாஸ்டலைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விடுவார். பிஎஃப் பார்க்க வருவதற்காகவே கள்ளச் சாவி செய்து திறந்து கொண்டு வந்திருந்தான். பி எஃப் பார்த்துவிட்டு, அதிகாலை மூன்று மணிக்கு டவுணிலிருந்து ஹைகிரவுண்ட் நடந்து சென்றான்.

ஹாஸ்டல் வார்டன் ரொம்ப கேள்வி கேட்கிறாள் என்று, ஒரு கடிதத்தில் அவனே குங்குமம் மஞ்சள் என்றெல்லாம் தூவி, ஒரு தாயத்தையும் அதோடு சேர்த்து, உன் பெயருக்கு மந்திரித்துவிட்டோம், இனியும் உன் மாணவர்களுடன் விளையாடாதே என்று அவனே ஒரு போஸ்ட் அனுப்பி வைத்தான். அந்த வார்டன் அலறிவிட்டார் என்று சொன்னான். இப்படி நிறைய சொல்லுவான். செய்தானா என்றெல்லாம் தெரியாது.

திடீரென்று ஒருநாள் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொன்னான். நாங்கள் எல்லோரும் ஆர்வமாகக் கேட்டோம். பூர்வஜென்மத்து உறவு, அது இது, முத்தம் என்று என்னவெல்லாமோ சொன்னான். எல்லாம் கேட்டு முடித்து நாங்கள் கிளம்பும்போது, ‘இன்னும் இருக்குல’ என்று சொல்லி, அவன் காதலிக்கும் இரண்டாவது பெண்ணைப் பற்றியும் சொல்லத் தொடங்கினான். அப்போதும் அதே பூர்வ ஜென்மத்து உறவு, அது இது, முத்தம் எல்லாம் வந்தது. நான் கடுப்பாகிவிட்டேன். பின்பு என்னிடம் சத்தியமே செய்தான், இரண்டு பெண்களுமே அவனைக் காதலிப்பதாகவும், அவனுக்கு இரண்டு பெண்களையும் பிடித்திருப்பதாகவும். அவனுக்குப் பிறந்தநாள் வந்தால் இரண்டு சாக்லேட்டுகள், இரண்டு சட்டைகள் பரிசு வரும். சொல்லிச் சொல்லிச் சிரிப்பான். கடைசியில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அவன் அம்மாவிடம் சொல்ல, அவன் அம்மா அவன் காதலை எவ்வித யோசனையுமின்றி ஒரே நொடியில் நிராகரித்தார். அவனும் உடனே அக்காதலை நிராகரித்துவிட்டான்.

எனக்கும் வேலை கிடைத்து, அவனுக்கும் வேலை கிடைத்து, எங்கள் நட்பு தொடர்ந்துகொண்டிருந்தது. மருத்துவமனைகளில் நடக்கும் காமகளியாட்டங்களை அவன் நிறைய சொல்லுவான். அதை வைத்து நான் ஒரு கதை எழுதினேன். (மீண்டும் ஒரு மாலைப்பொழுது.) Slept away என்பதை உருவாக்கி, அதை எல்லாருக்கும் சொல்லுவான். அந்த ஸ்டாஃப் நர்ஸ் நேத்து அவனோட ஸ்லெப்ட் அவே என்பான். பின்பு அவனுக்குச் சென்னையில் வேலை கிடைத்து, சென்னைக்குப் போனான்.

நான் தூத்துக்குடியில் வேலையில் இருந்தேன். நான்கைந்து நாள் விடுமுறை கிடைத்தபோது அவனைப் பார்க்கப் போனேன். அங்கேயும் எங்கள் நண்பர்களோடேயே இருந்தான். எல்லாரும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடமாகப் பார்க்கப் போவோம். சோழிங்கர், வண்டலூர் பூங்கா, மெரீனா கடற்கரை என்று எல்லாம் பார்த்தது அவனோடுதான். எங்கே போனாலும் நாங்களே சமைத்துக்கொண்டு உணவெடுத்துக்கொண்டு போவோம். கைகளில் உருட்டித் தருவான் எல்லாருக்கும்.

போட்டோ எடுக்கும்போது இயல்பாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். வேண்டுமென்றே எல்லாரையும் செயற்கையாக நிற்கச் சொல்லி படமெடுப்பான். ஒரு புகைப்படத்தில் எல்லோரும் வரிசையாக ஒருவர் தோள்களில் ஒருகை வைத்திருக்க, ஓடும் ரயில்வண்டி போல, எல்லாரும் காலைத் தூக்கிக்கொண்டு, ஒரு கையால் கூவென ஊதிக்கொண்டிக்கும் போட்டோ இன்னும் நினைவிலிருக்கிறது.

எங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் ஒவ்வொருவராக திருமணம் நடக்க ஆரம்பித்தது. அவனுக்கும் திருமணம் ஆனது. நான் துபாயில் இருந்து திரும்பி வந்து, அவன் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பினேன். என் நம்பர் அவனுக்குத்தெரியாது என்பதால் கொஞ்சம் விளையாட ஆரம்பித்தேன். அவன் செய்த சேட்டைகளையெல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லவும் கொஞ்சம் பயந்துவிட்டான். அவனது நண்பர்களிடம் சொல்லியிருப்பான் போல. ஒவ்வொருவராக என்னை அழைத்து நான் யார் என்று கேடகத் தொடங்கினார்கள். எல்லார் நம்பரும் என்னிடம் இருந்ததால், அவர்கள் எல்லோரிடமும் நான் விளையாடத் தொடங்கினேன். ஒருவாறாக அவனிடம் நாந்தான் என்று உண்மையைச் சொன்னபோது, ‘நான்கூட முதல்ல ஒருத்திய லவ் பண்ணேன்ல, அவதான் மிரட்டுறாளோன்னு நினைச்சிட்டேன். என் பொண்டாட்டி மட்டும் உன் மெசேஜை பாத்தா, செத்தேன்’ என்றான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘எல்லாம் பொய்தானல, சும்மாதான சொன்ன?’ ‘உனக்கும் எனக்கும் தெரியும் பொய்யுன்னு, அவ பொய்யத்தான் மொதல்ல உண்மைன்னு நம்புவா’ என்றான். ஒருவழியாக செட்டில் ஆகிவிட்டான் என்று சந்தோஷமாக் இருந்தது.

அவ்வப்போது தொலைபேசி. அவ்வப்போது சந்திப்பு. தன் மனைவி இரண்டாவதாக உண்டாகியிருக்கிறாள் என்றான். வாழ்த்து சொன்னேன். நேற்று காலை, நிறைமாதக் கர்ப்பிணியான தன் மனைவியை சிவகிரியில் பார்த்துவிட்டு, அங்கிருந்து திருநெல்வேலிக்கு ஸ்கூட்டரில் காலை 3 மணிக்கு வந்திருக்கிறான். விபத்து நேர்ந்து அந்த இடத்திலேயே இறந்துவிட்டான். எங்கள் நண்பர்கள் எல்லோரையும் பதைபதைக்கச் செய்துவிட்டது இம்மரணம்.

உண்மையில் நான் இது போன்ற மரணங்களில் என் மரணத்தின் மீதான பயத்தையே உணர்கிறேன் என்று நினைக்கிறேன். நேற்று முழுவதும் இருந்த பதட்டம் சொல்லி மாளாது. தேன்கூடு சாகரனின் மரணத்தைக் கேட்ட அன்றும் அப்படி பதற்றமாக இருந்தது. ஏனென்றால், அவர் இந்தியா வந்திருந்தபோதுதான் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பேசியிருந்தோம். தேன்கூட்டில் சில போட்டிகள் நடத்தப்போவதாக எல்லாம் சொன்னார். அதே பதற்றம் நேற்றும் என்னைத் தேடி வந்தது.

மரத்தடியில் பாபு என்கிற நண்பர் எழுதிய கவிதை மிக முக்கியமானது. திடீரென்று இரண்டு நாள்களுக்கு முன்புதான் இதனை வாசித்தேன். நேற்று இக்கவிதையே மனதுள் சுழன்று சுழன்று வந்தது.

அது

பள்ளிக்கூட கிரிக்கெட் போட்டியில்
எதிரணிக்காரன் வீசிய வேகப்பந்து
பின் மண்டையில் விசையுடன் தாக்கிச் சுருண்டபோது
எதிரே வந்து நின்று விரல் நீட்டி
எச்சரித்துவிட்டுப் போனது.

நெடுஞ்சாலை மோட்டார்சைக்கிள் பயணத்தில்
அசுர பாய்ச்சலுடன் வந்த வாகனத்துடனான மோதலை
மயிரிழையில் தவிர்த்து மணலில் சரிந்தபோது
காதருகில் உருமிவிட்டுச் சென்றது.

பெருநோய் பீடித்து மருத்துவமனையில்
உடல் வற்றிக்கிடந்த ஒரு மாதகாலமும்
படுக்கையருகில் அமர்ந்திருந்து
உற்றுப் பார்த்தபடி இருந்தது.

நள்ளிரவு உறக்கத்தில்
நெஞ்சுக்கூட்டுக்குள் இரும்புப் பந்தொன்று அடைத்து
மூச்சுத்திணறி வியர்த்து
நிராயுதமாய் சில நிமிடங்கள் போராடியபின்
இயல்புநிலை திரும்பியபோது
ஜன்னலில் நிழலெனப் பதுங்கி வெளியேறிற்று.

இதுவரை
வாய்த்த சந்தர்ப்பஙகளெல்லாம்
நழுவிப்போனதில்
மேலும் வன்மம் வளர்த்தபடி
எங்கிருந்து எப்போது
என் மீது பாய்ந்துவிடக் காத்திருக்கிறதோ –
அந்த மரணமென்னும் மிருகம்.

நான் எழுதுவதைக்கூட மரணம் வாசித்துக்கொண்டிருக்கலாம்.

நன்றி: பண்புடன் இணையக் குழுமம்

Share

சுஜாதா நினைவுகள் – 02.03.2008 ஞாயிறு அன்று நாரத கான சபாவில் கூட்டம்


ஜெயகாந்தன், கமல்ஹாசன், மணிரத்னம், கனிமொழி, பார்த்திபன், ராஜீவ் மேனன், கு.ஞானசம்பந்தன், மருது, இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, வஸந்த், மதன் உடபட பலரும் இந்த நிகழ்சியில் பங்கேற்க இருக்கின்றனர்.

2.3.2008 ஞாயிறு மாலை நாலு மணிக்கு நாரத கான சபாவில் (314, டி.டி.கே சாலை, சென்னை-18) இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Share

பிரிக்க முடியாத மௌனம். – சுஜாதாவிற்கான அஞ்சலி – எஸ்.ராமகிருஷ்ணன்

பிரிக்க முடியாத மௌனம் – சுஜாதாவிற்கான அஞ்சலி – எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

Share