Archive for ஃபேஸ் புக் குறிப்புகள்

7 days break

ஒரு வாரம் ஃபேஸ்புக் பக்கம் வராமல் இருக்கமுடிகிறதா என்று பார்க்கவே ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறினேன். அதற்குள் பலர் போன் செய்து… ஒருத்தர்கூடவா போன் செய்து என்னாச்சு எனக் கேட்கமாட்டீர்கள்? கொடுமை. 🙂 யாருமே கண்டுகொள்ளவில்லை என்பது உறுதியானதும் இனிமேல் வராமல் இருந்தால் சிக்கல் என்றறிந்து உள்ளே வந்தேன்.

வெளியேறிய முதல் நாள் கைவிரல்கள் தொடுதிரையில் ஃபேஸ்புக் ஐகானையே தேடின. ஆனால் நான் அதில் க்ளியர் டேட்டா செய்திருந்தேன். இரண்டு மூன்று முறை தேடிப் பின்னர் மூளை கண்டுகொண்டது. மொபைலில், 8இன்ச் பேடில் என எல்லாவற்றிலும் ஃபேஸ்புக்கை நீக்கி இருந்தேன். 8இன்ச் பேடில் மட்டும் ஃபேஸ்புக் மெசஞ்சரை நீக்க மறந்திருந்தேன். அதையும் நேற்று நீக்கினேன்.

நிம்மதியாக பல வாரப் பத்திரிகைகளைப் படிக்க முடிந்தது. கிண்டிலில் புத்தகம் வாசிக்க முடிந்தது. (Ivory thones புத்தகத்தை போகன் படிக்கச் சொன்னார். சில பக்கங்கள் வாசித்திருக்கிறேன். ஒரே நாயர் புராணம். நாயர் மத்வராக போகன் நாயராகிவிட்டாரா எனக் கேட்கவேண்டும் – சமநிலைக்காகத்தான்!) மன இறுக்கம் குறைந்தது போல இருந்தது. ஒரு கட்டத்தில் போரடிக்க ஆரம்பித்துவிட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. குழந்தைகளை நாலு சாத்து சாத்தலாமா, மனைவியிடம் எதாவது வம்பு வளர்க்கலாமா என்றெல்லாம் தோன்றத் தொடங்கியது. ஃபேஸ்புக் நம்மை சிறைபடுத்துகிறது என்பதைப் போலவே நம்மை ஆசுவாசப்படுத்துகிறது என்பதும் உண்மைதானோ?

இந்த யோசனை தோன்றிய நிமிடத்தில் ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் ஒரு வீடியோவை வாட்ஸப்பில் அனுப்பி இருந்தார். அதில் நாம் எத்தனை முறை நம் ஆண்ட்ராய்ட் போனை அன்லாக் செய்கிறோம் என்று இருந்தது. நான் யோசித்துப் பார்த்தேன். கிட்டத்தட்ட 100 முறையாவது இருக்கும். அஃபிஷியலாகவும் சேர்த்துத்தான். இதை ஜெயக்குமாரிடம் சொல்லி, இதைக் குறைக்கவே ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறினேன் என்று சொன்னேன். அவர் நான் சொன்னதில் இம்ப்ரஸ் ஆகி அவரும் ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறினார் என நினைக்கிறேன்.

ஆனால் நான் வந்துவிட்டேன். 🙂

இடைப்பட்ட இந்த மூன்று நாளில், காலச்சுவடு ஆன்லைன் சந்தா செலுத்தி, அகா பெருமாள் எழுதிய கோபுரம் ஏறிக் குதித்து சாதல் கட்டுரை வாசித்தேன். டோண்ட் மிஸ்.

துக்ளக் இதழில், மாறன் சகோதரர்கள் டெலிபோன் எக்ஸேஞ்ச் வழக்கில் தப்பித்தது குறித்த கட்டுரை – பிரமாதம். இதையும் நிச்சயம் வாசிக்கவும்.

குமுதம் இதழில் ரஜினியின் ஆன்மிகப் பயணம் குறித்த கட்டுரை – ரசிகர்கள் வாசிக்கவும். குறைந்தபட்சம் அந்தப் புகைப்படங்களைப் பார்ப்பதற்காகவாவது.

நியூஸ் லாண்டரி பாட்காஸ்ட்டில் (ஹாஃப்தா) பழைய எபிஸோட் ஒன்றைக் கேட்டேன். கமல் அரசியல் நுழைவு குறித்து. கடுமையாக ஓட்டி இருந்தார்கள். அதே பாட்காஸ்ட்டில், காவிரி பற்றிய கட்டுரை (கட்டுரையா டாக்குமெண்ட்ரியா அல்லது இரண்டுமா எனத் தெரியவில்லை) எழுதியவர் ஒருவர் (பெயர் மறந்துவிட்டது, விவேக் என நினைக்கிறேன்) பேசினார். கட்டுரைக்காக எத்தனை கஷ்டப்பட்டார் என்பது பற்றியும் ஜர்னலிஸத்தின் தேவை அது என்றும் சொன்னார். அக்கட்டுரை எங்கே கிடைக்கும் எனத் தேடவேண்டும். இவர் தமிழ்நாட்டுக்காரர். தமிழ்நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் என்ற கருத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக கள ஆய்வை கர்நாடகாவில் இருந்து துவங்கி இருக்கிறார். முதல் பாகம் கர்நாடகாவில் காவிரி. இரண்டாம் பாகம் தமிழ்நாட்டில் காவிரியாக இருக்கலாம். இது கட்டுரையா அல்லது யூ ட்யூப் வீடியோவா என்றும் தெரியவில்லை. இன்னொரு முறை கேட்டுப் பார்த்தால் புரியும்.

இனி அடிக்கடி இப்படி 2 அல்லது 3 நாள் பிரேக்கில் போக உத்தேசம்.

Share

ஒரு பக்கப் புலம்பல்

இது ஒரு பதிப்பாளரின் (பதிப்பகத்தில் பொறுப்பில் இருப்பவரின்) புலம்பல் மட்டுமே. எனவே படிக்காமல் கடந்துவிடுங்கள்.

தெற்கிலிருந்து ஒரு சூரியன் புத்தகத்துக்கு இன்று ஒரு பக்கம் விளம்பரம் வந்துள்ளது. இதை விளம்பரம் என்பதா என்றெல்லாம் கேட்காதீர்கள். உண்மையில் விளம்பரமே நோக்கம்.

ஒரு பதிப்பகத்துக்கு, தமிழ் தி ஹிந்து, தினமலர், தினமணி போன்ற ஒரு பத்திரிகையில் ஒரு புத்தகத்துக்கு முழுப்பக்க விளம்பரம் தரவேண்டும் என்பது நிச்சயம் கனவாகவே இருக்கும். இந்த விளம்பரத்துக்கான விலையை ஒரு பதிப்பகத்தால்கற்பனை கூடச் செய்து பார்க்கமுடியாது.

ஒரு பக்க விளம்பரம் என்றல்ல, அரைப்பக்க கால்பக்க விளம்பரச் செலவைக்கூட, முன்னணிப் பதிப்பகங்களால்கூடச் செய்யமுடியாது.

அதுவே ஒரு பத்திரிகை அதுவும் முன்னணிப் பத்திரிகை ஒரு பதிப்பகத்தின் கையில் இருந்தால் ‘நின்னு ஆடலாம்.’ ஆனால் நிலைமை எப்படி இருக்கிறதென்றால் பெரிய பதிப்பகங்கள் கைவசம் பத்திரிகை இல்லை. பத்திரிகை கைவசம் இருந்தாலோ பெரிய பதிப்பகமோ அல்லது புத்தகங்களை எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்ற திட்டமோ அதைச் செயல்படுத்தும் தொலைநோக்கோ இல்லை. கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கதைதான். என்றாவது இந்த இரண்டும் ஒன்றாகும்போது அப்பதிப்பகம் உச்சத்துக்குச் செல்லும்.

கிழக்கு பதிப்பகம் முன்னணி பத்திரிகைகள் அனைத்திலும் ஒரு புத்தகத்தை வாரத்துக்கு ஒன்றென நான்கு வாரங்களுக்கு விளம்பரம் கொடுத்தால் அப்புத்தகத்தின் விற்பனை நிச்சயம் பல மடங்கு அதிகரிக்கும். ஆனால் லாபம் என்று எதுவும் இருக்காது என்பதுமட்டுமல்ல, பெரிய அளவில் நஷ்டம் இருக்கும். அதனால்தான் கிழக்கு போன்ற பெரிய பதிப்பகங்கள்கூட தினசரிகளில் விளம்பரம் கொடுக்க முடியாமல் திணறுகிறார்கள்.

எதாவது ஒரு பத்திரிகை புத்தகங்களின் தேவையைக் கணக்கில் கொண்டு புத்தக விளம்பரங்களை குறைந்த மிகக் குறைந்த விலையில் வெளியிட்டால்தான் இதுவெல்லாம் சாத்தியம். ஆனால் ஒரு பத்திரிகை நடத்த ஆகும் செலவோடு அவர்கள் ஒப்பிடும்போது அவர்களால் இது இயலாத ஒன்றாகவே இருக்கும்.

புத்தகங்கள் மக்களைச் சென்றடைய தினசரிகள் ஒரு வழி. இன்னொரு வழி, தொலைக்காட்சி ஊடகங்கள். தினசரிகளையாவது நினைத்துப் பார்த்து ஏங்கலாம். தொலைக்காட்சி ஊடகங்கள் – வாய்ப்பே இல்லை.

எனவே ஃபேஸ்புக் இடுகைகளைப் பார்த்து புத்தகங்களை வாங்கி மகிழுங்கள்.

கிழக்கு பதிப்பகத்தின் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க… வாங்க.

பின்குறிப்பு: சில ஆண்டுகள் முன்பு தினமலர் சில பதிப்பகங்களுக்கு இலவச விளம்பரம் தந்தது. நண்பர்கள் என்ற அடிப்படையில்தான் இவ்விளம்பரங்கள் செய்யப்பட்டன. இப்படிச் செய்வதற்கும் ஒரு மனம் வேண்டும். தினமலர் கிருஷ்ணமூர்த்தி அவர்களை இதற்காகப் பாராட்டவேண்டியது கடமை. இப்போதும் அவரைப் பார்த்துக் கோரிக்கை வைத்தால், அவருக்கு அந்தப் புத்தகமோ வெளியிடுபவர்களோ பிடித்திருந்தால், அவரது கொள்கைகளுக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் இருந்தால் இந்த உதவியைச் செய்வார் என்றே நினைக்கிறேன். அவரைச் சந்திக்க இயலும் என்கிறவர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  மற்ற பத்திரிகைகளும் அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களுக்கு இது மாதிரி விளம்பரம் கொடுத்து உதவுங்கள்.

Share

ஞானப்பல்

இரண்டு வருடங்களுக்கு முன்பே கடைவாய்ப்பல் கொஞ்சம் பிரச்சினை செய்தது. என்ன சாப்பிட்டாலும் பல்லில் சிக்கிக்கொள்ளும். இனியும் அடைக்கலைன்னா பலாச்சுளையே சிக்கிக்கும் என்று சுற்றி இருந்தவர்கள் சொல்ல ஆரம்பிக்கவும் டாக்டரைத் தேடிப் போனேன். டாக்டர் என்றாலே ஏமாற்றுபவர்கள் என்பதுதானே நம் எண்ணம்? அந்தப் பல்லில் பிரச்சினை இருக்கிறது, வேர் சிகிச்சை (ரூட் கானல்) செய்யவேண்டும் என்ற டாக்டரைப் புறந்தள்ளி, அடைச்சி மட்டும் விடுங்க என்று சொல்லி அடைத்துக்கொண்டேன். ஒன்றரை வருடங்கள் பிரச்சினை இல்லாமல் போனது. அடைத்துக்கொண்டது புட்டுக்கொள்ளவும் மீண்டும் டாக்டரிடம் போனேன்.

ஏஸி அறையில் அரை மணி நேரம் உட்கார வைத்தார்கள். டாக்டர் குடும்பத்தைப் பற்றியெல்லாம் அக்கறையாக விசாரித்தார். சே, ஜாதகத்தைக் கொண்டு வராம போயிட்டமே என்று என்னை நானே நொந்துகொண்டு அந்த டாக்டரின் அன்பில் நனைந்துகொண்டிருந்தேன். ஒரு எக்ஸ்ரே எடுத்துறலாம் என்று அதே அன்புடன் கூட்டிக்கொண்டு போய், அட்டகாசமான ஒரு எக்ஸ்ரே அறையில் வைத்து எக்ஸ்ரே எடுத்துவிட்டு மீண்டும் டாக்டர் அறைக்குக் கூட்டிப் போனார் புன்சிரிப்பு மாறாத உதவியாளர். எக்ஸ்ரே காப்பி கொடுங்க என்று கேட்கவும், சார், டெக்னாலஜி இம்ப்ரூவ்ட் அ லாட், டாக்டருக்கு மெயில் பண்ணிட்டோம் என்றார். டாக்டருக்குத் தலையைச் சுற்றி இருந்தது ஒளிவட்டம் அல்ல, பின்னால் இருந்த டிவியின் ஒளி என்று புரிந்தபோது அதில் என் பல் தன் தலையைக் காட்டியது. பாத்தீங்கன்னா உங்களுக்கு சின்ன வயசுல இருந்தே விஸ்டம் டீத் வளைஞ்சு இருக்கு, அது பக்கத்துப் பல்லு மேல படுத்து அதையும் கெடுத்துடுச்சு, இப்ப அந்த விஸ்டம் பல்லை எடுக்கணும், பக்கத்து பல்லை ரூட் கானல் பண்னனும், விஸ்டம் டீத் எடுத்தாச்சான்னா அதுக்கு இணையா இருக்கிற மேல் பல்லையும் எடுக்கணும் என்று அடுக்கிக்கொண்டே போக, எத்தனை பல் மிஞ்சும் என்ற அச்சத்தில் இருந்தபோது, நோ நோ எல்லாப் பல்லையும் எடுக்கமாட்டோம் என்ற டாக்டர் மீண்டும் என் குடும்பத்தைப் பத்தி விசாரிக்கத் துவங்கினார். மொத்தமா ஒரு மணி நேரம் போதும் எல்லாத்தையும் முடிச்சிடலாம், சண்டே காலைல வந்தா சாயங்கலாம் நீங்கபாட்டி ஹாயா படம் பார்க்கலாம், லீவே வேண்டாம் என்று என் அலுவலகத்துக்கு என்னைவிட அதிகம் கரிசனப்பட்டவர், என்னை மீண்டும் புன்சிரிப்பாளரிடம் அனுப்பி வைத்தார். அவர் என் குடும்பத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டே கொட்டேஷன் கொடுத்தார். உங்களுக்கு டிஸ்கவுண்ட் இருக்கு, டிஸ்கவுண்ட் போக ஜஸ்ட் 19,500 ரூபாய்தான், ரெண்டு பேமெண்ட்ல கொடுக்கக்கூட ஆப்ஷன் இருக்கு என்றார். ஒருத்தன் செத்தாலே மொதல் ரெண்டு காரியத்துக்கே அவ்வளவுதான ஆகும் என்ற எண்ணம் வந்தபோது ஏஸி குளிரெல்லாம் போய் வேர்க்கத் துவங்கியது. யோசிச்சிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு, எக்ஸ்ரே ஒரு ப்ரிண்ட் கொடுங்க என்று கேட்டேன். அதெல்லாம் அந்த சிடில இருக்கு என்று சொன்னார். முன்பெல்லாம் கரிய நிறத்தில் ஒரு வஸ்துவைத் தருவார்களே என்றெல்லாம் கேட்கத் தோன்றாமல் வெளியே வந்தேன். பற்கள் விரைத்திருந்தன.

நமக்கு அரசு ஆஸ்பத்திரிதான் சரியா வரும் என்று முடிவெடுத்தபோது, அரசு ஆஸ்பத்திரி பக்கம் ஒதுங்கியே 30 வருடத்துக்கு மேல் இருக்கும் என்ற எண்ணம் மனத்தில் வந்தது. நண்பர் ஒருவர், நன்றிக்குரியவர், உதவி செய்தும் ஏனோ அரசு ஆஸ்பத்திரி செட் ஆகவில்லை. ஆஸ்பத்திரிக்குளேயே நான்கைந்து கிலோமீட்டர்கள் நடந்ததுதான் மிச்சம்.

ஆனால் பல் பக்கத்துப் பல் மேல் மேலும் மேலும் இடித்துக்கொண்டே தன் வேலையைத் தொடர்ந்துகொண்டே இருந்ததால் மீண்டும் ஒரு டாக்டரிடம் போனேன். இந்த டாக்டர் நல்லா வாயைத் தொறங்க, இன்னும், இன்னும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். பழைய ஜோக்குகளெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. ஐயோ என்று கத்தவும் நான் இன்னும் ஒண்ணுமே பண்ணலியே பிரதர் என்றவரிடம், உங்க ஃபோர்ஸ்டெப் என் உதட்டை அழுத்துறது உயிர் போகுது என்று சொன்னேன். ஸாரி ஸாரி என்றார். மீண்டும் என் ஞானப்பல்லைக் குறை சொன்னார். கூடவே உங்களுக்கு தாடையே சரி இல்லை என்றும் இந்தப் பக்க கடைவாய்ப்பல்லும் போச்சு என்றெல்லாம் சொன்னார். எதோ பொறந்துட்டேன், ப்ளீஸ் என நான் கெஞ்சுவதற்குள், கொட்டேஷன் இம்முறை 8,000 ரூபாய். சரி இதைச் செய்துவிடவேண்டியதுதான் என்று அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினேன். ஆச்சரியமாக, ஒரு நாளைக்கு முன்பு ஒரு எஸ் எம் எஸ், ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஒரு அழைப்பு என ப்ரொஃபஷனலிஸம் காட்டி அசத்தினார்கள்.

வாய்க்குள் ஊசி போடுவார்கள் என்ற எண்ணம் தந்த பயத்தை கெத்தாக மறைத்துக்கொண்டிருந்தபோது பையன் சனியன் சரியாக, ரொம்ப பயமா இருக்காப்பா என்றது. கூடவே எனக்கெல்லாம் இப்படித்தான் ஸ்கின் டெஸ்ட்டுக்கு எடுத்தாங்க, வலிக்காது என்றான். சைத்தானே தூரப்போ என்று சொல்லிவிட்டு மருத்துவரின் ஊசிக்குத் தயார் ஆனேன். ஊசி வலிக்கவே இல்லை, சுத்தமாக வலிக்கவில்லை. கடைவாய்ப் பல்லுக்குப் பக்கத்துப் பல்லுக்கு செய்யப்பட்ட ரூட் கானலும் சுத்தமாக வலி இல்லை. வாய் மரத்துப் போயிருந்தது. உதட்டைத் தொட்டால் பத்து ஊர் தள்ளி இருக்கும் யார் உதட்டையோ தொட்டது போலிருந்தது. இவ்ளோதானா, இவ்வளவேதானா, இதுக்குப் போயா என்று நினைத்துக்கொண்டேன். மறுநாள் கடைவாய்ப்பல்லை எடுக்க நாள் குறித்தார் டாக்டர். சரியான நேரத்துக்கு துள்ளிக் குதித்துப் போய், லேட்டாகுமா டாக்டர் என்றேன்.

இந்த முறையும் ஊசி வலிக்கவில்லை. டாக்டர் பல்லைப் பிடுங்கியது யாரோ ஒருவர் வீட்டில் செங்கல்லை பிடுங்கியது போலத்தான் இருந்தது. எனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல. இவ்ளோ ஈஸியா பல் பிடுங்குவது, வாவ். என் மாமா பையன் என்னிடம், சைஸ் மாத்தி சைஸ் கொறடு போட்டு இழுத்து அப்படியே உன் தலையைப் பிடிச்சிக்கிட்டு நாக்குல பட்டா ரத்தம்லாம் வரும்… எங்கப்பாக்கெல்லாம் பல்லு வரவே இல்லை என்று என்னலாமோ சொல்லி இருந்தான். என் பல்லை டாக்டர் ஐந்து நிமிடத்திலெல்லாம் அறுத்துப் பிடுங்கிவிட்டிருந்தார். டாக்டருக்கு பணம் கொடுத்துவிட்டு ஆட்டோ பிடிக்க நடந்து வரும்போது எதிர்ப்படுபவர்களிடமெல்லாம், பல்லு பிடுங்கினதில்லையா, வாட், ரியல்லி ஷாக்கிங், வெரி ஈஸி யூ நோ, வலிக்கவே வலிக்காது, இப்பமே வரீங்களா பிடுங்கிறலாம் என்றெல்லாம் சொல்லத் தோன்றியது. டாக்டர் ஒரு பெரிய தாளில் ஏழெட்டு மாத்திரைகள் எழுதி இருந்தார், முட்டாள் என நினைத்துக்கொண்டேன். அப்போது என்னவோ ஒரு எறும்பு இடது தாடையில் கடித்தது போல் இருந்தது. கூட இருந்த மனைவியிடம் எதாவது பேசினயா என்ன என்று கேட்டேன். முறைத்தாள். உனக்கெல்லாம் பல்லைப் பிடுங்கனதே இல்லைல என்று கேட்டேன். அந்தப் பக்கம் பார்த்து உட்கார்ந்துகொண்டாள். அனுபவமற்ற தற்குறி.

வீட்டுக்குப் போனதும்தான் டாக்டர் பிடுங்கிய பல் என் உடம்பில் இருந்தது என்பதை உணர்ந்தேன். எறும்பு யானையாக மாறத் துவங்கி இருந்தது. ஒரு வாய்க்குள் அத்தாம் பெரிய யானையா? ஓ மை காட். அந்த டாக்டர் பயல் (மரியாதையாகத்தான்!) நிஜமாகவே பிடுங்கோ பிடுங்கு என்று பிடுங்கிவிட்டார் என்பது உறைத்தது. மரண வலி. ஐஸ் ஒத்தடம் வைத்தால் சரியாகும் என்று டாக்டர் சொன்னது எங்கோ காதில் ஒலித்தது. ஓடிப் போய் பனிக்கட்டியை வாங்கி ஒத்தடம் வைத்தால், வாவ், யானைக்குப் பதில் டைனோசார், வேறு வகையான வலி அவஸ்தை. மாத்திரை எங்கே மாத்திரை எங்கே என்று ஓடி அதைப் போட்டுக்கொண்டதும் தூக்கம் வருவது போன்ற பிரமை, ஆனால் இன்னொரு பக்கம் வலி. அவஸ்தையோ அவஸ்தை. வாயைத் திறந்து யாரையும் திட்டவும் முடியவில்லை. திட்டாமல் இருக்கவும் முடியவில்லை. எனக்குப் பின்னே என் குடும்பமே நமுட்டுச் சிரிப்பு சிரிப்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால் திரும்பித் திட்ட முடியவில்லை. சைகையில் தண்ணீர் கேட்டால் இப்ப எதுக்கு தம்ஸ் அப் என்றெல்லாம் கேட்ட கொடூரர்களின் உலகம். அடப்பாவிகளா, இத்தனை வலிக்கும் என்று சொல்லவேண்டாமா என்று மனதுக்குள்ளேயே கதறினேன். ஒவ்வொரு கவளைத்தையும் எத்தனை பெரியதாக இருந்தாலும் அப்படியே டபக்கென்று முழுங்கும் என் சாகசமெல்லாம் இல்லாமல் போய், அணில் கொறிப்பதற்கும் குறைவாகக் கொறித்து கொறித்து உண்ணவேண்டியதாயிற்று இரவில். வாயைத் திறந்தால்தானே கவளத்தை உள்ளே செலுத்த.

இன்னும் ஒரு பல்லை எடுக்கவேண்டி இருக்கிறது எனபதை நினைத்தாலே குலை நடுங்குகிறது. ரெண்டு வருஷம் முன்னாடியே ரூட் கானல் பண்ணிருந்தா இவ்ளோ ஆகியிருக்காது என்று டாக்டர் சொன்னதை யாரிடமும் நான் சொல்லவே இல்லை. 🙂

Share

UTS App

எலக்ட்ரிக் ட்ரைனில் செல்லும்போது டிக்கெட்டை யூ டி எஸ் ஆப் மூலம் வாங்குவேன். இன்று வேளச்சேரியில் ட்ரைனில் ஏறி உட்கார்ந்த பின்பு டிக்கெட் வாங்க முயன்றேன். பொதுவாக தொடர்வண்டி நிலையத்துக்கு வருவதற்கு முன்பாகவே வாங்கிவிடுவேன். இன்று எதோ ஒரு எண்ணத்தில் வண்டியில் உட்கார்ந்ததும் வாங்கலாம் என்று நினைத்து ஏறிவிட்டேன். முதன்முதலாக இந்த ஆப்பில் டிக்கெட் வாங்கியபோது, வண்டியில் வைத்துத்தான் வாங்கினேன் என்ற நினைப்பு தந்த தைரியத்தில் ஏறிவிட்டேன்.
 
எத்தனை முயன்றாலும் டிக்கெட் எடுக்க முடியவில்லை. ஜிபிஎஸ் சிக்னல் லோ என்றது. ஜிபிஎஸ் நன்றாக இருந்தால், நீங்கள் 12 மீட்டருக்கு அருகில் இருக்கிறீர்கள், ட்ராக்/ட்ரைனில் இருந்து ஆறுமீட்டர் தொலைவுக்குச் செல்லுங்கள் என்றது. பின்பு 24 மீட்டர் என்றது. ஓடும் வண்டியில் இருந்து எப்படி குதித்து ட்ராக்குக்கு ஆறு மீட்டர் தூரம் செல்வது என்று பிடிபடவில்லை. பின்பு மீண்டும் ஜிபிஎஸ் சிக்னல் லோ என்றது. ஸ்டேஷனுக்குள் வந்துவிட்டால் ஜிபிஎஸ் லோ. ஸ்டெஷனை விட்டு வெளியே போனால் ஆறு மீ தூரம் போகவேண்டும். இல்லையென்றால் ’இட்ஸ் டேகிங் டைம் தேன் யூஷுவல்’.
 
எனக்கா பயம். பரிசோதகர் வந்துவிட்டால் மானம் போய்விடுமே என்று. வண்டி நிற்கும் அனைத்து நிலையங்களிலும் பரிசோதகர் டிக்கெட்டை பரிசோதனை செய்துகொண்டிருந்தார் என்பது கூடுதல் பயத்தைக் கொடுத்தது. 45 நிமிடப் போராட்டம் முடிவுக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்தது.
 
நான் இறங்கவேண்டிய பீச் ஸ்டேஷனே வந்துவிட்டது. இறங்கி வெளியில் வந்தேன். யாரும் டிக்கெட் கேட்கவில்லை. வெளியே நின்று மீண்டும் டிக்கெட் வாங்க முயன்றேன். அப்போதும் அதே பதில். ஜிபிஎஸ் லோ. ஒழியட்டும் சனி என்று விட்டுவிட்டேன். ஆனாலும் மன உறுத்தல் தாளவில்லை. பத்து ரூபாயை பிள்ளையாருக்குப் போடப்போகிறேன். அவர் அந்த பத்து ரூபாயை ஐ ஆர் சி டி சிக்குச் சேர்த்துவிடவேண்டும். அது அவர் பொறுப்பு.
 
யூ டி எஸ் ஆப்பில் இனி டிக்கெட் புக் செய்யவேண்டும் என்றால், ஒரு கிமீ தூரத்தில் ஐந்து கிமீட்டருக்குள்ளாக, ஓரிடத்தில், வெளியே வானம் தெரியும் இடத்தில், ஜிபிஎஸ்ஸும் 4ஜியும் தெளிவாகக் கிடைக்கும் இடத்தில் எடுக்கவேண்டும் என்று தெரிந்துகொண்ட நாள் – இன்று.
 
மெல்ல டிஜிடலைஸ் ஆவோம். ஆகியே தீர்வோம்.
Share

சென்னை தினம் – 2017

டிசம்பர் 2004. இனி சென்னையில்தான் வேலை என்ற நிலையில் சென்னையில் வந்து இறங்கினேன். பதிமூன்று ஆண்டுகாலம் ஓடிவிட்டது. தொடக்கத்தில் சென்னை தந்த கலக்கம், எரிச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல. திருநெல்வேலி சொர்க்கம் என்றும் சென்னை குப்பை என்ற எண்ணமும் மனம் முழுக்க நிறைந்திருந்தது. ஒருநாள் விடுமுறை கிடைத்தாலும் எப்போது இந்த சென்னையை விட்டு ஓடுவோம் என்ற எண்ணம் மேலோங்கிய காலம். இரவு ஏழு மணிக்கு மேல் சென்னைக்குக் கொம்பும் ரத்தக்காட்டேறியின் பற்களும் முளைத்துவிடும் என்று நம்பிய காலம். சென்னையில் கண்ணில் பட்ட ஒவ்வொன்றும் எரிச்சலை மட்டுமே கொண்டு வந்தது. முறையான பேருந்து இல்லை. மரியாதை இல்லை. ஊர் முழுக்க குப்பை. நீர்ப் பிரச்சினை. இப்படியே எண்ணங்கள் ஓடும்.

மெல்ல மெல்ல சென்னை என்னை உள்வாங்கிக் கொண்டது. இப்போதும் திருநெல்வேலிக்குச் செல்வது சொர்க்கம் போன்ற ஒரு நிகழ்வுதான் என்றாலும், சென்னையை வெறுத்துச் செல்லும் காலங்கள் ஓடிப்போய்விட்டன. திருநெல்வேலியில் ஒருவாரம் தங்கிவிட்டு வரலாம், இனி அங்கேதான் வாழ்க்கை என்றால் பைத்தியம் பிடித்துவிடும் என்ற நிலைக்கு வந்தாகிவிட்டது. சென்னை தன் கடல் போன்ற வளத்தைத் திறந்துகாட்டிவிட்டால் அக்கடலின் வசீகரத்தில் இருந்து யாராலும் வெளியேறவே முடியாது. சென்னையின் நிறம் நீலம் என்றால் நீலம் தீண்டிய உடல் இழக்க விரும்பாத போதையை சென்னை உங்களுக்குப் புகட்டும். எனக்குப் புகட்டி இருக்கிறது.

தொடக்கத்தில் கண்ணில் பட்ட எரிச்சல்களெல்லாம், சென்னையின் குணங்கள் என்றாகிப் போகின. சென்னையின் பிரம்மாண்டத்துக்கு இணையான ஊர் தமிழ்நாட்டில் இல்லை என்று அடிக்கடித் தோன்றும். சென்னைக்குள் பத்து திருநெல்வேலிகளைப் பார்க்கலாம். ஐந்து திருச்சிகளைப் பார்க்கலாம். அப்புறம் என்ன?

கிழக்கு பதிப்பகம் சென்னை தினத்தை ஒட்டி நடத்திய சிறுகதைப் போட்டியில், சென்னை குறித்த இதே எண்ணத்தைப் பதிவு செய்து வந்த கதைகள் ஏராளம். பொதுவாக சென்னை ஒரு பலாப்பழம் போலவே எல்லாராலும் பார்க்கப்படுகிறது என்று தோன்றுகிறது. தொடக்கத்தில் முள், உள்ளே சுளை. சென்னையின் வெள்ளம் தந்த மிரட்டல் சென்னையைப் பற்றிய பீதிக்கதைகளுக்கு வேறொரு நிறம் கொடுத்தது. ஆனால் அதே வேகத்தில் சென்னை மீண்டெழுந்தபோது ஒட்டுமொத்த தமிழகமும் அதிசயித்து நின்றது. சென்னையைப் பற்றித் திரைப்படங்கள் சொல்லிய கதைகள், சென்னையைத் தாண்டிய தமிழ்நாட்டில் சென்னையைப் பற்றிய ஒரு கருத்தை முற்றான ஒரே கருத்தாக எல்லார் மனத்திலும் பதிய வைத்திருக்கின்றன. அந்த சென்னையும் உண்மைதான் என்றாலும் அது மட்டுமே சென்னை இல்லை. சென்னையிலும் அன்பு உண்டு. நம்புங்கள்.

சென்னையில் யாருக்காவது கஷ்டம் என்றால் ஒருத்தனும் திரும்பிப் பார்க்கமாட்டான் என்பதெல்லாம் பொய். எப்படி திருநெல்வேலியில் சில நேரம் பார்ப்பார்களோ சில நேரம் பார்க்கமாட்டார்களோ அப்படித்தான் சென்னையிலும். சென்னைக்கென்று பிரத்யேகமான குணங்கள் இருக்கலாம். ஆனால் அவை தமிழ்நாட்டில் இருக்கும் மாவட்டங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட, திருகிய குணங்கள் அல்ல. வெட்டியும் ஒட்டியும் உள்ளவை மட்டுமே. எல்லா இடங்களையும் போலத்தான் சென்னையும்.

சென்னையைத் தாண்டிய தமிழ்நாடு சென்னையைப் பார்க்கும் பார்வை தரும் கலவரத்துடன் சென்னைக்குள் வருபவர்கள் நீண்ட கால வாழ்வில் பெரிய வித்தியாசம் தெரியாத நிலையில் சென்னைக்குள் அமிழ்வார்கள். கிராமப்புறங்களில் இருக்கும் அடிப்படைவாதப் பிரச்சினைகள்கூட சென்னையில் இருப்பதில்லை என்ற திடீர் ஞானோதயமெல்லாம் தட்டுப்படத் தொடங்கும். அப்போது நீங்கள் சென்னைடா என்ற ஹேஷ் டேக் போட்டுக்கொண்டிருப்பீர்கள்.

#சென்னைடா. #சென்னைதினம். #ஐலவ்சென்னை

Share

பிக் பாஸ் – கமல்

பிக் பாஸ் நிகழ்ச்சி கமலுக்குத் தேவைதானா என்கிற எண்ணமே மேலோங்குகிறது. காலில் அடிபட்டதில் இருந்து கமல் மீண்டும் நடிக்கத் துவங்கவில்லை என்றே நினைக்கிறேன். இந்நிலையில் இந்நிகழ்ச்சி மூலம் நல்ல பணம் கமலுக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தால் அது நல்லதுதான். ஆனால் இப்படித் தொலைக்காட்சிகளில் வரும் பிரபலங்கள் நாளடைவில் தங்கள் ஸ்டார் கவர்ச்சியையும் அந்தஸ்தையும் இழப்பார்கள் என்றுதான் நான் நம்புகிறேன். கமல் ஸ்டார் அந்தஸ்தைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டாரே என்று அப்பாவியாக (ஒரு பக்க உண்மையை மட்டும்) நம்புபவர்களுக்குச் சொல்ல எதுவும் இல்லை.

இந்திய அளவில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிரபலங்களுக்கு இப்படி நேர்ந்ததா என்று தெரியாது. ஆனால் தமிழ்நாட்டில் இப்படித்தான் ஆகும். குஷ்பூ தன் நட்சத்திர வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது வந்த தொலைக்காட்சி வாய்ப்புகளை மறுக்க சொன்ன காரணம், ‘தினம் தினம் டிவில வந்தா மவுசு போயிடும்’ என்ற ரீதியில்தான். மவுசு குறைந்தபோதுதான் டிவிக்கு வந்தார். இன்றளவும் நட்சத்திர அந்தஸ்திலும் சரி, மரியாதையிலும் சரி, கமலுக்கு எக்குறைவும் இல்லை என்றே நினைக்கிறேன். இந்நிலையில் இவர் ஏன் தொலைக்காட்சிக்கு வரவேண்டும்? பிக் பாஸ் ஒளிபரப்பாகியதும், தொடக்கத்தில் எல்லா ஊடகங்களிலும் கமலின் பெயர் அடிபட்டுக்கொண்டே இருக்கும். பின்பு இது ஒரு சடங்காகும். கமலுக்கு இது நேரக்கூடாது.

கமலின் ஒட்டுமொத்த கவனமும் உழைப்பும் திரைப்படங்களில் நடிப்பதிலும், அது இயலாமல் போகும் நேரத்தில் திரைப்படங்கள் இயக்குவதிலும் மட்டுமே செலவழியவேண்டும். அதுதான் கமலுக்கும் தமிழ்த் திரையுலகுக்கும் நல்லது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் பங்கேற்பது ஏனோ வருத்தமாகவே இருக்கிறது.

ஃபேஸ்புக்கில் சொன்ன பதில்: (சேமிப்புக்காக)

எனக்குள்ள பிரச்சினைகளைத் தெளிவாகச் சொல்கிறேன். நண்பர் கோவிந்துக்கு நான் பதில் சொல்ல இவையே காரணங்கள்.

* நான் ரஜினி பற்றி பதிவிடும்போதெல்லாம் கோவிந்த் கமலை ஆதரிக்கிறார். இத்தனைக்கும் கமல் ஹிந்து எதிரி, ஹிந்துத்துவ எதிரி. இதை மீறி ரஜினிக்கு எதிராகக் கமலை முன்வைக்கும்போது அது நகைப்புக்கு இடமாகிறது. ஜெயலலிதாவைத் திட்டுபவர்கள் கருணாநிதிக்கு ஆதரவு அளித்தது போல.

* ரஜினியை மட்டும் திட்டிவிட்டுச் சென்றிருந்தால், அது ஒருவரது அரசியல். கமலை ஏற்றுக்கொண்டு ரஜினியைத் திட்டும்போது அது வேறொரு அரசியல்.

* இதில் கமலுக்கு ஆதரவாக ரஜினிக்கு எதிராகச் சொல்லப்படும் அரசியல் ஆதரவுக்கான காரணம், பெண்கள் சித்திரிக்கப்படும் விதம். என்ன கொடுமை இது? நான் என்ன கண்ணையும் காதையும் மூடிக்கொண்டா சினிமா பார்க்கிறேன்? தமிழ்த் திரையுலகில் யார் செய்யாத ஒன்றை ரஜினி செய்துவிட்டார்? அல்லது கமல் இதில் எதைச் செய்யாமல் இருந்தார்? ஒரு நியாயம் வேண்டாமா? பெண்களின் மரியாதையை முன்வைத்தால் ரஜினி உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் ஒரே தராசுதானே? கமல் சொன்ன இரட்டை அர்த்த வசனங்களுக்கு என்ன பஞ்சம்? ரஜினி சொன்ன, பெண்கள் அடங்கி இருக்கவேண்டும் என்பதை கமல் எத்தனை படங்களில் சொல்லி இருக்கிறார்? இதில் என்ன கமலுக்கு ஆதரவு?

* இப்படிப் பேசிக்கொண்டே, ஐநாவில் நடனம் ஆடிய ரஜினியின் மகளைப் பற்றிய வர்ணனையை மேலே பாருங்கள். ஐநாவில் ரஜினியின் மகள் நடனம் ஆடியதில் நிச்சயம் விதிகள் மீறப்பட்டிருக்கும். அல்லது வளைக்கப்பட்டிருக்கும். தகுதியான நபர் ஆடவில்லை. ஆடவும் அவருக்குத் தகுதி இல்லை. இதை எப்படி எதிர்கொள்வது? அந்தப் பெண்ணின் தோற்றத்தை எள்ளி நகையாடியா? அப்படிச் சொல்லிக்கொண்டே, ரஜினி படங்களில் பெண்ணுக்கு மரியாதை இல்லை எத்தனை பெரிய முரண்? ரஜினியாவது திரைப்படங்களில் ஒரு கதாபாத்திரமாகப் பேசினார் என்று ஏமாற்றி (நான் ஏற்கவில்லை) நழுவவாவது பார்க்கலாம். இதை எப்படி ஏற்பது? இதில் கடைசியில் வரும் ரஜினி பக்தர்! யார் யாருக்கோ பக்தர்கள் இருக்கும் நாட்டில், கருணாநிதிக்கும் ஈவெராவுக்கும் ஜெயலலிதாவுக்கும் சீமானுக்கும் பக்தர்கள் இருக்கும் நாட்டில் ரஜினிக்கு பக்தராக இருப்பது கேவலமல்ல. கமலையே அரசியலில் ஏற்கத் துணிந்தவர்கள் முன்பு ரஜினியை ஏற்பது மரியாதைக்குரியதே.

https://www.facebook.com/haranprasanna/posts/1439249269429771?pnref=story

Share

ரூபெல்லா தடுப்பூசியும் வாட்ஸப் முட்டாள்களும்

என் மகனும் மகளும் படிக்கும் பள்ளியில் இன்று ரூபெல்லா தடுப்பு ஊசி போடப்பட்டது. நான்கு நாள்களுக்கு முன்பே ஊசி போடச் சம்மதம் என்று ஒரு படிவத்தில் எழுதி வாங்கிக் கொண்டார்கள். நேற்று அழைத்து, இன்று ஊசி போட வரச் சொன்னார்கள். அழக்கூடாது மஹி என்று அவளை அழைத்துகொண்டு சென்றேன். சாக்லேட் வாங்கித் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டாள். அபிராமுக்கு இன்று ப்ரவீன் பூர்வார்த் பரிட்சை என்பதால் அவனுக்கு ஊசி போடவில்லை. அடுத்த முகாமில் போடவேண்டும்.

பள்ளியில் கூட்டமே இல்லை. நான் 8 வயதில் இருக்கும்போது காலரா தடுப்பூசி போட்டார்கள். அப்போதும் இதேபோல் ஒரு வதந்தி இருந்தது. காலரா ஊசி போட்டால் கண்ணு போகுதாம், காது போகுதாம், அதுவா டாம் டாம்னு வெடிக்குதாம் என்ற வதந்திகளை மீறி மக்கள் சாரை சாரையாக வந்து வரிசையில் நின்று போட்டுக்கொண்டார்கள். சேரன்மகாதேவியில் நாங்கள் குடி இருந்த தெருவில் எங்கள் வீட்டுக்கு எதிரே தெருவை அடைத்துப் பந்தல் போட்டு விழா போல நடந்தது. ஊர் நண்பர்கள் குழந்தைகளை அலேக்காகத் தூக்கிக் கொண்டு வந்து ஊசி போட்டார்கள். ஊசி போட்டால் ஆரஞ்சு மிட்டாய் தருவார்கள். காய்ச்சல் நிச்சயம் வரும் என்றார்கள். காய்ச்சல் வந்தால் 2 நாள் பள்ளிக்கு மட்டம் போடலாம் என்ற என் ஆசையில் மண் விழுந்தது. சரியாக எனக்கு மட்டும் காய்ச்சலே வரவில்லை. நம் வாழ்க்கையில் இப்படி ஒரு தோல்வியா என்று நான் துக்கித்துக் கிடந்தது நினைவில் இருக்கிறது. ஆனால் 40 வயது மாமாவுக்கும் அத்தைக்கும் கை வீங்கி அதற்கு தனியே மருத்துவம் பார்க்க ஹைகிரவுண்டு போனார்கள்.

இன்று வாட்ஸப் ஃபேஸ்புக் காலம். விவஸ்தையே இல்லாமல் புரளிகள் மட்டுமே உண்மை என்று சுற்றி வரும் காலம். எவ்வித யோசனையும் இன்றி, காசா பணமா என்று எல்லாவற்றையும் ஃபார்வெர்ட் செய்து பெருமை பீற்றிக்கொள்ளும் முட்டாள் கூட்டம். எதை அனுப்புகிறோம், அது உண்மையா பொய்யா என்றெல்லாம் எந்த யோசனையும் கிடையாது. மீம்ஸா அனுப்பு. செய்தியா அனுப்பு. எதையும் யோசிக்க நினைப்பதில்லை. யோசிக்க கொஞ்சம் மூளையும் அவசியம் என்பதால் இப்பிரச்சினை. இதில் உச்சம் என்னவென்றால், இதையே செய்தியாக நம்பி வெளியிடும் பத்திரிகைகளில் பொறுப்பற்ற மூடத்தனம். இதனால் இப்பிரச்சினை இன்னும் கூடுதல் சிக்கல் கொள்கிறது. இன்னும் அதிகம் பகிரப்படுகிறது. வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக்கின் புரளிகளின் ஆதாரம், ரூபெல்லா தடுப்பூசிக்கு வந்திருக்கும் பயம்.

அரசு கரடியாகக் கத்தினாலும், புத்தி உள்ளவர்கள் இதன் தேவை பற்றிக் கதறினாலும், இவர்களின் செயல்பாட்டைவிட லட்சம் முறை அதிகம் பேசப்படுவது புரளிகளே. இந்த ஒட்டுமொத்த தடுப்பூசிகளினால் ஏற்படும் நன்மை என்ன, தேவை என்ன என்பதன் விவாதம் நிச்சயம் தேவைதான். ஆனால் அதை முன்னெடுக்கும் விதம், இதைப் போட்டால் உயிர் போய்விடும் என்ற ரீதியில் அல்ல. இதனால் பயந்துபோய் பலர், பெருவாரியானவர்கள் ஊசி போடவில்லை.

இன்று பள்ளியில் பேசிக்கொண்டிருந்தபோது, 40 பேர் உள்ள வகுப்பில் 5 பேர்தான் போடச் சம்மதித்திருக்கிறார்கள். பலருக்கு வாட்ஸப்பில் வந்த வதந்தியால் பயம். இவர்கள் புத்திசாலித்தனமான வாதமாகச் சொல்வது, “அது பொய்யாவே இருக்கட்டும். ஆனாலும் எதுக்கு ரிஸ்க்?” என்பது. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை.

மிகச் சொற்ப அளவில் வந்திருந்த குழந்தைகளுக்கே இன்று ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டது. போட்டவுடன் ஒரு அறையில் அரை மணி நேரம் காத்திருக்கச் சொன்னார்கள். அப்வர்வேஷனில் இருக்கவேண்டும் என்றார்கள். இதெல்லாம் வாட்ஸப்பின் கைங்கர்யம்தான். அரை மணி நேரம் காத்திருந்துவிட்டு, நர்ஸுகளுக்கு நன்றி சொல்லிவிட்டு மஹியை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன்.

“என்னப்பா வீட்டுக்கு போகாம எங்க போற?” என்றாள் மஹி. “சாக்லெட் வாங்க” என்றதும், அவள் சொன்னது. “என்னப்பா நீ. நெஜமாவே வாங்கித் தர! மிஸ்ஸெல்ல்லாம் நாங்க சேட்டை செஞ்சா டார்க் ரூம்ல போடுவோம்னு சொல்லுவாங்க. ஆனா போடவே மாட்டாங்க. எங்களுக்கெல்லாம் நல்லா தெரியும் அவங்க போடமாட்டாங்கன்னு. ஆனாலும் நாங்கள்லாம் அப்படியே பயந்து போய் அமைதி ஆயிடுவோம். நீ என்னடான்னா சாக்லெட் வாங்கித் தர!”

🙂

Share

ஆண்டாள் குறித்து வைரமுத்து – விவகாரம்

ஆண்டாள் பற்றி வைரமுத்து எழுதிய கட்டுரை மோசமானது. திடீர் இலக்கிய ஞானத்தால் ஏற்பட்ட சறுக்கல். மதங்கள் பற்றியும் ஹிந்து மதம் பற்றியும் வைரமுத்து எழுதி இருப்பது எல்லாமே அபத்தம். இதை மிக எளிதாகவே ஹிந்து நண்பர்கள் எதிர்கொண்டு விடுவார்கள். ஜடாயு தமிழிந்துவில் (தமிழ் தி ஹிந்து அல்ல) இதுபற்றி கட்டுரை எழுதி இருக்கிறார்.

ஆனால் கோபம் கொண்டு வைரமுத்துவை வசை பாடுவது, வைரமுத்து சொன்னதிலும் தரம் தாழ்ந்து போவதோடு, வைரமுத்து சொன்னதே பரவாயில்லை என்கிற எண்ணத்தைக் கொண்டு வரும். கடுமையாக எதிர்கொள்வதற்கும் கேவலமாக எதிர்கொள்வதற்குமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாதவரை, அடுத்தவர்கள் நம்மீது செலுத்தும் வசையைக் குறை சொல்ல நமக்கு தார்மிகத் தகுதி இல்லை.

ஒருவர் ஒன்றை உளறினால் பதிலுக்கு அவருக்கு உரைக்கவேண்டும் என்ற நோக்கில் அவரது தாயை வசைபாடும் போக்கு ஆபாசமானது. பெண்ணை வசைபாடும் ஆண் மனப்பான்மையை முதலில் கைவிடுவதே நாம் அடிப்படையில் கற்றுக் கொள்ளவேண்டியது.

இப்படிக் கேவலமாகப் பேசி பதிலடி தருவதும் ஒரு தரப்பு என்று சிலர் சொல்லக்கூடும். அதைப் புரிந்துகொள்கிறேன், ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மற்ற மதங்கள் பற்றி ஒரு நாளும் வைரமுத்து இப்படிப் பேசிவிடத் துணிய மாட்டார் என்பது உண்மைதான். அந்த இடத்தை அடையவே இப்படியான எதிர்வினை என்பதும் புரிகிறது. இப்படித்தான் அடைய முடியுமானால் அந்த இடத்தை அடையவும் வேண்டுமா என்ன.

(ஜனவரி 10)

வைரமுத்து ஆண்டாள் பிரச்சினை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் பாரதி ராஜா. இது கிட்டத்தட்ட கொலை மிரட்டல். ஜாதிய ரீதியிலான தாக்குதல். திராவிட இயக்கங்கள் கற்றுக்கொடுத்த, பிராமணர் தமிழர் இல்லை என்கிற சித்தாந்தப்படி காரணமும் கற்பித்தாகிவிட்டது. வெளங்கிரும். ஆனால் ஆயுதங்களைக் கைவிட்டதாகப் பொய் சொல்லும் பாரதிராஜா இன்னொரு படம் எடுத்தால் போதும், கத்தி அருவா சுத்தியல் டைம்பாம் எல்லாத்தையும்விட படுபயங்கரமான ஆயுதமா இருக்குமே. ராஜா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் செஞ்சிரலாமே… செய்வாரா செய்வாரா?

(ஜனவரி 12)

—–

நிதியானந்தாவின் சீடர்களின் வீடியோக்கள் குமட்டலை வரவழைக்கின்றன. சன் டிவியில் வெளியான அவரது தனிப்பட்ட வீடியோவில்கூட நான் இத்தனை அதிர்ச்சியும் அருவருப்பும் அடையவில்லை. சன் டிவியின் மீதுதான் அருவருப்பும் எரிச்சலும் இருந்தன. ஆனால் இப்போது வெளியாகும் வீடியோக்கள் அருவருப்பையும் குமட்டலையும் தருகின்றன.நிதியானந்தாவின் சீடர்களின் வீடியோக்கள் குமட்டலை வரவழைக்கின்றன. சன் டிவியில் வெளியான அவரது தனிப்பட்ட வீடியோவில்கூட நான் இத்தனை அதிர்ச்சியும் அருவருப்பும் அடையவில்லை. சன் டிவியின் மீதுதான் அருவருப்பும் எரிச்சலும் இருந்தன. ஆனால் இப்போது வெளியாகும் வீடியோக்கள் அருவருப்பையும் குமட்டலையும் தருகின்றன.

இன்று தேவைக்காக இதை ஆதரிப்போர், இப்படியும் ஒரு தரப்பு இருந்தால்தான் புத்தி வரும் என்போரெல்லாம், பின்னாளில் ஹிந்து மதம் மற்றும் ஹிந்த்துத்துவ ஆதரவாளர்களுக்கு நேரப்போகும் அத்தனை மரியாதையின்மைக்கும் காரணகர்த்தாக்களாக இருப்பார்கள்.

இத்தனை நாள் அடிப்படைப் பண்பிலிருந்து விலகுவது, நமக்கு நாமே தோண்டிக்கொள்ளும் பெரிய குழி. உடனடி மிரட்டல்களுக்கு இது பயன்பட்டாலும் நமக்கு எதிரான ஆயுதமாகவே இது நீண்ட நாள் நோக்கில் பயன்படுத்தப்படும்.
இதை எதிர்த்தாகவேண்டியது ஒவ்வொரு ஹிந்துவின் ஹிந்துத்துவரின் தேவை. அப்போதுதான் நாளை இதை வாய்ப்பாகச் சொல்பவர்களுக்கு, எங்கள் தரப்பிலேயே மிக அதிக எதிர்ப்பு இருந்தது என்பதை மறுபடியாகச் சொல்லமுடியும்.

*

இந்த ஜீயர் உண்ணாவிரதம் இருக்கும்வரை சிலர் ஆஃபர் அறிவித்ததுதான் நேற்றைய உச்சகட்ட அதிர்ச்சி. ஆனால் மனிதர்கள் இப்படித்தான். பதிலுக்கு நாமும் பல விஷயங்களைச் சொல்லமுடியும். ஆனால் அது தரமற்றது. ஒரு ஜீயர் என்றில்லை, ஒரு மனிதன் உண்ணாவிரதம் இருப்பது எதற்காக என்றுகூட யோசிக்கத் தோன்றாமல் இப்படிப் பிதற்றுவதெல்லாம் எளிது. அரசியல் உண்ணாவிரதத்தையும் அழிச்சாட்டிய உண்ணாவிரதத்தையும் ஐந்து மணி நேர உண்ணாவிரத்தையும் பார்த்துப் பழகியவர்களுக்கு இது ஆஃபர் காலமாகத்தான் தோன்றும். ஆனால் இந்த ஆன்மிக உண்ணாவிரதம் ஒரு தாயாருக்காக. இந்த உண்ணாவிரதத்தை நான் ஏற்கவில்லை. ஆனால் நிச்சயம் என்னால் எள்ளி நகையாடிப் புறந்தள்ள இயலாது.

இந்த ஜீயர் பற்றி எனக்கு அதிக தகவல்களெல்லாம் தெரியாது. நான் சொல்வது, இவரது இன்றைய நிலைப்பாட்டை ஒட்டி மட்டுமே.

*
வைரமுத்து பிராமணர்களுக்கு எதிரானவர் என்று இதுவரை எனக்குத் தோன்றியதில்லை. அல்லது அந்தத் திக்கில் நான் யோசித்ததில்லை. ஏனென்றால் வைரமுத்துவே தன் சாதியினரின் ஆதரவாளர் என்ற எண்ணம் இருப்பதால். இந்த ஜீயரின் உண்ணாவிரதம் நிச்சயம் வைரமுத்துவை அசைத்துப் பார்க்கும் என்றே நினைக்கிறேன். ஒருவேளை, நான்கைந்து நாள் ஜீயர் உண்ணாவிரதம் இருந்தால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கிறேன். பார்க்கலாம்.

(ஜனவரி 18)

Share