Archive for ஃபேஸ் புக் குறிப்புகள்

யாகூப் மேமன் – தூக்குத் தண்டனை

உண்மையில் யாகூப் மேமன், கஸாப் என்று யார் தூக்கில் தொங்கினாலும் உள்ளே சின்ன பதற்றமும் வருத்தமும் வரத்தான் செய்கிறது.அதிலும் அவர்களது கடைசி நிமிடங்களை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. அவர்களது உறவினர்கள் மனைவி மகன் மகள் என எல்லாரையும் நினைத்துப் பார்த்தால் ஏற்படும் சோகம் அளவில்லாததுதான்.

ஆனாலும் மிக அரிதான வழக்குகளில் தூக்கு என்னும் இந்திய நிலைப்பாட்டுக்கு என் ஆதரவு என்றும் உண்டு. அதிலும் இந்தியா போல தெருவுக்கு நூறு ‘முற்போக்காளர்கள்’ திரியும் நாட்டில், இந்த ஒரு சட்டம் இல்லாமல் போனால் இங்கே தீவிரவாதிகளெல்லாம் தியாகியாகிவிடுவார்கள்.

இந்திய மனசாட்சிக்காக (மனுசாட்சியாம்!) உச்சநீதி மன்றம் இவர்களைத் தூக்கிலிடுகிறது என்ற மொன்னை வாதத்தையெல்லாம் நான் நம்பவில்லை. கடைசி வரை இவர்களுக்கு வாய்ப்புத் தரப்பட்டது. மேலும் இந்திய மனசாட்சியை நிறைப்படுத்த சுப்ரீம் கோர்ட் செயல்பட எக்காரணமும் இல்லை. இப்படி பேசி பேசித்தான் எல்லாவற்றின் மேலும் இந்த முற்போக்காளர்கள் அவநம்பிக்கையையை விதைத்தவண்ணம் உள்ளார்கள். ஃபேஸ்புக்கில் மட்டும்தான் இது எடுபடுகிறது என்பது இப்போதைக்கான ஆறுதல். இத்தனைக்கும் யாகூப்மேமன் 23 வருடங்களுக்குப் பின்னர்தான் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். ஒருவகையில் இந்த அளவுக்கான காலம் கழிந்த தண்டனை ஒரு பின்னடைவுதான். இதைத்தான் நீதிமன்றங்கள் சரி செய்ய முயலவேண்டும்.

யார் தூக்கிலிடப்பட்டாலும் அதை ஏற்கவில்லை என்பவர்கள், எல் டி டி ஈ, மாவோயிஸ்ட்டுகள் மற்றும் கம்யூனிஸ வரலாற்றில் கொன்று குவிக்கப்பட்டவர்களைப் பற்றிக் கண்டனங்களைப் பதிவு செய்துவிட்டு, அவர்களை நிராகரித்துவிட்டு, பின்னர் கொள்கைகளைப் பேசவேண்டும்.

தூக்குத் தண்டனை தேவைதான், ஆனால் யாகூப் மேமன் நிரபராதி என்பவர்கள் நிச்சயம் ஜோக்கர்கள்தான். அவர்களை நாம் பார்த்து சிரித்துவிட்டு நகர்வதே சரியானது.

தூக்குத் தண்டனை தேவை, ஆனால் யாகூப் மேனனுக்கு தூக்கு அவசியமில்லை, இப்படிச் சொல்வதால் யாகூப் மேமன் நிரபராதி என்றோ அப்பாவி என்றோ அர்த்தமில்லை என்ற பி.ராமன் போன்ற கருத்து உடையவர்கள் மட்டுமே பொருட்படுத்தத் தக்கவர்கள். அவர்களுக்கு ஒரே பதில், நான் உச்ச நீதிமன்றத்தை நம்புகிறேன் என்பது மட்டுமே.

இந்திய வெகுஜன முஸ்லிம்கள், இந்திய வெகுஜன கிறித்துவ ஹிந்துக்களைப் போன்றவர்கள்தான். அவர்கள் என்றுமே இந்திய மனசாட்சியுடன் உள்ளவர்களே. ஆனால் யாகூப் மேமன் போன்றவர்கள் தீவிரவாதிகள். இந்த இரண்டு பிரிவுகளையும் ஒன்றாக்கி பேசுபவர்களே – அவர்கள் எத்தரப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் – கடும் கண்டனத்துக்குரியவர்கள். இவர்களைத்தான் முதலில் கண்டுகொள்ளவேண்டும்.

Share

ஈவெ ராமசாமி நாயக்கரும் ஆழம் இதழின் நட்டநடு செண்டர் நிலையும்

ஆழம் இதழ் ஈவெரா சிறப்பு இதழாக வெளிவந்திருக்கிறது (என்று நினைக்கிறேன்!). பெரியார் அன்றும் இன்றும் என்று அட்டையில் உள்ளது. 

ஈவெராவுக்கு ஆதரவாக (அல்லது எதிர்க்காமல் விமர்சனப் பார்வையுடன், செல்லமாகக் குட்டி தட்டி கட்டித் தழுவி!) எழுதியிருப்பவர்கள்:
 
அ.குமரேசன் – 12 பக்கங்கள்
வழக்கறிஞர் அருள்மொழி – 12 பக்கங்கள்
மருதன் – 12 பக்கங்கள்
ராமசந்திர குஹா – 2 பக்கங்கள்
 
மொத்தம்: 38 பக்கங்கள்
 
ஈவெராவுக்கு எதிராக, அதிலும் மயிலாப்பூர் பூணூல் அறுப்பை முன்வைத்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக எஸ் வி சேகர் சொன்னவை:
 
எஸ்.வி.சேகர் – 4 பக்கங்களில் உள்ளது.
 
மொத்தமே 4 பக்கங்கள்தான்!
 
ராமசந்திர குஹா எழுதியவற்றில் இருந்து 2 பக்கம் எடுத்து போட்டதுபோல, ஈவெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கத்தில் இருந்து ஒரு 12 பக்கம் எடுத்துப் போட்டிருக்கலாம். சார்பு இருக்கவேண்டியதுதான். அது எதிர்க்கருத்து என்ற ஒன்றே இல்லை என்ற பாவனையில் இருக்கக்கூடாது.
 
–பிரசன்னா
Share

WCC 2015

A world cup match for India without Sachin after 1987. 🙁 I miss #Sachin.

சச்சின் 16 வயதில் அப்துல் காதிர் பந்தை ஏறி அடித்தபோது எனக்கு 14 வயது. அன்றுமுதல் பெரும்பாலான சச்சின் ஆட்டங்களைப் பார்த்தேன். சச்சினுடனேயே வளர்ந்தேன். சச்சினின் முதல் நூறு ரன்களுக்காக சச்சினைவிட அதிகம் காத்திருந்தேன். சச்சின் அவுட் ஆனால் ஸ்கூல்/காலேஜ்/வேலைக்குப் போகலாம் என்று காத்திருப்பேன். நியூசிலாந்துக்கு எதிராக முதன் முதலில் முதல் ஆட்டக்காரராக களமிறங்கி பொளந்துகட்டியபோது சந்தேகமே இல்லாமல் ஒரு உலக வரலாறு எழுதப்படவிருக்கிறது என்று உணர்ந்தேன். கிரிக்கெட்டின் மையமே சச்சின்தான் என்பதில் எந்த ஐயமும் எனக்கு இருந்ததில்லை. 200 ரன்கள் எடுத்தபோது நாம் பார்த்தால் அவுட்டாகிவிடுவாரோ என்று பயந்து அலுவலகத்தில் நகம் கடித்துக் காத்திருந்தேன். உலகக் கோப்பையை சச்சின் தொடுவாரா என்றெல்லாம் கவலைப்பட்டதே இல்லை. ஏனென்றால் பெரும்பாலான உலகக் கோப்பை போட்டிகளில் சச்சினின் ஆட்டம் பிரமாதமாகவே இருக்கும். 

இன்று அந்த சச்சின் இல்லாமல் முதல் உலக்கோப்பை ஆட்டம் இந்தியாவுக்கு, 1987க்குப் பிறகு. என்னவோ அந்த ஆர்வமும் படபடப்பும் பயமும் வெறியும் வரமறுக்கிறது. அடுத்த தலைமுறைக்கும் இப்படித்தானா என்று தெரியவில்லை.

ஐ மிஸ் யூ சச்சின்.

Share

இந்திரா பார்த்தசாரதியின் பக்குவம் சிறுகதை குறித்து

இந்திரா பார்த்தசாரதியின் சமீபத்திய கல்கி சிறுகதையில் (பக்குவம்) வாசிக்க ஒன்றுமில்லை. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள்கூட இக்கதையைவிட மேம்பட்ட தரத்தில் இருக்கும். வெற்றுப் பேச்சு, மேம்போக்கான பார்வை, ஒற்றைப்படத்தன்மை, எதிலும் நுணுக்கமாக ஆழமாகச் செல்லாமல் ஒரு பிரச்சினையின் பல்வேறு முகங்களை ஆராயாமல் எழுதுவது போன்ற அவரது வழக்கமான நாவல்களும் சிறுகதைகளும் போல, அவற்றின் இன்னொரு வலுவற்ற நீட்சியே கல்கியில் வெளியாகியிருக்கும் அவரது சிறுகதை. படிக்காமல் இன்புறவும்.

கதையை வாசிக்க இங்கே செல்லவும்.

Share

மாதொரு பாகன் எரிப்பு – கண்டனம்

மாதொரு பாகனுக்கு தடை, புத்தக எரிப்பு எல்லாம் எரிச்சல் தரக்கூடியது. ஜனநாயகத்தன்மை அற்றது. ஆனால் இதை மைலேஜாக எடுத்துக்கொண்டு பலர் தங்களுக்கு புனிதர் இமேஜ் தேடிக்கொள்கிறார்கள். யாரோ 50 பேர் செய்த கலாட்டா ஒட்டுமொத்த ஹிந்துத்துவ இமேஜ் என்றாக்கப்படுகிறது. இதுதான் ஹிந்துத்துவம் என்ற கொள்கை இன்று இவர்களை வைத்திருக்கும் இடம். எங்கே ஹிந்துத்துவம் இன்னும் போய்ச் சேராத ஹிந்துக்களைக் கண்டடைந்துவிடுமோ என்னும் பதற்றம். மோடிக்கும் இப்படி பதறினார்கள். மோடி பிரதமரானார். ஹிந்துத்துவவாதிகள் அமைதியாக இருந்தால் எதிர்ப்பாளர்களே ஹிந்துத்துவத்தை வளர்த்துத் தருவார்கள் இவர்கள். அதில்லாமல் இப்படி புத்தக எரிப்பு, கோட்சே சிலை என்னும் பைத்தியக்காரத்தனத்தைச் செய்துகொண்டிருந்தால் அந்நியப்பட்டுப் போவார்கள். உண்மையில் ஹிந்துத்துவவாதிகளில் அட்ரஸ் இல்லாதவர்களே இதைச் சொல்கிறார்கள். இதை மீடியா பரப்பி ஒருவித மாயையை உருவாக்குகிறது. இதை ஹிந்துத்துவர்கள் உணர்ந்துகொண்டு செயல்படவேண்டும்.

ஔரங்கசீப் பற்றிய கண்காட்சி தடை செய்யப்பட்டபோது அமைதி காத்தவர்களே இன்று மாதொருபாகனுக்கு கொடி பிடிக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஜனநாயகம் வேண்டுபவர்கள் இரண்டையும் எதிர்ப்பவர்களாக இருக்கவேண்டும். மாதொரு பாகனை நான் ஆதரிக்கிறேன்.

Share

பதிப்புலகம் குறித்து (கிழக்கை முன்வைத்து) – பத்ரி சேஷாத்ரி எழுதியது

பத்ரி ஃபேஸ்புக்கில் எழுதியது இவை. ஒரு தேவை கருதி இங்கே சேமித்து வைக்கிறேன்.

 

(1) புத்தக விலையை, அதன் கட்டமைப்புக்கு ஆகும் செலவை வைத்தே தீர்மானிக்கிறேன். உலோகத்தை அடிப்படையாக வைத்து உதாரணம் சொல்கிறேன். முதலில் அந்தப் புத்தகத்தை 1,200 பிரதிகள் அச்சிட்டோம். அப்போது ஒரு புத்தகம் அடிக்க ஆன செலவு சுமார் 25 என்று ஞாபகம். அதைப்போல நான்கு மடங்கு எம்.ஆர்.பி. எனவே ரூ. 100/- எம்.ஆர்.பி. அந்தப் புத்தகத்தை விற்க ஆரம்பித்ததும், எதிர்பார்த்த வேகத்தைவிட அதிகமாக விற்றது. எனவே பேசாமல் 5,000 பிரதிகள் அச்சடித்துவிடலாமே என்று ஒரு ஐடியா தோன்றியது. அப்படி அடிக்கும்போது ஒரு பிரதிக்கு ஆகும் செலவு சுமார் ரூ. 15/- மட்டுமே. அதனை நான்கு மடங்காக்கி, ரூ. 60/- என்று வைக்காமல், ரூ. 50/- என்று வைத்து, ஊரெங்கும் பிளாஸ்டிக் பவுச்சில் தொங்கவிட்டு விற்க முயற்சி செய்தோம். கடைசியில் 4,500 விற்றுவிட்டது. கடைசி 500 விற்க வெகு தாமதமானது. அதன்பின் அந்தப் புத்தகத்தை அச்சிடவில்லை. இப்போது நான் அதனை அச்சிட நேர்ந்தால் மீண்டும் ரூ. 100/- அல்லது ரூ. 125/- என்று வைத்து விற்பேன். ஒரு லட்சம் பிரதிகள் சீராக மாதம் 10,000 என்று போகும் என்றால் ரூ. 40 அல்லது ரூ. 50 என்று வைத்து விற்பேன். இதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

(2) புத்தகக் கட்டுமான விலையைப் போல எவ்வளவு மடங்கு வைத்து புத்தகங்களை விற்பது? 3 மடங்கு, 4 மட்னக்கு, 5 மடங்கு? இந்த மூன்றையும் நான் பின்பற்றியுள்ளேன். ஏன் இந்தக் கணக்கு? நாங்கள் எங்கள் சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகளுக்கு புத்தக விலையில் 40% டிஸ்கவுண்ட் தருகிறோம். அவர்கள் எங்கள் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு 35%-மும், கடைகளுக்கு 30 அல்லது 35%-மும் கொடுக்கிறார்கள். எங்களைப் பொருத்தமட்டில், எல்லாப் புத்தகத்துக்கும் 40% எங்கள் கையை விட்டுப் போய்விடுகிறது. அது டிஸ்ட்ரிபூஷன் சானலுக்குப் போகும் தொகை. அடுத்து, 10% எழுத்தாளர் ராயல்டி. தாமதமானாலும் இன்றுவரை மிகச் சரியாகக் கொடுத்துக்கொண்டு வந்திருக்கிறோம். ஆக எம்.ஆர்.பியில் 50% சானலுக்கும் ஆசிரியருக்கும். மீதமுள்ள 50%-த்தில், (நான்கு மடங்கு வைத்தால்) 25% கட்டுமானத்துக்கு, 25% நிறுவனத்துக்கு. இந்த 25%-ல் வாடகை, சம்பளம் (எங்களிடம் 70 பேர் வேலை செய்கிறார்கள் – 20 பேர் சேல்ஸ், 8 பேர் எடிட்டோரியல், அட்மின், மார்க்கெட்டிங், வேர்ஹவுஸ் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள் – இவர்கள் அனைவருக்கும் தலையே போனாலும் ஒன்றாம் தேதிக்கு முதல் தேதியிலேயே சம்பளம் கொடுத்துவிடுகிறேன், பி.எஃப், இ.எஸ்.ஐ, கிராஜுவிட்டி உண்டு), நிறுவனத்தை நடத்த வாங்கும் கடனுக்கான வட்டி, இதெல்லாம் போக கையில் ஒன்றும் எஞ்சுவதில்லை. இதில் முதலீட்டாளர்களுக்குக் கொடுக்க ஒன்றும் இல்லை.

இதனால்தான் ஐந்து மடங்கு விலை வைக்கலாம் என்று யோசித்தேன். அப்படிச் செய்தால் எங்கள் பங்காக 30% நிற்கும். ஆனால் அதற்கு சேல்ஸ் டீமிடமிருந்து எதிர்ப்பு. சில புத்தகங்கள் போகும் வேகத்தை வைத்து, மீண்டும் நான்கு மடங்கு என்று வந்துவிட்டோம்.

(3) எங்கள் தயாரிப்புச் செலவு அதிகம். எனவே எம்.ஆர்.பி அதனோடு சேர்த்து மடங்காக்குதலில் அதிகரிக்கிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் பத்தாண்டுகளாக புத்தகத்தை உருவாக்கிவிட்டு, சொர்ந்துபோய் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் புத்தக உருவாக்கத்தைக் கொடுத்திருக்கிறோம். குவாலிட்டி கண்ட்ரோல் என்றால் என்னவென்றே தெரியாத நிலைதான் சென்னை குடிசைத் தொழில் அச்சகங்களில். நாங்களே பேப்பர் வாங்கி, நாங்களே பத்து பிரிண்டிங் பிரெஸ்ஸில் பிரிண்ட் செய்து, நாங்களே எட்டு பைண்டிங் இடங்களில் போய் பைண்டிங் செய்து எடுத்து வந்தால் ஒரே செட்டில் உள்ள பத்து புத்தகங்களும் பல்வேறு உயரங்களில் இருக்கும், அச்சு கோணல் மாணலாக இருக்கும்., பைண்டிங்கெல்லாம் அப்படித்தான் சார் வரும் என்று ஒரே போடாகப் போடுவார்கள்.

இப்போது ஒட்டுமொத்தமாக மும்பையில் ரெப்ரோ அல்லது மங்களூரில் மணிபாலில் கொடுத்துச் செய்கிறோம். அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுக்கிறோம்.

ஏன், மற்ற நிறுவனங்கள் மிக அற்புதமாகப் புத்தகங்களைக் கொண்டுவரவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஒருவேளை அவர்களிடம் இருக்கும் சீக்ரெட் சாஸ் என்னிடம் இல்லை. அவர்கள் மாதம் அச்சடிக்கும் புத்தக எண்ணிக்கைக்கும் நான் அச்சடித்து விற்கும் புத்தக எண்ணிக்கைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்த்து ஃபேஸ்புக்கில் சண்டை போட நான் விரும்பவில்லை.

(4) இறுதியாக, நாங்கள் சானலுக்குத் தரும் டிஸ்கவுண்ட் அதிகம். வானதியெல்லாம் 25%-க்கு மேல் தரமாட்டார்கள். சிலர் 30, சிலர் 35. நாங்கள் 40 தரக் காரணம் உள்ளது. ஒரு வலைப்பின்னலை உருவாக்கியிருக்கிறோம். அனைவரும் பணம் சம்பாதித்தால்தான் இந்த நெட்வொர்க்கில் இருக்க விரும்புவார்கள். புஸ்தகத்தைப் பரவலாக விற்பனை செய்ய முயற்சி எடுப்பார்கள். அதனால்.

இப்போது எக்ஸைல் விலைக்கு வருவோம். நேரடியாக கஸ்டமருக்கு விற்பதால், 40% டிஸ்கவுண்ட் போகிறது. எனவே நேரடியாக எந்தப் புத்தகத்தை பதிப்பகத்திடம் சென்று வாங்கினாலும் டிஸ்கவுண்ட் கொடுக்க வேண்டியதுதானே என்று கேட்காதீர்கள். டிஸ்கவுண்ட் கொடுக்க மாட்டோம். ஏனெனில் அது விற்பனை சானலின் வெறுப்பைச் சம்பாதிக்கிறது. அங்குதான் எங்கள் புத்தகங்களின் பெரும்பகுதி விற்பனையாகிறது. இந்தக் குறிப்பிட்ட புத்தகத்தை 50% டிஸ்கவுண்டில் விற்க ஒப்புக்கொண்ட ஒரே காரணம் இதில் லாபம் உள்ளது என்பதற்காக அல்ல. சாரு கேட்டுக்கொண்டதற்காக மட்டுமே. இப்படி எல்லா எழுத்தாளர்களும் கேட்டால் எனக்குக் கட்டுப்படியாகாது.

ப்ரீ-ஆர்டரில் இருக்கும் வசதி காரணமாகவே இந்த டிஸ்கவுண்ட். மொத்தம் எத்தனை புத்தகம் அச்சிட வேண்டும் என்பது தெரிந்துவிடும். கையில் காசு முதலிலேயே வந்துவிடும்.

ஆனால் இதனை எல்லாப் புத்தகங்களுக்கும் செய்ய முடியாது. ஒருசிலருடைய புத்தகங்களுக்குத்தான் கணிசமான ப்ரீ-ஆர்டர் வர வாய்ப்புள்ளது.

ஆனாலும் லாபம் உண்டு, லாபம் உண்டு என்று நீங்கள் சொல்வதை நான் ஏற்கவில்லை. கடந்த பத்தாண்டுகளில் கிழக்கு பதிப்பகத்துக்குத் துளிக்கூட லாபம் இல்லை என்பதுதான் உண்மை. பொதுவாக நான் இதுகுறித்துப் பேசுவதில்லை. புலம்புவதில்லை. இப்போதும் இது புலம்பல் இல்லை. அச்சுப் புத்தக பிஸினஸின்மீதான என் ஆர்வம் வெகுவாகக் குறைந்துவிட்டது. வேறு பிசினஸில் இறங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. நன்றி. இதுதொடர்பான கேள்விகளுக்கு இங்கு மேற்கொண்டு நான் பதில் ஏதும் எழுதப்போவதில்லை.

 

தனியாக நீங்கள் புத்தகம் போட்டாலும் அதில் எழுத்துக்கு மேற்பட்ட உழைப்பு இருக்கிறது. அதற்கு நீங்கள் ஒரு விலை போடவேண்டும். எழுத்துக்கு ராயல்டி. மற்ற உழைப்புக்கு ஒரு கூலி. பின் கடனுக்கு வட்டி. எல்லாம் சேர்த்தால் உபயோகப்படாது என்பதால்தான் 100 ரூ. வைக்கவேண்டும். மாற்றுவழி, புத்தகங்கள் பல ஆயிரக் கணக்கில் விற்கவேண்டும் என்பதுதான். அது நிகழும்வரை நாம் அபத்தமாக அடித்துக்கொண்டிருக்கிறோம். அதைப் பற்றி யாராவது பேச விரும்பினால் நான் பேசத் தயார். இன்னமும் 1000 பிரதிகள் விற்பதிலேயே ஆயிரத்தெட்டு அக்கப்போர். அங்கே சேத்தன் பகத் ‘அசால்டாய்’ லட்சத்தைத் தாண்டி, பத்து லட்சத்தைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறார். அது… பிசினஸ். மற்றபடி, கலை, இலக்கியம் வளர்ப்போர் மட்டுமே சொந்தக் காசை அழித்து போண்டியாக்கி 1000 பிரதியை விற்க அல்லாடிக்கொண்டிருப்பார்கள். எனக்கு அதையெல்லாம் தொழிலாகச் செய்ய நாட்டமில்லை.

 

 

-பத்ரி சேஷாத்ரி

https://www.facebook.com/rasanaikkaaran/posts/1542645925977441?comment_id=1542651565976877&notif_t=like

Share

அசோகமித்திரன், நீங்க நல்லவரா கெட்டவரா?

அசோகமித்திரன், நீங்க நல்லவரா கெட்டவரா?

நேற்றைய வெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழாவில் அசோகமித்திரன் பேசினார். நேற்று என்றல்ல, அசோகமித்திரன் எப்போதுமே ஒரு கறாரான பேச்சைப் பேசுவதில்லை. அது அவரது பாணியாக இருக்கலாம். ஆனால் அவரது கருத்து என்ன என்பதை ஒவ்வொரு நேயரும் ஒவ்வொரு விதமாக உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு உருவாகிவிடுகிறது என்பதே அதிலிருக்கும் அரசியல். எனக்குத் தெரிந்தவரையில் அசோகமித்திரன் இதைத் திட்டமிட்டே செய்கிறார் என்றுதான் நினைக்கிறேன்.

தன்னோடு எழுதவந்த தனக்குப் பின் எழுத வந்த தன்னை ஒத்த அல்லது தன்னைக் கடந்த எழுத்தாளர்களை முழுக்கப் பாராட்டுவதில் அவருக்குப் பெரிய தயக்கம் உள்ளது. மனத்தடை உள்ளது. இதுதானே இயல்பு என்று ஒருவர் சொல்லக்கூடும். ஒருவரைப் பாராட்டத் தோன்றும்போது முழுமையாகப் பாராட்டுவது பெரிய பிழையல்ல. அப்போதும்கூட அதில் ஒரு புள்ளி வைத்துப் பேசுவது தேவையற்றது. அது பேசுபவரின் அதீத தன்முனைப்பையே காட்டுகிறது என்று நினைக்கிறேன்.

இதே அசோகமித்திரன் தனக்குப் பின் வந்த சில எழுத்தாளர்களை மனமாரப் பாராட்டியிருக்கிறார். ஆனால் அவர்களெல்லாம் அசோகமித்திரனை எவ்வகையிலும் தொடமுடியாதவர்கள், தாண்ட முடியாதவர்கள். ஆனால் அசோகமித்திரன் ஜெயமோகனைத் தன்னைத் தாண்டிவிட்ட ஓர் எழுத்தாளராக உள்ளே நினைக்கிறார். எனவே அவருக்கு ஜெயமோகனை முழுமையாகப் பாராட்டிவிடுவதில் சிக்கல் உள்ளது. பாராட்டத் துவங்கும்போதே, தப்பா நினைக்காதீங்க, நீங்க எல்லாம் கைதட்டறேள், நான் இல்லை என்று சொல்கிறார். ஒரு நாடகத்தில் இவர் நடித்தபோது தெரியாமல் இவரது மூக்குக் கண்ணாடி விழுந்துவிட அனைவரும் பிரமாதம் என்று கைதட்டினார்கள் என்கிறார். ஆனால் ஜெயமோகன் எழுதுவதைத் தடை சொல்லக்கூடாது என்று சொல்லி, வயதில் மூத்தவர் என்பதால் ஆசிகள் என்று சொல்லிவிடுகிறார். 30,000 பக்கம் எழுதினா பயமா இருக்கு என்று சொல்லிவிட்டு, தான் எழுதித் தள்ளிய கையெழுத்துப் பிரதிகள் குவிந்து கிடக்கின்றன என்கிறார். அசோகமித்திரனின் பிரச்சினை, ஜெயமோகன் அவரைத் தாண்டுவதை மனதார ஏற்றுகொள்ள முடியாமல் போவதே என்பதே என் முடிவு.

இத்தனைக்கும் அசோகமித்திரன் ஒரு மிகப்பெரிய படைப்பாளி. சாதனையாளர். எத்தனை காலம் தாண்டியும் வாழப்போகும் மிக நுணுக்கமான எழுத்து அவரது. அவருக்குரிய அங்கீகாரம் அவர் நினைக்கும் அளவுக்கு அவருக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் அதை எதிர்கொள்ளும் வழி இதுவல்ல. இப்போது என்றில்லை, அவர் யாரைப் பற்றிப் பேசினாலும் இப்படி ஒரு புள்ளி வைத்துப் பேசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஜெயமோகனுக்கு கைத்தடிகள் இருப்பதாக சிலர் சொல்லுவதுபோலவே அசோகமித்திரனுக்கும் கைத்தடிகள் சிலர் உண்டு. அவர்கள் இதைச் சொல்லி சிலாகிப்பார்கள். என் காதாலேயே கேட்டிருக்கிறேன். அசோகமித்திரனின் பூடகமான விமர்சனத்தை ஊதிப் பெரிதாக்கி தங்கள் வயிற்று உபாதையை அவர்கள் தீர்த்துக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். அது அவர்களுக்குப் பொருத்தமானதுதான். ஏனென்றால் அவர்கள் எப்போதுமே ஜெயமோகனை உயர்ந்துதான் பார்க்கப் போகிறவர்கள். ஆனால் அசோகமித்திரன் முகத்தோடு முகம் பார்க்கத்தக்க ஒரு சாதனையாளர்கள். வயதும் கைவிடப்பட்ட தருணங்களும் தரும் சோகத்தை அசோகமித்திரன் வெல்லவேண்டும். அதற்கு நிஜமான சாதனையாளர்களாக அவர் மனம் அங்கீகரிக்கும் எழுத்தாளர்களைப் பாராட்டும் தருணம் வரும்போது மனமாரப் பாராட்டுவது ஒரு வழியாக இருக்கக்கூடும். கறாரான விமர்சனம் தேவைப்படும்போது அதையும் செய்துகொள்ளட்டும். அது அவர் தேர்வுதான். பாராட்டும்போதே ஒரு குறையைச் சொல்வதும், விமர்சிக்கும்போதே ஒரு பாராட்டைச் சொல்வதுமென இலக்கிய உலகின் ரஜினியாக அவர் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதே வேண்டுதல்.

Share

விக்கிரமாதித்தனும் வேதாளமும் – கத்தியை முன்வைத்து

முன்னொரு காலத்தில் விக்கிரமாதித்தன் என்றொரு அரசன் வாழ்ந்துவந்தான். தன் வாழ்நாளெல்லாம் வேதாளத்தைத் துரத்துவதே அவன் வேலை. அன்றும் அவன் துரத்தி அந்த வேதாளத்தைப் பிடித்து, தோளில் போட்டுக்கொண்டு நடந்தான்.

“என்ன விக்கிரமா பேசாமல் வருகிறாய்?” என்று வேதாளம் கேட்டது. விக்கிரமாதித்தன் பதில் சொல்லாமல் வந்தான். பதில் சொன்னால் அவன் மௌனம் கலைந்து வேதாளம் மரத்திற்கு போய்விடுமல்லவா.

வேதாளம் தன் வழக்கம்போல் கதை சொல்லத் தொடங்கியது.

“விக்கிரமா, முன்னொரு காலத்தில் கத்தி என்றொரு திரைப்படம் வெளிவந்தது. அது துப்பாக்கியின் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வெளி வந்து பெரிய வெற்றி பெற்றது. படத்தை லைக்கா என்றொரு ராஜபக்ஷேயின் பினாமி நிறுவனம் தயாரித்ததாகக் குற்றம் கூறியவர்கள், என்னவோ டீலுக்குப் பின்னர் அமைதியாகிப் போனார்கள் என்றொரு பேச்சும் உண்டு. படத்தில் விவசாயிகளின் பிரச்சினையைக் காட்டியதால் என்ன செய்வது என்று குழம்பிப்போன கம்யூனிஸ்ட்டுகளும் தமிழ்த் தேசியவாதிகளும் கள்ளமௌனம் சாதித்து மெல்ல நழுவிப் போனார்கள். கடைசியில் ராஜபக்ஷே மூலம்தான் தமிழ்நாட்டில் புரட்சி வரவேண்டியிருக்கிறது என்றெல்லாம் அன்றைய தமிழர்கள் பேசிக்கொண்டார்கள். 

அதில் ஒரு வரி கம்யூனிஸம் பற்றி வரும். மிக யதார்த்தமான காட்சி அது. கம்யூனிஸம் படித்துக்கொண்டு ஃபிலிம் காட்டும் யாருக்குமே கம்யூனிஸம் என்றால் என்னவென்று தெரியாது என்பதை தெளிவாகக் காண்பித்த காட்சி அது. ஆம், அந்த ஜீவானந்தமும் கம்யூனிஸம் என்றால் இட்லி சட்னி என்று விளக்கிய காட்சியைப் பார்த்து, இப்படி கிண்டலாவது செய்கிறார்களே என்று விரல்சூப்பிக்கொண்டு உத்சொ கொட்டியது கம்யூனிஸக் கூட்டம் என்பது வரலாறு.

அந்தப் படத்தைப் பற்றி பொதுவாக இப்படி கருத்து இருந்தது விக்கிரமா. படம் நன்று. குறிப்பாக விஜயின் நடிப்பு நன்றாக இருந்தது. ஷங்கருக்கு அடுத்தபடியாக ஷங்கரின் ஃபார்முலாவை வெற்றிகரமாகப் படமாக்கிய முருகதாஸ் பாராட்டுக்குரியவர்தான். சில காட்சிகளில் லாஜிக் ஓட்டை இருந்தாலும், படத்தின் வேகத்தில் அது தெரியவில்லை. இறுதிக்காட்சி சண்டை மட்டுமே தாங்கமுடியாததாக இருந்தது. இப்படி மக்கள் பேசிக்கொண்டார்கள். அது ஒருவகையில் சரிதான் விக்கிரமா.

ஆனால் விக்கிரமா நான் கேட்கப்போவது இதைப் பற்றி அல்ல. படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் விமர்சனம் எழுதித்தள்ளிய அன்றைய இணையவீரர்கள் யாருமே ஒன்றைக் கவனிக்கவில்லை.

மூன்று விவசாயிகள் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கிறார்கள். அப்போது அவர்களின் கைவிரல் ரேகையில் மையைப் பார்க்க ஓடி வருகிறார் விஜய். முதல் பிணம் ஹிந்துப் பிணம். யாரிடமும் கேட்காமல் உரிமையாக அவரே பிணத்தைத் திறந்து கைவிரலில் மை இருக்கிறதா என்று பார்க்கிறார். இரண்டாம் பிணம் இஸ்லாமியப் பிணம். அங்கே ஓடுகிறார் விஜய். பேஸ்த் அடித்து நின்றுவிடுகிறார் விக்கிரமா. ஆம். அங்கே இருக்கும் இஸ்லாமிய உறவினர்களிடம் அனுமதி கேட்டு கைவிரலைப் பார்க்கிறார். ஏன் விக்கிரமா இப்படி?

இதுமட்டுமல்ல. ஆறு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஹிந்து விவசாயிகள் சாகும்போது ஹிந்துமதம் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் இஸ்லாமிய விவசாயி சாகும்போது மதத்தைப் பற்றிக் குறிப்பிட்டுச் சாகிறார். ஹிந்து மதம் செத்துப் போவதற்குப் பெத்துப் போட்டதா விக்கிரமா?

இந்தக் கேள்விகளை யாரும் எழுப்பவில்லை. ஏன்? ஆனால் விக்கிரமா இதற்கான பதில் உனக்குத் தெரியும். ஆனால் இந்தமுறை நம் விளையாட்டில் ஒரு விதிமுறை மாற்றம் விக்கிரமா. உனக்குப் பதில் தெரியும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அந்தப் பதிலைச் சொன்னால் உன் தலைவெடித்துச் செத்துப் போவாய். நான் ஓடிப்போய் மரமேறிக் கொள்வேன். பதில் சொல்லாமல் கள்ளமௌனம் சாதித்தால் நான் உன்னுடன் வந்துவிடுவேன். உன் கோடானகோடி தேடல் முடிவுக்கு வரும் என்றான்.

நொடி யோசித்தான் விக்கிரமன். மெல்லப் புன்னகைத்தான். “வேதாளமே, என் தலைவெடித்தாலும் பரவாயில்லை. நான் பதில் சொல்லியே தீருவேன். இந்த நோயின் பெயர்…” என்று சொல்வதற்குள் அவன் தலை சுக்கு நூறாக வெடித்தது. வேதாளம் ஓடிப்போய் மரத்தின் மேலேறி அமர்ந்துகொண்டு லூசுப்பய என்றது.

Share