Archive for ஹரன் பிரசன்னா

டியூஷன் (2)

முதல் பகுதியை வாசிக்க இங்கே செல்லவும்.

சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்துவதே இல்லை என்றால், இன்னும் சிலர் எப்போதும் பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அதாவது ஒவ்வொரு நொடியும் அவர்கள் கவனம் பிள்ளைகளின் படிப்பின் மீதே இருக்கிறது. இது அந்தக் குழந்தைகளுக்குத் தரும் மன நெருக்கடியை வார்த்தைகளில் சொல்லமுடியாது. என் அண்ணா பையன் ஒரு தடவை தன் அம்மாவிடம், ‘எப்பவாவது நல்லா சாப்பிட்டியா என்ன படம் பாத்தன்னு கேக்கியா, எப்பவும் படிப்பு படிப்பு படிப்புத்தானா’ என்று கேட்டதாக என் அண்ணி சொன்னார். இத்தனைக்கும் இந்தப் பையனுக்கு பெரிய நெருக்கடியெல்லாம் தரப்படவில்லை. அப்படி இருந்தும் படி படி என்று சொல்வது ஒரு பையனுக்கு எரிச்சலைத்தான் தருகிறது. அதையே எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தால் அதை எதிர்க்கமுடியாத குழந்தைகள் பெரிய சோர்வை நோக்கியே செல்கின்றன. 

1ம் வகுப்பு படிக்க ஒரு தாய் தன் மகளைச் சேர்க்க வந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என் மனைவியிடம் பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 1ம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு டியூஷன் எதற்கு என்பது முதல் கேள்வி. இரண்டாவது, அந்தக் குழந்தையைச் சேர்க்க ஒரு மணி நேரம் என்ன பேசத் தேவை இருக்கிறது என்பது. சேர்த்த சமயம் அவர் சொன்னது, அவரது மகள் ஐ ஏ எஸ் ஆகவேண்டும் என்பது அவரது கனவாம், அவரே ஐ ஏ எஸ் ஆக இன்னும் முயன்றுகொண்டுதான் இருக்கிறாராம், அவரது சிறிய வயதில் அவர் ஒழுங்காகப் படிக்காமல் விட்டதால் இப்போது திணறுகிறாராம், அத்தவறை அவரது மகள் செய்துவிடக்கூடாதாம். எப்போதும் படிப்பு மட்டுமே அவளது கவனமாக இருக்கவேண்டுமாம். அந்தக் குழந்தையின் வயது 6. முதன்முதலாக அந்தக் குழந்தை டியூஷனுக்கு வந்தபோது, நான் உள்ளே நுழைந்தவுடன் என் மனைவியிடம் ‘என்ன ஒரு பெரிய கொசு ஒண்ணு உக்காந்திருக்கு’ என்று கேட்டேன். உருவத்தில் கொஞ்சம் பெரிய கொசு போலத்தான் அக்குழந்தை இருந்தது. பள்ளி விட்டு வந்த உடனே அந்தத் தாய் அவரது போதனையைத் தொடங்கிவிடுவார். டியூஷனுக்கு வரும்போதெல்லாம் அரை மணி நேரம் என் மனைவியிடம் பேசுவார். அதைப் படிக்கணும், இதைப் படிக்கணும், யார்கூடயும் பேசவிடாதீங்க, விளையாடக்கூடாது, சிரிக்கக்கூடாது, ஒழுக்கம் முக்கியம், தூங்கினா தண்டனை தாங்க, என்று இப்படி நிறைய சொல்லுவார். சில நாள்கள் நான் கேட்டுக்கொண்டிருந்தேன். பிறகு எனக்குப் பொறுமை போய்விட்டது. ஒரு கட்டத்தில் என் மனைவிக்கு இதைக் கேட்க கேட்க ரத்தக் கொதிப்பே வர ஆரம்பித்துவிட்டது. தினம் வார்த்தை மாறாமல் இதையே ஒருவரால் எப்படிச் சொல்லமுடிகிறது என்றெல்ல்லாம் ஆச்சரியப்பட்டிருக்கிறோம்.

இப்படி வளர்ப்பதுதான் சரி என்று என் மனைவி நினைத்துவிடுவாளோ என்று நான் அஞ்சும் அளவுக்கு ஆகிப்போனது அந்தத் தாயின் தொடர் அறிவுரைகள்/கேள்விகள். அந்தக் குழந்தையிடம் கேட்டேன். ”விளையாடுவியா?” “எப்பவாச்சும். அம்மா திட்டுவாங்க.” “டிவி?” “எப்பவாச்சும். அம்மா திட்டுவாங்க.” நானும் என் மனைவியும் அந்தக் குழந்தையிடம் மெல்ல பேச ஆரம்பித்தோம். அந்தக் குழந்தை தனது துக்கங்களை அதன் மொழியில் சொல்லத் தொடங்கியது. விளையாடாததும், எப்போதும் தன் அம்மா தன்னைப் படிக்கச் சொல்லிக் கண்டிப்பதும் அந்தக் குழந்தைக்கு பெரிய மன நெருக்கடியைத் தந்திருந்தது. அதை விளக்கமாக அந்தக் குழந்தையின் அம்மாவிடம் என் மனைவி சொன்னாள். அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை. “அவளுக்கு எப்பவும் விளையாடணும், டிவி பார்க்கணும், வேற வேலை இல்லை. நீங்க ஃபிரண்ட்லியா இருக்கதால உங்களை ஏய்க்கறா” என்று ஒரே வரியில் நாங்கள் சொன்னதை புறந்தள்ளிவிட்டார்.

எங்கள் வீட்டுக்கு வரும்போது நானும் என் மனைவியும் அந்தக் குழந்தையிடம் நன்றாகப் பேசுவதால் எங்களுடன் சிரிக்க ஆரம்பித்தது. அதையும் ஒரு குற்றச்சாட்டாக அந்த அம்மா சொன்னார். ”கண்டிஷனா இருங்க மிஸ்.” உடனே என் மனைவி, இது எங்க ஸ்டைல், இப்படித்தான் நாங்க பாடம் எடுப்போம், இருப்போம். உங்க பொண்ணு மார்க் குறைஞ்சா மட்டும் கேளுங்க என்று சொல்லிவிட்டாள். உடனே அவர், அதுக்கில்ல, அவளை ஐ ஏ எஸ் ஆக்கணும், அதுதான் என்றார். சலித்துப் போய்விட்டது. கடைசி வரை அந்த அம்மா மாறவே இல்லை. அந்தப் பெண்ணுக்கு விளையாட்டும் சக குழந்தைகளிடம் பேசுவது சேட்டை செய்வது என்பதெல்லாம் எங்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் மட்டுமே கிடைத்தது. அதிலும் அந்த அம்மா, “நல்லா மூணு மணி நேரம் வெச்சி அனுப்புங்க” என்பார். எந்தக் குழந்தையும் ஒரு மணி நேரத்துக்கு மேல் படிக்க முடியாது. படிக்க என்ன இருக்கிறது என்பது அடுத்த கேள்வி! ஆனால் அந்தக் குழந்தையை மூன்று மணி நேரம் படிக்க வைக்கவேண்டுமாம். ஜஸ்ட் 1ம் வகுப்புப் படிக்கும் குழந்தைக்கு நேர்வதைப் பாருங்கள்.

என் மனைவி மிகத் தீர்மானமாகச் சொன்னாள். “உங்க பொண்ணு பாடத்தை படிக்க வைப்போம். ரொம்ப கெட்டிக்காரி. ஒரு மணி நேரமே அதிகம். எப்பவும் முதல் ரேங்க்தான். அப்புறம் என்ன? மீதி நேரம் விளையாடத்தான் செய்வாள்.” இப்படிச் சொல்லியும் அந்த அம்மா மீண்டும் மீண்டும் அவர் கருத்துகளைப் புகுத்திக்கொண்டே இருந்தார். ஏன் டியூஷனை மாற்றவில்லை என்று யோசித்தேன். அவரது கணவரே காரணம். இதையெல்லாம் அந்த அம்மா அவரது கணவரிடம் சொல்லி இருப்பார் போல. கணவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. தன் மகள் சிரித்து விளையாடட்டும் என்று சொல்லி, என்ன ஆனாலும் டியூஷனை மட்டும் மாற்றக்கூடாது என்று உத்தரவிட்டுவிட்டார். அந்த அம்மாவுக்கு டியூஷனை மாற்றும் எண்ணமில்லை. ஆனால் எப்படியாவது தான் விரும்பும் டியூஷன் டீச்சராக என் மனைவியை மாற்றிவிட எண்ணம். அது நடக்கவில்லை. நாங்கள் இப்போது வீடு மாற்றிக்கொண்டு வந்துவிட்டோம்.

எங்கள் வீட்டுக்கு வரும்போது சிரித்துக்கொண்டும் என்னுடனும் என் மகளுடனும் விளையாடிக்கொண்டிருந்த அந்த பெரிய கொசு போன்ற குழந்தையை இப்போது எந்த டீச்சர் கசக்கி எறிந்திருக்கிறாரோ என்று தெரியவில்லை.

இப்போது ஒரு மாதத்துக்கு முன்பு இன்னொரு பையன் டியூஷனுக்கு சேர்ந்தான். 2ம் வகுப்பு. அந்தப் பையனின் அம்மாவின் கண்டிஷன்: யாருடனும் விளையாடக்கூடாது. தெருவில் விளையாடவே கூடாது. டியூஷன் விட்ட உடன் காத்திருந்து அந்த அம்மா வந்ததும்தான் வீட்டுக்குச் செல்லவேண்டும். (அந்தப் பையனின் வீடு பக்கத்து வீடுதான்.) தனியாக வரக்கூடாது. ஆங்கிலம் ஹிந்தி தமிழ் இன்னும் என்ன என்ன உண்டோ அத்தனையிலும் தேர்ச்சி பெறவேண்டும். பாடப் புத்தகங்கள் தவிர எதையும் படிக்கக்கூடாது. (நான் காமிக்ஸ் படி என்று அந்தப் பையனிடம் சொல்லி இருந்தேன். மறுநாள் வந்து பையன் சொன்னது, அதெல்லாம் அம்மா படிக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க.) டிக்ஷ்னரி தேவையற்ற ஒரு பொருள். டீச்சர் சொல்லித் தந்தால் போதுமானது. 

அந்தப் பையனிடம் மெல்ல சொன்னேன். “வீட்டுக்கு போய் அம்மாகிட்ட அங்கிள் சொன்னாங்கன்னு சொல்லுப்பா. தினமும் வெளிய விளையாடு.” மறுநாள் வந்து சொன்னான், நான் சொன்னேன் அங்கிள், எங்க அம்மா திட்டறாங்க என்றான். யாரை என்று கேட்கவில்லை. மறுநாள் அந்த அம்மா வந்தபோது அந்தப் பையன் ஓடி வந்து என்னிடம், அங்கிள் நீங்களே எங்க அம்மாகிட்ட சொல்லுங்க என்றான். என் மனைவியைச் சொல்லச் சொன்னேன். பாச்சா பலிக்கவில்லை. “தம்பி உன் அதிர்ஷ்டம் அவ்ளோதான்” என்று சொல்லிவிட்டேன். 🙁 

நேற்றிலிருந்து டியூஷனையும் நிறுத்திவிட்டார்கள். காரணம், என் மனைவி சொன்ன பழைய கண்டிஷன்களே. விளையாட விடுங்க, நல்லா படிக்கறான், அது போதும், ரொம்ப கஷ்டப்படுத்த வேண்டாம், நல்லா ஜாலியா இருக்கட்டும் – இவைதான் அந்தப் பையன் டியூஷன் நிற்கக் காரணம். இங்கேயும் அந்தப் பையனின் அப்பா, தன் மகன் விளையாடுவதை விரும்புகிறார். ஆனால் அம்மா செம ஸ்ட்ரிக்ட். “தெருவுல கண்டவனோட சேர்ந்தா புள்ள கெட்டுடுவான். அவனுக்கு உடம்புக்கும் முடியலை, விளையாண்டா எதாவது ஆயிடும். இத்யாதி இத்யாதி.”

இப்படி நிறைய பெற்றோர்கள். ஒரு இரட்டையர்கள் டியூஷன் வருகிறார்கள். அவர்களிடம் நாம் படத்துக்குப் போவோம் என்று அழைத்தேன். இதுவரை தியேட்டரில் சினிமாவே பார்த்ததில்லை என்றார்கள். அவர்கள் வயது 15! நான் அதிர்ந்துவிட்டேன். ஏனென்றால் படம் பார்ப்பது தவறு என்பது அவர்கள் பெற்றோர்கள் சொல்லித் தந்தது. தமிழ்ப்படங்கள் இப்படித்தான் இருக்கின்றன என்றாலும், தேர்ந்தெடுத்துப் படங்களைக் காட்டியிருக்கலாமே! நான் அந்தப் பெற்றோர்களை அழைத்துப் பேசினேன். படம் மட்டும் வேண்டாம் ப்ளீஸ் என்று சொல்லிவிட்டார்கள். மற்ற வகைகளில் இந்தப் பெற்றோர்கள் தங்கள் மகன்களின் உணர்வுகளை மதிக்கிறார்கள் என்பதால், இதில் ஏதோ காரணம் உள்ளது என்று நினைத்துக்கொண்டு, நானும் அத்தோடு அதை விட்டுவிட்டேன். 

இந்த ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கும் பையன்களின் நிலைமையைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. தினமும் அரை மணி நேரம் மேல் படிக்க அவர்களுக்கு ஒன்றும் இல்லை. மீதி நேரத்தில் டிவி பார்க்கலாம், தெருவில் களைத்துப் போகும் அளவுக்கு விளையாடலாம். சைக்கிள் ஓட்டலாம். திருடன் போலிஸ் ஆடலாம். ஷட்டில் ஆடலாம். படம் பார்க்கலாம். என்ன என்ன இருக்கிறது! அதைவிட்டுவிட்டு எப்போதும் படிப்பு படிப்பு என்று ஏன் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். இந்தப் பெற்றோர்கள்?

எல்லோரும் 90+ மதிப்பெண்கள் வாங்கிவிட்டால், 70+ மற்றும் 40+களையெல்லாம் வாழவைப்பது யார்? என் மனைவியிடம் நான் தீர்மானமாகச் சொன்னது, எப்பவும் படி படி என்று சொல்லக்கூடாது, மதிப்பெண்கள் குறைந்துவிட்டால் ஜஸ்ட் ஓர் எச்சரிக்கை போதும், தண்டனை கூடாது என்பது. (என் மகன் இதை அவன் டீச்சரிடமே சொல்லி, அவர் எங்களை அழைத்து, “அதை நீங்க மனசுக்குள்ள வெச்சிக்கோங்க, பையன்கிட்ட சொல்லாதீங்க, ஏண்டா மார்க் குறைஞ்சதுன்னா எங்க அப்பா திட்டமாட்டாங்கன்னு என்கிட்டயே சொல்றான்” என்று சொன்னது உபரிக்கதை.)

மிக முக்கியமாக, காமிக்ஸ், குழந்தைகள் நூல்களைப் படிக்க வைப்பது. படிப்பது என்பது சுவாரஸ்யமானது என்பதை உணர இதுதான் வழி. உண்மையில் இந்த காமிக்ஸைப் படிக்கவே என் மகன் முகம் சுழிக்கிறான். இருந்தாலும் கட்டாயப்படுத்தி வாராவாரம் படிக்க வைக்கிறேன். அதுவும் மிகக் குறைவான நேரத்துக்கு மட்டுமே. மற்ற நேரம் முழுக்க அவன் விளையாடிகொண்டுதான் இருப்பான். எனக்கு இப்போது 38 வயது. என்னால் விளையாட முடியவில்லை. 🙁

விளையாடும் நேரத்தில் விளையாடும் வயதில் குழந்தைகளை விளையாட விடுங்கள். ஒருவன் ஐ ஏ எஸ் கனவைப் பெறுவதற்கு 5 வயது ஏற்றதல்ல. 🙁 எப்போதும் படித்துக்கொண்டே இருப்பதற்கு குழந்தைகள் சாவி முடுக்கிவிடப்பட்ட குழந்தைகள் அல்ல. தமிழ் பேசுவது பாவமல்ல. ஆங்கிலம் தெரியாதது அவமானமல்ல. ஐயோ, எத்தனை எத்தனை கற்பிதங்கள் இந்தப் பெற்றோர்களுக்கு. நீங்கள் தோற்றுப் போனதை ஜீரணிக்க உங்கள் குழந்தைகளைப் பந்தயம் வைக்காதீர்கள். எங்காவது சென்று இதையெல்லாம் சொல்லி கத்த வேண்டும் போல் உள்ளது.

உண்மையில் குழந்தைகளுக்கு டியூஷன் தேவையே இல்லை. வேறு வழி இல்லை என்றால் மட்டும் டியூஷன் சேர்த்துவிடுங்கள். சனி ஞாயிறுகள் குழந்தைகளின் விளையாட்டுக்கு உருவாக்கப்பட்டவை என்று புரிந்துகொள்ளுங்கள். ஒரே நேரத்தில் ஆங்கிலம் தமிழ் ஹிந்தி சம்ஸ்கிருந்தத்தில் ஆறு வயதில் குழந்தைகள் புலைமை பெற்றுவிடும் என்று நம்பாதீர்கள். பக்கத்து வீட்டுப் பையன் செய்கிறான், என் பையன் ஏன் செய்யக்கூடாது என்று ஒருக்காலும் கேட்காதீர்கள். ஒரு குழந்தைக்கு ஒரு திறமை இருக்கும், இன்னொரு குழந்தைக்கு இன்னொரு திறமை இருக்கும் என்பதைவிட முக்கியமானது, இயல்பிலேயே திறமை குறைவான குழந்தைகளும் இருக்கலாம் என்று புரிந்துகொள்ளுங்கள். அது உங்கள் குழந்தையாகவே இருக்கலாம். ஏனென்றால் நாம் அப்படித்தான் இருந்தோம். 

(தொடரும்)

Share

குரு உத்ஸவ்

குரு உத்ஸவ் என்ற பெயர் மாற்றம் ஏன் கூடாது என்பதற்கு நாராயணன் எழுதியிருக்கும் இப்பதிவே, குரு உத்ஸவ் ஏன் தேவை என்பதை விளக்கப் போதுமானதாகிவிடுகிறது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவனை வானுறையும் தெய்வத்துள் வைப்பதே நம் மரபு. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பதே நம்மை வழிநடத்தும் கருவி. (நீ த்வைதி இல்லையா என்பவர்கள் விலகி நிற்க. த்வைதமும் அத்வைதமும் மிக மெல்லிய வகையில், தெய்வத்து நிகராகலாம், தெய்வமாகவே ஆகலாம் என்பதில் மட்டுமே முரண்படுகிறது என்று மிக எளிமையாக எடுத்துக்கொண்டுவிட்டேன் என்றும் என்னளவில் இரண்டும் ஒன்றுதான் என்று புரிந்துகொள்க!) எனவே மனிதனை தெய்வமாக்குவது ஹிந்து, எனவே இந்திய, முறைமை. இதில் மேன்மையே உள்ளது. மனிதன் எக்காரணத்தினாலும் தெய்வமாக முடியாது என்பதும் தெய்வம் ஒன்றே என்பதும் நம்க்கு ஒவ்வாத ஆபிரஹாமிய சிந்தனைகள். இந்த சிந்தனைகளில் இருந்து வெளிவர குரு உத்ஸவ் என்ற வார்த்தை மாற்றமே உத்வேகம் அளிக்கக்கூடியது என்பதை நான் நம்பவில்லை என்றாலும், இந்தப் பெயர் மாற்றத்தை எதிர்ப்பவர்கள் நம்புவதால் அந்தப் பெயர் மாற்றத்தை நான் வரவேற்கிறேன். மனிதன் என்பவன் நிச்சயம் தெய்வமாகலாம்.

குரு என்பதற்கும் ஆசிரியர் என்பதற்கும் நானாகவே ஒரு பொருளைக் கொண்டிருக்கிறேன். ஆசிரியர்கள் குருவாகவே வேண்டும் என்பதே என் ஆசை. குரு என்னும் வார்த்தை (அது தமிழா சம்ஸ்க்ருதமா என்பது தேவையற்றது. தமிழில் பெருவகையில் புழங்கியபின்னர் இது தமிழ் வார்த்தையாகவே இருக்கட்டும் என்பதே என் கருத்து) பெரிய அளவில் பரந்த அளவில் ஆழமான அளவில் ஒரு பொருளைக் கொண்டுவிடுகிறது என்று தோன்றுகிறது. ஆசிரியர் என்பது நம் இயல்பான வாழ்க்கையில் அதிகம் புழங்கிவிட்டதால், எதையேனும் கற்றுத் தருபவர் ஆசிரியர் என்ற பொருளில் பழக்க அளவில் சுருங்கிவிட்டது என்றும் எனக்குத் தோன்றுகிறது. இவை தோற்ற மயக்கங்களாகவே இருக்கலாம். ஆனால் இன்று இப்படித்தான் தோன்றுகிறது என்பதைப் புறக்கணித்துவிட்டு எப்படி யோசிக்கமுடியும்?

இப்படி ஒரு பிரிவை வைத்துக்கொண்டோமானால், இதை ஏற்றுக்கொண்டோமானால், எனக்கு குரு என்று யாருமில்லை. இதில் ஆணவம் எதுவும் இல்லை. ஒரு குருவை அடையும் குறைந்தபட்ச தகுதிகூட எனக்கில்லை என்ற அளவில் நான் இதை என்னை மட்டம்தட்டித்தான் சொல்கிறேன். குரு இல்லை என்பதல்ல, குருவைக் கண்டுணர்ந்து குருவை ஏற்கத்தக்கவனாக நான் இன்னும் தயாராகவில்லை என்றே சொல்கிறேன். நம்புங்கள். ஆனால் ஆசிரியர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். மிருதஞ்ஜெயன் என்ற ஆசிரியர் அடிக்கடிச் சொல்வார், கல்லூரியில் படிப்புக்குப் பின்னர் தேர்வு ஆனால் வாழ்விலோ தினம் தினம் தேர்வுக்குப் பின்னர்தான் படிப்பு என்று. அப்படி எனக்குப் பலப்பல விஷயங்களைக் கற்றுத் தந்த, கற்றுத் தந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவரும் வணக்கத்துக்குரியவரே. (க்ளிஷே போதும்.)

குரு இல்லை என்றாலும் குருத்துவத்தில் சில பரிமாணங்களை சில பொழுதுகளில் காட்டிய ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். அந்த ஆசிரியர்கள் அனைவரும் வணக்கத்துக்குரியவர்கள்.

நான் மூன்றாம் வகுப்புப் படிக்கும்போது எனக்கு வகுப்பெடுத்த முத்துலக்ஷ்மி டீச்சர் நினைவுக்கு வருகிறார். மாணவர்கள் வீட்டுப் பாடம் செய்யாமல் வருவது பாவமல்ல, சேட்டை செய்வது குற்றமல்ல, எதிர்த்துப் பேசுவது தவறல்ல என்று செயல்பட்ட அந்த ஆசிரியர் எப்போதுமே எங்களிடம் (என்னிடம்) அன்பாகவே இருந்தார். அவருடன் வேலை பார்த்த மற்ற ஆசிரியர்கள் முகத்தில் எள்ளும் கடுகும் வெடித்தபோது (அப்போது அந்த வயதில் அப்படித் தோன்றியது) இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். பின்னாளில் என்னுடன் டேக்-கில் வேலை செய்த மந்திரமூர்த்தி இந்த ஆசிரியரின் மகன் என்று அறிந்தபோது, முத்துலக்ஷ்மி டீச்சரின் மேல் இருந்த பிரியும் மந்திரமூர்த்தி அண்ணனின் மேலும் வந்தது என்றால், எனக்கு முத்துலக்ஷ்மி டீச்சரை எவ்வளவு பிடித்தது என்று பார்த்துக்கொள்ளுங்கள். சேரன்மகாதேவியில் இருந்த அந்த பஞ்சாயத்து போர்ட் ஸ்கூல் முத்துலக்ஷ்மி டீச்சரின் முகம் இன்னும் நினைவில் இருக்கிறது. நான் ஆசிரியராக இருந்தால் என்னால் முத்துலக்ஷ்மி டீச்சர் போல இருந்திருக்கமுடியாது என்பதே இந்த டீச்சரின்மேல் மரியாதையை வரவழைக்கிறது.

9ம் வகுப்பை மதுரையில் எம் எல் டபுள்யூ ஏ பள்ளியில் படித்தேன். அப்போது எனக்குத் தமிழாசிரியராக இருந்தவர் லக்ஷ்மணன் ஐயா. இவர் இல்லாவிட்டால் தமிழின் இலக்கணத்தை என் வாழ்நாள் எதிரியாக நினைத்திருப்பேன். தமிழ் இலக்கணம் என்பது எளிமையானது, அழகானது, ஆர்வத்துடன் படிக்க வல்லது என்பதை நிரூபித்தவர் அவர். இன்று வரை எனக்குத் தெரிந்த தமிழுக்கு அடிப்படை வித்து லக்ஷ்மணன் ஐயா இட்டதே.

10ம் வகுப்பில் எம் எல் டபுள்யூ ஏ பள்ளியில் நார்மன் சார் எனக்கு வகுப்பாசிரியராக வந்தார். இவர் என் மேல் வைத்திருந்த பாசம் இப்போதும் எனக்குப் புரியாததாக இருக்கிறது. குள்ளப்பையா என்றுதான் என்னை அழைப்பார். கிறித்துவ இறைவழிபாட்டில் தீவிர நம்பிக்கை கொண்டவர் என்று இப்போது தோன்றுகிறது. வகுப்பு முடிந்ததும் இசை நிகழ்ச்சி ஒன்று நடக்கும் என்று சொல்லி, சிலரை அழைத்துவந்தார். அவர்கள் கிறித்துவ இறைப் பாடல்களைப் பாடினார்கள். கண்ணை மூடி இறைவனை நினைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். நான் மறுநாள் நார்மன் சாரிடம் எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்று சொன்னேன். நான் ஹிந்து என்றோ, நடப்பது கிறித்துவத்தைப் புகுத்தும் செயல் என்றோ அன்று எனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் எனக்கு ஒப்பவில்லை. என் தெய்வம் ஏசுவல்ல என்று மட்டும் மனத்தில் பட்டது. இப்ப என்ன, நீ உனக்குப் பிடிச்ச சாமியை நினைச்சுக்கோ என்றார். நான் தலைமை ஆசிரியரான தர்மராஜ் சாரிடம் சென்று சொன்னேன். (இவரைப் பற்றி அடுத்து.) அவர் அமைதியாகக் கேட்டுக்கொண்டார். அதற்குப் பின்னர் அதுபோன்ற வகுப்பு நடக்கவில்லை. ஆனால் நார்மன் சார் எப்போதும் போல் என்னிடம் அன்பாகவே இருந்தார். பள்ளி இறுதித் தேர்வின்போது மிகச் சிறிய பைபிள் ஒன்றை (ஒரு குழந்தையின் கை அகலத்துக்கும் குறைவானது) அனைவருக்கும் பரிசளித்தார். எனக்குத் தரும்போது, உனக்கு வேண்டாம்னா பரவாயில்லை என்றார். இல்லை, தாங்க சார் என்று வாங்கி வைத்துக்கொண்டேன். பல நாள் அதனுள்ளே ஓம் டாலரை வைத்திருந்தேன். பள்ளி சமயத்தில் திடீரென்று ஒருநாள் அவரை ஒரு சாலையில் பார்க்க நேர்ந்தது. வாடா என்று அழைத்துக்கொண்டு போய் எனக்கு பஜ்ஜி வாங்கித் தந்தார். இப்போது நினைத்தாலும் அன்று பட்ட கூச்சம் இப்போதும் வருகிறது. ஆனாலும் எந்த ஆசிரியர் இப்படிச் செய்வார் என்பதும் நினைவுக்கு வருகிறது. என் வாழ்வில் நான் நன்றாக இருக்கவேண்டும் என எனக்காகப் பிரார்த்தித்த நார்மன் சாரை இன்றும் நினைத்துக்கொள்கிறேன்.

எம் எல் டபுள்யூ ஏ பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த தர்மராஜ் சார். வாழ்நாளில் என்னால் இவரை மறக்கவே முடியாது. நான் அங்குப் படித்த மூன்று ஆண்டுகளும் என் மீது மிகுந்த பாசத்தையும் நம்பிக்கையையும் வைத்திருந்தவர் தர்மராஜ் சார். நார்மன் சார் கிறித்துவப் பாடல் குழுவைக் கூட்டிக்கொண்டு வந்தபோது இவரிடம் சொன்னேன். அமைதியாகக் கேட்டுக்கொண்டார். பின்னர் இவர் தலையீட்டின்பேரில்தான் அது நிறுத்தப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டேன். பத்தாம் வகுப்பு முடிந்ததும் டிசி வாங்கப் போயிருந்தேன். ஐயரே இங்கயே படி, என் வீட்ல தங்கிப் படி என்றார். நான் திருநெல்வேலிக்குப் போகவேண்டி இருந்தது. மனதில்லாமல் டிசி கொடுத்து வாழ்த்தி அனுப்பினார். அவரது முகவரியைக் கேட்டேன். ஜார்ஜ் தர்மராஜ்னு போட்டு, ஸ்கூல் அட்ரஸுக்கு போஸ்ட்கார்ட் போடு, சரியா எனக்கு வந்துரும் என்று சொன்னார். அப்போதுதான் அவரும் கிறித்துவர் என்றே தெரிந்தது. அதுவரை அன்றுவரை அவர் கிறித்துவர் என்று எனக்குத் தெரியாது. அவரிடமே சென்று நார்மன் சாரின் கிறித்துவக் குழுவின் பாடலைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவரும் இதைப் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. பத்தாம் வகுப்பில் நாங்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்க தர்மராஜ் சார் பட்ட பாடு சொல்லமுடியாதது. எங்களுக்குகாக எதையும் செய்ய அவர் தயாராக இருந்தார். அவர் இல்லையென்றால் எங்கள் பள்ளியே இல்லை என்னும் அளவுக்கு அவர் பள்ளியின் மேல் ஈடுபாட்டோடு இருந்தார். அவரை மறக்கமுடியாது.

பத்தாம் வகுப்பில் வரலாறு புவியியல் சமூகவியல் எடுத்த கிருஷ்ணன் சார். உட்கார்ந்த இடத்திலேயே கண்முன் அத்தனையையும் படமாக விரித்து பாடம் நடத்த வல்லவர். அவரைப் போன்ற ஒருவர் பாடம் எடுத்தால் வரலாறெல்லாம் இனிக்கும். புவியியலெல்லாம் பிடிக்கும். சமூகவியல் சலிக்காது. பத்தாம் வகுப்புப் பரிட்சைக்கு முன்னர் அவர் பயன்படுத்திக்கொண்டிருந்த பேனாவை எனக்குப் பரிசாகத் தந்தார். அன்றோடு அவரது பணி நிறைவடைந்து பள்ளியை விட்டும் விடைபெற்றுக்கொண்டார். மிக நல்ல ஆசிரியர்.

பத்தாம் வகுப்பில் ஜான் சார். கணித ஆசிரியர். இத்தனை நன்றாக கணிதம் எடுக்கமுடியுமா என்று வியக்க வைத்தவர். எதையும் விடாமல் புத்தக அட்டை டூ அட்டை நடத்திய முதல் ஆசிரியர். நண்பனைப் போல என்னிடம் பழகியவர். தினமும் மதியம் தன் வீட்டுக்குச் சாப்பிடச் செல்லும்போது சைக்கிளில் டபிள்ஸ் என்னை ஏற்றிக்கொண்டு சென்று என் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டுப் போனவர். இதெல்லாம் ஒரு ஆசிரியர் செய்வாரா என்று என்னை ஆச்சரியப்பட வைத்தவர். நான் நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறுவேன் என என்னைவிட அதிகம் நம்பியவர்.

பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் திருநெல்வேலி மதிதா பள்ளியில் எனக்குத் தமிழ் கற்பித்த சோமசுந்தரம் ஐயா. இவரைப் பற்றிய சில மதிப்பீடுகள் வயதின் காரணமாக பின்னர் சற்றே மாறி, மீண்டும் அதே வயதின் காரணமாக சரிந்த மதிப்பீடு மீண்டும் உயர்ந்தது என்பதைச் சொல்ல்த்தான் வேண்டும். இவர் தமிழ் இலக்கணம் கற்பித்த முறை மறக்கமுடியாதது. பல இலக்கண விதிகளை அப்படியே ஒப்பிப்பார். மிக அழகாக விளக்குவார். மற்ற மாணவர்கள் எல்லாம் எரிச்சலில் இருக்க, நானும் அவரும் மட்டும் விடாமல் இலக்கணம் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். நீங்க ரெண்டு பேரும் தனியா போய் பேசுங்கல என்று நண்பர்கள் அலறுவார்கள். பனிரெண்டாம் வகுப்புக்கான ஃபைனல் ரிவிஷன் தேர்வில் தமிழில் 197 மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். தன் வாழ்நாளில் தமிழை இத்தனை ஆர்வமாகக் கற்ற மாணவனைப் பார்த்ததில்லை என்று சொல்லி, எனக்கு நன்னூல் ஒன்றைப் பரிசளித்தார். 

மற்ற ஆசிரியர்கள் பாடம் எடுக்காமல் உதார் விட்டுத் திரிந்தபோது, பள்ளியில் பாடம் எடுப்பதைத் தன் சத்தியச் செயலாகக் கடைப்பிடித்த சுப்பையா சார். கணித ஆசிரியர். நான் அவரிடம் டியூஷன் சேர்ந்தபோது, ஒனக்கு என்ன இங்க தனியாவா எடுக்கபோறேன், அங்க எடுக்கதுதான் இங்கயும், ஒனக்கு டியூஷன் வேண்டாம்ல என்று சொன்னவர். பள்ளியில் 45 நிமிடங்கள் கொண்ட ஒரு வகுப்பில் 45வது நிமிடம் வரை பாடம் நடத்தியவர். கணிதத்தின் மேல் காதல் வரக் காரணமாய் இருந்த ஆசிரியர் சுப்பையா சார். இன்றும் மதிதா பள்ளியில் பணியில் இருக்கிறார்.

மதிதா கல்லூரியில் வேதியியல் கற்பித்த மிருதஞ்ஜெயன் சார், விஸ்வநாதன் சார், கந்தசாமி சார். இவர்கள் மூவரும் முக்கண்களாக இருந்து எங்களை வழிநடத்தினார்கள். வேதியியலைக் காதலோடு படிக்க் வைத்த விற்பன்னர்கள் இவர்கள். எங்கள் வயதைப் புரிந்துகொண்டு எங்களிடம் பழகியவர்கள். எங்களின் விளையாட்டுத்தனத்தையும் விடலைத்தனத்தையும் மன்னித்தவர்கள்.

இவர்கள் அத்தனை பேரையும் தன்னுள்ளே கொண்டு எனக்குக் கல்வி கற்றுத் தந்த என் தாத்தா என் வாழ்நாளின் மிக முக்கியமான ஆசிரியர். இவர் இல்லாவிட்டால் நான் இல்லை.

இத்தனை ஆசிரியர்களுக்கும் என் குரு வணக்கம். ஆசிரியர் தினம் என்றதால் இன்று கொஞ்சம் சிறப்பாக நினைக்கிறேன். ஆனாலும் மற்ற எல்லா தினங்களிலும் இவர்களை நினைத்துக்கொண்டுதான் இருக்கிறேன். கண்ணில் நீருடன் அவர்கள் அனைவருமே தெய்வத்துள் வைக்கத் தக்கவர்கள் என்றெண்ணி அவர்கள் அனைவரின் பாதம்தொட்டு நமஸ்கரிக்கிறேன். என் திமிரினாலும் அறியாமையாலும் இவர்களுக்கு எந்த வகையிலேனும் மரியாதைக் குறைவை ஏற்படுத்தியிருந்தால் பெருந்தன்மை கொண்ட இவர்கள் என்னை மன்னித்துவிடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். குரு உத்ஸவ் தொடரட்டும்.

Share

அனந்த விரதப் பண்டிகையும் தமிழக பிஜேபிக்கு வேண்டுகோளும்

நேர நெருக்கடி இருப்பவர்கள் இந்த மொக்கையைத் தவிர்த்துவிட்டுச் செல்லவும்.

அனந்த விரதப் பண்டிகை என்பது மாத்வர்களின் முக்கியமான பண்டிகளில் ஒன்று. பொதுவாக இதை ஆண்களுக்கான பண்டிகை என்று சொல்லுவார்கள். எல்லாப் பண்டிகைகளும் பெண்களுக்கானது என்றிருக்க, ஆவணி அவிட்டமும், அனந்த விரதப் பண்டிகையும் ஆண்களுக்கானது என்பது மரபு. (எப்படி ஏன் என்பன போன்ற கேள்விகளைத் தவிர்க்க.) இந்த அனந்த விரதப் பண்டிகையை கொண்டாட ஒரு சில விதிகள் உள்ளன.

பொதுவாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வரும் குடும்பத்தினரின் ஆண் வாரிசுகள் திருமணம் ஆனவுடன் முதல் வருடத்தில் இந்தப் பண்டிகையைப் பிடித்துக்கொள்ள வேண்டும். அப்படிப் பிடித்துக்கொள்வதற்கு, அப்போது அந்த மருமகள் கர்ப்பமாக இருக்கக்கூடாது. தீட்டு வரும் நாளாக இருக்கக்கூடாது. திருமணமான முதல் வருடத்தில் கல்யாணம் ஆன பெண் முழுகாமல் இருக்கவேண்டும் என்ற விதியை வைத்தவனை (மூக்கிலேயே குத்த) தேடிக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் முழுகாமல்தான் இருப்பார்கள். எனவே இந்தப் பண்டிகையைப் பிடிக்கமுடியாமல் போய்விடும். இப்படி இல்லாமல் இருந்தால் முதல் வருடத்தில் பிடித்துக்கொள்வது நல்லது, எளிதானது.

அப்படி முதல் வருடத்தில் பிடித்துக்கொள்ள முடியவில்லை என்றால், அடுத்து எப்போது அனந்த விரதப் பண்டிகை முழு பௌர்ணமி அன்று வருகிறதோ அன்றுதான் பிடிக்கவேண்டும். அந்த சமயத்திலும் மேலே சொன்ன விதிகளும் சரிவர இருக்கவேண்டும். (இத்தனை கஷ்டப்பட்டு இந்தப் பண்டிகையைப் பிடித்து என்ன ஆகப்போகிறது என்னும் பகுத்தறிவுவாதிகள் ஒதுங்கி நிற்க.)

என் அண்ணனுக்குக் கல்யாணம் ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் பிடிக்கவில்லை. எனக்கு கல்யாணம் ஆகி 10 வருடங்கள் ஆகிவிட்டன. நானும் இன்னும் பிடிக்கவில்லை. இடையில் இரண்டு தடவை முழு பௌர்ணமியில் இந்தப் பண்டிகை வந்தபோது எங்கள் வீட்டில் யாரோ இறந்து ஒருவருடம் பண்டிகை இல்லை என்றாகிவிட்டதால் பிடிக்கமுடியாமல் போய்விட்டது. இந்த முறை அனந்த விரதப் பண்டிகை முழு பௌர்ணமியில் வருகிறது. செப்டெம்பர் 8ம் தேதி.

அண்ணனும் தம்பியும் சேர்ந்து பிடித்துக்கொள்வது வழக்கம். எனவே நான் திருநெல்வேலிக்குச் சென்றோ அல்லது என் அண்ணன் நெல்லையிலிருந்து சென்னைக்கு வந்தோ இந்தப் பண்டிகையைச் சேர்ந்து செய்யவேண்டும். இந்த முறை சென்னையில் செய்வது என்று முடிவெடுத்தோம்.

எங்கள் வீட்டில் என் தாத்தா காலம் வரை அனந்த விரதப் பண்டிகை மிகப் பெரிய அளவில் நடைபெறும். ஒட்டுமொத்த குடும்பமும் அன்று ஒன்றிணைந்து இருக்கும். சிறுவர்களான நாங்கள் அன்று தரப்படும் வெண்ணெய்க்கும் தேனுக்கும் நாக்கைத் தொங்கப் போட்டுக் காத்திருப்போம். ஜால்ரா, சப்ளாக்கட்டை, மணி என மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, அனந்த பத்மநாபனைத் தொழுது தோரணம் அணிந்துகொள்வோம். (ஒருமுறை என் அப்பா கடிதம் எழுதும்போது, அனைவரும் சாமி முன்னர் கயிறு மாட்டிக்கொண்டோம் என்றெழுதி அனைவரின் சிரிப்புக்கும் ஆளானார்!)

கடந்த வருட தோரணம் (கயிறு) சிறுவர்களுக்குத் தரப்படும். அவர்கள் கட்டிக்கொள்வார்கள். ஆண்கள் கயிரை புஜத்தில் கட்டிக்கொள்ள பெண்கள் மாலைபோல கழுத்தில் போட்டுக்கொள்வார்கள். சமையல் மிகவும் ஆசாரமாக கரி அடுப்பில் செய்யப்படும். நிறைய வகைகள் வேறு உண்டு. 2 மணிக்கே சாப்பாடு போட்டுட்டாங்களே என்றெல்லாம் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள்! 

முதல் முறை பிடிக்கும்போது, ஆண் வாரிசின் மாமனார் மாமியார் முக்கியமாக வரவேண்டும். கூடவே உடன்பிறந்த சகோதரிகளும் வரவேண்டும். இப்படியாக இந்தப் பண்டிகை இந்தமுறை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு ஏக தடபுடலாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. அனைவருக்கும் புதுத் துணி எடுத்தாகிவிட்டது. மடியான சமையலுக்கு ஆள் சொல்லி அட்வான்ஸ் கொடுத்தாகிவிட்டது. பூஜைக்குத் தேவையான சாமான்கள், பலசரக்கு எல்லாம் வாங்கியாகிவிட்டது. எல்லோரும் வரும் 8ம் தேதியை எதிர்நோக்கிக் காத்திருக்கையில்

இரண்டு அம்மாக்கள் குண்டை போட்டார்கள். ஒருவர் என்க்கு அம்மா. இன்னொருவர் நமக்கு ‘அம்மா.’

கடந்த வாரம் என் அம்மாவுக்கு திடீரென உடல்நிலை குறைவடைய, ஆஸ்பத்திரியில் 4 நாள் சேர்க்கும்படி ஆகிவிட்டது. இன்னும் சரிவர அவர் குணமாகவில்லை. மருத்துவம் தொடர்கிறது. எதை உண்டாலும் வயிறெல்லாம் வலி. உப்பசம். மூச்சுத் திணறல். எப்போதும் வயிற்றைக் கௌவும் ஒரு வலி. எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்த சோதனை, நீர் சோதனை எல்லாம் செய்தாகிவிட்டது. நாற்பதாயிரம் செலவில் கிடைத்த முடிவு, எல்லாம் நார்மல். ஆனால் வலி மட்டும் அப்படியே. இந்தப் பண்டிகையை இந்த முறையாவது பிடித்துவிடவேண்டும், அடுத்தமுறை தான் இருப்போமோ இல்லையோ என்ற எண்ணம் அம்மாவுக்கு வந்துவிட்டது. அந்த அளவுக்கு அவர் சீரியஸாக இல்லை என்றாலும், அவர் அப்படி நினைக்கத் தொடங்கிவிட்டார்.

இன்னொரு ‘அம்மா’ யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வழக்கம்போல அதிரடியாக திடீரென்று மேயர் தேர்தலை அறிவித்துவிட, என் அண்ணன் படு பிஸியாகிவிட்டார். இப்போது அவரால் வரும் திங்களன்று வரமுடியுமா என்றுகூடத் தெரியவில்லை. போதாக்குறைக்கு என் தங்கைகளும் அக்காவும் வரமுடியாத ஒரு சூழ்நிலை வந்துவிட்டது. ஒரே குழப்பம். எப்படியாவது வந்துவிடச் சொல்லி நாங்கள் சொல்ல, கடும் நெருக்கடியில் வருவது சாத்தியமில்லை என்று அண்ணா சொல்ல, என் அம்மா இன்னும் வருத்தமாக, ஒரே குழப்பம்தான்.

இந்தக் குழப்பத்தைத் தீர்க்க ஓர் எளிய வழி உள்ளது. நெல்லை மேயர் தேர்தலுக்கு இதுவரை அதிமுக மட்டுமே விண்ணப்பித்துள்ளது. தேமுதிக, மதிமுக, திமுக, காங்கிரஸெல்லாம் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிட்டது. ஆனால் தமிழக பாஜக மட்டும் வீராப்பாக உள்ளது. நான் தமிழக பிஜேபியிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். எப்படியும் நெல்லை மேயர் தேர்தலில் ஜெயிக்கப் போவதில்லை. நீங்களும் ஒதுங்கிக்கொண்டு (ஓடி)விட்டால், அன் அப்போஸ்ட்டாக அதிமுக ஜெயித்துவிடும். இதில் நாட்டு நலனும் என் வீட்டு நலனும் பாதுகாக்கப்படும். தேவையற்ற பணம் விரயமாவது தவிர்க்கப்படுவதோடு, எங்கள் வீட்டுப் பண்டிகையும் நன்றாக நடக்கும். அனந்த பத்மநாபன் அருள் உங்களுக்குக் கிடைக்கும். யோசிக்கவும். இன்றுதான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஜஸ்ட் ஒரு பத்து மணி நேரம் நீங்கள் அமைதியாக இருந்தால் போதும். நமக்கு நீலகிர் அனுபவமும் உண்டு என்றறிக.

ஹிந்துக்கள் மனது வைத்தால் திருவனந்தபுரத்தோடு இருக்கலாம் என்று சொன்னவர் உள்ள கட்சிக்காரர்கள், திருவனந்தபுரத்துப் பெருமாளின் பண்டிகையை கன்னடம் பேசும் சுத்தத் தமிழன் கொண்டாட வழிவகை செய்து இந்திய தேசியத்தை நிலைநாட்ட உதவவேண்டும். தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்பதைக் குறியீடாகக் கொண்டு யோசித்து நல்ல முடிவு எடுத்து மேயர் தேர்தலில் இருந்து விலகி இருக்குமாறு தமிழக நெல்லை பிஜேபி வகையறாக்களுக்கு என் கோரிக்கையை வைக்கிறேன். இதனால் என் அண்ணன் நிம்மதியாக வந்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடிவிட்டுப் போகமுடியும். செய்வீர்களா செய்வீர்களா?

Share

டியூஷன் (1)

என் மனைவி கடந்த இரண்டு வருடங்களாக டியூஷன் எடுத்துக்கொண்டிருக்கிறாள். அதில் வரும் சில மாணவர்களைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது. இவர்கள் இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே புரியவில்லை.

ஒரு மாணவன், கடந்த வருடம் 6ம்வகுப்பில் படிக்கும்போது டியூஷனுக்கு வந்தான். ஒரு வாரம் பாடம் எடுத்த என் மனைவி, என்னிடம் இயற்பியலில் ஒரே ஒரு பாடம் எடுத்துப் பாருங்க என்றாள். நானும் ஆவலாக அவனுக்கு மிக ஆழமாக விரிவாக இயற்பியலில் ஒரு பாடம் எடுத்தேன். பையன் ஒரு தனியார் பள்ளியில் சி பி எஸ் ஈ பாடத்திட்டத்தில் படித்துக்கொண்டிருந்தான். அவன் நான் நடத்தியதை மிகவும் ஆர்வமாகக் கேட்டான். அதை ஒட்டிய சில யூடியூப் வீடியோக்களைக் காட்டினேன். மிகவும் ஆர்வமாகப் பார்த்தான். அன்றைய வகுப்பு முடிந்ததும், மறுநாள் அந்தப் பாடத்தை எழுதிக் காண்பிக்கவேண்டும் என்று சொல்லி, வீட்டில் வைத்துப் படித்துவிட்டு வருமாறு சொல்லி அனுப்பினேன். என் மனைவி அமைதியாக இருந்தாள்.

மறுநாள் அந்தப் பையன் வந்தான். கேள்விகளை எழுதிக் கொடுத்தேன். அவன் பதில் எழுதித் தரவே இல்லை. என்னதான் எழுதியிருக்கிறான் என்று பார்க்கலாம் என வாங்கிப் பார்த்தபோது, அவன் எழுதிய விதமும் எழுத்தும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு ஆங்கில வார்த்தையைக் கூட அவனால் ஒழுங்காக எழுத இயலவில்லை. ஒரு கேள்விக்கும் சரியான பதிலை எழுதத் தெரியவில்லை. எழுதிய அனைத்துப் பதில்களும், அனைத்து வார்த்தைகளும் தவறு. ஆறாவது படிக்கும் பையனுக்கு ஒரு வரி கூட ஆங்கிலத்தில் மனப்பாடம் செய்து எழுதத் தெரியவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது. இப்படிப்பட்ட ஒரு பையனுக்கு நேரடியாக ஒரு பாடத்தை எப்படி விழுந்து விழுந்து எடுத்தாலும் அது பயன் தரப்போவது கிடையாது. தமிழ் எப்படி படிப்பாய் என்று கேட்டேன். அவன் பெயரில்கூடத் தமிழ் உண்டு. தமிழ் நல்லா வரும் என்றான். முதல் மனப்பாடச் செய்யுளை எழுதச் சொன்னேன்.

நான்கு வரி உள்ள அந்த மனப்பாடச் செய்யுளை எழுதிக் காண்பித்தான். நான்கைந்து வார்த்தைகள் தவிர அனைத்தும் பிழையுடன் இருந்தன. சரி, ஒருமுறை பார்த்து எழுதிவிட்டு வா என்றேன். அப்போதும் கிட்டத்தட்ட அதே பிழைகள் அப்படியே இருந்தன. பார்த்துத்தானே எழுதினாய் என்று கேட்டேன். ஆமாம் என்றான். என்னால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. அடுத்த இரண்டு நாள்கள் அவனுக்கு அ, ஆ மற்றும் க ங ச நடத்தினாள் என் மனைவி. அதில் சில எழுத்துகளை எழுதச் சொன்னபோதும் அவனுக்கு எழுதத் தெரியவில்லை. உயிரெழுத்து, மெய்யெழுத்து என எதையும் சரியாக எழுதத் தெரியவில்லை.

அந்தப் பையனின் தந்தையை அழைத்துப் பேசினேன். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது அவருக்கு. பார்த்துமா எழுதத் தெரியலை என்று கேட்டார். அவன் எழுதியதை வாங்கிப் பார்க்குமாறு சொன்னேன். உடனே அவனை ஐந்தாம் வகுப்பில் சேர்ப்பது நல்லது என்று சொன்னேன். அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்கெனவே நான்காம் வகுப்பில் இரண்டு முறை இருந்துவிட்டான், இனியும் அப்படிச் செய்யமுடியாது என்றார். இவனுக்கு ஆறாம் வகுப்பின் பாடங்களை நடத்துவது சரியாக வராது என்றேன். முதலில் தமிழிலும் ஆங்கிலத்திலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புக்கான பாடங்களைத் தொடங்கவேண்டும், அதுவரை அவனது பள்ளியை நீங்களே சமாளித்துக்கொள்ளவேண்டும் என்றேன். சரி என்று சொல்லிவிட்டார். அடுத்த மூன்று மாதங்கள் அவனுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் அடிப்படைக் கல்வியை என் மனைவி நடத்தினாள். மெல்ல மெல்ல எழுத ஆரம்பித்தான். வேகமான முன்னேற்றமெல்லாம் திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். மெதுவாக மிக மெதுவாக மெல்ல மெல்ல படிக்க ஆரம்பித்தான்.

படம் பட்டம் என்பதையெல்லாம் ஆறாம் வகுப்பு மாணவன் தவறுடன் எழுதுவது எனக்கு கடுமையான சோர்வை அளித்தது. இத்தனைக்க்கும் ஆறு வருடங்கள் முக்கியமான ஒரு தனியார்ப் பள்ளியில் வருடம் 40,000 ரூ கட்டிப் படித்திருக்கிறான். தனிப்பயிற்சியும் உண்டு. யாருமே இதைக் கண்டுகொள்ளவில்லையா? தெரியவில்லை. அவரது தந்தைக்கும் தாய்க்கும் அவர்களது தினப்படி வாழ்க்கையை எதிர்கொள்வதே பெரிய சவாலாக இருந்ததால் இவனைக் கவனிக்கமுடியவில்லை. மேலும் பணப் பிரச்சினை காரணமாக எப்படியாவது தன் மகன்களைப் (இந்தப் பையனுக்கு ஒரு தம்பியும் உண்டு, அவன் 3ம் வகுப்பு. அவனுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எந்த எழுத்தும் தெரியவில்லை. 3ம் வகுப்பு என்பதால் கொஞ்சம் தப்பித்தான்) படிக்கவைக்க கடுமையாக உழைப்பதை மட்டுமே இருவரும் முழுநோக்காகக் கொண்டுவிட்டார்கள். எனவே தன் மகன் எப்படிப் படிக்கிறான் என்பதில் கவனம் செலுத்தவில்லை. எப்படிப் படிக்கவைக்கவேண்டும் என்பதும் அவர்களுக்கு உண்மையிலேயே தெரியவில்லை.

ஒரு வழியாக ஆறு மாதங்களில் அந்தப் பையன் குறைவான பிழைகளுடன் எழுத ஆரம்பித்தான். நீண்ட கேள்விகளையெல்லாம் விட்டுவிட்டு, கோடிட்ட இடம் நிரப்புதல், பொருத்துதல், ஒரு வரிக் கேள்வி பதில், இருவரிக் கேள்வி பதில் இவற்றை மட்டும் படிக்க வைத்தாள் என் மனைவி. மெல்ல மெல்ல இரண்டு இலக்க மதிப்பெண்கள் வாங்கினான். அவனது வீட்டில் அதை ஒரு பெரிய சாதனையாகப் பார்த்தார்கள். இதுவரை அவன் எந்தத் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்கவில்லை. இதனால் பள்ளி அந்தப் பெற்றோர்களுக்குக் கடும் நெருக்கடியைத் தந்தது. பலவீனமான மாணவர்கள் அதிக நேரம் பள்ளியில் இருந்து படிக்க நிர்ப்பந்தம் செய்யப்பட்டார்கள். ஆனால் அந்த நேரத்தில் மாணவர்களால் படிக்க இயலாது என்பதே உண்மை. பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை நெருக்க ஆரம்பித்தது. இந்தப் பையனின் ஆசிரியர்கள் எப்படியாவது தன் வகுப்பில் இவன் சேராமல் இருக்கவேண்டும் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். ஏனென்றால் இவன் ஏன் இத்தனை குறைவாக  மதிப்பெண் பெறுகிறான் என்பதற்கு அவர்கள் நிர்வாகத்துக்கு விளக்கம் தரவேண்டியிருந்தது.

ஒருவழியாக இந்தப் பையன் அறிவியல் மற்றும் கணிதம் தவிர மற்ற பாடங்கள் தேர்ச்சி பெறத் தொடங்கினான். பெரிய சாதனை இது. ஆனால் இது அறிவு வளர்ந்ததற்கான முழுமையான அடையாளம் அல்ல. கொஞ்சம் வளர்ச்சி, அதோடு வினாக்கள் கேட்கப்படும் முறையைத் தெரிந்துகொண்டு, எதைப் படித்தால் மதிப்பெண்கள் எளிதாகப் பெறலாம் என்பதையும் சேர்த்து கிடைத்த வெற்றி. அதாவது மதிப்பெண்ணுக்காக படிக்கும் முறை. இதை வெற்றி என்று சொல்லமுடியாது. ஆனால் அந்தப் பெற்றோர்கள் தன் மகன் இப்படி மூன்று பாடங்களில் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்பதை பெரிய மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். பள்ளியிலும் இப்போது இந்தப் பையன் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்ல ஆரம்பித்தார்கள். மதிப்பெண் என்ன ஆனாலும் பரவாயில்லை, அவன் முதலில் எழுத்துகளை வார்த்தைகளை மொழியைப் படிக்கட்டும் என்று விட்டுவிட பெற்றோரும் ஆசிரியரும் சமூகமும் தயாராக இல்லை. 

இதில் இன்னொரு விஷயம், இந்தப் பையன் எப்போதும் படித்துக்கொண்டே இருப்பான். மற்ற பையன்கள் போல ஏமாற்றுவது, படிக்காமல் இருப்பது, பார்த்து எழுதுவது என எதையும் செய்யமாட்டான். மூன்று மணி நேரம் தொடர்ந்து படிக்கச் சொன்னாலும் எவ்வித சுணக்கமும் இன்று படித்துக்கொண்டே இருப்பான். எத்தனை முறை எழுதச் சொன்னாலும் எழுதிக்கொண்டு வருவான்.  இப்படிச் சிலரை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். அப்படிப் படித்தும் அவனால் பெரிய மதிப்பெண்கள் பெறமுடியவில்லை.

இந்த வருடம் மெட்ரிகுலேஷனுக்கு மாற்றிவிட்டார்கள். ஏழாம் வகுப்புக்கு எப்படியோ தேர்ச்சி பெற்று வந்துவிட்டான். சமச்சீர்க் கல்வி என்பதால் கொஞ்சம் எளிமையாக இருக்கிறது. ஆனால் பள்ளியின் நெருக்கடி அப்படியே தொடர்கிறது. இப்போதும் 3 பாடங்களில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளான். கணக்கிலும் அறிவியலிலும் 35க்கும் குறைவான மதிப்பெண்களே பெறுகிறான். கேள்வித்தாள் ப்ளூ பிரிண்ட்டை வைத்துத்தான் மதிப்பெண்கள் வாங்க வைக்க முடிகிறது. ஒட்டுமொத்தமாக இந்தக் கல்வியினால் அவன் பெறப்போவது என்ன என்று யோசிக்கும்போது வேதனையே மிஞ்சுகிறது. 

இவன் இப்படி ஆன விஷயத்தில் பள்ளிக்கும் பெற்றோர்க்கும் சம பங்கு பொறுப்பு உள்ளது. பள்ளிகள் அதனை மிக எளிதாகக் கடந்துவிடும். பெற்றோர்கள் மாட்டிக்கொள்வார்கள். தன் மகன் எப்படி என்ன எதற்காகப் படிக்கிறான் என்பதை நிச்சயம் ஒரு பெற்றோர் கவனிக்க வேண்டும். இல்லையென்றால் இப்படிப்பட்ட நிலைக்குத்தான் எந்த ஒரு பையனும் போய்ச்சேர வேண்டியிருக்கும். இந்தப் பெற்றோரின் மன நெருக்கடியும் பண நெருக்கடியும் சாமானியமானதல்ல. வருடம் இரண்டு பையன்களுக்கும் சேர்த்து குறைந்தது 70,000 ரூபாய் செலவு செய்தும் பையன்களின் படிப்பின் நிலை இப்படித்தான் என்றால் அந்தப் பெற்றோரின் நிலை இப்படி என்றால், யோசித்துப் பாருங்கள்.

இப்படி ஒரு வகை பெற்றோர் என்றால், இன்னொரு வகை பெற்றோர் உண்டு. அவர்களைப் பற்றி அடுத்து.

Share

ப்ரீ கே ஜி சேர்க்கலாம் வாங்க

நான் என் பையனை ப்ரீகேஜி சேர்த்தபோது எனக்குத் தேவையாகத் தோன்றியவற்றை இங்கே பதிகிறேன். இப்போது இதே அடிப்படையில்தான் என் மகளுக்கும் பள்ளியைத் தேடி இருக்கிறேன்.

* வீட்டிலிருந்து அதிகபட்சம் 2 கிமீ தொலைவுக்குள் இருக்கும் பள்ளி.

* நார்மலான கட்டணம். (வருடத்துக்கு அதிகபட்சம் 10,000. இதுவே மிக அதிகம்தான்! ஆனாலும் இப்படி ஆகிவிட்டது.) மிக அதிகக் கட்டணம் கொடுத்து எக்காரணம் கொண்டு ப்ரீகேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்க வைக்கத் தேவையில்லை. 6ம் வகுப்பிலிருந்து நல்ல அரசுப் பள்ளி (ஆங்கில வழிக் கல்வி) போதும்.

* தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி – இந்த மூன்றுக்கும் இணையான முக்கியத்துவம் வேண்டும்.

* ஓரளவு நல்ல பள்ளி போதும். அந்த வட்டாரத்திலேயே சிறப்பான பள்ளி தேவையில்லை. ஏனென்றால்,

* அந்த வட்ட்டாரத்திலேயே மிக நல்ல பள்ளி என்றால் குழந்தைகளைப் பாடாய்ப் படுத்துவார்கள் என்பது என் மனப்பதிவு. எனவே வேண்டாம்.

* குழந்தைகள் என்றால் ஒழுக்கம் இல்லாமலும் சேட்டை செய்துகொண்டும்தான் இருப்பார்கள். அவர்களை அதற்காகத் தண்டிக்க கூடாது. சேட்டை எல்லை மீறும்போது மிகக் குறைவாகத் தண்டிக்கலாம்.

* ஹோம்வொர்க் செய்யாமல் ஒரு பையன் வருவது இயல்பு. அதற்கு பெரிய தண்டனை எல்லாம் கூடாது.

* பொய் சொல்வது குழந்தைகளின் உரிமை. அதற்காக கடுப்பாகக் கூடாது.

* 70 மார்க் வாங்கினாலும் போதும், ஏன் 90 வாங்கவில்லை என்று படுத்தக்கூடாது.

* குறைந்த பட்சம் 5ம் வகுப்பு வரையாவது சனி ஞாயிறு விடுமுறை அளிக்கவேண்டும். உண்மையில் 9ம் வகுப்பு வரையில் சனி ஞாயிறு விடுமுறை கொடுத்தாலும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது.

* அதிகம் ஹோம் வொர்க் கொடுத்து கையை உடைக்கக் கூடாது.

* புரிந்துகொண்டு படிப்பது நல்லதுதான். முக்கியமானதும் தேவையானதும் கூட. ஆனால் மனனம் செய்ய பள்ளி வற்புறுத்தவேண்டும். மனனம் என்பது ஒரு கிஃப்ட். அதை சிறந்த முறையில் குழந்தைகளுக்கு வசப்படுத்தக் கற்றுத்தர வேண்டும்.

* பெற்றோர்களை வரச் சொல்லி துன்புறுத்தக்கூடாது. பரிட்சை முடியும்போது பேப்பர் திருத்தித் தரும் நாள் மட்டும் வரச் சொன்னால் போதும். அதுவும் அப்பாவோ அம்மாவோ வந்தால் போதும் என்றிருக்கவேண்டும். இரண்டு பேரும் வரவேண்டும் என்று படுத்தக்கூடாது.

* எவ்வளவு முடியுமோ அவ்வளவு குழந்தைகளை பள்ளியில் விளையாட அனுமதிக்கவேண்டும். 6ம் வகுப்புக்குப் பிறகு ஒழுக்கத்தைப் போதித்தால் போதும்.

* எப்போதும் பாடப் புத்தகத்தை மட்டும் படிக்கச் சொல்லாமல், பள்ளியில் உள்ள நூலகத்தை உண்மையாக பயன்படுத்தச் சொல்லி மாணவர்களை வற்புறுத்தவேண்டும்.

* கடவுள் வழிபாடு மிக முக்கியம். தினமும் பள்ளியில் வழிபாடு நடக்கவேண்டும்.

* இந்தியா குறித்த பெருமிதம் மிக முக்கியம். அதனை மாணவர்களுக்குத் தவறாமல் ஊட்டவேண்டும்.

* கடைசியாக எனக்கே எனக்கான ஒன்று – அது ஹிந்துப் பள்ளியாக இருக்கவேண்டும்.

இப்படித்தான் மகளையும் சேர்க்கப் போகிறேன். நாளை என் மகளுக்கு இண்டர்வியூ. வயசு 2.5 ஆகுது.

ஏ பி சி டி
உங்கப்பந்தாடி
வந்தா வாடி
வராட்டி போடி

என்று அழகாகச் சொல்லுவாள். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

Share

2013 – தமிழ்த் திரைப்பட விருதுகள்

என் பட்டியல் இது:

 

விருதுகள்

சிறந்த திரைப்படம் – மதயானைக் கூட்டம்

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – சூது கவ்வும்

சிறந்த இயக்குநர் – விக்ரம் சுகுமாரன் (மதயானைக் கூட்டம்)

சிறந்த திரைக்கதை – விக்ரம் சுகுமாரன் (மதயானைக் கூட்டம்)

சிறந்த வசனம் – நலன் குமாரசாமி (சூது கவ்வும்)

சிறந்த கதை – கடல் (ஜெயமோகன்)

சிறந்த பின்னணி இசை – இளையராஜா (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)

சிறந்த ஒளிப்பதிவு – செழியன் (பரதேசி)

சிறந்த படத்தொகுப்பு – கிஷோர் (மதயானைக் கூட்டம்)

சிறந்த கலை இயக்கம் – லால்குடி ந‌. இளையராஜா (விஸ்வரூபம்)

சிறந்த நடன இயக்கம் – பண்டிட் பிர்ஜு மஹாராஜ் (விஸ்வரூபம்)

சிறந்த பாடல் இசை – ஏ.ஆர். ரஹ்மான் (மரியான், கடல்)

சிறந்த பாடல் ஆசிரியர் – ஏகாதசி (மதயானைக் கூட்டம்)

சிறந்த நடிகர் – பாலு மகேந்திரா (தலைமுறைகள்)

சிறந்த நடிகை – ஷெல்லி கிஷோர் (தங்கமீன்கள்)

சிறந்த குணச்சித்திர‌ நடிகர் – பாரதிராஜா (பாண்டிய நாடு)

சிறந்த குணச்சித்திர‌ நடிகை – விஜி சந்திரசேகர் (மதயானைக் கூட்டம்)

சிறந்த வில்லன் நடிகர் – ராகுல் போஸ் (விஸ்வரூபம்)

சிறந்த நகைச்சுவை நடிகர் – சந்தானம் (என்றென்றும் புன்னகை)

Share

தலைமுறைகள் – திரைப்பட விமர்சனம்

தன்னகங்காரத்திலும் வறட்டுப் பிடிவாதத்திலும் ஊறிக்கிடக்கும் ஒரு முதியவர் தன் பேரனின் வரவால் தன்னை அறிந்துகொள்ளும் கதையை பாலுமகேந்திரா தலைமுறைகளில் காட்டியிருக்கிறார். பாலுமகேந்திராவின் படங்களுக்கே உரித்தான, நிலைகொள்ளும் கண்கள் காணும் காட்சிகளோடு அவரது கேமரா வெகு இயல்பாக உணர்ச்சிகளைத் திரையில் கொண்டுவருகிறது.

முதியவராக பாலுமகேந்திரா நடித்திருக்கிறார். காவி வேட்டியுடன் நடுங்கும் குரலுடன் தடுமாறும் நடையுடன் உடைந்த குரலுடன் திரைமுழுக்க அவரது உடல்மொழி வியாபித்துக் கிடக்கிறது. தன் மகனிடம் காண்பிக்கும் முரட்டுப் பிடிவாதத்திலும் சரி, தன் பேரனை முதன் முதலில் பார்க்கும்போது தனது இறுக்கங்களெல்லாம் உடைந்து தளர்ந்து அழும்போதிலும் சரி, அவரது அலட்டலற்ற இயற்கையான நடிப்பு அசர வைக்கிறது.

படத்தில் பேரனாக வரும் சிறுவனும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறான். படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் தேவை உணர்ந்து, மிகை நடிப்பில்லாமல் நடித்திருப்பது பெரிய பலம்.

இளையராஜாவின் இசை எந்த ஒரு இடத்திலும் உறுத்தலாக இல்லை. பெரும்பாலான மௌனமான காட்சிகளுக்கிடையே பின்னணியில் உறுத்தாத இசை என இளையராஜாவின் இசை படத்தோடு ஒன்றி வெளிப்படுகிறது.

இத்தனை இருந்தும் படத்தில் ஏதோ ஒன்று குறைவாக இருப்பதுபோலவே தோன்றுகிறது. படம் முழுக்க ஒரு சரடாக இல்லாமல், சிறிய சிறிய காட்சிகளாக நகர்வது போன்ற ஒரு தோற்றமே அதன் காரணம். சிறிய சிறிய காட்சிகளின் வழியாக, நாம் தாத்தா பேரனுக்கு இடையே நிகழும் உணர்வுப் பரிமாற்றத்தைப் புரிந்துகொள்கிறோம் என்றாலும், பல காட்சிகள் க்ளிஷேத்தனமாக உள்ளது. கதையில் புதுமை இல்லை என்னும்போது காட்சிகளிலாவது புதுமை வேண்டும். அது இல்லை.

தாத்தா தனது பாரம்பரியத்தைத் தன் பேரன்மீது செலுத்த முயல்வது இயல்பு என்றால், ஒரு பாதிரியார் ஒரே ஒரு வார்த்தை சொன்னதும் அதைக் கைவிடுவதும், ஏசு படத்தைத் தன் பூஜையறையில் மாட்டி வைப்பதும் வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளாகத் தெரிகின்றன. பழமைவாதத்துடன் ஒரு கதாபத்திரம் கடைசி வரையில் இருப்பது இயல்புக்கு எதிரான ஒன்றல்ல. உண்மையில் அதுவே இயல்பு. ஆனால் இந்தக் காட்சிகளின் மூலம் பாலு மகேந்திரா ஒரு செய்தியைச் சொல்ல முயன்றிருக்கிறார். திரைப்படத்தில் செய்தி சொல்வது என்பதே யதார்த்தத்திலிருந்து விலகிச் செல்வதுதான். படமும் இந்தப் புள்ளியில் யதார்த்தத்திலிருந்து விலகிச் செல்கிறது.

ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியராக இருந்த ஒருவருக்கு வாட் இஸ் யுவர் நேம் என்றுகூடக் கேட்கத் தெரியாது என்பது ஏற்கும்படியாக இல்லை. 12 வயதுள்ள சென்னையில் வளரும் ஒரு பையனுக்கு தமிழ் தெரியாது என்பதும், டாக்டர் பெண்ணுக்கு நதி என்றால் என்னவென்று தெரியாது என்பதும் நம்பும்படியாக இல்லை. கதாபாத்திரத்தை நிறுவ இத்தனை கருப்பு-வெள்ளையாக்க வேண்டியதில்லை.

நறுக்குத் தெரித்தாற்போல் வந்துவிழும் வசனங்கள் பெரிய பலம். பல காட்சிகளில் இந்த வசனங்களே படத்தை இன்னொரு தளத்துக்குக் கொண்டு செல்கின்றன. இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம், வசனம் மிக யதார்த்தமாக, நாம் யாரும் பேசும் மொழியில் அதே வார்த்தைகளோடு வெளிப்படுகிறது என்பதுதான்.

தமிழில் இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து வரவேண்டும். அந்த வகையில் இது முக்கியமான படம். பாலுமகேந்திராவின் சமீபத்திய முந்தைய திரைப்படங்களைவிட இது சிறப்பாக உள்ளது என்பதும் உண்மை. சிறந்த நடிகருக்கான விருது பாலுமகேந்திராவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

நன்றி: ஆழம், ஜனவரி 2014

Share

என்றென்றும் புன்னகை – பாமக ஆர்ப்பாட்டம் செய்யுமா?

என்றென்றும் புன்னகை திரைப்படத்தைக் கடந்த வாரம் பார்த்தேன். விமர்சனம் எழுதும் அளவுக்குப் படத்தில் ஒன்றும் இல்லை என்பதால் விட்டுவிட்டேன். படத்தின் முதல் பாதியில், மூன்று ஆண்கள் நட்பின் போர்வையில் அடித்துக் கொள்ளும் கூத்துகள் ஆபாசமானவை. ஆனால் தமிழ்த் திரையுலகத்துக்கு ஆபாசம் ஒன்று புதிதல்ல என்பதால், அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. ஆபாசத் திரைப்படங்களுக்கு மத்தியிலேயே வளர்ந்ததால், சிறிய முகச்சுளிப்போடு இவற்றைக் கடந்துசெல்ல பழகிவிட்டதால், இதெல்லாம் ஆபாசமா என்ற எதிர்க்கேள்விகளுக்குப் பதிலளிக்கும் திராணி இல்லாமல் அமைதியாக இருக்கப் பழகிவிட்டதால், இப்படத்தையும் அப்படியே கடந்தேன். இரட்டை அர்த்த வசனமெல்லாம் மலையேறிப்போய், பார்த்திபன் பாணியில் – ஒரே அர்த்தம்தான், அது அதுதான் – என்று இன்றைய தமிழ் வணிக சினிமா மாறிவிட்டிருக்கிறது. இதில் என்றென்றும் புன்னகையை மட்டும் வைத்து வருத்தப்படத் தேவையில்லை என நினைத்தேன்.
 
டிவிட்டரில் ஒருவர், அது மருத்துவர் ராமதாஸின் தயாரிப்பில் வந்த படம் என்று சொல்லியிருந்தார். முதலில் அதைப் பகடி என்று நினைத்துவிட்டேன். பின்னர் கூகிளிட்டபோதுதான் தெரிந்தது, படத்தை தயாரித்தவர் பாமக அரசியல்வாதிகளுள் ஒருவரான ஜி.கே. மணியின் மகன் என்பது! அப்படியானால் என்றென்றும் புன்னகை முன்வைக்கும் ஆபாசங்களைப் பற்றியும் அதன் தொடர்ச்சியான அரசியலைப் பற்றியும் பேச வார்த்தைகள் இருக்கின்றன. படத்தை இயக்கியவர் அஹ்மத். அவர் இப்படி இயக்கியது பற்றி எனக்குப் பொதுவான கருத்துகள் உண்டென்றாலும், தனியாகச் சொல்ல எதுவுமில்லை.
 
பாபா திரைப்படம் வந்தபோது அதில் குடிக்காட்சிகளும் சிகரெட் புகைக்கும் காட்சிகளும் வருவதால் அதனைத் தடைசெய்ய அராஜகமான வழியில் போராடியது பாமக. குடிக்காட்சிகள் வரக்கூடாது, புகைக்கும் காட்சிகள் வரக்கூடாது என்று பாமக போராட சகல உரிமையும் உள்ளது. ஆனால் அது பயமுறுத்தும் வன்முறையைக் கைக்கொள்ளும் வகையிலும் மிரட்டும் தோரணையிலும் அமையக்கூடாது. ஆனால் அன்று பாபா திரையிடப்பட்ட திரையரங்குகளில் கலாட்டா செய்வோம் என்று பாமக மிரட்டியது. அதிகார பலம் தன் பக்கம் இருப்பதால் தான் என்னவேண்டுமானாலும் செய்யலாம், ஜாதி ஓட்டுக்காக அரசு வாய்மூடி இருக்கும் என்று பாமக நம்பியது. அதுதான் நடக்கவும் செய்தது. இதனாலும் (வேறு காரணங்களாலும்) பாபா தோல்வி கண்டது. ரஜினி தயாரிப்பாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தந்தார். இதற்கெல்லாம் காரணம், சமூக அக்கறை என்று காட்டிக்கொண்டது பாமக.
 
இன்று பாமகவின் அரசியல்வாதிகளுள் ஒருவரான ஜி.கே. மணியின் புதல்வர் ஜி.கே.எம். தமிழ்குமரன் எடுத்திருக்கும் படம் முன்வைக்கும் கருத்துகள் என்ன என்று பார்ப்போம். மூன்று இளைஞர்கள் எப்போதும் குடித்துக்கொண்டே இருக்கிறார்கள். பப்பில் ஆபாச நடனம் ஆடுகிறவர்களுக்கு மத்தியில் குடிக்கிறார்கள். ஒருவர் ஆண்குறியை இன்னொருவர் பார்ப்பது சகஜம் என்பதுபோல பார்த்துக்கொண்டே பேசுகிறார்கள். ஹோமோ போல நடந்துகொள்கிறார்கள். 
 
பொதுவாகக் காதல் திரைப்படங்களில் காதலர்கள் உறவுகொள்வதைக் காண்பிப்பதில்லை. ஆனாலும் பார்வையாளர்கள் தேவையெனில் அவர்கள்  உறவுகொண்டதாகவே நினைத்துக்கொள்வார்கள். அதேபோல் இதில் ஹோமோ என்று நேரடியாகக் காண்பிக்காவிட்டாலும், அவர்கள் ஹோமோ என்று பார்வையாளர்கள் நினைத்துக்கொள்ளும் அளவிலேதான் காட்சிகள் உள்ளன. அதில் ஒரு காட்சியில் இந்த மூன்று நண்பர்களுள் ஒருவர், மற்ற இருவரை ஹோமோ என்று சொல்லிக் கலாய்க்கும் காட்சியும் உண்டு. (இந்தக் காட்சியில் ஹோமோ என்ற வசனத்தின் ஒலி நீக்கப்பட்டுள்ளது.) ஹோமோ பற்றித் திரைப்படங்களில் வரக்கூடாது என்பது என் நிலைப்பாடு அல்ல. அதை எப்படி எந்த சீரியஸ் உணர்வுடன் படமாக்கிறோம் என்பது முக்கியமானது. அதைவிட அதை யார் படமாக்குக்கிறார்கள், கடந்த காலங்களில் அவர்கள் செயல்பாடு என்ன என்பதும் எனக்கு முக்கியமானதே. இன்று இப்படி கலாய்க்கத் தொடங்கினால்தான் நாளை இதைப் பற்றி அலசும் முக்கியமான திரைப்படங்கள் வரும் என்றும் இங்கே நம்புவதற்கில்லை. ஏனென்றால் இன்றுவரை திருநங்கைகள் பற்றி ஒரு உருப்படியான திரைப்படமும் வந்ததில்லை. (சந்தோஷ் சிவன் ஒரு படம் எடுத்ததாக நினைவு, அதை நான் இன்னும் பார்க்கவில்லை.) ஆனால் திருநங்கைகள் தொடர்ந்து இப்படி திரைப்படங்களில் கேவலமாகக் கலாய்க்கப்பட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்கள். எனவே தமிழ்த் திரையுலகம் ஹோமோக்களைப் பற்றிய உருப்படியான படத்தை எடுத்துவிடும் என்றும் நம்புவதற்கில்லை.
 
என்றென்றும் புன்னகை திரைப்படத்தில் எப்போதும் ஆண்கள் குடித்துக்கொண்டே இருப்பதோடு, ஒரு காட்சியில் ஹீரோயினையும் குடிக்க அழைக்கிறார்கள். ஐடி கல்ச்சரைக் காண்பிக்கிறார்களாம். இதுதான் யதார்த்தம் என்றால், பாபா படத்தில் ஒரு ரௌடி குடிப்பது போலவும் புகைப்பது போலவும் காட்டுவது யதார்த்தம் இல்லையா? பொதுவாகவே தமிழ்த் திரையுலகம் கருப்பு-வெள்ளைக் காட்சிப்படுத்தலிலும், மக்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் கருத்துகளை அப்படியே படமாக்குவதால் அவர்களோடு எளிதில் நெருங்கமுடியும் வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளக்கூடியதுதான். எனவேதான் பாபா படத்தில், பின்னாளில் திருந்தி குடி இன்றி புகையின்றி இருக்கப்போகும் ஒருவனைக் காண்பிக்க, அவன் திருந்துவதற்கு முன்னால் குடி சீட்டு புகை என்று இருக்கிறான் என்று காட்டப்பட்டது. ஆனால் கலாசாரக் காவலர்களான பாமகவினருக்குப் பொறுக்கவில்லை. படத்துக்கு எதிராக வன்முறையை அரங்கேற்றினார்கள். ஆனால் இன்று அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரின் மகன் தயாரித்திருக்கும் படம், புதிய தமிழ்க் கலாசாரத்தைக் காட்டுகிறது. கூத்தடிக்கும் நண்பர்கள், கடைசி காட்சியில் குடிக்க மறுப்புத் தெரிவிக்காத கதாநாயகி, இஷ்டப்பட்ட பெண்களுடன் சுற்றும் ஒரு கதாபாத்திரம் என என்றென்றும் புன்னகைத் திரைப்படத்தை பாமகவும் ராமதாஸும் அன்புமணியும் ஏற்கிறார்களா என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும். இல்லையென்றால் அப்படத்தை அவர்கள் பகிரங்கமாக எதிர்க்கவேண்டும். (இந்த முறையாவது ஜனநாயக ரீதியில் வன்முறை இல்லாமல் யாரையும் மிரட்டாமல் எதிர்க்கட்டும்!) அப்படி எதிர்க்கமுடியவில்லை என்றால், பாபாவை எதிர்த்த தவறுக்கு ரஜினியிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும்.

 
குடிக்காட்சிகளும் புகைக்காட்சிகளும் தவறு என்பதை ஏற்று, தனது அடுத்த படத்தில் ரஜினி சுவிங்கத்தை மென்றுகொண்டு வந்தார். அந்தப் பண்பாவது இவர்களிடம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

 

 

 

 

Share