Archive for ஹரன் பிரசன்னா

Sumathi Valavu

Sumathi Valavu (M) – நான் அபுதாபி‌ போயிருந்தபோது (இன்னுமா இந்த ரீல் அந்து போகலை?) சையாரா திரைப்படத்திற்குப் போயிருந்தோம். அப்போதுதான் சுமதி வளவு என்ற மலையாளத் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருந்ததைக் கவனித்தேன். ஆஹா இந்தப் படத்தை மிஸ் செய்து விட்டோமே என்று வருத்தத்துடன் சையாரா பார்த்து விட்டு வந்தேன்.

அன்று மட்டும் சுமதியைப் பார்த்திருந்தால் அன்றே என்னை பேக் செய்து விமானத்தில் வீட்டுக்கு அனுப்பி இருப்பார் ஜெயக்குமார். ஏனென்றால் அந்தக் கொடுமையான சுமதி வளவு படத்தை இன்றுதான் பார்த்தேன்.

பேய்ப் படமாகவும் இல்லாமல் காதல் படமாகவும் இல்லாமல் மொத்தத்தில் ஒரு படமாகவே இல்லாமல் கொடூரமாக இருக்கிறது. திடீரென்று இயக்குநருக்கு யாரோ இது பேய்ப் படம் என்று நினைவூட்ட, அதைச் சில காட்சிகள் காண்பிக்கிறார். பின்னர் காதல் படம் என்று யாரோ சொல்ல அதைச் சில காட்சிகள் காண்பிக்க, இரண்டுமே எந்த ஆழமும் இல்லாமல், ஒரு காட்சி கூட நன்றாக இல்லாமல், என்னை கதற வைத்து விட்டார்.

யாரும் அந்தப் பக்கம் போகாதீர்கள்.

Share

Kanthara The Legend – Chapter 1

காந்தாரா தி லிஜென்ட் சாப்டர் 1‌ – முதல் பாதியைப் பார்த்துவிட்டு என்னவோ விளையாட்டாக எடுத்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். காந்தாரா முதல் பாகத்திற்கு இது திருஷ்டிப் பொட்டு என்ற அளவில் கூட யோசித்தேன். ஆனால் இடைவேளைக்குப் பிறகு படம் மிரட்டி விட்டது.

இடைவேளைக்குப் பிறகான 15 நிமிடங்கள் தொடர்ச்சியாகப் புல்லரிப்பு. என்ன ஒரு கற்பனை, என்ன ஒரு எழுத்து, எத்தனை குலிகா!

கிளைமாக்ஸில் வர வேண்டியதை இப்போதே காட்டிவிட்டார்களே, இனி கிளைமாக்ஸில் என்ன செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, மிரள வைக்கும் ஒரு திருப்பம், அதைத் தொடர்ந்து அசர வைக்கும் ஓர் உச்சகட்டக் காட்சி.

உண்மையில் தொடக்கக் காட்சி முதல் இறுதிக்காட்சி வரை வேறொரு உலகத்தில் நம்மைச் சஞ்சரிக்க வைத்து விட்டார்கள். தேர் விரட்டல் காட்சிகள் பார்க்கும்போது கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் அதை எடுத்த விதம் அட்டகாசம்.

மிக மோசமான கன்னடப் படங்கள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்க, கிட்டத்தட்ட பாகுபலியை நெருங்கும் ஒரு திரைப்படத்தை இரண்டு காந்தாராவிலும் நமக்கு கன்னடத் திரையுலகம் காட்டி இருக்கிறது. அதிலும் உள்ளடக்க ரீதியாகப் பார்த்தால் பாகுபலியைக் காட்டிலும் இந்தியத் தன்மை கொண்ட சிறப்பான திரைப்படம் காத்தாரா.

கடவுள் நம்பிக்கையும் புராண நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு இந்தப் படம் இடைவேளைக்குப் பிறகு பேரனுபவமாக இருக்கும். இசையும் ஒவ்வொருவரின் நடிப்பும் கேமராவும் ஒவ்வொன்றும் உச்சம்.

தனிப்பட்டுச் சொல்ல வேண்டியது இந்த குல்சன் தேவையா பற்றி. சாதாரண ஒரு நடிகராகத் தோன்றி அவர் காட்டிய மிரட்டல் வாய்ப்பே இல்லை.

ரிஷப் செட்டி நடிப்புக்கு இரண்டாம் முறை தேசிய விருது தரலாம், தவறே இல்லை.

தியேட்டரில் சென்று பாருங்கள். கன்னடம் புரிந்தவர்களுக்கு இது மறக்க முடியாத படமாக அமையும். மற்றவர்களுக்கும் அப்படியே. கிராஃபிக்ஸ் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், பக்தி சார்ந்த திரைப்படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கே பாடம் எடுத்திருக்கிறார்கள்.

Share

ACER 2024 Report

ACER 2024 அறிக்கை தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து:

  • தமிழ்நாட்டு அரசு என்ன செய்தாலும் அமைதியாக இருந்துவிட்டு, அது என்ன என் ஜி ஓ அல்லது தனியார் அமைப்புகளை ஆதரித்தாலும் அமைதியாக இருந்துவிட்டு, தமிழ்நாட்டு அரசு மேல் இந்த நான்கு ஆண்டுகளிலும் ஒரு குற்றச்சாட்டுக் கூடச் சொல்லாமல் தந்திரமாக அமைதியாக இருந்துவிட்டு, இன்று ஏசர் கல்வி அறிக்கை மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறது என்று சொன்னால், அதைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும்…
  • ஏசர் அறிக்கை வடநாட்டை உயர்த்திப் பிடிக்கிறதா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் நிச்சயம் அது தமிழ்நாட்டைத் தாழ்த்திச் சொல்லவில்லை. ஆதாரம்? எப்படி உங்களிடம் வடநாட்டை அது உயர்த்திச் சொல்கிறது என்பதற்கு ஆதாரம் இல்லையோ, அப்படியே என்னிடமும் ஆதாரம் இல்லை. உங்களிடம் இருக்கும் கட் ஃபீலிங் போல எனக்கும் ஒரு கட் ஃபீலிங்கும், கூடவே நேரடி அனுபவுமும் உள்ளன.
  • அரசுப் பள்ளிகளின் நிலை நாற்பதாண்டுகளாகவே இப்படித்தான் இருக்கிறது. இதில் திமுக, அதிமுக என்கிற பேதமே தேவையில்லை. இரண்டு கட்சிகளும் மாணவர்களுக்கு பொருளாதார ரீதீயாக (உணவு தருவது, செருப்புத் தருவது, முட்டை, லேப்டாப் போன்ற மிக முக்கியமான முன்னெடுப்புகள்) உதவுவதில் இந்திய அளவில் முன்னோடியாகச் செயல்பட்டார்களே ஒழிய, இவற்றைவிட முக்கியமான கல்வி சார்ந்த முன்னெடுப்பில் தேங்கித்தான் இருந்தார்கள். இருக்கிறார்கள்.

//நான் பத்தாம் வகுப்புக்குச் சென்றபோது எங்கள் வகுப்பாசிரியர் நார்மன் சார் செய்த முதல் வேலை, 9ம் வகுப்பில் முழுவாண்டுத் தேர்வில் அனைவரும் உண்மையாக வாங்கிய மதிப்பெண்கள் என்ன என்பதை வாசித்ததுதான். அதுவரை முழுவாண்டுத் தேர்வு மதிப்பெண்களை நாங்கள் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. பள்ளியிலிருந்து ப்ரொமோடட் என்று ஒரு அஞ்சலட்டை வரும், அவ்வளவுதான். அன்று அவர் வாசித்த மதிப்பெண்கள் பலரைக் கலக்கமடையச் செய்தது. எங்கள் வகுப்பில் மொத்தம் 42 பேர் என்ற நினைவு. அரசு உதவி பெறும் பள்ளி. தமிழ் வழிக் கல்வி. ஐந்து பாடங்களிலும் 35 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 15 பேர் கூட இல்லை. மற்ற அனைவரும் குறைந்தது ஏதேனும் இரண்டு பாடங்களிலாவது 15 அல்லது 16தான். ஒரே ஒரு நல்ல விஷயம், தமிழை எழுத்துக் கூட்டி வாசித்துவிடுவார்கள். எழுதச் சொன்னால் முடிந்தது கதை. ஆங்கிலம் – சுத்தம். ஆங்கிலத்தின் மேலேயே தமிழில் எழுதிப் படித்து ஒப்பித்தவர்களே பலர்.//

அப்போதே இந்த லட்சணம்தான். இன்று நிலை முன்னேறிவிட்டது என்று நினைக்க எந்த முகாந்தரமும் இல்லை.

  • என் ஜி ஓ மூலமாக சர்வே எடுத்தார்கள், யாரென்றே தெரியாதவர்கள் சர்வே செய்தார்கள் என்பதெல்லாம் சால்ஜாப்பு. அப்படிப் பார்த்தால் வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்துத் தயாரிப்பதே ஆசிரியர்கள்தான். அவர்கள் திமுகவுக்கு ஆதரவாகப் பல வேலைகளைச் செய்தார்கள் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?
  • அடுத்த உருட்டு, சாம்பிள் குறைவானது என்பது. உண்மையில் சாம்பிள் கூடுதலாக இருந்திருந்தால், அறிக்கை இன்னும் மோசமாக நம்மைக் கழுவி ஊற்றி இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, 8ம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவனைத் தமிழ் வாசிக்கச் சொன்னேன். அவனது தமிழ்ப் பாடப் புத்தகத்தில் வரும் ஒரு பாடம். அதுவும் அந்த வகுப்பு தொடங்கி 9 மாதங்களுக்குப் பிறகு. அவனால் ஒரு வரியைக் கூட ஒழுங்காக வாசிக்க முடியவில்லை. (வீடியோ.)

இதில் இன்னொரு விஷயத்தையும் சேர்த்தே சொல்லவேண்டும். மாணவர்களைத் தமிழ் படிக்க வைக்க நம்மால் முடியவில்லையே தவிர, தேர்வில் அவர்களை மதிப்பெண் வாங்க வைக்க முடியும். ஆம். ஒரு தேர்வில் எப்படி மாணவர்களை மதிப்பெண் வாங்க வைக்க முடியும் என்பதில் நம் ஆசிரியர்கள் உச்சம் தொட்டு அதையும் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் நீட் போன்ற தேர்வுகள் அவசியமாகின்றன.

பல உதாரணங்கள் இதற்கு உண்டு. ஒன்பதாம் வகுப்பில் தமிழ் அ ஆ தெரியாமல் வரும் பையனைக் கூட, பத்தாம் வகுப்பு முழுத் தேர்வில் நம் ஆசிரியர்களால் 60 மதிப்பெண்கள் வாங்க வைக்க முடியும். இது நடந்திருக்கிறது. இதனால்தான், இனி ப்ளூ ப்ரிண்ட் கிடையாது என்று இந்த அரசு முடிவு செய்தபோது நான் அதை வரவேற்றேன்.

எனவே நம் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் தரம் இப்படித்தான் உள்ளது. இதனால் தனியார்ப் பள்ளியின் தரம் கொடிகட்டிப் பறக்கிறது என்று அர்த்தமல்ல. அவையும் இப்படியே. கொஞ்சம் மேலே இருக்கலாம், அவ்வளவுதான்.

  • ஆசிரியராக இருக்கும் எழுத்தாளர் சுகிர்தராணி மனம் நொந்து எழுதி, பெரிதும் பேசப்பட்ட பதிவைக் கீழே கொடுத்திருக்கிறேன். அவர் திராவிட எதிரி அல்ல. அவர் எழுதியது ஜூன் 2019ல். அவர் சொல்வதன் விரிவான அம்சமே ஏசர் 2024 அறிக்கை.
  • நீதிபதி சந்துரு எனக்கு எந்த வகையிலும் ஏற்பில்லாதவர். அவர் திராவிட எதிரி அல்ல. ஆதரவாளர். அவர் எழுதிய கட்டுரையில் இருந்து சில வரிகள். (முழுமையான கட்டுரை லின்க்.)

//கல்விச் சீரழிவும் போலி மதிப்பெண்களும்

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் +2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 11% கூடியுள்ளது: 2012 – 80.23%; 2013 – 84.44%; 2014 – 87.71%; 2015 – 90.06%; 2016 – 91.79%. கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் கூறிய தகவலின்படி, இன்றைய மாணவர்களுக்கு அவர்களது விடைத்தாள்களில் அளிக்கப்பட்ட மதிப்பெண்களின்படி தேர்ச்சி பெற்றவர்களின் விழுக்காட்டை கணித்தோமானால் அது 52%-ஐத் தாண்டாது என்பதே உண்மை நிலவரம்.//

இது தமிழ்த் திசையில் வெளியானது. இதுவும் திராவிட அரசுக்கு எதிரான பத்திரிகை அல்ல. ஜால்ரா பத்திரிகைதான்.

நீதிபதி சந்துருவின் கட்டுரையைவிட ஏசர் 2024 அறிக்கை பொறுமையாகவே பேசுகிறது என நினைக்கிறேன்.

  • ஓர் அறிக்கையைத் திட்டுவது, அந்த அறிக்கையைத் தந்த நிறுவனத்தை மத்திய அரசின் ஜால்ரா என்பதெல்லாம் சரிதான். ஆனால் நம் தமிழ்நாட்டு நிலவரம் நமக்கே தெரியாதா? நீங்களே பத்துப் பள்ளிகளைத் தேர்ந்தெடுங்கள். தமிழ் ஆங்கிலம் கணிதம் மூன்றிலும் 5ம் வகுப்புத் தரத்திலான கேள்விகளைத் தேர்ந்தெடுங்கள். 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களிடம் விடைகளைக் கேளுங்கள். ஏசர் 2024 அறிக்கை தெய்வம் என்று உங்களுக்கே புரியும்.
  • கடன் வாங்கிக் கழித்தல் தெரியாத மாணவர்கள் 10ம் வகுப்பில் இருப்பார்கள். இரண்டிலக்கப் பெருக்கல் தெரியாதவர்கள், எளிமையான சிறிய வார்த்தைகள் கொண்ட ஒரு தமிழ் வரியைத் திக்கி திக்கிக் கூட வாசிக்கத் தெரியாதவர்கள் 10ம் வகுப்பில் இருப்பார்கள். இதைக் கேலியாகச் சொல்லவில்லை, வருத்தத்துடன் சொல்கிறேன்.
  • முதலில் நம் நிலைமை என்ன என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும். பின்னர்தான் நாம் உண்மையில் தமிழ்நாட்டை, தமிழை, தமிழ் மாணவர்களைக் காப்பாற்ற முடியும்.
  • அரசு என்ன செய்யலாம்? ஒரு மாதம் ஆசிரியர்களுக்கு நேரம் கொடுத்து, அவர்களால் ஆசிரியர் என்னும் புனிதப் பணியில் இனியும் வெற்றிகரமாகச் செயல்படமுடியாது என்றால், வேறு அரசுப் பணிகளுக்கு மாறிக் கொள்ள வாய்ப்புத் தரலாம். புதிய, இளைமையான, படிப்பறிவு கொண்ட ஆசிரியர்களை நியமிக்கலாம். ஆசிரியர்களுக்கான பொதுத் தேர்வைக் கட்டாயப்படுத்தலாம். ஒரு மாதம் ஆசிரியர்களுக்குத் தரப்படும் விடுமுறையின்போது ஆன்லைனில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் ‘எப்படி வகுப்பெடுப்பது’ என்ற நுணுக்கங்களை, ஆசிரியர்கள் அல்லாத நிபுணத்துவம் பெற்றவர்களால் சொல்லித் தரச் சொல்லலாம். இது ஆசிரியர்களுக்குப் பள்ளிப் பாடத்தை எப்படி அணுகுவது எனப்தைச் சொல்லித் தரும்.
  • ஏசர் 2024 தமிழர்களை அவமானப்படுத்துகிறது, தமிழ்நாட்டுக்கு எதிராக மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்கிறது, அது ஒரு பொய் புரட்டு என்று நிரூபிப்பதற்குப் பதிலாக, உண்மையாகவே இது சரியான நேரத்தில் விடப்பட்ட எச்சரிக்கை என்பதாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டை எப்படி இந்திய அளவில் கல்வியில் முதல் மாநிலமாக்குவது என்று யோசிக்கலாம். அடுத்த பத்தாண்டுகளுக்கான வரைவுத் திட்டத்தை உருவாக்கலாம். அதுதான் நம் மாணவர்களுக்கு நல்லது. அப்படியில்லாமல், தமிழ்நாட்டு அரசுக்கு ஜால்ரா அடிக்க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ நீங்கள் காவடி எடுப்பீர்கள் என்றால், அது உங்கள் விருப்பம்.
Share

Ennepinna

எண்ணேப்பின்னா

இது எங்கள் வழக்கம். பலர் வீட்டில் இப்பழக்கம் இருக்கும். மீந்து போன பழைய சாதத்தை, நல்லெண்ணெய்யும் உப்பும் போட்டுக் கெட்டியாகப் பிசைந்து, அதை உருட்டி, அதில் குழி செய்து, குழம்பு சேர்த்து உண்டால், சொர்க்கம். (இதில், கன்னடத்தில் கரத எண்ணெ எனப்படும், வடை இதியாதி சுட்ட எண்ணெய்யைப் போட்டுப் பிசைந்தால் சுவை இன்னும் கூடும்.)

சுண்ட வைத்தப் பழங்குழம்பு என்றால், அதுவும் கொதிக்க கொதிக்க இருந்தால், சுவை அள்ளும். அதாவது அந்தக் குழம்பு நாக்கில் படும்போது நாக்கு பொள்ளிப் போகவேண்டும்.

எண்ணேப்பின்னா என்றால், எண்ணெய் உப்பு அன்னம் என்று பொருள். சிலர் வழக்கத்தில் எண்ணப்பிட்டன்னா என்றும் எண்ணப்புன்னா என்றும் சிலர் சொல்வதுண்டு.

என் அம்மா கையில் உருட்டித் தருவார். இப்போது நினைத்தாலும் அந்தச் சுவைக்கு நாக்கு ஏங்குகிறது.

அப்போதெல்லாம் பழைய சோறு நிறைய மீந்து போகும். ஏனென்றால் எப்போதும் சாதம் வீட்டில் இருக்கவேண்டும் என்பது ஒரு விதி. கஷ்ட ஜீவனம். பழைய குழம்பும் இதுவும் உண்டால் மதியம் மூன்று மணி வரை பசிக்காது. சுவையும் அள்ளும்.

இப்போதெல்லாம் மதியத்துக்கு உணவு என்றால் அது மதியமே காலியாகும் வகையில்தான் சமைக்கிறோம். எப்போதாவதுதான் இப்படிச் சாப்பிட முடிகிறது. டயட் கவலை வேறு. ஆம், இந்த உணவு என்னைப் போன்ற ஸ்லிம்மிக்களுக்கான உணவு.

Share

Parotta Shop

பரோட்டாக் கடை

திருநெல்வேலியில் என் 20 வயதில் பரோட்டா எனக்குத் தீவிரமாக அறிமுகமாகியது. அதாவது வாரம் ஒரு தடவை பரோட்டா சாப்பிடவில்லை என்றால் கை கால் நடுங்கும் அளவுக்கு. என் நண்பர்களுக்கும் இதேதான். ஞாயிற்றுக் கிழமை இரவானால் அசைவ பரோட்டா சாப்பிடுவது அவர்கள் வழக்கம். அந்த வட்டத்தில் மாட்டிக்கொண்ட ஒரே சைவன் நான்.

திருநெல்வேலியில் சால்னாவுடன் சேர்த்து, தக்காளி அரைத்து ஊற்றிய இன்னொரு வகை குருமாவும் (கிரேப்ஸ்) தருவார்கள். நண்பர்களுடன் சாப்பிடும்போது நான் இதை மட்டும் சாப்பிடுவது வழக்கம். ஏனென்றால் இதில் அசைவம் சேர்க்கப்படாது என்றொரு ’நம்பிக்கை’. (சைவமாக இதுவும் தவறுதான். ஆனால் அன்று அப்படி!)

சில சமயம் நண்பர்களுடன் நான் சைவக் கடைகளுக்குப் போவதுண்டு. அங்கே பரோட்டா குருமா நன்றாக இருந்தாலும் அசைவ நண்பர்களுக்கு ஏனோ செட்டாகாது. ஆனாலும் எனக்காக வருவார்கள்.

ஒருநாள் இனி அசைவக் கடைகளில் சாப்பிடுவதில்லை என முடிவெடுத்தேன்.

எனக்கு ஒரு வழக்கம் என்னவென்றால், பரோட்டாவுக்குக் கட்டிச் சட்னி வைத்துச் சாப்பிடுவது. அசைவக் கடையில் இது கிடைக்காது. சைவக் கடைகளில் கிடைக்கும். எந்தச் சைவக் கடைக்குப் போனாலும் இப்படிச் சாப்பிடுவேன். ரகுவிலாஸில் ஒருவிதப் புதினாச் சட்னி தருவார்கள். ஆனால் சைவக் கடைகளில் பரோட்டா விலை அதிகம். அசைவக் கடைகளில் பரோட்டா 1 ரூபாய் என்றால், இங்கே ஒரு பரோட்டா 10 ரூ. ஆனால் பரோட்டா பெரியதாக இருக்கும்.

அப்போதுதான் டவுணில் முத்து பரோட்டாக் கடை ஒன்று உதயமானது. அசைவ ஸ்டைலில் ஒரு சைவக் கடை. சைவ பரோட்டா 2 ரூபாய் மட்டுமே. உடனே அங்கே போக ஆரம்பித்தோம். கடை ஆரம்பித்த புதிது என்பதால் பட்டாணி எல்லாம் போட்டு பிரமாதமாக இருக்கும் குருமா.

அந்தக் கடை சிறிய கடை. 10க்குப் 10 கடை. உள்ளேயே மரப்படி அமைத்து மாடியில் உணவு தயாரிக்கும் இடம். அங்கே இருந்து ஒவ்வொரு தடவையும் ஓனர் கீழே வந்து பரிமாறுவார். இரண்டே பேர். பரிமாற, பில் செய்ய ஓனர். மேலே மாஸ்டர்.

நான் கட்டிச் சட்னி கேட்பேன். பரோட்டாவுக்குத் தருவதில்லை என்றாலும், எங்களைத் தவிர வேறு யாரும் அந்தப் பரோட்டாக் கடையை எட்டிப் பார்ப்பதில்லை என்பதால், எங்களையும் விட்டுவிடக் கூடாது என்பதற்காக, ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சூண்டு கட்டிச் சட்னி தருவார் ஓனர். ஆனால் நாங்கள் விடாமல் கட்டிச் சட்னி கேட்டுக்கொண்டே இருப்போம். ஒவ்வொரு முறையும் மாடிப்படி ஏறி அங்கிருந்து கொஞ்சூண்டு கட்டிச் சட்னி கொண்டு வருவார். எங்களுக்கே சங்கடமாக இருக்கும். ஆனாலும் கட்டிச் சட்னி, குருமா என்று கேட்டுக்கொண்டே இருப்போம். அவரும் சின்ன சின்ன கிண்ணங்களில் தருவார். சரியான கஞ்சன் அவர்!

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்ததும் நாங்களே பேசிச் சிரித்துக்கொள்வோம். என் நண்பர்கள் என்னை, ‘இவரு பெரிய இவரு, கட்டிச் சட்னி இல்லாம சாப்பிட மாட்டாரு’ என்றெல்லாம் ஓட்டுவார்கள்.

ஒருநாள் திடீரென அந்த முத்து பரோட்டாக் கடை மூடப்பட்டது. ஆறு மாதம் கூட அங்கே அந்தக் கடை செயல்பட்டிருக்கவில்லை. நாங்கள் சாப்பிடப் போனபோது கடை அங்கே இல்லாததைப் பார்த்து அத்தனை நண்பர்களும், ‘கட்டிச் சட்னி கேட்டுக் கடையையே மூடிட்டியே மக்கா’ என்று சொல்ல ஆரம்பித்து, அதுவே நிலைத்தும் போனது.

பெரிய கடைக்குப் போய் பரோட்டா சாப்பிடும்போது நான் கட்டிச் சட்னி கேட்டால் உடனே நண்பர்கள், ‘ஏல! இந்தக் கடையாவது இருக்கட்டும், ப்ளீஸ்” என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

பின்னொரு சமயம் தூத்துக்குடியில் பேருந்து நிலையத்தில் முத்து பரோட்டாக் கடை ஓனரைப் பார்த்தேன். தலையில் கர்ச்சீஃப் போட்டுக்கொண்டு கையில் ஒரு பையுடன் பரபரப்பாக எங்கோ போய்க்கொண்டிருந்தார். ‘சொல்லாம கொள்ளாம மூடிட்டேளே, தூத்துக்குடியில் கடை போட்டுருக்கேளா’ என்று கேட்க நினைப்பதற்குள் ஆள் மாயமாக மறைந்துவிட்டார்.

நேற்று அரட்டை ஆப் பற்றிச் சொன்னதும், நண்பர்கள் அரட்டையில்(லும்!) ஒரு க்ரூப் ஆரம்பித்துவிட்டார்கள். அதன் பெயர், ‘பரோட்டா கெட்டிச் சட்னி’.

நண்பர்களின் மனதை ரொம்பவே காயப்படுத்தி இருக்கிறேன் போல. ஆனாலும் இன்றுவரை பரோட்டா குருமாவுக்குக் கட்டிச் சட்னி எனக்கு வேண்டும்.

Share

Theerppugalin Kaalam Novel

அபிமானியின் தீர்ப்புகளின் காலம் நாவல் பாதி வாசித்தேன். நான் வாசிக்கும் இவரது முதல் நாவல் இது.

இந்த நாவல் என் ரசனைக்கானதாகத் தெரியவில்லை என்பதால் நிறுத்தி விட்டேன். பழைய கால எழுத்து, க்ளிஷே‌ விவரணைகள், பிரசாரம் மட்டுமே குறிக்கோள், எதையுமே தேவைக்கதிகமாகச் சொல்லி உணர்ச்சி மேலீட்டைச் செயற்கையாக உருவாக்குவது – இவையே இந்த நாவல் முழுக்க. இது 2019ல் வந்த நாவல் போல. உறுதியாகத் தெரியவில்லை.

நாவலில் தலித்தியப் பிரசாரம் என்பதெல்லாம் அவசியம்தான். ஆனால் அதைத் தாண்டி நாவலுக்கென்று ஒரு குணமும் அதை நோக்கிச் செல்லும் பலவிதமான கோணங்களும் தவறே என்றாலும் எதிர்த்தரப்பின் குரலும் இருப்பது, அந்த நாவல் தட்டையாவதில் இருந்து காப்பாற்றும். இந்த நாவல் இவற்றையெல்லாம் பாதி வரை தவற விட்டு இருக்கிறது. மீதி நாவலில் இவையெல்லாம் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

Share

Arattai app

என் நண்பர்கள் என்னை அரட்டை ஆப்பில் தொடர்பு கொள்ளலாம். 🙂

அரட்டை நன்றாகவே இருக்கிறது. பல சின்ன சின்ன விஷயங்கள் அசத்தலாகவே இருக்கின்றன.

அரட்டை என்றால் என்ன? வாட்ஸப் போன்ற ஒரு ஆப். இந்திய ஆப். ஃபோன் நம்பர் இருந்தால் எப்படி வாட்ஸப் பயன்படுத்துகிறோமோ அப்படி இதைப் பயன்படுத்தலாம்.

வாட்ஸப்புடன் ஒப்பிடும்போது என்ன இல்லை என்று பார்த்தால்…

* வாட்ஸப்பில் பணம் அனுப்பும் வசதி இருந்தது. இதில் இல்லை. பெரிய குறை எனக்கு இது. ஃபீட்பேக் அனுப்பி இருக்கிறேன்.

* டூயல் ஆப் வசதி வாட்ஸப்புக்கு ஆண்ட்ராய்டில் வருகிறது. அரட்டைக்கு வருவதில்லை. வேறு எந்த வழியில் அரட்டை ஆப்பை டூயல் ஆப்பாக வைப்பது என்று தெரியவில்லை. அரட்டை ஆப்பின் நோக்கில் இது மிக முக்கியமானது. இல்லையென்றால், அரட்டை ஆப்பும் வாட்ஸப்பும் ஆப்பும் தேவை என்றாகிவிடும்.

* பிசினஸ் விஷயங்களில் அரட்டை ஆப்பை எந்த அளவுக்குப் பயன்படுத்தமுடியும் என்று தெரியவில்லை. சொல்லி சொல்லித்தான் மற்றவர்களை மாற்றவேண்டும். அது நடக்காது. அந்த விஷயத்தில் வாட்ஸப் தொடவே முடியாத உயரத்தில் உள்ளது.

* அரட்டை ஆப்பில் ஸூம் போன்ற மீட்டிங் வசதிகள் கிடைக்கின்றன. மிக முக்கியமாக, 40 நிமிட எல்லை இல்லை என நினைக்கிறேன். அதைவிட முக்கியம், மொபைல் ரெக்கார்டிங், மொபைலில் சேமிக்கும் வசதி இருக்கிறது. எத்தனை எம்பி சேமிக்க முடியும் என இன்னும் சோதிக்கவில்லை. இந்த மீட்டிங் வசதி அட்டகாசம். அதாவது கூகிள் மீட்டும் வாட்சப்பும் இணைந்த வசதி அரட்டையில் கிடைக்கிறது.

* சில சமயம் வாட்ஸப்பில் நோட்டிஃபிகேஷன் வரவில்லை என்றால், அதை ஃபிக்ஸ் செய்வதற்குள் தாவு தீர்ந்துவிடும். ஆனால் அரட்டை ஆப்பில் அதை ஃபிக்ஸ் செய்ய எளிதான வழி கொடுத்திருக்கிறார்கள். அதுவே செட்டிங்க்ஸை சோதித்து என்ன செய்யவேண்டும் என்று சொல்லிவிடுகிரது. இது அட்டகாசம். நோட்டிஃபிகேஷன் வரவில்லை என்ற நண்பர்களுக்கு இதை அனுப்பி இருக்கிறேன்.

* இனி வரப் போவதுதான் அரட்டையின் ஆகப் பெரிய குறை. பல வெளிநாட்டு வாழ் நண்பர்கள், ஓடிபி வரவில்லை, எனவே இந்த ஆப்பை நிறுவமுடியவில்லை என்றார்கள். நிர்வாகம் உடனே இதைச் சரி செய்வது நல்லது.

* வாட்ஸப்பில் நமக்கு நாமே மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் வசதி இருக்கிறது. மிக முக்கியமானது இது. இது அரட்டையில் இல்லை. ஃபீட் பேக் அனுப்பி இருக்கிறேன். பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் என. அதற்குப் பதிலாக பாக்கெட் என்றொரு வசதி இருக்கிறது. சில பல வருடங்களுக்கு முன்பு பாக்கெட் என்றொரு ஆர் எஸ் எஸ் ஃபீடை சேமித்துப் படிக்கும் வசதி இருந்தது. மிக உபயோகமானது. அப்போதெல்லாம் ஆன்லைன் லின்க்கை க்ளிக் செய்து பாக்கெட்டில் சேமித்தால் அதை எப்போது வேண்டுமானாலும், ஆஃப்லைனிலும் படித்துக்கொள்ளலாம். அதைப் போன்ற வசதி என நினைத்தேன். ஆனால் இதை எப்படிப் பயன்படுத்துவது என்று இப்போதுவரை தெரியவில்லை. இன்னும் ஆழமாகச் சோதித்துப் பார்க்கவேண்டும்.

  • அரட்டை குரூப்பிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. அல்லது எனக்குத் தான் பார்க்கத் தெரியவில்லையா என தெரியவில்லை குரூப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினால் அதில் இன்ஃபோ சென்று பார்த்தல் யார் யாரெல்லாம் அந்த மெசேஜை பார்த்து இருக்கிறார்கள் அல்லது ஆடியோ மெசேஜ் ப்ளே செய்து இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்க முடியும். அந்த வசதி அரட்டையில் இல்லை என நினைக்கிறேன்.

* வாட்ஸப்பில் ஸ்டேட்டஸுக்குப் பெரிய அளவிலான விசிறிகள் உண்டு. மெசேஜைப் பார்க்காவிட்டாலும் ஸ்டேட்டஸைப் பார்க்காவிட்டால் செத்துப் போய்விடுவார்கள் என்னும் அளவுக்கு. அரட்டையில் அது ஸ்டோரீஸ் என்று இருக்கிறது. ஆனால் என்னைத் தவிர ஒருவரும் ஸ்டோரி வைக்கவில்லை. 🙂

* வாட்ஸப்பில் ரிமைண்டர் ஆப்ஷன் கிடையாது. அரட்டையிலும் இல்லை. இதை மட்டும் அரட்டை கொண்டு வந்து, இதை அடிப்படையாக வைத்து விளம்பரம் செய்தால், பெரிய அளவில் ரீச் ஆகும் வாய்ப்பு இருக்கிறது. இதையும் ஃபீட்பேக்காக அனுப்பி இருக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பும் நண்பர்கள் அரட்டைக்கு வாருங்கள்!

Update

அரட்டை ஆப் குறித்து எழுதி இருந்தேன். அதில் இருக்கும் முக்கியக் குறைபாடு ஒன்றையும் சொல்லியாக வேண்டும். அதாவது தனிப்பட்டுச் சொல்ல வேண்டிய அளவுக்கு முக்கியமான குறைபாடு.

ஒரு சாட்டிலோ அல்லது ஒரு குழுவிலோ பிறர் அனுப்பும் மெசேஜை நாம் நமக்கு மட்டும் டெலிட் செய்து கொள்ளும் வசதி இல்லை. இந்த வசதியை எப்படி அதில் ஏற்படுத்தாமல் விட்டார்கள் எனத் தெரியவில்லை. இது மிகவும் அடிப்படையானது.

பலர்‌ அனுப்பும் மெசேஜில் ஒரு மெசேஜைப் படித்து விட்டோம் அல்லது நமக்குத் தேவையில்லை அல்லது பிரைவசி காரணமாக, அந்த மெசேஜை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக, அந்த மெசேஜை மட்டும் டெலிட் செய்யும் வசதி கூட இல்லாமல் ஓர் ஆப்பை எப்படிப் பயன்படுத்துவது?

உண்மையில் அரட்டை ஆப்பைத் தொடர்ந்து பயன்படுத்தத்தான் வேண்டுமா என்னும் கேள்வியை எழுப்பும் அளவிற்கான குறைபாடு இது.

ஃபீட்பேக் அனுப்பி இருக்கிறேன். சரி செய்வார்களா எனத் தெரியவில்லை. நண்பர்கள் அனைவரும் இந்த முக்கியமான குறைபாட்டை உடனே சரி செய்யச் சொல்லி ஃபீட்பேக் அனுப்புங்கள்.

சுதேசியாக இருப்பதைவிட முக்கியமானது, சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது.

Share

Dharmasthala ‘murders’

தி நியூஸ் மினிட் மற்றும் பிற இடதுசாரி-ஹிந்து எதிர்ப்பு பெய்ட் ஊடகங்கள் தர்மஸ்தலா கோயிலின் புனிதத்தைக் கெடுக்க உள்நோக்கத்துடன் செயல்பட்டன.

2012ம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட 17 வயதுச் சிறுமி தொடர்பான பழைய வழக்கைத் திடீரெனக் கையில் எடுத்துக்கொண்டு SM media போஸ்ட் ஒன்று வருகிறது.

அடுத்து ஒரு வீடியோவில், ஒரு முகமூடி அணிந்த மனிதர், கோயிலுக்கு அருகில் 1,000-க்கும் மேற்பட்ட பெண்களின் சடலங்களைத் தானே புதைத்ததாகக் கூறுகிறார்.

தி நியூஸ் மினிட், இந்தச் செய்தி உண்மையா என்று சரிபார்க்காமல், அல்லது சரி பார்க்க விரும்பாமல் வேண்டுமென்றே அந்தச் செய்தியைப் பெரிய அளவில் விவாதத்திற்கு உட்படுத்திப் பரப்புகிறது. தன்யா ராஜேந்திரன் ஆர்வமாக இதைச் செய்கிறார்.

கர்நாடகா ஆந்திரா கேரளா எனப் பல இடங்களில் செய்யப்பட்ட கொலைகள் அனைத்தும் தர்மஸ்தலாவை ஒட்டிப் புனையப்படுகின்றன.

இறுதியில், இது ஒரு பொய் என்றும், தர்மஸ்தலாவிற்கு எதிரான பிரசாரம் என்பதும் கண்டறியப்படுகின்றன. தர்மஸ்தலாவை ஒட்டிய இடங்களில் தோண்டிய போது ஒரே ஒரு பிணம் மட்டுமே கிடைத்தது. அதுவும் எப்போதோ தற்கொலை செய்து கொண்ட ஒருவரது பிணம்.

முகமூடி அணிந்த மனிதர் அந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறத் தான் வற்புறுத்தப்பட்டதாக ஒப்புக்கொள்கிறார்.

முழுமையாக,‌ சுருக்கமாக அலசுகிறது இந்த வீடியோ.

நான்கு நாள்களுக்கு முன்பு சில உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. என்னதான் நடந்தது, அங்கு நிலவும் மர்மம் என்ன என்பதைக் கண்டறிய நாம் இன்னும் சில காலம் பொறுத்து இருக்க வேண்டும் போல.

https://www.thehindu.com/news/cities/Mangalore/dharmasthala-case-sit-seizes-five-skulls-100-bones-at-banglagudde/article70062233.ece

***

தர்மஸ்தலா கொலைப் புரட்டு தொடர்பாக போலி டாக்ஸின் இந்த வீடியோவை நிச்சயம் பார்க்கவும். (பலர் ஏற்கெனவே பார்த்திருப்பீர்கள்.)

நேராகக் களத்துக்குச் சென்று, அதுவரை மீடியாவில் சொல்லப்பட்டவற்றில் எவை எல்லாம் பொய் என்பதை ஆதாரத்துடன் சொல்கிறார்.

மீடியாவில் எப்படி எல்லாம் பேசினார்கள் என்பதையும், கொலை நடந்த இடத்தையும் பார்த்தால் நமக்குத் தெரியும், இந்தத் தமிழ்நாட்டு பெய்ட் மீடியா எப்படியெல்லாம் நேரேடிவ் செட் செய்கிறது என.

போலிடாக்ஸ் விக்னேஷ் எப்போதுமே அட்டகாசமாக வீடியோ வெளியிடக் கூடியவர். இதில் ஸ்க்ரிப்ட் இன்னும் அட்டகாசம்.

Share