Archive for ஹரன் பிரசன்னா

ஹைகூ


கோயில் மணியோசை இரம்மியமானது
கோபுரப் பொந்துகளில்
கிளிகள் உறங்காதிருக்கும்போது.

சங்கிலிபூதத்தார் சாமி வந்து
உக்கிரமானான் பூசாரி
கலவரமடைந்தன கோழிகள்

கட்சிக் கொடிக்கம்பங்கள்கூட
கவர்ந்துவிடுகின்றன
நாய்கள் நனைக்கும்போது

மலைத்திருப்பத்தில்
ஏதோ ஒரு கணத்தில்
வால் பார்க்கிறது இரயில்

மேலிருந்து கீழிறங்கி
மீனைக் கொத்திக்கொண்டு
மீள்கிறது மீன்கொத்தி

போர்வைக்குள் சத்தம்
கொடியில் படபடக்கிறது
பொத்தல்களுடன் பாவாடை

சீரான இடைவெளியில்
துணிதுவைக்கும் சத்தம்
தூங்குகிறது குழந்தை

பயனில்லாத கிணற்றைச் சுற்றி
மக்கள் கூட்டம்
மிதக்கிறது பிணம்

 

Share

கேள்விகள்

ரவு முழுதும் செய்த வேலையின் அலுப்பு உடலெங்கும் பரவியிருந்தாலும் அந்தக் காலை நேரத்தின் குளிர்ந்த காற்று அக்கணத்தை இரம்மியமானதாக ஆக்கிகொண்டிருந்தது. வேகமான எதிர்காற்று மூக்கினுள்ளே சென்று ஒருவித சுகமான எரிச்சலை விட்டுச் சென்றது. காதுகளின் வழியே அது சீறிப்பாயும் வேகம் சத்தத்தில் தெரிந்தது. ஆலையின் ஒவ்வொரு புகைபோக்கியாய்க் கடந்து நகர எல்லைக்குள் நுழையும்போது சாலையின் இரு புறங்களிலும் கருப்புத்தோல் பெண்கள் கலையத்திலும் எவர்சில்வர் தூக்குச் சட்டியிலும் பதனீர் வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு வித சினேகப் பார்வையும் நாம் மறையாத வரை அவர்களின் முகத்தில் தோன்றும் சிரிப்பும் ஒரு வித வியாபார அழைப்பு.

காற்றில் கலையும் தலைமுடியை கைகளால் கோதினேன். நிறைய மணற்துகள்கள் கையில் ஒட்டிக்கொண்டன. ஹெல்மேட் அணிந்துகொண்டு வந்திருக்கலாம் என்ற எண்ணத்துடன் கடிகாரத்தைப் பார்த்தேன். அது ஆறு இருபது காட்டியது. பைக்கின் வேகத்தை கொஞ்சம் குறைத்தேன். பிரம்மச்சாரி வாழ்க்கையில் நான் போய் செய்யப்போவது எதுவுமில்லை. தூக்கம், சாப்பாடு, ஷி·ட் என்பன தரும் அலுப்பில் ஒரு வித சந்தோஷம் கண்டுகொள்ளப் பழகினால் வாழ்க்கை இனிமையாயிருப்பதாய்க் கற்பிதம் கொள்ள வசதியாய் இருக்கும். எனக்கு அது பழக்கப்பட்டுவிட்டது.

டவுண்ஷிப் தாண்டி ரவுண்டானா கடந்து பிள்ளையார் கோவில் பக்கத்து சந்தில் திரும்பி அக்ரஹாரத்தில் நுழைந்தபோது பெருமாள் கோவிலிருந்து புல்லாங்குழல் இசை காற்றில் மிதந்து வந்தது. பட்டருக்கு எப்போதும் ·பர்ஸ்ட் ஷி·ப்ட் என்று நினைத்துக்கொண்டேன்.

வண்டியை கோவிலுக்கு பக்கவாட்டிலுள்ள என் வீட்டிற்கு முன் நிறுத்திவிட்டு டீக்கடைக்காரனுக்கு ஒரு புன்னகை புரிந்துவிட்டு வாசல்படியில் இருந்த தினந்ததியைக் கையிலெடுத்த போது பக்கத்துவீட்டு மாடியிலிருந்து ரேணுகா மாமி என்னவோ கேட்டாள்.

"என்ன மாமி.. காதுல சரியா விழல."

ஜன்னல் வழியாக வரப்போகும் குரலைத் தெளிவாய்க் கேட்க ஆயத்தமானேன்.

"மாமா உன்னப் பார்க்கணும்னார். அவசரமில்லை. எப்பமுடியுமோ அப்ப வா.."

"இப்பவே வரட்டா"என்றேன்.

ஒரு நிமிட மௌனத்திற்குப் பின் "சரி வா"என்றாள். தினத்தந்தியைக் கையிலெடுத்துக் கொண்டு சாவியை சுழற்றியபடி மாமிவீட்டு மாடிப்படியில் ஏறினேன். காலிங்பெல்லை அழுத்துமுன் மாமியின் குரல் உள்ளிருந்து, "வெறுமனே தெறந்துதான் இருக்கு.வா"என்றது. செருப்பை விட்டுவிட்டு கதவைத் திறந்து உள்ளே சென்றேன். மாமி வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாள். இன்னும் குளிக்கவில்லை போல. அப்படியானால் மாமா சமையல் கட்டில் தான் இருக்கவேண்டும்.

"என்ன மாமி.. இன்னைக்கும் ராவுஜிதான் சமையலா?"

"ஆமா.. உள்ளதான் இருக்கார் போ”

எந்தவித சங்கோஜமும் இல்லாமல் சமையற்கட்டு வரை செல்வது எனக்கே ஆச்சரியமான ஒன்று. ராவுஜி சிவப்பான தொந்தியை ஒரு துண்டால் இறுக்கிக் கொண்டு கடுகை வெடித்துக்கொண்டிருந்தார். துண்டு எப்போதுவேண்டுமானாலும் கீழே விழலாம் என்ற எண்ணத்தை என்னால் ஒதுக்க முடியவில்லை. ஆனால் ராவுஜிக்கு அந்தக் கவலை இருந்ததாகவே தெரியவில்லை.

மாமி அங்கிருந்தே கத்தினாள்.

"அவனுய காபி ஆக்கி கொட்றி"

ராவுஜி காபி குடிக்கிறியா என்றார். சரி என்றேன். பிறகு காபி போடுவதில் மும்முரமாகிவிட்டார். அறை முழுதும் சாமான்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இறைந்து கிடந்தன. மாமி வீட்டில் இருந்திருந்தால் இப்படி இருந்திருக்காது. குறைந்த பட்சம் ராஜி இருந்திருந்தாலாவது..

இந்த எண்ணம் எழுந்ததும் வயிற்றுக்குள் என்னவென்று தெரியாத ஒரு உருண்டை புரண்டு அடங்கியது. அதற்குள் ராவுஜி காபி ரெடி என்றார். காபியைக் கையில் எடுத்து குடித்துக்கொண்டே ராவுஜியைக் கேட்டேன்.

"என்ன விஷயம்?"

நான் காபியைப் பற்றி கமெண்ட் சொல்வேன் என்று எதிர்பார்த்தாரோ என்னவோ? ஒரு நொடி சுதாரிப்புக்குப் பின் சொன்னார்..

"நேத்து பஜார்ல நம்ம இன்ஸ்பெக்டரைப் பாத்தேன்."

அவர் முகம் சீரியஸாகியது. குரல் தணிந்தது. மாமிக்கு கேட்ககூடாது என்று நினைத்திருக்கலாம். அதுவும் சரிதான். எனக்கும்கூட கொஞ்சம் படபடப்பு உண்டானதை அறிந்தேன். இனி ராவுஜியின் முகத்தைப் பார்க்கும் சக்தி இருக்காது என்று எனக்குத் தெர்¢யும். ராவுஜிக்கும் அப்படித்தான். இது பற்றி பேசும்போது அவர் என்னைப் பார்க்கமாட்டார். எந்த ஒரு அப்பாவிற்கும் அப்படித்தான். நான் காபியின் நுரைகள் எப்படி அடங்குகின்றன என்பதைப் பார்த்தவண்ணம் ராவுஜி சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் தாளித்த வாணலியில் புளிக்கரைசலை ஊற்றிக்கொண்டே,

"அவர வந்து பாக்கச் சொன்னாரு. நீயும் கூட வந்தீன்னா நல்லாயிருக்கும்னு நெனச்சேன். இன்னைக்கு காலேல போகலாம்னு இருக்கேன். வர்றியா?"

பதிலுக்காய் தொக்கி நிற்கும் கேள்விகள் கேட்பது ராவுஜியின் பழக்கமல்ல. நைட் ஷி·ப்ட் முடிந்து தூங்கிகொண்டிருந்தாலும் எழுப்பி பதினோரு மணிக்காட்சிக்கு வா என்பார். வர்றியா என்பது இப்போது தொற்றிக்கொண்டுள்ள புதுப்பழக்கம்.

எப்போதும் யோசனையிலிருக்கும் அவருக்கும் இந்த உலகத்திற்கும் ஒரு இடைவெளி விழுந்தது போன்ற உணர்வு எனக்கு மேலிட்டது. அதை அவரால் தவிர்க்க இயலாதென்பதும் உண்மை.

"இன்னைக்கு ஆ·ப்தானே ராவுஜி. கண்டிப்பா வர்றேன்."

"கல்யாணத்துக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கு? எண்ணி வெச்சிருப்பியே"என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். நேரத்துடன் ஒட்டாத வெறுமை நிறைந்த சிரிப்பு எனக்கு எப்போதும் இஷ்டமாய் இருந்ததில்லை. அதை அவர் கண்டு கொண்டதுபோல நிறுத்திக்கொண்டார். நான் பதிலேதும் சொல்லாமல் சுருட்டிய தினத்தந்தியால் கையில் தட்டியபடியே வெளியில் வந்தேன். மாமி ராவுஜியிடம் "காபி கொட்றியா?"என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.

வளைந்த மாடிப் படிகளின் கீழிருந்த சிறிய மணற்வெளியில் குட்டையாய் தென்னை நின்றுகொண்டிருந்தது. இதைக்காணும்போதெல்லாம் ராஜியின் நினைவு தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. தென்னையின் கிளைகள் ஆடுவதற்கும் ராஜியின் சிரிப்புக்கும் எப்போதும் வித்தியாசம் தெரிந்த்தில்லை எனக்கு.

முதல்முறை கண்டபோதே வந்த ஈர்ப்பும் பழகப் பழக விரிந்த நட்பும் என் வழக்கமான வாழ்க்கைக்கு ஒரு ஆறுதலைத் தந்துகொண்டிருந்ததை எப்போதும் நினைப்பேன். என்றோ நிச்சயிக்கப் பட்டுவிட்ட அவளின் அவனை, கொஞ்சம் உரிமை எடுத்து நான் கிண்டல் செய்யும்போதெல்லாம் அவள் சந்தோஷமும் பொய்க்கோபமும் கலந்து அண்ணா என்று கூப்பிடும் அந்த ஒலி இன்னும் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

வெளியில் வந்து கேட்டைப் பூட்டிவிட்டுத் திரும்பியபோது டீக்கடைக்காரன் சொன்னான்.

"தம்பி.. காபி கொண்டுவந்தேன். வூடு பூட்டியிருந்துச்சு"

"ராவுஜி வீட்டுக்குப் போயிட்டேன். கொஞ்ச நேரம்கழிச்சு கொண்டுவாங்க"என்று சொல்லிவிட்டு என் வீட்டு படிகளில் ஏறினேன். மேலேயிருந்து ராவுஜி குரல் கொடுத்தார்.

"பதினோரு மணிவாக்குல ஸ்கூலுக்கு வா"

பூட்டிய என் வீட்டுக் கதவைத் திறந்த படியே சரி என்று கத்தினேன்.

மேலே மின்விசிறி சுழல்வதை பார்த்துக்கொண்டே இருந்த ஞாபகம் இருக்கிறது. எப்போது உறங்கினேன் என்ற நினைவில்லை. ஒரு வித அரை குறை உறக்கம். எப்போதும் விழித்திருப்பது போன்ற எண்ணமும் நன்றாகத் தூங்கியது போன்ற எண்ணமும் ஒன்றாய் எழுந்து என்னை அலுப்பாக்கியது. கண்ணைத் திறந்து மணியைப் பார்க்கத் தோன்றாமல் அலாரம்தான் அடிக்கட்டுமே என்ற எண்ணத்திலேயே இருந்தேன். ராவுஜி காத்துக்கொண்டிருப்பார் என்ற எண்ணம் மேலோங்கவும் போர்வையையும் சோம்பேறித்தனத்தையும் உதறிவிட்டு குளிக்கச் சென்றேன். என்னவென்னவோ நினைவுகள் என்னைச் சுழற்றிக்கொண்டிருந்தன. அன்றும் இதே போன்ற ஒரு விடுமுறை நாள்தான். எப்போதும்போல விழிக்கவில்லை. ரேணுகா மாமியின் அலறலும் ராவுஜியின் கதறலும் கேட்டு அடித்துப்புரண்ட நினைவு இப்போதும் கலவரமேற்படுத்துகிறது. நான் போவதற்குள் ஒரு பெரிய கூட்டமே கூடிவிட்டிருந்தது. என்னவென்னவோ பேசிக்கொண்டார்கள். எதையும் கிரகிக்கும் நிலையில் இல்லை. ஒன்று மட்டும் புரிந்தது. ராஜி தூக்கில் தொங்கிவிட்டாள். இப்போது உயிரில்லை. பிணமாய்த் தொங்கும் ராஜியை எல்லோரும் கஷ்டப்பட்டு கீழே இறக்கியபோது நான் வெளியில் எங்கேயோ வெறித்தவண்ணம் இருந்தேன்.

அதற்குப் பிறகு ராவுஜியை பார்க்கும் தைரியமோ அவரைத் தேற்றும் பக்குவமோ அழுது அழுது வீங்கிப்போன மாமியின் முகத்தைப் பார்க்கும் சக்தியோ எனக்கில்லை. இப்படியெல்லாம் நேரும் என்பதும் இவையெல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதும் என்னால் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டவையல்ல. அங்கேயே மரம் போல நின்றிருந்தேன். என்னென்னவோ சொன்னார்கள். போலீஸ் கேஸாகுமுன் பிணத்தை எடுக்கவேண்டும் என்று சொல்லி ஐந்து மணி நேரத்தில் காரியத்தை முடித்தார்கள். நேற்று பேசியவள் இன்றில்லை என்னும் உண்மை நெஞ்சைக் குடைந்தபோது கொஞ்சம் கலவரமடைந்துதான் போனேன். ஏன் தற்கொலை செய்துகொண்டாள் என்ற கேள்வி என் மனதில் ஓடிய வண்ணம் இருந்தது.

ராவுஜியையும் மாமியையும் எல்லாரும் தேற்றிக்கொண்டிருந்த போது ஒரு காரில் இருந்து ராஜிக்கு பேசி வைக்கப்பட்டிருந்த பையனும் வேறு சிலரும் இறங்கினார்கள். ராஜியின் கட்டாயத்தின் பேரில் அந்தப் பையனை நான் ஒரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். கூட வருவது அவன் அப்பாவும் அவரின் நண்பர்களுமாய் இருக்கவேண்டும். அவன் அப்பா அவனை ஒரு கையில் பிடித்துக்கொண்டு எல்லா கூட்டத்தையும் மீறி வீட்டினுள்ளே சென்றார். அவனைப் பார்த்ததும் மாமி மீண்டும் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள். ராவுஜி துண்டைஎடுத்து வாயை மூடிக்கொண்டு சரிந்திருந்த மார்புகள் குலுங்கக் குலுங்க அழுதார். பையனின் அப்பா கேட்டார்.

"என்னாச்சு?"

கன்னடத்திலும் தமிழிலும் மாறி மாறி பேசிக்கொண்டார்கள். ராவுஜி கேட்டகேள்விக்கு மட்டும் பதில் சொன்னார். பையனின் அப்பா ராவுஜியின் மன நிலையைக் கருத்தில் கொண்டதாகவே தெரியவில்லை.

"நீ என்ன பண்ணிருக்கனும்? நாங்க வர்ற வரைக்கும் வெச்சிருக்கணுமா வேண்டாமா?
அவனப் பாரு.. அழுது அழுது.. அவனுக்கு என்ன ஆறுதல் சொல்றது நானு? அவன் கடைசியா அவ மொகத்தைப் பார்த்திருந்தான்னா கூட ஒரு ஆறுதலா இருந்திருக்கும்.."

"இல்லடா. போலீஸ் கேஸாயிரும்னுதான்.. .. "

"சும்மா சொல்லாத.. திடீர்னு வந்து என் பொண்ணுக்கு ஒன் பையனக்கொடுன்னு சொன்னப்பவே யோசிச்சேன். சரி கூட படிச்சவனாச்சேன்னு நம்பித்தான் சரின்னேன். என்னடா தூத்துக்குடியில இல்லாத ஸ்கூலான்னதுக்கு அவ அத்தை வீட்டுல தங்கிப் படிக்கட்டும்ன. இப்பதான் புரியுது அவ பத்தாவது படிக்கும்போதே எவன் பின்னாடியோ சுத்திருக்கான்னு. "

ராவுஜி இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற ரீதியில் நின்றிருந்தார். பையன் பேசினான். அதிகமாய் ராஜியை நேசித்திருப்பான் போல. பேசும்போது கண்ணிலிருந்து நீர் வழிந்த வண்ணம் இருந்தது.

"அப்பா சும்மா இர்றி.."என்று அவன் அப்பாவை அதட்டிவிட்டு ராவுஜியை நோக்கி "மாமா. அவரு சொல்றத கேக்காதீங்க. எனக்குத் தெரியும் என் ராஜி பத்தி. அவ எம்மேல உசிரயே வெச்சிருந்தா. என்கிட்ட கூட சொல்லாம இப்படிச் செஞ்சிக்கிட்டான்னா வேற ஏதோ காரணம் இருக்கணும்.. சொல்லுங்க.. என்ன காரணம்? "

"தெரியலையேப்பா.."ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார் ராவுஜி.

"பொய் சொல்றீங்க.. உங்களுக்குத் தெரியாம இருக்க சான்ஸே இல்லை. சரி விடுங்க. ஏதாவது லெட்டர் எழுதி வெச்சிருந்தாளா?"

ராவுஜி எதுவும் இல்லையென்று தலையசைத்தார். பையன் தனக்கு கடிதம் எழுதி வைக்காமல் ராஜி சாகமாட்டாள் என்று சொல்லிக்கொண்டே இருந்தான். மீண்டும் பையனின் அப்பா கத்தத் தொடங்கினார். ராவுஜி திட்டம்போட்டு தன்னையும் தன் பையனையும் ஏமாற்றிவிட்டதாகக் கத்தினார். தெருக்காரர்கள் சிலர் சமாதானம் பேசி அவரை அனுப்பி வைத்தார்கள். போகும்போது தனக்கும் ராவுஜி குடும்பத்திற்கும் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொல்லிவிட்டுப் போனார்.

அலாரம் அடித்த போதுதான் ஷவரில் நெடு நேரமாய் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தேன். வேகவேகமாய் தலைதுவட்டிக்கொண்டு கத்தும் அலாரத்தை நிறுத்திவிட்டு புறப்பட்டேன்.

ராவுஜி பயந்தபடி ஒன்றும் இருக்கவில்லை. இன்ஸ்பெக்டர் தன் பையனுக்கு ட்யூசன் சொல்லித்தரவேண்டுமென்று கேட்டார். எனக்கு எரிச்சலாய் இருந்தது. பஜாரில் பார்த்தபோதோ அல்லது ஒரு ·போன் போட்டோ கேட்டிருக்கலாம். ஆனால் ராவுஜி அப்படியெல்லாம் நினைத்ததாகத் தெரியவில்லை. தனது கடமை அது என்பது போல பேசிக்கொண்டிருந்தார். ஒரு வேளை ராஜி விஷயத்தில் இன்ஸ்பெக்டர் செய்த உதவிக்கு நன்றியுணர்ச்சியாய் இருந்திருக்கலாம். இன்ஸ்பெக்டர் என்னைப் பார்த்து ஏதாவது கேட்கவேண்டும் என்ற தொனியில், "எப்ப கல்யாணம்? என்னைலேர்ந்து லீவு", என்றார். உடனே மறந்துபோகும்படியான ஒரு பதிலைச் சொல்லிவிட்டு பரஸ்பரம் சிரித்துவிட்டு நானும் ராவுஜியும் கிளம்ப ஆயத்தமானபோது ராவுஜி இன்ஸ்பெக்டரிடம்,

"நீங்க வரச்சொன்னதும் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்"

"என்னவோ ஏதோன்னா.. ஓ.. நீங்க இன்னும் அதையே நெனச்சுக்கிட்டு இருக்கிறீங்களா? அது முடிஞ்சி போச்சு. ஆக்சிடென்டல் டெத்துன்னு சர்டி·பிகேட் வாங்கின பின்னாடிதான எரிச்சோம். இனிமே ஒரு பிரச்சனையும் வர வாய்ப்பில்ல. நீங்க மறக்கவேண்டியதுதான் பாக்கி"

"நா எப்பவோ மறந்துட்டேனே.. எப்ப அவ எங்கள வேண்டாம்னு நெனச்சிட்டாளோ அப்பவே அவள நாங்க மறந்தாச்சு.."

ரொம்ப அலட்சியமாய் பேசுவதாய் ராவுஜி நினைத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் குரல் அவருடன் ஒத்துழைத்ததாகத் தெரியவில்லை.

"ஜஸ்ட் ஒரு க்யூரியாஸிட்டி.. உண்மையிலேயே அவ லெட்டர் எழுதும் எழுதி வைக்கலயா?"

எனக்குள்ளிருந்த அதே கேள்வியை இன்ஸ்பெக்டர் கேட்கவும் கொஞ்சம் உன்னிப்பானேன்.

"என்ன சார் நீங்க.. லெட்டர் இருந்திருந்தா உங்க கிட்ட கொடுத்திருக்க மாட்டேனா.. நீங்க எவ்வளவு ஹெல்ப் பண்றீங்க.."

ராவுஜி இதைத் தவிர எதுவும் சொல்லமாட்டாரென எனக்குத் தெரியும். இன்ஸ்பெக்டருக்கும் அதே எண்ணமோ என்னவோ. "ஓ.. ஜஸ்ட் கேட்டேன்"என்றார். நாங்கள் விடைபெற்றுக்கொண்டு வெளியில் வந்தோம். ராவுஜியை ஏதோ ஒரு படபடப்பு தொற்றிக்கொண்டு இருந்தது. இருவரும் ஏதும் பேசிக்கொள்ளாமல் நடந்தோம். நானும் ராவுஜியும் எங்கு போனாலும் நடந்து போவதே பழக்கம். ராவுஜிக்கு நான் பைக் ஓட்டும்போது என் பின்னே அமர்ந்து வர பயமும் கூட. ரேஷ் ட்ரைவிங் என்பார்.

என் சிந்தனைகளைக் கலைக்கும் விதமாகவும் அவரை அவரே சாந்தப் படுத்திக்கொள்ளும் விதமாகவும் எங்களிடையே நிலவியிருந்த மௌனத்தை அவரே கலைத்தார்.

"அப்புறம் கல்யாண வேலைலாம் ஊர்ல அப்பாவும் அம்மாவும் பார்க்குறாங்களா?"

அந்தக் கேள்வி அவருக்குள்ள படபடப்பைக் காட்டுவதைத்தவிர வேறொன்றையும் சாதித்ததாகத் தெரியவில்லை.

"ம்"

"என்ன யோசனை பலமா இருக்கு?"

அவரை ஆழ ஊடுருவிப் பார்த்தேன். எனக்குள்ளிருந்த அந்தக் கேள்வியை கேட்டுவிடலாமா என்று நினைத்தேன். நீயுமா என்பது பதிலாய் இருக்கக்கூடும். இருந்தாலும் பரவாயில்லை என்று கேட்டேன்.

"ராஜி ஏன் அப்படி செஞ்சிக்கிட்டா? உங்களுக்கு நெஜமாவேத் தெரியாதா? அவ உண்மையிலேயே லெட்டெர் எதுவும் எழுதி வைக்கலயா?"

என்றாவது ஒரு நாள் இதைக்கேட்பேன் என்று ராவுஜி எதிர்பார்த்திருப்பாரோ என்னவோ. பெரிய அதிர்ச்சி ஒன்றும் அவர் முகத்தில் இல்லை.

"அப்படி ஒன்னு இருந்தா உன்கிட்ட கூடச் சொல்ல மாட்டேன்னு நினைக்கிறியா?"

இதற்குப் பிறகு அவரிடம் இதைப் பற்றிக் கேட்பது முறையல்ல என்று நினைத்துக்கொண்டேன். என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்ற ரீதியிலான முகத்துக்கு நேரான கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது, அமைதியாயிருப்பதைத் தவிர?

ராவுஜி ராஜியின் நினைவுகளை ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே வந்தார். சில சமயங்களில் அவரையும் மீறி கண்ணீர் வந்தது. சீக்கிரம் ஸ்கூல் வந்துவிடாதா என்று இருந்தது எனக்கு.

"எப்படி வளர்த்தேன் தெரியுமா? ஆசை ஆசையா வளர்த்த பொண்ணு இப்படிப் போனா எப்படிடா வாழ்றது? என்ன விடு. மாமியை நினைச்சுப் பாரு. இப்பவும் ராத்திரியில பொலம்புறா.. அவ அழும்போது நெஞ்ச அடைக்கும் எனக்கு. நேத்து சொல்றா.. ராஜிய நெனச்சுப் பார்த்தாஅவ சிரிச்ச முகமே ஞாபகம் வரமாட்டேங்குதுங்க.. தொறந்த கண்ணும் வீங்குன முகமும் வெளிதள்ளின நாக்கும் ஞாபகம் வந்து பயமா இருக்குதுங்கன்றா. பெத்தவளுக்கு எப்படியிருக்கும்?"

எனக்கு பயமாய் இருந்தது. அழுதுவிடுவேனோ என்று தோன்றியது. நல்லவேளை. ஸ்கூல் வந்துவிட்டது.

"சரி ராவுஜி நான் கிளம்புறேன். ரொம்ப தூங்கிட்டேன்னா ராத்திரி ஒரு ஆறரைக்கு எழுப்பிவிட்டுருங்க. வரட்டா"என்றேன்.

சம்பந்தமில்லாத உரையாடல்களின் உதவி புரிந்தது.

அவர் பேச்சை மாற்றுவதைவிட அவரை விட்டு விலகிவிடுவது இப்போதைக்கு நல்லது. எனக்கும் கொஞ்சம் தனியாக இருக்கவேண்டும்.

ராவுஜி, "சரி போ. போய் தூங்கு. ஒரே ஒரு விஷயம். ஒங்கிட்ட இவ்வளவு நாள் சொல்லாதது தப்புதான். ஆனாலும் நீ புரிஞ்சுக்குவன்னு நெனைக்கிறேன்"என்ற பலமான பீடிககக்குப் பின், "ராஜி சாகுறதுக்கு முன்னாடி ஒரு லெட்டர் எழுதி வெச்சிருந்தா"என்றார்.

எனக்கு பெரிய அதிர்ச்சி ஒன்றும் இல்லை. எப்படியோ இத்தனை நாள் என்னைக் குடைந்துகொண்டிருந்த என் கேள்விக்கு விடை கிடைத்தால் சரி என்ற எண்ணத்தால் உண்டான பரப்ரப்பை அடக்கிக்கொண்டு கேட்டேன்.

"நா மொதல்லயே நெனச்சேன். என்ன எழுதியிருந்தா?"

"அத நான் படிக்கவேயில்லை. படிக்காமயே கிழிச்சுப் போட்டுட்டேன். அவ எதாவது எழுதி அதைப் படிச்சுட்டு நம்ம பொண்ணா இப்படின்னு நினைக்கிறதை விட ஏன் செத்தான்னு எல்லாரையும் மாதிரி காரணம் தெரியாம இருந்தா போதும்னு நினைச்சிதான் அதைக் கிழிச்சிப் போட்டுட்டேன்"என்றார்.

நெஜமாவா என்று வாய் வரை வந்த கேள்வியை மனதிற்குள்ளேயே அழுத்தி வைத்தேன். உண்மையோ பொய்யோ அதை எற்றுக்கொள்வதுதான் முறை என்றும் இன்னும் அவரை கேள்வி கேட்பது சரியில்லை என்றும் பட்டது.

"நீங்க செஞ்சது சரிதான்"

"மாமிகிட்ட சொல்லிடாத. ப்ளீஸ்"

"சரி"என்றேன்.
 

Share

படிமங்கள்


படிமங்கள்

–ஹரன் பிரசன்னா

நின்று விட்ட மழைக்குப் பின்
கூரை நுனியில்
கீழே விழாது
தொங்கிக்கொண்டிருக்கும்
துளி
தெருவிளக்குக் கம்பத்தின்
மஞ்சள் பல்பைச் சுற்றி
சந்தோஷித்திருக்கும்
ஈசல்கள்
தாவணியை முக்காடாக்கி
வெடவெடத்துக்கொண்டு
செல்லும் சிறுமி
என
கவிதை படிமங்கள்.

பிரிந்து ஓடிய பூனைகள்
மறுமுறை
புணரும் நேரம்
மீண்டும்
தூறாதிருக்கட்டும்.
கிடக்கட்டும்
படிமங்கள்.

Share

இறகு


இறகு

–ஹரன் பிரசன்னா

விரையும் வாகனச் சத்தத்திற்குப்
பழகிவிட்டாலும்
என் பெரு ஊளையில்
படபடத்துப் பறக்கும்
செட்டியார் வீசும்
தானியத்திற்குக்
காத்திருக்கும் புறாக்கள்

காற்றில் தூளியாடும்
இறகு கண்டு
மலரும் அம்மாவிற்கு
காதுகுடைய
புறா இறகு
போதை

செட்டியார் செத்தாரா
புறாக்கள் இறந்தனவா
புதிருக்கு மத்தியில்
எந்தக் கவலையுமின்றி
கோழியிறகுக்குப்
பழகிவிட்டாள்
அம்மா

Share

பல்லி வதை


பல்லி வதை

–ஹரன் பிரசன்னா

மரத்தில் ஊர்ந்துகொண்டிருக்கும் பல்லியை
சத்தமில்லாமல் நெருங்கி
கையிலிருக்கும் கல்லால்
ஓங்கி ஒரே அடியில் அடித்து
மரத்தோடு சேர்த்து வைத்துஅழுத்த
தலையின் வழி இரத்தம் பிதுங்க
வால் துடிக்க…

நாசமாப் போறவனுங்கவென்று
குண்டுப்பொம்பளையருத்தி
திட்டுவாள்
எப்போதும்
சிரித்துக்கொண்டே ஓடுவோம்.

பையனுக்குப் பல்லிதோசம்.
காரணம் தெரியவில்லை
பல்லியா குண்டுபொம்பளையாவென.

Share

தாயம்


தாயம்

–ஹரன் பிரசன்னா



“போதன்னைக்கும் இதே ஆட்டம்தானா? ஆம்படையான் ஆத்துல இருக்கானே.. அவனோட செத்த நாழி பேசுவோம்னு உண்டா நோக்கு? வர்றாளே பொம்மனாட்டிகளும் என்னைப் பார் என் சமத்தைப் பார்னு.. புருஷா ஆத்துல இருக்காளேன்னு ஒரு லஜ்ஜை வேண்டாம்.. குதிராட்டம் வளர்ந்துர்றதுகள்.”

“நா ஆடுனா உங்களுக்குப் பொறுக்காதே. கரிச்சி கொட்டியாறது. இனி இந்தத் தாயத்த தொட்டா என்ன சவமேன்னு கூப்பிடுங்கோ. எப்ப பாரு தனக்குப் பண்ணனும் தனக்குப் பண்ணனும்னுதான் புத்தி. மத்தவா எப்படிப்போனா உங்களூக்கென்ன? இது ஒண்ணுதான் போது போயிண்டிருந்தது. அதுவும் பொறுக்கலை உங்க கண்ணுக்கு..”



இதோ வந்துடுவேன் இதோ வந்துடுவேன்னு சொல்லிண்டே இருக்கார். ஆளைக் காணோம். எனக்கு கையும் காலும் வெடவெடங்கிறது. அந்த நாசமாப் போன நாத்து எங்க போய் தொலஞ்சதோ? வயித்துல ஜனிச்சதோ ஒண்ணே ஒண்ணு. அதுவும் மசனை.

பொம்மனாட்டி ஒத்த ஆளா அல்லாடிண்டிருக்கேன். அவர் வர்ற வரைக்கும் சித்தப்பாவை இங்க வந்து இருக்கச் சொல்லுன்னு அனுப்பி எத்தனை நாழியாறது. இன்னும் வந்த பாடில்லை. மீசை வந்தவனுக்கு தேசம் தெரியாதும்பா.. சரியாத்தன் சொல்லிருக்கா. எங்க எதைப் பார்த்துண்டு நின்னுண்டு இருக்கோ.

பத்தாம் நாள் சப்பரத்துக்கு மீசை வெச்சதாட்டம் கொழுந்தன். அப்பாவுக்கு இழுத்துண்டு இருக்கு வாடான்னு சொல்லி எத்தனை சமயம் ஆறது. கேட்டா பிஸினஸ்ம்பான். டாலர்ம்பான். பொண்டாட்டிக்கு புடவை எடுக்கணும்னா நாலு நாள் நாயா சுத்துவான். அவ மகராணி. மூத்தான்னு ஒரு மரியாதை கிடையாது. பெரியவான்னு ஒரு சொல் கிடையாது. ஆங்காரி. ஒரு நாள் மாமவுக்கு சிருக்ஷை செஞ்சிருப்பாளா? வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோன்னு பேச்சு. நாம சொல்லி என்ன பிரயோஜனம். ஆம்படையான் செல்லம்.

அவர். மகா புருஷர். அப்பா சரியில்லை. வெளிய போகாதீங்கோன்னு தலை தலையா அடிச்சுண்டதுதான் மிச்சம். எவனோ மரண நாடி பார்ப்பானாம். அவனை கையோடு கூட்டிண்டு வரப் போறேன்னு போனார். நாலு போன் வந்ததே தவிர அவரை ஆளைக் காணோம். அவன் வர்றதுக்குள்ளே மரண நாடியே வந்துடுத்து போல.

தெய்வமே. வயசான ஜீவன். கஷ்டப்படுத்தாது கொண்டுபோ. ராஜாவாட்டம் வாழ்ந்தார். நோய் நோக்காடுன்னு விழுந்ததே இல்லை. ஆஜானுபாகு.. பஞ்ச கச்சை கட்டிண்டு அங்கவஸ்த்திரத்தை போட்டுண்டு தாத்தா கம்பை கைல வெச்சிண்டு நடப்பாரே.. ரெண்டு கண்ணு போதாது. தேஜஸ்வி.. வந்த நாள்ல இருந்து இன்னைக்கு வரை சாப்பிட்டியான்னு ஒரு நாளாவது கேட்காம தூங்கிருப்பாரா? அவர் கூடக் கேட்டதில்லை. என்னை அப்படிப் பாத்துண்டது இல்லை. அப்படி ஒரு ஆத்மா. எப்போ மாமி போனாளோ அப்பமே எல்லாம் போயிடுத்து அவருக்கு. கட்டிண்டவான்னு அப்படி ஒரு இஷ்டம். யாரு இருப்பா இந்தக் காலத்துல? மாமியும் சும்மா சொல்லப்படாது. ஆம்படையான்னா உசுரையே விடுவா. யாரு எதிர்பார்த்தா எல்லாத்தையும் தவிக்கவிட்டுட்டு திடீர்னு போவான்னு? எல்லா நாளும் போல சமைச்சா. குத்து ிளக்கு ஏத்துனா. ஊஞ்சல்ல படுத்துண்டா. என்ன மாமி.. சாப்பிடலையான்னு கேட்டதுக்கு பதிலே இல்லை. சுக ஜீவி. சாவுன்னா அப்படி வரணும். ஆண்டவன் கிருபை வேணும். யாருக்கு கொடுத்து வெச்சிருக்கு?

மாமா படுத்து பத்து நாள் ஆறது. ஆகாரம் வல்லிசா இல்லை. மூணு நாளா இழுத்துண்டு இருக்கு. ஏதேதோ சொல்றார். ரோஜா வேணும்னார். எதுக்கு மாமான்னா பதிலே இல்லை. இன்னைக்கு கார்த்தால ரோஜா வாங்கிக் கைல கொடுத்தது. இன்னும் கைலயே வெச்சிண்டு இருக்கார். என்னென்னமோ சொல்றார். கோர்ட்ன்றார். அமீனான்றார். புத்தி பிறள்றது. நிலையில்லை. இப்பவும் என்னவோ சொல்றார்.

தெருவுல ஆட்டோ சத்தம் கேட்கிறது. அவராய்த்தான் இருக்கும். நேக்கு அழுகை முட்டிண்டு வர்றது.


“இப்போல்லாம் தாயம் அடுறதே இல்லையாடி?”

“என்னைக் கிளறாதேள். அப்புறம் பத்ரகாளி ஆயிடுவேன்.”

“இல்லை. இன்னைக்கு நானும் நீயும் ஆடுறோம் வா.”

“கெட்டது போங்கோ.. அடுத்த ஆத்துக்காரா பார்த்தா சிரிப்பா.. நீங்களூம் உங்க ஆட்டமும்.. நன்னாயிருக்கு..”

“என் பொண்டாட்டி நா ஆடறேன். அடுத்தவா சிரிக்க என்ன இருக்கு. இன்னைக்கு நானும் நீயும் தாயம் ஆடுறோம்.. ஆமா சொல்லிட்டேன்”

என்ன கேட்டேன்னு அவருக்கு இத்தனை கோபம்னு தெரியலை. எரிஞ்சு விழுந்துட்டார். என் கஷ்டம் எனக்கு. இத்தனை மெல்லமா வர்றேளேன்னு கேட்டா அது ஒரு தப்பா. அவரையும் என்ன சொல்ல. அப்பா இப்படிக் கிடக்குறாரேன்னு அவருக்குக் கஷ்டம். மரண நாடி பார்க்கவந்தவன் என்ன சொன்னான்னு கேட்கலாம்னா பயமா இருக்கு. ஆம்படையான்கிட்ட பயந்தா காரியம் நடக்குமோ?

“செத்த நில்லுங்கோ. அவன் என்ன சொன்னான்?”

“நீ கேட்கலையாக்கும்? நிலைக்குப் பக்கத்துலதானே இருந்தாய்?”

“சரியாக் கேட்கலை. சொல்லுங்கோ.”

“இது மரண நாடி இல்லையாம். உயிரெல்லாம் போகாதாம். உசுருக்கு ஆபத்து இல்லைனான்””

“பால வார்த்தான்.”

நாத்து ஓடி வந்து சொன்னான்.

“அப்பா.. தாத்தா கை காலை எல்லாம் ஒரு மாதிரி முறிக்கிறார்ப்பா “

அவர் ஓடினார். நானும் ஓடினேன்.

“பெருமாளே ஒண்ணும் ஆகாது பாத்துக்கோ”

“என்ன பண்றேள்?”

“குருடா எழவு.. நோக்கு பார்த்தா தெரியலயோ?”

“தெரியறது.. தெரியறது.. இப்படி யாராவது ஆணியை வெச்சி தரையில தாயக்கட்டம் வரைவாளா? பின்ன அது
போகவே போகாதோன்னோ..”

“இருந்துட்டுப் போறது.. உன்ன என்னடி பண்றது? ஒவ்வொரு நாளும் சாக்பீஸ் தேடவேண்டாமோன்னோ.”

“அது சரி. அதிவிஷ்டு அனாவிஷ்டு”

அவர் கண்ணுல ஜலம். முழிச்சிண்டு நிக்கறோம். பதட்டத்துல ஒண்ணும் ஓடலை. அழுகைதான் வர்றது. தெய்வம் மாதிரி பட்டு மாமி வந்தாளோ நேக்கு உசிர் வந்ததோ. பட்டு மாமி மாமாவை பார்த்துவிட்டு சொன்னாள்.

“மச மசன்னு நிக்காதேள்.. இன்னும் அரைமணியோ ஒரு மணியோ.. போய்டும்.. சொல்றவா எல்லாருக்கும சொல்லிடு..”

“என்ன மாமி வந்தும் வராததுமா குண்டைத் தூக்கிபோடுறேள்? மரண நாடி பார்த்துட்டு பயப்படவேணாம்னான். இப்போ இப்படி சொல்றேள்.”

“அவன் சொன்னான் சொரக்காய்க்கு உப்பில்லைனு. நேக்கு தெரியாதா.. தத்து பித்தாட்டம் நிக்காம ஆகற காரியத்தைப் பாருடி.. என்னடா சங்கரா நின்னுண்டு இருக்காய்? கட்டில்ல இருக்காரோன்னோ.. பாயை விரிச்சி கீழே படுக்க வைடா.. போற உசுரு கட்டில்ல போகப்படாது.”

ஆக மாமி முடிவே பண்ணிவிட்டாள். மாமி சொன்னதும் அவர் அப்பாவை அலாக்காகத் தூக்கி பாயில் படுக்க வைத்தார். அவரையும் அறியாமல் அவருக்கு கண்ணீர் வந்தது. நாத்து ரொம்ப பயந்துடுத்து. அங்கே நிக்காத போன்னு அதட்டி அனுப்பிவிட்டு நானும் அவரும் மாமியும் அவர் தலை மாட்டில் உட்கார்ந்துகொண்டோம்.

“மாமி. எப்படி இருந்தவர். இப்படி சுக்கா ஆயிட்டாரே மாமி”

“இதுதாண்டி சாஸ்வதம். எது விதிச்சிருக்கோ இல்லையோ.. இது விதிச்சிருக்கு.. எல்லாருக்கும். மனச தேத்திண்டு நாத்துக்கு சாப்பாடு போடு. அப்படியே நீயும் சங்கரனும் சாப்பிட்டுடுங்கோ.. ஜீவன் போயிடுத்துன்னா எல்லாம் முடியறவரைக்கும் சாப்பிடப்பிடாது”

“சரி மாமி”

நாத்துவைக் அழைத்து அடுக்களைக்குள் செல்லுமுன் மாமாவின் முனகல் கேட்பது போல இருந்தது. நாத்துவை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு அங்கு போனேன். மாமாவின் தலையை அவர் மடியில் வைத்துக்கொண்டிருந்தார். பட்டு மாமி
சொன்னாள்.

“ஒரு டவரால பாலை ஊத்திக்கொண்டுவாடி.. எல்லாரும் ஒரு கரண்டி பாலை வார்த்திடுங்கோ.. சந்தோஷமா அடங்கட்டும்”

“மாமி.. அப்பா ஏதோ முனங்கறார்”

“நினைவு தப்பிடுத்து. இனி அப்படித்தான்”

“இனிமே நினைவே வராதா?””

“அது பகவான் செயல். போ. போய் பாலைக்கொண்டுவா.. நாத்துவையும் அழைச்சிண்டு வா.. எல்லாரும் பாலை ஊத்திடுங்கோ”

அடுக்களைக்குள் சென்று பால் எடுக்கும்போது மாமா முனகுவது கொஞ்சம் தெளிவாகக் கேட்டது. ஏதோ தாயம் என்று சொல்வது போல தெரிந்தது. மாமி அங்கிருந்தே குரல் கொடுத்தாள்.

“தாயக்கட்டை இருந்தா கைல கொடுடி.”

தாயக்கட்டையை எங்கே தேடுவது. அதற்குள் நாத்து ஓடிப்போய் எடுத்துக்கொண்டு மாமியிடம் தந்தான். நான் பாலை எடுத்துக்கொண்டு ரேழிக்குச் சென்றேன். பட்டு மாமி மாமாவின் உள்ளங்கையை விரித்து தாயக்கட்டையை வைத்து கையை மடக்கி விட்டாள். அவர் கையிலிருந்து தாயக்கட்டை எப்போது வேண்டுமானாலும் விழும்போல இருந்தது. மேல் மூச்சு வாங்குவதும் கூட மெல்ல அடங்கத் தொடங்கியது. பட்டு மாமி சொன்னாள்.

“எல்லாரும் ராமா ராமா சொல்லுங்கோடி”

அவர், நான், பட்டு மாமி, நாத்து எல்லாரும் சொல்ல ஆரம்பித்தோம்.


“சும்மா சொல்லப்புடாது. நன்னாவே ஆடறேள்”

“இதுல நன்னா ஆடறதுக்கு என்னடி இருக்கு. விழறதை நகட்றேன்.”

“கதை. எதுக்கு எந்த காயை நகட்டனும், எப்போ எந்தக் காயை வெட்டணும்னு சூட்சமம் தெரிஞ்சிருக்கு. பொம்மனாட்டி கணக்கா. அதிர்ஷ்டமும் இருக்கு. தாயம்னு சொல்லிப் போடுறேள். எந்த தெய்வம் துணைக்கு வருமோ, தாயம் விழுது.”

“தெய்வம் இல்லைடி மண்டு. நீதான்”

“இது என்ன புதுக்கரடி விடுறேள்”

“நோக்கு தெரியாதோ? கட்டிண்டவ மேல ஆம்படையான் உண்மையா அன்பு வெச்சிருந்தான்னா, தாயம்னு சொல்லிப்
போட்டா தாயம் விழுமாம். கோமதிப் பாட்டி சொல்லலையா நோக்கு?”

“இந்த கிண்டலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை.”

“இது கிண்டல் இல்லைடி. நிஜம்”

“அப்படியானா இப்பப் போடுங்கோ”

“இப்பமா?”

“ஏன் இப்போ என் மேல பாசம் இல்லியோ?”

“ஏன் இல்லாம. போடுறேன் பாரு”

“வேண்டாம். பின்னாடி வழியாதேள்”

“அடி போடி இவளே.. இப்பப்பாரு”

“சீக்கிரம் போடுங்கோ.. எத்தன தரம் உருட்டுவேள்”

“செத்த பொறேண்டி என் சமத்துக்கொடமே”

“இதுக்கு மேல பொறுக்க முடியாது.. இப்போ தாயம் போடப்போறேளா இல்லையா?”

“சரி.. பத்து ஒன்பது எட்டு ஏழுன்னு ஒண்ணு வரை எண்ணு.. அப்பப் போடுறேன்”

“சரி எண்றேன்.. பத்து.. ஒன்பது.. எட்டு.. ஏழு.. ஆறு……..”

ராமா ராமா ராமா ராமா…

மனசுக்குள் சேவிக்காத தெய்வம் இல்லை. நல்ல கதி அடையட்டும் பெருமாளேன்னு நெக்குருகித்தான் நிக்கறேன். தாரை தாரையா கண்ணீர் வர்றது. கால் அடங்கிடுத்து என்றாள் மாமி. அப்போதான் கொழுந்தனுக்கு வழி தெரிஞ்சது போல. நேக்கு கோபம் பொத்துண்டு வர்றது. அவர் கண்ணாலே அதட்டினார். அமைதியா இருந்துட்டேன். அவன் முகத்தையும் பார்க்கலை. அவனும் ஒரு கரண்டி பால் ஊத்தினான். பாலில் பாதி வாயின் ஓரம் வழியாகவே வழிஞ்சிடுத்து. அவனும் அழுதான். அப்பா அப்பா என்றான். மாமாவிடம் இருந்து பதிலே இல்லை. அவனைப் பார்க்க பாவமாயும் இருக்கு. நான் வளர்த்த பிள்ளையோன்னோ.

ராமா ராமா ராமா ராமா

கால் அடங்கிடுத்து என்றாள் பட்டு மாமி. ஆனால் வாயில் மட்டும் ஏதோ ஒரு முனகல் இருந்துண்டே இருக்கு. என்ன சொல்ல நினைக்கிறாரோ.. பத்து பேரு சுத்தி நின்னுண்டா ஜீவன் போகாதும்பா. ஆனா மாமி இன்னும் கொஞ்ச நேரத்துல முழுசா அடங்கிடும்னு சொல்றா. என்ன நம்பிக்கையோ எழவோ. தாலி கட்டிண்டு வந்த நாள்லேர்ந்து நேத்து வரை ஒவ்வொண்ணா நினைவுக்கு வந்து நெஞ்சக் குடையறது. நேக்கே இப்படின்னா அவருக்கு எப்படி இருக்கும்? இரத்த பாசம்னா.

“வயிறு அடங்கிடுத்து”

ராமா ராமா ராமா ராமா

இப்போ முனகலும் இல்லை. தலையை அப்புறம் இப்புறமாய் மாமா அசைக்கிறார். நேக்கு வயிறுள் ஒரு பந்து உருள்றது. மாமா உடம்பை நெளக்கிறார்.


“அஞ்சு.. நாலு.. மூணு.. ரெண்டு.. ஒண்ணு.. போடுங்கோ”

பல்லைக் கடிக்கிறார். வாயின் வழியாக லேசாய் ரத்தம் வழியறது. அவர் அப்பான்னு கதறினார். நான் மாமான்னு கதறினேன். மாமி விடாது ராம நாமம் சொன்னாள். மாமா கையை விரித்தார். கையிலிருந்த தாயக்கட்டை தெறித்து அந்தாண்டை விழுந்தது. பின் ஒட்டுமொத்தமாய் அடங்கினார். நானும் அவரும் அழுதோம். எங்களைப் பார்த்து
நாத்துவும் அழுதான். கொழுந்தனும்.

“எனக்கு எத்தனை சந்தோஷமா இருக்கு தெரியுமா?”

“ஏண்டி?”

“சொன்ன மாதிரியே தாயம் போட்டுட்டேளே”

Share

Jimmy

Jimmy
–ஹரன் பிரசன்னா

சிஐடி மூஸா என்ற ஒரு மலையாளப்படம் பெரிய திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. என் நினைவுகள் கொஞ்சம் படத்திலும் மீதி வேறெங்கேயுமோ மேய்ந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு முறை வீட்டை அழைக்கும்போதும் “ஜிம்மி எப்படி இருக்குது”என்ற என் கேள்விகள் சமீப காலங்களில் எனக்கே தெரியாமல் இல்லாமல் போனது குறித்த வருத்தம் என்னுள் வியாபித்திருந்தது.

ஜிம்மி என்ற பெயரிட்டதே பெரிய சுவாரஸ்யமான விஷயம். நாய் வேண்டும் என்று கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் நச்சரித்து நான் ஓய்ந்து போன ஒரு நாளில் புசுபுசுவென, உள்ளங்கையில் அடங்கிவிடும் அளவில் சிறியதாய் ஒரு பொமிரேனியன் குட்டியைத் தூக்கிக்கொண்டு வந்தார் என் அண்ணனின் நண்பர். வீட்டில் பெரிய விவாதத்திற்குப் பிறகு – “இப்ப இருக்குற நிலையில இது அவசியமா? இதுக்கு பாலும் முட்டையும் போடுறதுக்கு எவன் தண்டம் அழுவான், சோப்பு வேற போட்டுக் குளிப்பாட்டணும்.. மனுஷனுகே சோப்பில்லை” – நானும் என் அண்ணனும் அந்தக் குட்டியை வளர்ப்பதென முடிவுக்கு வந்தோம். அம்மாவும் அம்மாவும் முறுக்கிக்கொண்டு திரிய, அண்ணி வேறு வழியில்லாமல் சந்தோஷப்படத் தொடங்க, ஜிம்மி எங்கள் வீட்டில் ஒரு இரவைக் கழித்தது.

மறுநாள் காலையில் வீடு முழுவதும் நாயின் முடி உதிருந்திருந்தது. மீண்டும் பிரச்சனை. நாய் முடி இப்படி உதிர்ந்தால் பிறந்த குழந்தைக்கு (அப்போதுதான் என் அண்ணி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருந்தாள்) ஆகாதென அப்பாவும் அம்மாவும் ஒரு பாட்டம் தொடங்க அவர்களை சமாளிப்பதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது.

ஒருவழியாய் அம்மாவும் அப்பாவும் நாயின் விளையாட்டுகளிலும் அன்பிலும் நெகிழத் தொடங்க மிகச்சீக்கிரத்தில் அது வீட்டில் ஒரு நபரானது.

அப்போதுதான் கவனித்தேன். பெயர் என்று ஒன்று வைக்காமலேயே ஆளாளுக்கு ஜிம்மி என்று கூப்பிட்டுக்கொண்டிருந்ததை. பதினைந்து நாள்களிலேயே ஜிம்மி என்பது அதன் பெயரென அது கொஞ்சம் உணர்ந்துவிட்டிருந்தது. திடீரென என்னுள் நாய்க்கு ஏன் ஜிம்மி என்று பெயர்வைக்கவேண்டும் என்ற கேள்வி வந்தது. உடனடியாய் முடிவுக்கு வந்தேன். இனி அது ஜிம்மியில்லை. வேறு எதாவது பெயர் வைக்கலாமென யோசித்தபோது சட்டென ஒன்றும் அகப்படவில்லை. அண்ணியிடன் கேட்டேன். போடா ஜிம்மிதான் சூட் ஆகுது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அம்மாவிடம் கேட்டபோது “ஏதோ ஒரு எழவு.. கூப்பிடத்தானே.. இதுக்கு என்ன ஆராய்ச்சி?”என்று சொல்லிவிட்டாள். மிகுந்த யோசனைக்குப் பின் வீரா என செலக்ட் செய்தேன். என் அண்ணன் கேட்டுவிட்டுச் சிரித்தார். “பொம்பளை நாய்க்கு வீராவாம். நீயெல்லாம் என்னத்தடா படிச்ச?”ன்னார். அப்படியே வளர்ந்த வாக்குவாதத்தில் கடைசியாய் நான் நாய்க்கு பாட்சா என்று பெயர்வைத்து இரண்டு நாள் அப்படித்தான் கூப்பிட்டேன். என் அண்ணன் போட்டிக்கு அதை குணா என்று அழைக்கப்போவதாக மிரட்ட ஆரம்பித்தார். உங்க ரெண்டு பேர் சண்டையில ஏண்டா ரஜினியையும் கமலையும் இழுக்குறீங்க என்று யார் சொல்லியும் நாங்கள் கேட்கவ்¢ல்லை. ஆனால் இதேல்லாம் இரண்டே நாளில் முடிவுக்கு வந்தது. ஜிம்மி என்று கூப்பிட்டால் மட்டுமே நாய் ரெஸ்பான்ஸ் செய்ய அரம்பித்ததால் வேறு வழியில்லாமல் நான் ஜிம்ம்¢க்கு மாறிவ்¢ட்டேன்.

படம் பார்க்கும்போது நாய் நினைப்பு ஏன் வந்தது என்றால் படம் முழுவதும் ஒரு நாய் வருகிறது. வழக்கம்போல குண்டு கண்டுபிடிக்கிறது, வீர சாகசங்கள் செய்கிறது, பெண் நாயை சைட் அடிக்கிறது, தள்ளிக்கொண்டு போய் புதர்மறைவில் மறைகிறது. அப்போது கேமரா புதரை மட்டும் காண்பிக்க புதர் ஆடுகிறது!!! அடப்பாவிகளா நாய்க்குமா என்ற நினைக்கும்போதே மனம் மேயத் தொடங்க…

என் அண்ணனும் நானும் ஜிம்மியைத் தூக்கிக்கொண்டு anti rabbies ஊசி (சரியான பெயர் தெரியலைங்கோ) போடக் கொண்டு போனோம். டாக்டர் வீட்டில் அவரை விட பெரிய சைஸாய் உயரமாய் இன்னொரு நாய் இருந்தது. அதைப் பார்த்ததும் ஜிம்மி எங்களை விட்டு கீழே இறங்கவே இல்லை. ஒரு வழியாய் இதமாய்ச் சொல்லி, கொஞ்சி, கெஞ்சி அதை கீழே இறக்கிவிட பயந்துகொண்டே நின்று கொண்டிருந்தது. ஊசி போட்டு முடித்தவுடன் டாக்டரிம் சில கேள்விகள் கேட்டோம்.

“சார்.. இப்ப இதுக்கு று மாசம் வயசு வுது. எத்தனை வயசுல இதுக்கு செக்ஸ் உணர்ச்சி வரும் டாக்டர்?”

“இன்னும் ஆறுமாசத்துல அது உடலளவுல தயாராயிடும்”

“ஓ.. அப்பக் கண்டிப்பா வேற ஆண் நாயோட சேர்த்து விடணுமா? அப்படிச் செய்யலைனா வயலண்ட் ஆயிடுமா?”

“சே சே.. அப்படில்லாம் ஒண்ணும் ஆவாது. அந்தோ நிக்குது பாருங்க நம்ம நாய். பன்னிரெண்டு வருசமாச்சு.. ஒரு பொட்டை நாயைத் தொட்டது கிடையாது.. 100% பிரம்மச்சாரி.. இன்னைக்கு வரைக்கும் நோ பிராப்ளம்”

ஐயோ பாவமாய் கேட்டுக்கு அந்தாண்டை நின்று கொண்டு ஜிம்மியைப் பார்த்து எச்சில் ஒழுகிக்கொண்டிருந்தது டாக்டர் வீட்டு நாய். (“அவுத்து வுடுங்கடா.. என்னென்ன வித்தைலாம் காட்டுறேன் பாருங்க”)

டாக்டர் தொடர்ந்தார்..”அப்படி மூட் வராம இருக்கிறதுக்குக் கூட ஊசி இருக்கு. வேணும்னா அதை வாங்கி ஜிம்மிக்குப் போட்டு விட்டுருங்க. தெரு நாய்ங்க பின்னாடி வந்தாலும் இது ஓடி வந்துரும்”

“சே சே.. அதெல்லாம் வேண்டாம்.”

“அப்ப ஓகே”

“சார் இன்னொரு டவுட்டு. இதே ஜாதியில இன்னொரு ஆண் நாய்கிட்ட கொண்டு போய் விடலாமா? பார்த்த ஒடனே கடிச்சிருச்சுன்னா என்ன செய்யன்னு பயமா இருக்கு.”

“நோ நோ. தெட் வில் நெவர் ஹேப்பண். நீங்க முதல்நாள் கொண்டு போய் ஆண் நாய்கிட்ட நிறுத்துங்க. ரெண்டும் மோந்து பார்த்துக்கும். அப்புறம் ரெண்டு நாள் கொண்டு போய் விட்டு அதே மாதிரி பழக்குங்க. அப்புறம் பாருங்க. எல்லாம் ஜோரா அதுங்களே பார்த்துக்கும்”

“சரி ஒகே சார். வர்றோம்”

நானும் என் அண்ணனும் ஜிம்மிக்குத் தோதான ஜோடியைத் தேடியதில் தோற்றுப் போனோம். ஆனால் ஜிம்மி அதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. எப்போதும் போல இருந்தது. பந்து எறிந்தால் ஓடிப்போய் எடுத்துகொண்டு வரும். தெரியாத ஆள் வந்தால் குலைக்கும். ஏய் சும்மாயிருன்னு ஒரு அதட்டு அதட்டுனா “வந்தவங்க நம்ம ஆளு (அட.. தெரிஞ்ச ஆளுங்க!!!) என்று புரிஞ்சிக்கிட்டு சும்மா இருந்துரும். ஒரு நாள் நானோ அண்ணனோ வர்றதுக்கு லேட்டானா சாப்பிடவே சாப்பிடாது. நாங்க வந்து (நாங்க முதல்ல சாப்பிட்டுடுவோம்!!) அதைத் தடவிக்கொடுத்து கொஞ்சுன பின்னாடிதான் சாப்பிடும். அண்ணன் பையன் கைல எது கிடைச்சாலும் எடுத்து ஜிம்மியை அடிப்பான். திடீர்னு முடியைப் பிடிச்சு ஜிம்மியை இழுப்பான். அதுபாட்டுக்கு ஒண்ணுமே நடக்காதது மாதிரி இருக்கும். அவனை ஒண்ணுமே பண்ணாது. நாங்க பார்த்துப் பார்த்துப் பூரிச்சுப் போவோம்.

திடீர்னு எனக்கு துபாய் சான்ஸ் வர, நான் flight ஏறினேன். நான் ஜிம்மியைப் பிரியும்போது 11/2 வயது இருக்கும். ஒருவருடம் கழித்து மீண்டும் ஊருக்குப் போனபோது ஜிம்மியை ஆளைக் காணோம். அம்மாவிடம் கேட்டபோது, “உன்னை மறந்துருக்கும். திடீர்னு புதுசுன்னு நினைச்சுக்கிட்டு கடிச்சிருச்சுன்னா.. அதுதான் கொல்லைல போட்டு பூட்டிருக்கோம்”என்றாள். என்னால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. புதிய ஆள் வந்த சத்தத்தில் அது கொல்லையில் இருந்து குலைத்துக்கொண்டிருந்தது. நான் உள்ளிருந்து ஜிம்மி எனக் கத்தினேன். அவ்வளவுதான். மூடியிருந்த கதவை போட்டு கால்களால் பரண்டவும் முட்டவும் ஆரம்பித்துவிட்டது. “அம்மா திறந்து விடும்மா”என்றேன். அம்மா பயந்தாள். அப்பா சொன்னார்.. உன் குரலை உங்க அண்ணன் குரல்னு நினைச்சுக்கிட்டு அது கத்துது. ஆளைப் பார்த்தா என்ன செய்யுமோ.

என்னால் அதற்குப் பிறகு பொறுமையாய் இருக்க முடியவில்லை. வேகமாய்ச் சென்று கதவைத் திறந்துவிட்டேன். திறந்த வேகத்தில் ஒரு நொடி ஒரே ஒரு நொடிதான்.. என்னைப் பார்த்து சட்டெனப் புரிந்துகொண்டுவிட்டது. அது குதித்த குதியும் துள்ளலும்.. கண்ணில் நிற்கிறது இன்னும். எப்போதும் போல நாயை உப்புமூட்டைத் தூக்கிக்கொண்டு நடந்தேன். அது பாட்டுக்கு அமைதியாய் இருந்தது. எல்லோருக்கும் ஆச்சரியமும் சந்தோஷமும். அந்த விடுமுறை கழிந்து மீண்டும் flight ஏறினேன். அதற்குப் பின் போன இன்னொரு சந்தர்ப்பத்திலும் அது என்னை மறக்கவில்லை. மறக்க முடியாது என்பது புரிந்துபோனது.

ஒருவழியாய் சி ஐ டி மூஸா படம் முடிந்துத் தொலைத்தது. வியாழன் இரவு வீடு வந்து படுக்கும்போது மனம் முழுதும் ஏதேதோ நினைவுகள். ஒட்டுமொத்தமாய் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். “மறுநாள் காலை அண்ணனை அழைத்து முதல்வேலையாய் ஜிம்மி ஜாதியிலேயே மாப்பிள்ளையை நாயைப் பார்த்து, கொண்டு போய் விட்டு வரும்படிச் சொல்ல வேண்டியது”. பின் உறங்கிப்போனேன்.

வெள்ளி காலை (துபாய்நேரம்) 7.00 மணிக்கே செல்·போன் மெசேஜ் என்ற சமிஞ்ஞை காட்டியது. தூக்கக்கலக்கத்தில் பார்த்தேன். மெசேஜ் இப்படிச் சொல்லியது.

“Jimmy expired today morning. Snake might have bitten. we are all in sad. From anna”

என் உறக்கம் போனது.

இப்போதெல்லாம் எல்லா துக்கங்களும் கவிதைக்கான வார்த்தைத் தேடுதலில்தான் முடிகின்றன.

இப்படிக் கிறுக்க்¢ வைத்தேன்.

பூவாசத்துடன்
படுக்கையறை விட்டு
வெளிவரும்போது
இரண்டு கால்களில் நின்று
முகமுரசும் நாயின்
கூரான செழுமையான
மடிகள் சொல்கின்றன
தடையூசிக்கானப் பருவத்தை.

Share

இளையராஜா


இளையராஜா

–ஹரன் பிரசன்னா

எப்போது எப்படியென்றெல்லாம் சொல்லமுடியாத பிணைப்பு அது ராஜாவின் பாடல்களுடன் எனக்கு ஏற்பட்டது. என் வீட்டில், உயர்நிலை வகுப்பில் படிக்கும்போது புத்தகம் படிப்பது என்ற பழக்கம் மிகக்கடுமையாகத் தடைசெய்யப்பட்டிருந்தது. அதில் கவனம் வந்தால் படிப்பில் கவனம் போய்விடும் என்பது அவர்கள் வாதம். ஒரே பொழுதுபோக்கு வானொலி கேட்பது. வரப்பிரசாதமாய் சிலோன் வானொலி. என் அம்மாவும் அக்காவும் பொங்கும் பூங்குழல் ஆரம்பித்து தேனருவி, புத்தம் புதியவை எனத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள். பத்து மணிக்குத்தான் வானொலி தன் வாயை மூடும். காதில் விழுந்து நான் முயலாமலேயே மனதிற்குள் சென்றுவிட்ட பாடல்கள் அதிகம். இன்று நினைத்தாலும் பழைய நினைவுகளை அப்படியே கொண்டு வந்து கொட்டி, துக்கத்தில் தொண்டையை அடைத்துவிடும் பாடல்கள் எத்தனையோ உண்டு. கிட்டத்தட்ட எல்லாமே ராஜாவின் பாடல்கள்.

யார் இசையமைப்பாளர் என்று பார்க்கத்தொடங்கியதெல்லாம் பதினோறாம் வகுப்பு வந்த பின்புதான். தொடர்ச்சியாக வரும் படங்கள் எல்லாவற்றிலும் பாடல்கள் மட்டும் சோடை போகாத ஆச்சரியம் ராஜாவின் சாதனை. 1987 ல் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள். ஏனோ தானோ என்றெல்லாம் இல்லாமல் சாதனைப் படங்களும் அந்த வருடத்தில் இருக்கும். மெல்ல மெல்ல ராஜாவின் திறமை என்னுள் பெரிய ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் தரத்தொடங்கியது. டப்பாங்குத்துப் பாடல்களில் கூட இனிமை இருந்தது. சோகப்பாடல் கேட்டால் சோகம் வந்து அப்பிக்கொண்டது. திரையுலகின் மிகப்பெரிய ஆச்சரியமே சிவாஜிதான் என்ற எனது எண்ணம் கொஞ்சம் உடைந்து போனது ராஜாவால்தான்.

எந்தப் பாடல் கேட்டாலும் ஏதேனும் ஒரு நொடியில் ராஜா நினைவுக்கு வராமல் போனதே இல்லை. சினிமா எக்ஸ்பிரஸ் கையில் கிடைத்தால் புதிய படங்களின் வரவு கண்ணில் பட்டால் நாயகன் யாரென்று பார்க்காமல் இசை யாரென்று பார்க்க ஆரம்பித்தேன். ராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் சண்டை என்றறிந்த பின்னால் ராஜா இசையமைக்கும் படங்களில் யார் பாடல்கள் எழுதுகிறார்கள் என்று பார்க்க ஆரம்பித்தேன். ராஜா பற்றிய சிறிய குறிப்புகளைக் கூடத் தேடித் தேடிப் படித்தேன். ராஜாவைப் புகழ்ந்தவர்கள் எல்லாம் திறமைசாலிகளாகப் பட்டார்கள் எனக்கு.

கொஞ்சம் எதிர்பார்ப்புள்ள படத்திற்கு ராஜா இசையமைத்து பாடல்கள் சோடை போனதாக சரித்திரமே இல்லை என்றெல்லாம் நினைத்துக்கொண்டேன். திடீரென்று தோன்றும், ராஜாவை கொஞ்சம் அளவிற்கு அதிகமாய் தூக்கி வைக்கிறோமோ என்று. ஆனால் காதில் கேட்கும் ஏதோவொரு பாடலில் லயிக்கும்போது அது ராஜா என்று தெரியும்போது, தோன்றியதெல்லாம் மறந்துபோய் மீண்டும் ராஜா ஜெபம் விஸ்வரூபம் எடுக்கும். இன்று வரை இது மாறவில்லை.

ராஜா இசையமைத்த சில பாடல்கள் வேறு யாராலும் இசையமைக்க முடியாதோ என்று இன்றும்
தோன்றுவதுண்டு. அவற்றைப் பட்டியலிடுதல் மிகச்சிரமமான காரியம். யாருக்கு இசையமைக்கிறோம், என்ன தேவை என்பதன் மிகச்சரியான புரிதல் ராஜாவிடம் இருந்தது. (இதில் ஏ.ர். ரகுமானுக்கான கொள்கைகள் வேறு என்பது என் கணிப்பு). புதிய முயற்சிகள் எடுப்பதில் ராஜா தயங்கியதே இல்லை என்ற போதும் பழையனவற்றையும் தொடர்ந்தார்.

இசையறிவு எனக்கில்லை. நான் சொல்வதெல்லாம் ஒரு சாமான்ய – திரையிசையை அளவிற்கு மீறி இரசிக்கும் – இரசிகனின் கண்ணோட்டம்தான். ஆனாலும் நிறைய பெரிய கர்நாடக இசை வல்லுனர்கள் ராஜாவின் இசையைப் புகழ்ந்திருக்கிறார்கள். செம்மங்குடி புகழவேண்டுமானால் திறமை இருந்தால் மட்டுமே முடியும். காரணம் செம்மங்குடிக்கு திரையிசை பாடும் ஆசையில்லை.

பாடலுக்கு மட்டும் கவனம் செலுத்தினோம் என்றில்லாமல் பின்னணி இசையில் புதிய பரிமாணத்தைக் காட்டியவர் ராஜா. பின்னணி இதுவரை யாருமே தொடாத உயரத்தை மிக எளிதாய் தாண்டியவர் அவர். ஒரு திரைப்படம் உணர்வு ரீதியாய் மனதைத் தாக்கவேண்டுமானால் மனதுள் தங்கவேண்டுமானால் பின்னணி இசையினால் முடியும் என்று நிரூபித்துக்காட்டினார். தமிழ்த்திரையுலகின் மிகச்சிறந்த இயக்குநர் என்று நான் கருதும் மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்ற சிறந்த இயக்குநர்களின் வெற்றியில் ராஜாவிற்கும் பங்கிருக்கிறது. பாடல் வெற்றிக்காய் இதைச் சொல்லவில்லை. அவர்களின் படங்களில் அவர்கள் சொல்ல வந்த விஷயத்தை மக்களுக்குக் கொண்டு சென்றதில் ராஜாவின் இசைக்குப் பங்கிருப்பதால் சொல்கிறேன். பதினாறு வயதினிலே படம் நம் மண்ணின் நிஜ மனிதர்களை திரையில் உலவவிட்டபோது அதற்கு ஏற்றார்போல் கைகோர்த்து கூட நடந்தது படத்தின் பின்னணி இசையும் பாடல்களும். சிகப்பு ரோஜாக்கள் என்ற புதிய முயற்சி வந்தபோது இசையும் புதியதாய் இருந்தது. திரைப்படம் என்பது நீட்டி முழக்குதல் அல்ல; யதார்த்தம்தான் என்று மகேந்திரன் முள்ளும் மலரும் சொன்னபோது பல இடங்களில் அமைதி காத்து நிமிர வேண்டிய இடங்களில் நிமிர்ந்து காவிய முயற்சிக்குத் துணை நின்றது இளையராஜாவின் இசை.

இசை என்பது இரண்டு அமைதியான கணங்களுக்கு இடையே வரும் ஒலி மட்டும் அல்ல, இரண்டு ஒலிகளுக்கு இடையே வரும் அமைதியும்தான் என்ற சித்தாந்தத்தை மெய்ப்பித்துகாட்டியது அவரது இசை. என்ன பெயரென்றே தெரியாத படங்கள் பலவற்றின் பாடல்கள் மட்டும் ராஜாவின் தனித்துவம் காட்டி நிற்கும். வெறும் தொழில் என்று செய்திருந்தால் இது சாத்தியமாயிருக்காது. தொழிலும் சுவாசமும் இசை என்றிருந்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாயிருக்க வாய்ப்புண்டு.

ஹிட் பாடல்களைவிட ஹிட்டாகாத பாடல்கள் பல நல்ல பாடல்களாய்ப் போன துரதிர்ஷ்டம் எல்லா
இசையமைப்பாளர்களுக்கும் ஏற்படுவதுபோல ராஜாவிற்கும் ஏற்பட்டிருக்கிறது. னாலும் அந்தப் பாடல்களை இன்றும் கேட்கமுடிகிறது என்பதும் இரசிக்க முடிகிறது என்பதும் ஹிட்டை விட பாடலின் தரம் முக்கியமென்பதை உணர்த்தியிருக்கும்.

பிடித்த பாடல்கள் என்று பட்டியலிடுவது மிகக் கடினம். எனக்கு டப்பாங்குத்து முதல் சோகப்பாடல்கள் வரை, கர்நாட்டிக் முதல் ஹிந்துஸ்தானி வரை, எப்படி இருந்தாலும் அதனளவில் நன்றாய் இருந்தால் பிடிக்கும். அப்படி நான் இரசித்த எத்தனையோ பாடல்கள் பெரும்பாலானவை ராஜாவின் பாடல்கள்தாம். அதனால்தானோ என்னவோ உங்களுக்குப் பிடித்த பிரபலங்களைச் சொல்லுங்கள் என்று சொன்னால் இரண்டாவது இடம் ராஜாவிற்கு இருக்கும் அளவிற்கு அவரைப் பிடித்துப் போனது.

என்னால் இளையராஜாவின் திரையிசைப் பாடல்களைக் கேட்காமல் வாழ முடியுமா என்பது சந்தேகமே. எத்தனையோ சமயங்களில் மனம் மிகக்கனமாய் உணர்ந்தபோது சில பாடல்களைக் கேட்டு இலேசாய் உணர்ந்திருக்கிறேன். மிகச்சந்தோஷமாய் இருந்த கணங்களில் சில சோகப்பாடல்கள் கேட்டு சந்தோஷத்தை இழந்திருக்கிறேன். மனிதனின் மனநிலையில் ஒரு மாற்றத்தை (அதற்கு இசை மட்டுமே காரணமில்லை என்றறிவேன்) ஒரு திரைப்பாடல் உருவாக்குகிறதென்றால் அது அந்தப் பாடலுக்கு உயிர்கொடுத்த இசையமைப்பாளனால்தான் என்பது மறுக்க முடியாதது. இப்படிப் பல பாடல்களைக் கொடுத்தது ராஜாவின் சாதனை.

ராஜாவும் வைரமுத்துவும் பிரிந்ததால் யார் எப்படிக் கவலைப்பட்டார்கள் எனத் தெரியாது. நான் மிகவும் கவலைப்பட்டேன். (இன்றும் கவலைப்படுகிறேன்). இதனால் இருவருக்கும் தனித்தனியாக பெரிய பாதிப்பொன்றும் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் நாம் இழந்தது அதிகம்.

வானம் என் விதானம்
இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும்
ஆறு பாடும் சுப்ரபாதம்
காற்றின் தேசம் எங்கும்
எந்தன் கானம் சென்று தங்கும்
காற்றே நின்ற போதும்
எந்தன் ஆயுள் கோடி மாதம்
நானே நாதம்

என்ற வரிகளும்

என் சேலையில் வான் மின்னல்தான் வந்து நூலாகுமே
என் சோலையில் வேர் கூடப் பூக்கின்ற ஓர் காலமே

என்ற வரிகளும்

தோரண வாயிலில் பூரணப் பொற்குடம்
தோழிகளும் என்னைச் சூழ வலம் வருவேன்
வானவில்லை அங்குக் காணவில்லை என்று
மேகம் அலைந்திட தேகம் தனில் அணிவேன்

என்ற வரிகளும்

இலையாடை உடுத்தாதப் பூக்கள்
செடி மீது சிரிக்கின்ற நாள்கள்
படுக்கையில் பாம்பு நெளியுது
தலையணை நூறு கிழியுது

என்ற வரிகளும்

குளிக்கும் போது கூந்தலை
தனதோடையாக்கும் தேவதை
அலையில் மிதக்கும் மாதுளை
இவள் பிரம்மதேவன் சாதனை
தவங்கள் செய்யும் பூவினை
இன்று பறித்துச் செல்லும் காமனை
எதிர்த்து நின்றால் வேதனை
அம்புதொடுக்கும்போது நீ துணை
சோதனை

என்ற வரிகளும்

காத்திருந்தேன் அன்பே இனி காமனின் வீதியில் தேர்வருமோ
பூமகள் கன்னங்கள் இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ
யிரம் நாணங்கள்; இந்த ஊமையின் மேனியில் ஸ்வரம் வருமா?
நீயரு பொன்வீணை நுனிவிரல் தொடுகையில் பல ஸ்வரமா?
பூவை நுகர்ந்தது முதல் முறையா?
வேதனை வேளையில் சோதனையா?
இது சரியா? இது முறையா?

என்ற வரிகளும் இன்னும் இது போன்ற பல வரிகளும் அதற்கேற்ற இசையும் தமிழகத் திரையிசையின் பொற்காலங்கள். இவற்றின் தொடர்ச்சிகளை நாம் இழந்தது இரு தனிமனிதர்களின் தனிமனித ளுமைகளின் மோதல்களால். என்ன சொல்ல? வேதனையைத் தவிர.

“இதுவரை நான்”-ல் வைரமுத்து இளையராஜாவைப் பற்றி எழுதும் போது இப்படி ஆரம்பிக்கிறார்.

“ஒரு நாள் நானும் நீயும் கடற்கரையில் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடிக்கொண்டிருந்தோம். முடிவில் நீ என்னைப் பிடித்துவிட்டாய். இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் எதிரெதிர்த் திசையில்.’ (நினைவிலிருந்து)

இந்த வரிகளைப் படித்த போது நானடைந்த சோகம் இன்னும் மனதில் அப்படியே இருக்கிறது. நட்பை இழத்தல் ஈடுசெய்யமுடியக்கூடிய இழப்பல்ல.

ராஜாவில் ஆரம்பித்து எப்படியோ முடியும் என் எண்ணங்களை அங்கீகரிப்பீர்களாக.

(இதில் நான் சொன்ன இளையராஜா பற்றிய என் எண்ணங்களில் இம்மியளவு கூட உயர்வுநவிற்சி இல்லை)

Share