Archive for ஹரன் பிரசன்னா

ரொட்டித்துண்டும் இட்லிப்பானையும் – கவிதை

 

உபயோகப்படுத்தாத பழைய இட்லிப்பானை

என் கற்பனையையும்

கவிதைப் பிரயத்தனங்களையும்

ரொப்பி வைக்கும் நெளிந்த சேமிப்புக்கிடங்காக இருந்த காலத்தில்

குடியேறின எலிகள் இரண்டு, இளமையானதும்

பெட்டையொன்றும் ஆணொன்றும் என்றறிந்தேன்

குஞ்சுகள் ஜனிக்கவும்.

பானையில் பரவிக்கிடந்த

வெற்றுக்கற்பனைகளை வெளித்தள்ளி

வெற்றிடத்தை ஸ்தாபித்து

சிரிப்பும் கும்மாளமுமாய்

சண்டையும் சச்சரவுமுமாய்

தன்னிடத்தை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டது எலிக்குடும்பம்

பொழுதுபோகாத ஒருநாளில்

நானே எதிர்பாராத இரக்க உணர்வு

பானையின்மீது படர்ந்த நிமிடத்தில்

இரண்டு ரொட்டித்துண்டுகளைப் போட்டுவைத்தேன்,

மறுநாள்

மீண்டும் என் கற்பனைகளை எதிர்பார்த்து

காலியாகக் கிடந்தது இட்லிப்பானை.

Share

புலிநகக்கொன்றையினூடாக என் தாத்தாவின் நினைவுகள்

 
என்னுள்ளே என் தாத்தாவின் நினைவுகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன என்றேதான் நம்புகிறேன். என் தாத்தாவின் ஆளுமைகளை நினைக்க ஆரம்பித்தாலே மிக அதிக உணர்ச்சிவசப்படுதலுக்குள்ளாகி புல்லரிப்பு ஏற்படுவது எனக்கு எப்போதும் ஏற்படுமொன்று. இன்று எனக்கிருக்கும் அறிவுக்கு அடித்தளம் இட்டவர் என் தாத்தா. அதனால் இன்று நானிருக்கும் எந்தவொரு நிலைக்கும் அவர்தாம் மிகப்பெரிய தூண்டுதல். குடும்ப சமாச்சாரங்களில் என் தாத்தாவின் சில வீழ்ச்சிகளைப் பார்த்திருந்தாலும் காலநகர்வில் மனதுள் நிற்பதென்னவோ என் தாத்தாவைப் பற்றிய பிரமிப்புத்தான்.

நினைவலைகளை யார் யார் எழுதவேண்டுமென்பதில் என்னளவில் சில வரையறைகள் உள்ளன. அதனால் நினைவலைகள் என்று எழுதுவதை இயன்றவரையில் தவிர்ப்பது என் இயல்பு. இன்று என்னால் தவிர்க்க இயலாமல் போனதாகத்தான் உணர்கிறேன். அதற்குப் பி.ஏ. கிருஷ்ணன் காரணம். புலிநகக்கொன்றை காரணம். விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், பாலிதீன் பைகள், ஜெ.ஜெ.சில குறிப்புகள் வரிசையில் என்றென்றும் மறக்கவியலாத ஒரு நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரிகிறது. நாவலைப்பற்றிப் பிறிதொரு சமயம்.

என் தாத்தா, ஆர்க்கால் N. வெங்கட்ராமராவ், என்னுடன் விட்டுச்சென்ற அவரின் சில பால்யகால நினைவுகள் இன்று என்னைப் புரட்டிப் போட்டுவிட்டன. வேறெதையும் யோசிக்க விடாது என்னைப் பற்றிக்கொண்டுவிட்டன. இரண்டரை வருடங்களுக்கு முன்னால் இறந்துபோன அவரை புலிநகக்கொன்றையின் சில பக்கங்களில் நான் பார்க்க நேர்ந்தது, கொஞ்சம் விசும்பலுடன்.

என் தாத்தா நிறைய முறை எனக்குச் சொன்ன நினைவுகளுள் ஒன்று வ.வே.சு. ஐயருடனான அவரது பால்யகால பரிமாற்றங்களை.

என் தாத்தாவின் பூர்வீகம் சேர்மாதேவி. (சேரன்மகாதேவி). திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஒரு கிராமம். அங்கு வ.வே.சு.ஐயர் ஒரு பள்ளி நடத்தி வந்தார். அந்தப் பள்ளியில் வ.வே.சு. ஐயரையும் அவரது மனைவியையும் ஏறக்குறைய தினமும் சந்திக்கும் மாணவர்களுள் என் தாத்தாவும் ஒருவர். வ.வே.சு. ஐயரின் ஆங்கிலப்புலமையை என் தாத்தா மெச்சியது நினைவுக்கு வருகிறது. அவரது ஆங்கில உச்சரிப்பு ஆங்கிலேயர்களின் உச்சரிப்புப் போன்றே இருக்குமென்றும் அதைப் பயன்படுத்தி ஆங்கிலேயன் போல மாறுவேடம் பூண்டு ஆங்கிலம் பேசி போலீஸிடமிருந்து தப்பித்ததாகச் சொல்வார் என் தாத்தா.

எப்போதெல்லாம் வ.வே.சு. ஐயரின் மனைவியை மாணவர்கள் சந்திக்கிறார்களோ அப்போதெல்லாம் மாணவர்களுக்கு, தங்கள் தோட்டத்திலிருந்த மாமரங்களிலிருந்து மாம்பழம் பறித்துத் தருவாராம் வ.வே.சு. ஐயரின் துணைவியார்.

வர்ணாசிரம முறையை வ.வே.சு. பின்பற்றவேண்டிய நிர்பந்தம் வந்ததையும் வேறு வழியில்லாமல் அதை அவர் ஒப்புக்கொண்டார் என்றதையும் தானே அதை நேரில் பார்த்ததுண்டு என்றும் என் தாத்தா சொல்லியிருக்கிறார்.

பின்பொரு சமயம் வ.வே.சு. ஐயர் குற்றாலம் சென்றபோது அவரது மகன் அருவியில் தவறி விழுந்ததாகவும் அவரைக் காப்பாற்ற வ.வே.சு ஐயரும் குதித்ததாகவும் அதில் இருவருமே பலியானதாகவும் என் தாத்தா சொல்லி, “வ.வே.சு ஐயர் நீச்சல்ல கில்லாடி.. அவர் ஒருதடவை கப்பல்லேர்ந்து மாறுவேஷத்துல தப்பிச்சு கடல்ல ரொம்பத் தொலை நீந்தியே வந்தாராம். அப்படி இருந்தும் அவரால தப்பிக்க முடியல. மகனைக் காப்பாத்த போய் அவரும் செத்துட்டார்” என்று சொல்வார்.

க்ளப்பிலும் மரத்தடியிலும் வ.வே.சு. ஐயர் பற்றிய பேச்சு வந்தபோது இதைப் பற்றி எழுத நினைத்திருக்கிறேன். நினைவிலிருந்ததை எழுதுவதில் தயக்கம் இருந்தது. என் தாத்தா சொன்னதை நான் மறந்து, எதையாவது மாற்றி எழுதிவிட்டால் அதனால் வரும் அவப்பெயர் அவருக்குப் போகவேண்டாம் என்று நினைத்தும் எழுதாமலிருந்தேன்.

பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை நாவலில் என் தாத்தா எனக்குச் சொன்ன வ.வே.சு. ஐயர் பற்றிய குறிப்புகள் எல்லாமே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. என் தாத்தா சொன்னதில் அல்லது நான் கிரகித்துக்கொண்டதில் சிற்சில முரண்பாடுகள். (என் தாத்தா சரியாகச் சொல்லி நான் மறந்திருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம்.) அருவியில் தவறி விழுந்தது வ.வே.சு.ஐயரின் மகனல்ல. மகள். சுபத்ரா. வ.வே.சு. ஐயரும் அவரது மகளும் இறந்தது குற்றால அருவியிலல்ல. பாபநாசம் அருவியில். இதைத் தவிர மற்ற எல்லாமே – வ.வே.சு. ஐயரின் பள்ளியில் தரப்பட்ட பயிற்சிகள், பள்ளியின் சூழல், பள்ளியைச் சுற்றியிருந்த தோப்புகள், வர்ணாசிரம பிரச்சனைகள் – கதையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பக்கங்களைப் படித்தபோது இந்த விஷயங்களை எனக்குச் சொன்ன என் தாத்தாவின் நினைவுதான் இருந்தது.

வ.வே.சு. ஐயரின் ஆங்கில உச்சரிப்புப் பற்றியும் மாறுவேடம் பூண்டு நீந்தித் தப்பித்தது பற்றியும் நாவலிலில்லை. இதுவும் உண்மையாக இருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம் என நம்புகிறேன்.

Share

அமீரக நான்காம் ஆண்டுவிழா அறிவிப்பு


வருகிற மே மாதம் முதல்வாரம் அமீரகத் தமிழிணைய நண்பர்கள் அமைப்பின் நான்காமாண்டு நிறைவுவிழா நடைபெறவிருக்கிறது. எல்லா வருடங்களையும் போலவே இந்த விழாவின்போது கணினியில் தமிழ் தொடர்பான செயல்முறைவிளக்கம்,குறுந்தகட்டில் தமிழ் மென்பொருட்களின் இலவச வினியோகம், கவியரங்கு, நூல் வெளியீடு ஆகியவை முக்கிய நிகழ்வாக இடம் பெறப் போகின்றன.

அமீரகத் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ளும் இந்த

விழாவில் குறைந்தது 500 பேராவது கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த விழாவின்போது வெளியிடுவதற்காக ஆண்டுவிழா மலர் தயாரிக்கும் வேலைகளிலும் நாங்கள் இப்போது ஈடுபட்டிருக்கிறோம்..இதற்காக தமிழறிஞர்கள்,ஆன்றோர் பெருமக்களிடமிருந்து ஆக்கங்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறோம்.

1000 பிரதிகள் அச்சிடப்படும் இந்த் ஆண்டு விழா மலரில் உங்களது ஆக்கமும் இடம் பெற வேண்டுமென்றால் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதிக்குள்ளாக உங்களது படைப்புகளை எனக்கு அனுப்பித் தரும்படி மிக அன்புடன் வேண்டுகிறேன். ஆண்டு விழா மலர் படைப்பு என தலைப்பிட்டு அனுப்பினால் மிக நன்றியுடையவனாவேன்.

அமீரகத் தமிழிணைய நண்பர்களின் ஆண்டு விழா மலரைச் சிறப்பிக்கும் வண்ணம் உங்கள் ஆக்கங்களை அனுப்பித தருமாறு மீண்டும் அன்புடன் வேண்டுகிறேன்.

மிக்க அன்புடன்,

ஆசிப் மீரான்

(அமீரகத்தமிழிணைய நண்பர்களின் மலர் குழுவினருக்காக)

நண்பர்கள் இந்த அறிவிப்பை அவர்கள் வலைப்பதிவில் பகிர்ந்துகொள்ள ஆசிஃப் மீரான் சார்பாக வேண்டுகொள் வைக்கிறேன்.

நன்றி.

Share

தொகுப்பு – கவிதை

காற்றில் ஆடும் சிறிய வேப்பஞ்செடியின் பாத்தியில்

மீந்திருக்கும் சிறுநீர் வாடை

காற்றோடு கலந்தடிக்கும்போது

வேப்பஞ்செடிக்காக விசனப்பட்டு

அம்மா சத்தமாய் வெய்வாள், என்

மௌனச்சிரிப்பு காற்றில் கலக்கும்

தொடர் ஏச்சுக்குப் பயந்து

ஓடும் என் கால் சத்தம் கேட்டுப்

பரபரப்படையும் அணில்

திசை தெரியாமல் மரம்தேடி

செடிகளில் மோதிச் செல்ல, கோபிக்காமல்

சிரித்து ஆடிய செடிகள்

என்னைப்போலவே குழந்தைமை தொலைத்து இன்று மரங்களாய்.

வெள்ளையை மறைத்துக் கரும்புகை பீடித்துச்

சவாலாய் நிற்கும் வீட்டின் சமையலறைப் பின்சுவரில்

மாங்காய்க்கொட்டைக் கிறுக்கல்களில்

ஒருவன் கெட்டவார்த்தை சொல்ல

மற்றவன் கலவிப் படம் வரைய

பெயர் சொல்லாமல் என் காதல் சொன்னேன்

பதிலாய் எவனோ வக்கிரம் சொன்னான்

மறுபதில் இப்போதெழுத

பள்ளியில்லை; சுவரில்லை

படிக்க அவனில்லை; புரிய அவளில்லை

மேலும், அந்த நான் இல்லை

ஞாபகங்கள் உந்தித்தள்ள

வழியில் வீழ்ந்துகிடக்கும் காய்ந்த சருகுகளில் கண்கள் குத்தி

மெல்ல நடக்கின்றேன்

கைவிட்டுப் போன என் வீடு

வெளிச்சுவரில் புதிய கரிக்குச்சிப் படங்களோடும்

உட்புறச்சுவர்களில் மோதும் அந்தரங்க நினைவுகளோடும்

இன்னும் அங்கே இருக்கிறதாம்

இந்தக் கவிதை அமீரக அண்டுவிழா மலரிலும் வெளியாகியிருக்கிறது. ஆசிஃப்மீரானுக்கு நன்றி பல.

Share

பரணிக் கவிதை – 2

செவி வழி நிலம்

இது ஐ ஆர் எட்டுடே

அது ஐ ஆர் இருபதுடே

நல்ல சம்சாரிக்கு

புல்ல பாத்தாலே வித்தியாசம் தெரியுமுல்லா

அங் ங் ங் ங்க ஓடுதுல்லா…

அது பொது ஓட

ஓடைக்கடுத்தாப்ல உங்கப்பன் வயலு

கொழுந்துனா மலையடில

கோவணத்தக் கட்டிட்டு

கல்லுப்பொறுக்கி வெளயாண்டோம்

பஞ்சம் தாங்காம போயிட்டான்

மறுமாசமே வித்துட்டேல்லா?

பாத்துவாடே.. நெருஞ்சி கெடக்கும்

இன்னைக்கு நம்ம வரப்பு பச்சயா நிக்கி

ஆளப் பாத்துச் சிரிக்கி

காத்துள்ளபோதே தூத்துக்கோன்னான்

இப்பமே பாத்துக்கடே

பரணிக் கவிதை – 1

Share

பரணிக் கவிதை – 1

ஏட்டி

ஏட்டி!

நிம்மதியாக் கெடந்து நாளாச்சுட்டி

மனசத் தொறந்து சொல்ல

மறுகுதேன் முடியல

களத்துமேட்டுல சொல்லலாம்னா

கௌவிங்க இருக்குறாளுவோ

கெணத்துமேட்டுல சொல்லலாம்னா

கொமரிங்க குளிக்குறாளுவோ

நடுசாமத்துலச் சொல்ல வந்தா

நாய் கெடந்து கொலைக்குதுட்டி

ஆத்தாக்காரி முழிச்சிக்குறா

எழவெடுத்தவ

ஆயிரத்தெட்டு கேக்கா

கருக்கலில சொல்லவந்தா

அண்ணங்காரன்

மானமே வெளுக்கல

மசுரப்புடுங்கப் போறியாலங்கான்

கிராமத்துல பொறந்தவன் நா

கவிதயா சொல்ல முடியும்?

தேனெடுக்கேன் தெனமும்

தேனீக்க கொட்டுதுட்டி

வலிக்கல

ஓன் நெனப்பு நெதமும்

நெஞ்சில கொட்டுதுட்டி

தாங்கல

கேக்காம வெதச்சிட்டேன்

மரமா ஒசந்துட்டு

தூரப் போட முடியல

உசுரோட ஒட்டிகிட்டு

ஆத்துக்குள்ள குளிக்கயில

அயிர மீனு கடிக்கயில

கால் ஒதற மனசு வல்ல

ஒன்ன கடிச்ச மீனோ?

தொறந்து சொன்னாத்தானா?

சிரிக்கி

என் கண்ணப்பாத்தா புரியல?

இங்கிட்டு இம்புட்டுக் கிடக்கு

மனசுல அம்புட்டு இருக்கு

அங்கிட்டு எப்படியோ?

நெசமா சொல்லுதேன்ட்டி

நிம்மதியா கிடந்து நாளாச்சு

Share

CuSO4 கவிதை


தாதுகள் நீக்கப்பட்ட

மீத்தூய் நீரால் நன்கு கழுவி

நன்கு உலர்த்தப்பட்ட

ஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்துக்கொள்ளுங்கள்

10 கிராம் தாமிரசல்பேட்டை

துல்லியமாக நிறையிட்டு

குடுவைக்குள் இடுங்கள்.

1000 மில்லி லிட்டர் மீத்தூய்நீரைச் சேர்த்து

தூய கண்ணாடிக்குச்சியால் கலக்குங்கள்

இப்போது நீங்கள்

1% தாமிரசல்பேட் கரைசல் தயாரிப்பதில்

நிபுணனாகி இருக்கிறீர்கள்

ஊடுருவிச் செல்லும் ஒளியில்

நீல நிறத்தடம் மனதைக் கொள்ளை கொள்ளும் நேரத்தில்

குடுவைக்குள் செயற்கை கடல்

துள்ளும் மீன்கள், உயிருடன் சிப்பி

நீல மேற்பரப்பில் சூரிய எதிரொளி, அதில்

தரையிறங்கும் இறக்கை விரித்த கரும்பறவையென

பிணை நினைவுகளில் உங்களைத் தொலைக்காதிருந்தால்

பெருமை பட்டுக்கொள்ளுங்கள்…

நீங்கள் வேதியியல் உலகக்காரர்.


 
Share

பரிகசிப்பு – கவிதை


கேட்டுக்கேட்டு

பார்த்துப் பார்த்து

பழகிப் பழகி

ஒவ்வொன்றாகப் பதித்துக்கொண்டு

சுயம்பு உருவாகிறது

மனதுள், பிம்பமாய்.

சில நிகழ்ந்த கணங்களில்

அணிச்சையாக

தானே வரைந்துகொள்கிறது

ஓர் அருவ ஓவியம், உள்ளுக்குள்.

எதிர்பாராமல் இடறி

கையுதறும் நேரம்

பதறாமல், எதிராளி

சிரித்த நொடியில்,

பொருந்தாத ஓவியப் பிம்பத்தை

கேள்விகளில்லாமல் நெட்டித்தள்ளி

பெரிய பரிகசிப்போடு

உள்வந்தமரும்

இன்னொரு ஓவியம்

தன்னை நிஜமென அறிவித்து.

Share