Kumari Anandhan

சில வருடங்களுக்கு முன்பு மதியம் 1.45 மணி இருக்கும். அப்பொழுது கிழக்குப் பதிப்பகத்தில் இருந்தேன். செக்யூரிட்டி வந்து, ஒருவர் புத்தகம் வாங்க வந்திருக்கிறார் என்று சொல்லவும், உணவு நேரம் முடிந்து 2 மணிக்குதானே விற்பனை தொடங்கும் என்று சொன்னேன். வந்தவர் பெரிய மனிதர் போல் இருக்கிறார், கூட போலிஸ் ஒருவரும் இருக்கிறார், விற்பனைப் பிரதிநிதிகள் மதிய உணவுக்குப் போயிருக்கிறார்கள் என்று சொல்லவும் நான் போய்ப் பார்த்தேன். அங்கே சேரில் குமரி அனந்தன் அமர்ந்திருந்தார். அத்தனை தள்ளாத வயதில் எப்படி மாடி ஏறி வந்தார் என்று ஆச்சரியமாக இருந்தது. கடை திறக்க அரை மணி நேரமாகும் என்று சொல்லி, அவருக்கு வேண்டிய புத்தகங்களை எழுதி வாங்கிக்கொண்டு, வீட்டிற்குப் புத்தகங்களை அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லவும் ஆச்சரியப்பட்டார். இப்படி எல்லாம் செய்வீர்களா என்றெல்லாம் கேட்டார். ஃபோன் நம்பரைக் கொடுத்து, இனி ஃபோன் செய்தால் போதும் புத்தகங்கள் உங்கள் வீடு தேடி வரும் என்று சொன்னேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு சென்றார்.

குமரி அனந்தன் என்றதும் அதுவரை எனக்கு நினைவுக்கு வந்ததெல்லாம், 1996ல், முதல்நாள் வரை காங்கிரஸுக்கு எதிராகக் கோஷம் போட்டுவிட்டு, மறுநாள் காங்கிரஸ் சொன்னவுடன் அதிமுகவுடன் கூட்டணியை ஏற்றுக்கொண்ட குமரி அனந்தனின் முகம்தான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு குமரி அனந்தனை நினைக்கும் போது அவர் மாடிக்கு வந்து காத்துக் கொண்டிருந்ததும் நினைவுக்கு வரும்.

குமரி அனந்தன் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி. அவரை இழந்து தவிக்கும் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share

Comments Closed