முதலாம் சந்திப்பு – கவிதை

சாதாரண சம்பாஷணையினிடையே

அந்த மூன்றாம் கேள்வியும் கேட்கப்பட்டுவிட்டது.

முதலிரண்டு கேள்விகளுக்குச் செய்தது போலவே

தெரிந்த ஒன்றை சொல்லப் பிரியப்படாதது போன்ற அசைவுகளுடன்

கேள்விகளைச் சுற்றிச் சுற்றி என் மனம்

கேட்போனில் முடிகிறது

கேட்போன் எப்போதுமே

என் பதிலுக்காகக் காத்திராமல்

என் மௌனத்துக்காகவே கேட்கிறானாய் இருக்கலாம்

இந்த சுவாரஸ்யமான ஒருகை “செவ்வி”யின்

அடுத்த கேள்விக்குப் போகுமுன்

ஒரு கேள்வி நான் கேட்கவேண்டியிருக்கிறது

அவன் என்ன சாதியென.

அதன் பின் அச்செவ்வி

மீவேகம் எய்தலாம்

அல்லது

சிநேகபாவம் கூடலாம்

இரண்டில் எந்தவொன்றையும் சரிசெய்யும் என் அடுத்த கேள்வி

அவனின் அடுத்த கேள்விக்கு முன் தயாராகிவிட்டால்

கைகுலுக்கல், சிகரெட், பீர், இன்னபிற என்பதாக நான்.

என்னை வரையறுக்கும் வேகத்தில் அவன்.

இடையில் கிடக்கின்றன

சில சொற்களும்

அவை நிரப்பாமல் விட்ட ஒரு பெரிய பள்ளமும்

இன்னும் பயன்படுத்தப்படாத சில பிரயோகங்களும்.

Share

Comments Closed