Tag Archive for முஸ்லிம்

Tears of Begums

பேகம்களின் கண்ணீர்

பென்னேசன் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் முக்கியமான நூல். 1857ல் நடந்த சிப்பாய்ப் புரட்சிக்குப் பிறகு ஆங்கிலேய அரசு அன்றைய ஆட்சியாளர்களை எப்படிப் பந்தாடியது என்பதை விளக்கமாகப் பதிவு செய்யும் நூல். இப்புரட்சியை அடக்காதவர்கள் என்று நினைத்தோ அல்லது புரட்சிக்கு உதவி செய்தார்கள் என்று நினைத்தோ அல்லது ஜாஃபர் ஷா புரட்சியில் பங்கெடுத்தார் என்பதற்காகவோ அல்லது இவை எல்லாவற்றுக்குமாகவோ, அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பிரிட்டிஷ் அரசால் கொடூரமாக ஒடுக்கப்பட்டார்கள். அன்று உயிருக்காகத் தப்பிப் பிழைத்தவர்களின் நினைவை, அன்றிலிருந்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு பேட்டி எடுத்துத் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர் க்வாஜா ஹஸன் நிஜாமி.

இந்தப் பேட்டி எடுக்கப்படும்போது பலர் பிரிட்டிஷ் அரசு தரும் உதவித் தொகையான ஐந்துக்கும் பத்துக்கும் ஏங்கித் தங்கள் வாழ்க்கையைக் கழிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். தங்கள் அரசப் பாரம்பரியம் தங்கள் கண்முன்னே பறிக்கப்பட்டதை ரத்தமும் வலியுமாக இந்த நூலில் அவர்கள் பதிவு செய்கிறார்கள்.

தன் தந்தை தன் கண்ணெதிரே கொல்லப்பட்டதை, ரம்ஜானுக்கு வீட்டில் குந்துமணி கோதுமை கூட இல்லாததை, வேலைக்காரர்களை ஏவி ஏவி ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் கூலி வேலை செய்து பிழைப்பதை, உயிருக்கும் உடைமைக்கும் அஞ்சி மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு ஓடியதை எல்லாம் இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம்.

உருதுவில் இருந்து பென்னேசன் நேரடியாக தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். அனாவசியமான சொல்லாடல்களோ தேவையற்ற திருகல் மொழியோ இல்லை. இந்த நூலுக்குத் தேவையான நேரடி மொழி. மிகச் சிறப்பான பணியைச் செய்திருக்கிறார் பென்னேசன்.

இந்த நூல் படிக்கும்போது இன்னொரு நினைவும் ஒருசேர எழுந்துவந்ததை மறைக்க முடியாது.

இந்த நூலில் பேசுபவர்கள் அனைவரும் தாங்கள் செங்கிஸ்கானின் வம்சம், பாபரின் பேரர்கள் என்று பழம்பெருமை பேசுவதைத் தொடர்ந்து பார்க்கலாம். பாபரும் செங்கிஸ்கானும் இன்று பிரிட்டிஷ் அரசு இவர்களுக்குச் செய்த அதே கொடூரத்தை அன்று மற்றவர்களுக்குச் செய்தவர்கள்தான். அப்படிச் செய்துதான் இவர்கள் இந்த நாட்டில் காலூன்றவே முடிந்தது. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று சொன்னவன் சும்மா சொல்லிவிட்டுப் போகவில்லை. வன்மத்துடன் நான் இதைச் சொல்லவில்லை, நிதர்சனம் இது என்கிற வகையில் சொல்கிறேன்.

கன்ஃப்யூஸ்ட் தேஸி என்பதைப் போல, இந்த வம்சாவளியினருக்குத் தாங்கள் யார் என்பதில் குழப்பம் இருக்கிறது. பழம்பெருமைகளில் தோயும்போது தங்களை பாபரின் சந்ததி என்று நினைத்துக்கொள்கிறார்கள். அதே சமயம் இந்தியாவே இவர்களது யதார்த்தமான தாய்நாடு என்பதும் இவர்களுக்குப் புரிகிறது. இந்த இரண்டு நிலைகளுக்கு இடையேயும் ஊடாடுகிறார்கள். பாவம்தான்.

இதில் ஒரு கதை என்னை மிகவும் கவர்ந்தது. பாதுஷாவின் மகள் ஒருவர் மெக்கா செல்கிறார். இவர் அரச வம்சம் என்பதால் மெக்கா சுல்தான் இவருக்கு வேண்டிய வசதிகளை எல்லாம் செய்து தருகிறார். தங்குவதற்கு வீடும், கூடவே மாதச் செலவுக்குப் பணமும் தருகிறார். இந்தியாவில் அல்லல்பட்டு மாதப் பணத்துக்காக பிரிட்டிஷ் அரசிடம் கையேந்த வேண்டிய தேவை இனி இல்லை. கூடுதலாக மெக்காவில் சுல்தானின் தயவால் மரியாதையும் கிடைக்கிறது. ஆனாலும் சில வருடங்களில் இவர் இந்தியா வருகிறார். தன் நாடு இந்தியா என்று உணர்வதால் அவரால் மரியாதையோடு கூட பாக்தாத்தில் வாழ முடியவில்லை. கன்ஃப்யூஸ்ட் தேசிகளுக்கு மத்தியில், பாபரின் வழித் தோன்றல் என்றாலும் தன் நாடு இந்தியா என்று வந்த அந்த மனிதருக்கு, இந்தக் கதையில் வரும் அத்தனை இன்னல்களும் சமர்ப்பணம் ஆகட்டும்.

Share

மேப்படியான் – நில அரசியல்

தமிழ் சமூக ஊடகங்களில் இந்த மலையாளப் படம் ஹிந்துக்களுக்கு ஆதரவான ஒரு மனநிலையில் கொண்டாடப்பட, இது ஒரு அரசியல் திரைப்படம் என்று நினைத்துக் கொஞ்சம் கவனமின்றி இருந்துவிட்டேன். இன்றுதான் பார்த்தேன்.

ஒரு படமாக இப்படம் எந்த வகையிலும் எந்த ஒரு மதத்தையும் குறை சொல்லவில்லை. எல்லாருமே தங்கள் நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு பணம் பார்க்கும் சந்தர்ப்பவாதிகளாகக் காட்டப்படுகிறார்களே ஒழிய, வேண்டுமென்றே கெட்டவர்களாகச் சித்திரிக்கப்படவில்லை, ஒரே ஒருவரைத் தவிர. அந்தக் கதாபாத்திரம் ஒரு அரசியல்வாதி. அந்த அரசியல்வாதி ஒரு ரியல் எஸ்டேட் ப்ரோக்கரும் கூட. அவர் கிறித்துவர். படத்தில் ஏகப்பட்ட கிறித்துவக் கதாபாத்திரங்கள். மிக நல்லவர்களாகப் பலர் காட்டப்படுகிறார்கள். ஹாஜியார் கதாபாத்திரமும் கூட அதனளவில் வியாபாரத்துக்காக, தன் லாபத்துக்காக எதிராளிகளின் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு பாத்திரமே.

இரண்டு குடும்பங்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்கள் வாக்கை கைவிடாத குடும்பங்களாகக் காட்டப்படுகின்றன. ஒன்று, கதாநாயகன் முகுந்தன் உன்னியின் குடும்பம். இன்னொன்று, வீட்டை விற்கும் கிறித்துவக் குடும்பம். தான் கொடுத்த வாக்குக்காக, ஒரு கிறித்துவப் பெண்ணின் வாழ்க்கைக்காகத் தன் எல்லா உடைமைகளையும் இழந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் ஹிந்துக் குடும்பத்துக்கு இணையாக, சாகும் தறுவாயிலும் தான் கொடுத்த வாக்குக்காக சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து வீட்டை கிரையம் செய்து கொடுக்கும் கிறித்துவக் குடும்பம் என்று எல்லாமே சமநிலையில்தான் உள்ளது.

முகுந்தன் மிக அழகாக இருக்கிறார். எல்லை தாண்டாமல் நடிக்கிறார். மிக மெல்ல நகரும் படத்தில் மெல்ல மெல்ல ஒரு படபடப்பைக் கூட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதிலும் சார்பதிவாளர் அலுவலகக் காட்சி உச்சம். ஒரே விஷயத்தைச் சுற்றிச் சுழலும் கதை தரும் அலுப்பைத் தாண்டிவிட்டால் ஓரளவுக்கு சுவாரஸ்யமான திரைப்படமே. நில அரசியலின் அத்தனை சாத்தியங்களும் காட்டப்படுகின்றன.

பின்னெப்படி இத்திரைப்படம் ஹிந்து ஆதரவுப் படமாகியது? படத்தில் வரும் சேவா பாரதி ஆம்புலன்ஸ் ஒரு சின்ன குறியீடே ஒழிய, அது பெரிய காரணமல்ல.

நிஜ உலகில் நடிகர் முகுந்தன் உன்னி உடல் எடை குறைப்பை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு 95 கிலோவில் இருந்து 75 கிலோவாக உடலைக் குறைக்கிறார். (அந்தப் புகைப்படத்தைத் தேடிப் பாருங்கள். பெரிய சாதனைதான்!) அந்த மகிழ்ச்சியை டிவிட்டரில் பகிர்கிறார். அதில் தன்னுடன் ஒரு ஹனுமானின் படத்தையும் சேர்த்துப் பகிர்கிறார். அங்கே சந்தோஷ் கீழாற்றூர் என்றொரு நடிகர் கமெண்ட் போடுகிறார். “இந்த ஹனுமான் நாட்டை கொரானாவில் இருந்து காப்பாற்றுவாரா” என்று கேட்கிறார். இதற்கு முகுந்தன் உன்னி பதில் சொல்கிறார், “நாம் ஒன்றாக நடித்திருக்கிறோம், எனவே பணிவுடன் சொல்கிறேன், நான் நம்பும் கடவுளை வேண்டிக்கொண்டு இங்கே ஒரு பதிவு போடுகிறேன். இப்படியெல்லாம் பதில் சொல்லி உங்கள் மரியாதையைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். இப்போதெல்லாம் ஏன் நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்?” என்று.

முகுந்தன் உன்னி குஜராத்தில் சின்ன வயதில் இருக்கும்போது பட்டம் பறக்கவிடும் விழாவில் மோடியுடன் பட்டம் விட்டதாகச் சொன்ன செய்தியையும் மேலே நடந்த டிவிட்டர் விஷயத்தையும் முகுந்தன் உன்னி பிரதரமரின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொன்னதையும் சேர்த்துக்கொள்கிறார்கள்.

பின்னர் மாத்ருபூமி செய்திகள் பேட்டியில் நெறியாளர் கேட்கிறார், “நீங்கள் வலதுசாரி என்று தெரிகிறது.” உடனே மறிக்கிறார் முகுந்தன் உன்னி.

முகு: எப்படித் தெரியும்? எப்படி அந்த முடிவுக்கு வந்தீர்கள்?

நெறி: உங்கள் சமூக ஊடகங்கள் இடுகைகளில் இருந்து.

முகு: வலதுசாரி என்றால் பிஜேபி ஆதரவு என்றா?

நெறி: வலதுசாரி என்றால் பிஜேபி ஆதரவு மட்டுமே என்று சொல்லவேண்டியதில்லை.

முகு: அப்படியானால் அது என்ன? நீங்கள் சொல்வதை வைத்து நான் பிஜேபி என்றுதான் புரிந்துகொண்டேன். தெளிவாகச் சொல்லுங்கள். நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்னதாலா என்னை வலதுசாரி என்கிறீர்கள்? எனக்கு இப்போதைக்கு அரசியல் ஆர்வம் எதுவும் இல்லை. நான் வளர்ந்த சூழலில் ஐயப்பன், கிருஷ்ணன், ஹனுமான் என்றுதான் வளர்ந்தேன். ஜிம்மில் கூட எதிரே ஹனுமான் படமே இருந்தது. ஏன் அந்த நடிகர் ஹனுமானால் கொரோனா போகும் என்று கேட்டார் எனத் தெரியவில்லை.

என்றெல்லாம் விளக்குகிறார்.

இது போதாதா? அவர் சங்கியாக்கப்படுகிறார். அதனால் அவர் நடிக்கும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அரசியல் பார்க்கப்படுகிறது போல!

நம் தமிழ்த் திரையுலகில் ஹிந்துக்களுக்கும் பாஜக அரசுக்கும் எதிராகச் செய்யப்படும் பிரசாரத்தில் நூறில் ஒரு பங்கு கூட, மேப்படியான் படத்தில் கிறித்துவர்களுக்கோ இஸ்லாமியர்களுக்கோ எதிராக இல்லை. ஆனாலும் கொண்டாடுகிறார்கள். அத்தனை காய்ந்து போய் இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

முகுந்தன் உன்னி இன்னும் பெரிய பெரிய வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்.

திரௌபதி, ருத்ர தாண்டவம் இயக்குநர் மோகன் ஜி இப்படத்தைப் பார்க்கவேண்டும். மேப்படியான் ஒரு பிராசரப் படம்தான் என்று வைத்துக்கொண்டாலும் அதன் நேர்த்தி எந்த அளவுக்கு யாராலும் புறந்தள்ள முடியாமல் இருக்கிறது என்று நாம் எல்லாரும் புரிந்துகொள்ள இன்னுமொரு வாய்ப்பாக இருக்கும். படத்தின் செலவு வெறும் 3 கோடி மட்டுமே என்று விக்கி சொல்கிறது. மேப்படியான் இயக்குநர் விஷ்ணு மோகனின் அடுத்த திரைப்படம் ‘பப்பா’ என்று தெரிகிறது. அதன் மோஷன் பிக்சர் டிரைலரில் முகுந்தன் உன்னி கழுத்தில் சிலுவையுடன் வருகிறார். இப்படம் முகுந்தன் உன்னியின் இதே திசையில் இருக்குமா அல்லது இதை சமன் செய்யும் எதிர்த்திசையில் இருக்குமா என்று அறிந்துகொள்ள இப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

Share

துரோகி மைனாரிட்டிகள் – ஈவெரா

துக்ளக்கில் 83 வாரங்களாக வெளிவரும் திராவிட மாயை ஒரு பார்வை பகுதியின் இந்த வார கட்டுரை இங்கே. ஈவெரா தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் பேசுவார் என்பதற்கு இது இன்னுமொரு எடுத்துக்காட்டு.

 
நன்றி: துக்ளக்

இதுபோல் அவர் ‘பறச்சிகளெல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சா துணிப்பஞ்சம் வந்திராதா’ என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்! அந்தப் பேட்டியின் சுட்டி கிடைத்தால் இங்கே சேர்த்து வைக்கிறேன். இதுகுறித்து முரசொலி வெளியிட்ட கார்ட்டூனை (வெசாவின் கட்டுரையில்) இங்கே படிக்கலாம்.

Share