Tag Archive for குறுங்கதை

தேவ விளையாட்டு

சிலரது அனுபவங்களைப் பார்க்கும்போது அல்லது கேட்கும்போது பொறாமையாக இருக்கும். என்னுடைய பதின்ம வயதில் ஒரு மாமா காயத்ரி மந்திரத்தின் பெருமையைச் சொன்னார். ஒரு தந்தை இறக்கும் தருவாயில் தன் மகனிடம் சொல்கிறார் காயத்ரி மந்திரத்தைத் தவறாது சொல்லவேண்டும் என்று. மகனும் அப்படியே செய்கிறான். மகன் பெரிய விமானி ஆகிறான். ஒருமுறை விமானம் ஓட்டும்போது காலநிலை மோசமாகி விமானம் கட்டுப்பாட்டை இழக்கிறது. விமானி தன் வாழ்க்கை முடிந்தது என்று அப்படியே அமர்ந்துவிட்டார். பின்னால் இருந்து யாரோ தட்டிக் கூப்பிடுகிறார்கள். அப்பா! காயத்ரி மந்திரம் சொல்டா என்கிறார். விமானி சொல்கிறார். எப்படியோ விமானம் தப்பிக்கிறது. விமானி உயிர் பிழைக்கிறார். பின்னால் திரும்பிப் பார்க்கிறார், அங்கே யாரும் இல்லை. இதைச் சொல்லும்போது அந்த மாமா உணர்ச்சி பெருக கண்ணில் நீர் வழியச் சொன்னார். அவரது கையில் முளைத்திருந்த மயிர்கள் எல்லாம் புல்லரித்துப் போய் நின்றன.

நான் இதை நம்புகிறேன் நம்பவில்லை என்பதல்ல விஷயம். ஆனால் நான் நிச்சயம் அந்த மாமாவை நம்புகிறேன், பொய் சொல்ல அவருக்குத் தேவையே இல்லை என. என்ன பிரச்சினை என்றால், என் வாழ்க்கையில் இப்படி ஒரு தடவை கூட நடந்ததில்லை. இதைப் பொறாமை என்றுகூட வைத்துக்கொள்ளுங்கள்.

‘கனவில் மல்லிகைப் பூ வைத்து பச்சைப் புடைவை கட்டி ஒரு குழந்தை வந்தது, எப்டி இருந்தான்ற, வா வான்னு கூப்பிடறேன், போய்க்கிட்டே இருக்கா, என்னடான்னு பார்த்தா, மறுநாள் அம்பாளை சப்பரத்துல தூக்கிட்டு வர்றாங்க, அதே மல்லிகைப் பூ, அதே பச்சைப் புடைவை’ என்று யாராவது சொல்லும்போது வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருப்பேன். ‘எனக்குத் தெரியாதா அது எங்க வீட்டுப் பூனை’ன்னு ஒரு நண்பர் சொன்னார். எந்தப் பூனையைப் பார்த்தாலும் முப்பது வருடங்கள் முன்பு நான் வளர்த்த பூனைகள் போலத்தான் எனக்குத் தெரியும்.

இப்படிப் பேசுகிறவர்கள் எல்லாரிடமும் ஒரு ஒற்றுமை உண்டு. அனைவரும் இதை ஒரு புதிர் போலப் பேசுவார்கள். ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு விஷயத்தை விவரிப்பார்கள். ஒருவர் சொன்னார், கண்ணாடியில் கண்ட அவரது உருவம் அவரைப் பார்த்துச் சிரித்ததாம். எதோ ஒரு தேவ விளையாட்டு என்றார். எனக்கு பக்கென்று இருந்தது. இன்னொருவர் சொன்னார், ‘எல்லாமே எழுதி வெச்சிருக்குங்க. நமக்கு படிக்க தெரியலை, அவ்வளவுதான்’ என்று. எங்கே எழுதி வெச்சிருக்கு, என்ன படிக்கத் தெரியலை என்று நான் ஏன் கேட்கப் போகிறேன். சரிங்க என்று சொல்லிவிட்டேன். இன்னொருவர் சொன்னார், அவரது கனவில் வந்த ஒரு பெண்ணை மறுநாள் நேரில் கண்டதாக. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரே மனிதரை ஐந்து நிமிட இடைவெளியில் பார்த்தாலும் கூட எனக்கு சட்டென அடையாளம் பிடிபடுவதில்லை. இதில் கனவில் வந்த பெண்ணை மறுநாள் பார்ப்பதெல்லாம் என் வாழ்நாளில் நடக்காது என்று நினைத்துக்கொண்டேன்.

அப்போது நிஜமாகவே ஒரு குரல் கேட்டது. தேவ விளையாட்டுக் கணம் நிகழ்ந்தே விட்டது. மாடியை நோக்கிப் பார்த்தேன். அந்தப் பெண் புன்னகைத்தாள். என்றோ கனவில் கண்ட மறக்கவே முடியாத அந்த முகம். அதே முகம். மெல்ல அவள் முகம் மாறியது. ‘அடிக்கிற வெயில்ல என்ன திருதிருன்னு ரோட்ல நின்னு முழிக்கிறீங்க, வீட்டுக்குள்ள வாங்க. உங்களோட..’ என்றாள்.

Share

அமுதனின் கதை!

இது நடந்தபோது ஞாயிற்றுக் கிழமை. வீட்டில் போரடிக்கவே இளையராஜாவின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

*

அவன் பெயர் வசதிக்காக அமுதன் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பெண்ணின் பெயர் அமுதா! அமுதன் என்னுடன் கல்லூரியில் படித்தான். நான் மற்ற நண்பர்கள் வீட்டுக்குப் போகும்போது அமுதனும் வருவான். அங்கே அமுதா என்ற ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண் இந்த அமுதனுக்கு தூரத்துக்கு உறவு. இது அமுதனுக்குத் தெரிய வந்ததும் அவனுக்கு அமுதா மேல் காதல் வந்துவிட்டது. அமுதாவின் வீட்டுக்காரர்கள் அமுதன் தங்கள் தூரத்துச் சொந்தம் என்பதால் ஓவராக அவனுக்காக உருகினார்கள். தினமும் காஃபிதான் வடைதான். இவனும் அடிக்கடி வருவான் போவான். அந்தப் பெண்ணுக்கும் இவனை உள்ளூரப் பிடித்திருந்தது. ஆனால் இருவரும் பரஸ்பரம் வெளியே சொல்லிக்கொள்ளவில்லை. இப்படியே காதலை பொத்தி பொத்தி வளர்த்தார்கள். என்னிடம் மட்டும் அமுதன் அமுதாவைப் பற்றி அப்படி இப்படி என்றெல்லாம் பேசி பெரிய அறுவையைப் போடுவான். தலையெழுத்தே என்று கேட்டுக்கொண்டிருப்பேன். நாங்களெல்லாம் வயது வந்தவர்களுக்கான திரைப்படம் பார்க்கும் வேகத்தில் இருக்க, இவன் அறுபதுகளின் காதலை எங்கள் காதில் ஓதி கடுப்பைக் கிளப்பிக்கொண்டிருந்தான். அமுதா அப்படி சிரித்தாள், அமுதா அப்படி பார்த்தாள், அமுதா வேண்டுமென்றே பார்க்காமல் போனாள், அமுதா அப்படிச் செய்தால் அதன் அர்த்தம் அவங்க அம்மாப்பாவுக்குக் கூடத் தெரியாது, தனக்குத்தான் தெரியும் இத்யாதி இத்யாதி. ஒருநாள் அமுதா என்ற பெயரை ஒரு பேப்பரில் ரத்தத்தில் எழுதிக்கொண்டு வந்து பெருமையாகக் காண்பித்தான். அடதாயளி என்பதே என் அதிகபட்ச ரீயாக்‌ஷனாக இருக்கவும் நொந்து போனான். அந்த பேப்பரை நாலாக எட்டாக மடித்து ஒரு முத்தம் கொடுத்து பர்ஸில் வைத்துக்கொண்டு, ‘வாழ்க்கை முழுக்க இது என் கூட இருக்கும் மக்கா’ என்றான். வாக்தேவி அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டாள். அந்த பேப்பர் மட்டுமே நிலைத்தது. அமுதாவின் வீட்டில், ‘சொந்தமெல்லாம் சரிதான், ஆனா கல்யாணமெல்லாம் வேண்டாம்’ என்று முடிவெடுக்க, அதே மனநிலையில் அமுதனின் வீடும் இருக்க, ஒரு சுபயோக சுபதினத்தில் அமுதாவுக்கு வேறொரு தடியனுடன் கல்யாணம் ஆனது. கல்யாணத்துக்கு போய் பந்தி பரிமாறி மொய் வைத்துச் சிறப்பித்து போட்டோவும் எடுத்துக்கொண்டு வந்தான் அமுதன். நாங்களும் போயிருந்தோம்!

அன்றிரவு முழுக்க அமுதன் அரற்றிக்கொண்டே இருந்தான். கூட இருந்த பையனெல்லாம் சும்மா இல்லாமல், எல இப்ப என்னல ஆயிருக்கும் என்றெல்லாம் கேட்டு வைக்க அமுதன் அழுவதா சிரிப்பதா எரிந்து விழுவதா என்று தெரியாமல் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தான். இன்னொருத்தன் சொன்னான், ‘அதுக்குத்தான் அன்னைக்கே டெக் போடும்போது கூப்பிட்டேன். அதுமட்டும்தாம்ல நெஜம்’ என்று சொல்லி வைத்தான்.

அமுதன் அழகாக இருப்பான். நன்றாகப் படிப்பான். அவனை ஏன் அமுதாவின் குடும்பம் விட்டுக்கொடுத்தது என்பதே எங்களுக்கு விளங்கவில்லை. அமுதன் இன்னும் படித்து வெளிநாடு போய் மீண்டும் சென்னைக்கே வந்து செட்டில் ஆனபோது அவனுக்கு அழகான பெண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைக்கு அமுதா என்றெல்லாம் பெயர் வைக்காமல் தந்திரமாகத் தன் மனைவியிடம் இருந்து தப்பித்துக்கொண்டான். இடையிடையே என்னுடன் பேசுவான். வாட்சப் புண்ணியத்தில் இப்போதெல்லாம் அடிக்கடி.

இதற்கிடையில் அமுதாவின் சொந்தக்காரர்கள் மூலம் அந்தப் பெண்ணின் மகள் வயதுக்கு வந்துவிட்டாள் என்றறிந்தேன்.

இது நடந்தபோது ஞாயிற்றுக் கிழமை. வீட்டில் போரடிக்கவே இளையராஜாவின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமா பாட்டு. அதுதான் அமுதன் அமுதாவின் ஃபேவரைட் பாட்டு. இந்தப் பாட்டு காதில் விழவும் அமுதனின் ஞாபகம் வர, கூடவே அமுதாவின் மகள் பெரியவளான செய்தியும் வர, உடனே அமுதனை அழைத்தேன்.

“எல, அமுதாவோட பொண்ணு வயசுக்கு வந்துட்டாம்ல” என்றேன்.

“எவல அவ?” என்றான்.

Share