திரை – கவிதை

காற்றில் ஆடும் ஜன்னல் திரையில்
மலர்ந்திருக்கின்றன போலிப்பூக்கள்
என்னைப் பார்த்தவண்ணம்.

படுக்கைக்கு மேலே
உத்திரத்தில் தொங்குகிறது
நிலவும் பிறையும்
சில நட்சத்திரங்களும்;
திரைக்கு வெளியில் அலையும் கேலக்ஸி
படுக்கையறைக்குள்ளே ஒரு விளக்கணைப்பில்.

இரவுகள் பகலாகவும்
பகல்கள் போலியாகவும்
அங்குமிங்கும் அலைகின்றன
சிறிய திறப்பைத் தேடி

உள்ளங்கைக்குள் வேர்த்தடங்கிக்கிடக்கும் வெளி

கையைத் திறக்க
மெல்ல கசிகிறது
நெகிழும் திரையின் வழியே
என் படுக்கையறை
உலகுக்கு.

Share

கருட பஞ்சமி

இன்று கருட பஞ்சமி.

இதன் ஐதீகக் கதை:

முன்னொரு காலத்தில் ஏழு அண்ணன்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். அவர்கள் விறகு வெட்டிப் பிழைக்கிறவர்கள். அப்படி ஒருநாள் அந்தத் தங்கை தன் அண்ணன்களுக்குக் கஞ்சி கொண்டு சென்றாள். அப்போது வானில் கருடன் ஒரு நாகத்தைக் கௌவிக்கொண்டு சென்றது. அந்த நாகம் தங்கை கொண்டு செல்லும் கஞ்சியில் விஷம் கக்கிவிட்டது. அதை அறியாத அவள் அண்ணன்கள் அனைவருக்கும் அதே கஞ்சியை வழங்கினாள். அதை உண்ட அண்ணன்கள் அனைவரும் இறந்துவிட்டனர். தினமும் செய்வதுபோலத்தானே செய்தோம், இன்று என்ன இப்படி ஆகிவிட்டது என்று வருத்தப்பட்ட அந்தத் தங்கை தெய்வத்தை நினைத்து அழுது தொழுதாள். அந்த வழியாக வந்த பார்வதியும் பரமேஸ்வரனும் அவளைப் பார்த்து, நடுக்காடில் இருந்துகொண்டு ஏன் அழுகிறாய் என்று கேட்டார்கள். அவள் நடந்ததைக் கூறினாள். ‘இன்று கருடபஞ்சமி. அதை மறந்துவிட்டு பூஜை செய்யாமல் நீ வந்துவிட்டாய். அதுதான் இதற்குக் காரணம். இங்கேயே இப்போது நாகருக்குப் பூஜை செய். கங்கணக் கயிறில் ஏழு முடிச்சிட்டு, நாகர் இருக்கும் புற்று மண் எடுத்து, அட்சதை சேர்த்து இறந்து கிடக்கும் உன் அண்ணன்கள் முதுகில் குத்தவும். அவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள்” என்று சொல்லி கருட பஞ்சமியின் முக்கியத்துவத்தை உணர்த்தினர். அவளும் அதே போல் செய்தாள். இறந்து கிடந்த அண்ணன்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தார்கள்.

இப்போதும் கருட பஞ்சமி அன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் முதுகில் அட்சதை இட்டு குத்தி, அவர்கள் தரும் சீரைப் பெற்றுக்கொள்கிறார்கள். கருட பஞ்சமி தன் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளும் நோன்பு.

Share

Regarding comments in my blog

எனது வலைப்பதிவில் பின்னூட்டத்திற்கு மாடரேஷன் இருப்பதால், யாரேனும் பின்னூட்டமிட்டால் அது பற்றி எனக்கு மின்னஞ்சல் வரும். இன்று யதேச்சையாக எனது மாடரேஷன் பக்கத்தைப் பார்த்தபோது, ஏழு கமெண்ட்டுகள் அங்கிருப்பதைப் பார்த்தேன். அதைப் பற்றி மாடரேஷன் எனக்கு வரவில்லை. அங்கிருக்கும் பின்னூட்டங்களை இப்போதுதான் உள்ளிட்டேன். எஸ்.கே, மோகந்தாஸ், சந்திரவதானா, தேவ், கானகம், தமிழ்த்தீவிரவாதி போன்றவர்கள் உள்ளிட்டிருந்த பின்னூட்டங்களுக்கு என் நன்றி. தாமதமாக அப்டேட் செய்வதற்கு மன்னிக்கவும்.

நன்றி.

Share

நாக சதுர்த்தி

இன்று நாக சதுர்த்தி.


தன் குழந்தைகள் நன்றாக இருக்க அக்குழந்தைகளின் தாய் நோன்பு செய்து வேண்டிக்கொள்ளும் நாள்.. இந்த நாளில் தாய்மார்கள் உபவாசம் இருக்கவேண்டுமென்பது ஐதீகம். எங்கள் வீட்டில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் தினங்களுள் ஒன்று.

இதற்கான ஐதீகக் கதை:

முன்பொரு காலத்தில் ஒருவனுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். அவன் முதல் பெண்ணை நல்ல ஒருவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். இரண்டாவது பெண்ணை, கைகால்கள் செயலிழந்து கிட்டத்தட்ட நடைபிணம் போலிருக்கும் ஒருவனுக்குத் திருமணம் செய்துவைத்தான். அவனது சூழ்நிலை அப்படி இருந்தது. அப்படி நடைபிணம் போலிருந்த ஒருவனைத் திருமணம் செய்துகொண்ட பெண் தனக்கும் நல்ல வாழ்வு வேண்டும் என்றும் குழந்தைச் செல்வங்கள் வேண்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொண்டாள். பார்வதியும் பரமேஸ்வரனும் நேரில் தோன்றி, நாகரை வழிபடுமாறு அவளுக்கு அருளிச் சென்றார்கள். பார்வதியும் பரமேஸ்வரனும் சொன்னது போலவே, அவளும் விரளி மஞ்சளைத் தேய்த்து, அதில் கஜபத்ர இழை (திரி) தோய்த்து, நாகரை வைத்து வழிபட்டாள். அப்படி வழிபடும்போது இருக்கவேண்டிய நோன்பு முறைகளும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. (அப்புத்தகம் என்னிடமில்லை. இக்கதை கூட வாய்வழியாகக் கேட்டு எழுதுவதே. தவறுகள் இருந்தால் தெரிந்தவர்கள் திருத்தவும். நன்றி.) பார்வதியும் பரமேஸ்வரனும் சொன்னபடியே நாகபூஜையால் அப்பெண்ணின் கணவன் நலம்பெற்று அவ்விரு தம்பதியரும் சந்தோஷமாய் வாழ்ந்தார்கள்.

எனவே நாகசதுர்த்தி அன்று செய்யப்படும் நாகபூஜை குழந்தைகளின் நல்வாழ்விற்கானது.

நாளை கருட பஞ்சமி.

Share

சில புகைப்படங்கள்

கடந்த மாதம் திருப்பதிக்குச் சென்றிருந்தபோது எடுத்திருந்த வெகு சில புகைப்படங்களை வலையேற்ற நினைத்திருந்தேன். இப்போதுதான் முடிந்தது.

கீழ்த்திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்லும்போது கடும் மழை பெய்தது. வளைந்து வளைந்து செல்லும் சாலைகளில் கடும் மழையில் மறைந்துபோன சாலைகளில் பிரயாணித்தது த்ரில்லிங்காகவும் பயமாகவும் இருந்தது. அந்த மழையும் அதைத் தொடர்ந்து எழுந்த காலநிலையும் திருப்பதி சுற்றுலாவை மிகவும் இனிமையாக்கியது.

சில புகைப்படங்கள்.

ராமர் பாதம் காணும் இடத்தில் இருந்து எடுத்த படம். கீழ்த்திருப்பதியைக் காணலாம்.

-oOo-

Raamar pAtham

ராமர் பாதம். வானிலிருந்து கீழிறங்கிவந்த பெருமாளின் பாதம் பட்ட பகுதி என்பது ஐதீகம்.

-oOo-

Photobucket - Video and Image Hosting

சிலைகளின் தோரணம். கற்கள் தானாகவே தோரணம் போல் அமைந்த காட்சி. பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது என்று அங்கிருந்த அறிவிப்புப் பலகை சொல்லியது. வானிலிருந்து கீழிறங்கிய பெருமாள் இங்கேதான் முதலில் தங்கியதாக ஐதீகம் சொல்லுகிறது.

-oOo-

Photobucket - Video and Image Hosting

நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து தங்கக்கோபுரத்தின் தோற்றம்.

-oOo-

Photobucket - Video and Image Hosting

ஒரு மரத்தின் பிடித்த தோற்றம்.

-oOo-

Photobucket - Video and Image Hosting

ஐந்து மொட்டைகளின் அட்டகாசம்.

-oOo-

அஷ்டே!

Share

முகம் – கவிதை

எப்போதோ அணிவித்தார்கள்
எனக்கான ஜென்டில் மேன் பட்டத்தை.
இளகிய ரப்பராலான பட்டம்
மெல்ல
கனத்துக் கனத்து
முகத்திற்கு மாட்டப்பட்ட
இரும்புறையாய் மாற
என் அலறல்
முகச்சிரிப்பில் சிறிதும் அலங்காத
நரம்புகளில் மோதி
என் காதுக்குள்ளேயே எதிரொலிக்கிறது
எப்படியேனும் போராடி
என்றேனும் வென்று
சுயம் மீட்கும்போது
அரண்டு
ஓடி
குலைக்காமலிருக்கவேண்டும்
வீட்டு நாய்.

Share

இம்சை அரசனும் இம்சையும்

மிகவும் பாதித்த மற்றும் பிடித்துப்போன படங்களுக்குத் தவிர வேறெப்படங்களுக்கும் விமர்சனம் எழுதக்கூடாது என நினைத்து அதைக் கடைபிடித்து வந்திருக்கிறேன். இம்சை அரசன் 23-ஆம் புலிகேசிக்கு இணையத்தில் நான் வாசித்த சில விமர்சனங்கள் அப்படத்தைப் பெரிதும் புகழ்ந்திருப்பதைக் கண்டேன். இம்சை அரசனை நான் பார்த்த போது ஏற்பட்ட இம்சை தாங்கமுடியாததாக இருந்தது. அதனால் சில வரிகள் தட்டிப்போடலாம் என நினைத்தேன்.

01. உத்தம புத்திரனின் கதையை அப்படியே உல்டா பண்ணியிருக்கிறார்கள். இதற்குக் கதை – சிம்புதேவன் என்று போட்டுக்கொள்வது தயாரிப்பாளரும் இயக்குநரும் செய்யும் முதல் இம்சை.

02. வடிவேலுக்கு நடிக்கவே வரவில்லை. சீரியஸான வடிவேலு பெரிய காமெடி. வடிவேலும் தமிழ் உச்சரிப்பும் மற்ற சக நடிகர்களின் தமிழ்ப் பேச்சும், தமிழ் மொழி இத்தனை கேவலமாக இருந்ததில்லையே என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

03. அரச காலத்துப் படங்களில் நடிக்கும் தகுதியும் திறமையும் ஒருவித மகுடித்தன்மையும் கேட்பவரைக் கிறங்கச் செய்யும் வசன வெளிப்பாடும் கொண்ட ஒரே நடிகர் நாசராகத்தான் இருக்கமுடியும். நொடிக்கு நொடி அவர் காட்டும் முகபாவங்களும் வசன உச்சரிப்பும் தெளிப்பும் அருமை. இதைத்தவிர நல்ல விஷயம் எதுவும் படத்தில் இல்லை.

04. வாய் விட்டுச் சிரிக்கும் காட்சிகளோ, புத்திசாலித்தனமான நகைச்சுவையோ படத்தில் ஒன்று கூட இல்லை.

05. இம்சை அரசனின் இம்சைகள் என்ற பெயரில் காட்டப்படும் நகைச்சுவை பெரிய இழுவையும் இம்சையுமாய் அமைகின்றன. ஓரிரண்டு காட்சிகள் லேசாக சிரிக்க வைத்தாலும் அவை படத்தைத் தூக்கி நிறுத்தப் பயன்படுவதில்லை.

06. வடிவேலுவின் காதல் காட்சிகளைப் பற்றித் தனியே சொல்லவேண்டும். மகா இம்சை அது.

07. அவ்வப்போது பாடல்கள் வந்து நம்மைப் பாடாய்ப் படுத்துகின்றன. திடீரென்று வடிவேலு காமெடிக்காரர்கள் கெட்டப்பில் ஆடுவதும் பாடுவதும் ரசனையற்று அமைகிறது. அவர் அரசர் கெட்டப்பில் ஆடினால் நமக்கு ரசனை விட்டுப் போய்விடுகிறது!

08. திரையரங்குகளில் நல்ல கூட்டம் அலைமோதுவதாகக் கேள்விப்பட்டேன். நீண்ட நாள்களுக்குப் பின் வரும் அரசர் காலத்துப் படம் என்பதாலும் வடிவேலும் புகழும் இதற்குக் காரணமாய் இருக்கலாம்.

08. இப்படத்தை நான் பார்த்ததற்குச் செய்யவேண்டிய ஒரே பிராயசித்தம் உத்தமபுத்திரன் படத்தை எப்படியாவது மீண்டும் ஒருமுறை பார்த்துவிடுவது மட்டுமே.

09. இம்சை அரசன் உண்மையிலேயே இம்சையில் அரசன்தான்.

35 மதிப்பெண்கள்.

Share

மிதவை – புத்தகப் பார்வை

அந்திமழையில் மிதவை – புத்தகப் பார்வை வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே சுட்டவும்.

நாஞ்சில் நாடனின் நாவல் மிதவை முதலில் நாகர்கோவிலை மையமாக வைத்தும் பின்பு பாம்பேயின் தொழிற்பேட்டையை மையமாக வைத்தும் சுழல்கிறது. வேலை தேடி அலையும் இளைஞர்களின் இன்றைய நிலை இருபது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவலில் சற்றும் பிசகாமல் சொல்லப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய இருபது வருடங்கள் வேலையற்றவர்களின் வாழ்க்கைத் தரமும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அவர்கள் முதலில் சென்னை போன்ற நகரங்களுக்குள் நுழையும்போது அவர்களைச் சென்னை எதிர்கொள்ளும் விதமும் – மிகச் சிலரே சென்னையை எதிர்கொள்ளுகிறார்கள் – அப்படியே மாறாமல் இருக்கின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் எல்லார் வாழ்க்கையையும் படி எடுத்த மாதிரி ஒவ்வொரு வாழ்க்கையிலும் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் நிகழ்வுகளாகிப் போகின்றன.

நான் சென்னைக்குள் முதன்முதலில் நுழைந்தபோது ஏற்கனவே சென்னையே உலகம் என்று தஞ்சமடைந்து போயிருந்த எனது நண்பர்களுடன் பெரும் சர்ச்சையில் இருப்பேன், எந்த ஹோட்டலில் உணவு சீப்பாகக் கிடைக்கும், எப்படி பஸ் மாறிப்போனால் டிக்கட் செலவு குறையும் என. அப்படிப்பட்ட எல்லாக் காட்சிகளும் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 250 ரூபாய் சம்பளம் என்றானபின், காலைச் சாப்பாடு இவ்வளவு, மத்தியானச் சாப்பாடு இவ்வளவு, ராத்திரிக்கு இவ்வளவு என்றால், அதை 30- ஆல் பெருக்கி ஒரு மாததிற்காகும் செலவைக் கிட்டத்தட்ட தினமும் கணக்கிடுவேன். என் நண்பர்களும் அப்படியே. சண்முகமும் செய்கிறான். மத்தியத் தர மனப்பான்மையும் சண்முகமும் ஒருங்கே அமைந்து மிகச் சிறந்த கலவையாகிப் போகிறார்கள். அப்போதே சண்முகம் மிதவையாகிறான். அவன் மிதக்கிறான். சென்னையில், பின்பு கொஞ்சம் பாம்பேயில், பின்பு கொஞ்சம் காமத்தில், எப்போதும் பொருளாதாரச் சிக்கலில் மிதக்கிறான். இடையிடையே அவனது எண்ணங்கள் எங்கெங்கோ மிதக்கின்றன. எப்போதும் பொருளாதாரச் சிந்தனையை முன்வைத்தே அவன் எதையும் அணுகுகிறான். நிலைகொள்ள விழையும் எந்த ஒரு பட்டதாரியின் எண்ணமும், மத்தியத் தர வகுப்பில் இருந்து வந்திருந்தால், நிச்சயம் இப்படியே அமையும். இந்த நிதர்சணமே கதையாகிறது.

கல்லூரி முடித்துவிட்டு வாழ்க்கையைச் சந்திக்கப் புறப்படும் இளைஞர்களுக்கு முகத்தில் அடிப்பது இரண்டு விஷயங்கள். இடமாற்றம் தரும் பீதி மற்றும் உணவு. இந்த இரண்டிற்கும் தப்பும் நபர்கள் ஆகக் குறைவு. சண்முகம் இடமாற்றத்தை ஓரளவு தாங்கிக்கொண்டாலும் உணவுப் பழக்க மாற்றத்தை அவனால் சட்டெனப் பற்றிக்கொள்ள முடிவதில்லை. இட அசௌகரியங்களுள் முக்கியமான இடம் வகிக்கும் காலைக் கடன் கழிப்பது பற்றிய விவரணைகள் சண்முகம் மீதும் அதையொத்த இளைஞர்கள் மீதும் நிச்சயம் ஒரு பச்சாதாபத்தை வரவழைக்கின்றன. இதுபோன்று அனுபவப்பட்டவர்கள் இக்கதையும் இன்னும் ஒன்றிப்போவார்கள். இது அனுபவத்தின் எழுத்து. அனுபவத்தின் எழுத்து மட்டுமே இதைச் சாதிக்க இயலும்.

நாஞ்சில் நாடனின் நடை நேரனாது. அதிகம் சிக்கலில்லாமல் எதையும் போட்டுக் குழப்பாமல் நேரடியாகப் பேசுவது. கதையில் அவர் வடித்துக்கொண்ட பாத்திரங்கள் பாசாங்கில்லாமல் பேசுகின்றன. அதற்கு நாஞ்சில் நாடனின் சிக்கலற்ற மொழி பலமாக அமைந்திருக்கிறது. அதே போல் நாவல் நெடுகிலும் நாஞ்சில் நாடன் பதிவு செய்திருக்கும் சிலச் சில நுண்ணிய கவனிப்புகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. எல்லார் வாழ்க்கையிலும் இப்படித்தான் இருக்கும்போல என எண்ண வைக்கின்றன. சில வரிகள் மனித நினைப்பின் ஆழத்தைத் தொட்டுப் பார்க்கின்றன.

மத்தியத் தர வாழ்க்கையில் ஊறிப்போன சண்முகத்தின் ஈகோவும் சிறப்பாகக் காட்டப்படுகிறது. அது இரண்டு இடங்களில் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியப்பாவின் மகனால் காரியம் கைகூடவில்லை என்ற பின்பு, பாம்பேவுக்குச் செல்லும் வழியில் அங்கு அவன் நடந்துகொள்ளும் விதத்தில் மத்தியத் தர ஈகோ திருப்திபடுத்தப்படுகிறது. மாய்ந்து மாய்ந்து கம்பெனிக்கு வேலை செய்தும் அவன் நிரந்தரம் செய்யப்படாமல் போகும்போது கண்ணீர் வர எத்தனிக்கும் நிலையிலும் டிக்மேன் (மேனேஜர்) தரும் சம்பள உயர்வை வேண்டாம் என்று சொல்லும்போது சண்முகம் தன் ஈகோவைத் திருப்தி படுத்திக்கொள்கிறான். வேலை கிடைக்காமல் கஷ்டப்படும்போதும், வேலை கிடைத்து நல்ல இடம், சாப்பாடு கிடைக்காத போதும், அவனுள் உறங்கிக்கிடந்த காமம், அல்லது அவனால் அடக்கி வைக்கப்பட்டிருந்த காமம், அன்னமாவினால் தலைதூக்க, ஆள் அரவமற்ற கடைகளில் ஆணுறை கேட்பதில் முடிகிறது.

கதையில் எதுவுமே முடிவதில்லை. எல்லாமே அப்படியே அதன் போக்கில் இயங்குகின்றன. ஆச்சார்யாவுக்கும் சண்முகத்தும் இருக்கும் பனிப்போர் அப்படியே இருக்கிறது. அதற்கான முடிவு ஒன்று வேண்டும் என்று ஆசிரியர் நினைக்காதது நிறைவளிக்கிறது. ஏனென்றால் வாழ்க்கையில் பல விஷயங்கள் அப்படியே இருக்கின்றன. ஒரு முடிவுக்கு வந்துவிடுவதில்லை. அதுபோலவே இக்கதையிலும். சண்முகம் கடைசியில் ஊருக்குத் திரும்புவதுகூட ஒரு தொடக்கம்தான். மிதக்கும் பொருளின் ஒவ்வொரு அலைச்சலும் தொடக்கம் மட்டுமே. அங்கு முடிவு இருப்பதில்லை.

கதையில் வரும் இடங்களைப் பற்றிய விவரிப்புகள் சிறப்பாகச் சொல்லப்படுகின்றன. நிஜமாக இப்படி அலைந்த ஒரு மனிதர் மட்டுமே இப்படிப்பட்ட விவரிப்புகளைத் தெளிவாகச் சொல்ல முடியும். அந்த வகையில் அனுபவமே இக்கதைக்கு முக்கிய வித்தாகிறது. கதையில் அங்கு அங்கு வைக்கப்படும் சமூக நீதி மீதான கேள்விகள், விமர்சனங்கள் (‘ஏலே நீ எடக்குடில்லா!’) கதையை மீறி வெளித் தெரியாவண்ணம் சொல்லப்படுவதாகத் தோன்றினாலும் ஆழமற்ற வகையிலும் மேம்போக்காகவும் வைக்கப்படுகிறது என்கிற எண்ணம் எழுகிறது. பிராமணர்கள் மீது ஒரு சமயம் வெறுப்பும் பிறிதொரு சமயம் ஞாயமும் (தன் அப்பாவின் செயலைக்கொண்டு) கற்பித்துக் கொள்ளுகிறான் சண்முகம். இது போன்ற இடங்களில் அது ஆசிரியரின் கருத்தோ என்கிற எண்ணம் தோன்றிக் கதையிலிருந்து ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. அதே போல் 1967-இல் வென்ற திமுகவின் மீது சண்முகம் வைக்கும் விமர்சனமாக வரும் கேள்வியும் முன் பின் தொடர்பில்லாமல் கேட்கப்படுகிறது, பின்பு மறக்கப்படுகிறது. திடீரென நுழைக்கப்பட்டது போலத் தோன்றும் அதில் ஆசிரியரின் கூற்றும் உள்ளது என்கிற எண்ணத்தைத் தவிர்க்கமுடிவதில்லை. பிராமணர் மீதான சண்முகம் கொண்டிருக்கும் எண்ணம் சில இடங்களில் வெளிப்படுகிறது. முக்கியமாக இரண்டு இடங்களில் – பிராமண மெஸ்களில் அவன் நடத்தப்படுவதாக உணரும் விதம்; பார்ப்பனர்களுக்கு மட்டுமே பாரம் தருவான் என்று நூலகத்தில் சேர விண்ணப்பம் வாங்க முயலும் நேரத்தில் அவனுக்குச் சொல்லப்படும்போது மயிர்க்குரு ஒன்றைப் பிய்ப்பது போல உணரும் இடம். ஆனால் அவனுக்கு வேலை வாங்கித் தர ஒரு ஐயரே உதவுகிறார். அதேபோல் திமுகவின் மீது அவன் விமர்சனம் செய்தாலும், நூலகத்தில் அவன் பாரம் தராமல் மறுக்கப்படும்போது (அதற்குச் சொல்லப்படும் காரணம் இன்னொரு சுவாரஸ்யம். எல்லாரையும் போலசாண்டில்யன் மட்டும் படித்து விட்டுப் போய்விடுவான் சண்முகம் என்று நூலகரே ஒரு முடிவுக்கு வருகிறார்!) ஒரு திமுககாரரே உதவுகிறார். இவை கதையில் நிகழும் இயல்பான விஷயங்கள். இவை பெரிதாகச் சொல்லப்படவில்லை. அதுவே அதன் அழகைக் கூட்டுகிறது. பெரிதாகச் சொல்லப்படும்போது அதில் பேலன்சிங் தொனி தங்கிப்போயிருந்திருக்கும். அதைத் தவிர்த்திருப்பது நாஞ்சில் நாடனின் திறமை. அதுமட்டுமில்லாமல் கொள்கைகளை மீறி எத்தனையோ சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்தவண்ணமே இருக்கின்றன. திடீர் திடீரென வரும் ஆண்குறி, பெண்குறி என்கிற வார்த்தைகள் பெரும்பாலும் கதையோடு ஒட்டாமல் சொல்லப்படுவதுபோல் தோன்றுகிறது. இரவுகளில் படுத்துறங்கும் சேக்காளிகள் காலையில் கலைந்து கிடக்கும் கோலத்தைச் சொல்லும் இடத்தில் மட்டும் இவ்வார்த்தைப் பிரயோகம் (ஆண்குறி என்கிற பிரயோகம்) வெற்றி பெறுவதாகத் தோன்றுகிறது. மற்ற இடங்களிலெல்லாம் அவை தேவையற்றே ஒலிக்கின்றன.

சண்முகம் பொருளாதாரத் தேவைகளிலும் உணவுத் தேவைகளிலும் காமம் சார்ந்த இச்சைகளிலும் முங்கிக் கிடந்தாலும் தமிழ் மன்றத்தை அவன் நாடுவதும், சாண்டில்யன் மட்டும் படிப்பான் என்று அவனை நூலகர் சொல்லும்போது அப்படியில்லை என்று சொல்வதும் அவனுள் ஒரு இலக்கியத் தாகம் இருப்பதை உணர்த்துகிறது. அது நாஞ்சில் நாடனின் தாகமாகவும் இருக்கலாம். அந்தச் சண்முகம்தான் பிற்காலத்தில் எழுத்தாளன் ஆனானோ என்னவோ. இப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் அநேகம். ஏனென்றால் காலத்தின் அலையில் எந்த மிதவையும் எப்போதும் எங்கேயும் நிற்பதில்லை. அவை எங்கே செல்லும் என்றும் சொல்லுவதற்கில்லை.

மிதவை, நாஞ்சில் நாடன், விஜயா பதிப்பகம், 60.00 ரூபாய்.

Share