ஏக் தின் அச்சானக் – ஒருநாள் திடீரென்று

மக்கள் தொலைக்காட்சியின் புண்ணியத்தில் நேற்று மிகச்சிறப்பான ஒரு திரைப்படத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. நேற்று மதியம் தற்செயலாக மக்கள் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ‘ஏக் தின் அச்சானக்’ திரைப்படம் பற்றிய முன்னறிவிப்பு கண்ணில்பட்டது. அப்போதே திரைப்படத்தைப் பார்க்கவேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கியது. எனக்குத் தெரிந்த நண்பர்கள் சிலருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்தேன். என்னால் அத்திரைப்படத்தை இருபது பேர் பார்த்திருப்பார்கள்.

ரு மழைநாளில் வெள்ளம் மிகுந்த சூழ்நிலையில் பேராசிரியர் (ஸ்ரீராம் லகூ) ஒருவர் வீட்டை விட்டுப் போகிறார். அன்றிரவு அவர் வீடு திரும்பவில்லை. வீட்டில் அவரைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். அவரைத் தேடுகிறார்கள். அந்தப் பேராசிரியர் அன்றிரவு மட்டுமல்ல, பின் வீடு திரும்பவே இல்லை. அப்படியான சூழலில், வீட்டிலிருக்கும் பேராசிரியரின் மனைவி (உத்தரா போக்கர், இவருக்கு இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை விருது கிடைத்தது,) மகன், மகள்கள் மீண்டும் மீண்டும் பேராசிரியரை நினைப்பதன் மூலமும் அவரைப் பற்றி தர்க்கிப்பதன் மூலமும் அவரை மறு உருவாக்கம் செய்கிறார்கள். பேராசிரியரைப் பற்றி அவர்களின் மதிப்பீடுகள் மாறுகின்றன அல்லது உறுதி செய்யப்படுகின்றன. சில நாள்களில் தந்தையின் நினைவு தினசரி நிகழ்ச்சியாகிவிட, அப்பாதிப்பிலிருந்து மீள்கிறார்கள். அவரவர்கள் அவரவர்களின் யதார்த்த உலகுக்குள் நுழைந்து கொள்கிறார்கள். பேராசிரியரின் மனைவியால் அத்தனை சீக்கிரம் அவரின் நினைவிலிருந்து மீளமுடியவில்லை. எப்போதும் பேராசிரியரின் நினைவோடே இருக்கிறாள்.
Thanks:mrinalsen.orgபேராசிரியரின் புத்தக அலமாரியிலிருந்து கிடைக்கும் ஒரு குறிப்பில், அவர் ‘அபர்ணா அபர்ணா’ என்று கிறுக்கியிருப்பது தெரியவருகிறது. அபர்ணா (அபர்ணா சென்) பேராசிரியரின் மாணவி. மிகுந்த புத்திசாலியான பெண்மணி என்று பேராசிரியர் பலமுறை அவளைப் பாராட்டியிருக்கிறார். பேராசிரியரின் மனைவியின் எண்ணங்கள் தறிகெட்டு ஓட, பேராசிரியர் காணாமல் போனதற்கு இதுவே காரணம் என்கிற ஓர் எண்ணம் அவளுக்குள் வலுப்பெற்றுவிடுகிறது. பேராசிரியரின் புத்தகங்கள் பல ஒரு கல்லூரிக்கு நன்கொடையாகக் கொடுக்கப்படுகிறது. அபர்ணா ஒருசமயம் வீட்டுக்கு வர, தன் மீது படிந்திருக்கும் சந்தேக நிழலை நினைத்து வருந்தி, தான் அத்தகையவள் அல்ல என்று சொல்லி அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறுகிறாள். பேராசிரியரின் மனைவிக்குக் குழப்பம் மிகுகிறது. இதற்குள்ளாக அடுத்த ஆண்டின் மழை பெய்யத் தொடங்குகிறது. தங்களது தந்தை வீட்டைவிட்டுச் சென்று ஓராண்டு கழிந்துவிட்டதை நினைத்துக் கொள்கிறார்கள் அவரின் மகனும் மகள்களும். அப்போது தங்கள் தந்தை மீதான தங்கள் எண்ணங்கள் எவ்வளவு உண்மையானவை என்று மீண்டும் உறுதிசெய்கிறார்கள். அந்தநேரத்தில், பேராசிரியரின் மனைவி, பேராசிரியர் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக அவளிடம் சொன்னதைச் சொல்கிறார்: ‘வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையை மீண்டும் வாழமுடியாது என்பதே.’

பேராசிரியர் ஏன் காணாமல் போனார் என்பது பற்றிய சரியான தீர்வு படத்தில் சொல்லப்படவில்லை. இதுவே படத்தை யதார்த்ததிற்கு மிக அருகில் கொண்டுவருகிறது. தன் தந்தையைப் பற்றி நீதா (பேராசிரியரின் மூத்த மகள், ஷபனா ஆஸ்மி) ஒரு காட்சியில் கடுமையான விமர்சனத்தை வைக்கிறாள். தந்தையின் எண்ணத்தில் கழிந்துகொண்டிருக்கும் நாள்களிலிருந்து மீண்டு, அவள் தன் காதலுடனும் படத்திற்குச் செல்கிறாள். அன்றைய இரவு, அவள் தந்தையின் மீதான கடுமையான விமர்சனத்தை வைக்கிறாள். பேராசிரியரான தந்தை சாதாரண மனிதர் மட்டுமே என்றும் அவரைத் தாங்கள்தான் வித்தியாசமானவர் என எண்ணச் செய்துவிட்டோம் என்று கூறுகிறாள். அடுத்த நொடியிலேயே தன் தந்தையைப் பற்றி இப்படி மதிப்பிட்டுவிட்டதற்காக அழுகிறாள். உண்மையில் தந்தையின் நினைவுகளை மீறி இயல்பான வாழ்க்கையில் கலந்துவிட்டது அவளுக்கு ஒரு குறுகுறுப்பைத் தந்துவிடுகிறது. அதன்வழியேதான் அவள் அவளது தந்தையைப் பற்றிய உண்மையான பிம்பத்தை அடைய முயற்சி செய்கிறாள். அது அவளை மேலும் அதிர்ச்சியடையச் செய்கிறது.

பேராசிரியர் தனது மகன் மிகப்பெரிய ஒரு ஆளாக வருவான் என்றும் தன்னைப் பின்பற்றி வாழ்வான் என்றும் எதிர்பார்க்கிறார். நிகழ்வில் அவரது மகன் படிப்பில் ஆர்வமற்றவனாகவும் வியாபாரத்தில் நாட்டம் உள்ளவனாகவும் இருக்க, பெரிய ஏமாற்றத்திற்குள்ளாகிறார் பேராசிரியர். அவரது மகன் அமர் கேட்கும் தொகையைத் தருவதற்கு முன்பாக அவர் பேசும் பேச்சில் எரிச்சலடையும் மகன் தனக்குப் பேராசிரியரின் பணம் தேவையில்லை என்று சொல்லிவிடுகிறான். அதைக் காணும் பேராசிரியரின் மனைவி கடும் கோபத்தில் பேராசிரியரிடம் அவரைப் பற்றிய கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறாள். இது பெரிய அளவில் பேராசிரியரைத் தகர்க்கிறது. குடும்பத்திற்கெனவும் குடும்பத்தில் உள்ளவர்களைப் பற்றியும் பேராசிரியர் என்றைக்குமே அக்கறை கொண்டதில்லை என்கிற குற்றச்சாட்டு அவரை மிகவும் கலவரப்படுத்துகிறது.

பேராசிரியரைப் பற்றி அவரது மூத்த மகளும் அவரது மனைவியும் வைக்கும் விமர்சனங்களே மிகமுக்கியமானவை. ஏனென்றால் அவர்கள் இருவர் மட்டுமே பேராசிரியருடன் நெருக்கமான ஒரு பிணைப்பைக் கொண்டிருப்பவர்களாகக் காட்டப்படுகிறார்கள்.

அபர்ணா பேராசிரியரின் மாணவி. எப்போதும் படிப்பு, எழுத்து எனக் கிடக்கும் பேராசிரியர் ஒரு புத்திசாலி மாணவியிடம் ஈர்ப்புக் கொள்கிறார். இந்த ஈர்ப்பு தவறான கண்ணோட்டத்தில் எழுவதல்ல. ஒரு பேராசிரியருக்கும் மாணவிக்குமான ஈர்ப்பு. அபர்ணா பின்னிரவுகளில் கூட பேராசிரியரை அழைத்துப் பேசுகிறாள். ஒரு காட்சியில் பேராசிரியர் எழுதிய கட்டுரைக்கு எழும் எதிர்வினை குறித்து இருவரும் தங்கள் கருத்துகளைப் பேசிக்கொள்கிறார்கள். இப்படிப் போகும் இவர்கள் உறவு, பேராசிரியர் கிறுக்கியிருக்கும் “அபர்ணா அபர்ணா” என்ற குறிப்பின் வழியே பல சந்தேகங்களை எழுப்பிவைக்கிறது. யோசித்துப் பார்த்தால், பேராசிரியருக்கு அபர்ணாவின் மீது ஏதோ ஒரு வகையான இனம்புரியாத ஈர்ப்பு இருப்பதைக் கவனிக்கலாம். அது காமம் என்றோ அன்பு என்றோ குறுகலான ஒரு அடைப்பில் அடைபடக்கூடியதல்ல. அதையும் தாண்டிய ஈர்ப்பு அது. பேராசிரியரியரின் மனைவி, தன்னிடம் பேராசிரியர் சொன்னதாகக் கடைசியில் சொல்லும் வாக்கியங்கள், இந்த ஈர்ப்பைப் பற்றி அதிகம் யோசிக்கவைக்கின்றன.

சாதுக்களிடம் மக்கள் கொள்ளும் ஈர்ப்புப் பற்றியும் மிக மேலோட்டமான விமர்சனத்தை வைத்திருக்கிறார் இயக்குநர். ஒரு சாதுவைப் பார்க்கக் காத்திருக்கும் கூட்டத்தில் ஒரு நோயாளிக்கு உடல்நலம் மேலும் மோசமாகிறது. இக்காட்சி சாதுக்களின் மீதான முட்டாள்தனமான நம்பிக்கையைப் பற்றிக் கேலி செய்கிறது. அப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

ஒரு மனிதர் காணாமல் போவதும் அவரைப் பற்றிய நினைவுகளும் எவ்வளவு முக்கியமானது என்பதை யோசித்துப் பார்க்கலாம். ஒரு கட்டத்தில், இனி பேராசிரியர் திரும்பி வரமாட்டார் என முடிவு கட்டி, அவரது புத்தகங்களை ஏதேனும் கல்லூரிக்குக் கொடுத்துவிட்டால் அது சிறந்த முடிவாகவும் பயனுள்ளதாகவும் அமையும் என்று நினைத்து அவரது புத்தகங்களைக் கல்லூரிக்குக் கொடுக்கிறார்கள். அப்போது பேராசிரியரின் மனைவி மிக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்புகிறார், “இனி நான் யாருடன் வாழ்வேன்? எதனுடன் வாழ்வேன்?” உண்மையில் பேராசிரியரின் மனைவியின் வாழ்க்கைப்பிடிப்பிற்கு அப்புத்தகங்கள் தேவையான ஒன்றாகவே இருக்கிறது. அல்லது பேராசிரியர் சம்பந்தப்பட்ட ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. பேராசிரியர் இல்லாத நிலையில் அப்புத்தங்களுடனான அவளது பரிவு தேவையான ஒன்றாகிறது. ஆனாலும் கடைசியில் புத்தகங்களைக் கல்லூரிக்குத் தரச் சம்மதிக்கிறாள்.

பேராசிரியர் காணாமல் போய் சில தினங்கள் கழித்து, அவளது மூத்த மகள் மாடியிறங்கி வரும்போது, எதிர்ப்படும் ஒரு கிழவர் கேட்கிறார், “எதாவது விஷயம் தெரிஞ்சதா?” அவருக்கு அவரது இயல்பான வாழ்க்கையில் ஒன்றாகிறது இக்கேள்வி. அதுமட்டுமில்லாமல், அவரது மூத்த மகள் இன்னொரு காட்சியில் சொல்கிறாள், “அப்பா காணாமல் போனதற்கு நாம்தான் காரணம் என்று எல்லாரும் நினைக்கிறார்கள்.” சமூகத்தின் தெளிவான வரைபடம் இது. இதை ஒன்றிரண்டு காட்சிகளிலும் மிகக் கூர்மையான வசனங்களிலும் சாத்தியப்படுத்தியிருக்கிறார் மிருணாள் சென்.

வசனங்கள் மிகக் குறைவாகவும் ஆழமாகவும் அமைந்து படத்திற்கு அழகு சேர்க்கின்றன. பேராசிரியரின் மனைவியும் அவரது மகனும் சொல்லும் வசனங்கள் பேராசிரியரின் பிம்பத்தை வெகு சீக்கிரத்தில் கட்டமைத்துவிடுகின்றன. “என்னைக்கு சொல்லிட்டுப் போனார் இன்னைக்கு சொல்லிட்டுப் போறதுக்கு” என்கிறாள் பேராசிரியரின் மனைவி. மகன் அமர், “அவர் என்னைக்குமே நம்மைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை” என்கிறான். மூத்தமகள் நிதா கூட தந்தையைப் பற்றிப் புது விமர்சனம் ஒன்றை – அதற்காக அவள் வருத்தப்பட்டாலும் – கண்டடைகிறாள். இவை எல்லாமே மிகச் சொற்பான வசன பிரயோகங்களில் நிழந்துவிடுகின்றன.

நினைவோடை உத்தியில் கட்டமைக்கப்படும் பேராசிரியரின் பாத்திரம் எவ்விதச் சிக்கலுமில்லாமல் நேர்த்தியாகக் கட்டமைப்படுகிறது. நினைவோடை உத்தியை எங்குத் தொடங்கி எப்படி முடிக்கவேண்டும் என்பதில் இயக்குநரின் மேதமை தெரிகிறது. இசையும் ஒளிப்பதிவும் எவ்வித இடையூற்றையும் ஏற்படுத்தாமல் படத்தோடு ஒன்றாகப் பயணிக்கின்றன.

இரண்டு விஷயங்கள் தெளிவில்லாமல் விடப்பட்டுள்ளன. தந்தை காணாமல் போன மறுநாள் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கும்போது, யாரோ கதவைத் தட்டுகிறார்கள். மூத்த மகள் நிதா சென்று கதவைத் திறக்கிறாள். வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரும் என்ன, என்ன ஆச்சு என்று பதறுகிறார்கள். கதவை மூடிவிட்டு உள்ளே வரும் நிதா, “நான் எதையாவது உங்க கிட்ட மறைக்கிறேனா, என்கிட்ட ஏன் சொல்லலை” என்கிறாள். அவள் எதைக் குறிப்பிடுகிறாள் என்பது புரியவில்லை. இன்னொன்று, பேராசிரியரின் மாணவி அபர்ணா சம்பந்தப்பட்டது. பின்னிரவுகளில் கூட பேராசிரியரை அழைத்து அவருடன் பேசும் இயல்புள்ளவள் அபர்ணா. பேராசிரியர் காணாமல் போன பிறகு, அவள் ஏன் அவரைத் தொடர்புகொள்ளவே இல்லை என்பது தெளிவாக்கப்படவில்லை. இத்தனைக்கும் அபர்ணாவுக்குச் சிறப்பான வேலை கிடைக்கிறது. வேலை நிமித்தமாக இடம் பெயர்கிறாள். திருமணமும் நடந்துவிடுகிறது. இவ்வளவு முக்கியமான விஷயங்கள் அபர்ணா வாழ்க்கையில் நடந்திருக்க, அவள் ஏன் பேராசிரியரைச் சந்திக்க வரவே இல்லை என்பது தெளிவாக்கப்படவில்லை. ஒரே ஒருமுறை மட்டுமே வருகிறாள். அவள் எடுத்திருக்கும் புகைப்படங்களைத் தந்துவிட்டுப் போகிறாள். அதன்பின் ஏன் அவள் பேராசிரியரைப் பார்க்க முயற்சிக்கவில்லை என்பது தெளிவாகக் காட்டப்படவில்லை.

ஒரு சிறந்த படத்தைத் தந்ததற்காக மக்கள் தொலைக்காட்சியை மீண்டும் பாராட்டவேண்டியிருக்கிறது. மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றி.

ஹிந்தி படத்திற்குப் போடப்பட்ட சப்-டைட்டில்கள் சில சரியான விளக்கங்களைத் தாங்கியதாக இல்லை. இன்னும் கவனம் எடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனாலும் இந்த முயற்சியே பெரிதும் பாராட்டப்படவேண்டியது என்பதில் இரண்டாம் கருத்தில்லை.

[இந்தப் படம் பற்றிய எனது முந்தைய பதிவு மிருணாள் சென்னின் “ஏக் தின் அச்சானக்” – மக்கள் தொலைக்காட்சி அந்தப் பதிவு திடீரென்று காணாமல் போகிறது. எனது ப்ளாக்கரிலும் வருவதில்லை. அதனால் அது இங்கே சேமிக்கப்படுகிறது.]

இன்றிரவு 8.00 (26.11.2006) மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஏக் தின் அச்சானக் என்கிற ஹிந்தித் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. இயக்கியவர் மிருணாள் சென்.

தமிழ்த் தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் வணிகப் படங்களையே தந்து கொண்டிருக்க (இன்று எத்தனையாவது முறையாகவோ சன் டிவி தில் திரைப்படத்தைத் திரையிடுகிறது), முன்பெல்லாம் தூர்தர்ஷனில் பார்க்கக் கிடைத்துக்கொண்டிருந்த கலைப்படங்கள் மற்றும் விருதுப் படங்கள் காணக் கிடைக்காததாகின. இப்போது தூர்தர்ஷனில் எத்தனை மணிக்கு மாநில மொழித் திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன என்கிற விவரங்கள் கூடத் தெரிவதில்லை. சன் டிவியோ மற்ற லாபகரமான தொலைக்காட்சிகளோ இதைப் பற்றிய பிரக்ஞை ஏதுமற்றவர்களாகவும் லாபம் ஒன்றே குறிக்கோள் என்று செயல்படுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். குறிப்பாக, எல்லாத் தமிழ் ஒளிபரப்புகளையும் மிஞ்சி முதன்மை இடத்திலிருக்கும் சன் டிவி தனது லாபத்தில் ஒரு சிறு பங்கை விட்டுக்கொடுத்து, இதுபோன்ற கலைப்படங்களை ஒளிபரப்பியிருக்கலாம். அது பற்றிய எண்ணமே அவர்களுக்கில்லை என்பது கடந்த 14 ஆண்டுகளில் நமக்குப் புரிந்திருக்கும்.

இந்நிலையில் திரைப்படங்கள் என்கிற ஒன்றில்லாமலேயே ஒரு சானலை நடத்தலாம் என்கிற எண்ணம் வந்ததே பெரிய சாதனை. அதை மக்கள் தொலைக்காட்சி நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருக்கிறது. அதன் அரசியல் செயல்பாடுகள், அரசியல் நிர்ப்பந்தகள் என்னவாக இருந்தபோதிலும், அதன் செயல்பாடு நிச்சயம் பாராட்டுதலுக்குரியதே.

இனி எப்போதும் காணவேமுடியாது என்று நான் முடிவுகட்டிவிட்ட படங்களில் (டெரரிஸ்ட், மல்லி, ஆயிஷா, குட்டி, இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள், குடிசை, நண்பா நண்பா, சங்கநாதம், உன்னைப் போல் ஒருவன்) ஒன்றான மல்லி திரைப்படத்தை கடந்த 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. எனக்கு சந்தோஷமான ஆச்சரியம். நிச்சயம் இது ஒரு சாதனை என்பதே என் எண்ணம். இதுபோன்ற திரைப்படங்களை இனி காணவே முடியாது என்கிற என் எண்ணம் உடைவது என்னை உணர்ச்சிவசப்பட்ட சந்தோஷத்தில் ஆழ்த்துவதைக் காணமுடிகிறது.

சுள்ளான் போன்ற வணிகப்படங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து உரிமம் வாங்கும் தொலைக்காட்சிகள், அதில் ஒரு சிறுபங்கை மட்டும் செலவழித்து, சிறந்த பிறமொழிப்படங்களை அதன் தமிழ்மொழி சேர்ப்புடன் (சப் டைட்டிலுடன்) போடலாம் என்று என் நண்பரிடம் சென்ற வாரம் சொல்லிக்கொண்டிருந்தேன். இதற்காகத் தொலைக்காட்சிகள் தங்களது ப்ரைம் டைம் ஒதுக்கி அதிகம் நஷ்டப்படத் தேவையில்லை. பின்னிரவுகளில் ஒளிபரப்பியிருக்கலாம். ஆனால் இதுபற்றிய எண்ணமே எந்தவொரு தொலைக்காட்சிக்கும் இல்லை என்னும்போது இதைப்பற்றிப் பேசியே பிரயோஜனமில்லை. அந்நிலையை மாற்ற முயன்றுகொண்டிருக்கிறது மக்கள் தொலைக்காட்சி. மிகவும் சந்தோஷத்திற்குரிய விஷயம்.

மக்கள் தொலைக்காட்சி திரைப்பட வாசனையே ஆகாது என்றிருந்தபோது, திரைப்படங்கள் அப்படி ஒதுக்கப்படவேண்டியவை அல்ல என்கிற எண்ணம் எனக்கிருந்தது. நல்ல கலைப்படங்களை ஒளிபரப்பினால் அதில் தவறில்லை என்கிற என் எண்ணத்தை ஈடேற்றத் துவங்கியிருக்கிறது மக்கள் தொலைக்காட்சி.

அதன் செய்திகளில் சன் டிவி போலவோ ஜெயா டிவி போலவோ கேவலமான அரசியல் செய்யப்படுவதில்லை. அதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. இலங்கை சம்பந்தப்பட்ட விஷயங்களை அதிகம் காண்பிக்கிறார்கள், ஒரு பிரசார நெடியுடன். அதேபோல் ஆட்டோ சங்கர் தொடரின் உருவாக்கம். சதாம் பற்றிய செய்திகளில் காணப்படும் பிரசாரம். இதெல்லாம் மக்கள் தொலைக்காட்சியில் அரசியல் நம்பிக்கை மற்றும் கொள்கை சார்ந்த விஷயங்கள்; விவாதத்திற்குரியவை. இவையின்றிச் செயல்படும் என்று மக்கள் தொலைக்காட்சியை நாம் எதிர்பார்க்கமுடியாது. அதைவிடுத்துப் பார்த்தால் மக்கள் தொலைக்காட்சி சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இன்றிரவு மிருணாள் சென்னின் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அதற்கான முன்னோட்டத்தில் தமிழ் சப்டைட்டில் காண்பித்தார்கள். படம் முழுவதும் தமிழ் சப்டைட்டில் வரும் என்று நினைக்கிறேன். வராவிட்டாலும் பரவாயில்லை, இதுபோன்ற திரைப்படங்களை வாரம் ஒன்றாக மக்கள் தொலைக்காட்சி அவசியம் ஒளிபரப்பவேண்டுமென்று எதிர்பார்க்கிறேன். தமிழ், கன்னட, மலையாள, ஹிந்தி, பிறமொழிக் கலைப்படங்களை சிறுபத்திரிகைகள் மூலமாக மட்டுமே வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டுகிறது. அவற்றைப் பார்க்கும் சந்தர்ப்பங்களை மக்கள் தொலைக்காட்சி தொடர்ந்து வழங்குமானால் அறிவுலகில் மக்கள் தொலைக்காட்சிக்கு சிறந்த பெயர் கிடைக்கும். இதனால் அவர்கள் அடையப்போகும் லாபம் ஒன்றே ஒன்றுதான். கலைப் பிரக்ஞை வளர்ச்சிக்கு சில முயற்சிகளை நல்குவது. இதைத் தொடர்ந்து மக்கள் தொலைக்காட்சி செய்யுமென எதிர்பார்க்கிறேன்.

மிருணாள் சென்னின் பெயரை சிறுபத்திரிகைகளில் மட்டுமே கண்டு பழகிய எனக்கு இன்று அவர் திரைப்படத்தைக் காணப்போகிறோம் என்பது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது. பார்க்கலாம். படத்தைப் பற்றிய தகவல்களுக்கு: http://mrinalsen.org/ekdin_achanak.htm

மக்கள் தொலைக்காட்சியின் நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்.

Share

ரோஸ் (நாவல்) – ஒரு பார்வை

அந்திமழையில் ரோஸ் (நாவல்) ஒரு பார்வை வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே சுட்டவும்.

குழந்தைகளின் ஏக்கங்கள் பற்றி மிக எளிமையாகவும் ஆழமாகவும் பேசும் நாவல். இரா.நடராசனின் ‘பாலீதீன் பைகள்’ நாவலை ஏறக்குறைய பத்து வருடங்கள் முன்பு வாசித்தேன். சன்னமான அதிர்வுகளுக்கு என்னை உள்ளாக்கிய நாவலது. அதன்பிறகு இப்போதுதான் இரா.நடராசனின் இன்னொரு நாவலை வாசிக்கிறேன்.

ரோஸ், இரண்டாம் வகுப்புப் படிக்கும் ஒரு சிறுவனின் வாழ்க்கை வெளியை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இதில் அதிசயம் என்னவென்றால் எந்தவொரு இடத்திலும் ஆசிரியரோ கதாபாத்திரமோ விவரணைகள் எதையும் சொல்வதில்லை. ஆனால் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் ஒவ்வொரு வரியும் சிறுவன் இழக்கும் உலகத்தைத் தொடர்ந்து காட்டிக்கொண்டே வருகிறது. நாவல் முழுக்க விவரணைகள் ஏதுமின்றி, வெறும் உரையாடல்கள் மட்டுமே காணக்கிடைக்கின்றன. அவற்றின் மூலமாக ஒரு சிறுவனின் உலகம் எவ்வளவு சுமை நிறைந்ததாக இருக்கிறது என்பதையும் இன்றையக் கல்விமுறை எவ்வளவு தூரம் சிறாரிடமிருந்து அந்நியப்பட்டுக் கிடக்கிறது என்பதையும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தாங்கள் அறியாமலேயே ஒதுங்கி இருக்கிறார்கள் என்பதையும் சித்தரிப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இரா.நடராசன். உண்மையில் இந்நாவலில் வரும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மேல் அன்பற்றவர்களாகவோ அக்கறை அற்றவர்களாகவோ சித்தரிக்கப்படவில்லை. யதார்த்த பெற்றோர்கள் போல தன் மகனைச் சீக்கிரம் எழுப்பி, குளிப்பாட்டி, உணவளித்து, பள்ளிக்குச் செல்லும் வழியில் அவனுக்கு சிப்ஸ் வாங்கிக் கொடுத்து எனத் தன் மகனின் தேவையை மிகக் கவனத்தோடும் பாசத்தோடும் செய்கிறார்கள். ஆனால் யதார்த்தம் போலவே மகனின் உலகமும் பெற்றோர்களின் உலகமும் இருவேறு மையங்களில் சுற்றும் கோளங்கள் போல ஒன்றுக்கொன்று தொடர்பின்றி சுழல்கின்றன. அவை எந்தப் புள்ளியிலும் சந்தித்துக்கொள்ளவே இல்லை.

காலையில் எழும்போதே பள்ளிக்குச் செல்லவேண்டும், வீட்டுப்பாடங்கள் முடிக்கவேண்டும் என்ற சுமையையும் அலுப்பையும் சேர்த்தெடுத்துக்கொண்டு எழுந்திருக்கும் சிறுவனின் வீட்டு ரோஜா பூத்திருக்கிறது. அதைப் பார்க்க அவனுக்கு அனுமதியில்லை. காரணம், காலை நேரப் பரபரப்பு; நேரமின்மை. அவன் இரவு வந்து பார்த்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறான். அன்று வரும் பள்ளிக் காட்சிகள் அனைத்திலும் எப்படியோ, ரோஜாவோ ரோஜா நிறமோ ரோஜா வளரும் மண்ணோ, ரோஜாவின் பெயர் அடிபடுகிறது. அவன் மீண்டும் மீண்டும் தன் வீட்டில் பூத்திருக்கும், தான் பார்க்காது வந்துவிட்ட ரோஜாவை நினைக்கிறான். பெற்றோர்களின் தனித்து இயங்கும் உலகம் போலக் கல்விக்கூடத்தின் உலகம் இன்னொரு மையத்தில் தனித்து இயங்குகிறது. அங்கு ஸ்பெல்லிங்கும் மனனமும் வீட்டுப்பாடமும் முன்னிறுத்தப்படுகிறதே அன்றி அச்சிறுவனின் உலகத்தின் மீது எந்தவொரு கவனமும் விழுவதில்லை. அச்சிறுவனுடன் படிக்கும் மற்றச் சிறுவர்கள் மட்டுமே அவனது ரோஜாவின் மீது கவனம் கொள்கின்றனர். அதுவும் கூட ஆசிரியரால் கண்டிக்கப்படுகிறது.

எல்லா வகுப்பு ஆசிரியர்களூம் இயல்பாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் பணி பாடம் போதிப்பது, வீட்டுப்பாடம் கொடுப்பது, ஸ்பெல்லிங் சொல்லச் சொல்வது என அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள். அதில் குற்றம் காண ஏதுமில்லை. சிறுவனின் ரோஜா பற்றிய ஏக்கம் நமக்குள்ளும் இருக்கும்போது நமக்குச் சிறுவனின் மீது ஒரு பரிதாபத்தை ஏற்படுத்திவிடுகிறது. தொடர்ந்த உரையாடல்களின் மூலமாக மட்டும், சுஜாதாவின் நாடகங்களில் கதாபாத்திரங்கள் தொடர்ந்த உரையாடல்கள் மூலம் தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்வதுபோல, இது நேர்ந்துவிடுகிறது என்பது ஆச்சரியம்தான்.

சிறுவர்களின் பள்ளி உரையாடல்கள் வெகு எளிமையாகவும் யதார்த்தமாகவும் இருக்கின்றன. அவர்களை நோக்கி ஆசிரியர்களின் கூச்சலும் சத்தமும் கோபமும் இதேபோலப் படைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளுக்கான புத்தகங்கள் பல இருக்க, குழந்தைகள் உலகம் பற்றிய நாவல் வெகு சிலவே உள்ளதால் (சட்டென சுஜாதாவின் ‘பூக்குட்டி’ நினைவுக்கு வருகிறது. ரோஸ் நாவலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் வே.சபாநாயகம் கி.ராஜநாராயணின் ‘பிஞ்சுகள்’ நாவலை நினைவுகூர்கிறார்.) இதுபோன்ற நாவல்களில் தேவை அதிகமாகிறது.

66 பக்கங்களே கொண்ட, அரை மணி நேரத்தில் படித்து முடிக்கப்பட்டுவிடக்கூடிய சிறிய நாவல் மனதில் ஏற்படுத்தும் எண்ணங்கள் ஏராளம். உண்மையில் இன்றைய பெற்றோர்களின் நிலையையும் ஆசிரியர்களின் நிலையையும் அது தெளிவாகவே கூறுகிறது. ஆசிரியர் அதை விமர்சிக்கும் நோக்கத்தோடுதான் அணுகியிருக்கிறார். ஆனால் அவர்களின் செய்கைகள் தவிர்க்கமுடியாதவை என்றே நான் கருதுகிறேன். இந்த நாவலில் காலையில் சிறுவன் ரோஜாச்செடி பக்கம் சென்று நிற்கும்போது, அவனது பெற்றோர்கள் அந்த ரோஜாவை மாலையில் பார்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள். இது எல்லார் வீட்டிலும் நேரக்கூடியதே. இது போலவே ஆசிரியர்களின் கூற்றும் எங்கேயும் நேரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. இதிலிருந்தெல்லாம் விடுபட முடியுமா எனத் தெரியவில்லை. காலங்காலமாகக் கல்வி என்பதே மிக முக்கியம் என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்பட்டிருக்கிறது. அதற்கேற்றாற்போலவே நமது சமூக அமைப்பும் அமைந்திருக்கிறது. அதையே இக்கதையின் பெற்றோர்களும் செய்கிறார்கள். நம்மைப் போலவே. உண்மையில் தங்கள் மகனின் ஆசையைப் புறக்கணித்திருக்கிறோம் என்கிற சுவடு கூட அவர்களிடம் இல்லை. அதுவும் நம்மைப் போலவே. ஓரளவிற்கு மேல் அல்லது தினசரி வாடிக்கையாகிப் போகும் நிகழ்வுகளில் தோய்ந்து தோய்ந்து இதுபோன்ற சிறிய சிறிய நிராகரிப்புகள், அதனால் குழந்தைகளின் உலகில் ஏற்படுத்தப்படும் ஏக்கங்கள் நம்மை எந்த அளவிலும் பாதிப்பதில்லை என்றே தோன்றுகிறது. அதுமட்டுமில்லாமல், அந்தச் சின்ன வயதில் குழந்தைகளுக்கான அளவுக்கு மீறிய சுதந்திரம் அவர்களின் வாழ்க்கைக்கே ஊறாகிப் போகும் அபாயமுமிருக்கிறது. அதனால் ஒரேடியாகப் பெற்றோர்களையோ ஆசிரியர்களையோ குறைகூறிவிட முடியாது. அவர்கள் சமூக அமைப்பிற்கேற்பச் செயல்படுகிறார்கள். ஆனால், நமது அணுகுமுறையில் மாற்றம் தேவையோ, குறைந்தபட்சம் மாற்றத்தைப் பற்றி யோசிக்கவாவது வேண்டுமோ என்கிற கேள்வியை வெகு நிச்சயம் எழுப்புகிறது இந்நாவல். அந்த அளவில் இந்த நாவல் சிறந்த வெற்றி பெறுகிறது.

காவ்யா பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்நாவலோடு, மூன்று சிறுகதைகளும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

ரோஸ், இரா.நடராசன், காவ்யா வெளியீடு, விலை: 40.00 ரூபாய். [முதல் பதிப்பு: 2001]

Share

அந்திமழை.காம் – கவிதைத் திருவிழா

அந்திமழையில் கவிதைத் திருவிழாவில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. வாசிக்க இங்கே சுட்டவும்.

நத்தை மனிதன்

கால வெளிகளில் திரிந்தலைந்தபின் வீடு திரும்ப
என்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் வீடு
தன் அறைகளோடும் வாசத்தோடும்

என் அலைதல் ஒவ்வொன்றும்
வீட்டை மையப்படுத்தியே இருந்திருக்கிறது
ஒரு நாளைக்கு 56 தடவைகள் வீட்டைப் பற்றி நினைக்கிறேன்
பதினோரு முறை வெளியிலிருந்து வீட்டிற்குள் பிரவேசிக்கிறேன்
சதாசர்வ காலமும்
மூடிக்கிடக்கும் கதவைத் திறக்கும்போது கேட்கும் ஒலிகள்
என் காதில் ஒலித்துகொண்டே இருக்கின்றன
வீட்டுக்குள் தொங்கும் சட்டைகளோடு என் நினைவுகளும் தொங்க
வெளியே வெற்றுடலாய் அலைகிறேன்

வீட்டின் கூரைகளும் சுவர்களும் நெகிழ்ந்திருக்கின்றன
தன் எஜமானனுக்கான வரவை நோக்கி

இன்று கதவு திறக்கும் பொழுதில்
என் சப்தங்கள் உள்நுழைய
ஒடுங்குகிறது வழிதவறிய நத்தை
சுவர் மூலையில்.
நான் உரக்கச் சொன்னேன்,
அது தன் வழி கண்டடைந்த நத்தை.

பீடம் பற்றிய கவிதை

சிறிய மலையொன்றின் உச்சியில்
எனக்கான பீடமிட்டிருந்தேன்
செல்லும் வழியெங்குள்ள மணமற்ற பூக்களை
காலால் மிதித்தும் தாண்டியும் ஓடினேன்
மேலே ஏற ஏற
கீழே மனிதர்கள் எறும்புகளாய் ஊர்ந்தார்கள்
என் சத்தமிட்ட சிரிப்பில்
வண்டுகள் கலைந்தோட
எதிரொலியில் என் வயிறே அதிர்ந்தது
பீடக்கால்களின் நுனியை என் கைகள் தொட்டபோது
சுற்றியிருந்த நறுமண மலர்களின் வாசத்தை
நுகர மறுத்தது என் மூக்கு
பீடமேறி அமர்ந்தபோது
மலையுச்சியிலிருந்து விழுந்து
தற்கொலை செய்துகொண்டது என் ஆன்மா
ஒன்றும் இழப்பில்லை
பீடங்களில் உலகில்
இலவசமாகவே கிடைக்கும்
புதிய ஆன்மாக்கள்

சுவர்கள்

தடுப்புகளற்ற எதிரெதிர் இருக்கைகளில்
மூன்று பேர்கள்
முதலாமவனின் எண்ணம் இரண்டாக இருந்தது
இடைச்சுவரை உடைப்பது நல்லது மற்றும்
இந்தச் சுவருக்குப் பின்னிருப்பதே பாதுகாப்பானது.
இரண்டாமவள் இடைச்சுவரை உடைத்தல் பற்றி யோசித்தாள்
மற்றும் இடைச்சுவருக்குப் பின்னிருத்தல் பாதுகாப்பானது என்பது பற்றியும்;
ஏனெனில் இது ஆண்களின் உலகம்.
மூன்றாமவனின் நினைவுக்குள்
சுவரை மீறுவதாகவும்
பின்னிருப்பதே பாதுகாப்பானதாகவும்.
மூன்று சுவர்களுக்குள்ளிருந்து வெளியேறி
மூன்று பேரும் கைகுலுக்கிக்கொண்டார்கள்.
அப்போது அங்கே
மூன்று இருக்கைகள், மூன்று பேர்கள்
மற்றும் மூன்று சுவர்கள்.

சுயசரிதை எழுதுதல்

நான் நினைத்ததுபோல்
எளிதாக எழுத இயலாமல்போன
அடித்து அடித்து
எழுதப்பட்ட
சுயசரிதைக்குள்
நான் அடைந்துகொண்டேன்
கடைசியில் ஒரு குறிப்புடன்,
இது வளைந்து நெளிந்து செல்லும்
நேரான பாதை.

அணிலைப் பற்றிய குறிப்புகள்

உலகின் அற்புதங்களில் ஒன்றாக
நான் கருதும் அணில்களைப் பற்றி
நிறைய நாள்கள் மறந்துவிட்டிருந்தேன்
நான்காம் நாள் கனவில் ஒரு பூ கொண்டு வந்தது அணில்
உண்மையில் அன்றுவரை பூ கொண்டு வரும் அணில் என்பதாக
எக்குறிப்பையும் நான் எழுதிவைக்கவில்லை,
சிறிய பழக்கொட்டையை
இரண்டு கைகளில் ஏந்தி நிற்கும் அணிலே
என் விருப்பத்தேர்வாக இருந்திருந்தது,
மிருதுவான அதன் உடற்பரப்பும்
துடிக்கும் வெதுவெதுப்பான சாம்பல் நிற வயிறும்-
நீளும் என் குறிப்புகளில்
பூவோடு வந்த அணிலால்
மறுநாள் பொழுது சந்தோஷமாகக் கழிந்தது
அதன் மூன்று கோடுகளைப் பற்றி
புதிதாக எழுத யோசித்துக்கொண்டிருந்தபோது
பூனை ஒன்று குதித்தோடியது, வாயில் அணிலின் வாலோடு.
தொலைந்துபோன அதன் சதைப்பிண்டங்களைப் பற்றியும்
குறிப்பெழுதி வைத்தேன்,
பூனையைப் பற்றிக் குறிப்புகள் எதுவுமில்லை.

Share

முறிந்து விழுந்த கிளை – கவிதை

முறிந்து விழுந்துவிட்ட
அந்தக் கிளையைப் பற்றிச் சொல்ல அதிகமில்லை
எல்லாக் கிளைகளுக்கும் போலவே
சில பொதுக்குணங்கள்
பருத்தி மொட்டு பூத்திருந்த காலத்தில்
பறவைகள் பிரசித்தம்
நீளமான காபி நிறக்காய்கள் தொங்கியபோது கல்லெறி
இரண்டாம் தளத்தில்
12 பி வகுப்பு வராந்தாவிலிருந்து
நீளும் கைகள்
கர்வத்தில் மிதந்த கிளை
எதிர்பாராத நிமிடத்தில் முறிந்து விழுந்தது
மரத்தைப் பார்த்தபடி
விடுமுறைக்குப் பின் பள்ளி திரும்பிய கைகள்
கிளையிழந்த மரத்தைப் பார்த்துக்கொண்டு நின்றன
மரம் வானத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தது
காற்றில் கலந்திருந்தது
முறிந்த கிளையின் ஏக்கமூச்சு.

Share

பின்னோக்கி நகரும் பெருங்காலம் – கவிதை

ஆலமரத்தின் பரந்த கருநிழலும்
மஞ்சள் வெளிர் மஞ்சள் படர்வுகளும்
கண் எல்லையிலிருந்து மறைய
பின்னோக்கி நகரும் பெருங்காலம்

எப்போதோ அமிழ்ந்தொளிந்த
ஆழ்மனக் காட்சிகள்
கண்ணை மறைத்துப் பெருங்காட்சியாய் விரிய
ஒரு நொடி பேரமைதி,
அப்போதே அத்தையின் மரணம்.
ஒரு வருடத்திலெல்லாம் மாமா.
வீட்டில் கருமை சூழ்ந்த ஒரு தினத்தில் அம்மா
அப்பாவுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது
ஒலித்தது புதிய குரல்

யாராலும் தடுக்கமுடியாத
காலத்தின்
பின்னோக்கியப் பெரும்பயணத்தில்
ஓரடி முன்னேயென
தொடர்ச்சியாய்ப் புதிய குரல்கள்,
வீடெங்கும் வாசற்படிகள்.
காலத்தின் வெளியெங்கும்
பரவிக்கிடக்கும் தடங்கள்
மென்மையாய் புதியதாய்
பாவங்களற்றதாய்
பூவினொத்ததாய்.

Share

யாரோ ஒருவனின் சவ ஊர்வலம் – கவிதை

யாரோ ஒருவனின் சவ ஊர்வலம்
நான்கைந்து பேர்களுடன்
மெல்ல நகர்கிறது
அந்த நிமிடத்தைப் போல.

அந்த யாரோவுக்குத் தூவப்படும் மலர்களுள் சில
என் மீது விழ எனது ஆசாரம் விழித்துக்கொள்கிறது,
எவ்வளவு ஒதுங்கிக்கொண்டும்
விலகவில்லை மலர்களின் வாசனை.

வெயிலின் உக்கிரம், வியர்வை;
இடுக்காட்டின் முன் பாட்டாசு.

கிட்டத்தட்ட அனாதை என்றார்கள்;
தெருவில் இரு ஓரத்திலும்
காத்திருந்தது பெருங்கூட்டம்.

ஊர்வலத்தின் பின் நீளும்
வண்டிகளின் சக்கரங்களில்
நசுங்கிக்கிடக்கும் மலர்களுள்
அவனுக்குப் பிடித்ததெதுவோ.

சீக்கிரம் சவ வண்டி கடந்துபோக
காத்திருக்கும் நீண்ட வரிசையில்,
அவனின் சாதனைகள் பற்றிய
யோசனையுடன்
அடுத்த நொடியில்
அவனை மறக்கப்போகும்
நான்.

Share

வேட்டையாடு விளையாடு – திரைப்பார்வை

இதற்கு விமர்சனம் எழுதுவது நேரவிரயம் என்று தெரிந்தும் அதைச் செய்கிறேன்! இறை என்னை மன்னிக்க. 🙂

* கமலுக்கு நடிக்க மறந்துவிட்டது. சிரிப்பது, பேசுவது, சண்டைக் காட்சிகள் என எல்லாவற்றிலும் ஒரு செயற்கைத்தன்மை. யதார்த்தம் என்றால் என்ன என்பதை அவர் மீண்டும் கண்டடைவது நலம்.

* கதையே இல்லை என்பது இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம்!

* பின்னணி இசை தேவையில்லாமல் பல இடங்களில் ஒலிக்கிறது. தேவையற்ற இடங்களில் மௌனமே சிறந்த இசை. இதை மறந்துவிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ். படம் முழுக்க இரைச்சலோடு பின்னணி இசை. இருந்தாலும் இந்தக் கேடுகெட்ட படத்திற்கு தேவைக்கு அதிகமாகவே செய்திருக்கிறார் ஹாரிஸ். பாடல்கள் நன்று.

* காக்க காக்க-வில் வரும் எடிட்டிங் உத்திகள் இந்தப் படம் முழுவதும் இடம்பெற்றுத் தலைவலியை உண்டாக்குகின்றன. உத்திகளை எத்தனைத்தூரம் பயன்படுத்த வேண்டுமென்பதைக் கௌதம் புரிந்துகொள்ளவேண்டும்.

* கமல் இனி பரீக்ஷார்த்தத் திரைப்படங்களில் மட்டும் நடிப்பது அவருக்கு நல்லது. அவர் அவரைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம். குறைந்தபட்சம் அவர் மீது மிகவும் நம்பிக்கையும் மரியாதையும் வைத்து, அவரது ரசிகர்கள் என்கிற போர்வையில் சிக்காத, நல்ல ரசனையுள்ள மக்களை நினைத்தாவது அவர் இதைச் செய்யவேண்டும்.

* கமல் உடல் பெருத்துவிட்டது. உடல் கமலோடு ஒத்துழைக்கவே இல்லை. குறிப்பாக சண்டைக்காட்சிகளில். நேற்று வந்தவர்கள் எல்லாம் பின்னி எடுத்துக்கொண்டிருக்க, இவர் சிவாஜி ஸ்டைலில் நின்ற இடத்திலிருந்தே அடித்துப் பந்தாடுவது நல்ல காமெடியாக இருக்கிறது. வில்லனைத் துரத்திக்கொண்டு ஓடும் காட்சிகளில் தடுமாறுகிறார்.

* கமல் காக்கிச்சட்டையில் நடந்து வரும் காட்சி மிடுக்கற்றுத் தோற்றமளிக்கிறது. இதில் மட்டும் எப்படி கமல் கச்சிதமாக யதார்த்தத்தைக் கௌவிக்கொண்டார் எனத் தெரியவில்லை. 🙂

* படத்தில் லாஜிக் என்று பார்த்தால் ஒரு மண்ணும் இல்லை. எந்தப் பிணத்தைப் புதைத்து வைத்தாலும் கமல் அரைமணி நேரம் முதல் ஐந்து மணி நேரங்களில் கண்டுபிடித்துவிடுகிறார். சரியான ரீல். ரஜினியின் ஹீரோயிஸத்திற்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் இல்லை. ஆனால் ரஜினிக்கு எடுபடும், கமலுக்குச் சறுக்கும்.

* கமலும் ஜோதிகாவும் நேரம் காலம் தெரியாமல் காதலித்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறார்கள்.

* கமல் படம் முடியும் தருவாயில் திடீரென்று ‘ராகவன் ஆபரேஷன் பிகின்ஸ்’ என்று சொல்லி அதிர்ச்சிக் குண்டைப் போடுகிறார். அடுத்த சீனிலேயே ஜோதிகாவுடன் காதல் வசனம் பேசுகிறார். இதுதான் ஆபரேஷன் ஆஃப் ராகவனா?

* வில்லன்கள் என்ன எழவிற்கு கை விரலை வெட்டித் தொங்க வைக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. படம் பார்ப்பவர்களை மிரட்ட வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாயிருக்கவேண்டும்.

* வில்லன்கள் லூசு மாதிரி வருகிறார்கள் போகிறார்கள். கடைசியில் போயும் சேர்கிறார்கள்.

* ஜோதிகா ஒரு பாடலில் திடீரென்று ஒரு குழந்தையுடன் வருகிறார். இது பற்றி முன்பே படத்தில் வசனம் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

(இன்னொரு முறை பார்த்தால் தெரியும். ஆனால் இந்தக் கொடுமையை இன்னொரு முறை அனுபவிக்க முடியுமா?) அட இதுவேறயா என்கிற எண்ணம் எழுகிறது.

* படத்தின் முதல் காட்சி பிரத்யேகமாக குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. அந்த ஒரு காட்சியிலேயே இந்தப் படம் இப்படித்தான் அமையும் என்று முடிவுக்கு வந்துவிடலாம். அப்படி ஒரு காட்சி! என் கண்ணைப் பிடுங்கிக்கோ என்று சொல்லி சட்டென சென்னைத் தமிழ் பேசி, மறைமுகமாக, படம் பார்க்க வந்திருப்பவர்களை “இப்பமே ஓடிடுங்கப்பா” என்று மிரட்டுகிறார் கமல். இதே போல் அமைந்து எனது வயிற்றெரிச்சலைக் கட்டிக்கொண்ட இன்னொரு படம் ‘வால்டர் வெற்றிவேல்.’

* வசனங்கள் சில இடங்களில் பளிச்சென்றும் பல இடங்களில் சொதப்பலாயும் அமைந்துள்ளன. கமல் ஒரு காவல் துறை அதிகாரியைப் பார்த்து அவரால்தான் இந்தப் பிரச்சினையே ஆரம்பித்தது என்கிறார். அடுத்த நொடியில், இருந்தாலும் அவன் ஏற்கனவே பல கொலைகள் செய்திருக்கிறான் என்கிறார். இப்படியாக நிறைய உளறல்கள், நிறையக் குளறுபடிகள் படம் முழுக்க இலவசம்.

* பம்மல் சம்பந்தம்ம, வசூல் ராஜா, மும்பை எக்ஸ்பிரஸ் என்கிற வரிசையில் இன்னொரு கமல் (பாடாவதி) படம். உண்மையான கமல் படம் எப்போது வரும் என்று தெரியவில்லை. நம்பிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது என்பதுதான் முக்கியமாக வருத்தப்படவேண்டிய விஷயமாக இருக்கிறது.

* 29 மதிப்பெண்கள்.

பஞ்ச்: இந்தப் படம் வராமலேயே இருந்திருக்கலாம்.

Share

சொக்கலிங்கத்தின் மரணம் – சிறுகதை

[1]

சொக்கலிங்கத்தின் நினைவுகள் தாறுமாறாக அறுத்துக்கொண்டு ஓடின. அவருக்குள் ஏதேதோ எண்ணங்கள் தொடர்ந்து எழுவதும் அதைத் தொடர்ந்து கலக்கமும் எழுந்தன. அவர் செத்துப்போவார் என அவரது சொந்தங்கள் அவர் வீட்டுத் திண்ணையிலும் எதிர் வீட்டுத் திண்ணையிலுமாகக் காத்துக்கிடந்தன. போயிட்டியே என்று கதற ஆயத்தப்படுத்திக்கொண்டு சொக்கலிங்கத்தின் தலைமாட்டில் உட்கார்ந்திருந்தாள் ஒருத்தி. பெரு மழையில் கரைந்து போய் வெளுத்துவிட்ட, கரியில் வரையப்பட்டிருந்த ஸ்டம்ப் கோடுகளைப் பார்த்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட முடியாத சோகத்தில் அந்த வளைவின் சிறுவர்கள் கன்னத்தைக் கையால் தாங்கிக்கொண்டு சினிமா கதை பேசிக்கொண்டிருந்தார்கள். மழையின் தீவிரம் கூடிக்கொண்டே இருந்தது. சொக்கலிங்கம் சீக்கிரம் செத்துப்போனால் பெரு மழைக்கு முன் எரித்துவிடலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள் சொந்தக்காரர்கள். சொக்கலிங்கம் சாவதாய் இல்லை. பையன் பாலூத்தினா செத்துடுவான் என்றார் வெள்ளைத் துண்டு போட்ட ஒருவர். ‘யாரு சம்முவமா? நல்லா ஊத்துவாம்ல பாலு!’ என்றார் இன்னொருவர். அவர் கிருதாவைப் பெரிதாக வைத்திருந்தார். ‘என்னதாம் கொலைப்பகையா இருக்கட்டும்வே. அப்பனுக்குப் பையன் பாலூத்தவேணாமா’ என்றார் வெள்ளைத் துண்டு. ‘ஒம் பையன் ஒனக்கு பாலூத்துவானா யோசிவே’ என்று மனதுக்குள் வைதது கிருதா.

போயிட்டியே என்று பெருங்குரல் ஒன்று கேட்டது.

அதுவரை சலம்பிக்கொண்டிருந்த ஊரு சனங்களின் பேச்சு சட்டென இரண்டொரு நொடிகள் அடங்கி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. திண்ணையில் உட்கார்ந்திருந்த சொன்ந்தக்காரர்கள் சொக்கலிங்கத்தின் வீட்டுக்குள் போனார்கள். தனது குரலின் எட்டுக் கட்டையை நினைத்துச் சந்தோஷப்பட்டுக்கொண்டே அழுதுகொண்டிருந்தாள் அந்தப் பெண். மாடி வீட்டிலிருந்து எட்டிப் பார்த்தான் சண்முகம். ‘அதாம் உசுரு போயிட்டில்லவே, கீழ இறங்கி வாரும்’ என்றது வெள்ளைத் துண்டு. ‘செத்த இருங்க வாறேன் அண்ணாச்சி’ என்று சொல்லி, வீட்டுக்குள் சென்று, குத்தாலத் துண்டு ஒன்றைத் தோளில் போட்டுக்கொண்டு, கைலியை மடித்துக்கொண்டே கீழே இறங்கினான் சண்முகம். ‘அப்பஞ் சாவுக்கு இவ்வளவு சாவாசமா வாற மனுசாளும் ஊர்ல இருக்கானுவடே’ என்று முணுமுணுத்தது கிருதா. மழை நின்றாலும் வளைவில் கிரிக்கெட் விளையாடமுடியாது என அலுத்துக்கொண்டன சிறுவர் கூட்டம். ‘அந்தாளு உசுரோட இருக்கிறப்பயே விளையாட விடமாட்டான். செத்தும் களுத்தறுக்கான் பாரு, மூதி’ என்றான் ஒருவன். பந்து தனது எல்லைக்குள் வந்தால், உடனே ஓடிச் சென்று எடுத்து வைத்துக்கொள்வார் சொக்கலிங்கம். அப்படி எடுக்குமுன் பந்தை எடுத்துவிட ஓடி வருவார்கள் சிறுவர்கள். பந்து சொக்கலிங்கத்தின் கையில் சிக்கிவிட்டால் அது திரும்ப வராது. யாராவது சிறுவர்கள் அவரிடம் பந்தைக் கேட்கப் போனால் தாறுமாறாக வைவார். குடும்பத்தை மட்டுமில்லாமல் சிறுவனின் பரம்பரையையே வைவார். ரோட்ல போய் ஆடுங்கல, கிரவுண்டுல போயி ஆடுங்கல, உங்க வீட்டு அடுப்பாங்கறையில ஆடுங்கல என பல ‘யோசனைகளை’ச் சொல்வாரே ஒழிய பந்தைத் தரமாட்டார். சுவத்துல கரியால கோடு போட்டுக் கோடு போட்டு நாசப்படுத்துறீங்களேல, படிச்சவனுளா என்பார். மறுநாள் பந்து இரண்டாக வாயைப் பிளந்துகொண்டு வெளியில் கிடக்கும். ‘ரெண்டு மூணு நாளு விளையாடாட்டியும் பரவாயில்ல, ஆளு ஒளிஞ்சான் பாரு, அதுக்கே திருச்செந்தூருக்கு மொட்டை போடணும்ல’ என்றான் இன்னொருவன்.

சண்முகம் செத்துக்கிடந்த தன் அப்பாவைத் தூரத்திலிருந்து பார்த்தான். உடனே வெளியில் வந்தான். ‘ஆகவேண்டியதைப் பாக்கணும்’ என்றார் வெள்ளை துண்டுக்காரர். ‘ம்ம்’ என்றான் சண்முகம். மேலிருந்து சண்முகத்தின் மகன் இறங்கி வந்தான். சண்முகம் பார்வையாலேயே அவனை மேலேயே இருக்கச் சொன்னான். ‘தாத்தாவ பாக்கணும்னு வாரான், அவனை வெரட்டாதவே, நீ போல’ என்றார் வெள்ளைத் துண்டுக்காரார். மிகுந்த ஆர்வத்தோடும் கலக்கத்தோடும் காலை உள்ளே வைத்தான் மணி.

[2]

தாத்தாவின் மேல் அமர்ந்திருந்த ஈயைப் பார்த்துக்கொண்டிருந்தான் மணி. அந்த ஈ ஆடாமல் அசையாமல் வெகுநேரம் அவர் மேலே அமர்ந்திருந்தது. யாரோ ஒருவர் இறந்தவருக்கு மாலை போட்டு விட்டுப் போனார். ஈ தன் இடத்தை விட்டுக் கொஞ்சம் அணங்கியது. நேராகப் பறந்து மேலேயிருந்த பரணில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பந்திப் பாயில் அமர்ந்தது. அங்கிருந்து சிறிது நேரத்திற்கெல்லாம் பக்கத்தில் இருந்த பெட்டியில் தாவி அமர்ந்தது. சட்டென்று பறந்து, அந்த அறையை இரண்டு மூன்று முறை சுற்றிவிட்டு ஜன்னல் வழியே வெளியேறியது. மணி வீட்டின் பின்புறம் வழியே சந்துக்குள் நுழைந்து ஜன்னலின் வெளிப்புறம் வழியாகப் பார்த்தான். ஜன்னலின் வழியாகப் பார்த்தபோது தாத்தாவின் முகம் விகாரமாகத் தோன்றியது. ஈயைத் தேடினான். அந்த இடத்தில் இருந்த ஒரே ஒரு ஈ அந்த ஈயாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். தனக்கு ஏதோ சொல்ல அந்த ஈயிடம் ஏதோ இருப்பதாகப்பட்டது அவனுக்கு.

உள்ளுக்குள் பலமாகப் பேசுக்குரல்கள் எழுந்தன. சட்டுன்னு தூக்கணும் என்றது வெள்ளைத்துண்டு. சண்முகம் கத்தினான். அவர யாருன்னு நினைச்சிட்டீங்க அண்ணாச்சி, சாவுற வரைக்கும் கெத்தோட இருந்த மனுஷன் என்றான். கிருதா முகத்தை வேறு பக்கம் திருப்பிச் சிரித்தது. எல்லாருக்கும் சொல்லி, எல்லாரும் வந்து பார்த்து வாக்கரிசி போட்ட பின்னாடிதான் எடுக்கணும்னு என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான் சண்முகம்.

மணி ஈயைப் பார்த்துக்கொண்டே நின்றான். அந்தச் சந்தில் நின்று ஈயைப் பார்த்துக்கொண்டிருப்பது அவனுக்கு விநோதமாகப்பட்டது. ஏதோ ஒரு நாளில் தாத்தாவும் இதே சந்தில் நின்று எதையோ விநோதமாகப் பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம். ஒரு மனிதனின் சாவுக்குப் பின் அவனது நினைவுகள் அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் என்று தீவிரமாக நம்பினான் மணி. இதை நினைத்துப் பல தினங்கள் அவன் யோசித்திருக்கிறான். அதன் ஒரு தொடர்பே அந்த ஈ. அவனுக்குள் சந்தேகமே இல்லை. ஈயைத் தேடினான். அங்கு அந்த ஈ இல்லை. மீண்டும் பின்கட்டு வழியாக வீட்டுக்குள் வந்தான். தாத்தாவின் மீது ஈக்கள் உட்கார்ந்திருந்தன. தாத்தாவுக்குத் தன்னிடம் சொல்ல பல விஷயங்கள் உள்ளன என்றும் அவர் நிச்சயம் சொல்லுவார் என்றும் உறுதியாக நம்பினான் மணி.

[3]

விடாமல் மழை கொட்டிக்கொண்டிருந்தது. இப்படி ஒரு மழையைத் தன் வாழ்நாளில் பார்த்ததே இல்லை என்று உறுதியாகச் சொன்னார் ஒருவர். இழவு வீட்டுக்கு வந்தவர்களில் வயதில் மூத்தவர் அவர். இவன் செத்தா இவனுக்கு யாரு பாலூத்துவா என்று யோசித்துக்கொண்டிருந்தது கிருதா. தான் சொல்லும்போதே பிணத்தைத் தூக்கியிருந்தால் எல்லாருக்கும் சௌகரியமாகப் போயிருக்கும் என்று சொல்லிச் சொல்லிப் புலம்பியது வெள்ளைத் துண்டு. அவர் சண்முகத்தைக் குறை சொல்லச் சொல்லச் சண்முகத்துக்கு அவன் அப்பாவின் மீது பாசம் கூடிக்கொண்டே போனது. “அண்ணாச்சி, அவர் என் அப்பா அண்ணாச்சி” – மீண்டும் மீண்டும் வெவ்வேறு ஏற்ற இறக்கங்களில் சொன்னான். சண்முகத்தின் பொண்டாட்டி, ஆட்டும்னு எடுக்கப் பாருங்க, சோலி நிறையக் கெடக்கு என்றாள். சண்முகம், “அவர் என் அப்பாட்டீ” என்றான். ஊர்ல மத்தவன்லாம் அப்பா இல்லாம பொறந்துட்டானுவளே என்று ரொம்ப வருத்தப்பட்டுக்கொண்டது கிருதா.

மழையின் தீவிரம் சண்முகத்துக்கும் கொஞ்சம் கலவரத்தைக் கொடுத்தது. இருந்தாலும் அவன் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. “நாறிப் போகணும்னு எழுதியிருந்தா நாறட்டும். என்னா பாடு படுத்தினான் பாவி” என்று நினைத்துக்கொண்டான். தாமிரபரணியில் வெள்ள அபாயம் இருப்பதாக ரேடியோவில் சொன்னதாகச் சொல்லிவிட்டுப் போனான் சொக்கன். அவனைத்தான் வீடு வீடாகச் சென்று தகவல் சொல்ல ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் சென்று “பிச்சம்மா காம்பவுண்டு, சம்பந்தர் தெரு பெரியவுக சொக்கலிங்கம் பிள்ளை இன்னைக்குக் காலேல தவறிட்டாக. நாளைக்குக் காலேல எடுப்பாக. வந்துருங்க. சங்கத்துலேர்ந்து சொன்ன தகவலுங்கோய்” என்று கத்திவிட்டுப் போனான். துண்டை தலையில் கட்டிக்கொண்டு, லொடுக்கு விழுந்த கன்னத்தோடு அவன் கத்துவதைப் பார்த்து வீட்டுச் சிறுவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். சில பெரிசுகள், யாருடே போனது, சரியாச் சொல்லு என்று கேட்டுச் சேதியைத் தெரிந்துகொள்வார்கள்.

வெள்ளம் வரப்போவுது என்று சாவு வீடே பேசிக்கொண்டிருந்தது.

மணி வீட்டுக்குப் பின்னால் இருக்கும் ஸ்டோர் ரூமுக்குள் நுழைந்தான். தாத்தா வெகு நேரம் அங்கிருந்த பெட்டியை நோண்டிக்கொண்டிருப்பதையும் அங்கேயே அமைதியாய் உட்கார்ந்திருப்பதையும் அவன் நிறையத் தடவைகள் பார்த்திருக்கிறான். தாத்தாவின் மீதிருந்த ஒரு ஈ அந்த அறைக்குள் பறந்துசென்றது. தாத்தாவே கூட்டிச் செல்வதாக நினைத்துக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்திருந்தான். தாத்தாவின் மீது அவனுக்கு அவ்வளவு பாசம் இருந்ததா என்பது பற்றியும் அவனுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஒரு சாவு அவனைக் கொஞ்சம் அசைக்கிறதோ என்றும் தோன்றியது. உணர்வுகளுக்குக் கட்டுப்படுவது அவனுக்குப் பிடித்திருந்தது. அந்த வயதில் உணர்வுகளுக்குக் கட்டுப்படுவதே அந்த வயதுக்கு செய்யும் மரியாதை என்பதைப் பல இரவுகளில் அவன் கண்டடைந்திருக்கிறான். சாவும் கூட ஒரு உணர்வு ரீதியால் உந்தப்பட்ட விஷயமாக இருப்பதில் அவனுக்குக் கொஞ்சம் உடன்பாடு வந்துவிட்டிருந்தது. மழை நீர் வடியும் வரை தாத்தாவைத் தூக்கமாட்டார்கள் என்பது அவனுக்கு நிம்மதியாய் இருந்தது. அதுவரை அவன் என்ன செய்கிறான் என்று யார் பார்க்கப்போகிறார்கள்? ஒரு ஈ அவன் காதருகில் வந்து சத்தமெழுப்பிச் சென்றது. மணி சிரித்துக்கொண்டான்.

வெள்ள நீர் தண்டவாளம் வரையில் வந்துவிட்டதாகப் பேசிக்கொண்டார்கள். தண்ணி வடியர வரைக்கும் தூக்கமுடியாதுடே என்றார் வெள்ளைத்துண்டு. என்ன செய்ய அண்ணாச்சி என்றான் சண்முகம். இப்ப கேளு என்றார் கிருதா. சண்முகம் கிருதாவை முறைத்தான். கருப்பந்துறைக்குத் தண்டவாளத்தைத் தாண்டி கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் தூரம் போகவேண்டும். தண்டவாளத்திலேயே தண்ணி என்றால் கருப்பந்துறை முங்கியிருக்கும். சண்முகத்துக்கு ஒரு நடை போய் பார்த்துவிட்டு வரலாமா என்று தோன்றியது. “பொணத்தைப் போட்டு நாறடிக்கணும்னே வேணும்னே சொன்னாலும் சொல்லுவானுவோ” என்று நினைத்துக்கொண்டு வெளியில் போக நடையைக் கட்டினான்.

வளைவிலிருந்து வெளிப்பட்ட அவனைப் பார்த்துப் பதறினாள் பிரமு கிழவி. அப்பன் செத்துக் கெடக்கான், வெளிய போகக்கூடாதுடே என்று சொல்லி அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள். சண்முகத்துக்கு எரிச்சலாக இருந்தது. அப்பாவின் வைப்பாட்டிகள் என்கிற சண்முகத்தின் பட்டியலில் பிரமு கிழவியும் இருந்தாள்.

இப்படியே இரவு ஆகிவிட்டிருந்தது.

மணி அந்த அறைக்குள் மூழ்கிவிட்டிருந்தான். தாத்தாவின் பல பரிமாணங்கள் அவனுக்கு இன்பத்தையும், ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும், காமத்தையும் ஒருசேரத் தூண்டியிருந்தன. தாத்தாவின் வாழ்க்கையே அந்த அறைக்குள் புதைந்து கிடப்பதாகப்பட்டது அவனுக்கு. அங்கிருந்த பெட்டிகள் முழுவதிலும் தாத்தா எழுதிப் போட்டிருந்த கத்தைக் கத்தையான காகிதங்கள் அவனுக்குப் பல விஷயங்களைச் சொன்னது. எதுவும் ஓர் ஒழுங்கான காலவரிசையில் இல்லை. அவன் கையில் கிடைத்த தாளையெல்லாம் பிடித்திழுத்துப் படித்தான்.

[4]

மழையின் உக்கிரம் சற்றும் குறையவில்லை. தொடர்ந்து முப்பத்தாறு மணிநேரமாக மழை பெய்துகொண்டிருந்தது. ஊரெங்கும் மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. பிணத்தைச் சுற்றி நான்கைந்து பேர் மட்டுமே இருந்தார்கள். கிருதா அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருந்தது. எரிந்துகொண்டிருந்த விளக்கில் சண்முகத்தில் எரிச்சலும் அவன் பொண்டாட்டியும் எரிச்சலும் அப்பட்டமாகத் தெரிந்தது. ‘செத்தும் கொல்லுதானப்பா’ என்று நினைத்துக்கொண்டான் சண்முகம். தன் கணவனின் வறட்டு ஜம்பத்தால் இப்படி நாறும்படி ஆகிவிட்டதே என்று வயிறு எறிந்துகொண்டிருந்தாள் சண்முகத்தின் பொண்டாட்டி. மணி கையில் கிடைத்த சில முக்கியமான பக்கங்களை எடுத்துக்கொண்டு அவன் வீட்டிற்குள் ஓடினான். மெழுகுவர்த்தியை வைத்து ஒவ்வொன்றாகப் படித்துக்கொண்டிருந்தான். வெள்ளம் வாகையடி முக்குத் தாண்டி டவுணுக்குள் புகுந்து சம்பந்தர் தெருவைத் தொட்டுக்கொண்டிருந்தது. வெள்ளைத்துண்டு வந்து, “பொணத்தை இங்க வெச்சிக்கிட்டு இருந்தா வேலைக்காகாது. ஐஸ் வாங்கி அதுல படுக்க வெக்கணும். இங்கனயே வெச்சிருக்கமுடியாது. இப்பமே நாத்தம் அடிக்க ஆரம்பிச்சிட்டு. வெள்ளத்தண்ணி இங்கயும் வந்துட்டுன்னா நிலைமை ரொம்ப மோசமாயிடும். பேசாம மாடில உன் வீட்டுக்குக் கொண்டு போயிடலாம். எப்படியும் இன்னைக்கு ராத்திரியில தண்ணி வடிய ஆரம்பிச்சிடும். நாளைக்குக் காலங்காத்தால தூக்கிடலாம்” என்றார். எழு வருசம் மாடிக்கு வராத தன் அப்பனை இப்போது மாடிக்குக் கொண்டுபோகவேண்டுமா என்று யோசித்தான் சண்முகம்.

[5]

தாத்தாவின் எழுத்துகள் மணியை என்னவோ செய்தது.

சொக்கலிங்கம்-1

……….ளின் சேலை காத்துலாடி எம்மேல பட்டது. அதுக்கு மேல சும்மா இருக்க முடியலை. காலேல குடிச்சிருந்த தென்னங்கள்ளு உடம்பை முறுக்கேறி வெச்சிருந்தது. காலேல ஆத்துல குளிச்சப்பையும் அவ ஒடம்பைத்தான் நினைச்சிக்கிட்டுக் கெடந்தேன். எண்ணெய் தேச்ச மாதிரி வேர்வை வழிஞ்சு கெடக்கற கருப்பு இடுப்புலத்தான் எம்பார்வை கெடந்தது. அவளுக்குந் தெரியும் எம்மனசு. ஒடனே ஒத்துக்கப்பிடாதுன்னு நினைச்சாளா கருப்பி? இருக்கும். எங் காந்திமதியில்லா. ஒலகத்துல ஒண்ணும் வேணாமின்னு நினைச்சேன். ஜன்னலுக்கு வெளிய நின்னுக்கிட்டு படுக்கையறைல துணி மாத்திக்கிட்டு இருந்த அவளைப் பாத்தேன். உள்ளவான்னு சொன்னா. நான் உள்ள போனேன். கூளு குடிச்ச ஒடம்போட ருசி, தெனவு எல்லாங் காமிச்சா அன்னைக்கு. (சில வரிகள் அடிக்கப்பட்டிருந்தன. மணி அதை ஊன்றிப் படித்துப் பார்த்தான். ஒன்றும் பிடிபடவில்லை.) ….தைப் படிப்பாங்கன்னு தோணுது. படிக்கட்டும். எல்லா மனுசனுக்குள்ளும் இருக்கிறதைத்தான் எழுதிருக்கேன். நான் அன்னைக்கு அப்…..

எந்த வருடம் என்பதைச் சொக்கலிங்கம் எழுதி வைக்கவில்லை.

சொக்கலிங்கம்-2

காந்திமதி போயிட்டா
பொலிவழிஞ்சு போச்சு திருநெல்வேலி
ஆத்துல தண்ணி நின்னுருக்கும்
நெல்லையப்பனுக்குத்தான் காலம் வாய்க்கலை
.
.
.
.
.
.
.
நெல்லையப்பனுக்குக் காலம் வாய்க்கல்லே…!

(1997)

சொக்கலிங்கம்-3

….ன்னு சொன்னேன். மவனா இவன்? நாய் விளுந்த மாதிரி விளுந்தான். நீரு எனக்கு என்ன மயித்த செஞ்சீருங்கான். அப்பன் புள்ளைக்குப் பண்ணதை நியாபகம் வெச்சுச் சொல்லமுடியுமா கோட்டிப்பலேன்னேன். நீரு கோட்டிவே, ஒமக்குக் கோட்டிவேன்னான். அந்தக் கருப்பச்சி கூட நீரு ஆடின ஆடமெல்லாந் தெரியாதான்னான். நா மறச்சி வெச்சி ஆடலியேன்னேன். காறித்துப்பிட்டுப் போனான். எனக்கு ரத்தம் ஓடிக்கிட்டுக் கெடந்த காலத்துல முன்னாடி நிக்கப் பேலுவான் இந்தச் சண்முவம். இன்னைக்குக் காறித்துப்புதான். அவஞ் சந்தேகப்பட்ட மாதிரியே அந்தக் கருப்பிக்கு மாடியை எழுதி வெச்சி உயிலு மாத்தினேன். அன்னைக்கு வரைக்கு நா நெனைக்கல்லே அப்பிடி. அவஞ் சொன்ன அன்னைக்குத்தான் செஞ்சேன். அவளுக்கு ஒரு கடப்பாடு பாக்கி கெடக்கு. வேணுங்கிறப்பெல்லாம் படுத்தா தாயி. (மணி பக்கத்தைத் திருப்பினான். பின் பக்கத்தில் தொடர்ச்சி இருந்தது.)

எப்படி தெரிஞ்சதோ சம்முவத்துக்கு. அதுவரைக்கும் வேம்படித்தெருவுல பொண்டாட்டி புள்ளையோட தனி வீட்டுல கெடந்தவன், எவ வாரான்னு பாக்கேன் மாடிக்கு, எழுதி வெச்சிட்டா கொடுத்துப்பிடுவோமா, பாக்கலாம், அவ மாதிரி கண்டவனுக்குப் பெக்கலை என் அம்மான்னு சொல்லி மாடிக்கு ஜாகையை மாத்திக்கிட்டான். அவனை வெரட்ட எனக்கு முடியலை. ரத்தம் சுண்டிப்போச்சு. ஆடி ஓஞ்சிட்டேன். முன்ன மாதிரி இருந்தா அவன் மொகரக்கட்டையை ஒடச்சி வெளிய அனுப்பியிருப்பேன். திடீர்னு ஒரு நாள்…..

(தொடர்ச்சியான பக்கத்தைக் காணவில்லை. இந்தத் தாளின் கிடைமட்டத்தில் 1991 என்று எழுதப்பட்டிருந்தது.)

சொக்கலிங்கம்-4

ஹே காற்றே
என்னைச் சுழன்றடிக்கும் காற்றே
வேகமாய் வீசும் காற்றே
புழுதி வாரி இறைக்கும் காற்றே
என்னைச் சுற்றாதே
நானென்ன நெல்லையப்பனா?
வேம்படியில் கருப்புக் காந்திமதி இருக்கிறாள்
வேண்டுமானால் அவளைச் சுற்று
ஹே காற்றே
காந்திமதியின் சாகசங்கள் உனக்குத் தெரியுமா?
அவள் கருப்புக் கடவுள், அறி!
அவளே காந்திமதி, அறி!
அவள் வீட்டுக்குள்ளே வர
வீடெங்கும் பரவுகிறான்
உன் உறவுக்காரத் தென்றல் பையன்.
எங்கோ மொய்த்துக்கொண்டிருக்கும் ஈக்கள்
அவளையும் என்னையும் மாறி மாறி மொய்க்கின்றன
ஹே காற்றே…

(கவிதை முயற்சி என்று தலைப்பிட்டு, 1979-இல் சொக்கலிங்கம் எழுதியது. மணிக்கு ஆச்சரியமாக இருந்தது.)

சொக்கலிங்கம்-5

….னோ அவனுக்கு என்கிட்ட ராஜவல்லிபுரத்துல நெலம் கெடக்குன்னு. வூட்டுக்கு வந்து என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளுங்கான் சம்பந்தம் சம்பந்தமில்லாம. சம்முவத்தோட பொண்டாட்டி அந்த மூளிக்களுதை கூட நிக்கா. வீட்டுக்குள்ள காலை வைக்கும்போது கால எடுட்டீன்னு கத்தலாமின்னு நினைச்சேன். கத்தலை. நா அவளை ஒரு மாதிரி பாக்கேன்னு சம்முவத்துக்கிட்ட சொல்லி வெச்ச நாயி வீட்டுக்குள்ள கால வைக்கலாமா? சம்முவத்தைப் பாத்துக் கத்தினேன். ரோசங் கெட்ட நாயே, மாடியக் காலி பண்ணிட்டுப் போல, அது காந்திமதிக்குள்ள வூடுன்னேன். அவனுங் கத்தினான். எவ காந்திமதி, கண்ட அவுசாரிக்கு காந்திமதி பேரச் சொல்லுதியே. காந்திமதியம்மாவே ஒன்னக் கேப்பா, நா மாடியக் காலி பண்ணுவேன்னு நினைக்காதீரும்வேன்னான். இளுத்துக்கிட்டு கிடக்கும்போது வருவீருவேன்னான். எலேய், நாஞ் செத்தாலும் ஒங்கிட்ட வரமாட்டேம்ல, ரோசக்காரம்ல. தொங்கினாலும் தொங்குவேம்ல. புளுத்துச் செத்தாலும் சாவேம்ல நீ இருக்கற வரைக்கும் மாடிய மிதிக்கமாட்டேம்லனு திட்டி அனுப்பினேன். அன்னைக்கு பூரா பொலம்பிக்கிட்டே இருக்க வெச்சிட்டான் இந்தப் பய. கண்ணதாசன் பாடினானே, சரியாத்தான் பாடினான். புள்ள……

(வருடம் 1996)

[6]

மழை எல்லார் வீட்டுக்குள்ளும் புகுந்தது. கீழ் வீட்டுக்காரர்கள் மாடிக்கு ஓடினார்கள். ஊரே அல்லோலப்பட்டது. குழந்தைகள் வீட்டின் கீழே சூழ்ந்திருக்கும் முழங்கால் அளவுத் தண்ணீரில் குதித்தாடினார்கள். இப்படி ஒரு மழையும் வெள்ளமும் 88 வருடங்களுக்கு முன்பொருமுறை வந்ததாக தினசரிகள் அறிவித்தன. பெரியவர் ஒருவர் அப்போது தான் பட்ட கஷ்டங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஜங்ஷனில் கவிதா ஷாப்பிங் சென்டர் முங்கிவிட்டதாகவும் பரணி ஹோட்டலில் இரண்டாவது தளத்தில் தண்ணீர் புகுந்துவிட்டதாகவும் சுலோச்சனா முதலியார் பாலம் எங்கே இருக்கிறதென்ற சுவடே இல்லையென்றும் பேசிக்கொண்டார்கள். சம்பந்தர் தெருவில் சொக்கலிங்கம் செத்துக்கிடந்த வளைவில் கீழ் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. கணுக்கால் அளவுக்குத் தண்ணீர் இருந்தது. அருகிலிருந்த ஒரு மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்திருந்த ஒரு தூக்குப் படுக்கையில் சொக்கலிங்கத்தைக் கிடத்தி ஆறேழு பேர் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். சண்முகத்தின் மனைவி தலையில் அடித்துக்கொண்டாள். சண்முகம் மேலே கொண்டு போயிடலாம் என்றான். அனைவரும் வேற வழியே இல்லை என்றார்கள். வளைவில் இருக்கும் எல்லாரும் அதிசயமாகப் பார்த்தார்கள். சொக்கலிங்கத்தின் வாயிலிருந்து தண்ணீர் வெகுவாகக் கசிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தியது. கடுமையாக ஈக்கள் மொய்த்தன. முகம் மோசமாக விகாரமடைந்திருந்தது.

கஷ்டப்பட்டு வீட்டுக்குள் இருந்து வெளியில் கொண்டு வந்தார்கள்.

மாடிக்குச் செல்லும் படிகள் மிகவும் குறுகலாக இருந்தன.

“நேரா அப்படியே கொண்டு போக முடியாதப்பே”

“கொஞ்சம் சரிச்சிக்க வேண்டியதான்”

“படுக்கையோட கட்டிக்கலாமா?”

“என்னத்தையோ சட்டுன்னு செஞ்சித் தொலைங்க. செத்தும் உயிர வாங்குதான்யா மனுஷன்!”

“தண்ணீல நின்னு நின்னு காலக் கடுக்குதுடே. சட்டுன்னு மேல கொண்டு போவணும்”

“கயறு கட்டித் தூக்கிடலாமா?”

“தண்ணி அடிச்சிட்டுப் பேசுற நாய் மண்டைல போடுங்கேன்”

“சரிடே, ஆளாளுக்குப் பேசாதீங்க. எல்லாரும் படிக்கு நேரா வெச்சிக்கிட்டு நில்லுங்க. கட்டல்லாம் வேணாம். நா சொல்லச் சொல்ல சரிங்க. அப்படியே ஒருக்களிச்சுக் கொண்டு போயிடலாம்”

எல்லாரும் சொக்கலிங்கத்தை அந்தப் படுக்கையில் வைத்து சுமந்துகொண்டு படிக்கு நேரே நின்றார்கள். மெல்ல இரண்டு படி ஏற்றினார்கள். மாடிப்படியின் பக்கச் சுவர்களில் படுக்கை இடித்தது.

“எவனாவது ஈயை விரட்டுங்கப்பா. மொவத்துல வந்து அப்புது”

“லேசா சரிங்கப்பா… லேசா… இன்னும் கொஞ்சம்…. சண்முகம் நீதான் மேல நிக்க. கவனமா இரு. மெல்ல மெல்ல சரி.. இன்னும் கொஞ்சம்…”

கீழே இருந்தவன் கொஞ்சம் வேகமாகச் சரித்துவிட்டான். சண்முகத்தின் கை சுவற்றில் இடித்தது. ஐயோ என்று கையை உதறினான். அவன் பக்கம் சட்டெனக் கீழே சரிந்தது. கீழிருந்தவன், “தாயோளி கெடுத்தான்யா காரியத்தை” என்றான். உருட்டி விட்ட மாதிரி பிணம் மாடிப்படியில் விழுந்தது. சொக்கலிங்கத்தின் வாய் படியில் பலமாக இடித்தது. கொளுக்கென ஒரு குடம் திரவம் கொட்டி படிகளில் வழிந்தது. பிணமும் கீழே சரிந்தது. கீழிருந்தவர்கள் அய்யரவுடன் ஐயோ என்று சொல்லிக்கொண்டு காலைத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். சொக்கலிங்கத்தின் உடல் கடைசி இரண்டு படிகளில் சரிந்து கீழே பரவியிருந்த நீரில் அமிழ்ந்தது. தாமிரபரணியின் நீர் அவன் மேலே ஓடியது. அவனது முகம் விகாரமாக வானத்தை விறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது. நீர் மூழ்கடிக்காத இடங்களில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன.

[முற்றும்]

தேன்கூடு போட்டிக்கான ஆக்கம்.

Share