மூன்று கவிதைகள்

1.இன்றைய பொழுது

அணிலை வரைய தேடியெடுத்த
வெள்ளைக் காகிதங்களில்
மிச்சமிருக்கின்றன சில கோடுகள் மட்டும்

என் விருப்பப் பாட்டு
அறையெங்கும்
வெறும் சொல்லாக மிஞ்சிக் கிடக்கிறது

என் கையிலிருந்து விடுதலை பெற்றுச் செல்கிறது
நான் பிடித்து வைத்திருந்த ஒளி
அதற்கான உலகுக்குள்

கடிகாரத்தின் நொடிச் சபதம்
பெரும் ஒலியாகி என் காதுள்
பிரளயத்தை எறிகிறது

ஒரு நொடிக்கும் அடுத்த நொடிக்கும்
இடையேயான சிறுபொழுது
விஸ்வரூபமெடுக்கிறதென்றால் நீங்கள் நம்புவீர்களா?

எரியும் மெழுகுவர்த்தியில் லயித்திருக்கும்
என் கண்களில்
ஆழப் பரவுகிறது அதன் வெளிச்சம்

காற்றிற்கேற்ப அசையும் சுடரின் நிழலில்
தெரிந்தும் மறைந்தும் சுவர்ப்பல்லி

(இடைச்செருகல்: இரவுகளில் உறங்குவன் இவற்றைக் காண்பதில்லை
                              இவற்றைக் காணவென்றே
                              விழித்திருப்பவன் அடையப்போவதுமில்லை
                              அதனதன் போக்கில் அதது)

என்றேனும் ஒரு நாளில்
அணில் கண்டடையும் அதற்கான தாளை
என் கைவந்து சேரும் என் ஒளி
சொற்கூட்டங்கள் ஒன்று சேர உருவெடுக்கும் இசை
இன்று ஏன் இப்படி ஆகிவிட்டது என்பதல்ல
நான் சொல்ல வருவது,
‘சில சமயம்
இப்படியும் ஆகலாம்.’

2.நிமிடங்களிலிருந்து விடுதலை

எனக்கு முன்னே எழுந்துவிடுகிறது என் கடிகாரம்

கனவுகளில்கூட அதன் வீரிடல்
அதன் முட்களை ஏன் ஈட்டியாகக் கண்டேன்?
அதன் பால்கள்
சதா உண்டாக்கிக்கொண்டே இருக்கின்றன
எனக்கான நிமித்தங்களை
கழுத்தில் கயிற்றைக் கட்டி
தூக்கமுடியாத பாரத்தில்
கடிகாரத்தையும் கட்டிவிட்டவனைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
உங்களைப் போலவே
மூன்று முட்களையும் சேர்த்துக் கட்டிவிட்டு
நிறுத்தவேண்டும் உலகின் கடிகாரத்தை.

3.Stamp கவிதை

நான் சொன்னது சாதாரணமாகத்தான்
அவனாய் ஒரு விளக்கம் சொல்லி
அதைத்தான் நான் சொன்னதாகச் சொன்னான்
so what என்றேன்.
நான் சொல்லாதவொன்றைச் சொல்லி
அதுதான் என் கருத்தாக இருக்கமுடியும் என்றான்
நான் ஏதும் சொல்லாதபோதும் கூட.
இருக்கலாம் என்றவுடன்
அவனெழுப்பிய
உத்தேவகக் குரலில்
அமுங்கிப் போயிற்று
என் அடுத்த வாக்கியம், ‘இல்லாமலும் இருக்கலாம்.’
எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்,
Who bothers him.
இன்னொரு சந்தர்ப்பத்தில்
என்னால் வேறெப்படி யோசிக்கமுடியுமென்றான்
அதன் தொடர்ச்சியாக
என் சிந்தனையை எனக்கு விளக்கினான்
இப்படியாக
எனக்கு அவனை நன்கு விளங்கியது;
என்னைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

Share

நாடகங்களில் நடிக்க பரீக்ஷா ஞாநியின் (‘ஓ போடு’ ஞாநி) அழைப்பு

பரீக்ஷா (‘ஓ போடு’ ஞாநி) ஆர்குட்டில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அஞ்சல் அனுப்பியிருந்தார். அதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். விருப்பமுள்ளவர்கள் அவரை அணுகவும். ஞாநியின் அனுமதியுடன் இம்மடல் இங்கு பிரசுரிக்கப்படுகிறது. நன்றி.

dear friends i will be directing the new play sandaikkarigal for our group pareeksha next month. the play is to be performed either on august 5 or august 12. rehearsals have to begin from july 1.this is a play with large cast, needing atleast ten to twelve women and equal number of men. the play is a hisgtorical bnarrative of how lives of women in our society has been changing thanks to women who chose to fight for it. i have earlier produced this play with a group of WCC girls in a workshop at their college. it is a play that entertains aswell as as enlightens.i request all of you to inform women and men, girls and boys known to you, who are iliving in chennai and nterested in meaningful theatre activity to come forward to participate.our group is meeting at 10 am on sunday july 1 for script reading. those interested in participating in the play can contact me over my mobile phone and know the venue. my no. 9444024947.

ஞாநியின் ஆர்குட் முகவரி: http://www.orkut.com/Profile.aspx?uid=14559894980100451739

அவரது மின்னஞ்சல் முகவரி: gnanisankaran@hotmail.com
Share

கல்கியில் விசும்பு புத்தகம் பற்றிய சிறு அறிமுகம்

01.07.2007 தேதியிட்ட கல்கியில் ஜெயமோகனின் விசும்பு (அறிவியல் புனைகதைகள்) புத்தகம் பற்றிய சிறு அறிமுகம் வெளியாகியுள்ளது. நன்றி: கல்கி.

விசும்பு புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.anyindian.com/product_info.php?products_id=104507

Share

டிடி பொதிகையில் ஒருத்தி திரைப்படம்

Thanks: Chennaionline.com

ஒருத்தி திரைப்படம் நாளை (ஞாயிறு, 17.06.07 அன்று) இந்திய நேரம் மாலை 4.20க்கு பொதிகையில் ஒளிபரப்பாகிறது. இத்திரைப்படம் கி.ராஜநாராயணனின் சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘கிடை’ நாவலை மையமாக வைத்து இயக்கப்பட்டது. இயக்கம் அம்ஷன் குமார். இசை எல்.வைத்தியநாதன்.

Share

சிவாஜி – A quick review

இன்னொரு முறை பார்த்துவிட்டுத்தான் விமர்சனம் எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். இணையத்தில் தேடிப்பார்த்த வரையில் தமிழ் விமர்சனங்கள் என் கண்ணில் படவில்லை. அதனால் சிவாஜி பற்றி சில வார்த்தைகள்.

காலை 4.30 மணிக்காட்சி. திருவிழா போல கூட்டம். சரியான மழை. தியேட்டரின் முன் முழங்கால் அளவு தண்ணீர். சிவாஜி படம் பார்க்க போனதே ஒரு சிறந்த அனுபவமாக அமைந்துவிட்டது.

Thanks:img.indiaglitz.com

மழையில் நனைந்துகொண்டு, மின்னல் இடிக்கிடையில், காலை 3.30 மணிக்கு தூறலில் பைக் ஓட்டிக்கொண்டு சென்றது மறக்கமுடியாத அனுபவமே.

ஜெண்டில்மேன், இந்தியன், அந்நியன் கதையின் இன்னொரு பதிப்பு. கருப்புப் பண விவகாரம் என்று லேபிள் ஒட்டிக்கொண்டுவிட்டார்கள். மற்றபடி அதே கதை. லஞ்சம், லாவண்யம், ஊழல். அதை இந்த முறை எதிர்ப்பவர் ரஜினி. அவ்வளவுதான். ஒரு பெரிய கோடீஸ்வரன் எல்லா சொத்தையும் இழந்து கையில் ஒரு ரூபாயுடன் நடுத்தெருவுக்கு வந்துவிட்டால் அவன் எப்படி மீள்வான் என்பது இரண்டாவது முடிச்சு. ஒரு நல்ல விஷயத்திற்காக எதையும் செய்யலாம் என்கிற உலக ஹீரோக்களின் ஃபார்முலா. இதுபோதாதா ஒரு ரஜினி படத்திற்கு. இடைவேளை வரை மிகவும் ஜாலியாக செல்கிறது படம். ஒரு காட்சி ரஜினியின் கனவு, இன்னொரு காட்சி ரஜினியின் காதல் என்று மாறி மாறிக் காட்டுகிறார்கள். இடைவேளையில் ரஜினி எல்லா சொத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வருகிறார். அராஜக வழியில் எப்படி வில்லன்களை சமாளிக்கிறார் என்பது மீதிக்கதை. அதற்காக ரஜினி செய்யும் வேலை லாஜிக்கே இல்லாதது. லாஜிக் இல்லாத ஒரு விஷயத்தை அடிப்படையாக வைத்துகொண்டு, அதன் மேலே லாஜிக்கான விஷயங்களாக அடுக்கிவிட்டார்கள். யார் யார் எவ்வளவு கருப்புப் பணம் வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களின் கார் டிரைவர்கள், எதிரிகளிடமிருந்து பெற்றுக்கொள்கிறார். மறுப்பவர்கள் ஆபிஸ் ரூமில் வைத்து விசாரிக்கப்படுகிறார்கள். இரண்டாவது முறை, ஒத்துக்கொள்ள மறுப்பவர்களிடம் ஆபிஸ் ரூம்ல வெயிட் பண்ணுங்க என்று ரஜினி சொல்லும்போது தியேட்டர் கலகலக்கிறது. தாசில்தார் என்று ரஜினி சொன்னதும் ஆபிஸ் ரூமிலிருந்து தாசில்தார் பறந்துவந்து விழுகிறார். ரஜினி படம் என்று ரசிகர்கள் சந்தோஷப்பட்டுப் போகிறார்கள். ஆபிஸ் ரூம் உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று விவேக் சொல்லி படம் முழுதும் ரஜினிக்கு பின்னாலேயே வருகிறார்.

முதல் பாதியில் ரஜினியின் ஹேர் ஸ்டைல் அவருடைய வயதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. இரண்டாவது பாதியில் ரஜினியின் இளமை (மேக்கப்) ஆச்சரியப்பட வைக்கிறது. ஏன் முதல் பாதியில் அப்படி ஒரு ஹேர் ஸ்டைல் என்பதே புரியவில்லை. படத்தின் ஓப்பனிங் பாடல் பெரிய ட்ரா பேக். அதிரடிக்கார மச்சான் பாட்டும் ஒரு கூடை சன் லைட்டும் படத்தின் உச்சபட்சமான கைத்தட்டலைப் பெறுகின்றன. சஹானா பூக்கள் என்கிற நல்ல பாடல் செட்டிங் போட்டுப் படமாக்கப்பாட்டிருக்கிறது.

ரஜினி இறந்த போதே கதை முடிந்திருந்தால் இது பேசப்படும் படமாயிருக்கும். ஆனால் ஓடியிருக்காது. அதுவே க்ளைமாக்ஸ் என்கிற உணர்வைத் தந்துவிட்டதால், அதற்குப் பின் வரும் இரண்டாவது க்ளைமாக்ஸ் காட்சி போரடிக்க வைக்கிறது. அதிலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த, மூன்று மிமிக்ரி கலைஞர்கள் வருகிறார்கள். நல்ல காமெடி. சாலமன் பாப்பையா, ராஜா, ரஜினி, ஷ்ரேயா, விவேக் வரும் காட்சிகள் லாஜிக் இல்லாமல் இருக்கின்றன என்றாலும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. முதல் பாதி முழுக்க ரஜினி பழக வாங்க என்று சொல்வது அசத்தல். சுஜாதாவின் வசனங்கள் (நீங்க ஆதி ஷேஷன்னா நான் அல்ஷேஷன்) ஒரு கமர்ஷியல் படத்திற்கு, அதுவும் ரஜினி படத்திற்கு எது தேவையோ அதைத் தருகிறது. சுமன் எடுபடவில்லை. ஏ.ஆர். ரகுமானின் பாடல்களின் தரம், குறிப்பாக ஒரு கோடி சன் லைட், அதிரடிக்கார மச்சான், உச்சம்.

கண்டிப்பாக கலெக்ஷனை அள்ளும். அதில் சந்தேகமே இல்லை.

Share

பெரியார் திரைப்படம் – ஓர் அபத்த செய்தித் தொகுப்பு

95 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு மனிதரின், தமிழகம் பல்வேறு வகைகளில் இன்னும் நினைவு வைத்திருக்கும், இன்னும் விவாதித்துக்கொண்டிருக்கும், இன்னும் விமர்சனம் செய்துகொண்டிருக்கும் ஒரு மனிதரின் வாழ்க்கையைப் படமாக எடுப்பதில் உள்ள சிக்கல் புரிந்துகொள்ளக்கூடியதே. இந்த சலுகையையும் மீறி மிக மோசமாக எடுக்கப்பட்டிருக்கிறது பெரியார் திரைப்படம். ஞானசேகரனுக்கு ஒரு படத்தின் அடைப்படைக்கூறுகள் கூடத் தெரியாதோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறது படத்தின் வடிவம். துணுக்குத் தோரணங்களால் அமையும் ஒரு சராசரி தமிழ் நகைச்சுவைப் படம் போல, துணுக்குக் காட்சிகளில் ரொப்பப்பட்ட படமாக பெரியார் திரைப்படம் அமைந்துவிட்டது மிகப்பெரிய துரதிர்ஷ்டம்.

Thanks: movies.sulekha.com

படத்தில் எந்தவொரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் தொடர்பே இல்லை. வானொலி நாடகங்கள் போல எல்லாவற்றையும் வசனத்தில் சொல்கிறார்கள். அதோ சுப்ரமணியே வந்துட்டாரே, தங்கச்சி செத்துப்போனாலும் தங்கச்சி பொண்ணுக்கு நல்லா கல்யாணம் பண்ணனும்னு, ராமாம்ருதம்மா வாங்க என்று கதாபாத்திரங்கள் வசனங்கள் பேசி படத்தை நாடகமாக்கியிருக்கிறார்கள். சத்யராஜ் ஜோதிர்மயி தவிர மற்ற எல்லா நடிகர்களும் படம் நெடுக எதையோ யோசித்துக்கொண்டே நடிக்கிறார்கள். அதிலும் அண்ணாவும் வீரமணியும் மணியம்மையும் சதா எதையோ யோசித்துக்கொண்டே இருக்கிறார்கள். மணியம்மையின் கதாபாத்திரம் தாய் போன்ற கதாபாத்திரம் என்று சொல்லப்பட்டிருக்கும் போல. எப்போதும் கனிவை கண்வழியே கொண்டு வந்து கொட்டிக் கொட்டி அன்பையும் நெகிழ்ச்சியையும் ஒழுக விடுகிறேன் என்று பயமுறுத்திவிடுகிறார். ஜோதிர்மயியின் திறமைக்கு காட்சிகள் மிகக்குறைவு.

தேவையற்ற விஷயங்கள் அளவுக்கு அதிகமாக வலியுறுத்தப்படுகின்றன. பெரியாரை முன்னிறுத்த வேண்டிய விஷயங்கள் பல இருக்க, அவர் குளிக்க விரும்பாத விஷயம் நான்கு முறை குறிப்பிடப்படுகிறது. பெரியார் பாட்டுப்பாடி ஆட்டம் ஆடுகிறார். கடவுள் உலகத்தைப் படைச்சான் பாடலுக்கே நான் அதிர்ந்துபோனபோது, ஜோ ஜோ சந்தா என்று ஜேசுதாஸ் பாட பெரியார் நடிகர் சிவாஜி கணக்கில் நடந்துபோகும்போது, ஞானசேகரன் பெரியாரைத் தாக்கப் படம் எடுத்தாரோ என்கிற சந்தேகம் வந்துவிடுகிறது. கருணாநிதி, அண்ணா, எம்.ஜி.ஆர். வருகிறார்கள் போகிறார்கள். அண்ணா ஏன் அவ்வளவு யோசித்து யோசித்துப் பேசுகிறார் எனத் தெரியவில்லை. கருணாநிதி அண்ணாவையே முறைத்துப் பார்ப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டது எனக்கு. ஏனென்று தெரியவில்லை. அண்ணா, கருணாநிதியைக் காண்பித்துவிட்டு எம்.ஜி.ஆரைக் காண்பிக்காமல் விட்டால் அரசியல்வாதிகளுக்கு யார் பதில் சொல்வது. எம்.ஜி.ஆர் வரும் காமெடிக் காட்சியும் உண்டு. 95 லட்ச ரூபாய் கொடுத்ததற்காக, கடைசியில் கருணாநிதியுடன் படத்தை முடித்துவிட்டார்கள் போல.

எல்லாரும் தமிழ் பேசுகிறார்கள். காந்திக்குக் கூட தமிழ்ப்பற்று அதிகம். அவரும் தமிழ்தான் பேசுகிறார். அவர் தமிழ், ஹிந்தி, ஆங்கில எனக் கலந்து எல்லாமும் பேசுகிறார். நல்ல காமெடியாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் தமிழ் பேசுகிறார்கள் ஒரு பேரல்லல் படமாக வந்திருக்கவேண்டிய முயற்சி என்கிற எண்ணம் இயக்குநருக்குச் சிறிதும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. திடீரென்று ரஷ்யப் பயணம். திடீரென்று பர்மா பயணம். அங்கு ஒரு நடிகர். அதுவும் யாருடைய கதாபாத்திரம். அம்பேத்கர். சும்மா பெரியார் வாழ்க்கையில் அவரும் உண்டு என்று சொல்வதற்கு ஒரு காட்சி. ஒரு கருத்து. இன்னொரு காட்சியில் பெரியார் செல்லும் வழியில் குயவர்கள், உழவர்கள், தாழ்த்தப்பட்ட சாதியினர். அனைவருக்கும் சேர்ந்து ஒரு கருத்து. ஒரே கருத்து. விவேக் சொல்வது போலத்தான் இருக்கிறது. பெரியாரைக் காணோம். ஸ்ர் ராகவேந்திரர் படத்தில் ரஜினி ஊர் ஊராகச் சென்று உபதேச மழையாகப் பொழிவார். இந்த விஷயத்தில் ஞானசேகரனுக்கும் எஸ்.பி.முத்துராமனுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை.

பிராமண எதிர்ப்பாகவே சொல்கிறேமே என்று இயக்குநர் நினைத்தாரோ என்னவோ. தீடீரென்று மழை, பிராமணப் பெண், பிரசவம், பெரியாரின் மனித நேயம், பிரமாணர் மனம் நெகிழ்ந்து பெரியாரைப் பாராட்டும் இடம். மீண்டும் ஒரு நாடகத்தன்மை கொண்ட காட்சி. இப்படி ஒட்டுமொத்த படத்தையும் ஐந்து ஐந்து நிமிடக் காட்சிகளாகப் பிரித்துவிடலாம்.

ராஜாஜியைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். படத்தின் நகைச்சுவை மற்றும் வில்லன் கேரக்டர் கலந்த ரோல் அவருக்கு. என்றைக்கும் இளமையாக இருக்கிறார். வயதாகிப் பெரியார் படுக்கையில் கிடக்கும்போது பார்க்க வருகிறார் ராஜாஜி. எப்படி? மான்போலத் தாவி வருகிறார். பார்த்துவிட்டுப் போகும்போது வயதாகிவிடுகிறது போல. மெல்ல, நிதானித்து, நொண்டி நொண்டி நடக்கிறார். இப்படி இவர் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல காமெடிக் காட்சிகள் பல உள்ளன. ரயிலில் சந்திக்கும் பெரியார் அங்கிருந்து சென்றவுடன், இது வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாக இருக்கும் என்கிறார். இதன் மீது ஏற்றப்படும் கவனம் அடுத்த ஒரு காட்சியில் ஒரு நிமிடம் மட்டுமே வருகிறது. அண்ணா மேடையில் இந்த சந்திப்பைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறார். அத்துடன் அதன் தொடர்ச்சி அறுந்துபோகிறது. இப்படியே எல்லாக் காட்சிகளும் அமைந்து இருக்கின்றன.

தேவதாசி ஒழிப்பு முறையும் வைக்கம் போராட்டமும் படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும் முறை, அது மிக எளிமையான ஒன்று என்கிற தோற்றத்தையே ஏற்படுத்துகிறது. இப்படி ஒரு இயக்குநரால் குழந்தைத்தனமாக இயக்கமுடியுமா என வியக்கவைக்கின்றன இக்காட்சிகள். அத்தனை மோசமான இயக்கம்.

ஆரம்பக் காட்சிகள் சத்யராஜுடன் இணைவதில் சிரமங்கள் இருந்தாலும், போகப் போக நாம் சத்யராஜை சுத்தமாக மறந்துவிடுகிறோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் சத்யராஜ் காட்டியிருக்கும் குரல் வேறுபாடுகள், உடலசைவின் நுணுக்கங்கள் பாராட்டத்தக்கவை. விருது வெல்ல வாய்ப்பிருக்கிறது. படத்தின் ஒரே ஆசுவாசமும் அவர்தான்.

இசையும் கேமராவும், சரியாகச் சொல்வதானால், தண்டம். ரஜினி படத்திற்கும் விஜய் படத்திற்கும் இசை அமைப்பதுதான் எளிது என்று வித்யாசாகர் புரிந்துகொண்டிருப்பார். ஆனால், அவரைச் சொல்லியும் குற்றமில்லை. எல்லாக் காட்சிகளுமே ‘முக்கியமான காட்சிகள்’ போல படமாக்கப்பட்டிருப்பதால், எல்லாக் காட்சியிலும் வயலினும் கையுமாக இசையமைக்க உட்கார்ந்துவிட்டார் போல. கேமரா எவ்வித வித்தியாசங்களையும் காட்ட முயற்சிக்காமல் சும்மா அப்படியே இருக்கிறது. கிணற்றிலிருந்து ஜோதிர்மயியைத் தூக்கிக்கொண்டு வரும் காட்சி மட்டுமே கொஞ்சம் கவனிக்கும் விதமாக இருந்தது.

பெரியாரின் அனைத்து விஷயங்களையும், அனைத்து நண்பர்களையும் ஒரு படத்திற்குள் நுழைத்துவிட வேண்டும் என்று இயக்குநர் முயற்சிக்கும்போதே படம் அதள பாதாளத்துள் வீழ்ந்துவிடுகிறது. ஒரு நல்ல கலைப்படத்திற்குத் தேவையான பொறுமையும் யதார்த்தமும் இல்லை. வசனங்களைப் பேச வைப்பதில் இருக்கும் சிரத்தை, காட்சியமைப்பிலும் நடிப்பிலும் காட்டப்படவில்லை. படம் என்பது காட்சி ரீதியானது என்கிற எண்ணத்தையெல்லாம் கைவிட்டுவிட்டு பேசிப் பேசியே கொல்கிறார்கள். எல்லாவற்றையும் வசனம் மூலமே சொல்கிறார்கள். ஒரு வரியில் சொல்லி, மற்றவற்றைக் காட்சியில் காண்பிக்கவேண்டிவற்றை, சுலபமாக வாயால் சொல்ல வைத்து விடுகிறார்கள். இது படத்தை மிகச் சாதாரணமாக்கிவிடுகிறது.

பெரியார் படத்தில் எதைச் சொல்லவேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானித்து, சிறப்பான திரைக்கதை மூலம் ஒரு நல்ல படத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் இயக்குநருக்கு கவனம் எல்லாம் பெரியாரின் விசுவாசிகளைத் திருப்திபடுத்துவதிலேயே இருப்பது புரிகிறது. இதுவே படத்தின் தோல்விக்கு முக்கியக் காரணம். நிஜமான பெரியார் படத்தை யாராவது இனிமேல் எடுத்தால்தான் உண்டு.

Share

அஞ்சலி – நகுலன்

பேராசிரியர் டி.கே.துரைசாமி என்பவர் பின்னாளில் நகுலன் என்றறியப்பட்டார். ஆங்கிலத்திலும் தமிழிலும் கவிதை, நாவல், விமர்சனம் என எழுதி நவீன இலக்கியவாதிகளில் முன்னோடியாகத் திகழ்ந்த நகுலன் நேற்றிரவு (17.05.07 இரவு) இயற்கை எய்தினார்.

நவீன கவிஞர்களில் முன்னோடிகளில் ஒருவராக அறியப்படும் நகுலன் ஆரம்ப காலங்களில் தன் கைச்செலவிலேயே சில கவிதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்தார். Thanks: AnyIndian.comபின்பு காவ்யா பதிப்பகம் அவரது கவிதைகளின் மொத்தத் தொகுப்பை வெளியிட்டது. சில மாதங்களுக்கு முன்னால் “கண்ணாடியாகும் கண்கள்” என்ற அவரது கவிதைத் தொகுப்பையும் காவ்யா வெளியிட்டது. அதில் நகுலனின் புகைப்படங்கள் தரமான தாள்களில் அச்சிடப்பட்டிருந்தது. அதில் நகுலனை ஒரு குழந்தையாகக் கண்டடையலாம். அவரது புகைப்படங்களைக் கண்டபோது வயதானவர்கள் எல்லாருமே ஒரே போன்ற முகத்தை அடைந்துவிடுகிறார்கள் என்கிற என் எண்ணம் மேலும் வலுப்பட்டது.

கடந்த சில வருடங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த அவர், நினைவுகளின் குழப்பம், தீவிர இலக்கியவாதிகளுக்கு மனதளவில் ஏற்படும் நெருக்கடி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். திருமணம் செய்துகொள்ளாத நகுலனை அவரது அன்னையின் தோழியான பிருத்தா கடைசி காலங்களில் கவனித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

நகுலன் தன் வாழ்நாளில் பெற்ற ஒரே விருது விளக்கு விருது மட்டுமே.

நகுலனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

நகுலன் நினைவாக:

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
·ப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி/ஸிகரெட்
சாம்பல் தட்ட்
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு

அதிகமான விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் உள்ளான நகுலனின் கவிதை (கோட்ஸ்டாண்ட் கவிதைகள்):

ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை

இன்னொன்று:

நில்
போ
வா

வா
போ
நில்

போ
வா
நில்

நில்போவா?

(இந்தக் கவிதை விருட்சத்தில் வெளியாகியது. இதைத் தொடர்ந்து பிரமிள் அவரது அதிரடிக் கவிதைகளில் நகுலனையும் அதை வெளியிட்ட விருட்சம் அழகிய சிங்கரையும் தாக்கி ஒரு கவிதையை எழுதினார்.நகுலனின் கவிதையைக் கண்டு கோபமடைந்த கும்பகோணன் நாராயணன் இதைக் கேள்விகேட்டு விருட்சத்திற்கு எழுதினார். அதை நகுலனின் அழகிய சிங்கர் தெரிவித்த போது, நகுலன், இக்கவிதைக்கு விளக்கமாக இரண்டு பக்கங்களில் எழுதி அனுப்பினாராம். அழகிய சிங்கர் சொன்ன தகவல் இது.)

தமது கவிதைகளில் அதிக அளவு கடவுளைப் பற்றியும் புராண இதிகாச மாந்தர்களைப் பற்றியும் நேரடியாகவும் குறியீடாகவும் நகுலன் எழுதியிருப்பதைப் பார்க்கமுடிகிறது. எப்படியும் ஏதோவொரு குறியீடு பெரும்பாலான கவிதைகளில் கவிஞனின் அனுமதியோடோ அனுமதியின்றியோ குடிகொண்டுவிடுகிறது.

இன்று நகுலன் கவிதைகளாகவே மிஞ்சுகிறார்.

Share

பள்ளியின் ஜன்னல் – கவிதை

வெறிச்சோடிக் கிடக்கும் மைதாங்களில்
சுருட்டி எறியப்பட்ட காகிதக் குப்பைகள் இல்லை
சிறுநீர் படாமல் கொஞ்சம் செழித்திருக்கிறது சிறுசெடி
மணிச்சத்தம் கேட்காமல்
‘மாசில் வீணையும்’ கேட்காமல்
நிம்மதியாய் உறங்கிக்கிடக்கிறது கடுவன் பூனை
வறாண்டாக்களின் தவம்
மாடிப்படிகளிலேறி
வகுப்பறைகளில் முடிவடைய
சொட்டும் தண்ணீரின் சத்தம்
பூதாகரமாகி குலுக்கிப் போடுகிறது கட்டடத்தை
குறுக்குச் சந்தில்
திருட்டுத்தனமாய் தம்மடித்த சரவணனும்
சத்துணவுக்கூடத்துப் பின்பக்கம்
அவசரம் அவசரமாய்
முத்தமிட்டுக்கொண்ட பிரான்சிஸும் கோமதியும்
பள்ளியை மறந்துவிட்டிருக்க
திறந்திருக்கும் ஜன்னல் காத்திருக்கிறது
காணாமல் போய்விட்டவர்களை எதிர்நோக்கி.

Share