குதலைக் குறிப்புகள் – 6

நீண்ட நாள்கள் ஆயிற்று எவ்வித சிந்தனையுமின்றி கைபோன போக்கில் ஒரு பதிவு எழுதி. இதனை கொஞ்சம் கூட அநாகரிகமே இல்லாமல் பதிவுலகில் மொக்கை என்று அழைக்கிறார்கள். ‘பிக்பாக்கெட் அடிக்கிறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா அடிக்கிறது நானா இருக்கணும்’ என்ற அடிப்படையில் இன்றைய ‘குதலை மொக்கை’ மேலே செல்லப்போகிறது.

பள்ளிக்குச் செல்லுதல் பற்றி. சென்ற ஆண்டு என் மகன் ப்ரீகேஜியில் படித்தான். முதல்நாள் அவனைக் கொண்டு போய் சேர்த்தபோது, அவனுக்கு ராஜ மரியாதை கிடைத்தது. இரண்டரை வயதான குழந்தைகளின் கூட்டம் விஜயதசமி அன்று அப்பள்ளியில் நிரம்பிக் கிடந்தது. ஆப்பிள்களால் அலங்கரிங்கப்பட்ட ஒரு வகுப்பறையில், ஒரு பீடத்தில் சரஸ்வதி அமர்ந்திருக்க, ஓர் ஆசிரியை எல்லாக் குழந்தைகளையும் கைப்பிடித்து அரிசியில் ஓம் என (தமிழில்!) எழுதி அக்ஷ்ராப்யாசம் செய்துவைத்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு ஹிந்துச்சூழல் நிறைந்த பள்ளியில் என் மகன் படிக்கவேண்டும் என்பது என் ஆர்வமாக இருந்தது. ஹிந்துச்சூழல் மிகுந்த பள்ளிகளில் என் மகனைச் சேர்க்க நான் கொடுக்கவேண்டிய தொகை ஹிந்துமதத்தின் ஆகிருதியைவிடப் பெரியதாக இருந்தது. இதில் ப்ரீகேஜிக்கே இந்த விலை. ப்ரீகேஜி, எல் கேஜி, யூகேஜி என்கிற விஷயங்களே இல்லாமல், நேரடியாக ஒன்றாம் வகுப்பு படித்து, மூன்றாம் வகுப்பில் ஆங்கில எழுத்துகள் கற்றுக்கொண்டு, இன்று மேதைகளாகப் பலர் இருக்கிறார்கள்! அப்படியானால் ப்ரீகேஜிக்கே இந்தத் தொகை கொடுப்பது எதற்கு என்று புரியவில்லை. எனக்குக் கட்டுபடியாகக்கூடிய தொகையில், எனக்கேற்ற ஒரு பள்ளியைக் கண்டுபிடித்தேன்! இப்போதைக்கு இது போதும் என்று நினைத்துக்கொண்டு அங்கே சேர்த்தேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ப்ரேயரில் எல்லா மாணவர்களுக்கும் சந்தனம் வைத்துவிடுகிறார்கள். ஹிந்துமதமல்லாத மற்றக் குழந்தைகள் வைத்துக்கொள்வதில்லை. பள்ளியும் அதைக் கட்டாயப்படுத்தவில்லை. பாராட்டவேண்டிய விஷயம். எல்லாம் நன்றாகவே இருக்கிறது படிப்பைத் தவிர என நினைத்துக்கொண்டேன். மாணவர்களுக்குப் படிப்பு சொல்லித் தரும் விஷயத்தில் இப்பள்ளி போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது.

இப்படி ப்ரீகேஜிக்கு போய்க்கொண்டிருந்த என் பையன் பள்ளியை ஒரு சீரியஸான விஷயமாக நினைக்கவில்லை. முதல் நாள் ராஜமரியாதையுடன் சென்று அக்ஷ்ராப்யாசம் செய்துவிட்டு கூடவே அழைத்துவந்துவிட்டோம். மறுநாள் பள்ளிக்குச் செல்ல அவனை ஆயத்தப்படுத்தியபோது மிக மகிழ்ச்சியாகக் கிளம்பினான். முதல்நாளைப் போலவே அன்றும் கூடவே அழைத்துக்கொண்டு வந்துவிடுவார்கள் என நினைத்துவிட்டான் போல. ஆனால் அன்று அப்படி நடக்கவில்லை. அவனது சுதந்தரத்தில் எத்தனை பெரிய குறுக்கீடு. எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? அழுது தீர்த்துவிட்டான். பள்ளிக்குச் செல்வதே அழுகை என்றாகிவிட்டது. ‘மழை வர்ற மாதிரி இருக்குல்ல,’ ‘வயித்த வலிக்குது’ எல்லாம் இரண்டரை வயது வாயில் வரத்தொடங்கிவிட்டன. கிளம்பும் வரை லீவு என்று சொல்லிவிட்டு, அந்த நேரம் வந்ததும் அலேக்காகத் தூக்கிக்கொண்டுபோய் பள்ளிக்கு விட்டுவிட்டு வந்துவிடுவேன். ஒருவழியாகப் பள்ளி என்னும் தொல்லை தீர்ந்து, முழுத்தேர்வு கழிந்து விடுமுறை வந்தது.

மீண்டும் பள்ளிக்குச் செல்லும் காலமும் வந்தது. எல் கே ஜி. பெரியவனாகிவிட்டான். ஆனாலும் முதல்நாள் அதே அழுகை. இந்த அழுகை இரண்டாம் நாளே காணாமல் போய்விட்டது. அங்கே விளையாட நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள். பள்ளியைக் கண்டதும் துள்ளிக்கொண்டு ஓடுகிறான். தன்னை அழைத்துக்கொண்டு செல்ல சீக்கிரம் வந்துவிடாதே என்று தன் அம்மாவிடம் சண்டை போடுகிறான். ‘பசங்கள்லாம் ஒரே அழுகை’ என்று என்னிடம் தினமும் சொல்கிறன். ‘யாராது ஸ்கூலுக்குப் போக அழுவாங்களா’ என்கிறான்!

பள்ளியில் இவன் படிக்கிறானா, சண்டை போடப் போகிறானா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தினம் ஒரு பையனுடன் வழக்கு. நான் சும்மா இல்லாமல் ‘உங்க ஸ்கூல்ல எப்பவும் அ ஆதான் சொல்லித்த்ருவாங்களா’ என்று கேட்க, அதையே அவனும் அவன் டீச்சரிடம் கேட்டுவைத்திருக்கிறான். இப்படியாகக் கழிகிறது இவனது பள்ளிக்காலம்.

பள்ளிக்காலம் என்பது எத்தனை முக்கியமானது என்பதை நான் உணர்கிறேன். இன்று கிழக்கு பதிப்பகத்தின் அலுவலக விஷயமாகப் பள்ளிகளுக்குச் செல்லும்போதெல்லாம், மாணவர்களைக் காணும்போதெல்லாம் நான் எதையோ இழந்துவிட்டது போன்ற நினைவுக்கு வருகிறது. இந்த சோகம் இதனால் மட்டுமே எழுந்த சோகமா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லுவேன். மாணவர்களைக் காணும்போதெல்லாம் ஏதோ அடிமைகளைக் காணுகிற சோகமும் உடன்சேர்ந்தே எழுவதைப் பார்க்கமுடிகிறது. இந்த மாணவர்கள் பள்ளியினாலும், பள்ளி ஆசிரியர்களாலும், பாடத்தினாலும் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.

ஒரு பத்தாம் வகுப்பு மாணவிக்கு டியூசன் எடுத்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருக்கும். இப்போதும் அதே பாடம்தான் என நினைக்கிறேன். நம் பாடத்திட்டத்தின்படி பாடங்களைப் புரிந்துகொள்ள, ஒரு நல்ல புத்திசாலியான மாணவனால் மட்டுமே முடியும். சராசரி மாணவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. பாடத்திட்டத்தின் கடுமை அத்தகையது. நான் எத்தனையோ முறைகளில் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொடுத்தும், அந்த மாணவரால் அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. உண்மையில் நான் அதை என் கல்லூரியில்தான் படித்தேன்! பாடத்திட்ட முன்னேற்றம் என்பதை கல்வியாளர்கள் கல்லூரியிலிருந்து பள்ளிக்கும், பள்ளி வகுப்புகளில் மேல் நிலையிலிருந்து உயர்நிலைக்கும் உயர்நிலையிலிருந்து இடைநிலைக்கும் மாற்றுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த அபத்தமான கொள்கையினால் ஒரு கல்லூரி மாணவன் ஒரு காலத்தில் புரிந்துகொள்ள அவஸ்தைப் பட்டதை ஒரு மாணவன் பள்ளிகளிலேயே புரிந்துகொள்ளவேண்டிய அபத்தம் நேர்கிறது. பாடத்திட்டத்தை இந்த ஆசிரியர்கள் நடத்தும் முறையைப் போன்ற கேவலமான ஒன்றைக் காணவே முடியாது. எனக்கு பத்தாம் வகுப்பெடுத்த ரமணி டீச்சரும் சிரில் மேரி டீச்சரும் பாடத்தை அப்படியே மனப்பாடம் செய்து அடிக்குரலில் இருந்து குரலை எழுப்பி கத்திக்கத்திச் சொல்லிக்கொடுத்துக் கொன்றார்கள். இன்றும் தவளையையும் கரப்பான்பூச்சியையும் பார்த்தாலே குலை நடுங்குகிறது எனக்கு. ஒரே நிமிடத்தில் கரப்பான் பூச்சியைக் கொன்றுவிடமுடியும். ஆனால் இந்தக் கரப்பான்பூச்சியின் உடலமைப்பைப் படிக்க நானடித்த குட்டிக்கரணங்கள் நினைவுக்கு வருகின்றன. ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதி அதைப் பெயர்களாகச் சொல்வார்கள். பெரிப்ளானட்டா அமெரிக்கானா என்பதை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று தெரியாமல் குழம்பும்போது, இதே போன்ற ஆயிரம் பெயர்கள் நினைவுக்கு வந்து பயமுறுத்தும். படிக்காமலும் விடமுடியாது. மதிப்பெண் போய்விடும்.

நல்ல மதிப்பெண்கள் பெறுவது எளிமையான விஷயமல்ல. காலையில் 4 மணிக்கு அலாரம் வைத்து எழுந்திருக்கவேண்டும். ஒருநாள் எழாவிட்டாலும் அம்மா தலையில் அடித்துக்கொண்டு அழுவாள். அண்ணா ஓட ஓட அடித்தாலும் அடிப்பார். டிவி பார்க்கக்கூடாது. ஏதேனும் ஒரு பரிட்சையில் 75 மதிப்பெண்கள் எடுத்துவிட்டால், ஏதோ ஒரு பெண்ணைக் கற்பழித்துவிட்டவனைப் பார்க்கும் பாவனையில் என் அக்கா ‘என்னது 80க்கு கீழயா?’ என்பார். இத்தனைக்கும் அவள் வாழ்நாளில் என் அக்கா 40ஐத் தாண்டியதே இல்லை. தன்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை தன் மீது தீர்த்துக்கொள்கிறார்களோ என்று ஒரு மாணவன் சிந்திக்காமல் பள்ளி வாழ்க்கையைக் கழிக்கவே முடியாது. என்ன காரணம்? எல்லாம் மதிப்பெண்ணை மையமாக வைத்துச் சுற்றும் கல்விமுறை. 35 மதிப்பெண் பெற்ற ஒரு பையன் பாஸ். 29 மதிப்பெண் பெற்றுவிட்ட ஒரு பையன் பெயில். 97 மதிப்பெண் பெற்றுவிட்ட ஒரு மாணவன் முதலாமவன். 96 பெற்றுவிட்டவன் இரண்டாமவன். இருவரும் எவ்வளவு புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நாம் ஆழ்ந்து நோக்கத் தொடங்கினால் பெரிய பெரிய அதிர்ச்சிகள் நமக்குக் கிடைக்கலாம்.

மதிப்பெண்ணை மையமாகக்கொண்ட தேர்வுமுறையில் பள்ளி ஆசிரியர்களை மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. இருக்கும் நேரத்தில் பாடமும் நடத்தி, கேள்வித்தாள் தயாரித்து, திருத்தி, மற்ற விஷயங்களிலும் மாணவர்களைப் பங்கெடுக்க வைத்து – எத்தனைதான் செய்வார் ஓர் ஆசிரியர்? இந்த லட்சணத்தில் அரசுப் பள்ளிகளில் ஓர் ஆசிரியர் ஓய்வுபெற்றால் அந்த இடத்தில் இன்னொரு ஆசிரியரை வேலைக்கு வைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என யாருக்கும் தெரியாது. இருக்கும் ஆசிரியரே இந்த வேலையையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அவர் என்ன செய்வார்? படிக்காத மாணவர்களை மாடு போல சாத்துவார்.

மாடு போல சாத்துவார் என்பது உணர்ச்சி மதிப்பீட்டில் சொல்வது அல்ல. உண்மையாகவே ஆசிரியர்கள் படிக்காத மாணவர்களை மாடு போலச் சாத்துவார்கள். அதுவும் மாடுகளை அடிக்க உதவும் அதே மணிப்பிரம்பு. அந்த மணிப்பிரம்பு வாங்கவும் மாணவர்களே காசு தரவேண்டும். தனது காசாலேயே தன்னை அடிக்கும் ஓர் அரசை ஒரு மாணவன் பள்ளியிலேயே கண்டுகொண்டுவிடுகிறான். இதில் மரத்துப்போகும் மாணவனுக்கு ஓர் அரசு இதனையே செய்யும்போது அதைப் பெரியதாக எடுத்துக்கொள்ளத் தோன்றுவதில்லை போல. இப்படி கிட்டத்தட்ட பாடத்திட்டத்துக்கு, மதிப்பெண் தேர்வுமுறைக்கு, ஆசிரியர்களுக்கு அடிமைகளாக இருக்கும் ஒரு மாணவனைப் பார்க்கும்போது, நான் இழந்த மாணவப்பருவம் தரும் சுகமான சோகத்தைவிட, தங்கள் சுதந்திரத்தை இழந்துகொண்டிருக்கும் ஒரு மாணவனின் சோகம் பெரியதாகத் தாக்குகிறது.

மாணவர்கள் செய்யும் துப்புரவு பற்றி வெங்கட் எழுதியிருக்கிறார். நான் இதைப் பற்றியும் எழுத நினைத்திருந்தேன். வெங்கட் சொல்வது மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருக்க இது உதவும் என்பது. இது சரிதான். ஆனால் எல்லாப் பள்ளிகளும் இந்த உயர்ந்த நோக்கத்தில் இதைச் செய்வதில்லை. நோக்கம் உயர்வாக இருந்து, மாணவர்கள் தூய்மை செய்யவேண்டிய பழக்கத்தை ஏற்படுத்திய பள்ளிகளில் கூட, இது மாணவர்களின் கடமையாக மாறி, அதற்கான தண்டனைகளிலெல்லாம் முடிந்திருக்கிறது. நான் படித்த பள்ளி ஒன்றில் நாங்களே துப்புரவு செய்யவேண்டும். அங்கு பள்ளிக்கு வரும் பல மாணவர்களின் பெற்றோர் கூலி வேலைக்குச் செல்பவர்கள். அவர்களோடு கூட ஒத்தாசைக்குச் செல்லும் மாணவர்கள் இந்தத் துப்புரவு வேலைக்கு வராமல் அவதிப்படுவதும், அதற்காகவே அவர்கள் மாடுபோல் அடிக்கப்படுவதெல்லாம் கொடுமை. சுற்றுப்புற விழிப்புணர்வு என்பது ஒருவித அழுத்தமாக மாறுவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இப்பள்ளியில் துப்புரவுக்கென்று பணியாளர்கள்கூட இருக்கமாட்டார்கள்! அப்படியே ஒன்றிரண்டு பணியாளர்கள் இருந்தாலும் அவர்கள் ஒரு சேரில் உட்கார்ந்துகொண்டு மாணவர்களை விரட்டிக்கொண்டிருப்பார்கள். நாம் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவது பாடம் படிக்கவே அன்றி இப்படி ஓர் அடிமைத்தனத்துக்கு வால்பிடிக்க அல்ல. என்னைத் துப்புரவு செய்யச் சொல்லி அடித்த வாத்திமார்களையெல்லாம் கல்லால் அடிக்கவேண்டும் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். சுற்றுப்புறச் சூழலைத் துப்புரவாக வைத்துக்கொள்ளும் நல்ல நடிப்பில்தான் இத்தகைய கொடுமைகள் எல்லாம் தொடங்குகின்றன. இதுமட்டுமல்ல. எப்போதேனும் ஆண்டுவிழாவோ மற்ற விழாவோ வந்துவிட்டால் ஒவ்வொரு வகுப்பு மாணவனும் செத்தான் என்றே சொல்லவேண்டும். துப்புரவு என்பது சுற்றுப்புறச்சூழலைத் தூய்மையாக வைத்திருத்தல் என்கிற அழகான வரியில் அமிழ்ந்துவிடுகிறது. மாணவர்கள் வகுப்பறைக்குள்ளே இருக்கும் எல்லா பெஞ்சுகளையும் வெளியில் வைத்து, அவற்றைக் கழுவி, வகுப்பறையைப் பெருக்கிக் கழுவி, மாணவிகள் கோலமிட்டு – பள்ளிகள் ஒருவருடத்தில் ஒரு பாடத்துக்கு இத்தனை வகுப்புகள் என்று ஒதுக்குகின்றன. அப்படி ஒதுக்கும் பள்ளிகள் இப்படி பாழாகும் வகுப்புகளுக்கும் சேர்த்தே நேரம் ஒதுக்குகின்றனவனா? அந்த நேரங்களில் நடத்தப்படாமல் விடப்படும் பாடங்களுக்கு யார் பொறுப்பு? நான் படித்த பள்ளிகளில் – நான் அரசுப்பள்ளிகளில் மட்டுமே படித்தேன் – எந்தப் பள்ளியிலும் என் பாடத்தை ஒழுங்காக யாருமே முடித்ததே இல்லை. ஏன் இந்த நிலை? எந்தப் பள்ளிக்கும், எந்த ஆசிரியருக்கும், எந்த அரசுக்கும் பொறுப்பே இல்லை. மாணவர்களை இவர்கள் ஏதோ சின்னப்புள்ளைங்களாக மட்டுமே பார்க்கிறார்கள்.

என் தனிப்பட்ட அளவில் நான் சாதியின் கொடுமைகளைக் கண்டதும் இப்பள்ளிகளிலேயே. நான் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவன். பிராமண – அபிராமண ஆசிரியர்களுக்கு இடையில் இருந்த பிரச்சினைகள் என்னையும் பாதித்தன. ஆனால் அவற்றுக்கெல்லாம் காரணம் எனக்கு இப்போதுதான் புரியத் தொடங்குகிறது. என்னுடன் படித்த, நன்றாகவே படிக்காத ஒரு பிராமண மாணவனை ஒரு பிராமண ஆசிரியர், ‘ஐயர் குலத்த கெடுக்க வந்த கோடாரிப் பாம்பே’ என்று சொல்லிக்கொண்டே ஓட ஓட விரட்டி அடித்தார். பிராமணரல்லாத ஆசிரியர்களெல்லாம் அந்த பிராமண ஆசிரியரைக் கண்டு சிரித்தார்கள். என்னை ஓர் ஆசிரியர் அடித்துக்கொண்டிருக்கும்போது தூரத்தில் இருந்து இன்னோர் ஆசிரியர் ‘அய்யருங்க அது சாத்துங்க’ என்றார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இதன் மூலகாரணம் ஆசிரியர்களுக்கு இடையே நிலவிய ஜாதிப் பிளவுகள்தான். ஆனாலும் மாணவர்களை இதில் பலிகடாவாக்குவது என்ன நியாயம். எனக்கு நேர்ந்த அவமானங்களைப் போலவே, எனக்கு ஆதரவாக சில அதிகார மீறல்களும் நிகழ்ந்திருக்கின்றன என்பதனையும் மறுப்பதற்கில்லை. இரண்டுக்குமே நான் பொறுப்பாளி அல்ல என்பதே இங்கே பிரச்சினை. ஒரு பிராமண ஆசிரியர் வெளிப்படையாகவே கல்லூரியில் என்னைப் பற்றி இன்னொரு பிராமண ஆசிரியரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த செய்முறைத் தேர்வில் நான் நூறு சதம் வாங்கினேன். அவர் சொல்லியிருக்காவிட்டாலும் நான் நிச்சயம் நூறு சதம் வாங்கியிருப்பேன் என்றாலும், உடனிருந்த மாணவர்கள் கிண்டல் செய்துகொண்டிருந்தார்கள். பள்ளிகளில் இலலாத ஒரு புரிந்துகொள்ளும் திறன் கல்லூரிப் பருவத்தில் வந்துவிட்டதால், என் நண்பர்களும் இதனை ஒரு சிரிப்பதற்குரிய நிகழ்வாகவே எடுத்துக்கொண்டார்கள். மேலும் திருநெல்வேலி பகுதிகளில் சாதிகளைச் சொல்லிப் பேசிக்கொள்வது வெகு இயல்பாகவே நடக்கும். இதனால் நண்பர்கள் இதனை சகஜமான ஒன்றாகவே எடுத்துக்கொண்டார்கள்.

ஓர் உலகத்தையே திறந்துகாட்டவேண்டிய பள்ளிகள், தங்கள் பொறுப்பின்மையாலும், அர்ப்பணிப்பு உணர்வின்மையாலும், குழப்பமான பாடத்திட்டங்களாலும், மதிப்பெண்ணை மையமாக வைத்த தேர்வு முறைகளாலும் சீரழிந்துகொண்டிருக்கின்றன. கிராமங்களில் பள்ளிகளின் வீழ்ச்சி இன்னும் மோசமானது. கிராமங்களில் படிக்கும் மாணவர்களால் சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் மாணவர்களோடு போராடமுடியாமலேயே போய்விடக்கூடிய நிலை தொலைவில் இல்லை. இவற்றையெல்லாம் மாற்ற ஆசிரியர்களாலேயே முடியும். என் தாத்தா ஒரு ‘மாதிரி ஆசிரியர்.’ அவரைப் போன்ற அர்ப்பணிப்பு உணர்வை இன்றைய ஆசிரியர்களிடம் காண்பது அரிது. கடந்த தலைமுறையின் ஆசிரியர்களைப் போன்ற பொறுப்புணர்வு மிக்க ஆசிரியர்கள் உருவாகாவிட்டால், இந்த மாணவர்களின் வீழ்ச்சியையும், ஒட்டுமொத்த அடிமைகளின் உருவாக்கத்தையும், என்ன படிக்கிறோம் என்று புரியாமல் எழுத்தை மனனம் செய்யும் ஒரு தலைமுறையையும் ஒன்றுமே செய்யமுடியாது.

Share

Turtles Can Fly – ஈரானியத் திரைப்படம்

இந்தக் கட்டுரையை தமிழ்ஹிந்து.காமில் வாசிக்கலாம்.

Share

ஒலிக்காத குரல்கள் – கோபி கிருஷ்ணனின் ‘உள்ளே இருந்து சில குரல்கள்’

சொல்வனம் இணையத்தளத்தில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது.

கட்டுரையை வாசிக்க: http://solvanam.com/?p=248

Share

ராஜமார்த்தாண்டன் – மனதின் கலைஞன்

கட்டுரையை வாசிக்க – தமிழ் ஹிந்து.காம் செல்லவும்.

Share

கவிதை

வெக்கை மிகுந்த
வியர்வை இரவொன்றில்தான் கண்டேன்
வீட்டுக்குள் வளர்ந்து கிடக்கும்
தனித்த மரமொன்றை.
கிளைகள் வீட்டு உத்தரத்தை உரசியிருக்க
வேர்கள் வீடெங்கும் பரவிக்கிடந்தன
கைக்கெட்டிய அரிவாளும் கோடாலியும்
உலோக ஒலியெழுப்பி
மரத்தின் கீழ் மண்டியிட்டன
தனியறைக்குள் உறங்கிக் கிடக்கும்
மெல்லிய சுவாசத்தை அடக்கி
அதிர்ந்தன மரத்தின் இலைகள்.
மரத்தின் கிளைகள் மேலும் நீண்டபோது
வெளியிருந்து ஒரு குருவி
சிறகடித்துப் பறந்து
உள்வந்து அமர்ந்தது.
மரத்தை சூழத் தொடங்கியது
குருவியின் இசை.

Share

குதலைக் குறிப்புகள் – 5

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் குதலையோடு வருகிறேன். 🙂 தொடர்ந்து ஏகப்பட்ட விசாரிப்புகள் ஏன் எழுதவில்லை என்று. வேண்டாம், விஷயத்துக்கு வருவோம்.

Kraurya என்று ஒரு கன்னடத் திரைப்படம் பார்த்தேன். லோக் சபா டிவி புண்ணியத்தில். கிரீஷ் காசரவள்ளி இயக்கத்தில் இப்படம் என் மனதை பாதித்தது. ஒரு கதை சொல்லியின் கதை. கிழவியாக வரும் ரேணுகாம்மாவின் நடிப்பு உலகத் தரத்தில் இருந்தது. அவரது தூரத்து உறவினராக வரும் தத்தாத்ரேயாவின் நடிப்பும் மிக யதார்த்தமாக இருந்தது. தத்தாத்ரேயாவின் நடிப்பை இன்னும் சில படங்களில் பார்த்தேன். எல்லாமே லோக் சபா சானல் உபயம்தான். எல்லாப் படங்களிலுமே தத்தாத்ரேயா மிக எளிமையாக, மிக யதார்த்தமாக, அற்புதமாக நடித்திருக்கிறார். நான் பார்த்த தத்தாத்ரேயாவின் படங்களை மட்டும் வைத்துக்கொண்டு, நம்ம ஊர் டெல்லி கணேஷுடன் இவரை ஒப்பிடலாம் எனத் தோன்றுகிறது. டெல்லி கணேஷ் தனது எல்லை எதுவெனத் தெரிந்து நடிக்கும் ஒரு நடிகர். பிரகாஷ் ராஜ் போல எல்லா கதாபாத்திரங்களையும் ஒரே ரீதியில் அணுகும் நடிகர்களுக்கு மத்தியில், டெல்லி கணேஷ் போல, தத்தாத்ரேயா போல ஓரிருவரே எஞ்சுகிறார்கள். இதுபோன்ற திரைப்படங்கள் விஷயத்தில் லோக் சபா சானல் செய்து வரும் பணி மகத்தானது. காங்கிரஸ் கட்சியே உலகின் சிறந்த கட்சி என்று சுற்றி வளைத்து அறிவிக்கும் லோக்சபா சானலின் ஆகப் பெரிய குற்றத்தைக் கூட இது போன்ற திரைப்படங்களுக்காக மன்னிக்கலாம். மக்கள் தொலைக்காட்சி ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் ஞாயிறு மதியம் ரஷ்யத் திரைப்படங்களை ஒளிபரப்புகிறது. இதுவரை பார்த்த ஒன்றிரண்டு படங்கள் என்னைக் கவரவில்லை. அதனால் தொடர்ந்து பார்ப்பதில்லை. இப்படி ஒரே வகையான படங்கள் என்று ஒளிபரப்பாமல், மக்கள் தொலைக்காட்சி உலகத் திரைப்படங்களை ஒளிபரப்புவது நல்லது. இன்றைய நிலையில், மக்கள் தொலைக்காட்சியைத் தவிர, வேறெந்த சானலும் இதைச் செய்துவிடமுடியாது. வால்ட் டிஸ்னியின் திரைப்படங்களை சன் டிவி ஒளிபரப்பத் தொடங்கியிருக்கிறது. குழந்தைகல் குதூகலிக்கிறார்கள். படங்களின் தரமும் உச்சத்தில் இருப்பதால், யாரும் ரசிக்கத்தக்கவண்ணம் படங்கள் இருக்கின்றன. இந்தவாரம் தி வைல்டு படம் பார்த்தேன். சென்ற வாரத்தில் தி இன்கிரிடிபிள்ஸ். இரண்டுமே அசத்தலாக இருந்தன.

-oOo-

தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுவிட்டது. நான் அதிமுக+ 25 வெல்லும் என நினைத்திருந்தேன். மக்களோடு நெருங்கிப் பழங்குங்க பாஸ் என்ற அறிவுரை கிடைத்தது! இன்றைய நிலையில் ஊடகங்கள் மக்களிடமிருந்து முற்றிலும் விலகிவிட்டன என்கிறார் லக்கிலுக். மக்களோடு நெருங்கிப் பழகி, அடுத்த் தேர்தலில் பிஜேபி 240 இடங்களில் வெல்லும் எனச் சொல்ல இப்போதே முடிவெடுத்திருக்கிறேன். ஆசையைத்தானே சொல்லமுடியும்! நான் TACல் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். 1998 நாடாளுமன்றத் தேர்தல். 1996ல் நடந்த படுதோல்விக்குப் பின்பு ஜெயலலிதா சந்திக்கும் தேர்தல். கிட்டத்தட்ட ஜெயலலிதா குற்றவாளியாகவே எல்லாரும் கருதப்பட்டார். அத்தேர்தல் முடிவு குறித்த கணிப்புகள் எல்லாவற்றிலும் அதிமுகவுக்கு 0 இடமே கிடைக்கும் எனச் சொல்லப்பட்டிருந்தது. எங்கள் கம்பெனியிலும் ஒரு சர்வே நடத்தினார்கள். ஒரு சீட்டில் எந்தக் கூட்டணிக்கு எவ்வளவு என எழுதித் தரவேண்டும். நான் திமுகவுக்கு 40 எனவும், அதிமுகவுக்கு 0 எனவும் எழுதிக்கொடுத்தேன். கிட்டத்தட்ட 32 பேர் கலந்துகொண்ட அந்த கணிப்பில் 30 பேர் அதிமுகவுக்கு 0 எனச் சொல்லியிருந்தார்கள். ஒருவர் மட்டும் 1 இடம் அளித்திருந்தார். ஒருவர் மட்டும் அதிமுகவுக்கு 30, திமுகவுக்கு 10 என எழுதியிருந்தார். உடனே கண்டுபிடித்துவிட்டோம் அது யாராக இருக்கவேண்டுமென்று. கம்பெனியில் பிராமண ஆதரவாளர் என்றும், ஜெயலலிதா விசுவாசி என்றும் எல்லோராலும் கருதப்படும் கணேஷ் கார்த்திகேயனாகத்தான் இருக்கவேண்டும் என்று எல்லோருமே சொன்னோம். அவரும் ஒப்புக்கொண்டார். எல்லோரும் சிரித்தோம். முடிவு வந்தது. அவர் ஹீரோவாகிவிட்டார். அப்போது அவர் சொன்னார், ‘மக்கள் பல்ஸ் பிடிக்கத் தெரியணும் பிரசன்னா’ என்று. அன்றிலிருந்து இன்றுவரை இன்னும் பல்ஸ் பிடிக்கத் தெரியவில்லை. ஆனால் ஒன்றைக் கவனித்திருக்கிறேன். நான் என்ன சொல்கிறேனோ அது அச்சு அசலாக மாறி வருகிறது. சென்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு 170ம் திமுகவுக்கு 60ம் கிடைக்கும் எனச் சொன்னேன். இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு 27ம், திமுகவுக்கு 13 எனவும் சொன்னேன். அடுத்தமுறை முதலில் எந்த கூட்டணிக்கு எவ்வளவு என்று சொல்லிவிட்டு, கட்சிகளின் இடத்தை மாற்றிவிட உத்தேசித்திருக்கிறேன். வாங்க நெருங்கிப் பழகலாம் மக்களே.

-oOo-

பாஜக கூட்டணி தோல்வி அடைந்துவிட்டது. தோல்வி எதிர்பார்த்த ஒன்றே. ஆனால் இத்தனை மோசமாகத் தோற்கும் என எதிர்பார்க்கவில்லை. முக்கியக் காரணம், பாஜக மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடாமல், கொள்கை ரீதியான விஷயங்களுக்கு மட்டுமே போராடுகிறது. அயோத்தியில் கோயில், சேது சமுத்திரத் திட்டம், மதமாற்றம் – இப்படி போராடியிருக்கும் கட்சி, கடைநிலை மனிதனின் சோற்றுக்காக வீதியில் வந்து போராடியிருக்கிறதா என்று யோசித்தால், ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அதிமுகவும், திமுகவும் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வந்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் பாஜக எல்லாவற்றிலும் ஒரு ‘வெள்ளை காலர்’ அணுகுமுறையை மட்டுமே மேற்கொள்ளுகிறது. வெள்ளைக் காலர் அழுக்காகாமல் பதவி கிடைக்காது என்பதை பாஜக உணரவேண்டும். அத்வானியின் அரசியல் வாழ்க்கை பிரதமர் பதவியைக் காணாமலேயே முடியப்போகிறது. சர்தார் வல்லபா படேல் போல. சர்தார் வல்லபாய் படேலுக்கு நேரிடையான எதிரி இல்லை. அத்வானிக்கு திறமை குறைந்த ஒரு நேரிடையான எதிரி இருந்தும் அவரால் வெல்லமுடியவில்லை. தமிழக பிஜேபியைப் பற்றிப் பேசுவது நேர விரயம். இல கணேசன் யாருக்காகப் போட்டியிட்டார் என்பதே தெரியவில்லை. கோயமுத்தூரில் ஏன் ராதாகிருஷ்ணன் போட்டியிடவில்லை என்பதும் மர்மம். அத்வானி கன்னியாகுமரியிலும் திருச்சியிலும் பிரசாரம் செய்யாமல் ஏன் சென்னைக்கு வந்தார் என்பதெல்லாம் நல்ல காமெடியான விஷயங்கள். இவர்களின் அதிகபட்ச திறமையே இந்திய அளவில் நூறு இடங்களோடு திருப்தி பட்டுக்கொள்ளுவதுதான்.

-oOo-

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார். இன்னும் சில வலைத்தளங்கள், சில நண்பர்கள் அவர் சாகவில்லை என்று நம்புகிறார்கள். நான் நிச்சயம் பிரபாகரன் இறந்துவிட்டதாகவே நினைக்கிறேன். சரணடையச் சென்ற இடத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிற யூகமே எனக்கு ஏற்கத்தக்கதாக இருக்கிறது. இலங்கையில் இருக்கும் தமிழர்களின் வாழ்வில் இனியாவது அமைதி மலர இறைவன் அருளவேண்டும். நிறைய தமிழர்களின் உணர்வு சம்பந்தப்பட்ட இவ்விஷயத்தில் வேறொன்றும் எனக்குச் சொல்லத் தோன்றவில்லை.

-oOo-

FM நிகழ்ச்சிகளை சில சமயம் கேட்பதுண்டு. நான் கேட்டவரை எல்லா நிகழ்ச்சிகளுமே திரைப்படப்பாடல்களோடு சம்பந்தப்பட்டவையே. நேரலை நிகழ்ச்சிகளில் நேயர்கள் பங்குபெறும்போது கூட, இடையிடையே பாடல்களையே ஒலிபரப்புகிறார்கள். திரைப்படம் என்பதன் சுவடே இல்லாமல் ஒரு நிகழ்ச்சியாவது இருக்குமா என்பது சந்தேகமே. இங்கேயும் மக்கள் தொலைக்காட்சி போல மக்கள் பண்பலை என்ற ஒன்று வந்தால்தான் உண்டு. நிச்சயம் வரவேண்டும். திரைப்படப் பாடல்களைத் தவிர எதையும் மக்கள் கேட்கமாட்டார்கள் என்கிற முடிவு ஆபத்தானது. இதை நிச்சயம் உடைக்கவேண்டும். ஒரு பண்பலையில் குறைந்தது 10 சதவீதமாகவது திரைப்படம் சம்பந்தப்படாத நிகழ்ச்சிகள் இருக்கவேண்டும். இல்லையென்றால், அடுத்த தலைமுறை வெறும் திரைப்படப் பாடல்களால் நிரப்பப்பட்ட ஒரு பொதியாகவிடும். இப்போது நாம் இக்கட்டத்தை எட்டிவிட்டோம். அதுவே இதிலிருந்து மீளும் ஒரு உத்வேகத்தைத் தருமானால் அது மகிழ்ச்சியான விஷயமாகவே இருக்கும். மக்கள் பண்பலையைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன், அப்படி ஒன்று வருமா என்று!

-oOo-

கருணாநிதியைப் பற்றி ஒரு வார்த்தைகூட எழுதாமல் எப்படி குதலையை முடிப்பது. கருணாநிதிக்கு வெற்றிக்கனி கிடைத்த ஒரே நாளில், அவரது அரசு மைனாரிட்டி அரசுதான் என்னும் – அவருக்கு மட்டும் தெரியாத, உலகத்துக்கே தெரிந்த – உண்மையை அழுத்தம் திருத்தமாக உணர்த்தியிருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் செய்திருக்கும் ஒன்றிரண்டு நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. இனிமேல் மைனாரிட்டி அரசு என்றால் என்ன என்பது போன்ற கேள்விகளை ஜெயலலிதாவிடம் கருணாநிதி கேட்கமாட்டார் என நம்புவோம்.

Share

கிழக்கு மொட்டை மாடியில் பன்றிக்காய்ச்சல்!

28 மே 2009, வியாழக்கிழமை, மாலை 6.00 மணிக்கு “பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல்” பற்றி மருத்துவர் புருனோ மஸ்கரனாஸ், கிழக்கு மொட்டை மாடிக்கூட்டத்தில் பேசுகிறார்.

கடந்த சில வாரங்களில் பன்றிக் காய்ச்சல் (Swine Fever) என்பது பற்றி நிறையக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மனிதர்களைத் தாக்கும் A (H1N1) வகை இன்ஃப்ளூயென்ஸா வைரஸ், மெக்சிகோ நாட்டில் பலரைப் பீடித்தது. அங்கிருந்து பரவி இன்று உலகில் பல நாடுகளில் 10,000 பேருக்கும்மேல் இந்த வைரஸ் தாக்கியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

நம் அரசும் பத்திரிகையில் நிறைய விளம்பரங்களைச் செய்கிறார்கள். தமிழகத்தில் இரண்டு பேரை இந்த வைரஸ் பீடித்துள்ளது என்கிறார்கள். இந்தக் காய்ச்சல் pandemic என்று சொல்லப்படக்கூடியது. இது சட்டென்று பரவி, நாட்டின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரை செல்லக்கூடியது. பல நாடுகளுக்கும் செல்லக்கூடியது.

இதைக் கண்டு நாம் பயப்படவேண்டுமா? இந்த வைரஸ் எப்படி மனிதர்களை பாதிக்கிறது? இதனைத் தடுக்கமுடியுமா? ஏன் பரவுகிறது? நாம் என்ன தடுப்பு முயற்சிகளைக் கையாளவேண்டும்? தனி மனிதர்களாகிய நாம் என்ன செய்யவேண்டும்? மருத்துவர்கள் என்ன செய்யவேண்டும்? அரசு என்ன செய்யவேண்டும்?

இப்படிப்பட்ட பல கேள்விகளுக்கும் விடை சொல்லப்போகிறார் மருத்துவரும் பிரபல வலைப்பதிவருமான புருனோ.

தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.

”பன்றிக்காய்ச்சல் மனிதனுக்கு ஏன் வருகிறது?” என்பது போன்ற ஆழமான கேள்விகளுடன் வருபவர்கள் அனைவருக்கும் என் நன்றி.

Share

பந்த் என்னும் ஒருநாள் நாடகம்

கருணாநிதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தமிழினத் தலைவராக அவரை எப்போது ஏற்றுக்கொள்ளாதவர்கள் அப்படியே தொடர்கிறார்கள். இதுவரை அவரே முத்தமிழ் அறிஞர் என்று புகழ்பாடிக்கொண்டிருந்தவர்கள், இலங்கைப் பிரச்சினையை முன்வைத்து அவரைத் தமிழினத் துரோகி ஆக்கியிருக்கிறார்கள். வலைப்பதிவுகளில் தொடர்ந்து அவரது முகமூடியைப் பதிவர்கள் கிழித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஜராசந்தனின் பிளக்கப்பட்ட தொடைகள் மீண்டும் மீண்டும் ஒட்டுவதுபோல, அவரும் ஏதேனும் ஒரு முகமூடியுடன் வந்துகொண்டே இருக்கிறார். ஒருமுறை பிரபாகரன் இஸ் மை பிரண்டாக. இன்னொருதடவை பிரபாகரன் தீவிரவாதி அல்ல, அவரது இயக்கத்தில் சில தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என. முகமூடிளையெல்லாம் யாரோ கிழித்துவிடுவதாலும், தானே கிழித்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுவதாலும், எக்காலத்துக்கும் பொருத்தமான, கிழியாத, தேர்ந்த முகமூடி ஒன்றையும் தேடிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இந்த பந்த் என்னும் முகமூடி. ஒருநாள் தொடருக்கான வேடம். சென்ற முறை யோசிக்காமல், பந்த் என்று அறிவித்துவிட்டு, கோட்டைக்கு ஓடோடிச் சென்று கையெழுத்துப் போட்டது போலில்லாமல், கொஞ்சம் யோசனை செய்த பின் அறிவித்திருக்கிறார். இஷ்டப்பட்டவங்க வேலைக்கு வாங்கடே என்னும் ரீதியான அறிவிப்பு. சென்றமுறை பந்த் அறிவிப்பை அரசே வெளியிட்டது, பேருந்துகள் ஓடாது என்றெல்லாம் செய்திகள் நாளிதழ்களில் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் எப்படியோ நீதிமன்றத்தில் மாற்றிப் பேசி தப்பித்துவிட்டார்கள். கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததா எனத் தெரியவில்லை. இந்தமுறையும் நீதிமன்றம் அப்படிச் செயல்படுமா எனத் தெரியாது என்பதனால், கருணாநிதியே கொஞ்சம் கவனம் எடுத்துக்கொண்டுவிட்டார்.

பேருந்துகள் ஓடாது என்கிற அறிவிப்பெல்லாம் இல்லை. ஆனால் இன்று சென்னையில் (மற்ற இடங்களில் எப்படி என்று தெரியவில்லை) எந்தப் பேருந்தும் ஓடவில்லை. சன் தொலைக்காட்சியிலும், கலைஞர் தொலைக்காட்சியிலும், மக்கள் யாரும் பயணத்துக்கு வராததால், பேருந்து ஓடவில்லை என்று செய்தி ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது ஓர் அரசு நினைத்தால், ஓர் அரசியல் கட்சி நினைத்தால், நீதி என்பது அதன் கையிலிருக்கும் சப்பாத்தி மாவு மட்டுமே. அதை எப்படியும் பிணைந்துவிடலாம். பேருந்துக்கு மக்கள் வரவில்லை என்கிற செய்தியை ஒளிபரப்பும் படித்தவனெல்லாம் ‘ஐயோ ஐயோ என்று போவானா’ எனத் தெரியவில்லை. மற்ற கட்சியினர் சென்னையில் திமுகவினர் மட்டுமே உண்டு என்கிற உண்மையைக் கண்டுகொண்டிருப்பார்கள்.

ஓர் ஆளும்கட்சி எக்காரணம் கொண்டும் பந்த் அறிவிக்கக்கூடாது என்று தெளிவான சட்டத்தை அரசு இயற்றவேண்டும். ஒரு தனிப்பட்ட கட்சித் தலைவராக பந்தை ஆதரிப்பேன் என்றெல்லாம் ஓர் ஆளும் கட்சித் தலைவர் ஜல்லி அடிக்கக்கூடாது. பொது மக்கள் எவ்வித சிக்கலுமின்றி பயணம் செய்வதை உறுதிப்படுத்துவது ஆளும்கட்சியின் கடமை என்பதை ஆளும் கட்சி உணரவேண்டும். எதிர்க்கட்சிகள் பந்த் நடத்த உரிமை உண்டு. ஆனால் ஆளும்கட்சி அந்த பந்த்தைத் தோற்கடிப்பதையே தனது முதல் நோக்கமாகக் கொள்ளவேண்டும்.

ஒரு பந்தினால் மக்கள் அடையும் இன்னலுக்கு யார் பதில் சொல்வார்கள்? பந்த் அறிவித்த தினம் ஒரு முகூர்த்த தினமாக இருந்து, அன்று திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் இருந்திருந்தால், அந்தக் குடும்பங்கள் அதை எப்படி சமாளிக்கும்? திடீரென்று ஒரு நாள் முன்பு பந்த் அறிவித்தால், அலுவலகங்கள் அதை எப்படி எதிர்கொள்ளமுடியும் என்கிற அடிப்படை அறிவுகூட ஓர் அரசுக்கு இருக்காதா? குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது என்பது அரசியல்வாதிகளின் வேலை. கருணாநிதி தான் குழம்பிப் போய் எதையாவது பிடிக்கவேண்டுமே என்று அலைந்துகொண்டிருக்கிறார்.

இதே வேலை நிறுத்தம் ஒரு மாதத்துக்கு முன்பு வந்திருந்தால் வைகோவும் ராமதாஸும் பச்சை விளக்கு காண்பித்திருப்பார்கள். இன்று எல்லா எதிர்க்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக கருணாநிதியின் பந்த் அறிவிப்பைப் புறக்கணித்துவிட்டார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அரசியலே அன்றி, ஈழத் தமிழர் பிரச்சினையின் மீதான உண்மையான அக்கறை அல்ல. ஜெயலலிதா போராளி என்கிறார். பிரபாகரனுக்கே நெஞ்சு வலி வந்திருக்கும். பாரதம் என்றும், இந்தியத்துவம் என்றும் இறையாண்மை என்றும் பேசி வந்த பிஜேபி, தமிழர்கள் ஹிந்துக்கள் என்கிற அதிபயங்கர உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறது. இனிமேல் என்ன என்ன ஜாதி எனக் கண்டுபிடிப்பார்களா எனத் தெரியவில்லை. வைகோவும் ராமதாஸும் கூட்டணி என்றால் கொள்கை வேறுபாடு இருப்பது இயல்பு என்கிற, இதுவரை வேறு யாரும் முன்வைக்காத புதிய சிந்தாத்தத்தை விளக்கிக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸுக்கு தான் ஏன் கருணாநிதிக்கு ஓட்டு கேட்கிறோம் என்று இன்னும் புரிபடவில்லை. கூட்டத்தில் பக்கத்தில் ஆடும் குழந்தையைப் பார்த்து, கையையும் காலையும் தானே ஆட்டும் குழந்தை போல, கூட்டத்தோடு ஓட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல அலசு அலசென்று அலசியவர்கள் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். ஏதேனும் ஓர் ஈழத் தமிழன் நினைக்கக்கூடும், இவங்க கூத்துக்கு சாகறதே மேல் என்று. அவருக்கு என் அனுதாபங்கள்.

Share