வசியம் – சிறுகதை

டும் மன நெருக்கடிக்கு ஆளாகியிருந்தார் பூபதியாப்பிள்ளை. சிவந்த மேனியோடு லேசான தொந்தியுடன் ‘ஹோவ்’ என்ற சத்ததோடு ஏப்பம் விட்டபடியே சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். நாற்பது வயதில் நிம்மதியான உறக்கமின்றி அலையும் மனதோடு அவர் பெரும் கொதிப்பிலிருந்தார். உடலெங்கும் சின்ன சின்ன வேர்வைத் துளிகள் பனித்திருந்தன. ‘தானா வேர்த்தா நல்லதுடே’ என்று என்றோ அவரது அம்மா சொன்ன நினைவு வந்தது. உடனே இப்போது தானாக வேர்க்கவில்லை என்பதும் நினைவுக்கு வந்தது. இரவு முழுதும் அரைத்தூக்கத்திலிருந்த கண்கள் சிவந்திருந்தன. எப்படியும் சோலை இரவு வருவாள் என்று நினைத்து ஏங்கிக் கிடந்து, காமம் தலைக்கேறி குதியாட்டம் போட்டு அடங்கி அவள் வராமல் மனதெங்கும் பெரும் கோபத்தோடு, உறங்கிப்போவதும் சிறு சத்தம் கேட்டு விழிப்பதுமாகக் கழிந்த இரவுகள் அவருக்கு இப்போதுகூட பெரும் எரிச்சலைத் தந்தது.

ஜாடைமாடையாகப் பேசி ஒருவழியாக தன் மனதில் இருப்பதை அவளுக்குச் சொல்லிவிட்டதாகவே நம்பியிருந்தார் பூபதியாப்பிள்ளை. ஐந்து வருட கொதிப்பை ஒருவழியாகச் சொல்லி முடித்ததில் பெரும் ஆசுவாசம் ஏற்பட்டது. பட்டென உடைத்துச் சொல்லமுடியாவிட்டாலும் ஜாடைமாடையாகச் சொன்னதே பெரிய வெற்றி என நினைத்தார். ஒருவழியாக சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “ராத்திரி வேல கொஞ்சம் கெடக்கு, வந்துடு’ என்று சொல்லிவிட்டு வந்திருந்தார். நாகம்மை ஆச்சி வீட்டுக்கு வர காலை ஆகும் என்று அவருக்குத் தெரியும். அவள் சுருக்கக் கிளம்பினாலே ஒருநாள் ஆகும். ஆனால் அன்று இரவு சோலை வரவில்லை.

காலையில் நாகம்மை எப்போதும் விடும் பெருமூச்சோடு வீடு வந்து சேர்ந்தாள். நாகம்மையின் உலகம் பெருமூச்சால் ஆனது. எதற்குப் பெருமூச்சு விடுவாள் என்றில்லை. தன் கணவன் பூபதியாப்பிள்ளையை நினைத்தால் ஒரு பெருமூச்சு. தன் அண்ணன் நெல்லையப்ப செட்டியாரை நினைத்தால் ஒரு பெருமூச்சு. சோலை வேலைக்கு வரவில்லை என்றால் ஒரு பெருமூச்சு. பெருமூச்சை விட்டவுடனேயே அந்த விஷயம் அவள் அளவில் முடிவுக்கு வந்துவிடும். பூபதியாப்பிள்ளைஅரசல் புரசலாக பிள்ளை சோலைக்காக கிடந்து அலைவது பற்றித் தெரிந்திருந்தது. அதை அறிந்த தினம் அதற்கும் ஒரு பெருமூச்சு விட்டாள். இன்னும் சில பெருமூச்சுகளுடன் சமையலைச் செய்து முடித்து பூபதியாப்பிள்ளையைச் சாப்பிட அழைத்தாள். தோளில் கிடந்த துண்டைக் கொண்டு வேர்வையைத் துடைத்துக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தார். அவர் மனம் வேறெங்கோ அலைந்துகொண்டிருந்தது. பருப்புத் துவையலும் கீரைக்கூட்டும் அவர் கவனத்தைக் கவரவே இல்லை. நாகம்மை எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் உண்டதும் தட்டை எடுத்துக்கொண்டு கழுவப் போனாள்.

வாசலில் குடுகுடுப்பைக்காரன் சத்தம் கேட்டது.

‘நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது’

நாகம்மை ஆச்சி உள்ளிருந்து சத்தம் கொடுத்தாள். “புள்ள பொறந்த வீடு.”

‘இப்படி ஊர ஏமாத்தற வரைக்கும் எந்தப் புள்ள இங்க பொறக்கும்’ என நினைத்துக்கொண்டார் பூபதியாப்பிள்ளை.

“ஜக்கம்மா சொல்றா நல்ல காலம் பொறக்குது. ஐயா மனசுல இருக்கிற வாட்டம் நீங்குது.”

‘என்னத்த’ என்று சலித்துக்கொண்டார் பூபதியாப்பிள்ளை. நாகம்மை ஆச்சி கோபத்துடன் ‘சொன்னா போறதில்ல’ என்று வெளியே வந்தாள். குடுகுடுப்பைக்காரன் குடுகுடுப்பையை அடித்தபடி அடுத்த வீட்டுக்கு நகர்ந்தான்.

பூபதியாப்பிள்ளை குடுகுடுப்பைக்காரன் உடலெங்கும் போர்த்திக்கிடந்த சீலைகளைப் பார்த்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்துடன் அவனைச் சுற்றியிருந்தது. குடுகுடுப்பைக்காரனின் நெற்றியில் குங்குமமும் செந்தூரமும் நீண்டிருந்தது. முருகலான மீசை கூரிய நுனியுடன் வெளி நீட்டிக்கொண்டிருந்தது. பலமுறை தட்டப்பட்ட செப்புத் தகட்டுக் கோடுகள் போல அவன் முகமெங்கும் வரிகள் நிரம்பியிருந்தன. நாகம்மை முணுமுணுத்துக்கொண்டே ‘பச்சப் புள்ளய கொன்னுப்புடுவானுக’ என்றாள். எந்தக் குழந்தைக்காக நாகம்மை விசனப்படுகிறாள் என்பது பிள்ளைக்கு விளங்கவில்லை. காலார நடந்துவரலாம் என்றெண்ணி துண்டை தோளில் போட்டுக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தார். குடுகுடுப்பைக்காரனைக் கடந்து செல்லும்போது அவரது கவனம் முழுதும் அவன் மேலும் அவன் சொல்லும் வார்த்தைகள் மேலும் படிந்திருந்தது. அடுத்தவீட்டிலும் தவறாமல் சொன்னான், ‘நல்ல காலம் பொறக்குது, ஜக்கம்மா சொல்றா, குழந்தையாட்டம் தோள்ல ஒக்காந்து சொல்றா கேட்டுக்க.’

கிராமத்தில் காலை ஆனதற்கான அறிகுறியாக வெயிலைத்தவிர எதுவும் தெரியவில்லை. காந்தி சிலைக்குப் பின்னுள்ள தோட்டத்தில் பொது டிவி ஓடிக்கொண்டிருந்தது. சில பையன்கள் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தச் சிறுவர்களின் ஆனந்தம் அவருக்குள் பெரிய சோகத்தை எழுப்பியது. மேலும் அங்கிருக்க விரும்பாமல், தாமிரபரணி செல்லும் மருத மரங்கள் அடங்கிய சாலையில் நடக்க ஆரம்பித்தார். மருத மரங்கள் அவருக்காகவே அசைந்து காற்றைத் தந்தது என்கிற கற்பனை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு மரம் தனக்காக அசைகிறது, ஆனால் வீடெங்கும் கூலி வேலை செய்து பிழைக்கும் சோலை அசையவில்லை. சோலையின் பிடிவாதம் இவ்வளவு இருக்குமென அவர் எதிர்பார்க்கவில்லை. புடைவையைக் கால் தெரிய உடுத்தி, இடுப்பு தெரிய கொசுவத்தைச் சொருகியிருக்கும் சோலையின் தோற்றத்தை நினைத்தாலே அவருக்கு நிலைகொள்ளாது. வேலை செய்ய வீட்டுக்கு ‘பொம்பள’ வருகிறாள் என நினைத்தவருக்கு சோலையைப் பார்த்த மாத்திரத்தில் பொறி கலங்கியது போலிருந்தது.

பூபதியாப்பிள்ளையின் பெண் மோகத்தை நாகம்மை அறிந்தே வைத்திருந்தாள். ‘நம்ம மாதிரி கெடயாது, இவிங்க சாதிய நம்பப்புடாதுல்லா. அதுக்குத்தான் தலதலயா அடிச்சுக்கிட்டேன். ‘செட்டி’லயே பாப்போம்னு’ என்றார் நாகம்மை ஆச்சியின் அண்ணன். ஒரே தெறிப்பாக பூபதியாப்பிள்ளை ‘ஊருக்குள்ள இவன் எத்தன கூத்தியா வெச்சிருக்கான்னு எனக்குத்தாம்ப்ல தெரியும்’ என்று சொல்லிவிட்டார். நாகம்மைக்கு இரண்டுமே முதலில் அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் ‘ஆம்பளைங்கன்னா இப்படித்தாம்ல’ என்று பக்கத்துவீட்டு மாமி சொன்னதை ஏற்றுக்கொண்டு, ஒரு பெருமூச்சு விட்டாள். ‘ஒழுக்கம் பொம்பளைக்குத்தாம்பில வேணும்’ என்பார் பூபதியாப்பிள்ளை. அதைக் கேட்டு வாயொழுகச் சிரிப்பார்கள் சுற்றியிருப்பவர்கள்.

ஆற்றுக்குப் போகும் வழியில் பதநீர் விற்றுக்கொண்டிருந்தான் மருதன். அவருக்குத் தாகம் தலைக்கேறி இருந்தது. இதுவாவது தணியட்டும் என்கிற எண்ணத்தில் ‘பதநி ஊத்துல’ என்றார். மருதன் ஊர் விஷயங்களைப் பேசிக்கொண்டே பனை ஓலையை வாட்டமாக மடித்து அவரிடம் கொடுத்தான். “குறுக்கிப் பிடிச்சுக்கிடுங்க” என்றான். “ரொம்ப குறுக்கிட்டீங்கன்னா கிழிஞ்சிடும்” என்றான். பூபதியாப்பிள்ளைக்கு அவரைத் திட்டுவது போலிருந்தது. “தெரியும்ல, வியாக்யானம் வெக்காம ஊத்துடே” என்றார். நுங்கு வெட்டிப் போட்டான். தாகம் கொஞ்சம் அடங்கியது. குடித்து முடித்தவுடன் அதை வாங்கி தன் காலுக்கருகில் போட்டுக்கொண்டான். “நாய் நக்கக்கூடாது கேட்டேளா.” பின்பு தன் குரலைக் கொஞ்சம் தாழ்த்தி, “தனிமரத்துக் கள்ளு இருக்கு வேணுமா அண்ணாச்சி” என்றான். பூபதியாப்பிள்ளை கொஞ்சம் யோசித்து, “இல்லடே வேணாம்” என்றார். யோசனையாக, “கொஞ்சம் வாயேண்டே நடப்போம்” என்றார். மருதனுக்கு ஆச்சரியமாக இருந்தது. கருப்பந்துறைக்கு சமீபத்தில் போன முக்கியமானவர்களைக் கேட்டுவிட்டு, தன் போக்கில் செல்லும் பூபதியாப்பிள்ளை இன்று அவனை கூட நடக்க அழைப்பதை அவனால் நம்பவேமுடியவில்லை. அவன் தூரத்தில் இருந்த பையனை அழைத்து கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கூட நடந்தான்.

“ஒடம்பெல்லாம் எரியுதுடே. அதான் பதனி குடிச்சேன். பதனி குளிர்ச்சிதான?”

“நேரத்த பொருத்துங்க அண்ணாச்சி. வெடியக் காலேல குடிச்சேள்ன்னா குளிர்ச்சி. இப்பம் குடிச்சேள்னா சூடு.”

“ஓ. இம்பிட்டு கத கெடக்கா. சரில. உங்கிட்ட ஒண்ணு கேக்கணும்னு நெனச்சேன். ஒங்கப்பனுக்கு வசிய மருந்து செய்யத் தெரியும்ணு ஊருக்குள்ள பேச்சு கெடக்கே. அது நெசந்தானா?”

“எல்லாம் கதை அண்ணாச்சி. எங்க அம்மாளயே கடசி வரைக்கும் கூட வெச்சிக்கத் தெரியாம சீப்பட்டான். நீங்க வேற.”

“ஏ, பொம்பள சமாசாரத்துக்காக கேக்கலடே. பொதுவாவே வசியம் பத்திக் கேட்டேன்னு வெய்யி.”

“அட நீங்க வேற. வசியம்ன்றதே எதுக்குங்கீய? மேற்படிக்குத்தான்றது ஒரு கணக்கு.”

“அப்படீங்க?”

“பின்ன? என்ன விஷயம்னு சொல்லணும். அப்பத்தான் மேக்கொண்டு பேசமுடியும்.”

மெல்ல பெரிய மனிதனின் தோரணையை மருதன் உடுத்திக்கொண்டான். அதை பூபதியாப்பிள்ளை கவனித்தாலும் கவனிக்காதவாறு பதில் சொன்னார்.

“இம்புட்டுத்தானா? காசக் கொடுத்து வாட்டீன்னா வாரா. அதுக்கெதுக்கு வசியமருந்து எளவெல்லாம்?”

“அம்புட்டு சுளுவில்லடே. கிராதகி. ஆமா அவளுக்கு எம்பிட்டு வயசுல இருக்கும்? இருபத்தஞ்சு இருபத்தாறு இருக்குமா? நாஞ்சொல்றது புரியாமயா கெடக்கு? எளவு மானத்த விட்டுப்புட்டு வாயிலேயே சொல்லிட்டேங்கேன், ராத்திரி வாட்டீன்னு. என்னயே போயிட்டு வாவேங்களே, அத கொஞ்சம் யோசிச்சு பாருங்கேன்.”

“அப்படி சொல்லுதேளா. அதுவுஞ் சரிதான். கூலி வேலி செய்ற கழுத சிலிப்பிக்குதோ.”

“திட்டாதடே.”

பூபதியாப்பிள்ளை கொஞ்சம் வருத்தத்தோடு சொன்னதாகப்பட்டது மருதனுக்கு. லேசான நாணம் கூட இருந்ததோ? அவரைத் திட்டியிருந்தால்கூட தாங்கிக்கொண்டிருப்பார் என்று நினைத்தான் மருதன். இந்த மனிதரிடம் எப்படியும் பணம் தேறும் என்கிற நினைப்பு அவனுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. கூடவே, சோலையிடம் சொல்லி அவளை எச்சரித்து வைக்கவும் முடிவு செய்தான்.

“அப்ப வசியமருந்துதான் காரியங்கேளா?”

“நா சொல்லலடே, உங்கிட்ட கேக்கேன். வசியமருந்துங்காங்களே, அது சரிப்படுமாங்கேன்.”

“எனக்கு அதப்பத்தி ரொம்ப தெரியாது கேட்டேளா. ஆனா ஒண்ணு, செய்யிறவன் செஞ்சான்னா அதுக்கு இணை இல்லன்னு கேட்டிருக்கேன். கூனியூர்ல ராமையா இருந்தாம்லா? ஞாபகம் இருக்கா? பைத்தியம் புடிச்சு அலைஞ்சு கெடந்து செத்தானே… அவங்கிட்டேர்ந்து வசிய மருந்த வெச்சித்தான் சொத்தப் பிடுங்கினதாப் பேச்சு.”

கொஞ்சம் பயந்த மாதிரி பிள்ளை “அப்படியா” என்றார்.

“என்ன இப்படி கேக்கிய. செஞ்ச பார்ட்டி பெரிய பார்ட்டி. சேர்மாதேவி மசானத்துக்குள்ள அலைவானே குடுகுடுப்பக்காரன். அவந்தான் மருந்து செஞ்சது. வெசயம் தெரிஞ்சவன்னு பேச்சு.”

“அப்படீங்க?”

“பின்ன? ராமையா பய எதிர்மருந்து வெக்கேன்னு யாரோ ஒருத்தன்கிட்ட வாங்கி வைக்க, என்னாச்சுங்கீய? பயித்தியம் பிடிச்சுட்டு. அதுக்குத்தான் சொல்றது வெசயம் தெரிஞ்சவனா இருக்கணும்னு.”

‘நம்ம ஊர்ல ஒரு குடுகுடுப்பைக்காரன் அலைதானே, அவனுக்கு தெரிஞ்சிருக்குமோ’ என்று கேட்க வந்ததை சட்டென அடக்கிக்கொண்டு, “சரி விடுல. நமக்கெதுக்கு இந்த வினையெல்லாம். வந்தா வாரா, வராட்டி போறா, நமக்கா நஷ்டம். காசு கொடுத்தா கோடி பொம்பளைங்க. என்னாங்க?” என்று சொல்லிவிட்டு, “நீ சோலியப் பாரு. நா அப்படியே வூட்டுக்குப் போறேன்” என்று சொல்லிக் கிளம்பினார். இப்படி திடீரென்று பிள்ளை வெட்டிக்கொண்டது மருதனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த விஷயத்தை வைத்து கொஞ்சம் பணம் கறக்கலாம் என்று நினைத்திருந்தது ஏமாற்றமாகிவிட்டது.

பூபதியாப்பிள்ளை வேகவேகமாக தெருவுக்குச் சென்று அங்கு குடுகுடுப்பைக்காரன் இருக்கிறானா என்று பார்த்தார். அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. வசிய மருந்தை குடுகுடுப்பைக்காரன் செய்வான் என்று ஏன் தனக்கு முதலிலேயே தெரியாமல் போய்விட்டது என்பது குறித்து வருந்தினார். வேகவேகமாக நடந்து வந்ததில் அவரது வயிறு மேலும் கீழும் ஏறி இறங்கியது. நாற்பது வயதில் இந்த அலைச்சல் தேவையா என்று தோன்றியது. தேவைதான் என்று உடனே முடிவுக்கு வந்தார்.

ரவில் அடிக்கடி எழுந்து தண்ணீர் குடிப்பதும் மூத்திரம் கழிக்கப்போவதுமாக இருந்த அவரைப் பார்த்து நாகம்மைக்கு பற்றிக்கொண்டு வந்தது. இருந்தாலும் “ஆம்பிளைங்க” என்று முணுமுணுத்துக்கொண்டே படுத்துக்கிடந்தாள். பெருமூச்சு விட்டாள். எட்டு முழப்புடைவையை உடலெங்கும் சுற்றி, வியர்வையோடு படுத்துக் கிடக்கும் நாகம்மையைப் பார்த்து எரிச்சலாக இருந்தது பூபதியாப்பிள்ளைக்கு. அவள் புடைவையை ஒரு அவசரத்திற்கு அவிழ்க்கக்கூட முடியாது என்பதை நினைக்கும்போது அவருக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அவளது வியர்வையும் பெருமூச்சும் நினைவுக்கு வரும்போதே கோபம் வரும் பிள்ளைக்கு. ‘என்னத்துக்கு இம்புட்டு பெருமூச்சு விடுதா ஒரு பொம்பளை?’ நாகம்மை உறங்கும்வரை காத்திருந்துவிட்டு, நடுச்சாமம் தாண்டிய பின்பு சத்தமில்லாமல் வெளியில் வந்தார்.

நள்ளிரவுக்குப் பின் தெருவைப் பார்த்ததே இல்லை என்று உரைத்தது அவருக்கு. தூரத்தில் படுத்துக்கிடந்த இரண்டு நாய்கள் அவரைத் தலைதூக்கிப் பார்த்தன. பின்பு படுத்துக்கொண்டு விட்டன. “நாய்க்குக்கூட சட்ட இல்லியோ” என்று நினைத்துக்கொண்டு, சத்தமில்லாமல் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போனார். மருதமரங்கள் ஆடாமல் அசையாமல் நின்றிருந்தன. ‘ரெண்டு பக்கமும் முனிசிபாலிட்டி காரனுவோ லைட்டு போட்டு விட்டானுவோ’ என்று நினைத்துக்கொண்டார். கருப்பந்துறைக்குள் நுழையுமிடத்தில் வெட்டியான் உட்கார்ந்திருந்தான். அவரைப் பார்த்து “எவம்லே இங்க வாரது? அதுவும் உசுரோட” என்றான். பூபதியாப்பிள்ளைக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “குடிகாரத் தாயோளி, செருப்பால அடிப்பேன். கொஞ்சம் தண்ணி உள்ள போய்ட்டா மருவாதி வாயில வராதோ” என்றார். வெட்டியான் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு, “சொல்லுங்க சாமி” என்றான். எப்போது வேண்டுமானாலும் வாந்தி எடுத்துவிடுவான் போல இருந்தது. “ஏல, இங்க எங்கல குடுகுடுப்பைக்காரன் இருக்கான்?” என்றார். வெட்டியான் “என்னது” என்றான். மீண்டும் கேட்டார் பிள்ளை. அவன் மீண்டும் என்னது என்றான். பிள்ளைக்கு ஆத்திரம் முட்டிக்கொண்டு வந்தது. ‘சரி போ, நா போய் தேடிக்கிறேன்” என்றார். அவன் குடிபோதையில் “இங்க எதுக்கு குடுகுடுப்பக்காரன் வாரான்? சொன்னா செருப்பால அடிப்பேம்பான். ஏல எரிக்கிற இடத்துல குடுகுடுப்பக்காரன் வருவானால” என்று சொல்லி தொப்பென்று கீழே விழுந்தான். அவனை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு, மசானத்தைத் தாண்டி நடந்தார். தூரத்தில் ஒரு குடிசை கண்ணுக்குப் பட்டது. குடுகுடுப்பைக்காரன் அங்குதான் இருக்கவேண்டும் என நினைத்து நடையை எட்டிப்போட்டார்.

தூரத்தில் ஏதோ ஒரு உருவம் தன் குடிசையை நோக்கி வருவதைப் பார்த்த குடுகுடுப்பைக்காரன் என்னென்னவோ திட்டினான். வாயில் வராத வார்த்தைகளையெல்லாம் சொல்லி “தூ தூ” என்று துப்பினான். சைத்தான் சைத்தான் என்றான். கொஞ்சமும் பயப்படாமல் உருவம் பக்கத்தில் வரவும் அவனுக்குக் கொஞ்சம் பயம் வந்தது. பிள்ளை குடிசைக்கருகில் வரவும், குடிசையிலிருந்து கொலுசுச் சத்தத்தோடு ஒரு உருவம் முக்காடு போட்டுக்கொண்டு ஓடியது. அதைப் பார்த்ததும் பிள்ளைக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

“எலே ஊரு விட்டு பொழக்க வந்த பய யார நாயிங்க.”

கண்கள் இரண்டையும் உருட்டி, என்ன சொல்வதென்று தெரியாமல் வந்தவர் யாரென்று புரியாமல் தன் புருவங்களைச் சுருக்கி ஞாபக அடுக்குகளில் தேடினான் குடுகுடுப்பைக்காரன். தான் குடித்திருப்பதால்தான் அவர் யாரெனத் தெரியவில்லை என நினைத்தான்.

‘என்ன முழிக்க. நாந்தாம்ல முதத்தெரு பண்ணையாரு.”

“இந்தக்காலத்துல பண்ணையாரா?”

“குடிச்சுக்கெடந்தாலும் நக்கல் போலயோ. சரில. கொஞ்சம் பேசணும்னு வந்தேன்.”

நடுஇரவில் போதையேற்றிக்கொண்டு பெண் மீது பாயக்கிடந்தவன் சாத்தான் என நினைத்து அலறியதில் கொஞ்சம் போதை இறங்கியிருந்தது. பண்ணையார், பேசணும் என்கிற வார்த்தைகள் குளறல் போல அவன் நெஞ்சுள் இறங்க, இன்னும் கொஞ்சம் போதை இறங்கி, “இதான் நேரமா சாமி” என்றான்.

“ஊர் சுத்துற ஒன்ன எங்கல பிடிக்க? ஒம் வீடு இங்கதாம்ல கெடக்கு? அப்ப இங்கத்தான் வருவான்.”

அவன் பெண் ஓடிய திசையில் ஏக்கமாகப் பார்த்துவிட்டு, “சொல்லுங்க” என்றான்.

“ஒம் பேரு என்னல?”

“கம்மாளனுங்க.”

“வசிய மருத்து செய்யத் தெரியுமால ஒனக்கு?”

பக்கத்தில் கிடந்த கயிற்றுக் கட்டிலை இரண்டு தடவை தட்டிவிட்டு அதில் உட்கார்ந்துகொண்டார் பிள்ளை. ஒருவன் தொடர்ந்து படுப்பதனால் ஏற்பட்ட கயிற்றுக்குழியில் சட்டென அவரது உருவம் அமிழ்ந்தது. இதில் எப்படி இன்னொரு பெண்ணோடு படுப்பான் என யோசித்தார்.

“என்னத்தல பதில காணோம்?”

“வயசுக்காலத்துல செஞ்சிருக்கேன். இப்பல்லாம் எவன் கேக்கான் அதை? ஊரு ஊரா பிச்ச எடுத்து பொழப்ப ஓட்டிக்கிட்டு கெடக்கோம்.”

“ஒஞ்சோகத்த இப்ப அளக்காத. நா ஒனக்கு வேண்டிய காசு தாரேன். வசிய மருந்து செய்வியால?”

காசு என்றதும் அவன் கொஞ்சம் யோசித்தான். நடு ராத்திரியில் வசிய மருந்த்துக்கு அலையும் இந்தக் கிறுக்கனிடம் இருந்து நிறைய கறக்கலாம் என்று நினைத்துக்கொண்டு, “அதுக்கு ரொம்ப செலவாகும் சாமி.”

“செலவப்பத்தி கவலப்படாத. நான் பாத்துக்கிடுதேன். ஆனா ஒண்ணு. வசிய மருந்து வேல செய்யணும்.”

“அது பெரிய காரியமில்ல சாமி. வசிய மருந்து நா செஞ்சா சக்கம்மாவே ஒனக்குத் தொணயா வந்து நிப்பா.”

“ஏல, காரியமாத்தான் சொல்லுதியால? இல்ல காசக் கறந்துப்பிட்டு பல்லக்காட்டுவியா?”

“என்ன சாமி இப்படி சொல்லிட்டிய? என் வாக்கு பலிக்காம போயிருக்கா? வசிய மருந்தோட வசிய மந்திரமும் இருக்கு. ரெண்டயும் ஒனக்கு தாரேன். எப்பேற்பட்ட பொம்பளையும் பின்னாடி நடப்பாங்கேன்.”

பூபதியாப்பிள்ளை நெற்றியைச் சுருக்கிக்கொண்டு, “பொம்பளைக்கில்லல. ஒருத்தன் நம்மகிட்ட வாலாட்டுதான். அவன நம்ம காலச் சுத்தி நாய் மாதிரி வரவைக்கணும். அதுக்குத்தான்” என்றார்.

வெற்றிலை போட்டுப் போட்டுச் சிவந்த நாக்கையும் காரை படிந்த பல்லையும் காட்டிக்கொண்டு, “நம்பிட்டேன் சாமி” என்றான். முன்பணமாக ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு வந்தார். “சாமி துட்டு எப்படியும் அஞ்சு ஆறு ஆயிடும்.”

“அவ்ளோ ஆகுமால?”

“பின்ன என்ன நினைக்கிய? என்ன சொல்லியிருக்கான் தெரியுமா?” யாருக்கும் புரியாத வகையில் ராகத்தோடு இழுத்து கம்மாளன் சொல்ல ஆரம்பித்தான். “சுட்டி வேர் நின்று சிணுங்கி நிலம் பறண்டி நாவடிக்கி கொன்றை வேர் கொல்லங்க கோவைக் கிழங்கு வென்றி தரும் ஆனை வணங்கி அழிஞ்சில் முறை மசக்கி பூனை வணங்கி புழுக்கை வேர் ஏனையுள்ள சீதேவியார் செங்கழுநீர் திகைப்பூடு மாதிகராமான வழக்குவெல்லி பாதிரிவேர் ஆடையொட்டியோடே சுவரொட்டி ஆன தண்டைப் பூடு சுற்றி மேற்படர்ந்த புல்லுருவி மூடு கட்டும்…..”

“எல என்ன சொல்லுத நீ? ஒண்ணும் வெளங்கலியே…”

எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கம்மாளன் கண்ணை மூடிக்கொண்டு தீவிரமாக அவன் வாய் நாலாத்திசையும் அசைய கர்ண கொடூரமான குரலில் தொடர்ந்தான்.

“வெட்டி வேர் பூலாங்கிழக்கு லாமிச்சம்வேர் தட்டிலாக் கொண்டோ சனைக் கிழங்கு கிட்டும் கடை மருந்து குங்குமப்பூ கஸ்தூரி மஞ்சள் சடை மாஞ்சி நாகன மஞ்சட்டி அடைவுபெறு செங்கழுநீர்க் கொட்டமொடு தேவதாரம் அரத்தை தங்கு பச்சைக் கற்பூரம் சாதிக்காய் பொங்கும் அவின் புழுகு சட்டமிவை அத்தனையும் கூட்டிக் கவின் பெற தூளாக்கிக் கலந்து குவிந்ததொரு…”

“ஏல நிறுத்துங்கேம்லா” என்று அவன் சத்தத்தை மீறி அலறினார் பிள்ளை. பெரும் தவம் கலைக்கப்பட்ட முனிவனைப் போல கம்மாளன் கண்ணைத் திறந்து பார்த்தான்.

“இம்புட்டு விஷயம் இருக்கு. இதென்னா சுளுவா சேக்க?”

“எல்லாத்தயும் கைல வெச்சிருக்க மாட்டியா? சரி, செஞ்சுக் குடு. இத என்னல செய்யணும்? சாப்பாட்டுல சேத்து சாப்பிட்டா போதுமால?”

கம்மாளன் மசானம் அதிரச் சிரித்தான். மீண்டும் கண்ணை மூடி, கன்னக்கதுப்பு வரிகள் விரிந்து சுருங்க, அவனுக்கே உரிய குரலில் ராகத்தோடு தொடர்ந்தான்.

“புற்றுப் பெருங்கரையான் புன்னை நிணம் பாம்பு விஷம் வற்றிக் கிடந்த மரவட்டை முற்றிய செவ்வரணையின் கொழுப்பு சேரவே அம்மியிலிட்டு” என்று சொல்லி நிறுத்தி, “திம்பேளா?” என்றான். அவருக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. “ஏல ஒனக்கு வசிய மருந்து நெசமா தெரியுமால? இல்ல வாந்தி மருந்து செய்தியா? ஒண்ண நம்பலாமால? காச வாங்கிட்டு ஏமாத்திப்புடமாட்டியே?” கம்மாளன் “பின்ன, வேல எளப்பம்னு நெனச்சேளா?” என்றான். “சரி நாளக்கித் தருவியா” என்றார். காத்திருந்தது போல கண்ணை மூடி பல்லைக் கடித்து கண்களை உருட்டி மீண்டும் பாடத் தொடங்கினான்.

“ஒவ்வொரு நாளைக்கு ஒரு சாமம் எவ்வமற கூட்டி ஒரு மாதம் அரைத்து குணம் பார்த்து வாட்டமில்லா செண்பகப்பூ மல்லிகைப்பூ சூட்டுகின்ற முல்லைப்பூ ஓலைப்பூ முற்றுமிதி பாகல் பூ வில்லைப் பூ வாசமிகவூட்டி வல்லதொரு காடேறி ஒன்பதுநாள் காளி சிவம் பத்துநாள் ஈடாம் அகோரம் இருபதுநாள் நாடுகின்ற மோகினி நாற்பது நாள் முற்றும் உருவேற்றி…”

இடையிடையில் ‘ஏல நிறுத்துங்கேம்லா’ என்றார் பிள்ளை. கம்மாளன் நிறுத்தவில்லை. பெரும் காற்றடித்து ஓய்ந்ததுபோல் இருந்தது அவன் பாடியதை நிறுத்தியபோது. “வெசயம் தெரிஞ்சவந்தாம் போல இருக்கு. என்னமோ நெனச்சிப்பிட்டோ ம்” என்று நினைத்துக்கொண்டு, “அப்ப மூணு நாலு மாசம் ஆகுங்க?” கம்மாளன் தலையாட்டினான்.

“சரில, பாட்டெல்லாம் சொல்லி காசப் பிடுங்கலாம்னு பாக்காத. வெசயம் நடக்கணும். அம்புட்டுதான்.”

“சாமி, என் தோள்ல பாரு சாமி. ஒங்கண்ணுக்குத் தெரியாது. என்னாங்க? சக்கமா சாமி, கொளந்தயா ஒக்காந்து கெடக்கா. குறி சொல்றவன் வாயி சாமி. ச்ரவன பிசாசினி மந்திரம்னு கேட்டிருக்கியா? சக்கம்மா கொளந்தயாட்டம் ஒக்காந்து குறி சொல்வா. பேச்ச மாத்தினோம் பிசாசினியாயிடுவா.”

“எனக்கெங்க ஒன் சக்கம்மாவும் தெரியுது பிசாசும் தெரியுது. என்னத்தயோ செய்யி.” போகும்போது, கம்மாளன் தனக்கு நிஜமாக வசிய மருந்து தயாரிக்கத் தெரியும் என்ற நம்பிக்கை கொள்ளுமளவுக்கு “ஏல, வெசயம் தெரிஞ்சவம்தாம்லே நீயி” என்று சொல்லிவிட்டுப் போனார். கம்மாளன் மௌனமாக அவர் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

பூபதியாப்பிள்ளையின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறியிருந்தன. நாகம்மைக்கு ரொம்ப யோசனையாக இருந்தது. பின்னர் ‘ஆம்பிளைங்க’ என்று நினைத்துக்கொண்டு அவரைப் பற்றி யோசிப்பதையே முற்றிலுமாக நிறுத்தினாள். பிள்ளை அர்த்த ராத்திரியில் குளித்தார். தனியறையில் உட்கார்ந்து விடாது ஏதோ மந்திரம் ஜபித்தார். அந்த அறைக்குள் யாரையும் வரக்கூடாது என்று சொல்லி, அவரே பெருக்கி அவரே மொழுகினார். அவரது கையில் வசிய மந்திரம் எழுதிய காகிதமும் வசிய மந்திர யந்திரமும் எப்போதும் பத்திரமாக இருந்தன. “இந்த மந்திரத்த 1008 தடவ சொல்லி, யந்திரத்த யார்கிட்ட கொடுக்கீயளோ அவங்க ஒங்களுக்கு வசியம்தான், சக்கம்மா வாக்கு இது. தப்பாதுங்கேன்.” அந்த நாளுக்காகக் காத்திருப்பதில் பெரும் ஆனந்தமும் சந்தோஷமும் அடைந்தார் பிள்ளை. ஐந்து வருடங்களைத் தள்ளி அவருக்கு நான்கு மாதத்தைத் தள்ளுவது பெரும் பாடாக இருந்தது. அன்று இரவு கம்மாளன் கொடுப்பதாகச் சொல்லியிருக்கும் வசிய மருந்தை வைத்து சோலையை அடைந்துவிடலாம் என்கிற நினைப்பே அவருக்கு சந்தோஷமாக இருந்தது. வசிய மருந்தோ மந்திரமோ ஏதாகிலும் ஒன்று சரிப்பட்டு வரும் என்று நம்பினார். விடாமல் மந்திரத்தை ஜெபித்தார்.

“ஓம் நமோ பகவதே மங்களேஸ்வரீ சர்வமுகராஜனீ சர்வகரம் மாதங்கீ குபாரிகே லகுலகு வசம் குரு குரு ஸ்வாஹா”

ருதன் சோலையைச் சென்று பார்த்தான். அதுவரை அவளது உடல்வாகு பற்றி அவன் தனியாக யோசித்ததில்லை. ஒரு நிமிடம் ஊன்றிக் கவனித்தபோது ஏன் பூபதியாப்பிள்ளை கிடந்து அலைகிறார் என்பது புரிந்தது. அவளிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தான்.

“நா கேக்கணும்னு நினைச்சேன். பண்ணையார்னு சொல்லிட்டு திரியுதானே பூபதியாப்பிள்ள, அவன் எப்படி ஆளுன்னு நீ நெனைக்கட்டி?”

“வாட்டி போட்டின்ன பல்லு பேந்திடும்.”

பூபதியாப்பிள்ளை சொல்வதுபோல் இவளிடம் சீக்கிரத்தில் காரியம் நடக்காது என்பது புரிந்தது. மெல்ல சுதாரித்துக்கொண்டு,

“அட தங்கச்சிய கூப்பிட்ட மாதிரின்னு வெச்சுக்கோ.”

“இப்ப எதுக்கு ஒனக்கு அவசியமில்லாத கேள்வி?”

“இல்ல, கொஞ்ச காலமா பிள்ளைவாள் வசிய மருந்து அது இதுன்னு சொல்லிக்கிட்டு திரியறதா கேள்வி. நடுசாமத்துல கருப்பந்துறைக்கு வாரதும் குடுகுடுப்பைக்காரனோட கும்மாளம் அடிக்கிறதும்… கேள்விப்பட்டியா?”

“ஊர்ல எவன் எங்க போறான்னு பாக்க சோலி எனக்கெதுக்குங்கீரு?”

“அதில்ல, வசிய மருந்தே உனக்காகத்தான்னு பேச்சு.”

சோலைக்குக் கொஞ்சம் புரியத் தொடங்கியது. பூபதியாப்பிள்ளையின் உருளும் கண்களும் ஒருநாள் இரவு சம்பந்தமே இல்லாமல் வீட்டுவேலையாக வரச் சொன்னதும் நினைவுக்கு வந்தன.

“எவ சொன்னா? நாக்க அறுத்துப் போடுவேன்னு சொல்லு” என்று சொல்லி விருட்டென்று நடக்கத் தொடங்கினாள். அன்று எப்போதும்போல் நாகம்மை ஆச்சி விட்டில் வேலைக்குப் போனாள். நாகம்மை எதையும் சொல்லாமல் ஏனங்களையெல்லாம் போட்டுவிட்டு, கொல்லைப்புறத்தில் சென்று அமர்ந்துவிட்டு முந்தானையால் விசிறிக்கொண்டாள். வீடெங்கும் நோட்டம் விட்டாள் சோலை. பிள்ளைவாளைக் காணவில்லை. துடைப்பத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அறையைச் சுத்தம் செய்யும் சாக்கில் அவரது அறைக்குள் நுழைந்தாள். அறையின் சுவரில் ஒரு யந்திரத்தின் படம் ஒட்டப்பட்டிருந்தது. அவளுக்கு அந்த அறையில் அதற்கு முன்னர் அதைப் பார்த்த நினைவில்லை. கொஞ்ச நாளாகவே நாகம்மை ஆச்சி அவளை அந்த அறையைப் பெருக்க விடுவதில்லை என்பதை வைத்தும் பூபதியாப்பிள்ளையின் மேயும் கண்களை வைத்தும் சில விஷயங்களை யூகித்து வைத்திருந்தாள். ஆனால் கொஞ்சம் கூடப் பிடி கொடுக்காமல் இருக்க நினைத்திருந்தாள். ‘ஒரு பொம்பளைக்காக ஒரு ஆம்பிளை இம்புட்டு செய்வானா?’ யோசனையாக இருந்தது சோலைக்கு. பூபதியாப்பிள்ளையை நினைக்கவே பாவமாக இருந்தது. அங்கிருக்கும் கண்ணாடியில் முகம் பார்த்து தலை திருத்திக்கொண்டாள்.

ம்மாளன் நெருப்பு வெளிச்சத்தில், தன் கையிலிருக்கும் வசிய மருத்தைக் காண்பித்துச் சத்தமாகச் சொன்னான். “சாதாரணப்பட்ட மருந்தில்ல சாமி. முன்னோருங்க சொன்னதையெல்லாம் ஒண்ணுவிடாம போட்டு பெசலா செஞ்சது. வத்திக் கெடக்குற மரவட்டைக்கு எம்பிட்டு அலைஞ்சேன்னீங்க? சும்மா சொல்லப்பிடாது, அதிர்ஷ்டம் வேணும் சாமி. ஒமக்கு இருக்கு அது. இப்போ இதுக்கு மயங்காதவ எவ இருக்காங்கேன்? இத கொஞ்சம் மறச்சி வெச்சிக்கிட்டு அவகிட்ட போய் நில்லு. அப்புறம் பாரு சாமி சேதிய.”

“பொம்பளைக்கில்லன்னேம்லல?”

பற்கள் தெரிய “நம்பிட்டேன்” என்றான். கைகள் நடுங்க, மிகுந்த நம்பிக்கையுடன் எல்லாத் தெய்வங்களையும் வேண்டியபடி, உதடுகள் வசிய மந்திரத்தை ஜெபிக்க, அவன் கொடுத்த வசிய மருந்தை வாங்கினார்.

“ஓம் நமோ பகவதே மங்களேஸ்வரீ சர்வமுகராஜனீ சர்வகரம் மாதங்கீ குபாரிகே லகுலகு வசம் குரு குரு ஸ்வாஹா”

-முற்றும்.

நன்றி: யுகமாயினி, ஏப்ரல் 2008

Share

வெளிரங்கராஜனின் ஊழிக்கூத்து நாடகம் – அறிவிப்பு

நாடக வெளி வழங்கும் தமிழ் நாடகம்

ஊழிக்கூத்து

எழுத்து, இயக்கம்: வெளி ரங்கராஜன்

30.03.2008
ஞாயிறு மாலை 7 மணி
அலையான்ஸ் ப்ரான்சேஸ் அரங்கம்
24, காலேஜ் ரோடு, சென்னை – 6.

Share

வயிறு – சிறுகதை

தாசிவப் பண்டாரத்தின் சங்கொலி இரவின் எல்லாத் திசைகளிலிலும் பரவி அதிர்ந்தது. சிறிய சலசலப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணியும் எப்போதும் சிரித்து அருள் பாலிக்கும் முருகனும் வேப்ப இலைகளைக் கூட்டி தீமூட்டி கொசு விரட்டும் பாண்டியும் தவிர யாரும் அதைக் கேட்டிருக்கமுடியாது. பண்டாரம் அதிகக் கவலை கொள்ளும்போதோ பழம் நினைவுகள் அவரைத் துரத்தும்போதோ அன்றைய இரவுகளில் முருகனே வந்து நிறுத்தச் சொன்னாலும் சங்கூதுவதை நிறுத்தமாட்டார். அதில் ராகமெல்லாம் கிடையாது. ஒரே மாதிரியான இழுவை மட்டுமே. வேகம் அதிகரிக்கும்போது சங்கொலியின் சத்தம் கூடும். ‘சரி வுடு’ என்று பாண்டி சொல்லும்போது சில சமயம் அடங்கிப் போவார். சில சமயம் இன்னும் சத்தமாய் ஊதி ஒதுங்க இடம் தேடும் ஒன்றிரண்டு நாயை விரட்டி வைப்பார்.

அன்றைய தினம் பண்டாரத்தின் கோபத்துக்குக் காரணமானவர்கள் இரண்டு சிறுவர்கள். எந்தக் குடும்பமோ நேர்ச்சைக்காக பால் குடம் எடுக்க வந்திருந்தார்கள். பால் குடம் எடுக்கும் அன்று சதாசிவப் பண்டாரமே முக்கியப் புள்ளி. அவர் சங்கூதிக்கொண்டே குறுக்குத்துறை பிரகாரங்களில் செல்ல, அந்த ஒலியின் மீது கால்வைத்தே சனங்கள் பின்னால் வரும். மலையைக் குடைந்து ஓட்டையுடன் கிடக்கும் பிரகாரத்தின் ஓட்டைகள் வழியே வெயில் அவர் மேலே வழியும்போது அவர் ஆனந்தப் பரவசமாகி சிவனே சங்கூதுவதாக எண்ணிக்கொண்டு ஊதுவார். கோவில் பூசாரி போதும் என்று சொல்லுமட்டும் ஊதிக்கொண்டே இருப்பார். வலது கையால் சங்கைப் பிடித்துக்கொண்டு, இடது கையால் கழுத்தில் கிடக்கும் உத்திராட்சைக் கொட்டைகளை அவர் சரி செய்யும் காட்சி அவருக்கு இஷ்டமானது. அடிக்கடி அதைச் செய்வார். சில பையன்கள் பால்குடத்தைப் புகைப்படம் எடுத்தபோது, இடது கையால் சைகை செய்து தன்னை ·போட்டோ எடுக்கச் சொன்னார். அவர் அப்போது கொடுத்த போஸ் குறித்த கர்வம் எப்போதும் அவருக்கு உண்டு. நெஞ்சை நிமிர்த்தி, உத்திராட்சக் கொட்டைகள் மார்பில் தனித்து தெரியும் வண்ணம், வலை கையில் சங்கைப் பிடித்துக்கொண்டு, பார்வதி மட்டுமே அருகில் இல்லை என்கிற பாவத்துடன் கொடுத்த போஸ் அது. அப்போது ஒரு சிறுவன் ‘எல, அவர் வயித்த பாத்தியா’ என்றான். ‘ஆமால, தினுசே இல்லாம கெடக்கே, பயமா இருக்குலே’ என்றான் இன்னொரு சிறுவன். சகலமும் சுருங்கி போனது பண்டாரத்துக்கு.

பாண்டி மெல்ல “சரிவே வுடும், ஒதுங்கிக் கெடக்க பண்டாரத்துக்கு வயிறு எப்படிருந்தா என்னவே. கொமரிங்க வந்து தடவப்போறாளுகளா” என்றார். பண்டாரத்திற்கு சமாதானம் ஆகவில்லை. தொண்டை வறண்டு போனதால், சங்கை ஓரமாக வைத்துவிட்டு, பாதி புகைக்காமல் கிடந்த சுருட்டை எடுத்து பற்ற வைத்தார். தொண்டைக்கு இதமாக இருந்தது. அவரும் அவர் வயிற்றைப் பற்றிச் சில தினங்கள் நினைத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் அவரது வயிறு பெரும் தொப்பையைப் போன்று வீங்கித்தான் கிடந்ததாக நினைத்திருந்தார். இரவுகளில் தூண்களில் சாய்ந்து படுத்துறங்கும்போது தனது வயிற்றையே தூணுக்கு அண்டை கொடுத்துப் படுத்துக்கொள்வார். சில மாதங்கள் கழிந்தபோது வயிறு ஒரு தினுசான வடிவத்தில் இருப்பதாகத் தோன்றியது. பிரமையாக இருக்கலாம் என்று நினைத்தார். அன்று வந்த பூசாரி திடீரென்று ‘என்னவே வயிறு தினுசாயிட்டு கெடக்கு’ என்றார். தன் வயிற்றை ஒரு கணம் பார்த்துவிட்டு, ‘ஒம்ம வயிற நீரு பாரும்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டார். அன்றிரவு பாண்டியிடம் கேட்டார். ‘அப்படி ஒண்ணும் தெரியலயே பண்டாரம்’ என்றான். பண்டாரத்தை ஒரு சிநேகப் பார்வை பார்த்துவிட்டு, வழக்கம்போல் வயிற்றை தூணுக்கு அண்டை கொடுத்துப் படுத்தார். மறுநாள் அவரது புகைப்படத்தைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனான் பால்குடத்துக்கு வந்து படம் எடுத்தவன். அவருக்கே கொஞ்சம் திக்கென்றிருந்தது அவரது உருவத்தைப் பார்த்தபோது. முடியெங்கும் சடை கட்டி, நான்கைந்து உத்திராட்ச வரிசைகள் கழுத்தில் தொங்க, மார்பு வீங்கி, வயிறு உருவமற்று உருண்டு கிடந்தது. இத்தனை நாள் கண்ணாடியில் முகம் பார்த்திருக்கிறாரே ஒழிய அவரது வயிற்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் அவருக்கு எழவில்லை. மனதில் பெரும் பாரம் இறங்க ‘சிவ சிவா’ என்றார்.

‘டவுணாஸ்பத்திரிக்கு போவுமே’ என்றான் பாண்டி. ‘அது மட்டுந்தான் பாக்கி கெடக்கு’ என்று அலுத்துக்கொண்டார் பண்டாரம். ‘ஊதற மட்டும் ஊதுவோம், சிவன் பாத்துக்குவான்’ என்பது அவரது எண்ணம். ‘நீரு வாயில நல்லா சொல்லுதீரு, ஆனா வயிறு இப்படி ஆயிட்டுன்னு ரொம்ப மருகிற மாதிரி தெரியுதுவே’ என்றான் பாண்டி. பண்டாரம் ஒன்றும் சொல்லவில்லை. லேசாக வயிற்றைத் தடவிப் பார்த்துக்கொண்டார். வலதுபக்கம் வீங்கி இடது பக்கம் சுருங்கி கரும் நிறத்தில் வடிவமற்ற இலகுவான பாறை போன்று உருண்டது. ஏனோ அழவேண்டும் போல இருந்தது பண்டாரத்திற்கு. பாண்டி, ‘சங்க எடுத்துறாதீரும்’ என்று பல்லைக் காட்டிச் சிரித்தான்.

மறுநாள் பூசாரி கோயிலைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார். வாசலில் சடைமுடியுள் கையைவிட்டு எதையோ தேடிக்கொண்டிருந்தார் பண்டாரம். பாண்டி நீர் மொண்டு கொடுக்க ஆற்றுக்குள் இறங்கியிருந்தான். பூசாரி ஆரம்பித்தான். ‘பண்டாரம், சொல்றேன்னு வெடைக்காத. டவுணாஸ்பத்திரிக்கு போய் வயிறு வீங்கிக் கெடக்குன்னு சொல்லி மாத்திர மருந்த வாங்கிப் போடும். வயிறு வெடிச்சு செத்துடாதீரும்’ என்றார். பண்டாரம் எரிச்சலுடம் ‘ஒன் வேலய பாரு சாமி’ என்றார். ‘ஏன் சொல்லமாட்டீரு, வேளைக்கு பிரசாதம் கொடுக்கேன்ல, வாய் இப்படித்தான் பேசும்’ என்றார். ‘நீரு கொடுக்கலைன்னா எவனாது கொடுப்பாம்’ என்றார் பண்டாரம். பாண்டி வந்து, ‘ஐயர் சொல்றதுல காரியம் இருக்குவே. சோத்துக்கில்லாம வயிறு வீங்கிச் செத்தா அசிங்கமில்லியா’ என்றான். மெல்ல கண்ணைச் சிமிட்டிக்கொண்டே, ‘விசாலத்தயும் பாத்த மாதிரி இருக்கும், டவுணாஸ்பத்திரிக்கு போரும்வே’ என்றான். அன்றிரவு பண்டாரம் ஊதிய சங்கின் ஒலி கைலாயத்தை அடைந்து சிவனின் காதையே கிழித்திருக்கவேண்டும். கடுமையான ஆங்காரத்துடன் எழுந்த ஒலி அது. பாண்டி லேசாக நடுங்கினான். கைலியை இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்கிப்போனான்.

விசாலம் ஒரு தடவை பண்டாரத்திடம் உத்திராட்சக் கொட்டை கேட்டு வந்தாள். பண்டாரம் கர்வத்துடன் தன்னிடமிருந்த முப்பத்திரண்டு பக்க உத்திராட்சத்தை தரமுடியாது என்று சொல்லி அனுப்பினார். ‘கேட்டியா, இது சிவனே நேர்ல தந்ததாக்கும். நீ பசப்பிக்கிட்டு வந்து மொலயக் காட்டி நின்னா தந்துடுவானா இவன்’ என்று திட்டி அனுப்பினார். பூசாரியிடம் சொன்னார், ‘எங்க எவன்கிட்ட எது இருக்குன்னு இவளுவளுக்கு எப்படித்தான் தெரியுமோ’ என்று. ஆனால் விசாலம் விடுவதாய் இல்லை. தினமும் வந்தாள். அவளது எடுப்பான பல்லைப் பற்றிச் சொல்வார் பண்டாரம். அவள் பதிலுக்கு அவரது வயிறை சொல்லிக்காட்டிச் சிரிப்பாள். மெல்ல மெல்ல எடுப்பான அவளது பல் மறைய, பண்டாரத்திற்கு அவள் உடலின் தினவு தெரிய ஆரம்பித்தது. பண்டாரமும் விசாலமும் எச்சிலொழுகப் பேசுவதைப் பாண்டி வாய் பார்த்துக்கொண்டு நிறபான். ஒரு தடவை பூசாரியிடம் சொல்லி ‘இது சிவனுக்கே அடுக்குமா’ என்றான். பூசாரி பாண்டி சொன்னதைக் கேட்டு ‘போல அந்தால’ என்று விரட்டினார்.

டவுணாஸ்பத்திரியில் விசாலத்தைப் பார்த்து ‘காரியத்த சொல்லு’ என்று பூசாரி கேட்டதும், ‘அது கைல 32 பக்க உத்திராட்சம் கெடக்கு. அது சிவனே கொடுத்ததாம். யார்கிட்டயும் சொல்லிப்பிடாதேயும். அது கெடச்சா நிறைய மந்திரம் செய்யலாம்னு சொல்லி கேட்டுவிட்டது பரமசிவம். அதுக்குத்தான்’ என்றாள். பூசார் கெக்கெ பிக்கெ என்று உடல் குலுங்கிச் சிரித்து, ‘அவன் சொன்னானாம் இவ நம்பினாளாம் அவன் அனுப்பினானாம், இவ வந்தாளாம் எக்கேடும் கெட்டுப் போங்க, கோவில்னு மனசுல வெச்சிக்கிடுங்க’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். விசாலத்திற்கு யோசனையாய் இருந்தது.

அன்று இரவு தூணுக்கு பதில் விசாலத்திற்கு அண்டை கொடுத்துப் படுத்திருந்தார் பண்டாரம். அவரது வயிற்றை விசாலம் தடவ ‘கேலி பண்ணுவியேட்டி’ என்றார் பண்டாரம். ‘புடிக்காமயா கேலி’ என்றாள் விசாலம். பல நாளாக அலசாத சடை முடியிலிருந்து எழுந்த வீச்சமும் விசாலத்தின் வாயிலிருந்து எழுந்த துர்நாற்றமும் வெளியெங்கும் பரவியது. பாண்டி சுருட்டு பிடித்து அந்த நாற்றத்தை ஓட்டினான். மறுநாள் காலை பண்டாரம் எழுந்து குளிக்கப்போகும்போது அவரது உத்திராட்ச மாலை அறுந்து கிடப்பதைப் பார்த்தார். சிவன் கொடுத்த உத்திராட்சத்தைக் காணாமல் ஒரு நிமிடம் பதறினார். பின்பு பதற்றப்படவேண்டாம் என்று முடிவுக்கு வந்துவிட்டார். அதற்குப் பிறகு அவர் விசாலத்தைப் பார்க்கவில்லை. அவளும் ஏனோ வரவேயில்லை. பாண்டி டவுணாஸ்பத்திரிக்குப் போய்விட்டு வந்தபின்பு பண்டாரத்திடன் விசலாம் விசாரித்ததாகக் கூறுவான். அசட்டுச் சிரிப்பு சிரிப்பார் பண்டாரம். ‘சிரிக்காதேரும், அவளுக்க சோலியே இப்ப இதுதானுட்டு கேள்வி.’

‘அப்ப ஒருவாட்டி போயி பாக்கலாங்கியா’ என்றார் பண்டாரம். ‘பின்ன, அதுல்லா ஆம்ளைக்கு அளகு’ என்றான் பாண்டி.

பண்டாரம் ஆற்றில் குளித்து, முடி காயவைத்து, சடை கட்டி, வயிற்றுக்கு விபூதி பூசி டவுணாஸ்பத்திரிக்குக் கிளம்பினார். கூட பாண்டியும் ஒட்டிக்கொண்டான். ஆஸ்பத்திரியில் அவரைப் பார்த்த சிறுவர்கள் அவரது வயிறைக் கேலி செய்து ஓடினார்கள். கூட இருந்த பாண்டி அவரது வாட்டத்தைப் போக்கும் வண்ணம் எதாவது சொல்லிக்கொண்டே வந்தான். சீட்டெழுதிக் கொடுத்தார்கள். டாக்டரிடம் ‘கடுமையான வயித்தவலி கேட்டீளா’ என்றார் பண்டாரம். டாக்டர் ஊசிக்கு எழுதிக்கொடுத்தார். ஊசி போடும் அறையில் விசாலம் பெருக்கிக்கொண்டிருந்தாள். பாண்டி ‘பாரும்வே ஒம்ம பார்வதிய’ என்றான். எடுப்பான பல்லைத் தவிர எதையுமே காணவில்லை பண்டாரம். அவருக்கு திக்கென்றிருந்தது. சிவன் சூலத்தோடு அவரது தலைக்குள் ருத்ர தாண்டவம் ஆடுவது போல இருந்தது. உடனே அங்கிருந்து போய்விட அவசரப்பட்டார். ‘இம்புட்டு வந்துட்டு பேசாம போனா எப்படி’ என்றான் பாண்டி. அவரது கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருப்பதைப் பார்த்து கொஞ்சம் பயந்து, ‘சரி போயிடலாம்’ என்று அவரைக் கூட்டிக்கொண்டு குறுக்குத்துறைக்கு வந்துவிட்டான். பூசாரி ‘இன்னிக்கு காரியம் எதுவும் உண்டுமால?’ என்று கேட்டார். பாண்டி கண்ணைக் காட்டினான். பண்டாரம் எதுவும் பேசவில்லை.

இரவில் சங்கொலி பாண்டியின் காதைத் துளைத்தது. தூணுக்கு வயிற்றை அண்டை கொடுத்துப் படுத்தபோது பண்டாரத்திற்குக் கண்ணீர் வந்தது.

நன்றி: பிப்ரவரி 2008, வடக்கு வாசல்.

Share

2007 – சேமிப்பு

பார்த்தவை:

களியாட்டம் – ஜெயராஜ் – மலையாளம் 50/100

கல்லூரி (பாலாஜி சக்திவேல்) – 45/100

Wheel Chair (Hindi) – 46/100

Catch me if you can (Steven Spielberg) – 45/100

அகாந்துக்- Agantuk (பெங்காலி, சத்யஜித்ரே) – 50/100

சூரஜ்கா சாத்வன் கோடா (ஹிந்தி, ஷ்யாம் பெனகல்) – 60/100

ரூய் கா போஜ் (ஹிந்தி, பங்கச் கபூர் நடித்தது) – 48/100

ஸ்த்ரீ (தெலுங்கு, சேதுமாதவன்) – 44/100

நாகமண்டலா (கன்னடம், கிரீஷ் கர்நாட்) – 45/100

ருடாலி (ஹிந்தி) – 50/100

பெஸ்டோன்ஜி (ஹிந்தி, விஜய் மேத்தா) – 48/100

த்வீபா (கன்னடம், கிரீஷ் காசரவள்ளி) – 54/100

ஸ்வராஜ் (ஹிந்தி, இயக்கம்: அன்வர் ஜமால்) – 46/100

பதேர் பாஞ்சாலி (பெங்காலி, சத்ய்ஜித் ரே) – 56/100

அதிதி (கன்னடம்) – 45/100

Blood Diamond – 48/100

மறுபடியும் மறுபக்கம் (தமிழ், இயக்கம்: சேது மாதவன்) – 48/100

பங்கர்வாடி (மராட்டி மொழித் திரைப்படம்) – 48/100

தர்பன் (ஹிந்தி திரைப்படம்) – 42/100

சனாபி (மணிப்பூரி மொழித் திரைப்படம்) – 40/100

Life is beautiful (Italian Movie) – 65/100

Amistad – 58/100

பூத்திருவாதர நாளில் (மலையாளம், இயக்கம்: கோபிநாத்) – 40/100

பாடம் ஒண்ணு ஒரு விலாபம் (மலையாளம், இயக்கம்: டி.வி.சந்திரன் – 48/100

மம்மோ (ஹிந்தி, ஷ்யாம் பெனகல்) – 52/100

சந்தியா ராகம் 52/100

ஒருத்தி 48/100

சிவாஜி 45/100

பெரியார் 38/100

அந்தர் மஹால் – 44/100

The Pursuit of Happyness – 50/100

Children of Heaven – 60/100

லீலா – 40/100

சென்னை 600028 – 42/100

சாருலதா (சத்யஜித் ரே)- 55/100

Ice Age Part 1 – 52/100

Ice Age Part 2 – 48/100

Happy Feet – 45/100

மொழி – 40/100

பருத்தி வீரன் – 48/100

Jungle Book Part 1 – 40/100

Jungle Book Part 2 – 45/100

The Exorcist – 55/100

பெருமழக்காலம் – 50/100

வாசித்தவை:

மீன்காரத் தெரு – கீரனூர் ஜாகிர் ராஜா

பிறப்பு – யூ.ஆர். அனந்தமூர்த்தி

கு.ப.ராஜகோபாலன் சிறுகதைகள்

ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் – ஜெயகாந்தன்

சிறை அனுபவம் – சடகோபன்

? – ஞாநி

என் இலக்கிய நண்பர்கள் – ந.முருகேசபாண்டியன்

பாரதியாரின் கடிதங்கள் – தொகுப்பு: ரா.அ.பத்மநாபன்

சோளகர் தொட்டி – பாலமுருகன்

குறத்தி முடுக்கு – ஜி.நாகராஜன்

குஞ்ஞுண்ணியின் கவிதைகள் – பா.ஆனந்தகுமார்

பீக்கதைகள் – பெருமாள் முருகன்

பாலியல் தொழிலாளியின் சுயசரிதை – நளினி ஜமீலா

சுண்ணாம்பு கேட்ட இசக்கி – அ.கா.பெருமாள்

பிஞ்சுகள் – கி.ராஜநாராயணன்

உறுபசி – எஸ்.ராமகிருஷ்ணன்

புதுமைப்பித்தன் சிறுகதைகள்

Share

சுஜாதா நினைவுகள் – 02.03.2008 ஞாயிறு அன்று நாரத கான சபாவில் கூட்டம்


ஜெயகாந்தன், கமல்ஹாசன், மணிரத்னம், கனிமொழி, பார்த்திபன், ராஜீவ் மேனன், கு.ஞானசம்பந்தன், மருது, இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, வஸந்த், மதன் உடபட பலரும் இந்த நிகழ்சியில் பங்கேற்க இருக்கின்றனர்.

2.3.2008 ஞாயிறு மாலை நாலு மணிக்கு நாரத கான சபாவில் (314, டி.டி.கே சாலை, சென்னை-18) இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Share

பிரிக்க முடியாத மௌனம். – சுஜாதாவிற்கான அஞ்சலி – எஸ்.ராமகிருஷ்ணன்

பிரிக்க முடியாத மௌனம் – சுஜாதாவிற்கான அஞ்சலி – எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

Share

சுஜாதாவின் உடல் நாளை (29.02.08) பார்வைக்கு…

சுஜாதாவின் பூத உடல் நாளை அவரது இல்லத்தில் காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை (இரண்டு மணி நேரம் மட்டும்) பார்வைக்கு வைக்கப்படும். அஞ்சலி செலுத்த விரும்புவர்கள் ’10, ஜஸ்டிஸ் சுந்தரம் அய்யங்கார் தெரு, மயிலாப்பூர்’ என்கிற முகவரியிலுள்ள அவர் வீட்டில் அஞ்சலி செலுத்தலாம்.

இன்று அவரது உடல் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் தவறானவை. சுஜாதாவின் வீட்டில் இருக்கும் தேசிகன் இந்தத் தகவலை வெளியிடச் சொன்னார்.

Share

சுஜாதா – சில கணங்கள்

1997ல் TACல் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த புத்தகசாலையில் இருந்த புத்தகங்களில் சுஜாதாவின் புத்தகங்களை ஒன்றுவிடாமல் வரிசையாக வாசிக்க ஆரம்பித்தேன். அப்போது தொடங்கிய சுஜாதா எழுத்தின் மீதான மோகம் இன்றுவரை அப்படியே தொடர்வதை நினைக்கும்போது, காலம் காலமாகத் தன் எழுத்தின் மூலம் வாசகர்களைக் கட்டிப்போட்ட அவரது அசாத்திய திறமை ஆச்சரியம் அளிக்கிறது. அந்த நேரத்தில் நான் தீவிரமாக வாசித்த பாலகுமாரனின் எழுத்துகள் அந்த இடத்திலேயே நின்றுபோனதையும் சுஜாதா என்னுடன் தொடர்ந்து வந்துவிட்டிருப்பதையும் நினைத்துப் பார்க்கிறேன். பல தலைமுறைகளுக்கான எழுத்தாளர் சுஜாதா. அம்பலம்.காமில் சுஜாதா அரட்டைக்கு வருகிறார் என்று தெரிந்தபோது நானும் அரட்டையில் கலந்துகொள்வேன். அப்போது நான் துபாயில் இருந்தேன். சனிக்கிழமை அங்கு விடுமுறை இல்லை. அதனால் என்று சனிக்கிழமை அரசு விடுமுறை வருகிறதோ அன்றுமட்டுமே அவருடன் அரட்டை செய்யமுடியும். அப்படியும் சில சனிக்கிழமைகள் அவருடன் அரட்டை அடித்திருக்கிறேன். நான் அரட்டை செய்த சமயங்களில் அரட்டை செம சூடாக இருந்ததுண்டு. ஆனால் எந்த விதமான கேள்விகளுக்கும் சுஜாதா மிக எளிமையான பதிலால் எளிதாக என் கேள்விகளைத் தாண்டிச் சென்றது நினைவிருக்கிறது. மரத்தடியில் ‘எழுத்தாளர்களைக் கேளுங்கள்’ என்கிற நிகழ்ச்சியை நடத்தியபோது, தேசிகன் மூலம் சுஜாதாவிடம் தொடர்புகொண்டோம். பொதுவாகவே இணையக் குழுமங்களின் மீதும், இணையத் தமிழின் மீதும் மதிப்பு இல்லாதவராக இருந்தார் சுஜாதா. ஆனாலும் மரத்தடியில் அவர் கேள்வி பதில் இடம் பெற வேண்டும் என்கிற எண்ணத்தில், விடுமுறைக்காக மஸ்கட் சென்றிருந்தபோது அங்கிருந்து தொலைபேசினேன். அப்போதுதான் அவருடன் அரட்டையிலும் பேசியிருந்தேன். தொலைபேசியில் அழைத்து, ‘சார் எப்படி இருக்கீங்க’ என்ற கேட்டபோது, ‘தேங்க்ஸ்’ என்றார். நான் பேசிய நான்கைந்து முறையும் எப்படி இருக்கீங்க என்ற கேள்விக்கு தேங்க்ஸ் என்றுதான் பதில் சொன்னார். மரத்தடி குழுமத்தின் மூலம் நடத்தப்படும் ‘எழுத்தாளரைக் கேளுங்கள்’ நிகழ்ச்சியில் அவர் பங்குகொள்ளவேண்டும் என்றபோது, ‘க்ரூப்ஸ்லல்லாம் அப்யூஸிவா எழுதுறாங்க. ஸோ வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார் ராகாகியில் நடந்த விஷயங்கள் அவருக்கு சலிப்பைத் தந்திருக்கவேண்டும். பின்னர் தேசிகன் மூலம் அணுகியதும் சரி என்று ஒப்புக்கொண்டார். ஆனால் சில தினங்களில் அவருக்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாகவும் உடல்நிலைக் குறைவு காரணமாகவும் அது சாத்தியமில்லாமல் ஆனது.

அடுத்தமுறை சுஜாதாவுடன் பேசியது ஆசி·ப்மீரானுடன் வசந்தபவன் ஹோட்டலில் சாப்பிடுக்கொண்டிருந்தபோது. அப்போது நாடோடித் தென்றல் படத்திலிருந்து ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. சில நாள்களுக்கு முன்பு துபாய் வந்திருந்த சுந்தர் நாடோடித் தென்றல் படம் சுஜாதாவின் ‘ரத்தம் ஒரே நிறம்’ நாவலைப் பின்னி எடுக்கப்பட்டிருந்தது என்று சொல்லியிருந்தார். நான் அதை ஆசி·பிடம் சொன்னேன். ஆசி·ப் இல்லவே இல்லை என்றார். நான் அந்த நாவலைத்தான் படம் எடுத்திருக்கிறார்கள் என்று சொல்லவும், அவர், ‘சுஜாதா நம்பர் உங்கிட்ட இருந்தா கேளுயா’ என்றார். நான் அவரது நம்பரைச் சொன்னேன். உடனே அவரது தொலைபேசியிலிருந்தே அழைத்துவிட்டார். சுஜாதாவுடன் என்ன பேசுவது என்று தெரியாமல், நேரடியாக ‘நாடோடித் தென்றல் ரத்தம் ஒரே நிறம் நாவலோட வடிவமா சார்’ என்று கேட்டேன். இல்லை என்றார். சரி சார் என்று சொல்லி வைத்துவிட்டேன். வேறெதுவும் பேசாதது மிகவும் கஷ்டமாக இருந்தது. இதைச் சொல்லி ஆசி·ப் நிறைய நாள் சிரித்துக்கொண்டிருந்தார். இப்போது யோசித்துப் பார்த்தால், சுஜாதா தன் எழுத்து மூலம் அவரது வாசகர்களை ஒரு நண்பனைப் போல் அடைந்திருக்கிறார் என்று புரிகிறது. அவரது தீவிர வாசகர்கள் எப்போதும் அவருடன் மானசீகமாகப் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இல்லையென்றால் அப்படி சட்டென என்னால் சுஜாதாவை அழைத்திருக்கமுடியாது.

தேசிகன் மூலம் நண்பர்கள் சிலர் அவரைச் சந்தித்தோம். ஆறு மணிக்கு சரியாக உட்லேண்ஸ் டிரைவி இன் வந்த அவர் மிக இயல்பாக எல்லாருடனும் பேசினார். இப்படி சிலர் சேர்ந்து அவரை வறுத்தெடுக்கிறோமே என்று எல்லாருக்குமே தோன்றினாலும், விடாமல் அவருடன் பேசிக்கொண்டிருந்தோம். கமல், ரஜினி, சிறுகதை, தொடர்கதை, பிரபந்தம் என ஆளாளுக்குப் பல கேள்விகள் கேட்டோம். எல்லாவற்றிற்கும் பதில் சொன்னார். கவிதைகள் பற்றிப் பேச்சு வந்தபோது என்னைப் பார்த்து ‘நீங்ககூட கவிதை நல்லா எழுதுறீங்களே’ என்றார். இரண்டு முறை சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. அவருக்கு அபுல்கலாம் ஆசாத்தின் கஜல் புத்தகத்தையும் ஹரிகிருஷ்ணனின் அனுமன் வார்ப்பும் வனப்பும் புத்தகத்தையும் அன்பளிப்பாகக் கொடுத்தேன். இனிமையாக முடிந்த அந்த சந்திப்புக்குப் பின்னர், இரண்டு நாள்கள் கழித்து வந்த ஆனந்தவிகடன் கற்றதும் பெற்றதும் பகுதியில், இந்த சத்திப்பைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, இதன் மூலம் அவருக்குக் கிடைத்த செய்தியாக ‘வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையேயான இடைவெளி அவசியம்’ என்பதைச் சொல்லியிருந்தார். சந்திப்பில் பங்குகொண்ட அனைவருக்குமே கொஞ்சம் திக்கென்றிருந்தது. சுஜாதாவுடன் சந்த்திப்பில் பேசிக்கொண்டிருந்தபோது, பலர் இடையே வந்து அவரிடம் ஆட்டோகிரா·ப் வாங்குவதும் அவரது ·போன் நம்பர் கேட்பதும் அவரது வீட்டுக்கு வரலாமா என்று கேட்பதுமாக இருந்தார்கள். அவருடைய பாப்புலாரிட்டியின் காரணமாக அவர் எப்போதும் வாசகனுடன் ஒரு இடைவெளியை வைத்திருக்க விரும்பினார். அதுமட்டுமின்றி என் கணிப்பில் அவர் ஒரு தனிமை விரும்பியாக இருந்தார். தனிமையைக் கொண்டாடுவாரோ என்று கூட நினைத்திருக்கிறேன். தேசிகனிடம் ஏன் கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா இப்படி எழுதினார் என்று கேட்டபோது, கற்றதும் பெற்றதும் பகுதியைப் படித்துவிட்டு பலர் அவருக்கு ·போன் செய்து, நாங்களும் டிரீட் தருவோம், எங்களுடனும் பேசவாருங்கள் என்று அழைத்தார்களாம், அதைத் தவிர்க்கவே சுஜாதா அப்படி எழுதினார் என்று விளக்கம் கூறினார். சுஜாதாவின் எழுத்துகள் அவரை அவரது வாசகர்களிடம் ‘சுஜாதா என்பது நண்பன்’ என்கிற தோரணையோடே அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் அவரது எழுத்து நடை. 1965இல் அவர் எழுதிய கட்டுரையை வாசிக்கும்போது நேற்று எழுதிய கட்டுரையை வாசிப்பதுபோன்றே தோன்றுகிறது. மிக நீண்ட நிகழ்வுகளைக் கூட சில வரிகளில் நமக்குச் சொல்லி முடிக்கிறார். அதோடு சம்பந்தமுடைய ஒரு நிகழ்ச்சியை ஒரு வரியில் சொல்வதன் மூலம் வாசகனை மிக நீண்ட பிராயணத்திற்கு சில நொடிகளில் தயார் செய்துவிடுகிறார். இந்த வேகம், எல்லாத் தலைமுறைகளையும் கவர்ந்திருக்கிறது. மட்டுமின்றி, தமிழின் நடையையே புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த வகையில் சுஜாதாவின் பங்களிப்பு என்றென்றும் முக்கியமானது. புத்தகக் காட்சியில் தமிழினி வசந்தகுமாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவரும் சுஜாதாவின் பங்களிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொன்னார். மிகக் கறாரான தேர்ந்தெடுப்பின் மூலம் கூட அவர் எழுதிய 60 சிறுகதைகளையாவது சிறந்ததென பட்டியலிட்டுவிடமுடியும். சிறுகதை எழுத்தாளராக சுஜாதாவின் பங்கு மிக முக்கியமானது.

சுஜாதாவுடனான உட்லேண்ட் சந்திப்பு முடிந்த சில நாள்கள் கழித்து எனி இந்தியன் புத்தகக்கடைக்கு ஒருவர் புத்தகம் வாங்க வந்திருந்தார். சில முக்கியமான புத்தகங்களை அவர் வாங்குவதைப் பார்த்ததும் அவரிடம் பேசினேன். பேச்சில் அவர் திருநெல்வேலிக்காரர் என்று தெரிந்தது. ஏதும் எழுதுவீர்களா என்று கேட்டபோது சுஜாதாவுக்கு கேள்வி எழுதுவேன்,வேற ஒண்ணும் எழுதுறதில்லை என்றார். அந்த வாரம் அவர் கேட்ட கேள்விக்கு பாராட்டாக ஒரு புத்தகம் வந்தது என்றார். சாதாரணமாக என்ன புத்தகம் என்றேன். ‘கஜல்னு ஒரு புத்தகம். யாரோ அவருக்கு பிரசண்ட் பண்ணியிருக்காங்க. உள்ள கையெழுத்தெல்லாம் இருக்கு’ என்றார். பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு நான் தந்த புத்தகம். இது சாதாரணமாக நடந்த ஒரு பெரிய நிகழ்ச்சியாக எனக்குத் தோன்றியது. தேசிகனிடம் சொன்னேன். ‘நல்ல சிறுகதை எழுதலாம் போல இருக்கே’ என்றார். பின்னர், எல்லாப் புத்தகத்தையும் அவர் யாருக்காவது பிரசெண்ட் பண்ணிடுவார், இல்லைன்னா அது அப்படியே அவர் வீட்டுலயே இருந்து வேஸ்ட் ஆயிடும் என்றார்.

ஒருசமயம், AnyIndian.comல் அவரது பூக்குட்டி புத்தகத்தை விற்பது தொடர்பாகப் பேச அவர் அழைத்தார். மிக அழகாக வடிவமைக்கப்பட்ட புத்தகத்தின் விலையை, விற்பனையாளர்களுக்குத் தரவேண்டிய கழிவு பற்றிய எண்ணமில்லாமல் வைத்துவிட்டதாகச் சொன்னார். இத்தனை நாள் எழுத்துலகில் இருக்கும் சுஜாதாவிற்கு இதுபோன்ற விஷயங்கள் புரியவே இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட ஐம்பது நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்பில் அவர் AnyIndian செயல்பாடுகளைக் கேட்டுக்கொண்டார். தமிழில் எல்லாப் புத்தகங்களையும் ஓரிடத்தில் தேடலாம் என்கிற எண்ணமே அவருக்கு நிறைய மகிழ்ச்சியைத் தந்தது. எங்களது கஸ்டமர் சர்வீஸ் பற்றிச் சொன்னபோது, அது ரொம்ப முக்கியம் என்றார். பின்னர் பூக்குட்டி புத்தகம் பற்றி பேச்சு வந்தபோது, எப்படியாது தள்ளிடணும் என்றார். உண்மையில் வயது முதிர்ந்த குழந்தையுடன் பேசுவது போன்ற சித்திரத்தைத்தான் என்னால் யோசிக்கமுடிந்தது. அதற்குப் பின்பு வந்த புத்தகக் காட்சிகளில் சுஜாதாவை சந்திப்பேன். ஜஸ்ட் ஒரு ஹலோ மட்டுமே. அவரும் ஹலோ ஹரன் என்பார். மீண்டும் ஒருமுறை அவரை சந்தித்தபோது, பூக்குட்டியை எப்படியாவது வித்திடணும் என்றார். கூடவே அது மாதிரி இன்னொரு புத்தகம் போடப் போறேன் என்றார். பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். நாங்கள் பதிப்பித்த புத்தகங்களைப் பார்த்த அவர், எல்லாப் புத்தகங்களின் க்வாலிட்டியும் ரொம்ப நல்லா இருக்கு என்றார். டெக்னாலஜி ரொம்ப முன்னேறினதால எல்லாருமே நல்ல புத்தகங்கள் போட ஆரம்பிச்சிட்டாங்க, முன்னல்லாம் செட்டியாருங்க என்ன க்வாலிட்டி சொல்றாங்களோ அதுதான் க்வாலிட்டி, இப்பல்லாம் யார்வேணா சுலபமா க்வாலிட்டியா புக் போடமுடியுது என்றார். பல விஷயங்கள் பற்றி அன்று பேசினார். சுந்தர ராமசாமி பற்றிய பேச்சு வந்தபோது, எவ்ளோ நல்ல சிறுகதையாளர் என்றார். அவரது ஆரம்ப கால சிறுகதைகளை வெகுவாகச் சிலாகித்தார் சுஜாதா. ‘பிராசதம் படிச்சுருக்கேங்களா? என்ன ஒரு பீஸ்’ என்றார். சு.ராவின் சமீபத்திய சிறுகதைகள் எல்லாம் கதையை விட்டுவிட்டு நடையை மையப்படுத்தி எழுதப்பட்டவை என்றார். ‘குழந்தைகள் ஆண்கள் பெண்கள்ல ஏதோ ஒண்ணு – ஆண்களோ பெண்களோ, நினைவில்லை – மட்டும் நல்லா இருக்கும். மத்ததெல்லாம் வெறும் எழுத்துதான். உத்வேகம் இல்லை’ என்றார். நான் அவரிடம், ‘இதையெல்லாம் நீங்க எங்கயும் எழுதுறதில்லையே சார்’ என்றேன். புன்னகைத்துக்கொண்டார். சுஜாதாவிடம், கணையாழியின் கடைசிப்பக்கங்களில் வெளியான சீற்றமும் கடும் விமர்சனமும் கொண்ட மனிதன் உயிர்ப்போடு கடைசி வரை இருந்தான். ஆனால் அவர் அவனை அடக்கி வைத்திருந்தார். அவன் அவரது கடைசிக் காலங்களில் வெளிப்படவே இல்லை. நட்பு என்னும் பெரிய திரை அவரை முழுதுமாக இறுக்கிவிட்டது. விமர்சனத்தை விட நட்பு முக்கியம் என்கிற கட்சிக்குள் வெகுவேகமாக சென்று சேர்ந்துவிட்டவர் அவர் என்பது என் எண்ணம்.

மீண்டுமொருமுறை அவரைச் சந்தித்தேன். அந்தமுறை சிவாஜி திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியிருந்தது. அவரைப் பார்க்க அவரது அலுவலகத்திற்குள் நுழையும்போதே என்னைப் பார்த்து, ‘வெயிட் போட்டுட்டீங்க’ என்றார். ‘அதுவா ஏறுது சார்’ என்றேன். ‘லிக்கர் சாப்பிடுவீங்களா?’ என்றார். இல்லை என்றேன். ‘பாருங்க ஷங்கர் எப்படி வெயிட் போட்டுட்டார்னு’ என்று ஆரம்பித்தார். ‘ஸார் நானும் பேட்டில பார்த்தேன். எப்படி இப்படி வெயிட் போட்டார்’ என்று கேட்டேன். ‘சினி ·பீல்ட்ல எல்லாருமே லிக்கர் சாப்பிடுவாங்க. நான் ஷங்கர்கிட்ட சொன்னேன், வெயிட் போட்டது பத்தி. இப்பதான் சிவாஜி முடிச்சிருக்கேன், இது ரெஸ்ட் பீரியட், அடுத்தபட வேலை ஆரம்பிச்சா எல்லாம் சரியாயிடும்னு சொல்றார். அதுவும் உண்மைதான். படம்ங்கிறது பெரிய வேலை. அதுவும் ஷங்கர் மாதிரி படங்களுக்கு அப்படி மெனக்கெடனும்’ என்றார். ‘ஆனா ரஜினி மட்டும் ஸ்லிம்மா இருக்கார்’ என்றேன். ‘அவரோட ·புட் ஹேபிட்’ என்றார். ‘ஸார், நான் பாட்டு கேட்டேன். நெட்ல வந்தப்ப சும்மா ஏமாத்தறாங்களோன்னு நினைச்சேன்’ ‘இல்ல, அதுதான். ஏ.ஆர்.ரஹ்மான் ·பாரின்லேர்ந்து அனுப்பறார். இடையில யாரோ விளையாடிருப்பாங்க. இப்பல்லாம் நெட்ல எதுவேணா செய்யலாம்.’ ‘பாட்டு கேட்டேன், பல்லே லக்கா சுமாரா இருக்கு. மத்ததெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.’ ‘அது சும்மா ஒரு ·பாஸ்ட் பீட் ஸாங். டைட்டில் சாங்’ என்றார். பின் படத்தின் நெகடிவ், பாஸிடிவ் என்றெல்லாம் நிறைய பேசினார். தமிழ்ப்படங்கள் பற்றிய சில கடுமையான அபிப்பிராயங்களையும் சொன்னார். ‘ஏன் இதெல்லாம் எழுதுறதில்லை ஸார்?’ சிரித்துக்கொண்டே, ‘கணையாழியில நிறைய எழுதிருக்கேன். நீங்க பார்த்தீங்கன்னா 35 வருஷமா எழுதறேன். ஆரம்பத்துல கணையாழியில இருந்த fire இப்ப கொண்டுவரமுடியாது. அப்படியே குறைஞ்சு குறைஞ்சு இப்ப கற்றதும் பெற்றதும் பாருங்க வெறும் டைரிக்குறிப்பு மாதிரிதான இருக்கு?’ எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. என்ன ஒரு எளிமையான, ஆழமான மதிப்பீடு. சுந்தர ராமசாமியைப் பற்றிய அவரது மதிப்பீட்டிற்கு இணையாக அவரே அவரைப் பற்றிய மதிப்பீடு ஒன்றை வைத்திருக்கிறார். ‘நீங்க உங்களுக்கு இருக்கிற எல்லா நண்பர்களையும் காயப்படுத்தாம இருக்க நினைக்கிறீங்க, அதனாலதான் க.பெ. இப்படி இருக்குன்றது என் எண்ணம்’ என்றேன். காலச்சுவடு, உயிர்மை, ஆனந்தவிகடன் பற்றி பல விஷயங்களைப் பேசினோம். ஜெயமோகன் எழுதி அவருக்குக் காணிக்கையாக்கியிருந்த விசும்பு புத்தகத்தை அவருக்கு அனுப்பியிருந்தேன். அதைப் பற்றிக் கேட்டேன். ஹார்ட் சயின்ஸ் ·பிக்ஷன், சா·ப்ட் சயின்ஸ் ·பிஷன் பற்றிப் பேசிய அவர், ஜெயமோகனின் கதைகள் புதிய திறப்பை ஏற்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை என்றார். ‘நானே அவர்கிட்ட பேசறேன்’ என்றும் சொன்னார். எங்கள் புத்தகங்களைப் பற்றிக் கேட்டபோது, பிரதாப சந்திர விலாசம் பற்றி ஆர்வமாகப் பேசினார். ‘அந்த மாதிரி புத்தகங்கள மக்கள் கிட்ட கொண்டு போணும். நீங்க சொல்றதே இண்டிரஸ்டிங்கா இருக்கு. விருத்தம், வசனம் கலந்த நாடகம். இண்டரஸ்டிங். எனக்கு அனுப்புங்க நான் பார்க்கிறேன்’ என்றார். ‘ஸார், நான் அனுப்பலாம்னுதான் நினைப்பேன். ஆனா அப்ப அப்ப கற்றதும்பெற்றதும்ல யாரும் எனக்கு புத்தகங்கள் அனுப்பாதீங்கன்னு எழுதுறதைப் பார்த்து அனுப்பலை’ என்றேன். ‘அது எழுதுறது எதுக்குன்னா, ஒரு நாளைக்கு 50 பார்சல் வருது. யாரு வாங்கி படிக்கிறது? அதுக்காகத்தான். சிடி கூட அனுப்பறாங்க இப்பல்லாம். நேத்துகூட ஒரு சிடி வந்தது.’ ‘ஆனா அப்படி எழுதிட்டு அடுத்த வரில கிடைச்ச புத்தகங்கள்ளேர்ந்து ஒண்ண எழுதிடறீங்க. திரும்பவும் எல்லாரும் அனுப்புவாங்க.’ ‘வேற வழியில்லை’ என்று சொல்லி சிரித்தார். அடுத்த வாரம் க.பெ.வில் பிரதாப சந்திர விலாசம் பற்றி எழுதியிருந்தார்.

அதன்பின்பு அவரைப் பார்த்தது கடந்த புத்தகக் காட்சியில். ‘ஸார் பிரசன்னா எனி இந்தியன்’ என்றேன். ‘ஹலோ ஹரன்’ என்று சிரித்தார். சில புகைப்படங்கள் எடுத்தேன். வா. மணிகண்டனின் ‘கண்ணாடியில் நகரும் வெயில்’ கவிதைப்புத்தகத்தை வெளியிட்டார். அவர் அந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்க்கக்கூட இல்லை. மனுஷ்யபுத்திரன் வெளியிடச் சொன்னார், அவர் வெளியிட்டார். இதுவும் அவர் நட்பு மேல் கொண்டிருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு. கடைசிவரை அப்படியே வாழ்ந்தார் அவர். இரண்டு மாதங்களுக்கு முன்பு எனி இந்தியனுக்காக ஒரு புத்தகம் கேட்டோம். நிச்சயம் தருகிறேன் என்று சொல்லியிருந்தார். சில நாள்களுக்கெல்லாம் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவும் அதைப் பற்றிப் பேசாமல் இருந்தோம். நேற்று கோ.ராஜாராமுடன் இரவு பேசிக்கொண்டிருந்தபோது, ‘நாம சுஜாதாவைப் பார்க்கலாம்’ என்றேன். ‘சரி’ என்றார். இந்தப் பேச்சு நடந்த ஒரு மணி நேரத்தில் தொலைபேசியில் ஒரு சோகக்குரல் என்னை உலுக்குகிறது சுஜாதாவின் மரணத்தைச் சொல்லி. நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்த சோகத்தை நான் அடைந்தேன். எனது shape-upல் சுஜாதாவின் பங்கு கணிசமாக இருக்கிறது என்பதை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். சமகால எழுத்தாளர்கள் பலர் எழுத்தில் எங்கேனும் ஓரிடத்தில் அவரது பாதிப்பை என்னால் பார்க்கமுடிகிறது. சுஜாதா தலைமுறையையே உருவாக்கிய எழுத்தாளர். தேசிகன் அவரது வாழ்க்கை வரலாறை எழுதும் எண்ணம் கொண்டிருந்தார். அது நிறைவேறுவதற்கு முன்பு சுஜாதா மறைந்தது அவருக்கும் எனக்கும் வருத்தமான விஷயம். இன்று எத்தனையோ பேர் சுஜாதாவின் மரணத்துக்காக வருத்தப்படுகிறார்கள். சுஜாதாவைத் தவிர எதையும் படிக்காத தலைமுறைகூட ஒன்றிருக்கிறது. ‘ஏன் இன்னும் கணேஷ் வசந்தெல்லாம் எழுதுறீங்க’ என்று நான் கேட்டபோது, அதன் வழியாக நல்ல இலக்கியத்திற்கு அதன் வாசகர்களைக் கூட்டி வரலாம் என்று சுஜாதா சொன்னது இதுபோன்ற தலைமுறை ஒன்றை எண்ணியே. இந்தத் தலைமுறையெல்லாம் இன்று தன் வீட்டில் துக்கம் நிகழ்ந்ததாகவே கருதும். இது ஒரு எழுத்தாளனுக்கு அளிக்கப்படும் உச்சகட்ட கௌரவம்.

புத்தகக் காட்சியில் திருமகள் நிலையத்துக்கு வந்த சுஜாதா திரும்பிச் செல்லும்போது மெல்ல நடந்து சென்றார். அவரால் தனியாக நடந்து செல்லமுடியாது. திருமகள் நிலையம் பதிப்பகத்தின் நிறுவனர் அவரை அழைத்துச் சென்றார். அவரும் உடல் நிலை சரியில்லாமல் வேகமாக நடக்கமுடியாத நிலையில் இருப்பவர். அவர் சுஜாதாவை ஆதரவாகப் பிடித்திருக்க, சுஜாதா அவரை ஆதரவாகப் பிடித்திருக்க, இரண்டு பேரும் மெல்ல நடந்து என்னைக் கடந்து சென்றார்கள். என் கண்ணின் வழியே விரிந்த அந்தக் காட்சி என்றும் என் நினைவில் நின்றிருக்கும் என்று அப்போதே தோன்றியது. இரண்டு முதிய குழந்தைகள் தவழ்வதைப் போன்ற சித்திரம் என் கண்ணை இப்போதும் நிறைக்கிறது. அன்புள்ள சுஜாதா, வருத்ததுடன், நெஞ்ச நிறைவுடன் உங்களுக்கு ஒரு good-bye.

Share