எனது முதல் புத்தகம் – நிழல்கள் கவிதைத்தொகுப்பு

நண்பர்கள் அனைவருக்கும்.

என்னுடைய கவிதைத் தொகுப்பை நான் வெளியிட்டிருக்கிறேன். இதுவரை நான் பல்வேறு யாஹூ குழுமங்களிலும், எனது வலைப்பதிவிலும் இதழ்களிலும் எழுதியவற்றை ‘நிழல்கள்’ என்னும் பெயரில் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறேன்.


இந்தக் கவிதையை மரத்தடி யாஹூ இணையக் குழுமத்துக்கு சமர்ப்பிக்கிறேன்.

இந்தக் கவிதைத் தொகுப்பு வருவதற்கு உதவிய ஜெயஸ்ரீ கோவிந்தராஜன், அட்டைப்பட வடிவமைப்பில் உதவிய மணிகண்டன், அச்சிட உதவிய பத்ரி, கிழக்கு பதிப்பக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.

நியூ ஹொரைஸன் வலைத்தளத்தில் இதுவரை கவிதைப்புத்தகத்தை விற்பனைக்கு வைத்ததில்லை. நான் கேட்டுக்கொண்டதற்காக, அதனை நியூ ஹொரைஸன் மீடியாவின் வலைத்தளம் மூலம் விற்பனை செய்ய அனுமதி தந்த பத்ரிக்கு் நன்றி.

Share

கடல் சிறுமியாக மாறிய கதை – கவிதை

கடல் சிறுமியாக மாறிய கதை

ஓட்டமும் நடையுமாக
கடற்கரையைக் கடந்த நாளில்
தற்செயலாகக் கவனித்தேன்
ஒரு சிறுமி கையில் பொம்மையுடன்
கடலோடு பேசிக்கொண்டிருந்தாள்.
வானெங்கும் பறந்துகொண்டிருந்த பட்டங்கள்
திக்கற்றுத் திரிந்தன
சிறுமியின் வார்த்தைகளைப் போல
ஆர்பரித்துக்கொண்டிருந்த கடல்
மெல்ல அடங்கத் தொடங்கியது
வீட்டுத் தோட்டத்தில்
வளரத் தொடங்கியிருக்கும் ரோஜா பதியனைப் பற்றி
அவள் சொல்லத் தொடங்கியபோது
கரையெங்கும் ரோஜாவின் வாசம்
அம்மாவின் மீது குற்றச்சாட்டு அத்தியாயத்தில்
நூலொன்று அறுந்து
தலைகுத்திக் கீழே விழுந்தது
சிரித்துக்கொண்டிருந்த பட்டம்
மெல்ல இருட்டத் தொடங்கி வானில் நட்சத்திரங்கள் தோன்றின
அவள் பொம்மைக்கு நட்சத்திரங்களைக் காட்டினாள்
செல்ல நாய்க்குட்டிக்கு சில முத்தங்களைக் கொடுத்தனுப்பினாள்
கரையின் இங்கு இடுக்குகளையெல்லாம்
கொஞ்சலால் நிரப்பிக் கொண்டிருந்தாள் சிறுமி
கடல் தன்னை மறந்து
சிறுமியோடு மானசீகமாகப் பேசிக்கொண்டிருக்க
பொம்மை அலைந்துகொண்டிருக்கும் கடலாய்
மாறிப் போயிருந்தாள் சிறுமி.

Share

உள்ளேயிருந்து ஒரு குரல் – கவிதை

உள்ளேயிருந்து ஒரு குரல்

எங்கோ
கிணற்றுக்குள்ளிருந்து ஒரு குரல்
தேடி அருகில் செல்லச் செல்ல
மாறிக்கொண்டே இருந்தது அதன் இடம்
மாயாவி விளையாட்டில்
உடல் சோர்ந்தபோது
மிக அருகில் கேட்கிறது அக்குரல்
என் தலைக்குள்ளிருந்து
கூவும் குயிலொன்றுக்கு
இசை பாடுகிறது
தெருப்பறவை
பதறிக் கண்விழித்த நேரத்தில்
மினுங்கிக் கொண்டிருந்த
மஞ்சள் விளக்கின் வெளிச்சத்தோடு
அறையெங்கும் அமைதி.
எங்கிருந்தோ என்னைத் தொடர்கிறது
பிறக்காத குழந்தையின் அழுகுரல்.

Share

ஒரு மோதிரம் இரு கொலைகள் – புத்தகப் பார்வை

சிறுவயதில் சில துப்பறியும் நாவல்கள் படித்திருக்கிறேன். எல்லா நாவல்களிலுமே ஏதேனும் ஒரு தவறை கொலையாளி செய்திருக்கவேண்டும் என்பதே விதி. அதை வைத்துக்கொண்டு ஆராய்வார் ஏதேனும் ஒரு துப்பறியும் ஆசாமி. பரத்-சுசிலா, விவேக்-ரூபலா போன்ற, ஒரே மாதிரியான துப்பறியும் ஆசாமிகள் என்னை துப்பறியும் கதைகளில் இருந்தே விரட்டினார்கள். சுஜாதாவின் கணேஷ் வசந்த் கொஞ்சம் மாடர்னாக துப்பறிந்தார்கள். பல அறிவியல் ரீதியான விஷயங்களைப் பற்றியெல்லாம் அவர்கள் வழியே சுஜாதா பேசிக்கொண்டிருப்பார். ஒரு கட்டத்தில் இந்தக் கதைகளும் எனக்கு போரடிக்க ஆரம்பித்தன. சுஜாதா போன்ற ஒருவர் இதுபோன்ற கதைகள் எழுதுவதில் நேரம் செலவழிப்பது தவறு என்ற முடிவுக்கு வந்தேன்.

ஒரு மோதிரம் இரு கொலைகள் என்னும் ஆர்தர் கோனன் டாயில் எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் கதை ஒன்றைப் படித்தேன். 1887ல் எழுதப்பட்ட இக்கதையைத் தமிழில் பத்ரி சேஷாத்ரி மொழிபெயர்த்திருக்கிறார்.

வழக்கம்போல ஒரு கொலை, அதில் விடப்படும் தடயங்கள், அதை காவல்துறை தவறாக ஆராய, ஷெர்லாக் ஹோம்ஸ் சரியாகத் துப்பறிந்து கொலையாளியைப் பிடிக்கிறார். கொலைக்கான காரணமும் கொலை செய்யப்படும் விதமும் மிகத் தெளிவாக விவரிக்கப்படுகின்றன.

ஆர்தர் கோனன் டாயில் எழுதிய முதல் துப்பறியும் கதை இது. இதில்தான் ஷெர்லாக் ஹோம்ஸ் முதன்முதலாகத் தோன்றுகிறார். எடுத்த எடுப்பிலேயே ஷெர்லாக் ஹோம்ஸை ஆகச் சிறந்த துப்பறியும் நிபுணராக டாயில் அறிமுகப்படுத்தும் விதம் அசர வைக்கிறது. வாட்சன் வாயிலாக, வாட்சனின் பிரமிப்போடு வாசகர்களின் பிரமிப்பையும் ஹோம்ஸ் மீது குவிப்பதில் டாயில் கவனமாகச் செயல்பட்டு வெற்றியும் பெற்றுவிடுகிறார். ஒரு கட்டத்தில் ஷெர்லாக் ஹோம்ஸை மறக்காத வாசகர்கள் அதனை உருவாக்கிய டாயிலை மறந்துவிடுவது பற்றி நினைத்துப் பார்த்தால், டாயிலின் கதாநாயக உருவாக்கம் நமக்குப் புரியும். புள்ளியியல் கணக்குகளின் வழியாகவும், பொது அறிவின் வழியாகவும் டாயில் இதைச் சாதிக்கிறார். பிற்காலத்தில் சுஜாதாவும் இதே போன்ற வகையிலேயே கணேஷ்-வசந்தையோ அல்லது தன் கதையின் நாயகன் நாயகியையோ உச்சத்துக்குக் கொண்டு செல்வதை நாம் பார்க்கமுடியும். செர்லாக் ஹோம்ஸ் தத்துவமும் பேசுகிறார். கொலையாளி கைது செய்யப்பட்டதும் தொடங்கும் இரண்டாவது பாகம், முதல் பாகத்தின் எழுத்தின் நடையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஆழமான விவரணைகளுடன் தொடங்குகிறது. சாதாரண காரணத்தைச் சொல்ல விரும்பாத ஹோம்ஸ், மார்மோன்களின் கலாசாரம் தொடங்கி, அதில் நடக்கும் விஷயங்களைக் கொலையின் முக்கியக் காரணமாக்குகிறார்.

முதல் நாவலிலேயே மிகத் தெளிவான திரைக்கதையை வைத்திருக்கிறார் டாயில். குறிப்பாக கொலையாளியை ஒரு ஹீரோவாக அவர் உருவாக்கும் விதம் முக்கியமானது. கொலையாளி கொலையை உடனே செய்துவிடவில்லை. அங்கேயும் ஒரு வாய்ப்பு தருகிறார். இரண்டு மாத்திரைகளில் ஒன்று விஷம் தோய்ந்தது. இன்னொன்று விஷமற்றது. கொலை செய்யப்படப்போகிறவர் முன்பாக நீட்டுகிறார் கொலையாளி. இன்றைய திரைப்படங்கள் வரை இந்த உத்தி நீண்டு வருவதை நாம் கவனிக்கலாம். நாயகனோ எதிர் நாயகனோ உடனே கொலை செய்வதையோ செய்யப்படுவதையோவிட ஒருவித ஹீரோயிசத்தைச் செய்வதை அன்றே தொடங்கி வைத்திருக்கிறார் டாயில். கொஞ்சம் தர்க்கம் கொண்டு பார்த்தால், பல காலமாக கொலைவெறியோடு அலையும் ஒரு மனிதன் இப்படி செய்வானா என்கிற சந்தேகம் வருகிறது. வாசகர்களுக்கு வரும் இந்த நம்பிக்கையின்மையின் விலை கதையின் சுவாரஸ்யமாக மாறுகிறது.

ஆங்கிலத்தில் படித்துப் பார்த்தேன். ஒப்பிட்டுப் படித்துப் பார்த்தேன். ஆங்கில நடை மிகக் கடுமையாக இருக்கிறது. 1890களில், கிட்டத்தட்ட நூற்றியிருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஆங்கில நாவலின் நடை எப்படி இருக்கும் என்பதை நாம் யூகித்துவிடலாம். தமிழில் அது மிகச் சிறப்பாகவே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கேண்டீட் நாவலை சிறப்பாக மொழிபெயர்த்திருந்த பத்ரி, இந்நாவலையும் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். இன்னும் சீர்ப்படுத்தவும், திருத்தவும் சில இடங்கள் உள்ளன. அவையெல்லாம் அடுத்த பதிப்புகளில் களையப்படலாம்.

சுஜாதாவை நேரில் சந்தித்தபோது ‘இனியும் நீங்கள் கணேஷ்-வசந்த் நாவலையெல்லாம் எழுதவேண்டுமா’ என்று கேட்டேன். அதே போன்ற கேள்வி ஒன்று இப்போதும் ஓங்கி நிற்கிறது. சிறப்பாக மொழிமாற்றம் செய்யும் பத்ரி, இதுபோன்ற நாவல்களை மொழிபெயர்ப்பதைவிட, தமிழுக்கு மிகத் தேவையான நூல்களை மொழிபெயர்ப்பது நல்லது. ஆழமான கற்பனையையும், பொழுது போக்கையும் மையமாகக் கொண்ட இக்கதைகளைக் காட்டிலும், வாழ்க்கையை விசாரணை செய்யும் நூல்களையும், மிக முக்கிய வரலாற்று நூல்களையும் மொழிபெயர்ப்பு செய்வதில் பத்ரி கவனம் செலுத்துவது தமிழுக்கு நல்லது. இதுபோன்ற மொழிபெயர்ப்புக் கதைகள் தமிழில் இருப்பது தேவையில்லை என்று கூறமுடியாது என்றாலும், இவற்றைவிட முக்கியமான நூல்களின் தேவை இருக்கும்போது, இவற்றில் செலுத்தப்படும் கவனம் ஒரு வகையில் அவசியமற்றது என்பது என் எண்ணம்.

ஒரு மோதிரம் இரு கொலைகள்,
ஆர்தர் கோனன் டாயில்,
தமிழில்: பத்ரி சேஷாத்ரி,
விலை: 120
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
புத்தகத்தை வாங்க: http://nhm.in/shop/978-81-8493-142-6.html

Share

நாயி நிரலு – கன்னடத் திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் – 05)

லோக் சபா சானலில் நாயி நிரலு (நாயின் நிழல்) என்ற கன்னடப் படம் நேற்று ஒளிபரப்பானது. எஸ். எல். பைரப்பாவின் நாவலை கிரிஷ் காசரவள்ளி இயக்கியிருக்கிறார்.

நேற்று படத்தைப் பார்த்தபோது, இது ஒரு சிக்கலான நாவல் போலத் தோன்றுகிறதே என்று நினைத்தேன். குறுநாவலே ஒரு திரைப்படத்துக்கான சிறந்த வடிவம் என்பது நேற்று மீண்டும் உறுதிப்பட்டது. ஒரு நீண்ட நாவலில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய நீளும் காலங்களும், தொடர்ந்த கதைத் திருப்பங்களும் திரைப்படத்தில் ஓர் அயர்ச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும். கிரிஷ் காசரவள்ளி போன்ற இயக்குநரின் கைகளில் சிக்கியதால், அது ஓரளவு தப்பித்தது என்றும் சொல்லவேண்டும்.

நாவலின் மையமான மறுபிறப்பு (நன்றி: விக்கிபீடியா) என்கிற நம்பிக்கையிலிருந்து இப்படம் விதவையான ஒரு பெண்ணின் மையமாக மாறியிருப்பதைக் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது. ஒரு நாவலைத் திரைப்படமாக்கும்போது, இயக்குநர் தனக்குத் தேவையான சுதந்திரத்தை எடுத்துக்கொண்டே தீரவேண்டும். அந்த வகையில் இயக்குநர் இத்திரைப்படத்தில், நாவலில் சொல்லப்பட்ட சில காட்சிகளைத் தவிர்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. அதனால் இத்திரைப்படத்தின் மையம், ஒரு விதவைப் பெண்ணின் மீது குவிகிறது. அதன் பின்னூடாக ஒரு சிறந்த மாமனாரின் சித்திரம் மேலெழுவதையும் பார்க்கமுடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மாமனாரின் சித்திரத்தைப் பற்றித் தெளிவாக எழுதமுடியாது. சிறந்த விற்பன்னராகவும், தன் மீது தீராத விசாரணையும் கொண்டவராகவும் வரும் இவரது பாத்திரத்தைப் படத்தைப் பார்த்துத்தான் புரிந்துகொள்ளமுடியும்.

ஏற்கெனவே நான் பார்த்த காசரவள்ளியின் Kraurya (கதை சொல்லி) திரைப்படம் பாவனைகள் இன்றி மிக நேரடியாகப் பேசிய படம். நாயி நிரலு பாவனைகள் அற்ற படம்தான் என்றாலும், மிக நேரடியான திரைப்படம் என்று சொல்லமுடியாது. படத்தைப் பார்ப்பவர்கள் தாங்களாக உருவாக்கிக்கொள்ளவேண்டிய தீர்மானங்களுக்கு நிறைய இடம் இருக்கிறது. ஒருவர் இத்திரைப்படத்தை மறுபிறப்புத் தொடர்பான நம்பிக்கைகள் சார்ந்த திரைப்படம் என்ற வகையில் பார்க்கலாம். இன்னொருவர் இத்திரைப்படத்தை விதவைகளின் உணர்வுகள் சார்ந்த திரைப்படம் என்று பார்க்கலாம். இன்னும் ஒருவர் இத்திரைப்படத்தை குடும்பத்துக்குள்ளான உணர்வுகளின் பிரச்சினையாகவும், ஒரு தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் போராட்டமாகவும் பார்க்கலாம். இன்னொருவர் சமூகத்துக்கும் அது உண்டாக்கி வைத்திருக்கும் சம்பவங்களுக்குமான வெளியாகப் பார்க்கலாம். இவையெல்லாமே இப்படத்தில் அடங்கியிருக்கிறது என்றாலும், கிரிஷ் காசரவள்ளி நாவலில் எஸ்.எல். பைரப்பாவின் நாவலில் இருந்து சில குறிப்பிட்ட பகுதிகளை நீக்கிவிட்ட வகையில், இதனை விதவைகளின் உணர்வுகள் சார்ந்த பிரச்சினையாகவே என்னால் பார்க்கமுடிகிறது.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு இளம் விதவையுடன் வாழும் பிராமணக் குடும்பத்தைச் சுற்றி நடக்கிறது கதை. இளம் பிராமண விதவைதான் என்றாலும் அவளுக்கு வயதுக்கு வந்த, கல்லூரியில் படிக்கக்கூடிய மகள் உண்டு. சிறு வயதிலேயே திருமணம் ஆகிப் பிள்ளை பெற்றிருக்கக்கூடிய வாய்ப்புகள் அக்காலத்தில் உள்ள நிலையில், இந்த வயதுக்கு வந்த மகள் என்பதும், அவளது தாய் இளமையான விதவைத் தாய் என்பது முக்கியம் பெறுகிறது. வயதான, படுத்த படுக்கையாகக் கிடக்கும் மாமியார், குடும்பத்தைச் சுமக்கும் மாமனார். இறந்து போன தன் மகனின் மறுபிறப்பாக ஒருவன் பக்கத்து கிராமத்தில் பிறந்திருக்கிறான் என்று யாரோ ஒருவரின் மூலம் அறிகிறார் மாமனார். தன் மனைவியின் தொடர் வற்புறுத்தலுக்குப் பின்பு அவனை வீட்டுக்கு அழைத்து வருகிறார். படுத்த படுக்கையாகக் கிடக்கும் மாமியார் குணம் பெறுகிறார். தன் மகன்தான் அவன் என்று உறுதியாக நம்புகிறார் அவர். ஊரும் நம்புகிறது. ஆனால் விதவைப் பெண்ணோ வந்தவன் தன் கணவனல்ல என்று நினைக்கிறாள். ஊரும் மாமியாரும் வந்தவன் அவள் கணவனே என்று நம்பச் சொல்கிறது. ஒரு கட்டத்தில் அவளுக்கு அவனைப் பிடித்துப் போகிறது. அவளைத் தன் கணவனாக ஏற்றுக்கொள்கிறாள். இங்கே தொடங்குகிறது கதையின் பிரச்சினை.


விதவைப் பெண்ணுக்கும் வந்திருக்கும் இளைஞனுக்கும் ஏற்படும் உறவில் அவள் கருத்தரிக்கிறாள். மாதா மாதம் தலைமுடியை சிரைத்துக்கொள்ளும் சடங்கை இனிச் செய்ய மாட்டேன் என்கிறாள் விதவைப் பெண். இனி தான் விதவையல்ல என்று முடிவெடுக்கிறாள். இதுவரை தன் மகன் என்று நம்பி அவனை வீட்டை விட்டு அனுப்பக்கூடாது என்று சொன்ன மாமியார், அவனை வீட்டை விட்டுப் போகச் சொல்ல, அதுவரை தன் கணவன் என்று நம்பாமல் இருந்த விதவை பெண் அவனை வீட்டை விட்டு அனுப்பக்கூடாது என்று முடிவெடுக்கிறாள். வீட்டுக்கு அவனை அழைத்து வந்த தானே பிரச்சினையின் காரணம் என்று நினைக்கிறார் மாமனார்.

தன் மாமா வீட்டில் இருந்து படித்துவரும் விதவைப் பெண்ணின் மக்ள் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அதிர்கிறாள். இத்தனைக்கும் விதவைப் பெண்களுக்கு மொட்டையடிக்கக்கூடாது, சமயச் சடங்குகள் கூடாது என்ற கருத்தோடு வளர்ந்த பெண் அவள். தன் அம்மா கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவளுக்குப் பெரும் அதிர்ச்சியும், கோபமும் ஏற்படுகிறது. இத்தனைக்குப் பின்னும் அவளால் தன் அம்மாவை வெறுக்கமுடியவில்லை. தன் தந்தையாக வந்திருப்பவனை விரட்டிவிட்டால் தன் அம்மா தனக்குக் கிடைத்துவிடுவாள் என நினைக்கிறாள். ஆனால் அவனை வீட்டை விட்டு அனுப்ப அவளது அம்மா சம்மதிக்கவில்லை.

ஊராரின் நிர்ப்பந்தத்தால், யாருமற்ற ஒரு தீவுக்கு, தன் கணவனுடன் செல்கிறாள் அந்த விதவைப் பெண். தான் திருமணம் செய்துகொண்டும் விதவைப் பெண்; விதவைப் பெண்ணாக இருந்தும் திருமணம் ஆனவள் என்னும் குழப்பம் அவளைத் துரத்துகிறது. தான் சுமங்கலியும் அல்ல, அமங்கலியும் அல்ல என்பதுதான் உண்மை என்று நினைக்கிறாள். இதற்கிடையில் மகளின் கோபம் உச்சத்துக்குச் செல்கிறது. ஒரு கேஸ் கொடுத்து தன் தந்தை என வந்திருப்பவனை சிறையில் வைக்கிறாள். அதனால் அவன் கோபம் கொள்கிறான். தன்னைப் பார்க்கவரும் கர்ப்பிணி மனைவியைப் பார்க்க மறுக்கிறான். அவன் யாருமற்ற தீவில் போது, ஓடக்காரப் பெண்ணின் மீது மையல் ஏற்படுகிறது. அதனைப் பயன்படுத்தி, அந்தப் பெண்ணை வைத்து, தன்னைக் கெடுக்க வந்ததாகப் பொய் சாட்சியம் சொல்லச் சொல்லி, அவனை நிரந்திரமாக உள்ளே வைக்கிறார்கள். இரண்டு வருடம் சிறைத்தண்டை என்று தீர்ப்பு வருகிறது. அக்கோபத்தில் தனக்குப் பிறந்த பெண்ணையும் பார்க்க மறுக்கிறான் அவன்.

திரும்பி வருவானா வரமாட்டானா என்கிற நிலையில் அதே தீவிலேயே தங்க தீர்மானிக்கிறாள் ஒரு மகளைப் பெற்றிருக்கும், ஒரு கணவனைப் பெற்றிருக்கும் அந்த விதவைப் பெண்.

இந்த நீண்ட கதைப் பின்னல் கொண்ட இத்திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதிவரை, எல்லா சட்டகங்களிலும் ஒருவித சோகத் தன்மையை மையச் சரடாகக் கொண்டிருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஏதோ ஒரு சோகம் நம்மைத் தொட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அது தனது மகன் பற்றிய ஒரு தாயின் சோகமாக இருக்கலாம். இளம் விதவைக்கு அக்காலத்துச் சமூகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் தரும் அழுத்தமாக இருக்கலாம். தாய்க்கும் மகளுக்குமான போராட்டமாகவோ, தனது மனதுக்குள்ளேயே தான் செய்துவிட்ட செயலை நினைத்து கிழவர் செய்துகொள்ளும் தர்க்கமகாவோ அது இருக்கலாம். இப்படித் தொடரும் சோகமே இத்திரைப்படத்தின் நிறம்.

இத்திரைப்படத்தின் மிக முக்கியமான காட்சிகள் சிலவற்றைப் பற்றிச் சொல்லவேண்டும்.

தனது மகன் திரும்ப வந்துவிட்டான் என்று நினைத்துக்கொண்டு அவனோடு பாசமாகப் பழகும் ஒரு முதிய தாய், தன் மகனுக்காக தன் மருமகளை, விதவைக் கோலத்தை விடுத்து, ஒரே ஒரு தடவை வண்ணப் புடைவை ஒன்றை உடுத்திக்கொள்ளச் சொல்லிக் கெஞ்சும் காட்சி. மருமகள் தொடர்ந்து மறுக்கிறாள். ஆனால் தாயோ விடுவதாக இல்லை. மெல்ல மெல்ல அவள் மனதை மாற்றி, அவளை வண்ணப் புடைவை அணிவிக்கச் செய்கிறாள். ஆனால் பின்னர் மருமக்ளுக்கும் தன் மகனுக்கும் உறவு ஏற்பட்டுவிட்ட நிலையில், ஒன்றுமே செய்யமுடியாதவளாக மருமகளைப் பிடித்து உலுக்குகிறாள். அப்போது மருமகள் வைத்துக்கொண்டிருக்கும் சவுரி கையோடு வந்துவிடுகிறது. அப்போது அந்த முதிய தாய் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் சொல்லும் செய்திகள் ஏராளம்.

இன்னொரு காட்சி, மகளும் தாயும் சந்திக்கும் இடம். எப்படி தன் தாய் இருக்கவேண்டும் என்று நினைத்தாளோ அப்படி தாய் மாறியிருக்கிறாள். ஆனால் இந்த மாற்றம் வந்த விதம் வினோதமானது. இதனை ஏறக அந்த மகளால் முடியவில்லை. எப்படியாவது தன் தாயை மீட்கவேண்டும் என்று நினைக்கிறாள். அழகான வண்ணப் புடைவையுடன், தலை நிறைய முடியுடன், பூவுடன் அம்மாவைப் பார்க்கும்போது அவள் அழகாக இருப்பது தெரிகிறது. ஆனால் அந்த அழகுக்குப் பின் ஏதோ ஒரு வினோதம் இருப்பதை அவளால் ஏற்கமுடியவில்லை. எத்தனையோ கேட்டும் தந்தையாக வந்திருப்பவனை, தன்னைவிட வயதில் சிறிய தந்தையை, வெளியில் அனுப்ப மறுக்கிறாள் தாய். அதுவரை சமயச் சடங்குகளுக்கு எவ்வித மதிப்பும் தராத அந்த மகள், அவ்வருடம் தனது தந்தையின் மரண தினத்தை சிறப்பாகச் செய்துமுடிக்கிறாள். தனது தாயை ஏதோ ஒரு வகையில் பழிதீர்த்துவிட்ட மன நிம்மதி அவளுக்குக் கிடைக்கிறது.

படத்தின் உச்சகட்டக் காட்சி மிக முக்கியமானது. தாயும் மகளும் பேசிக்கொள்கிறார்கள். மகளின் கையில் தன் தாய்க்குப் பிறந்த குழந்தை இருக்கிறது. மகள் தன் தாயிடம் எப்போதும் கேட்டுவந்த அதே கேள்வியை மீண்டும் கேட்கிறாள். ‘வந்தவனை அப்பா என்று நீ நிஜமாகவே நம்பினாயா?’ என்று. இந்தக் கேள்வி கேட்கப்படும்போதெல்லாம் அதனைத் தவிர்க்கும் தாய் அப்போது பேசுகிறாள். ”ஊரெல்லாம் வந்தவனை உன் அப்பா என்றார்கள். ஆனால் என் கணவன் என்று ஏற்க மறுத்தார்கள். உன் பாட்டி அவனைத் தன் மகனாக நினைத்தாள். ஆனால் என் கணவனாக ஏற்க மறுத்தாள். ஊருக்கும், பாட்டிக்கும் எல்லாருக்கும் ஒரு பார்வை இருந்தது. எனக்கும் ஒரு பார்வை இருந்தது.” இடைமறித்து மீண்டும் மகள் கேட்கிறாள். ‘நீ அவனை அப்பா என்று நம்பினாயா’ என்று. அப்போது அவள், ‘ஒரு போதும் நான் நம்பியதில்லை’ என்கிறாள். பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறாள் மகள். இக்காட்சியின் வழியே நீளும் மனப்பிரதிகள் ஏராளம். இக்காட்சியே அதுவரை படத்தைப் பீடித்திருந்த பெரும் சோகத்துக்கும், நீள நீளமான காட்சிகளுக்கும் ஒரு அர்த்தத்தைக் கொடுக்கிறது. இக்காட்சியில் வரும் கூர்மையான வசனங்கள்தான் இப்படத்தை விதவைகளின் மனப்போராட்ட பிரதியாகவும் மாற்றுகிறது.

தகப்பனாக மறுபிறப்பில் வரும் அவன் பிறந்தது முதலே ஏதோ ஒரு மனக்கோளாறில் இருப்பதாகவே காட்டப்படுகிறது. மிக முக்கியமான நேரங்களில், அவன் குயிலுடன் பேசிக்கொண்டிருக்கிறான். தனது தந்தையின் பெயரை மட்டும் சரியாகச் சொன்னதால், அவன் மறுபிறவி என்று நம்பிவிடுவதாக இத்திரைப்படத்தில் காட்டப்படுகிறது. அவன் சில கேள்விகளுக்குச் சரியாகவும், பல கேள்விகளுக்குத் தவறாகவும் பதில் சொல்கிறான். ஆனாலும் கிராம மக்கள் அவன் சரியாகச் சொல்லும் பதிலை மட்டும் எடுத்துக்கொண்டு, அவன் மறுபிறவிதான் என்று தீர்மானிக்கிறார்கள். ஆனால் நாவலில், அவன் மறுபிறவிதான் என்பதற்கான சில காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்று விக்கிபீடியா சொல்கிறது. கிரீஷ் காசரவள்ளி ஒரு நேர்காணலில் இதனை உறுதிப் படுத்துகிறார். நாவல் ஒருவனின் மறுபிறப்பை மையப்படுத்த, தான் கருப்பும் அற்ற வெள்ளையும் அற்ற நிறங்களில் உலவும் மனிதர்களை உருவாக்கியதாகச் சொல்கிறார்.

ஒரு நாவல் திரைப்படமாக்கப்படுவதில் உள்ள சவால்கள், சங்கடங்கள் இத்திரைப்படத்திலும் தெரிகின்றன. ஆனால் நல்ல திரையாக்கம், அருமையான ஒளிப்பதிவு, யதார்த்தமான நடிப்பு என்று மிகக் கச்சிதமாக அமைந்திருப்பதால், படத்தின் ஒவ்வொரு காட்சியும் பொலிவு பெற்றுவிடுகிறது. இதுவே இத்திரைப்படத்தை முக்கியமானதாகவும் மாற்றுகிறது, நம்மைப் பார்க்கவும் வைக்கிறது.

Share

பபாஸி தேர்தல் – இது எங்க ஏரியா!








================




================



Share

ராஜிவ் காந்தி கொலை வழக்கு – The Human Bomb CD

ராஜிவ் காந்தி கொலை வழக்கு – The Human Bomb CD

மே 21, 1991ல் ராஜிவ் காந்தி கொலை செய்யப்படுகிறார். அதன் மறுநாள், இந்த வழக்கு, தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுகிறது. சிறப்புப் புலனாய்வுக்குழு – சிபிஐ இந்த வழக்கை எடுத்துக்கொண்டதில் இருந்து, விசாரணை முடியும் வரை உள்ள முக்கியமான நிகழ்ச்சிகளை, ஆதாரங்களை மிகச் சுருக்கமாக ‘Human Bomb’ சிடியில் பார்த்தேன். சிறப்புப் புலனாய்வுக்குழுவின் தலைவர் ரஹோத்தமனின் தயாரிப்பில் வந்திருக்கும் இந்த குறுவட்டு, உலகத்தில் மிகவும் சிக்கலான வழக்கு இதுவே எனவும், மிக விரைவாக முடிக்கப்பட்ட வழக்கும் இதுவே என்றும், எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி குற்றவாளிகளை இனம்கண்ட வழக்கும் இதுவே என்றும், விடுதலைப் புலிகளே – விடுதலைப் புலிகள் மட்டுமே ராஜிவ் காந்தியின் கொலைக்குக் காரணம் என்றும் சொல்கிறது.

இந்த ஆவணப் படத்தின் தயாரிப்புத் தரத்தை அதிகம் பாராட்ட முடியாது. அதிலும் இரண்டு நாள்களுக்கு முன் Death of a President பார்த்துவிட்டு, இதனைப் பார்க்கும்போது, ஒரு திரைப்படத்துக்கும், நிஜ, அதிலும் இந்திய ஆவணப்படத்துக்குமான வேறுபாடு முகத்தில் அறைந்தது. என்றாலும், Death of a Presidentஐ ஒரு திரைப்படம் போலவே காஃபி சாப்பிட்டுக்கொண்டும் சமோசா சாப்பிட்டுக்கொண்டும் பார்க்க முடிந்தது. இந்தத் தரம் குறைந்த இந்திய ஆவணப் படத்தை அப்படிப் பார்க்க இயலவில்லை.

எந்த சூழ்நிலையில் ராஜிவ் காந்தி பிரதமாரானார் என்பது பற்றியும், ஏன் விடுதலைப் புலிகள் அவரைக் கொல்ல முடிவெடுத்தனர் என்பது பற்றியும் மிக மேலோட்டமான விவரணைக்குப் பின்னர், ராஜிவ் காந்தியின் கொலையைப் பற்றிய ஆராய்ச்சியின் போது சிக்கிய தகவல்கள், ஆதாரங்கள் என்ற ஆதார விஷயத்தை நோக்கிப் பயணிக்கிறது இந்தக் குறுவட்டு.

1987ல் பன்னிரண்டு கறும்புலிகள் (சயனைடு தின்று தற்கொலை செய்துகொள்ளும் புலிகள்) இறந்த சம்பவத்திலிருந்து, அவர்களின் இறுதி ஊர்வலம் வரை எல்லாவற்றையும் இந்த குறுவட்டில் பார்க்கமுடிகிறது. கறும்புலிகள் ஏன் சயனைடு தின்று இறக்கவேண்டும் என்று சொல்லும் பிரபாகரனின் பேட்டியும், (பிபிசிக்குக் கொடுத்தது என நினைக்கிறேன்), இரண்டு கறும்புலிகள் தாங்கள் எவ்வித நிர்ப்பந்தமும் இன்றி புனித போருக்காகத் தாங்களாகவே இணைந்ததாகச் சொல்லும் காட்சிகளும் இதில் உள்ளன.

கொலை செய்ய முக்கியமான நபராக இருந்து உதவிய சிவராசன், திலீபனின் இரண்டாவது நினைவுதினத்தில் பேசிய பேச்சின் வீடியோ வடிவம் இந்த குறுவட்டில் உள்ளது. குண்டு வெடிக்கச் செய்து, தானும் இறந்துபோன தனு, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பங்குகொண்டு, பெற்ற பயிற்சிகளின் காட்சிகள் இந்த வட்டில் உள்ளன.

அத்திரை, மற்ற பெண் விடுதலைப் புலிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் உள்ளது.

வேதாரண்யத்தில் அப்போது புலிகள் எப்படி மறைவிடத்தில் எல்லாவற்றையும் பதுக்கி வைத்தார்கள் என்பது பற்றிய காட்சிகளும், அதைத் தொடர்ந்தே எப்படி தமிழ்நாட்டை புலிகள் தங்கள் களமாகப் பயன்படுத்தினார்கள் என்று காவல்துறை உணர்ந்துகொண்ட செய்திகளும் உள்ளன.

ஹரி பாபு எடுத்த புகைப்படக் கருவி சிக்கியதுதான் வழக்கின் மிக முக்கியத் திருப்பம் என்று சொல்கிறார் ரஹோத்தமன். அதேபோல், முருகனும் நளினியும் கைது செய்யப்பட்டது இன்னொரு முக்கியத் திருப்பம் என்கிறார். புகைப்படக் கருவி தொடக்கத்தில் சிக்கியபோது, அதை அத்தனை முக்கியமான ஆதாரமாக கருத வேண்டிய நிலையில் காவல்துறை இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். ஆனால் அந்த புகைப்படக் கருவியின் வழியாக சிக்கிய படங்களே இன்றுவரை ராஜிவ் காந்தி வழக்கின் முக்கியத் தடயங்களாக நிற்கின்றன.

ராஜிவ் காந்தியைக் கொல்லும் முன்பாக, ஓர் ஒத்திகைக்காக, சென்னையில் விபி சிங்கின் ஒரு கூட்டத்தில் சிவராசன் பங்கேற்றதின் படக் காட்சியையும் இதில் பார்த்தேன்.

ஒரு வழக்கை எடுத்துக்கொண்டு அதன் வேர் வரை சென்று, எல்லா ஆதாரங்களையும் திரட்டிய காவல்துறையின் பணி அசர வைத்தது என்றே சொல்லவேண்டும். இன்று ஒரு வரியில் இதனைச் சொல்லமுடிந்தாலும், இதைச் செய்து முடிப்பதற்கு முன்பாக அவர்கள் எதிர்கொண்டிருக்கவேண்டிய சவால்கள், உயர் இடக் குறுக்கீடுகள், பத்திரிகைகளின் கேள்விகள் எல்லாம் எதிர்கொள்ள சாதாரணமானவையாக இருந்திருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

தனுவும் சுபாவும், அகிலாவும் விடுதலைப் புலித் தலைவர்களுள் ஒருவரான பொட்டு அம்மானுக்கு எழுதிய கடிதங்களின் நகல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் அவர்கள் இக்காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம் என்ற ரீதியிலும், இதே போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் சிங்கின் (விபி சிங்காக இருக்கவேண்டும்) அருகில் சென்றோம் என்கிற ரீதியிலும் எழுதியிருக்கிறார்கள். பாக்கியநாதன், பேபி சுப்பிரமணியத்துக்கு எழுதிய கடிதம் ஒன்றும், கொலைக்கு முன்பான கடிதங்களுள் முக்கியமான ஒன்று. திருச்சி சாந்தன் செப்டெம்பர் 1991ல் பிராபகரனுக்கு எழுதிய கடிதத்தில், சாந்தன் (சின்ன சாந்தனாக இருக்கலாம் என நினைக்கிறேன்) பிடிபட்டது பெரும் ஆபத்தாய் முடிந்துவிட்டது என்றும், சிபிஐ-யின் சித்திரவதைகள் வர்ணிக்க முடியாதவை என்றும், விசாரணைகளில் சிபிஐ தம்மைப் பற்றிய செய்திகளை முழுமையாகவே அறிந்துவிட்டனர் என்றும் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதமும் இக்குறுவட்டில் உள்ளது.

கோடியக்கரையில் 9 பேர் அடங்கிய குழு – இவர்களே ராஜிவ் காந்தி கொலைக்கு எல்லா வகையிலும் பங்காற்றியவர்கள் – வந்திறங்கிய நாள் முதல் அவர்களின் எல்லா செயல்படுகளையும் கிட்டத்தட்ட இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு ஆராய்ந்திருக்கின்றது.

மே 21, 1991ல் ராஜிவ் காந்தி சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதிலிருந்து, அவர் கொடுத்த பேட்டிகள், வழியில் அவர் எதிர்கொண்ட பூமாலைகள், பூந்தமல்லி கூட்டம் என எல்லாவற்றையும் பார்த்தேன். ராஜிவ் காந்திக்கு பூமாலையும் செண்டும் கொடுக்க மூன்று பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று ஒரு குரல் மைக்கில் ஒலிக்கிறது. மற்றவர்களை மேடைக்கு இடது பக்கம் வரிசையில் நிற்கச் சொல்கிறது அக்குரல். அடுத்த சில நிமிடங்களில் ராஜிவ் காந்தி தனது இறுதிக் கணத்தின் புகைப்படமாகிறார்.

இத்தனை சவால்களை எதிர்கொண்டு இத்தனை விஷயங்களைக் கண்டுபிடித்திருக்கும் காவல்துறை, இந்த சாவல்கள், கடின செயல்பாடுகளைக் கணக்கில் கொள்ளும்போது ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடக்கூடிய போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்திருந்தால் ஒரு இந்தியத் தலைகுனிவைத் தடுத்திருக்கலாம் என்னும் ஆற்றாமையைத் தவிர்க்கவே முடியவில்லை.

இந்தக் குறுவட்டில் ஒரு பேட்டியில் பிரபாகரன், ‘ராஜிவ் காந்தி கொலைக்கு நீங்கள்தான் பொறுப்பாளியா’ என்னும் கேள்விக்கு இப்படிச் சொல்கிறார்.

“நாங்கள் ஆரம்பத்திலேயே எங்கள் கருத்தைத் தெரிவித்திருக்கிறோம். எங்களைப் பொருத்த வரைக்கும் இந்தக் கொலை எங்கள் மீது சுமத்தப்பட்ட ஒரு அபாண்டமான குற்றச்சாட்டாகவே நாங்கள் கருதுகிறோம்.”

The Human Bomb,
Script, Compiled & Produced by: K. Raghothaman
Supdt. Of Police – CBI (Retd),
Consultant and Investigator,
214, 42nd Street, 8th Sector,
K.K. Nagar, Chennai – 600 078.
Email: krmmcoin2@gmail.com
விலை: 199 ரூபாய்.
ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/Human-Bomb-DVD.html

Share

NHM புத்தகங்கள் விமர்சனத்துக்கு இலவசமாக!

இந்தப் புத்தகங்கள் உங்களுக்கு வேண்டுமா?

1. 1857 சிப்பாய் புரட்சி, உமா சம்பத்
2. ஏ.ஆர். ரஹ்மான், என்.சொக்கன்
3. சரியாக முடிவெடுக்க சக்ஸஸ் பார்முலா, ராபர்ட் குந்தர்
4. வேலையில் முன்னேற சக்ஸஸ் பார்முலா, டாக்டர் கேரன் ஒடாஸோ
5. நம்பர் 1 சேல்ஸ்மேன், சோம. வள்ளியப்பன்
6. மாயாவதி, சி.என்.எஸ்
7. இண்டர்வியூ டிப்ஸ், எஸ்.எல்.வி. மூர்த்தி
8. அத்வானி, ஆர்.முத்துக்குமார்
9. ஒரு மோதிரம் இரு கொலைகள், ஷெர்லாக் ஹோம்ஸ்
10. சீனா – விலகும் திரை, பல்லவி அய்யர்
11. பிரபாகரன் வாழ்வும் மரணமும், பா.ராகவன்
12. விஜய்காந்த், யுவ கிருஷ்ணா
13. பன்றிக்காய்ச்சல், டாக்டர் புரூனோ மஸ்கரனாஸ்
14. வைரஸ் நோய்கள், டாக்டர் முத்து செல்லக் குமார்
15. நோய் தீர்க்கும் சித்த மருந்துகள், டாக்டர் கே.எஸ்.சுப்பையா
16. மு.க. ஸ்டாலின், ஜி.ஆர்.சுவாமி
17. விடுதலைச் சிறுத்தைகள், ஜோதி நரசிம்மன்
18. மெட்ராஸ் – சென்னை, நந்திதா கிருஷ்ணா
19. தும்பிக்கை வந்தது எப்படி?, ருட்யார்ட் கிப்ளிங்
20. ஜங்கிள் புக், ருட்யார்ட் கிப்ளிங்

கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டால் போதும்!

1. உங்களிடம் ஒரு வலைப்பதிவோ, வலைத்தளமோ (தமிழோ, ஆங்கிலமோ) இருக்கவேண்டும்.
2. மேலே உள்ள புத்தகங்களில் எது உங்களுக்கு வேண்டும் என்று குறிப்பிடுங்கள்.
3. ஒவ்வொரு புத்தகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பிரதிகளையே வழங்க உள்ளோம். அதனால் முதலில் தொடர்புகொள்கிறவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
4. உங்களது அஞ்சல் முகவரியையும் செல்பேசி எண்ணையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்தியாவுக்குள் என்றால் எங்கள் செலவில் அஞ்சலில் அனுப்பிவைப்போம். அல்லது நீங்களே எங்களது அலுவலகத்துக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
5. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இரண்டு விமர்சனத் திட்டங்களும் நிறைவு பெற்றுவிட்டன. மேலே உள்ள புத்தகங்களில் இருந்து மட்டுமே புத்தகங்களைத் தேர்வு செய்யவேண்டும்.
6. பெற்றுக்கொண்ட புத்தகத்தைப் படித்துவிட்டு, உங்களது வலைப்பதிவில் அதைப்பற்றி 500 வார்த்தைகளுக்குக் குறையாமல் (தமிழிலோ, ஆங்கிலத்திலோ) விமர்சனம் எழுதவேண்டும்.
7. விமர்சனம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். புத்தகம் நன்றாக இல்லை, பிடிக்கவில்லை என்றால் அதை உள்ளது உள்ளபடியே குறிப்பிடலாம். ஆனால் கட்டாயமாக விமர்சனம் எழுதியாகவேண்டும். 500 வார்த்தைகளுக்குக் குறையாமல்.
8. புத்தக விமர்சனப் பதிவின்கீழ், அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் இணைய வணிகத் தள முகவரி (URL) இருக்கவேண்டும். அந்த முகவரியை உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சலில் அனுப்பிவிடுவோம்.
9. விமர்சனம் எழுதிமுடித்தவுடன் அந்தப் பதிவின் முகவரியை எங்களுக்கு அனுப்பிவைக்கவேண்டும். அதனை நாங்கள் எங்களது தளத்தில் சேர்த்துக்கொள்வோம்.
10. ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு புத்தகத்தை மட்டுமே பெறமுடியும். ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை ஒரே நேரத்தில் பெறமுடியாது. ஆனால், புத்தகங்களைக் கேட்கும்போது, 2 அல்லது 3 விருப்பங்களை வரிசைப்படுத்திக் கேட்கவும். உங்களது முதல் விருப்பம் முற்றுப்பெற்றுவிட்டால், அடுத்த விருப்பத்தைக் கொடுக்க முயற்சி செய்வோம்.
11. ஒரு புத்தகத்தைப் படித்து, விமர்சனம் எழுதிய பின்னரே, நீங்கள் அடுத்த புத்தகத்தைக் கேட்டுப் பெறலாம்.
12. இந்தத் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு நிறுவனத்துக்கு எல்லாவித உரிமையும் உள்ளது. சில காரணங்களுக்காக ஒரு சிலருக்குப் புத்தகங்களை வழங்காமல் இருக்கவும், காரணத்தைப் பொதுவில் சொல்லாமல் இருப்பதற்கும் நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.
13. இத்திட்டம் தொடர்பாக மின்னஞ்சலில் மட்டுமே தொடர்புகொள்ள வேண்டும்.
14. புத்தகம் அனுப்பப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் விமர்சனம் எழுதவேண்டும்.
15. ஏற்கெனவே விமர்சனத்துக்கென புத்தகங்களை வாங்கியவர்கள், அதற்கான விமர்சனத்தை எழுதி, எங்களுக்கு அனுப்பியிருந்தால் மட்டுமே, அடுத்த புத்தகத்தைப் பெறமுடியும். ஏற்கெனவே புத்தகத்தை வாங்கி, விமர்சனம் எழுதியவர்கள், இந்த முறை புத்தகம் கேட்கும்போது, முன்னர் எந்தப் புத்தகத்தை வாங்கினீர்கள், நீங்கள் விமர்சனம் எழுதிய சுட்டி ஆகியவற்றை மின்ஞ்சலில் குறிப்பிடவும்.
16. ஏற்கெனவே உங்களின் முகவரி, தொலைபேசி எண் எங்களிடம் இருந்தாலும், புத்தகம் கேட்டு எழுதும்போது மறக்காமல் உங்கள் முகவரியையும் மொபைல் எண்ணையும் மீண்டும் குறிப்பிடவும்.

மின்னஞ்சல் அனுப்பவேண்டிய முகவரி: bookreviews@nhm.in

Share