க்ரியா, சிக்ஸ்த் சென்ஸ், சவுக்கு வெளியீடு புத்தகங்களை ஆன்லைனில்/ஃபோன் மூலம் வாங்க

 

இனி (சும்மா இருக்கும் என் வலைத்தளத்தில்) என்.எச்.எம் ஆன்லைன் பற்றி அப்டேட் செய்யலாம் என்றிருக்கிறேன். விளம்பரமாக வருகிறது என்று நினைக்கும் நண்பர்களை கொஞ்சம் உஷாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் அவ்வப்போது எதாவது எழுதினாலும் எழுதுவேன். 🙂

அஞ்ஞாடி நாவலை ஆன்லைனில் வாங்கலாம். https://www.nhm.in/shop/100-00-0000-208-0.html

க்ரியாவின் தற்கால தமிழ் அகராதிகுட்டி இளவரசன் உள்ளிட்ட முக்கியமான புத்தகங்களை வெளியிட்டிருக்கும் க்ரியாவின் முக்கிய புத்தகங்களை என்.எச்.எம் ஆன்லைனில் வாங்கலாம்.

சிக்ஸ்த் சென்ஸ் புத்தகங்களையும் ஆன்லைனில் வாங்கலாம். https://www.nhm.in/shop/home.php?cat=378

இந்தப் புத்தகத்தை வாங்கதீங்க’ விற்பனையில் சாதனை படைத்த புத்தகம் என்கிறது சிக்ஸ்த் சென்ஸ். அந்தப் புத்தகம் வெளியான புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகமே அதிகம் விற்ற புத்தகம்! அதையும் ஆன்லைனில் வாங்கலாம். நீயா நானா கோபிநாத்தின் ‘நேர் நேர் தேமா’புத்தகமும் கிடைக்கிறது. சுப வீரபாண்டியனின் புத்தகங்களும் கிடைக்கின்றன.

சவுக்கு வெளியிட்டிருக்கும் ‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ புத்தகத்தையும் ஆன்லைனில் வாங்கலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட புத்தகங்களை ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234 | 9445 97 97 97

திநகர் ராமேஸ்வரம் தெருவில் (ரங்கநாதன் தெரு அருகில் உள்ளது) உள்ள டயல் ஃபார் புக்ஸ் புத்தகக் கடையில் மேலே உள்ள புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.

புத்தகக் கடை இருக்குமிடம்:

 

 

இந்தச் சேவை இனி தொடரும்!

Share

காலப்பெட்டகம் – புத்தக விமர்சனம்

75 ஆண்டுகாலம் என்பது எந்த ஒரு வகையிலும் மிகப் பெரிய கால அளவுதான். இத்தனை பெரிய கால அளவுகளில் நாடுகள் பிரிந்து போயிருக்கின்றன. நதிகள் காணாமல் போயிருக்கின்றன. மனிதர்கள் மறக்கப்பட்டிருக்கிறார்கள். கட்சிகள் நீர்த்துப் போயிருக்கின்றன. உலகமே ஒட்டுமொத்தமாக மாறிப் போயிருக்கிறது. இந்தப் பின்னணியில் ஒரு தமிழ்ப் பத்திரிகை தொடர்ந்து 75 வருடம் வந்துகொண்டிருக்கிறது என்பது அதனளவிலேயே மிகப் பெரிய சாதனைதான். இந்தச் சாதனையை முரசு கொட்டிச் சொல்கிறது ஆனந்தவிகடன் வெளியிட்டிருக்கும் ‘காலப்பெட்டகம்’ புத்தகம்.

வாரா வாரம் தோராயமாக 100 பக்கங்களுக்கு மேல் வந்திருக்கும் பத்திரிகை ஒன்றின் 75 கால சித்திரத்தை 368 பக்கங்களுக்குள் அடக்குவது மிகவும் சிரமமான காரியமே. இப்படி 'காலப்பெட்டகம்' நூலை மட்டுமே முன்வைத்து ஆனந்தவிகடனை அணுகினால் நாம் எத்தனையோ நுண்மையான விஷயங்களை இழக்கவேண்டியிருக்கும். அதேசமயம் ‘காலப்பெட்டகம்’ வழியாக நாம் காணும் பிம்பமே ஆனந்தவிகடனின் பிம்பமாக பெரும்பாலும் இருக்கும் என்பதுவும் உண்மையே. இந்த இரண்டுக்கும் இடையில்தான் நாம் ‘காலப்பெட்டகம்’ புத்தகத்தை வாசிக்க இயலும்.

ஆரம்பகால இதழ்களில் ஆனந்தவிகடனின் எழுத்து நடை அந்தக் காலத்துக்கே உரிய மணிப்பிரவாள நடையில் இருக்கிறது.உதாரணத்துக்கு ஒரு தலைப்பு: ‘வியாசம் அனுப்புவோருக்கு விஞ்ஞாபனம்.' ஆண்டுகள் போகப் போக அதன் நடையும் மாறுகிறது. இப்படித்தான் அரசியலில், திரையுலகில், ஆனந்த விகடனில் இடம்பெற்ற கார்ட்டூன்களில் நடந்த மாற்றங்களை நாம் பார்த்துக்கொண்டே போகமுடிகிறது. பொதுவாகவே நாம் ‘அந்தக் காலம்’ என்று சொல்லும் காலத்துக்கும் இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்துக்கும் இடையேயான காலத்தில் ஒரு தார்மிக வீழ்ச்சியைப் பார்க்கமுடியும். இதற்கு ஆனந்தவிகடனும் தப்பவில்லை. செய்திகளின் தரத்திலிருந்து, எந்த மாதிரியான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும்என்பதுவரையில் இந்த மாற்றத்தைப் பார்க்கமுடிகிறது. ஒரு சில சமயங்கள் தவிர, மாற்றம் பெரும்பாலும் வீழ்ச்சியாகவே இருக்கிறது.

அரசியல் என்று எடுத்துக்கொண்டால் ஆரம்பகால ஆனந்தவிகடன் இதழ்களை இந்திய தேசியத்தை மையமாக் கொண்ட தமிழ் இதழ்களாக வரையறுக்கலாம். (1930ம் வருடத்திய இதழ்கள் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறது விகடன். ஆழ்ந்த தேசபக்தி, அதிரடி நகைச்சுவை இரண்டும் விகடனுக்கு இரண்டு கண்கள் போல்.) ஆனால் இன்றோ ஆனந்தவிகடன் இடதுசாரி சித்தாந்தவாதிகளின் இந்திய வெறுப்பைப் பின்னணியாகக் கொண்ட கட்டுரைகளை முன்வைக்கும் இதழாக் காட்சியளிக்கிறது. இந்த இந்திய வெறுப்பு மிகவும் திறமையாக, நடுநிலைமை என்ற போர்வையில் கட்டுரையாளர்களால் எழுதப்படுகின்றது என்பதுதான் அதில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது. வெளிப்படையாக ஆனந்தவிகடன் இந்திய தேசியத்தைக் கைவிட்தாக அறிவிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து ஆனந்தவிகடனை வாசிக்கும் எவரும் விகடன் கட்டுரைகளில் தெரியும் பின்-தொனியையும், மாற்றங்களையும் தெளிவாக உணரமுடியும். எது சரி, எது தவறு என்பதல்ல, எப்படி ஆனந்தவிகடன் மாறியிருக்கிறது என்பதுதான் இதிலுள்ள செய்தி. சில காலம் ஆனந்தவிகடனின் இதழ்கள் பாரத மாதா லோகோவாகத் தாங்கி வந்திருக்கின்றன என்பதை நம்பமுடிகிறதா உங்களால்.

கார்ட்டூன்கள் என்று எடுத்துக்கொண்டால், ஆண்டுகள் போகப் போக, கார்ட்டூன்களில் வரும் வார்த்தைகள் மிக் கூர்மையாகியிருக்கின்றன. நீண்ட வரிகளைக் கொண்டுவரும் ஆரம்பகால இதழ்களின் கார்ட்டூன்களிலிருந்து, மிகக் குறைந்த வார்த்தைகள் அல்லது வார்த்தைகளே இல்லாமல் வெறும் குறிப்புகளை மட்டும் கொண்டு வெளிவரும் இன்றைய இதழ்களின் கார்ட்டூன்கள் வரை இந்த மாற்றத்தை நாம் ஓரளவுக்கு இந்நூலில் நாம் காணமுடியும்.

இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், இதனை இரண்டு வகைகளில் அணுகவேண்டும். வணிக இதழ்களில் வரும் தொடர்கதைகளை தீவிர இலக்கியமாக் கருத இயலாது. வெகுஜன வாசகர்களை ஈர்க்கும் பல்வேறு கதைகள் தொடக்ககால ஆனந்தவிகடனிலிருந்து தொடர்ச்சியாக வெளியாகியிருக்கின்றன. ஆனந்தவிகடனில் முத்திரைக் கதை வருவது என்பது தனிப்பட்ட தகுதியாகவே இருந்திருக்கிறது. தொடர்கதைகளைத் தொடர்ந்து எழுதுபவர்கள் ஹீரோக்களாகவே அறியப்பட்டார்கள். ஆனால் தீவிர இலக்கியவாதிகளின் பங்களிப்பைத் தொடக்க கால இதழ்களில் அதிகம் பார்க்கமுடியவில்லை. பிற்கால இதழ்களில் மிக முக்கியமான இலக்கியவாதிகள் ஆனந்தவிகடனில் பங்கெடுத்திருக்கிறார்கள். இந்தவகையில் இந்த மாற்றம் ஒரு நேர்மறையான மாற்றமே.

பொதுவாகவே தொடர்கதை வாசிப்பில் நேர்ந்த தொய்வு ஆனந்தவிகடனிலும் பிரதிபலித்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. அதனால்தானோ என்னவோ ஆனந்தவிகடன் உருவாக்கும் ‘நாவல்’ ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைந்து போயிருக்கிறது. நாவல் என்பது தொடர்கதை அல்ல என்பது முக்கியமான விஷயம். இப்படி ஒரு விஷயம் பெரும்பான்மை மக்களுக்குத் தெரியாமல் போனதற்கு ஆனந்தவிகடனின் வீச்சும், அதன் தொடர்கதைகள் தந்த மயக்கமும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

காலப்பெட்டகம்’ இதழ் வருட வாரியாக ஆனந்த விகடனில் வந்த முக்கியமான நிக்ழ்வுகளை வைத்துத் தொகுக்கப்பட்டிருக்கிறது. இதனால்தானோ என்னவோ, ஒட்டுமொத்தமாக வரிசையாக அஞ்சலிகளாகப் படிக்கிறோம். அலுப்பை ஏற்படுத்தும் அளவுக்குதொடர்ச்சியாக அஞ்சலிக் குறிப்புகளாக வருவதைத் தவிர்த்திருந்திருக்கலாம். அதிலும் இசையோடு தொடர்புடையவர்கள் பலரின் அஞ்சலிக் குறிப்புகள் வெளியாகியிருக்கின்றன. தொகுத்தவர் இசைப்பிரியராக இருந்திருக்கவேண்டும்.

தொகுப்பின் மற்றொரு குறை என்னவென்று பார்த்தால், பல விஷயங்கள் தேவையற்றதாக இருக்கின்றன. பல தேவையான விஷயங்கள் தொகுக்கப்படவில்லையோ என்ற எண்ணமும் தோன்றுகிறது. ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்தைத் தொடங்கி வைத்து இலவச திருமணம் நட்த்தப் போவதாகப் பேட்டி தந்திருப்பது (1989), 75 ஆண்டுகால ஆனந்தவிகடன் இதழ் வரலாற்றில் எப்படி முக்கியமானதாக மாறுகிறது என்பது புரிவதில்லை. அதே சமயத்தில், 76ல் தமிழ்நாட்டின் முகத்தையே மாற்றியமைத்த இளையராஜாவைப் பற்றியோ, 91ல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஏ.ஆர். ரஹ்மான் பற்றியோ குறிப்புகளைப் பார்க்கமுடியவில்லை.

பாரதியார் பற்றிய குறிப்புகள் முதலிலிருந்தே ‘காலப்பெட்டகம்’ நூலில் இடம்பெறுகின்றன. பாரதியார் பற்றியும் காந்தி பற்றியும் தொடர்ந்து கல்கியும் ராஜாஜியும் எழுதியிருக்கிறார்கள். ஜெயேந்திரர் உபதேசம் ஏற்றது (1954), விஜயேந்திரர் உபதேசம் ஏற்றது (1983)எல்லாம் ‘காலப்பெட்டகம்’ நூலில் வருகின்றன.

இத்தனையையும் மீறி நம்மை ரசிக்க வைப்பது, ஆனந்தவிடனின் நகைச்சுவைத் துணுக்குகளே. வார இதழ்களில் கைச்சுவையில் என்றுமே முதலிடம் ஆனந்தவிகடனுக்குத்தான் என்பது என் கருத்து. ‘காலப்பெட்டகம்’ அதனை உறுதி செய்கிறது. ஆரம்பம் முதலே அட்டகாசமான நகைச்சுவைத் துணுக்குகள். (1927ல் வெளியான ஒரு துணுக்கு. ‘அகஸ்மாத்தாய் லக்ஷாதிபதியான ஒருவர் கீழ்வருமாறு ஒரு புஸ்தக வியாபாரிக்குக் கடிதம் எழுதினார்:- அன்பர்ந்த ஐயா, வால்மீகி ராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம் முதலிய புத்தகங்கள் கிடைக்கப் பெற்றேன். அவைகள் மிகவும் நன்றாக இருக்கின்றன. இந்த ஆசாமிகள் புதியதாக எதாவது புஸ்தகங்கள் எழுதினால், உடனே எனக்கு வி.பி – யில் அனுப்பி வையுங்கள்.’) அவற்றுடன் போட்டி போடும் கார்ட்டூன்கள். இன்றுவரை ஆனந்த விகடன் இதில் முதலிடத்தில் உள்ளது என்றே சொல்லவேண்டும்.

திரைப்படங்களின் விமர்சனங்கள் அதிக அளவில் ‘காலப்பெட்டகம்’ இதழில் இடம்பெறவில்லை. குறைந்தபட்சம், அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 20 படங்களின் பட்டியலோடு அவற்றின் விமர்சங்களை மட்டுமாவது தந்திருக்கலாம். அதேபோல் ஆரம்பகால ஆனந்தவிகடன் இதழ்களின் கட்டுரைகளை அக்காலத் தமிழ் எழுத்துகளிலேயே பதிப்பித்திருக்கலாம். என்னவோ தெரியவில்லை, சீர்திருத்த எழுத்துகளையே பயன்படுத்திவிட்டார்கள். ஐம்பது ஆண்டுகால ‘காலபெட்டகம்’ இதழ் 1979ல் (1928 முதல் 1978 வரையிலான ஐம்பதாண்டு காலத் தொகுப்பு) வெளிவந்தபோது, அதில் அக்கால நடைமுறையான, சீர்திருத்தத்துக்கு முந்தைய எழுத்துகளே இடம்பெற்றிருந்தன. அதில் இருந்த இயல்புத் தன்மை இந்த 75 ஆண்டுகால ‘காலப்பெட்டகம்’ நூலில் இல்லை. இப்போதைய காலப்பெட்டகத்தைவிட, அது அதிகம் விவரங்கள் கொண்டதாகவும், சிறப்பாகத் தொகுக்கப்பட்டதாகவும் தோன்றுகிறது. இத்தனைக்கும் ஒவ்வொரு வருடத்தையும் ஒவ்வொரு பிரபலம் தொகுத்திருந்தார்கள்.

காலப்பெட்டகம்’ நூலில் அக்காலத்தில் இடம்பெற்ற சில விளம்பரங்களையும் கொடுத்திருக்கிறார்கள். ஆரம்ப கால விளம்பரங்கள் எப்படி இருக்கின்றன என்று பார்ப்பதே பெரிய சுவாரஸ்யமாக இருக்கிறது. (பக்கம் 14)

 சில விஷயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. தில்லானா மோகனாம்பாள் கதை வந்தபோது, எந்த எந்த கதாபாத்திரத்துக்கு எந்த எந்த நடிகர்கள் நடிக்கவேண்டும் என்று ஒரு வாசகர் மடல் (1956) அனுப்பியிருக்கிறார். கிட்டத்தட்ட அதே நடிகர்கள் நடித்து படம் வருகிறது. அண்ணா மேம்பாலத்துக்குக் கீழே உள்ள குதிரை வீரன் சிலை வருவதற்கு முன்பே அதைப் பற்றி ஒரு நகைச்சுவைத் துணுக்கு வருகிறது. அதில் ‘கிண்டி ரேஸை ஒழிச்சதுக்கு குதிரைச் சின்னம்’ (1974) என்று நகைச்சுவையாக எழுதுப்பட்டுள்ளது. எட்டு மாதங்கள் கழித்து (1975) ‘வந்தியத்தேவன்’ குதிரை சிலைக்குக் கீழே அதே வாக்கியங்கள். இப்படிப் பல சுவாரஸ்யங்கள் புத்தகம் நெடுகிலும்.

சுபாஸ் சந்திர போஸுக்கு ஆதரவளிக்கும் விகடன் காந்தியை எதிர்க்கிறான். காந்தியின் தோல்வி (1939) என்றே அதனைச் சொல்கிறான். ஓட்டுப் போடுவதற்கு பணம் தருவது பற்றிய துணுக்குகள் அப்போதே வந்துள்ளன. வேட்பாளர்கள் (அபேட்சகர்கள்!)திருடர்கள் என்று சொல்லும் விகடம் 1934ல் விகடனில் வந்துள்ளது. விகடன் தாத்தாவுக்கு 35ல் கொம்பு முளைக்கிறது. ஹரிஜன ஆலயப் பிரவேசத்தை முழுமையாக ஆனந்த விகடன் ஆதரித்திருக்கிறது. எஸ் எஸ் வாசனின் தாயார் மறைந்தபோது அதற்கு ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது விகடன் – 1949ல்! 1950ல் வாசனின் மகள் கல்யாணம் பற்றிச் செய்தியும் வெளியிடப்பட்டிருக்கிறது!! காங்கிரஸின் தீவிர ஆதரவு இதழான விகடன் அண்ணாத்துரையை வரவேற்று (1957) கட்டுரை தீட்டுகிறது. அண்ணாத்துரை 1958ல் விகடனில் தனது சட்டசபை அனுபவங்களை எழுதுகிறார்.

நடிகர்கள் எவ்வப்போது புயல் நிவாரண நிதிகள் கொடுத்தார்கள் என்பது காலப்பெட்டகத்தில் பதிவு செய்யப்படுகிறது! கிட்டத்தட்ட சிவாஜி கணேசனின் ரசிகனாகவே விகடன் செயல்பட்டதாக ‘காலப்பெட்டகம்’ நூலைப் படிக்கும்போது எனக்குத் தோன்றியது. வாஷிங்டனில் திருமணம் தொடரின் கடைசி பாகத்தில்தான் அதை எழுதியவர் பெயர் (1963) சாவி என்று வெளியிடப்படுகிறது. கிட்டத்தட்ட உண்மை போன்ற திருமணப் பத்திரிகையும் அக்கதைக்கு ஏற்றவாறு இடம்பெறுகிறது!

திமுகவின் வெற்றியை விசித்திரம் என்று சொல்லும் (1967) விகடன், திமுகவின் வெற்றியை வாழ்த்துகிறது. முத்தக் காட்சியில் நடித்தேனா என்று ஜெயலலிதா 1970ல் விளக்கம் அளிக்கிறார். ஜெயலலிதாவின் விளக்கத்தை ஒப்புக்கொள்ளும் விகடன், அதற்கு ஒரு சால்ஜாப்பு சொல்கிறது. அப்போதே ஜெயலலிதா அதிரடிதான். இவரது இந்த அதிரடி பின்னர் ஸ்ரீதருடன் ஏற்படும் கருத்துவேறுபாடு (1996) வரையில் தொடர்கிறது. ஸ்ரீதருக்கு ஜெயலலிதா எழுதியிருக்கும் பதில் – அட்டகாசம். நான் ஏன் பிறந்தேன் தொடரை எழுதுகிறார் எம்ஜியார் (1970) விகடனில் எழுதுகிறார்.

சோவும் சுரதாவும் 1971ல் கம்பாஸிடர் கவிதையில் மோதிக்கொள்கிறார்கள். சோ இந்திராவைக் கிண்டல் செய்து 1974 பொங்கலன்று துக்ளக் விழாவில் பேசிய, டெல்லியில் புதைக்கப்பட்ட டைம் காப்ஸ்யூல் பற்றிய அட்டகாசமான குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. பாசிப்பயறு ஒன்றின் புதிய வகைக்கு அஞ்சுகம் என்ற பெயர் (கருணாநிதியின் அம்மாவின் பெயர்) வைக்கப்படுவதைப் பற்றிய ஒரு குறிப்பு உள்ளது. ஜெயலலிதாவின் முதல் மேடைப்பேச்சு பற்றிய (1982) குறிப்பு உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஜெயேந்திரர் தண்டம் விட்டுச் சென்றது பற்றிய அவரது பேட்டி (1987)ல் வெளிவந்துள்ளது.

1993ல் முதன்முதலாக ஒரு சினிமா ஸ்டில் அட்டைப்படமாக வெளியாகியிருக்கிறது. குமரியில் வைக்கப்பட்ட வள்ளுவர் ஏன் வளைந்து நிற்கிறார் என்று கருணாநிதி கேட்டதற்கு உப்புச்சப்பில்லாமல் ஒரு பதில் சொல்லியிருக்கிறார் (2000) கண்பதி ஸ்தபதி. (நாங்கள் எங்கள் உள்வட்டத்தில் இதனை சிம்ரன் சிலை என்றே சொல்லுவோம்.) மொத்தத்தில் இந்த ஒட்டுமொத்த ‘காலப்பெட்டகம்’ புத்தகத்தை சிவாஜி கணேசனுக்கு சமர்ப்பணம் செய்யலாம் ஆனந்தவிகடன். அடுத்ததாக கருணாநிதிக்கு!

பொதுவாக ஓர் இதழின் இலக்கிய மதிப்பு, அதன் தார்மிக நெறிகள் – இப்படி எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது அதன் மீது வெகுஜன மக்கள் காட்டும் ஆர்வம். அதுவும் 75 வருடங்களுக்குத் தொடர்ந்து மக்கள் ஓர் இதழைக் கொண்டாடுகிறார்கள் என்றால், அது நிச்சயம் அதிர்ஷ்டத்தால் வாய்த்த ஒன்றோ அல்லது புறந்தள்ளத்தக்க ஒன்றோ அல்ல. அப்பத்திரிகையின் வெற்றிதான் அது. காலம் மாற மாற காலத்துக்கேற்ப ஓர் இதழ் மாறவேண்டியது கட்டாயம். அந்த மாற்றம் இல்லையென்றால் அப்பத்திரிகை நிச்சயம் அழியும். இதைப் புரிந்துகொண்டிருப்பதே அனந்த விகடனின் பலம். மக்கள் திரைப்படத்தைத்தான் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக, ஓர் இதழும் அதனையே கொண்டாடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. மாற்றம் என்பது வீழ்ச்சியுடன் மட்டுமே சாத்தியமாகும் என்பது உண்மையல்ல. இப்போது ஆனந்த விகடன் புரிந்துகொள்ளவேண்டியது இது மட்டுமே.

(காலப்பெட்டகம் – 1924 முதல் 2000 வரை, விகடன் பிரசுரம், பக்கம் 368, விலை 180 ரூ)

புத்தகத்தை ஃபோன் மூலம் வாங்க: Dial for books – 94459 01234 | 9445 97 97 97

நன்றி: ஆழம் மாத இதழ்.

Share

வடிவேலு: திராவிட அரசியலின் உரைகல்

‘கிழவன் இன்னும் குமரனாகலையா’ என்று எம்.ஜி.ஆரைப் பற்றி நாகேஷ் கேட்டதாகச் சொல்வார்கள். ‘நினைவின் தாழ்வாரங்கள்’ தொடரில் கலாப்ரியாவும் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். ‘தேர்த் திருவிழா’ திரைப்படத்தின் மேக்கப்பில் இருக்கும்போது இப்படி நாகேஷ் கேட்டது எம்.ஜி.ஆரின் காதுக்குப் போகவும், அதற்குப் பிறகு சில காலங்களுக்கு எம்.ஜி.ஆரின் படங்களில் நாகேஷ் நடிக்கவே இல்லை. பின்னர் சமாதானமானார்கள். 1968ல் நடந்தது இது. இதற்கு முன்னரே சந்திரபாபு என்ற ஒரு நடிகரைக் காலி செய்தது எம்.ஜி.ஆரே என்ற பேச்சும் உள்ளது. இப்போது 2012. நாற்பது ஆண்டுகள் கழிந்திருக்கிறது. திராவிட இயக்கம் தந்த இந்தப் பழக்கம் இன்னும் ‘மெருகேறியிருக்கிறது.’

தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராகப் பரிமளித்தவர் வடிவேலு. அவரது கலைப்பயணம் முடிந்துவிட்டது என்ற அர்த்தம் தொனிக்க, ‘பரிமளித்தவர்’ என்று சொல்வதே கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது. 2011ல் அவர் நடித்து வெளிவந்த படங்கள் மூன்று மட்டுமே என நினைக்கிறேன். 2011ல் காமெடியின் உச்ச நடிகர் இவரே. ஓர் உச்ச நடிகருக்கு நேர்ந்த கதி இது. தமிழில் இதுவரை வந்த காமெடி நடிகர்களில் உச்ச நடிகர் வடிவேலுவே என்பது என் தனிப்பட்ட கருத்து. பெரும்பாலானவர்கள் இத்துடன் ஒத்துப் போவார்கள் என்றே நினைக்கிறேன். ஓர் உச்ச நடிகரை ஒரே தினத்தில் அதள பாதாளத்தில் வீழ்த்தி வைக்க நம் அரசியலால் முடியும் என்ற கேடுக்கெட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம்.

விஜய்காந்த் அரசியலுக்கு வந்ததிலிருந்தே வடிவேலுவுக்கு வினை ஆரம்பித்தது. ஏதோ ஒரு திரைப்படத்தில் விஜய்காந்தின் அரசியல் வருகையைப் பாராட்டிப் பேசவேண்டும் என்பது போன்ற ஒரு வசனத்தை (எங்கள் அண்ணா திரைப்படமாக இருக்கலாம்) பேச மறுத்துவிட்டார் வடிவேலு. இதற்கு முன்னர் பல படங்களில் வடிவேலுவும் விஜய்காந்தும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதிலெல்லாம் வடிவேலு தான் ஏற்ற கதாபாத்திரத்தின் வழியே விஜய்காந்தைப் பாராட்டிப் பல தடவை பேசியிருக்கிறார். ஏனோ இந்தப் படத்தில் மறுத்துவிட்டார். அது அவரது உரிமை. தொடங்கியது பிரச்சினை. எப்படித் தன்னைப் பாராட்டிப் பேசுவதை போயும் போயும் ஒரு காமெடி நடிகன் மறுப்பது என்று கதாநாயகனுக்கு வந்துவிட்டது கோபம்.

ஆனால் நாகேஷ் போல வடிவேலு அமைதியாக இல்லை. தன்னை எதிர்ப்பது எம்.ஜி.ஆர் இல்லை என்னும் தைரியமாக இருந்திருக்கலாம். விஜய்காந்தின் மிரட்டல் அரசியலுக்கு இணையான அரசியலில் இறங்கினார் வடிவேலுவும். இரண்டு பக்கமும் பற்றிக்கொண்டது. இதற்கிடையில் வடிவேலுவின் மேனேஜர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இன்றளவும் வடிவேலுக்குப் பிரச்சினையாக இருப்பது இந்தத் தற்கொலை. தொடர்ந்து நிகழ்ந்த மனவேறுபாடுகளின் உச்சத்தில், விஜய்காந்த் எந்தத் தொகுதியில் நின்றாலும் தான் எதிர்த்துப் போட்டிப் போடப்போவதாக அறிவித்தார் வடிவேலு.

2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் கூட்டணி ஏற்பட்டது. 67க்குப் பிறகு கழகங்கள் உருவாக்கி வைத்திருந்த அரசியல் நாகரிகக் கணக்கின்படி, தேமுதிகவுக்கு வேண்டாதவர்கள் எல்லாருமே அதிமுகவுக்கும் வேண்டாதவர்களே என்று அதுவாகவே ஆகிப்போனது. இதனை வடிவேலுவும் நம்பினார். எப்படியும் விஜய்காந்தை வீழ்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்ட வடிவேலு அழகிரியின் கரத்தை வலுப்படுத்தி திமுகவுக்குப் பிரசாரத்துக்குப் போனார். பிடித்துக்கொண்டது சன்னும் சனியும்.

சன் டிவி இதனை பயன்படுத்திக்கொண்டது. விஜய்காந்தின் தனிப்பட்ட பிம்ப அழிப்பில் வடிவேலுவும் சன் டிவியும் திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு ஈடுபட்டார்கள். இது மக்களிடையே எடுபடவும் செய்தது. தன் பேச்சுக்கு வரும் கூட்டத்தைக் கண்டு மதி மயங்கிப் போன வடிவேலு தான் என்ன பேசுகிறோம் என்ற விவஸ்தையின்றி வாய்க்கு வந்தது எல்லாவற்றையும் பேசினார். ஜெயலலிதாவை நேரடியாகத் தாக்கி எதுவும் பேசவில்லை என்றாலும், கருணாநிதியை வானளாவப் புகழ்ந்ததையும், கருணாநிதி ஆட்சியின் சாதனைகளாக அவர் பட்டியலிட்டதையும், தனக்கு எதிரானதாகவே அதிமுக தலைமை பார்த்திருக்கும். ஏனென்றால் அதிமுகவும் திமுகவும் இதுபோன்ற விஷயங்களிலெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. ஒருவகையில் ஜெயலலிதா தன்னைத் தாக்குவதைக் கூடப் பொறுத்துக்கொள்வார். ஆனால் தன்னை ஒப்பிட்டுக் கருணாநிதியைப் புகழ்வதைப் பொறுத்துக்கொள்ளவே மாட்டார்.

இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் வடிவேலுவுக்கு எதிராக அமைந்தன. தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளன்றே வடிவேலுவின் வீடு, தோட்டம் ஆகியவை தேமுதிக குண்டர்களால் தாக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. தான் விரித்துக்கொண்டு தானே விழுந்த வலை மெல்ல இறுகுவதை அவர் அன்றுதான் உணர்ந்திருக்கவேண்டும்.

வடிவேலு செய்த தவறுகள் என்ன? பெருச்சாளிக்குப் பயந்து பாம்பிடம் அடைக்கலம் சென்றது. அரசியல் என்பது வேறு, திராவிட அரசியல் வேறு என்பதைப் புரிந்துகொள்ளாதது. ஆனால் இவையெல்லாம் மிகச் சிறிய தவறுகளே. ஓர் அரசியல் தலைவரைக் குடிகாரர் என்று சொல்வது, நாகரிகக் குறைவே என்றாலும், அதில் உண்மை இருக்குமானால் அது மாபெரும் தவறல்ல. வடிவேலுவும் அவர் பிரசாரம் செய்யும் கட்சித் தலைவர்களும் உத்தமர்களா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. இந்தக் கேள்வியுடன் சேர்த்துப் பார்த்தால், வடிவேலு சொல்வதெல்லாம் தனிப்பட்ட வெறுப்பின் உச்சத்தால் மட்டுமே என்பதைக் கண்டுபிடித்துவிடமுடியும். உண்மையில் இதனை எல்லாரும் அறிந்தே இருந்தார்கள்.

ஆனால் அதற்குப் பின்பு நடப்பதுதான் அராஜகத்தின் உச்சமாக இருக்கிறது.

ஒருவர் அதிமுகவுக்கு எதிராக – இல்லை, திமுகவுக்கு ஆதரவாக – பேசினார் என்ற ஒரே காரணத்தினாலாயே அவருக்கு நடிக்க வாய்ப்பு வழங்கப்படாது என்பது எப்பேற்பட்ட அராஜகம்? இதனை ஜெயலலிதா முன்னின்று நடத்தியிருப்பார் என்று நான் நம்பவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடனேயே, எதற்கு நமக்கு வம்பு என்றுதான் பலரும் ஒதுங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் ஜெயலலிதாவே வடிவேலுவைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க உள்வட்டங்களின் வழியே இயக்குநர்களுக்குக் கட்டளை இட்டிருக்கவேண்டும். வடிவேலுவின் பிரசாரம் வேறு, அவரது நடிப்பு வேறு என்று தெளிவாகச் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் ஜெயலலிதா ரஜினி அல்ல என்பதுதான் உண்மை. ஜெயலலிதா இதனை வெகுவாக ரசித்திருப்பார் என்றே தோன்றுகிறது. முன்னின்று நடத்துவதற்கும், ரசிப்பதற்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதுவும் உண்மையே.

இப்படி நடப்பது ஏதோ ஒரு சாதாரண நடிகருக்கல்ல. ஓர் உன்னதக் கலைஞனுக்கு இது நேர்ந்திருக்கிறது. தேர்தல் முடிவு ஓர் நடிகனைக் காணாமல் ஆக்கிவிட்டதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். வடிவேலுவை தன் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள்.

எந்த அளவுக்கு என்றால் – கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓர் அறிவிப்பு வெளியானது. சுந்தர் சி திரைப்படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக. நான் அன்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னதான் வடிவேலு நாகரிகக் குறைவாகப் பேசியிருந்தாலும், நடிப்பு என்ற வகையில் வடிவேலு ஒப்பற்ற கலைஞன். இன்றும் நகைச்சுவை சானல்களில் வரும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன என்பதை மறுக்கவே முடியாது. எனவே அவர் நடிக்க வரவேண்டியதுதான் தர்மம். அந்த வகையில் சுந்தர் சி பாராட்டுக்குரியவர் என நினைத்துக்கொண்டேன். மறுநாளே மறுப்பு வந்தது. அப்படி ஓர் எண்ணம் தனக்கில்லை என்று சுந்தர் சி சொன்னதாக அறிந்தேன். அதேபோல் ரஜினி படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக ஒரு செய்தியும், அதனை கே.எஸ். ரவிகுமார் மறுத்ததாகவும் அறிந்தேன். இதெல்லாம் உண்மையா என்று தெரியாது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நாம் வாழ்கிறோம். 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இன்றுவரை வடிவேலு நடித்து ஒரு படம்கூட வெளியாகவில்லை என்பது, இதெல்லாம் உண்மையாகத்தான் இருக்கும் என்றுதான் சொல்லவைக்கிறது.

திராவிட இயக்கக் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் இந்த வகையான அரசியலுக்குக் காரணம். தனக்கு எதிராகக் கருத்துச் சொல்பவர்கள் எவருமே தங்களுடைய தனிப்பட்ட எதிரிகள் என்ற கருத்து தமிழ்நாட்டில் வேரூன்றியதற்கு கருணாநிதியும் ஜெயலலிதாவுமே காரணம். ஏதேனும் ஒரு நடிகரோ எழுத்தாளரோ தன்னைப் பற்றி எதிராக எழுதினால், அவரை எதிரியாக நினைப்பதும், தேவைப்படும்போது ‘அரவணைப்பது’ போல பேசி அவரை அடிமையாக்குவதும் இவர்களுக்குக் கைவந்த கலையே. அதைக்கூட தானே பார்த்துச் செய்ததாகச் சொல்வார்கள். இழவு வீட்டில் பிணமாகக்கூடத் தாங்களே இருக்க நினைக்கும் மனநிலை.

யாருக்கு வேண்டும் உங்கள் அரவணைப்பு என்று எதிர்த்துப் பேசி உண்மை நெஞ்சுரத்துடன் ஒருவர் இங்கே குப்பை கொட்டிவிடமுடியாது. மேடையில் பகிரங்கமாக, தைரியமாகப் பேசிய அஜித், மறுநாளே கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டு கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்துவதைப் பார்த்திருக்கிறோம். ஜெயலலிதாவின் முன்னிலையில் கண்டித்துப் பேசிய ரஜினி பட்ட தொல்லைகளுக்கு அளவே இல்லை. அஜித்தும் ரஜினியும் மீண்டும் சமரசம் ஆகியிருக்கலாம். அதற்கான கேவலம்கூட நம்மை இப்படி வைத்திருக்கும் கட்சிகளுக்கு உரியதே அன்றி, அவர்களுக்கு உரியன அல்ல. இப்படி நடக்கும் என்று தெரிந்தும் அவர்கள் அப்படிப் பேசியதே சாதனைதான்.

வடிவேலு போன்ற ஒரு நடிகருக்கு வாய்ப்பில்லாமல் இருப்பது இப்படியான நம் அரசியல் கேவலத்தின் உரைகல்லாகவே விளங்குகிறது. அதே கேவலத்தின் வழியாகவே வடிவேலு வெளிவரவேண்டியிருக்கும். இன்று விஜய்காந்தும் ஜெயலலிதாவும் மோதியுள்ள நிலையில், ஒரே ஒரு பொன்னாடையை வடிவேலு ஜெயலலிதாவுக்குப் போர்த்தினால் போதும். மீண்டும் வடிவேலு என்ற கலைஞனின் பல வெற்றிகளை நம்மால் திரையில் காணமுடியும். கேவலங்களைப் பட்டியலிட்டுவிட்டு, அதே கேவலத்தின் வழியேதான் நாம் வெளியேற வேண்டுமா என்றால், இன்றைய அரசியல் சூழலில் வேறு வழியில்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது. நல்ல நடிகன் என்ற பெரிய அந்தஸ்தின் முன்பு, இந்த சமரசம் பொறுத்துக்கொள்ளக் கூடியதாகவே தெரிகிறது. கொஞ்சம் அசிங்கத்துடன் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

சந்திரபாபு, என்.எஸ்.கே, எம்.ஆர்.ராதா போன்ற நடிகர்களுக்கு வாழ்க்கையில் ஓர் பெரிய அடி விழுந்து, அதிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடித்தபோது அவர்களால் முன்பு போல வெற்றி பெற முடியவில்லை. வடிவேலுவுக்கும் இது நிகழ்ந்துவிடக்கூடாது என்றுதான் மனம் வேண்டிக்கொள்கிறது. இனி மீண்டும் நடிக்கவந்தால், தான் எப்படி அரசியல் கட்சிகளாலும் டிவிக்களாலும் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டோம் என்பதை மனத்தில் வைத்துக்கொள்வது வடிவேலுவுக்கு நல்லது. இங்கே நிலவுவது அரசியல் விஷச் சூழல். அதை மெல்ல மெல்லத்தான் மாற்றமுடியும். அந்த மாற்றத்துக்கு வடிவேலு பலியாகவேண்டியதில்லை.

Share

இரண்டு கவிதைகள்

நான் எழுதிய இரண்டு கவிதைகள் சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளன. வாசிக்க: http://solvanam.com/?p=19298

பிஞ்சுக் கதை

மொழியறியாக் குழந்தை ஒன்றின்
கதை கேட்கத் தொடங்கினேன்
நல்லவர்கள் மட்டுமே வரும் கதை
குழந்தையின் தலையைச் சுற்றி
தேவர்கள் பூவோடு காத்திருந்தார்கள்
ரோஜா கொண்டு வந்த கைகளைக் கண்டு
குழந்தை சிரித்துக் கொண்டது
மஞ்சள் நிறப் பூ மலர்ந்தபோது
முகம் விரிந்தது
இரண்டு கைகளை
தலைக்கு இணையாக ஏந்தி
பூக்களைப் பெற்றுக்கொண்டே இருந்தது குழந்தை
இடைவேளையாக
வீறிட்ட குழந்தைக்குப் பால் கொண்டு வந்தாள் அம்மா
தேவர்கள் காத்திருந்தார்கள்
மீண்டும் பூக்கள் சொரிய
குழந்தை சிரிக்கத் தொடங்கியது
உச்சகாட்சியாகக்
குழந்தையைப் பார்க்க
கடவுள் வந்திருந்தார்
அவரைக் காக்க வைத்துவிட்டு
நல்லவர்கள் கதையை
எனக்குத் தொடர்ந்தது பிஞ்சு

தழல்

அடி நெஞ்சின் ஆழக் கிடந்து
பல்லாண்டு ஊறி
பலம்கொண்ட வார்த்தைசெய்து
வீசியெறியப்பட்ட தழல்.
எங்கும் பற்றிக்கொண்டது
பைந்தழைகள் பற்றிக்கொண்டன
பசுமரம் எரியத் தொடங்கியது
வானெங்கும் தீ சூழ
எல்லாம் சிவப்பு நிறம்
எங்கும் செம்மை
கண்கள் காணுவதெல்லாம் செந்நிறம்
கண்களும் செம்மை கொண்டன
தழல் பரவ பரவ
என்னுடலும் தழலானது
அக்னியின் கோபத்தில்
என்னுடல் கிளர்ந்தபோது
அக்னிக்கும் எனக்குமான
சிறிய இடைவெளியும் அற்றுப்போனது
எல்லாம் ஒன்றானது
நீண்ட பெருமழையிலும்
விடாது எரிந்தது தீ
ஒரு வார்த்தையில்
உலகம் தீயானது
பசுமரத்தில் இடி விழுந்தது போல
இடி சொல்லாகுமா?
கண்களில் வழியும்
கண்ணீர்த் துளிகளில்
இரண்டொரு கங்குகள் உருண்டன
தழலெறிந்தவனுக்கு
அவை அர்ப்பணம்.

Share

எக்ஸைல் புத்தக வெளியீடு – மரபுகள் கலைக்கப்படும் தருணம்

எக்ஸைல் நாவலுக்கு விமர்சனங்கள், விவாதங்கள் வந்து ஓய வேண்டிய நேரத்தில் புத்தக வெளியீட்டு விழா பற்றிய கட்டுரையா என்ற ஜெர்க் ஆகவேண்டாம். இதை எழுதி மாதங்கள் ஆகின்றன.

கிழக்கு ‘ஆழம்’ என்று ஒரு மாத இதழைக் கொண்டு வர இருக்கிறது. 

அதற்காக எழுதப்பட்ட கட்டுரை இது. ஓர் இதழைத் தொடங்குவதற்கு முன்பாகச் செய்யவேண்டிய ஆயத்த வேலைகளில் ஏற்பட்ட எதிர்பாராத தாமத்தினால் இதழ் கொஞ்சம் தாமதமாக வெளிவந்திருக்கிறது. இந்த இதழ் எப்போதிலிருந்து வாசகர்கள் கைகளில் கிடைக்கும் என்பதைப் பற்றி பத்ரி தனியே எழுதுவார். இப்போதைக்கு ‘ஆழம்’ இதழில் வெளியான என் கட்டுரை இங்கே.

இக்கட்டுரை ‘ஆழம்’ இதழில் சில எடிட்டிங்குடன் வெளியானது.

என் கட்டுரையை வெளியிட்ட ‘ஆழம்’ பத்திரிகைக்கும், அதன் பதிப்பாளர்-ஆசிரியர் பத்ரிக்கும் பொறுப்பாசிரியர் மருதனுக்கும் என் நன்றி. 

மரபுகள் கலைக்கப்படும் தருணம்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சாரு நிவேதிதாவின் ‘எக்ஸைல்’ நாவல், டிசம்பர் 6 அன்று காமராஜர் அரங்கத்தில் வெளியிடப்பட்டது. சாருவின் நாவல்கள் எவ்விதக் கட்டமைப்புக்குள்ளும் சிக்காமல் வெளியேறத் துடிப்பவை. சாரு சிறப்புக் கவனம் எடுத்து இதனைச் செய்கிறாரா அல்லது அவரது இயல்பான நாவல் வடிவமே கட்டுக்குள் அடங்காமல் திமிறுவதுதானா என்ற விவாதம் எப்போதும் தமிழ் இலக்கிய உலகில் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

பொதுவாகவே இலக்கியக் கூட்டங்களும் நாவல் வெளியீடுகளும், காதும் காதும் வைத்தமாதிரி ரகசியக் கூட்டங்கள் நடைபெறுவது போல் நடந்தால்தான் இலக்கியத்தன்மையைப் பெறும். ஓர் இலக்கியக்கூட்டத்துக்கு மூன்று இலக்கங்களில் பார்வையாளர்கள் வந்துவிட்டால் உண்மையில் அது தீவிர இலக்கியக்  கூட்டமாக இருக்க வாய்ப்பில்லை என்பதே தீவிர இலக்கிய ஆர்வலர்களின் துணிபு. சாரு இதனையும் உடைக்கவேண்டியவராகிறார்.

இலக்கிய கூட்டத்தின் ஒலிபெருக்கிகள் ‘வொய் திஸ் கொலவெறி கொலவெறிடி’ என்று அலறுவதைக் கேட்க ஒரு ‘கொடுப்பினை’ வேண்டும். அராபியப் பாடல் ஒலிக்க வாலி பேச ஓர் இலக்கியக் கூட்டத்தின் மரபுகள் அத்தனையும் காமராஜர் அரங்கத்தில் கலைத்துப் போடப்பட்டன. ஜோல்னாப் பை இல்லாமல் கோட் சூட் போட்டு மேடையேறினார் சாரு. இதற்கும் ஒரு விளக்கம் சொன்னார். அது நமக்குத் தேவையற்றதே. விஷயம், சாரு மேடை மரபுகளைக் கலைக்கிறார் என்பதே. 

சாருவே நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தனக்குக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிகழ்ச்சியின் ஆற்றொழுக்கைக் குலைத்து குலைத்து, இது ஒரு மரபுகளற்ற மேடை என்பதை நிறுவுவதில் குறியாக இருந்தார். இப்படி மரபுகள் கலைக்கப்படும்போதெல்லாம் சாருவின் ரசிகர்கள் கைதட்டி விசிலடித்துக் கொண்டாடினார்கள். வொய் திஸ் கொலைவெறி பாடல் ஒலிபரப்பட்ட நோக்கம் அந்தக் கூட்டத்தின் ஒவ்வொரு இடைவெளியிலும் சீழ்க்கையின் வழியே பரவிய தருணம் அது.

இலக்கியக் கூட்டத்தின் இன்னொரு புதுமையாக, எக்ஸைல் நாவலின் முதல் பிரதி 50,000 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஏலம் எடுத்தவர் மேடைக்கு வரவில்லை. மற்ற சில கொலைவெறித் தற்கொலைப் படை சாருவின் ரசிகர்களும் அவரவர்க்கு ஏற்ற சக்தியில் ஏலம் எடுத்திருந்தார்கள் என்னும் செய்தியும் சொல்லப்பட்டது. நெடுங்கால இலக்கிய மரம் விதையூன்றப்பட்ட நிமிடம் அது என உவப்பானார்கள் சாருவின் ரசிகர்கள்.

தான் ஏன் புத்தகத்தை வெளியிட வாலியை அழைத்தேன் என்பதற்கு சாரு வெளிப்படையாகச் சொன்ன காரணம், தன் இலக்கிய வாழ்வில் தன்னைப் புகழ்ந்த ஒரே வெகுஜன விஐபி வாலி மட்டும்தான் என்பதே. ஆனந்த விகடனில் வாலி எழுதிய ‘நினைவு நாடாக்கள்’ தொடரில் வாலி சாருவைப் பற்றிப் புகழ்ந்திருந்தார். வாலி இதுவரை தன் வாழ்நாளில் எதற்கும் சமரசமே செய்ததில்லை என்னும் வாலிக்கே தெரியாத ரகசியத்தைச் சொன்னார் சாரு. ஆனால் அதே ‘நினைவு நாடாக்கள்’ தொடரில், நியூ படத்தில் இடம்பெற்ற ‘காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தெய்வம் அம்மா’ என்று எழுதிய வரியை, ஏ.ஆர்.ரஹ்மானின் நிர்ப்பந்ததுக்கு இணங்க ‘கைதொழும் தேவதை அம்மா’ என்று மாற்றி எழுதியதை எரிச்சலுடன் பதிவு செய்திருந்தார் வாலி. புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய வாலியும் மேடையில் பேசும்போது தனக்கு சமரசம் செய்து பழக்கமில்லை என்ற அர்த்தத்தில் ‘எந்த இசையமைப்பாளரின் கருணையும் எனக்குத் தேவையில்லை’ என்றார். 80 வயதில் முழங்குவது எளிது. சாருவின் வெளிப்படைத் தன்மையைப் பற்றிப் பேசிய வாலி, தான் இந்த விழாவுக்கு வந்ததே சாருவின் புகழ் உலகறியவேண்டும் என்பதற்காகவே என்றார்.

அடுத்துப் பேசியவர் இந்திரா பார்த்தசாரதி. இந்திரா பார்த்தசாரதியும் சமரசம் செய்ததில்லை என்றார் சாரு. தன் புத்தகத்தை வெளியிட வரும் விருந்தினர்கள் சமரசமற்றவர்கள் என்று சொல்வதில் சாரு எடுத்துக்கொண்ட கவனம் ரசிக்கத்தக்கதாக இருந்தது. 

ஏன் செக்ஸைப் பற்றி எழுதக்கூடாது என்பதே இபாவின் ஒட்டுமொத்தப் பேச்சின் ஒருவரி சாராம்சமாக இருந்தது. டெல்லியில் வாழ்ந்த காலங்களில் என்றெல்லாம் எங்கெங்கோ அலைபாய்ந்து மீண்டும் சாருவின் எக்ஸைல் நாவலில் செக்ஸ் இருந்தால் என்ன தவறு என்ற புள்ளிக்கு வந்து சேர்ந்தார் இபா. இது சாஃப்ட் போர்னோ அல்ல, ஹார்ட் போர்னோ என்றார். செக்ஸைக் குற்றவுணர்ச்சியோடு அணுகுபவர்கள் படிக்கக்கூடாத நாவல் என்றார். என்ன தோன்றியதோ இபாவுக்கு, திடீரென்று, இப்படியெல்லாம் சொல்வதால் நான் இப்படித்தான் என்று அர்த்தமல்ல என்றார். இதேபோன்று தற்காப்புக் கலையை இரண்டு இடங்களில் பயன்படுத்தினார். இவருக்கும் 80 வயது. 80 வயது மூத்த எழுத்தாளர்கூட மேடையில் தான் இப்படி அல்ல என்கிற டிஸ்கிளெய்மரோடு பேசவேண்டியிருக்கிறது. அதுவும் சாருவின் கூட்டத்தில். என்னவொரு முரண்நகை!

விழாவுக்கு வந்திருந்த மதனைப் பேச அழைத்தார் சாரு. மதன் தன்னை நாவலில் பாதித்த விஷயங்கள் பற்றியும், தனக்குப் பிடித்திருக்கும் அம்சங்கள் பற்றியும் தெளிவாகப் பேசினார். உலக எழுத்துகளைப் படித்திருக்கும் தன்னால், சந்தேகமே இல்லாமல் இந்நாவல் ஓர் உலகத்தரமான நாவல் என்று சொல்லமுடியும் என்றார். இந்திரா பார்த்தசாரதியும் வாலியும் பேசியிருந்தாலும், மதனின் பேச்சே சாருவின் நாவலை மிகச் சரியாகத் தொட்டுப் பேசக்கூடியதாக அமைந்தது. 

சாரு தன் வலைத்தளத்தில், முகநூலில் தன் வாசகர் வட்டத்திலும் இந்நூலுக்கு தொடர்ந்து மார்க்கெட்டிங் செய்திருந்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஓர் எழுத்தாளன் தன்னை ஏன் இப்படி மார்க்கெட்டிங் செய்துகொள்ளவேண்டும் என்ற இலக்கியக் கேள்வி ஒருபுறம். ஓர் எழுத்தாளன் தனது புத்தகங்களை விற்க தன்னால் இயன்றதை ஏன் செய்யக்கூடாது என்னும் உலக நிர்ப்பந்தம் மறுபுறம். எப்போதும் மரபுகளைக் கலைத்துப்போட விரும்பும் சாரு இலக்கிய மரபின் பக்கம் நிற்காததே யதார்த்தம். இல்லையென்றால், எந்தவொரு இலக்கியக் கூட்டத்திலும் விசிலடிக்கும் ரசிகர்களையோ, விழாவுக்கு வருவதற்கு முன்பாகவே கர்ம சிரத்தையாக எக்ஸைலின் ஒரு பிரதியை வாங்குவதைக் கடமையாகக்கொண்ட வாசகர்களையோ நாம் பார்க்கவே முடியாது. 

சாருவின் ரசிகர்கள் இந்நாவலை வாங்கலாமா வேண்டாமா அல்லது ஏன் வாங்கவேண்டும் என்னும் உளச்சிக்கல்களுக்குள் இறங்குவதே இல்லை. சாருவின் நாவல் என்பதே தாங்கள் வாங்கத்தான் என்ற தோரணையில் சாருவின் ரசிகர்கள் நாவலை வாங்குவதைப் பார்க்கமுடிந்தது. இது இலக்கியத்தின் போக்குக்கு உகந்ததா அல்லது இலக்கியத்திலிருந்து முற்றிலும் பிரித்தறியப்படவேண்டியதா என்பது தனிக்கேள்வி. இக்கேள்விகூட இலக்கியவாதிகளுக்கு உரியதே அன்றி, அவரது ரசிகர்கள் ஒருபோதும் இக்கேள்வியை எண்ணிப் பார்க்கப்போவதுகூட இல்லை. ரசிகர்களின் உடனடிக் கேள்விகளெல்லாம், திருவிழாவுக்கு எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று சாரு அறிவிக்கப்போகிறார் என்பதில் மட்டுமே.

ஆனால் சாருவைப் பற்றி நாம் நினைத்துப் பார்க்கவேண்டியது கட்டாயமாகிறது. இதுவரை சாரு என்பவர் தன் வழியை தன் கர்வத்தால் நிர்ணயிப்பவராகவும், அவரது வாசகர்கள் அவரது வழியை ஏற்றுக்கொள்பவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். சாருவே தொடக்கப்புள்ளி. அவரது வாசகர்கள் தொடர்புள்ளிகளே. ஆனால் இப்போதைய சாருவிடத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள். இணையம் சாருவைப் பாதித்திருக்கும் விதம் ஆய்வுக்கு உரியது. சாரு தன் ரசிகர்களின் கட்டாயங்களுக்கேற்ப இயங்குவது போன்ற தோற்றம் வலுவடைகிறது. வாசகர்கள் என்பவர்கள் ரசிகர்களாகும் ரசவாதத்தை சாரு ரசிக்கிறாரோ என்கிற எண்ணம் வலுப்படுகிறது. சாரு என்னும் ஓர் முன்னாள் இலக்கியவாதியின் இந்தத் தடம்பெயர்வு ரசிக்கத்தக்கதல்ல. நீண்டகால நோக்கில் இலக்கியம் என்னும் ஆதார விழுமியத்துக்கு இது கேட்டையே விளைவிக்கும். சாரு தன் வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளப்போகும் கேள்விகளை டிசம்பர் 6ல் உருவாக்கி அமைதியானது காமராஜர் கலையரங்கம்.

எக்ஸைல் புத்தகத்தை ஃபோன் மூலம் வாங்க Dial For Books 94459 01234 | 9445 97 97 97

Share

பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்

 

 

விலை: 180

Dial for books: 94459 01234 | 9445 97 97 97

அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்’ (ஒரே பொருளுக்கு நான்கு வார்த்தைகள்!) புத்தகம் கிழக்கு வெளியீடாக வெளிவந்துள்ளது. நேற்று முதல் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்குக் கிடைக்கிறது. நான் எதிர்பார்த்தது போலவே நிறைய பேர் விருப்பத்துடன் வாங்குகிறார்கள். வாங்க யோசிப்பவர்களை, பின்னட்டையில் என்ன எழுதியிருக்கிறது என்பதைப் படிக்கச் சொன்னால், படித்துவிட்டு உடனே வாங்கிவிடுகிறார்கள்.

புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து:

 

கம்யூனிஸம் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம் படுகொலை பேரழிவு. கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பலகோடி. கம்யூனிஸ்ட்டுகள் உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவுகிறது இந்நூல்.

லெனின், ஸ்டாலின், மாஓ என்று தொடர்ச்சியாக கம்யூனிஸத் தலைவர்கள் எல்லோருமே எப்படி ரத்தம் தோந்த வரலாற்றை எழுதினார்கள்? எப்படி சக தோழர்களையே வேட்டையாடினார்கள்? புக்காரினுடம் டிராட்ஸ்கியும் என்ன ஆனார்கள்? சே குவேரா உண்மையிலேயே இளைஞர்களின் ரோல் மாடல்தானா? ஸ்டாலின், லெனினை எப்படி எதிர்கொண்டார்? ரஷ்யா உண்மையிலேயே கனவு பூமிதானா? வதைமுகாம்கள், கூட்டுப்படுகொலைகள் என்பதெல்லாம் ஹிட்லர் காலத்துக்கு முன்பே ரஷ்யாவில் உண்டா? வரலாற்றின் மிக முக்கியமான இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.

கம்யூனிஸம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? நேருவின் கம்யூனிஸப் பாசம் இந்தியாவுக்குத் தந்த பரிசு என்ன? தாஷ்கண்ட்டில் லால் பகதூர் சாஸ்திரிக்கு என்ன ஆனது? கம்யூனிஸ்ட்டுகள் கட்சிகள் இந்தியாவில் ஆடிய ஆட்டங்கள் என்ன? இவற்றையும் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

வெறும் வாய்ப்பந்தல் போடாமல், சிவப்பு பயங்கரத்தைப் பற்றிய ஒவ்வொரு குறிப்பையும் அதற்கான ஆதாரத்துடன் எழுதியுள்ளார் அரவிந்தன் நீலகண்டன். தமிழ்ப்புத்தக வரலாற்றில் மிக முக்கியமான நூலாக இது அமையும்.

பொதுவாகவே கம்யூனிஸம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள், கம்யூனிஸம் என்றால் முற்போக்கு என்று நினைத்துக்கொண்டு அதனால் அங்கு சென்று சேர்ந்தவர்கள் அல்லது தன்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வது பெருமை தருவது என்று நினைத்துக்கொள்பவர்கள் – இவர்கள் யாருக்குமே கம்யூனிஸத்துக்கு ரத்தம் எவ்வளவு பிடிக்கும் என்பது அவ்வளவாகத் தெரியாது. ஏதோ மீடியா குழந்தைகளாக கம்யூனிஸ்ட்டுகள் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.

கம்யூனிஸத்தின் ரத்தம் தோய்ந்த வரலாற்றை, கூட்டுப்படுகொலைகளை, வதைமுகாம்களைப் பற்றியெல்லாம் பொதுப்புத்தி கம்யூனிஸ்ட்டுகள் கேள்விப்பட்டுக்கூட இருக்கமாட்டார்கள். கம்யூனிஸ்ட்டுகள் என்றாலே நேர்மையாளர்கள் என்ற எண்ணமும் இங்கே உள்ளது. ஆனால் உலகளாவில் எப்படி கம்யூனிஸ்ட்டுகள் சந்தர்ப்பவாதிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் இந்த மீடியா குழந்தைகள் அறிந்திருக்கப்போவதில்லை.

அரவிந்தன் நீலகண்டனின் பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் புத்தகம் இது அத்தனையைப் பற்றியும் தெளிவாக, விரிவாக, ஆதாரத்துடன் பேசுகிறது.

இந்தப் புத்தகத்தைப் படிக்கப் போகும் மென்மையான இதயம் படைத்த அத்தனை பேரும் அதிரப் போவது நிச்சயம். எங்கெல்லாம் கம்யூனிஸம் அங்கெல்லாம் வரிசையாக பஞ்சமும் படுகொலையும் பேரழிவும் வந்துகொண்டே இருக்கின்றன. படுகொலை என்றால் கூட்டுப்படுகொலைகள். விவசாயிகளை ரக ரகமாகக் கொன்று குவித்திருக்கிறார்கள் நம் உலகத் தோழர்கள்.

லெனின் ஸ்டாலினுக்கு இடையே நடக்கும் போட்டி, ஸ்டாலினைப் பார்த்து லெனினே அதிர்ந்து போவது, ஏன் லெனின் புதைக்கப்படவில்லை என்றெல்லாம் புத்தகம் பட்டையைக் கிளப்புகிறது. இந்தப் புத்தகத்தில் என்னவெல்லாம் இருக்கிறது என்று எழுதினாலே அதுவே இன்னும் 4 பக்கத்துக்கு வரும். மேலும் நான் ஒருமுறை மட்டுமே வாசித்திருக்கிறேன். இன்னொரு முறை நிதானமாக வாசிக்கவேண்டும். அத்தனை முக்கியமான புத்தகம்.

கம்யூனிஸ்ட்டுகள் போல காந்தியை விதவிதமாக விமர்சித்தவர்கள் யாருமில்லை. தன் பேத்தியோடு படுத்து தனது பிரம்மச்சரியத்தைப் பரீட்சித்த காந்தி பற்றிப் பேசவேண்டுமானால் கம்யூனிஸ்ட்டுகள் துள்ளிக்குதித்து ஓடிவருவார்கள். ஆனால் மாஓவின் பெண் தொடர்பு, அதன் ஆராய்ச்சி பற்றியெல்லாம் பேசமாட்டார்கள். மாஓ புனிதரன்றோ. காந்தி கெடக்கான் கெழவன்.

இந்தப் புத்தகத்தைப் படித்ததும் உலக கம்யூனிஸ்ட்டுகள் மீது வெறும் இளக்காரம் மட்டுமே எனக்கு மிஞ்சுகிறது. எப்படி உலக கம்யூனிஸ்ட்டுகள் ஸ்டாலினையும் மாஓவையும் தலைவர்களாக முன்வைக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை எத்தனை கொலைகள்! எதுவுமே அக்கறையில்லை! எல்லாம் சிவப்பு மயம்.

இந்திய கம்யூனிஸ்ட்டு நேர்மையாளர்கள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் ஒரு நீண்ட அத்தியாயம் உண்டு. நேருவைப் பற்றி இந்தப் புத்தகம் தரும் சித்திரம் அட்டகாசமானது. அதேபோல தாஷ்கண்ட்டில் லால் பகதூர் சாஸ்திரி மரணம் அடையும் அத்தியாயம் ஒரு நாவலைப் போன்றது. சே குவேராவைப் பற்றிய அத்தியாயம் – நல்ல நகைச்சுவை! மாஓவின் அத்தியாயமோ கிளுகிளு. பௌத்த மடலாயங்களுக்கு, சீன கலாசாரத்துக்கு நேர்ந்ததைச் சொல்லும் அத்தியாயமோ அதிர்ச்சி. எல்லாவற்றிலும் வன்முறை. கம்யூனிஸ்ட்டுகள் எதிலுமே குறைவைப்பதில்லை.

உலகளவில் கம்யூனிஸம் ஏற்படுத்திய பஞ்சத்தால் மக்கள் வேறு வழியின்றி நரமாமிசம் உண்டது பற்றிய தகவல்களைத் தரும் அத்தியாயம் உங்களை உலுக்கக்கூடியது. ஜெயமோகனின் நாவல்களைப் படித்தும், சில உலகத் திரைப்படங்களைப் பார்த்து மட்டுமே நான் இதுவரை பதறியிருக்கிறேன். அதற்கு நிகரான பதற்றத்தைத் தந்தன, இந்தப் புத்தகத்தின் சில அத்தியாயங்கள்.

96களில்ஜெயமோகன் எழுதியதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அளவிற்கு, நான் இன்னொருமுறை இன்னொரு எழுத்தாளரைப் பார்த்து ஆச்சரியப்படுவேன் என நினைக்கவில்லை. அது நிகழ்ந்தது அரவிந்தனின் நீலகண்டனின் எழுத்துக்களைப் பார்த்துதான். இந்நூலின் மூலம் அரவிந்தன் நீலகண்டன் முக முக்கியமான எழுத்தாளராக நிலைபெறுவார்.

பல இளைஞர்கள் கம்யூனிஸம் என்றாலே என்னவென்று தெரியாமல் அதன் பக்கம் ஈர்க்கப்படுகிறார்கள். ஒரு ப்ளஸ் டூ படிக்கும் பையன் இந்த நூலைப் படித்தால், அவன் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸம் பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டான். கம்யூனிஸத்தின் மீது எதிர்க்கருத்துக் கொண்டிருப்பவர்கள் செய்யவேண்டிய ஒன்று, இந்த நூலை இளைஞர்களுக்கு வாங்கிக் கொடுப்பது. இப்படி ஒரு நூல் இதுவரை தமிழில் இல்லாததுதான் பெரிய குறையாக இருந்தது. அந்தக் குறையும் தீர்ந்தது. இனிமேல் நடக்கவேண்டியது, இந்தப் புத்தகத்தை தமிழர்களுக்குப் பிரபலப்படுத்தவேண்டியது மட்டுமே. இதனை மிக முக்கியமான கடமையாக நினைத்துச் செய்யவேண்டும். (கிழக்கு வெளியிட்ட புத்தகம் என்பதற்காக இப்படிச் சொல்கிறேன் என நினைப்பவர்களுக்குத் தடையில்லை!)

கம்யூனிஸ்ட்டுகள் இந்தப் புத்தகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறது. நிச்சயம் திககாரர்கள் போல, அரவிந்தன் நீலகண்டனின் இன்னொரு புத்தகமான உடையும் இந்தியா புத்தகத்தை உடைக்கிறேன் என்று சொல்லி, தன் அறியாமையை வெளிப்படுத்திக்கொண்டு நிற்கமாட்டார்கள் என்பது உறுதி. வேறு எப்படி எதிர்கொள்வார்கள் என்று தெரியவில்லை. வினவு-ல் ஒரு கட்டுரை வரலாம். அவர்கள் மட்டுமே இதனை எதிர்கொள்வார்கள் என நினைக்கிறேன். மற்றபடி கம்யூனிஸ்ட்டுகள் ‘பின் தொடரும் நிழலின் குரலை’ கைவிட்டது போலவே இதையும் கைவிட்டுவிடுவார்கள். வேறென்ன செய்யமுடியும்? வாய்ப்பந்தல் போட்டு கட்சி மேடைகளில் பேசும் விடலைகளுக்கு எதிராக அறிவுப்பூர்வமாகப் பேச கம்யூனிஸ்ட்டுகளால் முடியும். ஆனால் மிக அறிவுப்பூர்வமாக எழுதப்பட்ட, ஆதாரத்தோடு எழுதப்பட்ட புத்தகத்தை எப்படி எதிர்கொள்ளமுடியும்? மௌனத்தால்தான்!

எனவே நண்பர்களே, ‘பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்’ புத்தகத்தை நிச்சயம் வாங்குங்கள். உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் பரிந்துரை செய்யுங்கள். உங்கள் நண்பர் தோழரென்றால் அவர் நிச்சயம் வாசிக்கவேண்டியது இந்தப் புத்தகம் மட்டுமே! உங்கள் நண்பர் அல்லது அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பரிந்துரை செய்யுங்கள். முடியுமென்றால் நீங்களே வாங்கி அன்பளிப்பாக அளியுங்கள். மற்றவை தன்னால் நடக்கும்.

வந்தே மாதரம்.:))))))

(இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு அரங்கில் கிடைக்கும். கிழக்கு அரங்கு F 7)

Share

மேல்விலாசம் – மலையாளத் திரைப்படம்

 

சுமாராக இருக்கும் என்று நினைத்துத்தான் இந்த மலையாளப் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். 9 நாள்களில் எடுக்கப்பட்ட படம் என்றும், 90 லட்சத்தில் எடுக்கப்பட்ட படம் என்று கூகிள் சொல்லவும், இப்படி விளம்பரத்துக்காகவும், சாதனைக்காகவும் எடுக்கப்பட்ட படங்களின் லட்சணங்கள் எப்படி இருக்கும் என்ற ஓர் அனுபவம் தந்த எச்சரிக்கையே இப்படி ஒரு முன்முடிவு வந்ததற்குக் காரணம்.

அதிலும் சுரேஷ் கோபியும் பார்த்திபனும் நடிக்கிறார்கள் என்றதும் என் அச்சம் பலமடங்கு கூடிவிட்டது. போடா புல்லே என்று சொல்லாமல் சுரேஷ் கோபி நடித்த படங்கள் எல்லாமே நன்றாக இருக்கும் என்றாலும், அவர் போடா புல்லே சொல்லாத படங்கள் வெகு குறைவு என்பதே என் அச்சத்துக்குக் காரணம். பார்த்திபன் என்ற பெயரே போதும் பயந்து நடுங்க.

இத்தனையையும் மீறியே இந்த மலையாளப் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். என்ன அறுவையாக இருந்தாலும், வேற்று மொழி என்பதால் மலையாளப் படத்தைப் பார்த்துவிட முடிகிறது. எனவே இதனையும் பார்த்துவிடலாம் என்று பார்க்கத் தொடங்கினேன்.

ஆனால் தொடங்கிய பத்து நிமிடங்களில் இந்தப் படம் கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது. சுரேஷ் கோபியின் அலட்டாத நடிப்பும், (சுகர் வந்து முகம் இறுகிப் போன) பார்த்திபனின் இறுக்கமான நடிப்பும் படத்தைப் பிடிக்கச் செய்துவிட்டது. ஒரே அறைக்குள் நடக்கும் கதை. மேஜர் மார்ஷல் என்ற விசாரணையைப் பற்றிய படம். பார்த்திபன் தன்னைவிட மூத்த அதிகாரி ஒருவரைக் கொன்றுவிடுகிறார். இருவரைச் சுடுகிறார், ஆனால் ஒருவர்தான் மரணமடைகிறார். இன்னொருவர் தப்பித்துவிடுகிறார். தாந்தான் சுட்டதாக ஒப்புக்கொள்ளும் பார்த்திபன் மீதான விசாரணையில், டிஃபெண்ஸ் தரப்பில் ஆஜராகி, அவர் ஏன் சுட்டார் என்பதற்கான காரணங்களைக் கண்டடைகிறார் சுரேஷ் கோபி.

எதிர்பாராத ஒரு காரணம் சொல்லப்படும் தருணத்தில் அந்தப் படம் மிகவும் பிடித்துப் போய்விடுகிறது. ஏதேனும் செண்டிமெண்ட்டாக ஒரு காரணம் இருக்குமென்று நினைத்தேன். பாதி படம் கடக்கையில், வேகமாக பார்த்திபன் ஓடி, தனனிவிட உயர்ந்த ரேங்க்கில் இருக்கும் அதிகாரி தோற்கக் காரணம் ஆவதும், அதனால் எரிச்சலடையும் உயரதிகாரி பார்த்திபனை ரேக்குவதும், அந்தக் கோபத்தில்தான் பார்த்திபன் கொன்றிருப்பார் என்றும் நினைத்தேன். அல்லது இதனை ஒட்டிய காரணங்கள் பின்பு விரிவாகும் என்று நினைத்தேன். விரிவாகியது. அனைத்துக்கும் காரணம், பார்த்திபன் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரர் என்பது.

தன்னைவிட நன்றாக ஓடும் பார்த்திபன், தனக்குக் கீழ் வேலை பார்ப்பவன் என்பதைவிட தன்னைவிடத் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்பதே உயரதிகாரியை வெறுப்படைய வைக்கிறது. அவர் பார்த்திபனைத் தொடர்ந்து ஏசுகிறார். தோட்டி என்றும், பறையன் என்றும், பறையனிண்டே மோன் என்றும் ஏசுகிறார். இவரோடு சேர்ந்துகொண்டு இன்னொரு உயர்சாதி அதிகாரியும் பார்த்திபனை ஏசுகிறார். ஒரு கட்டத்தில் பார்த்திபனின் தாயைத் தகாத வார்த்தை கொண்டு ஏசுகிறார்கள். கோபமடையும் பார்த்திபன் துப்பாக்கியால் சுடுகிறார். ஓர் அதிகாரி இறந்துபோகிறார். இன்னொரு அதிகாரி தோள்பட்டையில் குண்டு பாய்ந்து, உயிர் பிழைத்துக்கொள்கிறார்.

இவை அனைத்தும் ஒரே அறையில் சுரேஷ் கோபி செய்யும் விசாரணைகளில் வெளிப்படுகின்றன. ஒரு காட்சிகூட நேரடிக் காட்சி கிடையாது. எல்லாமே விசாரணைகள் மட்டுமே. உயர்சாதி உயரதிகாரி மமதையோடு பேசுகிறார். தரவாடித்துவம் (பாரம்பரியம்) இல்லாதவனெல்லாம் ராணுவத்துக்கு வரப்போய்த்தான் ராணுவ மரியாதையே போய்விட்டது என்கிறார். தனது பாரம்பரியம் எங்கே, இவன் எங்கே என்று பார்த்திபனை தூஷிக்கிறார். இவரது தரவாடித்துவத்தைப் பல கேள்விகளில் சிதறடிக்கிறார் சுரேஷ் கோபி. இக்காட்சி பத்து நிமிடங்கள் வரலாம். திரையில் இப்படி ஒரு காட்சி வருவது அதிசயம் என்றே கொள்ளவேண்டும். ஜாதியைச் சொல்லாமல், மேம்போக்காகப் பேசும் படங்களே நமக்குப் பழக்கமானவை. இந்தப் படத்தில் அப்படியெல்லாம் இல்லாமல், உயர்சாதித் திமிர் மிக அழகாக அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அபூர்வம்.

தாழ்த்தப்பட்ட சாதிக்காரரான பார்த்திபனே, உயர்சாதி அதிகாரிக்காக மரணமடையும் ஒரு ராணுவக்காரரின் மகளைத் தத்தெடுத்து வளர்ப்பது. ஆனால் தனக்காக உயிரிழந்த ராணுவக்காரருக்கு உயர்சாதி அதிகாரி எதுவுமே செய்வதில்லை. இதுதானா தரவாடித்துவம் என்று கேட்கிறார் சுரேஷ் கோபி. உயர்சாதி இதற்குச் சொல்லும் பதில் – அது அவன் கடமை.

இன்னொரு சுவாரஸ்யம், இப்படம் தமிழில் வந்துவிட்டது என்கிற கூகிள். உள்விலாசம் என்ற பெயரில். ஏற்கெனவே மேல்விலாசம் என்ற படம் தமிழில் உள்விலாசம் என்ற பெயரில் வரும் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் வந்ததாகத் தெரியவில்லை. வந்திருந்தால், இந்த பறையன், தோட்டி, உயர்சாதி வசனங்கள் தமிழில் என்னவாகின என்றறிய ஆவலாக உள்ளது. தமிழில் இந்தப் படத்தைப் பார்ப்பது ஒரு கொடுங்கனவு போலத்தான் இருக்கும். ஆனாலும் யாரேனும் தமிழில் பார்த்தால் அதைப் பற்றிச் சொல்லுங்கள்.

உணர்ச்சிமயமான நாடகத்தனமான இறுதிக்கட்ட காட்சியோடு படம் முடிவடைகிறது. சுட்டது தவறுதான் என்று பார்த்திபனுக்கு மரண தண்டனையை மார்ஷல் விதிக்கிறது. நேர்மையான அதிகாரியான வழக்கை நடத்தும் அதிகாரி தனது தீர்ப்பை பார்த்திபனிடம் சொல்லிவிட்டு, உண்மையை நோக்கி வணக்கம் சொல்வதாகச் சொல்லி சல்யூட் அடிக்கிறார். இதற்கிடையில் உயர்சாதி அதிகாரிக்குப் பதவி உயர்வும் கிடைக்கிறது. யதார்த்தம்.

படத்தின் குறைகள் என்ன என்று பார்த்தால், இப்படத்தைத் தமிழிலும் வெளிடவேண்டும் என்பதற்காக, சரியாக மலையாளம் பேசத் தெரியாத, தமிழ்போல் மலையாளம் பேசும் நடிகர்களான பார்த்திபனையும், தலைவாசல் விஜய்யையும் நடிக்க வைத்தது. மலையாளத்தைக் கடித்துக் குதறுகிறார்கள். மற்ற படங்களில் மற்ற மலையாள நடிகர்கள் பேசும் தமிழைக் காட்டிலும் இது பேதம் என்பது உண்மையே. ஆனாலும் இவர்கள் தமிழ் பேசுவது போன்றே உள்ளது. ஒரே அறை தரும் அலுப்பு. ஆனாலும் இந்த அலுப்பை இயன்றவரைப் போக்கும் அளவுக்கு வேகமான திரைக்கதை உண்டு என்றே சொல்லவேண்டும். படத்தின் ப்ளஸ், சுரேஷ் கோபியின் சுத்தமான வசனம் பேசும் முறை. படத்தின் பலமே அதுதான் என்று தெரிந்துகொண்டு தெளிவான மலையாளத்தில் அழகாகப் பேசுகிறார். பொதுவாகவே இவர் இப்படித்தான் பேசுவார் என்றாலும், இந்தப் படத்துக்கு இது அப்படியே பொருந்திப் போகிறது. பாடல்களோ, அசட்டு காமெடிகளோ எதுவுமே இல்லை. ஆகச்சிறந்த படம் என்றோ மாற்றுத் திரைப்படம் என்றோ கூற முடியாது. ஆனால் நல்ல படம். நிச்சயம் பார்க்கலாம். ராணுவத்துக்குள்ளே நடக்கும் தகிடுதத்ங்களைச் சொல்லும் படம் என்பதால் முக்கியமான படமும் கூட. 

Share

நான் பங்கேற்ற கிழக்கு பாட்காஸ்ட்கள்

எனக்கு ஒரு வலைத்தளம் இருப்பதே மறந்துவிட்டது! இந்தப் பதிவை எழுதி ஒரு மாதம் ஆகிறது. சில டெக்னிகல் பிரச்சினை காரணமாக வலையேற்ற இயலவில்லை. இப்போதும் ஒழுங்காக வலையேறுமா எனத் தெரியவில்லை. இருந்தாலும் வலையேற்றி வைக்கிறேன்.

நானும் பத்ரியும் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சில புத்தகங்கள் குறித்துப் பேசினோம். அந்த கிழக்கு பாட்காஸ்ட்டுகளைக் கீழே தந்துள்ளேன். அதனைப் பார்த்துவிட்டுத் தங்கள் பொன்னான கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். :> கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் காஷ்மீர் முதல் யுத்தம் என்ற புத்தகம். இதனை எழுதியிருப்பர் ஆண்ட்ரூ வொயிட்ஹெட். தமிழில் நண்பர் பி.ஆர். மகாதேவன் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்பேப்பரில் சில பல கட்டுரைகளை திடீரென்று போட்டுத் தாக்கும் நண்பர் இவர். ஒரு படத்தைப் பார்த்தால் அந்தத் திரைக்கதையை எப்படியாவது மாற்றி எழுதிவிடுவது இவரது பொழுதுபோக்குகளில் ஒன்று. இவரது வலைப்பதிவு: http://mahadevanbr.blogspot.com/ இதனைப் பொறுத்துக்கொள்ள முடிந்தால், நல்ல நண்பரே! இவரது மொழிபெயர்ப்பு மிக நன்றாக மெருகேறியிருக்கிறது. ஆங்கிலத்தில் உள்ள மூல நூலோடு ஒப்பிட்டு இதனை நான் சொல்லவில்லை. நான் சொல்வது, நேரடியாக தமிழ் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது எவ்விதத் தடங்கலும் இல்லாமல் படிக்க முடிகிறது என்பதையே. இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த, கிழக்கு வெளியிட்ட ராஜன்பிள்ளையின் கதை புத்தகமும் எனக்குப் பிடித்த ஒன்று. வெற்றி பெற்ற ஒரு தொழிலதிபதிரின் கதையைப் படிப்பதைவிட, தோல்வியடைந்த ராஜன்பிள்ளையின் கதையைப் படிப்பதில் ஏதோ ஒரு நெருக்கத்தை என்னால் உணரமுடிந்தது. இலக்கியம் தந்த சோகமாக இருக்கலாம்! கேப்டன் கோபிநாத்தின் வானமே எல்லை புத்தகத்தை மொழிபெயர்த்ததும் இதே மகாதேவனே! கேப்டன் கோபிநாத் புத்தகம் பற்றி பிறிதொரு சமயத்தில் பேசுவோம். காஷ்மீர் முதல் யுத்தம் பாட்காஸ்ட்டைப் பாருங்கள். 

 

அடுத்த பாட்காஸ்ட் – அண்ணா ஹசாரே – ஊழலுக்கெதிரான காந்தியப் போராட்டம் புத்தகம் குறித்து. ஜெயமோகன் எழுதிய புத்தகம். நான் ஏற்கெனவே இப்புத்தகம் பற்றிய என் பார்வையைப் பதிந்திருக்கிறேன். இந்த பாட்காஸ்ட்டிலும் கிட்டத்தட்ட அதை ஒட்டியே பேசியிருக்கிறேன்.

 

 

அடுத்த பாட்காஸ்ட்கள் – இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு என்னும் நூலைப் பற்றியது. இந்த நூல் இரண்டு பாகங்கள் கொண்டது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் பி.ஆர். சாரதி. இவர் நம் பா.ராகவனின் தந்தை. இந்நூல் கடந்த பத்து ஆண்டுகளில் வந்த தமிழ் நூல்களில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என்று நான் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். குஹா அடிப்படையில் ஒரு மார்க்ஸியர். எனவே ஹிந்துத்துவ வலதுசாரிகளின் அரசியல் மீது இவருக்குக் கோபமே இருக்கும். அதனை இப்புத்தகத்திலும் காணலாம். இதனை ஒட்டியேதான் நான் பேசியிருக்கிறேன். இதனால் இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் எதுவும் குறைந்துவிடவில்லை. மற்றவற்றைப் பாட்காஸ்ட்களில் பார்க்கவும்.

 

 

 

 

இனி வரும் பாட்காஸ்ட்டுகளைப் பகிர்ந்துகொள்கிறேன். கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களின் புகழ்பாடும் விதமாக இந்த பாட்காஸ்ட்கள் உள்ளன என்று குற்றம் சொல்லாதீர்கள். எங்கள் நோக்கமே அதுதான். எனவே திறந்த மனத்துடன் இதனை அணுகவும். வழக்கம்போல நன்றி.

Share