டியூஷன் (1)

என் மனைவி கடந்த இரண்டு வருடங்களாக டியூஷன் எடுத்துக்கொண்டிருக்கிறாள். அதில் வரும் சில மாணவர்களைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது. இவர்கள் இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே புரியவில்லை.

ஒரு மாணவன், கடந்த வருடம் 6ம்வகுப்பில் படிக்கும்போது டியூஷனுக்கு வந்தான். ஒரு வாரம் பாடம் எடுத்த என் மனைவி, என்னிடம் இயற்பியலில் ஒரே ஒரு பாடம் எடுத்துப் பாருங்க என்றாள். நானும் ஆவலாக அவனுக்கு மிக ஆழமாக விரிவாக இயற்பியலில் ஒரு பாடம் எடுத்தேன். பையன் ஒரு தனியார் பள்ளியில் சி பி எஸ் ஈ பாடத்திட்டத்தில் படித்துக்கொண்டிருந்தான். அவன் நான் நடத்தியதை மிகவும் ஆர்வமாகக் கேட்டான். அதை ஒட்டிய சில யூடியூப் வீடியோக்களைக் காட்டினேன். மிகவும் ஆர்வமாகப் பார்த்தான். அன்றைய வகுப்பு முடிந்ததும், மறுநாள் அந்தப் பாடத்தை எழுதிக் காண்பிக்கவேண்டும் என்று சொல்லி, வீட்டில் வைத்துப் படித்துவிட்டு வருமாறு சொல்லி அனுப்பினேன். என் மனைவி அமைதியாக இருந்தாள்.

மறுநாள் அந்தப் பையன் வந்தான். கேள்விகளை எழுதிக் கொடுத்தேன். அவன் பதில் எழுதித் தரவே இல்லை. என்னதான் எழுதியிருக்கிறான் என்று பார்க்கலாம் என வாங்கிப் பார்த்தபோது, அவன் எழுதிய விதமும் எழுத்தும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு ஆங்கில வார்த்தையைக் கூட அவனால் ஒழுங்காக எழுத இயலவில்லை. ஒரு கேள்விக்கும் சரியான பதிலை எழுதத் தெரியவில்லை. எழுதிய அனைத்துப் பதில்களும், அனைத்து வார்த்தைகளும் தவறு. ஆறாவது படிக்கும் பையனுக்கு ஒரு வரி கூட ஆங்கிலத்தில் மனப்பாடம் செய்து எழுதத் தெரியவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது. இப்படிப்பட்ட ஒரு பையனுக்கு நேரடியாக ஒரு பாடத்தை எப்படி விழுந்து விழுந்து எடுத்தாலும் அது பயன் தரப்போவது கிடையாது. தமிழ் எப்படி படிப்பாய் என்று கேட்டேன். அவன் பெயரில்கூடத் தமிழ் உண்டு. தமிழ் நல்லா வரும் என்றான். முதல் மனப்பாடச் செய்யுளை எழுதச் சொன்னேன்.

நான்கு வரி உள்ள அந்த மனப்பாடச் செய்யுளை எழுதிக் காண்பித்தான். நான்கைந்து வார்த்தைகள் தவிர அனைத்தும் பிழையுடன் இருந்தன. சரி, ஒருமுறை பார்த்து எழுதிவிட்டு வா என்றேன். அப்போதும் கிட்டத்தட்ட அதே பிழைகள் அப்படியே இருந்தன. பார்த்துத்தானே எழுதினாய் என்று கேட்டேன். ஆமாம் என்றான். என்னால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. அடுத்த இரண்டு நாள்கள் அவனுக்கு அ, ஆ மற்றும் க ங ச நடத்தினாள் என் மனைவி. அதில் சில எழுத்துகளை எழுதச் சொன்னபோதும் அவனுக்கு எழுதத் தெரியவில்லை. உயிரெழுத்து, மெய்யெழுத்து என எதையும் சரியாக எழுதத் தெரியவில்லை.

அந்தப் பையனின் தந்தையை அழைத்துப் பேசினேன். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது அவருக்கு. பார்த்துமா எழுதத் தெரியலை என்று கேட்டார். அவன் எழுதியதை வாங்கிப் பார்க்குமாறு சொன்னேன். உடனே அவனை ஐந்தாம் வகுப்பில் சேர்ப்பது நல்லது என்று சொன்னேன். அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்கெனவே நான்காம் வகுப்பில் இரண்டு முறை இருந்துவிட்டான், இனியும் அப்படிச் செய்யமுடியாது என்றார். இவனுக்கு ஆறாம் வகுப்பின் பாடங்களை நடத்துவது சரியாக வராது என்றேன். முதலில் தமிழிலும் ஆங்கிலத்திலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புக்கான பாடங்களைத் தொடங்கவேண்டும், அதுவரை அவனது பள்ளியை நீங்களே சமாளித்துக்கொள்ளவேண்டும் என்றேன். சரி என்று சொல்லிவிட்டார். அடுத்த மூன்று மாதங்கள் அவனுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் அடிப்படைக் கல்வியை என் மனைவி நடத்தினாள். மெல்ல மெல்ல எழுத ஆரம்பித்தான். வேகமான முன்னேற்றமெல்லாம் திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். மெதுவாக மிக மெதுவாக மெல்ல மெல்ல படிக்க ஆரம்பித்தான்.

படம் பட்டம் என்பதையெல்லாம் ஆறாம் வகுப்பு மாணவன் தவறுடன் எழுதுவது எனக்கு கடுமையான சோர்வை அளித்தது. இத்தனைக்க்கும் ஆறு வருடங்கள் முக்கியமான ஒரு தனியார்ப் பள்ளியில் வருடம் 40,000 ரூ கட்டிப் படித்திருக்கிறான். தனிப்பயிற்சியும் உண்டு. யாருமே இதைக் கண்டுகொள்ளவில்லையா? தெரியவில்லை. அவரது தந்தைக்கும் தாய்க்கும் அவர்களது தினப்படி வாழ்க்கையை எதிர்கொள்வதே பெரிய சவாலாக இருந்ததால் இவனைக் கவனிக்கமுடியவில்லை. மேலும் பணப் பிரச்சினை காரணமாக எப்படியாவது தன் மகன்களைப் (இந்தப் பையனுக்கு ஒரு தம்பியும் உண்டு, அவன் 3ம் வகுப்பு. அவனுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எந்த எழுத்தும் தெரியவில்லை. 3ம் வகுப்பு என்பதால் கொஞ்சம் தப்பித்தான்) படிக்கவைக்க கடுமையாக உழைப்பதை மட்டுமே இருவரும் முழுநோக்காகக் கொண்டுவிட்டார்கள். எனவே தன் மகன் எப்படிப் படிக்கிறான் என்பதில் கவனம் செலுத்தவில்லை. எப்படிப் படிக்கவைக்கவேண்டும் என்பதும் அவர்களுக்கு உண்மையிலேயே தெரியவில்லை.

ஒரு வழியாக ஆறு மாதங்களில் அந்தப் பையன் குறைவான பிழைகளுடன் எழுத ஆரம்பித்தான். நீண்ட கேள்விகளையெல்லாம் விட்டுவிட்டு, கோடிட்ட இடம் நிரப்புதல், பொருத்துதல், ஒரு வரிக் கேள்வி பதில், இருவரிக் கேள்வி பதில் இவற்றை மட்டும் படிக்க வைத்தாள் என் மனைவி. மெல்ல மெல்ல இரண்டு இலக்க மதிப்பெண்கள் வாங்கினான். அவனது வீட்டில் அதை ஒரு பெரிய சாதனையாகப் பார்த்தார்கள். இதுவரை அவன் எந்தத் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்கவில்லை. இதனால் பள்ளி அந்தப் பெற்றோர்களுக்குக் கடும் நெருக்கடியைத் தந்தது. பலவீனமான மாணவர்கள் அதிக நேரம் பள்ளியில் இருந்து படிக்க நிர்ப்பந்தம் செய்யப்பட்டார்கள். ஆனால் அந்த நேரத்தில் மாணவர்களால் படிக்க இயலாது என்பதே உண்மை. பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை நெருக்க ஆரம்பித்தது. இந்தப் பையனின் ஆசிரியர்கள் எப்படியாவது தன் வகுப்பில் இவன் சேராமல் இருக்கவேண்டும் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். ஏனென்றால் இவன் ஏன் இத்தனை குறைவாக  மதிப்பெண் பெறுகிறான் என்பதற்கு அவர்கள் நிர்வாகத்துக்கு விளக்கம் தரவேண்டியிருந்தது.

ஒருவழியாக இந்தப் பையன் அறிவியல் மற்றும் கணிதம் தவிர மற்ற பாடங்கள் தேர்ச்சி பெறத் தொடங்கினான். பெரிய சாதனை இது. ஆனால் இது அறிவு வளர்ந்ததற்கான முழுமையான அடையாளம் அல்ல. கொஞ்சம் வளர்ச்சி, அதோடு வினாக்கள் கேட்கப்படும் முறையைத் தெரிந்துகொண்டு, எதைப் படித்தால் மதிப்பெண்கள் எளிதாகப் பெறலாம் என்பதையும் சேர்த்து கிடைத்த வெற்றி. அதாவது மதிப்பெண்ணுக்காக படிக்கும் முறை. இதை வெற்றி என்று சொல்லமுடியாது. ஆனால் அந்தப் பெற்றோர்கள் தன் மகன் இப்படி மூன்று பாடங்களில் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்பதை பெரிய மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். பள்ளியிலும் இப்போது இந்தப் பையன் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்ல ஆரம்பித்தார்கள். மதிப்பெண் என்ன ஆனாலும் பரவாயில்லை, அவன் முதலில் எழுத்துகளை வார்த்தைகளை மொழியைப் படிக்கட்டும் என்று விட்டுவிட பெற்றோரும் ஆசிரியரும் சமூகமும் தயாராக இல்லை. 

இதில் இன்னொரு விஷயம், இந்தப் பையன் எப்போதும் படித்துக்கொண்டே இருப்பான். மற்ற பையன்கள் போல ஏமாற்றுவது, படிக்காமல் இருப்பது, பார்த்து எழுதுவது என எதையும் செய்யமாட்டான். மூன்று மணி நேரம் தொடர்ந்து படிக்கச் சொன்னாலும் எவ்வித சுணக்கமும் இன்று படித்துக்கொண்டே இருப்பான். எத்தனை முறை எழுதச் சொன்னாலும் எழுதிக்கொண்டு வருவான்.  இப்படிச் சிலரை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். அப்படிப் படித்தும் அவனால் பெரிய மதிப்பெண்கள் பெறமுடியவில்லை.

இந்த வருடம் மெட்ரிகுலேஷனுக்கு மாற்றிவிட்டார்கள். ஏழாம் வகுப்புக்கு எப்படியோ தேர்ச்சி பெற்று வந்துவிட்டான். சமச்சீர்க் கல்வி என்பதால் கொஞ்சம் எளிமையாக இருக்கிறது. ஆனால் பள்ளியின் நெருக்கடி அப்படியே தொடர்கிறது. இப்போதும் 3 பாடங்களில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளான். கணக்கிலும் அறிவியலிலும் 35க்கும் குறைவான மதிப்பெண்களே பெறுகிறான். கேள்வித்தாள் ப்ளூ பிரிண்ட்டை வைத்துத்தான் மதிப்பெண்கள் வாங்க வைக்க முடிகிறது. ஒட்டுமொத்தமாக இந்தக் கல்வியினால் அவன் பெறப்போவது என்ன என்று யோசிக்கும்போது வேதனையே மிஞ்சுகிறது. 

இவன் இப்படி ஆன விஷயத்தில் பள்ளிக்கும் பெற்றோர்க்கும் சம பங்கு பொறுப்பு உள்ளது. பள்ளிகள் அதனை மிக எளிதாகக் கடந்துவிடும். பெற்றோர்கள் மாட்டிக்கொள்வார்கள். தன் மகன் எப்படி என்ன எதற்காகப் படிக்கிறான் என்பதை நிச்சயம் ஒரு பெற்றோர் கவனிக்க வேண்டும். இல்லையென்றால் இப்படிப்பட்ட நிலைக்குத்தான் எந்த ஒரு பையனும் போய்ச்சேர வேண்டியிருக்கும். இந்தப் பெற்றோரின் மன நெருக்கடியும் பண நெருக்கடியும் சாமானியமானதல்ல. வருடம் இரண்டு பையன்களுக்கும் சேர்த்து குறைந்தது 70,000 ரூபாய் செலவு செய்தும் பையன்களின் படிப்பின் நிலை இப்படித்தான் என்றால் அந்தப் பெற்றோரின் நிலை இப்படி என்றால், யோசித்துப் பாருங்கள்.

இப்படி ஒரு வகை பெற்றோர் என்றால், இன்னொரு வகை பெற்றோர் உண்டு. அவர்களைப் பற்றி அடுத்து.

Share

ப்ரீ கே ஜி சேர்க்கலாம் வாங்க

நான் என் பையனை ப்ரீகேஜி சேர்த்தபோது எனக்குத் தேவையாகத் தோன்றியவற்றை இங்கே பதிகிறேன். இப்போது இதே அடிப்படையில்தான் என் மகளுக்கும் பள்ளியைத் தேடி இருக்கிறேன்.

* வீட்டிலிருந்து அதிகபட்சம் 2 கிமீ தொலைவுக்குள் இருக்கும் பள்ளி.

* நார்மலான கட்டணம். (வருடத்துக்கு அதிகபட்சம் 10,000. இதுவே மிக அதிகம்தான்! ஆனாலும் இப்படி ஆகிவிட்டது.) மிக அதிகக் கட்டணம் கொடுத்து எக்காரணம் கொண்டு ப்ரீகேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்க வைக்கத் தேவையில்லை. 6ம் வகுப்பிலிருந்து நல்ல அரசுப் பள்ளி (ஆங்கில வழிக் கல்வி) போதும்.

* தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி – இந்த மூன்றுக்கும் இணையான முக்கியத்துவம் வேண்டும்.

* ஓரளவு நல்ல பள்ளி போதும். அந்த வட்டாரத்திலேயே சிறப்பான பள்ளி தேவையில்லை. ஏனென்றால்,

* அந்த வட்ட்டாரத்திலேயே மிக நல்ல பள்ளி என்றால் குழந்தைகளைப் பாடாய்ப் படுத்துவார்கள் என்பது என் மனப்பதிவு. எனவே வேண்டாம்.

* குழந்தைகள் என்றால் ஒழுக்கம் இல்லாமலும் சேட்டை செய்துகொண்டும்தான் இருப்பார்கள். அவர்களை அதற்காகத் தண்டிக்க கூடாது. சேட்டை எல்லை மீறும்போது மிகக் குறைவாகத் தண்டிக்கலாம்.

* ஹோம்வொர்க் செய்யாமல் ஒரு பையன் வருவது இயல்பு. அதற்கு பெரிய தண்டனை எல்லாம் கூடாது.

* பொய் சொல்வது குழந்தைகளின் உரிமை. அதற்காக கடுப்பாகக் கூடாது.

* 70 மார்க் வாங்கினாலும் போதும், ஏன் 90 வாங்கவில்லை என்று படுத்தக்கூடாது.

* குறைந்த பட்சம் 5ம் வகுப்பு வரையாவது சனி ஞாயிறு விடுமுறை அளிக்கவேண்டும். உண்மையில் 9ம் வகுப்பு வரையில் சனி ஞாயிறு விடுமுறை கொடுத்தாலும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது.

* அதிகம் ஹோம் வொர்க் கொடுத்து கையை உடைக்கக் கூடாது.

* புரிந்துகொண்டு படிப்பது நல்லதுதான். முக்கியமானதும் தேவையானதும் கூட. ஆனால் மனனம் செய்ய பள்ளி வற்புறுத்தவேண்டும். மனனம் என்பது ஒரு கிஃப்ட். அதை சிறந்த முறையில் குழந்தைகளுக்கு வசப்படுத்தக் கற்றுத்தர வேண்டும்.

* பெற்றோர்களை வரச் சொல்லி துன்புறுத்தக்கூடாது. பரிட்சை முடியும்போது பேப்பர் திருத்தித் தரும் நாள் மட்டும் வரச் சொன்னால் போதும். அதுவும் அப்பாவோ அம்மாவோ வந்தால் போதும் என்றிருக்கவேண்டும். இரண்டு பேரும் வரவேண்டும் என்று படுத்தக்கூடாது.

* எவ்வளவு முடியுமோ அவ்வளவு குழந்தைகளை பள்ளியில் விளையாட அனுமதிக்கவேண்டும். 6ம் வகுப்புக்குப் பிறகு ஒழுக்கத்தைப் போதித்தால் போதும்.

* எப்போதும் பாடப் புத்தகத்தை மட்டும் படிக்கச் சொல்லாமல், பள்ளியில் உள்ள நூலகத்தை உண்மையாக பயன்படுத்தச் சொல்லி மாணவர்களை வற்புறுத்தவேண்டும்.

* கடவுள் வழிபாடு மிக முக்கியம். தினமும் பள்ளியில் வழிபாடு நடக்கவேண்டும்.

* இந்தியா குறித்த பெருமிதம் மிக முக்கியம். அதனை மாணவர்களுக்குத் தவறாமல் ஊட்டவேண்டும்.

* கடைசியாக எனக்கே எனக்கான ஒன்று – அது ஹிந்துப் பள்ளியாக இருக்கவேண்டும்.

இப்படித்தான் மகளையும் சேர்க்கப் போகிறேன். நாளை என் மகளுக்கு இண்டர்வியூ. வயசு 2.5 ஆகுது.

ஏ பி சி டி
உங்கப்பந்தாடி
வந்தா வாடி
வராட்டி போடி

என்று அழகாகச் சொல்லுவாள். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

Share

2013 – தமிழ்த் திரைப்பட விருதுகள்

என் பட்டியல் இது:

 

விருதுகள்

சிறந்த திரைப்படம் – மதயானைக் கூட்டம்

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – சூது கவ்வும்

சிறந்த இயக்குநர் – விக்ரம் சுகுமாரன் (மதயானைக் கூட்டம்)

சிறந்த திரைக்கதை – விக்ரம் சுகுமாரன் (மதயானைக் கூட்டம்)

சிறந்த வசனம் – நலன் குமாரசாமி (சூது கவ்வும்)

சிறந்த கதை – கடல் (ஜெயமோகன்)

சிறந்த பின்னணி இசை – இளையராஜா (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)

சிறந்த ஒளிப்பதிவு – செழியன் (பரதேசி)

சிறந்த படத்தொகுப்பு – கிஷோர் (மதயானைக் கூட்டம்)

சிறந்த கலை இயக்கம் – லால்குடி ந‌. இளையராஜா (விஸ்வரூபம்)

சிறந்த நடன இயக்கம் – பண்டிட் பிர்ஜு மஹாராஜ் (விஸ்வரூபம்)

சிறந்த பாடல் இசை – ஏ.ஆர். ரஹ்மான் (மரியான், கடல்)

சிறந்த பாடல் ஆசிரியர் – ஏகாதசி (மதயானைக் கூட்டம்)

சிறந்த நடிகர் – பாலு மகேந்திரா (தலைமுறைகள்)

சிறந்த நடிகை – ஷெல்லி கிஷோர் (தங்கமீன்கள்)

சிறந்த குணச்சித்திர‌ நடிகர் – பாரதிராஜா (பாண்டிய நாடு)

சிறந்த குணச்சித்திர‌ நடிகை – விஜி சந்திரசேகர் (மதயானைக் கூட்டம்)

சிறந்த வில்லன் நடிகர் – ராகுல் போஸ் (விஸ்வரூபம்)

சிறந்த நகைச்சுவை நடிகர் – சந்தானம் (என்றென்றும் புன்னகை)

Share

தலைமுறைகள் – திரைப்பட விமர்சனம்

தன்னகங்காரத்திலும் வறட்டுப் பிடிவாதத்திலும் ஊறிக்கிடக்கும் ஒரு முதியவர் தன் பேரனின் வரவால் தன்னை அறிந்துகொள்ளும் கதையை பாலுமகேந்திரா தலைமுறைகளில் காட்டியிருக்கிறார். பாலுமகேந்திராவின் படங்களுக்கே உரித்தான, நிலைகொள்ளும் கண்கள் காணும் காட்சிகளோடு அவரது கேமரா வெகு இயல்பாக உணர்ச்சிகளைத் திரையில் கொண்டுவருகிறது.

முதியவராக பாலுமகேந்திரா நடித்திருக்கிறார். காவி வேட்டியுடன் நடுங்கும் குரலுடன் தடுமாறும் நடையுடன் உடைந்த குரலுடன் திரைமுழுக்க அவரது உடல்மொழி வியாபித்துக் கிடக்கிறது. தன் மகனிடம் காண்பிக்கும் முரட்டுப் பிடிவாதத்திலும் சரி, தன் பேரனை முதன் முதலில் பார்க்கும்போது தனது இறுக்கங்களெல்லாம் உடைந்து தளர்ந்து அழும்போதிலும் சரி, அவரது அலட்டலற்ற இயற்கையான நடிப்பு அசர வைக்கிறது.

படத்தில் பேரனாக வரும் சிறுவனும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறான். படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் தேவை உணர்ந்து, மிகை நடிப்பில்லாமல் நடித்திருப்பது பெரிய பலம்.

இளையராஜாவின் இசை எந்த ஒரு இடத்திலும் உறுத்தலாக இல்லை. பெரும்பாலான மௌனமான காட்சிகளுக்கிடையே பின்னணியில் உறுத்தாத இசை என இளையராஜாவின் இசை படத்தோடு ஒன்றி வெளிப்படுகிறது.

இத்தனை இருந்தும் படத்தில் ஏதோ ஒன்று குறைவாக இருப்பதுபோலவே தோன்றுகிறது. படம் முழுக்க ஒரு சரடாக இல்லாமல், சிறிய சிறிய காட்சிகளாக நகர்வது போன்ற ஒரு தோற்றமே அதன் காரணம். சிறிய சிறிய காட்சிகளின் வழியாக, நாம் தாத்தா பேரனுக்கு இடையே நிகழும் உணர்வுப் பரிமாற்றத்தைப் புரிந்துகொள்கிறோம் என்றாலும், பல காட்சிகள் க்ளிஷேத்தனமாக உள்ளது. கதையில் புதுமை இல்லை என்னும்போது காட்சிகளிலாவது புதுமை வேண்டும். அது இல்லை.

தாத்தா தனது பாரம்பரியத்தைத் தன் பேரன்மீது செலுத்த முயல்வது இயல்பு என்றால், ஒரு பாதிரியார் ஒரே ஒரு வார்த்தை சொன்னதும் அதைக் கைவிடுவதும், ஏசு படத்தைத் தன் பூஜையறையில் மாட்டி வைப்பதும் வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளாகத் தெரிகின்றன. பழமைவாதத்துடன் ஒரு கதாபத்திரம் கடைசி வரையில் இருப்பது இயல்புக்கு எதிரான ஒன்றல்ல. உண்மையில் அதுவே இயல்பு. ஆனால் இந்தக் காட்சிகளின் மூலம் பாலு மகேந்திரா ஒரு செய்தியைச் சொல்ல முயன்றிருக்கிறார். திரைப்படத்தில் செய்தி சொல்வது என்பதே யதார்த்தத்திலிருந்து விலகிச் செல்வதுதான். படமும் இந்தப் புள்ளியில் யதார்த்தத்திலிருந்து விலகிச் செல்கிறது.

ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியராக இருந்த ஒருவருக்கு வாட் இஸ் யுவர் நேம் என்றுகூடக் கேட்கத் தெரியாது என்பது ஏற்கும்படியாக இல்லை. 12 வயதுள்ள சென்னையில் வளரும் ஒரு பையனுக்கு தமிழ் தெரியாது என்பதும், டாக்டர் பெண்ணுக்கு நதி என்றால் என்னவென்று தெரியாது என்பதும் நம்பும்படியாக இல்லை. கதாபாத்திரத்தை நிறுவ இத்தனை கருப்பு-வெள்ளையாக்க வேண்டியதில்லை.

நறுக்குத் தெரித்தாற்போல் வந்துவிழும் வசனங்கள் பெரிய பலம். பல காட்சிகளில் இந்த வசனங்களே படத்தை இன்னொரு தளத்துக்குக் கொண்டு செல்கின்றன. இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம், வசனம் மிக யதார்த்தமாக, நாம் யாரும் பேசும் மொழியில் அதே வார்த்தைகளோடு வெளிப்படுகிறது என்பதுதான்.

தமிழில் இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து வரவேண்டும். அந்த வகையில் இது முக்கியமான படம். பாலுமகேந்திராவின் சமீபத்திய முந்தைய திரைப்படங்களைவிட இது சிறப்பாக உள்ளது என்பதும் உண்மை. சிறந்த நடிகருக்கான விருது பாலுமகேந்திராவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

நன்றி: ஆழம், ஜனவரி 2014

Share

என்றென்றும் புன்னகை – பாமக ஆர்ப்பாட்டம் செய்யுமா?

என்றென்றும் புன்னகை திரைப்படத்தைக் கடந்த வாரம் பார்த்தேன். விமர்சனம் எழுதும் அளவுக்குப் படத்தில் ஒன்றும் இல்லை என்பதால் விட்டுவிட்டேன். படத்தின் முதல் பாதியில், மூன்று ஆண்கள் நட்பின் போர்வையில் அடித்துக் கொள்ளும் கூத்துகள் ஆபாசமானவை. ஆனால் தமிழ்த் திரையுலகத்துக்கு ஆபாசம் ஒன்று புதிதல்ல என்பதால், அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. ஆபாசத் திரைப்படங்களுக்கு மத்தியிலேயே வளர்ந்ததால், சிறிய முகச்சுளிப்போடு இவற்றைக் கடந்துசெல்ல பழகிவிட்டதால், இதெல்லாம் ஆபாசமா என்ற எதிர்க்கேள்விகளுக்குப் பதிலளிக்கும் திராணி இல்லாமல் அமைதியாக இருக்கப் பழகிவிட்டதால், இப்படத்தையும் அப்படியே கடந்தேன். இரட்டை அர்த்த வசனமெல்லாம் மலையேறிப்போய், பார்த்திபன் பாணியில் – ஒரே அர்த்தம்தான், அது அதுதான் – என்று இன்றைய தமிழ் வணிக சினிமா மாறிவிட்டிருக்கிறது. இதில் என்றென்றும் புன்னகையை மட்டும் வைத்து வருத்தப்படத் தேவையில்லை என நினைத்தேன்.
 
டிவிட்டரில் ஒருவர், அது மருத்துவர் ராமதாஸின் தயாரிப்பில் வந்த படம் என்று சொல்லியிருந்தார். முதலில் அதைப் பகடி என்று நினைத்துவிட்டேன். பின்னர் கூகிளிட்டபோதுதான் தெரிந்தது, படத்தை தயாரித்தவர் பாமக அரசியல்வாதிகளுள் ஒருவரான ஜி.கே. மணியின் மகன் என்பது! அப்படியானால் என்றென்றும் புன்னகை முன்வைக்கும் ஆபாசங்களைப் பற்றியும் அதன் தொடர்ச்சியான அரசியலைப் பற்றியும் பேச வார்த்தைகள் இருக்கின்றன. படத்தை இயக்கியவர் அஹ்மத். அவர் இப்படி இயக்கியது பற்றி எனக்குப் பொதுவான கருத்துகள் உண்டென்றாலும், தனியாகச் சொல்ல எதுவுமில்லை.
 
பாபா திரைப்படம் வந்தபோது அதில் குடிக்காட்சிகளும் சிகரெட் புகைக்கும் காட்சிகளும் வருவதால் அதனைத் தடைசெய்ய அராஜகமான வழியில் போராடியது பாமக. குடிக்காட்சிகள் வரக்கூடாது, புகைக்கும் காட்சிகள் வரக்கூடாது என்று பாமக போராட சகல உரிமையும் உள்ளது. ஆனால் அது பயமுறுத்தும் வன்முறையைக் கைக்கொள்ளும் வகையிலும் மிரட்டும் தோரணையிலும் அமையக்கூடாது. ஆனால் அன்று பாபா திரையிடப்பட்ட திரையரங்குகளில் கலாட்டா செய்வோம் என்று பாமக மிரட்டியது. அதிகார பலம் தன் பக்கம் இருப்பதால் தான் என்னவேண்டுமானாலும் செய்யலாம், ஜாதி ஓட்டுக்காக அரசு வாய்மூடி இருக்கும் என்று பாமக நம்பியது. அதுதான் நடக்கவும் செய்தது. இதனாலும் (வேறு காரணங்களாலும்) பாபா தோல்வி கண்டது. ரஜினி தயாரிப்பாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தந்தார். இதற்கெல்லாம் காரணம், சமூக அக்கறை என்று காட்டிக்கொண்டது பாமக.
 
இன்று பாமகவின் அரசியல்வாதிகளுள் ஒருவரான ஜி.கே. மணியின் புதல்வர் ஜி.கே.எம். தமிழ்குமரன் எடுத்திருக்கும் படம் முன்வைக்கும் கருத்துகள் என்ன என்று பார்ப்போம். மூன்று இளைஞர்கள் எப்போதும் குடித்துக்கொண்டே இருக்கிறார்கள். பப்பில் ஆபாச நடனம் ஆடுகிறவர்களுக்கு மத்தியில் குடிக்கிறார்கள். ஒருவர் ஆண்குறியை இன்னொருவர் பார்ப்பது சகஜம் என்பதுபோல பார்த்துக்கொண்டே பேசுகிறார்கள். ஹோமோ போல நடந்துகொள்கிறார்கள். 
 
பொதுவாகக் காதல் திரைப்படங்களில் காதலர்கள் உறவுகொள்வதைக் காண்பிப்பதில்லை. ஆனாலும் பார்வையாளர்கள் தேவையெனில் அவர்கள்  உறவுகொண்டதாகவே நினைத்துக்கொள்வார்கள். அதேபோல் இதில் ஹோமோ என்று நேரடியாகக் காண்பிக்காவிட்டாலும், அவர்கள் ஹோமோ என்று பார்வையாளர்கள் நினைத்துக்கொள்ளும் அளவிலேதான் காட்சிகள் உள்ளன. அதில் ஒரு காட்சியில் இந்த மூன்று நண்பர்களுள் ஒருவர், மற்ற இருவரை ஹோமோ என்று சொல்லிக் கலாய்க்கும் காட்சியும் உண்டு. (இந்தக் காட்சியில் ஹோமோ என்ற வசனத்தின் ஒலி நீக்கப்பட்டுள்ளது.) ஹோமோ பற்றித் திரைப்படங்களில் வரக்கூடாது என்பது என் நிலைப்பாடு அல்ல. அதை எப்படி எந்த சீரியஸ் உணர்வுடன் படமாக்கிறோம் என்பது முக்கியமானது. அதைவிட அதை யார் படமாக்குக்கிறார்கள், கடந்த காலங்களில் அவர்கள் செயல்பாடு என்ன என்பதும் எனக்கு முக்கியமானதே. இன்று இப்படி கலாய்க்கத் தொடங்கினால்தான் நாளை இதைப் பற்றி அலசும் முக்கியமான திரைப்படங்கள் வரும் என்றும் இங்கே நம்புவதற்கில்லை. ஏனென்றால் இன்றுவரை திருநங்கைகள் பற்றி ஒரு உருப்படியான திரைப்படமும் வந்ததில்லை. (சந்தோஷ் சிவன் ஒரு படம் எடுத்ததாக நினைவு, அதை நான் இன்னும் பார்க்கவில்லை.) ஆனால் திருநங்கைகள் தொடர்ந்து இப்படி திரைப்படங்களில் கேவலமாகக் கலாய்க்கப்பட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்கள். எனவே தமிழ்த் திரையுலகம் ஹோமோக்களைப் பற்றிய உருப்படியான படத்தை எடுத்துவிடும் என்றும் நம்புவதற்கில்லை.
 
என்றென்றும் புன்னகை திரைப்படத்தில் எப்போதும் ஆண்கள் குடித்துக்கொண்டே இருப்பதோடு, ஒரு காட்சியில் ஹீரோயினையும் குடிக்க அழைக்கிறார்கள். ஐடி கல்ச்சரைக் காண்பிக்கிறார்களாம். இதுதான் யதார்த்தம் என்றால், பாபா படத்தில் ஒரு ரௌடி குடிப்பது போலவும் புகைப்பது போலவும் காட்டுவது யதார்த்தம் இல்லையா? பொதுவாகவே தமிழ்த் திரையுலகம் கருப்பு-வெள்ளைக் காட்சிப்படுத்தலிலும், மக்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் கருத்துகளை அப்படியே படமாக்குவதால் அவர்களோடு எளிதில் நெருங்கமுடியும் வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளக்கூடியதுதான். எனவேதான் பாபா படத்தில், பின்னாளில் திருந்தி குடி இன்றி புகையின்றி இருக்கப்போகும் ஒருவனைக் காண்பிக்க, அவன் திருந்துவதற்கு முன்னால் குடி சீட்டு புகை என்று இருக்கிறான் என்று காட்டப்பட்டது. ஆனால் கலாசாரக் காவலர்களான பாமகவினருக்குப் பொறுக்கவில்லை. படத்துக்கு எதிராக வன்முறையை அரங்கேற்றினார்கள். ஆனால் இன்று அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரின் மகன் தயாரித்திருக்கும் படம், புதிய தமிழ்க் கலாசாரத்தைக் காட்டுகிறது. கூத்தடிக்கும் நண்பர்கள், கடைசி காட்சியில் குடிக்க மறுப்புத் தெரிவிக்காத கதாநாயகி, இஷ்டப்பட்ட பெண்களுடன் சுற்றும் ஒரு கதாபாத்திரம் என என்றென்றும் புன்னகைத் திரைப்படத்தை பாமகவும் ராமதாஸும் அன்புமணியும் ஏற்கிறார்களா என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும். இல்லையென்றால் அப்படத்தை அவர்கள் பகிரங்கமாக எதிர்க்கவேண்டும். (இந்த முறையாவது ஜனநாயக ரீதியில் வன்முறை இல்லாமல் யாரையும் மிரட்டாமல் எதிர்க்கட்டும்!) அப்படி எதிர்க்கமுடியவில்லை என்றால், பாபாவை எதிர்த்த தவறுக்கு ரஜினியிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும்.

 
குடிக்காட்சிகளும் புகைக்காட்சிகளும் தவறு என்பதை ஏற்று, தனது அடுத்த படத்தில் ரஜினி சுவிங்கத்தை மென்றுகொண்டு வந்தார். அந்தப் பண்பாவது இவர்களிடம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

 

 

 

 

Share

மதயானைக் கூட்டம்

சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் எவையுமே தமிழர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதில்லை என்பது நமது சாபம். அந்த சாபத்தைப் போக்கும் வகையில் அவ்வப்போது சில திரைப்படங்கள் வருவதுண்டு. விருமாண்டி, ஆடுகளம், வம்சம், சுப்ரமணியபுரம், காதல் போன்றவை. அந்த வகையில் இன்னொரு திரைப்படம், அதுவும் வம்சம், விருமாண்டி படங்களின் பலவீனங்கள் இல்லாமல் சிறப்பான ஒரு திரைப்படமாக ‘மதயானைக் கூட்டம்’ உருவாகியிருக்கிறது.


ஒருவனின் இரண்டு மனைவிகளுக்குள்ளான உணர்ச்சிகள், அவர்களின் வாரிசுகளுக்குள்ளே எழும் பிரச்சினைகளை மணி ரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’ நகர்ப்புற எலைட்டுகளின் வாழ்க்கையை மையமாக வைத்துச் சொன்னது என்றால், மதயானைக் கூட்டம் அதே பிரச்சினைகளை கிராமத்தையும் ரத்தமும் சதையுமான மனிதர்களை முன்வைத்துப் பேசுகிறது. அதுவும் அக்னி நட்சத்திரம் செய்யத் தவறிய நுணுக்கங்களோடு.
திரைப்படத்தின் முதல் காட்சியிலிருந்தே கதை தொடங்கிவிடுகிறது. கதையைச் சொல்லத் தொடங்கும் விதமும் அக்கதை மெல்ல நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும் விதமும் அழகு. திரையெங்கும் உண்மையான மனிதர்களை உலவவிட்டது போன்ற நடிகர்களின் கச்சிதமான தேர்வு, நடிப்பு. நல்ல பின்னணி இசை (ரகுநந்தன்). காட்சிக்கேற்ற பாடல்கள். மிகத் திறமையான பாடல் வரிகள் (ஏகாதசி). மனதை அள்ளும் ஒளிப்பதிவு. அதிலும் காட்சிகளின் மாறும் தன்மைக்கேற்ப பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறம் என எல்லாவற்றிலும் மதயானைக் கூட்டம் நம்மைக் கட்டிப் போடுகிறது.

திரைக்கதையை மிகச் செறிவாக மிகக் கச்சிதமாக எழுதியிருக்கிறார்கள். ஒரு எதிர்பாராத சாவும், அதைத் தொடர்ந்து வரும் இரண்டு கொலைகளும் நம்மை பரபரப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றன. இந்த சாவுக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டிருக்கும் நுணுக்கமான விதம் தனியே சொல்லப்படவேண்டியது. பொதுவாகவே இயக்குநர்கள் நுணுக்கமான காட்சிகளில் அத்தனை கவனம் செலுத்துவதில்லை. கதை நிகழும் இடம், அதோடு தொடர்புடைய மனிதர்கள், அவர்கள் பேச்சு வழக்கு, அவர்களது பாரம்பரியம் என எல்லாவற்றையும் நுணுக்கமாகப் பார்த்துப் பதிவு செய்வது மிக முக்கியமானது. பார்வையாளர்கள் இதன் எல்லா நுணுக்கங்களையும் புரிந்துகொள்ளாமல் போகலாம். ஆனால் இந்த நுணுக்கங்கள் தரும் ஒட்டுமொத்த மனப்பதிவு அபாரமானது. அதையே மதயானைக் கூட்டம் சாதித்திருக்கிறது.


நம்மிடம் கதை இல்லை, எல்லாக் கதைகளும் எடுக்கப்பட்டுவிட்டன என்று சொல்வதெல்லாம் ஹம்பக் என்பதை இப்படம் மீண்டும் நிரூபிக்கிறது. எத்தனையோ கதைகளை நம் மண்ணோடு பொருத்தி மீண்டும் மிக அழகாக எடுக்கலாம் என்பதற்கு மதயானைக் கூட்டம் இன்னொரு உதாரணம். அந்த வகையில் இது முக்கியமான படம்.


ஒரு சில குறைகள் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என்னும் அளவுக்கு திரைப்படம் சிறந்து விளங்குகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். ஆனால் படத்துக்கு இசை ரகுநந்தன். இளம் படைப்பாளிகளின் இந்தப் போக்கு ஆரோக்கியமானது.


இப்படத்தில் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி நடித்திருக்கிறார். மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். வீரச் சந்தானம் (அவள் பெயர் தமிழரசி), வ.ஐ.ச. ஜெயபாலன் (ஆடுகளம்) வரிசையில் இப்படத்தில் வேல ராமமூர்த்தி. விருதும் பெற்றுவிடுவார்.
பாடலாசிரியர் ஏகாதசி இதற்குமுன் என்ன என்ன பாடல்கள் எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை. இப்படத்தில் பாடல்களை மிகச் சிறப்பாக, படத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு எழுதியிருக்கிறார்.


இப்படம் தேவர்களின் ஜாதிப் பெருமையைப் பேசுகிறது என்று மேம்போக்கான விமர்சனங்கள் எழக்கூடும். நம் வாழ்க்கையைப் பேசவேண்டுமென்றால், அதற்குரிய சில குணங்களை நாம் பேசித்தான் ஆகவேண்டும். அதை மட்டுமே இந்தப் படம் செய்திருக்கிறதே ஒழிய, வலிந்த ஜாதிப் புகழ் மாலைகள் இல்லை. மிகத் தெளிவாக இப்படம் ஒரே ஜாதிக்குள், அதாவது தேவர்களுக்குள் நிகழும் மோதலையே காட்சிப்படுத்தியிருக்கிறது. அவர்களே அவர்களைப் பற்றிய மிதமிஞ்சிய புகழுரைகளைப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களே அவர்களைப் பற்றிய இகழ்ச்சியையும் சொல்லிக்கொள்கிறார்கள். அவர்களே நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் மாறி மோதிக் கொள்கிறார்கள். நம்பிக்கைத் துரோகிகளாகிக் கழுத்தை அறுத்துக் கொள்கிறார்கள்.


மிகச் சாதாரணமான கதையை, அதற்குரிய களத்தில், அக்களத்துக்குரிய விவரணைகளோடு வைத்து, நம் படத்தை நாம் திரையில் பார்க்கிறோம் என்கிற பெருமிதத்தைக் கொண்டு வந்திருக்கிறது மதயானைக் கூட்டம். பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்திருப்பதால், படத்தோடு எளிதில் ஒன்றிவிட முடிகிறது. ஆடுகளத்தில் வசனம் எழுதிய விக்ரம் சுகுமாரன் மிகச் சிறப்பாக இப்படத்தை இயக்கி இருக்கிறார். சிறந்த இயக்குநர் விருது நிச்சயம். இயக்குநர் விக்ரம் சுகுமாரனும், தயாரிப்பாளர் ஜி.வி. பிரகாஷும் பாராட்டுக்குரியவர்கள்

Share

ராவண தேசம் – திரைப்பட விமர்சனம்

ராவண தேசம்

சில நேரங்களில் நாம் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்காத களம் ஒன்றில் திரைப்படங்கள் வந்துவிடக்கூடும். அப்படி ஒரு நிகழ்வு தமிழ்த் திரைப்பட உலக வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. தமிழில் வெளிவர சாத்தியமே இல்லை என்று நாம் நம்பவைக்கப்பட்டுவிட்ட களம் ஒன்றை அஜெய் நூத்தகி திரைப்படமாக்கியிருக்கிறார்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக மிக மேலோட்டமாக ஈழத் தமிழர்களின் இன்னல்களைக் கோடிட்டுக் காட்டும் படங்கள் சில தமிழில் வந்ததுண்டு. அவை எதுவுமே ஈழ மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட அராஜகத்துக்கு எந்த வித நியாயத்தையும் செய்ததில்லை. மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் மட்டுமே ஓரளவுக்கு ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்தைப் பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் காட்சிப்படுத்திய திரைப்படம். ஆனால் அதுவும்கூட, ஈழத்தைப் பின்னணியாக மட்டும் வைத்துக்கொண்டு, வழக்கமான தமிழ்த் திரைப்பட செண்டிமெண்ட்டை மட்டுமே முன்னெடுத்தது.

இந்தக் குறையைப் போக்கும் வகையில் மகிழ்ச்சியான அதிர்ச்சியைத் தருகிறது ராவண தேசம். இந்தப் படத்தை எப்படி சென்சார் அனுமதித்தது என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப் படம் எந்த வகையிலும் இந்தியாவுக்கு எதிரானதாக இல்லை. என்றாலும், புலித் தலைவர் வரும் ஒரு திரைப்படத்துக்கு சென்சார் குழு அனுமதி அளித்ததே ஆச்சரியமான விஷயம்தான்.  

முள்ளி வாய்க்காலில் பிரபாகரன் கொல்லப்படும் மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்குகிறது திரைப்படம். முள்ளி வாய்க்காலை இலங்கை சிங்கள ராணுவம் கைப்பற்றுகிறது. அங்குள்ள தமிழர்களுக்கு சிங்கள ராணுவம் செய்யும் கொடுமைகள், பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் கொடுமைகள் காண்பிக்கப்படுகின்றன. முள்ளி வாய்க்காலை மீண்டும் புலிகள் (புலிகள் என்று நேரடியாகச் சொல்லப்படவில்லை) கைப்பற்றுகிறார்கள். சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். போரில் வெற்றி பெறுவோம், எனவே தமிழர்கள் யாரும் முள்ளி வாய்க்காலை விட்டு வெளியேறவேண்டியதில்லை, மீறி வெளியேறினால், கொல்லப்படுவார்கள் என்று அறிவிக்கிறது போராளிகள் குழு.

அங்குள்ள மக்கள் தங்களுக்குப் போரே வேண்டாம், இந்த மண்ணும் வேண்டாம், உயிர்தான் வேண்டும் என்கிறார்கள். தங்கள் கண்ணெதிரே தங்கள் சொந்தங்கள் சாவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை என்கிறார்கள். இங்கேதான் ஒரு திருப்பம் நிகழ்கிறது.

தன் கூட்டாளி ஒருவனிடம் துப்பாக்கியைக் கொடுத்து, போராளிகளின் தலைவர் (பிரபாகரன் என்று நேரடியாகச் சொல்லப்படவில்லை) தன்னைச் சுடும்படிச் சொல்கிறார். அவரும் சுட்டுவிடுகிறார். தலைவர் வீர மரணம் எய்துகிறார். சிங்கள ராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று சொல்ல இயக்குநர் நினைத்திருக்கலாம். ஆனால் இப்படிப் காட்சிப்படுத்தியிருப்பது எவ்வித நம்பகத்தன்மையையும் அளிக்கவில்லை.

இனியும் இங்கிருந்தால் உயிர் பிழைக்க முடியாது என்று சொல்லும் பத்து பேர் அடங்கிய குழு, புலிகளுக்குத் தெரியாமல் கடல் வழியாக இந்தியா செல்ல முடிவெடுத்து, அங்கிருந்து தப்பிக்கிறது. அவர்கள் கடலில் எதிர்கொள்ளும் உயிரை உறைய வைக்கும் பிரச்சினைகளே மீதிப் படம்.

கடலில் திசை தெரியாமல் வழிதவறிப் போகிறார்கள். கொண்டு வந்த உணவு காலியாகிவிடுகிறது. பணப்பேராசை பிடித்த ஏஜெண்ட் தன் உணவை யாருக்கும் தருவதில்லை. தங்கள் மகனைப் பார்த்துவிடமாட்டோமா என்று ஏங்கும் வயதான கிழவி அந்தப் பயணத்திலேயே மரணமடைய, அந்த உடலை கடலில் வீசிவிட்டு பயணத்தைத் தொடர்கிறார்கள். கைக் குழந்தைக்குப் பாலூட்டுவதற்காக வேறு வழியின்றி கடல் நீரைப் பருகுகிறாள் ஒரு தாய். கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணின் கரு கலைகிறது. இப்படி அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நம்மை மிரள வைக்கின்றன.

ராம தேசத்தைப் பார்க்கப் போவதில்லை என்று நினைத்து கதாநாயகன் ராம தேசத்து மக்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். தங்கள் சாவுக்கு மௌன சாட்சிகளாக விளங்கும் இந்திய தேசம் என்றேனும் ஒருநாள் தங்கள் மனசாட்சிக்கேனும் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்ற பொருளில் அக்கடிதம் அமைகிறது.

ஒரு அகதியாகக்கூட வழியின்றித்தான் ஈழத் தமிழனின் நிலை உள்ளது என்பதை மிகவும் அழுத்தமாகவே காட்டியிருக்கிறார் இயக்குநர்.

ஆனால் திரைப்படம் என்ற வலிமையான ஊடக மொழியின்படி இப்படம் மிகவும் செயற்கைத்தனமாக உள்ளது என்றே சொல்லவேண்டும். இடைவேளை வரும் காட்சிகள் மிகவும் நாடகத்தனமாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஒரு கிராமத்து மக்களின் போராட்டம் என்ற அளவில்கூட, ஒரு நாட்டு மக்களின் போராட்டம் இப்படத்தில் பதிவாகவில்லை.

தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, மக்களைக் கேடயமாகப் புலிகள் பயன்படுத்தியைப் பற்றியெல்லாம் எவ்விதக் குறிப்புகளும் இல்லை. ஆனால் திடீரென்று மக்கள் எங்களுக்கு உயிர்தான் வேண்டும் என்ற காட்சி மட்டும் உள்ளது. ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் காட்டப்படவில்லை.

இந்திய தேசத்துக்குச் செல்ல முடிவெடுக்கும் பத்து பேர் அடங்கிய குழுவை எப்படி இந்தியா எதிர்கொள்கிறது என்கிற சவாலுக்குள்ளேயே இயக்குநர் செல்லவில்லை. கடலோடு படத்தை முடித்துவிட்டது பெரிய ஏமாற்றம். கடலில் சாகும் தறுவாயில் கதாநாயகன் கடிதம் எழுதும்போது குறிப்படப்படும் தேதியும், பிரபாகரன் மரணத் தேதியும் பொருந்தாமல் உள்ளது.

ஈழத்தில் இறந்து மடிந்த ஈழத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஹிந்துக்கள். இப்படத்தில் ஈழத் தமிழராக ஹிந்து அடையாளத்தோடு காண்பிக்கப்படும் மனிதரோ மிகவும் மோசமானவராகச் சித்திரிக்கப்பட்டுள்ளார். படத்தின் கதாநாயகன், அவரது நண்பர்கள் எல்லாம் நல்ல, அப்பாவிக் கிறித்துவர்களாக மத அடையாளத்தோடு  காட்டப்படுகிறார்கள்.இவ்வளவு துயரத்துக்குப் பிறகும் ஒரு தமிழன் ஹிந்து என்பதாலேயே வெறுக்கப்படும் அரசியலை நினைத்து வேதனையே மிஞ்சுகிறது.

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் பற்றிப் படமே எடுக்கமுடியாது என்று சொல்லித் திரிபவர்கள் எல்லாருமே கோழைகளாகவோ அல்லது ஊரை ஏமாற்றிக்கொண்டோ இருக்கவேண்டும். இத்திரைப்படம் அதை வலுவாக நிரூபிக்கிறது. இதுபோன்று ஒரு பத்து திரைப்படங்கள் வந்தால், மிகத் தீவிரமான அரசியல் படங்கள் ஈழத்தை மையாக வைத்து வர வாய்ப்புண்டு. அந்தக் கதவை இந்தத் திரைப்படம் திறந்து வைத்திருக்கிறது.

 

திரைப்படங்கள் இதுவரை பல வகைகளில் எடுக்கப்பட்டிருக்கின்றன. கலைக்காக, பிரசாரத்துக்காக, இயக்கத்துக்காக, பொழுது போக்கிற்காக என. இன்று உலகக் கவனம் பெறும் திரைப்படங்கள் எல்லாமே தங்கள் நாட்டின் தங்கள் மக்களின் தங்கள் இனத்தின் பிரச்சினைகளைப் பேசுபவையே. ஆனால் தமிழ்த் திரைப்படங்கள் இதைப் பற்றியெல்லாம் புரிந்துகொண்டதாகவே தெரியவில்லை. இன்னும் தமிழ்த் திரைப்படங்கள் உலகத் திரைப்படங்களோடு ஒப்பிடத் தகுந்த வகையில், தங்கள் இனம் பற்றியோ மண் பற்றியோ பேசத் துவங்கவில்லை. மேலோட்டமான முயற்சிகள் உண்டு. அவை இன்னும் சரியான அளவில் வடிவம் பெற்று மேலெழவில்லை. இத்திரைப்படம் திரைப்பட மொழியில் மிகவும் மோசமாகத் தோற்றாலும், தன் மக்களைப் பற்றிப் பேசவேண்டும் என்ற உந்துதல் உள்ளது நல்ல விஷயம்தான். முக்கியமான விஷயம், இந்தப் படத்தின் இயக்குநர் ஒரு தெலுங்கர்.

(நன்றி: ஆழம், டிசம்பர் 2013 இதழ்)

 

Share

மதுரை சுல்தான்கள்

மதுரை சுல்தான்கள் புத்தகத்தை நேற்று படித்து முடித்தேன். இந்தப் புத்தகம் கிழக்கு பதிப்பகத்தால் 2012ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஒரு புத்தகம் தனக்கான வாசகர்களைத் தேடிக்கொள்ளும் என்று இலக்கியவாதிகள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அதை வைத்து நானே பலமுறை பகடி செய்திருக்கிறேன். ஆனால் இந்தப் புத்தகம் உண்மையில் என்னைத் தேடிக்கொண்டது என்றே சொல்லவேண்டும். 2012ல் இந்தப் புத்தகம் வந்தபோது நான் அதை படிக்கவில்லை. பிறகும் படிக்கவேண்டும் என்றுகூட நினைக்கவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு எழுத்தாளர் ஸ்ரீ வேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை) இறந்தபோது, எங்கள் நண்பர்களுக்குள் சில மடல் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் அவர் மதுரா விஜயம் என்ற நூலை மையமாக வைத்து எழுதிய திருவரங்கன் உலா பற்றிப் பேசிக்கொண்டோம். அப்போது ஒரு நண்பர், ‘பிரசன்னா, நீங்கள் பரிந்துரைத்த மதுரை சுல்தான்கள் புத்தகம் இப்போது இருப்பில் உள்ளதா’ என்று கேட்டார். உண்மையில் நான் இந்தப் புத்தத்தைப் படித்திருக்கவில்லை. அவருக்குப் பரிந்துரைத்த நினைவும் இல்லை. ஒருவேளை அவர் கேட்டு, நான் வழக்கம்போல் நல்ல புத்தகம் என்று சொன்னேனா என்றும் நினைவில்லை. 🙂 ஆனால் அவரிடம் அதையெல்லாம் சொல்லாமல், புத்தகம் இருப்பில் உள்ளது என்று பதில் அனுப்பிவிட்டேன். பின்பு அந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். நாளை அந்த நண்பர் ஏதேனும் கேட்டால் பதில் சொல்லவாவது தயாராக இருப்போம் என்றுதான் படிக்கத் தொடங்கினேன்.

இதற்கிடையில் எஸ் பி சொக்கலிங்கம் பற்றித் தெரிந்துகொண்டதும் இந்தப் புத்தக வாசிப்பனுபவத்துக்கு உறுதுணையாக இருந்தது என்பதை மறுக்கமுடியாது. 😛

மதுரை சுல்தான்கள் என்று பெயரிடப்பட்டிருந்தாலும், இந்திய சுல்தான்கள் யாரெல்லாம் தமிழ்நாட்டுக்குப் படையெடுத்து வந்தார்களோ அவர்களைப் பற்றியெல்லாம் இந்த நூல் பேசுகிறது. சுல்தான்கள் ஆட்சியின்போது இங்கே வந்த பயண யாத்ரிகர்கள் (இப்ன் பதூதா, மார்கோ போலோ போன்றவர்கள்) அன்றைய தமிழ்நாட்டைப் பற்றிச் சொல்லிச்சென்ற குறிப்புகள் எளிய தமிழில் இப்புத்தகத்தில் தரப்பட்டுள்ளன. 96 பக்கங்கள் மட்டுமே உள்ள சிறிய நூல்தான் இது. 2 மணி நேரத்தில் படித்துவிடலாம்.

வரலாற்றை ஆய்வு நோக்கில் சொல்வது ஒரு வகை. ஒரு பருந்துப் பார்வையில் எளிய தமிழில் சொல்வது ஒரு வகை. இந்நூல் இரண்டாம் வகையைச் சார்ந்தது. மதன் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள்’ மிக முக்கியமான புத்தகம். நான் இந்தப் புத்தகத்தை முதன்முதலில் (1996 வாக்கில்) வாசித்தபோது, இப்படியெல்லாம் பள்ளிகளில் வரலாற்று வகுப்புகளில் சொல்லிக் கொடுத்திருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்து ஏங்கியிருக்கிறேன். அதே நடையில் அதேபோன்று மதுரை சுல்தான்கள் புத்தகமும் எழுதப்பட்டிருப்பது இனிய ஆச்சரியம். கில்ஜி வம்சம், பாண்டியர்கள், மாலிக் கபூர், குஸ்ரவ் கான், துக்ளக் வம்சம் பற்றியெல்லாம் மிகச் சிறப்பாக, மிக எளிமையாக, மிக சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ’

அலாவுதீன் கில்ஜிக்கு மாலிக் கபூர் மீது ஈடுபாடு. முபாரக் கில்ஜிக்கு குஸ்ரவ்கான் மீது ஈடுபாடு. மாலிக் கபூர், குஸ்ரவ் கான் – இருவருமே முஸ்லிமாக மதம் மாறிய இந்துக்கள். மாலிக் கபூர் ஒரு திருநங்கை, இயற்பெயர் சந்த்ராம். வரலாற்றின் ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை.

இப்படி பல விஷயங்கள் இருந்தாலும், சுல்தான்கள் / துக்ளக் படையெடுப்பின்போது திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் சிலை அடையும் அலைக்கழிப்பின் விவரணைகள் அட்டகாசமாகப் பதிவாகியுள்ளது. துலுக்க நாச்சியார் (சுரதானி) பற்றிய சித்திரம் மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. பின்பு உல்லா கான் (முகமது பின் துக்ளக்) படையெடுப்பின்போது ரங்கநாதர் சிலையைக் காப்பாற்ற ஒரு குழுவே உயிரைத் தியாகம் செய்யும் காட்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. முக்கியமான விஷயம், எவ்வித மிகை உணர்ச்சியும் இன்றி, நடந்தது நடந்தவாறு இந்நூலில் விவரிக்கப்பட்டிருப்பது சிறப்பு. அதேபோல் இன்னொரு ரசனையான விஷயம், கங்காதேவி மதுரா விஜயம் நூலில், மீனாட்சி அம்மன் சொன்னதாக கம்பணாவுக்கு எழுதியிருக்கும் கடிதம். 

மதுரை சுல்தான்கள் பற்றி குறைவாகவே சொல்லப்பட்டுள்ளது. வரலாற்றில் அவர்களைப் பற்றிய குறிப்புகள் அவ்வளவுதான் கிடைத்தனவோ என்னவோ.

என் தேர்வில் மிக முக்கியமான புத்தகம். புத்தகம் எழுதிய எஸ்.பி. சொக்கலிங்கத்துக்கு பாராட்டுகள்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-608-7.html

புத்தகத்திலிருந்து ஒரு பக்கம்:

:ms4

 

Share