பாகுபலி
பவர் பாண்டி
பவர் பாண்டி பார்த்தேன். மஞ்சள் பை தந்த பயம், கிழவர்களின் காதல் என்ற பிரயோகங்கள் தந்த அச்சம் காரணத்தால் இயன்றவரை இப்படத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தே வந்தேன். மகளிர் மட்டும் திரைப்படத்தில் இருந்து ரேவதி மீது உருவான இனம்புரியாத எரிச்சல் இன்னுமொரு காரணம். சுத்தமாக முக பாவங்கள் காட்ட வராத ராஜ்கிரண் வேறு. இத்தனை எரிச்சலுடன் பார்த்தும், இந்தப் படம் பிடித்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால், தனுஷின் காதல் காட்சிகள் முடியும் வரை படம் அட்டகாசமான ஃபீல் குட் மூவி. அதற்குப் பின்பு கொஞ்சம் சொதப்பல். ஆனால் அந்த சொதப்பல் காட்சிகளில் ரேவதியின் நளினமான நடிப்பு – அருமை. ரேவதி மிதமிஞ்சிப் போனால் படத்தில் பதினைந்து நிமிடங்கள் வந்திருக்கலாம். ஆனால் அந்த சிரிப்பு, அந்த கண்களில் காட்டும் நுணுக்கம் என ஒட்டுமொத்த படத்தையும் ஹைஜாக் செய்துவிட்டார். ரேவதியின் முன்பு ராஜ்கிரண் பூனையாகிப் போனது பெரிய மைனஸ். தனுஷை அந்த அளவுக்கு ரசிக்கும்விதமாகக் காட்டிவிட்டு, ரேவதியின் முன்பு ராஜ்கிரண் இறங்கிப் போனதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுதான் படத்தின் மைனஸ் என நினைக்கிறேன்.
படத்தில் எனக்குப் பிடித்துப் போன இன்னும் சில விஷயங்கள்: அலட்டாத மிகவும் சீரியஸான யதார்த்தமான பிரசன்னாவின் நடிப்பு. பிரசன்னாவின் வாழ்நாள் படம் இது என நினைத்துக்கொண்டேன். அடுத்து தனுஷின் ஃபிரண்டாக வரும் அந்த பீர் பார்ட்னர். என்ன ஒரு யதார்த்தம். இளையராஜா இசையமைத்திருக்கலாமே என்று படம் முழுக்க தோன்றிக்கொண்டே இருந்தது.
தேவையற்ற அந்த கடைசி சண்டைக் காட்சியை நீக்கி, ராஜ்கிரணை இறுதிக்காட்சிகளில் கொஞ்சம் கெத்தாகக் காட்டி இருந்தால், படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
தனுஷின் முதல் பட இயக்கம் மிகவும் நன்றாகவே வந்துள்ளது. தனுஷின் இயக்கம் என்று சொன்னபோது நான் எதிர்பார்த்த திரைப்படம் வேறு. தனுஷ் தந்ததோ முற்றிலும் வேறானது. ஆனாலும் ரசிக்கும்படியாகவே இருந்தது. இந்த வயதான காதல் வகைத் திரைப்படங்களில் தமிழின் ஒரே முத்து கேளடி கண்மணி மட்டுமே என்பது என் எண்ணம். இப்போதும் கேளடி கண்மணியே முதன்மையில் உள்ளது. துணை படம் (துரை இயக்கியது) இதை கொஞ்சம் தொட்டுப் பார்த்தது. (துணை படத்தில் சிவாஜியைத் தூக்கிச் சாப்பிடும் ராதாவின் மிரட்டல் நடிப்பு இன்னும் கண்ணில் நிற்கிறது.) இப்போதைய டீஸண்ட் வரவு பவர் பாண்டி.
முதல் மரியாதையை மிஸ் செய்துவிட்டேன். முதல் மரியாதை வேற லெவல்.
காற்று வெளியிடை
கிறுக்கல்கள் தங்கமீன்களான கதை
குமுதத்தில் என் சிறுகதை ஒன்று வெளியாகியிருக்கிறது. எதோ ஒரு தருணத்தில், சிறிய கதையில் கூட கொஞ்சம் முயற்சி செய்யமுடியும் என்ற எண்ணம் உந்த எழுதி அனுப்பிய கதை இது. அனுப்பிய நாள் செப்டம்பர் 7, 2016. ஒரு பதிலும் இல்லை. குமுதம் போன்ற இதழ்கள் பதில் அனுப்பாது என்று தெரியும் என்பதால், இதழில் வருகிறதா என்று பார்த்தேன். அடுத்த நான்கு வாரங்களில் கதை வரவில்லை என்றதும், இதழில் தேடுவதை நிறுத்திவிட்டேன். 23.10.2016 அன்று, என் கதை வேறு இதழுக்கு அனுப்புகிறேன் என்று குமுதத்துக்கு ஒரு மடலும் அனுப்பினேன். பின்பு அக்கதையை வாரமலருக்கு அனுப்பி வைத்தேன். வாரமலரில் இருந்தும் பதில் இல்லை. எனவே ஜனவரி 2017ல் அக்கதையை என் சிறுகதைத் தொகுப்பு ‘புகைப்படங்களின் கதைகள்’ நூலில் சேர்த்து வெளியிட்டுவிட்டேன். மார்ச் 15ம்தேதியிட்ட குமுதத்தில் என் கதை வெளியாகி இருக்கிறது. அதுவே நண்பர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்! ஒரு கதை ஏழு மாதம் கழித்து வெளியாகும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பதெல்லாம் ஸென் நிலை. ஒரு பெண்ணுக்காகக்கூட அப்படி காத்திருக்கமுடியாது என்பதே என் டிஸைன்.
நான் எழுதியதே மூன்று பக்கம் கூட இருக்காது. அதை இரண்டு பக்கமாக சுருக்க்கிவிட்டார்கள். கதையின் பெயரையும் மாற்றி இருக்கிறார்கள்.
குமுதத்துக்கு நன்றி. 🙂
நேற்று உடனே வாரமலருக்கு மடல் அனுப்பினேன், என் சிறுகதை ஒரு தொகுப்பில் வெளிவந்துவிட்டது, எனவே வாரமலரில் வெளியிடவேண்டாம் என்று. அதைப் பார்த்தார்களா, அதற்கு முன் வந்த என் கதையைப் பார்த்தார்களா என்பதெல்லாம் எதுவும் எனக்குத் தெரியாது.
நான் எழுதிய கதையையும் குமுதம் எடிட் செய்து வெளியிட்ட கதையையும் இங்கே இணைத்திருக்கிறேன். வாசித்து இன்புற்று ஆசி வழங்குங்கள்.
தேவையா இதெல்லாம்? 🙂
—
கிறுக்கல்கள் (சிறுகதை)
– ஹரன் பிரசன்னா
வீட்டின் சொந்தக்காரர் மாடியில்தான் குடியிருக்கிறார். ஆறு வயது மகள் ஸ்ருதியைத் தூக்கிக்கொண்டு மாடிக்குப் போகும்போது ஒரு கூடை ரோஜாவைத் தூக்கிக்கொண்டு போவது போல் இருக்கும் என்றெல்லாம் ரசிக்க இப்போதைக்கு பாலாவால் முடியாது.
இன்னொரு வீடு பார்த்து அட்வான்ஸ் குறைக்கச் சொல்லிப் பேசி வாடகை குறைக்கக் கெஞ்சி வண்டி அமர்த்தி வீடு மாற்றி தன் பருத்த உடலைத் தூக்கிக்கொண்டு மூச்சு வாங்கி எல்லாவற்றையும் அடுக்கி நிமிரும்போது, ‘என்னங்க இது, வாஷ் பேசின்ல தண்ணி போகமாட்டேங்குது…’ நினைக்கும்போதே பாலாவுக்கு முதுகு சுண்டி இழுத்தது. இந்த வீட்டுக்குக் குடி வந்து மூன்று வருடங்கள்கூட ஆகவில்லை. காலி செய்யச் சொல்லிவிட்டார்.
எல்லா வீட்டுக்காரர்களும் ஒரே போல்தான் இருக்கிறார்கள். எல்லா குடித்தனக்காரர்களும்கூட ஒரே போலத்தான் இருக்கிறார்கள். வீட்டுக்காரர் சிரிக்கும்போது சிரிக்கலாம். ஆனால், அவர் கோபப்பட்டால் கூடவே கோபப்படமுடியாது. பணிந்து பேசவேண்டும். இல்லையென்றால் இன்னொரு வீடு பார்த்து அட்வான்ஸ் குறைக்கச் சொல்லிப் பேசி…
மாடிப்படி ஏறி ஒரே ஒரு தடவை மட்டும் பெல் அடித்துவிட்டு வாசல் திறக்க பவ்யமாகக் காத்திருக்கும்போது ஸ்ருதி சொன்னாள். “அப்பா, நான் சொன்ன பாயிண்ட்ட மறந்துறாத.”
வீட்டுக்காரம்மா வந்து கதவைத் திறந்துவிட்டு அவனை உள்ளே வாங்க என்று சொல்லாமல், வீட்டுக்குள் இருக்கும் தன் கணவனிடம் ‘பாலா வந்திருக்கார். வாங்க’ என்று இங்கிருந்தே சத்தமாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் நகர்ந்தாள். மாடியில் வைக்கப்பட்டிருந்த ரோஜாச் செடிக்களைத் தட்டித் தட்டி விளையாடிக்கொண்டிருந்தாள் ஸ்ருதி. பாலா கண்களால் அதட்டினான்.
உடைந்து விழுவது போல வீட்டுக்காரர் வந்தார். அவருக்கு உடையாத குரல் என்பது பாலாவுக்குத் தெரியும். இவருக்குள் எங்கிருந்து இத்தனை கம்பீரமான குரல் வருகிறது என்று பலமுறை யோசித்திருக்கிறான் பாலா.
“சொல்லுங்க பாலா” என்றார். “அதான் எல்லாம் சொல்லியாச்சே. நீங்க காலி பண்ணிடுங்க. நல்ல ஃபிரண்ட் நாம. அது எப்பவும் அப்படித்தான். உங்கள மாதிரி நல்ல டெனெண்ட் கிடைக்கிறதெல்லாம் சான்ஸே இல்லை. நானே சொல்லிருக்கேனே இதை.”
பாலா மெல்ல சொன்னான். “இல்ல சார், எதோ சின்ன பொண்ணு தெரியாம சுவத்துல கிறுக்கிட்டா… இனிமே நான் கிறுக்காம பாத்துக்கறேன்.”
வீட்டுக்காரர் பாலாவிடம், ‘சே சே. இதுக்குன்னு இல்லை. குழந்தைங்கன்னா கிறுக்கத்தான். கிறுக்கினாத்தான் குழந்தைங்க. என் மாப்பிள்ளைக்கு வேலை மாத்தலாயிருக்கு. இங்கவே வந்து தங்கப் போறாங்க. பேத்தி மலர் எங்க கூடயே இருக்கப்போறான்னு எங்களுக்கும் சந்தோஷம். அதான் காரணம்” என்றார்.
“இல்ல சார், சின்ன பொண்ணு… தெரியாமத்தான் கிறுக்கிட்டா.”
“சின்ன பொண்ணுதான் பாலா. யார் வீட்ல சின்ன பொண்ணுங்க இல்ல சொல்லுங்க? நாமதான் பார்த்துக்கணும். உங்களுக்கு சொந்த வீடு இல்லாததால இதெல்லாம் புரியல. கொழந்தைங்களுக்கு என்ன தெரியும்” என்று சொல்லிவிட்டு, “ஸ்ருதி, சாகெல்ட் வேணுமா?” என்று கேட்டார். ஸ்ருதி ரோஜாச் செடியில் இருந்து கையை எடுக்காமல் “தேங்க்ஸ் அங்கிள்” என்றாள்.
பாலா, “இல்ல சார். இனிமே கிறுக்க மாட்டா. ஷ்யூர்” என்றவன், ஸ்ருதியை அழைத்து, “சொல்லும்மா” என்றான். அவள், “ரோஜாச் செடியே க்யூட் பா” என்றாள்.
காற்றில் கதவில் மாட்டியிருந்த திரை அசைந்து வீட்டுக்காரர் முகத்தை மூடியது. பாலா வீட்டுக்காரருக்குத் தெரியாமல் ஸ்ருதியைக் கண்ணால் மிரட்டினான். ஸ்ருதி, “டோண்ட் டூ தட் டாடி. ஐ ஃபீல் லாஃபிங்” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டே சொன்னாள். வீட்டுக்காரர் ஸ்ருதியைப் பார்த்து, ‘ஸ்வீட் கேர்ள்’ என்று சொல்லிவிட்டு, “இந்த மாசம் காலி பண்ணிக் குடுத்துடுங்க பாலா” என்றார்.
வேறு என்ன என்னவோ வார்த்தைகளில் பாலா அவரிடம் விடாமல் பேசிக்கொண்டிருந்தான். அவரும் விடாமல் கிறுக்கல்கள், மலர், மாப்பிள்ளை என்று சுற்றி சுற்றி பதில் சொல்லிக்கொண்டிருந்தார். வீட்டுக்காரம்மா வெளியில் வந்து பாலாவிடம் “காப்பி கலக்கட்டுமா” என்றுவிட்டு, கணவரை நோக்கி, “துணி காயப்போடணும்” என்று சொல்லிவிட்டுப் போனாள்.
வீட்டுக்காரர் பாலாவிடம், “சரி. நான் என் மாப்பிள்ளைகிட்ட பேசிப் பாக்கறேன். அவர் இங்க தங்கலைன்னா நீங்களே இருங்க. என்ன இப்போ. ஆனா கொஞ்சம் பாத்துக்கோங்க. முழுக்க வெள்ளை அடிக்கணும்னா 20,000 ரூபாயாவது ஆகும். உங்களுக்காக உங்ககிட்ட நான் அட்வான்ஸே 20,000 ரூபாய்தான் வாங்கினேன்” என்றார்.
“நோ நோ. இனிமே கிறுக்கவேமாட்டா” என்றான் பாலா. அவருக்கு தேங்க்ஸ் சொல்லிவிட்டு ஸ்ருதியைக் கூட்டிக்கொண்டு கீழே இறங்கினான். இறங்கும்போது ஸ்ருதியிடம், “அப்பா வீடு கட்டறேன். வீடு முழுக்க என்ன வேணா நீ கிறுக்கிக்கலாம்” என்றான்.
“அப்பா, நம்ம வீட்டுல மலர் கிறுக்கினதும் இருக்குப்பா. அவ ஹேண்ட் ரைட்டிங் எனக்குத் தெரியும். இதைக் கேட்டிருந்தா அவரால பதிலே சொல்லிருக்க முடியாது. நான் சொல்லிக்கொடுத்த நல்ல பாயிண்ட்டை நீ கேக்கவே இல்லையேப்பா” என்றாள் ஸ்ருதி.
(முற்றும்)
—
சசிகலாவைப் பற்றிய மீம்ஸ்கள்
சுப்ரமணியம் சுவாமியின் சட்ட (சசிகலா) ஆதரவு
ரூபெல்லா தடுப்பூசியும் வாட்ஸப் முட்டாள்களும்
என் மகனும் மகளும் படிக்கும் பள்ளியில் இன்று ரூபெல்லா தடுப்பு ஊசி போடப்பட்டது. நான்கு நாள்களுக்கு முன்பே ஊசி போடச் சம்மதம் என்று ஒரு படிவத்தில் எழுதி வாங்கிக் கொண்டார்கள். நேற்று அழைத்து, இன்று ஊசி போட வரச் சொன்னார்கள். அழக்கூடாது மஹி என்று அவளை அழைத்துகொண்டு சென்றேன். சாக்லேட் வாங்கித் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டாள். அபிராமுக்கு இன்று ப்ரவீன் பூர்வார்த் பரிட்சை என்பதால் அவனுக்கு ஊசி போடவில்லை. அடுத்த முகாமில் போடவேண்டும்.
—
பள்ளியில் கூட்டமே இல்லை. நான் 8 வயதில் இருக்கும்போது காலரா தடுப்பூசி போட்டார்கள். அப்போதும் இதேபோல் ஒரு வதந்தி இருந்தது. காலரா ஊசி போட்டால் கண்ணு போகுதாம், காது போகுதாம், அதுவா டாம் டாம்னு வெடிக்குதாம் என்ற வதந்திகளை மீறி மக்கள் சாரை சாரையாக வந்து வரிசையில் நின்று போட்டுக்கொண்டார்கள். சேரன்மகாதேவியில் நாங்கள் குடி இருந்த தெருவில் எங்கள் வீட்டுக்கு எதிரே தெருவை அடைத்துப் பந்தல் போட்டு விழா போல நடந்தது. ஊர் நண்பர்கள் குழந்தைகளை அலேக்காகத் தூக்கிக் கொண்டு வந்து ஊசி போட்டார்கள். ஊசி போட்டால் ஆரஞ்சு மிட்டாய் தருவார்கள். காய்ச்சல் நிச்சயம் வரும் என்றார்கள். காய்ச்சல் வந்தால் 2 நாள் பள்ளிக்கு மட்டம் போடலாம் என்ற என் ஆசையில் மண் விழுந்தது. சரியாக எனக்கு மட்டும் காய்ச்சலே வரவில்லை. நம் வாழ்க்கையில் இப்படி ஒரு தோல்வியா என்று நான் துக்கித்துக் கிடந்தது நினைவில் இருக்கிறது. ஆனால் 40 வயது மாமாவுக்கும் அத்தைக்கும் கை வீங்கி அதற்கு தனியே மருத்துவம் பார்க்க ஹைகிரவுண்டு போனார்கள்.
இன்று வாட்ஸப் ஃபேஸ்புக் காலம். விவஸ்தையே இல்லாமல் புரளிகள் மட்டுமே உண்மை என்று சுற்றி வரும் காலம். எவ்வித யோசனையும் இன்றி, காசா பணமா என்று எல்லாவற்றையும் ஃபார்வெர்ட் செய்து பெருமை பீற்றிக்கொள்ளும் முட்டாள் கூட்டம். எதை அனுப்புகிறோம், அது உண்மையா பொய்யா என்றெல்லாம் எந்த யோசனையும் கிடையாது. மீம்ஸா அனுப்பு. செய்தியா அனுப்பு. எதையும் யோசிக்க நினைப்பதில்லை. யோசிக்க கொஞ்சம் மூளையும் அவசியம் என்பதால் இப்பிரச்சினை. இதில் உச்சம் என்னவென்றால், இதையே செய்தியாக நம்பி வெளியிடும் பத்திரிகைகளில் பொறுப்பற்ற மூடத்தனம். இதனால் இப்பிரச்சினை இன்னும் கூடுதல் சிக்கல் கொள்கிறது. இன்னும் அதிகம் பகிரப்படுகிறது. வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக்கின் புரளிகளின் ஆதாரம், ரூபெல்லா தடுப்பூசிக்கு வந்திருக்கும் பயம்.
அரசு கரடியாகக் கத்தினாலும், புத்தி உள்ளவர்கள் இதன் தேவை பற்றிக் கதறினாலும், இவர்களின் செயல்பாட்டைவிட லட்சம் முறை அதிகம் பேசப்படுவது புரளிகளே. இந்த ஒட்டுமொத்த தடுப்பூசிகளினால் ஏற்படும் நன்மை என்ன, தேவை என்ன என்பதன் விவாதம் நிச்சயம் தேவைதான். ஆனால் அதை முன்னெடுக்கும் விதம், இதைப் போட்டால் உயிர் போய்விடும் என்ற ரீதியில் அல்ல. இதனால் பயந்துபோய் பலர், பெருவாரியானவர்கள் ஊசி போடவில்லை.
இன்று பள்ளியில் பேசிக்கொண்டிருந்தபோது, 40 பேர் உள்ள வகுப்பில் 5 பேர்தான் போடச் சம்மதித்திருக்கிறார்கள். பலருக்கு வாட்ஸப்பில் வந்த வதந்தியால் பயம். இவர்கள் புத்திசாலித்தனமான வாதமாகச் சொல்வது, “அது பொய்யாவே இருக்கட்டும். ஆனாலும் எதுக்கு ரிஸ்க்?” என்பது. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை.
மிகச் சொற்ப அளவில் வந்திருந்த குழந்தைகளுக்கே இன்று ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டது. போட்டவுடன் ஒரு அறையில் அரை மணி நேரம் காத்திருக்கச் சொன்னார்கள். அப்வர்வேஷனில் இருக்கவேண்டும் என்றார்கள். இதெல்லாம் வாட்ஸப்பின் கைங்கர்யம்தான். அரை மணி நேரம் காத்திருந்துவிட்டு, நர்ஸுகளுக்கு நன்றி சொல்லிவிட்டு மஹியை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன்.
—
“என்னப்பா வீட்டுக்கு போகாம எங்க போற?” என்றாள் மஹி. “சாக்லெட் வாங்க” என்றதும், அவள் சொன்னது. “என்னப்பா நீ. நெஜமாவே வாங்கித் தர! மிஸ்ஸெல்ல்லாம் நாங்க சேட்டை செஞ்சா டார்க் ரூம்ல போடுவோம்னு சொல்லுவாங்க. ஆனா போடவே மாட்டாங்க. எங்களுக்கெல்லாம் நல்லா தெரியும் அவங்க போடமாட்டாங்கன்னு. ஆனாலும் நாங்கள்லாம் அப்படியே பயந்து போய் அமைதி ஆயிடுவோம். நீ என்னடான்னா சாக்லெட் வாங்கித் தர!”
🙂
ஓபிஎஸ்ஸின் தியானம் அல்லது திடீர்ப் புரட்சி
அடுத்து என்ன?
எப்படியும் இன்று ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவார். அடுத்த பொதுத் தேர்தலுக்கு நான்கரை வருடங்கள் உள்ள நிலையில், இதே வேகத்தை மக்கள் மத்தியில் நீட்டித்து வைத்திருப்பது சாத்தியமே இல்லாதது. ஓபிஎஸ் பின்னால் ஒரு எம் எல் ஏ கூட வரமாட்டார் என்பதுவே இப்போதைய நிலை. ஒருவேளை ஒரு எம் எல் ஏ கூட வரவில்லை என்றால், ஓபிஎஸ் என்ன செய்வார் என்பதைவிட எதிர்க்கட்சிகள் அவரை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே முக்கியத்துவம் பெறும். ஏனென்றால் மக்கள் ஆதரவை நிரூபிக்க நான்கரை வருடங்கள் காத்திருக்கவேண்டும். நான்கரை வருடங்கள் என்பது அரசியலில் மிக நீண்ட காலம். ஜெயலலிதா மறைந்து இரண்டு மாதங்களில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்று பாருங்கள். அதுவே ஜெயலலிதா ஆண்ட ஐந்தரை ஆண்டுகளில் (ஜெயலலிதாவின் தனிப்பட்ட வழக்கு விவகாரங்கள் நீங்கலாக) இப்படி பரபரப்பாக பெரும்பாலும் எதுவும் இல்லை என்பதையும் யோசித்துப் பாருங்கள். அரசியல் உறுதித்தன்மை இல்லாதபோது சிறுநிகழ்வு கூட பெரிய உருவம் கொள்ளும். அதைத்தான் கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளும்.
ஒரு கட்சியின் வளர்ச்சி அக்கட்சியின் உள்ளார்ந்த வளர்ச்சியைப் பொருத்தது என்பதோடு, போட்டிக் கட்சியின் தாழ்விலும் அமையும். இன்னொரு கட்சியின் அழிவுக்கு நாங்கள் எதுவும் செய்யமாட்டோம் என்று வெளியில் பேசிக்கொண்டாலும், உள்ளே குழிப்பறி வேலைகள் நடந்தவண்ணம் இருக்கும். இதில் வெளிப்படைத்தன்மையுடன் உள்ள நேர்மையான செயல்களும், மோசமான நடவடிக்கைகளும் அடங்கும். அரசியல் இப்படித்தான்.
சசிகலா முதல்வராகப் பதவி ஏற்கும் பட்சத்தில், அவர் எப்படியும் ஆறு மாதத்துக்குள் ஒரு தொகுதியில் நின்று எம் எல் ஏவாக வென்றே ஆகவேண்டும். அத்தொகுதியில் ஓபிஎஸ் நிற்கவேண்டும். இது சசிகலாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம். ஓபிஎஸ் மனதில் வேறு பெரிய எண்ணங்கள் இருக்குமானால், நல்ல ஒரு வேட்பாளரை நிற்கவைக்கலாம். ஒருவேளை ஓபிஎஸ் நின்று தோற்றுப் போனால், உடனடியாக அவரது அரசியல் வாழ்வு பின்னடைவு கொள்வதை இது தடுக்கலாம். வேறொரு வேட்பாளரை நிறுத்தும்போதோ அல்லது ஓபிஎஸ்ஸே நிற்கும்போதோ, திமுக தன் வேட்பாளரை நிறுத்தாமல், தன் ஆதரவை ஓபிஎஸ்ஸுக்கு அளிப்பதன்மூலம் சசிகலாவின் தோல்வியை உறுதி செய்யலாம். இதை ஸ்டாலின் செய்வது திமுகவுக்கும் ஒரு வகையில் நல்லது.
சசிகலாவின் தோல்வி அவரது முதலமைச்சர் கனவைத் தூளாக்குவதோடு, அதிமுகவின் வளர்ச்சிக்கும் பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும். இது ஸ்டாலினின் உடனடி வளர்ச்சிக்கு நல்லது. திமுக வேட்பாளரை ஓபிஎஸ் ஆதரிக்கட்டும் என்று கருணாநிதி பாணியில் யோசிக்காமல், தன் சிறுநலனை விட்டுக்கொடுத்து பெரிய நலனில் அக்கறை கொள்வது ஸ்டாலினுக்கு நல்லது. இதனால் ஏற்படப்போகும் இன்னொரு நன்மை, ஓபிஎஸ்ஸின் திடீர்ப் புரட்சிக்குப் பின்னால் திமுக உள்ளது என்று சொன்னவர்கள் இதைக் கையில் எடுத்துக்கொள்வார்கள். இதனால் ஓபிஎஸ்ஸுக்கு ஒரு தர்ம சங்கடம் ஏற்படும். இன்னுமொரு நன்மை, தொடர்ச்சியாக ஸ்டாலினைச் சுற்றி நிகழும் அரசியல். இவற்றையெல்லாம் மனதில் வைத்து ஸ்டாலின் முடிவெடுக்கவேண்டும்.
இதில் ஒரு பின்னடைவு ஸ்டாலினுக்கு உள்ளது. திமுக போட்டியிடாத நிலையில், ஏதேனும் ஒரு கட்சி கொஞ்சம் அதிகம் செல்வாக்குடன் இரண்டாவது இடத்துக்கு வரும். இடைத்தேர்தல்தான் என்பதாலும் அடுத்து வரும் பொதுத்தேர்தலில் திமுக எளிதாக முதலாவதாகவோ இரண்டாவதாகவோ வரும் என்பதால் திமுக அல்லாத ஒரு கட்சி இரண்டாம் இடத்துக்கு வருவது மிகத் தற்காலிகமே என்பதாலும் இந்தச் சிறிய பின்னடைவை ஸ்டாலின் பொறுத்துக்கொள்ளலாம்.
இந்த உடனடி நன்மையைக் கணக்கில் கொண்டால் மட்டுமே ஓபிஎஸ் மூலம் கொஞ்சம் அறுவடையைத் தமிழ்நாடு பெறும். இல்லையென்றால் இந்தப் புரட்சி ஒருநாள் புரட்சியாக மட்டுமே வரலாற்றில் தேங்கிப் போகும்.
சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றால், இது எதுவுமே தேவை இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெறாவிட்டால், மேலே உள்ளதைத் தவிர வேறு வாய்ப்புகளை யோசிக்கமுடியவில்லை.