பாட்டாளி மக்கள் கட்சி – பாதை மாறும் பயணம்

1990கள் வாக்கில் நான் என் அம்மாவுடன் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன். அப்போது ஒரு சில குறிப்பிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் செல்லாது என்று அறிவித்தார்கள். எதோ ஜாதிக் கலவரமாம் என்று என் அம்மா என்னிடம் சொன்னார். எனக்கு அந்த சிறிய வயதில் ஒன்றும் புரியவில்லை. ஆனால், என் கையை இறுகப்பிடித்திருந்த என் அம்மாவிடம் ஒரு பதற்றத்தை மட்டும் உணரமுடிந்தது.

பின்னர் அக்கட்சி பாட்டாளி மக்கள் கட்சியாக வளர்ந்தது. செல்லுமிடமெல்லாம் வெற்றி என்று கொண்டாடினார்கள். திமுக அதிமுக என மாறி மாறி தவம் கிடந்து பாமகவை கூட்டணிக்கு அழைத்தார்கள். பாமக இருக்கும் கூட்டணியே வெற்றிக்கூட்டணி என்று ராமதாஸ் அறிவித்தார். எல்லாம் சட்டென மாறிப்போனது. இரண்டு அடுத்தடுத்த தேர்தல்களில் பாமக இருந்த கூட்டணிகள் தோல்வி கண்டன. பாமக பெரும் தோல்வி கண்டது. பாமக ஒரு தேவையற்ற கட்சி என்பதை மிகவும் தாமதமாக உணர்ந்துகொண்டன தமிழகத்தின் முதன்மைக் கட்சிகள்.

ஆனால் பாமக இங்கேதான் சட்டென சுதாரித்துக்கொண்டது. அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் பாமக தன் கட்சிக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டுவந்தது. அன்புமணி இத்தேர்தலில் முதல்வர் ஆவாரா மாட்டாரா என்பதெல்லாம் ஒரு கேள்வியே இல்லை. ஆனால் தமிழக அரசியலில் எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு வெற்றிடம் தோன்றினால், அன்புமணி தவிர்க்கமுடியாத ஒருவராக இருப்பார். அதற்கான விதையை இன்று பாமக பலமாக ஊன்றியிருக்கிறது.

பாமகவை ஒரு ஜாதிக்கட்சி என்று சொல்லி புறக்கணிக்கமுடியாத அளவுக்கு முக்கியமான சமூகப் பிரச்சினைகளை தொடர்ந்து கையிலெடுத்துப் போராடி வந்திருக்கிறது. அவற்றில் முக்கியமானது மது ஒழிப்பு.

தமிழகத்தில் மது ஆறாக ஓடுவதற்கு அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் காரணம். இவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு, மது ஒழிப்பை நிர்ப்பந்தம் செய்யாத கட்சிகளும் காரணம்தான், பாமக உட்பட. ஆனால் பாமக மது ஒழிப்பை, மற்ற கட்சிகள் போல போலியாக முன்வைக்கவில்லை. அதிலும் கடந்த ஐந்து வருடங்களாக, மது அருந்தாவர்கள் எல்லாம் வரி செலுத்தவேண்டும் என்று ஒரு சட்டம் வந்துவிடுமோ என்று அஞ்சும் அளவுக்கு அதிமுக நடந்துகொண்டு வருகிறது. திமுக இப்போது திடீரென மது ஒழிப்பைக் கையில் எடுத்திருக்கிறது. இதை அரசியல் என்று மட்டுமே பார்க்கமுடியும். பாமகவைப் போல உறுதியான தொடர்ச்சியான நிலைப்பாடாக இதை கொள்ளமுடியாது.

அதேபோல் தொடர்ச்சியாக மாதிரி நிதிநிலை அறிக்கையை பாமக வெளியிட்டு வந்துள்ளது. அரசியலில் இதுபோன்ற ஒன்றை ஒரு கட்சி தொடர்ச்சியாகச் செய்து வருவது முக்கியமானது. அதேபோல் அரசியல் மேடைகளில் அன்புமணி திராவிட பாணியில் வெட்டி வீர முழக்கங்கள் செய்வதில்லை. ஆக்கபூர்வமாகப் பேசுகிறார்.

இப்படி சில நம்பிக்கை தரும் விஷயங்கள் இருந்தாலும், பாமகவைப் பின்னுக்குத் தள்ளுவது, என்ன இருந்தாலும் பாமக ஒரு ஜாதிக்கட்சிதானே என்ற எண்ணம்தான். தலைவர்கள் எதையோ சிந்தித்து பேசிக்கொண்டிருக்க தொண்டர்கள் முன்னெடுக்கும் அரசியல் ஜாதியை சுற்றியே உள்ளது என்பதுதான் காரணம். தமிழ்நாட்டில் நிலவும் ஜாதியப் பிரச்சினைகளில் பாமகவின் பெயரும் அடிக்கடி அடிபடுவதும் இன்னொரு காரணம். என் அம்மா என் கையைப் பிடித்திருந்தபோது அவருக்கு இருந்த பதற்றம், மெல்லிய வடிவில், இது போன்ற செய்திகளைக் கேட்கும் அனைவருக்குள்ளும் பரவுகிறது. இதுவே பாமகவின் ஆகப்பெரிய பலவீனம்.

தங்கள் கொள்கைகளை பரப்ப வேண்டி எந்த எல்லைக்கும் சென்று சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு சவால் விடுப்பது இன்னுமொரு பலவீனம். புகைபிடிக்கும் / மது அருந்தும் காட்சிகள் திரைப்படங்களில் வரக்கூடாது என்பது நல்ல எண்ணம்தான். ஆனால் அப்படி வரும் திரைப்படங்களை அச்சுறுத்தல்மூலம் முடக்கப் பார்ப்பது தவறான வழி.

பாபா திரைப்படம் வந்தபோது இப்படித்தான் பாமக ரஜினியை எதிர்கொண்டது. அப்போது பாமக உள்ள கூட்டணியே வெல்லும் என்ற மாயை நிலவியதால் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் பெரிய அளவில் பாமகவைக் கண்டிக்கவில்லை. என்றென்றும் புன்னகை என்றொரு திரைப்படம் வந்தது. படம் முழுக்க குடிக்காட்சிகள்தான். இதை தயாரித்தவர் பாமகவைச் சேர்ந்த ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம். தமிழ்க்குமரன். இதை எதிர்த்து பாமக எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை. இது ஒரு பெரிய சறுக்கல் அல்லவா? 

இதுபோன்ற விஷயங்களில் பாமக சட்ட ரீதியான அமைதியான போராட்டங்களின் மூலம் மக்களின் மனத்தை மாற்றும் செயல்களில்தான் ஈடுபடவேண்டும். அச்சுறுத்தல்மூலம் பிரச்சினையை அடக்க நினைக்கக்கூடாது. அப்போதுதான் மேடைதோறும் ஆக்கபூர்வமான அரசியலை முன்வைக்கப் போராடி வரும் அன்புமணியின் செயல்பாட்டுக்கு நியாயம் கற்பிக்கமுடியும். இல்லையென்றால் படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்றாகிவிடும்.

அதேபோல் சொன்ன வாக்கைக் காப்பாற்றுவதிலும் பாமக கவனம் கொள்ளவேண்டும். இனி திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு, அதிமுக மற்றும் திமுகவுடன் அவர் கூட்டணி வைத்திருக்கிறார். இனி அப்படி நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லை என்றால், பாமகவின் மீது இருக்கும் கொஞ்சநஞ்சம் நம்பிக்கையும் போய்விடும்.

இதைவிட முக்கியம், இத்தனை ஆக்கபூர்வ அரசியல், மது ஒழிப்புப் போராட்டம் ஆகியவற்றுக்குப் பின்னரும் தொடரும் ஜாதிய அரசியல் என்ற முத்திரையை முற்றிலும் ஒழிக்க, செய்யவேண்டிய சமூகக் கடமைகள் என்ன என்பதை யோசித்து அவற்றைச் செயல்படுத்துவது. இல்லையென்றால் பாமக இப்படியே ஓட்டைப் பிரிக்க அல்லது முதன்மைக் கட்சிகளை ஆட்சியில் அமர்த்த உதவும் ஒரு கட்சியாகவே நிலைபெற்றுவிடும். ஜாதிக் கட்சி முத்திரையுடன் தொடர்ந்து செயல்பட்டு இப்படியே இருப்பதா அல்லது திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பொதுவான கட்சியாக வளர்வதா என்பதே இப்போது பாமக முன் உள்ள கேள்வி. இரண்டில் எது நடந்தாலும் தமிழ்நாட்டுக்கு நல்லதுதான்.

Share

மக்கள் நலக்கூட்டணி

ஊரில் சொல்வார்கள், சும்மா இருந்த நான்கு பேர் சேர்ந்து ஒரு மடம் கட்டிய கதையை. மக்கள் நலக்கூட்டணியை இக்கதையுடன் நேரடியாக ஒப்பிட முடியாது என்றாலும், ஒருவாறு இப்படிச் சொன்னாலும் தவறில்லை. இவர்கள் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்று சொல்லும்போது, நிச்சயம் இக்கதையுடனே இவர்களை ஒப்பிடமுடியும். ஆனால் இக்கூட்டணியில் உள்ள நான்கு கட்சிகளும் சும்மா இருக்கும் தலைவர்கள் அல்ல என்பது உண்மைதான். இவர்களுக்கென்று தெளிவான கொள்கைகள் உள்ளன. ஒருவருக்கொருவர் கொள்கைகளில் வேறுபட்டாலும், அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்று என்ற வகையில் ஒரு கூட்டணியின் கீழ் ஒன்றுபடுகிறார்கள்.

கம்யூனிஸ்ட்டுகளும், மதிமுகவும், திருமாவளவனும் இணையும் புள்ளி, அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்று என்றாலும், இவர்கள் இணையும் மற்றொரு புள்ளி என, முற்போக்காளர்கள் என்பதைச் சொல்லாம். பொதுவாக அடிப்படைவாதத்துக்கு எதிராகவே முற்போக்கு என்பது உருவாகி வந்திருந்தாலும், புழக்கத்தில் முற்போக்கு என்ற வார்த்தைக்கு அதற்குரிய பொருள் இல்லாமலேயே போய்விட்டது. இன்றைய நடைமுறையில் இந்த முற்போக்கு என்பது, ஹிந்து எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, சிறுபான்மை ஓட்டரசியல், மறைமுக/நேரடி பயங்கரவாத ஆதரவு என்பவற்றின் கலவையாகவே ஆகிவிட்டது.

ஊழலை விட்டுவிட்டு, இன்று இந்தியாவை உலுக்கும் பிரச்சினைகள் எவை என எடுத்துக்கொண்டு அவற்றின் பின்னணியை ஆராய்ந்தால், அங்கே எல்லாம் முற்போக்காளர்களின் பங்களிப்பு இருப்பதைப் பார்க்கலாம். நேரடியாகவோ மறைமுகமாகவே இந்திய தேசியமும், ஹிந்து மதமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாதவைப் பார்க்கலாம். மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்தப் புள்ளியில் மிகக் கச்சிதமாக ஒன்றிணைகிறார்கள். இந்த மக்கள் நலக்கூட்டணிக்கு முன்பு இவர்கள் ஒரு கூட்டியக்கமாக இருந்தபோது ஜவாஹிருல்லாவும் இக்கூட்டியக்கத்தில் இருந்தார் என்பது முக்கியமான தகவல்.

அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்று என்று சொல்லும் கட்சிகள், இதற்கு முன்பு தொடர்ச்சியாக மாறி மாறி அதிமுக மற்றும் திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். மாறி மாறி அதிமுகவையும் திமுகவையும் ஊழல் கட்சிகள் என்று திட்டித் தீர்த்திருக்கிறார்கள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஏதோ ஒரு ஊழல் கட்சிக்குத் துணையாக இருந்துவிட்டு, அந்த ஊழல் கட்சிகள் ஆட்சிக்கு வர உறுதுணையாக நின்றுவிட்டு, இன்று அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மாற்று என்கிறார்கள். இவர்களின் நம்பகத்தன்மை இங்கேயே முடிந்துபோய்விடுகிறது.

இதிலுள்ள இன்னொரு குழப்பம், இந்தத் தேர்தல் முடியும்வரையிலாவது இவர்களது உறுதி நிலைக்குமா என்பதுதான். உண்மையில் மக்கள் நலக்கூட்டணி உருவானபோது, ஒரு கூட்டணியாக திமுகவுடன் தொகுதி பேரம் பேசுவார்கள் என்றே நான் நினைத்தேன். இன்னும் சிலர் இவர்கள் அதிமுக வெல்லவேண்டும் என்ற நோக்கிலேயே இக்கூட்டணியைத் தொடங்கியிருக்கிறார்கள் என்றார்கள். விடுதலைச் சிறுத்தைகள் அதிமுக வெல்லட்டும் என நினைக்குமென்று நான் நம்பவில்லை. இப்போதும் நம்பவில்லை. ஆனால் நான் எதிர்பார்த்ததுபோல் இவர்கள் திமுகவுடனும் கூட்டணி வைக்கவில்லை.

மதவாதக் கட்சியுடன்  கூட்டணி கிடையாது என்றும் இவர்கள் பேசுகிறார்கள். ஆனால் வைகோ ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணியில் இருந்தவர். இனிமேல் அவர் பாஜக பக்கம் போகவே மாட்டார் என்பதற்கும் எவ்வித உறுதியும் கிடையாது. இவர்கள் தவம் கிடந்து அழைத்த விஜய்காந்தும் பாஜகவுடன் கூட்டணி வைத்தவர்தான்.

அப்படியானால் இக்கட்சிகளின் உறுதியான நிலைப்பாடுதான் என்ன? ஒன்றுமில்லை. இவர்கள் ஒரு மூன்றாவது அணியை உருவாக்கப் பார்க்கிறார்கள். ஏற்கெனவே மூன்றாவது கட்சி என்றளவில் தேமுதிக இருக்கும்போது, இது நான்காவது அணியாகவே இருக்கமுடியும். பல்வேறு நிலைப்பாடுகள், பல்வேறு நோக்கங்கள் உள்ள கட்சிகள் இணைந்து ஒரு தேர்தலை சந்திப்பதே கடினம் என்ற நிலையில், இவர்களின் கூட்டணி என்று வேண்டுமானாலும் உடைந்துபோகலாம். இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த கூட்டணியான பாஜக-மதிமுக-தேமுதிக-பாமக இன்று இல்லை. இதுவேதான் மக்கள் நலக்கூட்டணிக்கு நேரும் நிலையாகவும் இருக்கப்போகிறது.

நடக்கப்போது சட்டமன்றத் தேர்தலில் இக்கூட்டணியின் பலம் என்பது என்னவாக இருக்கும்? இவர்கள் ஒரு இடத்தில் கூட வெல்லமுடியாது என்றே நான் நினைக்கிறேன். அதிமுக-திமுகவுக்கு மாற்று தேவை என்ற எண்ணம் பெரும்பாலானவர்களிடையே இருக்கிறது உண்மைதான். ஆனால் அது மூன்றாவதாக ஒரு மாற்றுக் கட்சியைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு முழுமையான வடிவம் பெறவில்லை. காரணம், மக்களைக் கவர்ந்திழுக்கும் தலைமை ஒன்று உருவாகிவரவில்லை. எனவே மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்கெல்லாம் கொஞ்சம் காலூன்றி உள்ளதோ அங்கெல்லாம் வாக்கைப் பிரிக்கும் ஒரு கூட்டணியாக மட்டுமே செயல்படும். அதை மீறி இத்தேர்தலில் இவர்களது பங்களிப்பு என வேறொன்றும் இருக்காது.

தேர்தல் முடிந்ததும் எத்தனை தொகுதிகளில் மக்கள் நலக்கூட்டணியால் அதிமுக தோற்று திமுக வென்றது என்றும், திமுக தோற்று அதிமுக வென்றது என்றும் ஆய்வு செய்ய இக்கூட்டணி உதவலாம். இது ஒரு சுவாரயஸ்மான ஆய்வாக இருக்கும். பொழுது போகும். மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளுக்கும் இப்படித்தான், பொழுது போகிறது.

Share

மீண்டும் ஏன் திமுக தேவையில்லை – தேர்தல் களம் 2016 – தினமலர்

மீண்டும் ஏன் திமுக தேவையில்லை!

ஆளுங்கட்சிக்கு இயல்பாகவே எழும் எதிர்ப்பை எல்லா எதிர்க்கட்சிகளுமே தனது ஓட்டுக்களாகப் பார்க்கத்தான் செய்யும். ஜெயலலிதாவின் கடந்த ஐந்து வருட ஆட்சியில் மக்களுக்கு இன்னல்கள் பல ஏற்பட்டிருப்பதாக நம்பும் திமுக, அந்த வெறுப்பை தனது வெற்றிக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது. எதிர்க்கட்சி என்ற தகுதி இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய இரண்டாவது கட்சி திமுகதான். எனவே அதிமுகவுக்கு யதார்த்தமான மாற்று என்று பலரும் திமுகவைக் கருதும் வாய்ப்பு உள்ளது. இதை எவ்விதத்திலும் தவறவிட்டுவிடக்கூடாது என்பதகாவே திமுகவின் காய்-நகர்த்தல்கள் உள்ளன.

ஆனால், திமுகவின் 2006-2011 வரையிலான ஆட்சிக்காலத்தின் வெறுப்பை மக்கள் முற்றிலும் மறந்துவிடவில்லை. அதிமுகவின் மீதான சில கோபங்கள் இருந்தாலும், அந்த எதிர்ப்பு ஓட்டுக்கள் அப்படியே திமுகவுக்குப் போய்விடும் என்று நம்புவதற்கான எந்தச் சூழலும் இங்கே நிலவவில்லை.

திமுகவின் ஆட்சிகாலத்தில் நிலவிய கொடூரமான மின்வெட்டை நினைத்துப் பார்த்தாலே இப்போதும் வேர்க்கிறது. ஜெயலலிதா எப்படி அதைக் கையாண்டார், அதனால் அரசுக்கு ஏற்படும் செலவுகள் என்ன என்ன என்பதெல்லாம் கடைக்கோடி வாக்காளருக்கு ஒரு பொருட்டே இல்லை. இந்த ஐந்தாண்டுகாலத்தில் மின்வெட்டு மிகவும் குறைந்துவிட்டது என்ற ஒரு வரி உண்மை மட்டுமே அவர்களுக்கு முக்கியமானது.

அதேபோல் திமுக ஆட்சியில் ஐந்தாண்டுகளில் நிலவிய நில அபகரிப்பு இப்போதும் மக்களால் மிரட்சியோடுதான் பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் ஆட்சியில் அமைச்சர்களுக்குக் கூட அதிகாரமில்லை என்பது ஒரு பக்கம் என்றால், கருணாநிதியின் ஆட்சியில் ஒவ்வொரு கவுன்சிலருக்கும் அதீத அதிகாரம் வந்துவிடும் என்பது இன்னொரு பக்கமாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் மிரட்டல்களையும் நினைத்துப் பார்த்தால், தன்னிச்சையாகச் செயல்படாத அதிமுகவின் அமைச்சர்களே பரவாயில்லை என்ற எண்ணம் மக்களுக்குத் தோன்றிவிடுகிறது.

இன்று திமுக ‘ஊழலற்ற ஆட்சி’ என்பதைச் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால் திமுகவின் அமைச்சர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது நடந்ததாகச் சொல்லப்பட்ட ஊழல்களை மறந்துவிடமுடியாது. இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்கே முடிவு கட்டிய 2ஜி ஊழலில் இன்றளவும் திமுகவின் பங்கு பற்றிய வழக்கு முடிவுக்கு வந்துவிடவில்லை. இந்தியாவையே உலுக்கிய ஒரு வழக்கின் முக்கியக் குற்றவாளியாக திமுகவே உள்ளது.

இரண்டாண்டுகளுக்கு முன்பு ஈழப்பிரச்சினையைக் காரணம் காட்டி காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகிய திமுக, மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது. ஒரு கட்சி ஏற்கெனவே கூட்டணி வைத்து விலகிய கட்சியுடன் மீண்டும் கூட்டணி வைப்பது புதியதில்ல. ஆனால் இந்த இரண்டாண்டுகளில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை என்னும்போது இதைப் பொருந்தாக் கூட்டணி என்றோ நிர்ப்பந்தக் கூட்டணி என்றோதான் பார்க்கவேண்டியுள்ளது. இந்த நிர்ப்பந்தம் எதன் மூலம் வந்தது என்பதையும் யோசிக்கவேண்டும்.

அரசியலில் வாரிசுகள் ஆட்சிக்கு வருவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். கிட்டத்தட்ட எக்கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. என் வாரிசு அரசியலுக்கு வராது என்று சூளுரைத்தவரின் மகன் இன்று முதல்வர் வேட்பாளராகவே அக்கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். ஆனால் திமுகவில் வாரிசு அரசியல் பெரிய அளவில் பரிணாம வளர்ச்சி பெற்று ஒட்டுமொத்த குடும்பமும் கட்சியைக் கைப்பற்றியுள்ளது. எனவே திமுகவின் வாரிசு அரசியல் குடும்ப அரசியலாகிப் போயிருக்கிறது.

கருணாநிதிக்கு 92 வயது ஆகிறது. இன்றும் அவரே திமுகவின் முதல்வர் வேட்பாளர். கடந்த மைனாரிட்டி ஆட்சியின்போதே அவர் ஸ்டாலினை முதல்வராக்கியிருக்கவேண்டும். அப்போது இவர்கள் தயவில்தான் காங்கிரஸ் ஆட்சி மத்தியில் நடந்துகொண்டிருந்தது. எனவே இம்முடிவுக்கு காங்கிரஸ் எந்த வகையிலும் எதிர்ப்பு தெரிவித்திருக்காது. ஆனால் அந்த நல்ல சந்தர்ப்பத்தை கருணாநிதி தான் முதல்வராக இருக்கவே பயன்படுத்திக்கொண்டார். இதனால் இன்றளவும் ஸ்டாலின் முதல்வர் பட்டியலுக்கு வரவே இல்லை. ஸ்டாலின் முதல்வர் என்றால் திமுகவை மக்கள் ஓரளவு நம்ப வாய்ப்பிருக்கிறது. காரணம், ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாமே என்று நடுநிலை வாக்காளர்கள் எண்ணக்கூடும்.

திமுகவின் இன்னொரு முக்கியமான பிரச்சினை, ஒரு குறிப்பிட்ட ஜாதியை, நாட்டின் பெரும்பான்மையான மதத்தை எப்போதும் தூஷித்துக்கொண்டே இருப்பது. ஒரு முதல்வர் இப்படி ஒரு குறிப்பிட்ட ஜாதி/மதம் மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிக்காட்டிக்கொண்டே இருப்பதுதான் திராவிட அரசியலின் முக்கியமான பிரச்சினை. நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு அம்மக்களின் பண்டிகையின் போது வாழ்த்து சொல்லாமலிருப்பதும், ஓட்டரசியலுக்காகவும் பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தவேண்டும் என்பதற்காகவும் வேண்டுமென்றே சிறுபான்மை விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதுமென திமுக என்றுமே மக்களை ஜாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரித்து வைக்கவே விரும்பியிருக்கிறது. இப்படி மக்களைப் பிரிக்க நினைக்கும் ஒரு தலைவரை எக்காரணம் கொண்டும் மீண்டும் முதல்வராக்கவேண்டிய அவசியமோ அவசரமோ அத்தனை மோசமான நிலையோ தமிழகத்துக்கு இப்போதைக்கு வந்துவிடவில்லை.

இதைப் புரிந்துகொண்டுதான் ஸ்டாலின் வேறு ஒரு கண்ணோட்டத்தை முன்வைக்கப் பார்க்கிறார். ஆனால் அது அவரது வீட்டுக்குள்ளே தடுக்கப்பட்டு விடுகிறது. காலமாற்றத்துக்கேற்ப மாறி, இளைஞர்கள் கையில் கட்சியை ஒப்படைத்துவிட்டு, வெறுப்பு அரசியலைக் கைவிட்டு, ஊழல்வாதிகளை வெளியேற்றி, புது ரத்தம் பாய்ச்சாத வரை திமுகவைத் தேர்ந்தெடுக்கவேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை என்பதை திமுக உணரவேண்டிய தருணம் இது.

Share

காதலும் கடந்து போகும்

காதலும் கடந்து போகும் படம் பார்த்தேன். சிறு குறிப்பாவது எழுதி வைக்கவில்லையென்றால் பெரிய பாவம். நேற்று முழுவதும் இப்படத்தின் நினைவுதான். சில படங்கள் ஏனென்று தெரியாமல் மிகவும் நமக்குப் பிடித்துப்போய்விடும். அப்படி ஒரு படம் இது.

பாலுமகேந்திராவின் நவீனமான ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் ஓர் உணர்வு. கொஞ்சம் லாஜிக்கையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு எவ்வித அழுத்தமும் இன்றி படத்தைப் பார்க்கமுடிந்தால் நிச்சயம் உங்களுக்குப் பிடித்துப் போகும். இப்படி எல்லாராலும் பார்க்கமுடியாது என்பதுதான் மைனஸ் பாயிண்ட்.

அநியாயத்துக்கு மெல்ல போகிறது படம். கதை என்று எதுவும் கிடையாது. மெல்ல மெல்ல உருவாகி வரும் நட்பு காதலாகி கடைசியில் எப்படி முடிகிறது என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை. விஜய் சேதுபதியும் மடோனாவும் படத்தின் உயிர். இவர்கள் இருவர் மட்டும்தான் படம் முழுக்க. படத்தை எங்கேயோ கொண்டுபோய்விட்டார்கள். அட்டகாசமான தரமான நடிப்பு. மடோனாவை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று பார்த்தால், ப்ரேமம் படத்தில் வரும் நடிகை! இன்னும் பிடித்துப் போய்விட்டது. இவருக்காகவே இன்னொரு முறை பார்க்கலாம். தொடர்ச்சியாக திறமையான அழகான நடிகைகளின் படங்களைப் பார்க்கிறேன். மடோனா, இறுதிச் சுற்று ரித்திகா சிங்.

விஜய் சேதுபதி சென்னை வட்டார வழக்கையே எல்லா படங்களிலும் தொடர்ந்து பேசி ஒரு எரிச்சலை வரவைத்து விட்டார். இந்தப் படத்திலும் தொடக்கத்தில் அப்படித்தான் இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல நம்மை இழுத்துக்கொண்டு விட்டார். இடைவேளைக்குப் பிறகு அவரது நடிப்பு இன்னொரு லெவல்.

பின்னணி இசை பிரமாதம். ஆனால் பாடல்கள் என்ற பெயரில் வசனத்தையே அதுவும் எல்லாப் படங்களில் ஒரே ராகத்தில் இழுத்து இழுத்துப் பேசுவதையே செய்துகொண்டிருக்கிறார் சந்தோஷ் நாராயண். உன் பேர் ஊர் என்ன என்றால் வசனம். ஊஊஊன்ன்ன்ன்ன் பேஏஏஏர்ர்ர்ர்ர் ஊஊஊஊஊர்ர்ர்ர்ர் என்ன்ன்ன்ன்னா என்றால் பாடல் என்பது அநியாயம். அதுவும் ஒரே ராக இழுவையில்.

இதெல்லாம் போக இன்னொரு அட்டகாசமான நடிப்பு – விஜய் சேதுபதியுடனே வரும் ஒருவரின் நடிப்பு. (அவர் பெயர் மணிகண்டன் போல.) மிகச் சில காட்சிகள்தான். ஆனால் அப்படி ஒரு யதார்த்தம். அதுவும் க்ளைமாக்ஸில் விஜய் சேதுபதி கலக்குகிறார் என்றால் இந்த நடிகர் ஒரு பங்கு மேலே போய்விட்டார். இவரைப் போன்ற நடிகர்களைப் பார்த்து பிடித்து இயக்குநர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நான் இப்பதிவை எழுதுவதே இந்நடிகரைப் பாராட்டத்தான்.

எதிர்பாராமல் மறக்கமுடியாத ஒரு படம். நிறைய லாஜிக் பிரச்சினைகள், கேள்விகள் உண்டு. ஆனாலும் படம் ஒரு தென்றல் போல வருடிச் செல்கிறது. க்ளைமாக்ஸ் பதற்றத்தையும் பரிதாபத்தையும் கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட மூன்றாம் பிறையின் க்ளைமாக்ஸ் அளவுக்கு.

வாழ்த்துகள் நலன் குமாரசாமி. ஆனால் இப்பாதை உங்களுக்கு வேண்டாம். தமிழ்நாட்டில் இப்படி நாலு படம் எடுத்தால் உங்களால் வெற்றி இயக்குநராக வலம்வரமுடியாது. ஏனென்றால் வெல்லும் இயக்குநர்களுக்குத்தான் ஒரு மரியாதை. எனவே சூது கவ்வும் போலவோ மற்ற புது இயக்குநர்களின் ஜிகர்தண்டா, பிசாசு, மெட்ராஸ் போலவோ முயற்சி செய்யவும். நல்ல வெல்லக்கூடிய ஒரு படம். அதுவே பாதுகாப்பானது.

Share

வீர சிவாஜி

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘வீர சிவாஜி’ புத்தகத்தைப் படித்தேன். 104 பக்கங்களே உள்ள, இரண்டு மணி நேரத்தில் படித்து முடிக்க இயலும் மிகச் சிறிய புத்தகம். சிவாஜியைப் பற்றிய கதைகள் பலவற்றை நாம் சிறு வயதில் இருந்தே படித்திருப்போம். அதில் எவற்றுக்கு ஆதாரம் உண்டு எவற்றுக்கு இல்லை என்பதே இன்றுவரை நமக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கதைகள் தரும் சுவாரஸ்யமும் சிவாஜிக்கு அவை கொண்டு வரும் ஒரு பிம்பமும் அசாதாரணமானது. இத்தனை கதைகளும் பல ஆதாரத்துடன் கூடிய நிகழ்வுகளும் உள்ள ஒரு முக்கியமான அரசனைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை ஏன் இத்தனை சிறிய புத்தகமாக நூலாசிரியர் கே.ஜி.ஜவர்லால் எழுதியிருக்கிறார் என்பதை விளங்கிக்கொள்ளமுடியவில்லை.

HQ-TCgAAQBAJ

இப்புத்தகத்தின் முக்கியத்துவ என்பது – மிக முக்கியமான தகவல்கள் பலவற்றை மிகச் சுருக்கமாகச் சொல்கிறது. சிவாஜியின் அப்பா தாத்தா காலத்தில் உள்ள முக்கியமான நடைமுறைகள், அன்று இருந்த நிலப்பகுதியைப் பற்றிய முக்கியமான விளக்கங்கள், அதோடு தொடர்புடைய சிவாஜியின் நிகழ்வுகள், சுல்தான்கள்-முகலாயர்களுக்கு இடையே இருந்த பிரச்சினைகள், இவற்றை சிவாஜி கையாண்டவிதம் என எல்லாமே தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவையெல்லாம் மிக வேகமாக, இன்றிரவே இக்கதையைச் சொல்லி முடிக்கவேண்டும் என்ற வேகத்தில் சொல்வது போன்ற ஒரு தோற்றத்தில் சொல்லப்பட்டுள்ளன. இன்னும் கொஞ்சம் நிதானமாக விளக்கமாக எழுதி இருந்தால் இப்புத்தகம் இன்னும் முக்கியமானதாக ஆகியிருக்கும்.

சிவாஜி ராம்தாஸ் உறவு, சிவாஜி அப்சலைக் கொன்ற விதம், சிவாஜி முகலாயர்களின் சிறையில் இருந்து தப்பிப்பது, சிவாஜியின் கோட்டையிலிருந்து தன் மகனுக்கு உணவளிக்க தப்பித்த ஒரு தாய், துண்டாகிப் பறக்கும் சாயிஷ்டா கானின் கட்டைவிரல் எனப் பல்வேறு கதைகள் இப்புத்தகத்தில் உள்ளன. இவையெல்லாம் நம் சிறுவயது நினைவுகளைக் கிளறுகின்றன. பல இடங்களில் இக்கதைகளுக்கான மாற்று ஏதேனும் இருந்தால் அதையும் பதிவு செய்கிறார் ஆசிரியர். இந்த வகையில் சிறுவர்களுக்கான மிக முக்கியமான நூலாக இதைச் சொல்லலாம். இந்த விடுமுறையில் இதை என் மகனிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லப் போகிறேன். ‘சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்’ என்ற புத்தகத்தை சிறுவயதில் படித்த நண்பர் ஒருவர் இப்போதும் அதைப் பற்றிப் பெருமையாகச் சொல்வதை நினைவுகூர்கிறேன். உண்மையில் அது முக்கியமான புத்தகமே. ஒருவித மயிர்க்கூச்செறியும் நடையில் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும் பல்வேறு தகவல்கள் அதில் உண்டு. அதேபோன்ற ஒரு புத்தகம் இது.

இப்புத்தகத்தில் சொல்லாமல் விடப்பட்ட, சொல்லி ஆதாரம் இல்லாத விஷயங்கள் என்று முக்கியமாக நான் கருதுபவை மட்டுமே இங்கே.

* அப்சல் கானைக் கொல்ல உதவி புரிந்தவர் ஒரு பிராமணர் என்று ஒரு தியரி உண்டு. அவர் சிவாஜியிடம் தூதாக வந்ததாகவும், சிவாஜி பாரத உணர்வை பாரத மேன்மையை எடுத்துச் சொல்லி அவரை மாற்றியதாகவும் ஒரு பார்வை உண்டு. அதைப் பற்றிய குறிப்பு இப்புத்தகத்தில் இல்லை.

* சிவாஜியின் முடிசூட்டு விழாவுக்கு மறுத்த பிராமணர்கள் பற்றிய குறிப்பு இல்லை. ஒருவேளை, இவற்றுக்கு ஆதாரம் இல்லை என்று ஆசிரியர் நினைத்தால், மற்ற விவரங்களை குறிப்பிடுவதுபோல இவற்றைக் குறிப்பிட்டுவிட்டு இவற்றுக்கான ஆதாரம் இல்லை என்றாவது சொல்லி இருக்கலாம்.

* அப்சல் கான் கொன்ற தன் 64 மனைவியர் பற்றிய குறிப்பு இல்லை.

* 84ம் பக்கத்தில் இப்படி ஒரு பத்தி வருகிறது. “என்னதான் இந்து மதத்துக்காகப் போராடினாலும் சிவாஜி காலத்து செக்யூலரிஸமும் இப்போது போலத்தான் இருந்தது. ஒரு முஸ்லிம், ஒரு இந்துவிடம் தவறாக நடந்துகொண்டால் அவருக்கு நீதித்துறை தண்டனை தரக்கூடாது என்று சட்டமே போட்டிருந்தாராம்.”

மேலே உள்ள பத்தியில் உள்ள முதல் வரி சற்றேறக்குறைய உண்மையே. இதற்கான ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன. ஆனாலும் அதை இக்காலத்து போலி செக்யூலரிசத்துடன் ஒப்பிடமுடியாது. உண்மையான ஹிந்து ராஜ்ஜியம் என்பது முஸ்லிம்களையும் உள்ளடக்கியது என்ற சிவாஜியின் நினைப்பே இதற்குக் காரணமாக இருந்திருக்கவேண்டும். ஹிந்து வேல்யூ என்பதை சிவாஜி பல இடங்களில் மெய்ப்பிக்கிறார். குறிப்பாக போரில் கைது செய்யப்படும் இஸ்லாமியப் பெண்களை அவர் கண்ணியமாக நடத்திய விதம் தொடர்பாக ஏகப்பட்ட ஆதாரங்கள் உள்ளன. அவை இந்நூலிலும் தரப்பட்டுள்ளன. எனவே சிவாஜியின் நடத்தையை இக்காலத்து செக்யூலரிஸத்துடன் ஒப்பிடமுடியாது. அது உண்மையான செக்யூலரிஸம்.

இதைவிட முக்கியமானது அடுத்த வரிகள். ஒரு முஸ்லிம் இந்துவிடம் தவறாக நடந்துகொண்டால் அதற்கு தண்டனை தரக்கூடாது என்பது நிச்சயம் இக்கால போலி செக்யூலரிஸம்தான். ஆனால் இப்படி சிவாஜி சொன்னதற்கான ஆதாரம் இந்நூலில் தரப்படவில்லை. அதற்கான ஆதாரத்தை நூலாசிரியர் வழங்கியிருக்கவேண்டும். இது மிகத் தெளிவாக சட்டமாகச் சொல்லப்பட்டதா, அல்லது சிவாஜி வேறு யாருக்கேனும் எழுதிய கடிதத்தில் இருந்து ஊகித்து அறியப்பட்டதா என்பதைப் புரிந்துகொள்ளாமல் இதை மேலும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது. இந்நூலின் மிகப்பெரிய சறுக்கல் என்று நான் நினைப்பது, இவ்வரிகளுக்கான ஆதாரங்கள் தரப்படாததையே.

இந்நூலின் இன்னொரு குறை – வரலாற்று சம்பவங்களை நாவல் பாணியில் உரையாடலாகச் சொல்வது. பெரும்பாலும் இது இந்நூலில் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். ஆனாலும் சில இடங்களில் இப்படி வருவது இப்புத்தகத்தின் நம்பகத்தன்மையையும் சீரியஸ்நெஸ்ஸையும் கடுமையாகக் குறைக்கிறது. அல்லது இப்படி பேசியதற்கான நேரடி தன்குறிப்பு ஆதாரங்கள் இருந்தால் அதைக் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் விவரணைகளாக மட்டுமே இவற்றைச் சொல்லவேண்டும். அதேபோல் தேவையற்ற உதாரணங்கள், அதிலும் குறிப்பாக நடிகர் நடிகைகள் அல்லது தற்கால நிகழ்வுகளோடு இணைவைத்துச் சொல்லப்படும் உதாரணங்கள் போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும் அல்லது மிகக் கவனமாகக் கையாளவேண்டும். இவை ஒன்றிரண்டு இடங்களில்தான் வருகின்றன என்றாலும் இதில் கவனம் கொள்வது அவசியமானது.

மற்றபடி வீர சிவாஜியைப் பற்றித் தெரிந்துகொள்ள உருப்படியான முக்கியமான நூலாகவே இதைக் கருதுகிறேன்.

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9789351351726.html

இபுத்தகம் வாங்க: கூகிள் புக்ஸ்

Share

தாரை தப்பட்டை – முழுக்க தப்பு

தாரை தப்பட்டை திரைப்படம் பாலாவின் வழக்கமான கொடூரத் திரைப்படமாகத்தான் இருந்தது. இதுவரை வந்த கொடூரத் திரைப்படங்களில் அதை ஒட்டி கொஞ்சம் கதையும் கொஞ்சம் திரைக்கதையும் இருந்தன. இதில் கொடூரம் மட்டுமே உள்ளது.

மிக முக்கியமான குறையாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, படத்தின் பல காட்சிகள் எவ்வித உயிருமின்றி தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்கள் பாணியில் இருந்தன. இது படத்தின் தரத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது.

சிவாஜி கணேசன் என்ற ஒரு சிறந்த நடிகன் தன் மிகை நடிப்பை நம்பி காலமாற்றத்தைப் பொருட்படுத்தாமல் அதற்குள்ளேயே சிக்கி மடிந்து போனது போல பாலா தன் திரைப்படம் என்ற ஒரு பிம்பத்துக்குள் பலவாறாகக் சிக்கிக்கொண்டுவிட்டார். அவன் இவன் என்ற திரைப்படம் தமிழ்த் திரைப்படக் குப்பைகளில் ஒன்று. நல்ல படங்கள் இயக்கும் இயக்குநர்களின் தோல்விப் படங்கள்கூட ஒரு எல்லைக்கு மேலே பொருட்படுத்தத்தக்கக் கூடிய படமாக இருக்கவேண்டும். ஆனால் தமிழில் இப்படி நிகழ்வதில்லை. தமிழின் இரண்டு மிகச் சிறந்த திரைப்படங்களைத் தந்த பாலு மகேந்திரா சில குப்பைகளைக் கொடுத்திருக்கிறார். மகேந்திரனும் இப்படியே. ஆனால் இவற்றையெல்லாம்விட பாலாவின் அவன் இவன் படு மட்டமானது.

விளிம்பு நிலை/புறக்கணிக்கப்பட்ட மனிதர்களைப் பற்றிய படத்தை எடுப்பதாகத் தொடங்கிய பாலா, எப்படி பாரதிராஜா கிராமங்களைக் காட்டுவதாகத் தொடங்கி ஒரு கட்டத்தில் அவரே கிராமங்களை உருவாக்கிக் காண்பிக்க ஆரம்பித்தாரோ அப்படி பாலாவின் விளிம்பு நிலை மனிதர்கள் உருவாகி வர ஆரம்பித்தார்கள். இவர்களுக்கும் யதார்த்த சமூகத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ‘என் பிரா சைஸை நீயே பார்த்துக்கோ’ ஓர் உதாரணம்.

மணிரத்னம் மிகப்பெரிய பிரச்சினையை மையமாகக் கொண்டு காதல் படங்களை எடுப்பதைப் போல பாலாவும் தாரை தப்பட்டை என்று பெயர் வைத்துவிட்டு அதில் என்னென்னவோ காண்பிக்கிறார். ஏன் எதற்கு என்ற திரைக்கதை பற்றிய எவ்வித முதிர்ச்சியும் இப்படத்தில் இல்லை.

நடிகர்களை அதீதமாக மிகை நடிப்புச் செய்யச் சொல்லி பார்வையாளர்களை முதல் காட்சியிலிருந்தே கலவரப்படுத்துவது பாலாவின் பாணி. அவன் இவன் திரைப்படத்துக்கு அடுத்து வந்ததாலேயே பரதேசி பரவாயில்லை என்று சொல்லப்பட்டாலும், பரதேசி திரைப்படத்தின் முதல் பத்து நிமிடங்களிலேயே நான் அடைந்த குமட்டல் இன்றும் நினைவில் உள்ளது. அதேபோலவே இப்படத்திலும் முதல் காட்சியிலேயே ஜி.எம். குமார் அந்த கொடுமையைத் தொடங்கி வைக்கிறார். அவர் இசைக்கும் கருவி என்ன? படத்தின் பெயருக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று எனக்குத் தெரியவில்லை. தப்பட்டை என்றால் பறை என்று விக்கி சொல்கிறது. ஜி.எம்.குமாரோ தவிலை அதை அவர் சிவாஜி கணேசன் போல வாசிக்கிறார். சரக்கு கேட்கிறார். பின்பு ஒரு காட்சியில் சம்பந்தமே இல்லாமல் ஒரு பாடலும் பாடுகிறார். கம்பீரமான குரலில். இவர் யார்? சகலகலா வல்லவரா? இவர் ஏன் புகழ்பெறவில்லை? என்ன நடந்தது? ஏன் குடித்துக்கொண்டே இருக்கிறார்? ஒன்றும் விளங்கவில்லை. ஜி.எம். குமார் போன்ற எவ்வித முகபாவங்களும் இன்றி நடிப்பையே கொலையாக்கும் நடிகர்களை பாலா தள்ளி வைக்கவேண்டும். தன்னால் யாரையும் நடிக்க வைக்கமுடியும் என்பதே இயக்குநரின் தோல்வியின் முதல்படியாக இருக்கும்.

ஜி.எம்.குமாரின் ஒவ்வாத (வராத) நடிப்பைப் பிடித்துக்கொண்டு அடுத்து தொடர்கிறார் வரலட்சுமி. அப்படி ஒரு ஓவர் ஆக்டிங். இவரும் சரக்கு கேட்கிறார். இவர் நடிக்கும் ஒவ்வொரு காட்சியும் குமட்டலை உண்டு பண்ணுகிறது. இன்னொருவருடன் திருமணம் என்றதும் அப்படியே நடைப்பிணமாக மாறுகிறாராம். சகிக்கவில்லை. ஆ ஓ ஊ என்று கத்தினால் நடிப்பு என்ற, தங்கர் பச்சான் கதாபாத்திரங்களின் இலக்கியப் பிரதியை பாலா கைவிடுவது நல்லது.

சசிக்குமாரும் வரலட்சுமிக்கும் காதலாம். ஆனால் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்களாம். நாம் அதைப் புரிந்துகொள்ளவேண்டுமாம். இது என்ன ரொம்ப புதுமையானதா? பார்த்தால் புரியாதா? இடையிடையே செண்ட்மெண்ட் காட்சிகளை வைத்து அதற்கு இளையராஜா மிகப் பிரமாதமான பின்னணி இசையைப் போட்டு, ஆனால் அங்கே காட்சிகளோ கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கின்றன.

தேவையற்ற காட்சிகள்தான் ஒட்டுமொத்த படமும். பாலா 10,000 அடி படங்கள் எடுத்துவிட்டு தேவையற்றதை வெட்டிவிடுவார் என்று சொல்வார்கள். எனக்கென்னவோ அப்படி வெட்டிப்போட்டதை தவறாக வெளியிட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது.

ஒரு திரைக்கதை என்றால் சுவாரஸ்யம் வேண்டாமா? அரிசியை ஊற வைத்து உளுந்தை ஊற வைத்து ஆட்டி எடுத்து ஒன்றாக்கி உப்பு போடும் தினசரி வேலையா என்ன திரைக்கதை? இந்தப் படம் அப்படித்தான் இருக்கிறது. அடுத்து என்ன என்று யோசிக்கவே வேண்டாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது அப்படியே நடக்கும். நாம் அதை ஏற்கெனவே சிவாஜி கணேசன்  காலத்திலேயே பார்த்திருப்போம்.

அந்தமான் போகிறார்கள். என்ன நடக்கும்? ஆட்டக்காரிகளை படுக்கக் கூப்பிடுவார்கள். அதேதான் நடந்தது. ஹீரோவுக்குப் பசி. ஹீரோயின் என்ன செய்வாள்? நடு ரோட்டில் ஆடி பிச்சையெடுத்து ஆடி உருக வைக்கும் பின்னணி இசையில் மாமாவுக்காக அம்மணமாகூட ஆடுவேன் என்று சொல்கிறாள். ஹீரோயினுக்கு உடல்நிலை சரியில்லை. ஹீரோ கண் விழித்துப் பார்த்துக்கொள்கிறான். இதெல்லாம் ஏன் அந்தமானில்? எப்படி அந்தமானில் இருந்து திரும்பி வந்தார்கள்? சட்டென்று ஒரு காட்சியில் தஞ்சைக்கு வந்துவிட்டார்கள். இதை முதல் காட்சியிலேயே காண்பித்திருக்கலாமே. (தஞ்சையின் படித்துறை அழகு.)

ஜி.எம். குமாரை சசிக்குமார் திட்டுகிறார். அடுத்த காட்சியில் ஆஸ்திரேலியாகாரர்கள் பாட அழைக்கிறார்கள். அவர் யாழ் போன்ற கருவியை மீட்டுகிறார். அடுத்த காட்சியில் உங்கப்பன் ஜெயிச்சிட்டான் என்று சொல்லி செத்துப்போகிறார். இதில் ஆஸ்திரேலியாகாரர் மொழி தெரியாமலேயே இவர் பாடிய வரிகளை சொல்கிறார். இசை இணைக்கிறதாம். இசை எப்படி மொழியை இணைத்தது? இப்படி படம் முழுக்க கொடுமைகள் வந்தால் எப்படி சகித்துக்கொள்வது? இதில் பணத்துக்கும் மயங்கமாட்டாராம். கோவக்காரராம். பாராட்டை பதில்-சன்மானமாக திரும்பக் கொடுப்பாராம். ஏனென்றால் கலைஞராம். மீம்களில் வருமே, ஐ டி க்ளையண்ட்டுகள் தங்களை சிங்கம் போல நினைத்துக்கொள்ள, மற்றவர்கள் பார்வையில் பூனை போலத் தென்படுவார்களே, அதைப் போல. ஜி.எம்.குமாரை மிகப்பெரிய சமரசமற்ற கோபக்கார திறமையான கலைஞனாகக் காட்ட பாலா எத்தனிக்கிறார். நமக்குத் தெரிவதெல்லாம் ஒரு குடிகாரனின் கோபமும் உளறலும் மட்டுமே. எல்லாரும் அவரை திறமைக்காரண்டா என்கிறார்கள். என்ன திறமை? அதை மறைத்து வைத்துவிட்டார்கள்.

ஒரு செட்டியாருக்கு குழந்தை வேண்டுமாம். ஒரு பிராமண ப்ரோக்கர் வேலை பார்க்கிறார். (ஆனால் கிறித்துவ டீன் மட்டும் போப்பே தப்பு செய்தாலும் தொப்பியைக் கழற்றிவிட்டு குட்டுபவர்!) என்னென்னவோ சொல்கிறார். வில்லனின் கொடூரத்தைக் காண்பிக்க ஆறு பெண்களுக்கு மொட்டை. இந்தக் காட்சிகளையெல்லாம் பார்க்க சகிக்கவில்லை. என்ன எடுக்கிறோம், என்ன சொல்லப்போகிறோம் என்று எந்த இலக்குமின்றி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

பாலாவின் திரைப்படங்கள் திரையில் ஒதுக்கப்பட்ட சமூகத்தினரைக் காண்பிக்க முயல்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் அவர்கள் மேல் மரியாதையைக் கொண்டுவரும் எந்த முயற்சியையும் அது செய்வதில்லை. பொதுப்புத்தியில் இருக்கும் இகழ்ச்சியை வெறுப்போடு இணைக்கிறது. ஆட்டக்காரிங்கன்னா அவுசாரிங்களா என்கிறார். இப்படத்தில் அவர்கள் அத்தனை பேரும் ஆபாசமாகவே ஆடுகிறார்கள். ஆபாசமாகவே பேசிக்கொள்கிறார்கள். மாமனாருடன் சேர்ந்து குடிக்கிறார். ஆனால் வசனம் மட்டும் மரியாதையைக் கேட்கிறது. ஆட்டம் ஆபாசமாக இருந்தாலும் அவர்களைத் தொட உரிமையில்லை என்பது நியாயம். ஆனால் அதைப் பார்வையாளர்களுக்குத் தெளிவாகச் சொல்ல பாலாவால் முடியவில்லை.

பாலாவின் நடிகர்களின் ஓவர் ஆக்டிங்கே அவரது ஒவ்வொரு படத்தை சீரழிக்கிறது. அது நடிகர்களின் பிரச்சினையல்ல, ஒவ்வொரு நடிகருக்குள்ளும் இருந்துகொண்டு நடிக்கும் பாலாவின் பிரச்சினை. இதைத் தீர்க்காத வரை நல்ல படத்தை பாலாவால் இனி கொடுக்கமுடியாது.

பாலாவின் நகைச்சுவைக் காட்சிகளின் கொடுமை இப்படத்திலும் தொடர்கிறது. லொடுக்கு பாண்டி, சரோஜாதேவி சோப்பு டப்பா என்ற கொடுமைகளின் வரிசையில் இப்படத்திலும் ஒரு காட்சி. புது ஆட்டக்காரியைத் தேடிச்செல்லும் காட்சி. நேரத்தை இழுக்கப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நல்ல படம் என்று எதையுமே பேசமுடியாது என்பதை பாலா புரிந்துகொள்ளவேண்டும்.

கதையை சவசவ என்று இழுத்துவிட்டு கடைசியில் தன் பிராண்டான கொடூரத்துக்குத் தாவுகிறார். ஹீரோ மிருகம் போல தாக்கி எல்லோரையும் கொல்வதும், ஒரு பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்துவிட்டு அவளைக் கொன்றுவிடுவதும் என கொஞ்சம்கூட லாஜிக்கே இல்லாத காட்சிகள். ஹீரோ மிருகம் போல மாறி அடிக்கும் காட்சிகளின் விஷுவல்கள்கூட பழைய பாலா படங்களைப் பார்ப்பதைப் போலவே உள்ளது.

இதில் சசிக்குமார் மிகையாக நடிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். பாவம் அவர் உழைப்பு. பாலா ஹீரோக்களின் நடிப்பு விழலுக்கு இறைத்த நீராகப் போவது இது முதல்முறையும் அல்ல, கடைசி முறையும் அல்ல.

இளையராஜாவுக்கு செய்யப்பட்ட துரோகம் கொஞ்சம் நஞ்சமல்ல. அட்டகாசமான பாடல்களையெல்லாம் கூறுகெடுத்து கொத்துக்கறி போட்டுக் கெடுத்திருக்கிறார்கள். மிகச்சாதாரண இயக்குநர் கூட இதைவிட ஒழுங்காக எடுத்திருப்பார். பாருருவாயா பாடலைப் பார்த்தால் கதறத் தோன்றுகிறது. இதில் நல்ல பாடல் ஒன்று வரவில்லை. ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளேவைப் பார்க்கமுடியவில்லை. ராஜாவின் பின்னணி இசை பலவித மாயங்களை நிகழ்த்துகிறது. காட்சிகள் ஈடுகொடுக்கமுடியாமல் திணறுகின்றன. உண்மையில் ராஜா காட்சிகளுக்குத்தான் இசையமைத்திருப்பார். ஆனாலும், அவன் தன் தரத்தில் இருந்து கீழே இறங்கவில்லை.

இந்தப் படத்தில் ஒரு பெண்கூட நல்லவராக ஏன் இல்லை என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த நினைப்பு இப்படத்தை ஒரு சிக்-மூவியாக என் மனத்தில் பதியச் செய்துவிட்டது. ஏன் பெண்கள் மேல் இத்தனை வெறுப்பு, வன்மம்? யோசிக்க யோசிக்க எரிச்சலே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆறு பெண்களுக்கு மொட்டை போடும் காட்சியும், செட்டியார் முன்னிலையில் வரிசையாகப் பெண்கள் வரும் காட்சியும். இவையெல்லாம் கலையல்ல. குரூரத்தின்  கலை என்பது நீங்கள் எதைப் படமாக எடுக்கிறீர்கள், எந்தக் களத்தில் எடுக்கிறீர்கள் என்பதில் உள்ளது. வெற்றுக் குரூரம் கலையாகாது.

இப்படத்தில் எனக்குப் பிடித்திருந்த ஒரே காட்சி, அண்ணனும் தங்கையும் ஆடும் தெரு டான்ஸ்தான். அது ஒன்று மட்டுமே யதார்த்தத்துக்கு அருகில் உள்ளது. வரலட்சுமியின் ஆட்டமும் யதார்த்தத்துக்கு அருகில் இருந்தாலும், மற்ற காட்சிகளில் அவர் செய்யும் மிகை நடிப்பு இதையும் சேர்த்துக் கெடுத்துவிட்டது.

ஒரே விதமான கதாபாத்திரங்களைப் படைப்பது, பார்வையாளர்களை திடுக்கிட வைப்பதற்காகவே கொடூரமாக எதையாவது செய்வது, தரமற்ற நகைச்சுவைக் காட்சிகளை வைப்பது, நடிகர்களை ஏனோ தானோவென்று ஓவர் ஆக்டிங் செய்யவைப்பது, திரைக்கதையெல்லாம் தேவையில்லை என்று தன் திறமையில் அதீத நம்பிக்கை வைப்பது – இவற்றையெல்லாம் கைவிடவில்லையென்றால் பாலாவின் திரைப்படங்கள் இனி தேறப்போவதில்லை.

பின்குறிப்பு: மகராசி இலவசமா அரிசி கொடுக்கிறதால என்ற ஒரு வரி வருகிறது. அதிமுகக்காரர்கள் இதைப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. பாலா போன்ற இயக்குநர்கள் செய்யக்கூடாத ஒன்று இது.

Share

சிசு – சிறுகதை

நான் எழுதிய சிறுகதை சிசு பாதகையில் வெளியாகியுள்ளது. பதாகைக்கு நன்றி.

Share

கெடை காடு

ஏக்நாத் எழுதிய கெடை காடு நாவல் படித்தேன். முன்பே வாங்கி வைத்திருந்த நாவல். அப்போது காவ்யா வெளியீடாக வந்தது. தற்போது டிஸ்கவரி வெளியீடாக வந்திருக்கிறது.

100-00-0002-258-9_b-01

நாவலின் சிறப்பு, கதை என்று எதுவுமில்லை. ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் நண்பர்கள் குழு மாடுகளைப் பத்திக்கொண்டு போய் குள்ராட்டி என்னும் மலைக்காட்டுக்குச் சென்று அங்கே தங்கி இருக்கிறார்கள். அவ்வளவுதான் கதை. இதனூடாகச் சொல்லப்படும் பல்வேறு நினைவுகள், சிறு கதைகள், நிகழ்வுகள் இதுதான் நாவல்.

இதனால் ஒட்டுமொத்த நாவலும் விவரணைகளாகவே இடம்பெறுகின்றன. காட்டையும் ஊரையும் அதன்வழியே கோனார்களையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஏக்நாத். இதில் இன்னும் சிறப்பு என்பது, நாவலின் விவரணைகளில் பயன்படுத்தப்படும் தமிழும் வார்த்தைகளும்தான். அப்படியே மண் மனம் கமழ, காட்டு மணம் கமழ மிகப் பிரமாதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் பேச்சு வழக்கில் நெல்லை வட்டார வழக்கு சுத்தமாகக் கையாளப்பட்டுள்ளது. வட்டார வழக்கின் பயன்பாட்டை தேவைக்காக மட்டும் பயன்படுத்தி இருப்பது அழகு. இல்லையென்றால் முழுமையாக நாவலில் உட்புகமுடியாமல் போயிருக்கலாம். இவ்வழக்குக்கு ஈடாக கதை சொல்லியின் நடை அமர்க்களப்படுத்துகிறது.

நாவலின் காலம் 70கள் என்று கொள்ளுமாறு பல குறிப்புகள் உள்ளன. இன்று வாசிக்கும்போது காட்டில் வசிப்பது குறித்த ஏக்கத்தைக் கொண்டு வருவதில் இந்நாவல் வெற்றி பெறுகிறது என்றே சொல்லவெண்டும். (இந்த இடத்தில் தேவையில்லை என்றாலும் ஒன்று – நாவலில் ஓரிடத்தில் அனைவரும் சிவாஜி எம்ஜியார் பாடல்களைப் பாடும் இடம். அதுவும் எதோ ஒரு ஏக்கத்தைத் தந்த ஒன்றே.)

சில குறைகள் என்று பார்த்தால் – நாவல் வெறும் கதை சொல்லல் என்ற போக்குக்கு மேல் எழவே இல்லை. நாவலின் பின்னணியாக எவ்வித அரசியல் வரலாற்றுப் பின்னணியும் வரவில்லை. இப்படி நிச்சயம் வரத்தான் வேண்டுமா என்பது ஒரு பக்கம். இப்படி வராததால் நாவல் மிக மிக நேர்க்கோட்டுப் பாதையில் வெறும் நிகழ்வுகளைப் பட்டியலிடும் ஒன்றாகக் குறுகிப் போய்விடுகிறது. இன்னொரு குறை என்றால், வாசகர்களை ஊகிக்கவிடாமல் அதை நாவலாசிரியரே சொல்வது. இதனால் ஒரு வைரமுத்துத்தனம் நாவலில் வந்துவிடுகிறது. கெடைக்குப் போய்விட்டு நாள்கழித்து வரும் மகனுக்கு அம்மா கோழி அடித்துக் குழம்பு வைக்கிறாள் என்பதே போதுமானது. பல நாள் நல்ல சாப்பாடு சாப்பிடாதவனுக்கு எந்த ஒரு தாயும் செய்வது இதைத்தான் என்பது யாருக்கும் புரியும். தாயுள்ளம் இதை ஏற்கெனவே அறிந்திருந்தது என்று எழுதுவது ஒரு திணிப்பு. இதை வாசகனே புரிந்துகொள்ளும்போது வரும் ஒரு இன்பத்தை இவ்வரிகள் குலைக்கின்றன. இதைப் போன்ற பயன்பாடு நாவல் முழுக்க பல இடங்களில் வருகிறது. உச்சிமகாளியின் காதல் முயற்சிகள் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகின்றன. கெடையை மேய்த்துக்கொண்டு காட்டைப் பற்றிய சித்திரங்களில் ஊர் பற்றிய நிகழ்வுகள் அதிகம் சொல்லப்படுவதும் ஒரு வகையில் சலிப்பே. கோனார்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு ஒட்டுமொத்த சித்திரம் நாவலில் உருவாகி வந்தாலும், மற்ற சாதிகளைப் பற்றிய விரிவான பதிவோ அவர்களுடனான உறவின் எல்லைகளோ சொல்லப்படவில்லை. எல்லா சாதியும் ஒன்றாக வாழ்ந்தார்கள் என்பது போன்ற சித்திரம் ஒன்று மட்டும் எப்படியோ மேலோட்டமாக உருவாகிறது.

இவற்றையெல்லாம் மீறி நாவல் நம்மைக் காட்டுக்குள் கொண்டு செல்கிறது என்பது உண்மைதான். காட்டைப் பற்றிய ஏக்கம் எல்லா நவீன மனங்களுக்குள்ளும் இருக்கிறது என்பதை இந்நாவல் சரியாகப் பிடித்துவிடுகிறது. அந்தக் காட்டைப் பற்றிய விவரணைகளில் நாவலாசிரியர் சொல்லும் பல விஷயங்கள், எத்தனை தூரம் இவர் காட்டைப் படித்திருக்கிறார் என்பதைப் புரியவைக்கிறது. காட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு எழுதுவது அல்ல, காட்டிலேயே வாழ்ந்து எழுதுவது. அவ்வகையில் இந்நாவல் ஒரு முக்கியமான பதிவுதான்.

நாவலை வாங்க: http://www.nhm.in/shop/1000000022589.html

Share