நதி நீராலானது மட்டுமல்ல – கவிதை

நதி இறந்துவிட்டது என்கிறார்கள்

நீரில்லை என்கிறார்கள்

காய்ந்த மீன்கூடு சொருகிக்கொண்டிருக்கும்

மணல் காட்டுகிறார்கள்

மீன்கொத்தி பார்த்து

வருஷமாகிறது என்கிறார்கள்

நதியின் கரைகளில்

வெறுமையைக் காட்டுகிறார்கள்

பசுமையில்லாத ஊரைக் காட்டுகிறார்கள்

ஊர்ச்சாத்திரை கூட்டாமல்

பூட்டப்பட்டிருக்கும் கோயில் காட்டுகிறார்கள்

கடைசியில்

ஒட்டுமொத்தக் காரணமாய்

நதி இறந்துவிட்டதைக் காட்டுகிறார்கள்

தட்டிக்கொள்கிறேன்

என்றோ

ஆடிப்பெருக்கு நிலாச்சாப்பாட்டிற்குப் பின்

கட்டிப் புரண்டபோது

ஒட்டிக்கொண்ட மண்துகள் முதுகில்

இறக்காது இந்த நதி

என் தலைமுறைக்கேனும்.

Share

வயசு – சிறுகதை


நீளமான அந்தத் தெருவின் ஒரு முனையில் இருந்து பார்க்கும்போது அடுத்த முனையில் பச்சைப் பசேல் என புற்கள் காற்றில் ஆடுவது தெரிந்தது. நாலு எட்டு வேகமாய் நடக்க முடிந்தால் பதினைந்து நிமிடத்தில், வயற்வரப்புகளைக் கடந்து ஓடைக்குச் சென்று விடலாம். ஓடையில் இப்போது நீர் இருக்குமா எனத் தெரியவில்லை. இப்போதெல்லாம் எத்தனைப் பையன்கள் ஓடைக்குச் சென்று குளிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஷவர் இல்லாமல் ஷானு ஒருநாள் கூட குளிக்கமாட்டாள். “தண்ணீரைத் திறந்துவிட்டு, ஷவரில் அக்காடான்னு குளிக்கும்போது ஒரு சுகம் வரும் பாருங்க தாத்தா” என்று சொல்லும்போது அவள் சின்னஞ்சிறு முகத்தில் பரவும் பரவசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவளிடம் ஓடையில குளிச்சிருக்கியாம்மா என்று கேட்கக்கூட பயம் எனக்கு.அவள் கட்சிப்படி, ஓடை, வயற்காட்டில் நீர் பாய்ச்சுவதற்கும் எருமைகள் குளிப்பதற்கும்தான்.

மிகுந்த பிரயாசையுடன் மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாக வைத்து நடந்தேன். நிறைய வீட்டுக் கதவுகள் பூட்டியே இருந்தன. கோபால ஐயர் கோலோச்சிய காலத்தில், எந்த வீடாவது பூட்டியிருந்தால், பெரும் அக்கறையோடு என்னைத் தேடி வந்து, “அந்த அம்மாஞ்சி நாம நினைச்சா மாதிரி சும்மா இல்லைங்காணும். அவன் பெண்டாட்டி மூணாவதா உண்டாயிருக்கா. அதான் அம்மா ஆத்துக்கு கொண்டு போயி விடப் போயிருக்கான்” என்பார். அம்மாஞ்சி மேல் கோபால ஐயருக்கு எப்போதும் ஒரு கோபம் இருந்துகொண்டே இருந்தது. அம்மாஞ்சியின் மனைவியை கோபால ஐயர் ஒரு தலையாக காதலித்ததாக ஊர்க்கதை உண்டு. ஊர்க்கதைகளுக்கா பஞ்சம். என்னைக்கூட குசும்பி என்று என் காது படவே பேசியிருக்கிறார்கள். கோபால ஐயர் செத்தபோது அந்த அம்மாஞ்சிதான் இழுத்துப் போட்டுக்கொண்டு எல்லா காரியங்களையும் செய்தான். அதைக் கோபால ஐயரிடம் சொல்ல முடியாது போன வருத்தம் இன்னும் எனக்குள் இருக்கிறது.

நான் தெருவில் நடக்கிறேன் என்பதே என்னாலேயே நம்ப முடியவில்லை. தனியாக நடக்கமுடியும் என்ற நம்பிக்கை போன பிறகு நடமாட்டம் எல்லாம் வீட்டுக்குள் மட்டும்தான். வெளியில் இறங்கினாலே ஒப்பாரி வைப்பாள் காமாட்சி. வெளியில் பெண்ணெடுத்தால் மாமனாரை ஒழுங்காகப் பார்த்துக் கொள்ள மாட்டாள் என்று சுற்றம் எல்லாம் சொன்ன போதும் ஒரு காலில் நின்று விக்கிக்கு அவளை மணமுடித்துவைத்தேன். விக்கிக்கு காமாட்சிமேல் ஒரு பிரியம் இருந்தது எனக்குத் தெரியும். ஊர்வாயை அடைக்கிற மாதிரித்தான் என்னைப் பார்த்துக்கொள்கிறாள். ஆனாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்க முடிகிறதா என்ன?

சம்சுதீனின் வீடு அடையாளமே தெரியாமல் மாறிவிட்டிருக்கிறது. சம்சுதீன் இறந்த போது அவன் மனைவியிடம் சென்று துக்கம் விசாரிக்கக் கூட முடியவில்லை. நான் செல்லவேண்டுமானால் துணைக்கு யாராவது வேண்டும். விக்கி அவனே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டான். சம்சுதீன் இறந்த அன்று அவன் குடும்பம் இனிமேல் எப்படி வாழுமோ என்று அத்தனை வருத்தப்பட்டேன். சின்ன வயதிலிருந்தே என் கூட ரொம்பப் பிரியமாக இருந்தவன் அவன் தான். அவன் பிள்ளைகள் யாருமே ஒழுங்காகப் படிக்காமல் ஊர்சுற்றியாக இருப்பதை நினைத்து எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பான். “அஞ்சை பெத்தததுக்கு விக்கி மாதிரி ஒருத்தனைப் பெத்திருந்தா நிம்மதியா இருந்திருப்பேன்” என்று அவன் புலம்பும்போது சங்கடமாக இருக்கும். திடீரென ஒரு நாள் முஸ்தபா வேலைக்கு சவுதி போவதாக வந்து சொல்லிவிட்டுப் போனான். சம்சுதீன் உயிரோடு இருந்த காலத்தில் முஸ்தபா மேல் தனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை என்று என் நேர்படவே சொல்லியிருக்கிறான். “முஸ்தபா எப்போதும் வாப்பாவை எதிர்த்து எதிர்த்துப் பேசுகிறான்” என்று சம்சுதீனின் மனைவி நூர்ஜஹான் எத்தனையோ முறை சொல்லி அழுதிருக்கிறாள். இப்போதிருக்கும் வீட்டைப் பார்க்கும்போது முஸ்தபாவை நினைத்துச் சந்தோஷப்படத்தான் தோன்றுகிறது. என்னவோ அப்போதிருந்தே விக்கி மாதிரி எனக்கு முஸ்தபா மேலும் ஒரு அன்பு. இது சம்சுதீனுக்கும் தெரியும்.

அடுத்தது முதலியார் வீடு. பெருமாள்நாயகம் முதலியாருக்கும் எனக்கும் பம்பரம் விளையாடும் காலத்திலிருந்தே ஆகாது. சரியான கோவக்காரன் அவன். பேச்சு பேச்சாய் இருக்கும்போதே கை நீட்டி விடுவான். என் அப்பாவும் அவன் அப்பாவும் எங்களுக்காக எத்தனையோ தடவை சண்டை போட்டிருக்கிறார்கள். அவனும் அதிக நடமாட்டம் இல்லாமல் படுக்கையில்தான் கிடப்பதாகக் காமாட்சி சொல்வாள். படியேற முடிந்தால் ஒரு தடவை போய்ப் பார்க்கலாம்தான். பெருமாள்நாயகத்தின் மருமகள் காமாட்சி மாதிரி இல்லை. ராங்கி. எதாவது படக்கென்று சொன்னாலும் சொல்லிவிடுவாள். நாளை விக்கி திட்டினாலும் திட்டுவான். அவனைப் பார்க்க வேண்டும் என்ற நினைப்பைத் தள்ளி வைத்துவிட்டு, மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.

லேசாக மூச்சு முட்டியது. கீழே விழுந்துவிட்டால் அசிங்கம். காமாட்சி திட்டமாட்டாள். ஆனால் அழுவாள். வாய்விட்டு அழுவாள். பார்க்கவே கஷ்டமாக இருக்கும். தெருக்கோடியில் இருக்கும் “மஞ்ச வீடு”க்கு எதிரில் இருந்த புளியமரத்தை வெட்டுகிறார்கள் என்று சொன்னபோது எனக்கு எதையோ இழந்த மாதிரி இருந்தது. யாருக்கும் தெரியாமல் அதைப் பார்க்க போனபோதுதான் முதல்முறையாகத் தெருவில் விழுந்தது. எனக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. விழுந்த வேகத்தில் எழ முயன்ற போது, மீண்டும் விழுந்தேன். “ஐயோ.. தாத்தா விழுந்துட்டார்” என்று அம்மாஞ்சியின் பேரன்தான் கத்திக்கொண்டே ஓடினான். காமாட்சி அழுது புலம்பிக்கொண்டே வந்து என்னைத் கைத்தாங்கலாகத் தூக்கிக்கொண்டு போனாள். அன்றைக்கு முழுவதும் “தொங்கிச் செத்துருவோமா” என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். அதுக்குக் கூட யாரையாவது கூப்பிட வேண்டும். பெரியநாயகம் நடமாட்டத்துடன் இருந்தாலாவது அவனைக் கேட்டிருக்கலாம்.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு நடையைத் தொடர ஆரம்பித்தேன். கோபாலு வீட்டைக் காலி செய்து போன பின்னர் வேறு யாரோ குடிவந்திருக்கிறார்கள். காமாட்சி சொன்ன பெயர் ஞாபகத்தில் இல்லை. இன்றைக்கு வந்தால் கேட்டு வைத்துக்கொள்ளவேண்டும். அந்த வீட்டுக்குள் இருந்து ஒரு பெண்குரல் கேட்டது. தெளிவாகப் புரிந்தது. “ஐயோ.. ஷானுவோட தாத்தா தனியா நடக்குறாங்கம்மா”

கைக்கும் காலுக்கும்தான் க்ஷ£ணம். கண்ணுக்கும் காதுக்குமில்லை.

இன்னும் ரெண்டு வீடு தாண்டி விட்டால் என் வீட்டுக்குப் போய்விடலாம். படியேற வேண்டும் என்று நினைத்த போதே கொஞ்சம் பயமாக இருந்தது. உட்கார்ந்து உட்கார்ந்தாவது ஏறிவிடலாம் என நினைத்துக்கொண்டபோது கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நேரத்தில் தலையில் யாரோ கட்டையால் அடித்த மாதிரி ஒரு உணர்வு. கண் கட்டிக்கொண்டு வந்து, “செத்தேன்” என்றே முடிவுசெய்துவிட்டேன். இரண்டு நிமிடங்களில் தன்நிலைக்கு வந்தேன். கண் இத்தனை இருட்டிக்கொண்டு வந்தும், நான் கீழே விழவில்லை என்பது மிகப்பெரிய ஆச்சரியம். என் காலுக்குக் கீழே ஒரு கிட்டிப்பில் கிடந்தது. அதை எடுக்க ஒரு சின்னப்பையன் ஓடி வந்துகொண்டிருந்ததையும் பார்த்தேன். குனிந்து நிமிர்வது அத்தனைச் சுலபமில்லை என்றாலும் அவன் வருவதற்குள் கிட்டிப்பில்லைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டேன். அவன் பக்கத்தில் வந்து நின்றான். என்னைப் பார்த்துக் கொஞ்சம் பயந்த மாதிரி இருந்தான். தூரத்தில் இருக்கும் மற்ற இரண்டு பையன்களையும் செய்கையால் அழைத்தான். வந்து சேர்ந்தார்கள்.

அந்தப் பையன்மார்களில் ஒருத்தனையும் அடையாளம் தெரியவில்லை. மூன்று பேரும் புதுப்பையன்கள். ஒருத்தன் ஆரம்பித்தான்.

“தெரியாம பட்டுட்டு.. குடு தாத்தா”

மற்ற பையன்மாரும் சேர்ந்துகொண்டார்கள்.

“ஆமா தாத்தா”

பையன்கள் இன்னும் கிட்டி விளையாடுகிறார்கள் என்பதைக் காணும்போதே சந்தோஷம் வந்தது. நான் ஆடிய காலத்தில் சம்சுதீன்தான் கிட்டி விளையாட்டில் பெரிய ஆள். அம்மாஞ்சி ஆட்டைக்கே வரமாட்டான். கிட்டி விளையாட்டு என்றாலே அவனுக்குப் பயம்.

நான் ” ஏண்டே இதெல்லாம் இன்னும் ஆடுதிகளா?” என்றேன்.

பையன்கள் பதில் சொல்லாமல் கிட்டியை வாங்குவதிலேயே குறியாய் இருந்தார்கள்.

“தெரியாம பட்டுட்டுங்கேன்லா.. குடு தாத்தா”

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கடே மொதல்ல. வேறென்னெல்லாம் ஆடுவீக?”

“கிரிக்கெட் ஆடுவோம். இன்னைக்கு பந்து வாங்கக் காசில்லை. அதுதான்.” அவன் குரலில் எரிச்சல் கலந்திருந்தது. இன்னொருத்தன் கொஞ்சம் ரோஷக்காரன் போல.

“பதில் சொல்லியாச்சுல்ல குடு” என்றான்.

“கேள்வி முடியலை. இன்னும் இருக்குடே” என்றேன் கொஞ்சம் நமட்டுடன்.

என் கிண்டல் அவர்களுக்கு இரசிக்கத்தக்கதாய் இல்லை. அனாலும், கிட்டிப்பில் என் கையில் இருப்பதால் மையமாய்ச் சிரித்து வைத்தார்கள்.

“சரி. என்னையும் ஆட்டைக்குச் சேர்த்துக்கோங்க. நான் தர்றேன்” என்றேன்.

“ஐய.. நடக்கவே முடியலையாம். ஆட்டைக்காம்” ஊமைக்கொட்டான் என நான் நினைத்திருந்த ஒரு சிறுவன் பட்டென்று பதில் சொல்லவும், மற்றவன்கள் சிரித்தார்கள்.

“நான் நல்லா விளையாடுவேண்டே. ஒரு தடவை சான்ஸ் கொடுத்துப் பாரு.. அப்றம் பேசு” என்றேன்.

“சரி ஒரே ஒரு ஆட்டைதான். அப்புறம் கிடையாது” என்று ஒரு வழியாய் இறங்கிவந்தார்கள். கைத்தாங்கலாய் அவர்கள் விளையாடும் இடத்துக்குக் கூட்டிப் போனார்கள். எத்தனையோ வருடங்கள் கழித்து கிட்டி விளையாடப் போகிறேன். எனக்குள் சந்தோஷஅலை அடிக்க ஆரம்பித்தது.

“தாத்தா.. இந்தா கம்பு. சட்டுன்னு கெந்து. உன்னை நான் சீக்கிரம் அவுட்டாக்கிடுவேன்”

அவந்தான் கிட்டியில் பெரிய ஆள் போல. சம்சுதீன் மாதிரி. சம்சுதீன் யாரையும் சீக்கிரம் அவுட்டாக்கி விடுவான். கிட்டிப்பில்லை கேட்ச் பிடிப்பான். அல்லது கிட்டிப்பில்லை எறிந்து தாண்டை அடித்துவிடுவான். அல்லது கிட்டிப்பில் இருக்கும் இடத்தில் இருந்து தாண்டு வைக்கப்பட்டிருக்கும் இடத்தை லாங் ஜம்ப் மாதிரி தாண்டிவிடுவான். இந்த மூன்றில் எது செய்தாலும் ஆட்டக்காரன் அவுட். இப்போதெல்லாம் என்ன விதி என்று தெரியவில்லை.

“ஏண்டே இதைக் கம்புன்னா சொல்தீய? நாங்க தாண்டும்போம்”

“நாங்க அப்படியும் சொல்வோம்” என்றான் ரோஷக்காரன்,. ஒரு விதக் கிண்டல்தொனியுடன்.

“சரி.. சும்மா விளையாடுங்கன்னு சொன்னா என்னடே அர்த்தம்? ரூல்ஸ் சொல்ல வேணாமா?”

ஊமைக்கொட்டான் ஒப்புவிக்க ஆரம்பித்தான்.

“நீங்க கெந்தும்போது நாங்க கேட்ச் பிடிச்சா அவுட். இல்லைனா கிட்டிப் பில்லை எறிஞ்சு கம்பை அடிச்சாச்சுன்னா அவுட். இல்லைனா ஓடி வந்து கிட்டிப்பில் இருந்த இடத்துலேர்ந்து கம்பு இருக்கிற இடத்துக்குத் தாண்டுவோம். சரியா தாண்டியாச்சுன்னா நீங்க அவுட்” என்று சொல்லிவிட்டு ரோஷக்காரனைப் பார்த்து “சரிதாம்ல?” என்றான்.

பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை.

” சரி ஒரு வேளை இந்த மூணும் நீங்க செய்ய முடியலைனா…?”

” நீங்க விளையாடலாம். மூணு சான்ஸ். அதுக்குள்ள உயிரடியாவது அடிச்சிடனும்…”

பொறுமை இழந்து போன ரோஷக்காரன், “தாத்தா.. ஆட்டயப் பத்தி உங்களுக்குத் தெரியுமா தெரியாதா ? ” என்றான். இனியும் சந்தேகம் கேட்டால் ஆட்டைக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டால், ரொம்ப நாள் கழித்துக் கிடைத்த சந்தோஷம் பூர்த்தியாகாமல் போய்விடும் என்று தோன்றியதால் அமைதியாகிவிட்டேன்.

“சரி.. ஒரு தடவை நீ ஆடு. அதை நான் பார்த்துக்கறேன். அப்புறம் நான் ஆடறேன்” என்றேன்.

ரோஷக்காரன் அலட்சியமாய் கிட்டியை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு கம்பையும் எடுத்துக்கொண்டு ரொம்ப ஸ்டைலாக நடந்து, சாண் நீளத்திற்குத் தோண்டப்பட்டிருந்த குழிக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டு…

“ரெடியா..? கெந்தவா?”

“சீக்கிரம் கெந்துல.. தாத்தாவுக்கு காமிக்கிறதுக்குத்தான.. அவரை சீக்கிரம் அனுப்பிட்டு நாம ஆரம்பிக்கலாம்” என்றான் மூன்றாமவன்.

நீளமான குழிக்குப் பக்கவாட்டாய் குச்சியை வைத்து, பின்புறத்தைக் காட்டிக்கொண்டு, குனிந்துகெந்தத் தயாரானான்.

“கெந்தப் போறேன்.. கெந்தப் போறேன்..”

“கெந்துல.. உயிரை வாங்காத” – மூன்றாமவன்.

பின்புறத்தை இடதும் வலதுமாய் இரண்டு புறம் அசைத்துவிட்டு, அழுத்தி ஒரு கெந்து கெந்தினான். கிட்டிப்பில் காற்றில் பறந்து உயரே சென்று கீழே வந்து விழுந்தது. இத்தனை தூரம் சம்சுதீன் கூடக் கெந்தியதாய் நினைவில்லை எனக்கு. மூன்றாமவன் கிட்டிப்பில் விழுந்த இடத்தில் இருந்து, தாண்டைப் பார்த்துக் குறி வைத்து எறிந்தான். ஆனால் அடி படவில்லை. ரோஷக்காரன், “என்னயவே அவுட்டாக்கப் பாக்கியா நீயி! இருலே உனக்கு நான் யாருன்னு காட்டுதேன்” என்ற வசனம் பேசிக்கொண்டு தாண்டை எடுத்துக்கொண்டு கிட்டியை அடிக்க எத்தனித்தான்.

எந்த ஓரத்தில் கிட்டி தூக்கிக்கொண்டு நிற்கிறது எனக் குறிபார்த்து, தரையில் மூன்று முறை ஸ்டைலாய் கோடு போட்டுவிட்டு, அடிக்க, கிட்டிப்பில் வானத்தில் எழும்பியது. அது கீழே விழுமுன் தொடர்ந்து தட்ட, “ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு..சே.. எட்டுத்தானா.. பன்னெண்டாவது அடிக்கணும்னு நினைச்சேன்” என்றான். நான் ஆடிய காலத்தில் மூவடி அடிப்பதே பெரும் சாதனை. இவன் சர்வ சாதாரணமாய் எட்டடி அடிக்கிறான்.

இரண்டாவது முறை கிட்டிப்பில் காற்றில் எழும்ப வில்லை. மூன்றாவது முறை கொஞ்சம் எழும்பியது, ஒரே அடியாக இழுத்து அடித்தான். தூரத்தில் சென்று விழுந்தது.

மூன்றாமவன் ” எத்தனை வேணும்? ” என்றான்.

ரோஷக்காரன் ரொம்ப யோசனைக்கு பின் நூத்தம்பது என்றான். ” சரி எடுத்துக்கோ” என்றான் மூன்றாமவன். ஊமக்கோட்டன் இடையில் நுழைந்து, “இருக்காதுல. அளந்து பார்ப்போம்” என்றான். “சரி அள” என்றான் ரோஷக்காரன். ஊமக்கோட்டன் தாண்டை வைத்து அளந்தான். தாண்டின் நீளத்தில், கிட்டிப்பில் இருக்கும் இடத்தில் இருந்து, குழிக்கு நூற்று இருபது தடவைதான் வந்தது. ஊமக்கோட்டான் ரொம்ப உற்சாகமாகி, “நாஞ் சொன்னேம்லா” என்றான்.

ரோஷக்காரன் “ரொம்ப அல்ட்டிக்காதடே..”என்றான்.

“ஆட்டைப் போச்சா நம்பர் போச்சா”

கொஞ்சம் கூட யோசனையே இல்லாமல் ரோஷக்காரன் “நம்பர் போச்சு” என்றான். அவன் சொன்ன விதம் படு ஸ்டைல். மீண்டும் அவன் கெந்தப் போனான்.

“நான் எபப ஆட?” என்றேன்.

“தாத்தா ஒரு தடவதான கேக்காரு.. அவர் விளையாடிட்டுப் போவட்டும்” என்றான் மூன்றாமவன். ஒரு வழியாக தாண்டு என் கைக்கு வந்தது.

என்னால் குனிந்து நின்று கெந்த முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் ஆசை விடவில்லை. செத்தாலும் சரி என்ற வீராப்பு வந்துவிட்டது எனக்கு. கிட்டிப்பில்லை குழிக்கு பக்கவாட்டில் வைக்காமல் நீளவாக்கிலேயே வைத்தேன்.

“இது ஆட்டையில கிடையாது. ராக்கெட்லாம் விடக்கூடாது” என்றான் ஊமக்கோட்டான்.

“சரி விடுல. தாத்தா எத்தனை தூரம் கெந்துதாருன்னு பாக்கலாம்” என்றான் ரோஷக்காரன்.

நான் பின் பக்கமாய்த் திரும்பி நின்றேன். மூச்சு முட்டியது. ஆசுவாசப்படுத்த கொஞ்ச நேரம் அப்படியே நின்றேன். மனதுக்குள் சம்சுதீன், பெரியநாயகம் எல்லாம் வந்து போனார்கள்.

“சீக்கிரம் கெந்து தாத்தா”

மெல்லக் குனிந்த போது, முதுகின் அடிப்பாகத்தில் இருந்து ஒரு வலி மேலே பரவியது. கண்ணைக் கட்டிக்கொண்டு வந்த மாதிரி கூடத் தோன்றியது. அதே மாதிரி அதிக நேரம் இருந்தால், மயக்கம் வந்தாலும் வரலாம் என்று தோன்றவே, சிரத்தையில்லாமல் ஒரு கெந்து கெந்தினேன். கிட்டிப்பில் காற்றிலெல்லாம் பறக்கவில்லை. தரையை உரசிக்கொண்டு கொஞ்ச தூரம் சென்று அமைதியானது. இரண்டு கால்களின் வழியாக உலகைப் பார்த்து நாளாயிற்று. பையன்மார்கள் தலைகிழாகச் சிரித்தார்கள்.

“ஹ்ம். இம்புட்டுதானா? இதுக்குத்தான் இம்புட்டு நேரமா?” என்றான் ரோஷக்காரன். நான் மெல்ல நிமிர்ந்தேன். உடலின் பிடிப்புகளில் இருந்து சொடக்கு விழும் சத்தங்கள் கேட்டது.

” என்ன தாத்தா.. ஓடி வந்து தாண்டிரவா? ” கேட்டுவிட்டுச் சிரித்தான் ரோஷக்காரன். பதிலேதும் சொல்லத் தோன்றவில்லை. அப்படியே எங்கேயாவது கொஞ்ச நேரம் உட்கார்ந்தால் போதும் எனத் தோன்றியது.

“போனா போவட்டும். ஒரு தடவை விட்டுக்கொடுல.. என்ன அடிக்கார்னு பாப்போம்” என்றான் மூன்றாமவன். சரி என்று சொல்லிவிட்டு, என்னை அவுட்டாக்காமல் விட்டுக்கொடுத்தான்.

“தாத்தா.. ஐயோபாவம்னு விட்டுக்கொடுத்துருக்கேன். நல்லா அடிச்சு பாயிண்ட் எடுக்கனும் என்ன?”

“இல்லடே.. என்னால முடியலை. ஆட்ட போதும். நீங்க விளையாடுங்க”

“தாத்தா.. சும்மா ஆடு தாத்தா.. ஐயோ பாவம்னு அவன் விட்டுக்கொடுத்திருக்காம்லா” என்று வக்காலத்து வாங்கினான் ஊமக்கோட்டான். எனக்கும் ஆசை வந்தது. திக்கித் திணறி நடந்து கிட்டிப் பில் அருகில் சென்றேன். இன்னொரு முறை குனிய வேண்டும் என நினைத்தபோது வந்த பயத்தை ஒத்தி வைத்தேன்.

தாண்டைக் கையில் வைத்து, கிட்டிப்பில் எந்த நுனி தூக்கி இருக்கிறது எனப் பார்த்தேன். ஒரு நுனியும் வாகாய் இல்லை. ரொம்ப யோசனைக்குப் பின் அதிகம் குனியாமல், ஒரு நுனியை அடித்தேன். அது மேலெழும்பாமல், மண்ணில் உள்ளே புதைந்துகொண்டது.

“தாத்தா ஒரு சான்ஸ் போயிடுச்சு. இன்னும் ரெண்டு சான்ஸ்தான் இருக்குது” என்றான் மூன்றாமவன்.

இரண்டாம் முறை அடித்த போதும் கிட்டிப்பில் காற்றில் எழும்பவே இல்லை.

“ஐயோ.. உயிரடியாவது அடி தாத்தா.. இல்லைனா அவுட்..”

கையின் மணிக்கட்டில் வலி விண்ணென்று தெரித்தது. கடைசியாய் ஒரு முறை முயற்சித்துப் பார்க்கலாம் என்று அடிக்க, கிட்டிப்பில் காற்றில் எழும்பி லாவகமாய், தாண்டில் மாட்ட, விசுக்கென்ற சத்தத்துடன் பறந்தது. அதை நானே எதிர்பார்க்கவில்லை.

“தாத்தா பரவாயில்லைல” என்றான் ஊமக்கோட்டான்.

“ஆமால” என்றனர் மற்ற இரண்டு பையன்மார்களும்.

“சரி தாத்தா உனக்கு எத்தனை பாயிண்ட் வேணும் கேளு!”

நான் “நூறு”என்றேன்.

மூன்றாமவன் “ஸ்தூ..” என்று சொல்லிவிட்டு “தாத்தா.. நூறு இருக்காது. அம்பதுதான் இருக்கும். அம்பது கேளு” என்றான். அவனுக்கு என்னைப் பிடித்துவிட்டது போல.

“இல்லை. நூறுதான்” என்றேன். “வேணும்னா அளந்து பாத்துக்கோ”

ரோஷக்காரன் அளந்தான். அம்பத்தெட்டு தாண்டுகள்தான் வந்தது.

“நாந்தாஞ் சொன்னேம்லா..” என்றான் மூன்றாமவன். அவன் கண்ணில் பரிதாபம் தெரிந்தது.

“சரி ஆட்ட போச்சா? நம்பர் போச்சா?” என்றான் ஊமக்கோட்டான்.

நான் “ஆட்ட போச்சு” என்றேன்.

***

இந்தக் கதை சிறப்பு அம்பலத்தில் வெளியாகியது.


 

***

Share

மீண்டுமொரு கனத்த இரவு – கவிதை

இரண்டாம் முறையாய்

இன்னொரு கனத்த இரவு

தீவிரமாக மழை பெய்த ஒரு நாளில்

தூரத்தில் நிலா பார்த்துக்கொண்டே

கழிந்திட்ட அந்த இரவுக்குப் பின்னர்

சகஜமாகிப்போனது

உடல் தொடுதல்

காதல் பரிமாறிக்கொள்ள மறந்ததில்லை

பயந்து பயந்து தொட்டுக்கொண்ட நாள்கள் போய்

தொடுவதற்காகவே சந்தித்துக்கொண்ட நாளிலும்கூட

எந்தவித முகாந்தரமுமில்லாமல்

காரணங்களைத் தேடிச் சொல்லி

விலகிய நாளிலும்

உள்ளங்கையில் உடல்வாசம் இருந்தது

படுக்கை விரிப்பு கசங்காமல்

விரித்தபடியே இருந்தது

இன்னொரு காதல் வரும்வரை

முதல் காதல் ஆழமென்பார்கள்

ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது

இரண்டாம் கனத்த இரவிலும்கூட

முதல் காதல் தொலைந்த இரவைப் பற்றியே

யோசித்துக்கொண்டிருப்பதால்

Share

இளமையின் விளிம்பில்

இளமையின் விளிம்பில்
—ஹரன் பிரசன்ன

சிணுக்கெடுத்த பின்
சுருட்டி எறிந்த முடிக்கற்றை
மூலையில் முட்டிக்கொண்டிருப்பதிலிருந்தும்
முகங்காட்டும் கண்ணாடியின்
ஸ்டிக்கர் பொட்டுத் தடங்களிலிருந்தும்
கல்கட்டிக்கொண்டு தொங்கும்
பாம்புப்புடலைத் தோட்டத்தின் வழி வீசும்
ஈரக்காற்றிலிருந்தும்
மீண்டு
படியிறங்க
கண்ணை உறுத்துகிறது
எதிர்வீட்டுக்கொடி

Share

கண்ணில் நிற்கும் துளிகள்

கண்ணில் நிற்கும் துளிகள்
–ஹரன்பிரசன்னா

இரட்டைக் கோட்டுக்குள் சிறைபடாமல்
நான்கு கோடுகளுக்குள் அடங்காமல்
பிதுங்கி வழியும் எழுத்துகளை
சலிப்போடு
இரப்பர் கொண்டழிக்கும்
சிறுகையைப் பற்றி முத்தமிட
வெறிக்கும் சிறுமிக்கு
வாய்திறக்காமல் ஒரு வார்த்தை-
ஒன்றிலிருந்து நூறுவரை
சும்மா எண்ண,
வேண்டியிருக்கிறது ஒரு தனிப்பொழுது.

Share

வடிவம்

வடிவம்
— ஹரன்பிரசன்னா

கிளியாய் நினைத்திருக்கலாம்
சிரிக்கிறான்

ரெண்டு கொம்பு, மூன்று கண்ணுள்ள
அரக்கனாய்த் தோன்றி மறைந்திருக்கலாம்
கண்களில் மிரட்சி

தாடியுடன்
மிட்டாய் விற்கும் தாத்தா
சந்தோஷம்

ஒண்ணுக்கிருந்தபடி
அண்ணாந்து வானம் நோக்கும்
சிறுவனின்
முகமாற்றச் சமகணத்தில்
எனக்கு மட்டும்
எப்போதும் மேகமாய்.

Share

சிதம்பர நினைவுகள்-பாலசந்திரன்சுள்ளிக்காடு

சிதம்பர நினைவுகள்-பாலசந்திரன்சுள்ளிக்காடு
–என் பார்வை

ஒருமுறை குமுதம் ஜங்கஷனில் மகாநடிகன் என்ற தலைப்பில் சிதம்பரநினைவுகள் புத்தகத்தில் பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய சிவாஜி பற்றிய கட்டுரையைப் பிரசுரித்திருந்தார்கள். அதைப் படித்த பின் (சிவாஜி மீது கொண்டுள்ள மிகப்பெரிய ஆர்வத்தால் ) அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. கடந்த முறை இந்தியா சென்ற போது வாங்கி, ஒரு வாரத்திற்கு முன்புதான் படித்தேன்.

மகாநடிகன் பற்றிய பாலனின் (பாலசந்திரன் சுள்ளிக்காடு) கட்டுரையைப் படித்த பின்பு மலையாளிக் கூட்டுக்காரனிடம் அவரைப் பற்றிக் கேட்டேன். எழுத்தாளர் என்றும் ஏதோ ஒரு படத்தில் ஹீரோ என்றும் சொன்னான். (தற்கால மலையாளக் கவிதைகள் புத்தகத்தில் ஜெயமோகன் பாலனைப் பற்றிச் சொல்லும்போது அவர் அரவிந்தனின் போக்கு வெயில் படத்தில் நடித்ததாகச் சொல்கிறார்.)

சிதம்பர ஸ்மரண என்ற மலையாள மூலத்தை சிதம்பர நினைவுகளாக கே வி சைலஜா மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பின் நேர்த்தி சிதம்பர நினைவுகளுக்கு பெரிய பலம்.

இனி புத்தகத்திலிருந்து.. ….

முதல் நினைவே சிதம்பரம் கோயிலுக்குள் நிகழ்ந்ததாக இருக்கிறது. பிள்ளைகள் ஆதரிக்கத் தயாராய் இருந்தும் அவர்களுக்குத் தொல்லை தரவிரும்பாத இரண்டு வயதான பெற்றோர்களைப் பற்றியது. கொஞ்சம் அவர்களின் வாழ்க்கையை விவரித்துவிட்டு, வயதான காலத்தில் ஒருவருக்கு ஒருவர் தரவாய் இருப்பதைச் சொல்லிவிட்டு கடைசியில் இப்படி முடிக்கிறார்.

“பிரியத்தில் பின்னிப் பினைந்து குழந்தைகளைப் போல அடி வைத்து நடக்கும் அந்த முதிர்ந்த தம்பதிகளில் யார் முதலில் இறந்து போயிருப்பார்கள்.

ரங்கசாமியா? கனகாம்பாளா? “

மனதில் வேதனை படர்வதைத் தவிர்க்க இயலாத அந்த முடிவு வரிகள் பாலனின் டச்.

“பைத்தியக்காரன்”என்ற நினைவுகளில் பழைய நண்பன் தற்போதைய பைத்தியக்காரனைப் பற்றிச் சொல்கிறார். அவனைக் கொண்டுபோய் குளிப்பாட்டி புதிய aaடைகள் அணிவித்து ஹோட்டலில் மசால் தோசை வாங்கிக்கொடுத்து.. .

“ஒரு ஹோட்டலில் போய் உட்கார்ந்து மசால் தோசை கொண்டு வரச்சொன்னேன். சாப்பாட்டைப் பார்த்தபோது மோகனின் கண்கள் மின்னின. பசிதான் பரம சத்தியம். பைத்தியம் கூட பசிக்குப் பிறகுதான் என்பது எனக்குத் தெளிவாய்ப் புரிந்தது”

கடைசியில் அந்த பைத்தியத்தை என்ன செய்வது என்று தெரியாமல் யோச்¢க்கிறார் பாலன்.

“திருச்சூரில் இருக்கும் என் நண்பனும் மனோதத்துவ நிபுணருமான ரமேஷிடம் கொண்டு விட்டுவிடலாமா? அவன் வேலை செய்வது பைத்தியக்கார அஸ்பத்திரியில்தான். இல்லையெனில் பாதி ராத்திரியில் மார்த்தாண்டவர்ம பாலத்தில் உச்சியில் கொண்டு போய் மோகனனை கீழே ஆலுவா ஆற்றின் மத்தியில் தள்ளி விட்டு எல்லாவற்றிற்குமாய் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடலாமா? அப்படி மோகனனை உலகத்திலிருந்தும் உலகத்தை மோகனனிடமிருந்தும் மீட்டு விமோசனம் கொடுக்க முடியுமா?

இல்லை அதெல்லாம் செய்ய என்னால் முடியாது……

….. அவனை ஆலுவா பஸ் ஸ்டாண்டில் நிர்தாட்சண்யமாக விட்டுவிட்டு அடுத்த பஸ்ஸில் ஏறி நான் எர்ணாகுளத்திற்கு வந்துவிட்டேன்”என்று தொடர்கிறது நினைவு. கடைசியில் அந்த மோகனன் இறந்துவிட்டதாகத் தகவல் கிடைக்கிறது பாலனுக்கு.

நூல் முழுதும் பாலனின் வறுமையும் இயலாமையும் விரிந்து கிடைக்கின்றன. நடந்தவற்றைக் கொஞ்சம் கூட மாற்றாமல் பதிவு செய்யும் நேர்மை புத்தகத்தின் முதுகெலும்பு. ஒரு திருவோணத்திருநாளன்று கையில் காசில்லாமல் நண்பனிடம் கேட்டு அவனிடமும் இல்லாததால் , பசிதாங்க முடியாமல் பிச்சை எடுக்கும் அளவிற்குப் போனதாகச் சொல்கிறார். (நண்பனிடம் காசு கேட்கும்போது நடக்கும் சம்பாஷணையின் உச்சத்தில் நண்பன் பாலனுக்கு அறிவுரைகள் சொல்கிறார்: “பாலா.. நீ குருவா நினைச்சிருக்கியே அந்த கடம்பனிட்டையும் சச்சிதானந்தத்தையும் கெ.ஜி. சங்கரன் பிள்ளையையும் அவர்களெல்லாம் ஒழுங்காய்ப் படித்து பாஸாகி நல்ல உத்தியோகத்திற்கும்போய் வாழ்க்கையைப் பத்திரப் படுத்திக்கொண்டுதான் அரசியல் பேசுகிறார்கள். அதைக்கேட்டு உன்ன மாதிரி இருக்குற சில புத்திகெட்டவர்கள் வெறி நாய்கள் போல ஏண்டா சுத்தறீங்க? அந்த சச்சிதானந்தனும் கடம்பனிட்டமும் சங்கரன் பிள்ளையும் ஓணத்துக்கு குடும்பத்தோடு அப்பளம் பழம் பாயாசத்துடன் சுகமாய் விருந்து உண்பார்கள். உன்னைப் பத்தி நெனக்கக்கூட மாட்டாங்கடா..” ) ஓணத்தினத்தன்று வெளியில் திண்ணையில் சோறு போடும் ஒரு வீட்டில் சாப்பாட்டை உண்ண முற்படும்போது அந்த வீட்டுப்பெண் அவள் அம்மாவிடம் “அம்மா அது பிச்சைக்காரனில்ல. பாலசந்திரன் சுள்ளிக்காடு என்கிற கவிஞன். கடம்பனிட்டோடு எங்கள் காலேஜுக்கு கவிதை வாசிக்க வந்தார்”என்கிறாள். மதிப்பும் மரியாதையையும் விட பெரியது பசியும் சோறும்தான் என்று சாப்பிடுகிறார் பாலன்.

வீட்டின் ஆதரவில்லாமலும் வேலையில்லாமலும் படிக்கவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது மனைவி கர்ப்பமாகிவிடுகிறார். (“விடுமுறை நாட்களில் ஒரு ஸ்னேகிதன் வீட்டுக்கு நானும் விஜயலக்ஷ்மியும் ஒன்றாய்ப் போயிருந்தோம் அதன் பலன் இது”) மிகுந்த யோசனைக்குப்பின் தர்க்கங்களுக்குப் பின் (ஒரு சமயத்தில் கருகலைக்க மறுக்கும் மனைவியின் கழுத்தை நெறிக்கக்கூடத் தயாராகிறார்) தன்மனைவியை கருகலைக்க சம்மதிக்க வைக்கிறார். பிறக்காது போன மகனுக்காக ஒரு கவிதையும் உண்டு.

“உலகின் முடிவு வரை பிறக்காமல்
போக இருக்கும் என் மகனே
நரகங்கள் வாய் பிளந்தழைக்கும்போது
தவிப்போடு கூப்பிட யார் இருக்கிறார்கள்
உன்னைத்தவிர-ஆனாலும்
மன்னித்துவிடு என் மகனே”

மகா நடிகனாய் சிவாஜியை விவரிக்கும்போது கொஞ்சம் உயர்வாய்ப் புகழ்கிறாரோ என்று தோன்றுகிறது. ஒட்டுமொத்த புத்தகத்திலும் இப்படித் தோன்றியது இந்த ஒரு கட்டுரையில் மட்டும்தான். மற்ற இடங்களிலெல்லாம் உண்மையைப் பதிவு செய்த பாலன் சிவாஜி பற்றி சொல்லும்போது மட்டும் செயற்கைத்தனத்தைக் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பது யோசிக்கவேண்டியதும். கூட வந்த நண்பர் சிவாஜியிடம் வீரபாண்டிய கட்டபொம்மனிலிருந்து ஒரு டயலாக் சொல்லக் கேட்க பாலன் இப்படித் தொடர்கிறார்.

“சிவாஜி கணேசன் சிறிது நேரம் கண்மூடி கைகூப்பி அமர்ந்திருந்தார். பிறகு மெதுவாகக் குனிந்து இடதுகையால் வேட்டியின் தலைப்பைப் பிடித்து மெதுவாக நிமிர்ந்தெழுந்து சட்டென விஸ்வரூபமெடுத்தது போலத் திரும்பி நின்றார். நாங்கள் மிரண்டு போனோம். உயரம் குறைவான வயதான எங்களிடம் இவ்வளவு நேரம் இயல்பாய் பேசிக்கொண்டிருந்த சிவாஜி கணேசனல்ல அது. மனித ஆத்மாவை நடுநடுங்க வைத்த வீர பாண்டிய கட்டபொம்மன் தான் அது. சூரியன் அஸ்தமம் ஆகாத பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியான ஜாக்சன் துரைக்கு நேராக தி தமிழக வீர பௌருஷத்தின் சிங்க கர்ஜனை முழங்கியது…..

………ஒரு இளம் சூட்டினை லஜ்ஜையோடு நான் உணர்ந்தபோது தான் என்னுடைய உள்ளாடைகள் நனைந்தது எனக்குத் தெரிய வந்தது”

1995இல் யாத்ரா மொழி படத்தின் விவாததிற்குச் சென்ற போது பேசியதாகச் சொல்கிறார். வயதான சிவாஜி இவ்வளவு தூரம் பாதிக்கிறார் என்றால் பாலன் அறுபதுகளின் சிவாஜியைக் கண்டிருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்று யோசித்த்தேன்.

முகம் என்ற கட்டுரையில் சேல்ஸ் செய்ய வரும் பெண்ணின் இடையைத் தடவ முற்பட்டு, அவள் பாலனைக் கன்னத்தில் அறைவாங்கியதைச் சொல்லும்போதும் காணும்போதே பாலியல் இச்சையைத் தூண்டும் ஒரு பெண்ணிடம் இருந்து விலகி இருக்க முற்படுவதும் அவளின் தற்கொலைக்குப் பின் பிணமாகக்காணும்போதும் போஸ்ட்மார்ட்டத்திற்குப் பின் மொட்டைத்தலையும் உடையணியாத உடலுமாய்க் கண்டதைச் சொல்லும்போதும் பாலனும் சாமான்யன் என்று தெரிகிறது.

வீட்டு வாடகைக்கூட கொடுக்கமுடியாத ஒரு கவிஞனைக்காணும்போது பாலனின் கோபங்கள் வெளியாகின்றன.

மார்த்தா அம்மா என்ற நீக்ரோப் பெண் ஆசிரியையை தென் ஆப்பிரிக்காவில் ஒரு புத்தகக்கண்காட்சியில் எதேச்சையாகச் சந்திக்கிறார் பாலன். அந்தப் பெண்மணி அவள் வீட்டில் பாலனுக்கு காபி விருந்தளிக்கிறாள். அப்போதுதான் பாலன் அந்தப் பெண்மணியின் கைகளில் சில விரல்கள் இல்லாமலிருப்பதைக் காண்கிறார். வெலவெலத்துப்போய் என்ன வென்று கேட்கும்போது,

“போரில் என் ஒவ்வொரு மகனாய்க் கொல்லப்பட்டபோதெல்லாம் அவர்களின் நினைவாக ஒவ்வொரு விரலாய் எங்கள் வழக்கப்படி நானே வெட்டிக்கொண்டேன். பத்துவிரலும் வெட்டப்பட்டு, சில கால் விரல்களையும் இழந்த தாய்மார்கள் கூட எங்கள் இனத்தில் உண்டு”என்கிறாள்.

கடைசி கட்டுரை நோபெல் பரிசு அரங்கிலிருந்து….நோபெல் பரிசு எனக்குக் கிடைத்தாலும் கூட நான் வாங்கமாட்டேன் என்று சொல்லும் பாலன் காரணமாய், “டால்ஸ்டாய் என்ற மகா புருஷனுக்குக் கொடுக்காமல் ஷெல்லி ப்ருதோம் என்ற அல்ப மனிதனுக்கு நீங்கள் இலக்கியத்திற்கான முதல் நோபெல் பரிசைக்கொடுத்தீர்களே! டால்ஸ்டாய் என்ற அந்த மகாகலைஞனுக்கு கொடுக்காத நோபெல் பரிசை, அவனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகச் சாதாரணமான ஒரு எழுத்தாளனான நான் ஏற்றுக்கொள்ள முடியாது”என்கிறார்.

கமலாதாஸைச் சந்தித்த ஒரு கட்டுரையும் உண்டு.

புத்தகத்தைப் படித்த முடித்த போது தோன்றிய எண்ணம்; அனுபவங்கள்தான் மனிதனை மிகச் சிறந்த கலைஞனாக்குகின்றன. பாலன் அந்த வகை.

கடைசியாய் பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு கவிதை ஒன்று.

தற்கால மலையாளக் கவிதைகள்-தொகுத்து மொழிபெயர்த்தவர் ஜெயமோகன், வெளியீடு-கனவு, 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600 024. தொலைபேசி எண்: 4801603.

நின்று போன கைக்கடிகாரம்

நேற்றிரவு என் கைக்கடிகாரம் நின்று போயிற்று.
களிம்பேறிப் போன ஓர் இதயம்
இனி அதில் துடிக்காது

தங்கை பிறக்க நிமிடம் தந்ததும்
பாட்டி இறக்க முகூர்த்தம் குறித்ததும்
இந்த கைக்கடிகாரமே.
ஜாதகத்தின் காரணமும்,
வாழ்வின் இலக்கணமும்,
இந்தக் கைக்கடிகாரமே.

தூக்கத்திற்கு முன் செவி கூர்ந்தால்
இதிலிருந்து இணை ஜீவனின் மூச்சிணைப்பைக் கேட்கலாம்
குண்டடி பட்ட பறவையின் சிறகடிப்பைக் கேட்கலாம்
இருளிலும் மினுங்கும் பச்சை ஊசிகளுக்கு
அன்னிய கிரகங்களுடன் உள்ள தீய உறவை எண்ணி
நான் பிரமிப்படைகிறேன்.

டிக் டிக், டிக்-டிக்…
அடிமைகள் கல் உடைக்கும் சத்தம்.
யாகக் குதிரைகளின் குளம்போசை
திக்விஜயிகளின் இரத்தம் தோய்ந்த சாந்தி மந்திரம்
தீர்க்க தரிசிகளின் குற்றுயிரான நாடித் துடிப்பு

டிக் டிக், டிக்-டிக்….
அகதிகளின் காலடியோசை.
மரணம் வழியாக வெற்றி நோக்கி
தற்கொலைப் படைகளின் கனவுநடை!
வெற்றிகொள்ளப்பட்ட வாழ்விற்கு மேலே
எதிரிப் படைகளின் காவல் தாளம்.

நேரமாகவில்லை போலும்
நேரமாகவில்லை போலும்!
மெல்லிய ஊசிகள் சந்திக்கும் கணம்.
ஜனங்களைத் தூக்கிலிட தீர்ப்பளித்த
கோர்ட் கலைகிறது

நான் இனிமேல் காலத்தின் வாதியோ பிரதிவாதியோ அல்ல
நேற்றிரவில் நின்று போயிற்று என் கைக்கடிகாரம்.

***

புத்தகம்: சிதம்பர நினைவுகள்
வெளியீடு: காவ்யா
14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம்,
கோடம்பாக்கம், சென்னை-600 024.
தொலைபேசி எண்: 4801603.

Share

பென்சில் படங்கள்

பென்சில் படங்கள்– ஞானக்கூத்தனின் சமீபத்திய கவிதைகள் தொகுப்பு. ஞானக்கூத்தனுடனான மாலனின் நேர்முகத்தைப் பற்றி பத்ரி அவரது வலைக்குறிப்பில் எழுதியிருந்தார். திண்ணையும் கமல்ஹாசன் படித்துக் கண்ணீர் விட்ட கவிதை என்கிற குறிப்போடு அந்தக் கவிதைத்தொகுப்பைப் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தந்திருந்தது.

சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா டுடேயில் அபி எழுதிய பென்சில் படங்கள் மீதான கட்டுரை.

சித்திரமும் கேலிச்சித்திரமும்
— அபி

கவிதை எப்படி இருக்க வேண்டும்? இது என்ன கேள்வி, அது கவிதையாக இருக்கவேண்டும். பெயர், புகழ், உள்-வெளி வட்டங்கள் ஆகிருதிகள் தாண்டி கவிஞனை மதிப்பிட இந்தப் பொது அளவுகோல் போதுமானது.

ஞானக்கூத்தனின் முழுத் தொகுப்புக்குப் பின்னர் வந்திருக்கிறது 87 கவிதைகள் அடங்கிய “பென்சில் படங்கள்”. “அமெரிக்க அசலும் நம்மூர் நகலும்”என்று ஞானக்கூத்தன் மீது பிளேஜியாரிச குற்றச் சாட்டைத் தொடுத்த (சம்பந்தப்பட்ட கவிதை: பறவையின் பிணம்) ஒருவித குரோதத்துக்கும் “படிப்பவருக்குப் பரவசமூட்டும்”, “புதிய அனுபவத்தை உண்டாக்கும்”என்ற புல்லரிப்புப் புகழ்ச்சிக்கும் நடுவே நின்று ஞானக்கூத்தனை மதிப்பிட நீண்ட நடுவெளி நிச்சயமாக இருக்கிறது.

ஒரே மூச்சில் படித்து முடியக்கூடியவை கவிதைகளாகவும் இருக்க முடியும் என்றால் அதற்கு உதாரணம் ஞானக்கூத்தன் கவிதைகள். சுளுவும் நளினமும் ஐரனியும் அந்தக் கவிதைகளுக்கு எந்த வழியாக வந்து சேர்கின்றன என்று யோசிக்க நேர்வதுண்டு. பெரிய ஆழங்களை யாரும் அவரிடம் எதிர்பார்ப்பதில்லை. ஆனாலும் அங்கங்கே எளிய சொற்களில் திடுக்கென ஏதோ ஒரு ஆழம் ஒரு அலட்சிய பாவத்தைப் போர்த்துக்கொண்டு தோன்றுவதுண்டு. அவர் தேடிப் போகாமல் அது தேடி வந்தது என்று சொல்ல முடியும். யேசுவின் சிலுவையை நிர்பந்தமாகப் பறித்து/சுமந்து பார்த்தேன்/யேசுவின் சிலுவையில் பாரமே இல்லை/அவர்தான் முன்பே சுமந்துவிட்டாரே என்ற வரிகளில் இது தெரியும். அந்தக் கவிதைக்கு இருந்திருக்க முடியாத ஒரு கனம் இந்தத் “தான் தோன்றி”வரிகளில் வந்துவிடுகிறது. சரி, ஞானக்கூத்தனுக்கு இணையாக, அவருடன் வந்து, அவரைத் தாண்டு கண்சிமிட்டிப் போகும் கவித்துவ அடையாளங்கள் இந்தத் தொகுதியில் முழுக்க முழுக்கக் குறைந்துவிட்டன என்பதுதான் வாசகனின் முகத்தில் அறையும் உண்மை.

இவை எல்லாம் கவிதைதானா என்று கேட்கச்செய்யும் கவிதைகள் இந்தத் தொகுதியில் நிறைந்திருக்கின்றன. மேம்பாலங்கள், பலமரணஸ்தர், என்ஜின் கொட்டகை, படியும் பிராமணரே படியும், பூகம்பம் (என்ன ஒரு வளவளப்பு..!) .. பட்டியல் நீண்டு போகிறது. ஆரம்பம், நடு, முடிவு என்ற ஆரம்பப் பள்ளிக் கட்டுரைகளின் அமைப்பில் “கவிதை”படிக்க நேர்வது கொடுமை. (ஞானக்கூத்தனுக்கு “மனைவியைக் கனவில் காணும் வாழ்க்கை”யே கொடுமை). பென்சில் படங்கள், வெள்ளத்தனைய மலர்நீட்டம், சிம்மாசனம் போன்ற கட்டுரைகளுக்குத் துணையாக நிறைய கதைகள் ஆடிப்பாடிப் பேசிக்கொண்டு திரிகின்றன. ஆடிகாற்று, வெளிச்சம் வந்தது, சூன்ய சம்பாதனை, பங்க்கா புல்லர், துரத்தும் எண்கள்… நிகழ்வுகள், அவற்றைப் பற்றிய வர்ணனைகள் – என்னமாய்ப் பொங்கிப் பெருகிகிறது எழுத்து! ஆரம்பித்தபின் ஞானக்கூத்தனின் பொறுப்பிலிருந்து அறுத்துக்கொண்டு போகிறது அசிரியச்சந்தம். அங்கங்கே தட்டுப்படும் சுவாரஸ்யங்கள் கவிதையின் முடிவிடத்தைத் தாண்டு தள்ளிக்கொண்டு போகின்றன. சொல்லில், சந்தத்தில் பிடிபடாத கனம் சூழலில் பிடிபட்டது அன்று. இன்றோ சூழல் தானும் வாய் ஓயாமல் பேசுகிறது. அன்றைய “பறவையின் பிண”த்துடன் இன்றைய “ஓர் இரண்டு சக்கரவண்டியின் கதை”யை ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரியும்.

“நீலமசியை இந்தப் பூக்களின் இதழ்களில் துடைத்துக்கொண்டது யார்?” , “சும்மா நிற்கவும் காலுக்குக் கீழே தண்டவாளங்கள் வைத்திருக்கும் என்ஜினைப் போலொரு ஜீவன் உண்டோ?”, “மிதிபடும் ஒன்று வெல்கம் சொல்லுமா?” (மிதியடி) – இவை ஞானக்கூத்தனின் வரிகள் என்று நம்புவது கடினமாக இருக்கிறது. பல கவிதைகள் முந்தைய நல்ல கவிதைகளின் கேலிச்சித்திர நகல்களாகக் காட்சி தருகின்றன.

“மரபைச் சோதித்துத் தமிழ்க்கவிதையை போஷிப்பது”ஞானக்கூத்தனின் லட்சியமாம். “ஆய்தொடி நங்கோய்”, “அடேய் ஆய் அண்டிரா”, “யாம் உம் கிழத்தி”, “அழுங்கல் மூதூர்” – இந்தப் பழந்தமிழ்த் தொடர்களை இரசிக்கமுடியாத நையாண்டிக்குப் பயன்படுத்தி மரபை நன்றாகவே சோதித்திருக்கிறார். இதில் கம்பராமாயண மேற்கோளில் அர்த்தச் சறுக்கல் வேறு! “வன்மருங்கல் வாள் அரக்கர்” – இது அரக்கியர் என்று இருக்கவேண்டும்.

ஞானக்கூத்தனின் சுவாரஸ்ய மோகத்தைத் தாண்டிக்கொண்டு பிறந்திருக்கிற மிகச்சில நல்ல கவிதைகள் இந்தத் தொகுதியில் உண்டு. அப்பா குறுக்கிட்ட அந்தக் கதை, கண்டான் இல்லாத சொப்பனம் (நீளத்தைப் பொருட்படுத்தத் தோன்றாத ஒரே கவிதை), சுவர்க்கடிகாரம், கரடித்தெரு, பத்திரப் பகிர்வுகள், லூசிக்ரே போன்றவை அவை.

உள்ளடக்கம் இன்னது, இவை என்று வரையறுக்க முடியாமலிருப்பது படைப்பாளிக்கு குறைபாடு அன்று. ஞானக்கூத்தனின் இந்த யதேச்சைத்தன்மை இந்தத் தொகுதியிலும் தெரிகிறது. ஆனால் யதேச்சையின் பழைய அம்சங்களே திரும்பவும் வருகின்றன. இந்தமுறை நீர்த்த வடிவத்தில்! ஞானாட்சரியும் பாரிசும்தான் புதியவை போலும். ஞானாட்சரி ஏதாவது சொல்ல – செய்யவேண்டும். ஞானட்சரி சொன்னால் ஞானக்கூத்தன் கேட்பார்.

நான் எழுதுகிறேன் என்றா பிரக்ஞை பூத நிழலாய் ஞானக்கூத்தன் மீது கவிந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒரே மூச்சில் படித்து முடியக்கூடியவை பெரும்பாலும் கவிதைகளாக இருப்பதில்லை என்ற பொதுவிதிக்கு உதாரணம் சொல்லவும் நாம் ஞானக்கூத்தனையே (இந்தத் தொகுதியைப் பொறுத்த வரை) சுட்டிக்காட்ட நேர்கிறது.

நன்றி: இந்தியா டுடே

Share