Madurai Saravanan is no more

மதுரை சரவணன் – அஞ்சலி

புத்தகக் கண்காட்சிகளில் பங்கெடுத்தவர்களுக்குத் தெரியும் மதுரை சரவணன் என்பவரை. நல்ல கனத்த உடல். நடக்க முடியாமல் நடப்பார். ஆனால் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அல்லயன்ஸ் பதிப்பகத்தில் வேலை செய்வார். எப்படி இவரால் இந்த உடலை வைத்துக்கொண்டு வேலை செய்ய முடிகிறது என்று ஆச்சரியப்படாதவர்கள் இருக்க முடியாது.

சிறந்த வாசகர். ஆழமான நினைவாற்றல். ஹிந்துத்துவ ஆதரவாளர். என்றாலும் அனைத்து அரசியல் நூல்களையும் வாசிப்பார். பழைய நூல்கள் மற்றும் பத்திரிகைகளைத் தன் வீட்டில் அடுக்கி வைத்திருந்தார். எந்தப் பழைய நூலும் இவரிடம் கிடைக்கும். ஒரு நூலின் பெயரைச் சொன்னால் அதன் ஆசிரியர் பெயர், அதன் பதிப்பகம் என்று எல்லாவற்றையும் சொல்வார். அதை யார் மறு பதிப்பு போட்டிருக்கிறார்கள் என்றும் சொல்வார்.

புத்தகக் கண்காட்சியில் எந்த வாசகராவது எந்த பதிப்பகத்திலாவது ஏதாவது ஒரு புத்தகத்தைத் தேடுவது இவர் கண்ணில் பட்டுவிட்டால் போதும், உடனே அங்கே ஆஜராகி அந்தப் புத்தகம் தொடர்பான அத்தனை தகவல்களையும் கொட்டிவிடுவார்.

பல முன்னணி பதிப்பகங்கள் இவரிடம் பழைய நூல்களைப் பெற்றே புதிய பதிப்புகளைக் கொண்டு வந்தன. கிழக்கு பதிப்பகம் சுஜாதாவின் நூல்களை வெளியிட்ட போது பல நூல்களை இவர் கொடுத்தார். அதற்குப் பதிலாக கிழக்கு வெளியிட்ட பல அரசியல் நூல்களைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார். ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் பத்து நூல்களாவது எங்களிடம் இருந்து வாங்கிக் கொள்வார். ஒரே மாதத்தில் அவற்றைப் படித்தும் முடித்துவிடுவார்.

புத்தகக் கண்காட்சியில் பங்கெடுக்க வேறு ஊர்களுக்குப் பயணமாகும்போது, வயதான, கண்பார்வைக் குறைபாடு உள்ள தன் அம்மாவையும் அழைத்து வருவார். இங்கே சங்க அமைப்பு ஆதரவு பெற்ற இடங்களில் தங்க வைப்பார். இவர் புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்வார். அம்மாவின் உடல்நிலை ஏற்றுக்கொள்ளாது என்ற நிலைவந்தபோது, அம்மாவை மதுரையிலேயே தெரிந்தவர்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு இவர் மட்டும் வருவார்.

இவருக்கு சில பெரிய வேட்டிகளையும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அன்புடன் பெற்றுக்கொண்டார். தடம் வெளியிட்ட அனைத்துப் புத்தகங்களையும் கேட்டுப் பெற்றுக்கொண்டார். வலம் இதழை வாசித்துவிட்டு அடிக்கடி ஃபோனில் பேசுவார்.

பேச ஆரம்பித்தால் அரை மணி நேரம் ஒரு மணி நேரம் பேசுவார். சரவணன், வேலையா இருக்கேன் என்று சொன்னால், சரி அப்புறம் கூப்பிடறேன் என்று சொல்லிவிட்டு வைத்துவிடுவார்.

சுவாசம் பதிப்பகம் ஆரம்பித்தவுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றபோது இவரை இவரது வீட்டிலேயே சென்று சந்தித்தேன். குறுகலான சந்தில் ஒரு வீடு. அதுவும் மூன்றாவது மாடிக்கு மேலே உள்ள தட்டோட்டியில் ஒரு சின்ன இடம். அங்கே சுற்றிலும் புத்தகங்கள். பக்கத்தில் ஒரு சின்ன சந்து போன்ற வீட்டில் பழைய புத்தகங்களும் பத்திரிகைகளும். மழை வந்தால் தாங்காதே என்று கேட்டேன். கோணி போட்டு மூடி வைப்பேன் என்றார். எப்படி தினம் தினம் நாலு மாடி ஏர்றீங்க என்று கேட்டபோது, இந்த வாடகையே எனக்கு தர முடியலை என்றார்.

மதுரையில் நான் அவரைப் பார்த்தபோது அவருக்கு உடல்நிலையில் பல பிரச்சினைகள் இருந்தன. அந்த வருடப் புத்தகக் கண்காட்சிக்கு அவர் வந்திருக்கவில்லை. அதற்குப் பிறகும் வரவே இல்லை. அவரது வீட்டுக்கு நாங்கள் வந்திருப்பது கூட தெரியாமல் அவரது அம்மா துவைத்துக்கொண்டிருந்தார்.

மதுரை சரவணனை 2017 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஒரு பேட்டி எடுத்து அதை அப்போது யூ டியூபில் வெளியிட்டேன். இன்று தேடிப் பார்த்தால் அந்தப் பேட்டி நீக்கப்பட்டது என்று காண்பிக்கிறது.

மதுரை சரவணன் பல பதிப்பகங்களுக்கு உதவி செய்திருக்கிறார். பதிப்பகங்களும் இவருக்கு உதவி இருக்கின்றன. இன்றுதான் அறிந்தேன், மதுரை சரவணன் இரண்டு நாள்களுக்கு முன்னர் மரணம் அடைந்தார் என. நல்ல வாசகர் ஒருவரை நாம் இழந்திருக்கிறோம். சரவணன் ஆன்மா சத்கதி அடையட்டும். ஓம் ஷாந்தி.

Share

12th fail

12th Fail (H) – ஒரு நல்ல திரைப்படமும் நல்ல புத்தகமும் ஒரு வகையில் ஒன்றுதான். எப்போது அது நமக்கு நிகழ வேண்டும் என்றிருக்கிறதோ அப்போதே நிகழும். இந்தத் திரைப்படத்தைப் பல பல சமயங்களில் பலர் பார்க்கச் சொல்லியும் ஏதோ ஓர் உந்துதல் இன்றிப் பார்க்காமலேயே இருந்தேன். இன்று பார்த்தேன்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு மனதைக் கொள்ளை கொள்ளும் மிக அருமையான திரைப்படத்தைப் பார்த்த உணர்வை எப்படிச் சொல்ல என்று தெரியவில்லை. இது திரைப்படம் அல்ல, ஓர் அனுபவம். ஒவ்வொரு நடிகரும் எத்தனை இயல்பாக நடித்திருக்கிறார்கள். வாழ்க்கையை வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். அதுவும் இறுதிக் கட்டக் காட்சியில் கண்கலங்காதவர்களே இருக்க முடியாது.

ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்படும் திரைப்படம், இருப்பதிலேயே சவாலானது. ஆனால்‌ இதில் கலக்கிவிட்டார்கள்.

ஒரே ஒரு வருத்தம்தான். இந்த ஐபிஎஸ் அதிகாரி அரசுக்கும் சமூகத்திற்கும் மண்டியிடாமல் கடைசிவரை இதே நேர்மையுடன் இருக்க வேண்டுமே என்பதுதான். ஓர் உட்டோப்பியன் உலகமாக இருந்திருக்கும் சாத்தியக்கூறு வந்திருந்தாலும் கூட, இந்தத் திரைப்படத்தில் இது உண்மைக் கதை என்று சொல்லாமல் இருந்திருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன். அந்த அளவுக்கு இந்தக் கதாபாத்திரம் நேர்மையைத் தூக்கிப் பிடிக்கிறது. இயல்பான வாழ்க்கையில் அது அத்தனை எளிதானதல்ல. இந்தத் திரைக் கதாபாத்திரம் நிஜத்தில் தோற்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இது உண்மைக் கதை என்பதை காட்டாமல் இயக்குநர் தவிர்த்திருக்கலாம் என்று யோசிக்கும் அளவுக்கு இந்தப் படத்தில் ஒன்றி விட்டேன்.

பார்க்காதவர்கள் நிச்சயம் பார்த்து விடுங்கள். இந்தியத் திரை உலகம் பெருமை கொள்ளும் ஓர் அனுபவம் இந்த திரைப்படம்.

ஒவ்வொரு திரைப்படம் சில சமயம் மெதுவாகப் போகும். ஆனால் அப்படி மெதுவாகப் போகும் காட்சிகள் கூட ஒரு பரபரப்பை உருவாக்கினால் அதுவே அந்தத் திரைப்படத்தின் வெற்றி. இந்தத் திரைப்படம் அந்த வகையைச் சார்ந்தது. இறுதிக் காட்சியில் மெல்ல மெல்ல நகரும் விதமும், அந்த இசையும், அந்தப் பாடலும், கண்கலங்க நிற்கும் ஹீரோவும், ஃபோனில் பேசும் அம்மாவும், கட்டிப்பிடித்துக் கொண்டு கண்ணீர் விடும் நண்பர்களும் என உணர்ச்சிமயமான தருணம். மறக்க முடியாத தருணம்.

தமிழ்த் திரைப்படங்களுக்கும் இத்திரைப்படத்தில் ஒரு செய்தி உள்ளது. இந்தப் படமும் ஒரு வகையில் ஒதுக்கப்பட்டவர்களின் நசுக்கப்பட்டவர்களின் சார்பாகப் பேசும் திரைப்படம்தான். ஆனால் இந்தத் திரைப்படத்தில் எந்த ஒரு சமூகத்தின் மீதும் தனிப்பட்ட வன்மமோ கோபமோ வெளிப்படவில்லை. ஒட்டுமொத்தமான சமூகத்தின் மீதான கோபமும், அந்தச் சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்கிற சரியான நோக்கமும் மிகக் கச்சிதமாக வெளிப்படும்படி வடிவமைத்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் வரும் கதாபாத்திரத்திற்குரிய உண்மையான மனிதர் சம்பல் பள்ளத்தாக்கிலிருந்து வந்த ஒரு பிராமணர் என்று சொல்லப்பட்டாலும், திரைப்படத்தில் அவர் எந்த ஜாதி என்பதைக் காட்டவில்லை. மாறாக, மிகுந்த பின்தங்கிய ஒரு கிராமத்திலிருந்து வந்து ஆங்கிலம் தெரியாமல் போராடும் ஒரு மனிதன், இந்தச் சமூகத்தில் எந்த அளவு கஷ்டப்படுகிறான் என்பதை விரிவாகக் காட்டி இருக்கிறார்கள். அப்படிக் காட்டும்போது அந்த மனிதருடன் சேர்ந்து, வாழ்க்கையில் ஜெயிக்கப் போராடும் மற்ற மனிதர்களின் கதைகளைச் சொல்லும் பொழுது, எந்த ஒரு குரோதத்தையும் வெளிப்படுத்தாமல் சொல்லி இருக்கிறார்கள். வீம்புக்காக யோசிக்காமல் அன்புக்காக யோசிக்கும் இயக்குநரால் மட்டுமே இப்படி ஒரு திரை அனுபவத்தை வழங்க முடியும்.

Share

Nerungu varum idiyosai audio book

நெருங்கி வரும் இடியோசை நாவலின் ஒலி வடிவம். முழுமையாகக் கேட்பது எப்படி?

ஆராலிட்டி ஆப் அல்லது கூகிள் ஆடியோ ப்ளே புக் அல்லது ஸ்பாட்டிஃபை அல்லது ஸ்டோரி டெல்லில் கேட்கலாம்.

Share

Neesevin Verkkani Novel

நீஸெவின் வேர்க்கனி – மயிலை ஜி சின்னப்பன் எழுதிய சிறிய நாவல். தீவிரமான மொழி. எனக்கானதல்ல. ஒவ்வொரு பத்தியும் படித்து முடித்த போது என்ன சொல்ல வருகிறார் என்பதைத் தனித்தனியே யோசிக்க வேண்டி இருந்தது. கோணங்கியின் எழுத்தளவுக்கு வெறுமை கொண்டதல்ல என்பதையும் இங்கே சொல்லத்தான் வேண்டும். தீவிரமான வாசனுக்கானது என்றாலும் கூட, ஒட்டுமொத்த படைப்பைப் படித்து முடிக்கும் போது என்ன புரிந்து கொண்டோம் என்பதில் ஒரு சவால் இருக்கும் என்றால் அதை எப்படி எதிர்கொள்வது? எல்லோரும் எழுதிச்செல்லும் களம் என்றில்லாமல் புதிய களம் புதிய நிலம் என்பதெல்லாம் வசீகரமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதாவது முழுமையாகப் புரிந்தது என்றும் சொல்வதற்கில்லை. மொத்தமாகப் புரியவில்லை என்று நிராகரிக்கவும் இயலவில்லை. சிறிய நாவல் என்பதும் இரண்டு பக்கத்துக்கு உள்ளான சிறிய சிறிய அத்தியாயங்கள் என்பதும் மிகப் பெரிய மன நிறைவைத் தந்தன!

Share

Kishkindha Kaandam(M)

கிஷ்கிந்தா காண்டம் (M) – அட்டகாசமான திரைப்படம். ஒற்றை வரியில் சொல்லக்கூடிய கதையை வைத்துக்கொண்டு திரைக்கதையில் மாயாஜாலம் காட்டி விட்டார்கள். படம் எடுத்த விதமும் காட்டின் சூழலும் என்ன நடந்தது என்பதை நாம் கணித்து விடவே கூடாது என்பதில் இயக்குநர் காட்டியிருக்கும் அசாத்தியமான திறமையும் அட்டகாசம். ஆசிஃப் அலியின் நடிப்பு பிரமாதமோ பிரமாதம். மற்றவர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம். மலையாளத்தில் மட்டும் பார்க்கவும். தமிழில் பார்த்தால் நிச்சயம் பல்லிளித்து விடும்.

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் கிடைக்கிறது.

Share

Aangaaram Novel

ஆங்காரம் நாவல் கிண்டிலில் வாசித்தேன். ஏக்நாத் எழுதியது. கதை பல இடங்களில் அலை பாய்வதைக் குறைத்திருக்கலாம். நெல்லை‌ வழக்கும் களமும் ப்ளஸ். வாய்மொழிக் கதைகளுக்குப் பின்னே நாவலுடன் ஒரு தொடர்பு இருப்பது முக்கியம். இல்லையென்றால் அவை வெற்றுக் கதைகளாகவே எஞ்சும் அபாயம் உள்ளது. நாவல் முழுக்க வெளிப்படும் மண் சார்ந்த அனுபவத்துக்காக வாசிக்கலாம்.

Share

Yad Vashem Novel

யாத் வஷேம் – யாத் வஷேம் என்றால் நினைவிடம் என்று பொருள். வதைமுகாம்களில் ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் நினைவாக ஜெருசலத்தில் இஸ்ரேல் நிறுவி இருக்கும் நினைவிடம் இது. இதைப் பின்னணியாக வைத்து ஒரு நாவல் எழுத நினைத்ததே பெரிய விஷயம். நேமிசந்த்ரா வாழ்த்துக்குரியவர். கன்னட நாவல், தமிழில் கே.நல்லதம்பி சிறப்பாக மொழி பெயர்த்திருக்கிறார். கன்னடம் எனக்குப் படிக்கத் தெரியாது என்பதாலும், கன்னட ஆடியோ புத்தகம் கிடைக்கவில்லை என்பதாலும் சில இடங்களை ஒப்பிட முடியவில்லை என்றாலும், சிறப்பான மொழிபெயர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 350 பக்க நாவலை ஒரே நாளில் முடித்தேன். அந்த அளவுக்கு வேகம். எதிர் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

நாவலின் முதல் நூறு பக்கங்கள் மிக மிக அருமை. மானுட தரிசனம் என்று சொல்வார்களே, அப்படி ஒரு தரிசனம். இந்தியாவில் தஞ்சமாகும் யூதச் சிறுமியைத் தன் குடும்பப் பெண்ணாக்கிக் கொள்ளும் இந்திய ஹிந்து வொக்கலிகா குடும்பம் மனதைக் கொள்ளை கொண்டு விட்டது. இந்த நாவலின் அற்புதமான பக்கங்கள் இவை. அதிலும் கன்னடத்தில் எப்படி எழுதி இருப்பார்கள் என்கிற யூகத்துடன் வாசித்த எனக்கு மகத்தான அனுபவமாகவே அமைந்தது.

தன் குடும்பத்தைத் தேடி யூதப் பெண் தன் முதிய வயதில் தன் கணவனுடன் மேற்கொள்ளும் பயணமும், யூத வதைமுகாம்களைப் பார்ப்பதும், யூதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அது வரை நினைத்து வருந்தும் பெண், ஒட்டுமொத்த உலகின் அடக்குமுறைகளுக்கு எதிராக நினைக்கத் தொடங்குவதும் அடுத்து வருகின்றன.

இறுதியில் தன் அக்காவைச் சந்திக்கும் கதாநாயகியின் குடும்பம் எதிர்கொண்ட அராஜகங்கள் விவரிக்கப்படுகின்றன. எல்லா யூதக் குடும்பத்திற்கான ஒட்டுமொத்த சித்திரமும் அதுவே.

அடுத்த ஐம்பது பக்கம் – என் பார்வையில் திருஷ்டிப் பொட்டு என்றே சொல்லவேண்டும்.

அதுவரை நாவல் யூதர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்காகப் பரிதவிப்புடன் நாவல் பேசுகிறது. இந்தியா அந்த யூதப் பெண்ணை எப்படி அரவணைத்தது என்று சிலாகிக்கிறது. இந்தியா பல்வேறு மோழி மத இன வேறுபாடுகளுடன் இருந்தாலும், அதன் அரவணைப்பில் எந்தக் குறையும் இல்லை என்று கொண்டாடுகிறது. தன் அக்காவைக் கண்டதும் அதுவரை இருந்த நினைவுகள் தர்க்கமாக மாற, மத ரீதியான ஒட்டுமொத்த கொடுமைகளுக்காக அந்தக் கதாபாத்திரம் பேச ஆரம்பிக்கிறது., எழுத்தாளர் நேமிசந்த்ராவின் ஒட்டுமொத்த மத விடுதலையை ஒட்டிய தர்க்கம் இது என்று கொண்டாலும், என்னளவில் அது நம்ம ஊர் செக்யூலர் ஜல்லியாகவே தெரிந்தது.

எந்த ஒரு மதமும் வன்முறையைப் போதிக்கவில்லை என்பது வரை சரி, ஆனால் யூத மண்ணில் யூதர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு நின்ற மனிதர்களை அதுவரை கடுமையாகப் பேசிய நாவல், அதிலிருந்து அவர்கள் பக்க நியாயத்தையோ அல்லது இரக்கத்தையோ பேச ஆரம்பிப்பது ஏற்கும்படியாகவே இல்லை. எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் ஹிட்லர் வரக் கூடும் என்கிற தியரியை, ரத்தமும் சதையுமாக வேதனையை உணர்ந்தவர்களிடம் பேசுவதெல்லாம் அபத்தம். யதார்த்த கொடூரங்களில் இருந்து தான் மேலெழுந்துவிட்டதான பாவனை என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை என்றே எனக்குப் பட்டது. இந்தப் பாவனை கதாநாயகியுடையதாகவும் இருக்கலாம், நேமிசந்த்ராவினுடையதாகவும் இருக்கலாம்.

போக போக தர்க்கங்கள் எல்லை மீறிப் போகின்றன. இது நாவலா தர்க்கமா என்ற குழப்பம் ஏற்படும் அளவுக்கு. அதிலும் கடைசி இரு அத்தியாயங்களில் தன் வீட்டுக்கு வரும் முஸ்லிம் பெண்ணுக்கு அடைக்கலம் தருவதெல்லாம் தவறில்லை, ஆனால் சுத்த முற்போக்கு அபத்த நாடகம்.

இந்த நாவலை எப்படி எழுதினேன் என்று நேமிசந்த்ரா கடைசி இருபது பக்கங்களில் எழுதி இருக்கிறார். நான் நாவலை வாசிக்கும்போது என்னவெல்லாம் நினைத்தேனோ அதற்கு ஏற்றாற்போன்ற காரணங்களை அதில் பார்க்க முடிந்தது. நாவலின் கடைசி அத்தியாத்தைத் திருத்தி எழுதியதாகச் சொல்லி இருக்கிறார். இன்றைய செக்யூலர் அரசியல் சரி நிலைக்கு ஏற்ப நாவலை மாற்றி எழுதியது போல் எனக்குத் தோன்றியது. நாவலின் முதல் இருநூறு பக்கங்களில் நாவலில் இருந்த நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வழக்கமான ஒரு நீதியைச் சொல்லும் இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டது துரதிர்ஷ்டம்.

முக்கியமான நாவல். நிச்சயம் வாசிக்கவேண்டிய நாவல். யூதர்களின் வாழ்க்கையும் இந்தியர்களின் வாழ்க்கையும் ஒப்பிடப்பட்டு இத்தனை விரிவாக எந்த நாவலிலும் இதுவரை விவாதிக்கப்பட்டதில்லை என்றே நினைக்கிறேன்.

Share

Two movies

Adiyos Amigo (M) – பேசி பேசியே சாவடித்துவிட்டார்கள். சூரஜ் வெஞ்சரமூடுவின் ஒரே போன்ற முகபாவமும் நடிப்பும் எரிச்சலூட்டுகின்றன. ஆசிஃப் அலி உயிரைக் கொடுத்து நடித்தாலும் எவ்வளவு நேரம் ஒரே காட்சியை, நகராத திரைக்கதையை மீண்டும் மீண்டும் காண்பது? அலவலாதித்தனத்தைச் சகித்துக் கொள்வதற்கும் ஓர் அளவில்லையா! சாலையைச் சலிக்க சலிக்க காட்டுவதைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லை. எப்படி இதைச் சிலர் புகழ்ந்தார்கள் என்பது ஆச்சரியமே.

படம் நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது.

லப்பர் பந்து – சமீபத்தில் தமிழில் வந்த திரைப்படங்களில் அபாரமான திரைக்கதை கொண்ட சிறந்த கமர்சியல் படம் இதுவே. பெரிய இயக்குநர்களின் படங்களுக்குரிய கச்சிதம் இதில் இல்லை என்றாலும், அந்த இயக்குநர்களின் ஆரம்பப் படங்களில் இருக்கும் அந்த rawness இந்தப் படத்தில் இருப்பது பெரிய ப்ளஸ். பின்னால் இந்த rawnessஐ இந்த இயக்குநர் தவற விடாமல் இருக்க வேண்டும். படத்தில் மாமியார் மருமகள் உருகும் காட்சி கொஞ்சம் இழுவை. அதை மட்டும் விட்டு விட்டால் மற்ற அனைத்துக் காட்சிகளும் பக்காவான திரைக்கதையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாதான் கிரிக்கெட்டில் தனக்குப் போட்டி என்பது அவனுக்குத் தெரியாதா என்ற கேள்வியை மறக்க வைக்கிறது பரபரப்பான திரைக்கதை. 80களின் இசை பின்னணியில் வந்தால் அந்தப் படம் எந்த அளவுக்கு நம்மை கவர்ந்திழுக்கும் என்பதற்கு இந்தப் படம் இன்னும் ஒரு உதாரணம்.

Share