Archive for வீடியோ

Ramadass Anubumani clash

ராமதாஸ் அன்புமணி மோதல்.

யார் கைக்குச் செல்லும் பாமக?

விவாதம்.

Share

Ancient Indians Youtube Video

This video is worth watching. It explains clearly how people migrated to India from Africa and then from other parts step by step, instead of Aryans invading suddenly.

It also shows how North India and South India became different in DNA mixing over time because of these slow migrations in different shades.

One important point is about caste:

From around 100 BCE, people from different castes stopped intermarrying (marrying between different groups), and this eventually stopped DNA mixing.

DNA of women did not mix as much. This means men from one group migrated here without women and often married women here.

Share

Thug Life Tamil Movie Review

தக் லைஃப்

படத்தின் ப்ளஸ் – இடைவேளை வரை பார்க்கும்படியாக இருக்கிறது. சிம்புவுக்கும் கமலுக்குமான பல காட்சிகள் அருமை.

இடைவேளை ப்ளாக் – யூகிக்க முடியக்கூடியது என்றாலும் அருமை.

பின்னணி இசையும் கேமராவும் துல்லியமான ஒலியும் அட்டகாசம்.

பின்னர் ஆரம்பிக்கிறது சனி. இடைவேளைக்குப் பிறகு படம் நகரவே இல்லை. அப்படியே உட்கார்ந்துகொண்டு விட்டது. ஒரே பழி வாங்கும் படலம் மட்டுமே.

கமலின் வயதான ரொமான்ஸ் பார்க்க சகிக்கவில்லை, சில காட்சிகளே வந்தாலும்.

காயல்பட்டின திருநெல்வேலி வட்டார வழக்கு – கமல் இதை தயவுசெய்து விட்டுவிடவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

சிம்பு வெர்சஸ் கமல் என்று அட்டகாசமாக உருவாக்கிவிட்டு, அதிலும் குறிப்பாக திரிஷாவை மையப்படுத்தி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு அதை அம்போவென்று விட்டுவிட்டார்கள்.

தேவையற்ற டிஸ்டிராக்‌ஷன்ஸ் பல. போலிஸுக்கும் அவன் மனைவிக்கும் டைவர்ஸ் என்று காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன? இப்படிப் பல.

பல நல்ல நடிகர்கள் வீண். ஜோர்ஜ் பாவம் சும்மா விடாது.

கமலுக்கு வயதாகிவிட்டது. உயிரைக் கொடுத்து நடிக்கிறார், ஆனால் ஒட்டவில்லை. பலவீனமான கதை, சொதப்பலான திரைக்கதையே காரணம்.

வயதான கமல் போதிதருமர் போல இருக்கிறார்.

பௌத்த கோவில் தற்காப்புக் கலை என்றதும் இங்கயுமா என்று ஜெர்க்கானது. அதேதான். மணிரத்னம் ஷங்கர்2வாகி மீண்டும் இந்தியன் 2 வைப் பார்ப்பது போலத் தோன்றிவிட்டது.

மணிரத்னம் போன்ற பொறுப்பான இயக்குநரின் படம் போலவே இல்லை. செக்கச்சிவந்த வானம் கலரில் இருந்து மணிரத்னம் இன்னும் வெளிவரவே இல்லை. அதே கேங்க் வார் எரிச்சல்தான் இதிலும்.

அதிலும் எந்த இடத்திலும் ஹீரோ வருவான், எப்படியும் பிழைப்பான் என்பதெல்லாம் தாங்க முடியவில்லை. முன்பெல்லாம் ரஜினியை கிண்டல் செய்வார்கள். மணிரத்னம் இருந்தும் பழைய ரஜினி படங்களைவிட மோசமான காட்சிகள் இதில்.

சக்திவேல் ராயப்பன் என்ன இண்டர்நேஷனல் டானா? நினைத்தால் விமானம், ஹெலிகாப்டர்! அவர் ஏன் நேபாள் போகிறார் என்பதே புரியவில்லை.

நாஸரைக் கொல்லும் காட்சியில் வசனம் அருமை. அதேபோல் வால்பேப்பரில் நாசரின் முகம் நல்ல யோசனை. ஆனால் யோசித்துப் பார்த்தால், அது தவறான காட்சி. அதை எப்படி ஒருவன் வைத்திருப்பான்?

அரதப்பழசான கதை. அதில் கூட பிரச்சினையில்லை. ஆனால் திரைக்கதை படு திராபை. அதிலும் க்ளைமாக்ஸ் பாசமலர் ரேஞ்ச்.

தியேட்டரில் பார்க்க காரணங்கள் – கேமரா, பின்னணி இசை, துல்லியமான ஒலி, முக்கியமாக சிம்பு. படத்தின் ஒரே ப்ளஸ் சிம்பு மட்டுமே.

பின்குறிப்பு: முத்தமழை எந்த வெர்ஷன்னா சண்டை போடறீங்கன்னு எந்த வெர்ஷனையும் இப்படத்தில் வைக்கவில்லை மணிரத்னம்!

இன்னொரு விஷயம். கமல் மனைவி மனைவி என்று உருகுவாராம். ஆனால் இன்னொரு செட்டப்பையும் வைத்திருப்பாராம். மனைவி அதை சாதாரண பொறாமையோடு பேசிவிட்டு, கணவனுடன் சந்தோஷமாக வாழ்வாராம். அதில் ஒரு டயலாக் வேறு, சிலருக்கு BP, சுகர் வர்ற மாதிரி எனக்கு இது என்று! ம்எதையெல்லாம் நார்மலைஸ் செய்வது என்று விவஸ்தை இல்லையா? அதிலும் மணிரத்னம் படத்தில்.

Share

President of India Vs Supreme court – A discussion

Share

எஸ்ரா உரை – தி ஹிந்து லிட் ஃபார் லைஃப்

எஸ்.ராமகிருஷ்ணன் உரை – தி ஹிந்துவின் லிட் ஃபார் லைஃப் நிகழ்ச்சியில் பேசியதைக் கேட்டேன். எஸ்ரா ஒட்டுமொத்த பங்களிப்பைப் பற்றிய பேச்சில் வல்லவர். அவரது நினைவாற்றலும் பரந்த வாசிப்பும் அவற்றைப் பொருத்தமாகவும் கச்சிதமாகவும் வெளிப்படுத்துவதிலும் வல்லவர். எடுத்துக்கொண்ட தலைப்பில் இருந்து பெரும்பாலும் விலகாதவர். இப்பேச்சும் அப்படியே.
 
தமிழ்ச் சிறுகதைகளின் உன்னதத்தைப் பற்றியும் அச்சிறுகதைகளின் பரந்து பட்ட களம் பற்றியும் தெளிவாகப் பேசினார். கதையில் முதல் வரியிலேயே கதை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற பிரபலமான சிறுகதை விதி என்று நம்பப்படுவதை அறவே மறுத்தார். இக்கருத்து பிரஞ்சுக் கதைகளின் வழியே நம்மை வந்தடைந்தது என்றும், ரஷ்ய சிறுகதைகள் இப்படியானதொரு வரைவைக் கொண்டிருக்கவில்லை என்றும் சொன்னார். உலக, இந்தியச் சிறுகதைகளிலும் தமிழ்ச் சிறுகதைகளே பரந்துபட்டவை என்றும், அவற்றிலும் இன்னும் பரவலாக எழுதப்படாத களங்கள் உள்ளன என்று சொல்லி அவற்றில் ஒன்றிரண்டைக் குறிப்பிட்டுக் காட்டினார்.
 
ஆயிரம் சிறுகதைகளுக்கு மேல் வாசித்திருக்கிறார் என்பது பெரியதல்ல. அவற்றை நினைவில் வைத்திருக்கிறார் எஸ்ரா என்பது ஆச்சரியமளிக்கிறது. ஒரு கதையின் பெயரைச் சொன்ன உடனேயே, அது முக்கியமான கதையாக இருந்தால், அவற்றை அப்படியே விவரிக்கும் திறமையும் நினைவாற்றலும் எஸ்ராவுக்கு உள்ளது. எனக்குள்ள பிரச்சினை, ஒரு கதை ஒரு காப்ஸ்யூலாகி எனக்குள் உறைந்துவிடும் என்பதுதான். அதை ஒரு உருவகமாகவும் ஒரு வரியாகவும் ஒரு கதையாகவும் மட்டுமே மீண்டும் என்னால் நினைவுக்குக் கொண்டு வரமுடியும். நான் எழுதிய கதைகள் உட்பட! ஆனால் எஸ்ராவுக்கு எல்லாமே நினைவுக்கு வருகிறது. இந்த நினைவாற்றல் மிக முக்கியமானது. ஒரு வழியான பயிற்சியும் கூட இது.
 
நினைவுக்கு வந்த சிறுகதையாளர்களின் பட்டியலை வாசித்தார். பெரும்பாலானவர்களை நானும் வாசித்திருக்கிறேன். இன்னும் வாசிக்கவேண்டியவை ஏகப்பட்டவை உள்ளன என்னும் எண்ணம் சோர்வையும் நம்பிக்கையையும் ஒருசேர அளித்தது.
 
கடைசியில் ஒரு கதையைச் சொன்னார் எஸ்ரா. (ரஷ்ய கதை என நினைக்கிறேன்.) அந்தக் கதையின் சர்வாதிகார ராணுவ அதிகாரி, எழுத்தாளர்களைத் தடை செய்ய முகாந்திரம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மனம் மாறுகிறார் – இலக்கியத்தை வாசித்து. இங்கேதான் நான் குழம்பிப் போன இடம். அல்லது என்னைக் குழப்பிக்கொண்ட இடம். இலக்கியத்துக்கென வாழ்வில் நிச்சயம் ஒரு இடம் உள்ளது என்பதை நம்புகிறேன். இலக்கியம் ஒருவனைத் தீவிரமாக்குகிறது என்பதாக மட்டுமே என் நம்பிக்கை இத்தனை காலங்களில் வந்து சேர்ந்திருக்கிறது. நல்லவனை மிகத் தீவிரமான நல்லவனாக, இலக்கிய ரீதியிலான ஆழ்மன தர்க்கங்களுடன் நல்லவனாக ஆக்குகிறது. கெட்டவனையும் அப்படியே. சூதுவாது கொண்டவர்களையும் அப்படியே. இலக்கியம் இவர்கள் எல்லாவருக்குமான இடத்தையும் தர்க்கங்களின் வழியே அமைத்துக் கொடுக்கிறது.
 
அப்படியானால் இலக்கியம் ஒருவனை நல்லவனாக்குவதில்லையா என்றால், என் பதில் – முன்பெல்லாம் திரையரங்குகளில் ‘மேற்படி’ படங்கள் திரையிடப்படும். அதில் இடைவேளைக்குப் பிறகு இருபது நிமிடங்கள் கழித்து, அறிவியல் ரீதியான உண்மைகளைச் சொல்லத் துவங்குவார்கள். இப்படங்களைப் பார்த்து ஒருவர் அறிவியல் ரீதீயான உண்மைகளைத் தெரிந்துகொள்ள முடியும் என்பது தர்க்க ரீதியாகச் சரிதான். இதே தர்க்க ரீதியாக மட்டுமே இலக்கியம் ஒருவனை நல்லவனாக மாற்றமுடியும். என்னைப் பொருத்தவரை இலக்கியம் ஒருவனை தீவிரமாக சிந்திக்கச் செய்கிறது என்பதை மட்டும் ஏற்கிறேன். மற்றபடி அதன் விளைவு அந்தத் தனிமனிதனின் இயல்பு தொடர்பானதே. அவனுக்குள் இருக்கும் அந்த நல்லவனில் இலக்கியம் உரசினால் அதன் விளைவு நல்லதாக இருக்கும்.
 
இப்படிச் சொல்வதால் நான் இலக்கியத்தை நம்பவில்லை என்பதல்ல. நிச்சயம் நம்புகிறேன். எனக்கான ஒரே திறப்பு அதுதான் என்றும் உறுதியாக நம்புகிறேன். நிபந்தனைக்குட்பட்டு. இதனால் என்னை நம்பிக்கையின்மைவாதி எனலாம். அதுவும் உண்மைதான்.
 
அப்படியானால் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்துக்கும் வாழ்வில் என்ன பங்களிப்பு என யோசித்தேன். அவை சிறுவயது முதலே வாழ்க்கையில் நமக்கு ஊட்டப்படுகின்றன. அவையே நம் வாழ்வின் பற்றுக்கோல்கள் என்ற அளவிற்கோ, மாதிரி என்ற அளவுக்கோ சொல்லப்படுகின்றன. அவற்றைக் கேட்டவர்களும் இன்று வாழ்வில் அதன்படி உள்ளவர்களுக்குமான வேறுபாட்டைப் பார்த்தாலும் நான் சொல்வது பொருந்தித்தான் போகிறது. அதேசமயம் இதிகாசங்களால் வாழ்க்கையில் ஒரு முடிவை எடுத்து வாழ்பவர்களை நம் மரபும் கலாசாரமுமே அப்படி நடக்க வைக்கிறது என்று நம்புகிறேன். இந்த அட்வாண்டேஜ் நவீன இலக்கியங்களுக்கு இன்று இல்லை.
 
நேரம் கருதி எஸ்ரா சுருக்கமாகப் பேசி இருக்கிறார் என நினைக்கிறேன். இது தொடர்பாக எஸ்ரா நீண்ட உரை ஒன்றை விரிவாகப் பேசலாம். அது பெரிய ஆவணமாக இருக்கும்.
 
உரையைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=6huZMOzZGhE
Share

ஒரு நேர்காணல், ஒரு பேச்சு

ஒரு நேர்காணல், ஒரு பேச்சு

* நிர்மலா சீதாராமன் – கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் ரங்கராஜ் பாண்டேவின் கேள்விகளை எதிர்கொண்ட விதம் மிக நன்றாக இருந்தது. எல்லாக் கேள்விகளுக்கும் முடிந்த அளவு தமிழில் பதில் சொன்னார். அவரது தமிழ் கொஞ்சம் தடுமாற்றத்துடன் இருந்தாலும், கருத்துகள் சரியாகச் சென்று சேர்வதில் எக்குழப்பமும் இருக்கவில்லை. மிகத் தீர்க்கமாகவே பதில் சொன்னார். பாண்டே குறுக்கே குறுக்கே கேட்கும்போதெல்லாம் பாண்டேவைக் கண்டிக்கத் தவறவில்லை. ‘நீங்க ஒவ்வொண்ணா சொல்லிக்கிட்டே இருப்பீங்க, அதுக்கு ஆம்/இல்லைனு பதில் சொல்லிக்கிட்டே இருக்கணுமா?’ என்ற பதிலில் பாண்டேவே கொஞ்சம் அடக்கித்தான் வாசித்தார் என்று தோன்றியது. சில கேள்விகளுக்கு, பாண்டேவைக் குறை சொல்லும் விதமாக பதில் சொன்னார் நிர்மலா சீதாராமன். ராகுலின் டிவீட் மற்றும் ஓபிஎஸ்ஸின் மோதி பற்றிய கருத்து இரண்டையும் பாண்டே கோட் செய்ததை நிர்மலா சீதாராமன் புரிந்துகொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் பாண்டேவையே குறை சொன்னார். ஒரு கட்டத்தில் பாண்டே அப்படியே அதை விட்டுவிட்டார். கேள்வி கேட்கும் ஊடகத்தினரை இப்படி ஒரு கட்டத்துக்குள் இருக்கச் செய்வது தேவைதான் என்றாலும், பாண்டேவுக்கும் இது நிகழ்வது கொஞ்சம் பாவமாகத்தான் உள்ளது. ஏனென்றால், ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் என எல்லாரையும் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் கேள்வி கேட்பது பாண்டே மட்டுமே. மற்ற ஊடகத்தினர் ஹிந்துத்துவர்களுக்கு எதிராக மட்டுமே பொங்குவார்கள். ஆனால் அவர்கள் பட்டியலில் பாண்டேவையும் நினைத்துக்கொண்டுவிட்டார் நிர்மலா சீதாராமன் என நினைக்கிறேன். இதை மட்டும் நிர்மலா சீதாராமன் தவிர்த்திருந்திருக்கலாம்.

நிர்மலா சீதாராமன் எல்லாப் பேட்டிகளிலுமே மிகக் கறாராகப் பேசுகிறார். உள்ளத்தில் உண்மை இல்லாமல் போனால் அது வெற்று அகங்காரமாக ஆகிவிடும். நூலிழையில் நடமாடு வித்தை இது. ஆனால் நிர்மலா சீதாராமன் பேசும்போது அது தன்னம்பிக்கையின், தன் நேர்மையின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது. இந்தப் பேட்டியிலும் அப்படியே. எந்தக் கேள்விக்கும் தயங்கவோ தத்தளிக்கவோ இல்லை. தமிழ்நாட்டின் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக வருவார் என நினைத்தேன். ஆனால் அந்தப் பேச்சு கொஞ்சம் தீவிரமடையும் நேரத்தில் சட்டென சுதாரித்துக்கொண்ட மோதி அவரை பாதுகாப்பு அமைச்சராக்கிவிட்டார்! நிர்மலா சீதாராமன் இன்னும் உயரத்தைத் தொடுவார் என நினைக்கிறேன். பார்க்கலாம்.

* புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமியின் பேச்சு, பூணூல் அறுப்புக்கு எதிராக மயிலாப்பூரில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசியது. திராவிடக் கட்சிகளின், திராவிடக் கொள்கையின் தோல்விகளைப் பற்றியும், பூணூல் அறுப்பு என்பது தரும் வலியை ஒத்த வேதனையை புதிய தமிழகம் கட்சி பல பத்தாண்டுகளாக அனுபவித்து வருகிறது என்பதால் இதைப் புரிந்துகொள்ளமுடிகிறது என்பது பற்றியும் பேசினார். அவரது தனிப்பட்ட வாழ்வில் பிராமணர்கள் செய்த உதவிகளைப் பட்டியலிட்டார். ஒரு சமூகமாக பிராமணர்கள் செய்ததைவிட பிற சமூகங்களே தலித்துகளுக்கு அதிகம் பிரச்சினைகளைச் செய்திருக்கிறார்கள் என்றும், ஆனால் திராவிடக் கட்சிகள் அச்சமூகங்களைப் பற்றிப் பேசுவதில்லை என்றும் சொன்னார்.

இவையெல்லாம் காலம்காலமாகச் சொல்லப்படுபவைதான். திராவிடத் தரப்பு இதை எளிமையாக எதிர்கொள்ளும் என்பது எனக்குத் தெரியும். கிருஷ்ணசாமி எத்தனை தூரம் நம்பகத்தனைக்கு உரியவர் என்பது இன்னொரு விஷயம். ஆனால், இவற்றையெல்லாம் மீறி இச்சூழ்நிலையில் கிருஷ்ணசாமி பேசி இருப்பது மிகப்பெரிய விஷயம். நிச்சயம் பாராட்டப்படவேண்டியது இது. பூணூல் அறுப்புக்கு ஹிந்துத்துவ இயக்கங்கள் தெருவுக்கு வந்து போராடியிருக்கவேண்டும். பெரிய அளவில் அதை எதிர்த்திருக்கவேண்டும். ஆனால் அது எங்கே பிராமண ஆதரவுக்கட்சி என்ற முத்திரைக்கு மீண்டும் கொண்டு போய்விடுமோ என்று அஞ்சினார்களோ என்னவோ, கண்டித்ததோடு நிறுத்திக்கொண்டார்கள். அந்நிலையில் கிருஷ்ணசாமி இத்தனை தூரம் எதிர்த்திருப்பது மிக முக்கியமானது. மற்ற கட்சிகளெல்லாம் வாய்மூடிக் கிடக்கையில் இவர் மட்டுமே இதனை நியாயமாக எதிர்கொண்டிருக்கிறார். பெரிய விஷயம் இது. கிருஷ்ணசாமியின் பேச்சு சுமாரானதுதான் என்றாலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவருக்கு நன்றி.

Share

Hidden camera!

நாம் இழந்தவை பல. குழந்தையாக இருந்தபோது செய்த பலவற்றை இப்போது நம்மால் செய்யவே முடியாது. அதில் இதுவும் ஒன்று. நேற்று அபிராம் படுக்கையில் படுத்துக்கொண்டு அவனே பேசிக்கொண்டு அவனே விளையாடிக் கொண்டிருக்கிறான். சிறு வயதில் நானும் இப்படி தனியாகப் பேசியதுண்டு. ஒரு கட்டத்தில் அது மிகவும் தீவிரமாகிவிட்டது. என்ன இப்படி பேசிக்கொள்கிறோம் என்று நானே சிரித்துக்கொண்டதுண்டு. சில நண்பர்கள் என்னை ‘தானாப் பொலம்பூனி’ என்று அழைத்திருக்கிறார்கள்.

இன்றும் இதன் சாயலை என்னிடம் காணலாம். பல சமயங்களில் அபிராமும் என் மனைவியும் ‘என்ன தனியா நீங்களே பேசிக்கிறீங்க’ என்று கேட்டிருக்கிறார்கள். 

அபிராம் நேற்று இப்படி பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. நான் வாலிபப் பருவத்தில் நிறைய புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தபோது இதேபோல பல தடவை பாலகுமாரனிடம் பேசியிருக்கிறேன்! இளையராஜாவுடன் பேசாத நாளே இல்லை, இன்றும். அதன் தீவிரம் இன்று மட்டுப்பட்டுவிட்டாலும், இப்படி அபிராமும் செய்வதைப் பார்க்கும்போது ஏனோ மகிழ்ச்சியாக இருந்தது. குழந்தைமை ஒரு வரம்.

Share

நான் பங்கேற்ற கிழக்கு பாட்காஸ்ட்கள்

எனக்கு ஒரு வலைத்தளம் இருப்பதே மறந்துவிட்டது! இந்தப் பதிவை எழுதி ஒரு மாதம் ஆகிறது. சில டெக்னிகல் பிரச்சினை காரணமாக வலையேற்ற இயலவில்லை. இப்போதும் ஒழுங்காக வலையேறுமா எனத் தெரியவில்லை. இருந்தாலும் வலையேற்றி வைக்கிறேன்.

நானும் பத்ரியும் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சில புத்தகங்கள் குறித்துப் பேசினோம். அந்த கிழக்கு பாட்காஸ்ட்டுகளைக் கீழே தந்துள்ளேன். அதனைப் பார்த்துவிட்டுத் தங்கள் பொன்னான கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். :> கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் காஷ்மீர் முதல் யுத்தம் என்ற புத்தகம். இதனை எழுதியிருப்பர் ஆண்ட்ரூ வொயிட்ஹெட். தமிழில் நண்பர் பி.ஆர். மகாதேவன் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்பேப்பரில் சில பல கட்டுரைகளை திடீரென்று போட்டுத் தாக்கும் நண்பர் இவர். ஒரு படத்தைப் பார்த்தால் அந்தத் திரைக்கதையை எப்படியாவது மாற்றி எழுதிவிடுவது இவரது பொழுதுபோக்குகளில் ஒன்று. இவரது வலைப்பதிவு: http://mahadevanbr.blogspot.com/ இதனைப் பொறுத்துக்கொள்ள முடிந்தால், நல்ல நண்பரே! இவரது மொழிபெயர்ப்பு மிக நன்றாக மெருகேறியிருக்கிறது. ஆங்கிலத்தில் உள்ள மூல நூலோடு ஒப்பிட்டு இதனை நான் சொல்லவில்லை. நான் சொல்வது, நேரடியாக தமிழ் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது எவ்விதத் தடங்கலும் இல்லாமல் படிக்க முடிகிறது என்பதையே. இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த, கிழக்கு வெளியிட்ட ராஜன்பிள்ளையின் கதை புத்தகமும் எனக்குப் பிடித்த ஒன்று. வெற்றி பெற்ற ஒரு தொழிலதிபதிரின் கதையைப் படிப்பதைவிட, தோல்வியடைந்த ராஜன்பிள்ளையின் கதையைப் படிப்பதில் ஏதோ ஒரு நெருக்கத்தை என்னால் உணரமுடிந்தது. இலக்கியம் தந்த சோகமாக இருக்கலாம்! கேப்டன் கோபிநாத்தின் வானமே எல்லை புத்தகத்தை மொழிபெயர்த்ததும் இதே மகாதேவனே! கேப்டன் கோபிநாத் புத்தகம் பற்றி பிறிதொரு சமயத்தில் பேசுவோம். காஷ்மீர் முதல் யுத்தம் பாட்காஸ்ட்டைப் பாருங்கள். 

 

அடுத்த பாட்காஸ்ட் – அண்ணா ஹசாரே – ஊழலுக்கெதிரான காந்தியப் போராட்டம் புத்தகம் குறித்து. ஜெயமோகன் எழுதிய புத்தகம். நான் ஏற்கெனவே இப்புத்தகம் பற்றிய என் பார்வையைப் பதிந்திருக்கிறேன். இந்த பாட்காஸ்ட்டிலும் கிட்டத்தட்ட அதை ஒட்டியே பேசியிருக்கிறேன்.

 

 

அடுத்த பாட்காஸ்ட்கள் – இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு என்னும் நூலைப் பற்றியது. இந்த நூல் இரண்டு பாகங்கள் கொண்டது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் பி.ஆர். சாரதி. இவர் நம் பா.ராகவனின் தந்தை. இந்நூல் கடந்த பத்து ஆண்டுகளில் வந்த தமிழ் நூல்களில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என்று நான் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். குஹா அடிப்படையில் ஒரு மார்க்ஸியர். எனவே ஹிந்துத்துவ வலதுசாரிகளின் அரசியல் மீது இவருக்குக் கோபமே இருக்கும். அதனை இப்புத்தகத்திலும் காணலாம். இதனை ஒட்டியேதான் நான் பேசியிருக்கிறேன். இதனால் இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் எதுவும் குறைந்துவிடவில்லை. மற்றவற்றைப் பாட்காஸ்ட்களில் பார்க்கவும்.

 

 

 

 

இனி வரும் பாட்காஸ்ட்டுகளைப் பகிர்ந்துகொள்கிறேன். கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களின் புகழ்பாடும் விதமாக இந்த பாட்காஸ்ட்கள் உள்ளன என்று குற்றம் சொல்லாதீர்கள். எங்கள் நோக்கமே அதுதான். எனவே திறந்த மனத்துடன் இதனை அணுகவும். வழக்கம்போல நன்றி.

Share