Archive for புத்தகப் பார்வை

பாரதியார் கவிதைகள் (விளக்க உரையுடன்)

பாரதியார் கவிதைகள் உரையுடன் வெளிவந்திருக்கிறது. பாரதியார் கவிதைகளுக்கெல்லாம் உரையா என்று ஒரு காலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் நிச்சயம் உரை வேண்டும் என்பதுதான் என் எண்ணம். இப்போது முதன்முறையாக ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது. கற்பகம் புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது. கவிஞர் பத்மதேவன் உரை எழுதியிருக்கிறார்.

சமீபத்தில் கண்ட அட்டகாசமான புத்தகம் இது. தவறாமல் வாங்கிவிடுங்கள். நிச்சயம் நம் வீட்டில் இருக்கவேண்டிய பொக்கிஷம் இந்தப் புத்தகம். உரை தெளிவாக புரியும்படியாக அழகான தமிழில் உள்ளது. பாரதியின் தீவிர அன்பர்கள் இப்புத்தகத்தைப் படித்தால் சில வரலாற்றுத் தரவுகளைச் சொல்லக்கூடும். அவையும் சேர்க்கப்படுவது நல்லது.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு மாணவன் கையிலும் இந்தப் புத்தகம் இருப்பது அவசியம். நம் ஒவ்வொரு கையிலும் இந்தப் புத்தகம் இருப்பது தேவை. 

புத்தகத்தின் அச்சு, அட்டை நேர்த்தி எல்லாம் கூடி மிக அழகாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது இப்புத்தகம். 

விலை ரூ 750 (1096 பக்கங்கள்)

இப்புத்தகத்தின் விற்பனையைப் பொருத்தே மறுபதிப்பெல்லாம் வரும் என நினைக்கிறேன். கிடைக்கும்போதே வாங்கிப் பத்திரப்பத்தி வைத்துக்கொள்ளுங்கள். 

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0002-364-7.html

போன் மூலம் வாங்க: Dial for books 94459 01234

Share

பாலகுமாரனை நினைத்து

நவம்பர் அந்திமழை மாத இதழ் தொடர்கதை சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. (கமல் 60 சிறப்பிதழும்கூட!) அதில் மெர்க்குரிப்பூக்களை முன்வைத்து நான் எழுதிய கட்டுரை ஒன்றும் வந்துள்ளது. ஓர் இதழின் விலை 20 ரூபாய் மட்டுமே. வாங்கிப் படித்துவிட்டுக் கருத்துச் சொல்லவும்.

நீண்ட நாள் கழித்து பாலகுமாரனின் ஒரு நாவலை வாசித்தபோது, மனத்தில் பல்வேறு பழம்நினைவுகள் என்னை அலைக்கழித்தன. அன்று பாலகுமாரனே எழுத்தின் எல்லை என்று நினைத்த நிமிடங்கள் இன்று அப்படி இல்லை என்றாகிப்போன மாற்றமே அதன் முக்கியப் புள்ளியாக இருந்தது. அதை ஒட்டி எழுந்த எண்ணங்களில் சிதறல்களை எழுதி வைத்தேன். அவை:

பாலகுமாரனின் பிரச்சினைகள் – எதையும் அதன் ஆழத்துக்குள் சென்று பரிசீலனைக்குட்படுத்தாதது. எல்லா ஆண் பெண் உறவுகளிலும் ஒரு செக்ஸ் எலிமெண்ட் எப்படியாவது இருந்துவிடுவது. அதிலிருந்து வெளிவர பெண்ணை தெய்வமாக்க முயல்வது. பெண்கள் ஆண்கள் என எல்லோரும் தத்துவார்த்தப் பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்வது. மெல்ல எப்படியாவது ஜாதிய சிந்தனை இருந்தே தீரும் என்று தொடர்ந்து பின் நின்று சொல்வது. இவை எல்லாவற்றிலும் அவர் ஆழம் போயிருந்தால் ஒவ்வொன்றும் ஒரு கேஸ் ஸ்டடியாகி இருக்கும். ஆனால் எல்லாவற்றிலும் மூன்று மேலோட்டமான முடிவுகளுக்கு அவர் வந்தார். ஆண் பெண் உறவுகளில் செக்ஸ் அதற்குப் பின்னான வருத்தம், தத்துவார்த்தப் பிரச்சினைகளில் மிகவும் மேலோட்டமான எரிச்சலான தன்னிரக்கம், ஜாதிய சிந்தனைகளில் அவரது பிற்போக்குத்தனம் இவையே அவரை தேங்க வைத்தன. இதே மேலோட்டமான வேகத்தில் அவர் ஆன்மிகத்துக்குப் போனார். எனக்கு ஆன்மிகம் பற்றி அதிகம் பரிச்சயமில்லை. ஆனால் ஆன்மிகத்தை இவர் எழுதியதை வாசித்தபோது அவற்றிலும் ஒரு அவசரத்த்னமையும் தனது வாசகர்களைத் தான் செல்லும் திசைக்குத் திருப்பிக்காட்டவேண்டும் என்கிற வேகமும் முடியும் என்கிற மமதையும் மட்டுமே தென்பட்டன.

ஆனால் என் பால்யம் முழுக்க பாலகுமாரனே நிறைத்துக் கிடந்தார். அதில் காமத்தை பெரும்பாலும் தன் எழுத்துகள்மூலம் அவரே கட்டமைத்தார். ஒவ்வொரு இளைஞனும் வெறும் காமம் பற்றியே பேசும்போது அவர் எனக்குள் ஒரு விஸ்வரூபம் எடுத்தார். பல நாள்களில் பல நேரங்களில் நான் பாலகுமாரனுடன் மானசீகமாகப் பேசினேன். எனக்கு குருக்கள் என்று யாரும் இன்றுவரை இல்லை. ஆனால் மானசீகமாக என் வாழ்க்கையை பாலகுமாரன், ஜெயகாந்தன், சோ, சுஜாதா, ஜெயமோகன் போன்றவர்களே வடிவமைத்தார்கள். அந்தவகையில் பாலகுமாரனிடன் எனக்கு எப்போதும் ஒரு மென்மை உண்டு. எப்போதும் நான் அவரை நோக்கிக் கைக்கூப்புவேன்.

பாலகுமாரனின் மயக்கத்தை சுஜாதா போக்கடித்தார். சுஜாதாவிடமிருந்து ஜெயகாந்தன் என்னைக் கொண்டு போனார். இவர்கள் அத்தனை பேரையும் ஒரு சேரக் கடாச வைத்தார் ஜெயமோகன். ஆனால் இன்று நோக்கும்போது இவர்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு வகையில் எத்தனை முக்கியமானவர்கள் என்று தெரிகிறது. அதிலும் சுஜாதாவின் பங்களிப்பு பிரமிக்க வைக்கிறது. ஜெயமோகன் எங்கேயோ போய்விட்டார். 

பாலகுமாரனின் பெண்களை மிகக் கறாராக வரையறுத்தால், உணவாலும் உடலாலும் ஒரு ஆணைக் கட்டிப்போட முடியும், முடியவேண்டும் என்று சொல்பவர்களாகவே இருந்தார்கள். ஆணிடம் ஒரு பெண் தோற்கும்போது அவர்கள் காமத்தை அனுபவமாக்கியே க்டந்தார்கள். வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு நொடியில் வீட்டுப் பெண்ணே என்று காண்பிக்க பாலகுமாரன் தவறுவதில்லை. அதேபோல் எந்த ஒரு நொடியிலும் ஒரு வீட்டுப் பெண் பல தளங்கள் உயர்ந்து வெற்றிப் பெண்ணாக வலம்வர வைக்கவும் அவர் தவறுவதில்லை. என்ன, இவை இரண்டுமே நொடிநேர மின்னல்களாக நிகழ்ந்துவிடுவதுதான் சோகம். இதற்கேற்ற ஆழமான காரணங்களோ சம்பவங்களோ இருப்பதில்லை. அப்படி ஒரு பெண்ணால் மாறமுடியும் என்ற ஒற்றைக் காரணம் எல்லா நாவல்களிலும் பாலகுமாரனுக்குப் போதுமானதாக இருந்துவிடுகிறது.

அனல்காற்று ஜெயமோகன் எழுதியது. பாலகுமாரனின் கதை போன்ற ஒன்றுதான். ஆனால் அதில் ஜெயமோகன் நிகழ்த்திக் காட்டியிருக்கும் அனுபவங்கள் ஒரு ஆணையும் பெண்ணையும் அவர்கள் மனத்தில் அப்படியே நிர்வாணமாக்கி நிற்கவைப்பவை. ஆணின் எல்லையையும் பெண்ணின் எல்லையையும் அவர் தொட்டிருக்கும் அற்புதம் வாசித்தால்தான் புரியும். அனல்காற்று நாவலில் பல இடங்களில் நாம் பாலகுமாரனை நினைவுகூர்வோம். ஆனால் பாலகுமாரனால் செல்லவே முடியாத அலசல்களை ஜெயமோகன் நிகழ்த்திக்கொண்டிருப்பார்.

அனல்காற்று ஜெயமோகனின் நாவல்களில் ஒன்றாக வைக்கத் தக்கதல்ல. அத்தனை ஆழமான அலசல்களை மீறியும் அது ஒரு சுமாரான நாவலே. ஆனால் அது ஒரு திரைக்கதையாக எழுதப்பட்டது என்பதை மனத்தில் வைத்தே படிக்கப்படவேண்டும். சட்டென தெளியும் நிலையில் வரும் உறவு விவரணைகளில் உண்மையில் நான் மிரண்டுவிட்டேன்.

Share

ஆர் எஸ் எஸ் – கடந்து வந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்

மதிப்புரை.காம் தளத்தில் ஆர் எஸ் எஸ் – கடந்து வந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும் என்ற புத்தகம் பற்றிய என் மதிப்புரை வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே செல்லவும்.

விரிவான ஆழமான விமர்சனத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் மதிப்புரை.காம் உருவாக்கப்பட்டுள்ளது.

வாசகர்கள் சில புத்தகங்களை இலவசமாகப் பெற்று விமர்சனம் செய்யும் வசதியும் உள்ளது.

பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை விமர்சனத்துக்கு அனுப்பி வைக்கலாம்.

சேமிப்புக்காக இங்கே:

ஆர் எஸ் எஸ்ஸை மிக நெருக்கமாக கடந்த 45 வருடங்களாகப் பார்த்துவரும் ஒருவர் ஆய்வு செய்து எழுதிய புத்தகம் இது. இவர் ஆர் எஸ் எஸ்ஸிலும் இருந்தவர். எனவே உள்ளே இருந்து எழும் ஒரு விமர்சனக் குரலாக ஒலிக்கிறது ஆசிரியரின் குரல். அது கலகக்குரல் இல்லை. மாறாக விமர்சனக் குரல். ஒருவகையில் ஆர் எஸ் எஸ் எப்படி இருந்து இப்போது இப்படி வீழ்ச்சி அடைந்துவிட்டதே என்று வருத்தப்படும் குரல். அல்லது மீண்டும் ஆர் எஸ் எஸ் பழையபடி வீறுகொண்டு எழாதா என்று விரும்பும் ஏக்கக்குரல். இப்படி ஒரு கலவையாகவே இந்தப் புத்தகத்தைப் பார்க்க முடிகிறது.

ஆர் எஸ் எஸ்ஸின் முழுமையான வரலாற்றுப் பார்வையை இப்புத்தகம் தரவில்லை. என்றாலும், ஆர் எஸ் எஸ்ஸின் முக்கியமான மூன்று தலைவர்களின் ஆளுமைகளையும் அவர்களது செயல்பாடுகளையும் அலசுவதன்மூலம் ஆர் எஸ் எஸ் அமைப்பின் வரலாறும் விவரிக்கப்படுகிறது.

ஹெட்கேவர் காலத்தில் இந்து சமூகத்தை ஒருங்கிணைக்கும் ஒரு சக்தியாகவே ஆர் எஸ் எஸ் தொடங்கப்பட்டது. அங்கே சமத்துவமும் சகோதரத்துவமும் மிக முக்கியமானவையாக வலியுறுத்தப்பட்டன. உயர்சாதி தாழ்ந்த சாதி வேறுபாடுகள் ஆர் எஸ் எஸ்ஸுக்குள் நுழையக்கூடாது என்பது ஹெட்கேவர் காட்டிய அக்கறையை மிகத் தெளிவாகவே ஆசிரியர் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்ல, இந்த சாதி விஷயத்தில் ஆர் எஸ் எஸ் என்றுமே தன் நிலையிலிருந்து, யார் தலைவராக இருந்தபோதிலும், மாறிவிடவில்லை என்பதைத் தெளிவாகவே கூறுகிறார் நூலாசிரியர். முஸ்லிம் அராஜகத்துக்கு எதிராக ஆர் எஸ் எஸ் துவங்கப்பட்டது என்ற பொதுப்புத்தி கருத்துக்கு சஞ்சீவ் கேல்கர் தரும் பதில் மிக முக்கியமானது. 1974ல் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம், “எல்லா முக்கிய 22 கலவரங்களும் ஹிந்துக்களுக்கு எதிராக முஸ்லிமகளால் தொடங்கப்பட்டது” என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அப்போது ஆர் எஸ் எஸ்ஸின் நபர்கள் பெரிய பதவிகளில் இல்லை. மிகப்பெரிய கட்சியாக ஜனசங்கம் அறியப்பட்டிருக்கவில்லை. எல்லா நீதிபதிகளையும் இப்படித் தீர்ப்புக்கூறும் அளவுக்கு ஆர் எஸ் எஸ் பெரிய சக்தியாக இல்லை என்கிறார். அதாவது ஆர் எஸ் எஸ் என்பது முஸ்லிம்களுக்கு எதிரானதாக தொடங்கப்படவில்லை, மாறாக ஹிந்துக்களின் ஒற்றுமைக்கானது என்பதைச் சொல்கிறார். அதிகாரத்தைக் கையாள கொள்கையும் நேர்மையும்தான் அடித்தளமானது என்பதை இரண்டு தலைவர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள் என்கிறார், ஒருவர் காந்தி, மற்றொருவர் கோல்வல்கர்.

நூலில் கோல்வல்கரின் மீது வைக்கப்படும் ஒரு முக்கியமான விமர்சனம் அவர் தொலைநோக்கோடு முஸ்லிம்களை அணுகவில்லை என்பதுதான். கோல்வல்கரின் தேசியம் என்பது தேசத்தின் மதம் மற்றும் கொள்கையை நிச்சயம் ஏற்றுக்கொள்வதிலிருந்து தொடங்கி, அங்கேயே முடிந்துவிடுகிறது. ஒரு சமயம் ஹிந்து மதம் பரந்த மனம் கொண்டது என்று சொல்லும் கோல்வல்கர், இன்னொரு சமயம் இந்த தேசத்தின் கலாசாரத்தை முஸ்லிம்கள் ஏற்கவேண்டும் என்பதை எப்படி நியாயப்படுத்தமுடியும் என்கிறார் நூலாசிரியர். இதில் மிகமுக்கியமானது, முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை என்பதை கோல்வல்கர் ஏற்கவில்லை என்பதுதான்.

கோல்வல்கரின் மிக முக்கியமான அம்சமாக ஆசிரியர் சொல்வது – அதிகார வெறுப்பு. அதாவது அரசியலில் இருந்து விலகி இருத்தல். கோல்வல்கர் ஒரு தூய்மைவாதி. இதனால் ஆர் எஸ் எஸ் இறுகிப் போன ஒரு அமைப்பாக இருந்தது என்பதே ஆசிரியரின் பார்வை. ஒருவகையில் இந்த இறுகிப் போன தன்மைதான், ஆர் எஸ் எஸ்ஸின் நெருப்பு நிமிடங்களைக் கடக்க உதவியது என்றால் மிகையில்லை. காந்தி கொலையில் ஆர் எஸ் எஸின் மீதான பழி, ஆர் எஸ் எஸ் தடை என எல்லாவற்றையும் கோல்வல்கர் தனது தூய்மைவாதத்தால்தான் வென்றெடுத்தார். ஒருவகையில் அந்த நிலையில் கோல்வல்கரின் பார்வை சரியானதே. ஆனால் ஆசிரியர் இதை ஏற்கவில்லை.

காந்தி கொலையில் ஒரே வரியில் அதில் ஆர் எஸ் எஸ் பங்குபெற்றிருக்குமோ என்று சந்தேகம்கூடப் படமுடியாது என்று கடந்துபோகிறார் சஞ்சீவ் கேல்கர். அந்த நிலையைக் கோல்வல்கர் கையாண்ட விதத்தையும் மிகப்பெரிய ஆச்சரியத்துடன் பாராட்டியிருக்கிறார். மூர்க்கத்தனமான தடையைத் தாண்டி வெளியேற ஆர் எஸ் எஸ் கைக்கொண்ட சக்தியை, அதற்குப் பின்னர் சரியாக கோல்வல்கர் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். தேவையே இல்லாமல் ஆர் எஸ் எஸ் தன்னை குறுக்கிக்கொண்டு, சுதந்திர இந்தியாவில் இருக்கிறோம் என்பதை மறந்து, தன்னை வெளிப்படுத்தாமல் நடந்துகொண்டது என்கிறார். இதுவே கோல்வல்கரின் ஆர் எஸ் எஸ் கோல்வல்கரிடம் இருந்து பெற்றுக்கொண்டது என்கிறார்.

கோல்வல்கர் தூய்மைவாதி என்றால் தேவரஸை நவீனவாதியாக ஆசிரியர் பார்க்கிறார். உண்மையில் கோல்வல்கரின் மீதான ஒவ்வொரு விமர்சனத்தின் பின்னாலும் தேவரஸைப் பற்றிய ஆசிரியரின் பிம்பம் உள்ளது என்பதே உண்மை. இதை ஒட்டி கோல்வல்கரின் செயல்பாடுகள் மீது மிகக்கடுமையான விமர்சனங்களை ஆசிரியர் முன்வைக்கிறார். கோல்வல்கரின் பிடியில் ஆர் எஸ் எஸ் செல்வதற்கு முன்பாகவே தேவரஸ் வந்திருந்தால் ஆர் எஸ் எஸ் மிக உன்னதமான நிலையை எட்டியிருக்கும் என்பதே ஆசிரியரின் எண்ணம்.

கோல்வல்கருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் (இதற்கு வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன) முதலில் ஆர் எஸ் எஸ்ஸின் பணிகளில் இருந்து விலகியிருந்த தேவரஸ் திரும்ப வருகிறார். அரசியலில் பங்கெடுக்க தேவரஸை கோல்வல்கர் அனுமதிக்கவே இல்லை. தூய்மைவாதிக்கும் நவீனவாதிக்கும் இடையேயான முரண் இது. தேவரஸை ஆர் எஸ் எஸ் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றும், கோல்வல்கரின் ஆர் எஸ் எஸ் மையவாதத்திலிருந்து மாறுபட்ட போக்கை தேவரஸ் கையாண்டது சரியானது என்பதும் ஆசிரியர் பல இடங்களில் பல விளக்கங்களுடன் சொல்லிச் செல்கிறார். மிக முக்கியமான விஷயம், இந்த மூன்று தலைவர்களுக்குள்ளும் கொள்கையில் வேறுபாடு இல்லை என்பதே. ஆனால் அதை அடையும் வழி குறித்து மிகத் தீர்மானமான கருத்துகள் ஒவ்வொருவர் முன்னேயும் இருந்தன. ஹெட்கேவரின் சிந்தனையையும் வழியையும் மீண்டும் கொண்டு செல்பவர் தேவரஸ் என்றே ஆசிரிரியர் விவரிக்கிறார். ஆனால் கோல்வல்கரின் ஆர் எஸ் எஸ் அதை முதலில் விரும்பவில்லை.

1973ல் தேவரஸ் ஆர் எஸ் எஸ் தலைவரானதும்தான் அரவணைத்துச் செல்லும்போக்கு தொடங்குகிறது. எல்லாருடனும் நட்புடன் இருப்பது பாவமல்ல என்றும் தனக்குள் ஆர் எஸ் எஸ் சுருங்கிக் கிடக்கவேண்டியதில்லை என்றும் புரியத் தொடங்குகிறது. ஆர் எஸ் எஸ்ஸின் புறத்தோற்றத்தை மாற்ற, அதன் ஷாகாவிலிருந்து தொடங்க நினைக்கிறார். கால் சட்டையை மாற்றக் கூட நினைக்கிறார். சிலவற்றை அவரால் செய்யமுடியவில்லை. பழமையை மாற்ற பலர் ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தாலும் ஆர் எஸ் எஸ் யதார்த்தவாதத்தைப் புரிந்துகொள்ளவேண்டிய அமைப்பாக தேவரஸ் காலத்தில் மாறுகிறது என்பது உண்மைதான்.

முஸ்லிம்களைத் தள்ளி வைப்பதைத் தவிர்க்கும் தேவரஸ், அவர்கள் குறைந்தபட்ச சாகா நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், இந்தியாவைத் தாய்நாடாகக் கருதினால், தங்கள் முந்தைய காலம் இந்தியாவுடன் தொடர்புடையது என்று கருதினால் அவர்களும் நம்மவர்களே என்ற எண்ணத்தை விதைக்கிறார். முஸ்லிம்களுக்கும் ஆர் எஸ் எஸ்ஸுக்கும் இடையேயான வேறுபாட்டை ஒழிக்க ஆர் எஸ் எஸ்ஸுக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து செயல்பட்டவர் தேவரஸ் என்கிறார் சஞ்சீவ் கேல்கர்.

இதற்குப் பின்பு நெருக்கடி நிலை பற்றியும் அப்போது ஆர் எஸ் எஸ்ஸின் தொண்டு பற்றியும் விளக்குகிறார். கம்யூனிஸ்ட்டுகள் பற்றிய அவரது பார்வையும், அவர்களது வீழ்ச்சியும் இப்புத்தகத்தில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏதோ ஒரு புள்ளியில் கம்யூனிஸமும் ஆர் எஸ் எஸ் கொள்கையும் இணையவேண்டும் என்று ஆசிரியர் விரும்புதாகவே எனக்குத் தோன்றியது. ஆனால் அதே சமயம், கம்யூனிஸ்ட்டுகளின் தோல்வியிலிருந்து ஆர் எஸ் எஸ் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதையும் சொல்கிறார்.

இந்நூலிம் முக்கியத்துவம், வெறுமனே ஆர் எஸ் எஸ்ஸை வசைபாடாதது. அதேபோல் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாது. மாறாக, மிகத் தெளிவான கறாரான விமர்சனங்கள், அவையும் அவற்றுக்கான ஆதாரங்களுடன் எழுதப்பட்டுள்ளதுதான். ஜாதியைப் பொறுத்தவரை ஆர் எஸ் எஸ்ஸில் மாற்றுக் கருத்துகளே இல்லை என்பதில் தொடங்கி, காந்தி கொலையில் ஆர் எஸ் எஸ் பங்கிருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்வதிலாகட்டும், இந்தியாவில் ஹிந்துக்களிடையே ஒரு பரந்த கலாசார ஒற்றுமை இருக்கிறது என்று எடுத்துக்காட்டுடன் சொல்வதிலாகட்டும், சஞ்சீவ் கேல்கருக்கு எவ்வித சந்தேகங்களும் இருப்பதில்லை. மிகத் தீர்க்கமான பார்வையுடன் அனைத்தையும் அணுகிறார். வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு வகை அணுகல்தான் புத்தகம் முழுக்க.

தேவரஸ் மீதான ஆசிரியரின் சாய்வு ஒரு கட்டத்தில் கோல்வல்கரை மிக அதிகமாக விமர்சிப்பதில் முடிகிறதோ என்ற எண்ணத்தைத் தவிர்க்கமுடியவில்லை.

ஆர் எஸ் எஸ் பற்றியும், கோல்வல்கர் தேவரஸ் பற்றியும் புரிந்துகொள்ள மிக முக்கியமான நூல் இது. ஆர் எஸ் எஸ்ஸின் வரலாற்றோடு இந்தியாவின் வரலாற்றை ஒரு புதிய கண்ணோட்டத்திலும் பார்க்கமுடிகிறது.

இந்த நூலின் பின்னிணைப்பாக ‘தலித்களின் தசராவும் ஆர் எஸ் எஸ்ஸின் தசராவும்’ என்று ஒரு கட்டுரை உள்ளது. மிக முக்கியமானது. மிக உணர்வுப்புர்வமானது. டாக்டர் அம்பேத்கரும் டாக்டர் ஹெட்கேவரும் உருவாக்கிய அமைப்புகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தைச் சொல்வது. இன்னொரு பின்னிணைப்பு ஆர் எஸ் எஸ்ஸின் சாசகம் பற்றியது. இதுவும் முக்கியமானது.

மிகச் சிக்கலான ஆழமான ஒரு நூல் மிக நேர்த்தியாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்: கடந்துவந்தபாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும், சஞ்சீவ் கேல்கர், தமிழில் சாருகேசி, 382 பக்கங்கள், விலை ரூ 300, கிழக்கு பதிப்பகம் வெளியீடு.

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-5135-156-6.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

Share

உயிருள்ள இயற்கை உணவுகள் – புத்தக அறிமுகம்

100-00-0001-728-7_b

உயிருள்ள இயற்கை உணவுகள் புத்தகத்தைப் படித்தேன். நமக்குச் சமைத்துக் கொடுத்துக்கொண்டிருக்கும் அம்மாவும் மனைவியும் கிட்டத்தட்ட நம்மைக் கொன்றுகொண்டிருக்கிறார்கள் என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள் டாக்டர் ரெட்டியும் சசிரேகாவும். சமைக்காத உணவை எப்படி ருசியோடு சாப்பிட முடியும் என்று தெரியவில்லை. ருசி எதற்கு என்று வாயைக் கட்டச் சொல்பவர்கள் நடையைக் கட்டவும். எவற்றையெல்லாம் சமைக்காமல் உண்ணலாம் அல்லது குறைவான அளவில் சமைத்து சத்தோடு உண்ணலாம் என்று ஒரு பெரிய பட்டியலையும் தந்திருக்கிறார்கள். தினமும் எப்படி உணவுமுறையைக் கையாளலாம் என்ற அறிவுரையும் புத்தகத்தில் தரப்பட்டுள்ளது.

தேங்காய் பாதி, கொய்யாப் பழம் நான்கு, ஐந்து வாழைப் பழம், நான்கு கிலோ கேரட் என ஒரு நாளைக்கான செலவு ப்த்து ரூபாய் கூட ஆகாது என்றெல்லாம் அதிர்ச்சிகள் புத்தகம் முழுக்க உண்டு.

சமைத்து உண்ணும் புல்தடுக்கி பயில்வான்களுக்கும் சமைக்காமல் உண்ணும் வீரர்களுக்கும் இடையே போட்டியில் சமைக்காத உணவை உண்ணும் வீரர்களே வெல்கிறார்கள் என்று ஐயம்திரிபறச் சொல்கிறார் ஆசிரியர். அதிலும் மேற்படி விஷயத்தில், சமைத்த உணவை உண்பவர்கள் தினசரி ஐந்து நிமிட வெறியில் தங்கள் சுகத்தை முடித்துக்கொள்கிறார்கள் என்றும், சமைக்காத உணவை உண்பவர்கள் வாரம் இரண்டு முறை பல மணி நேரங்கள் என்றும் ஆசிரியர் சொல்கிறார். சோதித்துப் பார்த்தவர்கள் பதில் சொல்லவும். 🙂

சிவ சைலத்தில் இதுபோன்ற சிகிச்சை எடுத்தவர்களின் கடிதப் பட்டியல் பல இருக்கிறது. சமைக்காத உணவின் மகத்துவத்தை அக்கடிதங்கள் தெரியப்படுத்துகின்றன.

உபவாசம் பற்றியும் சொல்கிறார். ஒரு நாள் உபவாசம் இருப்பது நம் வாழ்நாளை பத்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பது என்கிறார். உபவாசத்தின் பல நன்மைகளைச் சொல்கிறார். தமிழ்நாடெங்கும் இருக்கும் இயற்கை உணவு மருத்துவர்களைப் பற்றிய குறிப்பும் இயற்கை உணவு மையங்கள் பற்றிய உண்டு. கடைசி சில பக்கங்கள் புத்தகத்தோடு ஒட்டாமல் என்னென்னவோ ஏதேதோ சொல்லிச் செல்கின்றன.

சமைக்காத உணவை உண்கிறோமோ இல்லையா, படிக்க, தெரிந்துகொள்ள சுவாரஸ்யமான நூல்தான்.

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0001-728-7.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

Share

புத்தக விற்பனை குறித்து

இரா நடராசன் அந்திமழை செப்டம்பர் இதழில் அவருடைய புத்தகங்கள் 20,000 முதல் 30,000 வரை விற்பதாகச் சொல்லியிருக்கிறார். அதை ஒட்டி எழுந்த சிந்தனைகளின் தொகுப்பு இது. மற்றபடி, இரா நடராசனின் புத்தகங்கள் இத்தனை விற்பது உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி. ஒரு பதிப்பகத்துக்கும் எழுத்தாளருக்கும் இதைவிடக் கொண்டாட்டமான விஷயம் வேறு எதுவும் இருக்கமுடியாது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் ஒவ்வொரு புத்தகமும் இந்த எண்ணிக்கையில் விற்கவேண்டும். மிக நல்ல அல்லது புகழ்பெற்ற புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்கவேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இனி எழுதப்போவதெல்லாம் என் அனுபவங்கள் தரும் சித்திரத்தை மட்டுமே. இது மட்டுமே உண்மையாக இருக்கவேண்டும் என்பதில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதேசமயம் நான் உண்மையாக இருக்கும் என்று நம்புவதை மட்டுமே இங்கே சொல்கிறேன். இதற்குத் தரவுகள் கிடையாது என்ற போதிலும்.

சாரு நிவேதிதா தனது புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்றிருக்கவேண்டும் என்று அடிக்கடி எழுதுவதைப் பார்க்கலாம். ஆனால் யதார்த்தத்தில் அவரது புத்தகங்கள் 3000 தான் விற்கின்றன என்பதையும் எழுத அவர் தவறுவதில்லை. இது முக்கியமானது. நமது லட்சியம் கனவு ஆசை வேறு. யதார்த்தம் வேறு. யதார்த்தத்தைப் புரிந்துகொண்டால்தான் நாம் கனவை அடைய என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கவாவது முடியும். 

புத்தக விற்பனையில் பலவகை உண்டு. ஒரு சில புத்தகங்கள் மட்டும் பல்லாயிரம் விற்பதுண்டு. சில புத்தகங்களைக் கல்லூரிகள் பள்ளிகளில் வாங்குவதால் அதன் விற்பனை ஆயிரக்கணக்கில் விற்பதுண்டு. கல்லூரியில் பாடப்புத்தகமாக வைக்கப்படும் புத்தகங்களும் இப்படி விற்பனையாவதுண்டு. இவற்றையெல்லாம் தேவை சார்ந்த விற்பனை என்று வரையறுக்க இயலாது. தேவை ஏற்படுத்தப்பட்ட புத்தகங்கள் இவை. மக்களிடையே தானாக ஏற்பட்ட தேவை காரணமாக விறப்னையான புத்தகங்களே ஒரு சமூகத்தின் புத்தக விருப்பத்தைச் சொல்ல வல்லது. திணிக்கப்பட்ட விற்ப்னை எவ்விதத்திலும் சமூகத்தின் புத்தகத் தேவையைச் சொல்வதாகாது. ஒரு எழுத்தாளருக்குத் தன் புத்தகங்கள் பல்லாயிரக்கணக்கில் விற்பது மட்டுமே மகிழ்ச்சி தரக்கூடியதா என்றால் இல்லை என்றே நான் சொல்வேன். தானாக ஏற்பட்ட தேவை காரணமாக அவ்விற்பனை நடந்திருந்தால் அது ஓர் எழுத்தாளனுக்குக் கொண்டாட்டத்துக்குரிய ஒரு சாதனையே.

விற்பனையை முன்வைத்து தமிழின் நட்சத்திர எழுத்தாளர்கள் என்று நமக்கே சில மனப்பதிவுகள் இருக்கலாம். கல்கி, சுஜாதா, ஜெயகாந்தன், வைரமுத்து, மதன், இப்படிச் சிலர். இவர்கள் புத்தகங்களின் விற்பனையைப் பற்றி நாம் தெரிந்துகொண்டாலே நமக்கு இருக்கும் மயக்கங்கள் தெளியலாம். 

இதில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் சொல்லவேண்டி உள்ளது. தமிழில் இதுவரை எந்தப் பதிப்பகமும் தெளிவான விற்பனை விவரங்களை முன்வைத்ததில்லை. எனவே இவற்றையும் புத்தகச் சந்தையிலிருந்து வரும் செவிவழிச் செய்தி வழியாகவும் அனுபவம் வழியாகவே மதிப்பிடவேண்டி உள்ளது. நாளை ஏதேனும் ஒரு பதிப்பகம், நான் சொல்லப்போகும் இக்கூற்றையெல்லாம் ஆதாரப்பூர்வமாக மறுத்து, தங்கள் புத்தகங்களின் சிறப்பான விற்பனையை நிரூபிக்குமானால், எனக்கு அது மகிழ்ச்சியான தோல்வியாகவும், சிறந்த பாடமாகவும் இருக்கும் என்றே சொல்லிக்கொள்கிறேன். எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற பல விற்பனை/பதிப்பக நண்பர்களுக்கும் இது பொருந்தும்.

ஒட்டுமொத்தமாக பொன்னியின் செல்வன் ஒரு வருடத்துக்கு ஒரு லட்சம் பிரதிகள் விற்கலாம் என்று அனுமானிக்கிறேன். தமிழில் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பொன்னியின் செல்வன் புத்தகமே விற்பனையில் சாதனை படைத்த நூலாக இருக்கமுடியும். இதைத் தொடர்ந்து கல்கியின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு நூல்கள் விற்றிருக்கலாம். அதேபோல், புத்தகம் வெளிவந்த வேளையில் அக்னிச் சிறகுகள் பெரிய சாதனை படைத்திருக்கும் என்றே நினைக்கிறேன். இதுவரை ஒட்டுமொத்தமாக ஆறு லட்சம் பிரதிகள் விற்றிருக்கலாம் என்று நினைக்கிறேன். 

இதற்கடுத்து வைரமுத்துவின் நாவல்கள் இந்த இடத்துக்கு வர வாய்ப்புள்ளது. மூன்றாம் உலகப்போர் நாவல் வெளிவந்த 6வது வாரத்தில் 30,000 பிரதிகள் விற்றிருந்தது. வைரமுத்துவின் கவிதை நூல்கள் இந்த அளவு விற்பனை ஆவதில்லை. வைரமுத்துவின் மற்ற இரண்டு நாவல்களும் இதைவிட அதிகமாக விற்றிருக்க வாய்ப்புண்டு.

மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள், கிமுகிபி, மனிதனும் மர்மங்களும் போன்றவை வருடம் ஆயிரக்கணக்கில் விற்கும் புத்தகங்கள்.

எழுத்துலகின் சூப்பர் ஸ்டாரான சுஜாதாவின் சூப்பர் ஹிட் புத்தகங்கள் ஒவ்வொரு வருடமும் 6,000 பிரதிகள் விற்கலாம் என்று நினைக்கிறேன். சூப்பர் ஹிட் புத்தகங்கள் மட்டுமே இப்படி. மற்ற புத்தகங்கள் சராசரியாக வருடத்துக்கு ஆயிரம் விற்கலாம்.

இவை இல்லாமல் எழுத்தாளர் யாரென்றே தெரியாமல், அந்த புத்தகப் பெயர் தரும் ஆர்வம் மற்றும் அதன் உள்ளடக்கம் தரும் அனுபவம் ஆகியவற்றுக்காக விற்கும் புத்தகங்கள் உண்டு. (ராஜிவ் கொலை வழக்கு, ஹிட்லர், முசோலினி வகையறா.) துறை சார்ந்த புத்தகங்கள் அதிகம் விற்பதுண்டு. (அள்ள அள்ள பணம் வகையறா.) தொடராக வந்து விற்பனையில் கொடிகட்டும் புத்தகங்கள் உண்டு. (விகடனின் பல புத்தகங்கள்.) இவை எல்லாம் தானாக எழுந்த தேவை சார்ந்து விற்கும் புத்தகங்கள். இதில் பெருமைகொள்ள எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்கும் எல்லாவித உரிமையும் உண்டு.

குழந்தை நூல்களின் விற்பனை பற்றி யோசித்தால் ஏமாற்றமே மிஞ்சும். தமிழில் 6 வயதுக்குட்பட்ட குழந்தை நூல்கள் இல்லவே இல்லை என்று சொல்லிவிடலாம். எங்காவது தேடித் தேடி சில புத்தகங்களை வாங்கினால்தான் உண்டு. அதற்கு மேற்பட்ட வயதுக்கான புத்தகங்கள் இன்னது என்ற வகையில்லாமல் நிறையவே உள்ளன. பாரதிப் புத்தகாலயம் நிறைய புத்தகங்களை குழந்தைகளுக்கென வெளியிட்டுள்ளது. ஆனால் அவற்றின் தேவை சார்ந்த விற்பனை குறித்த ஐயம் எனக்கு எப்போதும் உண்டு.

இந்த அடிப்படையில்தான் நாம் புத்தக விற்பனையை அணுகமுடியும். தமிழகத்தில் இருக்கும் 200 கடைகளின் வழியாகவும் ஆன்லைன் வழியாகவும் போன் மூலமும்தான் இந்த விற்பனை நடந்திருக்கமுடியும். எனவே விற்பனையாளர்கள் மிக எளிதாக எந்தப் புத்தகங்களுக்குத் தேவை இருக்கிறது என்பதனைக் கண்டுகொள்வார்கள். திடீரென ஒரு புத்தகம் தேவை இருப்பதாகச் சொல்லப்பட்டால், அது இந்த விற்பனையாளர்களின் வழியே விற்கப்படாமல் இருந்தால், அது தானாக எழுந்த தேவையைச் சார்ந்து நிகழ்ந்த புத்தக விற்பனை அல்ல என்றே பொருள்.

இந்த நோக்கில்தான் நாம் புத்தக விற்பனையை அணுகமுடியும். நாளையே ஒரு சாதிச் சங்கமோ மத அமைப்போ ஒரு புத்தகத்தை வெள்யிட்டு, அவற்றை லட்சக்கணக்கில் விற்றுக் காண்பிக்கமுடியும். இது ஏற்கெனவே நிகழ்ந்தும் இருக்கிறது. இவை புத்தக விற்பனையின் மேன்மையைச் சொல்வதாக நான் நம்பவில்லை. எப்படி இருந்தாலும் அது விற்பனைதானே என்று நினைப்பவர்கள் இதை ஏற்றுக்கொள்ளக்கூடும். என்னால் இயலாது.

இன்றிருக்கும் நிலை மாறி ஒவ்வொரு புத்தகமும் லட்சக்கணக்கில் விற்கவேண்டும் என்றே நினைக்கிறேன். அதை முன்னெடுக்க இன்று என்ன விற்கிறது என்பதை உண்மையாக நாம் அறிந்துகொள்ளும் ஒரு நிலை வரவேண்டும். அதோடு நல்ல புத்தகங்களுக்கும் நன்றாக விற்கும் புத்தகங்களுக்குமான தூரம் குறையவேண்டும். 

இரா. நடராசனின் ஆயிஷா புத்தகம் இப்படி விற்றிருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் எல்லாப் புத்தகங்களும் இப்படி விற்கிறது என்று என்னால் நம்பமுடியவில்லை. நான் ந்ம்பாத ஒன்று உண்மையாக இருக்கமுடியாது என்று நிச்சயம் சொல்லமாட்டேன். அப்படி அது உண்மையாக இருக்குமானால், நான் இன்னும் தெரிந்துகொள்ளவேண்டியது நிறைய உள்ளது என்றே பொருள். இரா. நடராசனின் புத்தகங்கள் மேலும் மேலும் விற்க வாழ்த்துகள்.

Share

மதுரை சுல்தான்கள்

மதுரை சுல்தான்கள் புத்தகத்தை நேற்று படித்து முடித்தேன். இந்தப் புத்தகம் கிழக்கு பதிப்பகத்தால் 2012ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஒரு புத்தகம் தனக்கான வாசகர்களைத் தேடிக்கொள்ளும் என்று இலக்கியவாதிகள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அதை வைத்து நானே பலமுறை பகடி செய்திருக்கிறேன். ஆனால் இந்தப் புத்தகம் உண்மையில் என்னைத் தேடிக்கொண்டது என்றே சொல்லவேண்டும். 2012ல் இந்தப் புத்தகம் வந்தபோது நான் அதை படிக்கவில்லை. பிறகும் படிக்கவேண்டும் என்றுகூட நினைக்கவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு எழுத்தாளர் ஸ்ரீ வேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை) இறந்தபோது, எங்கள் நண்பர்களுக்குள் சில மடல் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் அவர் மதுரா விஜயம் என்ற நூலை மையமாக வைத்து எழுதிய திருவரங்கன் உலா பற்றிப் பேசிக்கொண்டோம். அப்போது ஒரு நண்பர், ‘பிரசன்னா, நீங்கள் பரிந்துரைத்த மதுரை சுல்தான்கள் புத்தகம் இப்போது இருப்பில் உள்ளதா’ என்று கேட்டார். உண்மையில் நான் இந்தப் புத்தத்தைப் படித்திருக்கவில்லை. அவருக்குப் பரிந்துரைத்த நினைவும் இல்லை. ஒருவேளை அவர் கேட்டு, நான் வழக்கம்போல் நல்ல புத்தகம் என்று சொன்னேனா என்றும் நினைவில்லை. 🙂 ஆனால் அவரிடம் அதையெல்லாம் சொல்லாமல், புத்தகம் இருப்பில் உள்ளது என்று பதில் அனுப்பிவிட்டேன். பின்பு அந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். நாளை அந்த நண்பர் ஏதேனும் கேட்டால் பதில் சொல்லவாவது தயாராக இருப்போம் என்றுதான் படிக்கத் தொடங்கினேன்.

இதற்கிடையில் எஸ் பி சொக்கலிங்கம் பற்றித் தெரிந்துகொண்டதும் இந்தப் புத்தக வாசிப்பனுபவத்துக்கு உறுதுணையாக இருந்தது என்பதை மறுக்கமுடியாது. 😛

மதுரை சுல்தான்கள் என்று பெயரிடப்பட்டிருந்தாலும், இந்திய சுல்தான்கள் யாரெல்லாம் தமிழ்நாட்டுக்குப் படையெடுத்து வந்தார்களோ அவர்களைப் பற்றியெல்லாம் இந்த நூல் பேசுகிறது. சுல்தான்கள் ஆட்சியின்போது இங்கே வந்த பயண யாத்ரிகர்கள் (இப்ன் பதூதா, மார்கோ போலோ போன்றவர்கள்) அன்றைய தமிழ்நாட்டைப் பற்றிச் சொல்லிச்சென்ற குறிப்புகள் எளிய தமிழில் இப்புத்தகத்தில் தரப்பட்டுள்ளன. 96 பக்கங்கள் மட்டுமே உள்ள சிறிய நூல்தான் இது. 2 மணி நேரத்தில் படித்துவிடலாம்.

வரலாற்றை ஆய்வு நோக்கில் சொல்வது ஒரு வகை. ஒரு பருந்துப் பார்வையில் எளிய தமிழில் சொல்வது ஒரு வகை. இந்நூல் இரண்டாம் வகையைச் சார்ந்தது. மதன் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள்’ மிக முக்கியமான புத்தகம். நான் இந்தப் புத்தகத்தை முதன்முதலில் (1996 வாக்கில்) வாசித்தபோது, இப்படியெல்லாம் பள்ளிகளில் வரலாற்று வகுப்புகளில் சொல்லிக் கொடுத்திருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்து ஏங்கியிருக்கிறேன். அதே நடையில் அதேபோன்று மதுரை சுல்தான்கள் புத்தகமும் எழுதப்பட்டிருப்பது இனிய ஆச்சரியம். கில்ஜி வம்சம், பாண்டியர்கள், மாலிக் கபூர், குஸ்ரவ் கான், துக்ளக் வம்சம் பற்றியெல்லாம் மிகச் சிறப்பாக, மிக எளிமையாக, மிக சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ’

அலாவுதீன் கில்ஜிக்கு மாலிக் கபூர் மீது ஈடுபாடு. முபாரக் கில்ஜிக்கு குஸ்ரவ்கான் மீது ஈடுபாடு. மாலிக் கபூர், குஸ்ரவ் கான் – இருவருமே முஸ்லிமாக மதம் மாறிய இந்துக்கள். மாலிக் கபூர் ஒரு திருநங்கை, இயற்பெயர் சந்த்ராம். வரலாற்றின் ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை.

இப்படி பல விஷயங்கள் இருந்தாலும், சுல்தான்கள் / துக்ளக் படையெடுப்பின்போது திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் சிலை அடையும் அலைக்கழிப்பின் விவரணைகள் அட்டகாசமாகப் பதிவாகியுள்ளது. துலுக்க நாச்சியார் (சுரதானி) பற்றிய சித்திரம் மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. பின்பு உல்லா கான் (முகமது பின் துக்ளக்) படையெடுப்பின்போது ரங்கநாதர் சிலையைக் காப்பாற்ற ஒரு குழுவே உயிரைத் தியாகம் செய்யும் காட்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. முக்கியமான விஷயம், எவ்வித மிகை உணர்ச்சியும் இன்றி, நடந்தது நடந்தவாறு இந்நூலில் விவரிக்கப்பட்டிருப்பது சிறப்பு. அதேபோல் இன்னொரு ரசனையான விஷயம், கங்காதேவி மதுரா விஜயம் நூலில், மீனாட்சி அம்மன் சொன்னதாக கம்பணாவுக்கு எழுதியிருக்கும் கடிதம். 

மதுரை சுல்தான்கள் பற்றி குறைவாகவே சொல்லப்பட்டுள்ளது. வரலாற்றில் அவர்களைப் பற்றிய குறிப்புகள் அவ்வளவுதான் கிடைத்தனவோ என்னவோ.

என் தேர்வில் மிக முக்கியமான புத்தகம். புத்தகம் எழுதிய எஸ்.பி. சொக்கலிங்கத்துக்கு பாராட்டுகள்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-608-7.html

புத்தகத்திலிருந்து ஒரு பக்கம்:

:ms4

 

Share

ஹர்ஷர் மற்றும் கடைசிக் கோடு

இரண்டு புத்தகங்களைப் படிக்க எடுத்திருக்கிறேன். அடுத்த ஒரு மாதத்துக்கு அதிகம் படிக்க விருப்பம். எல்லாம் புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாட்டுக்காகத்தான். 

இப்போது எடுத்திருக்கும் புத்தகங்கள்: கடைசிக் கோடு – ரமணன் எழுதியது, கவிதா வெளியீடு. இன்னொன்று, ஹர்ஷர், ஆனந்த விகடன் வெளியிட்டது. 

கடைசிக் கோடு இந்தியாவின் வரைபடம் பிறந்த கதையைச் சொல்லும் புத்தகம். கொஞ்சம் ஜனரஞ்சகமான நடையில் எழுதப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட கிழக்கு பாணி. தனிப்பட்ட ரசனையில் எனக்கு கிழக்கு பாணி புத்தகங்கள் உவப்பானவை அல்ல என்றாலும், இந்தப் புத்தகம் படிக்க ஓரளவுக்கு சுவாரஸ்யமாகவே உள்ளது. கண்கள் பனித்தன, மீசை துடித்தது வகையறாக்களைத் தாண்டிவிட்டால், நிறையவே ரமணன் புத்தகத்துக்காக உழைத்துள்ளது தெரிகிறது. இந்தப் புத்தகத்துக்கு மாலன் முன்னுரை எழுதியுள்ளார். அவர் அதைப் பொதுவில் பகிர்ந்தால், நிறைய பேர் இந்தப் புத்தகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

படிக்கப்போகும் இன்னொரு புத்தகம் ஹர்ஷர் பற்றியது. இந்திய வரலாற்றில் ஹர்ஷர், கனிஷ்கர், ஔரங்கசீப் பற்றிய புத்தகங்கள், எளிய தமிழில் இருப்பவை நல்லது. அதை விகடன் புரிந்துகொண்டுள்ளது. இந்தப் புத்தகங்களின் உள்ளடக்க விஷயங்களின் தரம் பற்றித்தெரியவில்லை. படித்தபின்பு சொல்கிறேன். வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கசீப், ஔரங்கசீப்பின் புகழ்பாடும் புத்தகமாக இருக்கவேண்டும். இதையும் விகடன் வெளியிட்டுள்ளது. ஹர்ஷர் பற்றிய புத்தகத்தை மேலோட்டமாகப் புரட்டியதில், நன்றாக எழுதப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. முழுவதும் படித்தால் தெரியும்.

வரலாற்றுப் புத்தகங்களுக்குத் தமிழில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் இதை மெனக்கெட்டு எழுத எழுத்தாளர்கள் கிடைப்பது கஷ்டம். அதுதான் பெரிய சவால். விகடன் இந்த வகையில் சில புத்தகங்களைத் தொடர்ச்சியாகக் கொண்டுவந்துகொண்டே இருக்கின்றது. போஜ ராஜன் நான் படிக்க விரும்பும் இன்னொரு புத்தகம். இதையும் விகடன் வெளியிட்டுள்ளது.

கடைசிக் கோடு புத்தகம் பற்றி கல்கி வெளியிட்டுள்ள விமர்சனம் இங்கே.

போஜ ராஜன் புத்தகம் பற்றி விகடன் வெளியிட்டுள்ள குறிப்பு:

போஜன், பெரும் புலவன், மொழி, இலக்கியம், சமயம், தத்துவம், இசை, விஞ்ஞானம், சிற்பம், கட்டக்கலை, மருத்துவம், போர்க்கலை என அனைத்துத் துறைகளிலும் அவனுக்கு இருந்த புலமைக்கு அவன் இயற்றிய நூல்களே சான்று. கவிகளை ஆதரித்துப் போற்றினான்.

இலக்கியத் துறையில் சம்பூராமாயணத்தை இயற்றினான். சிருங்கார மஞ்சரி கதா என்ற கதையைஎழுதினான். போஜன் எழுதிய நூல்களில் கட்டக்கலை பற்றிப் பேசும் சமாரங்கண சூத்ரதாரா என்ற நூல் நகர நிர்மாணம் பற்றிப் பேசுகிறது. போஜன் கட்டியதாகச் சொல்லப்படும் 104 கோயில்களில், சைவக் கோயில்களே பெரும்பாலானவை.

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கசேப் புத்தகத்துக்கு ஜூனியர் விகடனில் புத்தகன் எழுதியிருக்கும் விமர்சனம் இங்கே

இதையெல்லாம் சொல்லக் காரணம், இதைப் படிப்பவர்கள் உடனே www.nhm.in/shop சென்று இந்தப் புத்தகங்களையும் வேறு பலப்பல புத்தகங்களையும் வாங்கத்தான். நன்றி!

இன்னும் படிக்க எடுத்து வைத்திருக்கும் சில புத்தகங்கள்: நெல்லை ஜமீன்கள் (சமஸ்தானங்களும் சரிவுகளும்) – விகடன் வெளியீடு; தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களின் தோற்றமும் வீழ்ச்சியும் (கருத்து=பட்டறை வெளியீடு); ஆர். எஸ். எஸ். (கடந்து வந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்) – சஞ்சீவ் கேல்கர் எழுதியதின் மொழிபெயர்ப்பு – கிழக்கு பதிப்பகம்; நேரு (உள்ளும் புறமும்) – நயந்தாரா செகல் எழுதியதின் மொழிபெயர்ப்பு – கிழக்கு பதிப்பகம், குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் – கிழக்கு வெளியீடு.

ஆர் எஸ் எஸ்  (கடந்து வந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்) – சஞ்சீவ் கேல்கர் எழுதியதின் மொழிபெயர்ப்பும் நேரு (உள்ளும் புறமும்) புத்தகமும் இன்னும் வெளியாகவில்லை. வெளியானதும் சொல்கிறேன்.

ஆர் எஸ் எஸ் (கடந்து வந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்) புத்தகத்தின் விளம்பரம்:

rss ad

Share

Thooppukkaari – Malarvathi’s Novel

தலித் நாவல்களை தலித்துகள் எழுதுவதுதான் அழுத்தம் நிறைந்ததாகவும் உணர்வுபூர்வமான வலியைப் பதிவு செய்வதாகவும் இருக்கும் என்றும், தலித்துகள் அல்லாத ஓர் எழுத்தாளர்கூட சிறப்பான முறையில் தலித் நாவலைப் படைக்கமுடியும் என்றும் இரண்டு கட்சிகள் எப்போதுமே உண்டு. இந்த முறை தலித் அல்லாத, ஆனால் தலித்தின் வாழ்க்கையை நெருக்கமாக உணர்ந்து வாழ்ந்த வலியை அனுபவித்த ஒரு படைப்பாளி, அதிலும் ஒரு பெண் இந்த நாவலை எழுதியிருப்பது இந்நூலுக்கு அதிக்கப்படியான முக்கியத்துவத்தை அளிக்கிறது. நாவலின் முதலும் கடைசியுமான ஒரே முக்கியத்துவம் இது மட்டும்தான் என்பதுதான் சோகம்.

சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது கிடைத்ததைத் தொடர்ந்து அனைத்து ஊடகங்களிலும் நாவலாசிரியர் மலர்வதியின் பெயரும், நாவல் பெயரும் அடிபடத்துவங்கியதும், அனைவரும் இந்நூலைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். 2011ல் வெளியான நூல் நல்ல கவனம் பெற்றது 2013ல்தான்.

வாழவே வழியில்லாத நிலையில் ஒரு ’நாடாத்தி’ (கனகம்), மலம் அள்ளும் துப்புரவு வேலைக்குச் செல்லும்போது எதிர்கொள்ளும் போராட்டங்களே கதை. அந்தப் பெண்ணை எல்லாருமே தூப்புக்காரி என்றே அழைக்கிறார்கள். அந்தப் பெண்ணின் மகள் (பூவரசி), மரியாதையற்ற இத்தொழில் இருந்து வெளிவந்தாரா என்பதுதான் கதையின் உச்சம். நூல் முழுக்க நாகர்கோவில் வட்டார மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. படிக்க ஆரம்பித்த உடனேயே சட்டெனத் தடுமாற வைக்கும் வட்டார வழக்கு. பல சொற்கள் பலருக்கும் புரியாமல் போகும் வாய்ப்பு அதிகம். வட்டாரச் சொற்களுக்கான பொருளடைவு நாவல் முடிந்தபின்பு கொடுக்கப்பட்டுள்ளது. அது கொடுக்கப்பட்டிருப்பதே நாவல் முடிந்தபின்புதான் பலருக்கும் தெரிந்திருக்கும். அதை முதல் பக்கங்களிலேயே கொடுத்திருக்கலாம். 

மலர்வதியின் இரண்டாவது நாவல் இது. இன்னும் நாவல் வடிவம் மலர்வதிக்குக் கைக்கூடவில்லை என்பது தெரிகிறது. நாவல் என்பது வெறும் கதை சொல்லல் அல்ல. ஆவணப் பதிவு மட்டும் அல்ல.

இந்நாவலில், கதையோடு தொடர்ந்து இடையிடையே வரும் தத்துவங்கள் கதையோடு சம்பந்தப்படாமலோ அல்லது மிகச் சம்பிரதாயமாகவோ சொல்லப்படுகின்றன.  நாவலை மையமாக வைத்து வாசிகன் யோசிக்க வாய்ப்பளிக்காமல், அனைத்தையும் நாவலாசிரியரே சொல்லிவிடுவதால் அவை பெரும்பாலும் சலிப்பை ஏற்படுத்துகின்றன. கதையும் பெரும்பாலும் யூகிக்கத்தக்கதாகவே இருக்கிறது. அதிலும் கதையின் உச்சத்தில் வரும் இறுதிப் பக்கங்கள் முழுக்க முழுக்க நாடகத்தனமாகவும், வலிந்து திணிக்கப்பட்ட முற்ப்போக்குத்தனம் கொண்டதாகவும் உள்ளன.

நாடார் பெண் ஒருவர் தலித் வாழ்க்கை மேற்கொள்ளவேண்டிய நிர்ப்பந்ததுடன் தூப்புக்காரியாகிறார். இப்பின்னணியில் நாவலை வாசிக்கவேண்டி உள்ளதால், இந்நாவல் பெரும்பாலும் பொருளாதார அடுக்கோடு சம்பந்தட்ட ஒன்றாகவே தோற்றம் கொள்கிறது. அதோடு ஏன் ஒரு நாடார் பெண் மலம் அள்ளப் போனார் என்பது பற்றிய ஆழமான குறிப்புகள் இல்லை. என்னதான் வறுமை என்றாலும், தலித் அல்லாத ஒருவர் இவ்வேலைக்குச் செல்வாரா என்பது புரியாத ஒன்றாகவே உள்ளது. ஒரு மருத்துவமனையில் துப்புரவு வேலை என்பதை ஏற்கமுடிகிறது. ஆனால் நாவல் முழுக்க வரும் மலம் பற்றிய விவரிப்புகள், ஏன் அந்த மருத்துவமனையில் அப்படி உள்ளது என்ற ஐயங்களை ஏற்படுத்துவதோடு, இந்த வேலையை எப்படி ஒரு நாடார் பெண் ஏற்றுக்கொண்டார் என்றும் யோசிக்க வைக்கிறது.

தூப்புக்காரிக்கு வரும் கஷ்டங்கள் அனைத்துமே நாடகத்தன்மை கொண்டதாகவே அமைகின்றன. இடையிடையே அவருக்குக் கிடைக்கும் மனித உதவிகளும்கூட, அடுத்தடுத்து இயற்கையாகவே தகர்ந்துவிடுவது, நாவலில் சோகத்தை வலிந்து ஊட்டுவதாகத் தோற்றம் தருகின்றது. அதேசமயம், படித்து முன்னேறினால் இத்தொழில் இருந்து விடுபட்டு வாழ்வில் முன்னேறலாம் என்ற நம்பிக்கையைச் சொல்வதில் மலர்வதி பின்வாங்கவில்லை. இது நம்பிக்கை தரக்கூடியதுதான். 

தூப்புக்காரியாக வேலை செய்தாலும், தன் மகளுக்கு வரும் மாப்பிள்ளை நிச்சயம் சக்கிலியராகவோ வேற்று சாதி ஆணாகவோ இருக்கக்கூடாது என்று கனகம் எண்ணுவதும், அதையே படித்த மகள் பூவரசி எண்ணுவதும் அப்படியே நாவலில் பதிவு செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கும் யதார்த்தம். வழக்கம்போல, மேல் சாதி ஆண் தன் மனத்தைத் திறந்து காட்டாதவனாகவும், சாக்கடை சுத்தம் செய்யும் சக்கிலியரோ (மாரி) பல துன்பங்களுக்குப் பின்பும் தூய்மையான அன்பைச் செலுத்துபவராகவும் வருகிறார். இதில் நமக்கு முக்கியமாகத் தோன்றுவது, பூவரசியின் எண்ணங்களே. 

கற்பு, ஒழுக்கம் போன்றவற்றுக்கு எந்த தனிப்பட்ட அர்த்தமும் இல்லை என்பதை இந்நாவலில் இரண்டு இடங்களில் பார்க்கமுடிகிறது. ஒன்று, சக்கிலியராக வரும் மாரியின் தொடர்புகள். இன்னொன்று, பூவரசி மனோ உடலுறவு. ஏன் திடீரென்று மாரி இறந்துபோகிறார், அதற்குப் பின்பு ஏன் நாவல் எவ்வித யதார்த்தமும் இல்லாமல் (அதற்கு முன்பும் பெரிய அளவில் யதார்த்தம் இருந்துவிடவில்லை என்பது வேறு விஷயம்) அலைபாய்ந்து போகிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. நாவல் என்பதற்கு ஒரு தொடக்கம், ஒரு முற்போக்கு முடிவு, நடுவில் கதை என்பன போன்றவை தேவை என்ற கற்பிதங்கள் கலைந்துபோன இச்சூழலில் இந்நாவல் அதே பழைய பாதையில் பயணிக்கிறது. இதைத் தவிர்த்திருக்கலாம். இந்தக் கற்பிதங்களில் இருந்து விடுபட்டு, மொழி நடையில் கூடுதல் கவனம் செலுத்தி, ஒரு நல்ல எடிட்டர் மூலம் நாவல் நன்கு எடிட் செய்யப்படுமானால், அடுத்த நாவலில் மலர்வதி அதிகம் மிளிரக்கூடும்.

இதற்குமுன்பு கிறித்துவ மதம் தொடர்பான மூன்று கட்டுரைத் தொகுதிகள் எழுதியிருக்கும் மேரி புளோரா என்னும் மலர்வதிதான் இந்நாவலின் நூலாசிரியர். தோழர் பொன்னீலனும் மேலாண்மை பொன்னுசாமியும் இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார்கள். இந்தப் பின்புலத்தில் ‘தூப்புக்காரி’ நாவலை வாசித்தால், இந்நூல் வேறொரு வகையில் ஆவணமாகும்.

தூப்புக்காரி, அனல் வெளியீடு, மலர்வதி, விலை ரூ 75, பக் 136.

ஆனலைனில் வாங்க இங்கே செல்லவும்.

Share