Archive for திரை

Gully Boy

Gully Boy. Highly predictable story. But an excellent experience to watch. No wonder why it had a great box office collection. Ranveer Singh, the lady acted as his mother, Alia Bhatt, the actor who appeared as Sher – everybody performed very well. What a change over in Ranveer Singh, simply amazing. Music is awesome. I was remembering AR Rahman for his Petta Rap song and No problem song. All songs in this movie have a close resemblance of those songs what I mentioned above. Santhosh Narayan took this Gana of Chennai to a different level I must agree. Tamil version of Gully Boy if planned, Santhosh Narayan would deliver some great songs I believe. But finding the perfect matching actors might be a difficult one.

Even though the movie revolves around a slum and a Muslim family, not even a single unnecessary attack on India. Tamil film might use this same plot to criticise Indian government I am sure. 🙂

Share

Avengers: End game

அவெஞ்சர்ஸ் – எண்ட் கேம்

மிக ‘எளிமையான கதை’. ஒரே நொடியில் உலகின் மக்கள்தொகையில் பாதியை அழித்துவிட்ட தானோசை அழித்து, ஆறு இன்ஃபினிட்டி கற்களையும் மீளக் கண்டடைந்து, அழிந்தவர்களையும் அழிந்த சூப்பர் பவர்களையும் மீண்டும் உலகுக்குக் கொண்டு வர ஆயத்தமாகிறார்கள் ஐயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர், ப்ளாக் விடோ, ஆண்ட் மேன், வார்மெஷின், கேப்டன் மார்வெல் போன்ற பல மிச்சமிருக்கும் சூப்பர் பவர்ஸ் எல்லாரும் சேர்ந்து, காலச் சக்கரத்தில் க்வாண்டம் தியரி மூலம் பயணிக்கிறார்கள். ஐயர்ன் மேனை ஐயர்ன்மேனே பார்க்கிறார். கேப்டன் அமெரிக்காவும் கேப்டன் அமெரிக்காவும் மோதுகிறார்கள். நிகழ்காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் மோதல். காலவிளையாட்டு அதன் உச்சத்தில். நிகழ்கால ப்ளாக் விடோ கடந்த காலத்தில் இறந்து போகிறார். நிகழ்கால நெபுலாவின் நினைவைக் கடந்தகால தானோஸ் படித்து, தன் இறுதிக்காலத்தைப் பார்த்துவிட்டு, நிகழ்காலத்துக்கு வருகிறார். அதற்குள் ஆறு இனிஃபினிட்டி கற்களையும் வைத்து ஹல்க் கடந்தகாலத்தில் இறந்த மனிதர்களை உயிர்ப்பிக்கிறார். மீண்டும் பெரும் சண்டை. அனைத்து சூப்பர் பவர்களும் திரும்ப வர, தானோஸ் கையில் கற்கள் கிடைக்காமல் இருக்க ஐயர்ன் மேன் தன் உயிரைத் தியாகம் செய்கிறார். கேப்டன் அமெரிக்கா மீண்டும் கற்களை வைக்கப் போய் வயதாகித் திரும்புகிறார். நிகழ்கால 5 நொடிகள் க்வாண்டம் தியரியிலான காலச் சக்கரத்தில் பல வருடங்கள்! அந்த வருடங்களில் அங்கேயே தன் துணையுடன் வாழ்கிறார். வயதான எதிர்கால நிகழ்காலத்தில் தன் கவசத்தை சாம்-இடம் ஒப்படைக்கிறார். இதையெல்லாம் மண்டையை முட்டி மோதி, என் பக்கத்தில் இருந்த என் பையனிடமும் பெண்ணிடமும் வெட்கத்தை விட்டுக் கேட்டுப் புரிந்துகொண்டவை. இந்தப் படம் வருவதற்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே இப்படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ போகவேண்டும் என்று உத்தரவாதம் வாங்கி இருந்தான் அபிராம். இப்படம் புரியவேண்டும் என்றால், இதற்கு முந்தைய பாகங்களைப் பார்க்கவேண்டும் என்று சொன்னதை நான் பீலா என்றே நினைத்தேன். ஆனால் அதில் ஓரளவுக்கு உண்மை இருக்கவே செய்கிறது. அப்படி இல்லை என்றால், என்னைப் போல் பக்கத்திலிருக்கும் பையன்களிடம் வெட்கப்படாமல் கேட்கத்தான் வேண்டியிருக்கும்.

கற்பனைக்கெட்டாத கதைப்பரப்பு. காலத்தை வைத்துக்கொண்டு வெறியாட்டம் ஆடி இருக்கிறார்கள். இனிஃபினிட்டி வார் போல சண்டைகள் அதிகம் இல்லை. 3 மணி நேரத்தில் 20 நிமிடங்கள் சண்டை வந்தாலே அதிகபட்சம். ஆனால் அந்த இருபது நிமிடத்தையும் அசரடிக்கிறார்கள்.

தமிழில் இதுபோன்ற தொடர்ந்து கைத்தட்டு பெறும் படங்களைப் பார்க்கவே முடியாது. ரஜினி விஜய் அஜித் என யார் படங்களிலும் இது சாத்தியமில்லை. ஒவ்வொரு அவெஞ்சர் வரும்போதும், ஒவ்வொருமுறை அவர்களுக்கு சக்தி வரும்போது கைத்தட்டு காதைப் பிளக்கிறது. அதிலும் அந்த 20 நிமிடச் சண்டையில் இப்படித் தொடர்ச்சியாகக் கைத்தட்டை தமிழ்நாட்டில் எந்தப் படத்திலும் நீங்கள் பார்த்திருக்கமுடியாது.

கால விளையாட்டின் போதான காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறார்கள். பழைய மார்வெல்ஸ் படங்கள் பார்த்திருந்தால் மிக நன்றாகப் புரியும். இல்லையென்றால் திருவிழாவில் ஆட்டைத் தொலைத்தவன் போலத்தான் விழிக்கவேண்டி இருக்கும். ஐயர்ன்மேனும் அவரது அப்பாவும் சந்திக்கும் இடங்கள், தோரும் அவரது அம்மாவும் சந்திக்கும் இடங்கள் எல்லாம் அட்டகாசம். இன்று நேற்று நாளை என்ற நம்மூர்ப் படத்தில் பார்த்த கற்பனையை அதன் உச்சத்துக்குச் சென்று கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள், கற்பனை ரீதியாகவும் காட்சி ரீதியாகவும். இசை, கிராஃபிக்ஸ், கேமரா என ஒவ்வொன்றும் அற்புதம்.

மொத்தத்தில் ஒரு மிரட்டல்.

திருஷ்டிப் பொட்டு, தமிழில் வசனங்களும் விஜய் சேதுபதியின் கொடூரமான பின்னணிக் குரலும். தாங்கமுடியவில்லை. ஐயர்ன் மேன் இவராலேயே பாதி செத்தார், மீதி கதையிலும் செத்தார். நல்லவேளை செத்தார், இல்லையென்றால் அடுத்த படத்திலும் விஜய் சேதுபதியைப் போட்டு நம்மை நடுங்க வைத்திருப்பார்கள்.

Share

மணிகர்னிகா

மணிகர்னிகா – அட்டகாசமான கமர்ஷியல் சிறுவர் திரைப்படம். சிறுவர் திரைப்படம், அவ்வளவே. உலகளவில் அதிகமாக ஹர்ஹர் மகாதேவ் என்ற விளி வரும் படம் இதுவாகவே இருக்கும். கங்கனா மிக அழகாக இருக்கிறார், ராணி என்பதையும் தாண்டி! கணவர் இறந்த பின்பும் பொட்டு மற்றும் அதன் பிரசாரம், எப்போதும் விரித்துப் போட்ட கூந்தல் – இவற்றுக்கெல்லாம் ஆதாரம் உண்டா அல்லது இன்றைய குரலின் பாதிப்பா எனத் தெரியவில்லை. குத்துப் பாட்டு போன்ற ஒன்றுக்கு அரசியே ஆடுவது ரொம்ப பெண்ணியமாகிவிட்டதோ? நான்தான் வளர வேண்டுமோ? பின்னணி இசையும் ஒளிப்பதிவும் செட்டிங்க்ஸும் கங்கனாவின் நடிப்பும் அட்டகாசம். கிராபிக்ஸ் சுமார். இன்னும் கவனமாக எடுத்திருக்கலாம்.

பிகு: என்க்கு ஈநாட் மேலே ம்ர்யாதெ இல்லே ரக பறங்கியர்த் தமிழ் வசனங்கள் இன்னுமாய்யா? ஹிந்தில எப்படி இருந்ததோ!

Share

சிகை

சிகை திரைப்படம் – நல்ல முயற்சி. இன்னும் மிகச் சிறப்பாக வந்திருக்கவேண்டியது ஏன் சறுக்கியது என்று யோசித்ததில்:

* நல்ல படங்களுக்கு ஏற்படும் லாஜிக் சிக்கல் மிக முக்கியமான பிரச்சினையாக உருவெத்துவிடும். பாலியல் புரோக்கராக வருபவர் இத்தனை கருணை கொண்டவராகவும் அறத்தைப் பார்ப்பவராகவும் நியாயமானவராகவும் இருக்கிறார். இத்தனை நல்லியல்புகள் கொண்டவர் ஏன் புரோக்கராக இருக்கவேண்டும் என்று பிடிபடவே இல்லை. இது இப்படித்தான் என்றோ, இது இப்படியும் இருக்கலாமே என்றோ கடந்துபோகமுடியவில்லை.

* என்னதான் புரோக்கர் நல்லவராக இருந்தாலும் ஒரு கொலையைக் கண்ட பின்பும் ஒரு பாலியல் தொழிலாளியைத் தேடிச் செல்வதெல்லாம் ஒட்டவே இல்லை. இதையும் மீறி நாம் நம்புவதன் காரணம், அந்த புரோக்கராக வரும் நடிகரின் அமைதியான யதார்த்தமான நடிப்பும், படமாக்கப்பட்ட விதமும்தான்.

* சிகை படம் பற்றிய ஆர்வம் வந்ததே கதிர் பெண் போன்ற வேடத்தில் இருந்த புகைப்படம் மூலமாகத்தான். அசரடிக்கும் வகையிலான மேக்கப்புடன் அந்தப் புகைப்படம் வெளியாகியிருந்தது. ஆனால் படத்தில் அந்தக் கதாபாத்திரம் வருவதோ மிகச் சொற்ப நேரம்தான். அதனால் மனம் அந்தக் கதாபாத்திரத்தையே எதிர்நோக்கி இருந்தது.

* கதிரின் பாத்திரம் தொடர்பான காட்சிகளைவிட, முதல் பாதி காட்சிகள் உயிரோட்டமாக இருந்தன. நம்பகத்தன்மை என்ற ஒன்றைத்தாண்டி, காட்சிகளின் படமாக்கம் நன்றாக இருந்தது.

* ஒரு பெண் தற்கொலை செய்துகொள்ள முயல்வதும் ஆண்மையவாதத்தைக் கேள்வி கேட்பதும் கணவன் கொலை செய்ய முயன்றான் என்று சொல்வதுமான காட்சிகள் தேவையற்றவை, வலிந்து திணிக்க முற்பட்டவை போன்ற தோற்றம் தருகின்றன. அதுவரை கதை செல்லும் பார்வையிலிருந்து ஒரு மாற்றம் திடீரென்று வருகிறது.

* ஒரே இரவில் இரண்டு கொலைகளை கதிர் செய்துவிடுவதையெல்லாம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக யோசித்திருக்கலாம்.

* கதிரின் திருநங்கை பாத்திரம் அத்தனை சிறிய இடைவெளியில் முடிந்துபோவதைத் தவிர்த்திருக்கலாம்.

* இந்தப் படத்தை ஒரு திரில்லர் போல யோசித்தது ஏன் என்று புரியவில்லை. அப்படி யோசிக்காமல் இருந்திருந்தால் மிக நல்ல படம் என்றாகி இருக்கும். ஆனால் முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பு இல்லாமல் போயிருக்கும். இப்போது படம் இரண்டும் இல்லாமல் வந்துவிட்டது.

கொஞ்சம் யோசித்து மெனக்கெட்டிருந்தால், எத்தனையோ மொக்கையான கேவலமான படங்களுக்கு மத்தியில் ஒரு டீசண்டான படம் என்ற இமேஜைத் தாண்டி வேறு ஒரு தளத்துக்குப் போயிருக்கும்.

Share

சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி

சூப்பர் டீலக்ஸ் – தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது திரைப்படம். முதல் திரைப்படமான ஆரண்ய காண்டம் வந்தபொழுது கவனிக்கப்படாமல், பிறகு தமிழின் முக்கியமான படம் என்ற தகுதியை அடைந்தது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் இந்தத் திரைபடம், சந்தேகமே இல்லாமல் தமிழின் முக்கியமான மைல்கல்களுள் ஒன்று. உண்மையில் ஒரு தடவை மட்டுமே பார்த்துவிட்டு இப்படத்துக்கு விமர்சனம் எழுதுவது நியாயமாகாது.

முக்கியமான குறிப்பு, படம் வயது வந்தவர்களுக்கான திரைப்படம். நிஜமாகவே வயதுக்கு வந்த திரைப்படம். எனவே குழந்தைகளுடன் செல்லாதீர்கள்.

இன்னொரு முக்கியமான குறிப்பு, என்னதான் ஸ்பாய்லர்ஸ் இல்லாமல் எழுத நினைத்தாலும் அது சாத்தியமாகாமல் போகலாம். எனவே, ஸ்பாய்லர்ஸ் அஹெட்.

தமிழின் திரையில் இதுபோன்ற மாயங்கள் நிகழ்வது அபூர்வம். அப்படி நிகழும்போது, அதை முதல் காட்சியில் பார்ப்பதெல்லாம் அபூர்வத்திலும் அபூர்வம். இப்படம் அதைச் சாத்தியமாக்கி இருக்கிறது. ஒரு படத்தின் ஒவ்வொரு காட்சியின் கலை பூர்வமானதாகவும், இயக்குநர் நினைத்து நினைத்து வாழ்ந்து செதுக்கி இருப்பதாகவும் அமைவது இப்படத்தில் மட்டுமே இருக்கமுடியும் என்று சொல்லிவிடலாம். ஒவ்வொரு காட்சியும் அழுத்தமாக மிக அழுத்தமாக நகர்வதோடு, பெரிய அதிர்ச்சியையும் கொண்டு வருகிறது. அதிர்ச்சி என்றால், ஒவ்வொன்று ஒவ்வொரு வகையிலான அதிர்ச்சி. கடைசி அரை மணி நேரம் வரை, இது போன்ற காட்சிகளைத் திரைப்படம் முழுக்க உலவ விட்டிருக்கிறார் இயக்குநர். நினைத்துப் பார்க்கமுடியாத சாதனை இது.

நடிகர்கள் ஒவ்வொருவரும் நடித்திருக்கும் விதம் வியப்பில் ஆழ்த்துகிறது. ஒரு தமிழ்ப் படத்தில், தாம் எப்பேற்படத்த படத்தில் நடிக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டு, அனைவரும் சிறப்பாக நடிப்பதெல்லாம் எப்போதாவது நிகழும் ஒன்று. அது இப்படத்தில் சாத்தியமாகி இருக்கிறது.

பின்னணி இசை, உச்சம். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, படம் முழுக்க தக்க வைத்திருக்கும் ஒரு மெல்லிய பதற்றம் அசாதாரணமானது. தேவையற்ற இடங்களில் இசை இல்லாமல் இருப்பதும் முக்கியமானது.

படத்தின் ஒவ்வொரு வசனங்களும் மிகக் கூர்மையானவை. எத்தனை முறை யோசித்து இப்படி எழுதி இருப்பார்கள் என்ற மலைப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் காட்சியாக்கமும் டோனும் ஒன்றுடன் ஒன்று கச்சிதமாகிப் பொருந்திப் போகின்றன.

படம் முழுக்க அசைவ வசனங்கள்தான். முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை. எனவே இப்படம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடும்.

புதிய அலை இயக்குநர்களின் படம் என்பதாலேயே ஹிந்து மதம் என்ன பாடு பட்டிருக்கும் என்ற அச்சத்தோடுதான் போனேன். ஆனால் இந்த முறை சிக்கி இருப்பது கிறித்துவ மதம். மிகத் தெளிவாக எடுத்த எடுப்பிலேயே இதில் வரும் மத ரீதியான காட்சிகள் யாரையும் புண்படுத்த அல்ல, கற்பனையாக மட்டுமே என்று காட்டுகிறார்கள். அடுத்து, ஒரு வசனத்தில் மிகத் தெளிவாக இது கிறித்துவ மதம் இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். பின்பு கிறித்துவ மதத்தின் மதப்பிரசார முறைகளை, இதுவரை எந்தப் படமும் செய்ய துணியாத அளவுக்கு, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் காட்டுகிறார்கள். அதிலும் மருத்துவமனையிலும் பிரசாரமா என்ற கேள்வியெல்லாம் கேட்கிறார்கள். கடைசிக் காட்சியில் வரும் வசனம், மிகத் தெளிவாக, ஜீசஸ் பெயரையும் கிறித்துவ மதத்தின் பெயரையும் குறிப்பிடுகிறது. என்ன ஒரு தெளிவு! அனைவரையும் குழப்பி, சென்சாரைக் குழப்பி, இப்படிச் சொல்லியும் வைப்பதெல்லாம், பின்நவீனத்துவத்தின் உச்சம் என்றே சொல்லவேண்டும்.

பல காட்சிகள் உறைய வைப்பவை. தன் கணவனுக்காகக் காத்திருக்கும் பெண்ணின் முன் கணவன் வந்திறங்கும் காட்சி, அந்தப் பையன் தண்ணீரில் தன் கையைத் தேய்த்து தேய்த்துக் கழுவும் காட்சி, தன் குழந்தை முன்பு பெண்ணாகிப் போன ஆண் அழும் காட்சி, அனைத்து காவல்நிலையக் காட்சிகளும், ரம்யா கிருஷ்ணன் மருத்துவமனையில் கதறும் காட்சி, ஃபஹத் ஃபாஸில் சார் சார் என்று சந்தோஷத்துடன் இறுதியில் கத்தும் காட்சி, சம்ந்தாவின் அலட்டல் இல்லாத நடிப்பு, மயக்கம் தெளிந்து உணர்வுபெற்ற பையன் அம்மாவிடம் சொல்லும் முதல் வசனம் – ஒவ்வொன்றும் அட்டகாசம். அதிலும் விஜய் சேதுபதி வழுக்கைத் தலையுடன் காவலதிகாரியைத் தாக்க வரும் காட்சி – தமிழ்த் திரையுலக வரலாற்றிலும் விஜய் சேதுபதியின் திரை வாழ்விலும் என்றென்றும் நினைவுகூரப்படும்.

இத்தனையோடு ஏமாற்றமே இப்படத்தில் இல்லையா என்றால், நிச்சயம் உண்டு. அவை – லாஜிக் தொடர்பானவை. அனைத்துக் கதைகளின் பின்னேயும் ஒரு சிறிய நம்பிக்கையின்மை இருக்கிறது. இப்படி நடக்கமுடியுமா, இப்படிச் செய்வார்களா என்று யோசிக்கிறோம். இது ஒரு பலவீனம். இதை ஏற்றுக்கொண்டு விட்டால் பொக்கிஷத்தின் கதவுகள் திறந்துவிடும். அடுத்த குறை, யதார்த்தங்கள் நிகழ்த்தும் பெரிய விஷயங்கள். பொதுவாகவே புதிய அலை இயக்குநர்களுக்கு இந்தத் தத்துவத்தின் மீது பெரிய ஈர்ப்பு இருப்பதைப் பார்க்கிறேன். இப்படத்திலும் இது உள்ளது. மூன்றாவது குறை, தத்துவ அறிவியல் ரீதியான குழப்பத்தைத் திரைப்படத்தில் காட்ட நினைத்தது. இது குறை என்பது எந்த நோக்கில் என்றால், அதுவரை பறந்த படத்தின் வேகம் தொடர்ச்சியான இந்த இரண்டு காட்சிகளில் எதிர்கொள்ளும் தடையின் காரணமாகச் சொல்கிறேன். மிஷ்கினின் அறிவுக்கண் திறக்கும் காட்சியும், ஏலியன் காட்சிகளும் பெரிய தடையைக் கொடுக்கின்றன. அதேசமயம் தவிர்க்கமுடியாத அளவுக்கு முக்கியத்துவமும் கொண்டவை. இன்னொரு குறை, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நான்கு பயணங்களின் தொடர் காட்சிகள். இதுபோன்ற படங்கள், ‘நேரம்’ தொடங்கி நிறைய வந்துவிட்டன. 

தமிழில் எப்போதாவது நிகழும் அபூர்வம் இப்படம். இன்னொரு முறை பார்த்தால் மட்டுமே, சாதிவெறி நாட்டுப் பற்று தொடர்பான விஷயங்கள், ஃபஹத் சமந்தா தொடர்பான உறவுச் சிக்கலெல்லாம் புரியும். நியாயமான விமர்சகர் இப்படத்தை இரண்டு முறையாவது பார்க்கவேண்டிய அவசியத்தை, அதிலும் மிகச் சிறந்த திரையரங்கில் பார்க்கவேண்டிய அவசியத்தை உணர்வார். நான் உணர்கிறேன். தவறவிடாதீர்கள். குழந்தைகளுடன் செல்லாமல் தனியாகச் செல்லுங்கள்.

– ஹரன் பிரசன்னா

Share

ஐரா: இரும்புக் கோடரியும் தங்கக் கோடரியும்

மார்ச் மாதத்தில் தேர்வுகள் முடிவடைந்ததுமே குழந்தைகளைத் திரையரங்குக்கு ஈர்க்கும் நோக்கில் பேய்ப்படங்கள் வரத் துவங்கிவிடும். இந்தமுறை வரும் அனைத்துப் பேய்ப்படங்களையும் என்ன ஆனாலும் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன். ஹே ராம்! முதல் போணி ஐரா. எப்படியாவது ஒரு ஹிட் பேய்ப்படத்தைத் தந்துவிடுவது என்ற வெறியில் இருக்கும் நயந்தாராவிடம் இன்னும் எத்தனை முறை சிக்கிக்கொள்வோம் என்று தெரியவில்லை.

பேய்ப் படம் என்றால் ஒரு காட்சியில் கூடப் பயம் இருக்கக்கூடாது என்பதே தமிழ்ப் பேய்ப்படங்களின் தலைவிதி. காஞ்சனா, அரண்மனை போன்ற கொடுமைகள் பெற்ற வெற்றி, தொடர்ச்சியாக காமெடிப் பேய்ப் படங்களைக் கொண்டு வந்தன. கொஞ்சம் நல்ல முயற்சிகளான, தமிழின் உருப்படியான பேய்ப்படங்களான பீட்ஸா, மாயா மற்றும் டிமாண்டி காலணி போன்றவை வசூலில் ஒப்பீட்டளவில் பின்தங்கிப் போக, அசட்டு காமெடிப் பேய்ப் படங்கள் வசூலைக் குவித்தன. இந்த ஆசையில் வந்த படங்களுக்கு மத்தியில் ஐரா கொஞ்சம் வித்தியாசமானது. ஆம், இதில் அசட்டு காமெடிகூடக் கிடையாது!

கதை என்ற ஒன்று இல்லவே இல்லாமல், ஒரு காட்சி கூடப் பயமே இல்லாமல், ஒரு காட்சி கூடச் சிரிப்பே இல்லாமல் ஒரு படம். அதுவும் பேய்ப் படம். அதற்கு ஒரு ஃப்ளாஷ் பேக். அந்த ஃப்ளாஷ் பேக், 1960களில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் அழுது வடிவதைவிடக் கூடுதலாக அழுது வடிகிறது. அதிலும் அந்த க்ளைமாக்ஸ், ஐயகோ.

நயந்தாராவுக்கு வயதாகிக்கொண்டே வருவது தெளிவாகத் தெரிகிறது. உடலைக் கச்சிதமாக வைப்பதன் மூலம் இளமையாகத் தெரிய முயல்கிறார். தெரிகிறார். முகம் காட்டிக்கொடுத்துவிடுகிறது. ஆனாலும் அழகாகவே இருக்கிறார். ஓம் சாந்தி! கருப்பு நயந்தாராவாக அவர் ஓவராக நடிப்பதெல்லாம் கொடுமையின் உச்சம். தாங்கமுடியவில்லை.

யோகி பாபு ஏன் வந்தார், குலப்புள்ளி லீலா ஏன் செத்தார் என்பதெல்லாம் படுபயங்கர சஸ்பென்ஸ் காட்சிகள். அதைவிட அந்தப் வண்ணத்துப் பூச்சி ஏன் வந்தது என்பதை இயக்குநர் இனி வரும் படத்தில் சொன்னால்தான் உண்டு. வண்ணத்துப் பூச்சியே வெறுத்துப் போகும் அளவு அதை கிராஃபிக்ஸில் காண்பிக்கிறார்கள்.

கருப்பு நிறத் தோல், ராசியற்ற பெண் என்ற கொடுமையையெல்லாம் அப்படியே பொறுமையாக, மெல்ல, நீளமாக, தூக்கம் வருமளவுக்குக் காட்டுகிறார்கள். அந்தக் குழந்தை பிறந்ததும் அப்பா இடி தாக்கி இறப்பதாக எடுக்கவெல்லாம் எதையும் எதிர்கொள்ளும் தைரியமான மனது ஒரு இயக்குநருக்கு இருக்கவேண்டும்.

இதையெல்லாம் தாண்டி சிவப்பு நயந்தாராவை கருப்பு நயந்தாரா ஏன் கொல்ல நினைக்கிறார் என்பதற்குக் காட்டப்படும் காரணம், ஐயையோ ரகம். ஹீரோ கருப்பு நயந்தாராவைக் காதலித்து, இரும்புக் கோடரியைத் தொலைத்தவனுக்கு வனதேவதையின் மூலம் தங்கக் கோடரி கிடைப்பது போல சிவப்பு நயந்தாரா கிடைக்க, ஒரு நிமிடம் பொறாமைப்பட்டுவிட்டேன். ஆனால் இயக்குநர் பொலிடிகல்லி கரெக்நெஸ்ஸைக் கைவிடாமல் இன்னொரு க்ளைமாக்ஸ் வைத்து நம்மை மந்திரித்து அனுப்பிவைக்கிறார்.

மிக சுமாரான படமாக்கம், நாடகம் போன்ற காட்சிகள் என்று எல்லாவிதமான மொக்கைகளும் ஒருங்கே அமைந்த ஒரு திரைப்படம். நயந்தாரா நடிக்காமல் இருந்தால் அழகாக இருக்கிறார். ஆனால் படத்தில் நடிக்கவேண்டிய கட்டாயம் வேறு. நம்மைக் கதறடிக்கிறார். அடுத்த பேய்ப் படமாவது நயந்தாராவுக்குச் சரியாக அமையட்டும்.

இந்தக் கொடுமையையெல்லாம் விஞ்சும் இன்னொரு கொடுமையைச் சொல்லாவிட்டால் முழுமையாகாது. ஐராவதம் என்ற யானையின் நினைவு சக்தியை மையமாக வைத்து இந்தப் படத்துக்கு ஐரா என்று பெயர் வைத்தார்களாம். :சுவரில் முட்டிகொள்ளும் ஜிஃப்:

நன்றி:
https://oreindianews.com/?p=4294

Share

KGF

பரிந்துரைத்திருந்தால்கூடப் பரவாயில்லை, இந்தப் படத்தைக் கேள்விப்பட்டதில்லையா, வாழ்க்கைல பாதி போச்சு என்ற அளவுக்கு ஏத்திவிட்ட அந்த விஷமிகள் சில நாள்களுக்கு என் கண்ணில் படாமல் இருப்பது நல்லது. அவ்வளவு நல்ல கன்னடப் படமா, என்னடா இது ஆக்ஸிமோரனாக இருக்கிறதே என்று பார்த்தேன்.

பாட்ஷா படத்தில் ரஜினிக்கு ஒரு பில்டப் கொடுத்து, எனக்கு இன்னொரு பேரு இருக்கு என்று ரஜினி சொல்லும்போது ஜிவ்வென்று ஏறுமே… ரஜினி ஸ்லோமோஷனில் நடக்க பின்னணியில் இசை ஒலிக்க… நான் ஒரு தடவை சொன்னா என்ற பஞ்ச்… ரஜினி அடிபம்ப்பை பிடுங்கி அடிக்க ஒருத்தன் ஒன்றரை கிலோமீட்டர் பறந்து விழ… இதெல்லாம் ஒரு படத்தில் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை வந்தால் எப்படி இருக்கும்? அதுவும் இது மட்டுமே வந்தால் எப்படி இருக்கும்? அதுவும் இவருக்கு என்ன பின்னணி, எப்படி இப்படி ஆனார் என்றெல்லாம் சொல்லாமல் இதை மட்டுமே காட்டிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அதுவும் சத்யராஜ் மாதிரி ஒருவர் நடித்தால் எப்படி இருக்கும்? அந்தக் கருமம்தான் கே ஜி எஃப்.

தொழில்நுட்ப ரீதியாக தமிழ் சினிமா எங்கோ இருக்க இப்போதுதான் கன்னட உலகம் மெல்ல விழிக்கிறது போலும். அதற்கே ஆஹா ஓஹோ என்று சொல்லிக்கொள்வார்கள் போல. பல காட்சிகள் ஏனோ தானோவென்று இருக்கின்றன. ஆளாளாளுக்கு ஹீரோ பற்றிய பில்டப்பை கிளைமாக்ஸ் வரை தருகிறார்கள். தோல் விடைத்து ரோமம் சிலிர்த்து ரத்தமெல்லாம் வெளியே பீய்ச்சி அடிக்கும் நிலை வந்தபோதும் இந்த ஹீரோவைப் புகழ்வதை நிறுத்தவே இல்லை. வயிற்றுக்குள் இருக்கும் கரு மட்டும்தான் ஹீரோவைப் புகழவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்தக் கண்றாவியில் அவருக்குக் காதல் வேறு வருகிறது. ஏனென்றே தெரியாமல் ஒரு பெண்ணும் காதலிக்கிறார். இந்தக் கொடுமைக்குள் இன்னொரு கொடுமையாக, சிறுத்தை, அந்தப்புரம் போன்ற படங்களில் வரும் கொடூரமான பகுதியில் தங்கி அங்கே தங்க வயல்களில் கட்டாயத்தின் பேரிலும் மிரட்டலின் பேரிலும் வேலை பார்ப்பவர்களைக் காப்பாற்றி… ரொம்ப கூலாக கிருஷ்ணா சொல்கிறார், இது பார்ட் 1 தான் பேபி, பார்ட் 2 இருக்கு, இப்பதான் ஆரம்பம் என்று. ஆள விடுங்கடா சாமிகளா என்று கதற வைக்கிறார்கள்.

முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை எல்லாரும் பன்ச் டயலாக் மட்டுமே பேசிய படம் என்ற வகையில், பன்ச் டயலாக் தவிர வேறு வசனங்களே கிடையாது என்ற வகையில், ஹீரோ ஸ்லோமோஷனில் வரும் காட்சிகளையெல்லாம் சாதாரணமாக எடுத்திருந்தால் ஒரு முக்கால் மணி நேரம் கம்மியாகி இருக்கும் என்ற வகையில், ஒரு ஹீரோ நாற்பது பேரை அடிப்பதெல்லாம் சும்மா 400 பேரை அடிப்பார் என்ற வகையில், கிளைமாக்ஸ் வரை என்னென்னவோ காட்சிகள் மாறி மாறி வந்த வகையில் இப்படம் ரொம்ப புதுசு என்றால், பிரதமர் ‘இந்திரா’வே இந்த வில்லனிஷ்ஹீரோவைப் பிடிக்க ஒரு படையையே அனுப்பிய வகையில்.. இதுக்கு மேல முடியலைங்க.

Share

யூரி – துல்லியமான தாக்குதல்

How is the Josh? Very high Sir!

பாகிஸ்தானுக்குள் எல்லை கடந்துசென்று அதன் தீவிரவாதப் பகுதிகளைத் (லாஞ்ச் பேட்) தாக்கிய இந்திய ராணுவத்தின் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நம் பெருமைகளுள் ஒன்று. மோடியைப் பற்றிப் பேசினாலே, பக்தாஸ் என்றும் எல்லையில் இந்திய ராணுவம் என்றும் பகடி செய்தும், தேசப்பற்று என்ற ஒன்றைக் கிண்டலுக்கும் கேவலத்துக்கும் உரியது என்றும் ஒரு பெருங்கூட்டம் இன்று ஆக்கிவரும் நிலையில், இத்திரைப்படத்தின் தேவை முன்னெப்போதையும்விட மிக அதிகமாக இருக்கிறது. அதாவது மோடியை ஓட்டுகிறோம் என்ற போர்வையில் இவர்களுக்குள்ளே இருக்கும் இந்திய வெறுப்பைக் கிண்டல் என்ற பெயரில் உலவவிடுகிறார்கள் என்பதெல்லாம் நமக்குப் புரியாமலில்லை. அர்பன் நக்ஸல்களின் ஃபேஸ்புக் அப்ரெசெண்டிகளுக்கு இத்திரைப்படத்தைக் காணிக்கையாக்குவது சரியானது.

கதை என்ற ஒன்று கிடையாது. இந்தியாவின் ராணுவத் தாக்குதல் என்ற மூன்று வார்த்தைகளே இலக்கு. இப்படி ஒரு படத்தை ஹாலிவுட்டில் நிறையப் பார்க்கலாம். இந்திய வரலாற்றின் முக்கியப் பக்கங்களை நம்மால் திரையில் கொண்டு வரமுடியவில்லை. பணத் தேவை தொடங்கிப் பல காரணங்கள் இருந்தாலும் நம்மால் இதுவரை இவற்றைத் திறம்படச் செய்யமுடியவில்லை என்பதே உண்மை. அதிலும் சமகால வரலாற்றுத் திரைப்படங்கள் என்றால் நம்மைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவார்கள். குறைந்தது ஹிந்தியிலாவது சில படங்கள் வந்திருக்கின்றன. அந்தவகையில் நம்மைப் பெருமை கொள்ளச் செய்யும் ஒரு படமாக இத்திரைப்படம் வந்திருக்கிறது.

முதலில் இத்திரைப்படத்தின் குறைகளில் இருந்து துவங்குவோம். திரைக்கதை என்ற ஒன்றை உருவாக்குவதற்காக தேய்வழக்கை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அல்ஸைமைர் அம்மா, தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழக்கும் அக்காவின் கணவர், இறக்கும் சிப்பாய்க்கு ஒரு அழகான மகள் மற்றும் கர்ப்பிணி மனைவி, இவர்களுக்கு மத்தியில் ஹீரோ. இவை எதுவுமே இல்லாமல் நேரடியாக சர்ஜிகல் ஸ்ட்ரைக்-க்குள் போயிருந்தாலும் சரியாகவே இருந்திருக்கும். ஆனால் உணர்வு ரீதியாக இணைக்கிறேன் என்று இயக்குநர் இப்படிச் செய்திருக்கிறார் போல.

ஒரு பிரசாரப் படம் என்று பார்த்தால் திரைக்கதையை இப்படி அமைத்துக்கொள்வதில் தவறில்லை. இயக்குநரும் இப்படி இப்படத்தை பாஜகவுக்கான பிரசாரப் படமாக எடுத்துக்கொண்டிருக்கலாம் என்றே யூகிக்கிறேன். என்னதான் ஒரு பொதுவான ஒன்றுக்காகப் போராடினாலும் அதன் பின்னே ஒரு சுயநலமும் அல்லது தனிப்பட்ட காரணமும் உள்ளது என்பது மிக வெற்றிகரமான சூத்திரமே. அதிலும் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழக்கும் மேஜரின் கர்ப்பிணி மனைவியும் மகளும் அழும் அந்த இரண்டு நிமிடக் காட்சி நெஞ்சை உலுக்குகிறது. (அந்த இரண்டு பேரும் ஜஸ்ட் ஒரு நிமிடத்தில் எப்படி நடிக்கிறார்கள்!)

மோடி, அஜித் தோவல், ராஜ்நாத் சிங், மனோஹர் பரிக்கர், அருண் ஜெட்லி (?) என மிகத் தேவையானவர்களை மட்டுமே படத்தில் காண்பிக்கிறார்கள். அஜித் தோவல் மட்டுமே மிக நீண்ட நேரம் படம் முழுக்க வருகிறார். மற்றவர்கள் எல்லாம் சில காட்சிகள் மட்டுமே. மனோகர் பரிக்கராக வரும் நடிகரின் தேர்வு அசரடிக்கிறது. மனத்தின் மூலையில் இனம்புரியாத சோகமும் வருகிறது. ராஜ்நாத் சிங்காக நடித்திருக்கும் நடிகரைப் பார்த்தால் அவரைப் பார்த்து பரிதாபப்படுவதா ராஜ்நாத் சிங்கைப் பார்த்து பரிதாபப்படுவதா என்று புரியாமல் போகிறது.

ஒரு ட்ரோனை வைத்துக்கொண்டு இத்தனை தூரம் செய்யமுடியுமா என்பது புரியவில்லை. இதைக்கூடவா பாகிஸ்தானால் கண்டுபிடித்திருக்கமுடியாது என்பதும் தெரியவில்லை. பாகிஸ்தானில் இருக்கும் உளவாளிகள் இந்தியர்களைவிட அதிகம் உதவுகிறார்கள்! ஆனால் சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்பது வெற்றிகரமான ஒன்று. அதன் உண்மைத்தன்மையின் பின்னணியில்தான் இதையும், இதுபோன்ற பிற குறைகளையும் கடக்கவேண்டி இருக்கிறது.

படத்தின் துல்லியங்களே மிகப் பெரிய பலம். இதுபோன்ற உண்மைகளைப் படமாக எடுப்பவர்கள் அமெர்ச்சூர்த்தனமாக எடுத்து வைத்து நம்மைக் கலங்கடிப்பார்கள். இத்திரைப்படத்தில் அக்குறை எங்கேயும் இல்லை. எதிலும் துல்லியம். அசரடிக்கும் ஒளிப்பதிவு, வியக்க வைக்கும் ஒலித் துல்லியம் – இந்த இரண்டும் நம்மைக் களத்துக்கே கொண்டு செல்கின்றன.

இறுதிக் காட்சிகள் மட்டும் அரை மணி நேரம் – வெறும் துப்பாக்கிச் சூடும் எறி குண்டுகளுமே. இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன அந்த ஒலிகள்.

யூரி பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து 19 இந்திய ராணுவத்தினரைக் கொன்றொழிக்கும் பாகிஸ்தானுக்குப் பாடம் புகட்டுகிறது இந்தியா. துல்லியமான பிசகாத சர்ஜிகல் ஸ்ட்ரைக்கில் ஒரு இந்திய ராணுவத்தினர்கூட பலியாகவில்லை என்பதுதான் இதில் முக்கியமான விஷயமே. ஐஎன்ஏ பேட்டியில் மோடி இதைக் குறிப்பிட்டிருந்தார். “சர்ஜிகல் ஸ்ட்ரைக் தோல்வி என்றாலும்கூடப் பிரச்சினையில்லை, ஒரு வீரர்கூட உயிரிழக்கக்கூடாது” என்று. இந்திய ராணுவத்துக்கு மோடியின் ஆட்சி நிச்சயம் பொற்காலம் என்றே சொல்லவேண்டும்.

இப்படம் நிச்சயம் பாஜகவின் பிரசாரமாகத்தான் பார்க்கப்படும் என்றாலும், மிகத் தெளிவாக, மிக சப்டிலாக இதை எடுத்ததில் வென்றிருக்கிறார்கள். எங்கேயும் பிரசாரத் தொனி இல்லை. எப்படியோ பாஜகவுக்கு புத்தி வந்திருக்கிறது என்பது பெரிய ஆச்சரியம். அதிலும் இறுதிக்காட்சி சட்டென முடிகிறது. எவ்வித விளக்கமும் அறிவுரையும் வேண்டுதல்களும் இல்லை. பெரிய ஆசுவாசம்.

ஒலி/ஒளிப்பதிவின் துல்லியத்துக்காகவும் விக்கி கௌஷலின் நடிப்புக்காகவும் (ராஸியில் நடித்தவர்), ஒரு முழுமையான இந்திய சமகால வரலாற்றுத் தருண திரைப்படமாக வந்ததற்காகவும் நிச்சயம் பார்க்கவேண்டும்.

நன்றி: https://oreindianews.com/?p=2988

பின்குறிப்புகள்:

  1. அல்ஸைமர் போதும். திரைப்படங்களில் இந்தக் கொடுமையைப் பார்க்கமுடியவில்லை. பாவம், விட்ருங்க எங்களை.
  2. சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்தபோது நான் வலம் இதழில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்லவும்: http://www.valamonline.in/2017/02/surgicalstrike.html
Share