Archive for கவிதை

தோட்டத்து வெளியில் ஒரு பூ – கவிதை

தோட்டத்து வெளியிலும் சில பூக்கள் என்கிற வண்ணதாசனின்

சிறுகதைத் தலைப்பை எங்கேயோ பார்த்தேன். அந்த வரி தந்த

பாதிப்பில் வந்த கவிதை இது.

தோட்டத்து வெளியில் ஒரு பூ

கண்ணெதிரே பூத்துக்குலுங்கும்

மலர்களையொதுக்கி

பிறவொன்றைத் தேடும் என் பிறவிக்குணம்

பெரும் சம்மட்டியடி வாங்கியிருக்கிறது

வழியெங்கும் என்னுடன் நடந்துவரும்

பருவகாலங்களை விலக்கி வைத்து

எங்கோ அலைந்துகொண்டிருக்கும்

வசந்த காலத்தைத் தேடும் நிமிடங்கள்

கடந்த காலங்களாக

நிகழ்கால வேர்வை நெஞ்சுக்குழிக்குள்

கொஞ்சம் இதமாயும்

ஜீவனற்றுப் போயிருந்ததாக

நானே உருவாக்கிக்கொண்ட நிலத்தில்

என் கவனத்திலிருந்து தப்பியிருக்கிறது

வெய்யில் சூட்டில்

நிறைய பளபளப்பு

தோட்டத்திற்குச் சொந்தமான,

தோட்டத்து வெளியில் ஒரு பூ

Share

உயிர்த்தெழும் மரம் – கவிதை

காலையில் கண்விழிக்கிறது மரம்

இரவின் மௌனத்திற்குப் பின்

பறவைகளின் கனவுக்குப் பின்

பூமியிறங்கும் பனியுடன்

அன்றைய நாளின் பலனறியாமல்

மரம் இசைக்கும் மௌனமான சங்கீதம்

பறவைகளின் சத்தத்தில் அமிழ்ந்துவிடுகிறது

பெருங்காற்றில் அசையும்போது

விலகும் தாளம், சுருதி பேதத்தை

அதிகாலையில் மீட்டெடுக்கும் மரம்

வாகனங்களின் சத்தத்தில் மீண்டும் தவறவிடுகிறது

முன்பனியில்

அல்லது பின்னோர் மழைநாளில்

உயிர்த்தெழுகிறது

குழந்தைக்கான உத்வேகத்துடன்

இத்தனையின் போதும்

எப்போதும் ஓய்வதில்லை

மரத்தினூடாக நிகழ்ந்துகொண்டேயிருக்கும்

அதன் பேரமைதிக் கச்சேரி

Share

முதலாம் சந்திப்பு – கவிதை

சாதாரண சம்பாஷணையினிடையே

அந்த மூன்றாம் கேள்வியும் கேட்கப்பட்டுவிட்டது.

முதலிரண்டு கேள்விகளுக்குச் செய்தது போலவே

தெரிந்த ஒன்றை சொல்லப் பிரியப்படாதது போன்ற அசைவுகளுடன்

கேள்விகளைச் சுற்றிச் சுற்றி என் மனம்

கேட்போனில் முடிகிறது

கேட்போன் எப்போதுமே

என் பதிலுக்காகக் காத்திராமல்

என் மௌனத்துக்காகவே கேட்கிறானாய் இருக்கலாம்

இந்த சுவாரஸ்யமான ஒருகை “செவ்வி”யின்

அடுத்த கேள்விக்குப் போகுமுன்

ஒரு கேள்வி நான் கேட்கவேண்டியிருக்கிறது

அவன் என்ன சாதியென.

அதன் பின் அச்செவ்வி

மீவேகம் எய்தலாம்

அல்லது

சிநேகபாவம் கூடலாம்

இரண்டில் எந்தவொன்றையும் சரிசெய்யும் என் அடுத்த கேள்வி

அவனின் அடுத்த கேள்விக்கு முன் தயாராகிவிட்டால்

கைகுலுக்கல், சிகரெட், பீர், இன்னபிற என்பதாக நான்.

என்னை வரையறுக்கும் வேகத்தில் அவன்.

இடையில் கிடக்கின்றன

சில சொற்களும்

அவை நிரப்பாமல் விட்ட ஒரு பெரிய பள்ளமும்

இன்னும் பயன்படுத்தப்படாத சில பிரயோகங்களும்.

Share

மௌனம் – கவிதை

நமதே நமதான நம் மௌனம்

படுக்கை அறையின் தடுப்பைத் தாண்டிய போது

தன்னைச் செறிவாக்கிக்கொண்டது

மூன்றாம் கட்டைக் கடந்தபோது

கொஞ்சம் கூர்மையாக்கிக்கொண்டது

சமையலறையைத் தாண்டியபோது

நிறம்கூட்டிக்கொண்டது

செறிவான, கூர்மையான, கடும் நிறத்துடன் கூடிய மௌனம்

பின்வாசலைக் கடக்குமுன்

அதைப்பற்றிய பிரக்ஞையில்லாமல்

நானோ நீயோ

என்னையோ உன்னையோ தொடாமல்

ஜன்னலுக்கு வெளியில் அலையும்

ஒன்றுமில்லாத ஒன்றை ஊன்றிக்கவனித்துக்கொண்டிருக்கிறோம்

அதற்குள் இன்னொரு மௌனம் தலைதூக்கிவிடும் அபாயத்தை அறிந்தும்

தூங்கிக்கொண்டிருக்கிறது

நமதே நமதான ஆசைகளும், வெளிர் நீல வெளிச்சத்தில் நிர்வாணங்களும்;

அப்போது

அங்கே

உருவாகிவிட்டிருந்த, சீக்கிரம் வெடிக்கப்போகிற

பலூனின் வாழ்நாளில் அமிழ்ந்திருக்கிறது

நம் தன்முனைப்பின் ஆழமான அடையாளங்கள்

Share

கண்ணாடி – கவிதை

எப்போதும் எதையாவது

பிரபலித்துக் கொண்டிருக்கிறது

சில நேரங்களில் தேவையானதை

பல நேரங்களில் தேவையற்றதை

அன்றொருநாள் உள்நுழைந்த குருவியொன்று

இரண்டே நொடிகளில் சட்டென தரைதட்டியது

இரத்தச் சிதறல்களுடன்

கண்ணாடியில்தான் பார்த்தேன்

பின்பொருசமயம்

தங்கை அவசர அவசரமாய்

என் நண்பனுக்கு முத்தம் கொடுத்துப் போனாள்

செய்வதறியாமல் சலனங்களின்றி நானும் கண்ணாடியும்

இன்னொரு சமயம்

போர்வை கசங்கும் என் முதல் வேகத்தில்

ஒருவரை ஒருவர் விழுங்கிக்கொண்டிருந்தபோது

கண்ணாடி பார்த்துக்கொண்டிருந்ததை

நான் பார்த்தேன் கொஞ்சம் லஜ்ஜையோடு

இந்தக் கண்ணாடி அலுப்புக்குரியது

கால நேரங்களின்றி கட்டுப்பாடின்றி

பிரதிபலித்து பிரதிபலித்து

நாம் பார்க்காத நேரங்களில்

கண்ணாடி பிரதிபலிப்பதில்லை என்ற

புனைவை ஏற்றி வைத்தேன்

குறைந்தபட்சம் என் சுவாரஸ்யத்திற்காகவேணும்

Share

பழைய போட்டோ – கவிதை

கருப்பு-வெள்ளை வழுக்கைத்தலையரின்

விவரம் தெரியவில்லை யாருக்கும்

அம்மா யோசித்துக்கொண்டேயிருக்கிறாள்

அவர் சவால் விட்ட மேனிக்கு

கைகளைக் குறுக்கக் கட்டி

ஒரு சிரிப்பையும் சிந்தி.

முன்னும் பின்னும் தேடியதில்

ஒரு விவரம், மித்ரா ஸ்டூடியோ.

அம்மா முனகினாள்

அவர் வீட்டிலேயே மறந்திருப்பார்களென

மறுநாள் ·பிரேம் போட்டு

நடுக்கூடத்தில் மாட்டி வைத்தேன்

அம்மா மித்ரா ஸ்டூடியோவின்

நினைவுகளைச் சொல்லத் தொடங்கினாள்.

Share

ஆங்கோர் நட்பு – கவிதை

நீ காய் நகற்றவேண்டிய வேளை

உன் நீண்ட நேர யோசனையின் பின்னே

தொடர்கிறது என் கவனம்

சில நாள்களாய்

வெற்றிச்சுகத்தைவிட

மற்றவரின் தோல்வியில் சுகம் காணும் குரூரம்

காய் நகற்றத்தொடங்கியதை

நானும் உணர்கிறேன்

இப்படி வெட்டிக்கொள்வதைக் காட்டிலும்

வெவ்வேறு கட்டங்களிலிருந்து கைகுலுக்கிக்கொள்ள

இருவருமே விரும்புவதை

நிகழவிடாமல்,

சாய்கின்றன நமது சிப்பாய்கள்

நமது தன்முனைப்புக்கான போட்டி நிற்கும்வரை

தொடரப்போகும் ஆட்டங்களில்

உன்னை வீழ்த்த நானும்

என்னை வீழ்த்த நீயும்

சிறைபடாமல் இருக்கும்பொருட்டு

எனது பொய்க்குதிரையையும் யானையையும்

நான் கைவிடத் தயாராகும்போது

நீயும் இறங்கிவரத் தயாராகவேண்டுமென்பதே

உனது நினைவும்

நிஜத்தில்

போட்டியென்ற ஒன்றில்லை என்று சொன்னாலும்

இருவரின் கையென்னவோ

வாளன்றைச் சுழற்றியபடியேதான்.

முடிவில்லாமல்

உனக்கும் எனக்குமான சதுரங்கம்.

Share

இந்தப் பூக்கள் விற்பனைக்கு (கவிதை)

மரத்தடி யாஹூ குழும போட்டிக்கு உள்ளிட்ட கவிதையைப் படிக்க சொடுக்கவும்.

இவர் எனக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். இவர் யாரென்று தெரியவில்லை. ஒரு எழுத்தாளர் என்பது மட்டும் தெரிகிறது. நான் இரண்டு பேரைச் சந்தேகித்து வைத்திருக்கிறேன். அவர்களாக இருக்குமா என்று தெரியவில்லை.

அவர் எழுதிய கடிதத்தில் “அவர் முகமூடி அல்ல என்றும் அதை நான் எனது வலைப்பதிவில் சொல்லவேண்டும்” என்று கேட்டுக்கொன்டிருந்தார்.

சொல்லிவிட்டேன்.

அவர் ஏன் என்னிடம் இதைச் சொன்னார் என்பது எனக்குப் புரியவில்லை. நான் சந்தேகிக்கும் நபர்கள்தானோ என்று என் சந்தேகம் வலுப்பெறுகிறது. அப்படி இல்லாமல் போனால் ஒரு கரும்பு ஜூஸ் குடிக்கவேண்டியிருக்கும்.

Share