Archive for அரசியல்

Sridhar Subramaniyam on Taliban

11.10.2025

ஸ்ரீதர் சுப்ரமணியம் வழக்கம் போல் பாஜகவைத் திட்ட ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். எப்போதும் போல் காவிகளைத் திட்டுவதோடு அவர் நிறுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் அவரது நேரம், தாலிபானையும் வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டார். ஒரு படி மேலே போய், முகத்தை மூடாத பெண்களைப் பார்த்தால் தாலிபன் அமைச்சருக்கு மூடு வருமே என்றெல்லாம் கேட்டுவிட்டார். அவர் நினைத்துக் கொண்டு எழுதியது, ‘நாம் திட்டுவது தாலிபனைத்தான், லைக் அள்ளப் போகிறது’ என்று. ஆனால் கமெண்ட் போட்டவர்கள் அவர் தாலிபனைத் திட்டுவதாக நினைக்கவில்லை. அப்புறம் என்ன நடக்கும்? அவரைக் காவியாக்கிவிட்டார்கள்.  அதிலும் மயிலாப்பூர் மாமி என்றெல்லாம் கமெண்ட் கேவலமாகப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

காலம் முழுக்க என்னதான் நீங்கள் கரடியாகக் கத்தினாலும் நீ பாப்பான்தானே என்று சொல்லக்கூடிய டெம்ப்லேட் ஞாநி தொடங்கி இன்று வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. (ஸ்ரீதர் என்ன ஜாதி என்று எனக்குத் தெரியாது)

அது எப்படியோ போகட்டும், அங்கே கமெண்ட் போடுபவர்களுக்கு… நீங்கள் பாஜகவைத் திட்டுங்கள் அல்லது ஸ்ரீதரைத் திட்டுங்கள், ஆனால் ஸ்ரீதர் காவி என்று சொல்லி பாஜகவை அசிங்கப்படுத்தாதீர்கள்.

Sridhar’ post:

https://www.facebook.com/share/p/1GvLV377vx

13.10.2025

எதிர்பார்த்தது போலவே ஸ்ரீதர் சுப்பிரமணியம் தனது நடுநிலைமையைப் பறைசாற்றிக் கொள்ள கொஞ்சம் கூட அடிப்படை நியாய உணர்வே இல்லாமல் ஆர்எஸ்எஸ்-ம் தாலிபனும் ஒன்றுதான் என்று தீர்ப்பளித்து விட்டார். 

ஏன் இவர்களையெல்லாம் மறந்தும் கூட ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் ஆதரிப்பதில்லை என்பதும், இப்படிப்பட்டவர்கள் அடிப்படைவாதிகளால் திட்டப்படும் போது ஏன் ரசிக்கிறார்கள் என்பதும் இந்த அராஜகத்துக்காகதான். 

இப்படிப்பட்டவர்கள் நம் அனுதாபத்தை எதிர்பார்ப்பதில்லை என்பது எனக்கும் தெரியும். ஆனாலும் என் நியாய உணர்வுக்காக மட்டுமே இது போன்ற பதிவுகளை எழுதுகிறேன்.

https://www.facebook.com/share/p/1DBuveS7Zt

Share

Justice Gavai And Rakesh Kishore

நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் செருப்பு வீசியது கண்டிக்கத் தக்கது. கடும் நடவடிக்கை எடுக்கவேண்டிய ஒரு செயல். இந்த நிலைப்பாட்டில் இருந்து நாம் எள்ளளவும் பிறழக் கூடாது.

கவாய் சொன்ன தீர்ப்பை நானும் ஏற்கவில்லை. அதேபோல், பல நீதிமன்றங்களின் பல செயல்பாடுகள் கேள்விக்குரியதாகவும், குழப்பம் தருவதாகவும் இருக்கின்றன. ஒரு நீதிபதி வீட்டில் கட்டு கட்டாகச் சிக்கிய பணமெல்லாம் நீதித்துறையின்மீது நம்பிக்கையின்மையைப் பல மடங்கு கூட்டின. இவை எல்லாமே உண்மை. ஆனால் இந்த நேரத்தில் இவற்றையெல்லாம் சொல்லி, ஹிந்து மதக் கடவுளை கவாய் ஏளனம் செய்ததற்காக ராகேஷின் செயலை நாம் ஆதரிப்போம் என்றால், அது தவறான முன்னுதாரணமாகவே அமையும்.

இந்த நேரத்தில் திராவிட ‘முற்போக்காளர்கள்’ இதுதான் சாக்கு என்று, மிகவும் நியாயவாதிகள் போலப் பேசுகிறார்கள். அவர்களுக்கு நாம்தான் அந்த இடத்தைக் கொடுக்கிறோம் என்பதையும் நாம் நினைவில் வைக்கவேண்டும்.

இதே போன்ற ஒரு செயலை, ஹிந்து ஆதரவு நீதிபதிக்கு ஹிந்து எதிர்ப்பு வழக்கறிஞர் செய்திருந்தால், இந்நேரம் இந்த ‘முற்போக்காளர்கள்’ அவருக்கு கலைமாமாமணி விருதைக் கொடுத்திருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்களது இரட்டைத் தனத்தையும், தேவைக்கேற்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டு அதுவே நேர்மையான, உலகமே விதந்தோதும் நீதியான செயல் என்று தம்பட்டம் அடித்துக்கொள்வதையும் நாம் லட்சத்து ஓராவது முறையாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இதில் பெரிய நியாயவான்கள் போல, ‘அந்த நீதிபதியின் தீர்ப்பும் சரியல்ல’ என்று சதாரணமாகச் சொல்பவர்களைக் கூட ஜாதி ரீதியாகத் தூற்றிக்கொண்டு அலைவதையும் பார்க்கத்தான் செய்கிறோம். இவர்கள் என்றுமே பொருபடுத்தத் தகுந்தவர்கள் அல்ல. தொடர்ந்து எக்ஸ்போஸ் செய்யப்படவேண்டியவர்கள். இவர்களுக்கு இருப்பது இரண்டே இரண்டுதான், ஒன்று ஹிந்து மத வெறுப்பு, அடுத்து பிராமணக் காழ்ப்பு. இதற்காக இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

நீதிபதி கவாயின் ஹிந்து மதக் கடவுள் மீதான விமர்சனமும், ராகேஷ் அவர் மேல் செருப்பு எறிந்ததும் வேறு வேறு என்று நாம் இந்நேரத்தில் பார்க்கவேண்டும். சரியாகச் சொல்வதென்றால், கவாயின் செயலைவிட ராகேஷ் செய்தது அராஜகமானது. கண்டிப்போம்.

Share

Puthiya Thalaimurai Blocked in Arasu Cable

புதிய தலைமுறை முடக்கப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனங்கள்.

நாம் என்னதான் கண்டனம் தெரிவித்தாலும், நாளையே இந்தப் புதிய தலைமுறை திமுகவுக்குச் சொம்படிக்கத்தான் போகிறது என்றாலும், இப்போது ஓர் அநியாயம் நடக்கும்போது அதைக் கண்டிக்கவேண்டியது அவசியம்.

இப்படியெல்லாம் நடந்தாலும் தமிழ் ஊடகங்கள் ஒருநாளும் திருந்தப் போவதில்லை என்றாலும், இந்த முடக்கம் அநியாயமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஜெயலலிதா ஆட்சியில் இப்படி எதாவது நடந்தால் வீறுகொண்டு எழுந்து, இதென்ன ஆட்சி என்றெல்லாம் முழக்கமிட்ட ‘முற்போக்கு’ எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் வாலைச் சுருட்டி அமர்ந்திருப்பதை நாம் தொடர்ந்து கவனிக்க வேண்டியது முக்கியமானது.

எழுத்தாளர்களுக்கு, ‘முற்போக்காளர்களுக்கு’ மனிதர்களை விட உயர்ந்த நிலை கொண்டவர்களுக்கு நிச்சயம் இரண்டு கொம்பு இருக்கிறது என்றுதான் நானும் நம்ப விரும்புகிறேன். என்ன பிரச்சினை என்றால், திமுக என்று வரும்போது மியாவ் என்று கத்திவிடுகிறார்கள்.

Share

Statement of Padaippalar Sangamam

கரூர் துயரத்தில் எழுத்தாளர்கள் அரசியல் செய்யக் கூடாது!
‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை

#
நாள்: 05.10.2025.
#

41 உயிர்களை பலிகொண்ட கரூர் துயரம் தொடர்பாக எழுத்தாளர்கள் எவரும் அரசியல் செய்யக் கூடாது என்று ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை:
___________________

கடந்த 2025, செப். 27ஆம் தேதி, ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் தலைவரும் நடிகருமான நடிகர் விஜயின் பிரசாரப் பயணம் கரூர் வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இது தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. கரூரில் பலியானோருக்கு ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம்.

இந்த நிகழ்வு விபத்தா, சதியா என்ற கோணத்தில் விவாதங்கள் தற்போது நடந்து வருகின்றன. இது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தை மாநில அரசு அமைத்திருக்கிறது. அவரும் தனது விசாரணையைத் தொடங்கிவிட்டார். தவிர கரூர் மாவட்ட காவல் துறையும் தேவையான புலன் விசாரணையை நடத்தி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் தொடர்ந்த நீதிமன்ற வழக்குகளும் விசாரணையில் உள்ளன.

இந்த நிலையில்தான், ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில் 2025 அக். 2ஆம் தேதி கூட்டறிக்கை ஒன்றை சிலர் வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கை, கரூர் கொடிய நிகழ்வுக்கு நடிகர் விஜய் தரப்பு மட்டுமே காரணம் என்று தெரிவித்திருக்கிறது. விஜய் ரசிகர்களின் கட்டுப்பாடற்ற தன்மை கண்டிக்கத் தக்கதே.

போதிய முன்னேற்பாடுகளைச் செய்யாதது, கூட்டத்தை நிர்வகிக்கத் தெரியாதது, நடிகர் என்ற பிராபல்யத்தை முறையாகப் பயன்படுத்தாதது, பொறுப்பின்மை ஆகியவை த.வெ.க. கட்சியின் தவறுகள். குறிப்பாக, நடிகர் விஜய் பொறுப்புள்ள அரசியல் தலைவராக நடந்து கொள்ளவில்லை என்பதை நாம் கண்டித்தாக வேண்டும்.

ஆனால், கரூர் துயர நிகழ்விற்கு விஜய் தரப்பு மட்டுமே காரணம் அல்ல என்பதை தமிழகத்தில் உள்ள பெரும்பாலோர் அறிந்தே உள்ளனர். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாதது, குறுகிய இடத்தில் அனுமதி அளித்து அரசியல் நோக்குடன் செயல்பட்டது ஆகியவை மாநில அரசின் தவறுகள்.

மேலும், கண்மூடித்தனமாகக் கூடி நெரிசலை ஏற்படுத்திய கட்டுப்பாடற்ற ரசிகர்கள் மற்றும் சினிமா மோகம் கொண்ட மக்களுக்கும் இதில் இணையான பொறுப்பு உண்டு.

இந்த மூன்று தரப்பினரும் நடந்த துயரத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே பொதுவான கருத்து. இதனையே நாமும் வலியுறுத்துகிறோம்.

ஆனால், ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளவர்கள், மாநில அரசின் தவறுகள் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதையே நோக்கமாகக் கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இதில் கையொப்பமிட்டுள்ள அனைவருமே திமுக, கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள். தங்கள் கூட்டறிக்கையை திமுக ஆதரவு எழுத்தாளர்கள் என்ற பெயரில் இவர்கள் வெளியிட்டிருந்தால் யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால், தாங்கள்தான் ஒட்டுமொத்த தமிழக எழுத்தாளர்களின் பிரதிநிதிகள் போன்ற தோற்றத்தை இவர்கள் உருவாக்குவதை ஏற்க முடியாது.

இலக்கியம், கலை மற்றும் எழுத்துலகில் ‘தாதா’ மனநிலையுடன் சிலர் செயல்படுவதையும், தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு உதவுவதற்காக கூட்டறிக்கை வெளியிடுவதையும், நடுநிலையான படைப்பாளர்களால் ஏற்க முடியாது.

இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டிருப்பவர்களில் பெரும்பாலோர், இந்திய அரசின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது இந்தியாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டவர்கள் என்பதையும் நாம் மறந்துவிட இயலாது.

நாட்டுநலனோ, மக்கள் மீதான நேசமோ இன்றி கூட்டறிக்கை வெளியிட்ட இந்தக் குறுங்குழுவை அன்றே ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் கண்டித்தோம். இவர்களின் இயல்பிலேயே ஒருசார்புத் தன்மையும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான சிந்தனைகளும் இருக்கின்றன. எனவேதான், தற்போது இந்தக் குழுவினர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையின் தேவை என்னவென்று ஆராய வேண்டியிருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அக். 3ஆம் தேதி விசாரணை நடைபெற்றுள்ளது. அப்போது நீதிமன்றம் இரு தரப்புக்கும் முக்கியமான கேள்விகளை எழுப்பி, சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் செல்லும் வாய்ப்பும் உண்டு.

இந்தத் தருணத்தில், பொதுக்கருத்து உருவாக்கம் மூலமான நிர்பந்தத்தை நீதித்துறை, தனிநபர் விசாரணை ஆணையம், காவல்துறை ஆகியோர் மீது அளிப்பதற்காகவே, திமுக, கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனரோ என்று சந்தேகிக்கிறோம். இது குற்றம் தொடர்பான விசாரணை நடைமுறையைப் பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எழுத்தாளர்களும் கலைஞர்களும், சமூகத்தின் மனசாட்சியாகவும் அரசுக்கு உண்மையை எடுத்துக் கூறும் துணிவுள்ளவர்களாகவும் இருக்க வேண்டுமே ஒழிய, அரசின் தவறுகளை நியாயப்படுத்துபவர்களாக இருந்துவிடக் கூடாது.

எனவே, ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில், தமிழகத்தை ஆளும் அரசியல் கட்சிக்கும் மாநில அரசுக்கும் ஆதரவாக வெளியிடப்பட்டுள்ள இந்தக் கூட்டறிக்கையை உரிய கண்டனத்துடன் நிராகரிக்கிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் இந்தக் குறுங்குழுவின் நிலைப்பாட்டை ஏற்கவில்லை என்பதை ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் தெளிவுபடுத்துகிறோம்.

கரூர்த் துயரம் தொடர்பாக நியாயமான விசாரணைகள் நடைபெற வேண்டும்; குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்; இதுபோன்ற விவகாரங்களுக்கு நிலையான தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

-தமிழக நலனில் அக்கறையுடன்…

‘திராவிட மாயை’ சுப்பு, சென்னை
இசைக்கவி ரமணன், சென்னை
கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், சென்னை
பேராசிரியர் ப.கனகசபாபதி, கோவை
கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சென்னை
எஸ்.ஆர்.சுப்ரமணியம், ஈரோடு
கவிஞர் ரவி சுப்பிரமணியன், சென்னை
கவிஞர் பெ.சிதம்பரநாதன், கோவை
கவிஞர் லட்சுமி மணிவண்ணன், நாகர்கோவில்
பத்ரி சேஷாத்ரி, சென்னை
மோகன் ஜி ஷத்ரியன், சென்னை
பி.டி.டி.ராஜன், சென்னை
இயகோகா சுப்பிரமணியம், கோவை
அர்ஜுன் சம்பத், கோவை
பேராசிரியர் உமையொருபாகன், நாகர்கோவில்
வானவில் க.ரவி, சென்னை
எஸ்.கே.கார்வேந்தன், தாராபுரம்
பா.பிரபாகர், சென்னை
ம.வெங்கடேசன், சென்னை
என்.சி.மோகன்தாஸ், சென்னை
டாக்டர் சீனிவாசகண்ணன், நாகர்கோவில்
பத்மன், சென்னை
நம்பிநாராயணன், சென்னை
வ.மு.முரளி, திருப்பூர்
ஹேமா கோபாலன், சென்னை
மீனாட்சி ஸ்ரீதர், சென்னை
ஜவஹர் வெங்கடசாமி, சென்னை
பாஸ்கர் சுப்பிரமணியம், சென்னை
ஒமாம்புலியூர் ஜெயராமன், சென்னை
ஜெயகிருஷ்ணன் கோபால், சென்னை
முனைவர் ஜெயஸ்ரீ சாரநாதன், சென்னை
ஆமருவி தேவநாதன், சென்னை
செங்கோட்டை ஸ்ரீராம், சென்னை
சந்திர.பிரவீண்குமார், சென்னை
ஹரன் பிரசன்னா, சென்னை
ஜடாயு, பெங்களூரு
பி.ஆர்.மகாதேவன், சென்னை
சத்தியப்பிரியன், சேலம்
எஸ்.ஜி.சூர்யா, சென்னை
கோதை ஜோதிலட்சுமி, சென்னை
பி.வெங்கடாசலபதி, திருநெல்வேலி
முனைவர் காயத்ரி சுரேஷ், சென்னை
அருட்செல்வப்பேரரசன், திருவொற்றியூர்
கவிஞர் சுரேஜமீ, சென்னை
கவிஞர் உமாபாரதி, சென்னை
கவிஞர் பாபு பிரித்திவிராஜ், நாகர்கோவில்
கவிஞர் சுதே.கண்ணன், நாகர்கோவில்
கவிஞர் அமுல்ராஜ், திருவண்ணாமலை
கவிஞர் மீரா வில்வம், மும்பை
கவிஞர் லட்சுமி சாஹம்பரி, பெங்களூரு
கவிஞர் திருமலைக்கண்ணன், ஸ்ரீரங்கம்
கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம், திருப்பூர்
கவிஞர் சிவதாசன், திருப்பூர்
கோவிந்தராஜ், திருப்பூர்
விசாலி கிருஷ்ணன், சென்னை
கமலநாதன். சென்னை
கவிஞர் பால்முகில், சென்னை
கவிஞர் துரைசிங், கன்னியாகுமரி
கவிஞர் இயற்கை, செஞ்சி
கவிஞர் நந்தலாலா, சென்னை
கவிஞர் சுராகி, திருவொற்றியூர்
கவிஞர் மீ.விஸ்வநாதன், சென்னை
கவிஞர் விவேக்பாரதி, சென்னை
கவிஞர் எஸ்.சுவாதி, சென்னை
கவிஞர் தில்லைவேந்தன், சென்னை
கவிஞர் ஹரிஹரன், சென்னை
கவிஞர் முரளிகிருஷ்ணா, சென்னை
கவிஞர் விஜயகிருஷ்ணன், சென்னை
கலைச்செல்வி ஸ்ரீநிவாஸ், சென்னை
வழக்கறிஞர் எம்.விஜயா, சென்னை
ராதா எஸ்.தேவர், சென்னை
ராமசுப்பிரமணியன், சென்னை
ராகவேந்திரா, சென்னை
நடராஜ சாஸ்திரி, சென்னை
ஜனனி ரமேஷ், சென்னை
முனைவர் செ.ஜகந்நாத், மதுரை
சோ.விபின்ராஜ், கன்னியாகுமரி
ஜா.விநாயகமூர்த்தி, விழுப்புரம்
அசோக்ராஜ், கும்பகோணம்
சே.வெங்கடேசன், திருவண்ணாமலை
பத்மா சந்திரசேகர், சென்னை
பொன்.மூர்த்திகன், பறங்கிப்பேட்டை
நிழலி, பெரம்பலூர்
பாவலர் கா.நேசன், திருகளப்பூர்
ச.மோகன், பெரம்பலூர்
தேவரசிகன், கும்பகோணம்
ஜி.பி.இளங்கோவன், கும்பகோணம்
மா.செல்வகுமார், கல்லூர், கும்பகோணம்
கே.மணிமாறன், சென்னை
திருமை பா.ஸ்ரீதரன், சென்னை
பி.வீரராகவன், சென்னை
பேராசிரியர் ஜோஸபின்மேரி, பாளையங்கோட்டை
பேராசிரியர் பாலசுப்பிரமணியம், திருநெல்வேலி
வி.வி.பாலா, சென்னை
விதூஷ், சென்னை
கே.ஜி.ஜவர்லால், சென்னை
முனைவர் சடகோபன், சென்னை
முனைவர் தர்மசேனன், சென்னை
சக்திவேல் ராஜகுமார், சென்னை
ஜெயந்தி நாகராஜன், சென்னை
கே.கந்தசாமி, கோவை
புதுகை பாரதி, புதுக்கோட்டை
தசரத் ஷா, காஞ்சிபுரம்
அருண்பிரபு, சென்னை
ஆனந்த்பிரசாத், சென்னை
துக்ளக் சத்யா, சென்னை
ஆர்.ராமமூர்தி, சென்னை
குமரேசன், சென்னை
திவாகர், சென்னை
தேவப்பிரியா, சென்னை
ஆண்டனி, சென்னை
அரவிந்தா நாஞ்சில், சென்னை

மற்றும் பலர் (200க்கு மேற்பட்டோர்)

#
##

(இந்த அறிக்கையை ஆதரிக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் தங்களை பின்னூட்டத்தில் இணைக்கலாம்).


ஒரே ஓர் அறிக்கை படைப்பாளர் சங்கமம் சார்பாக. கதறல் ஆரம்பம்.

இவர்களுக்குள்ளே இப்படி ஒரு நெட்வொர்க்கா என்று அங்கலாய்ப்பு.

முன்பு ஒரு முறை காலச்சுவடு இதழில் சுரேஷ்குமார இந்திரஜித் ஒரு பேட்டியில், ‘இப்போதெல்லாம் பாஜக ஆதரவுக் குரல்கள் எல்லாம் கேட்கின்றன’ என்ற ரீதியில் அங்கலாய்த்ததற்கு இணையான, கருத்துச் சுதந்திரப் பீராய்வு தொடக்கம்.

அத்தனை பேரும் பாஜக ஆதரவாளர்கள் என்று ஒரு கண்டுபிடிப்பு. இதே கண்டுபிடிப்பு, போலி முற்போக்காளர்கள் காய்த்து ஊற்றிய அறிக்கையில் ‘அத்தனை பேரும் அர்பன் நக்ஸல்கள்’ என்று கண்டுபிடிக்கத் தெரியவில்லை.

’இந்த அறிக்கைக்கு நன்றி, எத்தனை பேர் பாஜக ஆதரவாளர்கள் என்று கண்டுகொண்டோம்’ என்று உலகப் பிரசித்தி பெற்ற ஒரு கமெண்ட். அதே வெங்கயாத்தைத்தான் நாங்களும் காய்ச்சி ஊற்றிய அறிக்கையில் கண்டுகொண்டு இதனை வெளியிட்டிருக்கிறோம்.

இதில் சிகரம் வைத்த திராவிட மாடல் கமெண்ட் ஒன்று உண்டு. அத்தனை பேரையும் விட்டுவிட்டு, அர்ஜூன் சம்பத் எழுத்தாளரா என்ற கேள்வி. ஏன் அர்ஜூன் சம்பத்தை மட்டும் கேட்கவேண்டும்? நூல் நூல் என்று சொல்லிக்கொண்டே, உண்மையில் திராவிட மாடலுக்கு உறுத்துவது என்ன ஜாதி வெறி என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை என்பதற்கு இந்த கமெண்ட் இன்னும் ஓர் ஆதாரம்.

அந்த காய்ச்சி ஊற்றிய அறிக்கையில் சமூகச் செயற்பாட்டாளர்கள் இருக்கலாமாம், ஆனால் நேர்மையான அறிக்கையில் சமூகச் செயற்பாட்டாளர்கள் வரக் கூடாதாம்! எரியட்டும் எரியட்டும்.

Share

ACER 2024 Report

ACER 2024 அறிக்கை தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து:

  • தமிழ்நாட்டு அரசு என்ன செய்தாலும் அமைதியாக இருந்துவிட்டு, அது என்ன என் ஜி ஓ அல்லது தனியார் அமைப்புகளை ஆதரித்தாலும் அமைதியாக இருந்துவிட்டு, தமிழ்நாட்டு அரசு மேல் இந்த நான்கு ஆண்டுகளிலும் ஒரு குற்றச்சாட்டுக் கூடச் சொல்லாமல் தந்திரமாக அமைதியாக இருந்துவிட்டு, இன்று ஏசர் கல்வி அறிக்கை மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறது என்று சொன்னால், அதைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும்…
  • ஏசர் அறிக்கை வடநாட்டை உயர்த்திப் பிடிக்கிறதா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் நிச்சயம் அது தமிழ்நாட்டைத் தாழ்த்திச் சொல்லவில்லை. ஆதாரம்? எப்படி உங்களிடம் வடநாட்டை அது உயர்த்திச் சொல்கிறது என்பதற்கு ஆதாரம் இல்லையோ, அப்படியே என்னிடமும் ஆதாரம் இல்லை. உங்களிடம் இருக்கும் கட் ஃபீலிங் போல எனக்கும் ஒரு கட் ஃபீலிங்கும், கூடவே நேரடி அனுபவுமும் உள்ளன.
  • அரசுப் பள்ளிகளின் நிலை நாற்பதாண்டுகளாகவே இப்படித்தான் இருக்கிறது. இதில் திமுக, அதிமுக என்கிற பேதமே தேவையில்லை. இரண்டு கட்சிகளும் மாணவர்களுக்கு பொருளாதார ரீதீயாக (உணவு தருவது, செருப்புத் தருவது, முட்டை, லேப்டாப் போன்ற மிக முக்கியமான முன்னெடுப்புகள்) உதவுவதில் இந்திய அளவில் முன்னோடியாகச் செயல்பட்டார்களே ஒழிய, இவற்றைவிட முக்கியமான கல்வி சார்ந்த முன்னெடுப்பில் தேங்கித்தான் இருந்தார்கள். இருக்கிறார்கள்.

//நான் பத்தாம் வகுப்புக்குச் சென்றபோது எங்கள் வகுப்பாசிரியர் நார்மன் சார் செய்த முதல் வேலை, 9ம் வகுப்பில் முழுவாண்டுத் தேர்வில் அனைவரும் உண்மையாக வாங்கிய மதிப்பெண்கள் என்ன என்பதை வாசித்ததுதான். அதுவரை முழுவாண்டுத் தேர்வு மதிப்பெண்களை நாங்கள் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. பள்ளியிலிருந்து ப்ரொமோடட் என்று ஒரு அஞ்சலட்டை வரும், அவ்வளவுதான். அன்று அவர் வாசித்த மதிப்பெண்கள் பலரைக் கலக்கமடையச் செய்தது. எங்கள் வகுப்பில் மொத்தம் 42 பேர் என்ற நினைவு. அரசு உதவி பெறும் பள்ளி. தமிழ் வழிக் கல்வி. ஐந்து பாடங்களிலும் 35 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 15 பேர் கூட இல்லை. மற்ற அனைவரும் குறைந்தது ஏதேனும் இரண்டு பாடங்களிலாவது 15 அல்லது 16தான். ஒரே ஒரு நல்ல விஷயம், தமிழை எழுத்துக் கூட்டி வாசித்துவிடுவார்கள். எழுதச் சொன்னால் முடிந்தது கதை. ஆங்கிலம் – சுத்தம். ஆங்கிலத்தின் மேலேயே தமிழில் எழுதிப் படித்து ஒப்பித்தவர்களே பலர்.//

அப்போதே இந்த லட்சணம்தான். இன்று நிலை முன்னேறிவிட்டது என்று நினைக்க எந்த முகாந்தரமும் இல்லை.

  • என் ஜி ஓ மூலமாக சர்வே எடுத்தார்கள், யாரென்றே தெரியாதவர்கள் சர்வே செய்தார்கள் என்பதெல்லாம் சால்ஜாப்பு. அப்படிப் பார்த்தால் வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்துத் தயாரிப்பதே ஆசிரியர்கள்தான். அவர்கள் திமுகவுக்கு ஆதரவாகப் பல வேலைகளைச் செய்தார்கள் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?
  • அடுத்த உருட்டு, சாம்பிள் குறைவானது என்பது. உண்மையில் சாம்பிள் கூடுதலாக இருந்திருந்தால், அறிக்கை இன்னும் மோசமாக நம்மைக் கழுவி ஊற்றி இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, 8ம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவனைத் தமிழ் வாசிக்கச் சொன்னேன். அவனது தமிழ்ப் பாடப் புத்தகத்தில் வரும் ஒரு பாடம். அதுவும் அந்த வகுப்பு தொடங்கி 9 மாதங்களுக்குப் பிறகு. அவனால் ஒரு வரியைக் கூட ஒழுங்காக வாசிக்க முடியவில்லை. (வீடியோ.)

இதில் இன்னொரு விஷயத்தையும் சேர்த்தே சொல்லவேண்டும். மாணவர்களைத் தமிழ் படிக்க வைக்க நம்மால் முடியவில்லையே தவிர, தேர்வில் அவர்களை மதிப்பெண் வாங்க வைக்க முடியும். ஆம். ஒரு தேர்வில் எப்படி மாணவர்களை மதிப்பெண் வாங்க வைக்க முடியும் என்பதில் நம் ஆசிரியர்கள் உச்சம் தொட்டு அதையும் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் நீட் போன்ற தேர்வுகள் அவசியமாகின்றன.

பல உதாரணங்கள் இதற்கு உண்டு. ஒன்பதாம் வகுப்பில் தமிழ் அ ஆ தெரியாமல் வரும் பையனைக் கூட, பத்தாம் வகுப்பு முழுத் தேர்வில் நம் ஆசிரியர்களால் 60 மதிப்பெண்கள் வாங்க வைக்க முடியும். இது நடந்திருக்கிறது. இதனால்தான், இனி ப்ளூ ப்ரிண்ட் கிடையாது என்று இந்த அரசு முடிவு செய்தபோது நான் அதை வரவேற்றேன்.

எனவே நம் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் தரம் இப்படித்தான் உள்ளது. இதனால் தனியார்ப் பள்ளியின் தரம் கொடிகட்டிப் பறக்கிறது என்று அர்த்தமல்ல. அவையும் இப்படியே. கொஞ்சம் மேலே இருக்கலாம், அவ்வளவுதான்.

  • ஆசிரியராக இருக்கும் எழுத்தாளர் சுகிர்தராணி மனம் நொந்து எழுதி, பெரிதும் பேசப்பட்ட பதிவைக் கீழே கொடுத்திருக்கிறேன். அவர் திராவிட எதிரி அல்ல. அவர் எழுதியது ஜூன் 2019ல். அவர் சொல்வதன் விரிவான அம்சமே ஏசர் 2024 அறிக்கை.
  • நீதிபதி சந்துரு எனக்கு எந்த வகையிலும் ஏற்பில்லாதவர். அவர் திராவிட எதிரி அல்ல. ஆதரவாளர். அவர் எழுதிய கட்டுரையில் இருந்து சில வரிகள். (முழுமையான கட்டுரை லின்க்.)

//கல்விச் சீரழிவும் போலி மதிப்பெண்களும்

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் +2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 11% கூடியுள்ளது: 2012 – 80.23%; 2013 – 84.44%; 2014 – 87.71%; 2015 – 90.06%; 2016 – 91.79%. கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் கூறிய தகவலின்படி, இன்றைய மாணவர்களுக்கு அவர்களது விடைத்தாள்களில் அளிக்கப்பட்ட மதிப்பெண்களின்படி தேர்ச்சி பெற்றவர்களின் விழுக்காட்டை கணித்தோமானால் அது 52%-ஐத் தாண்டாது என்பதே உண்மை நிலவரம்.//

இது தமிழ்த் திசையில் வெளியானது. இதுவும் திராவிட அரசுக்கு எதிரான பத்திரிகை அல்ல. ஜால்ரா பத்திரிகைதான்.

நீதிபதி சந்துருவின் கட்டுரையைவிட ஏசர் 2024 அறிக்கை பொறுமையாகவே பேசுகிறது என நினைக்கிறேன்.

  • ஓர் அறிக்கையைத் திட்டுவது, அந்த அறிக்கையைத் தந்த நிறுவனத்தை மத்திய அரசின் ஜால்ரா என்பதெல்லாம் சரிதான். ஆனால் நம் தமிழ்நாட்டு நிலவரம் நமக்கே தெரியாதா? நீங்களே பத்துப் பள்ளிகளைத் தேர்ந்தெடுங்கள். தமிழ் ஆங்கிலம் கணிதம் மூன்றிலும் 5ம் வகுப்புத் தரத்திலான கேள்விகளைத் தேர்ந்தெடுங்கள். 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களிடம் விடைகளைக் கேளுங்கள். ஏசர் 2024 அறிக்கை தெய்வம் என்று உங்களுக்கே புரியும்.
  • கடன் வாங்கிக் கழித்தல் தெரியாத மாணவர்கள் 10ம் வகுப்பில் இருப்பார்கள். இரண்டிலக்கப் பெருக்கல் தெரியாதவர்கள், எளிமையான சிறிய வார்த்தைகள் கொண்ட ஒரு தமிழ் வரியைத் திக்கி திக்கிக் கூட வாசிக்கத் தெரியாதவர்கள் 10ம் வகுப்பில் இருப்பார்கள். இதைக் கேலியாகச் சொல்லவில்லை, வருத்தத்துடன் சொல்கிறேன்.
  • முதலில் நம் நிலைமை என்ன என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும். பின்னர்தான் நாம் உண்மையில் தமிழ்நாட்டை, தமிழை, தமிழ் மாணவர்களைக் காப்பாற்ற முடியும்.
  • அரசு என்ன செய்யலாம்? ஒரு மாதம் ஆசிரியர்களுக்கு நேரம் கொடுத்து, அவர்களால் ஆசிரியர் என்னும் புனிதப் பணியில் இனியும் வெற்றிகரமாகச் செயல்படமுடியாது என்றால், வேறு அரசுப் பணிகளுக்கு மாறிக் கொள்ள வாய்ப்புத் தரலாம். புதிய, இளைமையான, படிப்பறிவு கொண்ட ஆசிரியர்களை நியமிக்கலாம். ஆசிரியர்களுக்கான பொதுத் தேர்வைக் கட்டாயப்படுத்தலாம். ஒரு மாதம் ஆசிரியர்களுக்குத் தரப்படும் விடுமுறையின்போது ஆன்லைனில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் ‘எப்படி வகுப்பெடுப்பது’ என்ற நுணுக்கங்களை, ஆசிரியர்கள் அல்லாத நிபுணத்துவம் பெற்றவர்களால் சொல்லித் தரச் சொல்லலாம். இது ஆசிரியர்களுக்குப் பள்ளிப் பாடத்தை எப்படி அணுகுவது எனப்தைச் சொல்லித் தரும்.
  • ஏசர் 2024 தமிழர்களை அவமானப்படுத்துகிறது, தமிழ்நாட்டுக்கு எதிராக மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்கிறது, அது ஒரு பொய் புரட்டு என்று நிரூபிப்பதற்குப் பதிலாக, உண்மையாகவே இது சரியான நேரத்தில் விடப்பட்ட எச்சரிக்கை என்பதாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டை எப்படி இந்திய அளவில் கல்வியில் முதல் மாநிலமாக்குவது என்று யோசிக்கலாம். அடுத்த பத்தாண்டுகளுக்கான வரைவுத் திட்டத்தை உருவாக்கலாம். அதுதான் நம் மாணவர்களுக்கு நல்லது. அப்படியில்லாமல், தமிழ்நாட்டு அரசுக்கு ஜால்ரா அடிக்க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ நீங்கள் காவடி எடுப்பீர்கள் என்றால், அது உங்கள் விருப்பம்.
Share

Dharmasthala ‘murders’

தி நியூஸ் மினிட் மற்றும் பிற இடதுசாரி-ஹிந்து எதிர்ப்பு பெய்ட் ஊடகங்கள் தர்மஸ்தலா கோயிலின் புனிதத்தைக் கெடுக்க உள்நோக்கத்துடன் செயல்பட்டன.

2012ம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட 17 வயதுச் சிறுமி தொடர்பான பழைய வழக்கைத் திடீரெனக் கையில் எடுத்துக்கொண்டு SM media போஸ்ட் ஒன்று வருகிறது.

அடுத்து ஒரு வீடியோவில், ஒரு முகமூடி அணிந்த மனிதர், கோயிலுக்கு அருகில் 1,000-க்கும் மேற்பட்ட பெண்களின் சடலங்களைத் தானே புதைத்ததாகக் கூறுகிறார்.

தி நியூஸ் மினிட், இந்தச் செய்தி உண்மையா என்று சரிபார்க்காமல், அல்லது சரி பார்க்க விரும்பாமல் வேண்டுமென்றே அந்தச் செய்தியைப் பெரிய அளவில் விவாதத்திற்கு உட்படுத்திப் பரப்புகிறது. தன்யா ராஜேந்திரன் ஆர்வமாக இதைச் செய்கிறார்.

கர்நாடகா ஆந்திரா கேரளா எனப் பல இடங்களில் செய்யப்பட்ட கொலைகள் அனைத்தும் தர்மஸ்தலாவை ஒட்டிப் புனையப்படுகின்றன.

இறுதியில், இது ஒரு பொய் என்றும், தர்மஸ்தலாவிற்கு எதிரான பிரசாரம் என்பதும் கண்டறியப்படுகின்றன. தர்மஸ்தலாவை ஒட்டிய இடங்களில் தோண்டிய போது ஒரே ஒரு பிணம் மட்டுமே கிடைத்தது. அதுவும் எப்போதோ தற்கொலை செய்து கொண்ட ஒருவரது பிணம்.

முகமூடி அணிந்த மனிதர் அந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறத் தான் வற்புறுத்தப்பட்டதாக ஒப்புக்கொள்கிறார்.

முழுமையாக,‌ சுருக்கமாக அலசுகிறது இந்த வீடியோ.

நான்கு நாள்களுக்கு முன்பு சில உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. என்னதான் நடந்தது, அங்கு நிலவும் மர்மம் என்ன என்பதைக் கண்டறிய நாம் இன்னும் சில காலம் பொறுத்து இருக்க வேண்டும் போல.

https://www.thehindu.com/news/cities/Mangalore/dharmasthala-case-sit-seizes-five-skulls-100-bones-at-banglagudde/article70062233.ece

***

தர்மஸ்தலா கொலைப் புரட்டு தொடர்பாக போலி டாக்ஸின் இந்த வீடியோவை நிச்சயம் பார்க்கவும். (பலர் ஏற்கெனவே பார்த்திருப்பீர்கள்.)

நேராகக் களத்துக்குச் சென்று, அதுவரை மீடியாவில் சொல்லப்பட்டவற்றில் எவை எல்லாம் பொய் என்பதை ஆதாரத்துடன் சொல்கிறார்.

மீடியாவில் எப்படி எல்லாம் பேசினார்கள் என்பதையும், கொலை நடந்த இடத்தையும் பார்த்தால் நமக்குத் தெரியும், இந்தத் தமிழ்நாட்டு பெய்ட் மீடியா எப்படியெல்லாம் நேரேடிவ் செட் செய்கிறது என.

போலிடாக்ஸ் விக்னேஷ் எப்போதுமே அட்டகாசமாக வீடியோ வெளியிடக் கூடியவர். இதில் ஸ்க்ரிப்ட் இன்னும் அட்டகாசம்.

Share

Navarathri 2025 – Neo India

ஜிஎஸ்டி தொடர்பான சீர்திருத்தங்களைப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இந்தியா முழுமைக்கும் பாஜக திணறிய நிலையிலும், அமெரிக்கா தொடர்ச்சியாக இந்தியாவுக்குக் கொடுத்து வரும் நெருக்கடியால் இந்தியப் பொருளாதார நிலைமை என்ன ஆகுமோ என்று எதிர்க்கட்சிகள் பயமுறுத்தி வந்த நிலையிலும், இவை இரண்டையும் எதிர்கொள்ளும் விதமாக மோடி இன்று தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடையே பேசி இருக்கிறார்.

இந்தியா முழுமைக்கும் ஜிஎஸ்டி குறைப்பு தரப் போகிற பயனைத் தெளிவாகப் புரிய வைத்திருக்கிறார்.

அமெரிக்கா பற்றி நேரடியாக எதுவும் பேசாவிட்டாலும் இந்தியா தன்னைத்தானே பொருளாதார ரீதியாகக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

இந்தியப் பொருட்களைப் பயன்படுத்துவது பற்றிக் குறிப்பாக பேசியிருக்கிறார். இதனால் அனைவரும் இந்தியப் பொருள்களை வாங்குகிறார்களோ இல்லையோ, இந்தியப் பொருளாதாரம் இன்குளுசிவ் ஆக தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறதோ இல்லையோ, ஆனால் ஒன்று முக்கியமாக நடக்கும். அது இந்திய அளவில் அனைவருக்கும் ஒரு தைரியத்தை கொடுக்கும். உலக அளவில் இந்தியாவின் பொருளாதார இன்க்ளூசிவ்நெஸ் குறித்துப் பேசப்படும்.

அனைவரும் இல்லாவிட்டாலும் பலர் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் சுதேசிப் பொருட்களை வாங்க இயன்றவரை ஆர்வம் காட்டினால், (இதன் பொருள் முழுமையாக விதேசிப் பொருள்களைப் புறக்கணிப்பதல்ல, அது இயலாது என்பது எல்லோருக்கும் தெரியும்) அது உண்மையிலேயே இந்தியப் பொருளாதாரத்திற்கு பயனுள்ளதாகவும் அமையும்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு பேசி இருக்கிறார் பிரதமர்.

ஏன் மோடி போன்ற ஒரு தலைவர் தேவை என்பதை இந்த நேரத்தில் தொலைக்காட்சியில் தோன்றிப் பேசியதன் மூலம் மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்தி இருக்கிறார் மோடி.

நவராத்திரியில் நயோ இந்தியா பிரகாசமாகத் தொடங்கட்டும்.

Share

Hypocrisy of dog lovers

நாயைக் கொல்ல வேண்டும் என்று சொல்பவன் ஃபாசிஸ்ட். காட்டுமிராண்டி. யூதர்களைக் கொல்லச் சொன்ன ஹிட்லரைப் போன்றவன். கையில் கத்தியுடன் திரியும் மதவாதி. பக்கத்து வீட்டுக் குழந்தையை கொல்லச் சொல்பவனும் நாயைக் கொல்லச் சொல்பவனும் ஒனறு. பூனைக்கு உணவளிக்கப் பிச்சை எடுக்கும் கருணைவாதிகளின் குரல்கள் ஃபாசிஸ்ட்டுகளால் அமுக்கப்படுகின்றன. சாருவின் அதிரடி அறச்சீற்றக் கட்டுரை!

நாய்க்கு மட்டும்தான் கருணை. மற்ற எந்த உயிரையும் கொன்று பதமாகச் சமைத்து ருசித்துச் சாப்பிடலாம். அதில்‌ தவறில்லை. ஆனால், தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வழி தெரியாமல், அரசு கைவிட்டுவிட்ட நிலையில், நாயைக் கொல்லச் சொல்லிப் பாதிக்கப்பட்டவர்கள் சொன்னால் அவர்கள் ஃபாசிஸ்டுகள்.

நாயைக் கொல்லாமல் வேறு தீர்வுகள் இருந்தால் நிச்சயம் யாரும் நாயைக் கொல்லச் சொல்லப் போவதில்லை. ஆனால் எத்தனையோ தீர்வுகள் இருந்தும் அத்தனை உயிரினங்களையும் கொன்று ரசித்து உண்ணும் மனிதர்கள், நாய்க் கொலையைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள்.

நாயைக் கொல் என்று வாய் வார்த்தையில் செல்பவனை, தினம் தினம் ஒவ்வொரு உயிரினத்தையும் கொன்று தின்று கொண்டிருப்பவரோ அல்லது இவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பவர்களோ பேசலாமா?

பின்குறிப்பு: தெரு நாயைக் கொல்வதில் எனக்கும் வருத்தம் இருக்கிறது. நான் அந்தத் தீர்வை ஏற்கவும் இல்லை. அதே சமயம் தெரு நாய்கள் பெருக்கம் கட்டுப்படுத்த வேண்டும். தெரு நாய்களின் உயிரை விட மனிதர்களின் உயிர் முக்கியமானது. தெரு நாய்கள் கடிக்காமல் இருக்குமானால் அதை ஏன் வெறுக்கப் போகிறார்கள்? நாய்களை வீட்டில் வைத்து வளருங்கள். இல்லை என்றால் அமைதியாக இருங்கள்.

Share