Archive for அஞ்சலி

பரமக்குடி சொல்லும் செய்திகள்

வாசிக்க: http://www.tamilpaper.net/?p=4086

Share

ராஜமார்த்தாண்டன் – மனதின் கலைஞன்

கட்டுரையை வாசிக்க – தமிழ் ஹிந்து.காம் செல்லவும்.

Share

ஒரு நண்பனின் கதை இது

முன்குறிப்பு: இது கையறுநிலையில் எழுதப்பட்ட சுயபுலம்பல் மட்டுமே.

ஜெயகாந்தன் ஒருதடவை ‘இறந்தவனைக் கண்டு அழும் மனிதன் ஒவ்வொருவனும் தன் இறப்பை அதில் கண்டே அழுகிறான்’ என்ற ரீதியில் எழுதியிருந்தார். இதுகுறித்து நிறைய யோசித்திருக்கிறேன். இதில் எங்கோ உண்மையிருக்கிறது, ஆனால் அது சரியாகச் சொல்லப்படவில்லை என்றும் தோன்றியது.

நேற்று (17-11-2008) காலையே ஒரு மரணச் செய்தியாக, நண்பன் ஒருவனின் அகால மரணச் செய்தியாக, மிகப்பெரிய இடியைப் போல வந்திறங்கியது அச்செய்தி. என் வயதுதான். ப்ளஸ் 1, ப்ளஸ் 2 என்னுடன் படித்தான். நல்ல சிகப்பில், நிறைய முடியுடன், கொஞ்சம் பூசினாற் போல், மிக அழகாக இருப்பான். கல்லூரியில் பலர் இயற்பியல் எடுக்க, நான் மட்டும் வேதியியல் எடுத்தேன். அவன் மட்டும் கணிதம் எடுத்தான்.

நான் பத்தாம் வகுப்பு படித்தது மதுரையில். பதினொன்றாம் வகுப்புக்கு திருநெல்வேலியில் உள்ள மதிதா இந்துக்கல்லூரியில் சேர்ந்தேன். அங்கேதான் அவன் பரிச்சயம் ஆனது. எல்லா மாணவர்களும் தனித்தனியாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்க, அவன்தான் முதன்முதலில் நான்கைந்து பேர் சேர்ந்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்தியவன். அதேபோல், அந்த கூட்டம் அதிகமாகிவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தவன். அவன் அம்மா அவனுக்கு விதவிதமாகச் செய்து தந்து அனுப்புவார்கள். ஒருகட்டத்தில் மதியம் வரை காத்திராமல் முதல் இடைவேளையிலேயே அதனை உண்ண ஆரம்பித்தோம். எங்கள் உணவிலிருந்து அவனுக்குத் தருவோம்.

உண்டுவிட்டு, மதிதா இந்துக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியைச் சுற்றி வருவோம். சும்மா செல்லாமல் கடலை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு போகலாம் என்று சொல்வான். வாழ்த்து அட்டை விற்கும் கடையில், காதலர்களுக்கான வாழ்த்து அட்டையைக் காண்பிப்பான். குறைந்த ஆடைகளில் உடலுறவுக்கு அழைக்கும்விதமாக ஆணும் பெண்ணும் அந்த வாழ்த்து அட்டைகளில் இருப்பார்கள். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வருவோம்.

அவனுக்கு நெய்ச்சோறும் வெல்லமும் மிகவும் பிடிக்கும். யாராவது அதைக் கொண்டுவந்தால், அவன் கொண்டுவரும் சப்பாத்தி அல்லது பூரியைக் கொடுத்துவிட்டு அதை வாங்கிக்கொள்வான்.

நண்பர்களுக்குள் ஓட்டிக்கொள்வது என்பதைத் தொடங்கி வைத்தது அவன்தான். என்னுடன் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே, திடீரென்று கட்சி மாறி, ‘இப்ப உங்கட்சி இல்ல, அவங்கட்சி’ என்று சொல்லி, அதுவரை எதையெல்லாம் சப்போர்ட் செய்தானோ அதையெல்லாம் எதிர்த்துப் பேசுவான். ஒவ்வொரு சமயம் வகுப்புக்குள் நுழையும்போதே, ‘நான் இன்னைக்கு அவன் சைட்ல’ என்று சொல்லிக்கொண்டே வருவான்.

மழை பெய்து ஓய்ந்திருக்கும் வேளையில், எங்களில் யாரேனும் ஒருவர் தோள்மீது கைபோட்டு பேசிக்கொண்டே சென்று, ஏதேனும் மரத்தடிக்குக் கீழே சென்றவுடன், மரத்தடியில் கிளையை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு ஓடுவான். அவன் ஓடிவிடுவான். இலைகளில் சேர்ந்திருக்கும் நீரெல்லாம் அவன் அழைத்துக்கொண்டு சென்ற நண்பன் மீது விழ, மற்ற நண்பர்கள் பெருங்குரலெடுத்துச் சிரிப்பார்கள்.

நாங்களெல்லாம் கிரிக்கெட் என்று அலைந்துகொண்டிருக்க, அவன் ஸ்டெஃபியின் மிகத் தீவிர ரசிகனாக இருந்தான். ஒவ்வொரு ஓபன் டென்னிஸின் பைனல்ஸ் ஸ்கோரையும் ஒப்பிப்பான். திடீரென்று ஒருநாள், தனக்கு இனிமேல் ஸ்டெபி கிராஃப் பிடிக்காது என்றும் மோனிகா செலஸ்தான் பிடிக்கும் என்றும் அறிவித்தான். அப்படி எப்படி மாறமுடியும் என்றால், அது அப்படித்தான் என்று சாதித்தான். அத்தோடு ஸ்டெபி கிராபிற்கு விளையாடவே தெரியாது என்றெல்லாம் சொல்லி திட்ட ஆரம்பித்தான். எங்களுக்கெல்லாம் தலை சுற்றியது.

தமிழை வாசிப்பதில் எனக்கும் அவனுக்கும் பெரிய போட்டியே நடக்கும். அவன் தொலைக்காட்சி, வானொலிகளில் வாசிப்பவர்கள் போல வாசிப்பான். ஏதேனும் ஓரிடத்தில் திடீரென்று திக்கினாலோ, நிறுத்தக்கூடாத இடத்தில் நிறுத்தினாலோ நான் அவனைப் பார்த்துச் சிரிப்பேன். நான் வாசிக்கும்போது நான் எப்போதெல்லாம் தவறு விடுகிறேன் என்பதைக் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்திருப்பான்.

பள்ளிவாசம் முடிந்து நாங்கள் கல்லூரிக்குச் சென்றோம். எல்லாரும் பேசி வைத்து, இயற்பியல் என்றெழுதினார்கள், விண்ணப்பபடிவத்தில். நான் வேண்டுமென்றே வேதியியல் என்று எழுதினேன். இத்தனைக்கும் வேதியியலை விட இயற்பியலில் அதிகம் மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். அவன் கணிதம் என்று எழுதினானா என்பது நினைவில்லை. ஆனால் அவனுக்குக் கணிதம்தான் கிடைத்தது.

ஒருவருடம்தான் கல்லூரியில் படித்தான். அதற்குள் ஸ்டாஃப் நர்ஸ் கோர்ஸ் கிடைத்துவிட்டது. ஹைகிரவுண்டில் சேர்ந்துவிட்டான். எங்களுக்கெல்லாம் வருத்தமாக இருந்தது. அவன் இதற்காக அழுதே விட்டான். ஆனாலும் எங்கள் நட்பு அறுந்துவிடவில்லை. அது வேறொரு புதிய பரிமாணத்துடன் கிளைத்தெழுந்து செழித்தது என்றே சொல்லவேண்டும்.

அவனுக்கு ஹைகிரவுண்டில் விதவிதமாக நண்பர்கள் அறிமுகமானார்கள். எல்லோரையும் எங்கள் நண்பர்களாக்கினான். வாராவாரம் நாங்கள் அவனைப் பார்க்கப் போவோம். அதுவரை பெண்கள், கிரிக்கெட், கிண்டல் என்றே பேசிக்கொண்டிருந்த நாங்கள், வயதின் வளர்ச்சியில், காமம், உடலுறவு என்று பேச ஆரம்பித்திருந்தோம்.

அவன் ஸ்டாஃப் நர்ஸாக இருந்ததால், இந்த விஷயங்களைப் பற்றி விதவிதமாகச் சொன்னான். ஸ்டாஃப் நர்ஸ் படிக்கும் பெண்களைப் பற்றிய அவன் மதிப்பீடு, டாக்டர்களுக்கும் அங்கு வேலை பார்க்கும் ஸ்டாஃப் நர்ஸ்களுக்குமான உறவு என்றெல்லாம் என்னென்னவோ சொல்லுவான். நாங்கள் எப்படி பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது அவன் சொல்லுவதை நம்புவதா வேண்டாமா என்றெண்ணி பிறகு வேறு வழியில்லாமல் நம்புவோமோ அப்படித்தான் இதனையும் நம்புவோம். அவன் சொன்னவை ஏராளம். முதலிரவில் ஆண் பெண் கலவியில் ஏற்படும் பிரச்சினைகள், (‘அது அத்தனை லேசுன்னு நினைக்காத..’ என்றுதான் ஆரம்பிப்பான். நிறைய சொல்லுவான். அதையெல்லாம் இங்கே எழுதமுடியாது.) பெண்களின் பிரச்சினைகள், ஆணின் பிரச்சினைகள் என்றெல்லாம் விவரிப்பான்.

நாங்கள் எங்கள் நண்பர்களில் ஒருவன் வீட்டில் பிஎஃப் பார்த்தபோது, ஹைகிரவுண்டிலிருந்து வந்தான். ஸ்டாஃப் நர்ஸில் படிப்பவர்கள் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பார்கள். இரவில் வார்டன் ஹாஸ்டலைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விடுவார். பிஎஃப் பார்க்க வருவதற்காகவே கள்ளச் சாவி செய்து திறந்து கொண்டு வந்திருந்தான். பி எஃப் பார்த்துவிட்டு, அதிகாலை மூன்று மணிக்கு டவுணிலிருந்து ஹைகிரவுண்ட் நடந்து சென்றான்.

ஹாஸ்டல் வார்டன் ரொம்ப கேள்வி கேட்கிறாள் என்று, ஒரு கடிதத்தில் அவனே குங்குமம் மஞ்சள் என்றெல்லாம் தூவி, ஒரு தாயத்தையும் அதோடு சேர்த்து, உன் பெயருக்கு மந்திரித்துவிட்டோம், இனியும் உன் மாணவர்களுடன் விளையாடாதே என்று அவனே ஒரு போஸ்ட் அனுப்பி வைத்தான். அந்த வார்டன் அலறிவிட்டார் என்று சொன்னான். இப்படி நிறைய சொல்லுவான். செய்தானா என்றெல்லாம் தெரியாது.

திடீரென்று ஒருநாள் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொன்னான். நாங்கள் எல்லோரும் ஆர்வமாகக் கேட்டோம். பூர்வஜென்மத்து உறவு, அது இது, முத்தம் என்று என்னவெல்லாமோ சொன்னான். எல்லாம் கேட்டு முடித்து நாங்கள் கிளம்பும்போது, ‘இன்னும் இருக்குல’ என்று சொல்லி, அவன் காதலிக்கும் இரண்டாவது பெண்ணைப் பற்றியும் சொல்லத் தொடங்கினான். அப்போதும் அதே பூர்வ ஜென்மத்து உறவு, அது இது, முத்தம் எல்லாம் வந்தது. நான் கடுப்பாகிவிட்டேன். பின்பு என்னிடம் சத்தியமே செய்தான், இரண்டு பெண்களுமே அவனைக் காதலிப்பதாகவும், அவனுக்கு இரண்டு பெண்களையும் பிடித்திருப்பதாகவும். அவனுக்குப் பிறந்தநாள் வந்தால் இரண்டு சாக்லேட்டுகள், இரண்டு சட்டைகள் பரிசு வரும். சொல்லிச் சொல்லிச் சிரிப்பான். கடைசியில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அவன் அம்மாவிடம் சொல்ல, அவன் அம்மா அவன் காதலை எவ்வித யோசனையுமின்றி ஒரே நொடியில் நிராகரித்தார். அவனும் உடனே அக்காதலை நிராகரித்துவிட்டான்.

எனக்கும் வேலை கிடைத்து, அவனுக்கும் வேலை கிடைத்து, எங்கள் நட்பு தொடர்ந்துகொண்டிருந்தது. மருத்துவமனைகளில் நடக்கும் காமகளியாட்டங்களை அவன் நிறைய சொல்லுவான். அதை வைத்து நான் ஒரு கதை எழுதினேன். (மீண்டும் ஒரு மாலைப்பொழுது.) Slept away என்பதை உருவாக்கி, அதை எல்லாருக்கும் சொல்லுவான். அந்த ஸ்டாஃப் நர்ஸ் நேத்து அவனோட ஸ்லெப்ட் அவே என்பான். பின்பு அவனுக்குச் சென்னையில் வேலை கிடைத்து, சென்னைக்குப் போனான்.

நான் தூத்துக்குடியில் வேலையில் இருந்தேன். நான்கைந்து நாள் விடுமுறை கிடைத்தபோது அவனைப் பார்க்கப் போனேன். அங்கேயும் எங்கள் நண்பர்களோடேயே இருந்தான். எல்லாரும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடமாகப் பார்க்கப் போவோம். சோழிங்கர், வண்டலூர் பூங்கா, மெரீனா கடற்கரை என்று எல்லாம் பார்த்தது அவனோடுதான். எங்கே போனாலும் நாங்களே சமைத்துக்கொண்டு உணவெடுத்துக்கொண்டு போவோம். கைகளில் உருட்டித் தருவான் எல்லாருக்கும்.

போட்டோ எடுக்கும்போது இயல்பாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். வேண்டுமென்றே எல்லாரையும் செயற்கையாக நிற்கச் சொல்லி படமெடுப்பான். ஒரு புகைப்படத்தில் எல்லோரும் வரிசையாக ஒருவர் தோள்களில் ஒருகை வைத்திருக்க, ஓடும் ரயில்வண்டி போல, எல்லாரும் காலைத் தூக்கிக்கொண்டு, ஒரு கையால் கூவென ஊதிக்கொண்டிக்கும் போட்டோ இன்னும் நினைவிலிருக்கிறது.

எங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் ஒவ்வொருவராக திருமணம் நடக்க ஆரம்பித்தது. அவனுக்கும் திருமணம் ஆனது. நான் துபாயில் இருந்து திரும்பி வந்து, அவன் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பினேன். என் நம்பர் அவனுக்குத்தெரியாது என்பதால் கொஞ்சம் விளையாட ஆரம்பித்தேன். அவன் செய்த சேட்டைகளையெல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லவும் கொஞ்சம் பயந்துவிட்டான். அவனது நண்பர்களிடம் சொல்லியிருப்பான் போல. ஒவ்வொருவராக என்னை அழைத்து நான் யார் என்று கேடகத் தொடங்கினார்கள். எல்லார் நம்பரும் என்னிடம் இருந்ததால், அவர்கள் எல்லோரிடமும் நான் விளையாடத் தொடங்கினேன். ஒருவாறாக அவனிடம் நாந்தான் என்று உண்மையைச் சொன்னபோது, ‘நான்கூட முதல்ல ஒருத்திய லவ் பண்ணேன்ல, அவதான் மிரட்டுறாளோன்னு நினைச்சிட்டேன். என் பொண்டாட்டி மட்டும் உன் மெசேஜை பாத்தா, செத்தேன்’ என்றான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘எல்லாம் பொய்தானல, சும்மாதான சொன்ன?’ ‘உனக்கும் எனக்கும் தெரியும் பொய்யுன்னு, அவ பொய்யத்தான் மொதல்ல உண்மைன்னு நம்புவா’ என்றான். ஒருவழியாக செட்டில் ஆகிவிட்டான் என்று சந்தோஷமாக் இருந்தது.

அவ்வப்போது தொலைபேசி. அவ்வப்போது சந்திப்பு. தன் மனைவி இரண்டாவதாக உண்டாகியிருக்கிறாள் என்றான். வாழ்த்து சொன்னேன். நேற்று காலை, நிறைமாதக் கர்ப்பிணியான தன் மனைவியை சிவகிரியில் பார்த்துவிட்டு, அங்கிருந்து திருநெல்வேலிக்கு ஸ்கூட்டரில் காலை 3 மணிக்கு வந்திருக்கிறான். விபத்து நேர்ந்து அந்த இடத்திலேயே இறந்துவிட்டான். எங்கள் நண்பர்கள் எல்லோரையும் பதைபதைக்கச் செய்துவிட்டது இம்மரணம்.

உண்மையில் நான் இது போன்ற மரணங்களில் என் மரணத்தின் மீதான பயத்தையே உணர்கிறேன் என்று நினைக்கிறேன். நேற்று முழுவதும் இருந்த பதட்டம் சொல்லி மாளாது. தேன்கூடு சாகரனின் மரணத்தைக் கேட்ட அன்றும் அப்படி பதற்றமாக இருந்தது. ஏனென்றால், அவர் இந்தியா வந்திருந்தபோதுதான் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பேசியிருந்தோம். தேன்கூட்டில் சில போட்டிகள் நடத்தப்போவதாக எல்லாம் சொன்னார். அதே பதற்றம் நேற்றும் என்னைத் தேடி வந்தது.

மரத்தடியில் பாபு என்கிற நண்பர் எழுதிய கவிதை மிக முக்கியமானது. திடீரென்று இரண்டு நாள்களுக்கு முன்புதான் இதனை வாசித்தேன். நேற்று இக்கவிதையே மனதுள் சுழன்று சுழன்று வந்தது.

அது

பள்ளிக்கூட கிரிக்கெட் போட்டியில்
எதிரணிக்காரன் வீசிய வேகப்பந்து
பின் மண்டையில் விசையுடன் தாக்கிச் சுருண்டபோது
எதிரே வந்து நின்று விரல் நீட்டி
எச்சரித்துவிட்டுப் போனது.

நெடுஞ்சாலை மோட்டார்சைக்கிள் பயணத்தில்
அசுர பாய்ச்சலுடன் வந்த வாகனத்துடனான மோதலை
மயிரிழையில் தவிர்த்து மணலில் சரிந்தபோது
காதருகில் உருமிவிட்டுச் சென்றது.

பெருநோய் பீடித்து மருத்துவமனையில்
உடல் வற்றிக்கிடந்த ஒரு மாதகாலமும்
படுக்கையருகில் அமர்ந்திருந்து
உற்றுப் பார்த்தபடி இருந்தது.

நள்ளிரவு உறக்கத்தில்
நெஞ்சுக்கூட்டுக்குள் இரும்புப் பந்தொன்று அடைத்து
மூச்சுத்திணறி வியர்த்து
நிராயுதமாய் சில நிமிடங்கள் போராடியபின்
இயல்புநிலை திரும்பியபோது
ஜன்னலில் நிழலெனப் பதுங்கி வெளியேறிற்று.

இதுவரை
வாய்த்த சந்தர்ப்பஙகளெல்லாம்
நழுவிப்போனதில்
மேலும் வன்மம் வளர்த்தபடி
எங்கிருந்து எப்போது
என் மீது பாய்ந்துவிடக் காத்திருக்கிறதோ –
அந்த மரணமென்னும் மிருகம்.

நான் எழுதுவதைக்கூட மரணம் வாசித்துக்கொண்டிருக்கலாம்.

நன்றி: பண்புடன் இணையக் குழுமம்

Share

சுஜாதா நினைவுகள் – 02.03.2008 ஞாயிறு அன்று நாரத கான சபாவில் கூட்டம்


ஜெயகாந்தன், கமல்ஹாசன், மணிரத்னம், கனிமொழி, பார்த்திபன், ராஜீவ் மேனன், கு.ஞானசம்பந்தன், மருது, இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, வஸந்த், மதன் உடபட பலரும் இந்த நிகழ்சியில் பங்கேற்க இருக்கின்றனர்.

2.3.2008 ஞாயிறு மாலை நாலு மணிக்கு நாரத கான சபாவில் (314, டி.டி.கே சாலை, சென்னை-18) இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Share

பிரிக்க முடியாத மௌனம். – சுஜாதாவிற்கான அஞ்சலி – எஸ்.ராமகிருஷ்ணன்

பிரிக்க முடியாத மௌனம் – சுஜாதாவிற்கான அஞ்சலி – எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

Share

சுஜாதாவின் உடல் நாளை (29.02.08) பார்வைக்கு…

சுஜாதாவின் பூத உடல் நாளை அவரது இல்லத்தில் காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை (இரண்டு மணி நேரம் மட்டும்) பார்வைக்கு வைக்கப்படும். அஞ்சலி செலுத்த விரும்புவர்கள் ’10, ஜஸ்டிஸ் சுந்தரம் அய்யங்கார் தெரு, மயிலாப்பூர்’ என்கிற முகவரியிலுள்ள அவர் வீட்டில் அஞ்சலி செலுத்தலாம்.

இன்று அவரது உடல் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் தவறானவை. சுஜாதாவின் வீட்டில் இருக்கும் தேசிகன் இந்தத் தகவலை வெளியிடச் சொன்னார்.

Share

சுஜாதா – சில கணங்கள்

1997ல் TACல் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த புத்தகசாலையில் இருந்த புத்தகங்களில் சுஜாதாவின் புத்தகங்களை ஒன்றுவிடாமல் வரிசையாக வாசிக்க ஆரம்பித்தேன். அப்போது தொடங்கிய சுஜாதா எழுத்தின் மீதான மோகம் இன்றுவரை அப்படியே தொடர்வதை நினைக்கும்போது, காலம் காலமாகத் தன் எழுத்தின் மூலம் வாசகர்களைக் கட்டிப்போட்ட அவரது அசாத்திய திறமை ஆச்சரியம் அளிக்கிறது. அந்த நேரத்தில் நான் தீவிரமாக வாசித்த பாலகுமாரனின் எழுத்துகள் அந்த இடத்திலேயே நின்றுபோனதையும் சுஜாதா என்னுடன் தொடர்ந்து வந்துவிட்டிருப்பதையும் நினைத்துப் பார்க்கிறேன். பல தலைமுறைகளுக்கான எழுத்தாளர் சுஜாதா. அம்பலம்.காமில் சுஜாதா அரட்டைக்கு வருகிறார் என்று தெரிந்தபோது நானும் அரட்டையில் கலந்துகொள்வேன். அப்போது நான் துபாயில் இருந்தேன். சனிக்கிழமை அங்கு விடுமுறை இல்லை. அதனால் என்று சனிக்கிழமை அரசு விடுமுறை வருகிறதோ அன்றுமட்டுமே அவருடன் அரட்டை செய்யமுடியும். அப்படியும் சில சனிக்கிழமைகள் அவருடன் அரட்டை அடித்திருக்கிறேன். நான் அரட்டை செய்த சமயங்களில் அரட்டை செம சூடாக இருந்ததுண்டு. ஆனால் எந்த விதமான கேள்விகளுக்கும் சுஜாதா மிக எளிமையான பதிலால் எளிதாக என் கேள்விகளைத் தாண்டிச் சென்றது நினைவிருக்கிறது. மரத்தடியில் ‘எழுத்தாளர்களைக் கேளுங்கள்’ என்கிற நிகழ்ச்சியை நடத்தியபோது, தேசிகன் மூலம் சுஜாதாவிடம் தொடர்புகொண்டோம். பொதுவாகவே இணையக் குழுமங்களின் மீதும், இணையத் தமிழின் மீதும் மதிப்பு இல்லாதவராக இருந்தார் சுஜாதா. ஆனாலும் மரத்தடியில் அவர் கேள்வி பதில் இடம் பெற வேண்டும் என்கிற எண்ணத்தில், விடுமுறைக்காக மஸ்கட் சென்றிருந்தபோது அங்கிருந்து தொலைபேசினேன். அப்போதுதான் அவருடன் அரட்டையிலும் பேசியிருந்தேன். தொலைபேசியில் அழைத்து, ‘சார் எப்படி இருக்கீங்க’ என்ற கேட்டபோது, ‘தேங்க்ஸ்’ என்றார். நான் பேசிய நான்கைந்து முறையும் எப்படி இருக்கீங்க என்ற கேள்விக்கு தேங்க்ஸ் என்றுதான் பதில் சொன்னார். மரத்தடி குழுமத்தின் மூலம் நடத்தப்படும் ‘எழுத்தாளரைக் கேளுங்கள்’ நிகழ்ச்சியில் அவர் பங்குகொள்ளவேண்டும் என்றபோது, ‘க்ரூப்ஸ்லல்லாம் அப்யூஸிவா எழுதுறாங்க. ஸோ வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார் ராகாகியில் நடந்த விஷயங்கள் அவருக்கு சலிப்பைத் தந்திருக்கவேண்டும். பின்னர் தேசிகன் மூலம் அணுகியதும் சரி என்று ஒப்புக்கொண்டார். ஆனால் சில தினங்களில் அவருக்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாகவும் உடல்நிலைக் குறைவு காரணமாகவும் அது சாத்தியமில்லாமல் ஆனது.

அடுத்தமுறை சுஜாதாவுடன் பேசியது ஆசி·ப்மீரானுடன் வசந்தபவன் ஹோட்டலில் சாப்பிடுக்கொண்டிருந்தபோது. அப்போது நாடோடித் தென்றல் படத்திலிருந்து ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. சில நாள்களுக்கு முன்பு துபாய் வந்திருந்த சுந்தர் நாடோடித் தென்றல் படம் சுஜாதாவின் ‘ரத்தம் ஒரே நிறம்’ நாவலைப் பின்னி எடுக்கப்பட்டிருந்தது என்று சொல்லியிருந்தார். நான் அதை ஆசி·பிடம் சொன்னேன். ஆசி·ப் இல்லவே இல்லை என்றார். நான் அந்த நாவலைத்தான் படம் எடுத்திருக்கிறார்கள் என்று சொல்லவும், அவர், ‘சுஜாதா நம்பர் உங்கிட்ட இருந்தா கேளுயா’ என்றார். நான் அவரது நம்பரைச் சொன்னேன். உடனே அவரது தொலைபேசியிலிருந்தே அழைத்துவிட்டார். சுஜாதாவுடன் என்ன பேசுவது என்று தெரியாமல், நேரடியாக ‘நாடோடித் தென்றல் ரத்தம் ஒரே நிறம் நாவலோட வடிவமா சார்’ என்று கேட்டேன். இல்லை என்றார். சரி சார் என்று சொல்லி வைத்துவிட்டேன். வேறெதுவும் பேசாதது மிகவும் கஷ்டமாக இருந்தது. இதைச் சொல்லி ஆசி·ப் நிறைய நாள் சிரித்துக்கொண்டிருந்தார். இப்போது யோசித்துப் பார்த்தால், சுஜாதா தன் எழுத்து மூலம் அவரது வாசகர்களை ஒரு நண்பனைப் போல் அடைந்திருக்கிறார் என்று புரிகிறது. அவரது தீவிர வாசகர்கள் எப்போதும் அவருடன் மானசீகமாகப் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இல்லையென்றால் அப்படி சட்டென என்னால் சுஜாதாவை அழைத்திருக்கமுடியாது.

தேசிகன் மூலம் நண்பர்கள் சிலர் அவரைச் சந்தித்தோம். ஆறு மணிக்கு சரியாக உட்லேண்ஸ் டிரைவி இன் வந்த அவர் மிக இயல்பாக எல்லாருடனும் பேசினார். இப்படி சிலர் சேர்ந்து அவரை வறுத்தெடுக்கிறோமே என்று எல்லாருக்குமே தோன்றினாலும், விடாமல் அவருடன் பேசிக்கொண்டிருந்தோம். கமல், ரஜினி, சிறுகதை, தொடர்கதை, பிரபந்தம் என ஆளாளுக்குப் பல கேள்விகள் கேட்டோம். எல்லாவற்றிற்கும் பதில் சொன்னார். கவிதைகள் பற்றிப் பேச்சு வந்தபோது என்னைப் பார்த்து ‘நீங்ககூட கவிதை நல்லா எழுதுறீங்களே’ என்றார். இரண்டு முறை சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. அவருக்கு அபுல்கலாம் ஆசாத்தின் கஜல் புத்தகத்தையும் ஹரிகிருஷ்ணனின் அனுமன் வார்ப்பும் வனப்பும் புத்தகத்தையும் அன்பளிப்பாகக் கொடுத்தேன். இனிமையாக முடிந்த அந்த சந்திப்புக்குப் பின்னர், இரண்டு நாள்கள் கழித்து வந்த ஆனந்தவிகடன் கற்றதும் பெற்றதும் பகுதியில், இந்த சத்திப்பைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, இதன் மூலம் அவருக்குக் கிடைத்த செய்தியாக ‘வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையேயான இடைவெளி அவசியம்’ என்பதைச் சொல்லியிருந்தார். சந்திப்பில் பங்குகொண்ட அனைவருக்குமே கொஞ்சம் திக்கென்றிருந்தது. சுஜாதாவுடன் சந்த்திப்பில் பேசிக்கொண்டிருந்தபோது, பலர் இடையே வந்து அவரிடம் ஆட்டோகிரா·ப் வாங்குவதும் அவரது ·போன் நம்பர் கேட்பதும் அவரது வீட்டுக்கு வரலாமா என்று கேட்பதுமாக இருந்தார்கள். அவருடைய பாப்புலாரிட்டியின் காரணமாக அவர் எப்போதும் வாசகனுடன் ஒரு இடைவெளியை வைத்திருக்க விரும்பினார். அதுமட்டுமின்றி என் கணிப்பில் அவர் ஒரு தனிமை விரும்பியாக இருந்தார். தனிமையைக் கொண்டாடுவாரோ என்று கூட நினைத்திருக்கிறேன். தேசிகனிடம் ஏன் கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா இப்படி எழுதினார் என்று கேட்டபோது, கற்றதும் பெற்றதும் பகுதியைப் படித்துவிட்டு பலர் அவருக்கு ·போன் செய்து, நாங்களும் டிரீட் தருவோம், எங்களுடனும் பேசவாருங்கள் என்று அழைத்தார்களாம், அதைத் தவிர்க்கவே சுஜாதா அப்படி எழுதினார் என்று விளக்கம் கூறினார். சுஜாதாவின் எழுத்துகள் அவரை அவரது வாசகர்களிடம் ‘சுஜாதா என்பது நண்பன்’ என்கிற தோரணையோடே அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் அவரது எழுத்து நடை. 1965இல் அவர் எழுதிய கட்டுரையை வாசிக்கும்போது நேற்று எழுதிய கட்டுரையை வாசிப்பதுபோன்றே தோன்றுகிறது. மிக நீண்ட நிகழ்வுகளைக் கூட சில வரிகளில் நமக்குச் சொல்லி முடிக்கிறார். அதோடு சம்பந்தமுடைய ஒரு நிகழ்ச்சியை ஒரு வரியில் சொல்வதன் மூலம் வாசகனை மிக நீண்ட பிராயணத்திற்கு சில நொடிகளில் தயார் செய்துவிடுகிறார். இந்த வேகம், எல்லாத் தலைமுறைகளையும் கவர்ந்திருக்கிறது. மட்டுமின்றி, தமிழின் நடையையே புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த வகையில் சுஜாதாவின் பங்களிப்பு என்றென்றும் முக்கியமானது. புத்தகக் காட்சியில் தமிழினி வசந்தகுமாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவரும் சுஜாதாவின் பங்களிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொன்னார். மிகக் கறாரான தேர்ந்தெடுப்பின் மூலம் கூட அவர் எழுதிய 60 சிறுகதைகளையாவது சிறந்ததென பட்டியலிட்டுவிடமுடியும். சிறுகதை எழுத்தாளராக சுஜாதாவின் பங்கு மிக முக்கியமானது.

சுஜாதாவுடனான உட்லேண்ட் சந்திப்பு முடிந்த சில நாள்கள் கழித்து எனி இந்தியன் புத்தகக்கடைக்கு ஒருவர் புத்தகம் வாங்க வந்திருந்தார். சில முக்கியமான புத்தகங்களை அவர் வாங்குவதைப் பார்த்ததும் அவரிடம் பேசினேன். பேச்சில் அவர் திருநெல்வேலிக்காரர் என்று தெரிந்தது. ஏதும் எழுதுவீர்களா என்று கேட்டபோது சுஜாதாவுக்கு கேள்வி எழுதுவேன்,வேற ஒண்ணும் எழுதுறதில்லை என்றார். அந்த வாரம் அவர் கேட்ட கேள்விக்கு பாராட்டாக ஒரு புத்தகம் வந்தது என்றார். சாதாரணமாக என்ன புத்தகம் என்றேன். ‘கஜல்னு ஒரு புத்தகம். யாரோ அவருக்கு பிரசண்ட் பண்ணியிருக்காங்க. உள்ள கையெழுத்தெல்லாம் இருக்கு’ என்றார். பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு நான் தந்த புத்தகம். இது சாதாரணமாக நடந்த ஒரு பெரிய நிகழ்ச்சியாக எனக்குத் தோன்றியது. தேசிகனிடம் சொன்னேன். ‘நல்ல சிறுகதை எழுதலாம் போல இருக்கே’ என்றார். பின்னர், எல்லாப் புத்தகத்தையும் அவர் யாருக்காவது பிரசெண்ட் பண்ணிடுவார், இல்லைன்னா அது அப்படியே அவர் வீட்டுலயே இருந்து வேஸ்ட் ஆயிடும் என்றார்.

ஒருசமயம், AnyIndian.comல் அவரது பூக்குட்டி புத்தகத்தை விற்பது தொடர்பாகப் பேச அவர் அழைத்தார். மிக அழகாக வடிவமைக்கப்பட்ட புத்தகத்தின் விலையை, விற்பனையாளர்களுக்குத் தரவேண்டிய கழிவு பற்றிய எண்ணமில்லாமல் வைத்துவிட்டதாகச் சொன்னார். இத்தனை நாள் எழுத்துலகில் இருக்கும் சுஜாதாவிற்கு இதுபோன்ற விஷயங்கள் புரியவே இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட ஐம்பது நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்பில் அவர் AnyIndian செயல்பாடுகளைக் கேட்டுக்கொண்டார். தமிழில் எல்லாப் புத்தகங்களையும் ஓரிடத்தில் தேடலாம் என்கிற எண்ணமே அவருக்கு நிறைய மகிழ்ச்சியைத் தந்தது. எங்களது கஸ்டமர் சர்வீஸ் பற்றிச் சொன்னபோது, அது ரொம்ப முக்கியம் என்றார். பின்னர் பூக்குட்டி புத்தகம் பற்றி பேச்சு வந்தபோது, எப்படியாது தள்ளிடணும் என்றார். உண்மையில் வயது முதிர்ந்த குழந்தையுடன் பேசுவது போன்ற சித்திரத்தைத்தான் என்னால் யோசிக்கமுடிந்தது. அதற்குப் பின்பு வந்த புத்தகக் காட்சிகளில் சுஜாதாவை சந்திப்பேன். ஜஸ்ட் ஒரு ஹலோ மட்டுமே. அவரும் ஹலோ ஹரன் என்பார். மீண்டும் ஒருமுறை அவரை சந்தித்தபோது, பூக்குட்டியை எப்படியாவது வித்திடணும் என்றார். கூடவே அது மாதிரி இன்னொரு புத்தகம் போடப் போறேன் என்றார். பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். நாங்கள் பதிப்பித்த புத்தகங்களைப் பார்த்த அவர், எல்லாப் புத்தகங்களின் க்வாலிட்டியும் ரொம்ப நல்லா இருக்கு என்றார். டெக்னாலஜி ரொம்ப முன்னேறினதால எல்லாருமே நல்ல புத்தகங்கள் போட ஆரம்பிச்சிட்டாங்க, முன்னல்லாம் செட்டியாருங்க என்ன க்வாலிட்டி சொல்றாங்களோ அதுதான் க்வாலிட்டி, இப்பல்லாம் யார்வேணா சுலபமா க்வாலிட்டியா புக் போடமுடியுது என்றார். பல விஷயங்கள் பற்றி அன்று பேசினார். சுந்தர ராமசாமி பற்றிய பேச்சு வந்தபோது, எவ்ளோ நல்ல சிறுகதையாளர் என்றார். அவரது ஆரம்ப கால சிறுகதைகளை வெகுவாகச் சிலாகித்தார் சுஜாதா. ‘பிராசதம் படிச்சுருக்கேங்களா? என்ன ஒரு பீஸ்’ என்றார். சு.ராவின் சமீபத்திய சிறுகதைகள் எல்லாம் கதையை விட்டுவிட்டு நடையை மையப்படுத்தி எழுதப்பட்டவை என்றார். ‘குழந்தைகள் ஆண்கள் பெண்கள்ல ஏதோ ஒண்ணு – ஆண்களோ பெண்களோ, நினைவில்லை – மட்டும் நல்லா இருக்கும். மத்ததெல்லாம் வெறும் எழுத்துதான். உத்வேகம் இல்லை’ என்றார். நான் அவரிடம், ‘இதையெல்லாம் நீங்க எங்கயும் எழுதுறதில்லையே சார்’ என்றேன். புன்னகைத்துக்கொண்டார். சுஜாதாவிடம், கணையாழியின் கடைசிப்பக்கங்களில் வெளியான சீற்றமும் கடும் விமர்சனமும் கொண்ட மனிதன் உயிர்ப்போடு கடைசி வரை இருந்தான். ஆனால் அவர் அவனை அடக்கி வைத்திருந்தார். அவன் அவரது கடைசிக் காலங்களில் வெளிப்படவே இல்லை. நட்பு என்னும் பெரிய திரை அவரை முழுதுமாக இறுக்கிவிட்டது. விமர்சனத்தை விட நட்பு முக்கியம் என்கிற கட்சிக்குள் வெகுவேகமாக சென்று சேர்ந்துவிட்டவர் அவர் என்பது என் எண்ணம்.

மீண்டுமொருமுறை அவரைச் சந்தித்தேன். அந்தமுறை சிவாஜி திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியிருந்தது. அவரைப் பார்க்க அவரது அலுவலகத்திற்குள் நுழையும்போதே என்னைப் பார்த்து, ‘வெயிட் போட்டுட்டீங்க’ என்றார். ‘அதுவா ஏறுது சார்’ என்றேன். ‘லிக்கர் சாப்பிடுவீங்களா?’ என்றார். இல்லை என்றேன். ‘பாருங்க ஷங்கர் எப்படி வெயிட் போட்டுட்டார்னு’ என்று ஆரம்பித்தார். ‘ஸார் நானும் பேட்டில பார்த்தேன். எப்படி இப்படி வெயிட் போட்டார்’ என்று கேட்டேன். ‘சினி ·பீல்ட்ல எல்லாருமே லிக்கர் சாப்பிடுவாங்க. நான் ஷங்கர்கிட்ட சொன்னேன், வெயிட் போட்டது பத்தி. இப்பதான் சிவாஜி முடிச்சிருக்கேன், இது ரெஸ்ட் பீரியட், அடுத்தபட வேலை ஆரம்பிச்சா எல்லாம் சரியாயிடும்னு சொல்றார். அதுவும் உண்மைதான். படம்ங்கிறது பெரிய வேலை. அதுவும் ஷங்கர் மாதிரி படங்களுக்கு அப்படி மெனக்கெடனும்’ என்றார். ‘ஆனா ரஜினி மட்டும் ஸ்லிம்மா இருக்கார்’ என்றேன். ‘அவரோட ·புட் ஹேபிட்’ என்றார். ‘ஸார், நான் பாட்டு கேட்டேன். நெட்ல வந்தப்ப சும்மா ஏமாத்தறாங்களோன்னு நினைச்சேன்’ ‘இல்ல, அதுதான். ஏ.ஆர்.ரஹ்மான் ·பாரின்லேர்ந்து அனுப்பறார். இடையில யாரோ விளையாடிருப்பாங்க. இப்பல்லாம் நெட்ல எதுவேணா செய்யலாம்.’ ‘பாட்டு கேட்டேன், பல்லே லக்கா சுமாரா இருக்கு. மத்ததெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.’ ‘அது சும்மா ஒரு ·பாஸ்ட் பீட் ஸாங். டைட்டில் சாங்’ என்றார். பின் படத்தின் நெகடிவ், பாஸிடிவ் என்றெல்லாம் நிறைய பேசினார். தமிழ்ப்படங்கள் பற்றிய சில கடுமையான அபிப்பிராயங்களையும் சொன்னார். ‘ஏன் இதெல்லாம் எழுதுறதில்லை ஸார்?’ சிரித்துக்கொண்டே, ‘கணையாழியில நிறைய எழுதிருக்கேன். நீங்க பார்த்தீங்கன்னா 35 வருஷமா எழுதறேன். ஆரம்பத்துல கணையாழியில இருந்த fire இப்ப கொண்டுவரமுடியாது. அப்படியே குறைஞ்சு குறைஞ்சு இப்ப கற்றதும் பெற்றதும் பாருங்க வெறும் டைரிக்குறிப்பு மாதிரிதான இருக்கு?’ எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. என்ன ஒரு எளிமையான, ஆழமான மதிப்பீடு. சுந்தர ராமசாமியைப் பற்றிய அவரது மதிப்பீட்டிற்கு இணையாக அவரே அவரைப் பற்றிய மதிப்பீடு ஒன்றை வைத்திருக்கிறார். ‘நீங்க உங்களுக்கு இருக்கிற எல்லா நண்பர்களையும் காயப்படுத்தாம இருக்க நினைக்கிறீங்க, அதனாலதான் க.பெ. இப்படி இருக்குன்றது என் எண்ணம்’ என்றேன். காலச்சுவடு, உயிர்மை, ஆனந்தவிகடன் பற்றி பல விஷயங்களைப் பேசினோம். ஜெயமோகன் எழுதி அவருக்குக் காணிக்கையாக்கியிருந்த விசும்பு புத்தகத்தை அவருக்கு அனுப்பியிருந்தேன். அதைப் பற்றிக் கேட்டேன். ஹார்ட் சயின்ஸ் ·பிக்ஷன், சா·ப்ட் சயின்ஸ் ·பிஷன் பற்றிப் பேசிய அவர், ஜெயமோகனின் கதைகள் புதிய திறப்பை ஏற்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை என்றார். ‘நானே அவர்கிட்ட பேசறேன்’ என்றும் சொன்னார். எங்கள் புத்தகங்களைப் பற்றிக் கேட்டபோது, பிரதாப சந்திர விலாசம் பற்றி ஆர்வமாகப் பேசினார். ‘அந்த மாதிரி புத்தகங்கள மக்கள் கிட்ட கொண்டு போணும். நீங்க சொல்றதே இண்டிரஸ்டிங்கா இருக்கு. விருத்தம், வசனம் கலந்த நாடகம். இண்டரஸ்டிங். எனக்கு அனுப்புங்க நான் பார்க்கிறேன்’ என்றார். ‘ஸார், நான் அனுப்பலாம்னுதான் நினைப்பேன். ஆனா அப்ப அப்ப கற்றதும்பெற்றதும்ல யாரும் எனக்கு புத்தகங்கள் அனுப்பாதீங்கன்னு எழுதுறதைப் பார்த்து அனுப்பலை’ என்றேன். ‘அது எழுதுறது எதுக்குன்னா, ஒரு நாளைக்கு 50 பார்சல் வருது. யாரு வாங்கி படிக்கிறது? அதுக்காகத்தான். சிடி கூட அனுப்பறாங்க இப்பல்லாம். நேத்துகூட ஒரு சிடி வந்தது.’ ‘ஆனா அப்படி எழுதிட்டு அடுத்த வரில கிடைச்ச புத்தகங்கள்ளேர்ந்து ஒண்ண எழுதிடறீங்க. திரும்பவும் எல்லாரும் அனுப்புவாங்க.’ ‘வேற வழியில்லை’ என்று சொல்லி சிரித்தார். அடுத்த வாரம் க.பெ.வில் பிரதாப சந்திர விலாசம் பற்றி எழுதியிருந்தார்.

அதன்பின்பு அவரைப் பார்த்தது கடந்த புத்தகக் காட்சியில். ‘ஸார் பிரசன்னா எனி இந்தியன்’ என்றேன். ‘ஹலோ ஹரன்’ என்று சிரித்தார். சில புகைப்படங்கள் எடுத்தேன். வா. மணிகண்டனின் ‘கண்ணாடியில் நகரும் வெயில்’ கவிதைப்புத்தகத்தை வெளியிட்டார். அவர் அந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்க்கக்கூட இல்லை. மனுஷ்யபுத்திரன் வெளியிடச் சொன்னார், அவர் வெளியிட்டார். இதுவும் அவர் நட்பு மேல் கொண்டிருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு. கடைசிவரை அப்படியே வாழ்ந்தார் அவர். இரண்டு மாதங்களுக்கு முன்பு எனி இந்தியனுக்காக ஒரு புத்தகம் கேட்டோம். நிச்சயம் தருகிறேன் என்று சொல்லியிருந்தார். சில நாள்களுக்கெல்லாம் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவும் அதைப் பற்றிப் பேசாமல் இருந்தோம். நேற்று கோ.ராஜாராமுடன் இரவு பேசிக்கொண்டிருந்தபோது, ‘நாம சுஜாதாவைப் பார்க்கலாம்’ என்றேன். ‘சரி’ என்றார். இந்தப் பேச்சு நடந்த ஒரு மணி நேரத்தில் தொலைபேசியில் ஒரு சோகக்குரல் என்னை உலுக்குகிறது சுஜாதாவின் மரணத்தைச் சொல்லி. நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்த சோகத்தை நான் அடைந்தேன். எனது shape-upல் சுஜாதாவின் பங்கு கணிசமாக இருக்கிறது என்பதை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். சமகால எழுத்தாளர்கள் பலர் எழுத்தில் எங்கேனும் ஓரிடத்தில் அவரது பாதிப்பை என்னால் பார்க்கமுடிகிறது. சுஜாதா தலைமுறையையே உருவாக்கிய எழுத்தாளர். தேசிகன் அவரது வாழ்க்கை வரலாறை எழுதும் எண்ணம் கொண்டிருந்தார். அது நிறைவேறுவதற்கு முன்பு சுஜாதா மறைந்தது அவருக்கும் எனக்கும் வருத்தமான விஷயம். இன்று எத்தனையோ பேர் சுஜாதாவின் மரணத்துக்காக வருத்தப்படுகிறார்கள். சுஜாதாவைத் தவிர எதையும் படிக்காத தலைமுறைகூட ஒன்றிருக்கிறது. ‘ஏன் இன்னும் கணேஷ் வசந்தெல்லாம் எழுதுறீங்க’ என்று நான் கேட்டபோது, அதன் வழியாக நல்ல இலக்கியத்திற்கு அதன் வாசகர்களைக் கூட்டி வரலாம் என்று சுஜாதா சொன்னது இதுபோன்ற தலைமுறை ஒன்றை எண்ணியே. இந்தத் தலைமுறையெல்லாம் இன்று தன் வீட்டில் துக்கம் நிகழ்ந்ததாகவே கருதும். இது ஒரு எழுத்தாளனுக்கு அளிக்கப்படும் உச்சகட்ட கௌரவம்.

புத்தகக் காட்சியில் திருமகள் நிலையத்துக்கு வந்த சுஜாதா திரும்பிச் செல்லும்போது மெல்ல நடந்து சென்றார். அவரால் தனியாக நடந்து செல்லமுடியாது. திருமகள் நிலையம் பதிப்பகத்தின் நிறுவனர் அவரை அழைத்துச் சென்றார். அவரும் உடல் நிலை சரியில்லாமல் வேகமாக நடக்கமுடியாத நிலையில் இருப்பவர். அவர் சுஜாதாவை ஆதரவாகப் பிடித்திருக்க, சுஜாதா அவரை ஆதரவாகப் பிடித்திருக்க, இரண்டு பேரும் மெல்ல நடந்து என்னைக் கடந்து சென்றார்கள். என் கண்ணின் வழியே விரிந்த அந்தக் காட்சி என்றும் என் நினைவில் நின்றிருக்கும் என்று அப்போதே தோன்றியது. இரண்டு முதிய குழந்தைகள் தவழ்வதைப் போன்ற சித்திரம் என் கண்ணை இப்போதும் நிறைக்கிறது. அன்புள்ள சுஜாதா, வருத்ததுடன், நெஞ்ச நிறைவுடன் உங்களுக்கு ஒரு good-bye.

Share

எழுத்தாளர் சுஜாதா மரணம்

என் வாழ்க்கையில் மறக்கமுடியாத மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா அரைமணிநேரத்திற்கு முன்பு இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வணங்குகிறேன்.

Share