Archive for ஹரன் பிரசன்னா

ஆரிய சமாஜம் நூல் மதிப்புரையும் மலர்மன்னன் பதிலும்

நான் 14- ஜூன்-2010ல் எழுதிய ‘ஆரிய சமாஜம்’ நூலின் மதிப்புரையும், அதற்கு 5-ஜூலை-2010ல் மலர்மன்னன் எழுதிய பதிலும் இங்கே – சேமிப்புக்காக.

மலர்மன்னன் முன்பு எழுதியிருந்த ‘திமுக தோன்றியது ஏன்?’ புத்தகத்தைப் படித்தபோது, அவ்ர் மேலிருந்த சில முன் அனுமானங்கள் உடைந்தன. என்றாலும், அவர் மேல் நான் கொண்டிருந்த முன் அனுமானங்களில் சிலவற்றை இன்னும் ஆழப்படுத்துவது போலவும் சில விஷயங்கள் அப்புத்தகத்தில் இருந்தன. குறிப்பாக பிராமண சார்புடைய பார்வை. எந்த ஒரு பார்வையும் நிச்சயம் தேவை என்னும் ஜனநாயக அடிப்படையிலும், பிராமணப் பார்வை என்பதே இன்று ஜனநாயகத்துக்கு எதிரானது என்றாகிவிட்ட நிலையில், அவர் எவ்வித சங்கடமும் இன்றி அதனை முன்வைப்பதும் அப்புத்தகத்தை முக்கியமானதாக்கியது என்று நினைத்தேன். (பிராமணச் சார்பு என்பதை அவர் மறுக்கக்கூடும்.)

மீதமிருந்த, ஆழமாகிப் போன, மலர்மன்னன் பற்றிய எனது முன் தீர்மானங்களை ‘ஆரியசமாஜம்’ புத்தகம் அடியோடு உடைத்துப் போட்டிருக்கிறது என்றால் மிகையில்லை. மலர்மன்னன் இப்புத்தகத்தை எப்படி எழுதினார் என்னும் கேள்வி என் மனத்துள் இன்னும் உழன்றபடியேதான் உள்ளது. தன் மனத்தில் இருந்த பிராமணச் சார்பை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, புதிய மனிதனாக, தயானந்தரின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொண்டு இப்புத்தகத்தை எழுதினாரா அல்லது பிராமணச் சார்பு ஒரு பக்கம் இருந்தாலும், புத்தகத்தை எழுதும்போது தன் சாயல் வரக்கூடாது என நினைத்து இப்படி எழுதினாரா எனத் தெரியவில்லை. எப்படி எழுதியிருந்தாலும் அது வரவேற்கத்தக்கதே, பாராட்டத்தக்கதே.

ஹிந்துத்துவம் எனப்து ஜாதியின் கைகளில் சிக்கி சீரழிந்துவிட்ட/கொண்டிருக்கும் நிலையில், தனிப்பட்ட முறையில் ஹிந்துத்துவம் என்பது ஜாதியில்லாமல் இயங்கமுடியாதோ என்கிற மிகப் பெரிய உள்மனச் சிக்கலில் நான் விழுந்த நிலையில், இப்புத்தகத்தைப் படித்தது எனக்கு மிகப்பெரிய ஆசுவாசமளித்தது என்றே சொல்லவேண்டும்.

ஜாதியின் அத்தனை காரண காரியங்களையும் உடைக்கிறது தயானந்தரின் முழக்கங்கள். 200 வருடங்களுக்கு முன்பாகவே, ஹிந்துத்துவம் என்பது எப்படி இருக்கலாம் என்று இன்று சிந்திப்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் அன்றே சரியான தீர்க்கமான வழியைச் சொல்லிச் சென்றிருக்கிறார் தயானந்தர். அவர் அன்று அப்படிச் சொன்னதை, மேல் சாதியினரான பிராமணர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை, இன்றைய பிராமணர்களை வைத்தே அறிந்துகொண்டுவிட முடியும். ஆனால் அதனை எல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், வேத முறையிலான வாழ்க்கை முறையை முன்வைத்திருக்கிறார் தயானந்தர். அதோடு, வேதங்களில் ஜாதிய முறைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பதைப் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். வேதங்களில் ஜாதி இருப்பதாகச் சொல்லப்படும் ஆதாரங்களுக்கெல்லாம் சரியான பொருளைச் சொல்லி, ஜாதி என்பதை அடியோடு மறுத்திருக்கிறார் தயானந்தர்.

வருணம் பற்றிப் பேசும்போது, பிறப்பால் வருணம் நிர்ணயிக்கப்படுவதை அடியோடு எதிர்த்திருக்கிறார். ஒரு பிராமணன் பிறப்பால் பிராமணனாவதிலலை என்றும், தங்களுடைய செயலாலே ஆகிறார்கள் என்றும், அப்படி எந்த ஒரு வருணத்தவரும் பிராமணராக முடியும் என்று மிக ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார் தயானந்தர். 

பூணூல் அணிவது எல்லோருக்குமான சடங்கு என்றும், சந்தியாவந்தனம் என்பதும் தனிப்பட்ட சொத்தல்ல, அதுவும் பொதுவானது என்று எடுத்துரைத்திருக்கிறார் தயானந்தர்.

பிராமணன் சடங்குகள் செய்விப்பது கடமையல்ல, ஒவ்வொரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் தாங்களே சடங்குகளைச் செய்துகொள்ளலாம், வேத கால ஹிந்து முறையில் அப்படித்தான் இருந்திருக்க முடியும் என்கிறார் தயானந்தர்.

எத்தனையோ பிராமணரல்லாத ரிஷிகள் நல்வாழ்வு வந்து பிராமணரைப் போல் உயர்ந்ததையெல்லாம் இப்புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. இப்படி ஒரு புத்தகத்தைப் படிப்பதே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் இன்றைய நிலையில் இப்படி ஒரு நிலையை ஹிந்துமதம் கொண்டிருக்குமானால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்யாமல் இருக்க முடியவில்லை.

உயர் குணங்களோடு, ஜாதியற்ற சிந்தனையோடு உடல் ரீதியான பலமும் தேவை என்பதை தயானந்தர் சொல்லியிருக்கிறார். இதனைத்தான் பல ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தங்களுக்குத் தேவையான வகையில், சில சமயம் வன்முறை கூட சரி என்னும் அர்த்தத்தில் சொல்வதைக் கேட்கிறேன். 

தயானந்தர் உருவ வழிபாட்டை முற்றிலும் கைவிடச் சொல்லுகிறார். இந்த நிலைப்பாட்டில் ஆசிரியர் மலர்மன்னன் பிறழ்வது தெரிகிறது. தயானந்தரைப் பற்றி எழுதும்போது இதனைச் சொல்லியாக வேண்டிய ஆசிரியர், சில இடங்களில் உருவ வழிப்பாட்டைக் கைவிட்டால் என்னென்ன ஊறுகள் நேரும் என்பதைச் சொல்லிச் செல்கிறார். குறிப்பாக, ராம கிருஷ்ண பரம ஹம்சரும் தயானந்தரும் சந்தித்துக்கொண்டிருக்காத போது, இவர்கள் சந்தித்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என்று அவர் சொல்வது ஒரு எடுத்துக்காட்டு. ராம கிருஷ்ண பரமஹம்ஸர் உருவ வழிபாட்டைக் கைவிட்டிருக்க மாட்டார் என்று சொல்லும் மலர்மன்னன், தயானந்தரும் தன் கருத்தில் உறுதியாக இருந்திருப்பார் என்று சொல்வதற்குப் பதிலாக, சில ஞானிகளுக்கு தயானந்தர் விலக்கு அளித்திருக்கக்கூடும் என்கிற யூகத்துக்குத் தாவி விடுகிறார். இது போன்ற மலர்மன்னன் கொஞ்சம் தத்தளிக்கும் இடம், 1857 குறித்து தயானந்தர் பேசாதது பற்றியும், மனு தர்மத்தை தயானந்தர் ஏற்றுக்கொள்வது பற்றியும் எழுதும்போதும்.

மனுதர்மம் பற்றிய தனியான ஒரு அத்தியாயம் கடைசியாக வருகிறது. புத்தகத்தின் பின்னட்டையில், மனுதர்மத்தில் காலத்துக்கு ஏற்றதை மட்டுமே ஏற்றார் என்று பொருள்பட வருகிறது. ஆனால் புத்தகத்தினுள்ளே, தயானந்தர் மனுதர்மத்தை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டார் என்ற பொருள்பட, மலர்மன்னன், கிட்டத்தட்ட வாதாடிச் செல்கிறார். 

மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கும் பிராமணர்களுக்கு எதிரான கருத்துகளை மட்டுமே முன்வைத்து இதனை மலர்மன்னன் அணுகியிருப்பது சரியானதல்ல. ஒரு பிராமணன் தவறு செய்தால் அவனுக்கு அதிகத் தண்டனையும், பிராமணரல்லாத மற்ற வருணத்தவர் தவறு செய்தால், பிராமணனுக்குத் தரப்படும் தண்டனையைக் காட்டிலும் குறைவான தண்டனையும் தரப்படுவதை சுட்டிக்காட்டும் மலர்மன்னன், பிராமணரல்லாத வருணத்தவர் பிராமணர்களைத் திருமணம் செய்துகொள்ளும்போது மனு தர்மம் சொல்லும் சட்டங்களைப் பற்றிப் பேசவே இல்லை. பிராமணனுக்கு அதிக தண்டனை தரும் சட்டங்களைவிட மிகவும் முக்கியமான்வையும், சர்ச்சைக்குரியவையும் எதுவென்றால், பிராமணனுக்கு அதிக சலுகைகள் தரும் சட்டங்களும், பிராமணனை ஒரு பீடத்தின் மேல் அமர்த்தி வைக்கும் சட்டங்களுமே ஆகும். அதைப் பற்றி தயானந்தரின் கருத்தென்ன என்பதை மலர்மன்னன் விளக்கவில்லை.

அதேபோல, தயானந்தர் பெண் விடுதலையைப் பற்றிப் பேசுவதைச் சிலாகிக்கிறார். ஆனால் மனு தர்மமோ என்றென்றும் பெண் ஆணைச் சார்ந்தே நடக்கவேண்டும் என்று சொல்கிறது. 

மேலும், மனு தர்மத்தில் கிட்டத்தட்ட பாதிக்கு மேற்பட்ட பாடல்கள் பாட பேதங்கள் என்கிறார் மலர்மன்னன். அதாவது, எவையெல்லாம் பிரச்சினைக்குரியவையோ அவையெல்லாமே பாட பேதங்கள் என்று சொல்லிக்கொண்டுவிட ஏதுவாக இப்படிச் சொல்கிறாரோ என்கிற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

தயானந்தர் சொல்லியிருக்கும் எல்லாக் கருத்துகளுக்கும் சரியான விளக்கம் அளித்துவிட வேண்டும் என்கிற மலர்மன்னனின் தவிப்பு, சில இடங்களில் யூகங்களுக்குத் தள்ளிவிடுகிறது. 1857 பற்றிய யூகம், ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன சொல்லியிருப்பார் என்கிற யூகம் போலவே, யாகங்களின் மூலம் காற்றில் புகையைக் கலப்பதால் நன்மை பயக்கலாம் என்னும் யூகம். இப்படி யூகங்களுக்குச் செல்வதை விட, இப்படித்தான் தயானந்தரின் வாழ்வில் நடந்தது, இப்ப்படித்தான் தயானந்தர் சொன்னார் என்று சொல்லி விட்டுவிடுவது நல்லது. (ஆனாலும் அதனை தன் வாதப்படி எடுத்துச் சொல்லும் எல்லா உரிமைகளும் மலர்மன்னனுக்கு உள்ளது. என்ன ஒன்று, அதனைப் படிக்கும்போது லேசான புன்னகை இதழோரத்தில் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை!)

தயானந்தரின் இறப்புக்குக் காரணமாக அமைபவர் ஓர் இஸ்லாமியர். தயானந்தர், ஹிந்து மதத்தின் சடங்காச்சாரங்களைத் தீவிரமாக எதிர்த்தது போலவே, பிற மத ஆக்கிரமிப்பையும் எதிர்த்திருக்கிறார். எனவே ஒரு முஸ்லிம் அவரைக் கொல்ல எல்லா வாய்ப்புகளும் உள்ளன. அதே போலவே, தங்கள் ஆதாரங்களெல்லாம் பறிபோகிறதே என்று வேறு அதிகார வர்க்கத்தினர் சிலர் கூட, ஒரு முஸ்லிமின் தயவோடு தயானந்தரைக் கொல்ல முயன்றிருக்கக்கூடும் என்ற ஒரு தியரியும் உள்ளது. ராஜ புத்திர அரசர்கள் கூட அவரைக் கொல்ல முயன்றார்கள் என்று நிரூபிக்கப்படாத கூற்றும் உள்ளது. 

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது இன்னொரு எண்ணம் தோன்றியது. யூத் ஃபார் தர்மா என்ற தயானந்த சரஸ்வதியின் அமைப்பு (இந்த தயானந்தர் வேறு, ஆரிய சமாஜத்தின் தயானந்தர் வேறு) ஒன்றின் கூட்டத்தில் பேசிய அரவிந்தன் நீலகண்டன், கூட்டத்தினரின் கேள்வி ஒன்றுக்கு இப்படி பதில் சொன்னார். பிராமணரைத் தவிர எல்லா வருணங்களும் அழிந்துவிட்ட நிலையில், பிராமண வருணம் ஏன் அழியவில்லை என்றால், இன்று மற்ற எல்லா வருணத்தவரைப் போல எந்த ஒரு வருணத்தாரும் எந்த ஒரு வருணத்தாரின் வேலையையும் செய்ய முடியும் என்கிற நிலை உள்ளது. அதாவது ஒரு சூத்திர வருணத்தவன் வைசிய வருணத்தவனின் வேலையையும், வைசிய வருணத்தவன் மற்ற வருணத்தின் வேலையையும் செய்ய முடியும். பிராமண வருணத்தவன் கூட இதே போல் மற்ற வருணத்தின் வேலையைச் செய்ய இயலும். ஆனால் பிராமண வருணத்தாரின் தொழிலாகக் கருதப்படுவதை மற்ற வருணத்தாரால் செய்யமுடியாத நிலை உள்ளது. இந்த நிலை மாறி, மற்ற எந்த வருணமும் பிராமணனின் தொழிலாகக் கருதப்படுவதைச் செய்யலாம் என்னும் நிலை தோன்றினால், எல்லா வருணங்களும் தம்மளவில் ஒன்று கரையும் நிலை வரலாம் என்றார். இது தயானந்தர் அன்றே சொன்னதன் சாரம்தான் என்று தோன்றுகிறது.

இப்புத்தகத்தை மிகவும் சிறப்பாக, மிகவும் நேர்த்தியாக எழுதியிருக்கிறார் மலர்மன்னன். எங்கே எதனைச் சொல்கிறோம், எந்த விஷ்யத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை அழுத்திச் சொல்கிறோம் என்பதிலெல்லாம் ஒரு தேர்ந்த எழுத்தாளராக வெளிப்பட்டிருக்கிறார் அவர். அதேபோல் ஒரு புத்தகமாக வருவதற்காக அவர் பல விஷயங்களைத் தேடியதோடு மட்டுமில்லாமல், அதனைச் சரியாகத் தொகுத்து அளித்திருக்கிறார். இன்னும் தொடர்ந்து மலர்மன்னன் பல்வேறு புத்தகங்களை தனது தனித்துவத்தோடு எழுதவேண்டும். அது தமிழ்ச்சூழலில் ஒரு புதிய திறப்பாக நிச்சயம் அமையும்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-419-9.html 

மலர்மன்னனின் பதில்:

அன்புள்ள ஸ்ரீ ஹரன் பிரஸன்னா,

ஆரிய சமாஜம் நூலுக்கு நீங்கள் எழுதியுள்ள விமர்சனத்தை நண்பர்கள் அனுப்பித் தந்தமையால் வாசிக்கக் கிடைத்தது.

நூலாசிரியன் விளக்கம் அளித்தாக வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கும்படியான விமர்சனம் எழுதும் உங்கள் சாமர்த்தியத்தை முதலில் மெச்சுகிறேன்.

1. நீங்கள் பிராமணச் சார்பாகப் பார்ப்பதை நான் நியாயத்தின் சார்பாகப் பார்க்கிறேன். ஆகையால் எனது பார்வையை பகிரங்கப்படுத்துவதில் எனக்குச் சங்கடம் ஏதும் ஏற்படுவதில்லை. 

2. 1857-ல் அது குறித்து சுவாமி தயானந்தரிடமிருந்து எதிர்ரவினை ஏதும் வராமை, ஸ்ரீ ராமகிருஷ்ணர் பரமஹம்ஸர்-தயானந்தர் நிலைப்பாடுகள், மனுஸ்மிருதி பற்றறிய அவரது கருத்து, முதலானவை குறித்துச் சரியான ஆதாரங்களின் அடிப்படையிலேயே எனது கருத்துகளை நிறுவியுள்ளேன். ஆகவே அவை யூகங்கள் என்கிற வட்டத்துக்குள் அடங்காது என நினைக்கிறேன். அதற்குப் பதிலாக வாதங்கள் எனக்கொள்வது சரியாக இருக்கலாம்.

3. ‘ம’ எனப் பிரபலமடைந்த மகேந்திரநாத் குப்தா, ‘Gospel of Sri Ramakrishna’ என்ற தலைப்பில் பரமஹம்சரின் சொற்ப கால அன்றாட நிககழ்வுகளைப் பதிவு செய்திருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இது அமுத மொழிகள் என்கிற தலைப்பில் மூன்று தொகுதிகளாக சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் வெளியாகியுள்ளது. இதில் சுவாமி தயானந்த சரஸ்வதி ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பார்த்ததாகவும் அவரது சமாதி நிலை கண்டு வியந்து போற்றிச் சென்றதாகவும் குறிப்புகள் உள்ளன. ஆனால் இருவருக்குமிடையே உருவ வழிபாடு குறித்து ஸம்வாதம் ஏதும் நடைபெற்றதாகத் தகவல் இல்லை. 

நான் பல்லாண்டுகளுக்கு முன் ‘ம’ வை ஆங்கிலத்தில் வாசித்திருந்தபோதிலும் ஆரிய சமாஜம்நூலை எழுதுகையில் இது எனது நினைவில் இல்லை. யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் எழுதிய தயானந்த ஜோதியிலிருந்து வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைப் பயன் படுத்தியதால் அவற்றின் அடிப்படையில் இருவரிடையே சந்திப்பு நிகழ வாய்ப்பின்றி தயானந்தர் வங்காளத்தைவிட்டுச் சென்றுவிட்டார் என எழுதிவிட்டேன்.. 

பின்னர் ‘அமுத மொழிகளை’ வாங்கிப் படித்தபொழுது ஸ்ரீ ராம கிருஷ்ணரை தயானந்தர் பார்த்த விவரம் கவனத்திற்கு வந்தது. உடனே ஸ்ரீ பத்ரியுடன் தொடர்பு கொண்டு, புத்தகத்தில் இத்தகவலைச் சேர்த்துவிட வேண்டுமென்று சொன்னேன். அதற்குள் புத்தகம் அச்சாகிவிட்டபடியால் கால கடந்துவிட்டது, அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்.

உண்மையில் சுவாமி தயானந்தர்-ஸ்ரீ ராம கிருஷ்ணர் இடையே சந்திப்போ, வாதப் பிரதி வாதங்களோ நிகழவில்லைதானே. சமாதி நிலையில் ஆழ்ந்திருந்த பரமஹம்சரைக் கண்டு, இது ஓர் அசாதாரன நிலை என்று தயானந்தர் போற்றிச் சென்றதாக மட்டுமே தகவல் உள்ளது.. ஆகையால் ஒருவகையில் எனது பதிவில் பெரிய முரண் இல்லை. எனக் கொள்ளலாம். உருவ வழிபாட்டில் ஈடுபாடு இல்லாத சுவாமி விவேகானந்தரையே தம்மை குருவாக ஏற்குமாறு செய்தவராயிற்றே,, கடவுளைப் பல உருவங்களாகவே பார்த்துப் பரவசமடைந்த ஸ்ரீ ராமகிருஷ்ணர்! இந்த அடிப்படையில், ராமகிருஷ்ணர் விக்கிரகங்களை வெறும் விக்கிரகங்களாக அல்லாமல் கடவுள்களாகவே பார்த்து சல்லாபிப்பவர் எனபதைக் கண்டுகொண்ட தயானந்தருக்கு ராமகிருஷ்ணரின் உருவவழிபாட்டில் என்ன பிரச்சினை இருந்திருக்கக் கூடும்?

4. நமது கலாசாரம் கோயில் கலாசாரமாக ஆழ வேரோடிவிட்ட பிறகு, நம் கலைகள் யாவும் உருவ வழிபாட்டைச் சார்ந்தே உருவாகிவிட்டபிறகு (ராமாயணமும் பாரதமும் இல்லை யென்றால் நமக்கு ரசிக்கத் தெருக்கூத்தே இல்லை என்று தெருக்கூத்துப் பிரியரான அண்ணா ஒருமுறை என்னிடம் மனம் திறந்து சொன்னதுண்டு!), பல்வேறு தொழில்களும் கோயில் நடை முறைகளைச் சார்ந்து உருவாகிப் பல்லாயிரம் மக்களின் ஜீவாதாரமாகிவிட்ட பிறகு, மேலும் மிகவும் முக்கியமாக மிகப் பெரும்பாலான மக்ககளுக்கு உருவ வழிபாடுகளின் மூலமாகவே தெய்வ நம்பிக்கையும் அதன் பயனாக ஆறுதலும் திட சித்தமும் முற்றிலும் கிடைக்கிற சாத்தியக் கூறு உள்ளபோது, உருவ வழிபாட்டிற்கு முற்றிலுமாக முழுக்குப் போடுவது சரியல்ல என்பதே எனது கருத்து. ஆரிய சமாஜத்துடன் எனக்குப் பல் ஆண்டுகளாகத் தொடர்பு சென்னையில் மட்டுமல்ல, வேறு நகரங்களிலும் உள்ளது. இன்று அதில் உள்ள பலர் உருவ வழிபாட்டைக் கைவிட மனமின்றி இருப்பதை அறிவேன். மேலும் சுவாமி தயானந்தரே ஹிந்து சமயம் பல்வேறு கோட்பாடுகளைச் சேர்ந்த நம்பிக்கையாளர்களால் கட்ட மைக்கப்படுள்ளது என்று கூறியிருப்பதையும் பதிவு செய்துள்ளேன். எனவே, என் குல தெய்வமான கொல்லூர் மூகாம்பிகையை என் அன்னையாகவே அறிந்துள்ள எனக்கு இந்த விஷயத்தில் தவிப்போ தத்தளிப்போ இல்லை. உருவ வழிபாட்டில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு நடைபெறும் முறைகேடுகள், பல தெய்வ வழிபாடு மக்களிடையே ஏற்படுத்தும் பேத உணர்வு முதலான பிரத்தியட்ச நிலவரங்கள்தாம் தயானந்தரை உருவ வழிபாட்டுக்கு எதிராக மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கச் செய்திருக்க வேண்டும்.. மனோ ரீதியாக பல தெய்வ நம்பிக்கையிலும் வழிபாட்டிலும் உள்ள பிற நன்மைகளையும் அறிந்துள்ளேன். 

5. சாதாரண எழுத்தாளர்களே தங்கள் எழுத்தில் முன்னுக்குப் பின் முரணாக எதேனும் எழுதிவிடுவோமோ என்று முன்னெச்சரிக்கையுடன் இருக்கையில், மனுவைப் போன்ற பேரறிஞர் முன்னுக்குப் பின் முரணாக விதிமுறைகளை எழுதுவாரா என்று யோசிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இதன் அடிப்படையில்தான் உலகில் உள்ள அறிஞர்கள் பலரும் மனுஸ்மிருதியில் பல இடைச் செருகல்கள் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்திருப்பதாகக் கூறுகிறார்கள். அதில் உள்ள 2685 வாக்குகளில் 1214 வாக்குகளே அசலானவை என ஆய்வாளர்கள் தெளிவாகக் கூறியிருப்பதைப் பதிவு செய்துள்ள ளேன். பெண்கள் விஷயத்தில் மனுவில் முரண்பாடு ஏதும் இல்லை. ‘புத்ரேண துஹிதா ஸமா’ (மகன்-மகள் இருவரும் சரிசமானவர்களே) என்று சொல்லியிருக்கும் மனு, எல்லா நிலையிலும் ஆண்கள் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற கருத்துப்பட அறிவுறுத்தியிருப்பதைப் பெண்கள் ஆண்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என அவர் சொல்வதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. 

6. புரோகிதர்களாக இருந்து எல்லாச் சடங்குகளையும் செய்து வைக்க ஆரிய சமாஜத்தில் ஊழியர்கள் இருப்பதை எனது நூலில் பதிவு செய்துள்ளேன். இவர்கள் மந்திரங்களைச் சொல்வதோடு நின்றுவிடாமல் அவற்றின் பொருளையும் உடனுக்குடன் எடுத்துக் கூறுகிறார்கள். இந்த ஊழியர்கள் ஜாதியின் அடிப்படையில் பிராமணர்கள் அல்லவாயினும் வர்ண அடிப்படையில் பிராமணர்களாக உள்ளனர். எனவே பிராமண வர்ணத்தின் பணியை பிற வர்ணத்தவர் மேற்கொள்ள முன்வராததால் அதில் மட்டும் பிற வர்ண நுழைவு நிகழவில்லை எனக் கருதத் தேவையில்லை. 

7. கும்ப மேளா போன்ற பல லட்சம் மக்கள் கூடுவதால் வரும் கழிவுகளை அகற்ற சுகாதார அதிகாரிகள் ஆறுகளையே பயன்படுத்தி வந்ததால் திருவிழாக்களின் போதெல்லாம் கலாரா பரவுவது இயல்பாக இருந்தது. தயானந்தர் ஆங்கிலேயே அதிகாரிகளைச் சந்தித்துக் கழிவுகளை ஆற்றில் எறியாமல் எரித்துவிடுமாறு அறிவுரை கூறினார். அதனால் எழும் புகைமண்டலத்திற்கு மாற்றாக மூலிகைச் சுள்ளிகளைத் தீயில் இட்டால் காற்று தூய்மையடையும் என்றும் கூறினார். ஆங்கிலேய அதிகாரிகள் எளிதில் புரிந்துகொண்டு சம்மதிக்க வேண்டும் என்பதற்காகவே சமயச் சடங்கு போன்ற வேள்வியை நடத்தலாம் எனக் கூறுவதை அவர் தவிர்த்திருக்கக் கூடும்.. இந்த விளக்கத்தை நான் தெரிவிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் வேள்வித் தீயின் பயன் குறித்தும் ஓர் அனுமானம் போன்ற தொனி வந்துவிட்டிருக்கலாம். 

8. மனுஸ்மிருதியின் மூலப் பிரதியை எடுத்து வைத்துகொண்டு, வரிக்குவரி ஆராய்ந்து, எவையெல்லாம் அசல், எவையெல்லாம் இடைச் செருகல் என ஆதாரப் பூர்வமாக எழுத விருப்பம்தான். அதில் இறங்கிவிட்டால் பிறகு வேறு எந்த வேலையிலும்  ஈடுபட முடியாது. நானோ, இன்றளவும் முழுக்க முழுக்க எழுத்தின் மூலம் வரும் வருமானத்தையே நம்பியிருப்பவன். ஆகையால் யாராவது குறைந்த பட்சம் ஆறுமாத கால அவகாசம் தந்து ஸ்பான்ஸர் செய்தாலன்றி அந்த வேலையைக் கையில் எடுக்க இயலாது! நீங்கள் என்னிடம் மேலும் எதிர்பார்ப்பதாக எழுதியுள்ளமையால் இதனைக் குறிப்பிடுகிறேன்.

9. பண்டிதர்களும் புரோகிதர்களும் தங்கள் பிழைப்பைக் காத்துக் கொள்வதற்காக தயானந்தரைக் கொன்றுபோட முகமதிய நர்த்தகியையும் முகமதிய வைத்தியரையும் பயன்படுத்திக் கொண்டதை எனது நூலில் தெளிவாகவே பதிவு செய்துள்ளேன். எனவே முழுப்பழியையும் முகமதியர்மீது நான் சுமத்திவிடவில்லை!

இவ்வளவு விரிவான விளக்கம் தரக் காரணம், குறைகளுக்கு சமாதானம் சொல்லவேண்டும் என்கிற கவலை அல்ல. உங்களைப் போல் இந்த விஷயத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு முடிந்தவரை மனநிறைவளிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தனையும் எழுதலானேன்.

அன்புடன்,

மலர்மன்னன் 
ஜூலை 05, 2010 

 

Share

கல்கி இதழ் மாற்றமும், பிள்ளையார் இடப்பெயர்ச்சியும்

கல்கியின் இதழ் பார்த்தேன். வடிவமைப்பு மாறி இருக்கிறது. சட்டென அது கல்கி என்றே தோன்றவில்லை. கல்கிதான் இது என்று நம்பிக் கையில் எடுக்கக்கூட மனம் வரவில்லை. 1998ல் கல்லூரி முடிந்து வேலைக்குச் சேர்ந்தபோது நான் முதலில் வாங்கியது கல்கி இதழையே. காரணம் சுஜாதா. அப்போது கல்கியில் வரிசையாக சில சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். தொடர்ந்து வாசித்தேன். இடையில் துபாய் செல்லவேண்டி வந்தது. அங்கே சென்றது கல்கி வாசிப்பதை நிறுத்தினேன். அவ்வப்போது வாசித்ததும் உண்டு. இங்கே வந்தபின்பும் அவ்வப்போது வாசிப்பேன். இப்போது கடந்த ஒரு வருடமாக மீண்டும் வாசிக்கிறேன். கல்கியில் வரும் அனைத்தையும் வாசிக்கிறேன் என்று சொல்லிவிடமுடியாது. எனக்குத் தேவையானவற்றை மட்டுமே வாசிப்பேன். எப்படியாவது பாஜகவைக் குறை சொல்லி தனது இந்துத்துவ எதிர்ப்பு முத்திரையை வலிந்து காண்பித்துக்கொள்ளும் அசட்டுத் தலையங்கங்கள் 1998லேயே எனக்குப் பிடிக்காது. கல்கியெல்லாம் அப்பவே அப்படீன்னாலும் நாங்களும் அப்பவே அப்படித்தான். இப்போதும் அதே அசட்டுத்தனம் தொடர்கிறதுதான் என்றாலும், சில கேள்வி பதில்களில் கொஞ்சம் தைரியத்தைப் பார்க்க முடிந்தது.

 

புதிய வடிவமைப்பில் பெரிய அதிர்ச்சி தலையங்கத்தில் கல்கியின் பிள்ளையார் காணாமல் போனதுதான். பிள்ளையாரை நீக்க ஒரே காரணம் அதன் முற்போக்குவாதமாகவே இருக்கும் என்று மட்டுமே யோசிக்கமுடிகிறது. இந்த ஜல்லியைவிட்டு வேறு காரணங்கள் இருக்குமானால் அதை கல்கி அதன் வாசகர்களுக்குச் சொல்வது நல்லது. சொல்லவேண்டியது கல்கியின் கடமை அது இது என்றெல்லாம் அளக்க விரும்பவில்லை. கல்கி விளக்கம் தராவிட்டால், அதை செக்யூலர் ஜல்லி என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான் என்று மட்டும் நினைக்கிறேன். இப்படி நினைத்துக்கொண்டே, ஆனால் காஞ்சி பெரியவரின் தெய்வ வாக்கை விட்டிருக்கமாட்டார்களே என்று யோசித்துக்கொண்டே தேடிப் பார்த்தால், அங்கே காஞ்சி பெரியவரின் தெய்வ வாக்கு, தலையங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பிள்ளையாருடன் உள்ளது! பிள்ளையாருக்கு ஏன் இந்த இடப்பெயர்ச்சி எனத் தெரியவில்லை.

ஆனந்தவிகடனின் இதழ் வடிவம் மாற்றம் பெற்ற போதும் எனக்குப் பிடிக்கவில்லை. ஒருவேளை இப்படி இதழ் வடிவம் மாற்றம் பெறுவதை ரசிக்கும், எடை போடும் ஆற்றல் எனக்கு இல்லாமல் இருக்கலாம். தெரியவில்லை. ஆனால் நிச்சயம் கல்கியின் இதழ்வடிவ மாற்றம் ரசிக்கும்படியாக இல்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும். கழுதை போலவும் இல்லாமல் பழக்கப்பட்ட பழைய குதிரை போலவும் இல்லாமல் ரெண்டுக்கெட்டானாக உள்ளது. எழுத்துருக்களையெல்லாம் மாற்றியிருப்பார்கள் போல. ஒன்றுமே ஒட்டவில்லை. படிக்கவும் ஓடவில்லை. நீண்ட ஜடையுடன் தழைய தழைய புடைவை கட்டிக்கொண்டு மல்லிகை மணக்க கட்டிக்கொள்ளும் மனைவி, திடீரென்று குட்டைப் பாவாடையில் கிராப் வெட்டிக்கொண்டு கட்டிக்கொண்டால் என்ன தோன்றும்? சிதம்பரத்தில் அப்பாசாமி மாதிரி ஒரே ஒரு நைட்டுக்குன்னா ஓகே, எல்லா நாளும் அப்படித்தான்னா? கிளர்ச்சி அடைவதா அதிர்ச்சி அடைவதா என்ற அப்பெருங்குழப்பத்தில் இருக்கிறேன். :))

கல்கியில் அம்ஷன் குமார் உலக சினிமா பற்றி தொடர் எழுதுகிறார் போல. இந்த வார கல்கியில் அவரது மூன்றாம் வாரப் படைப்பைப் பார்த்தேன். புத்தகக் கண்காட்சி சமயத்தில் கல்கியை வாசிக்காமல் விட்டதால் ஒரு தொடர்ச்சி இல்லாமல் போய்விட்டது. அவற்றைத் தேடிப் படிக்கவேண்டும். முதல் இரண்டு அத்தியாயங்களில் என்ன படங்களைப் பற்றிப் பேசினார் என்று பார்க்கவேண்டும். இந்த வாரம் அம்ஷன் குமார் அறிமுகப்படுத்தியிருக்கும் படம் – செபரேஷன். ஆஸ்கர் விருது பெற்ற ஒரே திரைப்படம் என்ற தலைப்பில் அக்கட்டுரை வந்திருந்தது. கடல் திரைப்படம் பற்றிய பாராட்டுப்பத்திரம் உள்ளது. வழக்கம்போல் ஓ போடுகிறார் ஞாநி. படித்துப் பாருங்கள். 🙂

Share

உயிர்க்கத் துலங்கும் உலகு

யாருமே என்னை அழைக்கவில்லை
என் குரலும் யாருக்கும் கேட்கவுமில்லை
மழையோ வெயிலோ காற்றோ பனியோ
சத்தமோ நிசப்தமோ எதுவுமே இல்லை
சூன்யமும் இல்லை
ஆனாலும் எல்லாமும் நிறைந்திருந்தது எப்படி
மனதின் கண்கள் திறக்க
முகத்தின் கண்கள் மறைய
அகத்தின் செவி கேட்க
புறச்செவி ஒடுங்க
உள்ளே உள்ளே இன்னும் உள்ளே
மெல்லப் பரவுகிறது
அன்று பிறந்த மாசற்ற சிசு ஒன்றின் வாசம்
உயிர்க்கத் துலங்கும் உலகு.
 

Share

எதுவுமே நிகழவில்லை

எவ்விதப் பதட்டமும்
இல்லை என்ற பாவனையில்
புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டேன்
இரண்டு வரிகளுக்குள்ள
வெற்றிடத்தில் நிலைகுத்தி நின்ற பார்வையில்
ஓர் புதிய உலகம் விரிந்தது
மாயக் கண்ணன்
தன் வாய் திறந்தபோது
உள்ளே உருண்ட உலகத்தைக் காட்டிலும்
விரிந்ததொரு பிரபஞ்சம்
எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி
நான் வெளியே
தனியொரு பிரபஞ்சமாக
புத்தகத்தை பட்டென்று மூடி வைக்க
பறந்து சென்ற எல்லாம்
அதனதன் இடத்தில் வந்து அமர்ந்துகொண்டது
ஒன்றுமே நிகழாதது போல

Share

பள்ளியைக் காப்பாற்றுவோம்

ஒரு பெரிய சிறையிலிருந்து விடுபட்ட பறவையைப் போல MLWA பள்ளிக்குள் புகுந்தேன் என்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது. அதற்கு முன்புவரை நான் படித்துக்கொண்டிருந்த பள்ளியை ஒரு சிறையைப் போலவே உணர்ந்தேன். ஒரு போலிஸுக்கும் திருடனுக்குமான உறவும் அணுகுமுறையையுமே அதுவரை நான் படித்துக்கொண்டிருந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடம் காண்பித்தார்கள். அப்பள்ளியைவிட்டு MLWA பள்ளிக்குச் செல்லும்வரை, பள்ளி என்பது சுதந்திரம் மிகுந்த இடம் என்பதுவும், பள்ளியில் மகிழ்ச்சியாக இருக்கவும் முடியும் என்பதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. 13 வயதில் 8ம் வகுப்பில் MLWA பள்ளியில் சேர்ந்தபின்புதான் என் பள்ளி நாள்களின் வசந்த காலங்கள் ஆரம்பித்தன.


பள்ளி ஆசிரியர்கள் பிரம்பால் அடிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு அறவே இல்லாமல் இருந்தது. முதல் ஒரு மாதத்தை ஒரு சந்தேகத்துடனேதான் கழித்தேன். போக போகத்தான் தெரிந்தது, MLWA பள்ளியில் அதிகம் யாரும் அடிப்பதில்லை என்று. அடிப்பதே இல்லை என்ற நிலை இல்லை. ஆனால் அஞ்சி நடுங்கவேண்டிய திருடனின் பயம் அப்பள்ளியில் இல்லை. MLWA என்றாலே நினைவுக்கு வருவது அப்பள்ளி தந்த சுதந்திரம் மட்டுமே.

எத்தனை எத்தனை ஆசிரியர்கள். 

கிருஷ்ணன் என்றொரு ஆசிரியர் இருந்தார். சமூக அறிவியல் ஆசிரியர். ஒரு சேரில் உட்கார்ந்துகொண்டு, ஹாவ் என்று ஏப்பம் விட்டு, கழுத்தை மேலிருந்து கீழாகத் தடவிக்கொண்டு, இந்திய நில அமைப்பைப் பற்றி வேதம் போலச் சொல்வது இன்னும் நினைவில் இருக்கிறது. புவியியலை மனப்பாடம் செய்யாமல், மனக்கண் மூலம் இந்தியாவை நினைவில் நிறுத்திப் படிக்கமுடியும் என்று தெரிந்ததே கிருஷ்ணன் சார் பாடம் எடுத்த விதத்தில்தான். அவர் வரலாற்றைச் சொல்லிக்கொடுத்த விதம் அலாதி. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அவரிடம் படித்திருந்தால் நான் கடந்த கால இந்திய வரலாற்றில் நிபுணன் ஆகியிருப்பேன்.

ஜான் என்றொரு சார். கணிதம் எடுப்பவர். சிலபஸை முடிப்பது, அதை மீண்டும் ரிவைஸ் செய்வது என அவர் செய்த மாயங்கள் என்றென்றும் நினைவில் நிற்கும். அவரைப் போல இன்னொருவர் மேத்ஸ் எடுக்க முடியாது என்றும், அவரே கணிதத்தின் கடைசிப் புள்ளி என்றும் அன்று நாங்கள் நம்பினோம். 

நார்மன் சார் – அன்பைத் தவிர எதுவுமே அறியாதவர். சிரில் மேரி டீச்சர் – அறிவியலை சொல்லித் தர அவர் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. நாங்கள்தான் எதையுமே புரிந்துகொள்ளக்கூடாது என்று விறைப்பாக இருந்தோம். 

லக்ஷ்மணன் ஐயா – இன்று தமிழில் தெரியும் கொஞ்ச நஞ்ச இலக்கணமும் இந்த லக்ஷ்மணன் ஐயா இட்ட பிச்சைதான். அவர் இல்லை என்றால் தமிழில் ஒன்றுமே தெரியாமல் போயிருந்திருக்கும். 

கணேசன் ஐயா – இவர் வகுப்பறைக்குள் வந்தாலே நாங்கள் ஓ வென்று கூவுவோம். கிட்டத்தட்ட ரஜினியின் ஓப்பனிங் எண்ட்ரியை ஒத்தது இது. இவர் மாணவர்கள் மத்தியில் ஒரு ஹீரோ.

தர்மராஜ் சார் – இவர்தான் ஹெச் எம். இவர் வந்து நின்றாலே, பள்ளி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் அனைவரும் தெறித்து ஓடுவோம். இவரிடம் அவ்வளவு பயம். 

இந்தப் பள்ளிகளின் நினைவுகளைச் சொல்ல ஆரம்பித்தால் ஒட்டுமொத்த நாஸ்டால்ஜியாவுக்குள் சிக்கி வெளியே வர இயலாமல் போய்விடும்.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு என்னை பழைய நண்பர் ஒருவர் அழைத்தார். வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நொடி அது. ஆனால் அம்மகிழ்ச்சி ஒரு நொடி மட்டுமே நீடிக்கும் என நினைக்கவில்லை. MLWA பள்ளியை மூடப் போகிறார்கள் என்றார் அவர். 

கஷ்டப்பட்ட ஏழைகள் அதிகம் படிக்கும் பள்ளி. சில வருடங்களுக்கு முன்பாக வேறொரு மேனேஜ்மெண்ட் கையில் போயிருக்கிறது. புதிய நிர்வாகம் என்று அறிகிறேன். பள்ளியை மூடிவிட்டு, நல்ல விலைக்குச் செல்லும் அந்த இடத்தை விற்று, காம்ப்ளக்ஸ் போன்ற ஒன்றைக் கட்டுவது அதன் நோக்கம் போல. இதை செய்துமுடிக்க நிர்வாகம் முதலில் செய்தது, புதிய மாணவர்களின் சேர்க்கையை நிறுத்தியது. இப்படி நிறுத்தியதுமே இப்பள்ளியை மூடப் போகிறார்களாம் என்ற பேச்சு அப்பகுதி முழுவதும் பரவிவிடும். அவர்கள் நினைத்தபடிதான் நடந்திருக்கிறது.

நான் MLWAல் படித்தபோது, 1200 பேர் படித்ததாக என் நினைவு சொல்கிறது. ஆண்டு 1990. இப்போது 200 பேர் படிப்பார்களா என்பதுகூடத் தெரியவில்லை. கண்முன்னே இப்படி ஒரு பள்ளி சீரழிக்கப்படுவது கடும் மனவருத்தத்தை அளிக்கிறது. பாரம்பரியம் மிக்க ஒரு பள்ளி, வெறும் லாப நோக்கத்திற்காக இடிக்கப்படுவது ஏனென்று தெரியவில்லை. இப்பள்ளியைச் சீரமைக்க என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. வெளிப்படையாக அங்கிருக்கும் ஆசிரியர்கள் பேசமுடியாத ஒரு நிலையும் உள்ளது.

தற்போது இப்பள்ளியை மீட்டெடுக்கும் ஒரு முயற்சிக்கு ஓரளவு ஆதரவு கிட்டியுள்ளது. இவர்கள் இப்பள்ளியைக் காப்பாற்றுவார்கள் என்று அப்பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள், அப்பகுதி மக்கள், அப்பள்ளியில் படித்த என்னைப் போன்ற அலுமினி மாணவர்கள் நம்புகிறார்கள். இது நடக்கவேண்டும்.

ஒரு மேனேஜ்மெண்ட் பள்ளியை இப்படி நினைத்தால் மூடிவிடலாம் என்ற அளவில் மட்டுமே நம் சட்டங்கள் இருக்கின்றன என்பதே வேதனை அளிக்கிறது. பள்ளி என்பது வெறும் பள்ளியல்ல என்ற கிளிஷேக்கள் இவர்கள் முன் எடுபடாது என்றாலும், இந்த கிளிஷேக்களைச் சொல்லாமல் சில சமயம் உணர்வுகளைச் சொல்லிவிடமுடிவதில்லை. பள்ளி என்பது வெறும் பள்ளி மட்டுமல்ல. ஒவ்வொரு ஆண்டும் ஒரு பள்ளி உருவாக்கும் மாணவர்களின் நினைவுகளில் அப்பள்ளி வாழும்தோறும், தொடர்ந்து நல்ல மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒரு பள்ளி தந்துகொண்டிருக்கும் காலம்தோறும் அது ஒரு சமூகத் தொகுப்பாக மாறுகிறது. இப்படிப்பட்ட பள்ளியை இடிக்க எப்படி புதிய நிர்வாகம் முடிவெடுத்தது என்று தெரியவில்லை. உலகுக்கு அன்பை போதிக்கும் பள்ளியை இடிப்பது, மனிதர்களின் உணர்வுகளைக் கொல்வதற்கும் எனவே மனிதர்களைக் கொல்வதற்கும் ஒப்பானது என்பதை மறந்துவிட்டார்களா எனத் தெரியவில்லை.

மால்கள் கட்டவும், காம்பளக்ஸ் கட்டவும் பணம் மட்டும் இருந்தால் போதும். எந்த இடத்திலும் கட்டிக்கொள்ளலாம். அல்லது தேவையான இடத்தில் கட்டிக்கொண்டுவிடலாம். ஆனால் ஏற்கெனவே பல ஆண்டுகளாக ஓரிடத்தில் இருக்கும் பள்ளியை இடிப்பது என்பது இத்தனை எளிதானதல்ல. அப்பள்ளியில் படிக்கும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த கஷ்டப்பட்ட ஏழை மாணவர்கள் எங்கே செல்வார்கள், என்ன ஆவர்கள் என்பதெல்லாம் ஒரு பெரிய சமுதாயப் பிரச்சினை. இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், எப்படி பள்ளியை மூட முடிவெடுத்தார்கள் எனத் தெரியவில்லை. பள்ளியும் ஒரு விற்பனைப் பண்டமே என்னும் அர்ப்பணிப்பற்ற ஒரு கணக்கே இதன் காரணமாக இருக்கவேண்டும்.

கடந்த வாரங்களில் புதிய தலைமுறை இதழில், இப்பள்ளியின் மீட்சி குறித்து வெளியான கட்டுரையைப் படித்துவிட்டு, பள்ளியின் மறுகட்டுமானத்துக்கு பலரும் பணம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பணத்தைவிட, அனைவரின் ஆதரவின் மூலம் பள்ளியை இடிக்காமல், மூடாமல் இருக்கச் செய்வதே உடனடி அவசியம். 

இப்பள்ளியை மீட்க அரசு ஆவண செய்யவேண்டும். செய்யும் என்று நம்புகிறேன். 

நண்பர்கள் கவனத்துக்கு – இப்பதிவை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு செல்லுங்கள். ஃபேஸ்புக் மூலமும் டிவிட்டர் மூலமும் பலரைச் சென்றடைந்தால் நல்லது. நீங்கள் செய்யும் உதவிக்கு நன்றி.

தனிப்பட்ட முறையில் மிகவும் வருத்தமாக உணர்கிறேன். இப்பள்ளியின் நினைவுகள் என்றென்றும் மறக்கமுடியாதவை. ஆசிரியர்களின் பங்களிப்பு அபரிதமானது. இப்பள்ளியைக் காக்கவேண்டும்.

இப்பள்ளியின் ஃபேஸ்புக் பக்கம் – https://www.facebook.com/mlwaschoolmadurai

Share

பசுவதை பற்றிய ஆவணப்படம்

பசுவதை தடையைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை இன்று பார்த்தேன். ஆலயம் தொழுவோர் சங்கம் சார்பாக எடுக்கப்பட்டிருந்த இந்த ஆவணப்படத்தை இயக்கியவர்கள் பத்ரி (பத்ரி சேஷாத்ரி அல்ல) மற்றும் ராதா ராஜன்.

ஆலயம் தொழுவோர் சங்கத்தின் சார்பாக முதலில் பலர் பேசினார்கள். ஆலயத்தின் பல்வேறு சொத்துகள் இன்று அரசால் எப்படி கபளீகரம் செய்யப்படுகின்றன என்றெல்லாம் எடுத்துரைத்தார்கள். ஹிந்து ஆலயங்களை அரசிடமிருந்து மீட்டு அவற்றை ஹிந்து அமைப்புகளிடம் கொடுப்பதே ஒரே வழி என்றெல்லாம் சொன்னார்கள். ஹிந்து ஆலயங்களில் நடைபெறும் எல்லாமே தர்மத்துக்கு எதிரானதாக இருப்பதாகவும் அதனை சரியான முறையில் செய்ய ஹிந்து அமைப்புகளால் மட்டுமே முடியும் என்றார்கள். அரசு செய்யும் தவறுகளைத் திருத்துவதைவிட ஹிந்து அமைப்புகளிடம் ஹிந்து ஆலயங்கள் வருவதே முக்கியமானது என்பதே இச்சங்கத்தின் நோக்கம் என்பது புரிந்தது. இதில் தவறு காண இடமில்லை. ஏனென்றால் எல்லா அரசுகளுமே ஆலயங்களின் சொத்துக்களைத் தங்கள் பினாமி சொத்துகளாகத்தான் பாவிக்கின்றன. ஆனால் ஹிந்து அமைப்புகள் வசம் வரும் ஆலயங்களில் பராமரிக்கப்படும் முறைகள் எவ்வகையிலும் சாதி ஏற்றத்தாழ்வு சாராததாக இருக்கும் உறுதியை ஹிந்து அமைப்புகள் வழங்கவேண்டும். அரசு தரப்பில் நடக்கும் குறைகளை எதிர்கொள்ளவாவது முடியும். தனிப்பட்ட நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்புகளின் கைகளில் வரும் ஆலயங்களில் நடக்கும் அத்துமீறல்களை எதிர்கொள்வது நிச்சயம் சவாலான ஒன்றே.

பின்னர் பசுவதை பற்றிய, கேரளாவுக்கு இறைச்சிக்காகக் கடத்தப்படும் மாடுகளைப் பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பானது. பசு என்றாலே அது எருமை எல்லாவற்றையும் சேர்த்தே குறிக்கும் என்று சொல்லப்பட்டது. இதிலிருந்தே எனது குழப்பம் தொடங்கிவிட்டது. பசுவதை பற்றிய ஒரு தெளிவின்மை எனக்கு எப்போதுமே உண்டு. ஒரு ஆன்மிக ஹிந்துவாக என்னால் நிச்சயம் பசுவதையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஓர் சக ஹிந்துவாக, மாட்டிறைச்சி சாப்பிடுவர்களைக் கேவலமாக நினைக்கவும் என்னால் முடியாது. எனவே இதுகுறித்த குழப்பம் எப்போதும் எனக்கு உண்டு. இந்த ஆவணப்படம் அந்தக் குழப்பத்தைப் பன்மடங்கு கூட்டிவிட்டது என்றே சொல்லவேண்டும்.

பசுவதைத் தடை என்பதை ஹிந்து அமைப்புகள் இன்னும் தெளிவாக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஒட்டுமொத்த பசுக்கொலை தடை என்று தொடங்கினால் அது வெற்றி பெறும் வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இருக்காது என்றே உறுதியாகத் தோன்றுகிறது. ஒட்டுமொத்த பசுவதைத் தடை என்பது, பல்வேறு சாதிகளின் உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக ஆகிவிடும் என்பதால் இதனை எக்காரணம் கொண்டும் ஏற்கமுடியாது. தலித்துகள், பழங்குடிகள் உள்ளிட்ட, மாட்டிறைச்சியை உண்ணும் உணவுப் பழக்கம் உடைய சாதிகளின் பங்கேற்பில்லாமல் இப்பசுவதை எதிர்ப்பை மேலே கொண்டு போகவே முடியாது. எத்தனையோ தலித்துகள் இன்றும் பசுவதையை ஏற்பதில்லை. உண்மையில் பசுவதை எதிர்ப்பு அவர்கள் மூலம் அவர்களில் இருந்தே தொடங்கவேண்டும். அம்பேத்கர், தலித்துகள் இறந்த பசுக்களின் தோலை உரிப்பதிலிருந்தும், அவற்றின் இறைச்சியை உண்பதிலிருந்து வெளியே வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என நண்பர் ஒருவர் சொன்னார். இங்கிருந்தே நாம் தொடங்கவேண்டும். பசுவதை (அதாவது பசுவைக் கொல்லுதல்) என்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்பதை அம்பேத்கர் ஏற்காததன் சூட்சுமம், தலித்துகள் மற்றும் பழங்குடிகள் பற்றிய அவரது பார்வையில் உள்ளது. இதே பார்வையே நேருவுக்கும் இருந்திருக்கவேண்டும்.

ஆவணப்படத்தைப் பற்றிய ராதா ராஜன் நேரு மீது குற்றம் சாட்டும் தொனியில்தான் பேசினார். அவரது குற்றம் சாட்டுதல் அவரது பார்வையிலிருந்து புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் ஒரு பெரிய இயக்க முன்னெடுப்பு ஒருவரது அல்லது சிலரது தனிப்பட்ட பார்வையில் ஏற்படும் புரிதலை அடிப்படையாகக் கொண்டு நடக்கமுடியாது என்பதே உண்மை. எனவேதான் காந்தி பசுவதைத் தடை என்பது தனிப்பட்ட மனிதரின் மனங்களில் நிகழும் மாற்றமாக இருக்கவேண்டும் என்றார் போல. சட்டத்தின் மூலமாக இதனைச் செய்யமுடியாது. செய்தால் அது ஹிந்து மதத்தில் சாதி ரீதியான பிளவை இன்னும் ஆழமாக்கும். 

அது மட்டுமல்ல. நேரம் பார்த்துக் காத்திருக்கும் கிறித்துவ மதம் பரப்பும் குழுக்களுக்கு பந்தி விரிப்பது போல் ஆகிவிடும். நேரு அரசின் போது பசுவதைத் தடைச் சட்டம் வருவதை அரசில் இருந்த அத்தனை முஸ்லிம்களும் வரவேற்றார்கள். ஆனால் நேரு பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவில்லை. மாறாக ஒரு குழுவை நியமித்து அதன் கருத்துகளைக் கேட்டார். அக்கருத்துகளையும் செயல்படுத்தவில்லை. இந்திராவின் ஆட்சிகாலத்திலும் பசுவதைத் தடைச் சட்டம் குறித்து ஒரு குழுவிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் கோல்வல்கரும் இருந்தார். இது பற்றிய மேலதிகத் தகவல்களைப் படிக்கவேண்டும். இந்த ஆவணப்படத்தின்படி, இக்குழுவின் அறிக்கைகள் வெளியிடப்படவில்லை. வாஜ்பாய் அரசிலும் இன்னொரு குழுவிடம் கருத்துக் கேட்கப்பட்டதாம். அக்குழுவின் கருத்துகளும் வெளியிடப்படவில்லை போல. வாஜ்பாயும் நேரு போல் அம்பேத்கர் போல் சிந்தித்திருக்கவேண்டும். 

பசுவதைத் தடைச் சட்டம் என்பது, உயிர்க்கொல்லாமை என்பதை ஒட்டி சிந்திக்கக்கூடிய ஆளவுக்கு மேம்போக்கானதல்ல. நிச்சயம் ஆழமானது. இந்தியாவில் சிறிய சிறிய குழுக்களாக இருந்தாலும் பல்வேறு நுண்மைகளுடன் வேர்கொண்டிருக்கும் பல்வேறு சாதிகளின் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் ஒட்டியது. அதைக் கணக்கில் கொள்ளாமல் நாம் பேசமுடியாது. அந்த சாதிகளின் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஒரு மக்கள் இயக்கமாக பசுவதைத் தடையை மேலே கொண்டு போகவும் முடியாது. இந்த ஆவணப்படம் வெளியீட்டின்போதே இச்சாதிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவேண்டும். அப்போதுதான் பசுவதை தடை பற்றிய மன மாற்றத்தை நோக்கி நாம் முன்னேற முடியும். பசுவதை எக்காரணம் கொண்டும் ஏற்காத என்னைப் போன்றவர்கள்கூட, ஹிந்து தர்மத்துக்குள் இருக்கும் பல சாதிகளின் கண்ணோட்டங்களைப் பார்க்க யோசிக்கும்போது, அந்த அந்த சாதிகளின், அதுவும் பசுக்கொலை ஒரு பெரிய தவறல்ல என்று நினைக்கும் சாதிகளின் ஆதரவைப் பெறுவது எத்தனை சிக்கலானது என்று புரிந்துகொள்ளலாம். இவர்களை நோக்கியே நாம் பசுக்கொலையைப் பேசவேண்டும்.

முஸ்லிமகள் சில இடங்களில் பசுக்கொலையை ஹிந்துக்களுக்கு எதிரான சிம்பலாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பதிலுக்கு பன்றி இறைச்சி நல்லது என்பதுபோன்ற ஹிந்துக்குரலையும் கேட்டிருக்கிறேன். இவற்றையெல்லாம் விட, பசுவதை என்பது ஹிந்துக்களுக்குள்ளான பெரிய பிரச்சினையே அன்றி ஹிந்து முஸ்லிம் பிரச்சினை அல்ல என்று ராதா ராஜன் சொன்னார். இது சரியானதே. எப்போது அது ஹிந்துக்களின் தோல்வியாகிறதோ, அப்போது நாம் அனைத்து ஹிந்துக்களிடமும் அதாவது அனைத்து சாதிகளிடமும் இருந்து நம் பேச்சைத் தொடங்கவேண்டும். அதற்கு முதலில் நாம் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதன் பெயரில் நடக்கும் கொடுமைகளைப் பற்றிப் பேசவேண்டும். இல்லையென்றால், ‘எங்களைக் காப்பாத்தவே நாதியில்லை. இதில் மாடுகளைக் காப்பாத்துறது அதைவிட முக்கியமா போச்சா?’ என்ற குமுறலுக்கு பதில் இல்லாமல் ஓடி ஒளியவேண்டியிருக்கும்.

ஆவணப் படம் தொடர்பாகச் சொல்லவேண்டுமானால், இந்த ஆவணப்படம் மனதை உலுக்கக்கூடியதாக, உயிரை அறுக்கக்கூடியதாக இல்லை. சாதாரணமாக நாம் பார்த்து பார்த்து மரத்துப் போய்விட்ட, வண்டிகளில் கூட்டம் கூட்டமாக அள்ளிச் செல்லப்படும் மாடுகளையே காண்பிக்கிறார்கள். ஒரு பெரிய அரங்கத்தில் பலர் இதனைப் பற்றிப் பேசி, அதற்குப் பிறகு பார்க்கும்போதுகூட ஒரு மெல்லிய பாவம் மட்டுமே தோன்றுகிறது. நாம் மனமும் மூளையும் மழுங்கடிக்கப்பட்டுவிட்ட என்னைப் போன்ற மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அப்படியானால் அதை உடைக்கிற உளியின் சக்தியும் அதற்கு இணையான, அதைவிட அதிகமான வலு கொண்டதாக இருக்கவேண்டும். அந்த வலு இந்த ஆவணப்படத்தில் இல்லை. ப்ரீச்சிங் டூ தி கன்வர்டட் வகைக்கு மட்டுமே சில உச் உச் த்ஸொ த்ஸொ வரும். மற்றவர்கள் இதனை எளிதாகப் பத்தோடு பதினொன்றாகக் கடப்பார்கள். இப்படிச் சொல்வதால், இந்த ஆவணப் படத்தின் பின்னாலுள்ள உழைப்பை, தியாகத்தை நான் கண்டுகொள்ளவில்லை என்பது அர்த்தமல்ல. இதில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் என் கோடி வணக்கங்கள். ஆனால் உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்று மட்டுமே சொல்லவருகிறேன். 

மற்ற சாதிகளின் கருத்துக்களோடு, இது மக்களுக்கான இயக்கம் என்று சொல்ல வைக்கிற வகையிலான ஆவணப்படமே பசுவதைத் தடை குறித்த முக்கியமான ஆவணப்படமாகத் திகழமுடியும். அதற்கு இது ஒரு தொடக்கமாக அமையும் என்று நம்புவோம். ஆவணப்படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.

Share

ஓம் சாந்தி ஓம்

சுருக்கமாகப் படிக்க விரும்புகிறவர்கள் மஞ்சளடிக்கப்பட்ட பகுதிகளைப் படித்தால் போதும்.

இப்படி ஒரு தளம் இருக்கிறது என்பதே இப்போதுதான் நினைவுக்கு வந்தது. கொஞ்ச நாள் எழுதாமல் இருக்கலாம் என்று முடிவெடுத்துப் படிக்க ஆரம்பித்ததில், எழுதவே எரிச்சல் தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஃபேஸ்புக்கும் டிவிட்டரும் தந்த பழக்கத்தில் யாராவது மூன்றாவது வரியை எழுதினாலே ஏன் இத்தனை இழுவையாக நீளமாக எழுதுகிறார்கள் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதுவே புத்தகமாகப் படிக்கும்போது ஒன்றும் தோன்றுவதில்லை. ஃபேஸ்புக்கும் டிவிட்டரும் செய்துவைத்த இன்னொரு விஷயம் உடனடி அறச்சீற்றம். இப்போது நினைத்துப் பார்த்தால் இந்த அறச்சீற்றங்களுக்கெல்லாம் எதாவது பொருளிருக்கிறதா என்றே தெரியவில்லை. நாமும் அரசியல் சமுதாயம் தொடர்பான ஒரு நிகழ்வுக்கு நம் உடனடி அறச்சீற்றத்தைப் பதிந்து வைத்தோம் என்பதைத் தவிர வேறு என்ன வகையிலும் இது எதையும் சாதிக்கப்போவதில்லை என்னும் கருத்து உறுதிப்படுகிறது. பதினைந்து நிமிடப் புகழ் என்று சுஜாதா சொன்னபோது அன்று சுருக்கென்றிருந்தது. இப்போது சுஜாதா மீது கடுப்பாக இருக்கிறது, 15 நிமிடம் அதிகம் சார்.

தொடர்ந்து சில வருடங்களாக அவ்வப்போது சில குழுக்களில் இருந்திருக்கிறேன். அங்கே எழுதுவதும் படிப்பதும் இன்னொரு அடிக்டானது. நான் இருந்தவை எல்லாமே ஹிந்துத்துவம் தொடர்பான சிறிய அரட்டைக் குழுக்கள். என் வாழ்க்கையில் இது போன்ற ஆக்கபூர்வமான குழுமங்களை நான் படித்ததே இல்லை. எத்தனை எத்தனை கருத்துகள். எல்லாக் குழுமங்களுக்கும் போல இக்குழுமங்களுக்கும் வீழ்ச்சி வந்தது. தொடக்கத்தில் கருத்தை அறிதல் என்பது தொடங்கி பின்பு அது நட்பாகி பின்பு நீ அப்படிப் பேசலாமா என்றும் உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை என்பதிலும் முடிந்தது. என்னதான் குழும நட்பென்றாலும் எல்லாமே முடிவில் முகமிலி நட்பே என்பதை இக்குழுமங்களும் உறுதி செய்தன. ஆனாலும் இக்குழுமங்கள் எனக்குத் தனிப்பட்ட அளவில் செய்த சாதனைகள் அதிகம். அதற்காக மரத்தடி போல ராகாகி போல அங்கிருக்கும் நண்பர்கள் மெல்ல மறைந்து குழுமப் பெயர் மட்டும் முன்வருவதுபோல இக்குழுமப் பெயர்களும் முன்வந்துவிட்டன.

ஏப்ரல் முதல் நெருக்கத் தொடங்கிய வேலைகளுக்கு மத்தியில் நான் உருப்படியாகச் செய்தது புத்தகங்கள் படிப்பதையே. டயல் ஃபார் புக்ஸ் எனக்குப் படிக்க புத்தகங்களை அள்ளித் தந்தது. 🙂 படிக்கும் புத்தகங்களைப் பற்றி எழுதக்கூடாது என்றும் ஒரு முடிவெடுத்தேன். படிக்கும்போதே இதைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்ன எழுதப்போகிறோம் என்னும் டிவிட்டர் ஃபேஸ்புக் ப்ளாக்கிய வியாதியில் இருந்து மீள்வது முக்கியமானதாகப் பட்டதால் இம்முடிவு. நல்ல பலன் தந்தது. புத்தக ரசனை என்பதே முக்கியம் என்ற உள்ளுணர்வு மீண்டு வந்தது. இப்படி எத்தனையோ மாற்றங்கள்.

மீண்டும் சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். இன்னும் எழுதுவேன் போல. எதையும் இன்னும் வெளியிடவில்லை. இந்த தளத்தில் வாரம் ஒன்றாவது எதாவது எழுதலாம் என்ற நினைவு. இப்படி ஒரு தளம் வைத்துக்கொண்டு எதுவும் எழுதாமல் இருப்பதும் குற்ற உணர்ச்சியாக உள்ளது. ஒவ்வொன்றிலிருந்தும் வெளிவருதல் முக்கியமாகப் பட்டுவிடுகிறது. ராஜாவின் பாடல்கள் சிடியை தேடித் தேடி வாங்கியதிலிருந்து வெளிவந்ததுதான் தொடக்கம். உலகத் திரைப்படங்களுக்கு அடிக்ட் ஆனபோது அவற்றைப் பார்ப்பதையே 2 வருடங்களுக்கு முன்னால் நிப்பாட்டினேன். பெரிய அளவில் பர்ஸ் தப்பித்தது. பின்பு மலையாளப் படங்கள் வெறி. வெறி என்றாலும் நல்ல மலையாளப் படங்களே. இதில் கொஞ்சம் அடக்கி வாசித்ததால் பர்ஸ் ஓரளவு தப்பித்தது. யூ டியூபின் இலவசப் பணியும் மகத்தானதே. நேர்மை அறச்சீற்ற கனவாண்கள் என்னை மன்னிக்க.

சொல்வனத்தில் என் கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்த கவிஞானசூனியங்களின் புலம்பல்கள் இணையம் முழுக்க பிரசித்தமாக இருப்பதால் இது பற்றி நான் தனியே சொல்லவேண்டியதில்லை. சொல்லவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுமட்டுமே, கவிஞானசூனியங்கள் ஒருவேளை சரியாகவும் இருக்கலாம்.

புலம்பல்கள் தொடரும்.

கடவுளின் உரையாடல்

பனி விழும் இரவல்ல
வேர்வையின் துளிகள்
உடலெங்கும் பூத்திருக்க
அறையெங்கும் வீசிக்கிடக்கும்
நாற்றத்துக்குள்ளிருந்து
கடவுள் என்பவன் பேசிய குரலது
எப்போதோ அறிந்திருந்த மொழியென
ஒரு யோசனை
எப்போதும் புரிந்திராத மொழியென
ஒரு திடுக்கிடல்
சிதறி விழும்
எவர்சில்வர் டம்ப்ளர்கள்
எழுப்பும் ஒலியென ஒரு மயக்கம்
குழந்தையின் வீறிடல் என்ற உறுதி
இரண்டாம் சாமத்தில்
விடாது குரலெழுப்பும் சேவலும் சேர்ந்தபோது
வேலுடன் சேவலுடன் கொடியுடன்
ஆழ்நிலை மயக்க உலகில்
கடவுள் தெளிவாகப் பேசினான்
என் குற்றங்களைப் பட்டியலிட்டான்
நான் புரண்டு புரண்டு படுத்தேன்
காதுக்கருகில் வந்து அவன் சொல்லிக்கொண்டே போன
முடிவற்ற பட்டியலில்
அச்ச வேர்வைகள் பெருக பெருக
அவனுக்குக் களியாட்டம்
சைகையில் அவனை அடக்கமுடியவில்லை
மிரட்டலுக்கும் மசியவில்லை
மெல்ல விசும்பலும்
பிறகு கதறலுமென
காற்றில் வீசப்பட்ட என்னுடலில்
ஊழித் தாண்டவம்
காறித் துப்பினேன்
அதையும் குற்றப் பட்டியலாக்கினான் அவன்
ஒரே ஒரு கேள்வி கேட்க மன்றாடினேன்
காலில் விழுந்து புரண்டழுததும்
மெல்லப் புன்னகைத்தான்
நீயெல்லாம் கடவுளா என்றேன்
விடியத் தொடங்கியது வானம்.

தனிமையின் மொழி

ஓவியம் என்றேன்
காற்றில் எழுதுகிறாயா என்றான்
நிழல்!
நீரின் பரப்பிலா?
தேவதை வருவாள்!
வேசியைச் சொல்கிறாயா?
நற்சொல் சொல் என்றால்
கெட்ட வார்த்தை வருமோ என்றொரு அச்சம்
கேள்வி ஏதுமின்றி
மௌனம் காத்தேன்
எதாவது பேசேன் என்றான்
மீண்டும் எதாவது பேசேன்
மீண்டும் மீண்டும்
காமம் பின்காத்திருக்க
காதலொடு பெண்ணிடம்
ஓர் ஆண் கொள்ளும் அதே கெஞ்சல்
நானேதான் எனச் சொல்லிவிடுவானோ என்று
நீ யார் எனக் கேட்கவே இல்லை.

உலகம் அமிழும் ஓவியம்

புறாக்கூண்டுக்குள் இருந்து
புறாவை விரட்டிவிட்டு
கழுகை அடைத்து வைக்கும்
மனநிலையை எப்படி எதிர்கொள்வது
மண்ணுள்ளிப் பாம்புக்காக
கோடாரியைத் தேடியலையும்
ஒரு சித்திரத்தை
காகிதத்தில் வரைந்து
மெல்ல மெல்ல உயிர் பெருக்க
காகிதம் அமிழ்ந்து
அறை மூழ்கி
ஊர் தாண்டி
உலகம் அடங்காமல்
வெளியில் திமிறியபோது
தன்னை அவ்வோவியம்
தழுவிக்கொள்ள
சிறகை அடித்தபடி
பறக்காமல் நிலைபெற்றுவிட்ட
இன்னொரு ஓவியமாகக்
காத்துக் கிடக்கிறது
விரட்டிவிடப்பட்ட புறா.

ஹரன்பிரசன்னா

Share

வழக்கு எண் அறிவுமதி காமெடி

 

அறிவுமதி மனுஷ்யபுத்திரன் கடும் விவாதம் என்றார்கள். கடைசியில் பார்த்தால் மனுஷ்யபுத்திரன் மட்டுமே விவாதிக்கிறார். அறிவுமதி கெஞ்சுகிறார். பின்பு கோபப்படுகிறார். இந்தக் கெஞ்சலும் கோபமுமே  மனுஷ்யபுத்திரனின் கருத்துகளில் உள்ள உண்மைக்கு அச்சாரமாக அமைந்துவிடுகிறது.

ஒரு திரைப்படத்தை ஒருவர் விமர்சிக்கிறார் என்றால், அது மிகவும் சுதந்திரமானதாகவும், நேர்மையானதாகவும் இருக்கவேண்டும். ஆனால் அறிவுமதி சொல்வதென்ன? இந்த ஃபீல்டுக்குள்ள வந்துட்டீங்க, இங்க ரொம்ப கஷ்டப்படறோம், கொஞ்சம் பார்த்துப் போடுங்க என்பது போன்ற வாதங்களை. கறாரான விமர்சகர் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையே இல்லை. அதிலும் மனுஷ்யபுத்திரன் குத்து படத்தையோ தூள் படத்தையோ விமர்சிக்கவில்லை. தமிழர்களால் உச்சி மோந்து கொண்டாடப்படும் ஒரு படத்தின் போலித் தன்மையைச் சுட்டிக் காட்டவேண்டியது அவசியம் என்ற அளவில் இதனைச் சொல்கிறார். இணைய விமர்சகர் மகாதேவன் செய்வதும் (சுரேஷ்கண்ணன் இப்ப அவுட் ஆஃப் பார்ம்) இதையே. ஆனால் அறிவுமதி சொல்வது என்ன? இப்போதுதான் படம் எடுக்கிறோம், இப்போதுதான் கதை எழுதுகிறோம், இனிமே சரியா வரும் என்பது போன்ற சப்பைக்கட்டுகளை.

இளையராஜாவும் பாரதிராஜாவும் இல்லையென்றால் நாங்கள் வந்திருக்கவே முடியாது என்கிறார் அறிவுமதி. இது சாதிய பின்புலத்திலும் சமூகப் பின்புலத்திலும் புரிந்துகொள்ளத் தக்கது. இதனையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு விமர்சனத்தை முன்வைக்கவேண்டுமானால், அது கலையை நீக்கிவிட்டு, அந்தக் கலையை யார் பயன்படுத்தினார்களோ அவர்களது சாதிக்காகவும் அவர்களது சமூக நிலைக்காகவும் தாராள மனப்பானமையுடன் பேசப்பட்டதாகிவிடும். அறிவுமதி விரும்புவதை அதைத்தான். அது அவரது கொள்கை நிலைப்பாடு. அதற்கும் விமர்சனத்துக்கும் தொடர்பு இருக்கவேண்டிய தேவை இல்லை.

ஆனால் மனுஷ்யபுத்திரனோ காலச்சுவடோ இப்படிச் செயல்படக்கூடாது. அழகர்சாமியின் குதிரையைக் கிழித்துவிட்டார்கள் என்கிறார் அறிவுமதி. அந்தக் குப்பையைக் கிழிக்கத்தான் முடியும். நல்ல முயற்சி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டால் நல்லது என்று நினைப்பவர்கள் இருக்கக்கூடும். ஆனால் அதை மட்டுமே சொல்லிவிட்டுச் சென்றுவிடமுடியாது என்பதுதான் உண்மை. எடிட்டர் மோகன் தெளிவாகச் சொல்கிறார், விமர்சனம் கலெஷனைப் பாதிக்கக்கூடாது என்று. அறிவுமதியும் இதே வியாபாரத்தைத்தான் வேறு வேறு மொழிகளில் சொல்கிறார். எடிட்டர் மோகனின் நேர்மை முக்கியமானது. வியாபாரமே குறிக்கோள் என்பதை ஒப்புக்கொள்வதில் சலனமில்லை. ஆனால் அறிவுமதி இலக்கியத்துக்கும் வியாபாரத்துக்கும் ஒரு நிலைக்கோட்டை வரையவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார். எனவே தத்தளிக்கவும் செய்கிறார். எடிட்டர் மோகன் தனிப்பட்ட முறையில் கூப்பிட்டுச் சொல்லுங்க என்கிறார். இது இன்னும் மோசமானது. ஒவ்வொரு இயக்குநரும் இப்படி தனிப்பட்ட முறையில் கூப்பிட்டுத் திட்டப்பட்டால் என்னாகும் என்பதை வியாபாரி எடிட்டர் மோகன் யோசிக்கவேண்டும். கொஞ்சம் கருணை காட்டுங்கள் மோகன். அறிவுமதியும் மனுஷ்யபுத்திரனைத் தனியே கூப்பிட்டுச் சொல்லியிருக்கலாம் என்பதை சொல்லாமல் எடிட் செய்துவிட்டீர்களே மோகன்!

கமலை மனுஷ்யபுத்திரன் விற்றார் என்பதால் அவருக்கு விமர்சனம் செய்யத் சொல்லத் தகுதியில்லை என்றும் சொல்கிறார் அறிவுமதி. இதை காமெடி என்று தாண்டிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. மனுஷ்யபுத்திரனை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் எதையாவது சொல்லவேண்டிய பதற்றத்தில் அறிவுமதி உளறிக்கொட்டியதாக மட்டுமே இதனைச் சொல்லமுடியும். எஸ்ராவின் விழாவில் ரஜினியை அழைத்தது நிச்சயம் வியாபாரமே. ஆனால் அவர் வியாபாரம் செய்கிறார் என்பதற்காகவே இலக்கிய ரீதியிலான முக்கியமான கருத்தை முன்வைக்கத் தகுதியில்லாமல் ஆகிறார் என்பது சரியல்ல. 

வழக்கு எண் போன்ற ஒரு சாதாரண படத்தை சாதாரண படம் என்று மக்களுக்குச் சொல்லவேண்டிய கடமை விமர்சகர்களுக்கு உள்ளது. இதைப் பார்த்து வருத்தப்படுபவர்கள் படம் எடுக்காமல் இருக்கட்டும் அல்லது விமர்சனத்தைப் பொருட்படுத்தாமல் இருக்கட்டும். விமர்சகர்களே பொங்கி எழுங்கள். 🙂 தமிழின் விடிவுகாலமே வழக்கு எண் என்ற லொட்டை படம்தான் என்னும்போதும் விமர்சகர்கள் வாய்மூடிக்கொண்டிருக்க அது என்ன ரஜினி படமா? கூல்!

Share