Archive for ஹரன் பிரசன்னா

ஓம் சாந்தி ஓம்

சுருக்கமாகப் படிக்க விரும்புகிறவர்கள் மஞ்சளடிக்கப்பட்ட பகுதிகளைப் படித்தால் போதும்.

இப்படி ஒரு தளம் இருக்கிறது என்பதே இப்போதுதான் நினைவுக்கு வந்தது. கொஞ்ச நாள் எழுதாமல் இருக்கலாம் என்று முடிவெடுத்துப் படிக்க ஆரம்பித்ததில், எழுதவே எரிச்சல் தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஃபேஸ்புக்கும் டிவிட்டரும் தந்த பழக்கத்தில் யாராவது மூன்றாவது வரியை எழுதினாலே ஏன் இத்தனை இழுவையாக நீளமாக எழுதுகிறார்கள் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதுவே புத்தகமாகப் படிக்கும்போது ஒன்றும் தோன்றுவதில்லை. ஃபேஸ்புக்கும் டிவிட்டரும் செய்துவைத்த இன்னொரு விஷயம் உடனடி அறச்சீற்றம். இப்போது நினைத்துப் பார்த்தால் இந்த அறச்சீற்றங்களுக்கெல்லாம் எதாவது பொருளிருக்கிறதா என்றே தெரியவில்லை. நாமும் அரசியல் சமுதாயம் தொடர்பான ஒரு நிகழ்வுக்கு நம் உடனடி அறச்சீற்றத்தைப் பதிந்து வைத்தோம் என்பதைத் தவிர வேறு என்ன வகையிலும் இது எதையும் சாதிக்கப்போவதில்லை என்னும் கருத்து உறுதிப்படுகிறது. பதினைந்து நிமிடப் புகழ் என்று சுஜாதா சொன்னபோது அன்று சுருக்கென்றிருந்தது. இப்போது சுஜாதா மீது கடுப்பாக இருக்கிறது, 15 நிமிடம் அதிகம் சார்.

தொடர்ந்து சில வருடங்களாக அவ்வப்போது சில குழுக்களில் இருந்திருக்கிறேன். அங்கே எழுதுவதும் படிப்பதும் இன்னொரு அடிக்டானது. நான் இருந்தவை எல்லாமே ஹிந்துத்துவம் தொடர்பான சிறிய அரட்டைக் குழுக்கள். என் வாழ்க்கையில் இது போன்ற ஆக்கபூர்வமான குழுமங்களை நான் படித்ததே இல்லை. எத்தனை எத்தனை கருத்துகள். எல்லாக் குழுமங்களுக்கும் போல இக்குழுமங்களுக்கும் வீழ்ச்சி வந்தது. தொடக்கத்தில் கருத்தை அறிதல் என்பது தொடங்கி பின்பு அது நட்பாகி பின்பு நீ அப்படிப் பேசலாமா என்றும் உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை என்பதிலும் முடிந்தது. என்னதான் குழும நட்பென்றாலும் எல்லாமே முடிவில் முகமிலி நட்பே என்பதை இக்குழுமங்களும் உறுதி செய்தன. ஆனாலும் இக்குழுமங்கள் எனக்குத் தனிப்பட்ட அளவில் செய்த சாதனைகள் அதிகம். அதற்காக மரத்தடி போல ராகாகி போல அங்கிருக்கும் நண்பர்கள் மெல்ல மறைந்து குழுமப் பெயர் மட்டும் முன்வருவதுபோல இக்குழுமப் பெயர்களும் முன்வந்துவிட்டன.

ஏப்ரல் முதல் நெருக்கத் தொடங்கிய வேலைகளுக்கு மத்தியில் நான் உருப்படியாகச் செய்தது புத்தகங்கள் படிப்பதையே. டயல் ஃபார் புக்ஸ் எனக்குப் படிக்க புத்தகங்களை அள்ளித் தந்தது. 🙂 படிக்கும் புத்தகங்களைப் பற்றி எழுதக்கூடாது என்றும் ஒரு முடிவெடுத்தேன். படிக்கும்போதே இதைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்ன எழுதப்போகிறோம் என்னும் டிவிட்டர் ஃபேஸ்புக் ப்ளாக்கிய வியாதியில் இருந்து மீள்வது முக்கியமானதாகப் பட்டதால் இம்முடிவு. நல்ல பலன் தந்தது. புத்தக ரசனை என்பதே முக்கியம் என்ற உள்ளுணர்வு மீண்டு வந்தது. இப்படி எத்தனையோ மாற்றங்கள்.

மீண்டும் சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். இன்னும் எழுதுவேன் போல. எதையும் இன்னும் வெளியிடவில்லை. இந்த தளத்தில் வாரம் ஒன்றாவது எதாவது எழுதலாம் என்ற நினைவு. இப்படி ஒரு தளம் வைத்துக்கொண்டு எதுவும் எழுதாமல் இருப்பதும் குற்ற உணர்ச்சியாக உள்ளது. ஒவ்வொன்றிலிருந்தும் வெளிவருதல் முக்கியமாகப் பட்டுவிடுகிறது. ராஜாவின் பாடல்கள் சிடியை தேடித் தேடி வாங்கியதிலிருந்து வெளிவந்ததுதான் தொடக்கம். உலகத் திரைப்படங்களுக்கு அடிக்ட் ஆனபோது அவற்றைப் பார்ப்பதையே 2 வருடங்களுக்கு முன்னால் நிப்பாட்டினேன். பெரிய அளவில் பர்ஸ் தப்பித்தது. பின்பு மலையாளப் படங்கள் வெறி. வெறி என்றாலும் நல்ல மலையாளப் படங்களே. இதில் கொஞ்சம் அடக்கி வாசித்ததால் பர்ஸ் ஓரளவு தப்பித்தது. யூ டியூபின் இலவசப் பணியும் மகத்தானதே. நேர்மை அறச்சீற்ற கனவாண்கள் என்னை மன்னிக்க.

சொல்வனத்தில் என் கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்த கவிஞானசூனியங்களின் புலம்பல்கள் இணையம் முழுக்க பிரசித்தமாக இருப்பதால் இது பற்றி நான் தனியே சொல்லவேண்டியதில்லை. சொல்லவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுமட்டுமே, கவிஞானசூனியங்கள் ஒருவேளை சரியாகவும் இருக்கலாம்.

புலம்பல்கள் தொடரும்.

கடவுளின் உரையாடல்

பனி விழும் இரவல்ல
வேர்வையின் துளிகள்
உடலெங்கும் பூத்திருக்க
அறையெங்கும் வீசிக்கிடக்கும்
நாற்றத்துக்குள்ளிருந்து
கடவுள் என்பவன் பேசிய குரலது
எப்போதோ அறிந்திருந்த மொழியென
ஒரு யோசனை
எப்போதும் புரிந்திராத மொழியென
ஒரு திடுக்கிடல்
சிதறி விழும்
எவர்சில்வர் டம்ப்ளர்கள்
எழுப்பும் ஒலியென ஒரு மயக்கம்
குழந்தையின் வீறிடல் என்ற உறுதி
இரண்டாம் சாமத்தில்
விடாது குரலெழுப்பும் சேவலும் சேர்ந்தபோது
வேலுடன் சேவலுடன் கொடியுடன்
ஆழ்நிலை மயக்க உலகில்
கடவுள் தெளிவாகப் பேசினான்
என் குற்றங்களைப் பட்டியலிட்டான்
நான் புரண்டு புரண்டு படுத்தேன்
காதுக்கருகில் வந்து அவன் சொல்லிக்கொண்டே போன
முடிவற்ற பட்டியலில்
அச்ச வேர்வைகள் பெருக பெருக
அவனுக்குக் களியாட்டம்
சைகையில் அவனை அடக்கமுடியவில்லை
மிரட்டலுக்கும் மசியவில்லை
மெல்ல விசும்பலும்
பிறகு கதறலுமென
காற்றில் வீசப்பட்ட என்னுடலில்
ஊழித் தாண்டவம்
காறித் துப்பினேன்
அதையும் குற்றப் பட்டியலாக்கினான் அவன்
ஒரே ஒரு கேள்வி கேட்க மன்றாடினேன்
காலில் விழுந்து புரண்டழுததும்
மெல்லப் புன்னகைத்தான்
நீயெல்லாம் கடவுளா என்றேன்
விடியத் தொடங்கியது வானம்.

தனிமையின் மொழி

ஓவியம் என்றேன்
காற்றில் எழுதுகிறாயா என்றான்
நிழல்!
நீரின் பரப்பிலா?
தேவதை வருவாள்!
வேசியைச் சொல்கிறாயா?
நற்சொல் சொல் என்றால்
கெட்ட வார்த்தை வருமோ என்றொரு அச்சம்
கேள்வி ஏதுமின்றி
மௌனம் காத்தேன்
எதாவது பேசேன் என்றான்
மீண்டும் எதாவது பேசேன்
மீண்டும் மீண்டும்
காமம் பின்காத்திருக்க
காதலொடு பெண்ணிடம்
ஓர் ஆண் கொள்ளும் அதே கெஞ்சல்
நானேதான் எனச் சொல்லிவிடுவானோ என்று
நீ யார் எனக் கேட்கவே இல்லை.

உலகம் அமிழும் ஓவியம்

புறாக்கூண்டுக்குள் இருந்து
புறாவை விரட்டிவிட்டு
கழுகை அடைத்து வைக்கும்
மனநிலையை எப்படி எதிர்கொள்வது
மண்ணுள்ளிப் பாம்புக்காக
கோடாரியைத் தேடியலையும்
ஒரு சித்திரத்தை
காகிதத்தில் வரைந்து
மெல்ல மெல்ல உயிர் பெருக்க
காகிதம் அமிழ்ந்து
அறை மூழ்கி
ஊர் தாண்டி
உலகம் அடங்காமல்
வெளியில் திமிறியபோது
தன்னை அவ்வோவியம்
தழுவிக்கொள்ள
சிறகை அடித்தபடி
பறக்காமல் நிலைபெற்றுவிட்ட
இன்னொரு ஓவியமாகக்
காத்துக் கிடக்கிறது
விரட்டிவிடப்பட்ட புறா.

ஹரன்பிரசன்னா

Share

வழக்கு எண் அறிவுமதி காமெடி

 

அறிவுமதி மனுஷ்யபுத்திரன் கடும் விவாதம் என்றார்கள். கடைசியில் பார்த்தால் மனுஷ்யபுத்திரன் மட்டுமே விவாதிக்கிறார். அறிவுமதி கெஞ்சுகிறார். பின்பு கோபப்படுகிறார். இந்தக் கெஞ்சலும் கோபமுமே  மனுஷ்யபுத்திரனின் கருத்துகளில் உள்ள உண்மைக்கு அச்சாரமாக அமைந்துவிடுகிறது.

ஒரு திரைப்படத்தை ஒருவர் விமர்சிக்கிறார் என்றால், அது மிகவும் சுதந்திரமானதாகவும், நேர்மையானதாகவும் இருக்கவேண்டும். ஆனால் அறிவுமதி சொல்வதென்ன? இந்த ஃபீல்டுக்குள்ள வந்துட்டீங்க, இங்க ரொம்ப கஷ்டப்படறோம், கொஞ்சம் பார்த்துப் போடுங்க என்பது போன்ற வாதங்களை. கறாரான விமர்சகர் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையே இல்லை. அதிலும் மனுஷ்யபுத்திரன் குத்து படத்தையோ தூள் படத்தையோ விமர்சிக்கவில்லை. தமிழர்களால் உச்சி மோந்து கொண்டாடப்படும் ஒரு படத்தின் போலித் தன்மையைச் சுட்டிக் காட்டவேண்டியது அவசியம் என்ற அளவில் இதனைச் சொல்கிறார். இணைய விமர்சகர் மகாதேவன் செய்வதும் (சுரேஷ்கண்ணன் இப்ப அவுட் ஆஃப் பார்ம்) இதையே. ஆனால் அறிவுமதி சொல்வது என்ன? இப்போதுதான் படம் எடுக்கிறோம், இப்போதுதான் கதை எழுதுகிறோம், இனிமே சரியா வரும் என்பது போன்ற சப்பைக்கட்டுகளை.

இளையராஜாவும் பாரதிராஜாவும் இல்லையென்றால் நாங்கள் வந்திருக்கவே முடியாது என்கிறார் அறிவுமதி. இது சாதிய பின்புலத்திலும் சமூகப் பின்புலத்திலும் புரிந்துகொள்ளத் தக்கது. இதனையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு விமர்சனத்தை முன்வைக்கவேண்டுமானால், அது கலையை நீக்கிவிட்டு, அந்தக் கலையை யார் பயன்படுத்தினார்களோ அவர்களது சாதிக்காகவும் அவர்களது சமூக நிலைக்காகவும் தாராள மனப்பானமையுடன் பேசப்பட்டதாகிவிடும். அறிவுமதி விரும்புவதை அதைத்தான். அது அவரது கொள்கை நிலைப்பாடு. அதற்கும் விமர்சனத்துக்கும் தொடர்பு இருக்கவேண்டிய தேவை இல்லை.

ஆனால் மனுஷ்யபுத்திரனோ காலச்சுவடோ இப்படிச் செயல்படக்கூடாது. அழகர்சாமியின் குதிரையைக் கிழித்துவிட்டார்கள் என்கிறார் அறிவுமதி. அந்தக் குப்பையைக் கிழிக்கத்தான் முடியும். நல்ல முயற்சி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டால் நல்லது என்று நினைப்பவர்கள் இருக்கக்கூடும். ஆனால் அதை மட்டுமே சொல்லிவிட்டுச் சென்றுவிடமுடியாது என்பதுதான் உண்மை. எடிட்டர் மோகன் தெளிவாகச் சொல்கிறார், விமர்சனம் கலெஷனைப் பாதிக்கக்கூடாது என்று. அறிவுமதியும் இதே வியாபாரத்தைத்தான் வேறு வேறு மொழிகளில் சொல்கிறார். எடிட்டர் மோகனின் நேர்மை முக்கியமானது. வியாபாரமே குறிக்கோள் என்பதை ஒப்புக்கொள்வதில் சலனமில்லை. ஆனால் அறிவுமதி இலக்கியத்துக்கும் வியாபாரத்துக்கும் ஒரு நிலைக்கோட்டை வரையவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார். எனவே தத்தளிக்கவும் செய்கிறார். எடிட்டர் மோகன் தனிப்பட்ட முறையில் கூப்பிட்டுச் சொல்லுங்க என்கிறார். இது இன்னும் மோசமானது. ஒவ்வொரு இயக்குநரும் இப்படி தனிப்பட்ட முறையில் கூப்பிட்டுத் திட்டப்பட்டால் என்னாகும் என்பதை வியாபாரி எடிட்டர் மோகன் யோசிக்கவேண்டும். கொஞ்சம் கருணை காட்டுங்கள் மோகன். அறிவுமதியும் மனுஷ்யபுத்திரனைத் தனியே கூப்பிட்டுச் சொல்லியிருக்கலாம் என்பதை சொல்லாமல் எடிட் செய்துவிட்டீர்களே மோகன்!

கமலை மனுஷ்யபுத்திரன் விற்றார் என்பதால் அவருக்கு விமர்சனம் செய்யத் சொல்லத் தகுதியில்லை என்றும் சொல்கிறார் அறிவுமதி. இதை காமெடி என்று தாண்டிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. மனுஷ்யபுத்திரனை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் எதையாவது சொல்லவேண்டிய பதற்றத்தில் அறிவுமதி உளறிக்கொட்டியதாக மட்டுமே இதனைச் சொல்லமுடியும். எஸ்ராவின் விழாவில் ரஜினியை அழைத்தது நிச்சயம் வியாபாரமே. ஆனால் அவர் வியாபாரம் செய்கிறார் என்பதற்காகவே இலக்கிய ரீதியிலான முக்கியமான கருத்தை முன்வைக்கத் தகுதியில்லாமல் ஆகிறார் என்பது சரியல்ல. 

வழக்கு எண் போன்ற ஒரு சாதாரண படத்தை சாதாரண படம் என்று மக்களுக்குச் சொல்லவேண்டிய கடமை விமர்சகர்களுக்கு உள்ளது. இதைப் பார்த்து வருத்தப்படுபவர்கள் படம் எடுக்காமல் இருக்கட்டும் அல்லது விமர்சனத்தைப் பொருட்படுத்தாமல் இருக்கட்டும். விமர்சகர்களே பொங்கி எழுங்கள். 🙂 தமிழின் விடிவுகாலமே வழக்கு எண் என்ற லொட்டை படம்தான் என்னும்போதும் விமர்சகர்கள் வாய்மூடிக்கொண்டிருக்க அது என்ன ரஜினி படமா? கூல்!

Share

மங்குனி இயக்குநர்களும் மகாதேவனும்

முன்குறிப்பு: இந்தத் தலைப்பை வைத்துத்தான் கட்டுரையை ‘நிழல்’ இதழுக்கு அனுப்ப நினைத்தேன். ஆனால் கைகூடவில்லை. எனவே இங்கே இந்தத் தலைப்பு வைக்கப்படுகிறது!

 

இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித் தரப்படும். (ஆர்டரின் பேரில் புதிதாகவும் செய்து தரப்படும்.) இந்தக் கட்டுரையின் முதல் வரி அல்ல இது. இதுதான் புத்தகத்தின் பெயரே. எழுதியவர் பி.ஆர். மகாதேவன். இந்தப் புத்தகத்தைப் படிக்கப்போகும் தமிழ் இயக்குநர்கள் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு, என்ன நேர்ந்தாலும் டென்ஷன் ஆகக்கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டு படிப்பது நல்லது. ரத்த அழுத்தத்துக்காக குளிகைகளை விழுங்கும் இயக்குநர்கள் இந்தப் புத்தகம் அருகில் வராமல் இருப்பதே நல்லது. தமிழகம் போற்றும் எந்த ஒரு வணிகப்பட இயக்குநருக்கும், கலை இயக்குநருக்கும் இது பொருந்தும். விமர்சனம் என்று வந்துவிட்டால் யாரை விமர்சிக்கிறோம் என்பதல்ல பொருட்டு. நேர்மையாக விமர்சிக்கிறோமா, நாம் விமர்சிப்பதில் ஓர் அடிப்படை நியாயம் ஒரு தார்மிகமும் உள்ளதா என்பது மட்டுமே பொருட்டு என்று வைத்துக்கொண்டு, யாரையும் விட்டுவைக்காமல் எவ்வித சமரசமும் இல்லாமல் வெளுத்து வாங்குகிறார் மகாதேவன்.

இங்கே பதிவு செய்யப்படவேண்டிய ஒரு முக்கியமான விஷயம், இந்த மகாதேவன் திரையுலகத்துக்குள் புக விரும்புகிறார் என்பது. இந்தப் புத்தகம் அதற்கு உதவும் என்று அவர் நம்புவதாகவும் தெரிகிறது. ஆனால் எனக்கென்னவோ இந்தப் புத்தகமே அவருக்கு எதிரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இதுவும் ஒரு கொடுப்பினையே. மகாதேவனுக்கு வாழ்த்துகள்.

எட்டு முக்கியமான திரைப்படங்களை எடுத்துக்கொண்டு, அவற்றின் பிரச்சினைகள் என்ன என்ன, அவை எப்படி திரைக்கதையாக்கம் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று விளக்குகிறார். ஒரு சிறிய காட்சியைக்கூட விட்டுவைப்பதில்லை. கதையையே மாற்றவேண்டுமானாலும் சிறிதும் தயங்குவதில்லை. (தான் எந்த விதத்திலும் கதையை மாற்றவில்லை என்று தன் நிலையை நியாயப்படுத்த அவர் முனையக்கூடும்.) முக்கியமான விஷயம், தான் விமர்சிக்க எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு படத்துக்கும் மேம்பட்ட தனது திரைக்கதையையும் பதிவு செய்கிறார்.

இந்தப் புத்தகத்தில் அலச அவர் எடுத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்கள்: நந்தலாலா, அங்காடித் தெரு, ஆடுகளம், அழகர்சாமியின் குதிரை, தெய்வத் திருமகள், ஏழாம் அறிவு, எங்கேயும் எப்போதும், நான் கடவுள். இந்தத் திரைப்படங்களை அலச அவர் எடுத்துக்கொள்ளும் மிக முக்கியமான விதி – எல்லாப் படங்களையும் கலைப்படங்களாக மாற்ற முனைவதில்லை. கலைப்படங்களே தமிழின் மிக முக்கியமான படங்களாக இருக்கவேண்டும் என்றுதான் மகாதேவனும் விரும்புகிறார். என்றாலும் வணிகப்படங்களை எடுத்துக்கொண்டு அவற்றில் ஏன் கலைத்தன்மை இல்லை என்று விவரிக்கத் தொடங்கி இல்லாத ஊருக்குப் போகாத வழியை அவர் காண்பிப்பதில்லை. வணிகப்படங்களின் மேம்பாடாக அவர் சொல்லும் திரைக்கதையும் வணிகப்படங்களை ஒத்ததாகவே உள்ளது. அடிப்படையில் வணிகப்படங்களை அவர் ஏற்காவிட்டாலும், அவற்றின் அடிப்படைக் கதையையும் அதற்கேற்ற பிசகாத ஒரு திரைக்கதையையும் முன்வைப்பதன்மூலம் மேம்பட்ட வடிவத்தைக் கொடுக்க இயலும் என்பதுதான் அவர் சொல்ல வருவது. இதனைப் புத்தகம் நெடுகிலும் எவ்வித சறுக்கலும் இன்றிக் கடைப்பிடிக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

அதேபோல் எவ்விதக் கவனிப்பும் இன்றிக் கேட்பாரற்ற திரைப்படங்களை எடுத்துக்கொண்டு அவற்றின் குறைகளைச் சொல்ல முனையவில்லை. ஓரளவுக்கு மக்கள் வரவேற்பையும் ஓரளவுக்கு இலக்கியக் கவனிப்பையும் பெற்ற படங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு அவற்றின் மேம்பாட்டுத் திட்டங்களை முன்வைக்கிறார். இதனால் மிக எளிதாக தனது திரையறிவு பற்றிய அஸ்திவாரத்தை நிறுவிக்கொள்கிறார். தான் ஓர் இலக்கியவாதியாகத் திரைப்படத்தை அணுகுகிறோம் என்கிற பெருமிதம் இருப்பதை முன்னுரையிலேயே உணர்ந்துகொண்டுவிடமுடிகிறது.

ஆனால் ஒருவகையில் முன்னுரையே இவருக்கு எதிரான அஸ்திரமாகத் திரும்பக்கூடும். முன்னுரையில் இவரது வாதங்கள் எல்லாமே ஒரு படைப்பு எப்படிக் கலையாக வேண்டும் என்பதன் பொருட்டே உள்ளது. ஆனால் திரைப்பட அலசல்கள் என்று வரும்போது வணிக ரீதியான படங்களை அதே அலைவரிசையில் எதிர்கொள்ளத் தொடங்கிவிடுகிறார். முன்னுரையைப் படித்துவிட்டு திரைப்பட அலசல்களை எதிர்கொள்ளும் வாசகன் மிக எளிதாக ‘கலையை அடிப்படையாக கொண்ட விமர்சகரின் திரைக்கதை ஏன் மீண்டும் வணிகக்குப்பைக்குள் செல்கிறது’ என்ற கேள்விக்குள் சென்றுவிடமுடியும். இதற்கான பதிலை மகாதேவனின் தொடர் திரைக்கதை அலசல்கள்தானே தருகின்றனவே ஒழிய, முன்னுரை தரவில்லை.

இந்த நூலின் வழியாக மகாதேவன் எதிர்கொள்ளப் போகும் இன்னொரு விமர்சனத்தைப் பற்றிப் பார்க்கலாம். ஒரு படைப்பை ஒரு இயக்குநர் எடுக்கிறார். அது அவரது படைப்பு. அதில் நிறை குறைகள் இருக்கலாம். ஆனால் அந்தப் படைப்பு அப்படைப்பாளியின் சுயம் சார்ந்தது. (காப்பி அடிக்கப்படும் படங்களுக்கு இது பொருந்தாது.) அவரது சுதந்திரம் சார்ந்தது. இதை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் உண்டு. இதே உரிமையில்தான் மகாதேவன் செயல்படும் இடமும் இருக்கிறது. ஆனால் அப்படைப்பாளி அப்படி எடுக்கக்கூடாது, இப்படி எடுக்கக்கூடாது என்று சொல்லும் உரிமை விமர்சகனுக்கு இல்லை. அதேபோல் படைப்பாளியின் திரைக்கதையில் உள்ள ஓட்டையை தன் திரைக்கதை மூலம் எப்படிச் சரி செய்யலாம் என்று சொல்ல முனையும்போது, ஒட்டுமொத்தக் கதையையே எப்படி மாற்றுவது என்று சொல்ல முனைவதும் சரியானதல்ல என்றே தோன்றுகிறது. திரைக்கதைகளின் பழுது நீக்கம் ஒரு கட்டத்தில் கதையின் பழுது நீக்கமாகிறது.

இந்தப் பிரச்சினையைப் புத்தகத்தில் அலசப்படும் ஒவ்வொரு திரைப்படத்தின் மேம்பட்ட திரைக்கதையிலும் காணமுடிகிறது. நந்தலாலாவின் கதையில் யார் யாரைத் தேடவேண்டும் என்று முடிவெடுக்கிறார். அங்காடித் தெருவின் கதையே மாறிப் போகிறது. ஆடுகளத்திலும் இப்படியே. அழகர்சாமியின் குதிரையில் கதையைக் கொஞ்சம் மாற்றினாலும், பாஸ்கர் சக்தியின் மூல சிறுகதையோடு அதை ஒட்ட வைப்பதன்மூலம், தனது கதை மாற்றலுக்கு ஒரு நியாயத்தைக் கற்பித்துக்கொள்கிறார் நூலாசிரியர். தெய்வத்திருமகள் கதையிலும் இதனை அதன் மூல வடிவோடு ஒப்பிட்டு மேம்படுத்த முனைந்துவிடுகிறார். நான் கடவுளின் கதையே மாற்றம் பெறுகிறது. இதன் அடிப்படையாக மகாதேவன் சொல்வது, ஒவ்வொரு கதையின் அடிப்படையையும் நான் மாற்றவில்லை, மாறாக அதன் போக்கில் செய்யும் மாற்றம் மூலம் அதை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றியே பேசுகிறேன் என்பது. அதாவது ஒவ்வொரு கதையும் என்னதான் ஒரு படைப்பாளியின் சுதந்திரம் என்றாலும், அதன் அடிப்படை ஒரு விதிக்குள் கட்டுப்பட்டதே என்றும், விதியை மீறிய ஆட்டம் கதைக்கு ஆகாது என்றும் வாதிடுகிறார்.

விதியை மீறும் ஆட்டம் என்பதே ஒரு கலையின் முன்னகர்வைக் கொண்டுவரும். இந்த இடத்தில் நான் மகாதேவனுடன் கடுமையாக வேறுபடுகிறேன். உதாரணத்துக்கு ஆடுகளம் படத்தை எடுத்துக்கொள்வோம். அதில் எப்படி ஒரு குருவை அப்படிச் சித்திரிக்கலாம் என்றும், ஒரு குரு என்பவர் அப்படிச் செயல்படமாட்டார் என்றும் வாதிட்டு குரு சார்ந்து ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் அக நம்பிக்கைகளுக்குள் இறங்கிவிடுகிறார். ஆனால் ஒரு குரு என்பவரை ஒரு படைப்பாளி எப்படிப் படைக்கவேண்டும் என்பது அவரது சுதந்திரம் அல்லவா. துரோகம் செய்யாத குரு உலகத்தில் இல்லையா என்ன? அல்லது அப்படி ஒரு கற்பனையை உருவாக்கக்கூடாதா? இது போன்ற உளச்சிக்கல்களே இந்நூலாசிரியரின் பிரச்சினைகளாக உள்ளன. இன்னொரு மனப்பதிவு, இந்நூலில் தொடர்ந்து பதிவு செய்யப்படும் கிராமத்து மனிதர்கள் பற்றியது. கிராமத்து மனிதர்கள் பற்றிய ஒரு பதிவை இவராக மனத்தில் உருவாக்கிக்கொண்டு, ஒரு திரைப்படத்தில் வரும் கிராமத்து மனிதர்கள் பற்றிய காட்சி அந்தப் பதிவுக்கு மாறானதாக இருக்குமானால், அதனை விமர்சிக்கத் தொடங்கிவிடுகிறார். எல்லா மனிதர்களையும் போல கிராமத்து மனிதர்களும் எல்லா நிறங்களும் கலந்த கலவைகளே. அங்காடித் தெரு பற்றிய விமர்சனத்தில், முலையைக் கசக்கும் கங்காணியைப் பொறுத்துக்கொண்டு எப்படி ஒரு கிராமத்துப் பெண் அமைதியாக இருப்பாள் என்கிறார். அதே திரைப்படத்துக்கு இவர் முன்வைக்கும் மேம்பட்ட திரைக்கதை வடிவத்தில் வரும் காட்சியில், கிராமத்து அம்மா முன்பு அதே கங்காணியால் திருடனாக நிற்க வைக்கப்படும் மகனைப் பார்த்தும், அந்தக் கிராமத்துப் பெண் சீறாமல் தலையைக் கவழ்ந்துகொண்டு, தன் நிலையை நினைத்துக்கொண்டு போகிறாள். அது எப்படி ஒரு கிராமத்தில் இருந்து வந்த இரு பெண்கள் இரு மாதிரியாகச் செயல்படமுடியும்? இதிலேயே இருக்கிறது மகாதேவனுக்கான விடை. ஒவ்வொரு படைப்பாளியும் தன் மனிதர்களைத் தன் தர்க்கத்துக்குள்ளே படைத்துக்கொள்ள முடியும். அது அவனது சுதந்திரம். அந்த சுதந்திரம் என்பது வாழ்க்கையின் மிக ஆதாரமான யதார்த்தத்தை மீறக்கூடாது என்பது மட்டுமே. மாறாக, இந்த யதார்த்தம் எந்தவித குண இயல்புகளையும் கட்டுப்படுத்தாது. கட்டுப்படுத்த முடியாது.

இந்தப் புத்தகத்தில் வரும் அனைத்துக் கட்டுரைகளையும் மகாதேவன் தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறார். அக்கட்டுரைகளின் தொகுப்பே புத்தகமாக்கப்பட்டுள்ளது. வலைப்பதிவின் கட்டற்ற சுதந்திரம் இல்லையேல், இது போன்ற கட்டுரைகள் எந்த இதழில் வந்திருக்கும் என்ற ஆச்சரியம் தோன்றாமலில்லை. கட்டற்ற சுதந்திரமே இணையத்தின் வரமும் சாபமும். வரம் என்று இக்கட்டுரைகளை எடுத்துக்கொண்டால், சாபம் என்று இக்கட்டுரைகளில் வரும் சில வார்த்தைப் பிரயோகங்களைக் குறிப்பிடவேண்டும். தணிக்கை செய்யப்படாத பச்சை எழுத்து தரும் அதிர்ச்சி, வலைப்பதிவைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு ஏற்படாது. அதனையே தொடர்ந்து எழுதும் வலைப்பதிவர்களுக்கும் ஏற்படாது. ஏனென்றால் அதில் என்ன தவறு என்ற மனப்பதிவு ஆழமாக ஏற்பட்டிருக்கும். அடிமையில் மோகம் போல. அதிலிருந்து விலகி ஒரு புத்தகமாகப் படிக்கும்போது அந்த மொழி தரும் அதிர்ச்சி சொல்லமுடியாதது. இந்த அபாயத்தை முன்வைத்தே பல இயக்குநர்கள் இந்தப் புத்தகத்தைப் புறக்கணிக்கவோ பழிக்கவோ கூடும். இதனை இந்நூலாசிரியர் தவிர்த்திருக்கலாம்

இந்நூலில் வரும் இன்னொரு எளிமையான தவறு – தனது தர்க்கத்தை ஓர் எடுத்துக்காட்டு மூலம் விளக்கிக் காட்டுவது. எடுத்துக்காட்டுகள் வெறும் எடுத்துக்காட்டுகளே அன்றி அவை உண்மை அல்ல. இதனாலேயே ஒரு மிகப்பெரிய விஷயம் ஒன்று ஓர் எளிமையான எடுத்துக்காட்டு மூலம் விளக்கப்படும்போது அதன் உணர்ச்சிகரமான மூலம் எல்லாவற்றையும் இழந்து வெறும் வார்த்தையாகிவிடுகிறது. இதனை எதிர்கொள்பவர்கள் இன்னொரு எடுத்துக்காட்டின் மூலம் எதிர்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள். இதனால் விவாதம் என்பது மூலத்தின் கருவிலிருந்து விலகி எங்கேயோ சம்பந்தமற்ற ஒரு வெளியில் நிகழ்ந்துகொண்டிருக்கும். பட்டிமன்றங்களில் நாம் அடிக்கடி இதனைப் பார்க்கலாம். எதை விவாதிக்கவேண்டுமோ அதனை விட்டுவிட்டு அது தொடர்பாகச் சொல்லப்பட்ட எடுத்துக்காட்டுகளில் முட்டி மோதிக்கொண்டிருப்பார்கள். இதனையும் நூலாசிரியர் தவிர்த்திருந்திருக்கலாம்.

அதேபோல் நூலாசிரியர் செய்யும் இன்னொரு தவறு, யதார்த்தம் என்ற ஒன்றை தனக்கு நேரும் தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து கட்டமைப்பது. இதில் உண்மை இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட அனுபவங்களிலிருந்தே யதார்த்தமின்மைக்குட்பட்ட பல நிகழ்வுகளும் உருவாகின்றன என்ற இன்னொரு எளிய உண்மையை வைத்துப் பார்த்தால், தனிப்பட்ட அனுபவங்கள் என்பவை எப்படி வெறும் தனிப்பட்ட அனுபவங்களாகவே எஞ்சிவிடுகின்றன என்பதைப் பார்க்கலாம். தனிப்பட்ட அனுபவங்கள் பொதுக் கருத்தாக முகிழவேண்டுமானால், அது யாரால் சொல்லப்படுகிறது என்பதும் முக்கியம். மகாதேவன் பாணியிலேயே ஓர் எடுத்துக்காட்டு மூலம் சொல்லவேண்டும் என்றால், காந்தி அல்லது அம்பேத்கரின் தனிப்பட்ட அனுபவத்தின் முக்கியத்துவத்தை யோசிக்கச் சொல்வது ஓர் எளிய வழி. ஒரு தனிப்பட்ட சாதாரண மனிதனுக்கு ஏற்படும் அனுபவமும், அனுபவம் என்ற அளவில் அதற்கு இணையானதே என்றாலும், அதன் வீச்சு எப்படித் தேங்குகிறது என்பதை அறியலாம். இந்த எடுத்துக்காட்டைச் சொல்வதுகூட, ஓர் எடுத்துக்காட்டு என்பதும், தனிப்பட்ட அனுபவமும் பொதுக்கருத்து என்ற பொதுவெளியில் (சில சந்தர்ப்பங்களைத் தவிர்த்துப் பெரும்பாலான நேரங்களில்) எத்தனை உள்ளீடு அற்றது என்பதைச் சொல்லவே.

மகாதேவன் எழுதியிருக்கும் ஒவ்வொரு திரைப்பட விமர்சனத்துக்கும் மேம்படுத்தப்பட்ட திரைக்கதைக்கும் பதிலாக சில விஷயங்களைச் சொல்லமுடியும். பல இயக்குநர்கள் அப்படி விரும்பவும் கூடும். இப்படி ஒரு விவாதம் உருவாவதும் நல்லதே. ஒரு புத்தகத்தின் தேவையும் இதுதான்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்நூலில் பலம் என்ன? இந்நூலின் பலம், நூலாசிரியரின் நேர்மை. இன்னொன்று, நூலாசிரியரின் சுயம். இந்த இரண்டுமே இந்தப் புத்தகத்தை உயிர்ப்புள்ளதாக்குகின்றன. இந்த இரண்டுமே இந்தப் புத்தகத்தை ஓர் இலக்கியப் பிரதியாக்குகின்றன. இந்த இரண்டும்தான் இந்தப் புத்தகம் குறித்த விவாதத்தை முன்னெடுக்கப்போகும் காரணிகளாகவும் இருக்கும். ஒருவகையில், மகாதேவன் திரைப்பட விமர்சனத்தை முன்வைக்கும்போது இலக்கியவாதியாகவும், திரைக்கதை எழுதும்போது திரைப்படவாதியாகவும் மாறுவதைப் பார்க்கமுடிகிறது. ஓர் எழுத்தாளரின் சுயமான சிந்தனை என்பது மிகவும் முக்கியமானது. சுயத்தோடு கூடிய கடும் உழைப்பு மிகப்பெரிய வாசல்களைத் திறக்கக்கூடியது. இதுவே ஓர் எழுத்தாளனுக்கு இலக்கிய முக்கியத்துவத்தை அளிக்கவல்லது. நேர்மையுடன் கூடிய சுயம் என்பது எல்லாவித நிறை குறைகளுடனும் வசீகரம் மிக்கது. இந்த வசீகரமே இந்நூல்.

இந்நூல் விடுக்கும் செய்தி என்று பார்த்தால், இப்படித் தொகுக்கலாம். தமிழில் நான்கைந்து படங்களைக் கழித்துவிட்டுப் பார்த்தால் [வீடு, சந்தியா ராகம், உன்னைப் போல் ஒருவன் (கமல் படம் அல்ல! ஜெயகாந்தனின் படம்), ஹே ராம் (இது கமல் படம்தான்!)] உலக அளவிலான திரைப்படங்கள் வந்ததில்லை என்றே சொல்லவேண்டும். கொஞ்சம் கறார்தன்மையை விட்டுவிட்டுப் பார்த்தால் இன்னொரு 10 படங்கள் தேறலாம். முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், அழியாத கோலங்கள் போன்றவை. ஆனால் நமக்கிருக்கும் திறமைக்கு நாம் கொஞ்சம் முனைந்தால் சிறப்பான படங்களை மிகச் சிறப்பான படங்களாக மாற்றலாம். இதுதான் மகாதேவன் சொல்ல வருவது. சொன்னவிதம் கொஞ்சம் கவலரப்படுத்துவதாக இருந்தாலும், அதிலிருக்கும் உண்மை நம்மை அமைதிப்படுத்துகிறது. மெல்லச் சொன்னால் புரிவதில்லை என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. இதனை ஒரு வாசகன் புரிந்துகொள்ளக்கூடும். இயக்குநர்கள் புரிந்துகொள்ள கொஞ்சம் திறந்த மனம் வேண்டும். அந்த திறந்த மனத்தை நோக்கிய முதன்மைப் புள்ளிகளில் ஒன்றாக இப்புத்தகமும் அமையவேண்டும். அமையும் என்றே நம்புகிறேன்.

Share

க்ரியா, சிக்ஸ்த் சென்ஸ், சவுக்கு வெளியீடு புத்தகங்களை ஆன்லைனில்/ஃபோன் மூலம் வாங்க

 

இனி (சும்மா இருக்கும் என் வலைத்தளத்தில்) என்.எச்.எம் ஆன்லைன் பற்றி அப்டேட் செய்யலாம் என்றிருக்கிறேன். விளம்பரமாக வருகிறது என்று நினைக்கும் நண்பர்களை கொஞ்சம் உஷாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் அவ்வப்போது எதாவது எழுதினாலும் எழுதுவேன். 🙂

அஞ்ஞாடி நாவலை ஆன்லைனில் வாங்கலாம். https://www.nhm.in/shop/100-00-0000-208-0.html

க்ரியாவின் தற்கால தமிழ் அகராதிகுட்டி இளவரசன் உள்ளிட்ட முக்கியமான புத்தகங்களை வெளியிட்டிருக்கும் க்ரியாவின் முக்கிய புத்தகங்களை என்.எச்.எம் ஆன்லைனில் வாங்கலாம்.

சிக்ஸ்த் சென்ஸ் புத்தகங்களையும் ஆன்லைனில் வாங்கலாம். https://www.nhm.in/shop/home.php?cat=378

இந்தப் புத்தகத்தை வாங்கதீங்க’ விற்பனையில் சாதனை படைத்த புத்தகம் என்கிறது சிக்ஸ்த் சென்ஸ். அந்தப் புத்தகம் வெளியான புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகமே அதிகம் விற்ற புத்தகம்! அதையும் ஆன்லைனில் வாங்கலாம். நீயா நானா கோபிநாத்தின் ‘நேர் நேர் தேமா’புத்தகமும் கிடைக்கிறது. சுப வீரபாண்டியனின் புத்தகங்களும் கிடைக்கின்றன.

சவுக்கு வெளியிட்டிருக்கும் ‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ புத்தகத்தையும் ஆன்லைனில் வாங்கலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட புத்தகங்களை ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234 | 9445 97 97 97

திநகர் ராமேஸ்வரம் தெருவில் (ரங்கநாதன் தெரு அருகில் உள்ளது) உள்ள டயல் ஃபார் புக்ஸ் புத்தகக் கடையில் மேலே உள்ள புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.

புத்தகக் கடை இருக்குமிடம்:

 

 

இந்தச் சேவை இனி தொடரும்!

Share

காலப்பெட்டகம் – புத்தக விமர்சனம்

75 ஆண்டுகாலம் என்பது எந்த ஒரு வகையிலும் மிகப் பெரிய கால அளவுதான். இத்தனை பெரிய கால அளவுகளில் நாடுகள் பிரிந்து போயிருக்கின்றன. நதிகள் காணாமல் போயிருக்கின்றன. மனிதர்கள் மறக்கப்பட்டிருக்கிறார்கள். கட்சிகள் நீர்த்துப் போயிருக்கின்றன. உலகமே ஒட்டுமொத்தமாக மாறிப் போயிருக்கிறது. இந்தப் பின்னணியில் ஒரு தமிழ்ப் பத்திரிகை தொடர்ந்து 75 வருடம் வந்துகொண்டிருக்கிறது என்பது அதனளவிலேயே மிகப் பெரிய சாதனைதான். இந்தச் சாதனையை முரசு கொட்டிச் சொல்கிறது ஆனந்தவிகடன் வெளியிட்டிருக்கும் ‘காலப்பெட்டகம்’ புத்தகம்.

வாரா வாரம் தோராயமாக 100 பக்கங்களுக்கு மேல் வந்திருக்கும் பத்திரிகை ஒன்றின் 75 கால சித்திரத்தை 368 பக்கங்களுக்குள் அடக்குவது மிகவும் சிரமமான காரியமே. இப்படி 'காலப்பெட்டகம்' நூலை மட்டுமே முன்வைத்து ஆனந்தவிகடனை அணுகினால் நாம் எத்தனையோ நுண்மையான விஷயங்களை இழக்கவேண்டியிருக்கும். அதேசமயம் ‘காலப்பெட்டகம்’ வழியாக நாம் காணும் பிம்பமே ஆனந்தவிகடனின் பிம்பமாக பெரும்பாலும் இருக்கும் என்பதுவும் உண்மையே. இந்த இரண்டுக்கும் இடையில்தான் நாம் ‘காலப்பெட்டகம்’ புத்தகத்தை வாசிக்க இயலும்.

ஆரம்பகால இதழ்களில் ஆனந்தவிகடனின் எழுத்து நடை அந்தக் காலத்துக்கே உரிய மணிப்பிரவாள நடையில் இருக்கிறது.உதாரணத்துக்கு ஒரு தலைப்பு: ‘வியாசம் அனுப்புவோருக்கு விஞ்ஞாபனம்.' ஆண்டுகள் போகப் போக அதன் நடையும் மாறுகிறது. இப்படித்தான் அரசியலில், திரையுலகில், ஆனந்த விகடனில் இடம்பெற்ற கார்ட்டூன்களில் நடந்த மாற்றங்களை நாம் பார்த்துக்கொண்டே போகமுடிகிறது. பொதுவாகவே நாம் ‘அந்தக் காலம்’ என்று சொல்லும் காலத்துக்கும் இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்துக்கும் இடையேயான காலத்தில் ஒரு தார்மிக வீழ்ச்சியைப் பார்க்கமுடியும். இதற்கு ஆனந்தவிகடனும் தப்பவில்லை. செய்திகளின் தரத்திலிருந்து, எந்த மாதிரியான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும்என்பதுவரையில் இந்த மாற்றத்தைப் பார்க்கமுடிகிறது. ஒரு சில சமயங்கள் தவிர, மாற்றம் பெரும்பாலும் வீழ்ச்சியாகவே இருக்கிறது.

அரசியல் என்று எடுத்துக்கொண்டால் ஆரம்பகால ஆனந்தவிகடன் இதழ்களை இந்திய தேசியத்தை மையமாக் கொண்ட தமிழ் இதழ்களாக வரையறுக்கலாம். (1930ம் வருடத்திய இதழ்கள் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறது விகடன். ஆழ்ந்த தேசபக்தி, அதிரடி நகைச்சுவை இரண்டும் விகடனுக்கு இரண்டு கண்கள் போல்.) ஆனால் இன்றோ ஆனந்தவிகடன் இடதுசாரி சித்தாந்தவாதிகளின் இந்திய வெறுப்பைப் பின்னணியாகக் கொண்ட கட்டுரைகளை முன்வைக்கும் இதழாக் காட்சியளிக்கிறது. இந்த இந்திய வெறுப்பு மிகவும் திறமையாக, நடுநிலைமை என்ற போர்வையில் கட்டுரையாளர்களால் எழுதப்படுகின்றது என்பதுதான் அதில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது. வெளிப்படையாக ஆனந்தவிகடன் இந்திய தேசியத்தைக் கைவிட்தாக அறிவிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து ஆனந்தவிகடனை வாசிக்கும் எவரும் விகடன் கட்டுரைகளில் தெரியும் பின்-தொனியையும், மாற்றங்களையும் தெளிவாக உணரமுடியும். எது சரி, எது தவறு என்பதல்ல, எப்படி ஆனந்தவிகடன் மாறியிருக்கிறது என்பதுதான் இதிலுள்ள செய்தி. சில காலம் ஆனந்தவிகடனின் இதழ்கள் பாரத மாதா லோகோவாகத் தாங்கி வந்திருக்கின்றன என்பதை நம்பமுடிகிறதா உங்களால்.

கார்ட்டூன்கள் என்று எடுத்துக்கொண்டால், ஆண்டுகள் போகப் போக, கார்ட்டூன்களில் வரும் வார்த்தைகள் மிக் கூர்மையாகியிருக்கின்றன. நீண்ட வரிகளைக் கொண்டுவரும் ஆரம்பகால இதழ்களின் கார்ட்டூன்களிலிருந்து, மிகக் குறைந்த வார்த்தைகள் அல்லது வார்த்தைகளே இல்லாமல் வெறும் குறிப்புகளை மட்டும் கொண்டு வெளிவரும் இன்றைய இதழ்களின் கார்ட்டூன்கள் வரை இந்த மாற்றத்தை நாம் ஓரளவுக்கு இந்நூலில் நாம் காணமுடியும்.

இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், இதனை இரண்டு வகைகளில் அணுகவேண்டும். வணிக இதழ்களில் வரும் தொடர்கதைகளை தீவிர இலக்கியமாக் கருத இயலாது. வெகுஜன வாசகர்களை ஈர்க்கும் பல்வேறு கதைகள் தொடக்ககால ஆனந்தவிகடனிலிருந்து தொடர்ச்சியாக வெளியாகியிருக்கின்றன. ஆனந்தவிகடனில் முத்திரைக் கதை வருவது என்பது தனிப்பட்ட தகுதியாகவே இருந்திருக்கிறது. தொடர்கதைகளைத் தொடர்ந்து எழுதுபவர்கள் ஹீரோக்களாகவே அறியப்பட்டார்கள். ஆனால் தீவிர இலக்கியவாதிகளின் பங்களிப்பைத் தொடக்க கால இதழ்களில் அதிகம் பார்க்கமுடியவில்லை. பிற்கால இதழ்களில் மிக முக்கியமான இலக்கியவாதிகள் ஆனந்தவிகடனில் பங்கெடுத்திருக்கிறார்கள். இந்தவகையில் இந்த மாற்றம் ஒரு நேர்மறையான மாற்றமே.

பொதுவாகவே தொடர்கதை வாசிப்பில் நேர்ந்த தொய்வு ஆனந்தவிகடனிலும் பிரதிபலித்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. அதனால்தானோ என்னவோ ஆனந்தவிகடன் உருவாக்கும் ‘நாவல்’ ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைந்து போயிருக்கிறது. நாவல் என்பது தொடர்கதை அல்ல என்பது முக்கியமான விஷயம். இப்படி ஒரு விஷயம் பெரும்பான்மை மக்களுக்குத் தெரியாமல் போனதற்கு ஆனந்தவிகடனின் வீச்சும், அதன் தொடர்கதைகள் தந்த மயக்கமும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

காலப்பெட்டகம்’ இதழ் வருட வாரியாக ஆனந்த விகடனில் வந்த முக்கியமான நிக்ழ்வுகளை வைத்துத் தொகுக்கப்பட்டிருக்கிறது. இதனால்தானோ என்னவோ, ஒட்டுமொத்தமாக வரிசையாக அஞ்சலிகளாகப் படிக்கிறோம். அலுப்பை ஏற்படுத்தும் அளவுக்குதொடர்ச்சியாக அஞ்சலிக் குறிப்புகளாக வருவதைத் தவிர்த்திருந்திருக்கலாம். அதிலும் இசையோடு தொடர்புடையவர்கள் பலரின் அஞ்சலிக் குறிப்புகள் வெளியாகியிருக்கின்றன. தொகுத்தவர் இசைப்பிரியராக இருந்திருக்கவேண்டும்.

தொகுப்பின் மற்றொரு குறை என்னவென்று பார்த்தால், பல விஷயங்கள் தேவையற்றதாக இருக்கின்றன. பல தேவையான விஷயங்கள் தொகுக்கப்படவில்லையோ என்ற எண்ணமும் தோன்றுகிறது. ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்தைத் தொடங்கி வைத்து இலவச திருமணம் நட்த்தப் போவதாகப் பேட்டி தந்திருப்பது (1989), 75 ஆண்டுகால ஆனந்தவிகடன் இதழ் வரலாற்றில் எப்படி முக்கியமானதாக மாறுகிறது என்பது புரிவதில்லை. அதே சமயத்தில், 76ல் தமிழ்நாட்டின் முகத்தையே மாற்றியமைத்த இளையராஜாவைப் பற்றியோ, 91ல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஏ.ஆர். ரஹ்மான் பற்றியோ குறிப்புகளைப் பார்க்கமுடியவில்லை.

பாரதியார் பற்றிய குறிப்புகள் முதலிலிருந்தே ‘காலப்பெட்டகம்’ நூலில் இடம்பெறுகின்றன. பாரதியார் பற்றியும் காந்தி பற்றியும் தொடர்ந்து கல்கியும் ராஜாஜியும் எழுதியிருக்கிறார்கள். ஜெயேந்திரர் உபதேசம் ஏற்றது (1954), விஜயேந்திரர் உபதேசம் ஏற்றது (1983)எல்லாம் ‘காலப்பெட்டகம்’ நூலில் வருகின்றன.

இத்தனையையும் மீறி நம்மை ரசிக்க வைப்பது, ஆனந்தவிடனின் நகைச்சுவைத் துணுக்குகளே. வார இதழ்களில் கைச்சுவையில் என்றுமே முதலிடம் ஆனந்தவிகடனுக்குத்தான் என்பது என் கருத்து. ‘காலப்பெட்டகம்’ அதனை உறுதி செய்கிறது. ஆரம்பம் முதலே அட்டகாசமான நகைச்சுவைத் துணுக்குகள். (1927ல் வெளியான ஒரு துணுக்கு. ‘அகஸ்மாத்தாய் லக்ஷாதிபதியான ஒருவர் கீழ்வருமாறு ஒரு புஸ்தக வியாபாரிக்குக் கடிதம் எழுதினார்:- அன்பர்ந்த ஐயா, வால்மீகி ராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம் முதலிய புத்தகங்கள் கிடைக்கப் பெற்றேன். அவைகள் மிகவும் நன்றாக இருக்கின்றன. இந்த ஆசாமிகள் புதியதாக எதாவது புஸ்தகங்கள் எழுதினால், உடனே எனக்கு வி.பி – யில் அனுப்பி வையுங்கள்.’) அவற்றுடன் போட்டி போடும் கார்ட்டூன்கள். இன்றுவரை ஆனந்த விகடன் இதில் முதலிடத்தில் உள்ளது என்றே சொல்லவேண்டும்.

திரைப்படங்களின் விமர்சனங்கள் அதிக அளவில் ‘காலப்பெட்டகம்’ இதழில் இடம்பெறவில்லை. குறைந்தபட்சம், அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 20 படங்களின் பட்டியலோடு அவற்றின் விமர்சங்களை மட்டுமாவது தந்திருக்கலாம். அதேபோல் ஆரம்பகால ஆனந்தவிகடன் இதழ்களின் கட்டுரைகளை அக்காலத் தமிழ் எழுத்துகளிலேயே பதிப்பித்திருக்கலாம். என்னவோ தெரியவில்லை, சீர்திருத்த எழுத்துகளையே பயன்படுத்திவிட்டார்கள். ஐம்பது ஆண்டுகால ‘காலபெட்டகம்’ இதழ் 1979ல் (1928 முதல் 1978 வரையிலான ஐம்பதாண்டு காலத் தொகுப்பு) வெளிவந்தபோது, அதில் அக்கால நடைமுறையான, சீர்திருத்தத்துக்கு முந்தைய எழுத்துகளே இடம்பெற்றிருந்தன. அதில் இருந்த இயல்புத் தன்மை இந்த 75 ஆண்டுகால ‘காலப்பெட்டகம்’ நூலில் இல்லை. இப்போதைய காலப்பெட்டகத்தைவிட, அது அதிகம் விவரங்கள் கொண்டதாகவும், சிறப்பாகத் தொகுக்கப்பட்டதாகவும் தோன்றுகிறது. இத்தனைக்கும் ஒவ்வொரு வருடத்தையும் ஒவ்வொரு பிரபலம் தொகுத்திருந்தார்கள்.

காலப்பெட்டகம்’ நூலில் அக்காலத்தில் இடம்பெற்ற சில விளம்பரங்களையும் கொடுத்திருக்கிறார்கள். ஆரம்ப கால விளம்பரங்கள் எப்படி இருக்கின்றன என்று பார்ப்பதே பெரிய சுவாரஸ்யமாக இருக்கிறது. (பக்கம் 14)

 சில விஷயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. தில்லானா மோகனாம்பாள் கதை வந்தபோது, எந்த எந்த கதாபாத்திரத்துக்கு எந்த எந்த நடிகர்கள் நடிக்கவேண்டும் என்று ஒரு வாசகர் மடல் (1956) அனுப்பியிருக்கிறார். கிட்டத்தட்ட அதே நடிகர்கள் நடித்து படம் வருகிறது. அண்ணா மேம்பாலத்துக்குக் கீழே உள்ள குதிரை வீரன் சிலை வருவதற்கு முன்பே அதைப் பற்றி ஒரு நகைச்சுவைத் துணுக்கு வருகிறது. அதில் ‘கிண்டி ரேஸை ஒழிச்சதுக்கு குதிரைச் சின்னம்’ (1974) என்று நகைச்சுவையாக எழுதுப்பட்டுள்ளது. எட்டு மாதங்கள் கழித்து (1975) ‘வந்தியத்தேவன்’ குதிரை சிலைக்குக் கீழே அதே வாக்கியங்கள். இப்படிப் பல சுவாரஸ்யங்கள் புத்தகம் நெடுகிலும்.

சுபாஸ் சந்திர போஸுக்கு ஆதரவளிக்கும் விகடன் காந்தியை எதிர்க்கிறான். காந்தியின் தோல்வி (1939) என்றே அதனைச் சொல்கிறான். ஓட்டுப் போடுவதற்கு பணம் தருவது பற்றிய துணுக்குகள் அப்போதே வந்துள்ளன. வேட்பாளர்கள் (அபேட்சகர்கள்!)திருடர்கள் என்று சொல்லும் விகடம் 1934ல் விகடனில் வந்துள்ளது. விகடன் தாத்தாவுக்கு 35ல் கொம்பு முளைக்கிறது. ஹரிஜன ஆலயப் பிரவேசத்தை முழுமையாக ஆனந்த விகடன் ஆதரித்திருக்கிறது. எஸ் எஸ் வாசனின் தாயார் மறைந்தபோது அதற்கு ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது விகடன் – 1949ல்! 1950ல் வாசனின் மகள் கல்யாணம் பற்றிச் செய்தியும் வெளியிடப்பட்டிருக்கிறது!! காங்கிரஸின் தீவிர ஆதரவு இதழான விகடன் அண்ணாத்துரையை வரவேற்று (1957) கட்டுரை தீட்டுகிறது. அண்ணாத்துரை 1958ல் விகடனில் தனது சட்டசபை அனுபவங்களை எழுதுகிறார்.

நடிகர்கள் எவ்வப்போது புயல் நிவாரண நிதிகள் கொடுத்தார்கள் என்பது காலப்பெட்டகத்தில் பதிவு செய்யப்படுகிறது! கிட்டத்தட்ட சிவாஜி கணேசனின் ரசிகனாகவே விகடன் செயல்பட்டதாக ‘காலப்பெட்டகம்’ நூலைப் படிக்கும்போது எனக்குத் தோன்றியது. வாஷிங்டனில் திருமணம் தொடரின் கடைசி பாகத்தில்தான் அதை எழுதியவர் பெயர் (1963) சாவி என்று வெளியிடப்படுகிறது. கிட்டத்தட்ட உண்மை போன்ற திருமணப் பத்திரிகையும் அக்கதைக்கு ஏற்றவாறு இடம்பெறுகிறது!

திமுகவின் வெற்றியை விசித்திரம் என்று சொல்லும் (1967) விகடன், திமுகவின் வெற்றியை வாழ்த்துகிறது. முத்தக் காட்சியில் நடித்தேனா என்று ஜெயலலிதா 1970ல் விளக்கம் அளிக்கிறார். ஜெயலலிதாவின் விளக்கத்தை ஒப்புக்கொள்ளும் விகடன், அதற்கு ஒரு சால்ஜாப்பு சொல்கிறது. அப்போதே ஜெயலலிதா அதிரடிதான். இவரது இந்த அதிரடி பின்னர் ஸ்ரீதருடன் ஏற்படும் கருத்துவேறுபாடு (1996) வரையில் தொடர்கிறது. ஸ்ரீதருக்கு ஜெயலலிதா எழுதியிருக்கும் பதில் – அட்டகாசம். நான் ஏன் பிறந்தேன் தொடரை எழுதுகிறார் எம்ஜியார் (1970) விகடனில் எழுதுகிறார்.

சோவும் சுரதாவும் 1971ல் கம்பாஸிடர் கவிதையில் மோதிக்கொள்கிறார்கள். சோ இந்திராவைக் கிண்டல் செய்து 1974 பொங்கலன்று துக்ளக் விழாவில் பேசிய, டெல்லியில் புதைக்கப்பட்ட டைம் காப்ஸ்யூல் பற்றிய அட்டகாசமான குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. பாசிப்பயறு ஒன்றின் புதிய வகைக்கு அஞ்சுகம் என்ற பெயர் (கருணாநிதியின் அம்மாவின் பெயர்) வைக்கப்படுவதைப் பற்றிய ஒரு குறிப்பு உள்ளது. ஜெயலலிதாவின் முதல் மேடைப்பேச்சு பற்றிய (1982) குறிப்பு உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஜெயேந்திரர் தண்டம் விட்டுச் சென்றது பற்றிய அவரது பேட்டி (1987)ல் வெளிவந்துள்ளது.

1993ல் முதன்முதலாக ஒரு சினிமா ஸ்டில் அட்டைப்படமாக வெளியாகியிருக்கிறது. குமரியில் வைக்கப்பட்ட வள்ளுவர் ஏன் வளைந்து நிற்கிறார் என்று கருணாநிதி கேட்டதற்கு உப்புச்சப்பில்லாமல் ஒரு பதில் சொல்லியிருக்கிறார் (2000) கண்பதி ஸ்தபதி. (நாங்கள் எங்கள் உள்வட்டத்தில் இதனை சிம்ரன் சிலை என்றே சொல்லுவோம்.) மொத்தத்தில் இந்த ஒட்டுமொத்த ‘காலப்பெட்டகம்’ புத்தகத்தை சிவாஜி கணேசனுக்கு சமர்ப்பணம் செய்யலாம் ஆனந்தவிகடன். அடுத்ததாக கருணாநிதிக்கு!

பொதுவாக ஓர் இதழின் இலக்கிய மதிப்பு, அதன் தார்மிக நெறிகள் – இப்படி எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது அதன் மீது வெகுஜன மக்கள் காட்டும் ஆர்வம். அதுவும் 75 வருடங்களுக்குத் தொடர்ந்து மக்கள் ஓர் இதழைக் கொண்டாடுகிறார்கள் என்றால், அது நிச்சயம் அதிர்ஷ்டத்தால் வாய்த்த ஒன்றோ அல்லது புறந்தள்ளத்தக்க ஒன்றோ அல்ல. அப்பத்திரிகையின் வெற்றிதான் அது. காலம் மாற மாற காலத்துக்கேற்ப ஓர் இதழ் மாறவேண்டியது கட்டாயம். அந்த மாற்றம் இல்லையென்றால் அப்பத்திரிகை நிச்சயம் அழியும். இதைப் புரிந்துகொண்டிருப்பதே அனந்த விகடனின் பலம். மக்கள் திரைப்படத்தைத்தான் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக, ஓர் இதழும் அதனையே கொண்டாடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. மாற்றம் என்பது வீழ்ச்சியுடன் மட்டுமே சாத்தியமாகும் என்பது உண்மையல்ல. இப்போது ஆனந்த விகடன் புரிந்துகொள்ளவேண்டியது இது மட்டுமே.

(காலப்பெட்டகம் – 1924 முதல் 2000 வரை, விகடன் பிரசுரம், பக்கம் 368, விலை 180 ரூ)

புத்தகத்தை ஃபோன் மூலம் வாங்க: Dial for books – 94459 01234 | 9445 97 97 97

நன்றி: ஆழம் மாத இதழ்.

Share

வடிவேலு: திராவிட அரசியலின் உரைகல்

‘கிழவன் இன்னும் குமரனாகலையா’ என்று எம்.ஜி.ஆரைப் பற்றி நாகேஷ் கேட்டதாகச் சொல்வார்கள். ‘நினைவின் தாழ்வாரங்கள்’ தொடரில் கலாப்ரியாவும் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். ‘தேர்த் திருவிழா’ திரைப்படத்தின் மேக்கப்பில் இருக்கும்போது இப்படி நாகேஷ் கேட்டது எம்.ஜி.ஆரின் காதுக்குப் போகவும், அதற்குப் பிறகு சில காலங்களுக்கு எம்.ஜி.ஆரின் படங்களில் நாகேஷ் நடிக்கவே இல்லை. பின்னர் சமாதானமானார்கள். 1968ல் நடந்தது இது. இதற்கு முன்னரே சந்திரபாபு என்ற ஒரு நடிகரைக் காலி செய்தது எம்.ஜி.ஆரே என்ற பேச்சும் உள்ளது. இப்போது 2012. நாற்பது ஆண்டுகள் கழிந்திருக்கிறது. திராவிட இயக்கம் தந்த இந்தப் பழக்கம் இன்னும் ‘மெருகேறியிருக்கிறது.’

தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராகப் பரிமளித்தவர் வடிவேலு. அவரது கலைப்பயணம் முடிந்துவிட்டது என்ற அர்த்தம் தொனிக்க, ‘பரிமளித்தவர்’ என்று சொல்வதே கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது. 2011ல் அவர் நடித்து வெளிவந்த படங்கள் மூன்று மட்டுமே என நினைக்கிறேன். 2011ல் காமெடியின் உச்ச நடிகர் இவரே. ஓர் உச்ச நடிகருக்கு நேர்ந்த கதி இது. தமிழில் இதுவரை வந்த காமெடி நடிகர்களில் உச்ச நடிகர் வடிவேலுவே என்பது என் தனிப்பட்ட கருத்து. பெரும்பாலானவர்கள் இத்துடன் ஒத்துப் போவார்கள் என்றே நினைக்கிறேன். ஓர் உச்ச நடிகரை ஒரே தினத்தில் அதள பாதாளத்தில் வீழ்த்தி வைக்க நம் அரசியலால் முடியும் என்ற கேடுக்கெட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம்.

விஜய்காந்த் அரசியலுக்கு வந்ததிலிருந்தே வடிவேலுவுக்கு வினை ஆரம்பித்தது. ஏதோ ஒரு திரைப்படத்தில் விஜய்காந்தின் அரசியல் வருகையைப் பாராட்டிப் பேசவேண்டும் என்பது போன்ற ஒரு வசனத்தை (எங்கள் அண்ணா திரைப்படமாக இருக்கலாம்) பேச மறுத்துவிட்டார் வடிவேலு. இதற்கு முன்னர் பல படங்களில் வடிவேலுவும் விஜய்காந்தும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதிலெல்லாம் வடிவேலு தான் ஏற்ற கதாபாத்திரத்தின் வழியே விஜய்காந்தைப் பாராட்டிப் பல தடவை பேசியிருக்கிறார். ஏனோ இந்தப் படத்தில் மறுத்துவிட்டார். அது அவரது உரிமை. தொடங்கியது பிரச்சினை. எப்படித் தன்னைப் பாராட்டிப் பேசுவதை போயும் போயும் ஒரு காமெடி நடிகன் மறுப்பது என்று கதாநாயகனுக்கு வந்துவிட்டது கோபம்.

ஆனால் நாகேஷ் போல வடிவேலு அமைதியாக இல்லை. தன்னை எதிர்ப்பது எம்.ஜி.ஆர் இல்லை என்னும் தைரியமாக இருந்திருக்கலாம். விஜய்காந்தின் மிரட்டல் அரசியலுக்கு இணையான அரசியலில் இறங்கினார் வடிவேலுவும். இரண்டு பக்கமும் பற்றிக்கொண்டது. இதற்கிடையில் வடிவேலுவின் மேனேஜர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இன்றளவும் வடிவேலுக்குப் பிரச்சினையாக இருப்பது இந்தத் தற்கொலை. தொடர்ந்து நிகழ்ந்த மனவேறுபாடுகளின் உச்சத்தில், விஜய்காந்த் எந்தத் தொகுதியில் நின்றாலும் தான் எதிர்த்துப் போட்டிப் போடப்போவதாக அறிவித்தார் வடிவேலு.

2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் கூட்டணி ஏற்பட்டது. 67க்குப் பிறகு கழகங்கள் உருவாக்கி வைத்திருந்த அரசியல் நாகரிகக் கணக்கின்படி, தேமுதிகவுக்கு வேண்டாதவர்கள் எல்லாருமே அதிமுகவுக்கும் வேண்டாதவர்களே என்று அதுவாகவே ஆகிப்போனது. இதனை வடிவேலுவும் நம்பினார். எப்படியும் விஜய்காந்தை வீழ்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்ட வடிவேலு அழகிரியின் கரத்தை வலுப்படுத்தி திமுகவுக்குப் பிரசாரத்துக்குப் போனார். பிடித்துக்கொண்டது சன்னும் சனியும்.

சன் டிவி இதனை பயன்படுத்திக்கொண்டது. விஜய்காந்தின் தனிப்பட்ட பிம்ப அழிப்பில் வடிவேலுவும் சன் டிவியும் திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு ஈடுபட்டார்கள். இது மக்களிடையே எடுபடவும் செய்தது. தன் பேச்சுக்கு வரும் கூட்டத்தைக் கண்டு மதி மயங்கிப் போன வடிவேலு தான் என்ன பேசுகிறோம் என்ற விவஸ்தையின்றி வாய்க்கு வந்தது எல்லாவற்றையும் பேசினார். ஜெயலலிதாவை நேரடியாகத் தாக்கி எதுவும் பேசவில்லை என்றாலும், கருணாநிதியை வானளாவப் புகழ்ந்ததையும், கருணாநிதி ஆட்சியின் சாதனைகளாக அவர் பட்டியலிட்டதையும், தனக்கு எதிரானதாகவே அதிமுக தலைமை பார்த்திருக்கும். ஏனென்றால் அதிமுகவும் திமுகவும் இதுபோன்ற விஷயங்களிலெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. ஒருவகையில் ஜெயலலிதா தன்னைத் தாக்குவதைக் கூடப் பொறுத்துக்கொள்வார். ஆனால் தன்னை ஒப்பிட்டுக் கருணாநிதியைப் புகழ்வதைப் பொறுத்துக்கொள்ளவே மாட்டார்.

இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் வடிவேலுவுக்கு எதிராக அமைந்தன. தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளன்றே வடிவேலுவின் வீடு, தோட்டம் ஆகியவை தேமுதிக குண்டர்களால் தாக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. தான் விரித்துக்கொண்டு தானே விழுந்த வலை மெல்ல இறுகுவதை அவர் அன்றுதான் உணர்ந்திருக்கவேண்டும்.

வடிவேலு செய்த தவறுகள் என்ன? பெருச்சாளிக்குப் பயந்து பாம்பிடம் அடைக்கலம் சென்றது. அரசியல் என்பது வேறு, திராவிட அரசியல் வேறு என்பதைப் புரிந்துகொள்ளாதது. ஆனால் இவையெல்லாம் மிகச் சிறிய தவறுகளே. ஓர் அரசியல் தலைவரைக் குடிகாரர் என்று சொல்வது, நாகரிகக் குறைவே என்றாலும், அதில் உண்மை இருக்குமானால் அது மாபெரும் தவறல்ல. வடிவேலுவும் அவர் பிரசாரம் செய்யும் கட்சித் தலைவர்களும் உத்தமர்களா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. இந்தக் கேள்வியுடன் சேர்த்துப் பார்த்தால், வடிவேலு சொல்வதெல்லாம் தனிப்பட்ட வெறுப்பின் உச்சத்தால் மட்டுமே என்பதைக் கண்டுபிடித்துவிடமுடியும். உண்மையில் இதனை எல்லாரும் அறிந்தே இருந்தார்கள்.

ஆனால் அதற்குப் பின்பு நடப்பதுதான் அராஜகத்தின் உச்சமாக இருக்கிறது.

ஒருவர் அதிமுகவுக்கு எதிராக – இல்லை, திமுகவுக்கு ஆதரவாக – பேசினார் என்ற ஒரே காரணத்தினாலாயே அவருக்கு நடிக்க வாய்ப்பு வழங்கப்படாது என்பது எப்பேற்பட்ட அராஜகம்? இதனை ஜெயலலிதா முன்னின்று நடத்தியிருப்பார் என்று நான் நம்பவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடனேயே, எதற்கு நமக்கு வம்பு என்றுதான் பலரும் ஒதுங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் ஜெயலலிதாவே வடிவேலுவைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க உள்வட்டங்களின் வழியே இயக்குநர்களுக்குக் கட்டளை இட்டிருக்கவேண்டும். வடிவேலுவின் பிரசாரம் வேறு, அவரது நடிப்பு வேறு என்று தெளிவாகச் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் ஜெயலலிதா ரஜினி அல்ல என்பதுதான் உண்மை. ஜெயலலிதா இதனை வெகுவாக ரசித்திருப்பார் என்றே தோன்றுகிறது. முன்னின்று நடத்துவதற்கும், ரசிப்பதற்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதுவும் உண்மையே.

இப்படி நடப்பது ஏதோ ஒரு சாதாரண நடிகருக்கல்ல. ஓர் உன்னதக் கலைஞனுக்கு இது நேர்ந்திருக்கிறது. தேர்தல் முடிவு ஓர் நடிகனைக் காணாமல் ஆக்கிவிட்டதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். வடிவேலுவை தன் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள்.

எந்த அளவுக்கு என்றால் – கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓர் அறிவிப்பு வெளியானது. சுந்தர் சி திரைப்படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக. நான் அன்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னதான் வடிவேலு நாகரிகக் குறைவாகப் பேசியிருந்தாலும், நடிப்பு என்ற வகையில் வடிவேலு ஒப்பற்ற கலைஞன். இன்றும் நகைச்சுவை சானல்களில் வரும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன என்பதை மறுக்கவே முடியாது. எனவே அவர் நடிக்க வரவேண்டியதுதான் தர்மம். அந்த வகையில் சுந்தர் சி பாராட்டுக்குரியவர் என நினைத்துக்கொண்டேன். மறுநாளே மறுப்பு வந்தது. அப்படி ஓர் எண்ணம் தனக்கில்லை என்று சுந்தர் சி சொன்னதாக அறிந்தேன். அதேபோல் ரஜினி படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக ஒரு செய்தியும், அதனை கே.எஸ். ரவிகுமார் மறுத்ததாகவும் அறிந்தேன். இதெல்லாம் உண்மையா என்று தெரியாது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நாம் வாழ்கிறோம். 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இன்றுவரை வடிவேலு நடித்து ஒரு படம்கூட வெளியாகவில்லை என்பது, இதெல்லாம் உண்மையாகத்தான் இருக்கும் என்றுதான் சொல்லவைக்கிறது.

திராவிட இயக்கக் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் இந்த வகையான அரசியலுக்குக் காரணம். தனக்கு எதிராகக் கருத்துச் சொல்பவர்கள் எவருமே தங்களுடைய தனிப்பட்ட எதிரிகள் என்ற கருத்து தமிழ்நாட்டில் வேரூன்றியதற்கு கருணாநிதியும் ஜெயலலிதாவுமே காரணம். ஏதேனும் ஒரு நடிகரோ எழுத்தாளரோ தன்னைப் பற்றி எதிராக எழுதினால், அவரை எதிரியாக நினைப்பதும், தேவைப்படும்போது ‘அரவணைப்பது’ போல பேசி அவரை அடிமையாக்குவதும் இவர்களுக்குக் கைவந்த கலையே. அதைக்கூட தானே பார்த்துச் செய்ததாகச் சொல்வார்கள். இழவு வீட்டில் பிணமாகக்கூடத் தாங்களே இருக்க நினைக்கும் மனநிலை.

யாருக்கு வேண்டும் உங்கள் அரவணைப்பு என்று எதிர்த்துப் பேசி உண்மை நெஞ்சுரத்துடன் ஒருவர் இங்கே குப்பை கொட்டிவிடமுடியாது. மேடையில் பகிரங்கமாக, தைரியமாகப் பேசிய அஜித், மறுநாளே கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டு கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்துவதைப் பார்த்திருக்கிறோம். ஜெயலலிதாவின் முன்னிலையில் கண்டித்துப் பேசிய ரஜினி பட்ட தொல்லைகளுக்கு அளவே இல்லை. அஜித்தும் ரஜினியும் மீண்டும் சமரசம் ஆகியிருக்கலாம். அதற்கான கேவலம்கூட நம்மை இப்படி வைத்திருக்கும் கட்சிகளுக்கு உரியதே அன்றி, அவர்களுக்கு உரியன அல்ல. இப்படி நடக்கும் என்று தெரிந்தும் அவர்கள் அப்படிப் பேசியதே சாதனைதான்.

வடிவேலு போன்ற ஒரு நடிகருக்கு வாய்ப்பில்லாமல் இருப்பது இப்படியான நம் அரசியல் கேவலத்தின் உரைகல்லாகவே விளங்குகிறது. அதே கேவலத்தின் வழியாகவே வடிவேலு வெளிவரவேண்டியிருக்கும். இன்று விஜய்காந்தும் ஜெயலலிதாவும் மோதியுள்ள நிலையில், ஒரே ஒரு பொன்னாடையை வடிவேலு ஜெயலலிதாவுக்குப் போர்த்தினால் போதும். மீண்டும் வடிவேலு என்ற கலைஞனின் பல வெற்றிகளை நம்மால் திரையில் காணமுடியும். கேவலங்களைப் பட்டியலிட்டுவிட்டு, அதே கேவலத்தின் வழியேதான் நாம் வெளியேற வேண்டுமா என்றால், இன்றைய அரசியல் சூழலில் வேறு வழியில்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது. நல்ல நடிகன் என்ற பெரிய அந்தஸ்தின் முன்பு, இந்த சமரசம் பொறுத்துக்கொள்ளக் கூடியதாகவே தெரிகிறது. கொஞ்சம் அசிங்கத்துடன் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

சந்திரபாபு, என்.எஸ்.கே, எம்.ஆர்.ராதா போன்ற நடிகர்களுக்கு வாழ்க்கையில் ஓர் பெரிய அடி விழுந்து, அதிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடித்தபோது அவர்களால் முன்பு போல வெற்றி பெற முடியவில்லை. வடிவேலுவுக்கும் இது நிகழ்ந்துவிடக்கூடாது என்றுதான் மனம் வேண்டிக்கொள்கிறது. இனி மீண்டும் நடிக்கவந்தால், தான் எப்படி அரசியல் கட்சிகளாலும் டிவிக்களாலும் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டோம் என்பதை மனத்தில் வைத்துக்கொள்வது வடிவேலுவுக்கு நல்லது. இங்கே நிலவுவது அரசியல் விஷச் சூழல். அதை மெல்ல மெல்லத்தான் மாற்றமுடியும். அந்த மாற்றத்துக்கு வடிவேலு பலியாகவேண்டியதில்லை.

Share

இரண்டு கவிதைகள்

நான் எழுதிய இரண்டு கவிதைகள் சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளன. வாசிக்க: http://solvanam.com/?p=19298

பிஞ்சுக் கதை

மொழியறியாக் குழந்தை ஒன்றின்
கதை கேட்கத் தொடங்கினேன்
நல்லவர்கள் மட்டுமே வரும் கதை
குழந்தையின் தலையைச் சுற்றி
தேவர்கள் பூவோடு காத்திருந்தார்கள்
ரோஜா கொண்டு வந்த கைகளைக் கண்டு
குழந்தை சிரித்துக் கொண்டது
மஞ்சள் நிறப் பூ மலர்ந்தபோது
முகம் விரிந்தது
இரண்டு கைகளை
தலைக்கு இணையாக ஏந்தி
பூக்களைப் பெற்றுக்கொண்டே இருந்தது குழந்தை
இடைவேளையாக
வீறிட்ட குழந்தைக்குப் பால் கொண்டு வந்தாள் அம்மா
தேவர்கள் காத்திருந்தார்கள்
மீண்டும் பூக்கள் சொரிய
குழந்தை சிரிக்கத் தொடங்கியது
உச்சகாட்சியாகக்
குழந்தையைப் பார்க்க
கடவுள் வந்திருந்தார்
அவரைக் காக்க வைத்துவிட்டு
நல்லவர்கள் கதையை
எனக்குத் தொடர்ந்தது பிஞ்சு

தழல்

அடி நெஞ்சின் ஆழக் கிடந்து
பல்லாண்டு ஊறி
பலம்கொண்ட வார்த்தைசெய்து
வீசியெறியப்பட்ட தழல்.
எங்கும் பற்றிக்கொண்டது
பைந்தழைகள் பற்றிக்கொண்டன
பசுமரம் எரியத் தொடங்கியது
வானெங்கும் தீ சூழ
எல்லாம் சிவப்பு நிறம்
எங்கும் செம்மை
கண்கள் காணுவதெல்லாம் செந்நிறம்
கண்களும் செம்மை கொண்டன
தழல் பரவ பரவ
என்னுடலும் தழலானது
அக்னியின் கோபத்தில்
என்னுடல் கிளர்ந்தபோது
அக்னிக்கும் எனக்குமான
சிறிய இடைவெளியும் அற்றுப்போனது
எல்லாம் ஒன்றானது
நீண்ட பெருமழையிலும்
விடாது எரிந்தது தீ
ஒரு வார்த்தையில்
உலகம் தீயானது
பசுமரத்தில் இடி விழுந்தது போல
இடி சொல்லாகுமா?
கண்களில் வழியும்
கண்ணீர்த் துளிகளில்
இரண்டொரு கங்குகள் உருண்டன
தழலெறிந்தவனுக்கு
அவை அர்ப்பணம்.

Share

எக்ஸைல் புத்தக வெளியீடு – மரபுகள் கலைக்கப்படும் தருணம்

எக்ஸைல் நாவலுக்கு விமர்சனங்கள், விவாதங்கள் வந்து ஓய வேண்டிய நேரத்தில் புத்தக வெளியீட்டு விழா பற்றிய கட்டுரையா என்ற ஜெர்க் ஆகவேண்டாம். இதை எழுதி மாதங்கள் ஆகின்றன.

கிழக்கு ‘ஆழம்’ என்று ஒரு மாத இதழைக் கொண்டு வர இருக்கிறது. 

அதற்காக எழுதப்பட்ட கட்டுரை இது. ஓர் இதழைத் தொடங்குவதற்கு முன்பாகச் செய்யவேண்டிய ஆயத்த வேலைகளில் ஏற்பட்ட எதிர்பாராத தாமத்தினால் இதழ் கொஞ்சம் தாமதமாக வெளிவந்திருக்கிறது. இந்த இதழ் எப்போதிலிருந்து வாசகர்கள் கைகளில் கிடைக்கும் என்பதைப் பற்றி பத்ரி தனியே எழுதுவார். இப்போதைக்கு ‘ஆழம்’ இதழில் வெளியான என் கட்டுரை இங்கே.

இக்கட்டுரை ‘ஆழம்’ இதழில் சில எடிட்டிங்குடன் வெளியானது.

என் கட்டுரையை வெளியிட்ட ‘ஆழம்’ பத்திரிகைக்கும், அதன் பதிப்பாளர்-ஆசிரியர் பத்ரிக்கும் பொறுப்பாசிரியர் மருதனுக்கும் என் நன்றி. 

மரபுகள் கலைக்கப்படும் தருணம்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சாரு நிவேதிதாவின் ‘எக்ஸைல்’ நாவல், டிசம்பர் 6 அன்று காமராஜர் அரங்கத்தில் வெளியிடப்பட்டது. சாருவின் நாவல்கள் எவ்விதக் கட்டமைப்புக்குள்ளும் சிக்காமல் வெளியேறத் துடிப்பவை. சாரு சிறப்புக் கவனம் எடுத்து இதனைச் செய்கிறாரா அல்லது அவரது இயல்பான நாவல் வடிவமே கட்டுக்குள் அடங்காமல் திமிறுவதுதானா என்ற விவாதம் எப்போதும் தமிழ் இலக்கிய உலகில் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

பொதுவாகவே இலக்கியக் கூட்டங்களும் நாவல் வெளியீடுகளும், காதும் காதும் வைத்தமாதிரி ரகசியக் கூட்டங்கள் நடைபெறுவது போல் நடந்தால்தான் இலக்கியத்தன்மையைப் பெறும். ஓர் இலக்கியக்கூட்டத்துக்கு மூன்று இலக்கங்களில் பார்வையாளர்கள் வந்துவிட்டால் உண்மையில் அது தீவிர இலக்கியக்  கூட்டமாக இருக்க வாய்ப்பில்லை என்பதே தீவிர இலக்கிய ஆர்வலர்களின் துணிபு. சாரு இதனையும் உடைக்கவேண்டியவராகிறார்.

இலக்கிய கூட்டத்தின் ஒலிபெருக்கிகள் ‘வொய் திஸ் கொலவெறி கொலவெறிடி’ என்று அலறுவதைக் கேட்க ஒரு ‘கொடுப்பினை’ வேண்டும். அராபியப் பாடல் ஒலிக்க வாலி பேச ஓர் இலக்கியக் கூட்டத்தின் மரபுகள் அத்தனையும் காமராஜர் அரங்கத்தில் கலைத்துப் போடப்பட்டன. ஜோல்னாப் பை இல்லாமல் கோட் சூட் போட்டு மேடையேறினார் சாரு. இதற்கும் ஒரு விளக்கம் சொன்னார். அது நமக்குத் தேவையற்றதே. விஷயம், சாரு மேடை மரபுகளைக் கலைக்கிறார் என்பதே. 

சாருவே நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தனக்குக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிகழ்ச்சியின் ஆற்றொழுக்கைக் குலைத்து குலைத்து, இது ஒரு மரபுகளற்ற மேடை என்பதை நிறுவுவதில் குறியாக இருந்தார். இப்படி மரபுகள் கலைக்கப்படும்போதெல்லாம் சாருவின் ரசிகர்கள் கைதட்டி விசிலடித்துக் கொண்டாடினார்கள். வொய் திஸ் கொலைவெறி பாடல் ஒலிபரப்பட்ட நோக்கம் அந்தக் கூட்டத்தின் ஒவ்வொரு இடைவெளியிலும் சீழ்க்கையின் வழியே பரவிய தருணம் அது.

இலக்கியக் கூட்டத்தின் இன்னொரு புதுமையாக, எக்ஸைல் நாவலின் முதல் பிரதி 50,000 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஏலம் எடுத்தவர் மேடைக்கு வரவில்லை. மற்ற சில கொலைவெறித் தற்கொலைப் படை சாருவின் ரசிகர்களும் அவரவர்க்கு ஏற்ற சக்தியில் ஏலம் எடுத்திருந்தார்கள் என்னும் செய்தியும் சொல்லப்பட்டது. நெடுங்கால இலக்கிய மரம் விதையூன்றப்பட்ட நிமிடம் அது என உவப்பானார்கள் சாருவின் ரசிகர்கள்.

தான் ஏன் புத்தகத்தை வெளியிட வாலியை அழைத்தேன் என்பதற்கு சாரு வெளிப்படையாகச் சொன்ன காரணம், தன் இலக்கிய வாழ்வில் தன்னைப் புகழ்ந்த ஒரே வெகுஜன விஐபி வாலி மட்டும்தான் என்பதே. ஆனந்த விகடனில் வாலி எழுதிய ‘நினைவு நாடாக்கள்’ தொடரில் வாலி சாருவைப் பற்றிப் புகழ்ந்திருந்தார். வாலி இதுவரை தன் வாழ்நாளில் எதற்கும் சமரசமே செய்ததில்லை என்னும் வாலிக்கே தெரியாத ரகசியத்தைச் சொன்னார் சாரு. ஆனால் அதே ‘நினைவு நாடாக்கள்’ தொடரில், நியூ படத்தில் இடம்பெற்ற ‘காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தெய்வம் அம்மா’ என்று எழுதிய வரியை, ஏ.ஆர்.ரஹ்மானின் நிர்ப்பந்ததுக்கு இணங்க ‘கைதொழும் தேவதை அம்மா’ என்று மாற்றி எழுதியதை எரிச்சலுடன் பதிவு செய்திருந்தார் வாலி. புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய வாலியும் மேடையில் பேசும்போது தனக்கு சமரசம் செய்து பழக்கமில்லை என்ற அர்த்தத்தில் ‘எந்த இசையமைப்பாளரின் கருணையும் எனக்குத் தேவையில்லை’ என்றார். 80 வயதில் முழங்குவது எளிது. சாருவின் வெளிப்படைத் தன்மையைப் பற்றிப் பேசிய வாலி, தான் இந்த விழாவுக்கு வந்ததே சாருவின் புகழ் உலகறியவேண்டும் என்பதற்காகவே என்றார்.

அடுத்துப் பேசியவர் இந்திரா பார்த்தசாரதி. இந்திரா பார்த்தசாரதியும் சமரசம் செய்ததில்லை என்றார் சாரு. தன் புத்தகத்தை வெளியிட வரும் விருந்தினர்கள் சமரசமற்றவர்கள் என்று சொல்வதில் சாரு எடுத்துக்கொண்ட கவனம் ரசிக்கத்தக்கதாக இருந்தது. 

ஏன் செக்ஸைப் பற்றி எழுதக்கூடாது என்பதே இபாவின் ஒட்டுமொத்தப் பேச்சின் ஒருவரி சாராம்சமாக இருந்தது. டெல்லியில் வாழ்ந்த காலங்களில் என்றெல்லாம் எங்கெங்கோ அலைபாய்ந்து மீண்டும் சாருவின் எக்ஸைல் நாவலில் செக்ஸ் இருந்தால் என்ன தவறு என்ற புள்ளிக்கு வந்து சேர்ந்தார் இபா. இது சாஃப்ட் போர்னோ அல்ல, ஹார்ட் போர்னோ என்றார். செக்ஸைக் குற்றவுணர்ச்சியோடு அணுகுபவர்கள் படிக்கக்கூடாத நாவல் என்றார். என்ன தோன்றியதோ இபாவுக்கு, திடீரென்று, இப்படியெல்லாம் சொல்வதால் நான் இப்படித்தான் என்று அர்த்தமல்ல என்றார். இதேபோன்று தற்காப்புக் கலையை இரண்டு இடங்களில் பயன்படுத்தினார். இவருக்கும் 80 வயது. 80 வயது மூத்த எழுத்தாளர்கூட மேடையில் தான் இப்படி அல்ல என்கிற டிஸ்கிளெய்மரோடு பேசவேண்டியிருக்கிறது. அதுவும் சாருவின் கூட்டத்தில். என்னவொரு முரண்நகை!

விழாவுக்கு வந்திருந்த மதனைப் பேச அழைத்தார் சாரு. மதன் தன்னை நாவலில் பாதித்த விஷயங்கள் பற்றியும், தனக்குப் பிடித்திருக்கும் அம்சங்கள் பற்றியும் தெளிவாகப் பேசினார். உலக எழுத்துகளைப் படித்திருக்கும் தன்னால், சந்தேகமே இல்லாமல் இந்நாவல் ஓர் உலகத்தரமான நாவல் என்று சொல்லமுடியும் என்றார். இந்திரா பார்த்தசாரதியும் வாலியும் பேசியிருந்தாலும், மதனின் பேச்சே சாருவின் நாவலை மிகச் சரியாகத் தொட்டுப் பேசக்கூடியதாக அமைந்தது. 

சாரு தன் வலைத்தளத்தில், முகநூலில் தன் வாசகர் வட்டத்திலும் இந்நூலுக்கு தொடர்ந்து மார்க்கெட்டிங் செய்திருந்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஓர் எழுத்தாளன் தன்னை ஏன் இப்படி மார்க்கெட்டிங் செய்துகொள்ளவேண்டும் என்ற இலக்கியக் கேள்வி ஒருபுறம். ஓர் எழுத்தாளன் தனது புத்தகங்களை விற்க தன்னால் இயன்றதை ஏன் செய்யக்கூடாது என்னும் உலக நிர்ப்பந்தம் மறுபுறம். எப்போதும் மரபுகளைக் கலைத்துப்போட விரும்பும் சாரு இலக்கிய மரபின் பக்கம் நிற்காததே யதார்த்தம். இல்லையென்றால், எந்தவொரு இலக்கியக் கூட்டத்திலும் விசிலடிக்கும் ரசிகர்களையோ, விழாவுக்கு வருவதற்கு முன்பாகவே கர்ம சிரத்தையாக எக்ஸைலின் ஒரு பிரதியை வாங்குவதைக் கடமையாகக்கொண்ட வாசகர்களையோ நாம் பார்க்கவே முடியாது. 

சாருவின் ரசிகர்கள் இந்நாவலை வாங்கலாமா வேண்டாமா அல்லது ஏன் வாங்கவேண்டும் என்னும் உளச்சிக்கல்களுக்குள் இறங்குவதே இல்லை. சாருவின் நாவல் என்பதே தாங்கள் வாங்கத்தான் என்ற தோரணையில் சாருவின் ரசிகர்கள் நாவலை வாங்குவதைப் பார்க்கமுடிந்தது. இது இலக்கியத்தின் போக்குக்கு உகந்ததா அல்லது இலக்கியத்திலிருந்து முற்றிலும் பிரித்தறியப்படவேண்டியதா என்பது தனிக்கேள்வி. இக்கேள்விகூட இலக்கியவாதிகளுக்கு உரியதே அன்றி, அவரது ரசிகர்கள் ஒருபோதும் இக்கேள்வியை எண்ணிப் பார்க்கப்போவதுகூட இல்லை. ரசிகர்களின் உடனடிக் கேள்விகளெல்லாம், திருவிழாவுக்கு எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று சாரு அறிவிக்கப்போகிறார் என்பதில் மட்டுமே.

ஆனால் சாருவைப் பற்றி நாம் நினைத்துப் பார்க்கவேண்டியது கட்டாயமாகிறது. இதுவரை சாரு என்பவர் தன் வழியை தன் கர்வத்தால் நிர்ணயிப்பவராகவும், அவரது வாசகர்கள் அவரது வழியை ஏற்றுக்கொள்பவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். சாருவே தொடக்கப்புள்ளி. அவரது வாசகர்கள் தொடர்புள்ளிகளே. ஆனால் இப்போதைய சாருவிடத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள். இணையம் சாருவைப் பாதித்திருக்கும் விதம் ஆய்வுக்கு உரியது. சாரு தன் ரசிகர்களின் கட்டாயங்களுக்கேற்ப இயங்குவது போன்ற தோற்றம் வலுவடைகிறது. வாசகர்கள் என்பவர்கள் ரசிகர்களாகும் ரசவாதத்தை சாரு ரசிக்கிறாரோ என்கிற எண்ணம் வலுப்படுகிறது. சாரு என்னும் ஓர் முன்னாள் இலக்கியவாதியின் இந்தத் தடம்பெயர்வு ரசிக்கத்தக்கதல்ல. நீண்டகால நோக்கில் இலக்கியம் என்னும் ஆதார விழுமியத்துக்கு இது கேட்டையே விளைவிக்கும். சாரு தன் வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளப்போகும் கேள்விகளை டிசம்பர் 6ல் உருவாக்கி அமைதியானது காமராஜர் கலையரங்கம்.

எக்ஸைல் புத்தகத்தை ஃபோன் மூலம் வாங்க Dial For Books 94459 01234 | 9445 97 97 97

Share