Archive for ஹரன் பிரசன்னா

வெல்லும் கட்சி – தேர்தல் களம் 2016 – தினமலர்

முன்பெல்லாம் என் தாத்தாவிடம் கேட்பேன், எந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்று. அவர் சிரித்துக்கொண்டே ‘சோத்துக் கட்சிக்கு’ என்பார். எத்தனை முறை எப்படி மாற்றிக் கேட்டாலும் பதில் சோத்துக் கட்சி என்பதாகவே இருக்கும். தான் அளிக்கும் வாக்கை வெளியில் சொல்லக்கூடாது என்பதில் அவருக்கு இருக்கும் உறுதி என்று ஒருவகையில் எடுத்துக்கொண்டாலும், இன்னொரு வகையில் தன் வாக்கு வெல்லும் கட்சிக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணமும் அவர் சொன்னதில் மறைந்திருப்பதைப் பார்க்கலாம்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் என் நண்பரிடம் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்கச் சொன்னேன். எப்போதும் அதிமுகவுக்கு வாக்களிப்பதையே விரும்பும் அவர் அந்த ஒருமுறை மட்டும் பாஜகவுக்கு வாக்களிக்க ஒப்புக்கொண்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. என் நண்பர் வாக்களித்த தொகுதியில் பாஜக மூன்றாவது இடத்துக்கு வந்தது. அதிமுக வெற்றி கண்டது. என் நண்பர் மீண்டும் மீண்டும் சொன்னது, ‘ஒழுங்கா அதிமுகவுக்கு போட்டிருந்தா, ஜெயிச்ச கட்சிக்கு ஓட்டு போட்ட மாதிரி இருந்திருக்கும்’ என்பதையே.

இந்த ஒரு மனநிலை தமிழ்நாடெங்கும் உள்ளதை நீங்கள் பார்க்கலாம். வெல்லும் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்னும் மனநிலை. ஆனால் இந் எண்ணம் தேவையற்றது என்றே நான் நினைக்கிறேன். வெல்லும் கட்சி அல்லது இரண்டாவதாக வரும் கட்சியைத் தவிர மற்ற கட்சிகளுக்கு அளிக்கப்படும் வாக்குகளை கிட்டத்தட்ட செல்லாத வாக்கைப் போல சித்திரிக்கும் போக்கு இங்கே உள்ளது. இந்த மனநிலையை மாற்றவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

ஒரு நாட்டில் நிலவும் பன்முகத் தன்மை என்பது மிகவும் முக்கியமானது, அவசியமானது. எல்லாத் தரப்பு மக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் ஒரு சில கட்சிளால் முழுமையாகக் கவனப்படுத்திவிடமுடியாது. அதோடு சில தனிப்பட்ட சமூகத்தின் அல்லது குழுவின் பிரச்சினைகள் என்ன என்ன என்பதெல்லாம், இரண்டு முதன்மைக் கட்சிகளுக்கு தெரியாமல் இருக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. அல்லது பெரிய அளவில் வாக்கு இல்லை என்பதால் முதன்மைக் கட்சிகள் இப்பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் ஒதுங்கிச் செல்லும் வாய்ப்பும் இருக்கிறது. இங்கேதான் சிறிய கட்சிகளின் இருப்பும் பங்களிப்பும் முக்கியமானதாகிறது.

ஜாதிக் கட்சி என்ற சொல் இன்று மிகவும் மோசமான ஒன்றாகவும் ஒதுக்கித் தள்ளவேண்டிய ஒன்றாகவும் ஆகிவிட்டது. ஆனால் இந்தியா போன்ற ஜாதி அமைப்பு மிக வலுவாக வேரூன்றிய நாட்டில் இந்த ஜாதிக் கட்சிகளின் தேவை மிக அவசியமானது. இந்த ஜாதிக் கட்சிகளினால் ஏற்படும் பாதிப்புகள், இவை மேற்கொள்ளும் மிரட்டல் அரசியல், அதனால் விளையும் பிரச்சினைகள் – இவையெல்லாம் ஏற்கத்தக்கவை அல்ல. ஆனால் இதன் இன்னொரு பக்கமாக, இந்த ஜாதிக் கட்சிகளே தங்கள் ஜாதிக்குரிய தேவைகளை, பிரச்சினைகளை மிகத் தீவிரமாக முன்வைக்கின்றன. இவை இல்லாவிட்டால் இப்பிரச்சினைகளெல்லாம் மக்கள் மன்றத்தின் முன் வராமலேயே போயிருக்கக்கூடும்.

அதிலும் இந்தியாவில், மிக நுணுக்கமான கலாசாரத்தைப் பின்னணியாகக் கொண்ட மீச்சிறிய ஜாதிகளின் பெயர்கள்கூட பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. எனவே இது போன்ற ஜாதிகளின் தேவைகளை முன்வைக்கும் கட்சிகளின் அரசியல் ஒட்டுமொத்த நோக்கில் மிக முக்கியமானது.

இதே கருத்தை சில அமைப்புகளுக்கும் சில குழுக்களுக்கும் விரிவுபடுத்தலாம். மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் குரலை ஒட்டுமொத்தமாக ஒரு குழுவாக முன்வைக்காமல் நாம் அவர்களை ஒருநாளும் புரிந்துகொண்டிருக்கமுடியாது. முதன்மைக் கட்சிகள் இத்தரப்பின் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பவேண்டுமானால் இக்குழுக்களின் அழுத்தமும் தொடர் போராட்டமும் மிகவும் அவசியம்.

எனவே நாம் மீண்டும் மீண்டும் வெல்லும் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தால், சிறிய கட்சிகளின் நிலைப்பாட்டுக்கான மக்களின் பதில் என்ன என்பதை தெரிந்துகொள்ளமுடியாமலேயே போய்விடும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சில ஊடகங்கள், சிறிய கட்சிகளுக்கு வாக்களிப்பதை, கிட்டத்தட்ட செல்லாத வாக்குகளாகவே சித்திரிக்கப் பார்க்கின்றன. ஏற்கெனவே முதன்மைக் கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள வாக்காளர்கள், வேறு எதையும் சிந்திக்காமல் வெல்லும் இரண்டு கட்சிகளில் ஒன்றுக்கு வாக்களிக்கத் தயாராகிவிடுகிறார்கள்.

இது மக்களை அதிகம் சிந்திக்கவிடாமல் செய்யும் ஒரு பிரச்சினை. இதைக் கவனமாகக் கையாளவேண்டும். ஜாதிக் கட்சிகள் உள்ளிட்ட சில அமைப்புகள் முன்வைக்கும் அரசியலில் நமக்கு ஒவ்வாமை இருக்கலாம். அவர்கள் செயல்பாடுகளில் அராஜகங்கள் இருக்கலாம். இந்தப் பிரச்சினைகளை மீறி அவர்கள் முன்வைக்கும் ஒரு தரப்பின் குரல் மிகவும் இன்றியமையாதது. அக்குரல் நமக்கு ஏற்புடையது என்றால், மற்ற எல்லாப் பிரச்சினைகளையும்விட இப்பிரச்சினை நமக்கு முக்கியமானது என்று தோன்றினால், எக்கட்சி வெல்லும் எக்கட்சி தோற்கும் என்றெல்லாம் யோசிக்காமல், நம் கருத்தை ஒட்டிப் பேசும் கட்சி எத்தனை சிறியதாக இருந்தாலும் அதற்கு வாக்களிப்பதே நியாயமானது. அப்போதுதான் பல்வேறு குரல்கள் ஒலிக்கும் ஒரு வெளியாக தேர்தல் அரங்கம் மாறும். அதுவே ஜனநாயகத்துக்குத் தேவையானது. இனியாவது அதை நோக்கிப் பயணிப்போம்.

Share

அதிமுகவின் ஐந்து வருடங்கள் – தேர்தல் களம் 2016 – தினமலர்

ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்குமான முக்கியமான வேறுபாடுகள் என்று யோசித்துப் பார்த்தால், முடிவெடுப்பதில் உறுதி, வழவழா கொழகொழா இல்லாத அணுகுமுறை, தீவிரவாதம் எவ்வகையில் வந்தாலும் அதை தீவிரமாக எதிர்ப்பது, உறுதியான தலைமை, திறமையான நிர்வாகம், கட்சியை கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பது, எந்த ஒரு சமூகத்தையும் அவமதிக்காதது, ஓட்டரசியல் மற்றும் தாஜா அரசியலில் ஈடுபடாதது ஆகியவற்றைச் சொல்லலாம். இவற்றுக்காகத்தான் கருணாநிதியை விடுத்து ஜெயலலிதாவை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இவற்றைவிட்டால் இவர்களுக்கிடையே பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. சொல்லப்போனால் இவை தவிர இன்னும் சில விஷயங்களில் கருணாநிதியே முன்னிலை பெறுவார் என்பதே உண்மை. ஆனால் இந்த ஐந்தாண்டுகளில் இவை எல்லாம் காணாமல் போயின என்பதே கசப்பான உண்மை.

ஒவ்வொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதும் திமுக ஆட்சியில் அதிருப்தியில் இருக்கும் சாமானியனின் கனவு, ‘இந்தமுறை ஜெயலலிதா மிகச்சிறப்பான ஆட்சி தருவார்’ என்பதாகவே இருக்கும். உண்மையில் ஜெயலலிதா நினைத்திருந்தால் குஜராத்தின் மோதியைவிட மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கமுடியும். அதற்கான அத்தனை வாய்ப்புகளும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் அவருக்கு இருந்தன. ஆனால் இந்த அற்புதம் நிகழவே இல்லை.

ஜெயலலிதா இந்த முறை ஆட்சிக்கு வந்தபோது கடும் மின்வெட்டு நிலவியது. இப்போது அது நிச்சயம் குறைந்திருக்கிறது. ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளில், பத்தாண்டுகளில் தமிழகம் எதிர்கொள்ளத் தேவையான, அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது அரசு கிட்டத்தட்ட முடங்கியே கிடந்தது. அந்த மூன்று நாள்களுக்குப் பிறகு நிவாரணத்திலும், நோய்கள் பரவாமல் தடுப்பதிலும் அரசு சிறப்பாகச் செயல்பட்டது என்பது உண்மைதான். ஆனால் இயற்கைப் பேரிடர் ஒன்றில் தேவையான போது அரசு சிறப்பாகச் செயல்பட்டிருக்கவேண்டும். இதுவரை இல்லாத மழைதான், எதிர்பாராத வெள்ளம்தான், ஆனாலும் அரசு தயாராகவே இருந்திருக்கவேண்டும்.

ஸ்டிக்கர் அரசியல் மக்கள் மனத்தில் ஏற்படுத்தியிருக்கும் வெறுப்பு கலந்த ஏளனத்தை அதிமுகவினரும் தலைமையும் புரிந்துகொண்டதாகக் கூடத் தெரியவில்லை. எதிலும் ஸ்டிக்கர் எங்கும் ஸ்டிக்கர். எங்கும் பேனர் எங்கும் விளம்பரம். பேனரை எல்லாக் கட்சிகளுமே இப்படித்தான் பயன்படுத்துகின்றன என்றாலும் அதிமுக அதீதம். ஓர் அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தவேண்டியது அவசியம்தான். ஆனால் அதுவும் மிதமிஞ்சிப் போனது. அதிலும் குறிப்பாக சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் மதுரை கணேசனின் உடலின்முன்பு ஜெயலலிதாவின் படத்துடன் 10 லட்ச ரூபாய் கொடுத்த வீடியோ கொடுமையின் உச்சம். அரசு சத்தமின்றி பத்து லட்சத்தைக் கொடுத்துவிட்டு அதை அரசு அறிவிப்பில் வெளியிட்டாலே போதுமானது.

இந்த ஆட்சியின் தொடக்கம் முதலே பல்வேறு மிரட்டல்களை அரசு சாமானிய மக்கள் பக்கம் நின்று எதிர்கொள்ளவில்லை. எங்கோ விஷமத்தனமாக எடுக்கப்பட்ட ஒரு படத்துக்கு மௌண்ட் ரோடே ஸ்தம்பித்தது. அரசு இதனை மென்மையாகவே கையாண்டது. அதேபோல் விஸ்வரூபம் திரைப்பட பிரச்சினையில் அரசு நியாயத்தின் பக்கம் நின்று உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சிறுபான்மையினரின் ஓட்டரசியலில் இதுவரை ஈடுபட்டிராத ஜெயலலிதா இந்தமுறை தன் அணுகுமுறையில் கொஞ்சம் தளர்ந்துவிட்டாரோ என்று யோசிக்க வைத்த விஷயங்கள் இவை. ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளரான சோவே, துக்ளக் ஆண்டுவிழாவில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். சோவே குறிப்பிட்டிருக்கிறார் என்னும்போது இப்பிரச்சினையின் தீவிரத்தை ஜெயலலிதா உணரவேண்டும்.

கடந்த ஒன்றரை வருடங்களாக, குறிப்பாக பரப்பன அக்ரஹாரா தீர்ப்புக்குப் பின், ஆட்சி ஸ்தம்பித்துவிட்டது போன்ற ஒரு உணர்வே மேலோங்கியுள்ளது. அதிமுகவினர் தலைமையின் புகழ் பாடுவதை ஒரு பக்கமும், தன்னிச்சையாக செயல்படுவதை இன்னொரு பக்கமும் செய்துகொண்டிருக்கிறார்கள். அம்மா உணவகம், காவிரி நீர்ப் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாடு போன்ற சில நல்ல விஷயங்களைக் கூட இவர்கள் மறக்கடித்துவிடுகிறார்கள். நில அபகரிப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்த, தற்போது நடந்துமுடிந்த மகாமகத்தை சிறப்பாகக் கையாண்டது போன்ற அரசைத்தான் மக்கள் விரும்புகிறார்களே ஒழிய, எதையும் சாகவாசமாக எதிர்கொள்ளும் அரசை அல்ல. கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தைக் கையாண்ட ஜெயலலிதாவைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்களே அன்றி, இப்படியான தலைவராக அல்ல.

கடந்த ஐந்தாண்டுகளில் அதிமுகவினர் எப்போது அதிகம் கேலி செய்யப்பட்டிருக்கிறார்கள், விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால், ஸ்டிக்கர் விஷயம், ஜெயலலிதாவைக் கண்டாலே எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் காலில் விழுந்துவிடுவது, எப்போதும் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் போஸ் கொடுப்பது, தொலைக்காட்சிகளில் எவ்வித ஆழமும் இல்லாமல் மேம்போக்காகப் பேசுவது, மையப்படுத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு – இவை போன்றவைதான். கட்சியை தன் கைக்குள் முழுவதுமாக வைத்திருக்கும் ஜெயலலிதா போன்ற ஒரு தலைவர் இதை ஒரே நாளில், ஆம், ஒரே நாளில் சரி செய்திருக்கமுடியும். ஆனால் அப்படி ஒன்று நிகழவே இல்லை.ஜெயலலிதாவின் வாழ்நாள் சாதனை என்பது தன்னுடைய உறுதியான செயல்பாட்டால் தீவிரவாதத்தையும் ரவுடியிஸத்தையும் கட்டுக்குள் வைத்திருந்ததுதான். இதுதான் அவரது பலம். அந்த உறுதியான செயல்பாட்டில் எவ்வித சுணக்கம் ஏற்பட்டாலும் அது நாட்டுக்கு நல்லதல்ல. அதன் விளைவு தேர்தலில் தெரியும். தெரியவேண்டும். 

Share

விஜய்காந்த் ஒரு தலைவர்தானா – தேர்தல் களம் 2016 – தினமலர்

1996 சமயத்தில் ரஜினி தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும் காப்பாத்தமுடியாது என்று சொல்லியிருந்த நேரம். ஒரு மேடையில் மனோரமா ரஜினியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தலைவர்ர்ர்ர் என்ற அந்த புகழ்பெற்ற வசையின் ஊடாக அவர் சொன்னார், ‘தம்பி விஜய்காந்த். அவர் எந்தக் கட்சிலவேணா இருக்கட்டும். அவரை நான் பாராட்டுகிறேன்’ என்று. அன்று விஜய்காந்த் எந்தக் கட்சியிலும் இல்லை. திமுகவின் ஆதரவாளராகவே அவர் அப்போதெல்லாம் அறியப்பட்டார். பல நலத்திட்ட உதவிகளை தனிப்பட்ட அளவில் மக்களுக்குச் செய்து வந்ததைச் சுட்டியே மனோரமா அப்படிப் பேசினார்.

பின்பு விஜய்காந்த் அரசியலுக்கு வந்து தனிக்கட்சி தொடங்கியபோது அதிமுகவுக்கும் திமுகவுக்கும் ஒரு மாற்றை எதிர்பார்ப்பவர்களின் கருத்தாக மனோரமா சொன்ன கருத்தே இருந்து வந்தது. அவர்கள் விஜய்காந்தை நம்பினார்கள். கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே தன் திரைப்படங்களில் கட்சிக் கொடியைக் காண்பிப்பது, அரசியலுக்கு வருவதுபோன்ற வசனங்கள் என ஆரம்பித்திருந்தார் விஜய்காந்த். 96களில் ரஜினிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஆதரவு அன்று விஜய்காந்துக்கு இல்லை என்பதுதான் உண்மை. எனவே விஜய்காந்த் அரசியலுக்கு வந்தாலும் உடனடியாக அதிமுக மற்றும் திமுகவுக்கு ஒரு மாற்றாக ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவார் என்று யாரும் நம்பவில்லை.

ஆனால் ஒரு மாற்றாக மூன்றாவது கட்சி அளவிலாவது ஒரு கட்சி இருக்கவேண்டும். அப்போதுதான் காலப்போக்கில் வளர்ச்சிகண்டு, அரசியல் வெற்றிடம் உருவாகும்போது அது இரண்டாவது இடத்துக்கோ அல்லது ஆட்சிக்கோ வரமுடியும். இப்படி ஒன்று விஜய்காந்த் விஷயத்தில் நடக்கவே இல்லை.

விஜய்காந்த் அரசியலுக்கு வந்தபோதே அவர் இன்னொரு வைகோவாக்கப்படுவார் என்றே நான் நினைத்தேன். இன்று அவர் செல்லும்பாதை அவரை இன்னொரு வைகோவாக்கும் பாதைதான். பெரிய கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைக்கும் கட்சிகள் எப்போதும் முதலிரண்டு இடத்துக்கு வரமுடியாது. மிகத் தெளிவாகவே பெரிய கட்சிகள் காய் நகர்த்தி தங்களை இப்படி தக்க வைத்துக்கொள்கின்றன. அன்றைய தேவையைக் கருத்தில்கொண்டு நீண்ட காலப் பயனைப் பணையம் வைக்கின்றன சிறிய கட்சிகள். மதிமுக, பாமக வரிசையில் இன்று விஜய்காந்தின் தேமுதிக.

விஜய்காந்தின் ஆளுமை இன்னொரு பிரச்சினை. எம்ஜியார், கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் விஜய்காந்தை வைக்க மக்கள் யோசிக்கும் வண்ணமே அவரது செயல்பாடு உள்ளது. பொதுவில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற நாகரிகம் சிறிதும் இன்றி நாக்கைத் துருத்துவதும் அடிக்க கையோங்குவதுமென அவர் தலைமைப் பண்பில்லாமல் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டே நிற்கிறார்.

திமுக, அதிமுகவை வெறுத்து வேறு மாற்று இப்போதைக்கு தேமுதிக மட்டுமே என்று நினைப்பவர்களே அவருக்கு வாக்களிக்கத் தயாராகிறார்கள். விஜய்காந்த் தன்னை தலைமைப்பண்புள்ள ஒரு தலைவராக நிலைநிறுத்திக்கொண்டிருந்தால் மிகப்பெரிய போட்டியை உருவாக்கியிருக்கமுடியும். தனிப்பட்ட பலவீனம், அதிலிருந்து மீள எடுத்துக்கொள்ளும் முயற்சிகளின் பலனாக உருவாகும் குழப்பங்கள், உடல்நிலை என எல்லாமே விஜய்காந்தை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டன. இன்று விஜய்காந்துக்கு இருக்கும் ஒரே பிடி, ‘ஊழலை எதிர்க்கிறோம்’ என்று சங்கடமில்லாமல் பேசமுடியும் என்பதுதான். அதுவும்கூட அவர் இதுவரை ஆட்சியிலே இல்லை என்ற காரணத்தால்தான்.

ஒரு கூட்டத்தில் என்ன பேசுவது எப்படி பேசுவது என்று எதுவுமே இவருக்குத் தெரிவதில்லை. வெள்ளந்தியான தலைவர் என்று தேமுதிகவினர் சொல்லிப் பார்க்கிறார்கள். வெள்ளந்தித்தனம் என்பது கோமாளித்தனமல்ல. ஒரு யோகா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றபோது அவர் செய்த முகபாவனைகளை என்னவென்று சொல்வது? மெட்ரோ ரயிலைப் பார்வையிட வந்தபோதும் இப்படித்தான். மோடியை சந்தித்துவிட்டு வெளியில் பத்திரிகையாளரிடம் பேச வந்தபோது அவரிடம் எக்குத்தப்பாகக் கேள்விகேட்ட நிருபரை நோக்கி ‘தூக்கி அடிச்சிருவேன்’ என்று சொன்னபோது அங்கிருந்து சத்தம் தெரியாமல் மெல்ல பொன்.ராதாகிருஷ்ணன் நழுவி ஓடியது இன்னும் என் மனச்சித்திரத்தில் அப்படியே உள்ளது.

இப்படி ஒரு தலைவரை மற்ற தலைவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்? பிரேமலதாவுக்கு இருக்கும் அரசியல் புரிதலும் தெளிவும் விஜய்காந்துக்கு இல்லை. இத்தனைக்கும் திரைப்படங்களில் மிகத் தெளிவாக விஜய்காந்த் பேசி நடித்தவர்தான். இப்போதிருக்கும் பிரச்சினைகளில் இருந்து அவர் சீக்கிரமே மீண்டு, பொதுவெளியில் ஒரு தலைவருக்குரிய தகுதிகளை வெளிப்படுத்தவேண்டும். இல்லையென்றால் ஒரு கிண்டலுக்குரிய தலைவராகவே இவர் முன்னிறுத்தப்படுவார்.

இதனையும் மீறி கட்சிகள் இவரிடம் கூட்டணிக்காகத் தொங்கிக் கொண்டிருப்பது, சகித்துக்கொண்டாவது அவரிடம் உள்ள 6% ஓட்டைப் பெற்றுவிடவேண்டும் என்பதற்காகத்தான். 6% ஓட்டு என்பது இன்றைய நிலையில் முதலிரண்டு கட்சிகளின் வெற்றி தோல்வியை அப்படியே மாற்றிப் போடக்கூடியது. எனவேதான் இவரை இன்னும் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். இன்று விஜய்காந்த் திமுக கூட்டணிக்கு ஒப்புக்கொண்டால் இன்னொரு வைகோவாக்கப்படுவார். ஆனால் உடனடிப் பலன் என்ற வகையில் சில இடங்களில் வெல்லமுடியும். ஒப்புக்கொள்ளாவிட்டால் இவரது எதிர்கால அரசியலுக்கு உதவலாம். ஆனால் இப்போது வரவிருக்கும் தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெல்லமுடியாமல் போகலாம். என்ன செய்யப்போகிறார் விஜய்காந்த்? யாருக்கும் தெரியாது. ஏனென்றால் விஜய்காந்துக்கே தெரியாது என்பதுதான் காரணம்.

Share

பாட்டாளி மக்கள் கட்சி – பாதை மாறும் பயணம்

1990கள் வாக்கில் நான் என் அம்மாவுடன் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன். அப்போது ஒரு சில குறிப்பிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் செல்லாது என்று அறிவித்தார்கள். எதோ ஜாதிக் கலவரமாம் என்று என் அம்மா என்னிடம் சொன்னார். எனக்கு அந்த சிறிய வயதில் ஒன்றும் புரியவில்லை. ஆனால், என் கையை இறுகப்பிடித்திருந்த என் அம்மாவிடம் ஒரு பதற்றத்தை மட்டும் உணரமுடிந்தது.

பின்னர் அக்கட்சி பாட்டாளி மக்கள் கட்சியாக வளர்ந்தது. செல்லுமிடமெல்லாம் வெற்றி என்று கொண்டாடினார்கள். திமுக அதிமுக என மாறி மாறி தவம் கிடந்து பாமகவை கூட்டணிக்கு அழைத்தார்கள். பாமக இருக்கும் கூட்டணியே வெற்றிக்கூட்டணி என்று ராமதாஸ் அறிவித்தார். எல்லாம் சட்டென மாறிப்போனது. இரண்டு அடுத்தடுத்த தேர்தல்களில் பாமக இருந்த கூட்டணிகள் தோல்வி கண்டன. பாமக பெரும் தோல்வி கண்டது. பாமக ஒரு தேவையற்ற கட்சி என்பதை மிகவும் தாமதமாக உணர்ந்துகொண்டன தமிழகத்தின் முதன்மைக் கட்சிகள்.

ஆனால் பாமக இங்கேதான் சட்டென சுதாரித்துக்கொண்டது. அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் பாமக தன் கட்சிக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டுவந்தது. அன்புமணி இத்தேர்தலில் முதல்வர் ஆவாரா மாட்டாரா என்பதெல்லாம் ஒரு கேள்வியே இல்லை. ஆனால் தமிழக அரசியலில் எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு வெற்றிடம் தோன்றினால், அன்புமணி தவிர்க்கமுடியாத ஒருவராக இருப்பார். அதற்கான விதையை இன்று பாமக பலமாக ஊன்றியிருக்கிறது.

பாமகவை ஒரு ஜாதிக்கட்சி என்று சொல்லி புறக்கணிக்கமுடியாத அளவுக்கு முக்கியமான சமூகப் பிரச்சினைகளை தொடர்ந்து கையிலெடுத்துப் போராடி வந்திருக்கிறது. அவற்றில் முக்கியமானது மது ஒழிப்பு.

தமிழகத்தில் மது ஆறாக ஓடுவதற்கு அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் காரணம். இவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு, மது ஒழிப்பை நிர்ப்பந்தம் செய்யாத கட்சிகளும் காரணம்தான், பாமக உட்பட. ஆனால் பாமக மது ஒழிப்பை, மற்ற கட்சிகள் போல போலியாக முன்வைக்கவில்லை. அதிலும் கடந்த ஐந்து வருடங்களாக, மது அருந்தாவர்கள் எல்லாம் வரி செலுத்தவேண்டும் என்று ஒரு சட்டம் வந்துவிடுமோ என்று அஞ்சும் அளவுக்கு அதிமுக நடந்துகொண்டு வருகிறது. திமுக இப்போது திடீரென மது ஒழிப்பைக் கையில் எடுத்திருக்கிறது. இதை அரசியல் என்று மட்டுமே பார்க்கமுடியும். பாமகவைப் போல உறுதியான தொடர்ச்சியான நிலைப்பாடாக இதை கொள்ளமுடியாது.

அதேபோல் தொடர்ச்சியாக மாதிரி நிதிநிலை அறிக்கையை பாமக வெளியிட்டு வந்துள்ளது. அரசியலில் இதுபோன்ற ஒன்றை ஒரு கட்சி தொடர்ச்சியாகச் செய்து வருவது முக்கியமானது. அதேபோல் அரசியல் மேடைகளில் அன்புமணி திராவிட பாணியில் வெட்டி வீர முழக்கங்கள் செய்வதில்லை. ஆக்கபூர்வமாகப் பேசுகிறார்.

இப்படி சில நம்பிக்கை தரும் விஷயங்கள் இருந்தாலும், பாமகவைப் பின்னுக்குத் தள்ளுவது, என்ன இருந்தாலும் பாமக ஒரு ஜாதிக்கட்சிதானே என்ற எண்ணம்தான். தலைவர்கள் எதையோ சிந்தித்து பேசிக்கொண்டிருக்க தொண்டர்கள் முன்னெடுக்கும் அரசியல் ஜாதியை சுற்றியே உள்ளது என்பதுதான் காரணம். தமிழ்நாட்டில் நிலவும் ஜாதியப் பிரச்சினைகளில் பாமகவின் பெயரும் அடிக்கடி அடிபடுவதும் இன்னொரு காரணம். என் அம்மா என் கையைப் பிடித்திருந்தபோது அவருக்கு இருந்த பதற்றம், மெல்லிய வடிவில், இது போன்ற செய்திகளைக் கேட்கும் அனைவருக்குள்ளும் பரவுகிறது. இதுவே பாமகவின் ஆகப்பெரிய பலவீனம்.

தங்கள் கொள்கைகளை பரப்ப வேண்டி எந்த எல்லைக்கும் சென்று சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு சவால் விடுப்பது இன்னுமொரு பலவீனம். புகைபிடிக்கும் / மது அருந்தும் காட்சிகள் திரைப்படங்களில் வரக்கூடாது என்பது நல்ல எண்ணம்தான். ஆனால் அப்படி வரும் திரைப்படங்களை அச்சுறுத்தல்மூலம் முடக்கப் பார்ப்பது தவறான வழி.

பாபா திரைப்படம் வந்தபோது இப்படித்தான் பாமக ரஜினியை எதிர்கொண்டது. அப்போது பாமக உள்ள கூட்டணியே வெல்லும் என்ற மாயை நிலவியதால் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் பெரிய அளவில் பாமகவைக் கண்டிக்கவில்லை. என்றென்றும் புன்னகை என்றொரு திரைப்படம் வந்தது. படம் முழுக்க குடிக்காட்சிகள்தான். இதை தயாரித்தவர் பாமகவைச் சேர்ந்த ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம். தமிழ்க்குமரன். இதை எதிர்த்து பாமக எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை. இது ஒரு பெரிய சறுக்கல் அல்லவா? 

இதுபோன்ற விஷயங்களில் பாமக சட்ட ரீதியான அமைதியான போராட்டங்களின் மூலம் மக்களின் மனத்தை மாற்றும் செயல்களில்தான் ஈடுபடவேண்டும். அச்சுறுத்தல்மூலம் பிரச்சினையை அடக்க நினைக்கக்கூடாது. அப்போதுதான் மேடைதோறும் ஆக்கபூர்வமான அரசியலை முன்வைக்கப் போராடி வரும் அன்புமணியின் செயல்பாட்டுக்கு நியாயம் கற்பிக்கமுடியும். இல்லையென்றால் படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்றாகிவிடும்.

அதேபோல் சொன்ன வாக்கைக் காப்பாற்றுவதிலும் பாமக கவனம் கொள்ளவேண்டும். இனி திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு, அதிமுக மற்றும் திமுகவுடன் அவர் கூட்டணி வைத்திருக்கிறார். இனி அப்படி நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லை என்றால், பாமகவின் மீது இருக்கும் கொஞ்சநஞ்சம் நம்பிக்கையும் போய்விடும்.

இதைவிட முக்கியம், இத்தனை ஆக்கபூர்வ அரசியல், மது ஒழிப்புப் போராட்டம் ஆகியவற்றுக்குப் பின்னரும் தொடரும் ஜாதிய அரசியல் என்ற முத்திரையை முற்றிலும் ஒழிக்க, செய்யவேண்டிய சமூகக் கடமைகள் என்ன என்பதை யோசித்து அவற்றைச் செயல்படுத்துவது. இல்லையென்றால் பாமக இப்படியே ஓட்டைப் பிரிக்க அல்லது முதன்மைக் கட்சிகளை ஆட்சியில் அமர்த்த உதவும் ஒரு கட்சியாகவே நிலைபெற்றுவிடும். ஜாதிக் கட்சி முத்திரையுடன் தொடர்ந்து செயல்பட்டு இப்படியே இருப்பதா அல்லது திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பொதுவான கட்சியாக வளர்வதா என்பதே இப்போது பாமக முன் உள்ள கேள்வி. இரண்டில் எது நடந்தாலும் தமிழ்நாட்டுக்கு நல்லதுதான்.

Share

மக்கள் நலக்கூட்டணி

ஊரில் சொல்வார்கள், சும்மா இருந்த நான்கு பேர் சேர்ந்து ஒரு மடம் கட்டிய கதையை. மக்கள் நலக்கூட்டணியை இக்கதையுடன் நேரடியாக ஒப்பிட முடியாது என்றாலும், ஒருவாறு இப்படிச் சொன்னாலும் தவறில்லை. இவர்கள் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்று சொல்லும்போது, நிச்சயம் இக்கதையுடனே இவர்களை ஒப்பிடமுடியும். ஆனால் இக்கூட்டணியில் உள்ள நான்கு கட்சிகளும் சும்மா இருக்கும் தலைவர்கள் அல்ல என்பது உண்மைதான். இவர்களுக்கென்று தெளிவான கொள்கைகள் உள்ளன. ஒருவருக்கொருவர் கொள்கைகளில் வேறுபட்டாலும், அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்று என்ற வகையில் ஒரு கூட்டணியின் கீழ் ஒன்றுபடுகிறார்கள்.

கம்யூனிஸ்ட்டுகளும், மதிமுகவும், திருமாவளவனும் இணையும் புள்ளி, அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்று என்றாலும், இவர்கள் இணையும் மற்றொரு புள்ளி என, முற்போக்காளர்கள் என்பதைச் சொல்லாம். பொதுவாக அடிப்படைவாதத்துக்கு எதிராகவே முற்போக்கு என்பது உருவாகி வந்திருந்தாலும், புழக்கத்தில் முற்போக்கு என்ற வார்த்தைக்கு அதற்குரிய பொருள் இல்லாமலேயே போய்விட்டது. இன்றைய நடைமுறையில் இந்த முற்போக்கு என்பது, ஹிந்து எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, சிறுபான்மை ஓட்டரசியல், மறைமுக/நேரடி பயங்கரவாத ஆதரவு என்பவற்றின் கலவையாகவே ஆகிவிட்டது.

ஊழலை விட்டுவிட்டு, இன்று இந்தியாவை உலுக்கும் பிரச்சினைகள் எவை என எடுத்துக்கொண்டு அவற்றின் பின்னணியை ஆராய்ந்தால், அங்கே எல்லாம் முற்போக்காளர்களின் பங்களிப்பு இருப்பதைப் பார்க்கலாம். நேரடியாகவோ மறைமுகமாகவே இந்திய தேசியமும், ஹிந்து மதமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாதவைப் பார்க்கலாம். மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்தப் புள்ளியில் மிகக் கச்சிதமாக ஒன்றிணைகிறார்கள். இந்த மக்கள் நலக்கூட்டணிக்கு முன்பு இவர்கள் ஒரு கூட்டியக்கமாக இருந்தபோது ஜவாஹிருல்லாவும் இக்கூட்டியக்கத்தில் இருந்தார் என்பது முக்கியமான தகவல்.

அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்று என்று சொல்லும் கட்சிகள், இதற்கு முன்பு தொடர்ச்சியாக மாறி மாறி அதிமுக மற்றும் திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். மாறி மாறி அதிமுகவையும் திமுகவையும் ஊழல் கட்சிகள் என்று திட்டித் தீர்த்திருக்கிறார்கள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஏதோ ஒரு ஊழல் கட்சிக்குத் துணையாக இருந்துவிட்டு, அந்த ஊழல் கட்சிகள் ஆட்சிக்கு வர உறுதுணையாக நின்றுவிட்டு, இன்று அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மாற்று என்கிறார்கள். இவர்களின் நம்பகத்தன்மை இங்கேயே முடிந்துபோய்விடுகிறது.

இதிலுள்ள இன்னொரு குழப்பம், இந்தத் தேர்தல் முடியும்வரையிலாவது இவர்களது உறுதி நிலைக்குமா என்பதுதான். உண்மையில் மக்கள் நலக்கூட்டணி உருவானபோது, ஒரு கூட்டணியாக திமுகவுடன் தொகுதி பேரம் பேசுவார்கள் என்றே நான் நினைத்தேன். இன்னும் சிலர் இவர்கள் அதிமுக வெல்லவேண்டும் என்ற நோக்கிலேயே இக்கூட்டணியைத் தொடங்கியிருக்கிறார்கள் என்றார்கள். விடுதலைச் சிறுத்தைகள் அதிமுக வெல்லட்டும் என நினைக்குமென்று நான் நம்பவில்லை. இப்போதும் நம்பவில்லை. ஆனால் நான் எதிர்பார்த்ததுபோல் இவர்கள் திமுகவுடனும் கூட்டணி வைக்கவில்லை.

மதவாதக் கட்சியுடன்  கூட்டணி கிடையாது என்றும் இவர்கள் பேசுகிறார்கள். ஆனால் வைகோ ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணியில் இருந்தவர். இனிமேல் அவர் பாஜக பக்கம் போகவே மாட்டார் என்பதற்கும் எவ்வித உறுதியும் கிடையாது. இவர்கள் தவம் கிடந்து அழைத்த விஜய்காந்தும் பாஜகவுடன் கூட்டணி வைத்தவர்தான்.

அப்படியானால் இக்கட்சிகளின் உறுதியான நிலைப்பாடுதான் என்ன? ஒன்றுமில்லை. இவர்கள் ஒரு மூன்றாவது அணியை உருவாக்கப் பார்க்கிறார்கள். ஏற்கெனவே மூன்றாவது கட்சி என்றளவில் தேமுதிக இருக்கும்போது, இது நான்காவது அணியாகவே இருக்கமுடியும். பல்வேறு நிலைப்பாடுகள், பல்வேறு நோக்கங்கள் உள்ள கட்சிகள் இணைந்து ஒரு தேர்தலை சந்திப்பதே கடினம் என்ற நிலையில், இவர்களின் கூட்டணி என்று வேண்டுமானாலும் உடைந்துபோகலாம். இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த கூட்டணியான பாஜக-மதிமுக-தேமுதிக-பாமக இன்று இல்லை. இதுவேதான் மக்கள் நலக்கூட்டணிக்கு நேரும் நிலையாகவும் இருக்கப்போகிறது.

நடக்கப்போது சட்டமன்றத் தேர்தலில் இக்கூட்டணியின் பலம் என்பது என்னவாக இருக்கும்? இவர்கள் ஒரு இடத்தில் கூட வெல்லமுடியாது என்றே நான் நினைக்கிறேன். அதிமுக-திமுகவுக்கு மாற்று தேவை என்ற எண்ணம் பெரும்பாலானவர்களிடையே இருக்கிறது உண்மைதான். ஆனால் அது மூன்றாவதாக ஒரு மாற்றுக் கட்சியைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு முழுமையான வடிவம் பெறவில்லை. காரணம், மக்களைக் கவர்ந்திழுக்கும் தலைமை ஒன்று உருவாகிவரவில்லை. எனவே மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்கெல்லாம் கொஞ்சம் காலூன்றி உள்ளதோ அங்கெல்லாம் வாக்கைப் பிரிக்கும் ஒரு கூட்டணியாக மட்டுமே செயல்படும். அதை மீறி இத்தேர்தலில் இவர்களது பங்களிப்பு என வேறொன்றும் இருக்காது.

தேர்தல் முடிந்ததும் எத்தனை தொகுதிகளில் மக்கள் நலக்கூட்டணியால் அதிமுக தோற்று திமுக வென்றது என்றும், திமுக தோற்று அதிமுக வென்றது என்றும் ஆய்வு செய்ய இக்கூட்டணி உதவலாம். இது ஒரு சுவாரயஸ்மான ஆய்வாக இருக்கும். பொழுது போகும். மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளுக்கும் இப்படித்தான், பொழுது போகிறது.

Share

மீண்டும் ஏன் திமுக தேவையில்லை – தேர்தல் களம் 2016 – தினமலர்

மீண்டும் ஏன் திமுக தேவையில்லை!

ஆளுங்கட்சிக்கு இயல்பாகவே எழும் எதிர்ப்பை எல்லா எதிர்க்கட்சிகளுமே தனது ஓட்டுக்களாகப் பார்க்கத்தான் செய்யும். ஜெயலலிதாவின் கடந்த ஐந்து வருட ஆட்சியில் மக்களுக்கு இன்னல்கள் பல ஏற்பட்டிருப்பதாக நம்பும் திமுக, அந்த வெறுப்பை தனது வெற்றிக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது. எதிர்க்கட்சி என்ற தகுதி இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய இரண்டாவது கட்சி திமுகதான். எனவே அதிமுகவுக்கு யதார்த்தமான மாற்று என்று பலரும் திமுகவைக் கருதும் வாய்ப்பு உள்ளது. இதை எவ்விதத்திலும் தவறவிட்டுவிடக்கூடாது என்பதகாவே திமுகவின் காய்-நகர்த்தல்கள் உள்ளன.

ஆனால், திமுகவின் 2006-2011 வரையிலான ஆட்சிக்காலத்தின் வெறுப்பை மக்கள் முற்றிலும் மறந்துவிடவில்லை. அதிமுகவின் மீதான சில கோபங்கள் இருந்தாலும், அந்த எதிர்ப்பு ஓட்டுக்கள் அப்படியே திமுகவுக்குப் போய்விடும் என்று நம்புவதற்கான எந்தச் சூழலும் இங்கே நிலவவில்லை.

திமுகவின் ஆட்சிகாலத்தில் நிலவிய கொடூரமான மின்வெட்டை நினைத்துப் பார்த்தாலே இப்போதும் வேர்க்கிறது. ஜெயலலிதா எப்படி அதைக் கையாண்டார், அதனால் அரசுக்கு ஏற்படும் செலவுகள் என்ன என்ன என்பதெல்லாம் கடைக்கோடி வாக்காளருக்கு ஒரு பொருட்டே இல்லை. இந்த ஐந்தாண்டுகாலத்தில் மின்வெட்டு மிகவும் குறைந்துவிட்டது என்ற ஒரு வரி உண்மை மட்டுமே அவர்களுக்கு முக்கியமானது.

அதேபோல் திமுக ஆட்சியில் ஐந்தாண்டுகளில் நிலவிய நில அபகரிப்பு இப்போதும் மக்களால் மிரட்சியோடுதான் பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் ஆட்சியில் அமைச்சர்களுக்குக் கூட அதிகாரமில்லை என்பது ஒரு பக்கம் என்றால், கருணாநிதியின் ஆட்சியில் ஒவ்வொரு கவுன்சிலருக்கும் அதீத அதிகாரம் வந்துவிடும் என்பது இன்னொரு பக்கமாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் மிரட்டல்களையும் நினைத்துப் பார்த்தால், தன்னிச்சையாகச் செயல்படாத அதிமுகவின் அமைச்சர்களே பரவாயில்லை என்ற எண்ணம் மக்களுக்குத் தோன்றிவிடுகிறது.

இன்று திமுக ‘ஊழலற்ற ஆட்சி’ என்பதைச் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால் திமுகவின் அமைச்சர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது நடந்ததாகச் சொல்லப்பட்ட ஊழல்களை மறந்துவிடமுடியாது. இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்கே முடிவு கட்டிய 2ஜி ஊழலில் இன்றளவும் திமுகவின் பங்கு பற்றிய வழக்கு முடிவுக்கு வந்துவிடவில்லை. இந்தியாவையே உலுக்கிய ஒரு வழக்கின் முக்கியக் குற்றவாளியாக திமுகவே உள்ளது.

இரண்டாண்டுகளுக்கு முன்பு ஈழப்பிரச்சினையைக் காரணம் காட்டி காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகிய திமுக, மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது. ஒரு கட்சி ஏற்கெனவே கூட்டணி வைத்து விலகிய கட்சியுடன் மீண்டும் கூட்டணி வைப்பது புதியதில்ல. ஆனால் இந்த இரண்டாண்டுகளில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை என்னும்போது இதைப் பொருந்தாக் கூட்டணி என்றோ நிர்ப்பந்தக் கூட்டணி என்றோதான் பார்க்கவேண்டியுள்ளது. இந்த நிர்ப்பந்தம் எதன் மூலம் வந்தது என்பதையும் யோசிக்கவேண்டும்.

அரசியலில் வாரிசுகள் ஆட்சிக்கு வருவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். கிட்டத்தட்ட எக்கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. என் வாரிசு அரசியலுக்கு வராது என்று சூளுரைத்தவரின் மகன் இன்று முதல்வர் வேட்பாளராகவே அக்கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். ஆனால் திமுகவில் வாரிசு அரசியல் பெரிய அளவில் பரிணாம வளர்ச்சி பெற்று ஒட்டுமொத்த குடும்பமும் கட்சியைக் கைப்பற்றியுள்ளது. எனவே திமுகவின் வாரிசு அரசியல் குடும்ப அரசியலாகிப் போயிருக்கிறது.

கருணாநிதிக்கு 92 வயது ஆகிறது. இன்றும் அவரே திமுகவின் முதல்வர் வேட்பாளர். கடந்த மைனாரிட்டி ஆட்சியின்போதே அவர் ஸ்டாலினை முதல்வராக்கியிருக்கவேண்டும். அப்போது இவர்கள் தயவில்தான் காங்கிரஸ் ஆட்சி மத்தியில் நடந்துகொண்டிருந்தது. எனவே இம்முடிவுக்கு காங்கிரஸ் எந்த வகையிலும் எதிர்ப்பு தெரிவித்திருக்காது. ஆனால் அந்த நல்ல சந்தர்ப்பத்தை கருணாநிதி தான் முதல்வராக இருக்கவே பயன்படுத்திக்கொண்டார். இதனால் இன்றளவும் ஸ்டாலின் முதல்வர் பட்டியலுக்கு வரவே இல்லை. ஸ்டாலின் முதல்வர் என்றால் திமுகவை மக்கள் ஓரளவு நம்ப வாய்ப்பிருக்கிறது. காரணம், ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாமே என்று நடுநிலை வாக்காளர்கள் எண்ணக்கூடும்.

திமுகவின் இன்னொரு முக்கியமான பிரச்சினை, ஒரு குறிப்பிட்ட ஜாதியை, நாட்டின் பெரும்பான்மையான மதத்தை எப்போதும் தூஷித்துக்கொண்டே இருப்பது. ஒரு முதல்வர் இப்படி ஒரு குறிப்பிட்ட ஜாதி/மதம் மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிக்காட்டிக்கொண்டே இருப்பதுதான் திராவிட அரசியலின் முக்கியமான பிரச்சினை. நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு அம்மக்களின் பண்டிகையின் போது வாழ்த்து சொல்லாமலிருப்பதும், ஓட்டரசியலுக்காகவும் பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தவேண்டும் என்பதற்காகவும் வேண்டுமென்றே சிறுபான்மை விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதுமென திமுக என்றுமே மக்களை ஜாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரித்து வைக்கவே விரும்பியிருக்கிறது. இப்படி மக்களைப் பிரிக்க நினைக்கும் ஒரு தலைவரை எக்காரணம் கொண்டும் மீண்டும் முதல்வராக்கவேண்டிய அவசியமோ அவசரமோ அத்தனை மோசமான நிலையோ தமிழகத்துக்கு இப்போதைக்கு வந்துவிடவில்லை.

இதைப் புரிந்துகொண்டுதான் ஸ்டாலின் வேறு ஒரு கண்ணோட்டத்தை முன்வைக்கப் பார்க்கிறார். ஆனால் அது அவரது வீட்டுக்குள்ளே தடுக்கப்பட்டு விடுகிறது. காலமாற்றத்துக்கேற்ப மாறி, இளைஞர்கள் கையில் கட்சியை ஒப்படைத்துவிட்டு, வெறுப்பு அரசியலைக் கைவிட்டு, ஊழல்வாதிகளை வெளியேற்றி, புது ரத்தம் பாய்ச்சாத வரை திமுகவைத் தேர்ந்தெடுக்கவேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை என்பதை திமுக உணரவேண்டிய தருணம் இது.

Share

காதலும் கடந்து போகும்

காதலும் கடந்து போகும் படம் பார்த்தேன். சிறு குறிப்பாவது எழுதி வைக்கவில்லையென்றால் பெரிய பாவம். நேற்று முழுவதும் இப்படத்தின் நினைவுதான். சில படங்கள் ஏனென்று தெரியாமல் மிகவும் நமக்குப் பிடித்துப்போய்விடும். அப்படி ஒரு படம் இது.

பாலுமகேந்திராவின் நவீனமான ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் ஓர் உணர்வு. கொஞ்சம் லாஜிக்கையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு எவ்வித அழுத்தமும் இன்றி படத்தைப் பார்க்கமுடிந்தால் நிச்சயம் உங்களுக்குப் பிடித்துப் போகும். இப்படி எல்லாராலும் பார்க்கமுடியாது என்பதுதான் மைனஸ் பாயிண்ட்.

அநியாயத்துக்கு மெல்ல போகிறது படம். கதை என்று எதுவும் கிடையாது. மெல்ல மெல்ல உருவாகி வரும் நட்பு காதலாகி கடைசியில் எப்படி முடிகிறது என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை. விஜய் சேதுபதியும் மடோனாவும் படத்தின் உயிர். இவர்கள் இருவர் மட்டும்தான் படம் முழுக்க. படத்தை எங்கேயோ கொண்டுபோய்விட்டார்கள். அட்டகாசமான தரமான நடிப்பு. மடோனாவை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று பார்த்தால், ப்ரேமம் படத்தில் வரும் நடிகை! இன்னும் பிடித்துப் போய்விட்டது. இவருக்காகவே இன்னொரு முறை பார்க்கலாம். தொடர்ச்சியாக திறமையான அழகான நடிகைகளின் படங்களைப் பார்க்கிறேன். மடோனா, இறுதிச் சுற்று ரித்திகா சிங்.

விஜய் சேதுபதி சென்னை வட்டார வழக்கையே எல்லா படங்களிலும் தொடர்ந்து பேசி ஒரு எரிச்சலை வரவைத்து விட்டார். இந்தப் படத்திலும் தொடக்கத்தில் அப்படித்தான் இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல நம்மை இழுத்துக்கொண்டு விட்டார். இடைவேளைக்குப் பிறகு அவரது நடிப்பு இன்னொரு லெவல்.

பின்னணி இசை பிரமாதம். ஆனால் பாடல்கள் என்ற பெயரில் வசனத்தையே அதுவும் எல்லாப் படங்களில் ஒரே ராகத்தில் இழுத்து இழுத்துப் பேசுவதையே செய்துகொண்டிருக்கிறார் சந்தோஷ் நாராயண். உன் பேர் ஊர் என்ன என்றால் வசனம். ஊஊஊன்ன்ன்ன்ன் பேஏஏஏர்ர்ர்ர்ர் ஊஊஊஊஊர்ர்ர்ர்ர் என்ன்ன்ன்ன்னா என்றால் பாடல் என்பது அநியாயம். அதுவும் ஒரே ராக இழுவையில்.

இதெல்லாம் போக இன்னொரு அட்டகாசமான நடிப்பு – விஜய் சேதுபதியுடனே வரும் ஒருவரின் நடிப்பு. (அவர் பெயர் மணிகண்டன் போல.) மிகச் சில காட்சிகள்தான். ஆனால் அப்படி ஒரு யதார்த்தம். அதுவும் க்ளைமாக்ஸில் விஜய் சேதுபதி கலக்குகிறார் என்றால் இந்த நடிகர் ஒரு பங்கு மேலே போய்விட்டார். இவரைப் போன்ற நடிகர்களைப் பார்த்து பிடித்து இயக்குநர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நான் இப்பதிவை எழுதுவதே இந்நடிகரைப் பாராட்டத்தான்.

எதிர்பாராமல் மறக்கமுடியாத ஒரு படம். நிறைய லாஜிக் பிரச்சினைகள், கேள்விகள் உண்டு. ஆனாலும் படம் ஒரு தென்றல் போல வருடிச் செல்கிறது. க்ளைமாக்ஸ் பதற்றத்தையும் பரிதாபத்தையும் கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட மூன்றாம் பிறையின் க்ளைமாக்ஸ் அளவுக்கு.

வாழ்த்துகள் நலன் குமாரசாமி. ஆனால் இப்பாதை உங்களுக்கு வேண்டாம். தமிழ்நாட்டில் இப்படி நாலு படம் எடுத்தால் உங்களால் வெற்றி இயக்குநராக வலம்வரமுடியாது. ஏனென்றால் வெல்லும் இயக்குநர்களுக்குத்தான் ஒரு மரியாதை. எனவே சூது கவ்வும் போலவோ மற்ற புது இயக்குநர்களின் ஜிகர்தண்டா, பிசாசு, மெட்ராஸ் போலவோ முயற்சி செய்யவும். நல்ல வெல்லக்கூடிய ஒரு படம். அதுவே பாதுகாப்பானது.

Share

வீர சிவாஜி

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘வீர சிவாஜி’ புத்தகத்தைப் படித்தேன். 104 பக்கங்களே உள்ள, இரண்டு மணி நேரத்தில் படித்து முடிக்க இயலும் மிகச் சிறிய புத்தகம். சிவாஜியைப் பற்றிய கதைகள் பலவற்றை நாம் சிறு வயதில் இருந்தே படித்திருப்போம். அதில் எவற்றுக்கு ஆதாரம் உண்டு எவற்றுக்கு இல்லை என்பதே இன்றுவரை நமக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கதைகள் தரும் சுவாரஸ்யமும் சிவாஜிக்கு அவை கொண்டு வரும் ஒரு பிம்பமும் அசாதாரணமானது. இத்தனை கதைகளும் பல ஆதாரத்துடன் கூடிய நிகழ்வுகளும் உள்ள ஒரு முக்கியமான அரசனைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை ஏன் இத்தனை சிறிய புத்தகமாக நூலாசிரியர் கே.ஜி.ஜவர்லால் எழுதியிருக்கிறார் என்பதை விளங்கிக்கொள்ளமுடியவில்லை.

HQ-TCgAAQBAJ

இப்புத்தகத்தின் முக்கியத்துவ என்பது – மிக முக்கியமான தகவல்கள் பலவற்றை மிகச் சுருக்கமாகச் சொல்கிறது. சிவாஜியின் அப்பா தாத்தா காலத்தில் உள்ள முக்கியமான நடைமுறைகள், அன்று இருந்த நிலப்பகுதியைப் பற்றிய முக்கியமான விளக்கங்கள், அதோடு தொடர்புடைய சிவாஜியின் நிகழ்வுகள், சுல்தான்கள்-முகலாயர்களுக்கு இடையே இருந்த பிரச்சினைகள், இவற்றை சிவாஜி கையாண்டவிதம் என எல்லாமே தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவையெல்லாம் மிக வேகமாக, இன்றிரவே இக்கதையைச் சொல்லி முடிக்கவேண்டும் என்ற வேகத்தில் சொல்வது போன்ற ஒரு தோற்றத்தில் சொல்லப்பட்டுள்ளன. இன்னும் கொஞ்சம் நிதானமாக விளக்கமாக எழுதி இருந்தால் இப்புத்தகம் இன்னும் முக்கியமானதாக ஆகியிருக்கும்.

சிவாஜி ராம்தாஸ் உறவு, சிவாஜி அப்சலைக் கொன்ற விதம், சிவாஜி முகலாயர்களின் சிறையில் இருந்து தப்பிப்பது, சிவாஜியின் கோட்டையிலிருந்து தன் மகனுக்கு உணவளிக்க தப்பித்த ஒரு தாய், துண்டாகிப் பறக்கும் சாயிஷ்டா கானின் கட்டைவிரல் எனப் பல்வேறு கதைகள் இப்புத்தகத்தில் உள்ளன. இவையெல்லாம் நம் சிறுவயது நினைவுகளைக் கிளறுகின்றன. பல இடங்களில் இக்கதைகளுக்கான மாற்று ஏதேனும் இருந்தால் அதையும் பதிவு செய்கிறார் ஆசிரியர். இந்த வகையில் சிறுவர்களுக்கான மிக முக்கியமான நூலாக இதைச் சொல்லலாம். இந்த விடுமுறையில் இதை என் மகனிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லப் போகிறேன். ‘சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்’ என்ற புத்தகத்தை சிறுவயதில் படித்த நண்பர் ஒருவர் இப்போதும் அதைப் பற்றிப் பெருமையாகச் சொல்வதை நினைவுகூர்கிறேன். உண்மையில் அது முக்கியமான புத்தகமே. ஒருவித மயிர்க்கூச்செறியும் நடையில் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும் பல்வேறு தகவல்கள் அதில் உண்டு. அதேபோன்ற ஒரு புத்தகம் இது.

இப்புத்தகத்தில் சொல்லாமல் விடப்பட்ட, சொல்லி ஆதாரம் இல்லாத விஷயங்கள் என்று முக்கியமாக நான் கருதுபவை மட்டுமே இங்கே.

* அப்சல் கானைக் கொல்ல உதவி புரிந்தவர் ஒரு பிராமணர் என்று ஒரு தியரி உண்டு. அவர் சிவாஜியிடம் தூதாக வந்ததாகவும், சிவாஜி பாரத உணர்வை பாரத மேன்மையை எடுத்துச் சொல்லி அவரை மாற்றியதாகவும் ஒரு பார்வை உண்டு. அதைப் பற்றிய குறிப்பு இப்புத்தகத்தில் இல்லை.

* சிவாஜியின் முடிசூட்டு விழாவுக்கு மறுத்த பிராமணர்கள் பற்றிய குறிப்பு இல்லை. ஒருவேளை, இவற்றுக்கு ஆதாரம் இல்லை என்று ஆசிரியர் நினைத்தால், மற்ற விவரங்களை குறிப்பிடுவதுபோல இவற்றைக் குறிப்பிட்டுவிட்டு இவற்றுக்கான ஆதாரம் இல்லை என்றாவது சொல்லி இருக்கலாம்.

* அப்சல் கான் கொன்ற தன் 64 மனைவியர் பற்றிய குறிப்பு இல்லை.

* 84ம் பக்கத்தில் இப்படி ஒரு பத்தி வருகிறது. “என்னதான் இந்து மதத்துக்காகப் போராடினாலும் சிவாஜி காலத்து செக்யூலரிஸமும் இப்போது போலத்தான் இருந்தது. ஒரு முஸ்லிம், ஒரு இந்துவிடம் தவறாக நடந்துகொண்டால் அவருக்கு நீதித்துறை தண்டனை தரக்கூடாது என்று சட்டமே போட்டிருந்தாராம்.”

மேலே உள்ள பத்தியில் உள்ள முதல் வரி சற்றேறக்குறைய உண்மையே. இதற்கான ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன. ஆனாலும் அதை இக்காலத்து போலி செக்யூலரிசத்துடன் ஒப்பிடமுடியாது. உண்மையான ஹிந்து ராஜ்ஜியம் என்பது முஸ்லிம்களையும் உள்ளடக்கியது என்ற சிவாஜியின் நினைப்பே இதற்குக் காரணமாக இருந்திருக்கவேண்டும். ஹிந்து வேல்யூ என்பதை சிவாஜி பல இடங்களில் மெய்ப்பிக்கிறார். குறிப்பாக போரில் கைது செய்யப்படும் இஸ்லாமியப் பெண்களை அவர் கண்ணியமாக நடத்திய விதம் தொடர்பாக ஏகப்பட்ட ஆதாரங்கள் உள்ளன. அவை இந்நூலிலும் தரப்பட்டுள்ளன. எனவே சிவாஜியின் நடத்தையை இக்காலத்து செக்யூலரிஸத்துடன் ஒப்பிடமுடியாது. அது உண்மையான செக்யூலரிஸம்.

இதைவிட முக்கியமானது அடுத்த வரிகள். ஒரு முஸ்லிம் இந்துவிடம் தவறாக நடந்துகொண்டால் அதற்கு தண்டனை தரக்கூடாது என்பது நிச்சயம் இக்கால போலி செக்யூலரிஸம்தான். ஆனால் இப்படி சிவாஜி சொன்னதற்கான ஆதாரம் இந்நூலில் தரப்படவில்லை. அதற்கான ஆதாரத்தை நூலாசிரியர் வழங்கியிருக்கவேண்டும். இது மிகத் தெளிவாக சட்டமாகச் சொல்லப்பட்டதா, அல்லது சிவாஜி வேறு யாருக்கேனும் எழுதிய கடிதத்தில் இருந்து ஊகித்து அறியப்பட்டதா என்பதைப் புரிந்துகொள்ளாமல் இதை மேலும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது. இந்நூலின் மிகப்பெரிய சறுக்கல் என்று நான் நினைப்பது, இவ்வரிகளுக்கான ஆதாரங்கள் தரப்படாததையே.

இந்நூலின் இன்னொரு குறை – வரலாற்று சம்பவங்களை நாவல் பாணியில் உரையாடலாகச் சொல்வது. பெரும்பாலும் இது இந்நூலில் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். ஆனாலும் சில இடங்களில் இப்படி வருவது இப்புத்தகத்தின் நம்பகத்தன்மையையும் சீரியஸ்நெஸ்ஸையும் கடுமையாகக் குறைக்கிறது. அல்லது இப்படி பேசியதற்கான நேரடி தன்குறிப்பு ஆதாரங்கள் இருந்தால் அதைக் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் விவரணைகளாக மட்டுமே இவற்றைச் சொல்லவேண்டும். அதேபோல் தேவையற்ற உதாரணங்கள், அதிலும் குறிப்பாக நடிகர் நடிகைகள் அல்லது தற்கால நிகழ்வுகளோடு இணைவைத்துச் சொல்லப்படும் உதாரணங்கள் போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும் அல்லது மிகக் கவனமாகக் கையாளவேண்டும். இவை ஒன்றிரண்டு இடங்களில்தான் வருகின்றன என்றாலும் இதில் கவனம் கொள்வது அவசியமானது.

மற்றபடி வீர சிவாஜியைப் பற்றித் தெரிந்துகொள்ள உருப்படியான முக்கியமான நூலாகவே இதைக் கருதுகிறேன்.

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9789351351726.html

இபுத்தகம் வாங்க: கூகிள் புக்ஸ்

Share