நான்கு கவிதைகள்

முற்று

நண்ப
உன் நீண்ட கடிதம்
என் முரண்களில்
நீ கொள்ளும் கோபம்,
என்னைப் பற்றி
நான் படிப்பது
சலிப்பானது என்றாலும்
வாய் பிளந்து நிற்கும்
முதலையை மிதிக்காமல்
இருக்க முடிந்திடுவதில்லை
நீண்ட வரிகளுக்குள்
சிக்கி மீளும்போது
கொலை பற்றிய எண்ணமும்
தற்கொலை பற்றிய எண்ணமும்.
என் கூடாரத்தின்
மூடிய போர்வையை
இழுத்துப் பார்க்காமல்
இருந்திருக்கலாம்.
என் ரசனை,
தேவையற்ற இடமொன்றில்
நீ வைத்திருந்த முற்றுப்புள்ளி.

முளை

நிழலின்றி நடக்கும்
மிருகமொன்றின்
கழுத்தைத் திருகத் திருக
பெரிதாகும் உடலும்
புதைத்து வைத்த
கோபக் குழியிலிருந்து
வெளி நீட்டித் தெரியும்
முள்மரத்தின் முளையொன்றும்
வாலாட்டித் திரிய
எள்ளல் சிரிப்போடு
கவிகிறது அன்றைய இரவு
தொடர்கனவின் காத்திருப்போடு.

என் மீது நிகழும் வன்முறை

யாருக்காகவோ
ஒலித்துக்கொண்டிருந்த
வானொலியிலிருந்து
சன்னதம் கொண்ட தேவதை
வெட்டியெடுத்த கையொன்றை
கையில் ஏந்தி
கண்கள் சிவக்க
தொட்டு எழுப்பினாள்
அதிகாலை
என் மீது இறங்கியது
வழியெங்கும்
ரத்தத் துளிகள்
சிதறிக் கிடக்க

வீட்டின் பாடல்

வனத்தைத் தொலைத்த
வீட்டிலிருந்து
வெளியேறிபடி இருக்கிறது
வீட்டின் பாடல்
சதா கேவல்களாகவும்
சீற்றங்களாகவும்
இரவுகளில்
வீடெங்கும் சன்னதம்
கொண்டலையும் மிருகமொன்று
பகலில் பறவையாகி
சாலைகளில் நத்தையாக
ஒடுங்கும்போது
வீட்டின் பாடலில்
உச்சம் கொள்கிறது
விலங்குகளின் பறவைகளின்
பூச்சிகளின் சேர்ந்திசை.

மேலே உள்ள கவிதைகள் ‘மணல் வீடு’ செப்-அக் 2008 இதழில் வெளியானவை. நன்றி: மணல் வீடு.

Share

Comments Closed