Tag Archive for புத்தகம்

Confession of a death row convict

கிட்டத்தட்ட மூன்று நாள்களில் 700 பக்கம் உள்ள தூக்கு செல்வம் எழுதிய ‘தூக்குக் கைதியின் வாக்குமூலம்’ என்ற புத்தகத்தைப் படித்து முடித்தேன். இத்தனை விரிவான குற்றப் பின்னணியையும் சிறை வாழ்க்கையும் இவ்வளவு விறுவிறுப்பாகச் சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது. அதைவிட பாராட்டுக்குரியது, இதைத் தைரியமாக வெளியிட்டிருக்கும் கிழக்குப் பதிப்பகத்தின் துணிச்சல். என்னிடம் கேட்டிருந்தால் நான் ஒரு பதிப்பாளராகக் கொஞ்சம் யோசித்திருப்பேன். அத்தனை தூரம் பல பிரச்சினைக்குரிய விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஒரு வாசகனாக இந்தப் புத்தகத்தை நான் படிக்கும்போது அடிக்கடி என் மனதில் நான் சொல்லிக் கொண்டது, ‘குற்றவாளி எப்போதுமே குற்றவாளிதான், தீவிரவாதி எப்போதுமே தீவிரவாதிதான், பயங்கரவாதி எப்போதுமே பயங்கரவாதிதான்; இவர்களை ரொமாண்டிசைஸ் செய்வது எந்தக் காலத்திலும் நிகழவே கூடாத ஒன்று’. இப்படிச் சொல்வதால் இந்தப் புத்தகம் ஒரு குற்றவாளியை ரொமான்டிசைஸ் செய்கிறது என்பதல்ல; அப்படி ஓர் எண்ணம் இதைப் படிப்பவர்களுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்.


இந்தப் புத்தகத்தின் ஒரு பிரச்சினையாக நான் பார்ப்பது — ராஜிவ் கொலை விவகாரத்தில் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டபோது உண்மையில் அவர்கள் நிரபராதி என்று சொல்லி விடுவிக்கப்படவில்லை. மாறாக அவர்கள் நீண்ட காலம் சிறையில் இருந்தார்கள் என்பதற்காகத்தான் விடுவிக்கப்பட்டார்கள். ஆனால் பொதுமக்கள் நோக்கில் அவர்கள் ஏதோ நிரபராதி என்பது போலக் காட்சிப்படுத்தப்பட்டார்கள். அவர்களும் பல இடங்களில் தாங்கள் நீண்ட காலம் சிறையில் இருந்ததால் மட்டுமே விடுதலை ஆனோம் என்பதைச் சொல்லாமல் தவிர்த்தார்கள். இந்தப் புத்தகத்திலும் அந்தக் குழப்பம் உள்ளது. குற்றம் செய்ததற்காகத்தான் உள்ளே சென்றோம் என்பதும், கூடவே நிரபராதிகளான தாங்கள் செய்யாத குற்றத்திற்குத் தண்டனை அனுபவிக்கிறோம் என்பதும் மாறி மாறி சொல்லப்பட்டிருக்கிறது. இது பெரிய குழப்பம். இப்படிச் சொல்வதற்கு ஏற்றாற் போல் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு கொலை செய்ய திட்டமிடப்படுவது சொல்லப்படும் போதே, அடுத்த நாள் கொலை பற்றிய செய்திதான் சொல்லப்படுகிறது. ஒரு திரைக்கதையின் நுணுக்கத்துடன் இது எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் வாசகன் ஏமாளி அல்ல. இது இந்தப் புத்தகத்தின் எழுத்தாளருக்கும் தெரியும். ஏனென்றால் அவரே ஒரு தேர்ந்த வாசகர்தான்.

இவற்றையும் மீறி இந்தப் புத்தகம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? இத்தனை விரிவாக இத்தனை ஆழமாகச் சிறை குறித்த விவரங்கள் தமிழில் அபூர்வம். ஒன்றிரண்டு புத்தகங்கள் சிறை வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன என்றாலும், இந்த அளவுக்கு ரத்தமும் சதையுமாகச் சொல்லும் புத்தகம் குறைவு. இந்தப் புத்தகம் கிட்டத்தட்ட ஒரு என்சைக்ளோபீடியா போன்று அமைந்திருக்கிறது. இனி எடுக்கப் போகும் திரைப்படங்களுக்கும் வெப் சீரிஸுகளுக்கும் இந்தப் படமே வழிகாட்டியாக இருக்கப் போகிறது. அந்த அளவுக்கு இதில் விவரணைகள் இருக்கின்றன. நமக்குத் தெரியாத பல சிறிய சிறிய சட்ட நுணுக்கங்கள் கூடத் தெளிவாக இதில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அளவில் இந்தப் புத்தகம் பெரிஅ அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தப் புத்தகத்தின் இன்னொரு முக்கியத்துவம், வெளியில் இருந்து பத்திரிகைகள் வாயிலாக நாம் அறிந்த பல தலைவர்கள் / குற்றவாளிகள் பற்றிய இணை சித்திரத்தை உருவாக்குவது. சில சமயங்களில் நாம் ஏற்கெனவே அறிந்திருக்கும் சித்திரத்திற்கு வலுச் சேர்க்கிறது அல்லது மொத்தமாகப் புரட்டிப் போடுகிறது.

உண்மையில் சொல்லப்போனால் இவை அனைத்தையுமே கிழக்குப் பதிப்பகம் முன்பே வெளியிட்டிருக்கும் ‘அடியாள்’ (ஜோதி நரசிம்மன் எழுதியது) என்ற புத்தகம் செய்துவிட்டது. அந்தப் புத்தகத்திற்கு நான் எழுதிய நீண்ட விமர்சனத்தில் இவை அனைத்தையுமே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அந்தப் புத்தகத்துக்கும் இந்தப் புத்தகத்திற்கும் உள்ள வேறுபாடு, அந்தப் புத்தகத்தை எழுதிய ஜோதி நரசிம்மன் 21 நாள்கள் மட்டுமே சிறையில் இருந்தார். ஆனால் தூக்குச் செல்வம் கிட்டத்தட்ட 31 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார். ஜோதி நரசிம்மன் சிறிய அடிதடி வழக்கில் உள்ளே போனவர் என நினைக்கிறேன். ஆனால் தூக்கு செல்வம் தூக்குத் தண்டனை கைதியாக இருந்து, பின்னர் ஆயுள் கைதியாக இப்போதும் இருந்து வருகிறார். எனவே ஒரு மடுவுக்கும் மலைக்குமான வித்தியாசம் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.

‘அடியாள்’ புத்தகத்துக்கும் இந்தப் புத்தகத்துக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை பிரேமானந்தா பற்றிய சித்திரம். ‘அடியாள்’ புத்தகம் சொன்னதை இந்தப் புத்தகம் விரிவாகப் பதிவு செய்கிறது. கடைசி வரை சிறையிலேயே இருந்து செத்துப்போன பிரேமானந்தா, கைதிகளின் பார்வையில் மிகவும் நல்லவராக மீண்டும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான ஒரு கூடுதல் காரணத்தையும் தூக்கு செல்வம் இந்தப் புத்தகத்தில் வாய்மொழியாகக் கேட்டதை வைத்துப் பதிவு செய்திருக்கிறார். இந்தப் புத்தகத்தில் தூக்கு செல்வம் பதிவு செய்திருப்பது அத்தனையுமே வாய்மொழியாகக் கேட்டவை. அல்லது அவர் கண்ணால் கண்டவை. எனவே அதை எந்த அளவுக்கு நாம் நம்ப வேண்டும் என்பது அவரவர் பார்வையிலும் அவரவர் நிலைப்பாட்டிலும் நிச்சயம் மாறும். ஆனாலும் இதை தூக்கு செல்வம் பதிவு செய்திருக்கிறார் என்பதுதான் முக்கியமானது. பின்னாளில் இவை மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் ஒரு குறிப்பாகவும் மாறும் வாய்ப்புள்ளது. ஆம், பிரேமானந்தா சிறைக்குள்ளேயே ஒரு சிவன் கோயிலையும் கட்டிக் குடமுழுக்கு செய்து வைத்திருக்கிறார், இன்றும் அந்தக் கோவில் இருக்கிறது என்கிறார் செல்வம்.

பிரேமானந்தா பிராமணராக இருந்திருந்தால் இது நடந்திருக்காது என்று பிரேமானந்தாவிடம் சொல்லும் பெரியாரிஸ்ட் செல்வம் தன் கூற்றைத் தனக்குத் தெரியாமல் தானே மறுக்கிறார், ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் கூற்றின் மூலமாக. ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் குறித்தும் சங்கரராமன் குறித்தும் தூக்கு செல்வம் எழுதி இருக்கும் இரண்டு வரிகள் முக்கியமானவை. அப்புதான் அடியாள் மூலம் கொலை செய்தார் என்று தன்னிடம் வாய்ப்பேச்சில் அப்பு கூறியதாக எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் செல்வம்.

இந்தப் புத்தகத்தின் ஆச்சரியம் என்னவென்றால் இத்தனை தீவிரமான குற்றச்சாட்டுகளை அதாவது பெயர் சொல்லியே காவல்துறைக்காரர்கள் மீது தூக்கு செல்வம் வைக்கும் குற்றச்சாட்டை எப்படிப் புத்தகமாக்க அனுமதித்தார்கள் என்பதுதான். சிறைக் காவலர்களுக்கு தெரியாமலேயே குறிப்புகள் அனைத்தும் வெளியே கொண்டு வரப்பட்டுப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தூக்கு செல்வம் எழுதுகிறார்.

சில இடங்களில் தூக்கு செல்வம் வரம்பு மீறி எழுதியிருக்கிறார் என்பதுதான் என் பார்வை. ஆதாரம் இல்லாத நிலையில் ஒற்றைப் பார்வையாக அதை அவர் சொல்லும் உரிமை அவருக்கு உண்டு என்றாலும், படிக்கும் போது நமக்கு பகீர் என்று இருக்கிறது. அதேசமயம் சிறைத் துறைக்குள்ளே எந்த அளவுக்கு ஊழலும் அராஜகங்களும் இருக்கின்றன என்பதும் நமக்குப் புதிதல்ல. இன்னும் சொல்லப்போனால் நாம் எதிர்பார்ப்பதை விட மிகவும் சீரழிந்து கிடைக்கிறது சிறைத்துறை என்பதுதான் இந்தப் புத்தகம் நமக்குச் சொல்லும் ஒரே செய்தி. இதில் நீதித்துறையையும் தூக்கு செல்வம் சேர்த்துக் கொள்கிறார். அதற்கான காரணங்களை அவர் விரிவாக அடுக்குகிறார். ஆதாரங்களையும் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கிறார். ஆனால் அத்தனையையும் மீறி நான் இன்னும் நீதிமன்றத்திடம் நம்பிக்கை இழந்து விடவில்லை என்பதால் தூக்கு செல்வத்தின் கருத்துக்களை பின்ச் ஆஃப் சால்ட்டுடன்தான் எடுத்துக் கொண்டேன்.

அதே சமயம் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து செல்வம் சொல்லும் ஆதாரங்கள் அனைத்தும் கவனிக்கப்பட வேண்டியவை. ராஜிவ் கொலை விவகாரத்தில் ஏழு பேர் விடுவிக்கப்பட்டார்கள் என்றால், அதைவிட அதிகக் காலம் சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிகளை விடுவிக்காதது ஏன் என்பது ஓர் உதாரணம். இது போன்று அவர் பல வழக்குகளில், ஒரே குற்றத்தன்மை உள்ள வழக்குகளில் கூட, வெவ்வேறு மாதிரியான தீர்ப்புகள் வருவதைக் கேள்வி கேட்கிறார். ஆனால் நீதி என்பது நீதிபதிகளுக்குத் தரப்படும் சாட்சியையும் பின்னணியையும் வைத்து மட்டுமே சொல்லப்படுவது. இதைப் புரிந்து கொண்டால்தான் நாம் மேற்கொண்டு பேச முடியும். அதே சமயம் இதைக் கூடுதலாக நாம் அழுத்தமாகச் சொல்ல முடியாததற்குக் காரணம், நீதித்துறையிலும் புரையோடி இருக்கும் ஊழல்கள்.

ஒரு வலுவான ஆதாரத்தைச் சொல்ல வேண்டும் என்றால், அஸ்ஸாமில் இருந்த சிறைக் கைதி Machang Lalung 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலேயே இருந்திருக்கிறார். 1951ல் சிறைக்குச் சென்ற அவர் 2007ல் அவரது 77 வது வயதில் வெளியே வருகிறார். நீதித்துறை அவருக்கு நடந்த அநீதியை ஏற்றுக்கொண்டு தண்டப் பணம் தந்திருக்கிறது. பென்சனும் தந்திருக்கிறது. ஆனால் அடுத்த ஒன்றரை வருடங்களில் அவர் இறந்து விடுகிறார். இந்தக் குறிப்புகளை எல்லாம் செல்வம் சொல்லாவிட்டாலும், அவர் பெயரை மட்டும்தான் சொல்கிறார் என்றாலும், செல்வம் கேட்கும் கேள்வி நியாயமானது. இந்த அநியாயமான சிறைத் தண்டனைக்கு யார் பதில் சொல்வது?

குற்றவாளிக்கு ஒரு தண்டனையை நீதிபதி கொடுத்தால் அந்தத் தண்டனைக் காலத்தை வரையறுக்க வேண்டிய கட்டாயமான ஒரு காலகட்டத்திற்குள் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மூன்று ஆயுள் தண்டனைகளைக் கொடுத்துவிட்டு ஒவ்வொரு ஆயுள் தண்டனை முடிந்த பின்பாக அடுத்த ஆயுள் தண்டனை என்று தரும் தீர்ப்பையும் கேள்வி கேட்கும் செல்வம், அதே நீதிபதியே பிற்காலத்தில் தான் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக, ஏகபோக காலத்தில் இந்த மூன்று தண்டனைகளையும் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி, ‘ஒரு ஆயுள் தண்டனை முடிந்த பிறகு இன்னொரு ஆயுள் தண்டனை என்பது எப்படிச் சரியாகும்’ என்று கேள்வி எழுப்பிய முரணைச் சுட்டிக் காட்டுகிறார்.

இப்படிப் பல முரண்களைத் தனக்கு ஏற்ற வகையில் செல்வம் கடுமையாக எடுத்து வைப்பது ஆச்சரியப்படுத்துகிறது. அவரே எழுதியிருந்தால் அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். பின்னணியில் யாரேனும் உதவி இருந்தால் அவர்களையும் பாராட்ட வேண்டும். ஏனென்றால் தன் தரப்புக் கருத்துகளை இத்தனை வலுவாக வைப்பது அத்தனை எளிதானதல்ல.

இந்தப் புத்தகத்தில் தவிர்த்திருக்கப்பட வேண்டியதாக நான் நினைப்பது, மனமொத்து நடக்கும் காம விஷயங்கள். இதனால் சட்ட ரீதியாகப் பிரச்சினை மட்டும்தான் நாம் அதைப் பற்றிப் பேச வேண்டும். அப்படி இல்லாத நிலையில் அது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றே அல்ல. ஆனாலும் தனது முதல் புத்தகம் மட்டுமே தனது ஒரே புத்தகமாக இருக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாக செல்வம் நினைத்தோ என்னவோ அத்தனையையும் இதில் பதிவு செய்ய நினைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

தூக்கு செல்வத்தின் பல்வேறு கருத்துகள் இன்றைய நிலையில் முற்போக்குகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் எழுத்தாளரின் குரலுடன் ஒத்துப் போவதைப் பார்க்கலாம். பல்வேறு அரசியல் வழக்குகளுக்காக உள்ளே வரும் எழுத்தாளர்கள் / அரசியல்வாதிகள் அத்தனை பேரும் தூக்கு செல்வத்தின் மீது தீராத தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். எனவே இரண்டு குரல்களும் ஒரே குரல் போல் ஒலிக்கின்றன. இந்த விஷயத்தில் உண்மையில் இந்துத்துவ இயக்கங்கள் தோற்றுப் போய்விட்டன என்று கூடச் சொல்லக்கூடாது, இதைப் பற்றி அவர்கள் யோசிக்கவே இல்லை என்பதுதான் உண்மை. ஆனால், தனக்குத் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதற்கு நன்றி சொல்லும் செல்வம், அதில் ஜனா.கிருஷ்ணமூர்த்தி பெயரையும் சேர்த்திருக்கிறார். ஏனென்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்காக, சம்பிரதாயத்திற்காக நன்றி சொல்லி இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

சிறையில் இருக்கும் குற்றவாளிகளிடம் பரிவுகாட்ட கன்னியாஸ்திரிகள் வருவதைப் பற்றிய குறிப்பு இந்தப் புத்தகத்தில் மின்னல் போல் வந்து செல்கிறது. வேறொரு சந்தர்ப்பத்தில் நான் இது குறித்து எழுதி இருக்கிறேன். இந்துத்துவ / பக்தி இயக்கங்கள் சிறைத்துறையைக் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் இஸ்கான் அமைப்பு சில விஷயங்களைச் செய்ததை நான் நேரடி அனுபவத்திலிருந்து கண்டு கொண்டிருக்கிறேன்.

இந்தப் புத்தகத்தில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், சிறைத்துறைக்குள்ளே கிடைக்கும் உணவு வகைகள். வேகமாக வேகமாகப் படித்ததில் எனக்கு நினைவிருப்பவை — பன்றிக்கறி, ஆட்டுக்கறி, சாம்பார், பொரியல், உதிரிச் சோறு, கட்டுச்சோறு, பிரியாணி, ஒட்டகக் கறி, மீன் குழம்பு, கேக், காஃபி இன்னும் எத்தனையோ. இத்தனை விரிவாக எப்படி உணவு வகைகள் அனுமதிக்கப்படுகின்றன என்று புரியவில்லை. இது சட்டபூர்வமாக நடக்கிறதா அல்லது சட்டத்தைத் தாண்டி நடக்கிறதா அல்லது இரண்டுமேவா என்பது பற்றிய தெளிவு இந்தப் புத்தகத்தில் எனக்குக் கிடைக்கவில்லை. முதலைக் கறி உண்ட படலமும் இந்தப் புத்தகத்தில் சொல்லப்படுகிறது. இதைவிட அநியாயம் என்னவென்றால், இங்கே சமைத்து வீட்டுக்குக் கொடுத்து விட்டிருக்கிறார்கள். மாவீரர் தினம் கொண்டாட்டம் சிறைக்குள்ளே நடைபெற்றிருக்கிறது. சிறைத்துறைக் காவலர்கள் எந்த லட்சணத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு இந்தப் புத்தகம் வலுவான சாட்சி. இந்தப் புத்தகத்தில் செல்வம் பொய் சொல்லியிருக்கிறார் என்றும் கருத முடியாது. ஏனென்றால் அவர் அது நடந்த தினம், அங்கே இருந்த காவலர்கள் யார் என்ற பட்டியலோடுதான் சொல்கிறார்.

இத்தனை ஊழல்களிலும் என்னை அதிர வைத்தது, சிறைக்குள்ளேயே ஜாமின் தரும் போலி ஆவணத்தை உருவாக்கிய ஊழல்தான். இதைப்பற்றிக் கேள்விப்பட்டது சுத்தமாக மறந்து போய், இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது புதியதாகப் படிப்பது போலத்தான் தோன்றியது. நம்பவே முடியாத அளவுக்கு ஆட்டமாக ஆடி இருக்கிறார்கள்.

வெளியே இருக்கும் சாதிச் சண்டைகளே எத்தனையோ பரவாயில்லை என்னும் அளவுக்கு உள்ளே நடக்கிறது சாதிச் சண்டை. இந்தப் புத்தகத்தை எழுதியவர் கூட சாதி இல்லை என்பதை நம்புபவராக எனக்குத் தெரியவில்லை. ஒரு பப்பாளிக்காக ஜான் பாண்டியனுடன் நடக்கும் சண்டை. சந்திரலேகாவின் முகத்தில் அமிலம் எறிந்த சுர்லா என்னும் சுடலை முத்துத் தேவர். கராத்தே செல்வினின் அறிவுரை! எல்லாம் சாதி மயம். மதமாற்றம் சாதி இல்லாமலாக்கும் என்பதை மறுக்கும் லட்சமாவது ஆவணம்.

இன்னொரு அநியாயம், சிறைக்குள்ளேயே ஆபாசப் படம் பார்த்திருக்கிறார்கள். பணம் இருந்தால் எதுவும் நடக்கும் போல. பல இடங்களில் 18+ என்று சொல்லும் அளவுக்கான ஆபாசமான வார்த்தைப் பிரயோகங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. சிறைத் துறையின் கதை என்பதால் அதைத் தவிர்க்க முடியாது. உண்மையைச் சொல்லப் போனால் மிகக் குறைவாகவே அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். அதே சமயம் ஒரு அதிகாரியைப் பார்த்துக் காமம் கொள்ளும் இடத்தில் அந்த அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டிருப்பதெல்லாம் கொஞ்சம் அதிகம் என்றுதான் நினைக்கிறேன். அதே போல் ஒரு நடிகையின் பெயரையும் சொல்லி இருப்பது. என்னதான் கருத்துச் சுதந்திரம் என்றாலும், என்னதான் உண்மை என்றாலும், அது இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. விடுதலைப்புலிகள் தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக்கொண்டு, ராபர் ஃபயஸும் ஜெயக்குமாரும் முருகனுக்கு சயனைடு விஷம் வைத்துக் கொல்லப் பார்த்தார்கள் என்பதை எல்லாம் எப்படி எடுத்துக் கொள்வது? இதை முருகனே செல்வத்திடம் சொல்லி இருப்பதாகச் செல்வம் சொல்கிறார்.

புத்தகத்தின் தொடக்கம் முதல் பாதிப் புத்தகம் வரை கொலைகள் கொலைகள் கொலைகள்தான். திரைப்படங்களில் காண்பிப்பதெல்லாம் ஒன்றுமே இல்லை என்னும் அளவுக்கான தொடர் கொலைகள். மாறி மாறிப் பழி. நீதிமன்றத்திற்குள்ளே புகுந்து நீதிபதி முன்னாலேயே செய்யப்படும் கொலைகள். இதற்கு ஆயுள் தண்டனை தவறல்ல என்பதுதான் என் பார்வை. ஆனால் ஆயுள் தண்டனை பெற்ற சில குற்றவாளிகள் விடுதலையாகி வெளியே வரும்போது, அதைவிட அதிகக் காலம் தண்டனை அனுபவித்த ஒரு கைதி ஏன் வெளியே வரக்கூடாது என்பது நியாயமான கேள்விதான். இந்தப் புத்தகத்தின் அடிநாதம் இந்தக் கேள்விதான்.

தொடக்க காலத்திலேயே கைதாகாமல் இன்னும் 10-15 ஆண்டுகள் செல்வம் வெளியேவே இருந்திருப்பாரேயானால், நிச்சயமாக இந்நேரம் அமைச்சராக இருப்பார் என்றுதான் எனக்குத் தோன்றியது. அதற்கேற்ற அத்தனை தகுதியையும் அவர் வளர்த்துக் கொண்டிருக்கிறார். ஈவெராவைக் கடுமையாகத் திட்டும் அவர், ஒரு கட்டத்தில் ‘என் தலையில் பெரியார் அமர்ந்து கொண்டார்’ என்றும், இது பெரியார் மண் என்றும் சொல்லத் தொடங்கி விடுகிறார். கருணாநிதி தலைவர் என்கிறார். கருணாநிதி மேல் தீராக் காதல். கலைஞர் என்று மட்டுமே அழைக்கிறார்.

பல சிறைத்துறை மாற்றங்களைக் கொண்டு வந்த முதல்வர்களுக்கு நன்றி சொல்லும்போது, ஜெயலலிதா உட்பட அவர் அனைவருக்கும் நன்றி சொன்னாலும், கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் அவர் சொல்லும் நன்றி உண்மையிலேயே ஆத்மார்த்தமாகத் தெரிகிறது. அந்த அளவுக்கு திமுக ஆதரவாளராக இருக்கிறார். தொடக்கக் காலத்தில் குற்றச்செயல்கள் செய்த போது எந்தக் கட்சியையும் சாராதவராகவும்தான் இருந்திருக்கிறார். அப்போதும் கருணாநிதியே தலைவர். செல்வம் சிறைக்குச் சென்றதும் அவர் ஜாமீனுக்கும் ஆயுள் தண்டனைக் குறைப்புக்கும் உதவுவது திமுக எம்எல்ஏக்கள்தான். அவர்கள் பெயரையும் வெளிப்படையாகவே அவர் குறிப்பிட்டிருக்கிறார். அரசியலையும் ரௌடியிஸத்தையும் எந்தக் காலத்திலும் பிரிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். அதற்கு இந்தப் புத்தகம் ரத்த சாட்சியம்.

சில சுவாரசியமான சம்பவங்களையும் செல்வம் குறிப்பிடுகிறார். அதில் என்னை வாய்விட்டுச் சிரிக்க வைத்தது — நயன்தாரா புத்தகம். ஒரு கைதி ஆபாசக் கதை எழுதி சரோஜாதேவி புத்தகம் போல அதற்கு நயன்தாரா புத்தகம் என்று பெயர் வைத்து அதைப் படிக்க 25 சிகரெட் வசூலித்திருக்கிறார்.

இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவம், சிறைத்துறைக்கு நூல் வாங்கிச் செல்வது குறித்து. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சிறைத் துறை ஓர் அரங்கு அமைத்து, அங்கே புத்தகங்களை இலவசமாகத் தரலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது. அதற்குப் பெரிய ஆதரவு இருந்தது. பலர் புத்தகங்களை நன்கொடையாகத் தந்தார்கள். ஆனால் அப்படி வரும் புத்தகங்களில் பலவற்றைப் பல அதிகாரிகள் திருடிக்கொண்டு போய்விடுகிறார்கள் என்பதால், யாரும் இலவசமாகத் தராதீர்கள் என்கிறார் செல்வம். நாம் எங்கேயும் எதிலேயும் ஊழல் செய்வோம் என்பதற்கு இன்னுமொரு ஆதாரம் இது. உண்மையில் ஓர் அரசு நூலகத்துக்கோ அல்லது சிறைக்கோ புத்தகங்களை இலவசமாகத் தாருங்கள் என்று கேட்கக் கூசவேண்டும். புத்தகம் வாங்க அரசிடம் இல்லாத பணமா!

கடைசியில் செல்வம் சொல்லும் சில சிறைத் திருத்தங்களைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால் — அவற்றையெல்லாம் செய்தால் ஒரு கொலையோ கொள்ளையோ செய்துவிட்டு நாமே ஏன் சிறைக்குப் போகக் கூடாது என்ற எண்ணம் தோன்றி விடும்! அவர் சொல்லும் சில சீர்திருத்தங்கள் முக்கியமானவைதான் என்றாலும், ஒட்டுமொத்தமான சீர்திருத்தங்கள் சிறைக் கைதிகளுக்கான மனிதாபிமான அடிப்படையிலான பரிந்துரைகள் என்பதைத் தாண்டி, கிட்டத்தட்ட வெளியே இருப்பதைப் போன்ற சொகுசு உலகம் உள்ளேயும் வேண்டும் என்று ஆசைப்படுவதாகத்தான் தோன்றுகிறது. அதை பரிசீலிப்பது கூடத் தேவையில்லை தேவையற்றது என்பதே என் நிலை. அதேபோல் தூக்குத் தண்டனையே இருக்கக் கூடாது, ஒரு மனிதன் செய்த கொலைக்கு பதிலாக நீதிமன்றம் இன்னொரு கொலை செய்யக் கூடாது என்பதெல்லாம் ஏற்கவே முடியாதவை. அரிதிலும் அரிதான வழக்குகளில்தான் தூக்கு தரப்படுகிறது. நிர்பயா வழக்கில் கொலைகாரர்களின் பக்கத்தையும் (நியாயப்படுத்தி அல்ல) செல்வம் போன்றவர்கள் பேசினாலும், அதை ஏற்கவே முடியாது.

இந்தப் புத்தகத்தின் அறிவிப்பு வந்தபோது இந்தப் புத்தகம்தான் இந்தப் புத்தகக் கண்காட்சியின் பெஸ்ட் செல்லராக இருக்கப் போகிறது என்று நினைத்தேன். ஆனால் மிகப் பெரிய புத்தகம் என்பதால், அதனால் 800 ரூபாய் விலை என்பதால் அது நடக்காது என்றும் தோன்றியது. ஒருவேளை இந்தப் புத்தகம் சிறிய புத்தகமாக 250 ரூபாய் என்றளவில் வந்திருந்தால், இந்தப் புத்தகக் கண்காட்சியில் மட்டும் ஆயிரம் பிரதிகள் நிச்சயம் விற்றிருக்கும். ஏனென்றால் வன்முறையின் பக்கங்களைச் சொல்லும் நேரடிப் பதிவுகளுக்கு என்றைக்குமே ஓர் ஈர்ப்பு உண்டு. அது இந்தப் புத்தகத்தில் பக்கத்திற்குப் பக்கம் வார்த்தைக்கு வார்த்தை கொட்டிக் கிடக்கிறது.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும் நாம் செய்ய வேண்டியது எல்லாம், நாம் படிப்பது ஒரு வாக்குமூலத்தைத்தானே அன்றி, ஒரு பொய்யின் மறுபக்கத்தை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். ஏனென்றால், கஸாப், அஃப்ஸல் போன்றவர்கள் தூக்கிலிடப்படுவதற்கு முன்பான நிமிடங்களைப் படித்துக் கண்ணீருடன் நின்ற சமூகம் நம் சமூகம். அவர்கள் பயங்கரவாதிகள் என்று தெரிந்தும் நாம் கண்ணீர் விடுவதற்கான காரணம், நாம் பயங்கரவாதிகள் அல்ல, நல்லவர்கள் என்பதுதான். ஒரு புத்தகமோ ஒரு திரைப்படமோ அதைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டியது நம் பொறுப்பு.

I strongly recommend this book. அடுத்த 3 நாள்களுக்கு மட்டும் சுவாசம் புக்ஸ் வலைத்தளத்தில் இந்தப் புத்தகம் 15% தள்ளுபடியில் கிடைக்கும். லின்க் https://www.swasambooks.com/

Share

Chennai Book Fair 2026

இந்த முறை புத்தகக் கண்காட்சியில் கடந்த நான்கு நாள்களாகக் கண்ணில் பட்டவையும் அவை தொடர்பாக மனதில் தோன்றியவையும்.

* வழக்கம்போல முதல் வரிசைக் கடைகளில் மட்டுமே பெரும் கூட்டம். மற்ற கடைகளில் ஒப்பீட்டளவில் கூட்டம் குறைவு. வரிசைகளை மாற்றி மாற்றி டிக்கெட் கொடுத்தாலும், மக்கள் என்னவோ தொடக்க ஸ்டாலில் இருந்து பார்ப்பதைத்தான் விரும்புகிறார்கள். இது தொடர்பாக இன்னும் சீரியஸாக பபாஸி யோசிப்பது நலம்.

* நான்கு ஸ்டால்கள் எடுத்தாலும் கூட, முதல் வரிசையில் அரங்கு இல்லாவிட்டால் விற்பனை ஒப்பீட்டளவில் குறையவே செய்யும்.

* இந்த முறை தமிழ்ப் புத்தகங்களைவிட ஆங்கிலப் புத்தக அரங்குகளில் அதிகம் கூட்டம் தென்படுவது போன்ற ஒரு பிரமை.

* தொடர்ச்சியாக மாவட்டம்தோறும் நடத்தும் புத்தகக் கண்காட்சிகளால் நிச்சயம் சென்னைப் புத்தகக் கண்காட்சியின் விற்பனை ஒட்டுமொத்த அளவில் குறைந்திருக்கிறது. ஆனாலும் சென்னைப் புத்தகக் கண்காட்சியின் மீதான மக்களின் ஆர்வம் கூடுதலாகவே இருக்கிறது. இந்திய அளவில் அதிக அளவில் மக்கள் புத்தகம் வாங்க வரும் புத்தகக் கண்காட்சிகளில் இது முக்கியமான ஒன்றாகவே இருக்கிறது.

* பிரிண்ட் ஆன் டிமாண்ட் தொழில்நுட்பம் ஒட்டுமொத்த பதிப்பு உலகத்தையே மாற்றிப் போட்டிருக்கிறது. இதற்கேற்றாற் போல் திட்டமிடாவிட்டால் கடினம்.

* பதிப்பகம் ஒரு பிராண்டாக நிலைபெறாவிட்டால் பதிப்பகமாகப் பெரிய சவாலைச் சந்திக்கவேண்டி இருக்கும். இப்படி நிலைபெற வைப்பது அத்தனை எளிதல்ல.

* எழுத்தாளரையே ஒரு வெற்றிகரமான பிராண்டாகக் கொண்டிருக்கும் பதிப்பகங்கள் பிழைத்துக் கொள்ளும். ஆனால் அந்த எழுத்தாளர் அதே பிராண்டாக, நிலை பிறழாத ஒருவராக இருக்கவேண்டும்.

* ஃபேஸ்புக்கில் வரும் லைக்கில் ஆயிரத்தில் ஒரு பங்கு விற்றால் கூட ஒவ்வொரு புத்தகமும் ஆயிரம் விற்கும்.

* சோஷியல் மீடியா என்ற ஒன்று இல்லாவிட்டால் புத்தகங்களை இத்தனை எளிதாகப் பிரபலப்படுத்த முடியாது. அதே சமயம் சோஷியல் மீடியா என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் புத்தக வாசிப்பும் விற்பனையும் கூடுதலாக இருந்திருக்கும். ஒருவகையில் இது வரமும் சாபமும்.

* புத்தக விமர்சனங்களை அதிகமாக்குவதன் மூலம் மட்டுமே புத்தகம் குறித்தான தொடர் கவனிப்பைக் கொண்டு வர முடியும். தொடக்க கால ப்ரொமோஷன்கள் அந்தக் காலத்துக்கு உதவுமே ஒழிய, தொடர் கவனத்தைக் கொண்டு வராது. இன்றிருக்கும் ஆகப் பெரிய சவாலே இதுதான்.

* புத்தகம் எழுதியவர் எழுத்தாளரல்ல. எழுத்தாளர் என்பது ஒரு நிலை. ஒரே ஒரு புத்தகம் எழுதியவர் முக்கியமான எழுத்தாளராகவும், பல புத்தகங்கள் எழுதி இருந்தாலும் அவர் எழுத்தாளர் என்ற நிலையை அடையாமல் இருக்கும் வாய்ப்பு உள்ள சூழல் இது. தன்னை எழுத்தாளன் என்று நினைக்கும் கர்வமே, திறமையே ஒருவரை எழுத்தாளராக்கும்.

Share

ஒரு தமிழ்ப் புத்தகம்

ஒரு தமிழ்ப் புத்தகம். 40 பக்கங்கள் படித்தேன். முக்கியமான எழுத்தாளர். பதிப்பகக்காரர் நண்பர். அவர் வருத்தப்படக்கூடாது என்பதற்காகக் கிசுகிசு போலச் சொல்கிறேன். அந்தக் காலக் கதை என்றால், எத்தனை வருடங்களுக்கு முன்பு நடந்ததோ அதை ஒட்டிய ஒரு பேச்சுவழக்கு நம் மனதில் பதிவாகி இருக்கிறது. புராண காலம் என்றால் ஒரு பேச்சு வழக்கு, அரசர் காலம் என்றால் அதற்கு ஒரு பேச்சு வழக்கு என நமக்குப் பழக்கப்பட்டுப் போயிருக்கிறது. அதை மாற்றுவதில் தவறில்லை. சரியான ஆதாரத்தோடு சரியான பின்பலத்தோடு மாற்றினால் பரவாயில்லை. அதை ஒரே அடியாக மாற்றுகிறேன் என்பதும், அதற்கும் தாண்டி போவதும் நிச்சயம் நம்மைப் புத்தகத்திலிருந்து அந்நியமாக்கிவிடும். எனக்கும் அப்படித்தான் நடந்தது. அதிலும் குறிப்பாக, கடவுள் ‘இப்ப பாருடா’ என்று சொல்லிவிட்டு ‘வில்லனை’ அடிப்பதை எல்லாம் தாங்கிக் கொள்ளும் மனவலிமை எனக்கில்லை.

Share

பெருவலி நாவல்

கடந்த ஆண்டு ருசிர் குப்தாவின் Mistress of Throne புத்தகத்தைப் படித்தேன். பேஹம் சாஹிப் என்றறியப்பட்ட முகலாய இளவரசி ஷாஜஹானின் மகள் ஜஹானராவைப் பற்றிய நாவல். இந்த நாவல் மேம்போக்காக எழுதப்பட்டதல்ல. மூல ஆவணங்களைப் படித்துத் தரவுகளுடனும் தரவுகள் இல்லாத இடத்தில் புனைவைக் கொண்டு இணைத்து எழுதப்பட்ட ஒன்று. ஜஹானரா, மும்தாஜ், ஷாஜஹான், தாரா ஷுக்கோ, ஔரங்கசீப், ஜனானா பெண்கள் மற்றும் அந்தக் காலத்திய அரசியல் நடவடிக்கைகளை மிக விரிவாக விளக்கும் நாவல்.

இதே பின்னணியில் எழுதப்பட்ட நாவல் சுகுமாரனின் பெருவலி. காலச்சுவடு வெளியீடு. இதற்கு முன்பு ஜஹானரா குறித்து வெளியான புத்தகங்களின் பாதிப்பு எந்த வகையிலும் வந்துவிடக்கூடாது என்பதில் சிரத்தையெடுத்து உழைத்து எழுதி இருக்கிறார் சுகுமாரன். ருசிர் குப்தாவின் ஆங்கில நாவலில் இருந்து இந்நாவல் வேறுபடுவது, இந்நாவலின் அசர வைக்கும் தமிழ் நடையின் மூலமாக. ஒரு தீவிரமான இலக்கியப் புனைவை வாசிக்கும் இன்பத்தைக் கொண்டு வருகிறது சுகுமாரனின் பெருவலி.

யார் எழுதினாலும் ஷாஜஹானின் கடைசி காலக் கட்டம் குறித்த விவரணைகள் பெரும் பதற்றத்தைக் கொண்டு வந்துவிடும் போல. காமத்திலும் ரத்தத்திலும் தோய்ந்து கிடந்த ஒரு பேரசசன், தான் செய்தவற்றின் இன்னொரு உருவாக வந்து நிற்கும் தன் மகன் ஔரங்கசீப்பிடம் மண்டியிடுகிறான். அதே துரோகங்கள், அதே ரத்தம், அதே படுகொலைகள் மீள அரங்கேறுகின்றன. அதற்குள் தாஜ்மஹாலின் மூலம் உலகில் நிலையாப் புகழைப் பெற்று விடுகிறான் ஷாஜஹான்.

முகலாய இளவரசிகளுக்குத் திருமணம் கிடையாது என்பது விதி. ஒருவேளை அவர்களுக்குத் திருமணமானால் அவர்களது கணவன் மூலம், அரசர்களின் ஆண் வாரிசுக்குப் போட்டி உருவாகலாம் என்பதே எண்ணம். இதனால் ஜனானாவில் இருக்கும் இளவரசிகள் களவொழுக்கத்தில் ஈடுபடுகிறார்கள். இதற்குள்ளே அவர்களுக்குள் போட்டியும் பொறாமையும் தனி அரசைச் செலுத்துகின்றன. ஆளாளுக்குக் கையாளாக நபும்சகர்கள் இருக்கிறார்கள். தங்கள் இளவரசிகளின் கற்பைக் காக்கவே இந்த ஏற்பாடு. ஆனால் இரவுகளில் நிகழும் ரகசியச் சந்திப்புகளில் யாரும் யாருக்கும் எந்தவித உத்தரவாத்தையும் அளிக்கமுடிவதில்லை. ஜஹானராவும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஔரங்கசீப்பால் வீட்டுச் சிறையில் அடைக்கப்படும் ஷாஜஹானுக்குத் துணையாக, அவரது மிக அன்பான மகள் ஜஹானராவும் அங்கேயே தங்கிவிடுகிறாள். அப்போது அவள் பாரசீக மொழியில் எழுதி, யார் கண்ணுக்கும் படாமல் மறைத்துவைக்கப்பட்ட குறிப்புகள் 300 ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்டு, மொழியாக்கம் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் வெளியாகின்றன. The Life of Mogul Empress Jahanara Begum, the daugher of Shajahan by Andrea Butenshon என்ற இந்த நூல் 1938ல் வெளியாகிறது. இது இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. (நான் இன்னும் இதைப் படிக்கவில்லை.)

இந்த நூலை மையமாக வைத்தும் பிற நூல்களைப் படித்தும் தனக்கென ஒரு புனைவை உருவாக்கி இருக்கிறார் சுகுமாரன். ஜஹானராவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய ஒரு பூடகமான மொழியை மிகக் கச்சிதமாக உருவாக்குகிறார். கனவிலும் அரை நினைவிலும் நடக்கும் நிகழ்வுகளுகாக அவை அட்டகாசமாகச் சித்தரிக்கப்படுகின்றன. இடைவெளிகளை நிரப்ப கனவுகளையும் அவற்றுக்கான சூஃபிக்களின் விளக்கங்களையும் பயன்படுத்துகிறார் ஜஹானரா. ருசிர்குப்தா மிஸ்ட்ரஸ் ஆஃப் த்ரோன் நாவலில் இதனை சர்ரியலிஸப் பாணியைப் பயன்படுத்திக் கடக்கிறார்.

ஷாஜஹானுக்கும் அவரது மகளான ஜஹானராவுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்த சிக்கல்களை மிகக் குறைவான வார்த்தைகளில் மட்டும் சொல்லிக் கடக்கிறது பெருவலி. ருசிர் குப்தாவின் நாவலும் இதே பகுதிகளை மிக இறுக்கமாகப் பேசுகிறது. மிகத் தெளிவாக இவற்றுக்கு நிரூபணம் இல்லை என்கிறார் ருசிர் குப்தா. ஆனால் சுகுமாரன் பூடமாகச் சொல்லும் ஜஹானாராவின் காதலை மிக வெளிப்படையாகச் சொல்கிறார் ருசிர் குப்தா. ஜஹானாராவுக்கும் அவர் சந்திக்கும் மருத்துவர் கேப்ரியல் (இது உண்மையான பெயரல்ல) என்பவருக்கும் இடையே உறவு இருந்ததாகச் சொல்கிறார் ருசிர் குப்தா. ஆனால் இதற்கு வாய்ப்பில்லை என்றும், ராஜபுத்திர அரசர் சத்ரசால்-க்கும் இடையேதான் உறவு இருந்திருக்கும் என்று எடுத்துக்கொண்டு செல்கிறார் சுகுமாரன். முதலில் ராக்கி அணியத்தக்க உறவு என்று ஜஹானாரா சொன்னாலும் பிற்பாடு சத்ரசால் மீதான தனது காதலைப் பதிவு செய்திருக்கிறாள் என்ற உண்மையிலிருந்து இதனை நோக்கிப் போகிறார் சுகுமாரன்.

ஔரங்கசீப்பின் இளமைப் பருவத்தையும் மற்ற விவரங்களையும் மிக விரிவாகப் பதிவு செய்கிறது ருசிர் குப்தாவின் நாவல். சுகுமாரனின் நாவல் இவற்றை மிகச் சுருக்கமாக, தேவையான அளவுக்கு மட்டுமே சொல்கிறது. தாரா ஷூக்கோவின் ஹிந்து மதத்தின் மீதான ஆதரவும், ஹிந்துக்கள் அவரைக் கொண்டாடுவதும் கூட மிகச் சில குறிப்புகளாக மட்டுமே பெருவலி நாவலில் வெளிப்படுகின்றன. நாவலின் முதல்பாகம் பானிபட் எனப்படும் நபும்சகனின் பார்வையில் விரிவதாலும், இரண்டாம் பாகம் ஜஹானராவின் பார்வையில் விரிவதாலும் இப்படிச் சொல்லவேண்டி வந்திருக்கலாம்.

சுகுமாரனின் நாவல் மிகச் செறிவானது. சுகுமாரனின் தமிழ் நடை நம்மை உள்ளிழுத்துக் கொள்வது. மிக நல்ல முக்கியமான நாவல். இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம் என்று நினைக்க வைக்கும் நாவல்.

ருசிர் குப்தாவின் நாவல் எளிமையான ஆங்கிலத்தில் மிக விரிவாக எழுதப்பட்ட ஒன்று. அதனைத் தமிழில் கொண்டு வரவேண்டியது அவசியம். ஆனால் எவ்வளவு விற்கும் என்பது தெரியாது. J

இந்த இரண்டு நாவல்களிலும் நாம் தவறவிடக்கூடாதது, பிற்சேர்க்கைப் பகுதியை. பெருவலி நாவலில் சுகுமாரனின் குறிப்பு உள்ளது. இது நாவல் குறித்த பல சந்தேகங்களை நீக்கும். மிஸ்ட்ரஸ் ஆஃப் த்ரோன் நாவலில் ருசிர் குப்தாவின் பேட்டி உள்ளது. மிக முக்கியமான பேட்டி.

சுகுமாரனின் தன் குறிப்பில், இந்நாவலை எழுதுவதற்குக் காரணம், வரலாற்றைப் பதிவு செய்வது மட்டுமல்ல, அதன் இக்காலத்து அரசியலைத் தொடர்புப்படுத்திப் பார்க்கத்தான் என்று சொல்கிறார். உண்மையில் மீண்டும் மீண்டும் இந்த அரசியல் நிகழ்வுகள் அதேபோன்ற அரசியல் நிகழ்வுகளாகவும் அல்லது வேறு வகையிலான நிகழ்வுகளாகவும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இன்னும் இதே கதைகளைக் கச்சிதமாகப் பயன்படுத்தி இன்றைய நிலையில் பொருத்தி மிகச் சிறப்பான திரைப்படங்களை எடுத்துவிடமுடியும். என்றைக்கும் செல்லுபடியாகும் கதைகளாகவே அவை இருக்கின்றன என்பது உண்மையானதுதான்.

பெருவலி நாவலைத் தவறவிட்டுவிடாதீர்கள். நிச்சயம் வாசியுங்கள்.

Share

2018ல் வாசித்தவை

2018ல் படித்த புத்தகங்கள்:

* சைவ பேலியோ டயட் – பா.ராகவன்
* பேட்டை – தமிழ்ப்பிரபா
* எனது நாடக வாழ்க்கை – அவ்வை சண்முகம்
* வருவதற்கு முன்பிருந்த வெய்யில் – ஜி.கார்ல் மார்க்ஸ்
* எனது பர்மா நடைப்பயணம் – வெ.சாமிநாத சர்மா
* முஸ்தபாவைச் சுட்டுக் கொன்றவர்கள் – அகரமுதல்வன்
* சுபிட்ச முருகன் – சரவணன் சந்திரன்
* Mistress Throne – Ruchir Gupta
* Ivory throne – Manu S. Pillai (Half read!)
* நிமித்தம் – எஸ்.ராமகிருஷ்ணன்
* Idol Thief – Vijayakumar
* ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் – ஆ.சிவசுப்பிரமணியன்
* வெட்டாட்டம் – ஷான் கருப்பசாமி
* பீரங்கிப் பாடல்கள் – என்.எஸ்.மாதவன், தமிழில்: இரா.முருகன்
* காச்சர் கோச்சர் – விவேக் ஷான்பாக், தமிழில்: நல்லதம்பி
* சிள்வண்டு முதல் கிகா பைட் வரை – ஹாலாஸ்யன்
* சிறைச்சாலை சிந்தனைகள் – எம்.ஆர்.ராதா (விந்தன் செய்த நேர்காணல்)
* இந்தியாவின் இருண்ட காலம் – சசி தரூர் (பாதி!)
* பேட்டை – தமிழ்ப் பிரபா
* எம்ஜியார் என்கிற ஹிந்து – ம.வெங்கடேசன்
* நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன் – மாரிதாஸ்
* ஊழல் உளவு அரசியல் – சவுக்கு சங்கர்
* வெங்கட் சாமிநாதன் கட்டுரைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு)
* பின்லாந்து காட்டும் வழி
* கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல் (இன்னும் வெளிவரவில்லை.)
* 1975 – இரா.முருகன் (இன்னும் வெளிவரவில்லை.)
* மலைக்காடு – சீ.முத்துசாமி (இன்னும் வெளிவரவில்லை.)
* பழி – அய்யனார் விஸ்வநாத் (இன்னும் வெளிவரவில்லை.)
* சாமி ஊர்வலம் வராத தெருவில் வசித்தவர்கள் (சென்னையர் கதைகள்)

இவை போக, 12 வலம் இதழ்கள் வெளிவருவதில் பங்காற்றி இருக்கிறேன்.

பொதுவாகவே ஒரு புத்தகத்தை எடுத்தால் முடித்துவிடுவதுதான் வழக்கம். ஆனால் இந்த வருடம் முடிக்காமல் விட்ட சில புத்தகங்களும் உள்ளன. இந்த வழக்கத்தைக் கைவிட்டு, எதிர்வரும் 2019ல் முழுமையாக ஒரு புத்தகத்தைப் படித்துவிடவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். புத்தகம் படிப்பதில் ஏப்ரல் வாக்கில் தொடங்கும் ஒருவித சோம்பேறித்தனம் ஜூன் முடிவது வரை நீடிக்கிறது. பிள்ளைகளுக்கு விடுமுறை நேரம் என்பதே காரணம்.

அடுத்த வருடத்தில் இதைவிட இரண்டு மடங்கு புத்தகங்களாவது படிக்கவேண்டும் என்று ஒரு சபதம். பார்க்கலாம்.

Share

Halasyan

ஹாலாஸ்யனின் கட்டுரைகள்

பொதுவாகவே அறிவியல்/சூழலியல் தமிழ்க் கட்டுரைகளை (ஆங்கிலக் கட்டுரைகளையும்!) நான் அதிகம் வாசிப்பதில்லை. முதலும் கடைசியுமான காரணம், இவை என் தலைக்கு மேலே பயணிப்பவை. டிஸ்கவரி சானல்களில் வரும் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பார்ப்பதுண்டு. அவை அசரடிக்கும் வகையில் படம்பிடிக்கப் படுபவை. ஒரு மணி நேர ஸ்கிரிப்ட்டுக்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் கவனமும் உழைப்பும் ஆச்சரியமானவை. ஆனால் அவற்றில் எதோ ஒருவகையில் ஒரு அந்நியத் தன்மை இருக்கும். ஹாலாஸ்யனின் கட்டுரைகளில் அந்த அந்நியத்தன்மை இருப்பதில்லை. நேரடியாகத் தமிழில் எழுதப்படும் கட்டுரைகள். தமிழர்களின் சராசரி அறிவியல் அறிவை, விருப்பத்தை அறிந்துகொண்ட ஒருவர் எழுதும் கட்டுரைகள்.

தமிழில் பெரும்பாலான அறிவியல் கட்டுரை முயற்சிகள், ஒன்று, குறைவான அறிவியலுடன் பெரும்பாலும் கிண்டல் பேச்சுக்கள் மூலம் அறிவியலை விளக்கப் பயன்படும் கட்டுரைகளாக அமையும். அல்லது, தீவிரமான அறிவியல் கட்டுரைகளாக, அறிவியல் பற்றி ஏற்கெனவே அறிந்திருப்பவர்களுக்கான கட்டுரைகளாக அமையும். என்.ராமதுரை போன்ற சிலர் இந்த இரண்டுக்கும் இடைப்பட்டு கட்டுரைகள் முயன்றிருக்கிறார்கள். ஹாலாஸ்யன் இதில் அடுத்த படி.

விளக்க சில நகைச்சுவைத் தொடர்களை, உரையாடல்களைப் பயன்படுத்தினாலும் அவற்றிலேயே உறைந்துவிடுவதில்லை ஹாலாஸ்யன். அறிவியல் 90% இருக்கவேண்டும் என்பதில் பிறழ்வதில்லை.

மிகச் சரியான தமிழ் வார்த்தைகளைத் தேடித் தேடிப் பயன்படுத்துகிறார். உருவாக்குகிறார். ஏன் அந்தத் தமிழ் அறிவியல் வார்த்தைகளை உருவாக்குகிறோம் என்பதில் அவருக்கு சரியான புரிதல் இருப்பதால், அவை பெரும்பாலும் சரியான வார்த்தைகளாகவே அமைகின்றன. ஒன்றிரண்டு கட்டுரைகள் எழுதிவிட்டு ஓய்ந்து போய்விடுவதில்லை என்பது முக்கியமாகச் சொல்லவேண்டியது. தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதுகிறார்.

உலக அறிவியல் முன்னேற்றங்கள் குறித்துத் தொடர்ச்சியாகத் தமிழில் அறிமுகப்படுத்தும் ஆர்வமும் உழைப்பும் இருக்கிறது. சமீபத்தில் எழுத வந்த இளைஞர்களில் (குழந்தை என்றே சொல்லவேண்டும்!) தனிப்பாதை ஒன்றைக் கைக்கொண்டிருக்கிறார் ஹாலாஸ்யன். தொடர்ச்சியாக இதே திக்கில் இவர் எழுதுவாரானால் இவரது ஒட்டுமொத்த தொகுப்பு தமிழுக்கான கொடையாக இருக்கும்.

ஹாலாஸ்யனின் புத்தகங்கள்:

சிள்வண்டு முதல் கிகாபைட்ஸ் வரை, கிழக்கு பதிப்பகம்.
நுண்ணுயிர்கள் ஓர் அறிமுகம், யாவரும்.
எக்காலம், பார்வதி படைப்பகம்.

ஹாலாஸ்யனின் சில கட்டுரைகள்:

http://www.dinamani.com/junction/aachariyamoottum-ariviyal
http://www.valamonline.in/search/label/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
https://solvanam.com/author/halasyan/

ஹாலாஸ்யனின் ஃபேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/yes.eye.we.yea

 

 

 

Share

கெடை காடு

ஏக்நாத் எழுதிய கெடை காடு நாவல் படித்தேன். முன்பே வாங்கி வைத்திருந்த நாவல். அப்போது காவ்யா வெளியீடாக வந்தது. தற்போது டிஸ்கவரி வெளியீடாக வந்திருக்கிறது.

100-00-0002-258-9_b-01

நாவலின் சிறப்பு, கதை என்று எதுவுமில்லை. ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் நண்பர்கள் குழு மாடுகளைப் பத்திக்கொண்டு போய் குள்ராட்டி என்னும் மலைக்காட்டுக்குச் சென்று அங்கே தங்கி இருக்கிறார்கள். அவ்வளவுதான் கதை. இதனூடாகச் சொல்லப்படும் பல்வேறு நினைவுகள், சிறு கதைகள், நிகழ்வுகள் இதுதான் நாவல்.

இதனால் ஒட்டுமொத்த நாவலும் விவரணைகளாகவே இடம்பெறுகின்றன. காட்டையும் ஊரையும் அதன்வழியே கோனார்களையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஏக்நாத். இதில் இன்னும் சிறப்பு என்பது, நாவலின் விவரணைகளில் பயன்படுத்தப்படும் தமிழும் வார்த்தைகளும்தான். அப்படியே மண் மனம் கமழ, காட்டு மணம் கமழ மிகப் பிரமாதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் பேச்சு வழக்கில் நெல்லை வட்டார வழக்கு சுத்தமாகக் கையாளப்பட்டுள்ளது. வட்டார வழக்கின் பயன்பாட்டை தேவைக்காக மட்டும் பயன்படுத்தி இருப்பது அழகு. இல்லையென்றால் முழுமையாக நாவலில் உட்புகமுடியாமல் போயிருக்கலாம். இவ்வழக்குக்கு ஈடாக கதை சொல்லியின் நடை அமர்க்களப்படுத்துகிறது.

நாவலின் காலம் 70கள் என்று கொள்ளுமாறு பல குறிப்புகள் உள்ளன. இன்று வாசிக்கும்போது காட்டில் வசிப்பது குறித்த ஏக்கத்தைக் கொண்டு வருவதில் இந்நாவல் வெற்றி பெறுகிறது என்றே சொல்லவெண்டும். (இந்த இடத்தில் தேவையில்லை என்றாலும் ஒன்று – நாவலில் ஓரிடத்தில் அனைவரும் சிவாஜி எம்ஜியார் பாடல்களைப் பாடும் இடம். அதுவும் எதோ ஒரு ஏக்கத்தைத் தந்த ஒன்றே.)

சில குறைகள் என்று பார்த்தால் – நாவல் வெறும் கதை சொல்லல் என்ற போக்குக்கு மேல் எழவே இல்லை. நாவலின் பின்னணியாக எவ்வித அரசியல் வரலாற்றுப் பின்னணியும் வரவில்லை. இப்படி நிச்சயம் வரத்தான் வேண்டுமா என்பது ஒரு பக்கம். இப்படி வராததால் நாவல் மிக மிக நேர்க்கோட்டுப் பாதையில் வெறும் நிகழ்வுகளைப் பட்டியலிடும் ஒன்றாகக் குறுகிப் போய்விடுகிறது. இன்னொரு குறை என்றால், வாசகர்களை ஊகிக்கவிடாமல் அதை நாவலாசிரியரே சொல்வது. இதனால் ஒரு வைரமுத்துத்தனம் நாவலில் வந்துவிடுகிறது. கெடைக்குப் போய்விட்டு நாள்கழித்து வரும் மகனுக்கு அம்மா கோழி அடித்துக் குழம்பு வைக்கிறாள் என்பதே போதுமானது. பல நாள் நல்ல சாப்பாடு சாப்பிடாதவனுக்கு எந்த ஒரு தாயும் செய்வது இதைத்தான் என்பது யாருக்கும் புரியும். தாயுள்ளம் இதை ஏற்கெனவே அறிந்திருந்தது என்று எழுதுவது ஒரு திணிப்பு. இதை வாசகனே புரிந்துகொள்ளும்போது வரும் ஒரு இன்பத்தை இவ்வரிகள் குலைக்கின்றன. இதைப் போன்ற பயன்பாடு நாவல் முழுக்க பல இடங்களில் வருகிறது. உச்சிமகாளியின் காதல் முயற்சிகள் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகின்றன. கெடையை மேய்த்துக்கொண்டு காட்டைப் பற்றிய சித்திரங்களில் ஊர் பற்றிய நிகழ்வுகள் அதிகம் சொல்லப்படுவதும் ஒரு வகையில் சலிப்பே. கோனார்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு ஒட்டுமொத்த சித்திரம் நாவலில் உருவாகி வந்தாலும், மற்ற சாதிகளைப் பற்றிய விரிவான பதிவோ அவர்களுடனான உறவின் எல்லைகளோ சொல்லப்படவில்லை. எல்லா சாதியும் ஒன்றாக வாழ்ந்தார்கள் என்பது போன்ற சித்திரம் ஒன்று மட்டும் எப்படியோ மேலோட்டமாக உருவாகிறது.

இவற்றையெல்லாம் மீறி நாவல் நம்மைக் காட்டுக்குள் கொண்டு செல்கிறது என்பது உண்மைதான். காட்டைப் பற்றிய ஏக்கம் எல்லா நவீன மனங்களுக்குள்ளும் இருக்கிறது என்பதை இந்நாவல் சரியாகப் பிடித்துவிடுகிறது. அந்தக் காட்டைப் பற்றிய விவரணைகளில் நாவலாசிரியர் சொல்லும் பல விஷயங்கள், எத்தனை தூரம் இவர் காட்டைப் படித்திருக்கிறார் என்பதைப் புரியவைக்கிறது. காட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு எழுதுவது அல்ல, காட்டிலேயே வாழ்ந்து எழுதுவது. அவ்வகையில் இந்நாவல் ஒரு முக்கியமான பதிவுதான்.

நாவலை வாங்க: http://www.nhm.in/shop/1000000022589.html

Share