நீஸெவின் வேர்க்கனி – மயிலை ஜி சின்னப்பன் எழுதிய சிறிய நாவல். தீவிரமான மொழி. எனக்கானதல்ல. ஒவ்வொரு பத்தியும் படித்து முடித்த போது என்ன சொல்ல வருகிறார் என்பதைத் தனித்தனியே யோசிக்க வேண்டி இருந்தது. கோணங்கியின் எழுத்தளவுக்கு வெறுமை கொண்டதல்ல என்பதையும் இங்கே சொல்லத்தான் வேண்டும். தீவிரமான வாசனுக்கானது என்றாலும் கூட, ஒட்டுமொத்த படைப்பைப் படித்து முடிக்கும் போது என்ன புரிந்து கொண்டோம் என்பதில் ஒரு சவால் இருக்கும் என்றால் அதை எப்படி எதிர்கொள்வது? எல்லோரும் எழுதிச்செல்லும் களம் என்றில்லாமல் புதிய களம் புதிய நிலம் என்பதெல்லாம் வசீகரமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதாவது முழுமையாகப் புரிந்தது என்றும் சொல்வதற்கில்லை. மொத்தமாகப் புரியவில்லை என்று நிராகரிக்கவும் இயலவில்லை. சிறிய நாவல் என்பதும் இரண்டு பக்கத்துக்கு உள்ளான சிறிய சிறிய அத்தியாயங்கள் என்பதும் மிகப் பெரிய மன நிறைவைத் தந்தன!
Tag Archive for நாவல்
Aangaaram Novel
ஆங்காரம் நாவல் கிண்டிலில் வாசித்தேன். ஏக்நாத் எழுதியது. கதை பல இடங்களில் அலை பாய்வதைக் குறைத்திருக்கலாம். நெல்லை வழக்கும் களமும் ப்ளஸ். வாய்மொழிக் கதைகளுக்குப் பின்னே நாவலுடன் ஒரு தொடர்பு இருப்பது முக்கியம். இல்லையென்றால் அவை வெற்றுக் கதைகளாகவே எஞ்சும் அபாயம் உள்ளது. நாவல் முழுக்க வெளிப்படும் மண் சார்ந்த அனுபவத்துக்காக வாசிக்கலாம்.
Yad Vashem Novel
யாத் வஷேம் – யாத் வஷேம் என்றால் நினைவிடம் என்று பொருள். வதைமுகாம்களில் ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் நினைவாக ஜெருசலத்தில் இஸ்ரேல் நிறுவி இருக்கும் நினைவிடம் இது. இதைப் பின்னணியாக வைத்து ஒரு நாவல் எழுத நினைத்ததே பெரிய விஷயம். நேமிசந்த்ரா வாழ்த்துக்குரியவர். கன்னட நாவல், தமிழில் கே.நல்லதம்பி சிறப்பாக மொழி பெயர்த்திருக்கிறார். கன்னடம் எனக்குப் படிக்கத் தெரியாது என்பதாலும், கன்னட ஆடியோ புத்தகம் கிடைக்கவில்லை என்பதாலும் சில இடங்களை ஒப்பிட முடியவில்லை என்றாலும், சிறப்பான மொழிபெயர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 350 பக்க நாவலை ஒரே நாளில் முடித்தேன். அந்த அளவுக்கு வேகம். எதிர் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
நாவலின் முதல் நூறு பக்கங்கள் மிக மிக அருமை. மானுட தரிசனம் என்று சொல்வார்களே, அப்படி ஒரு தரிசனம். இந்தியாவில் தஞ்சமாகும் யூதச் சிறுமியைத் தன் குடும்பப் பெண்ணாக்கிக் கொள்ளும் இந்திய ஹிந்து வொக்கலிகா குடும்பம் மனதைக் கொள்ளை கொண்டு விட்டது. இந்த நாவலின் அற்புதமான பக்கங்கள் இவை. அதிலும் கன்னடத்தில் எப்படி எழுதி இருப்பார்கள் என்கிற யூகத்துடன் வாசித்த எனக்கு மகத்தான அனுபவமாகவே அமைந்தது.
தன் குடும்பத்தைத் தேடி யூதப் பெண் தன் முதிய வயதில் தன் கணவனுடன் மேற்கொள்ளும் பயணமும், யூத வதைமுகாம்களைப் பார்ப்பதும், யூதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அது வரை நினைத்து வருந்தும் பெண், ஒட்டுமொத்த உலகின் அடக்குமுறைகளுக்கு எதிராக நினைக்கத் தொடங்குவதும் அடுத்து வருகின்றன.
இறுதியில் தன் அக்காவைச் சந்திக்கும் கதாநாயகியின் குடும்பம் எதிர்கொண்ட அராஜகங்கள் விவரிக்கப்படுகின்றன. எல்லா யூதக் குடும்பத்திற்கான ஒட்டுமொத்த சித்திரமும் அதுவே.
அடுத்த ஐம்பது பக்கம் – என் பார்வையில் திருஷ்டிப் பொட்டு என்றே சொல்லவேண்டும்.
அதுவரை நாவல் யூதர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்காகப் பரிதவிப்புடன் நாவல் பேசுகிறது. இந்தியா அந்த யூதப் பெண்ணை எப்படி அரவணைத்தது என்று சிலாகிக்கிறது. இந்தியா பல்வேறு மோழி மத இன வேறுபாடுகளுடன் இருந்தாலும், அதன் அரவணைப்பில் எந்தக் குறையும் இல்லை என்று கொண்டாடுகிறது. தன் அக்காவைக் கண்டதும் அதுவரை இருந்த நினைவுகள் தர்க்கமாக மாற, மத ரீதியான ஒட்டுமொத்த கொடுமைகளுக்காக அந்தக் கதாபாத்திரம் பேச ஆரம்பிக்கிறது., எழுத்தாளர் நேமிசந்த்ராவின் ஒட்டுமொத்த மத விடுதலையை ஒட்டிய தர்க்கம் இது என்று கொண்டாலும், என்னளவில் அது நம்ம ஊர் செக்யூலர் ஜல்லியாகவே தெரிந்தது.
எந்த ஒரு மதமும் வன்முறையைப் போதிக்கவில்லை என்பது வரை சரி, ஆனால் யூத மண்ணில் யூதர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு நின்ற மனிதர்களை அதுவரை கடுமையாகப் பேசிய நாவல், அதிலிருந்து அவர்கள் பக்க நியாயத்தையோ அல்லது இரக்கத்தையோ பேச ஆரம்பிப்பது ஏற்கும்படியாகவே இல்லை. எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் ஹிட்லர் வரக் கூடும் என்கிற தியரியை, ரத்தமும் சதையுமாக வேதனையை உணர்ந்தவர்களிடம் பேசுவதெல்லாம் அபத்தம். யதார்த்த கொடூரங்களில் இருந்து தான் மேலெழுந்துவிட்டதான பாவனை என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை என்றே எனக்குப் பட்டது. இந்தப் பாவனை கதாநாயகியுடையதாகவும் இருக்கலாம், நேமிசந்த்ராவினுடையதாகவும் இருக்கலாம்.
போக போக தர்க்கங்கள் எல்லை மீறிப் போகின்றன. இது நாவலா தர்க்கமா என்ற குழப்பம் ஏற்படும் அளவுக்கு. அதிலும் கடைசி இரு அத்தியாயங்களில் தன் வீட்டுக்கு வரும் முஸ்லிம் பெண்ணுக்கு அடைக்கலம் தருவதெல்லாம் தவறில்லை, ஆனால் சுத்த முற்போக்கு அபத்த நாடகம்.
இந்த நாவலை எப்படி எழுதினேன் என்று நேமிசந்த்ரா கடைசி இருபது பக்கங்களில் எழுதி இருக்கிறார். நான் நாவலை வாசிக்கும்போது என்னவெல்லாம் நினைத்தேனோ அதற்கு ஏற்றாற்போன்ற காரணங்களை அதில் பார்க்க முடிந்தது. நாவலின் கடைசி அத்தியாத்தைத் திருத்தி எழுதியதாகச் சொல்லி இருக்கிறார். இன்றைய செக்யூலர் அரசியல் சரி நிலைக்கு ஏற்ப நாவலை மாற்றி எழுதியது போல் எனக்குத் தோன்றியது. நாவலின் முதல் இருநூறு பக்கங்களில் நாவலில் இருந்த நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வழக்கமான ஒரு நீதியைச் சொல்லும் இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டது துரதிர்ஷ்டம்.
முக்கியமான நாவல். நிச்சயம் வாசிக்கவேண்டிய நாவல். யூதர்களின் வாழ்க்கையும் இந்தியர்களின் வாழ்க்கையும் ஒப்பிடப்பட்டு இத்தனை விரிவாக எந்த நாவலிலும் இதுவரை விவாதிக்கப்பட்டதில்லை என்றே நினைக்கிறேன்.
Two Tamil novels
ராஜ வனம் – ராம் தங்கம் எழுதிய சிறு நாவல். கிண்டிலில் வாசித்தேன். காடு, அவன் காட்டை வென்றான், கெடைக்காடு, ஆரண்யக், கானகன் போன்ற நாவல்களைப் படிக்காதவர்களுக்கு இந்த நாவல் காட்டைப் பற்றி ஓர் ஆச்சரியத்தைச் சிறிய அளவில் தரக்கூடும். அந்த நாவல்களை வாசித்தவர்களுக்கு இது இன்னும் ஒரு காட்டைப் பற்றி நாவலாகவே மிஞ்சும். காட்டைப் பற்றிய நாவலுக்கு அபாரமான கற்பனையும் யதார்த்தமான காட்டு வாழ்க்கை அனுபவமும் தேவை. இந்த நாவலில் காட்டைப் பற்றிய இடங்கள் கொஞ்சம் தேங்கினாலும், கூறியதே மீண்டும் மீண்டும் கூறுவதாகப் பட்டாலும், பழங்குடியினரின் வாழ்க்கை பற்றிய விவரங்கள் மற்றும் நிகழ்வுகள் கொஞ்சம் மேலெழுந்து வருகின்றன. இன்னும் ஆழமாக விரிவாக இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் தோன்றாமல் இல்லை.
வேசடை – ஏக்நாத்தின் சிறு நாவல். ஏற்கெனவே இவர் எழுதிய கெடைகாடு நாவலைப் படித்திருக்கிறேன். அந்த நாவிலிலும் கதை என்று ஒன்று கிடையாது. வட்டாரம், இடங்கள் மற்றும் மனிதர்களைப் பற்றிய விவரணைகளும் அதனூடாகச் செல்லப்படும் சில நிகழ்வுகளுமே கதை. அதே போல் தான் இந்த நாவலும். அந்த நாவலில் இயற்கையான காடு ஒன்றைப் பார்க்க முடிந்தது. இந்த நாவலில் ஒரு சிறிய பற்றுக்கோடாகக் கதை என்ற ஒன்று இருக்கிறது. மற்றபடி பல்வேறு காலங்களில் நிகழும் காலமாற்றம், அதை ஒட்டிய ஒரு கிராமத்து மனிதனின் நினைவுகளுமாகக் கதை நீள்கிறது. கெடைகாடு அளவுக்கு இல்லை என்றாலும், இதை வாசிக்கலாம். இன்னும் ஆழமாக அடர்த்தியாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியதை மறுக்க முடியாது. நாவலில் வரும் நிகழ்வுகள் எவையுமே புதியதாக இல்லை என்பதும் ஒரு குறை. நெல்லை வட்டார வழக்கு பிடித்தவர்களுக்கு இந்த நாவல் கூடுதலாக ஒட்டிக்கொள்ளக் கூடும்.
ஆக்காண்டி
ஆக்காண்டி – தைரியமான நாவல். முக்கியமான நாவல். சில நாவல்களை எழுத தைரியம் தேவை. இது அந்த வகை நாவல். ஈழப் படைப்புகள் அனைத்தும் தமிழகத் தமிழர்களின் பார்வையில் முன்பெல்லாம் ஒரே வகையினதாகத் தெரிந்துகொண்டிருக்க, வாசு முருகவேலின் நாவல்கள் அவற்றிலிருந்து வேறுபட்டு வருகின்றன. ஒற்றைப்படைத் தன்மையிலிருந்து மேலேறி உள்முரண்களையும் அதே சமயம் ஈழக் குரலின் அடிநாதத்தை விட்டுவிடாமலும் இருக்கின்றன. இதனாலேயே அவருக்கு ஆதரவை விட எதிர்ப்பே அதிகம்.
அடிப்படைவாதக் குரல்கள் என்று முத்திரை குத்தப்பட்ட குரல்களில் ஒன்று, இஸ்லாமியர்களையும் அதன் பயங்கரவாதத்தையும் நியாயமாக வேறுபடுத்திப் பார்க்கச் சொல்வது. இந்த நிதர்சனம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தக் குரலின் மீது அடிப்படைவாதக் குரல் என்று முத்திரை குத்தப்பட்டது. இது முற்போக்காளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அரசியலுக்கு உகந்ததாகவும் இருந்தது. வாசு முருகவேல் இந்தக் கருத்தாக்கத்தைத் தரவுகளுடன் கூடிய புனைவால் உடைக்கிறார். இதனாலேயே அவருக்கு எதிர்ப்பு அதிகமும் வருகிறது. அதே சமயம் இவர், முற்போக்காளர்கள் சொல்லும் அடிப்படைவாதக் குழுவில் இருப்பவரும் அல்ல என்பது இவரை முழுவதுமாகக் கை கழுவ முடியாமல் அவர்களைப் படுத்துகிறது.
ஈழத் தமிழ் மக்கள், அங்கே வசிக்கும் இஸ்லாமியத் தமிழ் மக்கள் இருவருக்குமான முரண், பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் நாவல், இவர்கள் மீதான சிங்கள பௌத்த ஆதிக்கத்தையும் ஒருங்கே பேசுகிறது. அரசியலில் பகடைகள் எப்படி நேரம் பார்த்து வீசப்படுகின்றன என்பதை இந்த நாவல் தெளிவாக்குகிறது.
வாசு முருகவேலின் நாவல்களில் எனக்கிருக்கும் குறைகள் இந்த நாவலிலும் உண்டு. ஒன்று, புதிர் போலப் பேசிச் செல்வது. இது புரிந்தவர்களுக்குப் பெரிய வாசிப்பனுபத்தைத் தரும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அலுப்பைத் தந்துவிடக் கூடும். அடுத்தது, விரிவாகச் சொல்லவேண்டிய விஷயத்தை ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போவது. இதை ஓர் உத்தியாகவே அவர் நினைவோடு செய்யக் கூடும். ஆனால் இதை அவர் பரிசீலிப்பது நல்லது.
இன்னொரு வகையில் பார்த்தால், எப்படா நாவல் முடியும் என்பதைவிட, நாவல் முடிந்துவிட்டதே என்று நினைப்பதுவும் நல்லதற்குத்தான். நிச்சயம் வாசித்துப் பாருங்கள். அகிலன், தாசன், அவன் தங்கைக்காகவாவது வாசியுங்கள்.
புகார் நகரத்துப் பெருவணிகன் – முன்னோர் சொல்
சில நாவல்களைப் படிக்கும்போது ஒரு புல்லரிப்பு ஏற்படும். அது சில சமயம் வெகுஜன நாவலாக இருக்கும். சில சமயம் தீவிர இலக்கிய நாவலாக இருக்கும். எதனால் புல்லரிப்பு ஏற்படுகிறது என்பது நாம் என்ன படிக்கிறோம், நம் மனநிலை என்ன, நம் நிலைப்பாடு என்ன என்பதையெல்லாம் பொருத்தது. இன்று சமூக ஊடகங்களில் எந்த ஒரு சீரியஸ் விஷயத்தையும் தொடர்ச்சியாகச் சொல்வதன் மூலம் அதைக் கேலிச் சொல்லாடலாக மாற்றிவிடலாம். எல்லையில் வீரர்கள் என்பதைச் சொல்லலாம். நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதைச் சொல்லலாம். இப்படிச் சொல்வதற்கு ஏற்றமாதிரிதான் சிலர் நடந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் எல்லா நேரங்களிலும் இந்தக் கேலிச் சொல்லாடல் அதன் நிஜமான நோக்கத்துடன் சொல்லப்படுவதில்லை.
ஒரு நாவல் முழுக்க, பக்கத்துக்குப் பக்கம், வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? திரைப்படங்களில் பன்ச் வசனம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். ஒரு படத்தின் வெற்றிக்கு அது உதவும் என்பதற்காகப் படம் முழுக்க பன்ச்சாக இருந்தால்? பிடிக்காது என்றுதானே நினைக்கிறீர்கள்? உண்மைதான். ஒருவேளை, அதாவது ஒருவேளை அப்படிப் படம் முழுக்க பன்ச்சாக இருந்து, அதுவும் மிகவும் நன்றாக இருந்துவிட்டால்? அது ஒரு கற்பனைத் திரைப்படமாக மட்டுமே இருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? அப்படி ஒரு கனவு நாவல்தான் புகார் நகரத்துப் பெரு வணிகன்.
உண்மையில் இது ஒரு பழிவாங்கும் படலம் உள்ள நாவல். பழி வாங்கும் படலம் நான்கு வரிகள் என்றால் நாலாயிரம் வரிக்குச் சொல்லப்படுபவை எல்லாம் தமிழனின் பெருமைகளே. கவனியுங்கள். தமிழின் பெருமை அல்ல. அதுவும் இருக்கிறது. ஆனால் வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை சொல்லப்படுவது தமிழனின் பெருமைதான். அதுவும் ஆதாரத்தோடு. அதுவும் விளக்கமாக. மிக முக்கியமாக எந்த ஒரு இனத்தின் மீதும் எந்த ஒரு பகுதியின் மீதும் வெறுப்பைத் தூவாமல் சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் இது கனவு நாவல் என்று புரிகிறதா?
எந்த ஒன்றைப் பற்றியும் விரிவான, மிக மிக மிக விரிவான செய்திகளைப் பட்டியலிட்டே தீருவது என்ற முடிவோடு நாவலை எழுதி இருக்கிறார் பா.பிரபாகரன். இவர் எழுதிய முதல் நூலான ‘குமரிக் கண்டமும் சுமேரியமும்’ ஒரு சூப்பர் ஹிட் புத்தகம். இந்த நூலில் பிரபாகரன் திகைக்க வைக்கிறார். ஒரு கட்டத்தில், ‘சாமி போதும்’ என்று அவரை அழைத்து வந்து காலில் விழுந்துவிடலாமா என்று கூடத் தோன்றுகிறது. படிக்கும் நமக்கு மூச்சு வாங்குகிறது. ஆனால் பிரபாகரன் அசருவதே இல்லை. விட்டால் இன்னும் ஆயிரம் பக்கங்களுக்குத் தமிழர்களின் பெருமைகளை அள்ளித் தெளித்துப் போய்க்கொண்டே இருப்பார் போல.
வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை என்று சொன்னேன் இல்லையா? அது மிகைப்படுத்திச் சொன்னது அல்ல. சும்மா நானாக என் கற்பனையில் ஒரு உதாரணம் சொல்கிறேன். கப்பலில் பயணித்தார்கள். காற்று அடித்தது. திசையைப் பார்த்தார்கள். கப்பலோடி யோசித்தான். இந்த நான்கு வரிகளைச் சொல்ல வேண்டும் என்றால் பிரபாகரன் என்ன செய்கிறார் தெரியுமா? கப்பல் என்றால் அதில் எத்தனை வகை, என்ன என்ன வகை, ஒவ்வொன்றின் பெயர் என்ன என்று சொல்கிறார். பயணம் என்றால் எப்படிப்பட்ட பயணம் என்று ஒரு விளக்கம். காற்று என்றால் எத்தனை வகையான காற்று, எத்தனை வகையான திசை என்றெல்லாம் ஒரு பட்டியல். திசை என்றால் எத்தனை திசை என்று பட்டியல். கப்பலோடி என்றால், எத்தனை வகையான கப்பலோடிகள், ஒவ்வொருவரின் பெயர் என்ன, அவர்களுக்கு என்ன என்ன வேலை இப்படியான பட்டியல். நான் சொன்னது 1% கூட இல்லை! இப்போது யோசித்துப் பாருங்கள். நானூறு பக்க நாவலில் எத்தனை விளக்கங்கள் இருக்கும் என்று. எத்தனை பட்டியல் இருக்கும் என்று. கிட்டத்தட்ட ஒரு என்சைக்ளோபீடியாவையே கையில் தந்துவிட்டார் பிரபாகரன். சேலை என்றாலும் பட்டியல், உணவு என்றாலும் பட்டியல், முலைக்கச்சை என்றால்கூட பட்டியல்தான். அவர் என்ன என்ன பட்டியல் இட்டிருக்கிறார் என்பதைத் தனியே தொகுத்தால் அவையே இருநூறு பக்கங்கள் வரும்.
ஈழம், சீனா என்றெல்லாம் செல்லும் நாவல், சீனாவைக் கொஞ்சம் நெருக்கமாகவே காட்டுகிறது. அதுவும் அந்தக் கால சீனா, அவர்களின் வணிகம், அவர்களின் வாழ்க்கை முறை என்று கொஞ்சம் விரிவாகவே சொல்கிறது. பட்டியலும் விளக்கமும் தமிழர்களுக்கு மட்டும் அல்ல, சீனர்களுக்கும் உண்டு!
தவறவிட்டுவிடக் கூடாத நாவல். தமிழர்களின் பெருமைக்கு மகுடம் தந்திருக்கிறார் பிரபாகரன். அதிலும் எந்த ஒரு மொழியையும் இகழாமல், இந்தியாவை வெறுக்காமல், நிஜமான தமிழ் உணர்வுடன் கூடிய நாவல் இது. இதற்காகவே இந்த நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது தரப்படவேண்டும். அத்தனை முக்கியமான நாவல் இது. Dont miss it.
ஆன்லைனில் அச்சுப் புத்தகமும், இபுத்தகமும் கிடைக்கும். அமேஸான், ஃப்ளிப்கார்ட், டயல் ஃபார் புக்ஸில் தேடிப் பாருங்கள்.
கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல்
வாசு முருகவேலின் கலாதீபம் லொட்ஜ், நாவல், கிழக்கு பதிப்பகம், ரூ 180
மிக நேரடியான நாவல். இவரது முதல் நாவல் ஜெஃப்னா பேக்கரி பரவலான வரவேற்பையும், ‘கஷ்டமான நாவலாச்சே’ என்ற விமர்சனத்தையும் ஒருங்கே பெற்றது என்பதால் இது நேரடியான நாவல் என்பதைத் தனியே குறிப்பிட வேண்டியிருக்கிறது. கலாதீபம் லொட்ஜ் (லாட்ஜ்) என்ற இடத்தில் தங்கி வெளிநாடு போக விசா எடுக்க வரும் ஈழத் தமிழர்களைச் சுற்றிச் செல்லும் நாவல் இது. இதை மையமாக வைத்து இங்கே வரும் மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்களைச் சொல்கிறார் வாசு முருகவேல்.

பொதுவாக இந்த உத்தியில் அமையும் நாவல்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு ஒரு தொடர்பை வலிந்து உருவாக்க வேண்டி வரும். ஆனால் இச்சிக்கல்களுக்குள் எல்லாம் இந்நாவல் விழவில்லை. எவ்விதக் குழப்பமும் இன்றி எடுத்துக்கொண்ட விஷயத்தைச் சொல்வது என்ற ஒரு நோக்கத்தில் மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக இது போன்ற நாவல்களில் வரும் அலுப்பு இதில் இல்லை. ஒருவேளை ஈழத் தமிழ் நாவல்களை அதிகம் வாசித்திருப்பவர்களுக்கு சிறிய சலிப்பு வரலாமோ என்னமோ எனக்குத் தெரியவில்லை.
இந்நாவலில் அங்கங்கே வெளிப்படும் மெல்லிய நகைச்சுவையும் அங்கதமும் மிக முக்கியமானவை. ஏனென்றால் அவை நிகழும் தருணங்கள் அப்படிப்பட்டவை. அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த பத்தியை இரண்டு முறை வாசிக்கும்போதும் சிரித்தேன். அதிலும் என்னைப் போன்ற இளையராஜா வெறியர்களுக்குப் பிடித்த ‘விமர்சனம்’ அது. ஆனால் அது உண்மையல்ல என்பது எழுதியவருக்கும் வாசிப்பவர்களுக்கும் தெரியும் என்றும் சொல்லி வைக்கிறேன்.
கொழும்பில் சிங்கள கூலித் தொழிலாளர்களுக்கும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தமிழர்களுக்கும் நிலவும் நட்புணர்வை இந்நாவல் சொல்வது மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. குறிப்பாக ‘குடு தர்மபால’ பாத்திரம். மறக்கமுடியாத ஒன்று.
ஒவ்வொரு நாவலுக்கும் ஏதோ ஒரு மையம் உச்சம் கொள்ளும். இந்நாவலில் அது நிகழ்ந்திருப்பது, கொழும்பன்ரியின் மகனுக்கும் தாரணிக்கும் முகிழும் அன்பு. முகிழும் என்ற வார்த்தையே இதற்குச் சரியானது என்று நினைக்கிறேன். அதேபோல் ஒரு வரியில் ஈரம் சொட்ட வைத்த இடம், தன் கையில் இருப்பது சாயம்தானே ஒழிய நீர் இறைத்து இறைத்து கை சிவந்துவிடவில்லை என்று தம்பிக்காக தாரணி சொல்லும் இடம்.
மிக ரசிக்கத்தக்க நாவல்.
இந்நாவலில் ரசிக்கத்தக்க ஒரு கவிதை வருகிறது, தமிழ்நதி எழுதியது. நீண்ட நாள்களாக மனதில் சுழன்றுகொண்டே இருந்த கவிதை அது.
அவன் எப்படியும் வந்து விடுவானென்று நம்பினேன்
குண்டு வீச்சு விமானங்களுக்கும்
எறிகணைகளுக்கும்
விசாரணைச் சாவடிகளின்
கண்களுக்கும் தப்பி.
அவனது ஒளிபொருந்திய புன்னகையை
எதிர்கொள்ள
இருண்ட தெருக்களைக் கடந்துவந்தேன்.
-தமிழ்நதி
ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9788184939835.html
போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044-49595818
பேட்டை – சிந்தாதிரிப் பேட்டையின் சித்திரம்
பேட்டை: சிந்தாதிரிப் பேட்டையின் சித்திரம்
தமிழ்ப் பிரபா எழுதி இருக்கும் நாவல், காலச்சுவடு வெளியீடு. நாவலின் முக்கியமான பலம், இதன் அசல் தன்மை. தன் வாழ்க்கையில் இருந்து மனிதர்களையும் கதைகளையும் எடுத்துக்கொண்டதால் நாவலாசிரியரின் நெஞ்சிலிருந்து உணர்வுபூர்வமாக முகிழ்ந்த நாவலாகிறது. இது ஒரு வகையில் பலம், சிறிய வகையில் பலவீனமும்கூட. ஆனால் அந்த பலவீனத்தைத் தாண்டி நாவலின் அசல் தன்மை, இந்த சுய சரிதைச் சாயலாம் கூடுதல் கனம் கொள்கிறது.
சென்னைத் தமிழ் இத்தனை சிறப்பாகக் கையாளப்பட்ட இன்னொரு நாவல் இருக்குமா என்பது சந்தேகமே. சென்னைத் தமிழோடு அதன் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அவர்களுக்கே உரிய தனித்துவத்தையும் பெறுவது நாவலின் மிகப் பெரிய வெற்றி. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனியே மெனக்கெட்டு விவரிக்காமல் கதை மற்றும் நிகழ்வுகளின் போக்கிலேயே அவை அவற்றுக்குரிய உச்சத்தைப் பெறும் வகையில் நாவல் எழுதப்பட்டுள்ளது.
சென்னையின் சேரிகளில் இருக்கும் கிறித்துவ தாழ்த்தப்பட்டவர்களின் கதைகளை இத்தனை அருகில் நான் வாசித்ததில்லை. அவர்கள் மதத்தில் கிறித்துவர்களாகவும் பண்பாட்டில் கிறித்துவ மற்றும் ஹிந்துக்களாகவும் வாழ்கிறார்கள். ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொள்ளும் கிறித்துவர்களின் பண்பாடு ஒரு சான்று. மதத்தைப் பரப்ப நினைக்கும் சபைகளை இத்தனை உடைத்துப் போட்டு எழுதியது ஆச்சரியம்தான். அதனால் இது ஹிந்து மதத்தைத் தூக்கிப் பிடிப்பதும் இல்லை. சேரிகளின் வாழ்க்கை முறை இப்படித்தான் என்று வெளிப்படையாகப் பேசும் நாவல். கூடவே ஹிந்து மதத்துக்காரர்களின் பிரச்சினைகளையும் சேரி வாழ் மக்களின் பார்வையில் நாவன் முன்வைக்கவும் செய்கிறது.
இடையில் ரூபன் நாவல் எழுதுவதாகச் சொல்லும் அத்தியாயங்கள் மட்டுமே நிலையில்லாமல் அலைபாய்கின்றன. சௌமியனின் ஆவி இறங்கிவிட்ட பின்பு ரூபனைச் சுற்றி நாவல் வேகம் கொள்கிறது. ரூபன், சௌமியன், ரெஜினா, நகோமியம்மா, குணசீலன், இவாஞ்சலின் என பல கதாபாத்திரங்கள் நம் மனதில் நிற்கின்றன.
வட சென்னைக்கே உரிய பல குணங்களை நாவல் தொட்டுச் செல்கிறது. சுவரில் படம் வரைவது, கேரம் விளையாட்டு எனப் பல விஷயங்கள் நாவலில் வெறுமனே களம் என்கிற அளவில் இல்லாமல், கதையோடும் கதாபாத்திரங்களோடும் இடம்பெறுகின்றன.
பேட்டை, நல்ல முயற்சி.