Tag Archive for திரைப்படம்

நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்)

எனது ‘நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள்’ புத்தகங்களுக்கு நான் எழுதிய முன்னுரை இங்கே. முதல் பாகம் ரூ 140. இரண்டாம் பாகம் ரூ 170. இரண்டு புத்தகங்களையும் சேர்த்து ஆன்லைனில் டயல் ஃபார் புக்ஸ் மூலம் ஆர்டர் செய்ய: https://dialforbooks.in/product/1000000030652_/ (தனித்தனியாகவும் வாங்கிக் கொள்ளலாம்.)

போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ்: 044-49595818 | 9445901234

வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய (மெசேஜ் மட்டும்): டயல் ஃபார் புக்ஸ்: 9500045609

பாகம் 2க்கான முன்னுரை:

தமிழ்த் திரையுலகம் புதிய அலை இயக்குநர்களின் வருகைக்குப் பின்பு மிக வேகமாக ஹிந்து – ஹிந்துத்துவ – இந்திய வெறுப்புக்குள் தீவிரமாகப் பயணிக்கிறது. ஹிந்துக்களைக் கிண்டல் செய்யும் ஒரு காட்சி இல்லை என்றால் சென்சார் சான்றிதழ் கிடைக்காது என்னும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பும் நிலைமை இப்படித்தான் இருந்தது என்றாலும், எவ்வித அரசியலும் அற்ற படங்களும் வந்துகொண்டிருந்தன. ஆனால் இன்று எந்த ஒரு படத்திலும் தேவையே இல்லாமல் ஹிந்துக்களைக் குறை சொல்வது என்பது வேண்டுமென்றே திணிக்கப்படுவதைப் பார்க்கலாம்.

தமிழ்த் திரையுலகம் இந்த வகையான ஹிந்து எதிர்ப்புச் சொல்லாடல்களை மூன்று வகைகளில் பயன்படுத்துகிறது. ஒன்று மிக நேரிடையான அரசியல் படங்கள். காலா, ஜிப்ஸி போல. அடுத்ததாக, படத்தில் குறியீடுகளைப் பரப்புவது. ஆர்.கே.நகர் போல. அடுத்ததாக, தேவையே இல்லாமல் காட்சிகளையோ அல்லது வசனத்தையோ வைப்பது. ப்ரேம் ப்யார் காதல் (கதாநாயகன் அணிந்திருக்கும் ஒரு டீ ஷர்ட்டில் சிலுவையுடன் பிலீவ் மி என்று இருக்கும்) அல்லது சிலுக்குவார்பட்டி சிங்கம் போல. அல்லது கொஞ்சம் கூட முக்கியமற்ற ஒரு நடிகர் ஒரு வசனத்தைச் சொல்லிவிட்டது போவது. இப்படிப் பல முனைத் தாக்குதல்களில் இறங்கி இருக்கிறது தமிழ்த் திரையுலகம்.

இவையெல்லாம் சாதாரணமாக நடப்பது, அதற்கு தேவையற்ற கவனம் தருகிறோம் என்று சிலர் சொல்வதைக் கேட்கிறேன். திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் எத்தனை மெனக்கடலுடன் எத்தனை பேர் ஈடுபாட்டில் வருகிறது என்று புரிந்தால் இப்படிச் சொல்ல மாட்டார்கள்.

என் நண்பர் ஒருவர் சொன்ன விஷயம் அது. அவர் ஒரு ஹிந்து அமைப்புக்கு உதவும் சிறிய கிளை அமைப்பில் பொறுப்பில் இருக்கிறார். அவரது அலுவலகத்தை ஒரு படம் எடுக்கப் பயன்படுத்திக்கொள்ளக் கேட்டிருக்கிறார்கள். அலுவலகமும் அதிகம் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டார்கள் போல. அந்த அலுவலகத்தின் வரவேற்பு மேஜையில் ஒரு விவேகானந்தர் சிலை இருக்குமாம். அது வரக்கூடாது என்று படத்தின் இயக்குநர் சொல்லி இருக்கிறார். படக்குழு அந்த விவேகானந்தர் சிலையை எடுத்து ஓரமாக வைத்துவிட்டது. பின்னர் பின்னணியில் கார்ல் மார்க்ஸ் படம் வரவேண்டும் என்று சொல்லி அங்கே மார்க்ஸை ஒட்ட வந்திருக்கிறார்கள். அப்போதுதான் அலுவலகத்துக்கு உறைத்திருக்கிறது, இதையெல்லாம் யோசிக்காமல் சம்மதித்துவிட்டோமே என்று. அந்தப் படம் வெளியாகவில்லை என்பது ஒரு நிம்மதி. ஆனால் இதில் இன்னொரு சோகமும் உள்ளது. அந்த இயக்குநர் போகும்போது அழகான அந்த விவேகானந்தர் சிலையைக் கொண்டு போய்விட்டாராம்! அதாவது படத்தின் சட்டகத்துக்குள் விவேகானந்தர் வரத் தேவையில்லை. கார்ல் மார்க்ஸ் வரவேண்டும். ஆனால் விட்டுக்கு விவேகானந்தர் சிலை வேண்டும்!

எனவே ஒரு காட்சியில் ஒருவர் நாமம் போட்டு வருகிறார் என்றாலோ அல்லது உத்திராட்சை அணிந்து வருகிறார் என்றாலோ அல்லது எவ்வித அடையாளமும் இன்றி வருகிறார் என்றாலோ அல்லது பின்னணியில் ஏதேனும் ஒரு படம் இருக்கிறது என்றாலோ அது எதுவுமே தற்செயல் அல்ல. மிகத் தெளிவாக யோசித்தே வைக்கப்படும் ஒன்றுதான். நாம் அதை எதிர்கொண்டாகத்தான் வேண்டும்.

சிலர் கேட்டார்கள், முன்பெல்லாம் திரைப்படத்தில் வில்லனுக்கு கிறித்துவப் பெயர்கள் வருகின்றனவே என்று. உண்மைதான். ஆனால் அவற்றுக்கும் இன்று நிகழ்வதற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. அன்று நிகழ்ந்ததன் பின்னால், திரைப்படத்தில் தொற்றிக்கொண்டிருந்த (இப்போதும் இருக்கும்) ‘வழக்கத்தை அப்படியே பின்பற்றுவது’ என்ற எண்ணம் மட்டுமே. இதே திரைப்படங்களில் அனாதை ஆசிரமம் என்றாலே கிறித்துவ ஆசிரமங்கள் காட்டப்படுவதைப் பார்க்கலாம். இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம், இதன் பின்னணியில் எவ்விதக் கருத்துத் திணிப்பும் இல்லை என்பதை. ஆனால் இன்று வரும் திரைப்படங்களில் வரும் ஹிந்து எதிர்ப்பு மிகத் தீவிரமான உள்நோக்கத்தோடு, அரசியல் நோக்கத்தோடு புகுத்தப்படுகிறது. இதுதான் வித்தியாசம். எனவே அரசியல் நோக்கத்தோடு செய்யப்படும் விஷயத்தை அதே அரசியல் நோக்கத்தோடுதான் எதிர்க்கவேண்டும். இதில் நடுநிலை என்பதும் கலை என்பதும் அடிபட்டுப் போய்விடும். எந்தப் படம் அரசியல் சார்பின்றி கலையைப் பேசுகிறதோ அந்தப் படத்தை மட்டுமே கலையை மட்டும் கொண்டு எடை போட முடியும்.

ஏன் தமிழ்த் திரையுலகம் இப்படி இருக்கிறது? மிகப் பெரிய கேள்வி இது. படத்தை யார் தயாரிக்கிறார்கள், அவர்களது நோக்கம் என்ன என்பதை யோசிப்பதில்தான் இதற்கான பதில் இருக்கிறது. அனைத்துத் தயாரிப்பாளர்கள், அனைத்து இயக்குநர்கள் என அனைவரின் அரசியல் நிலைப்பாடும் ஹிந்து எதிர்ப்பாக இருக்கிறது என்பது முதல் காரணம். இதனால் புதியதாக வரும் இயக்குநர்கள் கூட இந்த ‘வழக்கத்துக்கு’ ஆட்பட்டாக வேண்டியது அவசியம் என்பது இரண்டாவது காரணம். பின்பு அவர்களும் இதே பழக்கத்தில் ஊறிப் போய்விடுகிறார்கள் என்பது நம் அவலம்தான். எத்தனை திட்டினாலும் ஹிந்துக்கள் ஒரு அமைப்பாகத் திரளவே போவதில்லை, அத்தனை தூரம் அவர்களை மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறது திராவிட அரசியல் என்பது அடுத்த காரணம்.

இதற்கெல்லாம் விடிவுகாலம் இல்லையா? இருக்கிறது. தொடர்ச்சியாக இது போன்ற திரைப்படங்களைப் பற்றிப் பேசி மக்களிடம் கொண்டு போவது முக்கியமானது. சிலர் சொல்கிறார்கள், சென்சாரைக் கொண்டு இப்படங்களை முடக்கவேண்டும் என்று. நான் அதை ஏற்கவில்லை. கருத்துச் சுதந்திரம் என்பது முக்கியமானது. நாம் கருத்தை கருத்தால்தான் முறியடிக்க வேண்டும். அதற்குச் சில வருடங்கள் ஆகலாம். சில பத்து வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் முயன்றுதான் ஆகவேண்டும்.

இன்று OTT எனப்படும் ஸ்ட்ரீமிங் தளத்தின் மூலம் படங்களை வெளியிடும் வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது. இங்கேயும் இது போன்ற படங்கள்தான் வரும் என்றாலும், இதற்கு எதிர்த்தரப்புப் படங்கள் வருவதில் பெரிய சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கலாம். இதைப் பயன்படுத்திக்கொள்வது இன்னொரு வாய்ப்பு.

ஒட்டுமொத்த திரையுலகமும் அரசியல் மற்றும் மதக் குறியீடுகளின் பின்னால் போய் ஒரு நல்ல திரைப்பட அனுபவமே இல்லாமல் போய்விட்டது. இது தமிழக மக்களுக்கு நிச்சயம் ஒரு எரிச்சலைத் தரும். அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்வது இன்னொரு வாய்ப்பு. அதற்கு நாம் தொடர்ந்து இத்திரைப்படங்களின் பின்னணி பற்றியும், இத்திரைப்படத்தின் உண்மையான நோக்கம் பற்றியும் பேசிக்கொண்டிருக்க வேண்டும். அது முக்கியம். இப்படிப் பேசுவதால் ஒரு பலனும் இல்லை என்று சிலர் சொல்லலாம். அதில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம். அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயல்படுவது, தீவிரமாக இதைப் பற்றி எழுதுவது – இவைதான் நம் முன்னே இருக்கும் ஒரே வாய்ப்பு. அதைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

‘திரௌபதி’ என்ற ஒரு திரைப்படம் இன்று பலருக்கும் பல எரிச்சலைக் கொண்டு வந்திருக்கிறது. திரௌபதி திரைப்படம் சொல்லும் அரசியலில் எனக்குச் சில மாற்றுக் கருத்துகள் உண்டு. ஆனால் இத்தனை நாள் ஹிந்து மதத்தைக் குறை சொல்லிய படங்களுக்கு இருந்த அதே உரிமையை ஒரே ஒரு ‘திரௌபதி’ பயன்படுத்தவும் எத்தனை பதற்றம் பாருங்கள். நாம் இதைத்தான் செய்யவேண்டும். ‘கொளஞ்சி’ என்ற ஒரு திரைப்படத்தைவிட, அதைச் சாடி வெளியிடப்பட்ட குறும்படம் அதிகம் பரவலானது. நம் முன்னே உள்ள சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்வது என்பது இதுதான்.

திராவிட, கம்யூனிஸ அரசியல் தொடர்ந்து பல வருடங்களாக இந்த ஹிந்து மத எதிர்ப்பை ஒரே அணியில் நின்று ஆதரித்தும் பரப்பியும் வந்திருக்கின்றன. திரைப்படங்கள் தொடத் தகாதவை என்ற எண்ணம் கொண்டிருந்த ஹிந்து இயக்கங்கள் இத்திரைப்படங்களில் இருந்து விலகி இருந்தது அவர்களுக்கு இன்னும் வசதியாகப் போனது. இன்று அதன் பலனைப் பார்க்கிறோம். இந்த நிலை மாறத்தான் வேண்டும்.

நாம் எதிர்பார்ப்பது ஹிந்துக்களைப் போற்றும் திரைப்படங்களையோ கிறித்துவ இஸ்லாமிய மதங்களைத் திட்டும் படங்களையோ அல்ல. நியாயமான படங்களை. நியாயமான விமர்சனங்களை. உள்ளே ஹிந்து வெறுப்பை வைத்துக்கொண்டு அதையே நடுநிலை என்றும் முற்போக்கு என்றும் வெறுப்பைப் பரப்பாத படங்களை. எல்லாக் கருத்துக்கும் இடம் இருக்கும் ஒரு சமமான களத்தை. இதுதானே நியாயமான ஆசையாக இருக்கமுடியும்? இதைச் செய்வதில் என்ன பிரச்சினை இருக்கமுடியும்? கேட்க எளிதாக இருக்கிறதல்லவா? ஆனால் யதார்த்தம் கசப்பானது.

இது போன்ற திரைப்படங்களில் வரும் குறியீடுகளைப் பற்றிப் பலரிடம் சொல்லியபோது அவர்கள் சொன்னார்கள், ‘இதுவரை எங்கள் கண்ணில் இது பட்டதே இல்லை’ என்று. ஒரு திரைப்படப் பாடலில் வரும் ஆபாசமான அங்க அசைவுகளைக் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கப் பழக்கப்பட்டுவிட்டது போல, இக்குறியீடுகளையும் தாண்டிச் செல்லப் பழக்கப் பட்டிருக்கிறோம். அதை எடுத்துச் சொல்லும்போதுதான் பலருக்கும் புரிகிறது. இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும்போது உங்களுக்கும் அப்படி ஒருவேளை தோன்றினால், இப்புத்தகத்தின் நோக்கம் நிறைவேறும்.

நான் கண்ணில் பட்ட படங்களை மட்டுமே பட்டியலிட்டிருக்கிறேன். தேடி தேடிப் பதிவிடவில்லை. அப்படிச் செய்தால் நான் கிட்டத்தட்ட அனைத்துப் படங்களையும் புகார் சொல்ல வேண்டி இருக்கலாம் என்ற அச்சம்தான் காரணம். ஒருவேளை இன்னும் உங்களுக்கு ஆதாரங்கள் போதாமல் இருக்கலாம். இன்னும் அடுத்தடுத்துப் படங்கள் வரத்தான் போகின்றன. அவற்றைப் பற்றி நான் எழுதத்தான் போகிறேன். மீண்டும் மீண்டும் சந்திப்போம்.

இந்த நேரத்தில் தமிழில் சில நல்ல முயற்சிகளைத் தந்த சில இயக்குநர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். கே.பாலசந்தர் பல ஹிந்து எதிர்ப்புப் படங்களைத் தந்திருந்தாலும் ‘கல்யாண அகதிகள்’ படத்தின் தைரியமான இறுதிக் காட்சிக்காகப் பாராட்டப்படவேண்டியவர். அதேபோல் தமிழ் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இவர் பல விதங்களில் ஹிந்துக்கள் ஆச்சரியப்படும் வகையில் படங்களை எடுத்தவர், கடும் நாடகத்தனமாக இருந்தபோதிலும். அதேபோல் ஏ.நாகராஜன். இவரும் பாராட்டுக்குரியவர். இந்தத் தொடர்ச்சியை நாம் இழந்திருக்கிறோம். அதை மீட்டெடுக்கவேண்டும்.

பாகம் 1க்கான முன்னுரை:

வலைப்பதிவுகள் தொடங்கி ஃபேஸ்புக் மற்றும் பல வலைத்தளங்களில் எழுதிய திரைப்படம் தொடர்பான கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது. ஒரு திரைப்படம் எப்படி நடுநிலையானது இல்லையோ அதேபோல் என் விமர்சனமும் நடுநிலையானதல்ல. இதுவே இந்த விமர்சனங்களின் அடிநாதம். இப்போதெல்லாம் திரைப்படங்கள் மிக நேரிடையாகவே விஷத்தைத் தம்முள் கொண்டு வருகின்றன. அப்படிப்பட்ட திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாக மட்டுமே பார்ப்போம் என்பது முட்டாள்தனம். இனியும் ‘படம்தானே’ என்று சொல்வதில் பொருளில்லை. துளிவிஷம் என்றாலும் அதைக் கண்டுகொள்வது முக்கியமானது. அதையே இப்புத்தகம் செய்ய நினைக்கிறது. சோஷியல் மீடியா உலகத்தில் ஒரு திரைப்படம் வெளிவந்த அரை மணி நேரத்தில் ஆயிரம் விமர்சனங்கள் சிறியதும் பெரியதுமாக வந்துவிடும் இக்காலத்தில், இக்கட்டுரைகள் விரிவான விமர்சன வகைக்குள் போகாமல், இப்படங்களில் இருக்கும் அரசியலையும் குறியீடுகளையும் அதன் நடுநிலையின்மையையும் மட்டுமே பார்க்கின்றன. பெரும்பாலான விமர்சனங்கள் திரைப்படம் வந்த சில மணி நேரங்களுக்குள் எழுதப்பட்டவை. இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பகுதி ஒன்றும் வெளிவரும். அதில் வரும் கட்டுரைகளையும் சேர்த்துப் பார்த்தால் ஒரு அப்பாவி திரைப்பட ரசிகனை இந்தத் திரைப்பட உலகம் எப்படி ஒரு அரசியல் பார்வையாளனாக மாற்றி இருக்கிறது என்று புரியலாம்.

இப்புத்தகத்தில் வரும் கட்டுரைகள் சிலவற்றில் அரசியல் கலக்காத படங்களை ஒரு திரைப்படம் என்ற வகையில் மட்டுமே விமர்சித்திருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ளலாம். நாம் எதிர்பார்ப்பது நியாயமான, எல்லோருக்கும் பொதுவான விமர்சனம் உள்ள ஒரு திரைப்படத்தை மட்டுமே. அன்றி, ஹிந்து மதத்தையோ இந்தியாவையோ விமர்சிக்காத திரைப்படங்களை அல்ல. ஹிந்து மதம் என்றதும் வசதியாக விமர்சிப்பதும் மற்ற மதங்கள் என்றதும் அமைதி காப்பதும் அல்லது புகழ்வதுமான இரட்டை நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

பின்குறிப்பு: கிண்டிலில் கிடைக்கும்!

Share

ஆர்.கே.நகர் திரைப்படம்

ஆர்.கே.நகர் – பொருட்படுத்தத் தகாத ஒரு படம். முழுமையாகப் பார்ப்பதே பெரிய கொடுமை. இப்படிப் படம் எடுக்கும் லட்சணத்தில் நம் இயக்குநர்களுக்குத் தங்கள் திரைப்படங்களில் குறியீட்டை வைக்கவும், அரசியலைக் கிண்டல் செய்யவும் மட்டும் ஆசை வந்துவிடுகிறது. மனசாட்சியைக் கழற்றி வைத்துவிட்டுக் கதை வசனம் எழுதுகிறார்கள்.

ஆர்.கே. நகர் என்ற பெயரே நமக்குச் சொல்லும், இது அரசியல் படமாக இருந்தால் எதைப் பற்றிப் பேசவேண்டும், எந்தக் கட்சிகளைப் பற்றிப் பேசவேண்டும் என்று. இந்தப் படத்தில் அதைப் பற்றிய மூச்சே இல்லை. பின்னணியாகப் பள்ளி சிறுவர்களின் சீரழிவே கதை. ஆனால் காட்டப்படும் காட்சிகள் எல்லாம் அரசியல் தொடர்பானவை. சந்தான பாரதி ஒரு கவுன்சிலர். செல்வாக்கு மிக்க கவுன்சிலர். தமிழ்நாட்டில் செல்வாக்கு மிக்க கவுசின்லர், அடிதடி கவுன்சிலர், ரௌடி கவுன்சிலர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருக்கமுடியும்? அதைக்கூட விடுங்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக நிச்சயம் இருக்க முடியாது? பாஜக காரராக இருக்க வாய்ப்பில்லைதானே? இந்தப் படத்தில் வரும் சந்தான பாரதி நெற்றியில் குங்குமத் திலகமிட்டு வருகிறார். காவி வேட்டி கட்டி வருகிறார். எந்தக் கழக அரசியல்வாதி காவி வேட்டி கட்டிக் கொண்டு திரிகிறார்? இவர்களுக்குக் கழக அரசியல்வாதிகளைக் காண்பிக்க பயம்.

அத்தோடு நிற்கவில்லை. சந்தான பாரதியும் வாஜ்பேயியும் இருக்கும் ஒரு புகைப்படம் ஒரு காட்சியில் பின்னணியில் வருகிறது. குறியீடாம்! இதிலும் திருப்தி அடையவில்லை இயக்குநர் சரவணன் ராஜன். இந்த சந்தான பாரதி கோவில் நிலத்தை ஆட்டையைப் போடுகிறார். தமிழ்நாட்டில் யார் கோவில் இடத்தை ஆட்டையைப் போட்டிருப்பவர்கள்? யார் தொடர்ந்து 50 வருடங்களாக ஆட்சியில் இருப்பவர்கள்? இயக்குநர் பச்சைக் குழந்தை என்பதால் இதெல்லாம் தெரியாது. கைச்சூப்பிக்கொண்டு, அப்படியே மக்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இப்படத்தை எடுத்திருக்கிறார். அப்படியும் திருப்தி வரவில்லை குழந்தை இயக்குநருக்கு. கோவில் சொத்தை ஆட்டையைப் போடுவதைத் தடுக்கும் ஒரு கட்சியின் உதவிக்குப் போகிறார் கோவில் பட்டர். அவருக்கு உதவுபவர்கள் பக்தியில் நம்பிக்கையில்லாத ஆனால் நல்லவர்களாம்!

இந்த இயக்குநருக்கும் இதன் தயாரிப்பாளரான வெங்கட் பிரபுவுக்கும் ஏன் ரஜினி மேல் இத்தனை காண்டு, வெறுப்பு எனத் தெரியவில்லை. சந்தான பாரதியை ரஜினியின் கதாபாத்திரமாக்கி திட்டித் தீர்க்கிறார்கள். போர் வரும்போது வருவேன் என்ற வசனத்தை சந்தான பாரதி சொல்கிறார். சந்தான பாரதி கவுன்சிலர் என்றால் ரஜினியை எப்படித் திட்டுவது என்பதற்காகவே சந்தான பாரதியை ஒரு நடிகர் என்று காட்டி இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்று காட்டினால் கவுன்சிலராகக் காட்ட முடியாதே என்பதற்காக சின்ன நடிகர் என்று காட்டிவிட்டார்கள். எவ்வளவு கற்பனைப் பஞ்சம் பாருங்கள். அதாவது வசனமும் காட்சிகளும் மட்டும் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகருக்கானவை! அவரோ ஒரு கவுன்சிலர்! ஒரு காட்சியில் சந்தான பாரதி ரஜினியுடன் இருக்கும் படம் வருகிறது. அதாவது சந்தான பாரதியும் வாஜ்பேயியும் புகைப்படத்தில் வரும் அதே காட்சியில் இந்த சந்தானபாரதி – ரஜினி படமும் அதற்கு இணையாக வருகிறது. குறியீட்டுக்குள் குறியீட்டுக்குள் குறியீடாம். இதில் சந்தான பாரதியை எந்திரன் போல கிராஃபிக்ஸ் செய்து ஃப்ளக்ஸ் எல்லாம் பின்னணியில் குறியீடாக வருகிறது. இரண்டு முறை ‘நீ என்ன எம்ஜியாரா?’ என்ற வசனம் வருகிறது.

ஒழுங்காக ஒரு படம் எடுக்க முடியவில்லை. ஆக்ரோஷமான அரசியல் சட்டையர் எடுக்க வக்கில்லை. தமிழ்நாட்டில் கோலோச்சும் கட்சிகளை விமர்சித்து, தாக்கி, தீவிரமான அரசியல் படம் எடுக்க துணிவில்லை. ஆனால் வாய் மட்டும் இருக்கிறது இவர்களுக்கு.

Share

இரும்புத் திரை

இரும்புத்திரை
 
ஸ்மார்ட் போன், ஆதார் அட்டை தகவல்கள் கசிவு போன்ற தகவல்கள் மக்களுக்கு உருவாக்கி இருக்கும் குழப்பத்தை அறுவடை செய்திருக்கிறது இத்திரைப்படம். ஸ்மார்ட் போன் பயன்பாட்டின் கட்டற்ற தகவல்கள் பரிமாற்றம் மற்றும் டிஜிடல் தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு இருப்பது நிச்சயம் அவசியமே. ஆனால் இத்திரைப்படம் அது பற்றிய பெரிய குழப்பத்தையும் தேவையற்ற பயத்தையும் உருவாக்கிவிடுகிறது. அதையும் மிகக் கச்சிதமான திரைக்கதையின் மூலம் பார்வையாளர்களுக்கு பெரிய அச்சத்தை உண்டுபண்ணுவதில் வெற்றி பெறுகிறது. அந்த வகையில் இத்திரைப்படம் நாளைய உலகத்துக்கு எதிரான ஒன்றே.
 
ஒரு திரைப்படமாக, மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். ஸ்மார்ட் போன் மற்றும் டிஜிடல் தகவல்கள் யாருக்கு அச்சத்தைத் தரவேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு, மத்தியத் தட்டு மக்களைச் சுற்றிக் கதையைப் பிண்ணியது பெரிய சாமர்த்தியம். இதுவே படத்தின் ஆதாரம். ஐநூறு கோடி உள்ளவனுக்குப் பணம் போவதும் வருவதும் வேறு வகையான பிரச்சினை. நாளை அப்பாவுக்கு ஆபரேஷன், அந்த நேரத்தில் ஐந்து லட்ச ரூபாய் வங்கியில் இருந்து எந்தச் சுவடும் இன்றிக் காணாமல் போவது, மத்தியத் தரத்துக்கு வேறு வகையான பிரச்சினை. எது மக்களை அதிகம் சென்றடையுமோ அதைக் கையில் எடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
 
இடைவேளை வரை படம் வேற லெவல். புதிய அலை இயக்குநர்கள் வந்த பிறகு திரைப்படங்களில் ஒரு கறார் தன்மையைப் பார்க்க முடிவதாக எனக்கு ஒரு உணர்வு. அல்லது கலகலப்பு 2 போல மிகக் கேவலமாகத் தரையில் இறங்கி அடிக்கும் படங்கள். இப்படி இல்லாமல் சாதாரணமாக ஒரு நல்ல படத்தைப் பார்க்கமாட்டோமா என்ற எதிர்பார்ப்பை கொஞ்சம் பூர்த்தி செய்கிறது முதல் பாதி .
 
இரும்புத்திரை, முதல் பாதியில் கச்சிதமான வணிகப் படமாக வந்திருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு, டிஜிடல் யுக அம்புலிமாமா சாகஸங்கள் என்னும் அளவுக்கு அலை பாய்கிறது. படத்தின் பலம் வசனங்கள். படு கூர்மை. ஒரு வணிகப்படத்துக்கு இதைப் போன்ற வசனங்கள் பெரிய அவசியம். நாம் சொல்வது தொழில்நுட்ப ரீதியாகப் பொய் என்றாலும், சாத்தியமே இல்லை என்றாலும், அதை மக்கள் நம்பும் அளவுக்கு பலமாக, தரவுகளுடன் சொல்வது போன்ற தோற்றத்தில் சொல்லவேண்டும். அதை அனாயசமாகச் செய்திருக்கிறார் ஆண்டணி பாக்யராஜ் (வசனம் இவர் என்று கூகிள் சொல்கிறது).படத்தின் அடுத்த பலம் அர்ஜூன். அத்தனை கெத்தாக இருக்கிறார். வில்லனாக நடிக்கவேண்டும் என்றால் ஒரு கெத்து தானாக வந்துவிடும் போல. (பல இடங்களில் இவரது குரல் ரஜினியின் குரல் போலவே உள்ளது.)) சமந்தா அழகின் இலக்கணம். ரோபோ ஷங்கர் கலகலக்க வைக்கிறார் – இரட்டை அர்த்தம் தொனிக்கும் ஒரே ஒரு காட்சி தேவையே இல்லாமல் வருகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை அட்டகாசம்.
 
ஆதார் கார்ட், ஸ்மார்ட் போன்களில் நாம் பரிமாறிக் கொள்ளும் அதீதத் தகவல்களை ஒட்டி ஒரு திரைப்படத்தை இந்த அளவு சுவாரஸ்யமாக எடுக்கமுடியும் என்பது ஆச்சரியமளிக்கிறது. இதை ஒட்டி எங்கெல்லாம் தகவல்கள் கசிய முடியுமோ அத்தனையையும் ஒரு வலைப்பின்னலாக்கியது அபாரம். இயக்குநர் மித்ரன் பாராட்டப்படவேண்டியவர். இது முதல் திரைப்படம் என்கிறது கூகிள். பெரிய நம்பிக்கை தருகிறார். இயக்குநருக்கு வாழ்த்துகள்.
Share

2017 தமிழ்த் திரைப்படங்கள் ஒரு ரீவைண்டிங்

2017 தமிழ்த் திரைப்படங்கள் – ஒரு வேகமான ரீவைண்டிங். (நான் பார்த்தவற்றுள் என்னை ரசித்தவை இவை. ஆய்வெல்லாம் இல்லை. உலகமகா திரைப்படத்தை நான் பார்க்காமல் விட்டிருந்தால், அது இங்கே இடம்பெற்றிருக்காது என்கிற ஏமாற்றத்தைத் தாங்கும் வல்லமை இருந்தால் மட்டும் மேற்கொண்டு பட்டியலைப் பார்க்கவும்.)2017 தமிழ்த் திரைப்படங்கள் – ஒரு வேகமான ரீவைண்டிங். (நான் பார்த்தவற்றுள் என்னை ரசித்தவை இவை. ஆய்வெல்லாம் இல்லை. உலகமகா திரைப்படத்தை நான் பார்க்காமல் விட்டிருந்தால், அது இங்கே இடம்பெற்றிருக்காது என்கிற ஏமாற்றத்தைத் தாங்கும் வல்லமை இருந்தால் மட்டும் மேற்கொண்டு பட்டியலைப் பார்க்கவும்.)
சிறந்த திரைப்படம்: எதுவுமில்லை
சிறந்த நடிகர்: யாருமில்லை
சிறந்த நடிகை: அதிதி பாலன் (அருவி)
சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: சாம் எஸ் (விக்ரம்வேதா)
சிறந்த இசையமைப்பாளர்: யாருமில்லை
சிறந்த குத்துப்பாட்டு: டசக்கு டசக்கு (விக்ரம் வேதா)
சிறந்த பாடல்: நீதானே நீதானே (மெர்ஸல், இசை: ஏ.ஆர்.ரஹ்மான்), (அடுத்ததாக, விவேகம் படத்தின் காதலாடா பாடல், இசை அநிருத்)
நன்றாக வந்திருக்கவேண்டிய, ஆனால் தேங்கிவிட்ட படங்கள்: மாநகரம், 8 தோட்டாக்கள், அருவி, தீரன், பா பாண்டி
சிறந்த வணிகத் திரைப்படம்: விக்ரம் வேதா
சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: மீசைய முறுக்கு
எதிர்பார்த்து கதற வைத்த படங்கள்: விவேகம், மெர்சல், டோரா, ரிச்சி.
படு மோசமான படம்: இந்திரஜித்
சிறந்த காமெடி நடிகர்: சூரி
சிறந்த துணை நடிகர், நடிகை: யாருமில்லை
சிறந்த ஒளிப்பதிவாளர்: ரவி  வர்மன்  (காற்று வெளியிடை)
இந்த வருடம் பார்த்த படங்களுள் மனசுக்குள் பச்சக்கென ஒட்டிக்கொண்ட படங்கள்: தொண்டிமுதலும் திருக்ஷாக்க்ஷியும் (மலையாளம்), நியூட்டன் (ஹிந்தி), உளுதுவரு கண்டெந்தெ (கன்னடம் 2015).

Share

அதே கண்கள்

அதே கண்கள் – முகில் நண்பர். தூத்துக்குடிக்காரர். எனவே கிட்டத்தட்ட திருநெல்வேலிக்காரர். 🙂 ஸ்க்ரிட்ப் கன்சல்டண்ட்டாக இந்தப் படத்தில் பணி புரிந்திருக்கிறார். தனிப்பட்ட வகைப் பழக்கத்தில் முகிலின் பலம் என்று நான் நினைப்பது – அவரது ஹ்யூமர். தன் பலத்தைத் திரைப்படத்தில் கொண்டு வருவது ஒரு கலை. கூடவே அதிர்ஷ்டமும் வேண்டும். அதே கண்கள் படத்தில் முகிலுக்கு இந்த இரண்டும் சரியாக வாய்த்திருக்கின்றன. இந்த அணிக்கு என் வாழ்த்துகள்.

அதே கண்கள் – த்ரில்லர் வகை திரைப்படம். ஆஹோ ஒஹோ என்று புகழ்த்தக்க ஒரு படமல்ல. அதே சமயம் முற்றிலும் புறக்கணிக்கத்தக்க ஒரு படமும் அல்ல. தன் எல்லைகளைப் புரிந்துகொண்டு எடுக்கப்பட்ட ஒரு படம்.

அதே சமயம் ஏன் இத்திரைப்படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கவில்லை என்று யோசித்தால் –

* நடிகர்கள் தேர்வு முதல் சொதப்பல். கலையரசனால் ஒரு அளவுக்கு மேல் படத்தைத் தூக்கிக்கொண்டு போகமுடியவில்லை. மதயானைக்கூட்டம், மெட்ராஸ் படங்களில் சிறப்பாக நடித்தவர் இவர். ஆனால் முழுப்படத்தையும் தன் தோளில் சுமக்க இவரால் முடியவில்லை.

* படத்தில் ஏமாற்றும் பெண்ணாக வரும் நடிகையின் நடிப்பு அமெச்சூர் ரகம். நகைக்கடையில் அவர் அவமானப்படுத்தப்படும் ஒரு காட்சியில் மட்டும் அத்தனை யதார்த்தம். மிடுக்குடன் வரவேண்டிய மற்ற காட்சிகளில் எல்லாம் ரொம்ப சுமாராகவே நடித்திருந்தார். ஒரு பலமான நடிகை நடித்திருக்கவேண்டும். பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோதிகா போல.

* மிகவும் கணிக்கத்தக்க கதை மற்றும் திரைக்கதை. அதிலும் யார் கொலைகாரர் என்ற தெரிந்த பின்பும் நீளும் திரைக்கதை.

* பார்வையற்றவர்கள் தொடர்பாக வரும் கதைக்குள் வருவதற்கு, ஹீரோவுக்கு பார்வை இல்லாமல் இருப்பதும், மீண்டும் பார்வை வருவதும் என அலைபாயும் முதல் அரை மணி நேரக் காட்சிகள்.

* மிக மோசமான இசை, ஒளிப்பதிவு.

* மிக நீளமான ஒரே மாதிரியான காட்சிகள்.

இந்த அத்தனை அலுப்பையும் தன்னந்தனியாளாகப் போக்குகிறார் பால சரவணன். இவர் வந்ததும்தான் இறுக்கம் தளர்ந்தது. ஏன் அத்தனை நேரம் இறுக்கமாக இருந்தோம் என்பது பதிலற்ற கேள்வி! பால சரவணனின் மேனரிஸத்துக்கேற்ற வசனங்கள். இந்த வசனங்களில் முகிலின் பங்களிப்பு எப்படி இருந்திருக்கும் என்பதை யூகிக்கமுடிகிறது. மலையாளத்தில் ரீமேக் செய்தால் சூப்பர் ஹிட்டாகும் என்று படம் பார்க்கும்போது தோன்றியது. இங்கேயும் இத்திரைப்படம் பரவலாக பாஸிட்டிவ் பாராட்டுகளைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. திரைத்துறையில் முகில் வெற்றி பெறவும் அழுத்தமான தடம் பதிக்கவும் வாழ்த்துகள்.

Share

2014 – தமிழ்த் திரைப்பட விருதுகள்

2013ல் நான் வழங்கிய விருதுகளை, தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருந்த ஒவ்வொரு தமிழன் வரை அனைவரும் ஏற்றுக்கொண்டு பாராட்டி மகிழ்ந்தனர் என்பது நீங்கள் அறிந்ததே. அந்த வரிசையில் 2014 – திரைப்பட விருதுகள் இங்கே. 

உண்மையில் எல்லா விருதையும் லிங்காவுக்கும் கோச்சடையானுக்கும் கொடுப்பதே நியாயமானதாக இருந்திருக்கும். ஆனால் அநியாயமாக கீழே உள்ள பட்டியலை இட்டுள்ளேன். பார்த்து வளர்ச்சி பெறுக. 

 

சிறந்த திரைப்படம்: ஜிகர்தண்டா

சிறந்த நடிகர்: ரஜினிகாந்த் (லிங்கா) (Cool friends!)

சிறந்த நடிகை: யாருமில்லை

சிறந்த புதுமுகம்: துல்கர் சல்மான் (வாயைமூடிப் பேசவும்)

சிறந்த இயக்குநர்: கார்த்திக் சுப்புராஜ் (ஜிகர்தண்டா)

சிறந்த கதை: ரஞ்சித் (மெட்ராஸ்)

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: லிங்கா

சிறந்த வில்லன்: William Orendorff (லிங்கா)

சிறந்த நகைச்சுவை நடிகர்: சூரி (பல படங்கள்)

சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்): அனிருத் (வேலையில்லா பட்டதாரி, கத்தி)

சிறந்த ஒளிப்பதிவு: ரத்னவேலு (லிங்கா)

சிறந்த துணை நடிகர்: கலையரசன் (மெட்ராஸ்)

சிறந்த துணை நடிகை: ரித்விகா (மெட்ராஸ்)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயண் (மெட்ராஸ்)

சிறந்த பாடகர்: ஏ.ஆர். ரஹ்மான் (இந்தியனே, கோச்சடையான்)

சிறந்த பாடகி: சின்மயி (இதயம் நழுவி நழுவி, கோச்சடையான்)

சிறந்த பாடல்: இதயம் நழுவி நழுவி (கோச்சடையான்)

சிறந்த குத்துப்பாட்டு: மஸ்காரா போட்டு (சலீம்)

சிறந்த பாடலாசிரியர்: கானா பாலா (மெட்ராஸ்)

சிறந்த வசனம்: கே.எஸ். ரவிக்குமார் (கோச்சடையான்)

சிறந்த புதிய முயற்சி: கோச்சடையான்

சிறந்த ஓவர் ஆக்டிங்: துளசி (பண்ணையாரும் பத்மினியும்)

சிறந்த அண்டர் ஆக்டிங்: விஜய் ஆண்டனி (சலீம்)

சிறந்த காணாமல் போன நடிகர்: சிம்பு

நன்றாக வந்திருக்கவேண்டியவை: சதுரங்க வேட்டை, ஆடாம ஜெயிச்சோமடா.

பார்க்க முடியாதவை: மான் கராத்தே, ஒரு கன்னியும் மூன்று காளைகளும், பண்ணையாரும் பத்மினியும், மஞ்சப்பை, சைவம், அஞ்சான்.

Share

2013 – தமிழ்த் திரைப்பட விருதுகள்

என் பட்டியல் இது:

 

விருதுகள்

சிறந்த திரைப்படம் – மதயானைக் கூட்டம்

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – சூது கவ்வும்

சிறந்த இயக்குநர் – விக்ரம் சுகுமாரன் (மதயானைக் கூட்டம்)

சிறந்த திரைக்கதை – விக்ரம் சுகுமாரன் (மதயானைக் கூட்டம்)

சிறந்த வசனம் – நலன் குமாரசாமி (சூது கவ்வும்)

சிறந்த கதை – கடல் (ஜெயமோகன்)

சிறந்த பின்னணி இசை – இளையராஜா (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)

சிறந்த ஒளிப்பதிவு – செழியன் (பரதேசி)

சிறந்த படத்தொகுப்பு – கிஷோர் (மதயானைக் கூட்டம்)

சிறந்த கலை இயக்கம் – லால்குடி ந‌. இளையராஜா (விஸ்வரூபம்)

சிறந்த நடன இயக்கம் – பண்டிட் பிர்ஜு மஹாராஜ் (விஸ்வரூபம்)

சிறந்த பாடல் இசை – ஏ.ஆர். ரஹ்மான் (மரியான், கடல்)

சிறந்த பாடல் ஆசிரியர் – ஏகாதசி (மதயானைக் கூட்டம்)

சிறந்த நடிகர் – பாலு மகேந்திரா (தலைமுறைகள்)

சிறந்த நடிகை – ஷெல்லி கிஷோர் (தங்கமீன்கள்)

சிறந்த குணச்சித்திர‌ நடிகர் – பாரதிராஜா (பாண்டிய நாடு)

சிறந்த குணச்சித்திர‌ நடிகை – விஜி சந்திரசேகர் (மதயானைக் கூட்டம்)

சிறந்த வில்லன் நடிகர் – ராகுல் போஸ் (விஸ்வரூபம்)

சிறந்த நகைச்சுவை நடிகர் – சந்தானம் (என்றென்றும் புன்னகை)

Share

மதயானைக் கூட்டம்

சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் எவையுமே தமிழர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதில்லை என்பது நமது சாபம். அந்த சாபத்தைப் போக்கும் வகையில் அவ்வப்போது சில திரைப்படங்கள் வருவதுண்டு. விருமாண்டி, ஆடுகளம், வம்சம், சுப்ரமணியபுரம், காதல் போன்றவை. அந்த வகையில் இன்னொரு திரைப்படம், அதுவும் வம்சம், விருமாண்டி படங்களின் பலவீனங்கள் இல்லாமல் சிறப்பான ஒரு திரைப்படமாக ‘மதயானைக் கூட்டம்’ உருவாகியிருக்கிறது.


ஒருவனின் இரண்டு மனைவிகளுக்குள்ளான உணர்ச்சிகள், அவர்களின் வாரிசுகளுக்குள்ளே எழும் பிரச்சினைகளை மணி ரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’ நகர்ப்புற எலைட்டுகளின் வாழ்க்கையை மையமாக வைத்துச் சொன்னது என்றால், மதயானைக் கூட்டம் அதே பிரச்சினைகளை கிராமத்தையும் ரத்தமும் சதையுமான மனிதர்களை முன்வைத்துப் பேசுகிறது. அதுவும் அக்னி நட்சத்திரம் செய்யத் தவறிய நுணுக்கங்களோடு.
திரைப்படத்தின் முதல் காட்சியிலிருந்தே கதை தொடங்கிவிடுகிறது. கதையைச் சொல்லத் தொடங்கும் விதமும் அக்கதை மெல்ல நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும் விதமும் அழகு. திரையெங்கும் உண்மையான மனிதர்களை உலவவிட்டது போன்ற நடிகர்களின் கச்சிதமான தேர்வு, நடிப்பு. நல்ல பின்னணி இசை (ரகுநந்தன்). காட்சிக்கேற்ற பாடல்கள். மிகத் திறமையான பாடல் வரிகள் (ஏகாதசி). மனதை அள்ளும் ஒளிப்பதிவு. அதிலும் காட்சிகளின் மாறும் தன்மைக்கேற்ப பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறம் என எல்லாவற்றிலும் மதயானைக் கூட்டம் நம்மைக் கட்டிப் போடுகிறது.

திரைக்கதையை மிகச் செறிவாக மிகக் கச்சிதமாக எழுதியிருக்கிறார்கள். ஒரு எதிர்பாராத சாவும், அதைத் தொடர்ந்து வரும் இரண்டு கொலைகளும் நம்மை பரபரப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றன. இந்த சாவுக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டிருக்கும் நுணுக்கமான விதம் தனியே சொல்லப்படவேண்டியது. பொதுவாகவே இயக்குநர்கள் நுணுக்கமான காட்சிகளில் அத்தனை கவனம் செலுத்துவதில்லை. கதை நிகழும் இடம், அதோடு தொடர்புடைய மனிதர்கள், அவர்கள் பேச்சு வழக்கு, அவர்களது பாரம்பரியம் என எல்லாவற்றையும் நுணுக்கமாகப் பார்த்துப் பதிவு செய்வது மிக முக்கியமானது. பார்வையாளர்கள் இதன் எல்லா நுணுக்கங்களையும் புரிந்துகொள்ளாமல் போகலாம். ஆனால் இந்த நுணுக்கங்கள் தரும் ஒட்டுமொத்த மனப்பதிவு அபாரமானது. அதையே மதயானைக் கூட்டம் சாதித்திருக்கிறது.


நம்மிடம் கதை இல்லை, எல்லாக் கதைகளும் எடுக்கப்பட்டுவிட்டன என்று சொல்வதெல்லாம் ஹம்பக் என்பதை இப்படம் மீண்டும் நிரூபிக்கிறது. எத்தனையோ கதைகளை நம் மண்ணோடு பொருத்தி மீண்டும் மிக அழகாக எடுக்கலாம் என்பதற்கு மதயானைக் கூட்டம் இன்னொரு உதாரணம். அந்த வகையில் இது முக்கியமான படம்.


ஒரு சில குறைகள் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என்னும் அளவுக்கு திரைப்படம் சிறந்து விளங்குகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். ஆனால் படத்துக்கு இசை ரகுநந்தன். இளம் படைப்பாளிகளின் இந்தப் போக்கு ஆரோக்கியமானது.


இப்படத்தில் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி நடித்திருக்கிறார். மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். வீரச் சந்தானம் (அவள் பெயர் தமிழரசி), வ.ஐ.ச. ஜெயபாலன் (ஆடுகளம்) வரிசையில் இப்படத்தில் வேல ராமமூர்த்தி. விருதும் பெற்றுவிடுவார்.
பாடலாசிரியர் ஏகாதசி இதற்குமுன் என்ன என்ன பாடல்கள் எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை. இப்படத்தில் பாடல்களை மிகச் சிறப்பாக, படத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு எழுதியிருக்கிறார்.


இப்படம் தேவர்களின் ஜாதிப் பெருமையைப் பேசுகிறது என்று மேம்போக்கான விமர்சனங்கள் எழக்கூடும். நம் வாழ்க்கையைப் பேசவேண்டுமென்றால், அதற்குரிய சில குணங்களை நாம் பேசித்தான் ஆகவேண்டும். அதை மட்டுமே இந்தப் படம் செய்திருக்கிறதே ஒழிய, வலிந்த ஜாதிப் புகழ் மாலைகள் இல்லை. மிகத் தெளிவாக இப்படம் ஒரே ஜாதிக்குள், அதாவது தேவர்களுக்குள் நிகழும் மோதலையே காட்சிப்படுத்தியிருக்கிறது. அவர்களே அவர்களைப் பற்றிய மிதமிஞ்சிய புகழுரைகளைப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களே அவர்களைப் பற்றிய இகழ்ச்சியையும் சொல்லிக்கொள்கிறார்கள். அவர்களே நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் மாறி மோதிக் கொள்கிறார்கள். நம்பிக்கைத் துரோகிகளாகிக் கழுத்தை அறுத்துக் கொள்கிறார்கள்.


மிகச் சாதாரணமான கதையை, அதற்குரிய களத்தில், அக்களத்துக்குரிய விவரணைகளோடு வைத்து, நம் படத்தை நாம் திரையில் பார்க்கிறோம் என்கிற பெருமிதத்தைக் கொண்டு வந்திருக்கிறது மதயானைக் கூட்டம். பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்திருப்பதால், படத்தோடு எளிதில் ஒன்றிவிட முடிகிறது. ஆடுகளத்தில் வசனம் எழுதிய விக்ரம் சுகுமாரன் மிகச் சிறப்பாக இப்படத்தை இயக்கி இருக்கிறார். சிறந்த இயக்குநர் விருது நிச்சயம். இயக்குநர் விக்ரம் சுகுமாரனும், தயாரிப்பாளர் ஜி.வி. பிரகாஷும் பாராட்டுக்குரியவர்கள்

Share