இரண்டு நாட்களுக்கு முன்பாக திடீரென்று ஓர் எண்ணம். அம்மாவை நினைத்துக் கொள்ளும் அளவுக்கு அப்பாவை நாம் நினைத்துக் கொள்கிறோமா என்று. அந்த நினைப்பே எனக்குள் பெரிய சங்கடத்தையும் ஒரு விதிர்விதிர்ப்பையும் தோற்றுவித்து விட்டது.
அம்மாவுக்கு இணையாக அப்பாவும் என்றும் போற்றத் தக்கவர். மறக்க முடியாதவர். மறக்கக் கூடாதவர். அன்பே உருவானவர். எளிமையானவர். ஒப்புக்காகப் பாசம் வைக்காமல், பகட்டுக்காகப் பாசம் பாசம் என்று பேசித் திரியாமல் அனைவரது மேலும் உண்மையான பாசம் வைத்தவர். தான் தாழ்வுற்றிருந்த போதும் தனது நிலையில் உயர்ந்திருந்த போதும் யாருக்கும் எந்தக் காலத்திலும் தீங்கு நினைக்காதவர். எதிராளிகளுக்குத் தன்னைப் போலவே கள்ளம் கபடம் தெரியாது என்று ஏமாந்தவர். அந்த ஏமாற்றத்திலும் அவரே வென்று நின்றவர். சூது வாது தெரியாத குழந்தை போன்றவர். ஐந்து நிமிடத்துக்கு மேல் கோபத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தெரியாதவர். யார் மீதாவது கோபம் கொண்டுவிட்டால் தன் மேல் தவறே இல்லாத போதும் தான் கொண்ட கோபத்துக்காகக் குற்றவுணர்ச்சி கொள்ளும் ஓர் அதிசயப் பிறவி.
மதுரை அழகரடியின் நினைவுகள் மறக்க முடியாதவை. என்னதான் உள்ளும் புறமும் திருநெல்வேலிக்காரனாக இருந்தாலும் 87 முதல் 91 வரை அழகரடியில் வாழ்ந்த காலங்கள் எப்போதுமே பசுமையானவை. இப்படித்தான் நான் என பின்னால் அமையப்போகும் பலவற்றுக்கு அங்கே தான் விதை ஊன்றப்பட்டது என்பது என் மனப்பதிவு. குறிப்பாக இரண்டு பேர் இளையராஜா மற்றும் சச்சின் டெண்டுல்கர். கொஞ்சம் கமலஹாசனும் கூட. ஆனால் இன்று கமல்ஹாசன் முற்றிலுமாக என்னிடமிருந்து விலகி விட்டார். வெறுப்பு கூட தோன்றி விட்டது. ஆனால் இளையராஜாவும் சச்சினும் அன்று எந்த நிலையில் இருந்தார்களோ அதைவிட கூடுதலான உயரத்தில் இப்போதும் இருக்கிறார்கள்.
அழகரடியை நினைக்கும் போது பல விஷயங்கள் எப்போதும் மனதில் வந்து போகும். அவற்றில் ஒன்று அப்பாவின் நினைவு.
அப்பா, நான், அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா என்று ஒண்டிக் குடித்தன வீடு ஒன்றில் வாழ்ந்தோம். வரண்டா போன்ற ஒன்றில் தட்டி போட்டு மறைக்க அது தாத்தாவும் பாட்டி அறையானது. அம்மா அப்பா அக்கா எல்லாம் வீட்டுக்குள் படுத்துக்கொள்ள நான் வெளியே திண்ணையில் படுத்துக் கொள்வேன். வீட்டு வாடகை அதிகபட்சம் 50 ரூபாய் இருக்கலாம் என நினைவு. அப்பாவுக்கு சம்பளம் 300 ரூபாய் போல. தினம் பேட்டா ஒரு ரூபாய் டீ குடிக்க. அந்த ஒரு ரூபாயைப் பத்திரமாகச் சேர்த்து வைப்பார். தினச் செலவுக்கு தின வட்டிக்குப் பணம் வாங்கி ஓட்டிய காலம். அப்பா வேல்முருகன் லாரி சர்வீஸ் சென்ற ஒரு கம்பெனியில் கணக்கெழுதிக் கொண்டிருந்தார்.
அழகரடியில் இருந்து மெய்ஞானபுரத்தில் குடியிருந்த சித்தப்பா வீட்டுக்கு நடந்து போகும்போது அப்பாவின் ஆபிசைக் கடந்து போக வேண்டும். அப்போது ஆஃபிசுக்குச் சென்று அவரைப் பார்ப்பேன். பென்சிலின் பின்னால் ரப்பர் பேண்டைச் சுற்றி அதை ரப்பராகப் பயன்படுத்துவார். எப்போதும் அந்த பென்சிலைக் காதில் வைத்திருப்பார். பெரிய கணக்கு நோட்டைத் திறந்து ஏதேதோ பெரிய பெரிய நோட்டுகளில் கணக்குப் போட்டுக் கொண்டே இருப்பார். கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்தார். அவரது ஆஃபிஸுக்கு நான் சென்றதும் ஒரு சேரில் அமரச் சொல்வார். டீ குடிக்கிறியா என்று கேட்பார். வேண்டாம் என்பேன். ஏனென்றால் அம்மா என்னிடம் முதலிலேயே தெளிவாகச் சொல்லி அனுப்பி இருப்பார். அப்படியும் ஒன்றிரண்டு முறை டீ வாங்கிக் கொடுத்திருக்கிறார். என்னவோ அப்பாவை மிகப் பெரிய கம்பெனியில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும். மனதுக்குள் அத்தனை பெருமையாக இருக்கும். அப்படியே சித்தப்பா வீட்டிற்கு அந்தப் பெருமிதத்துடன் நடந்து செல்வேன்.
அப்பா தனக்காக எதையும் சேமிக்க வேண்டும் என்று நினைத்தவர் இல்லை. அத்தனை வருமானமும் இல்லை. பெரிய பெரிய வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கனவு கண்டவர் இல்லை. அதற்கான பெரிய கல்வித் தகுதிகளும் இல்லை. ஆனால் எல்லோருடனும் அன்பாக இருக்க வேண்டும் என்பதில் இறுதிவரை மாறாத உறுதியுடையவராக இருந்தார். அவரது இயல்பே அன்புதான். கள்ளம் கபடமற்றவர். எத்தனை வேகமாக கோபம் வருகிறதோ அத்தனை வேகமாக கோபத்தை இழக்க கூடியவர். பின்பு அதிலேயே குற்ற உணர்ச்சி கொண்டு, தான் கோபம் கொண்டவரிடம் ஏதாவது பேசி சமாதானம் செய்யும் வரை நிலை இல்லாமல் தவிப்பவர். அம்மா சொல்லும் ஒவ்வொரு விஷயத்திற்கும் எதிராகப் பேச நினைத்தாலும் அதை ஆரம்பித்துப் பாதியிலேயே விட்டுவிட்டு அம்மா சொல்வதையே சரி என்று வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளத் தயங்காதவர்.
எல்லோரையும் போல ஒரு குழந்தையாகவே பிறந்தார். குழந்தையாகவே வளர்த்தார். குழந்தையாகவே வாழ்ந்தார். அப்படியே மறைந்தார்.
அப்பாவும் அம்மாவும் இல்லாமல் இன்று நாங்கள் இல்லை. அழகரடி வீட்டில் பட்ட கஷ்டங்களை எல்லாம் நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. 15 நாளுக்கு ஒருமுறை கூட இட்லி தோசை சாப்பிட்டிருக்க மாட்டோம். ரேஷன் அரிசி சாப்பாடுதான். தினமும் காலை செய்த குழம்பு ரசம்தான் இரவு வரை. பொரியல் எப்போதாவது இருக்கும். குடும்பமாகச் சேர்ந்து திரைப்படத்திற்குப் போன கதை எல்லாம் கிடையவே கிடையாது. எனக்குத் தெரிந்து ஒரு முறை படித்துறை மடத்தில் சாப்பிட்டுவிட்டு நான் அண்ணா அக்கா அம்மா அப்பா என அனைவரும் பரமேஸ்வரி தியேட்டரில் போட்டிருந்த மைக்கேல் மதன காமராஜனுக்குச் சென்றோம். அதற்கு முன்னும் பின்னும் இப்படி அத்தனை பேரும் சேர்ந்து பார்த்த வேறு படங்கள் நினைவுக்கு வரவில்லை.
அப்பா எங்களுக்காகவே வாழ்ந்தார். அப்பாவை நினைக்காத நாளில்லை. மறந்த நொடி இல்லை. எங்கிருந்தாலும் அப்பா எங்களை அணைத்து ஆசீர்வதிக்கட்டும்.
இன்று ஹனுமன்
ஜெயந்தி. காலை எழுந்ததும் எதோ நினைவுக்கு வர யூ ட்யூபில் பாலமுரளி கிருஷ்ணா பாடிய ஹனுமான்
பாடல்களைக் கேட்கலாம் என்று கேட்க ஆரம்பித்தேன். அப்பாவின் நினைவு வந்துவிட்டது.
ஜெயக்குமார்
ஸ்ரீனிவாசன் பாலமுரளி கிருஷ்ணா பாடிய கேசட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். இன்னும் அந்த
கேசட்டின் முகப்பு அட்டை கூட நன்றாக நினைவிருக்கிறது. அப்பாவுக்கு வாக்மேனில் பாட்டு
கேட்பது என்றால் அத்தனை இஷ்டம். சங்கராபரணம் திரைப்படம் போன்று பாடல்கள் உலகத்திலேயே
கிடையாது என்பது அவரது தீர்மானமான அபிப்பிராயம். இப்படிச் சில எண்ணங்கள் அவருக்கு உண்டு.
இரு கோடுகள் மட்டுமே உலகில் மிகச் சிறந்த படம், எந்த ஒரு படம் அல்லது எந்த ஒரு மெகா
சீரியல் அல்லது எதிலாக இருந்தாலும் சரி, அதில் வரும் நீதிமன்ற வழக்குக் காட்சிகள் அனைத்துமே
மிகச் சிறப்பானவையாகவே இருக்கமுடியும் என்று உறுதியாக இருந்தார். விதி படத்தில் வரும்
நீதிமன்றக் காட்சிகளை நூறாவது முறை கேட்கும்போது கூட முதல்முறை அடையப் போகும் அதிர்ச்சியைவிட
அதிக அதிர்ச்சியுடன் கேட்பார். ஆம், விதி, பாகப் பிரிவினை, திருவிளையாடல், சரஸ்வதி
சபதம் போன்றவை எங்கள் வீட்டில் சக்கை போடு போட்ட கேசட்டுகள். மொத்தத்தில் அப்பா மிக
எளிமையான வெள்ளந்தியான மனிதர். இன்றைய உலகின் மிகக் கறாரான வரையறையின்படி சொல்வதென்றால்
ஏமாளி.
23ம் புலிகேசி படத்தையும் அப்படி புகழ்ந்து தள்ளினார். அப்பாவுக்கு ஒன்று பிடித்துவிட்டால் அவ்வளவுதான்! அம்மா ‘அதிவிஷ்ட்டு அனாவிஷ்ட்டு’ என்பாள். அப்போதெல்லாம் சிடி வந்துவிட்டது என்பதால் அந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்றார். ஆனால் எனக்கோ அதை ஒரு படமாகப் பார்க்கப் பிடிக்கவில்லை, அதேபோல் காட்சிகளாகப் பார்த்துப் பார்த்துச் சலித்துவிட்டது. இருந்தாலும் பரவாயில்லை என்று, அவர் பல தடவை கேட்டுக்கொண்ட பிறகு, 23ம் புலிகேசி சிடி வாங்கினேன். வழக்கம்போல திருட்டு சிடிதான்! பீச் ஸ்டேஷனுக்குப் போன சமயத்தில் அப்பாவின் நினைவு வந்து வாங்கிக்கொண்டு வந்து தந்திருந்தேன். ஆர்வமாக அதைப் பார்க்கத் துவங்கினார். குடும்பத்தில் அனைவரும் பார்த்தோம். அப்போதெல்லாம் விசிடி என்பதால் இரண்டு சிடி இருக்கும். முதல் சிடி நன்றாகவே ஓடியது. இரண்டாவது சிடி ஓடவில்லை! அதைப் போய் மாற்றிக்கொண்டு வரவும் எனக்கு முடியவில்லை. நான் அப்போது ராமாபுரத்தில் இருந்தேன். கடைசி வரை பார்க்காத இரண்டாவது சிடியையே சொல்லிக்கொண்டிருந்தார்!
ஜெயக்குமார்
ஸ்ரீனிவாசன் என் அப்பாவுக்காக பாலமுரளி கிருஷ்ணா பாடிய ஹனுமான் பாடல்களைக் கொண்டு வந்து
தரவும், அப்பா அதை வாக்மேனில் கேட்டார். வாக்மேனில் கேட்பதற்கென்றே பாடல்கள் இருக்கின்றன,
இதையெல்லாம் கேட்டால் வாக்மேனுக்கே அசிங்கம் என்றெல்லாம் சொல்வேன். ஆனால் எதைப் பற்றியும்
கவலைப்படாமல் பாட்டைப் போட்டுக்கொண்டு தலையை தலையை ஆட்டிக்கொண்டிருப்பார். கர்நாடக
சங்கீதம் தெரிந்தவர்கள்கூட தலையை அப்படி ஆட்டமாட்டார்கள். அப்பாவுக்கு கர்நாடக சங்கீதம்
சுத்தமாகத் தெரியாது. ஆனால் எப்படியோ தலையை ஆட்டுவதும் தாளம் போடுவதும் மட்டும் பிடிபட்டுவிட்டது!
வீட்டில் அப்போது
சோனி டேப் ரிக்கார்டர் வாங்கினோம். திருநெல்வேலியில் இருந்த சமயம். டேக்-கில் பணி நிரந்தரம்
ஆகி வந்த முதல் மாதச் சம்பளத்தில் வாங்கினேன். 3,200 ரூபாய். அதில் முதலில் போட்ட கேசட்,
சங்கரா பரணம். அடுத்து போட்டது இந்த ஹனுமான் பாடல்களைத்தான். காலையில் அடிக்கடி இந்த
கேசட்டைப் போடுவோம். முதலில் பாடல்கள் அத்தனை வசீகரமாக இல்லாதது போலத்தான் தோன்றியது.
என்ன பாட்டு இதெல்லாம் என்றுதான் கேட்கத் தொடங்கினேன். பல தடவை கேட்டு கேட்டு பாடல்கள்
மனதில் தங்கின. அது எனக்குப் பிடித்துவிட்டது என்பதேகூட மிகப் பின்னால்தான் தெரிந்தது.
அப்பா போய், பல ஆண்டுகளுக்குப் பிறகு எதோ ஒரு கோவிலில் இந்த கேசட்டில் உள்ள பாடல் ஒன்றைக்
கேட்டபோது சட்டென அடுத்தடுத்த வரிகள் ஞாபகம் வந்து, ஒரு பக்தி வந்து, இந்தப் பாடல்கள்
இத்தனை பிடிக்குமா என்று ஆச்சரியமாகிவிட்டது. அதேபோலவே ஊத்துக்காடு பாடல்களும். குறிப்பாக
யேசுதாஸ் பாடியவை. இப்போது பித்துக்குளி முருகதாஸ் பாடியதைக் கேட்டு, யேசுதாஸ் பாடியதைவிட
அதிகம் பிடித்துவிட்டாலும், யேசுதாஸ் பாடல்களைக் கேட்கும்போது பழைய நினைவுகள் வந்துவிடுகின்றன.
அப்படி வெறித்தனமாகக் கேட்டிருக்கிறேன். இப்படி இன்னும் மிகச் சிறிய வயதின் நினைவைத்
தரும் மற்றுமொரு பாடல், பித்துக்குளி முருகதாசின் ‘பச்சை மலை வாகனனே’ பாடல். மார்கழி
மாதத்தில் திருநெல்வேலி டவுனில் பெருமாள் கோவில் தெருவில் ஐந்து வயதில் சுற்றிக்கொண்டிருக்க
வைத்துவிடும்.
இன்று ஹனுமன் ஜெயந்திக்காக பாலமுரளி கிருஷ்ணாவின் பாடலைக் கேட்கவும் இந்த நினைவுகள் எல்லாம் வந்துவிட்டன. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின்பாக இந்தப் பாடல்களைக் கேட்கிறேன். யூ ட்யூப் என்கிற ஒன்றுக்கு நாம் எத்தனையோ கடமைப்பட்டிருக்கிறோம். இந்தப் பாடல் கேசட்டை முன்பு வாங்கிக் கொடுத்த ஜெயக்குமார் ஸ்ரீனிவாசனுக்கும்.