கையிலிருந்து நழுவிக்கொண்டிருக்கும்
காலம்
காதல்
காமம்
உயிர்
பாதச் சத்தமற்ற ஒரு பூனையின் நடையைப் போல
நுழைந்தது தெரியாத ஒளியைப் போல
முகிழ்ந்தது அறியா மலர் போல
கையிடுக்கிலிருந்து
நெருக்க நெருக்க
வழிந்துகொண்டிருக்கும் நீர் போல
கனன்றுகொண்டே
கரியாகிக் கொண்டிருக்கும்
கங்கு
Tag Archive for கவிதை
கவிதை
உயிர்க்கத் துலங்கும் உலகு
யாருமே என்னை அழைக்கவில்லை
என் குரலும் யாருக்கும் கேட்கவுமில்லை
மழையோ வெயிலோ காற்றோ பனியோ
சத்தமோ நிசப்தமோ எதுவுமே இல்லை
சூன்யமும் இல்லை
ஆனாலும் எல்லாமும் நிறைந்திருந்தது எப்படி
மனதின் கண்கள் திறக்க
முகத்தின் கண்கள் மறைய
அகத்தின் செவி கேட்க
புறச்செவி ஒடுங்க
உள்ளே உள்ளே இன்னும் உள்ளே
மெல்லப் பரவுகிறது
அன்று பிறந்த மாசற்ற சிசு ஒன்றின் வாசம்
உயிர்க்கத் துலங்கும் உலகு.
எதுவுமே நிகழவில்லை
எவ்விதப் பதட்டமும்
இல்லை என்ற பாவனையில்
புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டேன்
இரண்டு வரிகளுக்குள்ள
வெற்றிடத்தில் நிலைகுத்தி நின்ற பார்வையில்
ஓர் புதிய உலகம் விரிந்தது
மாயக் கண்ணன்
தன் வாய் திறந்தபோது
உள்ளே உருண்ட உலகத்தைக் காட்டிலும்
விரிந்ததொரு பிரபஞ்சம்
எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி
நான் வெளியே
தனியொரு பிரபஞ்சமாக
புத்தகத்தை பட்டென்று மூடி வைக்க
பறந்து சென்ற எல்லாம்
அதனதன் இடத்தில் வந்து அமர்ந்துகொண்டது
ஒன்றுமே நிகழாதது போல
இரண்டு கவிதைகள்
நான் எழுதிய இரண்டு கவிதைகள் சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளன. வாசிக்க: http://solvanam.com/?p=19298
பிஞ்சுக் கதை
மொழியறியாக் குழந்தை ஒன்றின்
கதை கேட்கத் தொடங்கினேன்
நல்லவர்கள் மட்டுமே வரும் கதை
குழந்தையின் தலையைச் சுற்றி
தேவர்கள் பூவோடு காத்திருந்தார்கள்
ரோஜா கொண்டு வந்த கைகளைக் கண்டு
குழந்தை சிரித்துக் கொண்டது
மஞ்சள் நிறப் பூ மலர்ந்தபோது
முகம் விரிந்தது
இரண்டு கைகளை
தலைக்கு இணையாக ஏந்தி
பூக்களைப் பெற்றுக்கொண்டே இருந்தது குழந்தை
இடைவேளையாக
வீறிட்ட குழந்தைக்குப் பால் கொண்டு வந்தாள் அம்மா
தேவர்கள் காத்திருந்தார்கள்
மீண்டும் பூக்கள் சொரிய
குழந்தை சிரிக்கத் தொடங்கியது
உச்சகாட்சியாகக்
குழந்தையைப் பார்க்க
கடவுள் வந்திருந்தார்
அவரைக் காக்க வைத்துவிட்டு
நல்லவர்கள் கதையை
எனக்குத் தொடர்ந்தது பிஞ்சு
தழல்
அடி நெஞ்சின் ஆழக் கிடந்து
பல்லாண்டு ஊறி
பலம்கொண்ட வார்த்தைசெய்து
வீசியெறியப்பட்ட தழல்.
எங்கும் பற்றிக்கொண்டது
பைந்தழைகள் பற்றிக்கொண்டன
பசுமரம் எரியத் தொடங்கியது
வானெங்கும் தீ சூழ
எல்லாம் சிவப்பு நிறம்
எங்கும் செம்மை
கண்கள் காணுவதெல்லாம் செந்நிறம்
கண்களும் செம்மை கொண்டன
தழல் பரவ பரவ
என்னுடலும் தழலானது
அக்னியின் கோபத்தில்
என்னுடல் கிளர்ந்தபோது
அக்னிக்கும் எனக்குமான
சிறிய இடைவெளியும் அற்றுப்போனது
எல்லாம் ஒன்றானது
நீண்ட பெருமழையிலும்
விடாது எரிந்தது தீ
ஒரு வார்த்தையில்
உலகம் தீயானது
பசுமரத்தில் இடி விழுந்தது போல
இடி சொல்லாகுமா?
கண்களில் வழியும்
கண்ணீர்த் துளிகளில்
இரண்டொரு கங்குகள் உருண்டன
தழலெறிந்தவனுக்கு
அவை அர்ப்பணம்.