Tag Archive for கமல்

தமிழக வெற்றி கழகம் தோற்றம்

விஜய் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். ‘தமிழக வெற்றி கழகம்’. தமிழ்நாடு என்று வைக்கவில்லை. தமிழகம் தமிழ்நாடு என்றொரு அரசியல் சிறிது காலம் சுற்றிக் கொண்டிருந்தது. இனி அது இருக்காது. இவரது அரசியல் கட்சியினால் கிடைத்த முதல் பயன் இது. ஒரே ஒரு பயனும் இதுவாக இல்லாமல் இருக்க வேண்டும்.

திடீரென்று தனது லெட்டர் பேடில் ஜோசப் விஜய் என்று வெளிப்படுத்திக் கொண்டது போல, அரசியலில் இவரது பெயர் விஜய் என்றிருக்குமா ஜோசப் விஜய் என்றிருக்குமா என்று பார்க்க வேண்டும். இதுவரை தமிழ்நாட்டை ஹிந்து அல்லாத வேற்று மதக்காரர்கள் ஆண்டதில்லை என்றே நினைக்கிறேன். (வேற்று மதக்காரர்களைவிட தீவிர வேற்று மத அபிமானிகள் ஆண்டிருக்கிறார்கள் என்பது தனி.) இவர் வெளிப்படையாக கிறித்துவர் என்று அறிவித்துக்கொண்டு வந்தால் ஆதரவும் எதிர்ப்பும் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும்.

ஒரு கிறித்துவர் என்றும், தீவிர முற்போக்காளர் என்றும் தன்னை விஜய் அரசியலில் முன்னிறுத்திக் கொள்ளும் பட்சத்தில் இவர் திமுகவுக்கே முதல் போட்டியாளராக இருப்பார். விஜய்யின் திரைப்படங்கள் வெளி வருவதில், விழா நடத்துவதில் இருந்த சிக்கல்களை எல்லாம் வைத்துப் பார்த்தால் நாம் இதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

விஜய் வாங்கப் போகும் ஓட்டு சதவீதம் அதிகபட்சம் 4% என்று வைத்துக்கொண்டால், இவர் திமுகவிலிருந்து 2% ஓட்டுகளையும், நாம் தமிழர் கட்சியில் இருந்து 1% ஓட்டுகளையும் பிரிக்கலாம். புதிதாக 1% ஓட்டுகளை வாங்கலாம். அதில் அண்ணாமலைக்குப் போகவேண்டிய 0.5% ஓட்டுகளும் குறையலாம். இது என் கணிப்பு. அல்லது யூகம். சரியாகச் சொன்னால், ஆசை. 2026ல் இந்த நிலை இன்னும் மோசமாகலாம் அல்லது விஜய் முன்னேறலாம்.

ஆனால் விஜய் முன்னேற வாய்ப்புக் குறைவு. ஏன்? இன்று அரசியலில் அண்ணாமலை நிர்ணயம் செய்து வைத்திருக்கும் பென்ச் மார்க். ஒரு கேள்வி கேட்டால், அதற்கு ஆதாரபூர்வமாக, அர்த்தபூர்வமாக பதில் சொல்கிறார் அண்ணாமலை. இனி புதிதாக வரும் அரசியல்வாதிகளிடமும் மக்கள் இதை எதிர்பார்ப்பார்கள். அப்படி பதில் சொல்ல முடியாமல் போகும்போது, எதாவது உளறும்போது, மீம்களும் ட்ரோல்களும் கடுமையாக இருக்கும். அதிலும் திமுகவுக்கு எதிர்த்தரப்பாக விஜய் நின்றால், இந்த மீம்களும் ட்ரோல்களும் இன்னும் தீவிரமாக இருக்கும்.

திமுகவா விஜய்யா என்று வந்தால் அடுத்த பத்து வருடங்களுக்காவது பத்திரிகைகள் திமுகவுக்குத்தான் ஜால்ரா அடிக்கும். விஜய்க்கு இது இன்னொரு பிரச்சினை. பத்திரிகை உலகம் அண்ணாமலை எதிர்ப்புக்கு திமுகவுக்கு ஜால்ரா தட்டி, கூடவே விஜய்யை அண்ணாமலைக்கு எதிராகப் பாராட்டியும் திமுகவுக்கு ஆதரவாகத் திட்டியும் காலத்தை ஓட்டவேண்டும். நல்ல பொழுதுபோக்கு நிச்சயம்.

மாறாக விஜய் ஹிந்து ஆதரவு ஓட்டுகளைக் குறி வைத்து, பாஜக ரக அரசியலைச் செய்தால் என்னாகும்? மிக எளிதாக விஜய்யை முத்திரை குத்தி ஓரம் கட்டிவிடுவார்கள். பாஜகவுக்கே ஹிந்து ஓட்டுகள் கிடைக்காத நிலையில் அதற்கு விஜய் குறி வைக்க காரணமே இல்லை. எனவே விஜய் அந்தப் பாதையில் செல்லவே மாட்டார்.

விஜய் இன்று அவரது திரையுலகப் புகழின் உச்சியில் இருக்கிறார். ஒரு படத்துக்கு சர்வ சாதாரணமாக 100 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் நிலையில், அடுத்த பத்து வருடங்களுக்கு இதில் பெரிய மாற்றம் இருக்கப் போவதில்லை என்னும் நிலையில், விஜய் இப்போதைக்கு நேரடி அரசியலுக்கு வரவே மாட்டார் என்பதே என்னுடைய தீர்மானமாக இருந்தது. ஆனால் கட்சியின் பெயரை அறிவித்து நேரடியாகவே வந்துவிட்டார். இனி திரைப்படமும் நடிக்கப் போவதில்லை என்று கிட்டத்தட்ட அறிவித்திருக்கிறார். கட்சி ஆரம்பித்தபிறகு திரைப்படங்களில் நடித்தால் எடுபடாது என்கிற எண்ணத்தை ரஜினியும் கமலும் உடைத்துக் காட்டிவிட்டார்கள். எனவே ஒருவேளை விஜய் கட்சி அறிவித்த பின்பும், அரசியலுக்கு வந்த பின்பும், திரைப்படங்களில் நடித்தாலும் பெரிய பாதிப்பு இல்லாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

ஒரு கட்சியின் பெயரை அறிவித்துவிட்டு, இரண்டு வருடங்கள் கழித்து தேர்தல் அரசியலில் இறங்குவது நல்லதல்ல. வைகோ திமுகவைப் பிரிந்தபோது ஏற்பட்ட சலசலப்பில் ஒரு சதவீதம் கூட வாக்காக மாறவில்லை. காரணம், இரண்டு வருடங்கள் கழித்துத் தேர்தல் வந்ததுதான். விஜய்க்கு இப்போது அந்தச் சலசலப்பு கூட இல்லை.

எதிர்பார்க்காத திடீர் மாற்றம் தமிழ்நாட்டு அரசியல் சூழலில் நிகழ்ந்தால் ஒழிய, எதுவும் விஜய்க்குச் சாதகமாக நடக்க வாய்ப்புக் குறைவே. அப்படியே திடீர் மாற்றம் ஒன்று நிகழ்ந்தாலும், அங்கே அண்ணாமலையின் இருப்பையும் விஜய் சமாளித்தாகவேண்டும்.

விஜய்க்கு வாழ்த்துகள்.

Share

ரஜினி கமல் அரசியல்

ரஜினி கட்சி ஆரம்பித்தபோது இருந்த நம்பிக்கையும் ஆர்வமும் எனக்கு பின்னர் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. சில சமயம் மீண்டும் ஒரு ஆர்வம் வரும். ரஜினி எதாவது என் கருத்துகளுக்கு எதிராக சொல்வார். அதுவும் அவர் இத்தனை நாள் தன்னை எப்படி முன்னிறுத்திக்கொண்டாரோ அதிலிருந்து முற்றிலும் விலகிப் போவதான கருத்தாகவும் இருக்கும். இப்போது அவர், தேவைப்பட்டால் கமலுடன் இணைந்து செயலாற்றுவேன் என்று சொல்லி இருக்கிறார். கொடுமை. (நான் வீடியோவைப் பார்க்கவில்லை, தமிழ் தி ஹிந்துவில் வந்திருக்கும் செய்தியைப் பார்த்தே சொல்கிறேன்.) ரஜினி அரசியலுக்கு வந்தால் வெல்வார் என்பதே என் கணிப்பு. ஆனால் இப்படி கமலுடன் எல்லாம் இணைந்து வந்தால் உள்ள ஓட்டும் போய்விடும். அதுமட்டுமல்ல. கமலின் அரசியலை ஏற்றுக்கொள்வது ரஜினி தனக்கும் தன் ரசிகர்களுக்கும் அவரை நம்பியவர்களுக்கும் செய்யும் துரோகம். நட்பு என்ற ஒரு வஸ்து எப்படி வேண்டுமானால் இருந்துத் தொலைக்கட்டும். ஆனால் இதெல்லாம் ஓவர். ஓவர் என்பதோடு, அவர் சொல்லி வந்த கருத்துகளுக்கும் நம்பிக்கைக்கும் செய்யும் துரோகம். தொடர்ந்து தவறுகளை மட்டுமே செய்வதில் ரஜினி ஏன் இப்படி மும்முரமாக இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கமலுடன் கூட்டணி என்றால், ‘மாநிலத்தில் ரஜினி மத்தியில் மோடி’ என்று, ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக சொன்ன நாளில் நான் சொன்ன கருத்தை பின் வாங்கிக்கொள்கிறேன். 🙂 ரஜினி மூலம் எப்படியோ ஐந்து வருடங்களுக்குப் பிறகாவது ஹிந்து உணர்வுடன் மக்கள் வாக்களித்து பாஜக 2ம் இடத்துக்காவது வரும் என்ற, மலையைக் கெல்லி எலியைப் பிடிக்கும் ஆசையும் இந்த அறிவிப்போடு நாசமாகப் போவதை நினைத்தால் வேதனையாகவே இருக்கிறது. எப்படியோ, நாரோ சேர்ந்த பூவும் நாறும் என்பதை ரஜினிக்குச் சொல்லுங்கள்.

பிகு: தரக்குறைவான விமர்சனங்கள் நீக்கப்படும்.

Share

விஸ்வரூபம் 2

விஸ்வரூபம் 2
 
நாம் நம் ஊரில் சில தையல்காரர்களைப் பார்த்திருப்போம் அவர்கள் தங்களிடம் மீதமுள்ள துணிகளை வைத்து ஒரு சட்டையைத் தைத்துவிடுவார்கள். அது நன்றாகவும் இருக்காது, அதைத் தூக்கி எறியவும் முடியாது. அதேபோல் கமலஹாசன் தன்னிடம் ஏற்கெனவே இருந்த ஒரு படத்தின் மீதக்காட்சிகளிலிருந்து புதியதாக ஒரு படத்தைத் தயாரிக்க ஆசைப்பட்டுவிட்டார். அது ஒரு படமாகவும் இல்லாமல் படம் இல்லாததாகவும் இல்லாமல் ஏதோ ஒன்றாக உருவாகி இருக்கிறது.
 
50 வயதுக்கு மேல் ஒருவன் தன் காதல் அனுபவங்களை நினைத்து நினைத்துத் தனக்குத் தானே சிரித்துக் கொள்வது போல அமைந்திருக்கிறது இத் திரைப்படம். என்னவெல்லாமோ காட்சிகள் திடீர் திடீரென வருகின்றன. தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. அக்காட்சி முடிவடைந்ததும் நாம் ஏதேனும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டி உள்ளது. இதற்கிடையில் கமலின் வழக்கம்போன்ற மேதாவித்தனமான வசனங்கள் வேறு. புரியவில்லை என்பதன் அர்த்தம், கமல் எப்போதுமே 20 வருடங்களுக்கு முன்பான ஒரு திரைப்படத்தை எடுத்து விடுவார் என்று அவரது ரசிகர்கள் சொல்லிக் கொள்ளும் வகையிலானது அல்ல. தெளிவின்மை தரும் புரிதலின்மை.
 
ஒரு காட்சி ஏன் வருகிறது, அது சொல்ல வரும் செய்தி என்ன என்று எதுவும் யாருக்கும் புரியாது. முதலில் இருந்து கடைசி வரை ஒரே இடத்திலேயே கதை அப்படியே நிற்கிறது. காட்சிகள் தொடர்பின்றி நகர்கின்றன. நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். யாரோ யாரோஒருவரைக் கொன்று கொண்டே இருக்கிறார்கள். யார் செத்தால் நமக்கென்ன என்ற மனப்பான்மையில் நாம் அமர்ந்திருக்கிறோம். முதல் பாகத்தில் தப்பித்துப்போன ராகுல்போஸ் இடைவேளைக்குப் பிறகுதான் தலையைக் காண்பிக்கிறார். இப்படத்தில் இவருக்கு எவ்வித ஸ்கோப்பும் இல்லை. அடுத்து என்ன நடக்கும் என்பதை நிரூபிக்கும் வகையிலான காட்சிகள்தான் படம் நெடுகிலும் பெரும்பாலும் வருகின்றன.
 
64 வயது கமலுக்கு இரண்டு பெண்கள் போட்டிப் போட்டுக்கொண்டும் ஒருவருக்கொருவர் பொறாமைப்பட்டுக் கொண்டும் பேசும் காட்சிகள் பெரும் அலுப்பைத் தருகின்றன. எரிச்சலை அடக்கமுடியவில்லை. கமலுக்கும் மனைவிக்குமான காதல் காட்சிகள் காணச் சகிக்கவில்லை. கமல் இப்போது முஸ்லிமா இந்துவா என்ற குழப்பம் அவர் மனைவிக்கு மட்டுமல்ல, நமக்கும் ஏற்படுகிறது. கமலின் மனைவி அவரை ஏன் அன்றுதான் கல்யாணம் ஆன ஒருவர் போல உருகுகிறார் என்பதெல்லாம் ஒரு மண்ணும் புரியவில்லை. வசீம் என்று அழைக்கிறார். கொடுமை.
 
கமல் சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் என்னவெல்லாமோ வசனம் பேசுகிறார். படத்தின் முதல் காட்சியில் தன் அரசியலுக்கு விளம்பரம் செய்து கொள்கிறார். இதனால் படத்தில் வரும் காட்சிகள் அரசியலுக்கு உள்ளதா அல்லது படத்துக்கு உரியதா என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. 64 குண்டுகள் என்கிறார். 64 வருடம் கொள்ளை என்று பிராமணரைப் பார்த்துச் சொல்கிறார். நொடிக்கு நொடியில் முஸ்லிம் – பிராமண – காங்கிரஸ் அரசியல் என்று மாறும்போது நமக்குத் தலை சுற்றுகிறது. அந்த 64 என்பது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பது எனக்குப் புரியவில்லை. 1947ல் சுதந்திரம் பெற்றதைக் குறிப்பிடுகிறது என்றால் 64 என்பது இடிக்கிறது. நிச்சயம் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். ஒருவேளை 2011ல் நடக்கும் கதையா? இதை விளக்க கமல் இன்னொரு படம் எடுத்துத் தொலைக்காமல் இருக்கவேண்டும்.
 
முதல் பாகத்தில் மிகத் தெளிவாக, இந்திய முஸ்லீம் நல்லவன் என்கிற அடையாளத்தைச் சொல்லி இருந்தால் படத்திற்குப் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என்று நினைத்தாரோ என்னவோ, இப்படத்தில் இந்திய முஸ்லிம்களை வெளிப்படையாக உயர்த்தும் காட்சிகள் மிக தெளிவாகக் காண்பிக்கப்படுகின்றன. இந்தத் தெளிவு முதல் படத்தில் கிடைத்த அடியில் கமலுக்கு ஏற்பட்டிருக்கிறது.
 
பிராமணர்கள் மேல் இருக்கும் எரிச்சல் கமலுக்கு இன்னும் தீரவில்லை. படத்தில் இந்தியாவைக் காட்டிக் கொடுப்பவர் ஒருவர் பிராமணர். அவர் பெயர் ஐயர் என்றே வருகிறது. அதுமட்டுமின்றி வகைதொகை இல்லாமல் எல்லோரும் பிராமண பாஷையில் பேசிக் கொல்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் எட்டிப் பார்த்து ரூம் போட உதவி செய்யும் ஒரு நபர் கூட பிராமண பாஷையில் பேசுகிறார். இது போதாதென்று திடீரென ஆண்ட்ரியாவும் பிராமண பாஷை பேசுகிறார். நல்லைவேளை, அடுத்த காட்சியில் கொல்லப்பட்டுவிடுகிறார். முஸ்லிம்களை வம்பிக்கிழுத்தால், அது இந்திய முஸ்லிம் உலக முஸ்லிம் வேறுபாடுகளையெல்லாம் தாண்டி, கொமட்டிலேயே கும்மாங்குத்தாகக் கொண்டு வரும் என்பதைப் புரிந்துகொண்டுவிட்ட கமல், பிராமணர்கள்தான் சரிப்பட்டு வரும் என்ற முடிவுக்கு வந்திருப்பது பெரிதும் வரவேற்கப்படவேண்டியது. அரசியல் செய்ய உயிர் வேண்டும் என்பதைத்தான் நம் முன்னோர்கள் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்று சுருங்கச் சொல்லினர்.
 
படத்தில் பக்கத்து வீட்டுக்குப் போய் வரும் தோரணையில் பாகிஸ்தான் போய்விடுகிறார்கள். கமல் நினைத்தால் கண்மூடி ஆப்கானிஸ்தான் போகிறார். அடுத்த காட்சியில் அம்மாவைப் பார்க்க டெல்லி வருகிறார். அவரிடம் தான் மகன் என்று சொல்லத் தேவையில்லை எனச் சொல்லிவிடுகிறார். காலில் விழுகிறார். பாடுகிறார்கள், ஆடுகிறார்கள், பாடாய்ப்படுத்துகிறார்கள். அவர் மதமென்ன என்று யோசிக்கும்போதே கமல் வேறு நாட்டுக்குப் போய்விடுகிறார். கமல் இப்போது அமெரிக்காவில் இருக்கிறாரா டெல்லியில் இருக்கிறாரா ஆப்கானிஸ்தானில் இருக்கிறாரா பாகிஸ்தானில் இருக்கிறாரா என்று கண்டுபிடிப்பதற்குள் நமக்கு வயதாகிவிடுகிறது.
 
கமலுக்கும் வயதாகிவிட்டது. ஆனால் அழகாக இருக்கிறார், நடிக்காமல் இருக்கும்போது மட்டும். பிரச்சினை என்னவென்றால் படம் முழுக்க ஏதாவது நடித்துக் கொண்டே இருக்கிறார். பார்த்து பார்த்து புளித்து போன நடிப்பு.
 
பாசிட்டிவாக சில விஷயங்களைச் சொல்ல வேண்டுமென்றால், இப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பல காட்சிகளை குன்சாக ஒன்றாக்கி ஒரு படமாக்கியது பெரிய சாதனைதான். இதற்கு எடிட்டருக்குப் பெரிய பாராட்டு சொல்ல வேண்டும். பல காட்சிகள் ஆங்கிலப்படத்தின் தரத்துடன் இருக்கின்றன – பார்க்க மட்டும். இதற்கு இணையாக பல காட்சிகள் தரமற்று இருக்கின்றன.
 
படத்தில் சிரிக்க சீரியஸான பல காட்சிகள் உண்டு என்றாலும் கிளைமாக்ஸ் காட்சி சிரிப்பின் உச்சம். 40 நொடியில் கமல் குண்டு வெடிப்பிலிருந்து தப்பித்து வில்லனையும் கொன்று தன் மனைவி கொல்லப்படுவதற்கு முன்னால் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வரும் காட்சி, வேறு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அதிலும், உன் கடவுளே உன்னைக் கொல்லும் என்று சொல்லவும், சாகக் கிடக்கும் ஒரு அல்லக்கை கமலைப் பார்த்து சைகையில் கேட்க, கமல் அதை மறுக்க, இவர் ஊதறும் அவ ஆடறதுக்கும் இணையான காட்சி.
 
ஒரு திரைப்படம் எடுத்து முடித்ததும் அதை எப்படி தயாரித்தோம் என்று கடைசியில் ஓட விடுவார்கள். பெரிதினும் பெரிது கேள் என்ற எண்ணத்தில் கமல் அதையே ஒரு திரைப்படமாக்கத் துணிந்து விட்டார். விஸ்வரூபம் பாகம் 1 படத்தித்துக்குச் செய்யும் மரியாதையாக இந்தப் படத்தை கமல் தவிர்த்திருக்க வேண்டும்.
 
பின்குறிப்பு: எப்போதும் ஒருத்தன் என்னை அண்ணா என்றுதான் அழைப்பான். தம்பி போல அவன். ஒருநாள் திடீரென்று பெயர் சொல்லி அழைத்தான். நீ போ என்று சொல்ல ஆரம்பித்தான். என் மனதுக்குள் மலைபோல கேள்விகள். வேறொன்றுமில்லை. உத்தமவில்லன் வரை ஜிப்ரான் என்றறியப்பட்ட இசையமைப்பாளர் இப்படத்தில் முகம்மது ஜிப்ரான் ஆகியிருக்கிறார். வாழ்த்துக்கள். வரும்போதே ஜோசப் விஜய் ஆகவும் முகமது ஜிப்ரான் ஆகவும் வந்து விடுங்கள் என்பதே நம் வேண்டுகோள்.
Share

கமற்சிலையரசியல்

கமற்சிலையரசியல்

சிலைகள் வைப்பதில் வித்தியாசமான கருத்துடையவன்நான். ஆனால், அதை உடைப்பது ரொம்ப கேவலமான செயல். பெரியார் இருந்திருந்தால் ஏன் சிலை வைக்கிறீர்கள் என கேட்டிருப்பார்” என்றார்.

கமல் – 12-மார்ச்-2018 (விகடன் தளத்தில் இருந்து.)

அதாவது தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரதிநிதித்துவம் ஒதுக்க முதலில் சட்டம் செய்தவர் டாக்டர் சுப்பராயன் அவர்களாவர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு உத்தியோகம் வழங்க சட்டம் செய்தவர் தோழர் எஸ்.முத்தையா முதலியார் என்றே சொல்லலாம். தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதி வழங்கினவர் பொப்பிலி அரசர் என்றே சொல்ல வேண்டும். இம் மூவர் எப்படிப்பட்டவராயிருந்தாலும், நாளைக்கு இவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராயிருந்தாலும், இந்தக் காரியங்களுக்கு இவர்களுக்கு சிலை வைத்து கௌμவிக்க வேண்டியது நன்றி உடைமையாகும் என்பதில் நமக்குச் சிறிதும் ஆக்ஷேபணையில்லை.

குடியரசு துணைத் தலையங்கம் 10.11.1935

ஆகவே கொச்சி அரசாங்க உத்தியோகத்தில் சர். ஷண்முகம் வகுப்புவாத பிரதிநிதித்துவ உரிமை ஏற்படுத்திவிட்டார். எனவே அவருக்கு கொச்சி அரசாங்கமும் கொச்சி பிரஜைகளும் கடமைப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் அவருக்கு இந்த இரு கூட்டத்தவரும் இரண்டு சிலைகள் செய்து அரசாங்க சிலையகத் துறைமுகத்திலும், பிரஜைகளது சிலையை பட்டணத்து நடுவிலும் அல்லது சட்டசபைக்கு முன்பக்கமுள்ள மைதானத்திலும் வைத்து நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

குடிஅரசு தலையங்கம் 02.08.1936

அதாவது ஈவெராவின் கருத்து சிலைகளுக்கு எதிரானதாக இல்லை. மாறாக பிராமணர்களுக்குச் சிலை வைப்பதற்கு எதிராகவே இருந்துள்ளது. கமல்ஹாசனாரும் இக்கருத்தையே கொண்டிருக்கிறார் எனில் அதைத் தெளிவுபடுத்துவது நல்லது. அன்னாருக்கு இக்கருத்து இல்லை என்பது தெரியும். ஆனால் ஈவெரா இருந்திருந்தால் சிலையே வேண்டாம் என்று சொல்லி இருப்பார் என்றெல்லாம் கருணாநிதித்தம்பித்தனமாக அடித்துவிடாமல் இருந்தால் அன்னாருக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம் என்பதைச் சொல்லவேண்டியுள்ளது.

இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் ஈவெரா தனக்குத் திறக்கப்பட்ட சிலைக்கு ஆதரவு தருவது போல் உள்ளது. இதையும் அன்னார் கணக்கில் கொள்ளவேண்டும்.

 

மேலே உள்ள புகைப்படம் – மாயவரத்தான் ஃபேஸ்புக் டைம்லைனில் இருந்து எடுக்கப்பட்டது.

Share

கமல் அரசியல்

கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் – பூ அல்ல விதை – இந்த விளையாட்டெல்லாம் மலையேறி ஆண்டுகள் பலவாகிவிட்டன. கருணாநிதி இதையெல்லாம் மாஸ்டர் செய்து, அவருக்கே போரடித்து, அது மக்களுக்கும் போரடிக்கிறது என்று உணர்ந்து, கட்டுப்படுத்திக்கொண்ட வார்த்தை விளையாட்டை, கமல் தொடங்கி இருக்கிறார். இது போன்ற அறுவைகள் தரும் எரிச்சலெல்லாம் சொல்லி முடியாது.

பேசிப் பேசியே ஆட்சியைப் பிடித்த காலத்தைப் பார்த்ததுபோல, பேசிப் பேசியே டெபாசிட் இழக்கப் போகிறவர்களின் காலத்தில் இருக்கிறோம்.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகும், கருணாநிதியின் அரசியல் ஓய்வுக்குப் பிறகும், சோபை இழந்த தொலைக்காட்சி ஊடகங்கள், ரஜினி மற்றும் கமல் வருகையை ஒட்டி, சிக்கினாய்ங்கடா என்று ஓவர் கூச்சல் போடுகின்றன. தினம் தினம் கமல் மற்றும் ரஜினி சொல்லும் விஷயத்தை ஒட்டி வெட்டி விவாதங்கள். இதில் நான் பார்த்தது என்னவென்றால், கமல் பற்றிய விவாதமெல்லாம் தூர்தர்ஷனில் வரும் அஞ்சலி இசை நிகழ்ச்சிகள் போலவும் ரஜினி பற்றிய விவாதம் தீப்பொறி பறப்பது போலவும் தோன்றுகிறது இது என் தோற்ற மயக்கம்தான் 🙂 இத்தனைக்கும் அத்தனை ஊடகங்களும் கிட்டத்தட்ட கமலுக்கு ஆதரவாகவும் ரஜினிக்கு எதிராகவுமே இருக்கின்றன. ரஜினிக்கு இது பெரிய மாரல் சப்போர்ட். இப்படியே இருந்தால் ரஜினிக்கு ரொம்ப நல்லது. 🙂

கலாம் பெயரைச் சொல்லி இளைஞர்களின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்று ரஜினியும் கமலும் நம்பினால் அதைவிட ஏமாளித்தனம் வேறெதுவும் இல்லை. அப்துல் கலாமை எல்லாருக்கும் பிடிக்கும். பொதுவாக. அவரே அரசியலில் நின்றிருந்தால் டெபாசிட் போயிருக்கும். எனவே யாரை எதற்காகப் பிடிக்கிறது என்பதறிந்து அரசியல் செய்யவும். ஆத்மார்த்தமாக அப்துல் கலாமின் புகழ்பாடுவதெல்லாம் வேறு. அது அவரவர் தேர்வு. அரசியலில் அவரை வைத்து ஓட்டு வாங்கலாம் என்று நினைத்தால், அரசியலின் அரிச்சுவடியே இன்னும் பிடிபடவில்லை என்று பொருள். இன்னும் தெளிவாகச் சொன்னால், அரசியல் பேய் இன்னும் உங்களை செவுளோடு சேர்த்து அறையவில்லை என்று அர்த்தம். சீக்கிரம் அடிக்கும்.

Share

கமலின் தொடர் – இரண்டாவது வாரம்

கமற்றொடரின் இரண்டாவாது வாரம், கமல் தொடராக வந்திருக்கிறது. எந்த எடிட்டரோ உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார். மொழியில் ருத்ர தாண்டவம். அதுவும் புரியவும் செய்கிறது என்பது இன்னும் முக்கியம்.கமற்றொடரின் இரண்டாவாது வாரம், கமல் தொடராக வந்திருக்கிறது. எந்த எடிட்டரோ உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார். மொழியில் ருத்ர தாண்டவம். அதுவும் புரியவும் செய்கிறது என்பது இன்னும் முக்கியம்.

மிக நீண்ட கட்டுரை. ஆனந்த விகடனில் இத்தனை நீண்ட கட்டுரைகள் வருவது மகிழ்ச்சி.

ரஜினிக்கு பதில் சொல்வதாக ஆரம்பிக்கிறார் கமல். சாரு ஹாஸன் தன் பேட்டியிலேயே கமல் மற்றும் ரஜினியின் நட்பைப் பற்றிச் சொல்லி இருந்தார். மகிழ்வான விஷயம் அது. அதை கமலும் சொல்லி இருக்கிறார். ஆனால் கமல் ரஜினியின் கேள்விக்குச் சொல்லி இருக்கும் பதில், வழக்கான ஜல்லி.

இந்த வழக்கமான ஜல்லிகளோடு பல ஜல்லிகள் உள்ளன. முக்கியமாக “இந்து மதம் இந்த நாட்டைக் கெடுக்கும் அளவுக்கு மற்ற மதங்கள் கெடுப்பதில்லை.” கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் இப்படி பேசத் தோன்றாது..

அடுத்து அண்ணாயிசம் பற்றி. அண்ணாயிசத்தைக் கிண்டல் செய்தவர்களில் சோவும் ஒருவர் என்கிறார் கமல். சொல்லிவிட்டு அண்ணாயிசத்தில் இருந்து ஒரு பாராவைத் தருகிறார். எம் எல் ஏ தன் பொறுப்புகளில் இருந்து வழுவும்போது அவரைத் திரும்ப அழைத்துக்கொள்ளும் வசதியைப் பற்றிய அண்ணாத்துரையின் ஜல்லி. அந்த ஜல்லியை விதந்தோதுகிறார் கமல். கொடுமை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் இந்திய அளவில் இவர்களைப் போன்ற அரசியல்வாதிகளும் இந்த சட்டத்தின் மூலம் என்னவெல்லாம் ஆட்டம் ஆடி இருப்பார்கள் என்று யோசித்தாலே போதும், இந்த ஜல்லியின் இன்னொரு முகத்தைப் புரிந்துகொள்ள. ஆனால் கமல் மிக விவரமாக (பேசுவதாக எண்ணிக்கொண்டு) அண்ணாயிசத்தை அடிப்படையாக வைத்து அதிமுகவினர் ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்கிறார். ஆம், இப்படியாப்பட்ட பனைமரத்தில் அப்படியாப்பட்ட பசுவைக் கட்டிவிட்டார். சோ பற்றி ஒரு வரியில் சொல்லிவிட்டு, சோ சொன்னது தவறு என்கிற எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் கமல். இந்த விஷயத்தில் சோ தவறாகப் போக வாய்ப்பே இல்லை.

பாஜகவின் கையாள் என்பதற்கு கமல் மறுப்பைச் சொல்லி இருக்கிறார். நாத்திகம் பேசுவதால் பத்து பைசா லாபம் உண்டா என்று கேட்கிறார் கமல். உலகில் அனைவருக்கும் தெரியும், இதில்தான் லாபம் என்று. கமலுக்கு மட்டும் தெரியவில்லை போலும். ஹிந்து மத எதிர்ப்பு, நாத்திகம், கம்யூனிஸ ஆதரவு, ஈவெரா ஆதரவு – இவை எல்லாம் ஒன்றாகப் போட்டுச் சமைத்த சாப்பாட்டுக்குத்தான் இன்று கிராக்கி. கமல் வசதியான பாதையிலேயே போய்க்கொண்டு இருக்கிறார். இந்த வசதிதான் இந்து மதத்தைப் போல் மற்ற மதங்கள் இந்தியாவைக் கெடுப்பதில்லை என்று சொல்ல வைக்கிறது. ஆனால் வெளியே மட்டும் இதனால் லாபமில்லை என்று சொல்லிக்கொள்கிறார் கமல். இந்தப் பயணம் எத்தனை தூரம் போகிறதென்று பார்ப்போம்.

Share

கமல் 10

01. ஹிந்து எதிர்ப்பு அரசியல் இந்த மோடிமஸ்தான் நாட்டில் எடுபடாது. எல்லாம் அவாளின் இந்தியா. இந்த இந்தியாவை அவாள் மட்டுமே ஆளவேண்டும், கருப்புச் சட்டைக்காரன் ஆளமுடியாது. இது முன்பே தெரிந்ததுதான்.
 
02. கமலின் அரசியல் ப்ளாட்டோவின், ஷியோதகோவின்(இனிமேல்தான் இவர் பிறக்கவேண்டும்) கருத்துகளோடு ஒப்பு நோக்கத்தக்கது. நம் மக்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்ல. இவர்களுக்கு ஊழல்வாதிகளே சரியானவர்களே அன்றி கமல் போன்ற தத்துவம்சார் அரசியல் அறிஞர்கள் அல்ல.
 
03. கமலின் திரைப்படங்களையே புரிந்துகொள்ளாதவர்கள் கமலின் அரசியலையா புரிந்துகொள்ளப் போகிறார்கள்? பாவம் கமல், இவர்களை நம்பி இறங்கினால்? ஆனால் கமலுக்கு இது புதிதல்ல.
 
04. இயல்பிலேயே மக்கள் ஊழல்காரர்கள்தான். இவர்களுக்குத் தலைமையாக இன்னொரு ஊழல்வாதியே வரமுடியும். எக்கேடும் கெட்டுப் போகட்டும் இத்தேசம். இந்தியா ஒருநாளும் உருப்படாது. தனித்தமிழ்த்தேசமே தீர்வு. தோற்றது தமிழ்நாட்டில்தானே என்று கேட்டு வந்தால் செருப்பால் அடிப்பேன். யோசித்துப் பார் முட்டாள்களே.
 
05. கமலுக்குக் கிடைத்திருக்கும் ஒவ்வொரு ஓட்டும் நேர்மைக்கானது. இதிலிருந்து தொடங்குவோம். அடுத்த பத்து வருடத்தில் கமலே முதல்வர். இத்தோல்வியே வித்து.
 
06. கமல் திரைப்படம் எடுக்கும்போது செய்யும் தவறை அரசியலிலும் செய்துவிட்டார். பத்து வருடங்களுக்கு முன்பே ஒரு படத்தை எடுத்துவிட்டு அப்படம் தோல்வி அடைந்தாலும் திரைக்களத்தை அடுத்த கட்டத்துக்கு அசராமல் நகர்த்துபவர் கமல். அரசியலில் நூறு வருடங்களுக்கு முன்பான அரசியலை முன்னெடுத்துவிட்டார். அரசியலை அடுத்த பல கட்டங்களுக்கு கொண்டு போய்விட்டார். இனி கமலுக்கு முன் கமலுக்குப் பின் என்றே அரசியல் பேசப்படும். வெற்றி தோல்வி எல்லாம் ஒரு பொருட்டே அல்ல
 
07. மக்களைத் தயார் படுத்துவது அரசியலில் முக்கியம். மக்களை தயார் படுத்துபவர்கள் ஒருபோதும் மக்களால் அங்கீகரிக்கப்பட்டதில்லை. உலக வரலாற்றில் நாம் இதைப் பார்க்கலாம். மக்கள் கமலைத் தோற்கடித்ததற்கான காரணம் புரிந்ததா?
 
08. எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷினில் இதுவரை இந்தியாவில் எவ்விதப் புரட்சிகரமான மாற்றமும் வந்ததில்லை. மோடியின் வெற்றி நினைவு வருகிறதா?
 
09. கருணாநிதி மக்களை சோற்றால் அடித்த பிண்டங்கள் என்றார். கமலின் தோல்வி என்ன சொல்கிறதென்றால், மக்கள் சோற்றாலும் சேற்றாலும் அடிக்கப்பட்ட பிண்டங்கள் என்பதையே. எங்கே போகிறது இத்தேசம்.
 
10. கமலின் தோல்வி கமலின் தோல்வி அல்ல. மக்களின் தோல்வி, நேர்மையின் தோல்வி. இதனால் கமலுக்கு ஒரு இழப்பும் இல்லை. இலவசத்தை எதிர்பார்த்து பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டவர்களுக்கு இந்த தியாகமெல்லாம் புரியாது. டாட்.
 
நோட் பண்ணி வெச்சிக்கோங்கப்பா. கமலின் கட்சி, கமல் நிற்கும் ஒரு தொகுதியைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து, எதிர்கால மதிமுக/தேமுதிகவாக விழிக்கும்போது, பயன்படுத்திக்கொள்ளலாம். காப்பிரைட் இல்லாத பிரதி. இலவசம். முற்றிலும் இலவசம்.
Share

கமல் திருப்பித் தர மறுத்த விருது

கமல்ஹாசன் விருதைத் திருப்பிக் கொடுக்காதது அவர் உரிமை. உண்மையில் தன் நடிப்புக்காக தன் திறமைக்காக விருதை வென்றவர் அவர். லாபி செய்து விருதை வாங்கியவர் அல்ல. எனவே தன் திறமைக்காகத் தரப்பட்ட விருதை ஏன் திருப்பித் தரவேண்டும் என்று நினைப்பது சரியான ஒன்றே. சந்து பொந்துகளிலெல்லாம் தேடித் தேடி இவர் கருத்துரிமை மறுக்கப்பட்டுவிட்டது அவர் கருத்துரிமை மறுக்கப்பட்டுவிட்டது அதாக்கும் இதாக்கும் என்று சொல்பவர்கள், கமல்ஹாசனின் கருத்துரிமையை அங்கீகரிக்கும் போர்வையைத் தெளிவாகப் போர்த்திக்கொண்டு அவரை வசைபாடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவாகப் பேசினால் மட்டுமே இவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். எதிராகப் பேசினால் இப்படித்தான். சமீபத்தில் கருத்துரிமையைப் பற்றிய விவாதங்கள் நிகழ்ந்துகொண்டே இருப்பதால், இவர்களால் வெளிப்படையாக கமல்ஹாசனின் கருத்துரிமையை நிராகரிக்க முடியவில்லை. இல்லையென்றால் விருதைத் திருப்பித் தரும் கமலின் கருத்துரிமையை நிராகரிக்கவும் தயங்கமாட்டார்கள்.

கருத்துரிமையைத் திருப்பித் தந்தவர்களே மோதியின் எதிர்ப்பாளர்கள் என்று தேவையற்ற ஒரு பிம்பத்தை இந்த கம்யூனிஸ்ட் கூட்டம் கட்டமைத்தது. அதை மேற்கொண்டு கொண்டுசென்று அப்படி திருப்பித் தராதவர்களெல்லாம் மோதியின் ஆதரவாளர்கள் என்றோ, நிதர்சனத்தைக் கண்டு பொங்காதவர்கள் என்றோ சொல்லத் தொடங்கியிருக்கிறது. பரதநாட்டியம் குச்சுப்பிடி கதகளி ஆடுபவர்கள்கூட விருதைத் திருப்பித் தந்துவிடவேண்டும். இல்லையென்றால் மோதியின் ஆதரவாளர்கள். இந்த காமெடியர்களின் ஆட்டம் தாங்கமுடியாததாக இருக்கிறது.

இந்த எதைப் பற்றியும் கவலைப்படாமல், விருதைத் திருப்பித் தரமாட்டேன் என்று சொன்ன கமல் பாராட்டுக்குரியவர். அவர் நிச்சயம் மோதியின் ஆதரவாளராக இருக்கமாட்டார். அப்படி இருந்தும் அவர் சொல்கிறார் என்றால், தன் திறமைமேல் அவருக்கும் இருக்கும் நம்பிக்கை ஒன்றைத் தவிர வேறு காரணங்கள் தோன்றவில்லை. பொதுவாழ்வில் சகிப்புத்தன்மை நாகரிகம் பற்றி தினமும் பொங்குபவர்கள், கமல் ராஜ் தாக்கரேவை சந்தித்ததை அதே நாகரிகம் கருதி இருக்கலாம் என்றுகூட யோசிக்கமாட்டார்கள். என்ன நடந்தது என்று தெரியாமல் உள்நோக்கம் கற்பிக்கிறார்கள். இதை மற்றவர்கள் செய்யும்போது பக்கம் பக்கமாக எழுதுவார்கள் என்பதுதான் இதிலுள்ள முரண்.

விருதைத் திருப்பித் தர மறுத்த கமல் (நாளை மோதியைப் பற்றி இவர் எப்படி பேசுவார் என்று எனக்குத் தெரியும் என்றபோதிலும்) பாராட்டுக்குரியவர்.

Share