Tag Archive for இரா.முருகன்

இரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல்

நாவல் என்பது ஒரு கதையைச் சொல்லியே தீரவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. அது அனுபவத்தின் பெரு வெளியாகவும் இருக்கக் கூடும். ஆனால் இப்படி ஒரு நாவல் எழுதுவது அத்தனை சுலபமானதல்ல. நாவலில் சொல்லப்படும் அனுபவங்கள் ஒரு குறிப்பிட்ட மனிதனின் வாழ்க்கையோடு முடிந்துவிடவும் தேவையில்லை என்று எல்லையைப் பெருக்கிக் கொண்ட வகையில், இரா.முருகன் இந்த நாவலை மிகப் பெரிய வீச்சும் பரப்பும் கொண்டதாக மாற்றி விட்டிருக்கிறார். அதே சமயம் அந்த ஒரு மனிதனையே அவனது முன்தொடர்ச்சியாக எழுதிய வகையில் அசரடித்திருக்கிறார். எந்த அளவுக்கென்றால், யூகிக்கவே முடியாத ஒரு பெரும் அனுபவ அலைக்குள் சிக்கிக் கொள்ளும் அளவுக்கு.

வெறும் அனுபவங்களை மட்டுமே ஒரு நாவலாக, அதுவும் கிட்டத்தட்ட ஐநூறு பக்க நாவலாக எப்படிச் சொல்ல முடியும்? பின்னணிகளும், விவரணைகளும் கதையைவிட முக்கியமானதாகவும் விரிவானதாகவும் இருக்குமானால் இது சாத்தியம். இரா. முருகன் மொழிபெயர்த்த ‘பீரங்கிப் பாடல்கள்’ என்ற புத்தக வெளியீட்டில் மாலன் மிக அருமையாகப் பேசினார். மேக்ரோ எலிமெண்ட்டுகளைவிட மைக்ரோ எலிமெண்ட்டுகள் ஒரு புத்தகத்தில் விரிந்திருக்குமானால் அந்தப் புத்தகம் தரும் அனுபவம் பற்றிய குறிப்பு ஒன்றைச் சொன்னார். அதைத் தமிழில் செய்து காட்டி இருக்கிறது இரா.முருகனின் ராமோஜியம்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சென்னையின் மீது குண்டு வீசப்படலாம் என்கிற அச்சம் நிலவும் சூழலில் சென்னை எப்படி இருந்திருக்கும் என்ற களத்துடன் தொடங்குகிறது நாவல். இன்றைய கொரோனா காலக்கட்டத்தில், அன்றைய போர்ச் சூழலின்போதான சென்னையை எளிதாக உணர முடிகிறது. கொரோனா என்பது கூட நம் மீது இயற்கை தொடுத்திருக்கும் ஒரு போர்தான். அன்று பெட்ரோல் வாங்கக் கூட ரேஷன். ராமோஜி ராவுக்கும் அவன் மனைவி ரத்னாவுக்குமான வாழ்க்கையை விவரிக்கும் நாவல், தெளக்ஸ் புவனாவின் வருகையுடன் அடுத்த கட்டத்துக்குப் போகிறது. அதன் பிறகான, இந்தக் கால ராமோஜிக்கும் முந்தைய ராமோஜி, ரத்னா, புவனாக்களுடன் நாம் யூகிக்கவே முடியாத தளத்துக்குப் போய்விடுகிறது. இறுதி அத்தியாயம் ஒரு சிறுகதைக்கான கச்சிதமான முடிவு. ஒரு நாவலுக்கு எப்படி சிறுகதைக்கான முடிவு வலுவானதாக இருக்க முடியும் என்று யோசித்திருக்கிறேன். லக்ஷ்மி சரவணகுமாரின் ‘கானகன்’ இப்படி ஒரு அனுபவத்தைத் தந்தது. இப்போது இந்த நாவல். நெகிழ வைக்கும் இறுதி அத்தியாயம்.

நாவல் முழுக்க விரவிக் கிடக்கும் தகவல் களஞ்சியத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமேனால், இன்னொரு நாவல்தான் எழுதவேண்டி இருக்கும். அத்தனை தகவல்கள். எதுவுமே உறுத்தாத அளவுக்கு, வேண்டுமென்றே திணிக்கப்படாத மாதிரி சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பஸ்தனின் இருத்தலியல் பிரச்சினைதான் நாவல் என்பதால், இது மிக எளிதாகவே சாத்தியமாகி இருக்கிறது. ஆனால் அந்தக் காலத்தைக் கொண்டு வருவது என்பது சாமானியமான விஷயமா என்ன? அந்தக் காலத்தில் நாம் வாழ்வது போல என்போமே, கிட்டத்தட்ட இன்று க்ளிஷேவாகிவிட்டாலும், அதை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் இரா.முருகன். உண்மையில் அசரடிக்கிறார் என்றே சொல்லவேண்டும். நான் சொல்வது நாவலை வாசித்தால்தான் உங்களுக்குப் புரியும். அதுவும் முழுக்க வாசித்தால்தான் புரியும்.

நாவலின் அடிநாதமாக வருபவை நான்கு விஷயங்கள். முதலில், உணவு. நாவல் முழுக்க குறிப்பாகச் சொல்லப்படும் உணவு வகைகளைப் பட்டியல் இட்டால், அதுவே ஐம்பது பக்கங்களுக்கு வருமோ என்கிற சந்தேகம் எனக்கு வந்தது! ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் தினமும் உண்பவற்றை எல்லாம் எழுதி வைத்துக் கொண்டே வந்து, அவனது இறுதிக் காலத்தில் அதைப் படித்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று நான் யோசித்திருக்கிறேன். எந்த ஒரு மனிதனுக்கும் உணவின் மேல் இருக்கும் முக்கியத்துவமும் ஈர்ப்பும் அலாதியானது. நாம் அதை உணராவிட்டாலும் கூட, அது என்றுமே நம்முடனே இருந்துகொண்டே இருப்பது.

இரண்டாவது விஷயம், நாவல் முழுக்க வரும் சங்கீதம் பற்றிய குறிப்புகள். இரா.முருகன் கர்நாடக சங்கீதத்தில் விருப்பம் உள்ளவர். எனவே இவற்றையெல்லாம் மிக அழகாக எழுதிச் செல்கிறார். அதுவும் 1940களின் உலகத்தில் இதைப் பொருத்துவதையெல்லாம் அநாயசமாகச் செய்கிறார்.

மூன்றாவது, சினிமா. 1930களில் என்ன சினிமா வந்திருக்கும்? யார் நடிகைகள்? இந்தப் புத்தகத்தைப் படித்தால் இதிலிருந்தே நாம் சில விஷயங்களைத் தெரிந்துகொண்டுவிட முடியும். நடிகர்களையும் படங்களையும் போகிற போக்கில் சொல்லிவிட்டால் என்ன இருக்கிறது? அவர்களையும் நாவலின் கதாபாத்திரம் ஆக்கியதில்தான் சுவாரஸ்யம். காளிங்க ரத்னமும் தெலக்ஸ் புவனாவும்  மறக்க முடியாத கதாபாத்திரமாகிறார்கள். சபாபதி என்ற படம் வந்தது எனக்குத் தெரியும். அதில் ராமசந்திரன் நடித்திருந்தார். இந்த நாவலில் தசாபதி என்ற ஒரு திரைப்படம் பற்றிச் சொல்லப்படுகிறது. தெலக்ஸ் புவனா என்றொரு நடிகை. தெலக்ஸ் என்ற சோப்பு விளம்பரத்தில் நடித்துப் புகழ்பெற்று, அதன் பின்னர் அவர் நடிக்கும் படம் பரபரப்பாக ஓடி, அவர் பெயர் தெலக்ஸ் புவனா என்றாகிறது. யார் இந்த தெலக்ஸ் புவனா? இது என்ன படம் தசாபதி? யாராவது இப்படி எதுவும் இல்லை என்று என்னிடம் இப்போது சொன்னால், நான் நம்பமாட்டேன். அந்த அளவுக்கு இந்த நாவலில் இவை விவரிக்கப்படுகின்றன. இந்தக் கற்பனையெல்லாம் எப்படித் தோன்றின என்று இரா.முருகன் பேசினால் அது இன்னொரு சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும் என்பது நிச்சயம்.

நான்காவதாக, நாவல் முழுக்க வரும் நகைச்சுவையான வசனங்கள். நகைச்சுவை என்றால், எடுத்துக் கூட்டிச் சொல்லும் நகைச்சுவை அல்ல. போகிற போக்கில் தெறித்து விழும் சொல்லாடல்கள். இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் நான் சத்தம் போட்டுச் சிரித்திருப்பேன் என நினைக்கிறேன். இன்னும் கூடுதலாகக் கூட இருக்கலாம். ஒரு தீவிரமான நாவலில் சமீபத்தில் இத்தனை சிரித்த மாதிரி எனக்கு நினைவில்லை.

ராமோஜி ராவின் மூதாதையர்களின் ராமோஜிக்களையும் நாவலில் கொண்டு வந்து பிணைத்தது மிகச் சிறந்த உத்தி. வாழ்க்கையில் எல்லாமே திரும்ப திரும்ப நடக்கிறது, எல்லாமே எழுதி வைக்கப்பட்டது என்கிற கற்பனை ஒரு காவியம் என்றே நான் நினைப்பதுண்டு. ராமோஜிக்களின் வாழ்க்கையைப் பார்த்தால் அந்தக் காவியத்தைக் கொஞ்சம் நெருங்குவதைப் போலத் தோன்றியது. அதிலும் தாசியான புவனாவின் கடித அத்தியாயம் இந்நாவலின் உச்சம் என்றே சொல்லவெண்டும்.

நாவல் திடும்திடுமென மாறிக்கொண்டே இருக்கிறது. இங்கிலாந்து மகாராணிக்கு இந்தியர் எழுதும் கடிதம், திடீரென தெலக்ஸ் புவனா, திடீரென அனந்த ரங்கம் பிள்ளை ஒரு கதாபாத்திரமாக வருவது, கூடவே அருணாசலக் கவிராயர் வருவது, திடீரென டெல்லி பயணம் இப்படி. இந்த மாற்றம் தரும் ஒரு அலுப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த அத்தியாயங்களுக்குள் விவரிக்கப்படும் வாழ்க்கை, இந்த அலுப்பை முற்றிலும் போக்கச் செய்துவிடுகிறது. நீண்ட ரயில் பயணத்தின் விவரிப்பில் ஒரு மொட்டைப்பாட்டி வந்து அந்த அலுப்பைப் போக்கி விடுகிறாள். இங்கிலாந்துக்கு எழுதும் கடிதத்தில் சொல்லப்படும் கிண்டலும் கேலியுமான தாக்குதல்கள் சிரிக்க வைக்கின்றன. கப்பலோடியாக வரும் ராமோஜி ராவின் தாசிக் காதல் அசரடிக்கிறது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்தக் காலம் எப்படி இருந்திருக்கும் என்று யோசிப்பதே சவால். அதை நாவலுக்குள் கட்டி எழுப்புவதெல்லாம் மிகவும் கடினம். இன்னும் சொல்லப் போனால், அரசர் காலத்துக் கற்பனைக் களத்தைக் கூடக் கட்டி எழுப்பி விடலாம். மிக அதிக கடந்த காலம் ஆகிவிடாத, சமீபத்தைய கடந்த காலமான 1940களைக் கண் முன் கொண்டு வருவது மிகப் பெரிய சவால். இந்தப் புத்தகம் அந்த அளவில் தமிழில் ஒரு சாதனை என்றே சொல்லவேண்டும். அந்தக் கால அரசியல், அந்தக் கால சினிமா, அந்தக் கால ரேடியோ, அந்தக் காலப் பயணம், அந்தக் கால வாழ்க்கை, அந்தக் கால சங்கீதம் என்ற எந்த ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. மறக்கவே முடியாத அனுபவத்தைத் தரும், தவறவிடக் கூடாத நாவல்.

பத்துக்கும் மேற்பட்ட நாவல்களை இரா.முருகன் எழுதி இருக்கிறார். அவற்றில் நான்கு நாவல்களை நான் படித்திருக்கிறேன். நான் படித்தவற்றில் இந்த நாவல் ஒரு மாஸ்டர் பீஸ். மிளகு என்றொரு நாவலை எழுதப் போவதாக இரா.முருகன் சொல்லி இருந்தார். இந்த நாவலைப் படித்ததும் தோன்றியது, மிளகு நாவல் வந்தால் அது இன்னொரு மைல்கல்லாக இருக்கும் என்பதுதான். இரா.முருகனுக்கு வாழ்த்துகள்.

குறிப்பு: இந்தப் புத்தகம் கிண்டிலில் கிடைக்கிறது. அச்சுப் புத்தகம் விரைவில் வெளியாகும். கிண்டிலில் வாங்கிப் படிக்க: https://www.amazon.in/dp/B08G16WC44

Share

1975 இரா முருகனின் நாவல்

இரா.முருகனின் 1975 நாவல். எமெர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டு விலக்கபடும் வரையிலான 21 மாதங்களில் ஒரு வங்கி அலுவலர் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை எமர்ஜென்ஸியின் பின்னணியில் சுவைபடச் சொல்லும் நாவல். சுவைபட என்றால் வெற்று வார்த்தை இல்லை, நிஜமாகவே சுவைபட. இரா முருகனின் எழுத்தில் இந்நாவலில் (சப்டில்) மென்நகைச்சுவை உச்சம் கொள்கிறது என்பேன். பல இடங்களில் நான் வாய்விட்டுச் சிரித்தேன். பாருக்குட்டியின் அத்தியாயமும் முத்துக்கிட்டுவின் அத்தியாயமும் உச்சம்.

வங்கி அதிகாரியாக லோன் தரவேண்டிய கட்டாயத்தில் அல்லாடும் சங்கரன் போத்தி எமர்ஜென்ஸியின்போது சென்னையிலும் டெல்லியிலும் பணி புரிகிறார். சென்னைக்கும் வட இந்தியாவுக்கும் எமர்ஜென்ஸி இரண்டு வேறு முகங்களைக் காட்டுகிறது. ரயில்கள் குறித்த நேரத்தில் வருவதையும் அரசு அலுவலகங்கள் கேள்வி கேட்காமல் சரியாகச் சொல்லி வைக்கப்பட்ட மாதிரி இயங்குவதையும் பாராட்டும் கூட்டம் ஒரு பக்கம். தன் உரிமைகளை சுதந்திரத்தை இழந்ததைப் பற்றிக்கூடப் பேச அஞ்சம் கூட்டம் இன்னொரு பக்கம். எமர்ஜென்ஸி எப்படி மக்களால் பார்க்கப்பட்டது என்பதை அழகாகப் பதிவு செய்கிறது நாவல்.

வலுக்கட்டாய லோன், வலுக்கட்டாய குடும்பக் கட்டுப்பாடு, இவை தரும் இன்னல்கள் எல்லாவற்றையும் மிக விரிவாக எழுதி இருக்கிறார் முருகன். அரசுக்கு எதிராக ஒற்றை வார்த்தையைக் கூடச் சொல்லத் தயங்கும் அரசு அதிகாரிகள். இந்திரா, சஞ்சயின் பெயரைச் சொல்லி அனைவரையும் மிரட்டும் கட்சி வர்க்கம். எந்தத் திட்டம் வந்தாலும் இந்திராவின் அல்லது சஞ்சயின் பெயர். லோன் வாங்க கடை தொடங்கினாலும் தொழில் தொடங்கினாலும் இந்திரா/சஞ்சய் பெயர். ஒருவர் எண்ணெய்க் கடை ஆரம்பிக்க, சஞ்சய் விளக்கெண்ணெய் என்று பெயர் வைக்க, கட்சி கவுன்சிலர் கொதித்துப் போய் அதற்கு இந்தியா விளக்கெண்ணெய் என்று வைக்கச் சொல்கிறார்!

இந்திராவின் இருதம்பசத் திட்டமும் சஞ்சயின் ஐந்தம்சத் திட்டமும் சங்கரன் போத்திக்கு மனப்பாடமே ஆகிவிடுகிறது. ஒவ்வொரு அதிகாரிக்கும் இப்படித்தான் இருந்திருக்கும். நரிக்குறவர்களுக்கெல்லாம் கூப்பிட்டு லோன் கொடுக்கிறார்கள். யார் சிக்கினாலும் குடும்பக்கட்டுப்பாடு. எமர்ஜென்ஸி முடிந்து இந்திரா தோற்க, சங்கரன் போத்தி சென்னைக்கு வந்து கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆக, நாவல் சுபம்.

அங்கேயும் இங்கேயுமாகத் தெறிப்பாக வரும் பல சம்பவங்கள் சுவாரஸ்யமளிக்கின்றன. நரேந்திரர் குஜராத்தி என்ற பெயர், கோபால் கோட்ஸேவின் பெயர், 25 அமசத் திட்டத்தின் பாடல்களைப் பாடமுடியாது என்று மறுக்கும் கிஷோர் குமார் (காரணம் சன்மானம் கிடைக்காது என்பதற்காகவாவ்ம்!), 20 அம்சத் திட்டத்தை விளக்கும் பாட்டு, இனிப்பில்லாமல் டீ சாப்பிட்டு வாக்கு கேட்கும் வாஜ்பாய், ரகசியமாக கம்யூனிஸ வகுப்பெடுக்கும் கம்யூனிஸ்ட்டுகள் எனப் பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றில் பல விஷயங்கள் இந்தத் தலைமுறைக்குத் தெரிந்திருக்காது. நாவலில் இதைச் சொல்வது மிகப் பெரிய ஆவலைத் தரவல்லதுதான்.

எமர்ஜென்ஸியின் அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரமாக அலசும் புத்தகமல்ல இது. அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான புனைவு. இந்தத் தெளிவுடன் இந்த எல்லைக்குள் நின்று வாசித்தால், புத்தகத்தைக் கீழே வைக்க முடியாதபடிக்கான மென்நகைச்சுவையும் விறுவிறுப்பும் உறுதி.

To order online: http://www.nhm.in/shop/9789386737625.html

To order thru phone: Dial for books 044-49595818

Share