சொன்னால் நம்பமாட்டீர்கள் – புத்தகப் பார்வை

சொன்னால் நம்பமாட்டீர்கள், சின்ன அண்ணாமலை, ரூ 160, சந்தியா பதிப்பகம், 200 பக்கங்கள்

மிக சுவாரஸ்யமான புத்தகம். சின்ன அண்ணாமலை சுதந்திரப் போராட்டங்களில் பங்குகொண்டு பலமுறை சிறை சென்றவர். ராஜாஜியுடன் நட்பு பாராட்டியவர். கல்கியுடன் நெருக்கமான நட்புடையவர். சிறந்த பேச்சாளர். இவரது நகைச்சுவை உணர்வே இவரது பலம். காந்தியை தன் தலைவராகக் கொண்ட இவர் தீவிர காங்கிரஸ்காரர். மேடைகளில் ஈவெராவை எதிர்த்து தீவிரமாகப் பேசியவர். இவரும் ம.பொ.சியும் 60களில் பல மேடைகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தீவிரமாக எதிர்த்து வந்தார்கள்.

சின்ன அண்ணாமலை தன் வாழ்க்கையின் சுவையான குறிப்புகளை எளிய தமிழில் நகைச்சுவை ததும்பும் வார்த்தைகளில் எழுதியுள்ளார். அவற்றின் தொகுப்பே இந்தப் புத்தகம். புத்தகம் நெடுக பல்வேறு குறிப்புகள் விரவிக் கிடக்கின்றன. விடுதலைப் போராட்டங்கள் பற்றிய குறிப்புகள், சிவாஜி கணேசன், எம்ஜியார் போன்ற நடிகர்கள் பற்றிய சில நினைவுகள், காந்திஜி பற்றிய சில தெறிப்புகள் எனப் பலவகையான பதிவுகள் இதில் உள்ளன. குறிப்பாக, ராஜாஜி – காமராஜ் பற்றி இவர் எழுதியிருப்பதன் வாயிலாக நமக்கு உருவாகி வரும் ஒரு சித்திரம் மிகவும் முக்கியமானது.

படிப்பவர்கள் மென்நகை புரியும்வண்ணம் பல வரிகள் இந்நூலில் காணப்படுகின்றன. அண்ணாத்துரை முதல் பலர் அரசியல் எதிர்த்துருவங்களில் இருந்தபோதும் இவரது பேச்சில் உள்ள நகைச்சுவையைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளது இந்நூலில் பதிவாகியுள்ளது.

சில இடங்களில் சின்ன அண்ணாமலை செய்யும் விளையாட்டுத்தனமான செய்கைகள் இவரைப் பற்றிய வினோதமான சித்திரத்தைத் தருகின்றன. குறிப்பாக தாராசிங் – கிங்காங் குத்துச் சண்டையில் அதிக வசூல் வரவேண்டும் எனபதற்காக, போட்டிக்கு சில நாள் முன்பாக இவர் சொல்லி வைத்து ஏற்பாடு செய்யும் போலிச் சண்டை. இப்படியும் செய்வார்களா என்று படிப்பவர்களை அசர வைக்கிறது. ஆனால் உண்மையில் அப்படி நடந்திருக்கிறது. அதைச் செய்தவரே அதைப் பதிவு செய்திருக்கிறார்.

காங்கிரஸைக் காப்பாற்ற சிவாஜி கணேசனின் ரசிகர்கள் காங்கிரஸுக்கு வரவேண்டும் என்பதில் தொடங்கி, காங்கிரஸுக்காக இவர் செய்த காரியங்களைப் பட்டியலிட முடியாது. ஆனால் ராஜாஜி காங்கிரஸில் இருப்பதை விரும்பாத காமராஜர், ராஜாஜி முதல்வர் ஆனதும், திமுகவின் எதிர்ப்பிரசாரத்துக்கு எதிராக எதையும் செய்யாமலிருப்பதை இவரால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. இத்தனைக்கும் காமராஜர் மீது மாறாத அன்பும் மரியாதையும் உடையவர். ஆனாலும் காங்கிரஸைக் காப்பாற்ற ராஜாஜிக்கு ஆதரவாக மபொசியுடன் இணைந்து காமராஜுக்கு எதிராகப் போகிறார். பின்னாளில் அதே மபொசியும் ராஜாஜியும் திமுகவுடன் இணைந்து காங்கிரஸை தமிழ்நாட்டில் பலவீனமடையச் செய்த முரணையும் பதிவு செய்திருக்கிறார்.

சுதந்திரப் போராட்டத்தின் போது பட்டப்பகலில் இவரை சுதந்திரப் போராட்ட தியாகிகள் சிறையைத் தகர்த்து இவரை விடுவித்ததை விலாவாரியாக எழுதி இருக்கிறார். இதுபோன்று பட்டப்பகலில் சிறை உடைக்கப்பட்டு கைதி ஒருவர் சுதந்திரப் போராட்டத்தில் விடுவிக்கப்பட்டதே இல்லை என்று குறிப்பிடுகிறார். காந்திஜியின் ஹரிஜன் இதழை தமிழில் கொண்டு வருகிறார். தமிழ்ப்பண்ணை என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி பல தமிழ்ப் புத்தகங்களை வெளியிடுகிறார். மபொசியின் விற்காத புத்தகம் ஒன்றை மொத்தமாக வாங்கி அட்டையை மாற்றி நல்ல விளம்பரம் செய்து வெளியிட்டு விற்றுக் காண்பிக்கிறார். வ.உ.சி பற்றிய அதே புத்தகத்தை மபொசியை வைத்து விரிவாக எழுத வைத்து அதிக விலையில் மீண்டும் வெளியிடுகிறார்.

மலேசியாவில் தன் நகைச்சுவை உணர்வால் தப்பிப்பது, எழுத்தாளர் நாடோடியாக நடித்து கடைசியில் தானே ஏமாந்து போவது, வீரபாண்டிய கட்டபொம்மன், திருடாதே, கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களில் இவரது பங்களிப்பு, அண்ணாத்துரையுடன் ரயிலில் பயணம் செய்யும்போது நடக்கும் பேச்சுகள், ஈவெரா முன்னிலையிலேயே அவரை விமர்சிப்பது என பக்கத்துக்குப் பக்கம் சுவாரசியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்துநேசன் பற்றிய ஒரு கட்டுரையில் ‘அஞ்சலிக்கு அது இருக்கா’ என்பது தொடங்கி அதை ராஜாஜி எதிர்கொண்ட விதம் வரை, தொடர்ச்சியாக எல்லா மஞ்சள் பத்திரிகைகளும் ஒழிக்கப்பட்டது வரை வரும் கட்டுரை ரசனைக்குத் தீனி இடும் ஒன்று.  சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டது, அறுபதுகளின் அரசியல் பங்களிப்பு, அறுபதுகளின் திரைப்படங்கள் எனத் தொடர்ச்சியாக வரும் விவரங்கள் சலிப்பில்லாத தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ‘சொன்னால் நம்பமாட்டீர்கள்’ என்று சொல்லி பல விஷயங்களைப் பதிவு செய்யும், காவி கதர் உடை அணிந்து வாழ்ந்த ஒரு தேசப் பற்றாளரின் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அது இத்தனை சுவாரஸ்யமாக இன்றும் விரைவாகப் படிக்கும் தமிழில் இருக்கும் என்பதை படித்தால் நம்பிவிடுவீர்கள்.

Share

Doctor Allah Pichai Tirunelvei

டாக்டர் அல்லா பிச்சை. திருநெல்வேலியில் சித்தா மருத்துவராக பல்லாண்டு காலம் மருத்துவம் பார்த்தவர். கிட்டத்தட்ட எங்கள் குடும்ப டாக்டர் போல. என் அப்பா இவரிடம்தான் கணக்கு எழுதிக்கொண்டிருந்தார். இவருக்கு முன்பு இருந்த சித்தா டாக்டருக்கும் என் அப்பா பழக்கம் என நினைக்கிறேன். என் அம்மாவின் ஆஸ்துமாவுக்கு அல்லா பிச்சை டாக்டர் கொடுத்த மருந்துகள்தான் அந்தக் காலத்தில் அம்மாவுக்குப் பெரிய அளவில் உதவின.

இந்த டாக்டர் நேற்று இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டபோது மிகவும் வருத்தமாக இருந்தது. எங்கள் குடும்பத்துடன் கிட்டத்தட்ட 50 வருடப் பழக்கம். எத்தனை முறை போனாலும் எத்தனை கட்டாயப்படுத்தினாலும் மருந்துக்கு ஒரு பைசா வாங்கமாட்டார். எங்கள் வீட்டு நல்ல நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் வந்து இருந்து வாழ்த்தி உணவருந்திவிட்டுப் போவார். இவர் வீட்டுக் கல்யாணத்துக்கு எங்கள் பாரம்பரிய ஸ்டைலில் சைவ உணவும் வேண்டும் என்று விரும்பி எங்களிடம் கேட்டு, எங்களுக்குத் தெரிந்த சமையல்காரரை நாங்கள் ஏற்பாடு செய்துகொடுத்தோம்.

இவரைப் பற்றிய பல புதிரான செய்திகள் திருநெல்வேலியில் வலம் வந்தன. எதற்கும் ஆதாரம் இருந்ததாகத் தெரியவில்லை. பல சித்த மருத்துவர்களைப் பற்றி இன்றுவரை சொல்லப்படும் அதே மாதிரியான புகார்கள்தான். ஆனால் அல்லா பிச்சையின் மருந்துகள் பெரிய அளவில் எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவின என்பதுதான் என் அனுபவ உண்மை.

எனக்கு 17 வயதாக இருந்தபோது படர்தாமரை போல ஒன்று வந்தது. முதலில் இதயத்தில். பின்பு தொடையில். பள்ளிக்கு வந்த மருத்துவர் குழு இது தொழுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று பயமுறுத்திவிட்டார்கள். நான் பயந்துகொண்டே வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொன்னேன். அன்று கிருஷ்ண ஜெயந்தி. அம்மா மடியாக முறுக்கு சுட்டுக்கொண்டிருந்தாள். “அதெல்லாம் இருக்காது. சும்மா பயமுறுத்தறாங்க. அல்லா பிச்சை டாக்டரிடம் காமிக்கலாம்” என்றார். காண்பித்தோம். அல்லா பிச்சை டாக்டர் சிரித்துவிட்டு, “பயமுறுத்தினாதான் உடனே வைத்தியம் பார்ப்பன்னு சொல்லிருக்காங்க” என்று சொன்னார். இரண்டு நாள் கழித்து மருந்து வாங்கிக்கொள்ளச் சொன்னார். அது ஒரு வகையான பொடி. வாயிலேயே வைக்கமுடியவில்லை. அப்படி ஒரு கசப்பு. அதை தினமும் மூன்று வேளை தேனில் குழைத்து உண்ணவேண்டும். அப்படி மூன்று மாதம் உண்டேன். மெல்ல மெல்ல மறைந்தது அந்தப் படர் தாமரை. இப்போது நினைத்தாலும் ஆச்சரியம் தரும் விஷயம் இது.

என் அண்ணிக்கு திடீரென்று தலையில் ஓரிடத்தில் மட்டும் சொட்டை விழுந்துவிட்டது. வெண்ணிறச் சொட்டை போல. அப்போது அண்ணனுக்கும் அண்ணிக்கும் கல்யாணம் ஆகியிருக்கவில்லை. அல்லா பிச்சை டாக்டரிடம் காண்பித்தோம். சோழியும் எலுமிச்சையும் வாங்கித் தரச் சொன்னார். எதோ ஒரு மருந்தை உண்டாக்கிக் கொடுத்தார். வயிற்றைக் குமட்டும் நெடியுள்ள அம்மருந்தை அச்சொட்டைப் பகுதியில் தடவி வரவேண்டும். நான்கே நாளில் மெல்ல முடி முளைக்கத் தொடங்கியது. பின்பு சரியாகிவிட்டது. இன்றுவரை அப்பிரச்சினை இல்லை.

என் பாட்டிக்கு திடீரென்று ஒரு நாள் ஒரு கையும் காலும் விளங்காமல் போய்விட்டது. வாயும் கோணிக்கொண்டு விட்டது. அப்போது பாட்டிக்கு 70 வயது இருக்கலாம். தூக்கிக்கொண்டுதான் அல்லா பிச்சை டாக்டரிடம் போனோம். தைலம் எழுதிக் கொடுத்தார். மூன்று மாதங்கள் காலை மதியம் மாலை என அதைத் தடவி நீவிவிட்டு வெயிலில் இருக்க வைக்கவேண்டும். மூன்று மாதங்களில் பாட்டி இயல்பானார். அதன் பின்பு பத்து வருடங்கள் வாழ்ந்தார்.

கடந்த வருடம் மே மாதம் திருநெல்வேலிக்குப் போயிருக்கும்போது மனைவி மகன் மகளுடன் அவரைப் பார்த்துவிட்டு வந்தேன். நேற்று அவர் இறந்த செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. அவருக்கு அஞ்சலி.

அவரது மருத்துவ மனையில் ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் மிக அழகான ராமர்-சீதை-லக்ஷ்மணன் – அனுமார் படம் இருக்கும். என் பதினைந்து வயதில் அதைப் பார்த்திருக்கிறேன். கடந்த மே மாதம் சென்றபோதும் அதே இடத்தில் அப்படம் அதே அழகுடன் மிக அழகாகத் துலங்கி நின்றது. கலாசாரத்தின் பெருமைகளை இப்படி அழகுற இணைக்கும் பண்புடன் வாழ்ந்தவர்கள் இனியும் அதிகமாகவேண்டும் என்பதே என் நினைப்பாக இருந்தது. அப்பண்பின் ஒரு கண்ணிதான் அல்லா பிச்சை டாக்டர்.

Share

யூனோ – UNO

நேற்று என் நண்பன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே யூனோ என்றொரு விளையாட்டுக்குரிய சீட்டுக்கள் இருந்தன. எனக்கு இதை விளையாடவே தெரியாது. ஆனால் என் மகனோ இதன் விதிகளையெல்லாம் அப்படியே ஒப்பித்துக்கொண்டிருந்தான். என் நண்பனுக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அவனது மகன் இதன் எல்லா விதிகளையும் சொல்லிவிட்டான். என் மகனும் என் நண்பனின் மகனும் ஆடத் துவங்கினார்கள்.
 
என் மகன் எனக்குச் சொல்லிக்கொடுத்தான். முதலில் ஒன்றும் புரியவில்லை. பிறகு ஒருவாறாகப் பிடித்துக்கொண்டேன். உண்மையில் மிக சுவாரஸ்யமான விளையாட்டுத்தான்.
 
சில சமயம் 2 மணி நேரம்கூட இந்த விளையாட்டு இழுக்கிறது. குழந்தைகளுடன் விளையாட நல்ல விளையாட்டு. இன்றுடன் அபிராமுக்கு பரிட்சைகள் நிறைவடைகின்றன. இந்த சீட்டை இன்று வாங்கி இருக்கிறேன். இனி வீட்டில் விளையாடவேண்டும்.
 
சீட்டில் ரம்மி ஒரு வெறிகொள்ள வைக்கும் விளையாட்டு. சின்ன வயதில் ஆஸ் விளையாடுவோம். வெட்டு மேல் வெட்டு விழும்; பின்பு உறவினர்களுக்குள் பணம் வைத்து ரம்மி ஆடத் தொடங்கவும் அது ஒரு வெறிபிடித்த விளையாட்டாக இருந்தது. கால மாற்றத்தில் ரம்மி விளையாடுவதை நிறுத்திவிட்டோம்.
 
ஆன்லைனில் பணம் வைத்து ரம்மி விளையாடும் விளம்பரத்தைப் பார்த்து 50 ரூ மட்டும் கட்டி இரண்டு நாள் விளையாடிப் பார்த்தேன். எளிதில் வெறிகொள்ள வைக்கும்படியான கச்சிதமாக அட்டகாசமாக உருவாக்கப்பட்ட மென்பொருள். வண்ணமயமாக வசீகரிக்கக்கூடியதாக இருந்த அந்த விளையாட்டு எனக்கு ஏனோ ஒரே வாரத்தில் வெறுத்துப் போனது.
 
ஃபேஸ்புக் டச் ஸ்கிரீன் மொபைல் எல்லாம் இந்த சீட்டு விளையாட்டுக்களை ஓரம்கட்டிவிட்டன என்று நினைக்கிறேன். முன்பெல்லாம் கல்யாண வீட்டில் ஒரு ஓரத்தில் எப்போதும் சீட்டுக் கச்சேரி இருந்துகொண்டே இருக்கும். நானும் பலதடவை ஆடியிருக்கிறேன்.
 
இன்று யூனோ வாங்கி இருக்கிறேன். வீட்டில் குழந்தைகளுடன் விளையாடவேண்டும். யூனோ எப்படி விளையாடுவது என்று உங்களுக்குத் தெரியவில்லையா, உங்கள் வீட்டுக் குழந்தைகளிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் சொல்லித் தருவார்கள். தெரியவில்லை என்றால் UNO என்று இணையத்தில் தேடுங்கள். இதன் விதிகளுக்கென்றே தனியான தளம் ஒன்று உள்ளது.
 
என் நண்பனின் மகன் எப்போது இதை விளையாடினான், யாருடன் விளையாடினான், எப்படி இந்த விதிகளெல்லாம் அவனுக்குத் தெரிந்தன என்று என் நண்பனுக்குப் புரியவே இல்லை. அவன் நண்பனான எனக்கும் என் மகனுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது என்றும் புரியவே இல்லை. வயதாவது இப்படி எதிர்பாராத உருவத்தில் வரும்போது ஒரு சின்ன ஜெர்க் ஏற்படத்தான் செய்கிறது.
 
ஜெய் யூனோ.
Share

புரியாத பேச்சு – விஜய்காந்த்

விஜய்காந்தின் பேச்சு புரியவே இல்லை என்பதை நான் கிண்டலாகச் சொல்லவில்லை. ஆனால் நிஜமாகவே புரியவில்லை என்பதை சொல்லித்தான் ஆகவேண்டி இருக்கிறது. இதை வைத்துக் கிண்டல் செய்பவர்களை நான் ஏற்கவில்லை. (ஆனால் சில மீம்கள், வீடியோக்கள் கடுமையான சிரிப்பை வரவழைக்கின்றன. அதைச் செய்தவர்களின் வெற்றியாக மட்டும் இதை எடுத்துக்கொள்ளவேண்டும்!) ஆனால் இதைத் தவிர்க்கமுடியாது. ஜெயலலிதாவையும் இப்படி கிண்டல் செய்திருக்கிறார்கள். இது தலைவிதி, இதிலிருந்து தப்ப முடியாது.

ஆனால் விஜய்காந்த் பேசுவது நிஜமாகவே புரியவில்லை. பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவர் பேசுவது புரியவில்லை என்றால் நான் அவருக்காகப் பரிதாபப்படுவேன். ஆனால் நாளைய முதல்வராகப் போகிறேன் என்று சொல்பவர் பேசுவது புரியவில்லை என்றால், கேள்வி கேட்கத்தான் செய்வேன். விஜய்காந்த் தரப்பிலிருந்து மிகத் தெளிவான விளக்கம் இதற்குத் தரப்படவில்லை என்பதுதான் விஷயம். இப்போதுதான் தொண்டைப் புண் என்று சொல்லி இருக்கிறார்கள். இதுவரை அவரது குடிப்பழக்கமே காரணம் என்று திரைமறைவில் சொல்லப்பட்டது. எது காரணமாக இருந்தாலும் அவர் பேசுவது புரியவில்லை என்பது புரியவில்லைதான்.

எம்ஜியாருக்கு சுடப்பட்டு பேச்சு போனபோது இதே சமூகம் பதறியது. பின்பு கிண்டலும் செய்தது. ஆனால் விஜய்காந்துக்கு அப்படி அல்ல. ஜெயலலிதா பற்றியும் பல கதைகள். ஏன் இத்தலைவர்கள் தங்களுக்கு என்ன பிரச்சினை என்பதை பொதுவில் வைக்க இப்படி தயங்குகிறார்கள்? எல்லா மனிதர்களுக்கும் வரும் பிரச்சினைதானே? ஏன் மூடி மறைக்கவேண்டும்? சர்க்கரை நோய் பிரச்சினை என்று வெளியே தெரிந்துவிட்டால் என்ன ஆகிவிடும்?

இன்றைய நவீன உலகத்துக்கேற்ப தலைவர்கள் உருவாகி வரவில்லை. ‘என் பிரச்சினை இதுதான், இதைத்தான் நான் எதிர்கொண்டு போராடிக்கொண்டிருக்கிறேன், என் பலவீனம் இது’ என்று வெளிப்படையாகச் சொல்லும் தலைவர்களே மக்கள் மனத்தில், ஆயிரம் கிண்டலையும் மீறி, இடம் பிடிக்கப் போகிறார்கள். இந்த எளிய சூத்திரம் கூடத் தெரியாமல் இல்லாத இமேஜைக் கட்டிக் காக்க இவர்கள் போடும் நாடகம், மக்களை முட்டாளாக்கிக்கொண்டிருக்கிறது. இதனால் தேவையற்ற கதைகள் உலவிக்கொண்டிருக்கின்றன. இதையே பெருமையாகக் கருதிக்கொள்வார்களோ என்னவோ.

மூப்பனார் பேசும்போது கீழே சப்டைட்டில் போட்டது சன் டிவி. அதற்குப் பலர் கொதித்தார்கள். ஆனால் சன் டிவி சப்டைட்டில் போட்டதில் தவறே இல்லை. விஜய்காந்த்துக்கும் சப்டைட்டில் போட்டால் நல்லது. உடல் நலம் சரியாகி அவர் நன்றாகப் பேசும் வரை இது தொடரவேண்டியது அவசியம். கிண்டலாக இல்லை, சீரியஸாகத்தான் இதைச் சொல்கிறேன்.

Share

சில திரைப்பட விமர்சனக் குறிப்புகள்

கள்ளப்படம் பார்த்தேன். ஹீரோ உள்ளிட்ட நடிகர்களின் மொக்கை நடிப்பு கொடுமை. கொஞ்ச நஞ்ச சுவாரஸ்யத்தையும் தனி ஆளாகக் கெடுத்தார் சிங்கம் புலி. இவர் இயல்பில் நல்லவராக இருக்கலாம். இவரது இயக்குநர் நண்பர்களுக்கு இவர் செய்யும் பேருதவி இவர் நடிக்காமல் இருப்பது. இடைவேளைக்குப் பிறகு படம் நாட் பேட். இப்படத்தின் இயக்குநர் வடிவேலால் நல்ல படங்களைத் தரமுடியும் என்ற எண்ணம் வந்திருக்கிறது எனக்கு. தெருக்கூத்து பற்றி வரும் பாடல் படமாக்கப்பட்டவிதமும், ஒரு அறைக்குள் இருந்து ஒருவரும் வெளியில் இருந்து ஒருவரும் பேசும் காட்சியில் மாறி மாறி வரும் ஒளி அமைப்பும் அருமை.

 

தங்க மகன் படம் பார்த்தேன். எழுபதுகளில் ராஜா வந்ததை, பாலுமகேந்திரா, பாரதிராஜா, மகேந்திரன் வந்ததை, 80களில் ராஜ பார்வை வந்ததை 80களின் பிற்பகுதியில் மணிரத்னம் வந்ததை, 90களில் ரஹ்மான் வந்ததை, 2010களில் பீட்ஸா வந்ததை, பின் தொடரும் அதிரடி புதிய அலையை ஒட்டுமொத்தமாக தங்கமகன் இயக்குநர் வேல்ராஜிடம் இருந்து யாரோ மறைத்திருக்கிறார்கள். இத்தனையையும் மறைக்கமுடியுமென்றால் இயக்குநர் வேல்ராஜ் எத்தனை அப்பாவியாக இருக்கவேண்டும் என்று இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

 

ஜில் ஜங் ஜக் பார்த்தேன் என்று சொல்லவே கேவலமாக இருக்கிறது. இந்தக் கொடுமையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏனா தானோவென்று நடிக்கும் ஒரு நடிகர் என்றால் இதை ஒரு விஷயமாகப் பொருட்படுத்தாமல் சென்றிருப்பேன். ஆனால் சித்தார்த், எனக்குப் பிடித்த நடிகர். லூசியாவை தமிழில் எனக்குள் ஒருவன் என்று எடுத்து அதில் நடிக்கவேண்டிய அவசியம் அவருக்கு என்ன? நல்ல சினிமாவின் மேல் அவருக்கு ஆர்வம் இருக்கிறது என்ற ஐயம் எனக்கு உள்ளது. smile emoticon அதனால்தான் இதை எழுதுகிறேன்.
சித்தார்த் மனதுக்குள் எங்கேனும் கமல் போல முயலவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதை உடனே தூக்கி எறிந்துவிட்டு தலைமுழுகுவது நல்லது. ஏனென்றால் கமலின் முயற்சி என்ற வகையிலான பல சினிமாக்கள் போணியாகாத பூமி இது. போணி ஆகவில்லை என்பதல்ல, அது கொடுமையாகவும் இருந்தது. மும்பை எக்ஸ்பிரஸ் தந்த கொடுங்கனவை மறக்கமுடியாது. புஷ்பக் விமான் புது முயற்சி என்ற பெயரில் ஒரு வன்கொடுமை. ஜில் ஜங் ஜக் ஆயிரம் மும்பை எக்ஸ்பிரஸ் போல உள்ளது.
கமலுக்காவது ராஜா இருந்தார். அதோடு அவர் என்ன கொடுமையை எடுத்தாலும், அது 20 வருஷம் கழிச்சுப் புரியும் என்று ஜில்ஜங்ஜக் அடிக்க ஆள்கள் இருந்தார்கள். கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பஞ்ச தந்திரம் ஜோக்கெல்லாம் 20 வருஷம் கழிச்சு கூட புரியாது என்பார்கள். திடீரென்று ஆளவந்தான் அன்றைய நிலையில் ஒரு அசுர சாதனை என்று எழுத இலக்கியத்தீவிரவாதிகள் இருந்தார்கள். சித்தார்த்துக்கு இது எதுவுமே கிடையாது. எனவே ஜில் ஜங் ஜக்கையெல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு, கமல் கதையம்சத்துடன் நடித்த நல்ல/இடைநிலை வணிகப் படம் போல முயற்சி செய்யுங்கள். ஹே ராம், விருமாண்டி, ராஜ பார்வை அல்லது மகா நதி, குருதிப்புனல், குணா போல முயற்சி செய்யுங்கள். படம் ஓடாவிட்டாலும் பெயராவது கிடைக்கும். கமல் தன் பொற்காலத்தை மிகக் குறைவான படங்களில் மட்டும் நடித்துக் கெடுத்துக்கொண்டார். அத்தவறைச் செய்யாமல் இருங்கள். ஜில் ஜங் ஜக் வேண்டாம். எனக்குள் ஒருவன் வகை திரைப்படங்களே தேவை.

பசங்க 2 என்னும் பூர்ஷ்வா படத்தைப் பார்த்தேன். மனநிலை சரியில்லாத டாக்டராக சூர்யா கலக்கிவிட்டார். 🙂

டார்லிங் 2 பார்த்தேன். கொடுமை.

சேதுபதி பக்கா கமர்ஷியல். படு வேகம். ரஜினி நடித்திருக்கவேண்டிய படம். smile emoticon விஜய் சேதுபதியுடன் கூடவே வரும் போலிஸ் (லிங்கா) நன்றாக நடித்திருக்கிறார். குழந்தைகள், குடும்பத்துடன் வரும் காட்சிகள் அழகு. ஜிவ்வென்று ஒரு சூப்பர் கமர்ஷியல்.

Watched Charlie. Excellent love story. Love of two freaks. 🙂 Enjoyed.

Thozha – Sentimental lengthy boring very regular, highly predictable one. Not a must watch.

Yesterday I started watching Dhilwale. Could not tolerate it. Dropped it after 30 minutes. What a pathetic movie.

Watched Bjajrang Bhaijaan. What a feel good movie. Excellent. Highly dramatic from start to end with parallel funny scenes. Each Indian, of course each Pakistani, would love this movie. Must watch.

என்னு நிண்டே மொய்தீன் என்ற கொடுமையை ஸ்லோ மோஷனில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பாத்துட்டீங்களா பாத்துட்டீங்களா என்று ஒரு வாரமாக தினமும் இரண்டு முறை கேட்ட நண்பரின் சதிமுகம் இப்போதுதான் புரிகிறது. ஏன்யா, ஒரு படம் முழுக்க ஸ்லோ மோஷன்லயா? பின்னணி இசை சிறுபிள்ளைத்தனம். காத்திருந்நு பாடலுக்கு தேசிய விருதெல்லாம் ஓவர். புலம்ப விட்டுட்டீங்களேய்யா.

Share

தமிழக பாஜக – எங்கே செல்லும் இந்தப் பாதை – தேர்தல் களம் 2016 – தினமலர்

நான் பத்தாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது திருச்சியின் கிராமம் ஒன்றான முத்தரச நல்லூருக்குச் சென்றிருந்தேன். அந்த கிராமத்தின் தெருக்களின் பாஜகவின் விளம்பரத் தட்டிகளையும் சுவரோட்டிகளில் அத்வானி மற்றும் வாஜ்பேயியின் முகங்களையும் பார்த்தேன். அன்றுதான் எனக்கு பாஜக என்னும் கட்சி மிகவும் நெருக்கமாக அறிமுகமாகியது. அந்தக் காலத்தில் தமிழ்நாட்டின் மற்ற எந்த ஊர்களிலும் பாஜகவுக்கு இத்தனை விளம்பரங்களை நான் பார்த்ததில்லை. அத்வானி முத்தரசநல்லூருக்கு அருகில் இருந்த இன்னொரு கிராமத்துக்கு வருகை தந்திருந்தார் என்று நினைவு.

அன்று இருந்த அதே நிலையில் இன்றும் தமிழ்நாட்டு பாஜக கிட்டத்தட்ட அப்படியே இருக்கிறது. இடைப்பட்ட 25 ஆண்டுகளில் இந்தியாவெங்கும் பாஜகவின் முகம் பல்வேறு வகையில் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்க தமிழ்நாட்டில் மிக மிக மெதுவான வளர்ச்சியை மட்டுமே பாஜகவால் சாதிக்கமுடிகிறது.

இதன் காரணங்கள் என்ன? 1998 வரை பாஜகவினர் தொலைக்காட்சியின் எந்த நேர்காணல்களிலோ அல்லது விவாதங்களிலோ பங்கேற்றால், எதிர்த்தரப்புக்காரர்கள் அப்படியே பம்முவார்கள். ஏனென்றால் எந்தவித சுமையும் இல்லாத ஒரு கட்சியாக பாஜக இருந்ததனால் தமிழகத்தின் கழகங்களை மிக எளிதாக பாஜகவால் எதிர்கொள்ளமுடிந்தது. 1998ல் அதிமுகவுடனும் 2001ல் திமுகவுடன் கூட்டணி வைத்தது. இதனால் பாஜகவுக்கு சில எம்பி/எம்.எல்.ஏ சீட்டுகள் கிடைத்தாலும், தமிழகத்தில் முதன்மைக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கென்றே நேர்ந்துவிடப்பட்ட சிறிய கட்சிகளின் அந்தஸ்தை அடைந்துவிட்டது. இப்படி ஒரு நிலையை விருப்பப்பட்டு தமிழ்நாட்டு பாஜகவே ஏற்படுத்திக்கொண்டது. பாஜகவினருடன் விவாதத்தில் ஈடுபடவே யோசித்த காலம் போய், இவர்களும் மாறி மாறி கூட்டணி வைப்பவர்கள்தான் என்ற எண்ணம் வந்துவிட்டது.

2014 பாராளுமன்றத் தேர்தலில் மோடி அலை இந்தியாவெங்கும் வீசியபோதும் தமிழ்நாட்டில் இலையின் அலையில் முடங்கிப் போனது தமிழ்நாட்டு பாஜக. 2014ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஓரளவு வலிமையான மூன்றாவது கூட்டணியை உருவாக்கியது ஒரு முக்கியமான சாதனைதான். ஆனால் அதைத் தொடரமுடியாமல் போனது. இதற்கு முதன்மையான காரணம் பாஜக அல்ல என்றாலும், ஒரு பிரதமரைக் கொண்டிருக்கும் கட்சி இவை போன்ற சிக்கல்களையெல்லாம் தெளிவாகச் சமாளித்திருக்கவேண்டும். ஆனால் தமிநாட்டு பாஜகவுக்கு அத்தகைய சாமர்த்தியங்கள் எல்லாம் இருக்கவில்லை.

இந்தியாவிலேயே உட்கட்சி ஜனநாயகம் மிக நன்றாக வேரூன்றியிருக்கும் மிகச் சில கட்சிகளில் ஒன்று பாஜக. இப்படி இருக்கும் கட்சிகள் சந்திக்கும் பிரச்சினைதான் பாஜகவின் முதல் பிரச்சினையும். ஏகப்பட்ட தலைவர்களைக் கொண்ட கட்சி ஏகப்பட்ட முகங்களுடன் உலா வரும்போது எது நம் முகம் என்ற குழப்பம் வாக்காளர்களிடையே ஏற்படும். காங்கிரஸுக்கும் தமிழக பாஜகவுக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சினை இது.

மத்தியத் தலைவர்கள் ஒன்றைப் பேசிக்கொண்டிருக்க மாநிலத் தலைவர்கள் இன்னொன்றைப் பேசிக்கொண்டிருக்க இரண்டுக்கும் தொடர்பற்ற வகையில் தொண்டர்கள் செயலாற்றிக்கொண்டிருப்பார்கள். அதோடு திடீர் திடீர் என்று ஹெ.ராஜா, சுப்ரமணியம் சுவாமி போன்ற தலைவர்கள் எழுப்பும் சலசலப்புகள் வேறு. இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து தமிழக பாஜக வெளிவரவேண்டும். அதற்குத் தேவை வலிமையான ஒரு மாநிலத் தலைமை.

மாநிலத் தலைமை வலிமையாக இருப்பதுதான் பாஜகவின் வெற்றிக்கான முதல் படியும் முதன்மையான படியும். இன்றைய தமிழகத் தேர்தல் என்பது ஆர்ப்பாட்டம் நிறைந்ததும் ஆடம்பரம் நிறைந்ததும் என்றாகிவிட்டது. இந்நிலையில் பாஜக இப்படி இந்த நீரோட்டத்தில் இருந்து முற்றிலும் விலகி நிற்குமானால் மக்களின் பரிதாபத்தை மட்டுமே பெறமுடியும், வெற்றியைப் பெறமுடியாது. அதற்காக கழக பாணி அரசியலைக் கைக்கொள்ளத் தேவையில்லை. இந்த ஆடம்பர அரசியலிலிருந்து விலகவேண்டியதும் புதிய அரசியல் களத்தை உருவாக்கவேண்டியதும் ஒவ்வொரு கட்சியின் கடமையும்தான். ஆனால் இரண்டுக்கும் மத்தியிலான, பொதுமக்களைக் கவரும் வகையிலான அரசியலையும் மேற்கொள்ளவேண்டும். இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்துக்கு வருவதற்காகவாவது இவற்றையெல்லாம் தமிழக பாஜக மேற்கொள்ளவேண்டும். தன்னை நிலைப்படுத்திக்கொண்டுவிட்டபின்புதான் அரசியல் தூய்மையில் இறங்கவேண்டும். இன்று மோடி இந்திய அளவில் செய்துகொண்டிருப்பது போல.

தமிழக பாஜக மக்களோடு தொடர்புடைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வீதிகளுக்கு வருவதில்லை என்பது அடுத்த பிரச்சினை. தமிழக பாஜகவின் போராட்டங்கள் எல்லாம் யாருக்காக யாரோ மேற்கொள்ளும் போராட்டங்கள் என்ற வடிவிலேயே நிகழ்கின்றன. ஒன்று தமிழக பாஜக தலைவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள் அல்லது தொலைக்காட்சிகளில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உணர்வு பிரச்சினைகளுக்கான போராட்டத்தைவிட முக்கியமானவை மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான போராட்டங்கள். அதுவும் மக்களின் கண்முன் நடக்கும் போராட்டங்கள். இவற்றையெல்லாம் பாஜக மேற்கொண்டதா அல்லது பத்திரிகைகள் மறைக்கின்றனவா என்பதெல்லாம் புரிபடாத மர்மங்களாகவே இருக்கின்றன.

இன்று புதியதாகத் தொடங்கும் கட்சிகூட உடனே ஒரு பத்திரிகையையும் தொலைக்காட்சியையும் உருவாக்கும்போது தமிழக பாஜகவால் இதையெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. தொடர்ந்து பாஜகவின் கருத்துகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன என்று பாஜக எப்போது கருதுகிறதோ, அப்போது அதன் அடுத்தகட்ட நடவடிக்கை என்பது இப்படி ஊடகத்தைத் தொடங்குவதாகத்தானே இருக்கவேண்டும்? ஆனால் அப்படி எந்த ஒரு முயற்சியிலும் பாஜக இறங்கியதாகத் தெரியவில்லை. மத்திய அரசின் பல சாதனைகள், ஊழலற்ற ஆட்சி போன்றவையெல்லாம் தமிழகக் கிராமங்களை அடையவே இல்லை. இன்று தமிழ்நாட்டின் சாதனைகள் எனச் சொல்லப்படும் மிகை மின்சாரம், வெள்ள நிவாரணம் போன்றவற்றில் மத்திய அரசின் உதவிகள், மத்திய அரசின் பல புதிய திட்டங்களெல்லாம் அதிமுகவின் சாதனை போலவே மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன. இவற்றையெல்லாம் விளக்கி மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பெரிய நெட்வொர்க் பாஜகவிடம் இல்லை.

தமிழக பாஜக காற்றில் வாள் சுழற்றிக்கொண்டு உள்ளது. அதிமுக மற்றும் திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகள் இன்று கணிசமாகத் திரண்டு வரும் வேளையில் அதை தன்வசப்படுத்திக்கொள்ள தமிழக பாஜக எந்நிலையிலும் ஆயத்தமாக இல்லை. ஒரு தேர்தலின் கடைசி நொடி வரை அதிமுகவிலிருந்து அழைப்பு வராதா என்ற ஏக்கத்திலேயே தமிழக பாஜக காத்துக் கிடக்கிறது. தமிழக பாஜவை ஏற்றுக்கொண்டால் உடனடியாக சிறுபான்மை ஓட்டுக்களை இழக்கவேண்டியிருக்கும் என்பது உலகில் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது, ஆனால் தமிழக பாஜகவுக்கு மட்டும் தெரியவில்லை. எப்படியும் அதிமுக தன்னை ஏற்றுக்கொள்ளும் என்று நம்பிக் காத்துக் கிடந்தது. அதிமுக இல்லை என்றானபின்பு தேமுதிகவுக்குக் காத்துக் கிடந்தது.

தேமுதிக விஷயத்தில் பாஜக செயல்பட்ட விதம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. தமிழக பாஜக திமுகவுடனோ அதிமுகவுடனோ கூட்டணி வைத்தால் அதை திமுக கூட்டணி என்றோ அல்லது அதிமுக கூட்டணி என்றோ அழைக்கிறார்கள். கருணாநிதியையோ அல்லது ஜெயலலிதாவையோ முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தேமுதிகவுடன் கூட்டணி என்று வரும்போது அதை பாஜக கூட்டணி என்றழைக்கப் பார்க்கிறார்கள். இதிலெல்லாம் பாஜக விட்டுக்கொடுத்துப் போயிருக்கவேண்டும். விஜய்காந்தின் கவனம் முதல்வர் பதவியின் மீது இருக்கும்போது, அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்றாக, விஜய்காந்தின் அந்த ஆசையை தமிழக பாஜக பயன்படுத்திக்கொண்டிருக்கவேண்டும். தேமுக நினைப்பதிலும் தவறில்லை. ஆனால் பாஜக இதையெல்லாம் யோசிக்காமல் பாஜக கூட்டணியில் தேமுக வரட்டும் என்று காத்துக் கிடந்தது. இதனால் பாஜக ஆதரவாளர்களே ‘முதலில் கட்சி முடிவெடுக்கட்டும், பின்பு பார்த்துக்கொள்ளலாம்’ என்ற நிலைக்குப் போய்விட்டார்கள். இப்போது ஒரு வழியாக தனித்துப் போட்டி என்று பாஜக அறிவித்திருக்கிறது. இது முதல்படிதான். அதிமுக மற்றும் திமுகவின் வெறுப்பு ஓட்டுக்களைப் பெற தனித்து நின்றால் மட்டும் போதாது. அதிமுகவையும் திமுகவையும் ஒரே நிலையில் வைத்து விமர்சிக்கவேண்டும். அதிமுகவை விமர்சிப்பதா என்று நினைத்தாலே தமிழக பாஜகவுக்கு வேர்க்க ஆரம்பித்துவிடுவது என்னவிதமான நோய் என்பதை முதலில் கண்டுபிடிக்கவேண்டும். டெல்லியில் இருந்தே குனியத் தொடங்கிவிடுகிறார்கள்.

திமுகவை கடுமையாக விமர்சிப்பது, அதிமுகவை செல்லமாகத் திட்டுவது போன்ற அணுகுமுறைகள் ஒரு காலத்திலும் பாஜகவின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கப்போவதில்லை. இன்றைய தேர்தலின் ஒரே முக்கிய அம்சம், அதிமுக ஆட்சியின் வெறுப்பு ஓட்டுகள் என்றாகிவிட்ட நிலையில், பாஜகவின் முக்கிய இலக்கு அதிமுகவாக இருக்கவேண்டுமே ஒழிய, திமுகவாக இருக்கக்கூடாது.

உண்மையில் தமிழகத்தின் ஹிந்துக்கள் கட்சி அதிமுக என்ற பிம்பமே இங்கே நிலவுகிறது. எனவே மத்தியில் பாஜகவை ஆதரிப்பவர்கள்கூட மாநிலத்தில் அதிமுகவை ஆதரித்துவிடுகிறார்கள். போதாக்குறைக்கு இல.கணேசன் போன்றவர்கள், ‘சில விதிவிலக்கான அம்சங்களைத் தவிர, அதிமுகவும் பாஜகவும் ஒரே கருத்துகளைக் கொண்ட கட்சிதான்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். (ஆதாரம்: 6.4.16 தேதியிட்ட துக்ளக்.)

பாஜகவுக்கு எப்படியும் சிறுபான்மையினர் ஓட்டளிக்கப் போவதில்லை. குஜராத் போல பாஜக ஆட்சி அமைந்து அதை நேரடியாக உணராதவரை சிறுபான்மையினர் பாஜகவுக்கு எதிராகவே வாக்களிக்கப் போகிறார்கள். அப்படியானால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டியவர்கள் ஹிந்துக்களே. அவர்களைக் கவரும் வகையிலாவது பாஜக செயல்படவேண்டும். அதுவும் சிறுபான்மையினருக்கு எவ்வித உறுத்தலும் ஏற்படாத வகையில், பெரும்பான்மை மக்கள் ஹிந்து ஆதரவு என்பதை பிரச்சினைக்குரிய ஒன்று என நினைக்காத வகையில் அந்தச் செயல்பாடு இருந்தாகவேண்டும். தமிழ்நாடு ஈவெரா வழி வந்த, பொதுவாக ஹிந்து எதிர்ப்பு அரசியலிலேயே ஊறிக்கிடக்கும் ஒரு மாநிலம். அப்படியானால் தமிழ்நாட்டு பாஜகவின் செயல்பாடு என்பது கத்தி மேல் நடப்பது. முதலில் ஹிந்து ஓட்டுக்களைக் கவரவேண்டும். அந்த ஹிந்து ஓட்டுக்களோ அதிமுக வசம் உள்ளது.

இன்று பல முனைத் தேர்தல் நடக்கிறது. இது அதிமுகவுக்கே பல வகைகளில் சாதகம். அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பறிக்க அல்லது குறைக்க சாத்தியமுள்ள ஒரே கட்சி இன்றைய நிலையில் தமிழக பாஜகதான். இன்னும் 30க்கும் மேற்பட்ட நாள்கள் உள்ளன. அதிமுகவுக்குச் செல்லும் ஹிந்து ஓட்டுகளைக் குறிவைத்து அரசியல் செய்தாலே போதும், அதிமுக பல தொகுதிகளில் தோற்கும் நிலை ஏற்படலாம்.

சென்னை வெள்ளம் வந்து தமிழக அரசு ஸ்தம்பித்து நின்று மக்களைக் கைவிட்ட சமயத்தில் தமிழிசை சௌந்தரராஜன் கொஞ்சம் அதிமுகவுக்கு எதிராகப் பேசினார். ஆனால் தொடர்ந்த சில நாள்களில் மத்தியத் தலைமை இவ்விஷயத்தை மென்மையாகக் கையாளும்படி அறிவுறுத்தியதாக செய்தி வெளியானது. அதன்பின்பு தமிழிசையும் அமைதியாகிவிட்டார். தமிழக பாஜகவின் இப்படியான பரிதாபமான நிலைக்கு மத்தியத் தலைமைகளும் ஒரு காரணம். ஏனோ ஜெயலலிதாவின் ஆதரவை மிக முக்கியமானதாகக் கருதுகிறார்கள்.

தமிழகத்தின் பிற கட்சிகள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. தேவை ஏற்படும்போது தாறுமாறாக அதிமுகவையும் திமுகவையும் தாக்குகிறார்கள். பின்பு இவற்றையெல்லாம் மறந்து கூட்டணியும் வைத்துக்கொள்கிறார்கள். ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒன்றுமே நடக்காதது போல் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தமிழக பாஜக மட்டுமே இதில் தடுமாறுகிறது.

இன்றைய நிலையில் தமிழக பாஜக செய்யவேண்டியவை என்ன? முதலில் ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது. என் தேர்வு: நிர்மலா சீதாராமன், அடுத்ததாக பொன்.ராதாகிருஷ்ணன். இன்னும் ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நிலவப் போகும் வெற்றிடத்தை முழுமையாகக் கைப்பற்ற எல்லா வகையிலும் ஆயத்தமாக இருப்பது. ஜாதிக் கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவின் வாக்குவங்கியை அதிகரிப்பது. தனக்கென புதிய வாய்ப்புகளை உருவாக்கி அதில் கவனம்செலுத்துவது. எதிர்க்கட்சிகள் செய்யும் தவறுகள் தரும் வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்வது. கொள்கை அளவிலான போராட்டங்களையும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கான போராட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது. அவை ஊடகங்களில் வருமாறு பார்த்துக்கொள்வது. அதிமுகவையும் திமுகவையும் ஒரே தூரத்தில் வைப்பது, விமர்சிப்பது. தமிழ்நாட்டின் ஹிந்துக்கள் கட்சி பாஜகதான் என்று பாஜகவின் ஆதரவாளர்களையாவது முதலில் நம்ப வைப்பது. தொடக்கமாக, வெற்றிவாய்ப்புள்ள 50 தொகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அதில் கவனம் செலுத்தி, அந்த இடங்களில் கட்சியை பலப்படுத்தி, வெற்றி வாய்ப்பை உறுதி செய்வது. பாஜகவுக்கென ஊடகங்களை உருவாக்குவது. இவை எதிலுமே இன்னும் தமிழக பாஜக பெரிய சாதனைகளை நிகழ்த்திவிடவில்லை என்பதுதான் உண்மை. இவற்றைச் செய்தால் இன்னும் ஐந்தாண்டுகளில் அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்றாக உருவாகும் கட்சிகளில் முதன்மைக் கட்சியாகவோ அல்லது இரண்டாவது கட்சியாகவோ வரலாம். அப்படிச் செய்யாத வரை தமிழ்நாட்டில் மூன்று சதவீத வாக்கு வங்கிக்கு மேல் வாங்க இயலாமலேயே போகலாம்.

வரலாறு வாய்ப்புகளை மீண்டும் மீண்டும் தராது. ஆளும் கட்சி செய்யும் தவறுகளே மற்ற கட்சிகளின் மீட்சிக்கான வாய்ப்புகள். அதைப் பயன்படுத்திக்கொள்ளாத வரை எந்த ஒரு கட்சியும் மேலெழ வாய்ப்பில்லை. இதைப் புரிந்துகொண்டு அதிமுகவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்ளாதவரை தமிழக பாஜக இத்தேர்தலில் எதையும் சாதிக்கப்போவதில்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி தமிழகத்தில் இன்னொரு காங்கிரஸாகத்தான் இருக்கிறது. இந்த அவல நிலையிலிருந்து மீள ஒரே வழி, தமிழக பாஜக தமிழ்நாட்டின் கட்சிதான் என்ற எண்ணத்தை மக்களிடம் உருவாக்குவதுதான். அதை நோக்கியே தமிழக பாஜகவின் ஒவ்வொரு நகர்தலும் இருக்கவேண்டும். இல்லையென்றால் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி எப்படி இருந்ததோ அதே நிலையில்தான் இனியும் இருக்கும்.

Share

வெல்லும் கட்சி – தேர்தல் களம் 2016 – தினமலர்

முன்பெல்லாம் என் தாத்தாவிடம் கேட்பேன், எந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்று. அவர் சிரித்துக்கொண்டே ‘சோத்துக் கட்சிக்கு’ என்பார். எத்தனை முறை எப்படி மாற்றிக் கேட்டாலும் பதில் சோத்துக் கட்சி என்பதாகவே இருக்கும். தான் அளிக்கும் வாக்கை வெளியில் சொல்லக்கூடாது என்பதில் அவருக்கு இருக்கும் உறுதி என்று ஒருவகையில் எடுத்துக்கொண்டாலும், இன்னொரு வகையில் தன் வாக்கு வெல்லும் கட்சிக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணமும் அவர் சொன்னதில் மறைந்திருப்பதைப் பார்க்கலாம்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் என் நண்பரிடம் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்கச் சொன்னேன். எப்போதும் அதிமுகவுக்கு வாக்களிப்பதையே விரும்பும் அவர் அந்த ஒருமுறை மட்டும் பாஜகவுக்கு வாக்களிக்க ஒப்புக்கொண்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. என் நண்பர் வாக்களித்த தொகுதியில் பாஜக மூன்றாவது இடத்துக்கு வந்தது. அதிமுக வெற்றி கண்டது. என் நண்பர் மீண்டும் மீண்டும் சொன்னது, ‘ஒழுங்கா அதிமுகவுக்கு போட்டிருந்தா, ஜெயிச்ச கட்சிக்கு ஓட்டு போட்ட மாதிரி இருந்திருக்கும்’ என்பதையே.

இந்த ஒரு மனநிலை தமிழ்நாடெங்கும் உள்ளதை நீங்கள் பார்க்கலாம். வெல்லும் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்னும் மனநிலை. ஆனால் இந் எண்ணம் தேவையற்றது என்றே நான் நினைக்கிறேன். வெல்லும் கட்சி அல்லது இரண்டாவதாக வரும் கட்சியைத் தவிர மற்ற கட்சிகளுக்கு அளிக்கப்படும் வாக்குகளை கிட்டத்தட்ட செல்லாத வாக்கைப் போல சித்திரிக்கும் போக்கு இங்கே உள்ளது. இந்த மனநிலையை மாற்றவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

ஒரு நாட்டில் நிலவும் பன்முகத் தன்மை என்பது மிகவும் முக்கியமானது, அவசியமானது. எல்லாத் தரப்பு மக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் ஒரு சில கட்சிளால் முழுமையாகக் கவனப்படுத்திவிடமுடியாது. அதோடு சில தனிப்பட்ட சமூகத்தின் அல்லது குழுவின் பிரச்சினைகள் என்ன என்ன என்பதெல்லாம், இரண்டு முதன்மைக் கட்சிகளுக்கு தெரியாமல் இருக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. அல்லது பெரிய அளவில் வாக்கு இல்லை என்பதால் முதன்மைக் கட்சிகள் இப்பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் ஒதுங்கிச் செல்லும் வாய்ப்பும் இருக்கிறது. இங்கேதான் சிறிய கட்சிகளின் இருப்பும் பங்களிப்பும் முக்கியமானதாகிறது.

ஜாதிக் கட்சி என்ற சொல் இன்று மிகவும் மோசமான ஒன்றாகவும் ஒதுக்கித் தள்ளவேண்டிய ஒன்றாகவும் ஆகிவிட்டது. ஆனால் இந்தியா போன்ற ஜாதி அமைப்பு மிக வலுவாக வேரூன்றிய நாட்டில் இந்த ஜாதிக் கட்சிகளின் தேவை மிக அவசியமானது. இந்த ஜாதிக் கட்சிகளினால் ஏற்படும் பாதிப்புகள், இவை மேற்கொள்ளும் மிரட்டல் அரசியல், அதனால் விளையும் பிரச்சினைகள் – இவையெல்லாம் ஏற்கத்தக்கவை அல்ல. ஆனால் இதன் இன்னொரு பக்கமாக, இந்த ஜாதிக் கட்சிகளே தங்கள் ஜாதிக்குரிய தேவைகளை, பிரச்சினைகளை மிகத் தீவிரமாக முன்வைக்கின்றன. இவை இல்லாவிட்டால் இப்பிரச்சினைகளெல்லாம் மக்கள் மன்றத்தின் முன் வராமலேயே போயிருக்கக்கூடும்.

அதிலும் இந்தியாவில், மிக நுணுக்கமான கலாசாரத்தைப் பின்னணியாகக் கொண்ட மீச்சிறிய ஜாதிகளின் பெயர்கள்கூட பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. எனவே இது போன்ற ஜாதிகளின் தேவைகளை முன்வைக்கும் கட்சிகளின் அரசியல் ஒட்டுமொத்த நோக்கில் மிக முக்கியமானது.

இதே கருத்தை சில அமைப்புகளுக்கும் சில குழுக்களுக்கும் விரிவுபடுத்தலாம். மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் குரலை ஒட்டுமொத்தமாக ஒரு குழுவாக முன்வைக்காமல் நாம் அவர்களை ஒருநாளும் புரிந்துகொண்டிருக்கமுடியாது. முதன்மைக் கட்சிகள் இத்தரப்பின் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பவேண்டுமானால் இக்குழுக்களின் அழுத்தமும் தொடர் போராட்டமும் மிகவும் அவசியம்.

எனவே நாம் மீண்டும் மீண்டும் வெல்லும் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தால், சிறிய கட்சிகளின் நிலைப்பாட்டுக்கான மக்களின் பதில் என்ன என்பதை தெரிந்துகொள்ளமுடியாமலேயே போய்விடும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சில ஊடகங்கள், சிறிய கட்சிகளுக்கு வாக்களிப்பதை, கிட்டத்தட்ட செல்லாத வாக்குகளாகவே சித்திரிக்கப் பார்க்கின்றன. ஏற்கெனவே முதன்மைக் கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள வாக்காளர்கள், வேறு எதையும் சிந்திக்காமல் வெல்லும் இரண்டு கட்சிகளில் ஒன்றுக்கு வாக்களிக்கத் தயாராகிவிடுகிறார்கள்.

இது மக்களை அதிகம் சிந்திக்கவிடாமல் செய்யும் ஒரு பிரச்சினை. இதைக் கவனமாகக் கையாளவேண்டும். ஜாதிக் கட்சிகள் உள்ளிட்ட சில அமைப்புகள் முன்வைக்கும் அரசியலில் நமக்கு ஒவ்வாமை இருக்கலாம். அவர்கள் செயல்பாடுகளில் அராஜகங்கள் இருக்கலாம். இந்தப் பிரச்சினைகளை மீறி அவர்கள் முன்வைக்கும் ஒரு தரப்பின் குரல் மிகவும் இன்றியமையாதது. அக்குரல் நமக்கு ஏற்புடையது என்றால், மற்ற எல்லாப் பிரச்சினைகளையும்விட இப்பிரச்சினை நமக்கு முக்கியமானது என்று தோன்றினால், எக்கட்சி வெல்லும் எக்கட்சி தோற்கும் என்றெல்லாம் யோசிக்காமல், நம் கருத்தை ஒட்டிப் பேசும் கட்சி எத்தனை சிறியதாக இருந்தாலும் அதற்கு வாக்களிப்பதே நியாயமானது. அப்போதுதான் பல்வேறு குரல்கள் ஒலிக்கும் ஒரு வெளியாக தேர்தல் அரங்கம் மாறும். அதுவே ஜனநாயகத்துக்குத் தேவையானது. இனியாவது அதை நோக்கிப் பயணிப்போம்.

Share

அதிமுகவின் ஐந்து வருடங்கள் – தேர்தல் களம் 2016 – தினமலர்

ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்குமான முக்கியமான வேறுபாடுகள் என்று யோசித்துப் பார்த்தால், முடிவெடுப்பதில் உறுதி, வழவழா கொழகொழா இல்லாத அணுகுமுறை, தீவிரவாதம் எவ்வகையில் வந்தாலும் அதை தீவிரமாக எதிர்ப்பது, உறுதியான தலைமை, திறமையான நிர்வாகம், கட்சியை கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பது, எந்த ஒரு சமூகத்தையும் அவமதிக்காதது, ஓட்டரசியல் மற்றும் தாஜா அரசியலில் ஈடுபடாதது ஆகியவற்றைச் சொல்லலாம். இவற்றுக்காகத்தான் கருணாநிதியை விடுத்து ஜெயலலிதாவை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இவற்றைவிட்டால் இவர்களுக்கிடையே பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. சொல்லப்போனால் இவை தவிர இன்னும் சில விஷயங்களில் கருணாநிதியே முன்னிலை பெறுவார் என்பதே உண்மை. ஆனால் இந்த ஐந்தாண்டுகளில் இவை எல்லாம் காணாமல் போயின என்பதே கசப்பான உண்மை.

ஒவ்வொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதும் திமுக ஆட்சியில் அதிருப்தியில் இருக்கும் சாமானியனின் கனவு, ‘இந்தமுறை ஜெயலலிதா மிகச்சிறப்பான ஆட்சி தருவார்’ என்பதாகவே இருக்கும். உண்மையில் ஜெயலலிதா நினைத்திருந்தால் குஜராத்தின் மோதியைவிட மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கமுடியும். அதற்கான அத்தனை வாய்ப்புகளும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் அவருக்கு இருந்தன. ஆனால் இந்த அற்புதம் நிகழவே இல்லை.

ஜெயலலிதா இந்த முறை ஆட்சிக்கு வந்தபோது கடும் மின்வெட்டு நிலவியது. இப்போது அது நிச்சயம் குறைந்திருக்கிறது. ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளில், பத்தாண்டுகளில் தமிழகம் எதிர்கொள்ளத் தேவையான, அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது அரசு கிட்டத்தட்ட முடங்கியே கிடந்தது. அந்த மூன்று நாள்களுக்குப் பிறகு நிவாரணத்திலும், நோய்கள் பரவாமல் தடுப்பதிலும் அரசு சிறப்பாகச் செயல்பட்டது என்பது உண்மைதான். ஆனால் இயற்கைப் பேரிடர் ஒன்றில் தேவையான போது அரசு சிறப்பாகச் செயல்பட்டிருக்கவேண்டும். இதுவரை இல்லாத மழைதான், எதிர்பாராத வெள்ளம்தான், ஆனாலும் அரசு தயாராகவே இருந்திருக்கவேண்டும்.

ஸ்டிக்கர் அரசியல் மக்கள் மனத்தில் ஏற்படுத்தியிருக்கும் வெறுப்பு கலந்த ஏளனத்தை அதிமுகவினரும் தலைமையும் புரிந்துகொண்டதாகக் கூடத் தெரியவில்லை. எதிலும் ஸ்டிக்கர் எங்கும் ஸ்டிக்கர். எங்கும் பேனர் எங்கும் விளம்பரம். பேனரை எல்லாக் கட்சிகளுமே இப்படித்தான் பயன்படுத்துகின்றன என்றாலும் அதிமுக அதீதம். ஓர் அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தவேண்டியது அவசியம்தான். ஆனால் அதுவும் மிதமிஞ்சிப் போனது. அதிலும் குறிப்பாக சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் மதுரை கணேசனின் உடலின்முன்பு ஜெயலலிதாவின் படத்துடன் 10 லட்ச ரூபாய் கொடுத்த வீடியோ கொடுமையின் உச்சம். அரசு சத்தமின்றி பத்து லட்சத்தைக் கொடுத்துவிட்டு அதை அரசு அறிவிப்பில் வெளியிட்டாலே போதுமானது.

இந்த ஆட்சியின் தொடக்கம் முதலே பல்வேறு மிரட்டல்களை அரசு சாமானிய மக்கள் பக்கம் நின்று எதிர்கொள்ளவில்லை. எங்கோ விஷமத்தனமாக எடுக்கப்பட்ட ஒரு படத்துக்கு மௌண்ட் ரோடே ஸ்தம்பித்தது. அரசு இதனை மென்மையாகவே கையாண்டது. அதேபோல் விஸ்வரூபம் திரைப்பட பிரச்சினையில் அரசு நியாயத்தின் பக்கம் நின்று உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சிறுபான்மையினரின் ஓட்டரசியலில் இதுவரை ஈடுபட்டிராத ஜெயலலிதா இந்தமுறை தன் அணுகுமுறையில் கொஞ்சம் தளர்ந்துவிட்டாரோ என்று யோசிக்க வைத்த விஷயங்கள் இவை. ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளரான சோவே, துக்ளக் ஆண்டுவிழாவில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். சோவே குறிப்பிட்டிருக்கிறார் என்னும்போது இப்பிரச்சினையின் தீவிரத்தை ஜெயலலிதா உணரவேண்டும்.

கடந்த ஒன்றரை வருடங்களாக, குறிப்பாக பரப்பன அக்ரஹாரா தீர்ப்புக்குப் பின், ஆட்சி ஸ்தம்பித்துவிட்டது போன்ற ஒரு உணர்வே மேலோங்கியுள்ளது. அதிமுகவினர் தலைமையின் புகழ் பாடுவதை ஒரு பக்கமும், தன்னிச்சையாக செயல்படுவதை இன்னொரு பக்கமும் செய்துகொண்டிருக்கிறார்கள். அம்மா உணவகம், காவிரி நீர்ப் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாடு போன்ற சில நல்ல விஷயங்களைக் கூட இவர்கள் மறக்கடித்துவிடுகிறார்கள். நில அபகரிப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்த, தற்போது நடந்துமுடிந்த மகாமகத்தை சிறப்பாகக் கையாண்டது போன்ற அரசைத்தான் மக்கள் விரும்புகிறார்களே ஒழிய, எதையும் சாகவாசமாக எதிர்கொள்ளும் அரசை அல்ல. கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தைக் கையாண்ட ஜெயலலிதாவைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்களே அன்றி, இப்படியான தலைவராக அல்ல.

கடந்த ஐந்தாண்டுகளில் அதிமுகவினர் எப்போது அதிகம் கேலி செய்யப்பட்டிருக்கிறார்கள், விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால், ஸ்டிக்கர் விஷயம், ஜெயலலிதாவைக் கண்டாலே எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் காலில் விழுந்துவிடுவது, எப்போதும் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் போஸ் கொடுப்பது, தொலைக்காட்சிகளில் எவ்வித ஆழமும் இல்லாமல் மேம்போக்காகப் பேசுவது, மையப்படுத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு – இவை போன்றவைதான். கட்சியை தன் கைக்குள் முழுவதுமாக வைத்திருக்கும் ஜெயலலிதா போன்ற ஒரு தலைவர் இதை ஒரே நாளில், ஆம், ஒரே நாளில் சரி செய்திருக்கமுடியும். ஆனால் அப்படி ஒன்று நிகழவே இல்லை.ஜெயலலிதாவின் வாழ்நாள் சாதனை என்பது தன்னுடைய உறுதியான செயல்பாட்டால் தீவிரவாதத்தையும் ரவுடியிஸத்தையும் கட்டுக்குள் வைத்திருந்ததுதான். இதுதான் அவரது பலம். அந்த உறுதியான செயல்பாட்டில் எவ்வித சுணக்கம் ஏற்பட்டாலும் அது நாட்டுக்கு நல்லதல்ல. அதன் விளைவு தேர்தலில் தெரியும். தெரியவேண்டும். 

Share