ஜீவா – காட்சிப்பட்ட தந்திரமும் காட்சிப்படவேண்டியவையும்

ஜீவா திரைப்படத்தை நேற்றுத்தான் பார்த்தேன். கிரிக்கெட் அரசியல் பற்றிய திரைப்படம். பிராமணர்களின் ஆதிக்கத்தால் திறமை இருந்தும் மற்ற சாதிக்காரர்களுக்கு ரஞ்சி டிராபியில் இடம் கிடைக்காததை அழுத்தமாகச் சொல்லும் படம். இது முக்கியமான விஷயமே. இதுவரை தமிழ்நாட்டிலிருந்து ஆடிய 16 பேர்களில் 14 பேர் பிராமணர்கள் என்பது தற்செயல் அல்ல. நிச்சயம் பின்னணி ஏதோ உள்ளது. அதைத் தெளிவாகக் காட்டிய வகையில், அதுவும் நெஞ்சைப் பிசையும் வகையில் காட்டியதால் மிக ஆழமாகவே இக்கேள்வி மனத்தில் பதிகிறது. 

முக்கியமான விஷயத்தைவிட்டு காதல் என்று சுற்றுவதற்கே பாதிப் படம் போய்விடுகிறது. நான் திரைப்பட விமர்சனமாக இதை எழுதவில்லை என்பதால் இந்த திரைப்பட கோணல்களையெல்லாம் விட்டுவிட்டு, அரசியலுக்குப் போகிறேன். படம் நெடுகிலும் மிகத் தெளிவான கிறித்துவப் பின்னணியை வைத்திருக்கிறார் இயக்குநர். இந்தப் பக்கத்து வீடும் கிறித்துவர், அந்தப் பக்கத்து வீடும் கிறித்துவர். ஹிந்துக் குழந்தை கிட்டத்தட்ட கிறித்துவனாகவே வளர்கிறது. எந்த அளவுக்கு? ஹிந்துப் பையனின் காதல் வெளியே தெரியவரும்போது பாதிரியார் கூப்பிட்டுப் பேசுகிறார். ஒரு ஹிந்துப் பையன் கிறித்துவ குடும்பத்தோடு பழகினாலே அவன் கிறித்துவன், எனவே நாம் ஒரு கிறித்துவக் குடும்பத்தை விசாரிப்பதைப் போலவே விசாரிக்கலாம் என்ற அளவுக்கு ஒரு பாதிரியாரும், அவன் கிறித்துவனே என்று ஒரு கிறித்துவ தம்பதி பெற்றோரும் நம்பும் அளவுக்கு! 

சீனியர் சூரி கிறித்துவர். கோச் கிறித்துவர். பக்கத்துவீட்டுக்கு வந்து சேரும் பின்னாள் காதலி கிறித்துவர்! பிராமணர்களுக்கு மட்டும் இடம் கிடைப்பது எப்படி தற்செயலல்ல என்று இயக்குநர் நம்புகிறாரோ, அதேபோல் சுசீந்திரனின் இந்த பின்னணித் திணிப்பு தற்செயலானதல்ல என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்திலும் வெகுவான கிறித்துவ பின்னணி. கிறித்துவ பின்னணி வருவதில் எனக்குப் பிரச்சினை இல்லை. (நீர்ப்பறவை ஆழமான கிறித்துவப் பின்னணி கொண்ட திரைப்படம். ஆனால் அதில் அரசியல் இல்லை. நிஜமான பதிவு மட்டுமே இருந்தது.) ஆனால் தொடர்ந்து இயக்குநர் ஒருவரின் படத்தில் இப்படி வருமானால் அதை தற்செயல் என்று ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும்?

அதிலும் ஒரு காட்சி வருகிறது. காதலுக்காக இரண்டு நிபந்தனைகள். ஒன்று, ஹீரோ மதம் மாறவேண்டும். இரண்டாவது, கிரிக்கெட்டை விட்டுவிடவேண்டும். அப்போது ஹீரோ சொல்கிறார், மதம் மாறுவது ஒரு பிரச்சினையில்லை. அதாவது வாயசைப்பில் இப்படி வருகிறது. டப்பிங்கில் மாற்றி இருக்கிறார்கள், மதம் மாறுவதை அப்புறம் பார்த்துக்கலாம் என்பது போல. ஸ்கிரிப்ட்டில் மிகத் தெளிவாகவே இயக்குநர் மதம் மாறுவது பிரச்சினையில்லை என்றே எழுதியிருக்கிறார். (பார்க்க: கடைசியில் உள்ள 11 நொடி வீடியோ.) கல்யாணத்துக்காக மதம் மாறுவதைப் பற்றி சமூக அக்கறையுள்ள இயக்குநர் இப்படி சிந்திப்பாரென்றால், பிராமண ஆதரவுக் குழுக்கள் வேறெப்படி சிந்திக்கவேண்டும் என்று இயக்குநர் எதிர்பார்க்கிறார்? இப்படிச் சொன்னாலும், பிராமண ஆதரவு கிரிக்கெட் தேர்வில் இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. நிச்சயம் அதைப் பற்றிப் பேசத்தான் வேண்டும். ஆனால், அத்தோடு, திறமை இருந்தும் முன்னேற முடியாத அதேசமயம் திறமை இல்லாமல் முன்னேறிவிடுகிற மற்ற சாதிகளைப் பற்றிய பிராமணர்களின் குமுறலையும் பேசவேண்டுமே. சுசீந்திரன் என்ன பைத்தியமா இதைப் பேச. எது எடுபடுமோ அதைப் பேசுகிறார். ஒரே படத்தில் அத்தனையையும் காட்டிவிடமுடியாது. திரைக்கதை வீரியத்துக்கு ஒருமுனையில் படத்தை குவிப்பது தேவைதான். ஆனால் அதைப் பற்றிய ஒரு வரி கூட படத்தில் இல்லை! ஏனென்றால் இயக்குநருக்கு அது பற்றிய அக்கறை இல்லை.

ஆனால் இன்னொன்றில் அக்கறை உள்ளது. அபிராமணர்கள் என்ன சாதி என்று சொல்லக்கூடாது என்பதில் அக்கறை இருந்திருக்கிறது. நல்லது. போகட்டும். ஜீவாவின் வாழ்க்கையில் விளக்கை ஏற்றி வைக்கும் கதாபாத்திரம் ஒரு முஸ்லிமாக இருக்கவேண்டும் என்பதில் அக்கறை உள்ளது. தமிழகத்தில் இருந்து உருவான கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் பெரும்பான்மை பிராமணர்கள் என்று தெரிந்துகொண்ட சுசீந்திரனுக்கு, இந்திய அளவில் தன் செல்வாக்கு மூலம் இன்னொருவனுக்கு வாய்ப்புத் தர முடியக்கூடிய ஒரு கிரிக்கெட்காரர் ஹிந்துவாகத்தான் இருக்கமுடியும் என்று தெரிந்திருக்கவில்லை. இந்திய அளவில் வெற்றிபெற்ற இஸ்லாமிய ஆட்டக்காரர்கள் எத்தனை பேர், அவர்களில் அத்தனை செல்வாக்குப் பெற்று, ரஞ்சி டிராஃபியில்கூட விளையாடியிருக்காத ஒருத்தனுக்கு ஐபிஎல் (படத்தில் சிபிஎல்) குழுவில் இடம்வாங்கித்தரும் அளவுக்கு உள்ள முஸ்லிம் ஆட்டக்காரர் என்று ஒருவரைக் காட்டமுடியுமா? பிராமணர்களைச் சொல்லும்போது தரவோடு வருகிறவர், ஹிந்துக்களைப் புறக்கணிக்க எந்தத் தரவோடும் வருவதில்லை. இது புதியதல்ல. ஏற்கெனவே நன்கு போடப்பட்ட பாதை. அதிலே சுசீந்திரனும் மிக இலகுவாகச் செல்கிறார்.

குறைந்தபட்சம், இந்தியாவின் முக்கிய அச்சுறுத்தலான தீவிரவாதம் பற்றியும் அதில் அதிகமான இஸ்லாமிய பயங்கரவாதத்தைப் பற்றியும் சுசீந்திரன் படம் எடுக்கவேண்டும். இந்தப் படத்தில் கிறித்துவர்களை நல்லவர்களாக வைத்ததுபோல் புதிய படத்தில் ஹிந்துக்களை அப்பாவி நல்லவர்களாக வைக்கவேண்டியதில்லை. இந்திய அப்பாவி பொதுஜன முஸ்லிம்களை நல்லவர்களாக வைக்கட்டும். உண்மையும் அதுதான், எனவே யதார்த்தமாகவும் இருக்கும். இப்படி வைத்தாவது அவரால் ஒரு படத்தை இயக்கிவிட முடியுமா என்ன? முடியும். செய்யட்டும். செய்யவேண்டும்.

இதை ஒட்டி வேறு சில வாய்ப்பரசியலைப் பார்க்கவேண்டும். திறமை இருந்தும் புறக்கணிப்படுகிற பிராமணர்களின் குமுறலைப் படமாக்கினால் அதுவே அந்த இயக்குநருக்குக் கடைசிப் படமாக இருக்கலாம். இடஒதுக்கீட்டில் கைவைக்கும் திரைப்படம் ஒன்றை எடுப்பது சாதாரணமானதல்ல. எதிர்ப்புக் கூட்டம் போட்டே சாகடித்துவிடுவார்கள். ஆனால் பிராமணர்களைத் திட்டி, ஹிந்துக்களைத் திட்டி படம் எடுப்பதால் இந்தப் பிரச்சினைகள் இல்லை. ஒருவேளை தொடர்ச்சியான லாபம்கூட இருக்கலாம்! இதை எந்த ஒரு இடத்திலும் நாம் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும். ஒரு ஹிந்துத்துவ ஆதரவுத் திரைப்படம், அதிலும் கலை ரீதியாக மேம்பட்ட படம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஹிந்துத்துவப் படமே வராது, சரி, ஜஸ்ட் வைத்துக்கொள்ளுங்கள், ப்ளீஸ். அதைப் பாராட்டி ஒரு கட்டுரையை நீங்கள் எங்கேயும் பார்த்துவிடமுடியாது. எந்த இதழும் வெளியிடாது. ஒருவேளை நீங்கள் எழுதினால், கட்டுரையோடு அந்தப் பத்திரிகை உங்களையும் நிராகரிக்கும் அந்தப் படத்துக்கு எதிர்க்கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவரும் என்பதற்கு நான் உத்திரவாதம்.

ஏதேனும் ஒரு படம் வந்தால், ஒரே பத்திரிகையில் அதே படத்தை ஐந்து விதமாக விமர்சிப்பார்கள். ஐந்து விமர்சனங்களும் ஒரு புள்ளியில் ஒன்றிணையும். ஒரு பொது அடித்தளத்தைப் பெற்றிருக்கும். இந்த அடித்தள சமரசத்துக்குட்பட்டே நீங்கள் அந்தப் பத்திரிகையில் எழுத முடியும். சமரசமே இல்லாமல் கட்டுரை எழுதுவது என்று அந்த எழுத்தாளர்கள் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் குறைந்தபட்ச சமரசம் என்பது உங்கள் கொள்கையாக இருந்தால்மட்டுமே நீங்கள் அங்கே எழுதமுடியும். அடித்தளம் மறைந்திருக்கும், அது ஒன்றேயானது. மேலே கட்டுமானங்கள் மட்டும் விதம்விதமாக.

இது ஹிந்த்துத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கிற இதழுக்கும் பொருந்தும். ஆனால் ஹிந்துத்துவ இதழ் இங்கே நடுநிலை இதழ் இல்லை. மற்றவை நடுநிலை இதழ்கள். சமரசமற்ற இதழ்கள். இதுவே முக்கியமான வேறுபாடு.

ஒரு ஐயாயிரம் பிரதி விற்க கஷ்டப்படும் இதழில் எழுதக்கூட இத்தனை வாய்ப்பரசியல் என்றால், கோடிகள் புரளும் விளையாட்டும் வாய்ப்பரசியல் இருக்காது என்று நம்ப யாருமே முட்டாளல்ல. ஆனால் வாய்ப்பரசியலை ஹிந்துக்களையும் பிராமணர்களையும் விமர்சிக்கப் பயன்படுத்துவதோடு நிறுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். சுசீந்திரனும் புத்திசாலியாகத்தான் இருக்கவேண்டும் என்பதை எதிர்வரும் அவரது படங்கள் நிரூபிக்கும் என்றே நம்புகிறேன்.


வாயசைப்பையும் டப்பிங்கையும் கூர்ந்து நோக்க.

Share

பாரதியார் கவிதைகள் (விளக்க உரையுடன்)

பாரதியார் கவிதைகள் உரையுடன் வெளிவந்திருக்கிறது. பாரதியார் கவிதைகளுக்கெல்லாம் உரையா என்று ஒரு காலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் நிச்சயம் உரை வேண்டும் என்பதுதான் என் எண்ணம். இப்போது முதன்முறையாக ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது. கற்பகம் புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது. கவிஞர் பத்மதேவன் உரை எழுதியிருக்கிறார்.

சமீபத்தில் கண்ட அட்டகாசமான புத்தகம் இது. தவறாமல் வாங்கிவிடுங்கள். நிச்சயம் நம் வீட்டில் இருக்கவேண்டிய பொக்கிஷம் இந்தப் புத்தகம். உரை தெளிவாக புரியும்படியாக அழகான தமிழில் உள்ளது. பாரதியின் தீவிர அன்பர்கள் இப்புத்தகத்தைப் படித்தால் சில வரலாற்றுத் தரவுகளைச் சொல்லக்கூடும். அவையும் சேர்க்கப்படுவது நல்லது.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு மாணவன் கையிலும் இந்தப் புத்தகம் இருப்பது அவசியம். நம் ஒவ்வொரு கையிலும் இந்தப் புத்தகம் இருப்பது தேவை. 

புத்தகத்தின் அச்சு, அட்டை நேர்த்தி எல்லாம் கூடி மிக அழகாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது இப்புத்தகம். 

விலை ரூ 750 (1096 பக்கங்கள்)

இப்புத்தகத்தின் விற்பனையைப் பொருத்தே மறுபதிப்பெல்லாம் வரும் என நினைக்கிறேன். கிடைக்கும்போதே வாங்கிப் பத்திரப்பத்தி வைத்துக்கொள்ளுங்கள். 

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0002-364-7.html

போன் மூலம் வாங்க: Dial for books 94459 01234

Share

பதிப்புலகம் குறித்து (கிழக்கை முன்வைத்து) – பத்ரி சேஷாத்ரி எழுதியது

பத்ரி ஃபேஸ்புக்கில் எழுதியது இவை. ஒரு தேவை கருதி இங்கே சேமித்து வைக்கிறேன்.

 

(1) புத்தக விலையை, அதன் கட்டமைப்புக்கு ஆகும் செலவை வைத்தே தீர்மானிக்கிறேன். உலோகத்தை அடிப்படையாக வைத்து உதாரணம் சொல்கிறேன். முதலில் அந்தப் புத்தகத்தை 1,200 பிரதிகள் அச்சிட்டோம். அப்போது ஒரு புத்தகம் அடிக்க ஆன செலவு சுமார் 25 என்று ஞாபகம். அதைப்போல நான்கு மடங்கு எம்.ஆர்.பி. எனவே ரூ. 100/- எம்.ஆர்.பி. அந்தப் புத்தகத்தை விற்க ஆரம்பித்ததும், எதிர்பார்த்த வேகத்தைவிட அதிகமாக விற்றது. எனவே பேசாமல் 5,000 பிரதிகள் அச்சடித்துவிடலாமே என்று ஒரு ஐடியா தோன்றியது. அப்படி அடிக்கும்போது ஒரு பிரதிக்கு ஆகும் செலவு சுமார் ரூ. 15/- மட்டுமே. அதனை நான்கு மடங்காக்கி, ரூ. 60/- என்று வைக்காமல், ரூ. 50/- என்று வைத்து, ஊரெங்கும் பிளாஸ்டிக் பவுச்சில் தொங்கவிட்டு விற்க முயற்சி செய்தோம். கடைசியில் 4,500 விற்றுவிட்டது. கடைசி 500 விற்க வெகு தாமதமானது. அதன்பின் அந்தப் புத்தகத்தை அச்சிடவில்லை. இப்போது நான் அதனை அச்சிட நேர்ந்தால் மீண்டும் ரூ. 100/- அல்லது ரூ. 125/- என்று வைத்து விற்பேன். ஒரு லட்சம் பிரதிகள் சீராக மாதம் 10,000 என்று போகும் என்றால் ரூ. 40 அல்லது ரூ. 50 என்று வைத்து விற்பேன். இதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

(2) புத்தகக் கட்டுமான விலையைப் போல எவ்வளவு மடங்கு வைத்து புத்தகங்களை விற்பது? 3 மடங்கு, 4 மட்னக்கு, 5 மடங்கு? இந்த மூன்றையும் நான் பின்பற்றியுள்ளேன். ஏன் இந்தக் கணக்கு? நாங்கள் எங்கள் சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகளுக்கு புத்தக விலையில் 40% டிஸ்கவுண்ட் தருகிறோம். அவர்கள் எங்கள் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு 35%-மும், கடைகளுக்கு 30 அல்லது 35%-மும் கொடுக்கிறார்கள். எங்களைப் பொருத்தமட்டில், எல்லாப் புத்தகத்துக்கும் 40% எங்கள் கையை விட்டுப் போய்விடுகிறது. அது டிஸ்ட்ரிபூஷன் சானலுக்குப் போகும் தொகை. அடுத்து, 10% எழுத்தாளர் ராயல்டி. தாமதமானாலும் இன்றுவரை மிகச் சரியாகக் கொடுத்துக்கொண்டு வந்திருக்கிறோம். ஆக எம்.ஆர்.பியில் 50% சானலுக்கும் ஆசிரியருக்கும். மீதமுள்ள 50%-த்தில், (நான்கு மடங்கு வைத்தால்) 25% கட்டுமானத்துக்கு, 25% நிறுவனத்துக்கு. இந்த 25%-ல் வாடகை, சம்பளம் (எங்களிடம் 70 பேர் வேலை செய்கிறார்கள் – 20 பேர் சேல்ஸ், 8 பேர் எடிட்டோரியல், அட்மின், மார்க்கெட்டிங், வேர்ஹவுஸ் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள் – இவர்கள் அனைவருக்கும் தலையே போனாலும் ஒன்றாம் தேதிக்கு முதல் தேதியிலேயே சம்பளம் கொடுத்துவிடுகிறேன், பி.எஃப், இ.எஸ்.ஐ, கிராஜுவிட்டி உண்டு), நிறுவனத்தை நடத்த வாங்கும் கடனுக்கான வட்டி, இதெல்லாம் போக கையில் ஒன்றும் எஞ்சுவதில்லை. இதில் முதலீட்டாளர்களுக்குக் கொடுக்க ஒன்றும் இல்லை.

இதனால்தான் ஐந்து மடங்கு விலை வைக்கலாம் என்று யோசித்தேன். அப்படிச் செய்தால் எங்கள் பங்காக 30% நிற்கும். ஆனால் அதற்கு சேல்ஸ் டீமிடமிருந்து எதிர்ப்பு. சில புத்தகங்கள் போகும் வேகத்தை வைத்து, மீண்டும் நான்கு மடங்கு என்று வந்துவிட்டோம்.

(3) எங்கள் தயாரிப்புச் செலவு அதிகம். எனவே எம்.ஆர்.பி அதனோடு சேர்த்து மடங்காக்குதலில் அதிகரிக்கிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் பத்தாண்டுகளாக புத்தகத்தை உருவாக்கிவிட்டு, சொர்ந்துபோய் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் புத்தக உருவாக்கத்தைக் கொடுத்திருக்கிறோம். குவாலிட்டி கண்ட்ரோல் என்றால் என்னவென்றே தெரியாத நிலைதான் சென்னை குடிசைத் தொழில் அச்சகங்களில். நாங்களே பேப்பர் வாங்கி, நாங்களே பத்து பிரிண்டிங் பிரெஸ்ஸில் பிரிண்ட் செய்து, நாங்களே எட்டு பைண்டிங் இடங்களில் போய் பைண்டிங் செய்து எடுத்து வந்தால் ஒரே செட்டில் உள்ள பத்து புத்தகங்களும் பல்வேறு உயரங்களில் இருக்கும், அச்சு கோணல் மாணலாக இருக்கும்., பைண்டிங்கெல்லாம் அப்படித்தான் சார் வரும் என்று ஒரே போடாகப் போடுவார்கள்.

இப்போது ஒட்டுமொத்தமாக மும்பையில் ரெப்ரோ அல்லது மங்களூரில் மணிபாலில் கொடுத்துச் செய்கிறோம். அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுக்கிறோம்.

ஏன், மற்ற நிறுவனங்கள் மிக அற்புதமாகப் புத்தகங்களைக் கொண்டுவரவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஒருவேளை அவர்களிடம் இருக்கும் சீக்ரெட் சாஸ் என்னிடம் இல்லை. அவர்கள் மாதம் அச்சடிக்கும் புத்தக எண்ணிக்கைக்கும் நான் அச்சடித்து விற்கும் புத்தக எண்ணிக்கைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்த்து ஃபேஸ்புக்கில் சண்டை போட நான் விரும்பவில்லை.

(4) இறுதியாக, நாங்கள் சானலுக்குத் தரும் டிஸ்கவுண்ட் அதிகம். வானதியெல்லாம் 25%-க்கு மேல் தரமாட்டார்கள். சிலர் 30, சிலர் 35. நாங்கள் 40 தரக் காரணம் உள்ளது. ஒரு வலைப்பின்னலை உருவாக்கியிருக்கிறோம். அனைவரும் பணம் சம்பாதித்தால்தான் இந்த நெட்வொர்க்கில் இருக்க விரும்புவார்கள். புஸ்தகத்தைப் பரவலாக விற்பனை செய்ய முயற்சி எடுப்பார்கள். அதனால்.

இப்போது எக்ஸைல் விலைக்கு வருவோம். நேரடியாக கஸ்டமருக்கு விற்பதால், 40% டிஸ்கவுண்ட் போகிறது. எனவே நேரடியாக எந்தப் புத்தகத்தை பதிப்பகத்திடம் சென்று வாங்கினாலும் டிஸ்கவுண்ட் கொடுக்க வேண்டியதுதானே என்று கேட்காதீர்கள். டிஸ்கவுண்ட் கொடுக்க மாட்டோம். ஏனெனில் அது விற்பனை சானலின் வெறுப்பைச் சம்பாதிக்கிறது. அங்குதான் எங்கள் புத்தகங்களின் பெரும்பகுதி விற்பனையாகிறது. இந்தக் குறிப்பிட்ட புத்தகத்தை 50% டிஸ்கவுண்டில் விற்க ஒப்புக்கொண்ட ஒரே காரணம் இதில் லாபம் உள்ளது என்பதற்காக அல்ல. சாரு கேட்டுக்கொண்டதற்காக மட்டுமே. இப்படி எல்லா எழுத்தாளர்களும் கேட்டால் எனக்குக் கட்டுப்படியாகாது.

ப்ரீ-ஆர்டரில் இருக்கும் வசதி காரணமாகவே இந்த டிஸ்கவுண்ட். மொத்தம் எத்தனை புத்தகம் அச்சிட வேண்டும் என்பது தெரிந்துவிடும். கையில் காசு முதலிலேயே வந்துவிடும்.

ஆனால் இதனை எல்லாப் புத்தகங்களுக்கும் செய்ய முடியாது. ஒருசிலருடைய புத்தகங்களுக்குத்தான் கணிசமான ப்ரீ-ஆர்டர் வர வாய்ப்புள்ளது.

ஆனாலும் லாபம் உண்டு, லாபம் உண்டு என்று நீங்கள் சொல்வதை நான் ஏற்கவில்லை. கடந்த பத்தாண்டுகளில் கிழக்கு பதிப்பகத்துக்குத் துளிக்கூட லாபம் இல்லை என்பதுதான் உண்மை. பொதுவாக நான் இதுகுறித்துப் பேசுவதில்லை. புலம்புவதில்லை. இப்போதும் இது புலம்பல் இல்லை. அச்சுப் புத்தக பிஸினஸின்மீதான என் ஆர்வம் வெகுவாகக் குறைந்துவிட்டது. வேறு பிசினஸில் இறங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. நன்றி. இதுதொடர்பான கேள்விகளுக்கு இங்கு மேற்கொண்டு நான் பதில் ஏதும் எழுதப்போவதில்லை.

 

தனியாக நீங்கள் புத்தகம் போட்டாலும் அதில் எழுத்துக்கு மேற்பட்ட உழைப்பு இருக்கிறது. அதற்கு நீங்கள் ஒரு விலை போடவேண்டும். எழுத்துக்கு ராயல்டி. மற்ற உழைப்புக்கு ஒரு கூலி. பின் கடனுக்கு வட்டி. எல்லாம் சேர்த்தால் உபயோகப்படாது என்பதால்தான் 100 ரூ. வைக்கவேண்டும். மாற்றுவழி, புத்தகங்கள் பல ஆயிரக் கணக்கில் விற்கவேண்டும் என்பதுதான். அது நிகழும்வரை நாம் அபத்தமாக அடித்துக்கொண்டிருக்கிறோம். அதைப் பற்றி யாராவது பேச விரும்பினால் நான் பேசத் தயார். இன்னமும் 1000 பிரதிகள் விற்பதிலேயே ஆயிரத்தெட்டு அக்கப்போர். அங்கே சேத்தன் பகத் ‘அசால்டாய்’ லட்சத்தைத் தாண்டி, பத்து லட்சத்தைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறார். அது… பிசினஸ். மற்றபடி, கலை, இலக்கியம் வளர்ப்போர் மட்டுமே சொந்தக் காசை அழித்து போண்டியாக்கி 1000 பிரதியை விற்க அல்லாடிக்கொண்டிருப்பார்கள். எனக்கு அதையெல்லாம் தொழிலாகச் செய்ய நாட்டமில்லை.

 

 

-பத்ரி சேஷாத்ரி

https://www.facebook.com/rasanaikkaaran/posts/1542645925977441?comment_id=1542651565976877&notif_t=like

Share

அசோகமித்திரன், நீங்க நல்லவரா கெட்டவரா?

அசோகமித்திரன், நீங்க நல்லவரா கெட்டவரா?

நேற்றைய வெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழாவில் அசோகமித்திரன் பேசினார். நேற்று என்றல்ல, அசோகமித்திரன் எப்போதுமே ஒரு கறாரான பேச்சைப் பேசுவதில்லை. அது அவரது பாணியாக இருக்கலாம். ஆனால் அவரது கருத்து என்ன என்பதை ஒவ்வொரு நேயரும் ஒவ்வொரு விதமாக உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு உருவாகிவிடுகிறது என்பதே அதிலிருக்கும் அரசியல். எனக்குத் தெரிந்தவரையில் அசோகமித்திரன் இதைத் திட்டமிட்டே செய்கிறார் என்றுதான் நினைக்கிறேன்.

தன்னோடு எழுதவந்த தனக்குப் பின் எழுத வந்த தன்னை ஒத்த அல்லது தன்னைக் கடந்த எழுத்தாளர்களை முழுக்கப் பாராட்டுவதில் அவருக்குப் பெரிய தயக்கம் உள்ளது. மனத்தடை உள்ளது. இதுதானே இயல்பு என்று ஒருவர் சொல்லக்கூடும். ஒருவரைப் பாராட்டத் தோன்றும்போது முழுமையாகப் பாராட்டுவது பெரிய பிழையல்ல. அப்போதும்கூட அதில் ஒரு புள்ளி வைத்துப் பேசுவது தேவையற்றது. அது பேசுபவரின் அதீத தன்முனைப்பையே காட்டுகிறது என்று நினைக்கிறேன்.

இதே அசோகமித்திரன் தனக்குப் பின் வந்த சில எழுத்தாளர்களை மனமாரப் பாராட்டியிருக்கிறார். ஆனால் அவர்களெல்லாம் அசோகமித்திரனை எவ்வகையிலும் தொடமுடியாதவர்கள், தாண்ட முடியாதவர்கள். ஆனால் அசோகமித்திரன் ஜெயமோகனைத் தன்னைத் தாண்டிவிட்ட ஓர் எழுத்தாளராக உள்ளே நினைக்கிறார். எனவே அவருக்கு ஜெயமோகனை முழுமையாகப் பாராட்டிவிடுவதில் சிக்கல் உள்ளது. பாராட்டத் துவங்கும்போதே, தப்பா நினைக்காதீங்க, நீங்க எல்லாம் கைதட்டறேள், நான் இல்லை என்று சொல்கிறார். ஒரு நாடகத்தில் இவர் நடித்தபோது தெரியாமல் இவரது மூக்குக் கண்ணாடி விழுந்துவிட அனைவரும் பிரமாதம் என்று கைதட்டினார்கள் என்கிறார். ஆனால் ஜெயமோகன் எழுதுவதைத் தடை சொல்லக்கூடாது என்று சொல்லி, வயதில் மூத்தவர் என்பதால் ஆசிகள் என்று சொல்லிவிடுகிறார். 30,000 பக்கம் எழுதினா பயமா இருக்கு என்று சொல்லிவிட்டு, தான் எழுதித் தள்ளிய கையெழுத்துப் பிரதிகள் குவிந்து கிடக்கின்றன என்கிறார். அசோகமித்திரனின் பிரச்சினை, ஜெயமோகன் அவரைத் தாண்டுவதை மனதார ஏற்றுகொள்ள முடியாமல் போவதே என்பதே என் முடிவு.

இத்தனைக்கும் அசோகமித்திரன் ஒரு மிகப்பெரிய படைப்பாளி. சாதனையாளர். எத்தனை காலம் தாண்டியும் வாழப்போகும் மிக நுணுக்கமான எழுத்து அவரது. அவருக்குரிய அங்கீகாரம் அவர் நினைக்கும் அளவுக்கு அவருக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் அதை எதிர்கொள்ளும் வழி இதுவல்ல. இப்போது என்றில்லை, அவர் யாரைப் பற்றிப் பேசினாலும் இப்படி ஒரு புள்ளி வைத்துப் பேசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஜெயமோகனுக்கு கைத்தடிகள் இருப்பதாக சிலர் சொல்லுவதுபோலவே அசோகமித்திரனுக்கும் கைத்தடிகள் சிலர் உண்டு. அவர்கள் இதைச் சொல்லி சிலாகிப்பார்கள். என் காதாலேயே கேட்டிருக்கிறேன். அசோகமித்திரனின் பூடகமான விமர்சனத்தை ஊதிப் பெரிதாக்கி தங்கள் வயிற்று உபாதையை அவர்கள் தீர்த்துக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். அது அவர்களுக்குப் பொருத்தமானதுதான். ஏனென்றால் அவர்கள் எப்போதுமே ஜெயமோகனை உயர்ந்துதான் பார்க்கப் போகிறவர்கள். ஆனால் அசோகமித்திரன் முகத்தோடு முகம் பார்க்கத்தக்க ஒரு சாதனையாளர்கள். வயதும் கைவிடப்பட்ட தருணங்களும் தரும் சோகத்தை அசோகமித்திரன் வெல்லவேண்டும். அதற்கு நிஜமான சாதனையாளர்களாக அவர் மனம் அங்கீகரிக்கும் எழுத்தாளர்களைப் பாராட்டும் தருணம் வரும்போது மனமாரப் பாராட்டுவது ஒரு வழியாக இருக்கக்கூடும். கறாரான விமர்சனம் தேவைப்படும்போது அதையும் செய்துகொள்ளட்டும். அது அவர் தேர்வுதான். பாராட்டும்போதே ஒரு குறையைச் சொல்வதும், விமர்சிக்கும்போதே ஒரு பாராட்டைச் சொல்வதுமென இலக்கிய உலகின் ரஜினியாக அவர் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதே வேண்டுதல்.

Share

விக்கிரமாதித்தனும் வேதாளமும் – கத்தியை முன்வைத்து

முன்னொரு காலத்தில் விக்கிரமாதித்தன் என்றொரு அரசன் வாழ்ந்துவந்தான். தன் வாழ்நாளெல்லாம் வேதாளத்தைத் துரத்துவதே அவன் வேலை. அன்றும் அவன் துரத்தி அந்த வேதாளத்தைப் பிடித்து, தோளில் போட்டுக்கொண்டு நடந்தான்.

“என்ன விக்கிரமா பேசாமல் வருகிறாய்?” என்று வேதாளம் கேட்டது. விக்கிரமாதித்தன் பதில் சொல்லாமல் வந்தான். பதில் சொன்னால் அவன் மௌனம் கலைந்து வேதாளம் மரத்திற்கு போய்விடுமல்லவா.

வேதாளம் தன் வழக்கம்போல் கதை சொல்லத் தொடங்கியது.

“விக்கிரமா, முன்னொரு காலத்தில் கத்தி என்றொரு திரைப்படம் வெளிவந்தது. அது துப்பாக்கியின் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வெளி வந்து பெரிய வெற்றி பெற்றது. படத்தை லைக்கா என்றொரு ராஜபக்ஷேயின் பினாமி நிறுவனம் தயாரித்ததாகக் குற்றம் கூறியவர்கள், என்னவோ டீலுக்குப் பின்னர் அமைதியாகிப் போனார்கள் என்றொரு பேச்சும் உண்டு. படத்தில் விவசாயிகளின் பிரச்சினையைக் காட்டியதால் என்ன செய்வது என்று குழம்பிப்போன கம்யூனிஸ்ட்டுகளும் தமிழ்த் தேசியவாதிகளும் கள்ளமௌனம் சாதித்து மெல்ல நழுவிப் போனார்கள். கடைசியில் ராஜபக்ஷே மூலம்தான் தமிழ்நாட்டில் புரட்சி வரவேண்டியிருக்கிறது என்றெல்லாம் அன்றைய தமிழர்கள் பேசிக்கொண்டார்கள். 

அதில் ஒரு வரி கம்யூனிஸம் பற்றி வரும். மிக யதார்த்தமான காட்சி அது. கம்யூனிஸம் படித்துக்கொண்டு ஃபிலிம் காட்டும் யாருக்குமே கம்யூனிஸம் என்றால் என்னவென்று தெரியாது என்பதை தெளிவாகக் காண்பித்த காட்சி அது. ஆம், அந்த ஜீவானந்தமும் கம்யூனிஸம் என்றால் இட்லி சட்னி என்று விளக்கிய காட்சியைப் பார்த்து, இப்படி கிண்டலாவது செய்கிறார்களே என்று விரல்சூப்பிக்கொண்டு உத்சொ கொட்டியது கம்யூனிஸக் கூட்டம் என்பது வரலாறு.

அந்தப் படத்தைப் பற்றி பொதுவாக இப்படி கருத்து இருந்தது விக்கிரமா. படம் நன்று. குறிப்பாக விஜயின் நடிப்பு நன்றாக இருந்தது. ஷங்கருக்கு அடுத்தபடியாக ஷங்கரின் ஃபார்முலாவை வெற்றிகரமாகப் படமாக்கிய முருகதாஸ் பாராட்டுக்குரியவர்தான். சில காட்சிகளில் லாஜிக் ஓட்டை இருந்தாலும், படத்தின் வேகத்தில் அது தெரியவில்லை. இறுதிக்காட்சி சண்டை மட்டுமே தாங்கமுடியாததாக இருந்தது. இப்படி மக்கள் பேசிக்கொண்டார்கள். அது ஒருவகையில் சரிதான் விக்கிரமா.

ஆனால் விக்கிரமா நான் கேட்கப்போவது இதைப் பற்றி அல்ல. படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் விமர்சனம் எழுதித்தள்ளிய அன்றைய இணையவீரர்கள் யாருமே ஒன்றைக் கவனிக்கவில்லை.

மூன்று விவசாயிகள் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கிறார்கள். அப்போது அவர்களின் கைவிரல் ரேகையில் மையைப் பார்க்க ஓடி வருகிறார் விஜய். முதல் பிணம் ஹிந்துப் பிணம். யாரிடமும் கேட்காமல் உரிமையாக அவரே பிணத்தைத் திறந்து கைவிரலில் மை இருக்கிறதா என்று பார்க்கிறார். இரண்டாம் பிணம் இஸ்லாமியப் பிணம். அங்கே ஓடுகிறார் விஜய். பேஸ்த் அடித்து நின்றுவிடுகிறார் விக்கிரமா. ஆம். அங்கே இருக்கும் இஸ்லாமிய உறவினர்களிடம் அனுமதி கேட்டு கைவிரலைப் பார்க்கிறார். ஏன் விக்கிரமா இப்படி?

இதுமட்டுமல்ல. ஆறு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஹிந்து விவசாயிகள் சாகும்போது ஹிந்துமதம் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் இஸ்லாமிய விவசாயி சாகும்போது மதத்தைப் பற்றிக் குறிப்பிட்டுச் சாகிறார். ஹிந்து மதம் செத்துப் போவதற்குப் பெத்துப் போட்டதா விக்கிரமா?

இந்தக் கேள்விகளை யாரும் எழுப்பவில்லை. ஏன்? ஆனால் விக்கிரமா இதற்கான பதில் உனக்குத் தெரியும். ஆனால் இந்தமுறை நம் விளையாட்டில் ஒரு விதிமுறை மாற்றம் விக்கிரமா. உனக்குப் பதில் தெரியும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அந்தப் பதிலைச் சொன்னால் உன் தலைவெடித்துச் செத்துப் போவாய். நான் ஓடிப்போய் மரமேறிக் கொள்வேன். பதில் சொல்லாமல் கள்ளமௌனம் சாதித்தால் நான் உன்னுடன் வந்துவிடுவேன். உன் கோடானகோடி தேடல் முடிவுக்கு வரும் என்றான்.

நொடி யோசித்தான் விக்கிரமன். மெல்லப் புன்னகைத்தான். “வேதாளமே, என் தலைவெடித்தாலும் பரவாயில்லை. நான் பதில் சொல்லியே தீருவேன். இந்த நோயின் பெயர்…” என்று சொல்வதற்குள் அவன் தலை சுக்கு நூறாக வெடித்தது. வேதாளம் ஓடிப்போய் மரத்தின் மேலேறி அமர்ந்துகொண்டு லூசுப்பய என்றது.

Share

பாலகுமாரனை நினைத்து

நவம்பர் அந்திமழை மாத இதழ் தொடர்கதை சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. (கமல் 60 சிறப்பிதழும்கூட!) அதில் மெர்க்குரிப்பூக்களை முன்வைத்து நான் எழுதிய கட்டுரை ஒன்றும் வந்துள்ளது. ஓர் இதழின் விலை 20 ரூபாய் மட்டுமே. வாங்கிப் படித்துவிட்டுக் கருத்துச் சொல்லவும்.

நீண்ட நாள் கழித்து பாலகுமாரனின் ஒரு நாவலை வாசித்தபோது, மனத்தில் பல்வேறு பழம்நினைவுகள் என்னை அலைக்கழித்தன. அன்று பாலகுமாரனே எழுத்தின் எல்லை என்று நினைத்த நிமிடங்கள் இன்று அப்படி இல்லை என்றாகிப்போன மாற்றமே அதன் முக்கியப் புள்ளியாக இருந்தது. அதை ஒட்டி எழுந்த எண்ணங்களில் சிதறல்களை எழுதி வைத்தேன். அவை:

பாலகுமாரனின் பிரச்சினைகள் – எதையும் அதன் ஆழத்துக்குள் சென்று பரிசீலனைக்குட்படுத்தாதது. எல்லா ஆண் பெண் உறவுகளிலும் ஒரு செக்ஸ் எலிமெண்ட் எப்படியாவது இருந்துவிடுவது. அதிலிருந்து வெளிவர பெண்ணை தெய்வமாக்க முயல்வது. பெண்கள் ஆண்கள் என எல்லோரும் தத்துவார்த்தப் பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்வது. மெல்ல எப்படியாவது ஜாதிய சிந்தனை இருந்தே தீரும் என்று தொடர்ந்து பின் நின்று சொல்வது. இவை எல்லாவற்றிலும் அவர் ஆழம் போயிருந்தால் ஒவ்வொன்றும் ஒரு கேஸ் ஸ்டடியாகி இருக்கும். ஆனால் எல்லாவற்றிலும் மூன்று மேலோட்டமான முடிவுகளுக்கு அவர் வந்தார். ஆண் பெண் உறவுகளில் செக்ஸ் அதற்குப் பின்னான வருத்தம், தத்துவார்த்தப் பிரச்சினைகளில் மிகவும் மேலோட்டமான எரிச்சலான தன்னிரக்கம், ஜாதிய சிந்தனைகளில் அவரது பிற்போக்குத்தனம் இவையே அவரை தேங்க வைத்தன. இதே மேலோட்டமான வேகத்தில் அவர் ஆன்மிகத்துக்குப் போனார். எனக்கு ஆன்மிகம் பற்றி அதிகம் பரிச்சயமில்லை. ஆனால் ஆன்மிகத்தை இவர் எழுதியதை வாசித்தபோது அவற்றிலும் ஒரு அவசரத்த்னமையும் தனது வாசகர்களைத் தான் செல்லும் திசைக்குத் திருப்பிக்காட்டவேண்டும் என்கிற வேகமும் முடியும் என்கிற மமதையும் மட்டுமே தென்பட்டன.

ஆனால் என் பால்யம் முழுக்க பாலகுமாரனே நிறைத்துக் கிடந்தார். அதில் காமத்தை பெரும்பாலும் தன் எழுத்துகள்மூலம் அவரே கட்டமைத்தார். ஒவ்வொரு இளைஞனும் வெறும் காமம் பற்றியே பேசும்போது அவர் எனக்குள் ஒரு விஸ்வரூபம் எடுத்தார். பல நாள்களில் பல நேரங்களில் நான் பாலகுமாரனுடன் மானசீகமாகப் பேசினேன். எனக்கு குருக்கள் என்று யாரும் இன்றுவரை இல்லை. ஆனால் மானசீகமாக என் வாழ்க்கையை பாலகுமாரன், ஜெயகாந்தன், சோ, சுஜாதா, ஜெயமோகன் போன்றவர்களே வடிவமைத்தார்கள். அந்தவகையில் பாலகுமாரனிடன் எனக்கு எப்போதும் ஒரு மென்மை உண்டு. எப்போதும் நான் அவரை நோக்கிக் கைக்கூப்புவேன்.

பாலகுமாரனின் மயக்கத்தை சுஜாதா போக்கடித்தார். சுஜாதாவிடமிருந்து ஜெயகாந்தன் என்னைக் கொண்டு போனார். இவர்கள் அத்தனை பேரையும் ஒரு சேரக் கடாச வைத்தார் ஜெயமோகன். ஆனால் இன்று நோக்கும்போது இவர்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு வகையில் எத்தனை முக்கியமானவர்கள் என்று தெரிகிறது. அதிலும் சுஜாதாவின் பங்களிப்பு பிரமிக்க வைக்கிறது. ஜெயமோகன் எங்கேயோ போய்விட்டார். 

பாலகுமாரனின் பெண்களை மிகக் கறாராக வரையறுத்தால், உணவாலும் உடலாலும் ஒரு ஆணைக் கட்டிப்போட முடியும், முடியவேண்டும் என்று சொல்பவர்களாகவே இருந்தார்கள். ஆணிடம் ஒரு பெண் தோற்கும்போது அவர்கள் காமத்தை அனுபவமாக்கியே க்டந்தார்கள். வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு நொடியில் வீட்டுப் பெண்ணே என்று காண்பிக்க பாலகுமாரன் தவறுவதில்லை. அதேபோல் எந்த ஒரு நொடியிலும் ஒரு வீட்டுப் பெண் பல தளங்கள் உயர்ந்து வெற்றிப் பெண்ணாக வலம்வர வைக்கவும் அவர் தவறுவதில்லை. என்ன, இவை இரண்டுமே நொடிநேர மின்னல்களாக நிகழ்ந்துவிடுவதுதான் சோகம். இதற்கேற்ற ஆழமான காரணங்களோ சம்பவங்களோ இருப்பதில்லை. அப்படி ஒரு பெண்ணால் மாறமுடியும் என்ற ஒற்றைக் காரணம் எல்லா நாவல்களிலும் பாலகுமாரனுக்குப் போதுமானதாக இருந்துவிடுகிறது.

அனல்காற்று ஜெயமோகன் எழுதியது. பாலகுமாரனின் கதை போன்ற ஒன்றுதான். ஆனால் அதில் ஜெயமோகன் நிகழ்த்திக் காட்டியிருக்கும் அனுபவங்கள் ஒரு ஆணையும் பெண்ணையும் அவர்கள் மனத்தில் அப்படியே நிர்வாணமாக்கி நிற்கவைப்பவை. ஆணின் எல்லையையும் பெண்ணின் எல்லையையும் அவர் தொட்டிருக்கும் அற்புதம் வாசித்தால்தான் புரியும். அனல்காற்று நாவலில் பல இடங்களில் நாம் பாலகுமாரனை நினைவுகூர்வோம். ஆனால் பாலகுமாரனால் செல்லவே முடியாத அலசல்களை ஜெயமோகன் நிகழ்த்திக்கொண்டிருப்பார்.

அனல்காற்று ஜெயமோகனின் நாவல்களில் ஒன்றாக வைக்கத் தக்கதல்ல. அத்தனை ஆழமான அலசல்களை மீறியும் அது ஒரு சுமாரான நாவலே. ஆனால் அது ஒரு திரைக்கதையாக எழுதப்பட்டது என்பதை மனத்தில் வைத்தே படிக்கப்படவேண்டும். சட்டென தெளியும் நிலையில் வரும் உறவு விவரணைகளில் உண்மையில் நான் மிரண்டுவிட்டேன்.

Share

ஈவெராவின் ‘பொன்மொழிகள்’

பி.ஏ. அனந்த கிருஷ்ணன் ஃபேஸ்புக்கில் குறித்து வைத்த இந்தப் பொன் மொழிகளை சேமிப்புக்காகப் பகிர்ந்து வைக்கிறேன்.

 

பெரியாரின் சில பொன்மொழிகளைப் படிக்க நேர்ந்தது. உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. பார்ப்பனரில் ஒரு வகையாருக்கு ஏன் முகம் சூப்பையாக இருக்கிறது?

அவர்கள் அனுமந்த தேவரை பூஜிக்கிறார்கள். படுக்கை அறையில் அனுமார் படத்தை வைத்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் முகம் சூப்பையாக இருக்கிறது.

 

2. பெண் விபசாரிகள் விபூதி பூசியதன் மூலம் மோட்சத்திற்குப் போய் விட்டால் அங்கு அவர்களுக்கு வழி என்ன?

கடவுள் இருக்கிறார். போதாக்குறைக்கு தேவர்களைக் கொண்டு சரிப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

 

எனது பதில்: ஈவெராவின் நினைவிலி மனத்தில் இருப்பவை இவையே. வெளியில் போட்டதெல்லாம் வேஷம். இவரின் தொடர்ச்சியே இன்றைய தமிழ்நாட்டின் சீரழிவு.

மேலதிக விவாதங்களைப் படிக்க: https://www.facebook.com/pakshirajan.ananthakrishnan/posts/982137541812430?fref=nf&pnref=story

Share

யமுனாவின் மேற்கோள் அரசியல்

ஃபேஸ்புக்கில் போட்டது, சேமிப்புக்காக இங்கே.

/உலோகம் ஒரு கார்ப்போரேட் காக்டெயில் நாவல். ‘தமிழின் முதல் சைக்கலாஜிகல் திரில்லரான’ சுஜாதாவின் நில்லுங்கள் ராஜாவே, ‘அரபு தேசக் கதைக்களனுடன் அதகளப்படுத்தும் திரில்லரான’ ராம் சுரேஷின் பழி, பாவம், படுக்கையறை, ‘பர்மா பஜார் நிழல் உலகைப் பதைபதைக்கச் சுற்றிவர’க்கோரும் யுவ கிருஷ்ணாவின் அழிக்கப் பிறந்தவன், ‘இங்கிலாந்து உளவாளியின் மயிர்க்கூச்செறியும் அட்டகாசங்கள் நிறைந்த’ தரணியின் ஓடு, ஓடு, ஒளி போன்ற ‘அட்டகாச’ திரில்லர்கள் வரிசையில், ‘கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டுவந்து’ ஜெயமோகன் உலோகம் எழுதியிருக்கிறார்.

தயவு செய்து குபுக்கெனச் சிரித்துவிட வேண்டாம். சத்தியமாக மேலே இருக்கிற நாவல்கள் குறித்த வர்ணனைகளை நான் எழுதவில்லை. கிழக்கு பதிப்பகம் உலோகம் நாவலின் பின்னட்டையிலும் உள்அட்டையிலும் எழுதியிருக்கும் வாசகங்கள்தான் இவை. இந்த நாவல்களின் பண்புகளுடனான உணர்ச்சிகமான திரில்லர் சமச்சாரங்களுடன் அங்கங்கே ஜெயமோகனுக்கு ஈழம் குறித்துத் தெரிந்த இலக்கியம் இலக்கியவாதிகள் அவர்களுக்குச் சுந்தர ராமசாமியுடன் இருந்திருக்கக்கூடிய உறவுகள் போன்றவற்றுடன உருவாகியிருக்கிற சுத்த இலக்கியக் காக்டெயில் யுனிக் நாவல்தான் உலோகம்.//

இப்படி யமுனா ராஜேந்திரன் எழுதியிருக்கிறார்.

ஆனால் உலோகம் பின்னட்டையில் உள்ளவை –

”உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. த்ரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தைக் கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு த்ரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் உணர வேண்டிய தருணத்தை உருவாக்குகிறார் ஜெயமோகன். துரோகம், கதையில் ஒரு முடிச்சை உருவாக்குகிறது. இன்னொரு துரோகம், அம்முடிச்சை அவிழ்த்துவிட்டு, வேறு முடிச்சைப்போட்டு வைக்கிறது. இப்படியாக இந்த த்ரில்லர் கதை செல்லும் ஆழம் அசர வைக்கக்கூடியது. ஈழத்தோடு தொடர்புடைய அரசியல் இக்கதையின் களமாக இருப்பதால், புனைகதையை உண்மைக்கு வெகு அருகில் நின்று நம்மால் பார்க்க முடிகிறது.”

புத்தகத்தின் உள்ளே, உள் முன்னட்டையில் நில்லுங்கள் ராஜாவே மற்றும் பழிபாவம்படுக்கையறை நாவல்கள் பற்றிய விளம்பரங்கள் உள்ளன. உள் பின்னட்டையில் அழிக்கப் பிறந்தவன், ஓடு ஓடு ஒளி நாவல் பற்றிய விளம்பரங்கள் உள்ளன.

ஆனால் யமுனா ராஜேந்திரன் சொல்வது: ”கிழக்கு பதிப்பகம் உலோகம் நாவலின் பின்னட்டையிலும் உள்அட்டையிலும் எழுதியிருக்கும் வாசகங்கள்தான் இவை.”

 

எப்படி யமுனாவால் ஒரு விஷயத்தை திரித்து எழுதமுடியும் என்பதற்கு இது உதாரணம். நான்கு விளம்பரங்கள், பின்னட்டையில் உள்ள வாசகத்தை ஒன்றாக்கி, சில வரிகளில் கோட் போட்டுவிட்டு, என்னவோ கிழக்கு பதிப்பகம் அப்படி எழுதியது போன்ற ஒரு தோற்றத்தைக் கொண்டுவருவது மூலம் இவர் சாதிக்கப் போவதென்ன என்று தெரியவில்லை.

 

 

யமுனா ராஜேந்திரனின் வலைத்தளம்: http://yamunarajendran.com/?p=1035

Share