மனனமாகிப்போன சில பொழுதுகள் – கவிதை


மரச்செறிவுகளுக்குள்ளே சூரிய ஒளி வந்து வந்து

போய்க்கொண்டிருந்த ஒரு நேரத்தில்

கைக்கெட்டும் தூரத்தில் இருந்த ஓடை நீரை

அளந்துகொண்டிருந்தேன், கொண்டிருந்தாய்.

பின்னொரு

கடற்கரை நுரைதள்ளிய நாளில்

ஒரு குமிழை ஊதிப் பெரிதாக்கி

மனதுள் வெடிக்கச் செய்துகொண்டிருந்தேன், கொண்டிருந்தாய்

பலா காய்ச்சித் தொங்கும் மரத்தடியில்

பலாவை எண்ணிக்கொண்டிருந்தோம், கிரிக்கெட் பந்து பட்டு

மரம் சப்தமிட்டு அமர்ந்தது

உதிரும் இலைகள் உதிர்ந்து அமைந்தன

நம்மைப் பற்றிய பிரக்ஞையில்லாமல்.

இரவுகளில்

இடைவெளி குறையும்போதும் கூடும்போதும்

போர்வை நுனி எழுப்பும்போதும்

வீதிகளின் நுண்சப்தங்கள்

நமக்கு மனனம்.

எதையோ இழந்து

எதையோ வாங்கிக்கொண்ட பொழுதுகளில்

மிக நுட்பமாக

சுற்றுப்புறத்தையும் அதன் தனிமையையும்

இருவரும் தனித்தனியே உள்வாங்கிக்கொண்டோம்

நீயாவது ஏதேனும் பேசியிருக்கலாமோ

என்ற கேவலுடன்.

Share

பாட்டன் மரம் – கவிதை

 

பலமாத இடைவெளிக்குப் பின்

சாப்பாட்டுத் தட்டுகள் ஒன்றாய் வைக்கப்படுகின்றன

தொடர்ந்து பரிமாறல்

ஊரில் மாவடு கிடைப்பதில்லை என்கிறான் அண்ணன்

கட்டம் போட்ட சிவப்புப் பட்டை

இஸ்திரிக்காரன் பாழாக்கியதைப் புலம்புகிறாள் அண்ணி

செல்லப்பூனை இறந்தகதை அம்மாவுக்கு, கொஞ்சம் விசும்பலோடு

மூன்றாம் வீட்டுப் பெண் ஓடிப்போன சந்தோஷம் அப்பாவுக்கு

ஐம்பது வருடங்கள் இருந்த புளியமரம் வெட்டப்பட்டு

பாட்டன் நிலம் விற்கப்பட்ட கதையைச் சொல்ல

யாருக்கும் நினைவில்லை (அல்லது துணிவில்லை)

வெந்நீர் அடுப்பில்

அப்புளியமரத்தின் புளியங்குச்சிகள்

எரிந்து சாம்பலாகும்போது

எஞ்சியிருந்த பாட்டன் மனசாட்சி

கருகிப்போகும் வகையறியாமல்

சூடாகிக்கொண்டிருக்கிறது நீர்

Share

குழந்தைமை – கவிதை

 

குதிக்கும் குரங்கு பொம்மையின்

வயிற்றை அமுக்கினால்

பீப்பீ சத்தம் வருகிறது.

பின்னிழுத்துவிட்டால் முன்னோடுகிறது கார்

கைதட்டினால் சப்தமிடுகிறது கிளி

கையிரண்டில் வாளோடு

பேட்டரியில் முன்னேறுகிறான் ரோபோ

காற்றில் மெலிதான உலோகச்சத்தம் ஏற்படுத்தி

திருஷ்டி கழிக்கிறது சீன வாஸ்து

இத்தனைக்குப் பின்னும் சிரிப்பை மறந்து

இல்லாத ஒன்றிற்காக

(எதிர்வீட்டுச் சரவணன்

சோப்பு நுரையை ஊதிக்கொண்டிருக்கிறான்)

அழுதுகொண்டேயிருக்கிறது

வீட்டுக்குழந்தை

Share

உள்ளிருப்பு – கவிதை

 
காத்திருந்த அந்த இரவில்

சுவர்க்கோழி கத்திக்கொண்டிருந்தது

பல்லி ஒன்று பிள்ளையார் படத்தின்மீது ஊர்ந்துகொண்டிருந்தது

கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்தபோது

பெருமாள் கோவிலின் புன்னை மர இலையொன்று

சப்தமின்றி வீழ்ந்தது

காற்றில்லாத பெருமழையில் தெருவிளக்கு அணைந்தது

தெருநாய் ஒன்று தடுப்புத் தேடி அலைந்தது

ஆந்தையொன்று தந்திக்கம்பக் கம்பிகளில் அமர்ந்து

கண்கள் திறந்து பார்த்திருந்தது

கவனம் ஒருகூராக்கி

கையோடு கைகள் பிணைத்து, கழுத்தை வருடியபோது

பயந்து பறந்தது

இறக்கை அடக்கி

மூக்கில் அமர்ந்திருந்த ஓர்


Share

மங்கலம் – கவிதை

 
சுற்றி எல்லாம் சுபம்

இவ்வுலகத்துக் காலம்

என் கனவு நிமிடங்களால் பகுப்பட்டிருக்கிறது

நடுச்சாமம் முழுதும்

எச்சி ஒழுக அரற்றிக்கொண்டிருந்த பசு

ஈன்றிருக்கிறது

வழியெங்கும்

அழகிய மஞ்சள் வட்ட மலர்களைத் தட்டான் சுற்ற

சூரியகாந்திப்பூ சூரியன் நோக்கியிருக்கிறது

கஷாயம் போலிருக்கும்

முக்கு டீக்கடை சாயா பாலுடன் கனக்க

எப்போதும் கரகரக்கும் ட்ரான்சிஸ்டர்

காதற்பாடல்களை ஒலிக்கிறது

நீர்வற்றிப்போயிருந்த பண்டாரங்குளத்தில்

சில தண்ணீர்ப்பூக்கள் தலைநீட்டியிருக்கின்றன

அங்கு

கலந்துகொண்டிருக்கும் நாயிரண்டைச் சுற்றி

சிறுவர் கூட்டமில்லை, கல்லெறிதல் இல்லை.

பலசாதிச் சிறுவர்கள்

தோள் மேல் கை போட்டுக்கொண்டு

தபாலில்லாத ட்ரவுசருடன்

பள்ளி செல்கிறார்கள்

சொன்னதைக் கேட்கிறது வீட்டு நாய்

சேவற் கூவலுடன் அமைதியில் காலை விடிய

கோயில் மணி மெலிதாய் ஒலிக்கிறது

மனவெழுச்சி நிரம்பிய இரம்மியப் பொழுதொன்றில்

இரவு கவிகிறது

எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

Share

மின்மினிப்பூச்சி – கவிதை

 

தெருவெங்கும் முளைத்துவிட்ட

மின்விளக்குகளின் வெளிச்ச எல்லைக்குள்

அமிழ்ந்துவிட்டது

மின்மினிப்பூச்சியின் ஒளிர்வு, என்றாலும்

எல்லை தாண்டிய இருள்வெளியில்

அப்பூச்சி

மனசுக்குள் புரட்டியெழுப்பும்

உணர்வுகளின் தாக்கத்தையடுத்து

கண்பார்வையிலிருந்து மறைகிறது

மஞ்சள் வெளிச்சப் படர்வு

Share

கோடுகளால் ஓர் ஓவியம் – கவிதை

நடைபாதையில்

நேர் கோடுகளால் அடைபட்டிருக்கிறது

ஓர் ஓவியம்

முக்கோணமாய் கழுத்து

அழுகிறதா சிரிக்கிறதா என

இனம் பிரிக்க முடியாதபடி

மூன்று கோடுகள் முட்டிக்கொள்ள

எத்தனித்துக்கொண்டு

கண்களும் மூக்கும்

சரிவகமாய் கழுத்து

இணைகோடுகளால் உடல்

குச்சி குச்சியாய் கைகால்கள்

ஐந்து கோடுகளால் விரல்கள்

பக்கவாட்டிலும் நீளவாக்கிலும்

குறுக்கும் நெடுக்கும்

கோடுகள் ஓடி உருவாக்கிய வலை

இதயத்தைக் குறித்ததையும்

நெற்றிச் சுருக்கத்தில் துளிகளுடன்

காசு விழும் சத்தத்திற்காகக்

காதைத் திறந்து காத்திருக்கும் ஓவியனையும்

காணவில்லை என்பதாக செய்துகொண்ட பாவனைகளில்

என்னைப் பொருத்திக்கொள்கிறது அவ்வோவியம்.

Share

சூழற்கல்வி – கவிதை

 

தண்டவாளச் சரிவில்

மழையில் நமநமத்துச் சிதைந்த

மரக்கட்டைக்கூழில்

முளைத்திருக்கும்

பழுப்பு நிற நாய்க்குடைக்காளான்

புகைவண்டி கடக்கையில்

அதிர்ந்தடங்கி

அடுத்த அதிர்வுக்கு

வெளிர்மெலிக்காம்புடன் தயாராகிறது.

நாத்திகக்கேள்வி கேட்கும் விளம்பரச்சுவர்களில்

ஒட்டிக்காய்ந்த வராட்டியின் கைரேகை பார்க்க

ஜோதிடன் வேண்டியதில்லை.

“மலையும் மலை சார்ந்த இடமும்” பாடத்தில்

மஞ்சள் பூச்சுச் சுவருக்குள்

கனத்த புத்தகம் கையிலிருக்க

இரயிலும் இரயில் சார்ந்த இடமும் மறந்து

அதிர்காளான் அறியாமல்

கைரேகைக்கிழவியின் நிகழ்வாழ்வறியாமல்

தேர்வை எதிர்பார்த்து

நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தாலும்

மோசமொன்றுமில்லை,

அறியும் பின்னொரு நாளில்

அறியாததை அறிந்தமாதிரி

கவிதை எழுதுவார்கள்.

Share