காதல் – திரைப்படம்

காதல் (திரைப்படம்) – இயக்கம்: பாலாஜி சக்திவேல், இசை: ஸ்ரீதர் ஜோஷ்வா, ஒளிப்பதிவு: விஜய் மில்டன்

நிறையத் தடவை தமிழ்த்திரைப்படங்கள் பல்வேறு வடிவங்களில் பார்த்துவிட்ட கதையை யதார்த்தத்துடனும் கலைநேர்த்தியுடனும் தரத்துடனும் தந்திருக்கிறார் இயக்குநர். மெக்கானிக்கும் பணக்கார வீட்டுப்பெண்ணுக்கும் ஏற்படும் காதலும் அதைத் தொடர்ந்த விளைவுமே கதை. ஒளிப்பதிவின் உயர்ந்த தரமும் யதார்த்தமும் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் எனலாம். படத்தில் கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளும் க்ளோஸ்-அப் காட்சிகளே. நடிகர்களில் பலர் அறிமுகங்கள்; அவர்கள் மிகவும் இயல்பாக நடிக்கிறார்கள் என்பதால் படத்துடன் எளிதில் ஒன்ற முடிகிறது. படத்தின் முதல் பாதி முழுவதும் மதுரையிலும் இரண்டாம் பாதி முழுவதும் சென்னையிலும் சுழல்கிறது. படத்தின் கதாபாத்திரங்கள் பேசும் மதுரைத்தமிழ், அதிலும் குறிப்பாக கதாநாயகன் பரத் பேசும் மதுரைத்தமிழ் வெகு கச்சிதம். பரத்தின் நடிப்பு கொஞ்சம் கூட எல்லை மீறாமல் ஒரு டூ வீலர் மெக்கானிக்கை அப்படியே கண் முன் கொண்டுவருகிறது. ரிப்பேருக்கு வரும் வண்டியை ஒரு மெக்கானிக் எப்படி ஓட்டுவாரோ அப்படியே ஓட்டுகிறார். மெக்கானிக்கை ஒரு பணக்காரப் பெண் காதலித்தால் வரும் உணர்வுகளை அப்படியே சித்தரிக்கிறார். கதாநாயகி சந்த்யா அறிமுகம் என்கிற சுவடேயில்லை. யதார்த்தமான காட்சிகளில் வெகு இயல்பாகவும் உச்சகட்ட காட்சிகளில் வெகு அழுத்தமாகவும் நடித்து வியப்பில் ஆழ்த்துகிறார். பள்ளி சீருடையில் சிறுமியாகவும் சுடிதார் வகையறாக்களில் பெண்ணாகவும் தெரிகிறார். படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் அவற்றின் தன்மையையும் தேவையையும் உணர்ந்து நடித்திருக்கின்றன. அனைவரும் புதுமுகங்கள் என்பது ஆச்சரியமான விஷயம். பரத்தின் எடுபிடியாக வரும் சின்னப்பயல் அடிக்கும் கமெண்ட்டுகள் அழகு.

இப்படி யதார்த்தத்தைத் தோளில் சுமந்து செல்லும் படம் இடைவேளைக்குப் பிறகு இலேசாகத் தடம் புரள்கிறது. சென்னையில் வரும் மேன்சன் காட்சிகளில் படம் தொய்வடைகிறது. மேன்சன் காட்சிகள் இயல்பாக நடக்கக்கூடியவைதான் என்றாலும் அவை படத்தின் தேவையை விட அதிகமாக இடம் பெற்றிருப்பதால் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. ஸ்டீபனாக நடிக்கும் நடிகர் யாரெனத் தெரியவில்லை. அப்படியே வடிவேல் போலவே இருக்கிறார். அவரின் ப்ளாஷ்பேக் காட்சி நகைச்சுவையாக இருந்தாலும் அவசியமற்றது; நாடக ரீதியானது. அதேபோல் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் அவர் திருமணம் செய்து வைக்க, அதைப் பார்க்கும் மேன்சன் நண்பர் மிக உணர்ச்சிவசப்பட்டு கதாநாயகனையும் நாயகியையும் மேன்சனுக்குக் கூட்டி வந்து, தேவையானதை எல்லாம் செய்து, எல்லோரும் சேர்ந்து ஒரு ஆட்டம் போட்டு, அதில் மேன்சனின் பெருமைகளைப் பட்டியற்படுத்தி….. விக்ரமன் வாசனை. போதாக்குறைக்கு கதாநாயகன் தானும் ஒரு ஆட்டம் போட, அதைப் பார்த்த கதாநாயகி அவரும் ஒரு ஆட்டம் போட்டு, பின் வெட்கப்பட்டு உட்கார்ந்து கொள்கிறார். இரண்டே நிமிடங்கள் வரும் காட்சிதான் என்றாலும் பல படங்களில் பார்த்துப் பார்த்து அலுத்துப்போன, செயற்கையான காட்சியினை, அதுவரை மிக யதார்த்தமாக படத்தை நகர்த்திக்கொண்டிருந்த இயக்குநர் எப்படி அனுமதித்தார் என்ற கேள்வி எழுகிறது.

உச்சகட்ட காட்சிகளில் நிகழும் சம்பவங்கள் சாதாரண வாழ்க்கையில் நாம் காணும் சம்பவங்களே. “சிங்கம்லே” என்று தன் வண்டியில் எழுதி வைத்திருக்கும் ஒரு சாராய வியாபாரியின் மகளை, ஒரு மெக்கானிக் காதலித்தால் என்ன நடக்குமோ அது நடக்கிறது. அந்தக் காட்சியில் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் கூட நடித்திருக்கின்றன. “சில வருடங்களுக்குப் பிறகு” திண்டுக்கல்லில் ஒரு போக்குவரத்து நிறுத்தத்தோடு படத்தை முடித்திருந்தால் அது இன்னும் இயல்பாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம். அதற்குப் பின்னும் ஐந்து நிமிடம் படம் நகர்கிறது. மனிதாபிமானம் மிகுந்த ஒரு மனிதரின் பெருந்தன்மையோடு படம் நிறைவடைகிறது. உண்மைக் கதையை ஆதாரமாகக் கொண்ட கதை என்று இயக்குநர் முதலிலேயே சொல்லிவிடுகிறார். படத்தின் நிறைவுக்காட்சியில் அதே சம்பவத்தை வைத்தே நிறைவு செய்திருக்கிறார்.

படத்தில் எழுத்துப் போடும் காட்சிகளில் ஒவ்வொரு சட்டமாக மதுரையில் இயல்பு வாழ்க்கையைக் காட்டும்போது பரவும் மதுரை வாசம் இறுதிவரை கூடவே வருகிறது. அதிலும் கதாநாயகியின் சடங்குக் கொண்டாட்டங்களில் வரும் மனிதர்களில்தான் எவ்வளவு நிஜம்! இப்படி ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கும் இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஓடிப்போவதை மட்டுமே, அதுவும் செயற்கையாக நாடக ரீதியில் சொல்லிப் பழகிவிட்ட தமிழ்த்திரைப்படச்சூழலுக்கு மத்தியில், இப்படி ஒரு படத்தின் மூலம் ஓடிப்போவதைத் தாண்டியும் பேசியிருக்கிறார் இயக்குநர். அந்த வகையில் இத்திரைப்படத்தை வெறும் பொழுதுபோக்குக்கான திரைப்படம் என்கிற வட்டத்தையும் மீறி சமூக சிந்தனையுள்ள ஒரு திரைப்படம் என்றும் வகைப்படுத்தலாம்.

மிக சில காட்சிகளில் இயக்குநர் இன்னும் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். பல இடங்களில் கதாபாத்திரங்கள் ஒன்றுமே வாயசைக்காமல் இருக்கும்போது பின்னணியில் வசனம் பேசப்படுகிறது. இன்னும் சில காட்சிகளில் கதாபாத்திரங்கள் ஒன்றைப் பேச, வசனமோ இன்னொன்றாக இருக்கிறது. கதாநாயகி பூப்படையும் காட்சியில் வேண்டுமென்றே தண்ணீர் வரும் டேப்பைத் திறப்பதுபோல இருக்கிறது!

இசை (ஸ்ரீதர் ஜோஷ்வா-அறிமுகம்) மோசமில்லை. பாடல்கள் நா.முத்துகுமார். நிறைய வரிகளில் பளிச்சிடுகிறார்.

தரமான திரைப்படம்.

Share

உயிர்த்தெழும் மரம் – கவிதை

காலையில் கண்விழிக்கிறது மரம்

இரவின் மௌனத்திற்குப் பின்

பறவைகளின் கனவுக்குப் பின்

பூமியிறங்கும் பனியுடன்

அன்றைய நாளின் பலனறியாமல்

மரம் இசைக்கும் மௌனமான சங்கீதம்

பறவைகளின் சத்தத்தில் அமிழ்ந்துவிடுகிறது

பெருங்காற்றில் அசையும்போது

விலகும் தாளம், சுருதி பேதத்தை

அதிகாலையில் மீட்டெடுக்கும் மரம்

வாகனங்களின் சத்தத்தில் மீண்டும் தவறவிடுகிறது

முன்பனியில்

அல்லது பின்னோர் மழைநாளில்

உயிர்த்தெழுகிறது

குழந்தைக்கான உத்வேகத்துடன்

இத்தனையின் போதும்

எப்போதும் ஓய்வதில்லை

மரத்தினூடாக நிகழ்ந்துகொண்டேயிருக்கும்

அதன் பேரமைதிக் கச்சேரி

Share

முதலாம் சந்திப்பு – கவிதை

சாதாரண சம்பாஷணையினிடையே

அந்த மூன்றாம் கேள்வியும் கேட்கப்பட்டுவிட்டது.

முதலிரண்டு கேள்விகளுக்குச் செய்தது போலவே

தெரிந்த ஒன்றை சொல்லப் பிரியப்படாதது போன்ற அசைவுகளுடன்

கேள்விகளைச் சுற்றிச் சுற்றி என் மனம்

கேட்போனில் முடிகிறது

கேட்போன் எப்போதுமே

என் பதிலுக்காகக் காத்திராமல்

என் மௌனத்துக்காகவே கேட்கிறானாய் இருக்கலாம்

இந்த சுவாரஸ்யமான ஒருகை “செவ்வி”யின்

அடுத்த கேள்விக்குப் போகுமுன்

ஒரு கேள்வி நான் கேட்கவேண்டியிருக்கிறது

அவன் என்ன சாதியென.

அதன் பின் அச்செவ்வி

மீவேகம் எய்தலாம்

அல்லது

சிநேகபாவம் கூடலாம்

இரண்டில் எந்தவொன்றையும் சரிசெய்யும் என் அடுத்த கேள்வி

அவனின் அடுத்த கேள்விக்கு முன் தயாராகிவிட்டால்

கைகுலுக்கல், சிகரெட், பீர், இன்னபிற என்பதாக நான்.

என்னை வரையறுக்கும் வேகத்தில் அவன்.

இடையில் கிடக்கின்றன

சில சொற்களும்

அவை நிரப்பாமல் விட்ட ஒரு பெரிய பள்ளமும்

இன்னும் பயன்படுத்தப்படாத சில பிரயோகங்களும்.

Share

தினமணி தீபாவளி மலர் – ஒரு பார்வை

தினமணியின் தீபாவளி மலரில் எனக்குத் தேவையில்லாத மற்றும் ஆர்வமில்லாத விளம்பரங்கள், ஆன்மீகத்தலங்கள் பற்றிய கட்டுரைகள், முகப்பரு வராமல் தடுக்க அலோசனைகள், மாடலிங் ரோஜாக்கள் பற்றிய கட்டுரை, ஸ்நேகா மற்றும் பிரகாஷ்ராஜ் பேட்டி, விவேக்கிற்குப் பிடித்த காமெடிக்காட்சிகள் உள்ளிட்ட பலதை நீக்கியபின்பு, புத்தகத்தின் 20/- ரூபாய் மதிப்பில் ஐந்து ரூபாய் மட்டுமே எஞ்சியது போன்ற தோற்றம். அந்த ஐந்து ரூபாய் மதிப்பையும் மதிப்பிற்குரியதாக்கியவை ஜெயகாந்தனின் பேட்டியும் கணபதி ஸ்தபதியின் (என் கற்பனைக்கு எட்டாத, புரிந்துகொள்ள முடியாத!!!) பேட்டியும் ஆ.ரா.வேங்கடாசலபதியின் “பாரதி எழுதத்தவறிய எட்டையபுரம் வரலாறு” கட்டுரையும்.

ஜெயகாந்தன் 2000-ம் ஆண்டு தினமணியின் தீபாவளி மலருக்காக விரிவாகப் பேசியபின்பு, மீண்டும் 2004-ல் தினமணி தீபாவளி மலருக்காக விரிவாகப் பேசியிருக்கிறார். கறாரான பதில்களும் தீர்க்கமான சிந்தனையும் ஜெயகாந்தன் அடிக்கடி இப்படிப் பேசவேண்டும் என்று எண்ண வைக்கின்றன. சில பதில்கள் மகச்சுருக்கமாக அமைந்து, இன்னும் இது பற்றிப் பேசியிருக்கலாமே என்று யோசிக்க வைக்கின்றன.

அவற்றுள் சில இங்கே.

=============================================================

கேள்வி: வீரப்பனைச் சுட்டுக்கொன்றது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமாரும் முதல்வர் ஜெயலலிதாவும் பாராட்டுக்குரியவர்கள். ஆனால், இது நிரந்தரத் தீர்வு அல்ல.

கேள்வி: வீரப்பன் கொல்லப்பட்டதற்கு மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனக்குரல் எழுப்பியிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: சமூகச் சட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர்களுக்கு அரசாங்கத்தாலும் போலீஸாராலும் சட்டத்தாலும் சகமனிதர்களாலும் இழைக்கப்படும் தீமைகளுக்கு நிவாரணம் காண்பதே மனித உரிமை. இந்த உரிமை, சமூகச் சட்டத்துக்கே அப்பாற்பட்ட வீரப்பனுக்குப் பொருந்தாது.

மனித உரிமை பேசுபவர்கள் முதலில், ஆயுதங்கள் மூலம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்ற சித்தாந்தத்தை ஒழிப்பதற்குத் தயாராக இருக்கவேண்டும். அவர்கள் ஏன் சமூக விரோதிகளுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்? இந்தச் சமூகத்தை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டவர்கள் எவரும் சமூக விரோதிகள் அல்லர்.

சமூக மாற்றத்துக்கு, முதலில் சமூக விரோதிகளிடமிருந்து சமூகத்தைக் காப்பாற்ற வேண்டும். அதைத்தான் காந்திஜி செய்தார்.

எனக்கு வீரப்பனைக் கொன்று பிடித்ததே சம்மதம். அவனுக்கும் அதுதான் பெருமை. வீரப்பனை உயிரோடு பிடித்துச் ச்சித்திரவதை செய்திருந்தால் அங்கே மனித உரிமை வராது… அப்படித்தானே! அவனை வீர சொர்க்கத்திற்கு அனுப்பியதால் இவர்கள் புலம்புகிறார்கள்.

கேள்வி: தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததற்கு நீங்கள் யாருக்கு “கிரெடிட்” கொடுப்பீர்கள்?

பதில்: இந்த வீணான காரியத்துக்கு யார் முயற்சி செய்தார்களோ அவர்களுக்கே இந்த வீணான பெருமையும் போய்ச் சேரட்டும். நான் இதற்காக எந்த முயற்சியும் செய்யவில்லை. தமிழ் செம்மொழியாக இருப்பதற்கு என்னாலான காரியங்களைச் செய்திருக்கிறேன். அவ்வளவுதான்.

கேள்வி: தமிழுக்குச் செம்மொழி, சேது சமுத்திரத்திட்டம் போன்ற நெடுங்காலக் கோரிக்கைகள் தில்லியில் தமிழகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இருந்த செல்வாக்கால்தான் நிறைவேறின என்று கருதுகிறீர்களா?

பதில்: இந்த மாதிரி ஒருமித்த ஒற்றுமை எவர் பேரால் வந்தாலும் அது பலமுடையதாகவே இருக்கும். கருணாநிதிக்குப் பதில் ஜெயலலிதா இருந்தால் இது நடக்காமல் போய்விடுமா என்ன?

இந்தக் கூட்டணி ஒற்றுமை பாதுகாக்கப்படவேண்டும். கூட்டணியின் லட்சியம் தனி ஒரு கட்சியின் குரலாக ஒலிக்குமெனில் கூட்டணி உடைந்துவிடும்.

கேள்வி: தமிழ் சினிமா நாயகர்களிடம் பெருகிவரும் “நாற்காலிக் கனவுகள்” பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்: அரசியலுக்கு எங்கிருந்து வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வரலாம்.

கேள்வி: மக்களவைத் தேர்தலுக்கு முன்பு “வாய்ஸ்” விட்ட ரஜினியும் தேர்தலுக்குப் பிறகு கள்ளக்குறிச்சியில் “வாய்ஸ்” கிளப்பிய விஜயகாந்தும் தமிழக அரசியலில் ஒரு சக்தியாக இருக்கிறார்களா… இருப்பார்களா?

பதில்: அவர்களெல்லாம் இருக்கவும் முடியாது; இருக்கவும் கூடாது.

கேள்வி: எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வரவில்லையா.. அதுபோலத்தான் இவர்களும் என்று சிலர் வாதிடுகிறார்களே..?

பதில்: எம்.ஜி.ஆர். மாதிரி அல்ல இவர்கள்.

கேள்வி: இவர்கள் எங்குச் சென்றாலும் கூட்டம் அலைமோதுகிறதே?

பதில்: கூட்டம் ஓட்டு அல்ல.

கேள்வி: பகவத்கீதை சர்ச்சையில் உங்கள் நிலை என்ன?

பதில்: பகவத்கீதையைச் சூழ்ச்சி என்பாரோடு எனக்கு உடன்பாடில்லை.

இந்தியாவில் இருக்கும் எல்லாரும் திருக்குறளை ஏற்றுக்கொண்டார்களா? யார் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் அது உலகப்பொதுநூல். அவ்வாறே பகவத்கீதையும். இது புரியாதவர்களுக்குப் பிறர் மரியாதையும் தெரியாது; சுயமரியாதையும் கிடையாது.

எல்லோரையும் ஒன்றுபடுத்துவதுதான் இயக்கம். பேதப்படுத்துவது இயக்கத்துக்கு எதிரானது.

கேள்வி: ஒரு கூட்டத்தில், “ஜெயமோகன் என் ஆசான்” என்று நீங்கள் ஒரு பொருளில் சொல்ல, அதை வேறு மாதிரி புரிந்துகொண்டு சிலர் “ஜெயமோகனின் லேட்டஸ்ட் சிஷ்யர் ஜெயகாந்தன்” என்று எழுதினார்களே… கவனித்தீர்களா?

பதில்: எனக்கு ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகத்தின் பொருள் தெரியவில்லை. ஜெயமோகனின் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது எனக்கு அந்தப் பொருள் தெரிந்தது. தெரியாததை அவர் மூலம் தெரிந்துகொண்டதால், எனக்கு அவர் ஒரு வகையில் ஆசான் என்று சொன்னேன்.

என் காலத்தில் எவ்வளவோ எழுத்தாளர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எனக்குப் புகழ்ச்சியான கருத்துகளும் உண்டு. ஆனாலும் அவர்களைப் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றவில்லை. ஜெயமோகன் அந்த வேலையைச் செய்திருக்கிறார். நான் செய்ய விரும்பி, செய்யாத காரியத்தை அவர் செய்திருக்கிறார். அதனால் அவர் மீது ஒரு அபிமானம் வருமல்லவா…? அதனால்தான் அப்படிச் சொன்னேன்.

சில விசயங்களைக் குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொண்டால் கூட நான் நன்றியோடு இருப்பேன். இது என் நல்ல குணத்தின் அடையாளமே அன்றி வேறில்லை.

எல்லாரையும் நான் திட்டிதான் கேட்டிருப்பார்கள் போலும். நான் ஒருவரைப் புகழ்ந்து பேசுவது மற்றவர்களுக்குப் பொறாமையாகவும் இருக்கக்கூடும்.

கேள்வி: தமிழில் என்ன படித்தீர்கள்?

பதில்: கி.ரா.வின் முன்னுரைகள் படித்தேன்.

ஜெயமோகன் அவரது “ஏழாம் உலகம்” புத்தகத்தை எனக்கு அர்ப்பணித்திருந்ததால் அனுப்பியிருந்தார். அதையும் படித்தேன்.

கேள்வி: “ஏழாம் உலகம்” எப்படி இருந்தது?

பதில்: நோ கமெண்ட்ஸ்.

கேள்வி: அப்படியென்றால்…?

பதில்: ஒரு பேட்டியில் சொல்வது போலக் கருத்து ஏதும் இல்லை.

==================================================================

[இந்தப் பேட்டியில் இடம்பெற்றிருந்த இன்னும் சில கேள்விகளை இந்தச் சுட்டியில் காணலாம். முழுவதும் படிக்கவேண்டுமானால் தினமணி தீபாவளி மலர் வாங்கவும். 🙂 ]

இன்னும் பல கேள்வி-பதில்களைக் கொண்டிருக்கிறது ஜெயகாந்தனின் பேட்டி. அரசியலுக்கு எங்கிருந்து, யார் வேண்டுமானாலும் வரலாம் என்றவர் உடனே ரஜினியையும் விஜயகாந்தையும் நிராகரித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் மாதிரி அல்ல அவர்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே அரசியலையும் சேர்த்துச் செய்யும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை ஆதரிக்கிறார் என்று கொண்டால், இப்போதைய அரசியல் சூழலில், இதுவரை எந்தவொரு கட்சியிலும் நேரடி அரச்¢யல் செய்யாத எவரும், விஜய்காந்த் மற்றும் ரஜினி உட்பட, அரசியலுக்கு வருவதில் பெரிய தவறேதுமில்லை என்பதே என் எண்ணம். 🙂

ஜெயமோகனின் ஏழாம் உலகத்தை முற்றிலும் ஜெயகாந்தன் நிகாரித்திருப்பது ஆச்சரியத்திற்குரியது. ஜெயமோகனின் மற்ற நாவல்களில் உள்ள வீச்சும் ஆழமும் அடர்த்தியும் ஏழாம் உலகத்தில் இல்லையென்றாலும் படித்த முடித்தவுடன் மனதில் ஒரு பாரத்தை ஏற்றி வைக்கும் நாவல் என்கிற வகையிலும் அதன் காட்சி இதுவரை எந்த ஒரு நாவலும் இவ்வளவு விஸ்தாரமாகப் பதிவு செய்யாதது என்கிற வகையிலும் ஏழாம் உலகம் புறக்கணித்தக்கதல்ல என்பது என் எண்ணம்.

சில கவிதைகளும் பிரசுரமாகியிருக்கின்றன. எப்போதும் நன்றாக இருக்கும் அ.வெண்ணிலாவின்கவிதைகள் இந்தமுறை (நதி) கவனத்தை ஈர்க்காமல் வேகவதி நதியின் அவலத்தைப் பற்றிச் சொல்கிறது. மற்றக் கவிதைகளும் இத்தகையனவே.

அசோகமித்திரன் எழுதியிருக்கும் (“இருமுடிவுகள் கொண்டது”) சிறுகதை, தலைப்பையும் கதை செல்லும் பாதையையும் வைத்து முடிவை யூகிக்கக்கூடியதாகவும், கதை சொல்லும் திறனிலும் அழகான நடையிலும் தன்னைத் தற்காத்துக்கொள்ள முயற்சித்துத் தோற்றுப்போவதாகாவும் இருக்கிறது. வண்ணத்துப்பூச்சிகளின் தேசம் சிறுகதை, சிறுவயதில் வேலைக்குச் செல்லும் ஒரு சிறுவனின் வலியைச் சொல்லும், அநேகம் முறை அரங்கேற்றப்பட்டுவிட்ட கதைக்களந்தான் என்றாலும், அதன் நடையில் தேறுகிறது. “சொல்லாமல் பெய்யும் மழை” ‘அத்தைப்பாட்டி’க்கதை. கசப்புக் குப்புசாமியின் மொழிபெயர்ப்புக் கதையும் (கண்ணீர்ப்பசு) வறுமையை அதீதமாகச் சொல்லி செயற்கைத்தனத்தை மட்டுமே கொண்டுவருகிறது.

தீபாவளி மலரின் கட்டுரைகளில் மிக முக்கியமானதும் ஆழமாக அலசப்பட்டிருப்பதும் ஆ.இரா.வேங்கடசலபதியின் “பாரதி எழுதத்தவறிய எட்டயபுரம் வரலாறு”. பாரதி எட்டயபுரம் ஜமீனுக்கு “வம்சமணி தீபிகை”யைப் (எட்டயபுரம் வரலாற்றைச் சொல்லும் நூல்) புதுக்கித் தர இசைந்து அதற்காக கைம்மாறு வேண்டும் கடிதத்தையும், “வம்சமணி தீபிகை”யும் முன்வைத்து அதைச் சுற்றி ஆராயப்பட்டிருக்கும் கட்டுரை வடிவம் இது. ஆகஸ்ட், 6, 1919-ல் எழுதியிருக்கும் அக்கடிதத்தில், எட்டயபுரம் ஜமீனை “சந்நிதானம்” என்றும் “கைம்மாறு விஷயம் சந்நிதானத்தின் உத்தரவுப்படி” என்றும் “சந்நிதானத்தை” விளிக்கும்போது “ஸ்ரீமான் மகாராஜ ராஜ பூஜித மஹா ராஜ ராஜஸ்ரீ எட்டயபுரம் மஹாராஜா” என்றும் எழுதுகிறான் பாரத்¢. “சின்னச் சங்கரன்” கதையை “வம்சமணி தீபிகை”யின் பகடி நூலாகக் காட்டும் கட்டுரையாசிரியர், பாரதி பின்னாளில், அதே “வம்சமணி தீபிகை”யைப் புதுக்கித் தர இசைந்ததும், அதற்காகக் கைம்மாறு வேண்டியும், “சந்நிதானம்” என்றும் விளித்தும், அரசாங்க பாடசாலைகளில் அதைக் கல்வியாக வைக்கலாம் என்று ஆசை வார்த்தை சொல்லியும் நிற்கும் அவலத்தைச் சுட்டிக்காட்டுகிறார். அதே கடிதத்திலும், அந்தச் சூழலிலும், பாரதியின் “வரவழைத்துக்கொண்ட” பணிவையும் மீறி அவனது நம்பிக்கை வெளிப்படுவதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். [பாரதி, “தமிழ் மொழிக்கொரு மேன்மையும் பொருந்திய சரித்திர நூலும் சமையும்” என்கிறான்.] “வம்சமணி தீபிகை” பாளையக்காரர்களைக் கொள்ளைக்காரர்களாகச் சித்தரித்து, கும்பினிக்காரர்களால் இந்தியா பெற்ற மேன்மையைப் போற்றும் விதமாகச் “செய்யப்பட்ட” ஒரு வரலாற்று நூல். ஏகப்பட்ட பிழைகளுடன் இருக்கும் அந்நூலைப் புதுக்கித் தரவே பாரதி முன்வந்திருக்கிறான். அதைச் செய்யாமல் போனது பாரதியின் அதிர்ஷ்டமா, அல்லது அவன் சொன்னது போல் தமிழ்மொழிக்கொரு “மேன்மையும் கீர்த்தியும் தரும்” ஒரு வரலாற்று நூல் அவனால் எழுதமுடியாமல் போனது துரதிர்ஷ்டமா என்பது விடைகாணமுடியாத கேள்வி. கட்டபொம்மனைப் பற்றி எங்குமே குறிப்பிடாத பாரதி இந்நூலை எழுதியிருந்தால் அக்குறை நீங்கியிருக்கும் என்றும் சொல்கிறார் கட்டுரையாசிரியர். மிக நல்ல கட்டுரை.

கணபதி ஸ்தபதியின் செவ்வி, வடநாடு என்பது வட இந்தியா இல்லை என்றும் அது தமிழ்நாடே என்றும் சொல்கிறது. வரலாறு என்பது குமரிக்கண்டத்திலிருந்து எழுதப்படவேண்டும் என்றும் அதனால் தமிழ் முதன்மை பெறும் என்றும், வரலாறு “பிரளயத்திற்கு முன், பிரளயத்திற்குப் பின்” என்றே வகைப்படுத்தப்படவேண்டும் என்கிறது. கடவுளைப் படைத்த பெரும் விஞ்ஞானியாக மயன் முன்வைக்கப்படுகிறார். மயனை முன்வைத்தே அவரது வேலைகள் நடைபெறுவதாகவும் மயனுக்கு நினைவுமண்டபம் எழுப்புவதும் பெரியாருக்குச் சிலை வைப்பதும் அடுத்தக்கட்டத் திட்டமாகச் சொல்லும் ஸ்தபதி, அவரது கைவண்ணத்தில் அமைந்த “வள்ளுவர் கோட்டம்”, “திருவள்ளுவர் சிலை”, “பூம்புகார் மணிமண்டபம்” ஆகியவற்றிற்கு ராயல்டி கேட்கிறார்! இது எத்தனைத்தூரம் சரி என்பது புரியவில்லை. கருணாநிதிக்காவும் திருவள்ளுவருக்காகவும் காசு வாங்காமல் வேலை செய்ததாகச் சொல்லும் ஸ்தபதி இப்போது ராயல்டி கேட்பது சட்டரீதியாகச் சரியானதுதானா என்பது தெரியவில்லை.

தீபாவளி மலரில் ஓவியர் பத்மவாசனின் கைவண்ணத்தில் ஹிந்துக்கடவுளர்களின் ஓவியங்கள் இருக்கின்றன. திருமணியின் புகைப்படக்களஞ்சியம் மக்கள் மறந்துபோன, மறந்துகொண்டிருக்கின்ற, கைவிட்டுக்கொண்டிருக்கிற பழங்காலப் பழக்கங்களையும் கருவிகளையும் கண்ணுக்குத் தருகிறது. சில ஓவியங்கள் வெகு அழகு. வண்ணத்தில் பார்க்கக்கிடைத்தால் மிக அற்புதமாக இருந்திருக்ககூடும். இணையத்தில் இப்புகைப்படங்களைத் “தினமணி” வெளியிடுமா எனத் தெரியவில்லை. அடுப்புக்கரியால் பல்துலக்கும் பெண்மணியும், ஒரு பக்கம் மட்டுமே தட்டுகொண்ட தராசும் (தூக்கு), நடப்பட்டிருக்கும் குச்சிகளில் அலுமினியப்பாத்திரங்கள் காயும் அழகும், கல்லால் வடிவமைக்கப்பட்ட திரிகை (துவரை, பச்சைப்பயறு, உளுந்து போன்றவற்றை உடைக்கப் பயன்படும் கருவி)யும் பழைய நினைவுகளை நமக்குள் எழுப்பிவிடுகின்றன.

எல்லாவற்றையும் கலந்து எல்லாத்தரப்பையும் திருப்தி செய்யும் நோக்கில் செயல்பட்டிருப்பது புரிந்தாலும், நடிகர்களுக்குத் தரப்பட்டிருக்கும் அதிகப் பக்கங்களைக் குறைத்து, இன்னும் கொஞ்சம் கூடுதல் பக்கங்களை இலக்கியத்திற்கு ஒதுக்கியிருக்கலாம்.

Share

மௌனம் – கவிதை

நமதே நமதான நம் மௌனம்

படுக்கை அறையின் தடுப்பைத் தாண்டிய போது

தன்னைச் செறிவாக்கிக்கொண்டது

மூன்றாம் கட்டைக் கடந்தபோது

கொஞ்சம் கூர்மையாக்கிக்கொண்டது

சமையலறையைத் தாண்டியபோது

நிறம்கூட்டிக்கொண்டது

செறிவான, கூர்மையான, கடும் நிறத்துடன் கூடிய மௌனம்

பின்வாசலைக் கடக்குமுன்

அதைப்பற்றிய பிரக்ஞையில்லாமல்

நானோ நீயோ

என்னையோ உன்னையோ தொடாமல்

ஜன்னலுக்கு வெளியில் அலையும்

ஒன்றுமில்லாத ஒன்றை ஊன்றிக்கவனித்துக்கொண்டிருக்கிறோம்

அதற்குள் இன்னொரு மௌனம் தலைதூக்கிவிடும் அபாயத்தை அறிந்தும்

தூங்கிக்கொண்டிருக்கிறது

நமதே நமதான ஆசைகளும், வெளிர் நீல வெளிச்சத்தில் நிர்வாணங்களும்;

அப்போது

அங்கே

உருவாகிவிட்டிருந்த, சீக்கிரம் வெடிக்கப்போகிற

பலூனின் வாழ்நாளில் அமிழ்ந்திருக்கிறது

நம் தன்முனைப்பின் ஆழமான அடையாளங்கள்

Share

கண்ணாடி – கவிதை

எப்போதும் எதையாவது

பிரபலித்துக் கொண்டிருக்கிறது

சில நேரங்களில் தேவையானதை

பல நேரங்களில் தேவையற்றதை

அன்றொருநாள் உள்நுழைந்த குருவியொன்று

இரண்டே நொடிகளில் சட்டென தரைதட்டியது

இரத்தச் சிதறல்களுடன்

கண்ணாடியில்தான் பார்த்தேன்

பின்பொருசமயம்

தங்கை அவசர அவசரமாய்

என் நண்பனுக்கு முத்தம் கொடுத்துப் போனாள்

செய்வதறியாமல் சலனங்களின்றி நானும் கண்ணாடியும்

இன்னொரு சமயம்

போர்வை கசங்கும் என் முதல் வேகத்தில்

ஒருவரை ஒருவர் விழுங்கிக்கொண்டிருந்தபோது

கண்ணாடி பார்த்துக்கொண்டிருந்ததை

நான் பார்த்தேன் கொஞ்சம் லஜ்ஜையோடு

இந்தக் கண்ணாடி அலுப்புக்குரியது

கால நேரங்களின்றி கட்டுப்பாடின்றி

பிரதிபலித்து பிரதிபலித்து

நாம் பார்க்காத நேரங்களில்

கண்ணாடி பிரதிபலிப்பதில்லை என்ற

புனைவை ஏற்றி வைத்தேன்

குறைந்தபட்சம் என் சுவாரஸ்யத்திற்காகவேணும்

Share

பழைய போட்டோ – கவிதை

கருப்பு-வெள்ளை வழுக்கைத்தலையரின்

விவரம் தெரியவில்லை யாருக்கும்

அம்மா யோசித்துக்கொண்டேயிருக்கிறாள்

அவர் சவால் விட்ட மேனிக்கு

கைகளைக் குறுக்கக் கட்டி

ஒரு சிரிப்பையும் சிந்தி.

முன்னும் பின்னும் தேடியதில்

ஒரு விவரம், மித்ரா ஸ்டூடியோ.

அம்மா முனகினாள்

அவர் வீட்டிலேயே மறந்திருப்பார்களென

மறுநாள் ·பிரேம் போட்டு

நடுக்கூடத்தில் மாட்டி வைத்தேன்

அம்மா மித்ரா ஸ்டூடியோவின்

நினைவுகளைச் சொல்லத் தொடங்கினாள்.

Share

பின்தொடரும் பூனைகள் – சிறுகதை

ஹையோ, புஸி எத்தன அழகு
புஸ¤புஸ¤ன்னு
லைட் எரியுற கண்ணோட
அப்படியே கட்டிக்குவேன்
பூனை என் செல்லம்

(வெங்கட், இரண்டாம் வகுப்பு, சித்ரா மெட்ரிகுலேஷன் பள்ளி)

ன்னை விடாது தொடரும் பூனைகள் போலவே நீங்களும் என்னைப் பின்தொடரப்போகிறீர்கள். இப்போது என்னுடன் என் எழாம் வயதில் இருக்கிறீர்கள்.

முதல் பூனை

என் பாட்டிக்குப் பூனை என்றாலே பிடிக்காது. அதன் உடலிலிருந்து உதிரும் மயிர் வீட்டிலுள்ள குழந்தைகளுக்குப் பல நோய்களை உண்டாக்கும் என்று சொல்லுவாள். பாட்டியின் செல்வாக்கை மட்டுப்படுத்தி வைப்பதில் என் அம்மா அதிக அக்கறை எடுத்துக்கொள்ளுவாள். வீட்டில் பூனையை வளர்க்க, பாட்டிக்குப் பிடிக்காது என்ற ஒரு காரணம் என் அம்மாவிற்குப் போதுமானதாய் இருந்தது. ஆனாலும் அம்மா என்னைப் பூனையின் பக்கத்திலேயே அண்ட விட மாட்டாள். என் அக்கா மட்டும் எந்தவிதத் தடையுமில்லாமல் பூனையைக் கொஞ்சுவாள். அதைப் பார்க்கும்போது என்னுள் ஏக்கம் பரவும்.

ஏனோ இந்தப் பூனை என்னை ஈர்க்கிறது. சாம்பல் நிறக்கோடுகளுடன் புசு புசுவென உரோமங்களுடன் முன் வலது காலை எச்சில்படுத்தி முகத்தைத் துடைக்கும் அழகைப் பார்க்கும்போது பூனையை அள்ளிக் கொஞ்சத் தூண்டும். மடக்கி வைக்கப்பட்ட படுக்கை விரிப்புகளில் நான்கு கால்களையும் மேலே தூக்கி பூனை ஆழ்நித்திரையில் இருக்கும்போது அது அறியாமல் பதுங்கிச் சென்று முகத்தை வைத்துப் பூனையை அழுத்திக் கொஞ்ச வெகுநாளாக எனக்கு ஆசை.

நான் பூனையின் அருகில் சென்றாலே யாராவது பார்த்துவிடுவார்கள். சமையலறையின் சன்னல் வழியாக அக்கா பார்த்துக் கத்துவாள். பாட்டி புலம்பத் தொடங்குவாள். பெரிய பிரளயத்துக்குப் பின் பூனை ஏகப்பட்ட வசவுகளைப் பெறுவதோடு அன்றைய தினம் கழியும்.

வீட்டில் யாருமே இல்லை என்று ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு கொஞ்சச் செல்லும்போது பூனை இல்லாது போனதுமுண்டு.

இன்னும் சில சமயங்களில் நானே வாய்ப்பைக் கெடுத்துக்கொள்வேன். கொஞ்சம் அதீத ஈடுபாட்டுடன் கொஞ்சிவிடுவேன். பூனை மிகுந்த பயத்துடன் கொஞ்சம் கோபம் கலந்து புதுமாதிரியாகக் கத்தும். அந்தச் சத்தத்தை வைத்தே நான் பூனையைக் கொஞ்சுகிறேன் என்று அக்கா கண்டுபிடித்துவிடுவாள். பாட்டி, “அந்தச் சனியனைக் கொண்டு போய் விட்றுங்கடான்னா யாரு கேக்குறா? நா என்ன சொன்னாலும் எனக்கு எதிரா செய்யணும் அவளுக்கு..” என்று பூனையையும் என்னையும் விட்டுவிட்டு அம்மாவை வையத்தொடங்குவதோடு அன்றைய தினம் முற்றும்.

இப்போது வீட்டில் யாரும் இல்லை. என்னைப் பார்த்தவுடனே ஓடும் பூனை இன்று கொஞ்சம் நட்பு கலந்த குரலில் மிக மெலிதாக “மியாவ்” என்றது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தினம் பால் ஊற்றும் அக்கா இன்று மறந்துவிட்டாள் என்பதை யூகித்தேன். பூனை பசியிலிருக்கிறது. சமையலறையில் பாலைத் தேடி எடுத்துக்கொண்டுவந்து அதன் கிண்ணத்தில் ஊற்றினேன். சிறிது தயக்கத்திற்குப் பின் பருகத் தொடங்கியது. நாக்கு பாலை நக்கிக்கொண்டிருந்தாலும் அதன் கண்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது. அதிக ஈர்ப்புச்சக்தியுள்ள கண்கள். கரும்பச்சை நிறத்தில் அதன் கண்களைப் பார்க்கும்போது நான் என் வசமிழக்கத் தொடங்கினேன். மெல்ல பூனையை நெருங்கினேன். அது பால் குடிப்பதை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு மீண்டும் குடிக்கத் தொடங்கியது. அதனருகில் அமர்ந்து தலையைத் தடவிக்கொடுத்தேன். மெல்லிய சத்தத்தில் அது உறுமுவது கேட்டது. நான்கைந்து முறைத் தடவிக்கொடுக்கவும் இயல்பாகி என் கைகளை உரச ஆரம்பித்தது. எனக்கு மிகுந்த சந்தோஷமாயிருந்தது. நாளை முதல் என்ன ஆனாலும் பூனைக்கு நான்தான் பாலூற்றவேண்டும் என நினைத்துக்கொண்டேன். அக்கா வரும்போது பூனை என்னைக் கொஞ்சுவதைப் பார்த்து ஆச்சரியப்படவேண்டும் என்ற என் எண்ணம் உறுதிப்படத் தொடங்கியது.

பூனையும் நானும் வெகு விரைவில் நண்பர்களானோம்.

தினம் காலையில் பூனைக்குச் சன்னதம் பிடித்த மாதிரி ஒரு பரபரப்புத் தொற்றிக்கொள்ளும். சமையலறையிலிருந்து ரேழிக்குப் பாயவும் ரேழியிலிருக்கும் கதவு வழி மேலேறி சேந்திக்குச் செல்லவும் அங்கே இருந்து கீழே குதிக்கவும் அதன் அட்டகாசம் சொல்லி மாளாது. நான் கையில் சிறிய குச்சியையோ அல்லது அம்மாவின் படுக்கையறையில் வாடிப்போய்க் கிடக்கும் பூநாரையோ எடுத்துக்கொண்டு ஆட்டுவேன். தூரத்திலிருந்து அதைப் பார்க்கும் பூனை பதுங்கிப் பதுங்கி நடக்கத் தொடங்கி ஓடிவந்து என் கையில் தாவும். ஒரு கட்டத்தில் மூச்சு வாங்கிச் சாயும். இரண்டே நிமிடத்தில் ஆர்வம் தாங்காமல் மீண்டும் பரபரப்பாக ஓடத் துவங்கும். பூனையின் காலை நேரங்கள் எனக்கு மிக உவப்பானவை. சில சமயங்களில் அக்கா நான் அன்றைய வீட்டுப்பாடத்தை எழுதாமல் பூனையுடன் விளையாடுகிறேன் என்று போட்டுக்கொடுப்பாள். அவளுக்குப் பொறாமை என நினைத்துக்கொள்வேன். அவளிடமும் சொன்னேன். மிகுந்த அலட்சிய பாவத்தோடு “பூனை உங்கூட வெளயாட மட்டுந்தான் செய்யும். ஆனா அதுக்கு நெசமாலுமே எம் மேலத்தான் பாசம்” என்றாள். அவள் அகந்தைக்குச் சிகரம் வைக்கிற மாதிரி ஒரு நாளும் வந்தது.

இரவில் ·பேனின் சத்தம் கர்ண கொடூரமானதாய் இருக்கும். கொஞ்சம் பெரிய மனுஷ தோரணையில் “அந்தச் சத்தம் இல்லைன்னா தூக்கம் வரமாட்டேங்குது” என்பாள் அக்கா.

அவள் உறங்கும்போது பார்க்கவே எனக்குப் பயமாய் இருக்கும். பாதிக்கண் திறந்து தூங்குவாள். வயதை மீறிய வளர்ச்சி அவளுக்கு என்று பக்கத்துவீட்டு லட்சுமணன் அவன் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. சில தினங்களுக்கு முன்பு காலையில் வழக்கம்போல் பூனையுடன் விளையாட முனைந்தபோது அக்கா திட்டினாள். இனிமேல் பூனையுடன் அப்படி விளையாடக்கூடாது என்று சொன்னாள். அதற்கான காரணங்களைச் சொல்ல முற்றிலும் மறுத்துவிட்டாள். பாட்டியும் கூட, “பூனை பாவம், அதை உபத்திரவிக்காதே!” என்று சொன்னது ஆச்சரியமாக இருந்தது. பூனையும் வழக்கத்திற்கு மாறாக பரபரப்பில்லாமல் அமைதியாக இருந்தது. கடந்த சில நாளாகவே பூனையிடம் காலை வேளைகளில் பரபரப்பில்லை என்றாலும் இன்று அதன் அமைதி அளவிற்கு அதிகமாக இருப்பதை உணர்ந்தேன். யோசிப்பினிடையே தூக்கம் வரத் தொடங்கியது.

காலையில் வீட்டில் ஏகத்திற்கும் பரபரப்பு. ஆளாளுக்கு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. யாரிடமாவது கேட்டாலும் பதில் சொல்வார்கள் என்று தோன்றவில்லை. அக்கா ரேழியில் இருக்கும் கட்டிலில் உட்கார்ந்துகொண்டு கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்துக்கொண்டிருந்தாள். நானும் சென்று கட்டிலில் உட்கார்ந்துகொண்டேன். என்றைக்கும் இல்லாமல் அக்கா மீது பாசம் வருவதுபோல உணர்ந்தேன். உடனடியாக அதை மறுக்கவும் செய்தேன். அவளைத் தொட்டு அக்கா என்று அடிக்குரலில் கூப்பிட்டேன். நிமிர்ந்து பார்த்தாள். பார்த்த மறுவினாடி சொன்னாள்.

“நாந்தான் சொன்னேன்ல.. பூனைக்கு எங்கிட்டத்தான் பாசம் ஜாஸ்தின்னு.. நேத்து அது குட்டிப் போட்டிச்சு தெரியுமா.. உனக்கெங்க தெரியும். படுத்தா சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம பாதி வாயத் தொறந்துக்கிட்டு எச்சி ஒழுகிக்கிட்டு தூங்கத்தான் தெரியும்.. நேத்து நைட் பூனை வந்து என்னை முட்டி முட்டி எழுப்பிச்சு.. நாந்தான் கட்டிலுக்குக் கீழ இடம் ஒழிச்சுக் கொடுத்தேன். அழகா நாலு குட்டி போட்டுருக்கு.. பூனை உன்னை எழுப்பலை. என்னைத்தான் எழுப்பிச்சு.. தெரிஞ்சுக்கோ . இல்ல பாட்டி..” என்று பாட்டியையும் துணைக்கழைத்தாள். பாட்டி, “இந்த விஷயம்லாம் பொண்ணுங்களுக்குத்தான் புரியும்னு பொம்பளைப் பூனைக்குக் கூடத் தெரிஞ்சிருக்கு.. அவனுக்கு என்ன தெரியும். நீ அவனை சும்மா சீண்டாத” என்றாள்.

கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்தேன். கருஞ்பச்சைக் கண்களுடன் இரண்டு முன்னங்கால்களை முன்னே நீட்டி, பின்னங்கால்களைப் பின்னே நீட்டி, பக்கவாட்டில் சாய்ந்து படுத்திருந்தது. மூன்று குட்டிகள் பால் குடித்துக்கொண்டிருந்தன. ஒரு குட்டி மடியைத் தேடிக்கொண்டிருந்தது. நான்கு குட்டிகளும் கண் திறக்கவில்லை. தாய்ப்பூனை பெரிய சாகசத்திற்குப் பின் ஓய்வெடுக்கும் வீரன் மாதிரி சத்தம் இல்லாமல் மியாவ் என்று வாயை மட்டும் அசைத்தது. சாம்பல் நிறக்கோடுகளாலான புசுபுசுவென்று இருக்கும் அப்பூனையை ஏனோ என் ஆழ்மனதிலிருந்து வெறுத்தேன்.

எழாம் வயதில் நடந்த சம்பவங்களைத் தொகுத்துச் சொன்னதன் களைப்பை மீறி உங்களை என் பதினைந்தாம் வயதிற்கு அழைத்துச் செல்கிறேன்.

இரண்டாம் பூனை

பூனைகளை நம்பாதீர்கள் தோழர்களே
அவை ஆழ்மன அழுக்கின் சின்னங்கள்
உலகம் பெற்ற சாபத்தால்
பிறந்துவிட்ட சைத்தான்கள் பூனைகள்
பூனைகளின் கண்கள்
சைத்தான் கைகளிலிருக்கும் அப்பம்
அது உங்களை அவைபால் ஈர்க்கும்
நான் சொல்கிறேன் கேளுங்கள்
ஓ தோழர்களே
பூனைகளை நம்பாதீர்கள்
(வெங்கட், பத்தாம் வகுப்பு, ம.தொ.நல ஒன்றிய மேல்நிலைப் பள்ளி)

யதுக்கு மீறி வளர்ந்திருந்த அக்கா வயதுக்கு மீறிய காரியம் ஒன்றைச் செய்தாள். பக்கத்துவீட்டுக் கோவிந்தனுடன் ஓடிப்போனாள். வீட்டில் எல்லோரும் அக்காவைத் திட்டித் தீர்த்து அழுது புரண்டார்கள். “ஒரே பேத்தி.. வயத்துல சுமந்துக்கிட்டு இருக்கா.. அவளைப் பார்க்க ஒரு நாதி இல்ல.. நா ஏன் இன்னும் சாகாம இருக்கேனோ” என்ற பாட்டியின் புலம்பலைத் தொடர்ந்து, அதற்காகவே காத்திருந்த மாதிரி, எல்லோரும் மனம் கனிந்து அக்காவை வீட்டுக்குக்குள் ஏற்றினார்கள். வயிற்றைத் தள்ளிக்கொண்டு வந்த அக்கா என் மேல் அளவு கடந்த பாசத்தோடு என்னிடம் அத்தானின் புகழைப் பாடுவாள். நான் பதில் சொல்லாமல் கேட்டுக்கொள்வேன். “நாலு வருஷத்துக்கு முன்னாடியே உன்ன வயசுக்கு மீறின வளர்ச்சின்னான் கோவிந்தன்” என்று நான் சொல்லவில்லை.

திடீரென ஒருநாள், “பூனையில்லாமல் வீடு வெறிச்ன்னு இருக்கு” என்று சொல்லி ஒரு பூனையை வீட்டுக்குள் கொண்டு வந்தாள். அத்தான் கோவிந்தன் சம்பந்தமே இல்லாமல் “பூனை ரொம்ப அழகு. உன்னை மாதிரியே” என்று சொல்லி வைத்தான்.

ஐந்து வயதில் என் மனச்சித்திரத்தில் உறைந்து போன பூனைக்கும் இதற்கும் அதிக வித்தியாசங்களில்லை. சாம்பல் நிறக்கோடுகள். கரும்பச்சைக் கண்கள். வெள்ளை நிறத்தில் மீசை. ஆனால் மடியில்லை. ஆண் பூனை. பூனைகளை நம்பக்கூடாது என்று எத்தனையோ முறை மனதுக்குள் சொல்லிக்கொண்டாலும் அதன் விளையாட்டில், அழகில் மெல்ல நான் என் நம்பிக்கையை இழந்தேன்.

இப்போது யாரும் என்னைத் தடுக்கவில்லை. என் இஷ்டப்படி பூனையுடன் விளையாடினேன். பூனைக்குப் பெயர் ஏதும் வித்தியாசமாக வைக்காமல் புஸி என்று அழைத்தோம். அது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது கூட நான் “புஸி, பாஸ்! பாஸ்! பாஸ்!” என்றழைத்தால் தூக்கத்தைக் கலைந்துவிட்டு ஓடி வரும். நான் எப்போது அழைத்தாலும் அதற்கு எதாவது தின்னக்கொடுப்பேன் என்று புரிந்துவைத்திருந்தது.

என் கண்டிப்பும் அதற்குப் புரிந்திருந்தது. “ஏய்!” என அதட்டினால், தான் ஏதோ தவறு செய்கிறோம் எனப் புரிந்துகொண்டு அமைதியாகும். என் செருப்புச் சத்தம் கேட்கும்போதே சத்தமில்லாமல் வந்து காலை உரசும். அரைக்கண்ணைத் திறந்து வாலை செங்குத்தாக மேலே தூக்கி காலை உரசினால் அது கொஞ்சுகிறது என்று புரிந்துகொள்வேன். என் அக்காவிற்குப் பூனையைக் கொஞ்சுவதை விடவும் முக்கியமான வேலை அத்தானைக் கொஞ்சுவது. அதனால் பூனையை மறந்துவிட்டிருந்தாள்.

எப்போதுமே காலம் ஒரே போல் இருந்துவிடுவதில்லை. இதை மிகுந்த துயரத்துடன் சொல்கிறேன்.

வரண்டாவில் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தேன். பெரிய வராண்டா. இரண்டு மரத்தாலான தூண்கள் உண்டு. பூனை காலை நேரத்தில் வெறி பிடித்த மாதிரி விளையாடும்போது இந்தத் தூண்களில் ஏறி இறங்குவது வழக்கம். ஒரு தூணின் பின்னிருந்து தரையோடு தரையாக பூனையின் வால் ஒன்று அசைந்தது போல இருந்தது. புஸியின் பழக்கப்பட்ட சாம்பல் நிற வாலாகத் தெரியவில்லை. இருந்த இடத்திலிருந்து தலையை நீட்டி தூணின் அந்தப் புறம் பார்த்தேன். ஏதோ ஒரு வெள்ளைப்பூனையின் மேலே புஸி படுத்திருந்தது. வெள்ளைப்பூனையின் வால் வெண்மையும் சாம்பலும் கலந்த நிறத்தில் இருந்தது. புஸியின் வாய் வெள்ளைப்பூனையின் உச்சந்தலையைக் கவ்விக்கொண்டிருந்தது. புஸி தன் கால்களால் வெள்ளைப்பூனையைப் இறுக்கப்பிடித்துக்கொண்டிருந்தது. லேசான உறுமலையும் கேட்டேன். பொறி தட்டவும் புஸியின் அநாகரீகச் செயலில் கோபம் கொண்டு கையிலிருந்த நோட்டால், ஏய் என்று அதட்டிக்கொண்டே ஓங்கி அடித்தேன். எதிர்பாராத தாக்குதலால் பயமும் கோபமும் ஒருங்கே எழ, வழக்கமாக எழும் மியாவ் சத்தத்திலிருந்து முற்றிலும் வேறாக, நினைத்தாலே கிலியை ஏற்படுத்தவல்ல ஒரு சத்தத்துடன் சீறியபடி திரும்பியது. கோபத்தில் அதன் உடலெங்குமுள்ள மயிர்கள் விறைத்து நிற்க, கரும்பச்சைக் கண்கள் சீற்றத்தை உமிழ, கோபத்துடன் உர்ரென்றது.

இப்படிப் பூனையின் மயிர்கள் விறைத்துப் பார்ப்பது மிகச் சில சமயங்களில்தான்.

நான் கடைக்குச் செல்லும்போது என் கூடவே புஸியும் வரும். நாய்களைத் தெருவில் கண்டால் சட்டென அருகிலிருக்கும் மரத்தில் தாவி ஏறிவிடும் அல்லது திறந்திருக்கும் ஏதேனுமொரு வீட்டிற்குள் ஓடிவிடும். எதிர்பாராத ஒரு தருணத்தில் தெருநாய் ஒன்று புஸியை மடக்கிவிட்டது. நான் கல்லைத் தேடி ஓடினேன். புஸி செய்வதறியாமல் அங்குமிங்கும் நோக்கியது. மரமில்லை. எந்தவீட்டின் கதவும் திறந்திருக்கவில்லை. தான் மாட்டிக்கொண்டது அறிந்த பின்னர் எதிர்க்கத் துணிந்தது. அதன் உடலெங்கும் மயிர்கள் விறைத்தெழ, வால் மேல் நோக்கி செங்குத்தாக விறைப்பாக, வாலிலும் உரோமங்கள் சிலிர்த்தெழுந்து நின்றன. மிகுந்த கோபத்தோடு புஸ் என்ற சீறலோடு வலது முன்னங்கையின் பிளவுகளிலுள்ள நகங்களைக் காற்றில் கீறியது. இத்தனை வேகத்தை எதிர்பார்க்காத நாய் மெல்ல பின்வாங்கியது. இரண்டு முறை குரைத்துவிட்டு ஓடிப்போனது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் உறைந்துபோனார்கள். அதன்பின் புஸி தெருவில் மிகப்பிரசித்தம்.

அப்படியொரு சீற்றத்தை இப்போதும் சீறியது. அதன் வாயில் வெள்ளை நிறத்திலான கோரைப்பற்கள் மிக தீர்க்கமாகத் தீட்டப்பட்டு எதற்கும் தயார் நிலையில் இருப்பதாகத் தோன்றியது. இதனிடையில் வெள்ளைப் பூனை ஓடிவிட்டிருந்தது. நான் அதே இடத்தில் அசையாமல் அடுத்து என்ன செய்யவேண்டுமெனத் தெரியாமல் நின்றேன். பூனையின் சீற்றம் படிப்படியாகக் குறைந்தது. அதன் சிலிர்ப்படைந்திருந்த மயிர்கள் படியத் தொடங்கின. புஸியின் கோபம் தணிந்ததை அறிந்து, குனிந்து தடவிக்கொடுக்க முனைந்தேன். நான் மீண்டும் அடிக்க வருவதாக நினைத்த புஸி கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்காத வகையில் என் ஆள்காட்டி விரலை மிகக்கடுமையாகக் கடித்தது. நான் கையை உதறியும் கூட அதன் பற்கள் என் ஆள்காட்டி விரலை விடவில்லை. மீண்டும தன் உரோமங்கள் சிலிர்த்தெழ, கரும்பச்சைக் கண்கள் கனல் உமிழ, போருக்குத் தயாரான புலியின் உறுமலுடன் மிக ஆழமாகக் கடித்தது புஸி.

பூனை என்பது ஒரு மிருகம். மனதின் ஆழத்திலிருந்து ஒட்டுமொத்தப் பூனையினத்தையே வெறுத்தேன்

மூன்றாம் பூனை

பூனைகளுக்கும் எனக்கும் ஒத்துவராதென்பதை மிகத் தெளிவாக உணர்ந்தேன். எழாவது வயதிலும் பதினைந்தாம் வயதிலும் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நான் மறக்கவில்லை. எப்போதும் என்னைப் பூனைகளின் கரும்பச்சைக் கண்கள் துரத்திக்கொண்டேயிருப்பதை நீங்கள் அறிவீர்களா?

மூன்றாவது பூனையின் வரவு உஷாவின் மூலம் வந்தது. நான் அவளை எதிர்க்கவே முடியாத ஒரு அசந்தர்ப்பத்தில் மாட்டிக்கொண்டேன்.

பார்க்கும்போதெல்லாம் சிரித்த உஷாவின் அழகில் மிக எளிதில் வீழ்ந்ததை இப்போது என்னால் மடத்தனம் என்று ஒப்புக்கொள்ள முடிகிறது. அன்று இயலவில்லை. அன்று எப்படி அவள் கண்களை ஆழமாகப் பார்க்காமல் போனேன்?

அறியாமல் மோதிக்கொண்டபோது நான் சொன்ன “ஸாரி”களைப் புறக்கணித்து நாணத்துடன் சிரித்த நாளின் பின்பகலில் மீண்டும் இருமுறை வேண்டுமென்றே மோதினேன். அதுவரை நான் அறிந்திருக்காத என்னை அறிந்தேன். பஞ்சைக்கொண்டு செய்த அவள் உடலில் என் கைகள் எல்லையில்லாத வேகத்தில் எல்லையில்லாத சுதந்திரத்தோடு நீந்தின. பாதி மூடியிருந்த கதவின் இடையில் தள்ளி மிகுந்த வெறியுடன் அவளை முத்தமிட்டேன். மெலிதான உரோமங்கள் பரவியிருக்கும் கைகளை அழுந்தப் பிடித்தபோது அந்த ஸ்பரிசம் எனக்கு ஏற்கனவே பரிட்சயமான மாதிரி இருந்தது. அவளின் உடலெங்கும் என் மீது சரிந்திருக்க இருவரும் தன்னை மறக்கத் தொடங்கிய சந்தர்ப்பத்தில் எதிர்பாராத ஒரு கணத்தில் மிகக்குறைந்த இடைவெளியில் அவள் கண்களின் ஆழத்தை என் கண்கள் சந்தித்து மீண்டன. அன்று எல்லாம் அடங்கிய ஒரு நிசப்தம் என்னுள் பரவியதை இப்போதும் உணர்கிறேன். உஷா, “என்னாச்சு.. என்னாச்சு?” என்றாள். கரும்பச்சைக் கண்கள். மிக ஆழத்தில் மானசீகமாக நான் உணர்ந்தேன். அவை பூனையின் கண்கள். அதிக நெருக்கத்தில் மட்டுமே அறிய முடிந்தது. அவளுடன் எனக்கு உண்டான ஸ்பரிசத்தின் தன்மை கூட பூனையை என் கைகள் வருடும்போது உண்டானதை ஒத்ததுதான். அன்று அம்மா என்னிடம் “உஷாவை பிடிச்சிருக்கா?” என்றாள். அவளின் கண்கள் ஏதோ ஒரு கலக்கத்தைத் தருகின்றன என்றேன். “அவ கண்ணுக்கு என்ன குறைச்சல்? எவ்வளவு அழகு!” என்று சொன்னாள். அம்மாவிற்கு அவளின் கண்களை அதிக நெருக்கத்தில் பார்க்கும் அவசியம் நேராது.

நான் திடமாக நம்புகிறேன். என்னைப் பூனையின் கண்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

மறுதினம் உஷா பூனை ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தாள். என்னுள் கலவரம் எழுந்து அடங்கியது. முதல்நாள் எதிர்பாராமல் (அல்லது எதிர்பார்த்து) கொடுத்த முத்தத்தின் ஈரத்திலிருந்து நான் எழுந்திருக்காததால் மிகுந்த உத்வேகத்துடன் பூனையின் வரவை எதிர்க்கமுடியாமல் போனது.

பிறந்து பதினைந்து நாள்களே ஆன குட்டி அது. முழுக்க முழுக்க வெண்ணிறத்தில் இருந்த அதைக் காதைப்பிடித்துத் தூக்கி “ரொம்ப சொரணையுள்ளது இந்தக் குட்டிதான்” என்றாள் உஷா. அந்தப் பூனைக்குட்டி வீல் வீல் என்று அலறிக்கொண்டே இருந்தது. முதலிலிருந்தே அந்தப் பூனையிடம் வெகு கவனமாக இருக்கத் தீர்மானித்திருந்தேன். வீட்டில் அம்மாவும் அக்காவும் உஷாவும் அதற்கு ராஜ உபசாரம் அளித்தார்கள். அக்காவின் பையன் பூனையின் ஒவ்வொரு அசைவையும் இரசித்தான். அவனது இருபத்தி ஏழாவது வயதில் பூனைகளைப் பற்றி முழுதும் அறிவான். கழிவிரக்கத்துடன் கூடிய கவிகள் வரைவான்.

பொதுவாகவே பூனைகள் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட சில தினங்களில் தாயை மறந்துவிட்டு சகஜமாகத் தொடங்கிவிடும். இந்தப் பூனை விதிவிலக்காய் இருந்தது. பாலைக் குடிக்கவே மறுத்துவிட்டது. அதன் உடல் நாளுக்கு நாள் மெலிந்துகொண்டே வருவதைப் பார்த்துப் பயந்துபோனாள் என் பாட்டி. “பூனை செத்தா பாவம். ரொம்ப குட்டியா இருக்கும்போதே தூக்கிட்டு வந்திருக்கக்கூடாது. கொண்டு போய் கொடுத்திரலாம். ஒரு மாசம் கழிச்சு திருப்பித் தூக்கிட்டு வரலாம்” என்றாள். உஷா நிறைய அழுதாள். அவளைவிட என் அக்கா பையன் கதறி கதறி அழுதான். “நான் செத்தா கூட இப்படி அழமாட்டான் போல இருக்கே” என்ற பாட்டியின் கேலிப்பேச்சு அவனை மேலும் சீண்ட கூடுதலாக அழத் தொடங்கினான். பூனையைக் கொண்டு போய் விடுவதை மாபாதகச் செயலாக நினைத்த உஷா அவளால் அதைச் செய்யமுடியாது என்று மறுக்கவும் அந்த வேலை எனக்கு வந்தது. நானும் மிகுந்த வருத்தப்படுவது போல காட்டிக்கொண்டு உள்ளூர மிகுந்த சந்தோஷத்துடன் பூனையைக் கொண்டுபோய் விடச் சம்மதித்தேன்.

எட்டு வீடுகள் அடங்கிய வளைவு அது. குறுகலாகச் செல்லும் சிறிய பாதை இரண்டு பக்கங்களிலும் நான்கு நான்கு வீடுகளுடன் விரிந்தது.கையில் நான் வைத்திருந்த பூனைக்குட்டி கத்திக்கொண்டே இருந்தது. பூனையின் வீடு எந்த வீடாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் இன்னொரு பூனையின் தொண்டை கிழியும் சத்தத்தைக் கேட்டேன். அது தாய்ப்பூனையின் கோபக்குரலாக இருக்கலாம் என்ற எண்ணம் எழுந்ததும் எனக்குள் பீதி ஏற்பட்டது. கையிலிருந்த குட்டியைக் கீழே போட்டுவிட்டேன். லேசாகத் திறந்திருந்த சன்னலின் வழியே தலையை நுழைத்து, பின் முழு உடலையும் நுழைத்து வெளி வந்தது தாய்ப்பூனை. அதன் கரும்பச்சை நிறக்கண்களைச் சந்திக்கும் தைரியம் எனக்கில்லை. எந்தவொரு யோசனையுமில்லாமல் குட்டியைத் தூக்கிக்கொண்டு வந்தது தவறு எனத் தெரிந்துகொண்டு, திரும்பி வேகமாக நடந்தேன். பூனையின் கண்கள் முதுகில் உறுத்த, திரும்பிப் பார்த்தேன். தாய்ப்பூனை நால் கால் பாய்ச்சலில் ஓடி வந்து என் காலைப் பிராண்டியது. காலை உதறிவிட்டு ஓடினேன். அடிக்குரலில் கத்திக்கொண்டு பின் தொடர்ந்து வந்து காலின் கட்டை விரலைக் கவ்வியது. மீண்டுமொருமுறை பலம் கொண்ட மட்டும் காலை உதறினேன். தூரத்தில் போய் விழுந்தது பூனை. விழுந்த வேகத்தில் எழுந்து என்னை நோக்கி வருவதைப் பார்த்து, இனியும் தாமதிக்ககூடாது என்று நினைத்து குறுகிய சந்தின் வழியே வெளியே ஓடினேன். அதற்குள் வளைவின் வீட்டிலிருந்தவர்கள் வெளியில் வந்து பூனையை விரட்ட ஆரம்பித்திருந்தார்கள்.

ஒட்டுமொத்தப் பூனையினமும் எனக்கெதிரான வன்மத்துடன் இருக்கின்றன. அதன் கரும்பச்சை நிறக்கண்கள் எப்போதும் ஒருவிதக் குரோதத்துடன் என்னைத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

பூனைகள் இல்லாத வீட்டில் காற்றில் அலைகிறது
அது உதிர்த்துவிட்டுப் போன அதன் ரோமமும்
அது கடித்த தடத்தில் மொய்க்க விரும்பும் ஈயும்
(வெங்கட், பூனை கடித்த இரவு)

நான்காவது பூனை

அனல் மிகுந்த நாளன்றில் துபாயின் விமானநிலையத்தில் என் கைக்கடிகாரத்தை ஒன்றரை மணிநேரம் குறைவாக்கி வைத்துக்கொண்டு யாரோ ஒருவனின் வரவுக்காகக் காத்திருந்தேன். முதல் வெளிநாட்டுப்பயணம் தந்த படபடப்பும் நம்மைக் கூட்டிக்கொண்டு போக யாரும் வராமல் போய்விடுவார்களோ என்கிற அசட்டுத்தனமான பயமும் அதிக வேர்வையை உமிழ்ந்துகொண்டிருந்தது.

அசப்பில் இந்தியனல்லாத ஒருவன் என்னை நெருங்கி “ஆப் வெங்கட் ஹே?” என்று என் பெயர் எழுதப்பட்டிருந்த அட்டையைக் காண்பித்தான் . “யெஸ்” என்றேன். அனாசயமான ஹிந்தியில் அலட்சிய பாவத்துடன் ஒருவித ஸ்டைலான உச்சரிப்பில் ஏதேதோ அடுக்கிக்கொண்டு போனான். அவன் அணிந்திருந்த கூலிங்கிளாசை வலது கையின் முட்டினால் அடிக்கடி தூக்கிவிட்டுக்கொண்டான்.

“Sorry. I do not know Hindi”

“Really? you indian yaar.. how come you dont know Hindi. Are you madarasi?” என்றான். பதில் சொல்லாமல் என் பெட்டியை எடுத்துக்கொண்டேன். அவன் சிரித்தான். “OK. You follow me!” என்று சொல்லி முன்னே சென்றான். விதவிதமான பெண்களையும் கார்களையும் ஓங்கி உயர்ந்து நிற்கும் பணக்காரமயமான கட்டடங்களையும் பிரமிப்போடு உள்வாங்கிக்கொண்டு நடந்தேன். பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் ஏறிக்கொள்ளவும் சீரான வேகத்தில் வண்டி ஓடத்துவங்கியது.

“Where are you from?”

“I am from Pakistan” என்றான். ஏதோ ஒரு FM ல் ஆங்கிலப்பாடலை ஒலிக்க வைத்தான். நான் அமைதியானேன். கையில் வைத்திருந்த சிறிய பைக்குள் பாஸ்போர்ட் இருக்கிறதா என்று மீண்டுமொருமுறை பார்த்துக்கொண்டேன். பாஸ்போர்ட் இருந்தது. கூடவே சிறிய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றும் இருந்தது. “நா ஒன்ன விட்டுடுவேன்னு நினைக்காத, அத்தனை லேசுல என்கிட்டேர்ந்து தப்பிக்க முடியாது” என்று சொல்லிக்கொண்டே விமானநிலையத்தில் வைத்து உஷா என் கைகளில் அவளின் போட்டோவைத் திணித்த ஞாபகம் வந்தது. அவன் அறியாத வண்ணம் பைக்குள்ளே இருந்த உஷாவின் போட்டோவைக் கூர்ந்து பார்த்தேன். மெல்ல மெல்ல உஷா மறைந்து பூனையின் சித்திரம் விரிந்தது. முக்கியமாய்க் கண்கள். கரும்பச்சை நிறத்தில் கண்களை மனதின் மிக ஆழத்தில் மீண்டும் கண்டேன். என் உடலில் சிறு நெருக்கம் பரவியது. மிக நெருக்கத்தில் அவள் உதட்டில் முத்தமிட்ட கணங்களும் சர்வ சுதந்திரத்துடன் அவள் உடலில் என் கைகள் பரவியபோது நான் உணர்ந்த பூனை உடலின் மிருதுத்தன்மையும் நினைவுக்கு வந்தன. என் பின்னே ஏதோ இரண்டு கரும்பச்சைக்கண்கள் கூர்ந்து பார்ப்பதாகத் தோன்றியது.

திடீரென ப்ரேக்கை அழுத்தினான் பாகிஸ்தானி.

“Oh God!”

“What happened?” என்றேன். “ஷிட்!” என்று சொல்லிக்கொண்டே பாகிஸ்தானி ஓங்கி ஸ்டியரிங்கில் குத்தினான். வண்டியின் ஹாரன் ஒருமுறை ஒலித்து அடங்கியது.

“Poor cat!” என்று சொல்லிவிட்டு வண்டியை மீண்டும் இயக்கினான். Cat என்கிற வார்த்தையைக் கேட்டதும் சில்லிட்டு மீண்டேன். பூனையின் நினைவு தந்த அச்சத்தில், திரும்பி காரின் பின் கண்ணாடி வழியாக என்னை விட்டு விலகி ஓடும் சாலையைப் பார்த்தேன். பூனை ஒன்று அடிபட்டுக் கிடந்தது. உடல் நசுங்கி, இரத்தம் பீறிட்டு, கண்கள் பிதுங்கிக் கிடந்தது. அடுத்த வண்டி இன்னொரு முறை நசுக்கவும் துண்டுகளாகச் சிதறியது அப்பூனை.

பாகிஸ்தானி மீண்டும் “poor cat!” என்றான். மிக வேகமாக “No!” என்றேன்.

“What?” என்று சொல்லிக்கொண்டே அவன் அணிந்திருந்த கூலிங்கிளாஸைக் கழட்டினான். அவனுக்குப் பூனைக்கண்கள் இருக்குமென்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னையுமறியாமல், “Your eyes…” என்று இழுத்தேன்.

“மேரி ஆங்கே..” – அதற்குமேல் என்னால் தொடரமுடியாத நீண்ட வாக்கியத்தினை ஹிந்தியில் சொன்னான்.

“Sorry.?!”

“Oh! You donno hindino! My eyes are cat’s eyes!” என்று சொல்லிக் கண்ணைச் சிமிட்டினான்.

“நா ஒன்ன விட்டுடுவேன்னு நினைக்காத, அத்தனை லேசுல என்கிட்டேர்ந்து தப்பிக்க முடியாது”

“நா ஒன்ன விட்டுடுவேன்னு நினைக்காத, அத்தனை லேசுல என்கிட்டேர்ந்து தப்பிக்க முடியாது”

“நா ஒன்ன விட்டுடுவேன்னு நினைக்காத, அத்தனை லேசுல என்கிட்டேர்ந்து தப்பிக்க முடியாது”

எதிரொலிப்பது உங்களுக்குக் கேட்கிறதா? கேட்டால் கவனமாக இருக்கவும்.

பூனைகள்; எங்கும் பூனைகள்
எப்போதும் அவை இரையை எதிர்பார்த்து.
இரை, சில நேரங்களில் எலியும்
சில நேரங்களில் எதுவும்
பூனைகளைப் பூனைகளில் மட்டும் பார்க்காமல்
கண்ணில் படும் எல்லாப் பொருள்களிலும் பாருங்கள்.
ஒரு எலியில் கூட “பூனைமை” புலப்படும்.
(வெங்கட், எதிரொலித்த நொடியில் மனதில் தோன்றிய வரிகள்)

“பின் தொடரும் பூனைகள்” என்ற சிறுகதை தமிழோவியம்.காமில் வெளியாகியிருக்கிறது. அதைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

முதல் பக்கம்

இரண்டாம் பக்கம்

மூன்றாம் பக்கம்

இறுதிப்பக்கம்

Share