Archive for பொது

நையாண்டி

கேரளத் தொலைக்காட்சிகளில் பிரதானப்பட்ட ஒரு விஷயம் அரசியல் தலைவர்களை மையமாக வைத்து நடத்தப்படும் நையாண்டிக் காட்சிகள். இந்த நையாண்டிக்காட்சிகளை ஏசியாநெட், கைரளி போன்றவற்றின் முக்கிய நேரங்களில் காணலாம்.

அச்சுதானந்தனும் ஏ.கே.ஆண்டனியும் ஏ.வி.பி.பரதனும் ரமேஷ் சென்னிதாலாவும் அடிக்கடி நம் வீட்டு வரவேற்பரைக்கு வந்துபோவார்கள். அவர்களைப் போலவே உருவ ஒற்றுமையுள்ள நடிகர்களைத் தேடிப்பிடித்து நடிக்கவைக்கிறார்கள். அவர்களது ஒப்பனையும் நடிப்பும் மிமிக்கிரியும் அசலான தலைவர்களை அப்படியே கண்முன்நிறுத்தும்.


ஆரம்பத்தில் மலையாளத் தொலைக்காட்சிகளைப் பார்க்கத் தொடங்கிய காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தின. நம்பவே இயலாத ஒன்று என் கண்முன்னே நிகழ்ந்துகொண்டிருப்பதாகத்தான் நான் நம்பினேன்.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் ராமதாஸ¤ம் வைகோவும் இப்படி வேற்று மனிதர்கள் வாயிலாக நம் வீட்டுக்கு வந்துபோவதை என்னால் எப்படி நினைத்துப்பார்க்க முடியும்? அப்படியொரு சூழலில் வளர்ந்த தமிழனாதலால் இதுபோன்ற அரசியல் தலைவர்கள் மீதான நையாண்டிக்காட்சிகள் பெரும் அதிசயமாகத்தான் தோன்றின.


ஆசியாநெட்டில் ஒளிபரப்பாகும் நையாண்டிக் காட்சிகளில் ஏ.கே.ஆண்டனியும் கருணாகரனும் அச்சுதாநந்தனும் தனித்தனியே காரசாரமாக திட்டிக்கொள்கிறார்கள். ரமேஷ் சென்னிதாலா ஏ.கே.ஆண்டனியையும் கருணாகரனையும் சமாதானப்படுத்த கேரளம் வருகிறார். ரமேஷ் சென்னிதாலா முன்னர் கருணாகரனும் ஏ.கே.ஆணடனியும் பரஸ்பரம் மீண்டும் திட்டிக்கொள்ளத் தொடங்க செய்யும் வழியறியாது ஓட்டமெடுக்கிறார் ரமேஷ் சென்னிதாலா. அன்றைய தினத்தின் மாலையில் ஒரு வீட்டின் மாடியில் அச்சுதானந்தனும் ஏ.கே.ஆண்டனியும் மிக நெருங்கிய நண்பர்களாக, உல்லாசமாகப் பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும் பொழுதைக் கழிக்கிறார்கள். “எண்டே எல்லாம் எல்லாம் அல்லே” என்று பாடிக்கொண்டு சைக்கிளில் போகும்போது முத்தமிட்டுக்கொள்கிறார்கள்.

வெளியில் பகையுடனும் உள்ளுக்குள் பெரும் நட்புடனும் இருக்கிறார்கள் என்று சித்தரிக்கும் அந்தக் காட்சியின் நகைச்சுவையின் பின்னே ஒரு விமர்சனத்தை வைக்கிறார்களே என்று கேரள அரசியல்வாதிகள் யாரும் யோசிப்பதில்லை. இன்று வரை அந்த “சினிமாலா” நிகழ்ச்சி வெற்றிகரமாக வந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அச்சுதானந்தனோ ஆண்டனியோ கருணாகரனோ நையாண்டி செய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த சினிமாலா நிகழ்ச்சி வெற்றிவிழாவில் பேசிய கேரள அரசியல்வாதிகள் அனைவரும் அந்த நிகழ்ச்சி தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சியென்றும் ஆரம்பத்தில் காணும்போது சிறிய அதிர்ச்சி

இருந்ததாகவும் பின்னர் பழகிவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல. தமிழில் முன்பு நகைச்சுவையை மட்டுமே பிரதானமாக வைத்து ஆடியோ கேசட்டுகள் வந்ததுபோல இப்போதும் கேரளத்தில் அரசியல் நையாண்டியை வைத்து ஆடியோ கேசட்டுகள் வருகின்றன. இன்று கேட்டுக்கொண்டிருந்த ஆடியோ கேசட் ஒன்றில் இதேபோல கேரளத்தில் முன்னணி அரசியல்வாதிகள் யாவரும் நையாண்டி செய்யப்பட்டிருந்தனர்.

நையாண்டியை நகைச்சுவையின் அடிப்படையில் மட்டுமே அணுகவேண்டும் என்கிற தெளிவு எத்தனை தமிழக அரசியல்வாதிகளுக்கு இருக்குமென்று தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் விமர்சிக்காத வகையில் (இது பற்றிக் கடைசியில்) இதுபோன்ற நையாண்டி நிகழ்ச்சிகளில் தவறேதும் இருப்பதாகப் புலப்படவில்லை.


ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் மணிரத்னத்தையும் வைரமுத்துவையும் இதுபோல நையாண்டிக்குள்ளாக்குபவர்கள் அதைக் கொஞ்சம் விரித்தெடுத்து தமிழகத்தின் அரசியல் தலைவர்களூக்கும் முடிந்தால் இலக்கியவாதிகளுக்கும் பரப்பவேண்டும்.

தமிழக அரசியல்வாதிகளும் இலக்கியவாதிகளும் நையாண்டி, நகைச்சுவைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். எத்தனைத்தூரம் தீவிர இலக்கியவாதியாக ஒருவர் செயல்பட்டாலும் இலக்கியம் தவிர்த்த பிற வேளைகளில் அவர் ஓர் மனிதரே. அவருக்கும் இயல்பிலேயே நகைச்சுவை உணர்வுகள் இருக்கக்கூடும். அதைத் தொடும் நையாண்டிகளை அவர்கள் எதிர்க்கக்கூடாது. இதுவே அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

அரசியல்வாதிகள் ஒருவித பணபலத்திற்கும் பதவிபலத்திற்கும் உட்பட்டு, நையாண்டியாகக்கூட தங்கள் மீது விமர்சனங்கள் வரக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்களோ என்று எண்ண வைக்கிறது தமிழக அரசியல்வாதிகள் தங்கள் முன்னிறுத்துக்கொள்ளும் போக்கு.

நையாண்டிகளை முன்வைக்கும் படைப்பாளிகளும் நையாண்டி தனிப்பட்ட தாக்காக மாறாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம். கேரளத்தின் நகைச்சுவை ஆடியோ கேசட் ஒன்றில் ஒரு தமிழக அரசியல்வாதி “ஆனை போல தடி” என்று விமர்சிக்கப்பட்டதாகவும் அப்படி விமர்சித்தவர் ஒரு ஷ¥ட்டிங் சமயம் தமிழ்நாடு வந்தபோது “நன்கு” கவனிக்கப்பட்டதாகவும் அறிந்தேன். நையாண்டிகளை அவரவர்களின் துறையோடும் துறை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளோடும் வைத்துக்கொள்வதுதான் சரி.


உடல்வாகைக் கேவலமாகச் சித்தரிக்க முயலும் இவை போன்ற தனிப்பட்ட தாக்குதல்கள் தவிர்க்கப்படவேண்டும் என்பதும் கவனத்திற்கொள்ளவேண்டியதே.

துக்ளக்கில் “சத்யா” எழுதும் நையாண்டிக்கட்டுரைகளில் சில ஆழமான நகைச்சுவை உணர்வைக்கொண்டதாக இருக்கும்.

குழுமங்களிலும் வலைகளிலும் இவைபோன்ற நையாண்டிக்கட்டுரைகள் வருவதில்லை. குழுமங்களிலும் வலைகளிலும் எழுதும்போது இந்த நையாண்டியை இலக்கியவாதிகளுக்கும் சேர்த்தே எழுதலாம். எழுதும்போது கவனத்தில் வைக்கவேண்டியது சுயவிருப்பு வெறுப்பை எழுத்தில் கொட்டாதிருப்பது, தனிப்பட்ட தாக்குதலைச் செய்யாமல் இருப்பது போன்றவையே.

யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லையோ அப்படி யாரும் நையாண்டிக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். ஏனென்றால் நையாண்டியும் ஒருவகை விமர்சனம்தான். நையாண்டிகள் எந்தவொரு வக்கிரத்தையும் அடிப்படையாகக் கொள்ளாதிருக்கும் பட்சத்தில் அவை வரவேற்கப்படவேண்டியவையே.


நையாண்டிக்கட்டுரைகள் அடிப்படையில் நகைச்சுவை உணர்வை முன்வைத்தாலும் அவை நையாண்டி செய்யப்படுவர் எப்படி மக்கள் மன்றத்தில் அறியப்படுகிறார் என்கிற அறிதலையும் முன்வைக்கின்றன. ஆரம்பத்தில் நையாண்டியை மட்டும் கணக்கில் கொள்ளும் வாசகர்கள்/பார்வையாளர்கள் அந்த நகைச்சுவைக்குப் பின்னர் யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த நகைச்சுவைக்கு ஏன் இந்த அரசியல்வாதி/இலக்கியவாதி/நடிகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்? அவர்களுக்கு அங்கே ஒரு விடை கிடைக்கிறது. அந்த அரசியல்வாதி/இலக்கியவாதி/நடிகர் அப்படித்தான் அறியப்பட்டிருக்கிறார். அந்த அரசியல்வாதி/இலக்கியவாதி/நடிகர் தன் மனதில்

தங்களைப் பற்றிய வேறு ஒரு எண்ணத்தைக் கொண்டிருக்கலாம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் அவர்கள் அறியப்பட்டதற்கும் அறியப்பட விரும்புவதற்குமான வித்தியாசத்தை உணர்ந்துகொள்ளலாம். இங்கேதான் நையாண்டி நிகழ்ச்சிகளின் வெற்றி இருக்கிறது. இப்படி ஒரு அரசியல்வாதியோ இலக்கியவாதியோ தன்னை அறிந்துகொள்ள இதுதான் வழியா என்றால் இதுவும் ஒரு வழி.

நையாண்டிக் கட்டுரைகள், நிகழ்ச்சிகள் தமிழகத்தில் இன்னும் பரவலாக்கப்படவேண்டும். அதற்கான சகிப்புத்தன்மை அரசியல்வாதிகளிடமும் இலக்கியவாதிகளிடமும் உடனே தோன்றிவிடாது. அதை நையாண்டிக்கட்டுரையாளகளும் நிகழ்ச்சிகள் தயாரிப்பாளர்களுமே ஏற்படுத்தவேண்டும்.


இணையத்தில் ஆரம்பத்தில் ஒருசில கட்டுரைகள் இப்படி எழுதப்பட்டிருந்தாலும் (பொய்யப்பன் செய்திகள்) பின்பு அவை நின்றுபோய்விட்டன. பின்னர் எழுதப்பட்ட ஒன்றிரண்டு ஸ்கிட்டுகளும் அந்த அந்தக் குழுமத்தின் உறுப்பினர்களை மையமாக வைத்து மட்டும் எழுதப்பட்ட “சீசன் ஸ்கிட்டுகளாக” அமைந்துவிட்டன. இன்றிருக்கும் நையாண்டிக்கட்டுரைகளின் வெறுமையைத் தீர்க்க குழுமத்திற்கு ஒருவர் முன்வருதல் அவசியம்.

அவை நகைச்சுவைப் பூர்வமாக கருத்தை முன்வைப்பதற்கும் அதிலிருந்து ஒரு சேரிய விவாதம் தொடங்குவதற்கும் வழிவகுக்கும்.
Share

கும்பகோணம் தீ விபத்து – பெருத்த சோகம்


இன்று ஒரு சோகமான நாள். கும்பகோணத்தில் பள்ளியொன்றில் குழந்தைகள் தீக்கிரையாக்கியிருக்கின்றன. தொலைக்காட்சியில் கருகிய நிலையில் குழந்தைகளைப் பார்த்தும் பத்திரிகைகளில் வெளியாகியிருக்கும் புகைப்படங்களைப் பார்த்தும் மனது வெம்பிப்போனது.

படம்-நன்றி: ஆனந்தவிகடன்

ஏற்கனவே ஒரு தீக்கிரையான சம்பவம் திருவரங்கத்தில் நடந்தபின்பும் எத்தனைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது கேள்விக்குறி. எத்தனையோ சத்துணவுக்கூடங்கள் இன்னும் கூரை வேய்ந்த கூடத்தில்தான் நடந்துகொண்டிருக்கின்றன. நிறைய திரையரங்குகளிலும் கூரை போட்ட ஸ்டால்கள் இருக்கின்றன. இறந்த பின்பு அஞ்சலியுடன் தலைக்கு ஓர் இலட்சம் என அறிவிக்கும் அரசு உயிருடன் இருக்கும் மனிதர்களின் பாதுகாப்புப் பற்றி ஆலோசிக்குமா?

நான் படித்த பள்ளிகளெல்லாம் விஸ்தாரமான அறைகளுடன் இருந்தன. அவையெல்லாம் பெரும்பாலும் அரசு பள்ளிகள். மெட்ரிகுலேசன் பள்ளிகள் வந்தபின்பே பெரிய வீட்டைப் பிடித்து அதில் பள்ளியை ஓட்டும் நிலை ஆரம்பமானது. பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கும் அரசு ஒரு பள்ளிக்கான அடிப்படை வசதிகளில், அதன் பராமரிப்பில் தீவிரம் காட்டியே ஆகவேண்டும்.

இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலியும் அவர்களின் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும்.

Share

God is with us…

நேற்று கேள்விப்பட்ட விஷயமொன்று.

பெண்களின் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பது, ஒரு குழுவாகப் பார்க்குமிடத்துப் போதாது என்றாலும் சில தனிப்பட்ட பெண்களின் சுயப்பிரக்ஞை ஆச்சரியமளிப்பதாகவும் சந்தோஷமேற்படுத்துவதாகவும் உள்ளது.

எங்கள் ராயர் ஜாதியில் (எனக்கு ஜாதி நம்பிக்கையில்லை யென்றாலும் நான் என்ன ஜாதியென்று சில சமயங்களில் சொல்ல வேண்டியிருக்கிறது. இதைச் சொல்லும்போது கல்யாண்ஜியின் நல்ல கவிதையொன்று நினைவு வருகிறது.) நல்ல மாப்பிள்ளைகள் அமைவது கஷ்டமென்பார்கள். சிலர் ஆசிரியர்களாக இருக்கலாம். வேறு சிலர் அரசாங்கப்பணிகளில். பெரும்பாலானோர் என்னவோ சமையல் தொழிலில் மற்றும் கோவில் பூஜைகளில்தான். இன்றுவரை இந்த நிலைமை அதிகம் மாறியதாகத் தெரியவில்லை.இப்படி சமையலோ, கோவில் பூஜையோ அல்லாத நல்ல மாப்பிள்ளையொருவர் என் நண்பரின் அண்ணனாகிப்போனார்.

நண்பர் மிகுந்த இலக்கிய ஆர்வம் மிக்கவர். ஒரு வகையில் எனக்கு இருப்பதாக நான் நினைத்துக்கொள்ளும் இலக்கிய ஆர்வம் கூட அவரிடமிருந்து எனக்கு வந்ததுதானோ என நான் யோசிப்பதுண்டு. நண்பரின் மீது நான் வைத்திருந்த “மாதிரி” (Model) என்ற பிம்பம் அவரது சில தவறான முடிவுகளால் உடைந்தது, இத்தனைக்கும் அந்த முடிவுகளின் போதே அது தவறென்று நான் சொல்லியும் அவர் ஏற்காததால் அந்தப் பிம்பம் உடைந்ததென்றே நினைக்கிறேன். அது ஒருபுறமிருக்கட்டும்.

நிஜமாகவே இலக்கிய ஆர்வம் உள்ளவர் என்பதால் என் கடுமையான குற்றச்சாட்டு மற்றும் அவர் மீதான தனி நபர் விமர்சனம் எல்லாவற்றையும் ஒரு சிரித்த புன்முகத்தோடு எடுத்துக்கொள்பவர். நிஜ இலக்கியவாதிகள் சண்டையிட்ட மறுநாளே பூங்கொத்துக் கொடுத்துக்கொள்வர் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. 🙂 அப்படி அற்றவர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளாகத்தான் இருக்கமுடியும் என்பதும் இன்னொரு அ.மு.ந. 🙂

நண்பரின் அண்ணனுக்குக்காகப் பெண் பார்க்கப்போனார்கள். நண்பரின் அண்ணா நான் மேலே சொன்ன சமையல் மற்றும் பூஜைப்பணியில் இல்லாததால் பெண் தகைவதில் அத்தனைச் சிரமமிருக்காதென்பதே நண்பரின் குடும்ப நம்பிக்கையாக இருந்தது. எனது தனிப்பட்ட நம்பிக்கையும் அதுவாகத்தான் இருந்தது.

நேற்று நண்பரிடமிருந்து “God is with us!” என்று ஒரு தலைப்பிட்டுக் கடிதம் வந்தது. ஸ்பேம் மெயிலோ என்ற சந்தேகத்துடனேதான் திறந்தேன். பிரித்துப் படிக்காமல் போயிருந்தால் நல்லதொரு நிகழ்ச்சியினைப் படிக்காமற் போயிருப்பேன்.

“அன்பார்ந்த ஹரி, (என்னை என் சொந்தக்காரர்கள் ஹரி என்றேயழைப்பார்கள்)

நேற்றுப் பெண் பார்க்கப் போயிருந்தோம். எல்லாருக்கும் பெண்ணைப் பிடித்திருந்தது. அண்ணா உடனே பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டான். அவன் முகத்தில் வெட்கமும் சந்தோஷமும் போட்டிப்போட்டுக்கொண்டிருந்தது. என் மாமா பெண்ணும் பையனும் தனியாகப் பேசட்டும் என்று சொன்னார். அண்ணா “எனக்குப் பேசுவதற்கு ஒன்றுமில்லை, எனக்குப்பிடித்திருக்கிறது” என்றான். ஆனால் பெண் பேசவேண்டுமென்று சொன்னாள். எல்லாரும் கொஞ்சம் ஆச்சரியப்படும்போதே தீர்மானமாகப் பெண் எல்லார் முன்னிலையும் பேசத்தொடங்கினாள்.

“எனக்கு ஹிந்துமத நம்பிக்கைகளிலே நம்பிக்கையில்லை. நான் எந்த ஹிந்துக் கடவுள்களையும் தொழமாட்டேன். கோவில்களுக்கு வரமாட்டேன். பூஜை, புனஸ்கார வகையறாக்கள் ஆகவே ஆகாது.”

அண்ணா கொஞ்சம் அரண்டுவிட்டான் என்றேதான் சொல்லவேண்டும். “ஏன்” என்றான்.

“எனக்குப் பிடிக்கலை”

“அப்ப யாரைத்தான் கும்பிடுவீங்க?”

“ஜீஸஸ். எனக்குக் கிறிஸ்தவத்துலதான் நம்பிக்கை. I like Jesus!”

“ஓ”

அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை. அண்ணா இதைக் கேட்ட பின்பு ஒரேடியாக மறுத்துவிட்டான். அங்கேயே வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நிலைமை இரசாபாசமாவதற்குள் வீடு வந்துவிட்டோம்.

நல்லவேளை! அந்தப் பெண் தைரியமாக இப்போதே சொன்னாள். இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும்? Thank God!.

உன் வீட்டில் அனைவரையும் கேட்டதாகச் சொல்லவும்….. ”

என்று தொடர்ந்தது அக்கடிதம்.

என் நண்பரின் அண்ணாவின் மறுப்பில் எனக்குப் பேதமில்லை. அவர் துணைவி எப்படி இருக்கவேண்டும் என்று நினைப்பது அவர் உரிமை. என் நண்பர் God is with us” என்று தலைப்பிட்டிருந்ததையும் புரிந்துகொள்ளமுடிந்தது. நண்பரின் அண்ணாவின் அன்றைய மனநிலை எப்படி இருந்திருக்குமென்பதையும் சில நிமிடங்கள் யோசித்தேந்தான். ஆனால் அதையெல்லாம் மீறி வியப்பில் ஆழ்த்தியது அந்தப் பெண்ணின் உறுதியும் தெளிவும்.

சமையற்காரர்கள் மற்றும் கோவிலில் பூஜை செய்பவர்களுக்கு மத்தியில் ஓர் அரசாங்கப் பணி மாப்பிள்ளைக்காக அந்தப் பெண்ணை எத்தனைச் சொல்லிச் சொல்லித் தயார்ப்படுத்தியிருப்பார்கள்? அத்தனையும் தூள் தூள்!

ஆடைக்குறைப்புப் புதுமைப் பெண்களுக்கு மத்தியில் நிஜத்திலேயே ஒரு புதுமைப்பெண். அண்ணாவின் திருமணம் நிச்சயமாகாமற் போனதே என்ற நண்பரின் வருத்தத்தில் கூட என்னைப் பங்குகொள்ள வைக்கமுடியாமற் செய்தது அந்த முகம் தெரியாத பெண்ணின் துணிவும் தெளிவும்.

வாழ்க வளமுடன்.

(இந்த உள்ளிடுகையைத் தொடர்ந்து நான் வலைப்பதிவிற்கென்றே தனியாக எழுதுவதில்லையென்ற, உலகைப் பீடித்திருந்த பெருநோய் அகன்றது!)

Share

நெருப்புக்கோழி – Ostrich

 

Ostriche

Ostrich

மஸ்கட்டிலிருந்து துபாய் செல்லும் வழியிலுள்ள நெருப்புக்கோழிப் பண்ணைக்குச் சென்றதையடுத்து இந்தக் கட்டுரை. அன்றைக்கு நெருப்புக்கோழிகள் ஐயோ பாவம். இன்றைக்கு நீங்கள்.

நெருப்புக்கோழிகளை ஆங்கிலப்படங்களிலும் மிருகக்காட்சி சாலையில் வலைக்கம்பிகளுக்குள்ளாகவும் கண்டது மட்டுமே என் முந்தைய அனுபவமாக இருந்தது. நுழைவுச்சீட்டு வாங்கிவிட்டு நெருப்புக்கோழிப் பண்ணையின் கம்பிக் கதவுகளை நெருங்கும்போதே மிக அன்பாக வரவேற்றது நெருப்புக்கோழிக்கூட்டம்.

நெருப்புக்கோழியின் உடலெங்கும் ஒட்டிக்கொண்டிருக்கும் (மாட்டு)ஈக்கள் காருக்குள் நுழைந்து எரிச்சல் மூட்டிக்கொண்டிருந்ததையும் மீறி, காரை நோக்கி விரைந்து வரும் நெருப்புக்கோழிகளைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. நெருப்புக்கோழி மிக அருகில் வந்ததும் கை தானாக காரின் கண்ணாடியை ஏற்றிவிட, நெருப்புக்கோழிகள் கார் கண்ணாடிகளைக் கொட்டத் தொடங்கின.

நெருப்புக்கோழிகள் எந்த வகையானவை, அவற்றிற்கு மனிதர்களைத் தாக்கும் குணம் எப்போது வரும் (பண்ணையின் காவலாளிகள் கோழிகளுடன் பழகுவது மாதிரி நெருப்புக்கோழிகளுடன் பழகுவதைக் கண்டாலும் மனதிற்குள் ஒரு பயம் இருந்துகொண்டுதான் இருந்தது.) போன்ற விவரங்கள் தெரியாததால் முதலில் கொஞ்சம் தள்ளியே இருந்தேன். சீனப்படங்களில் லீ மாதிரி ஒரு காலைத் தரையில் ஊன்றி, மறுகாலைத் தூக்கி இடது தோளில் வைத்து ஏறி, வானத்தில் பறந்து டைவ் அடித்து உச்சந்தலையில் ஒரு கொத்து கொத்தினால் யார் காப்பார்கள் என்ற எண்ணம் மனதின் ஓர் ஓரத்தில் சுழன்று கொண்டே இருந்ததால் “துஷ்டாரைக் கண்டா தூர விலகு” என்று முணுமுணுத்துக்கொண்டு விலகிப்போனேன். எங்களுடன் வந்திருந்த ஐந்து தமிழ்க்குடும்பங்களிலுள்ள எல்லா வீரர்களுக்குள்ளும் இந்த எண்ணம் இருந்திருக்கவேண்டுமென்பதே என் யூகம்.

காரை விட்டு இறங்கி வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு நெருப்புக்கோழிகளை அருகில் சென்று காணத் தொடங்கினோம். போகப் போக நெருப்புக்கோழிகள் மிண்டாப்பூச்சிகள் என்று தெரிந்துபோனது. அதன்பின் எல்லாரும் அதனருகில் சென்று நின்று கொண்டு ·போட்டோவுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் நெருப்புக்கோழிகள் மீதிருந்த பயம் முற்றிலும் விலகிப்போனது. நேரம் ஆக ஆக நெருப்புக்கோழிகள் எங்களைப் பார்த்து பயந்து ஓட ஆரம்பித்தது!

ஓரிடத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த சோளத்தை தின்று கொண்டிருந்த நெருப்புக்கோழிகள் எங்களைக் கண்டதும் விலகுவதும், நாங்கள் அந்த இடத்தை விட்டு விலகிய பின்பு மீண்டும் சோளம் வைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி நெருங்குவதுமாக இருந்தன. குணத்தில் வெறும் கோழிகள் போல்தாம் என நினைத்துக்கொண்டேன்.

நெருப்புக்கோழிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து வாழத் தேவையான சூழ்நிலை பண்ணையில் நிலவுகிறது. நெருப்புக்கோழியின் முட்டை, சிறிய குஞ்சு, கொஞ்சம் வளர்ந்த நெருப்புக்கோழி, முற்றிலும் வளர்ந்து இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிட்ட நெருப்புக்கோழிகள் என எல்லா நிலையிலும் நெருப்புக்கோழிகளைக் காணலாம்.

Ostriche Eggs Ostriche Stage -1 Ostriche Stage-2 Grown Ostriches

நெருப்புக்கோழியின் முட்டை அளவில் பெரியது; எடை அதிகம் கொண்டது. நெருப்புக்கோழியின் முட்டையோட்டில் பல விதமான வண்ணங்கள் தீட்டி, ஓவியங்கள் வரைந்து விற்கிறார்கள். நெருப்புக்கோழியின் இறகைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட “வாலுள்ள பேனா” கிடைக்கிறது. இறகையும் தனியே விற்கிறார்கள்.

நெருப்புக்கோழியின் குணநலன்களைப் பட்டியலிட்டிருந்தார்கள். அவையாவன:

1. ஆண் நெருப்புக்கோழிகள் கருப்பு மற்றும் வெள்ளை நிற இறகுநுனிகளையும் சிவப்புக் கால்களையும் கொண்டுள்ளன. இனப்பெருக்க காலத்தில் சிவப்பு நிறச் சொண்டையும் கொண்டிருக்கின்றன. பெண் நெருப்புக்கோழிகள் சாம்பல் நிற இறகு நுனிகளைக் கொண்டுள்ளன.

2. நெருப்புக்கோழிகள் பாலைவன வாழிகள். அதிக வெப்பத்தைத் தாங்க வல்லவை. (ஒரு காலத்தில் ஓமானில் மட்டுமே நெருப்புக்கோழிகள் இருந்தன)

3. நல்ல நிலையிலுள்ள பெண் நெருப்புக்கோழி இனப்பெருக்க காலத்தில் சராசரியாக இரண்டு நாளுக்கொருதரம் ஒரு முட்டை இடும். (ஓமானில் குளிர்காலம் நெருப்புக்கோழிகளின் இனப்பெருக்க காலமாகும்)

4. நெருப்புக்கோழிகள் தங்களைத் தாக்கவரும் உயிரினங்களை கால்களைக் கொண்டு உதைப்பதன் மூலம் தங்களையும் தங்கள் கூடுகளையும் தற்காத்துக்கொள்கின்றன. ஒரு நெருப்புக்கோழியால் சராசரியாக 500 கிலோகிராம் ஆற்றலுடன் உதைக்கமுடியும். ( நெருப்புக்கோழியின் கால்நகத்தால் ஏற்படும் வலி ஒரு மனிதனை மரணிக்கச் செய்யும் அளவு வலுவானது)

5. நெருப்புக்கோழிகளின் கண்கள் மூன்று கிலோமீட்டர் தொலைவுவரைப் பார்க்கும் திறனுள்ளவை. அவற்றின் மூளையின் எடை 40 கிராம் மட்டுமே. இதனால் நெருப்புக்கொழிகள் தங்கள் உள்ளுணர்வைச் சார்ந்தே செயலாற்றுகின்றன.

6. நெருப்புக்கோழிகளின் முட்டைகள் பலவித அழகுப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இவற்றின் தோல், தோல்பொருள்கள் தயாரிப்பில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

7. ஒரு நெருப்புக்கோழிமுட்டையின் சராசரி எடை 1.5 (ஒன்றரை) கிலோகிராம். (18 முதல் 24 கோழிமுட்டைகளுக்கு ஈடாக நெருப்புக்கோழியின் ஒரு முட்டையைச் சொல்லலாம். நெருப்புக்கோழியின் ஒரு முட்டையைக் கொண்டு ஒரு குடும்ப ஆம்லெட் போடலாம்). ஒரு நெருப்புக்கோழிமுட்டை 250 கிலோகிராம் வரையிலான எடையைத் தாங்கவல்லது.

8. நெருப்புக்கோழி முட்டையில் அதிகக் கொழுப்புச்சக்தி இருந்தாலும் அதன் உடற்கறி மீனை விடக் குறைந்த அளவே கொழுப்புச் சத்தைக் கொண்டுள்ளது.

9. நெருப்புக்கோழி சராசரியாக 130 -150 கிமீ வேகத்தில் ஓடக்கூடியது.

இத்தனைப் பராகிரமங்கள் நிறைந்த நெருப்புக்கோழி சுத்த சைவம் என்பது ரொம்ப முக்கியம். 😉

பண்ணையில் இருந்து வெளியே வரும்போது கூட வந்த நண்பர்கள் சொல்லிக்கொண்டு வந்த “கமெண்டுகள்” ரொம்ப முக்கியமானவை.

“ஆஸ்ட்ரிச்னு சொல்றாளே.. நெருப்புக்கோழியா வான்கோழியா?”

“நெருப்புக்கோழி இங்க ஏதுடா? வான்கோழிதான் எல்லாம்”

“பார்த்தாலே தெரியறதே.. நெருப்புக்கோழி வாய் திறந்தா நெருப்புக் கொட்டும்பா.. இது வாயைத் திறந்து மாட்டுஈயைன்னா கொட்டுறது”

“வான்கோழிக்கு இத்தனைப் பெரிய பண்ணை வெச்சிருக்கான்னா ஆச்சரியம்தான். நெருப்புக்கோழிக்கு வைப்பாளோ?”

“நெருப்புக்கோழி பக்கத்துல போய் நின்னா தூக்கிண்டு போயிடப்போறது”

“பொம்பளை நெருப்புக்கோழின்னா தேவலாம்”

“நாட்டி தாத்தா”

இடையில் புகுந்து நெருப்புக்கோழிப்பண்ணையை இரண்டு மணி நேரம் சுத்திப் பார்த்துவிட்டு, வான்கோழிப்பண்ணையான்னு கேட்டு நெருப்பை அள்ளிக் கொட்டாதீரும்வோய் என்று சொல்லிவிட்டு வந்தோம்.

Bowing Ostriche

சீ யூ பை பை

Share

Asif and Anandraghav



10.01.2004 அன்று துபாய் 657 ஏ. எம். இல் ஒலிபரப்பான ஆனந்த்ராகவ் உடனான பேட்டியின் போது ஆசிஃபும் ஆனந்த்ராகவும்.

Share

Jimmy

Jimmy
–ஹரன் பிரசன்னா

சிஐடி மூஸா என்ற ஒரு மலையாளப்படம் பெரிய திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. என் நினைவுகள் கொஞ்சம் படத்திலும் மீதி வேறெங்கேயுமோ மேய்ந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு முறை வீட்டை அழைக்கும்போதும் “ஜிம்மி எப்படி இருக்குது”என்ற என் கேள்விகள் சமீப காலங்களில் எனக்கே தெரியாமல் இல்லாமல் போனது குறித்த வருத்தம் என்னுள் வியாபித்திருந்தது.

ஜிம்மி என்ற பெயரிட்டதே பெரிய சுவாரஸ்யமான விஷயம். நாய் வேண்டும் என்று கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் நச்சரித்து நான் ஓய்ந்து போன ஒரு நாளில் புசுபுசுவென, உள்ளங்கையில் அடங்கிவிடும் அளவில் சிறியதாய் ஒரு பொமிரேனியன் குட்டியைத் தூக்கிக்கொண்டு வந்தார் என் அண்ணனின் நண்பர். வீட்டில் பெரிய விவாதத்திற்குப் பிறகு – “இப்ப இருக்குற நிலையில இது அவசியமா? இதுக்கு பாலும் முட்டையும் போடுறதுக்கு எவன் தண்டம் அழுவான், சோப்பு வேற போட்டுக் குளிப்பாட்டணும்.. மனுஷனுகே சோப்பில்லை” – நானும் என் அண்ணனும் அந்தக் குட்டியை வளர்ப்பதென முடிவுக்கு வந்தோம். அம்மாவும் அம்மாவும் முறுக்கிக்கொண்டு திரிய, அண்ணி வேறு வழியில்லாமல் சந்தோஷப்படத் தொடங்க, ஜிம்மி எங்கள் வீட்டில் ஒரு இரவைக் கழித்தது.

மறுநாள் காலையில் வீடு முழுவதும் நாயின் முடி உதிருந்திருந்தது. மீண்டும் பிரச்சனை. நாய் முடி இப்படி உதிர்ந்தால் பிறந்த குழந்தைக்கு (அப்போதுதான் என் அண்ணி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருந்தாள்) ஆகாதென அப்பாவும் அம்மாவும் ஒரு பாட்டம் தொடங்க அவர்களை சமாளிப்பதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது.

ஒருவழியாய் அம்மாவும் அப்பாவும் நாயின் விளையாட்டுகளிலும் அன்பிலும் நெகிழத் தொடங்க மிகச்சீக்கிரத்தில் அது வீட்டில் ஒரு நபரானது.

அப்போதுதான் கவனித்தேன். பெயர் என்று ஒன்று வைக்காமலேயே ஆளாளுக்கு ஜிம்மி என்று கூப்பிட்டுக்கொண்டிருந்ததை. பதினைந்து நாள்களிலேயே ஜிம்மி என்பது அதன் பெயரென அது கொஞ்சம் உணர்ந்துவிட்டிருந்தது. திடீரென என்னுள் நாய்க்கு ஏன் ஜிம்மி என்று பெயர்வைக்கவேண்டும் என்ற கேள்வி வந்தது. உடனடியாய் முடிவுக்கு வந்தேன். இனி அது ஜிம்மியில்லை. வேறு எதாவது பெயர் வைக்கலாமென யோசித்தபோது சட்டென ஒன்றும் அகப்படவில்லை. அண்ணியிடன் கேட்டேன். போடா ஜிம்மிதான் சூட் ஆகுது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அம்மாவிடம் கேட்டபோது “ஏதோ ஒரு எழவு.. கூப்பிடத்தானே.. இதுக்கு என்ன ஆராய்ச்சி?”என்று சொல்லிவிட்டாள். மிகுந்த யோசனைக்குப் பின் வீரா என செலக்ட் செய்தேன். என் அண்ணன் கேட்டுவிட்டுச் சிரித்தார். “பொம்பளை நாய்க்கு வீராவாம். நீயெல்லாம் என்னத்தடா படிச்ச?”ன்னார். அப்படியே வளர்ந்த வாக்குவாதத்தில் கடைசியாய் நான் நாய்க்கு பாட்சா என்று பெயர்வைத்து இரண்டு நாள் அப்படித்தான் கூப்பிட்டேன். என் அண்ணன் போட்டிக்கு அதை குணா என்று அழைக்கப்போவதாக மிரட்ட ஆரம்பித்தார். உங்க ரெண்டு பேர் சண்டையில ஏண்டா ரஜினியையும் கமலையும் இழுக்குறீங்க என்று யார் சொல்லியும் நாங்கள் கேட்கவ்¢ல்லை. ஆனால் இதேல்லாம் இரண்டே நாளில் முடிவுக்கு வந்தது. ஜிம்மி என்று கூப்பிட்டால் மட்டுமே நாய் ரெஸ்பான்ஸ் செய்ய அரம்பித்ததால் வேறு வழியில்லாமல் நான் ஜிம்ம்¢க்கு மாறிவ்¢ட்டேன்.

படம் பார்க்கும்போது நாய் நினைப்பு ஏன் வந்தது என்றால் படம் முழுவதும் ஒரு நாய் வருகிறது. வழக்கம்போல குண்டு கண்டுபிடிக்கிறது, வீர சாகசங்கள் செய்கிறது, பெண் நாயை சைட் அடிக்கிறது, தள்ளிக்கொண்டு போய் புதர்மறைவில் மறைகிறது. அப்போது கேமரா புதரை மட்டும் காண்பிக்க புதர் ஆடுகிறது!!! அடப்பாவிகளா நாய்க்குமா என்ற நினைக்கும்போதே மனம் மேயத் தொடங்க…

என் அண்ணனும் நானும் ஜிம்மியைத் தூக்கிக்கொண்டு anti rabbies ஊசி (சரியான பெயர் தெரியலைங்கோ) போடக் கொண்டு போனோம். டாக்டர் வீட்டில் அவரை விட பெரிய சைஸாய் உயரமாய் இன்னொரு நாய் இருந்தது. அதைப் பார்த்ததும் ஜிம்மி எங்களை விட்டு கீழே இறங்கவே இல்லை. ஒரு வழியாய் இதமாய்ச் சொல்லி, கொஞ்சி, கெஞ்சி அதை கீழே இறக்கிவிட பயந்துகொண்டே நின்று கொண்டிருந்தது. ஊசி போட்டு முடித்தவுடன் டாக்டரிம் சில கேள்விகள் கேட்டோம்.

“சார்.. இப்ப இதுக்கு று மாசம் வயசு வுது. எத்தனை வயசுல இதுக்கு செக்ஸ் உணர்ச்சி வரும் டாக்டர்?”

“இன்னும் ஆறுமாசத்துல அது உடலளவுல தயாராயிடும்”

“ஓ.. அப்பக் கண்டிப்பா வேற ஆண் நாயோட சேர்த்து விடணுமா? அப்படிச் செய்யலைனா வயலண்ட் ஆயிடுமா?”

“சே சே.. அப்படில்லாம் ஒண்ணும் ஆவாது. அந்தோ நிக்குது பாருங்க நம்ம நாய். பன்னிரெண்டு வருசமாச்சு.. ஒரு பொட்டை நாயைத் தொட்டது கிடையாது.. 100% பிரம்மச்சாரி.. இன்னைக்கு வரைக்கும் நோ பிராப்ளம்”

ஐயோ பாவமாய் கேட்டுக்கு அந்தாண்டை நின்று கொண்டு ஜிம்மியைப் பார்த்து எச்சில் ஒழுகிக்கொண்டிருந்தது டாக்டர் வீட்டு நாய். (“அவுத்து வுடுங்கடா.. என்னென்ன வித்தைலாம் காட்டுறேன் பாருங்க”)

டாக்டர் தொடர்ந்தார்..”அப்படி மூட் வராம இருக்கிறதுக்குக் கூட ஊசி இருக்கு. வேணும்னா அதை வாங்கி ஜிம்மிக்குப் போட்டு விட்டுருங்க. தெரு நாய்ங்க பின்னாடி வந்தாலும் இது ஓடி வந்துரும்”

“சே சே.. அதெல்லாம் வேண்டாம்.”

“அப்ப ஓகே”

“சார் இன்னொரு டவுட்டு. இதே ஜாதியில இன்னொரு ஆண் நாய்கிட்ட கொண்டு போய் விடலாமா? பார்த்த ஒடனே கடிச்சிருச்சுன்னா என்ன செய்யன்னு பயமா இருக்கு.”

“நோ நோ. தெட் வில் நெவர் ஹேப்பண். நீங்க முதல்நாள் கொண்டு போய் ஆண் நாய்கிட்ட நிறுத்துங்க. ரெண்டும் மோந்து பார்த்துக்கும். அப்புறம் ரெண்டு நாள் கொண்டு போய் விட்டு அதே மாதிரி பழக்குங்க. அப்புறம் பாருங்க. எல்லாம் ஜோரா அதுங்களே பார்த்துக்கும்”

“சரி ஒகே சார். வர்றோம்”

நானும் என் அண்ணனும் ஜிம்மிக்குத் தோதான ஜோடியைத் தேடியதில் தோற்றுப் போனோம். ஆனால் ஜிம்மி அதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. எப்போதும் போல இருந்தது. பந்து எறிந்தால் ஓடிப்போய் எடுத்துகொண்டு வரும். தெரியாத ஆள் வந்தால் குலைக்கும். ஏய் சும்மாயிருன்னு ஒரு அதட்டு அதட்டுனா “வந்தவங்க நம்ம ஆளு (அட.. தெரிஞ்ச ஆளுங்க!!!) என்று புரிஞ்சிக்கிட்டு சும்மா இருந்துரும். ஒரு நாள் நானோ அண்ணனோ வர்றதுக்கு லேட்டானா சாப்பிடவே சாப்பிடாது. நாங்க வந்து (நாங்க முதல்ல சாப்பிட்டுடுவோம்!!) அதைத் தடவிக்கொடுத்து கொஞ்சுன பின்னாடிதான் சாப்பிடும். அண்ணன் பையன் கைல எது கிடைச்சாலும் எடுத்து ஜிம்மியை அடிப்பான். திடீர்னு முடியைப் பிடிச்சு ஜிம்மியை இழுப்பான். அதுபாட்டுக்கு ஒண்ணுமே நடக்காதது மாதிரி இருக்கும். அவனை ஒண்ணுமே பண்ணாது. நாங்க பார்த்துப் பார்த்துப் பூரிச்சுப் போவோம்.

திடீர்னு எனக்கு துபாய் சான்ஸ் வர, நான் flight ஏறினேன். நான் ஜிம்மியைப் பிரியும்போது 11/2 வயது இருக்கும். ஒருவருடம் கழித்து மீண்டும் ஊருக்குப் போனபோது ஜிம்மியை ஆளைக் காணோம். அம்மாவிடம் கேட்டபோது, “உன்னை மறந்துருக்கும். திடீர்னு புதுசுன்னு நினைச்சுக்கிட்டு கடிச்சிருச்சுன்னா.. அதுதான் கொல்லைல போட்டு பூட்டிருக்கோம்”என்றாள். என்னால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. புதிய ஆள் வந்த சத்தத்தில் அது கொல்லையில் இருந்து குலைத்துக்கொண்டிருந்தது. நான் உள்ளிருந்து ஜிம்மி எனக் கத்தினேன். அவ்வளவுதான். மூடியிருந்த கதவை போட்டு கால்களால் பரண்டவும் முட்டவும் ஆரம்பித்துவிட்டது. “அம்மா திறந்து விடும்மா”என்றேன். அம்மா பயந்தாள். அப்பா சொன்னார்.. உன் குரலை உங்க அண்ணன் குரல்னு நினைச்சுக்கிட்டு அது கத்துது. ஆளைப் பார்த்தா என்ன செய்யுமோ.

என்னால் அதற்குப் பிறகு பொறுமையாய் இருக்க முடியவில்லை. வேகமாய்ச் சென்று கதவைத் திறந்துவிட்டேன். திறந்த வேகத்தில் ஒரு நொடி ஒரே ஒரு நொடிதான்.. என்னைப் பார்த்து சட்டெனப் புரிந்துகொண்டுவிட்டது. அது குதித்த குதியும் துள்ளலும்.. கண்ணில் நிற்கிறது இன்னும். எப்போதும் போல நாயை உப்புமூட்டைத் தூக்கிக்கொண்டு நடந்தேன். அது பாட்டுக்கு அமைதியாய் இருந்தது. எல்லோருக்கும் ஆச்சரியமும் சந்தோஷமும். அந்த விடுமுறை கழிந்து மீண்டும் flight ஏறினேன். அதற்குப் பின் போன இன்னொரு சந்தர்ப்பத்திலும் அது என்னை மறக்கவில்லை. மறக்க முடியாது என்பது புரிந்துபோனது.

ஒருவழியாய் சி ஐ டி மூஸா படம் முடிந்துத் தொலைத்தது. வியாழன் இரவு வீடு வந்து படுக்கும்போது மனம் முழுதும் ஏதேதோ நினைவுகள். ஒட்டுமொத்தமாய் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். “மறுநாள் காலை அண்ணனை அழைத்து முதல்வேலையாய் ஜிம்மி ஜாதியிலேயே மாப்பிள்ளையை நாயைப் பார்த்து, கொண்டு போய் விட்டு வரும்படிச் சொல்ல வேண்டியது”. பின் உறங்கிப்போனேன்.

வெள்ளி காலை (துபாய்நேரம்) 7.00 மணிக்கே செல்·போன் மெசேஜ் என்ற சமிஞ்ஞை காட்டியது. தூக்கக்கலக்கத்தில் பார்த்தேன். மெசேஜ் இப்படிச் சொல்லியது.

“Jimmy expired today morning. Snake might have bitten. we are all in sad. From anna”

என் உறக்கம் போனது.

இப்போதெல்லாம் எல்லா துக்கங்களும் கவிதைக்கான வார்த்தைத் தேடுதலில்தான் முடிகின்றன.

இப்படிக் கிறுக்க்¢ வைத்தேன்.

பூவாசத்துடன்
படுக்கையறை விட்டு
வெளிவரும்போது
இரண்டு கால்களில் நின்று
முகமுரசும் நாயின்
கூரான செழுமையான
மடிகள் சொல்கின்றன
தடையூசிக்கானப் பருவத்தை.

Share

கிஷ் தீவு-ஒரு அறிமுகம்


கிஷ் தீவு-ஒரு அறிமுகம்

–ஹரன் பிரசன்னா

அமீரகத்தில் இருப்பவர்களுக்கு, அதுவும் நிரந்தரக் குடியுரிமையில்லாமல் இருப்பவர்களுக்கு கிஷ் தீவு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும் அமீரகத்தில் ஏதேனும் ஒரு வேலை கிடைக்குமா என்ற ஏக்கத்தில்
இந்தியாவிலேயே இருந்துவிடாமல், விசிட் விசாவில் அமீரகம் வந்து வேலை தேடலாம் என்று நினைக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட உலக மக்கள் ஏராளம் பேர். முன்னொரு காலத்தில் அமீரகம் வந்தவர்கள், எந்தத் தகுதியாய்
இருந்தாலும், வேலை கிடைக்காமல் திரும்பிப் போனதே இல்லை எனலாம். ஆனால் இன்றைய நிலைமை அப்படி இல்லை. அமீரகம் அதன் கவர்ச்சியை இழந்துவிட்டது. வேலையில் இருப்பவர்கள் கூட ஆள் குறைப்பு என்னும் போர்வையில் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். வேலை கிடைக்காதவர்களைவிட வேலை கிடைத்து, பின்அதை இழந்து தாயகம் செல்லும் மக்களின் மனநிலை மிக மோசமானது. இது குறித்து இன்னொரு முறை பேசுவோம்.

இது போன்ற அமீரக நெருக்கடிகளை உணராதவர்கள் இன்னமும் விசிட்டில் வந்து ஏதாவது வேலை கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தில் தினமும் classifieds பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வேலை அமீரகத்திலும் குதிரைக்கொம்பாகி வருஷங்கள் ஆகின்றன.

சிலர் வேலை கிடைத்தாலும் முதலில் விசிட்டில்தான் வருகிறார்கள். இங்கு வந்து பின் வேலைசெய்யும் உரிமையுடைய விசா (employement visa) வாங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில். இப்படி வருபவர்களுக்கு பெரும்பாலும் employement visa கிடைத்துவிடுகிறது. அமீரகத்தில் விசிட் விசா என்பது இரண்டு மாதங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. 500 திர்ஹாம்கள் கட்டி அதை மூன்றாவது மாதத்திற்கு நீட்டிக்கொள்ளலாம்.
மூன்று மாதத்திற்குப் பின் அமீரகத்தை விட்டு வெளியேறியே ஆகவேண்டும். அதன்பின் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் நூறு திர்ஹாம்கள் அபராதம். விசிட்டில் வந்து மூன்று மாதத்தில் வேலை கிடைக்காதவர்கள் சொந்த
நாட்டிற்குச் சென்று திரும்பி வர அதிகம் செலவாகும். உதாரணமாய், அமீரகத்திலிருந்து சென்னை சென்று திரும்பிவர டிக்கட் மட்டும் கிட்டத்தட்ட 22000 இந்திய ரூபாய். (இந்த மதிப்பு இந்திய ரூபாயின் டாலருக்கு நிகரான ம
திப்பையும் இந்தியா சென்று வரும் சீசன் காலங்களையும் பொறுத்து கூடும்; குறையும்). அப்படி விசிட் முடிந்து செல்லும் பெரும்பாலானவர்கள் மீண்டும் விசிட்டில் வந்து வேலை தேடத்தான் ஆசைப் படுவார்கள். ஒவ்வொரு
விசிட்டுக்கும் 22000 இந்திய ரூபாய் செலவழிப்பதற்கான வசதியிருந்தால் அவர்களுக்கு துபாயில் வேலை தேடும் நிமித்தம் இருந்திருக்காது. இது போன்றவர்களின் வயிற்றில் பால் வார்ப்பது கிஷ் தீவு.

முதலில் விசிட்டில் வந்து, பின் employment visa பெறும் நபர்களுக்கும் பேருதவியாய் இருப்பது கிஷ் தீவுதான்.

கிஷ்தீவு இரானின் வசமுள்ள ஒரு தீவு. அமீரகத்திலிருந்து 40 நிமிட விமானப் பயணத்தில் கிஷ்ஷை அடையலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், கிஷ்ஷைக் கொஞ்சம் இயற்கை அழகுள்ள பாலைவனம் எனலாம்.
பெரிய பெரிய கட்டடங்கள், மனதை மயக்கும் ரெஸ்டாரண்டுகள், கோல்·ப் மைதானங்கள் என ஒன்றும் இருக்காது. வெறும் வெட்ட வெளி. கிஷ¤க்கு வந்து தங்கிச் செல்லும் பயணிகளுக்கு அபயம் அளிக்க இரண்டு மூன்று
நல்ல தங்கும் விடுதிகள். பலான மேட்டருக்கு வசதிகள். அவ்வளவே.

துபாயிலிருந்து கிஷ்ஷ¤க்குச் சென்று வர இந்திய ரூபாயில் ஏறக்குறைய 4500 ரூபாய் அகிறது. ஒரு நாள் தங்கும் செலவை, நாம் செல்லும் ஏர்வேஸ்காரர்களே ஏற்கிறார்கள்.நல்ல விடுதியில் தங்கவைத்து, மறுவிசிட் விசாவின் நகலோ அல்லது employement visit ன் நகலோ கிடைத்துவிட்டால், மிக மரியாதையாய் மீண்டும் கிஷ்ஷின் விமானநிலையத்தில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள்.

சிலருக்கு ஒரு நாளில் மறு விசிட்டோ அல்லது employement visa வோ கிடைக்காது. அவர்களெல்லாம் 14 நாள்கள் வரை தங்க அனுமதிக்கப்படுவார்கள். கிஷ்ஷின் விதிகளின்படி 14 நாளகளுக்கு மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள். அந்த பதிநான்கு நாள்களுக்கு தனியாய்ப் பணம் செலுத்திவிடவேண்டும்.

பதிநான்கு நாள்களிலும் விசிட்விசாவோ employment visaவோ கிடைக்கப்பெறாதவர்கள் பத்திரமாய் கிஷ்விமானதளத்திற்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் அமீரகம் அனுப்பப்பட்டு அங்கிருந்து வலுக்கட்டாயமாய்
சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள். இதற்கான எல்லா ஏற்பாடுகளைச் செய்த பின்னரே அமீரக எமிக்ரேஷன், கிஷ் செல்வதற்கான பயண டிக்கட்டைவழங்கும்.

கிஷ் செல்வதற்கான இன்னொரு காரணம், கிஷ் செல்ல விசா வாங்கவேண்டியதில்லை என்பது. பயண டிக்கெட் மட்டும் எடுத்தாலே 14 நாள்கள் தங்குவதற்கான அனுமதியும் சேர்த்துக் கிடைத்துவிடும்.

நான் அமீரகத்திற்கு விசிட்டில் வந்தேன். முதல் மூன்று மாதத்தில் எனக்கு employment visa கிடைக்கவில்லை. வழக்கம்போல கிஷ் போனேன். அப்போது எங்கள் பி ர் ஓ வின் தயவால், செல்லுமுன்னரே அடுத்த விசிட்டிற்கான
விசா எனக்குக் கிடைத்துவிட்டது. இது சட்டப்படி தவறு. னாலும் பிர் ஓ அதை சாதித்துவிட்டார். அதனால் நான் கிஷ்ஷில் கால் வைத்த அடுத்த ஒரு மணிநேரத்தில் அடுத்த விமானம் பிடித்து புதிய விசிட் விசாவில்
துபாய் வந்துவிட்டேன். அதனால் முதல் விசிட்டில் என்னால் கிஷ் தீவின் உள் செல்ல முடியவில்லை. வெறும் விமான நிலையத்தோடு சரி. transit launchல் employment visa கிடைக்குமா கிடைக்காதா என்று யோசித்துக் கொண்டு
இருந்ததோடு எனக்கும் கிஷ்ஷ¤க்குமான முதல் சந்திப்பு முடிந்து போனது.

அடுத்த மூன்று மாதத்திலும் எனக்கு employment visa கிடைக்கவில்லை. மீண்டும் கிஷ்ஷ¤க்கு அனுப்பப்பட்டேன். இந்த பி. ர். ஓவின் ஜம்பம் பலிக்கவில்லை. அதனால் அமீரக எமிக்ரேஷனில் நான் இந்தியா
செல்வதற்குரிய பணத்தைக் காப்புத்தொகையாகச் செலுத்திய பிறகு எனக்கு கிஷ்ஷ¤க்கான டிக்கட் தந்தார்கள். கிஷ்ஷில் இறங்கும்போது இரவு 2.30. வழக்கம்போல இந்த முறையும் employment visa கிடைக்காது
என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. இரண்டு நாளாய் விசிட் விசாவும் கிடைக்காமல் போனது எதிர்பாராதது. ரெண்டு நாளாய் சாப்பிட வெஜிடேரியன் ஐட்டங்கள் எதுவும் கிடைக்காமல் நான் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது.
வெஜிடேரியன் என்றாலே என்னவென்று தெரியாதெனப் பார்த்த ஹோட்டல்காரர்கள்அதிகம். வெறும் பிரட்டும் சாஸ¤ம் பழங்களும் தாம் என்னைக் காப்பாற்றியது.

கிட்டத்தட்ட எல்லா இரானிகளுக்கும் ஹிந்தியும் பார்ஸியும் நன்றாய்த் தெரிந்திருந்தது. எனக்குத் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே. அதுவேறு இன்னொரு கஷ்டம். எல்லா திராவிடத் தலைவர்களையும் மனதிற்குள் திட்டித்
தீர்த்தேன். ஒருவழியாய் புதிய விசிட் விசா கிடைக்க, அதிகம் தங்கிய இரண்டு நாள்களுக்கானப் பணத்தைக் கட்டிவிட்டு, ஆப்கானிஸ்தான் ரிஷப்சனிலிஸ்ட்க்கு (ஆண்!) நன்றி சொல்லிவிட்டு, துபாய்க்குப் பறந்தேன்.

அந்த முறை கிஷ்ஷில் சந்தித்த நபர்கள் சுவாரஸ்யமானவர்கள். விசிட்டில் வந்து கணவனுடன் சந்தோஷமாய் இருந்ததில் கர்ப்பமாகி மீண்டும் புதிய விசிட் வாங்க வந்த இந்திய பெண்மணி. ஏழுமாதம் என்றாள். அடிக்கடி தலை சுத்துது
என்றாள்.

மருமகள் கர்ப்பமாய் இருந்ததால் அவளுக்கு உதவியாய் இருக்க இந்தியாவில் இருந்து விசிட்டில் துபாய் வந்த மாமியார். கர்நாடகாக் காரர். கண்பார்வை வேறு கொஞ்சம் மங்கல். நான் தான் கை பிடித்து நிறைய இடங்களுக்குக்
கூட்டிச் சென்றேன். தேங்க்ஸ் தேங்க்ஸ் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

இது போல நிறைய சுவாரஸ்யமான மனிதர்கள். நான் சொன்னதெல்லாம் சொற்பமான அளவில் வந்தவர்கள்தாம். அதிகம் வந்தவர்கள் மறுவிசிட் கிடைக்குமா கிடைக்காதா, employment visa கிடைக்குமா கிடைக்கதா
என்று (என்னைப்போல்) ஏக்கத்திலிருந்தவர்கள்.

இவர்களைப் பார்த்தவுடன் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். முகத்தில் எழுதி ஒட்டியிருக்கும். ஊருக்குப் புதுசா என்று எளிதில் கேட்டுவிடக்கூடிய தோற்றத்தைக் காண்பித்துக்கொண்டு இருப்பார்கள். தமிழ் பேசுறவர் யாராவது இருக்குறாங்களா என்ற நோட்டம். (அதாவது தாய்மொழி). இப்படிப் பல விஷயங்கள்.

நான் சென்ற கிஷ் 18 மாதங்களுக்கு முந்தியது. இப்போது நிறைய மாறிவிட்டதாம். நேற்று கிஷ் சென்று வந்தவர் சொன்ன விஷயங்கள் சந்தோஷமாயும் கொஞ்சம் மலைப்பாயும் இருந்தன.

“அட நீங்க வேற.. நீங்க போன கிஷ் எல்லாம் மாறிப்போச்சு.. இப்ப அது ஒரு குட்டி இந்தியத் தீவு. மலையாளிங்க சாயாக் கடையும் ஹோட்டலும் வெச்சிருக்காங்க. வெஜிடபிள் பாரிக்கும் (அதாவது வெஜிடேரியன், பச்சரிசிச் சோறு), மோட்டாவும் ஈஸியாக் கிடைக்குது. ஹோட்டல்ல ஏகப்பட்ட வசதிங்க.. பொண்ணு கூடக் கிடைக்குது”

“அது நான் போகும்போதே கிடைச்சுதுங்க.. ஒடம்புக்கு ஆகாதுன்னு நாந்தான் வேணானுட்டேன்”

“குறுக்கப் பேசாம கேளுங்க.. ஹோட்டலுக்குப் போன ஒடனே டிவிய ஆன் பண்ணா எல்லாம் மேற்படி சமாச்சாரம். ஆனா ரொம்ப ஒண்ணும் அதிகாமா காமிக்கலை”

“நெசமாவா?”

“ஆமாங்கறேன். மெல்ல விசாரிச்சா 5 திர்ஹாம் கொடுத்தா சுமாரா காண்பிப்பாங்களாம். 8 திர்ஹாம் கொடுத்தா கொஞ்சம் நல்லா இருக்குமாம். பத்து திர்ஹாம்னா சூப்பராம்.”

“சே.. நான் போகும்போது இப்படியெல்லாம் ஒண்ணும் இல்லாமப் போச்சே..”

‘”ங்களுக்கு மச்சம் இல்லைங்க.. நான் எட்டு திர்ஹாம் கொடுத்துப் பார்த்தேன். அதுக்கே இப்படின்னா பத்து திர்ஹாம் கொடுத்திருந்தா.. எப்பா..”

“மிஸ் பண்ணிட்டீங்களே..”

“அதனால என்ன. இப்பவும் விசிட்ல தான் வந்திருக்கேன். அடுத்த விசிட்டுக்கு அங்கதான போவணும்.. அப்பப் பார்த்துக்குட்டாப் போச்சு”

இப்போதெல்லாம் விசிட்டில் செல்பவர்கள் சீக்கிரம் மறு விசிட்டோ employment visa வோ கிடைத்துவிடக்கூடாது என்றுதான் வருத்தப்படுகிறார்களாம்.

இந்தியர்கள் எந்த இடத்தையும் இந்தியாவாக்காமல் விட்டுவிடுவதில்லை.

எட்டிக்காயாய் இருந்த கிஷ் ரிலாக்ஸிங்க் இடமாக மாறிவிட்டது.

அன்புடன்
பிரசன்னா

பி.கு. எனக்கு எம்ப்ளாய்மெண்ட் விசா கிடைத்தபோது மீண்டும் கிஷ் செல்வேன் என நினைத்திருந்தேன். அந்த ஆப்கானிஸ்தான் நண்பரை மீண்டும் சந்திக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால் என் கம்பெனி என் பணியின் அவசரம் மற்றும் அவசியம் கருதி என்னை மஸ்கட் சென்று வரச் சொல்லிவிட்டது. மஸ்கட் செல்வது
என்பது ஒரு சுவையான விஷயம். இது மாதிரி விசா மாற்றுவர்களுக்காக மட்டுமே ஒரு ஏர்வேஸ் செயல்படுகிறது. மஸ்கட் சென்று வர இந்திய ரூபாயில் 7000 வரை கும். நீங்கள் செய்யவேண்டியது விசிட் விசாவை
ஒப்படைத்துவிட்டு பாஸ்போர்ட்டில் எக்ஸிட் அடித்து வாங்கிக்கொண்டு மஸ்கட் செல்லும் விமானத்தில் ஏறவேண்டியது. அது உங்களைத் தூக்கிக்கொண்டு மஸ்கட் பறக்கும். மஸ்கட்டின் விமான ஓடுதளத்தில்
தரையிறங்குவது மாதிரி இறங்கி, தரையைத் தொடாமல் மீண்டும் வானத்தில் ஏறும். மீண்டும் உங்களைத் துபாய் கொண்டு வந்து விட்டுவிடும். அதாவது ஒண்ணரை மணிநேரம் நீங்கள் விமானத்தில் மட்டும் இருந்தால் போதும்.
மஸ்கட்டில் தரையிறங்காமல் விசா மாற்றம் முடிந்துவிடும்!!! எல்லாம் காசு பிடுங்கும் வேலை. இதற்கு பாஸ்போர்ட்டில் எக்ஸிட் அடித்துவிட்டு, ஒரு ஓரமாய் ஒரு மணிநேரம் ஓரமாய் உட்காரச்சொல்லி மீண்டும் இன் அடித்துக்
கொடுத்தால் போதாதா? விமானத்தில் பறக்கும் அபாயமாவது மிச்சமாகும்! ஆனால் நாம் ரோமில் இருக்கும்போது ரோமியர்களாத்தான் இருக்கவேண்டும்.

Share