Archive for பொது

Zoho Social

1 கல்லில் 6 இல்ல 7 மாங்காய்

ஸோஹோ சோஷியல் என்று ஒரு வசதி இருக்கிறது. இது ஆப்பாகவும் கிடைக்கிறது. ஒரே நேரத்தில் ஃபேஸ்புக்கில், டிவிட்டரில், லின்க்ட் இன்னில், இன்ஸ்டாகிராமில், திரெட்டில், வாட்ஸப் பிஸினஸில் போஸ்ட் செய்யும் வசதியைத் தருகிறது. இது ஒரு சாதனை. ஆனால் சில க்-கன்னாக்களும் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

முதலில் ஸோஹோ சோஷியலில் லாகின் செய்து கொண்டு, உங்கள் ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், திரெட் மற்றும் லின்க்ட் இன் ப்ரொஃபைலைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு தடவை இதைச் செய்தே ஆகவேண்டும். (வாட்ஸப் பிஸினஸ் நான் இன்னும் சோதிக்கவில்லை.)

நீங்கள் ஏதேனும் ஒன்றை அடிப்படையாக வைத்து இதைச் செய்யவேண்டும். அதாவது ஃபேஸ்புக்கை அடிப்படையாக வைத்துச் செய்து, மற்ற சோஷியல் மீடியாக்களைச் சேர்த்துக் கொள்ளலாம். அடிப்படையான விஷயம் இனி உங்கள் ப்ராண்ட் என அழைக்கப்படும். நான் ஹரன் பிரசன்னா என்ற ஃபேஸ்புக்கை அடிப்படையாக வைத்துச் செய்தால், என் பிராண்ட் ஹரன் பிரசன்னா.

இதில் உள்ள சிக்கல் என்ன? ஃபேஸ்புக் ப்ரொஃபைலைச் சேர்க்க முடியவில்லை. மாறாக அந்த ஃபேஸ்புக் ப்ரொஃபைலை அடிப்படையாக வைத்துத் தொடங்கப்பட்ட ஃபேஜ் மட்டும்தான் சேர்க்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, என் ப்ரொபைலுக்கு 15 ஆயிரம் ஃபாலோயர்ஸ். ஆனால் ஹரன் பிரசன்னா என்னும் பேஜ்ஜுக்கு 1000 பேர் கூடக் கிடையாது. என்னால் இந்த பேஜுக்குத்தான் ஸோஹோ சோஷியல் வழியாக போஸ்ட் போடமுடிகிறது. இது ஒரு சறுக்கல்.

இது தொடர்பாக ஸோஹோ கஸ்டமர் சர்வீஸில் பேசினேன். நீண்ட நேரம் விளக்கினேன். அத்தனையும் கேட்டுவிட்டு, இதை அப்படியே மடல் போடுங்கள் என்றார்கள். போர் அடித்ததால் மடல் போடவில்லை. இதை அடுத்து ஒரு காமெடி நடந்தது. ஸோஹோவில் இருந்து தினமும் ஒரு மிஸ்ட்கால் வரும். அவ்வளவுதான். அதாவது அவர்கள் என்னைத் தொடர்புகொண்டுவிட்டதாக ஒரு தோற்றம் வருவதற்காக இதைச் செய்வார்கள் போல. இப்படித்தான் ஃப்ளிப்கார்ட் அமேஸான் எல்லாம் செய்து நாசமாகப் போயின.

இது குறித்து எனக்குப் பெரிய கவலை இல்லை. ஏனென்றால், மேலே சொன்னவை அனைத்தும் இப்போதைக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. எனக்கு அது போதும்.

இன்னும் உள்ள சில சிக்கல்கள் என்ன? அது எல்லாவற்றிலும் உள்ளது. நீங்கள் டிவிட்டரில் 240 டெக்ஸ்ட் மட்டும்தான் போடமுடியும் என்றால், இந்த ஸோஹோ சோஷியல் மூலமாகப் போடும்போதும் அவ்வளவுதான் போட முடியும். இதுவேதான் திரெட் மற்றும் இன்ஸ்டாகிராமிலும். இது உங்கள் பிரச்சினை. ஸோஹோவின் பிரச்சினை அல்ல.

இன்ஸ்டாகிராமில் கூடுதல் சிக்கல், புகைப்படம் இருந்தாகவேண்டும். அந்தப் புகைப்படமும் இன்ஸ்டாவின் விதிக்கு உட்பட்டு இருக்கவேண்டும். அதையும் எடிட் செய்யும் வசதியை ஸோஹோ சோஷியல் தந்திருக்கிறது என்பது கூடுதல் வசதி.

ஃபேஸ்புக்கிலேயே இரண்டு மூன்று பேஜ்களுக்குப் போடவேண்டும் என்றால் என்ன செய்வது? உதாரணமாக, நான் புதிய புத்தக அறிவிப்பை என் ஃபேஸ்புக் பேஜ் மற்றும் சுவாசம் ஃபேஸ்புக் பேஜ்ஜில் போடவேண்டும் என்றால் என்ன செய்வது? செய்யலாம். இங்கே நீங்கள் பணம் கட்டி சந்தா வாங்க வேண்டி இருக்கும். இலவசம் கிடையாது. நீங்கள் இரண்டு பிராண்டை அல்லது பல பிராண்டுகளைப் பணம் கட்டி வாங்கினால், இது அனைத்தும் சாத்தியம். கூடவே, ஆட் ஆன் ஆப்ஷனும் தந்திருக்கிறார். வேண்டியதை மட்டும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், அது ப்ரைமரி அக்கவுண்ட்டில் மட்டுமே சாத்தியம். இதில் கூடுதல் வசதி, யூ டியூபிலும் போஸ்ட் செய்யலாம். ஆம், 1 கல்லில் 7வது மாங்காய்!

இந்த ப்ரைமரி அக்கவுண்ட்டில் கூடுதல் வசதி, அங்கே இருக்கும் டேஷ் போர்டிலேயே நீங்கள் உங்கள் போஸ்ட் தொடர்பான அத்தனை அறிக்கைகளையும் பார்க்கலாம்! எத்தனை போஸ்ட் கூடுதலாகப் போட்டிருக்கிறோம், எத்தனை பேர் லைக், எத்தனை கூடுதல் லைக், இத்யாதி…

ஒரு நிறுவனத்துக்கு இது பெரிய வசதி. ஒரே க்ளிக்கில் அனைத்து சோஷியல் மீடியாக்களிலும், வாட்ஸப் பிஸினஸிலும் போஸ்ட் போட்டுவிடலாம். கொஞ்சம் செலவுதான். ஆனாலும், நேர விரயம், ஒவ்வொன்றாக லாகின் ஆகி ஒவ்வொரு போஸ்ட்டாகப் போடும் எரிச்சல் எல்லாம் மிச்சமாகும்.

ஒரு புத்தக அறிவிப்பை நான் என்னவெல்லாம் செய்கிறேன்? முதலில் என் ப்ரொஃபைலில் ஒரு போஸ்ட்டாகப் போடுகிறேன். பின்னர் என் பேஜில். பின்னர் டிவிட்டரில். பின்னர் சுவாசம் ஃபேஸ்புக் பேஜில். பின் சுவாசம் டிவிட்டர் பேஜில். பின் என் இன்ஸ்டாகிராமில். பின்னர் சுவாசம் இன்ஸ்டாகிராமில். பின்னர் தேவைப்பட்டால் வாட்ஸப் பிஸினசில். இதைச் செய்து முடிக்கும்போது மூளை சோர்ந்துவிடும். இதற்குத் தீர்வுதான் ஸோஹோ சோஷியல்.

ஸோஹோ சோஷியல் உடனே செய்யவேண்டியது என்ன? உடனடியாக ஃபேஸ்புக் ப்ரொஃபைலில் போஸ்ட் செய்யும் வசதியைக் கொண்டு வருவது. இரண்டாவது ப்ராண்டு அல்லது பல ப்ராண்டுகளுக்குக் கொஞ்சம் செலவைக் குறைப்பது. இதைப் பிரபலப்படுத்துவது. இவற்றைச் செய்தால் பெரிய வரப்பிரசாதமான இந்த வசதி பெரிய பெற்றி பெரும் என்பதில் சந்தேகமில்லை.

பின்குறிப்பு: இதை நான் இருபத்து இரண்டரை ஆண்டுகளாகப் பயன்படுத்துகிறேன், இப்பதான் தெரியுமா ஃபேஸ்புக்காரர்களுக்கு என் வாழ்த்துகள்.

Share

Let us Ulaa

உலா போக நீயும் வரணும்

உலா ப்ரவுசரை இரண்டு வாரங்களுக்கு முன்பே நான் நிறுவி இருந்தாலும் அதைப் பெரிய அளவில் பயன்படுத்தவில்லை. காரணம், க்ரோம் தரும் க்ளவுட் வசதி, அது தரும் கடவுச் சொல் பதிவு வசதி, ப்ரவுசிங் ஹிஸ்டரி எனப் பல.

உலாவில் ப்ரவுஸிங் ஹிஸ்டரியை பிசி மூலம் இறக்கிக் கொள்ளும் வசதி இருக்கிறது. மொபைலில் இல்லை. இன்று பொறுமையாக அமர்ந்து, அனைத்து ப்ரவுஸிங் ஹிஸ்டரியையும் க்ரோமில் இருந்து உலாவுக்கு லேப் டாப் மூலம் மாற்றினேன்.

அடுத்து பாஸ்வேர்ட். எத்தனையோ தளங்களுக்கான பாஸ்வேர்ட் எனக்குத் தெரியாது. அனைத்தும் க்ரோமில் பதியப்பட்டு இருக்கின்றன. அனைத்தையும் இரண்டடுக்குப் பாதுகாப்பு மூலம் பாதுகாத்து வைத்திருக்கிறேன். இவை அனைத்தையும் எப்படி உலாவில் கொண்டு வருவது?

க்ரோம் நல்லவன். அனைத்து பாஸ்வேர்டையும் இம்போர்ட் செய்யும் வசதி கொடுத்திருக்கிறான். அதை இறக்கி, உலாவில் ஏற்றினேன். இப்போது உலா ப்ரவுஸிங் ஹிஸ்டரி மற்றும் பாஸ்வேர்ட்களுடன் தயார்.

உலாவில்தான் இரண்டு வாரமாக மொபைலில் உலவுகிறேன் என்றாலும், இன்றுதான் லேப்டாப்பில் உலவினேன். முதல் அனுபவம் எப்படி? அட்டகாசம். அழகான வடிவமைப்பு. கண்ணை உறுத்தாத வடிவம். தொடர்ந்து உலாவைப் பயன்படுத்த உத்தேசம்.

இதன் பாதுகாப்பு பற்றி எனக்கு அதிகம் தெரியாது. நான் டெக்கி அல்ல. ஆனால், ஸோஹோவின் மீதும் ஸ்ரீதர் வேம்புவின் மீதும் நம்பிக்கை உள்ளதால், நிச்சயம் பாதுகாப்புப் பிரச்சினை இருக்காது என்று நம்புகிறேன். இப்படி நம்புபவர்கள் நீங்களும் உலாவுக்கு வாருங்கள்.

என்ன ஒரே ஒரு பிரச்சினை என்றால், என்னை அறியாமல் என் கண்ணும், மௌஸும் க்ரோமைத் தேடுகின்றன. 20 ஆண்டு கால நட்பு!

பின்குறிப்பு: நான் போட்ட அரட்டை போஸ்ட்டைப் பார்த்து அரட்டையில் என்னைத் தொடர்புகொண்ட 200க்கும் மேற்பட்ட நல்லுல்லங்களுக்கு நன்றி. என்ன, பலரை யாரென்றே எனக்குத் தெரியவில்லை. எனவே அரட்டையில் உங்கள் புகைப்படத்தையும், ஃபேஸ்புக்கில் எந்தப் பெயரில் உலவுகிறீர்களோ அந்தப் பெயரையும் வையுங்கள். அப்போதும் எனக்கு ஞாபகம் வராது என்பது என் சாபம். 🙂

Share

Ennepinna

எண்ணேப்பின்னா

இது எங்கள் வழக்கம். பலர் வீட்டில் இப்பழக்கம் இருக்கும். மீந்து போன பழைய சாதத்தை, நல்லெண்ணெய்யும் உப்பும் போட்டுக் கெட்டியாகப் பிசைந்து, அதை உருட்டி, அதில் குழி செய்து, குழம்பு சேர்த்து உண்டால், சொர்க்கம். (இதில், கன்னடத்தில் கரத எண்ணெ எனப்படும், வடை இதியாதி சுட்ட எண்ணெய்யைப் போட்டுப் பிசைந்தால் சுவை இன்னும் கூடும்.)

சுண்ட வைத்தப் பழங்குழம்பு என்றால், அதுவும் கொதிக்க கொதிக்க இருந்தால், சுவை அள்ளும். அதாவது அந்தக் குழம்பு நாக்கில் படும்போது நாக்கு பொள்ளிப் போகவேண்டும்.

எண்ணேப்பின்னா என்றால், எண்ணெய் உப்பு அன்னம் என்று பொருள். சிலர் வழக்கத்தில் எண்ணப்பிட்டன்னா என்றும் எண்ணப்புன்னா என்றும் சிலர் சொல்வதுண்டு.

என் அம்மா கையில் உருட்டித் தருவார். இப்போது நினைத்தாலும் அந்தச் சுவைக்கு நாக்கு ஏங்குகிறது.

அப்போதெல்லாம் பழைய சோறு நிறைய மீந்து போகும். ஏனென்றால் எப்போதும் சாதம் வீட்டில் இருக்கவேண்டும் என்பது ஒரு விதி. கஷ்ட ஜீவனம். பழைய குழம்பும் இதுவும் உண்டால் மதியம் மூன்று மணி வரை பசிக்காது. சுவையும் அள்ளும்.

இப்போதெல்லாம் மதியத்துக்கு உணவு என்றால் அது மதியமே காலியாகும் வகையில்தான் சமைக்கிறோம். எப்போதாவதுதான் இப்படிச் சாப்பிட முடிகிறது. டயட் கவலை வேறு. ஆம், இந்த உணவு என்னைப் போன்ற ஸ்லிம்மிக்களுக்கான உணவு.

Share

Parotta Shop

பரோட்டாக் கடை

திருநெல்வேலியில் என் 20 வயதில் பரோட்டா எனக்குத் தீவிரமாக அறிமுகமாகியது. அதாவது வாரம் ஒரு தடவை பரோட்டா சாப்பிடவில்லை என்றால் கை கால் நடுங்கும் அளவுக்கு. என் நண்பர்களுக்கும் இதேதான். ஞாயிற்றுக் கிழமை இரவானால் அசைவ பரோட்டா சாப்பிடுவது அவர்கள் வழக்கம். அந்த வட்டத்தில் மாட்டிக்கொண்ட ஒரே சைவன் நான்.

திருநெல்வேலியில் சால்னாவுடன் சேர்த்து, தக்காளி அரைத்து ஊற்றிய இன்னொரு வகை குருமாவும் (கிரேப்ஸ்) தருவார்கள். நண்பர்களுடன் சாப்பிடும்போது நான் இதை மட்டும் சாப்பிடுவது வழக்கம். ஏனென்றால் இதில் அசைவம் சேர்க்கப்படாது என்றொரு ’நம்பிக்கை’. (சைவமாக இதுவும் தவறுதான். ஆனால் அன்று அப்படி!)

சில சமயம் நண்பர்களுடன் நான் சைவக் கடைகளுக்குப் போவதுண்டு. அங்கே பரோட்டா குருமா நன்றாக இருந்தாலும் அசைவ நண்பர்களுக்கு ஏனோ செட்டாகாது. ஆனாலும் எனக்காக வருவார்கள்.

ஒருநாள் இனி அசைவக் கடைகளில் சாப்பிடுவதில்லை என முடிவெடுத்தேன்.

எனக்கு ஒரு வழக்கம் என்னவென்றால், பரோட்டாவுக்குக் கட்டிச் சட்னி வைத்துச் சாப்பிடுவது. அசைவக் கடையில் இது கிடைக்காது. சைவக் கடைகளில் கிடைக்கும். எந்தச் சைவக் கடைக்குப் போனாலும் இப்படிச் சாப்பிடுவேன். ரகுவிலாஸில் ஒருவிதப் புதினாச் சட்னி தருவார்கள். ஆனால் சைவக் கடைகளில் பரோட்டா விலை அதிகம். அசைவக் கடைகளில் பரோட்டா 1 ரூபாய் என்றால், இங்கே ஒரு பரோட்டா 10 ரூ. ஆனால் பரோட்டா பெரியதாக இருக்கும்.

அப்போதுதான் டவுணில் முத்து பரோட்டாக் கடை ஒன்று உதயமானது. அசைவ ஸ்டைலில் ஒரு சைவக் கடை. சைவ பரோட்டா 2 ரூபாய் மட்டுமே. உடனே அங்கே போக ஆரம்பித்தோம். கடை ஆரம்பித்த புதிது என்பதால் பட்டாணி எல்லாம் போட்டு பிரமாதமாக இருக்கும் குருமா.

அந்தக் கடை சிறிய கடை. 10க்குப் 10 கடை. உள்ளேயே மரப்படி அமைத்து மாடியில் உணவு தயாரிக்கும் இடம். அங்கே இருந்து ஒவ்வொரு தடவையும் ஓனர் கீழே வந்து பரிமாறுவார். இரண்டே பேர். பரிமாற, பில் செய்ய ஓனர். மேலே மாஸ்டர்.

நான் கட்டிச் சட்னி கேட்பேன். பரோட்டாவுக்குத் தருவதில்லை என்றாலும், எங்களைத் தவிர வேறு யாரும் அந்தப் பரோட்டாக் கடையை எட்டிப் பார்ப்பதில்லை என்பதால், எங்களையும் விட்டுவிடக் கூடாது என்பதற்காக, ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சூண்டு கட்டிச் சட்னி தருவார் ஓனர். ஆனால் நாங்கள் விடாமல் கட்டிச் சட்னி கேட்டுக்கொண்டே இருப்போம். ஒவ்வொரு முறையும் மாடிப்படி ஏறி அங்கிருந்து கொஞ்சூண்டு கட்டிச் சட்னி கொண்டு வருவார். எங்களுக்கே சங்கடமாக இருக்கும். ஆனாலும் கட்டிச் சட்னி, குருமா என்று கேட்டுக்கொண்டே இருப்போம். அவரும் சின்ன சின்ன கிண்ணங்களில் தருவார். சரியான கஞ்சன் அவர்!

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்ததும் நாங்களே பேசிச் சிரித்துக்கொள்வோம். என் நண்பர்கள் என்னை, ‘இவரு பெரிய இவரு, கட்டிச் சட்னி இல்லாம சாப்பிட மாட்டாரு’ என்றெல்லாம் ஓட்டுவார்கள்.

ஒருநாள் திடீரென அந்த முத்து பரோட்டாக் கடை மூடப்பட்டது. ஆறு மாதம் கூட அங்கே அந்தக் கடை செயல்பட்டிருக்கவில்லை. நாங்கள் சாப்பிடப் போனபோது கடை அங்கே இல்லாததைப் பார்த்து அத்தனை நண்பர்களும், ‘கட்டிச் சட்னி கேட்டுக் கடையையே மூடிட்டியே மக்கா’ என்று சொல்ல ஆரம்பித்து, அதுவே நிலைத்தும் போனது.

பெரிய கடைக்குப் போய் பரோட்டா சாப்பிடும்போது நான் கட்டிச் சட்னி கேட்டால் உடனே நண்பர்கள், ‘ஏல! இந்தக் கடையாவது இருக்கட்டும், ப்ளீஸ்” என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

பின்னொரு சமயம் தூத்துக்குடியில் பேருந்து நிலையத்தில் முத்து பரோட்டாக் கடை ஓனரைப் பார்த்தேன். தலையில் கர்ச்சீஃப் போட்டுக்கொண்டு கையில் ஒரு பையுடன் பரபரப்பாக எங்கோ போய்க்கொண்டிருந்தார். ‘சொல்லாம கொள்ளாம மூடிட்டேளே, தூத்துக்குடியில் கடை போட்டுருக்கேளா’ என்று கேட்க நினைப்பதற்குள் ஆள் மாயமாக மறைந்துவிட்டார்.

நேற்று அரட்டை ஆப் பற்றிச் சொன்னதும், நண்பர்கள் அரட்டையில்(லும்!) ஒரு க்ரூப் ஆரம்பித்துவிட்டார்கள். அதன் பெயர், ‘பரோட்டா கெட்டிச் சட்னி’.

நண்பர்களின் மனதை ரொம்பவே காயப்படுத்தி இருக்கிறேன் போல. ஆனாலும் இன்றுவரை பரோட்டா குருமாவுக்குக் கட்டிச் சட்னி எனக்கு வேண்டும்.

Share

Arattai app

என் நண்பர்கள் என்னை அரட்டை ஆப்பில் தொடர்பு கொள்ளலாம். 🙂

அரட்டை நன்றாகவே இருக்கிறது. பல சின்ன சின்ன விஷயங்கள் அசத்தலாகவே இருக்கின்றன.

அரட்டை என்றால் என்ன? வாட்ஸப் போன்ற ஒரு ஆப். இந்திய ஆப். ஃபோன் நம்பர் இருந்தால் எப்படி வாட்ஸப் பயன்படுத்துகிறோமோ அப்படி இதைப் பயன்படுத்தலாம்.

வாட்ஸப்புடன் ஒப்பிடும்போது என்ன இல்லை என்று பார்த்தால்…

* வாட்ஸப்பில் பணம் அனுப்பும் வசதி இருந்தது. இதில் இல்லை. பெரிய குறை எனக்கு இது. ஃபீட்பேக் அனுப்பி இருக்கிறேன்.

* டூயல் ஆப் வசதி வாட்ஸப்புக்கு ஆண்ட்ராய்டில் வருகிறது. அரட்டைக்கு வருவதில்லை. வேறு எந்த வழியில் அரட்டை ஆப்பை டூயல் ஆப்பாக வைப்பது என்று தெரியவில்லை. அரட்டை ஆப்பின் நோக்கில் இது மிக முக்கியமானது. இல்லையென்றால், அரட்டை ஆப்பும் வாட்ஸப்பும் ஆப்பும் தேவை என்றாகிவிடும்.

* பிசினஸ் விஷயங்களில் அரட்டை ஆப்பை எந்த அளவுக்குப் பயன்படுத்தமுடியும் என்று தெரியவில்லை. சொல்லி சொல்லித்தான் மற்றவர்களை மாற்றவேண்டும். அது நடக்காது. அந்த விஷயத்தில் வாட்ஸப் தொடவே முடியாத உயரத்தில் உள்ளது.

* அரட்டை ஆப்பில் ஸூம் போன்ற மீட்டிங் வசதிகள் கிடைக்கின்றன. மிக முக்கியமாக, 40 நிமிட எல்லை இல்லை என நினைக்கிறேன். அதைவிட முக்கியம், மொபைல் ரெக்கார்டிங், மொபைலில் சேமிக்கும் வசதி இருக்கிறது. எத்தனை எம்பி சேமிக்க முடியும் என இன்னும் சோதிக்கவில்லை. இந்த மீட்டிங் வசதி அட்டகாசம். அதாவது கூகிள் மீட்டும் வாட்சப்பும் இணைந்த வசதி அரட்டையில் கிடைக்கிறது.

* சில சமயம் வாட்ஸப்பில் நோட்டிஃபிகேஷன் வரவில்லை என்றால், அதை ஃபிக்ஸ் செய்வதற்குள் தாவு தீர்ந்துவிடும். ஆனால் அரட்டை ஆப்பில் அதை ஃபிக்ஸ் செய்ய எளிதான வழி கொடுத்திருக்கிறார்கள். அதுவே செட்டிங்க்ஸை சோதித்து என்ன செய்யவேண்டும் என்று சொல்லிவிடுகிரது. இது அட்டகாசம். நோட்டிஃபிகேஷன் வரவில்லை என்ற நண்பர்களுக்கு இதை அனுப்பி இருக்கிறேன்.

* இனி வரப் போவதுதான் அரட்டையின் ஆகப் பெரிய குறை. பல வெளிநாட்டு வாழ் நண்பர்கள், ஓடிபி வரவில்லை, எனவே இந்த ஆப்பை நிறுவமுடியவில்லை என்றார்கள். நிர்வாகம் உடனே இதைச் சரி செய்வது நல்லது.

* வாட்ஸப்பில் நமக்கு நாமே மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் வசதி இருக்கிறது. மிக முக்கியமானது இது. இது அரட்டையில் இல்லை. ஃபீட் பேக் அனுப்பி இருக்கிறேன். பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் என. அதற்குப் பதிலாக பாக்கெட் என்றொரு வசதி இருக்கிறது. சில பல வருடங்களுக்கு முன்பு பாக்கெட் என்றொரு ஆர் எஸ் எஸ் ஃபீடை சேமித்துப் படிக்கும் வசதி இருந்தது. மிக உபயோகமானது. அப்போதெல்லாம் ஆன்லைன் லின்க்கை க்ளிக் செய்து பாக்கெட்டில் சேமித்தால் அதை எப்போது வேண்டுமானாலும், ஆஃப்லைனிலும் படித்துக்கொள்ளலாம். அதைப் போன்ற வசதி என நினைத்தேன். ஆனால் இதை எப்படிப் பயன்படுத்துவது என்று இப்போதுவரை தெரியவில்லை. இன்னும் ஆழமாகச் சோதித்துப் பார்க்கவேண்டும்.

  • அரட்டை குரூப்பிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. அல்லது எனக்குத் தான் பார்க்கத் தெரியவில்லையா என தெரியவில்லை குரூப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினால் அதில் இன்ஃபோ சென்று பார்த்தல் யார் யாரெல்லாம் அந்த மெசேஜை பார்த்து இருக்கிறார்கள் அல்லது ஆடியோ மெசேஜ் ப்ளே செய்து இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்க முடியும். அந்த வசதி அரட்டையில் இல்லை என நினைக்கிறேன்.

* வாட்ஸப்பில் ஸ்டேட்டஸுக்குப் பெரிய அளவிலான விசிறிகள் உண்டு. மெசேஜைப் பார்க்காவிட்டாலும் ஸ்டேட்டஸைப் பார்க்காவிட்டால் செத்துப் போய்விடுவார்கள் என்னும் அளவுக்கு. அரட்டையில் அது ஸ்டோரீஸ் என்று இருக்கிறது. ஆனால் என்னைத் தவிர ஒருவரும் ஸ்டோரி வைக்கவில்லை. 🙂

* வாட்ஸப்பில் ரிமைண்டர் ஆப்ஷன் கிடையாது. அரட்டையிலும் இல்லை. இதை மட்டும் அரட்டை கொண்டு வந்து, இதை அடிப்படையாக வைத்து விளம்பரம் செய்தால், பெரிய அளவில் ரீச் ஆகும் வாய்ப்பு இருக்கிறது. இதையும் ஃபீட்பேக்காக அனுப்பி இருக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பும் நண்பர்கள் அரட்டைக்கு வாருங்கள்!

Update

அரட்டை ஆப் குறித்து எழுதி இருந்தேன். அதில் இருக்கும் முக்கியக் குறைபாடு ஒன்றையும் சொல்லியாக வேண்டும். அதாவது தனிப்பட்டுச் சொல்ல வேண்டிய அளவுக்கு முக்கியமான குறைபாடு.

ஒரு சாட்டிலோ அல்லது ஒரு குழுவிலோ பிறர் அனுப்பும் மெசேஜை நாம் நமக்கு மட்டும் டெலிட் செய்து கொள்ளும் வசதி இல்லை. இந்த வசதியை எப்படி அதில் ஏற்படுத்தாமல் விட்டார்கள் எனத் தெரியவில்லை. இது மிகவும் அடிப்படையானது.

பலர்‌ அனுப்பும் மெசேஜில் ஒரு மெசேஜைப் படித்து விட்டோம் அல்லது நமக்குத் தேவையில்லை அல்லது பிரைவசி காரணமாக, அந்த மெசேஜை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக, அந்த மெசேஜை மட்டும் டெலிட் செய்யும் வசதி கூட இல்லாமல் ஓர் ஆப்பை எப்படிப் பயன்படுத்துவது?

உண்மையில் அரட்டை ஆப்பைத் தொடர்ந்து பயன்படுத்தத்தான் வேண்டுமா என்னும் கேள்வியை எழுப்பும் அளவிற்கான குறைபாடு இது.

ஃபீட்பேக் அனுப்பி இருக்கிறேன். சரி செய்வார்களா எனத் தெரியவில்லை. நண்பர்கள் அனைவரும் இந்த முக்கியமான குறைபாட்டை உடனே சரி செய்யச் சொல்லி ஃபீட்பேக் அனுப்புங்கள்.

சுதேசியாக இருப்பதைவிட முக்கியமானது, சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது.

Share

Sri Raman and Vairamuthu

திகைத்தனை போலும் செய்கை

திகைத்தனை என்ற சொல்லுக்கு, மதி மயங்கிச் செய்தல் என்ற ஒரு பொருளும் உண்டு என்பதைக் கண்டுபிடித்துவிட்டு, தனக்கு ஏற்றவாறு வைரமுத்து அடித்துவிட்டிருக்கிறார்.

தன் மனைவியைப் பிரிந்த ராமன், எது நியாயம் என்று தெரியாமல், மனைவியைப் பிரிந்த மதி மயக்கத்தில் தன் மீது மறைந்திருந்து அம்பெய்துவிட்டான் என்பது வாலி சொல்லும் குற்றச்சாட்டு. பின்னர் வாலியே ராமனைக் கடவுள் என்று புரிந்துகொண்டுவிட்டான். இது உண்மையில், ராமனைக் கடவுள் என்று அறியாமல், தன் மேல் அம்பு பாய்ந்த மதி மயக்கத்தில் வாலி சொல்வது!

உண்மையில் ராமன் மதி மயங்கித்தான் இதைச் செய்தாரா? இல்லவே இல்லை. முதலில் ராமன் சுக்ரீவனை வாலியுடன் சண்டைக்குச் செல்லச் சொல்கிறார். ஆனால் அன்று ராமன் வாலி மீது அம்பெய்யவில்லை. வாலி சுக்ரீவனை வெளுத்து அனுப்புகிறான். ஏன் அம்பெய்யவில்லை என்று சுக்ரீவன் கேட்டபோது, இருவரில் யார் வாலி என்று தனக்குப் பிடிபடவில்லை என்று சொல்லும் ராமன், மறுநாள் சுக்ரீவனை ஒரு மாலை அணிந்துகொண்டு வாலியுடன் சண்டைக்குச் செல்லச் சொல்கிறான். இதுவா மதி மயங்கிச் செய்வது? இது சிறப்பாக யோசித்துச் செய்வது. சீதையின் பிரிவால் மனம் வாடிச் சோர்வுற்றுக் கிடந்தாலும் ராமன் மதி மயங்கிக் கிடக்கவில்லை. மதி மயங்கவே இல்லை என்னும்போது, எங்கே புத்தி சுவாதினம் இல்லாமல் போவது?

பின்னர் ஏன் வைரமுத்து போன்றவர்கள் இப்படி வாய்க்கு வந்ததை உளறுகிறார்கள்?

இவர்களுக்குத் தெரிந்த இலக்கியம் இவ்வளவுதான். இதே வைரமுத்துவின் இன்னொரு பேச்சு யூடியூபில் கிடைக்கிறது.

அதில் வைரமுத்து சொல்கிறார். கருணாநிதியும் இவரும் லிஃப்ட்டில் போகிறார்கள். லிஃபிட்டில் ஐந்து பேர் இருக்கிறார்கள். ஆறாவதாக ஒருவர் லிஃப்ட்டுக்குள் ஏறுகிறார். லிஃப்ட் அதிகப் பளு காரணமாக இயங்காமல் போக, ஒருவர் வெளியேற வேண்டியதாகிறது. பின்னர் லிஃப்ட் கிளம்பவும் கருணாநிதி சொன்னாராம், லிஃப் பாஞ்சலி போல, ஐந்து பேரை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என்றாராம். இவர்களுக்குத் தெரிந்த இலக்கியம் இவ்வளவுதான். எதையும் உடலுடன் முடிச்சுப் போடுவது. இதைக் கற்றதே இவர்கள் செய்த சாதனை. எத்தனை பெரிய காவிய நாயகி என்றாலும் உடலும் உடலுறவுமே பிரதானம். ஏனென்றால் இவர்கள் புத்தி எப்போதும் இருப்பது அதற்குள்ளே மட்டும்தான். இவர்களிடம் என்ன தீவிரமான இலக்கிய ஆய்வை எதிர்பார்த்துவிட முடியும்?

வைரமுத்து சொல்கிறார், புத்தி சுவாதீனம் இல்லாமல் ராமன் வாலி வதம் செய்தது தவறில்லையாம், ஏனென்றால், இன்றைய சட்டம் அதைச் சொல்கிறதாம். அடித்துவிடுவது என்றானபின்பு, என்ன வேண்டுமானாலும் பேசலாம். இன்றைய சட்டத்தை அன்றே ராமன் கணித்தானா? விவாதிப்போம்!

மதி மயங்கிச் செய்வதும் புத்தி சுவாதீனம் இல்லாமல் ஒருவன் செய்வதும் ஒன்றல்ல. ராமன் மதி மயங்கிச் செய்ததல்ல வாலி வதம். அது வாலிக்கே தெரியும். புத்தி சுவாதீனம் இல்லாமல் செய்வது என்றுமே ராமனல்ல. இப்படி பேசித் திரியும் வைரமுத்துக்களே.

Share

infinix blocked in UAE

அலறவிட்ட அபுதாபி

கடந்த சனிக்கிழமை அன்று அதிகாலை அபுதாபியில் விமானம் தரையிறங்கும் போது மனதுக்குள் ஓர் எண்ணம். ஒரு டைரியில் சில போன் நம்பர்களைக் குறித்து வைத்துக் கொண்டிருக்கலாமே என்று நினைத்தேன். அடுத்த நொடியே, இனி ஏன் குறித்து வைக்க வேண்டும், அதுதான் அபுதாபியில் தரையிறங்கி விட்டோமே என்றும் நினைத்துக் கொண்டேன்.

தரையிறங்கிய உடனே ஜெயக்குமாருக்கு மெசேஜ் அனுப்பவில்லை. அவர் தூங்கட்டும். இறங்கி இமிகிரேஷன் அடித்து விட்டு நமது லக்கேஜ் எல்லாம் எடுத்துக் கொண்ட பிறகு அவருக்குச் சொல்லலாம் என நினைத்திருந்தேன். லக்கேஜ் அருகில் வந்தேன். அவருக்கு மெசேஜ் அனுப்ப எனது போனில் இலவச வைஃபை கனெக்ட் செய்தேன். அடுத்த நொடி என்னுடைய போன் லாக் ஆகிவிட்டது. அதாவது தடை செய்யப்பட்டு விட்டது.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. எத்தனை செய்தும் அதை சரி செய்ய முடியவில்லை. லக்கேஜை எடுத்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தேன். வெக்கை முகத்தில் அடித்தது.

ஜெயக்குமார் உட்பட யாருடைய எண்ணும் என்னிடத்தில் இல்லை. அங்கே இருந்து வாட்ஸ் அப்பில் இன்னொருவர் போன் மூலம் என் மனைவியை அழைக்கலாம் என்றால், வாட்ஸ் அப் கால் அங்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு என் மனைவி இன்டர்நெட்டை ஆஃப் செய்து வைத்திருந்தாள்.

ஒரு வழியாக ஒருவரைப் பிடித்து இந்தியாவுக்கு ஃபோன் செய்ய வேண்டும் என்று கேட்டேன். இந்தியர்தான். வடநாட்டுக்காரர். ஏதோ யோசித்தவர் சரி என்று ஃபோனைக் கொடுத்துவிட்டார். என் மனைவிக்கு ஃபோன் செய்து அவளை எழுப்பினேன். விஷயத்தை சுருக்கமாகச் சொல்லி வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் பார் என்று சொல்லித் துண்டித்து விட்டேன்.

அருகில் இருந்த இன்னொரு தொழிலாளி நண்பர் தமிழ்நாட்டுக்காரர் அவருடைய வாட்ஸ் அப்பில் இருந்து என் மனைவி எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப உதவினார். உடனடியாக ஜெயக்குமார் எண்ணை எனக்கு அனுப்பு என்று சொன்னேன். அவள் அனுப்பிய அந்த நம்பரைப் பார்த்துவிட்டு மனனம் செய்து கொண்டேன். மீண்டும் அதே நண்பர் போனிலிருந்து whatsapp மூலமாக ஜெயக்குமாருக்கு இன்னொரு மெசேஜ் அனுப்பினேன். அவர் விமான நிலையத்துக்கு வந்து விட்டதாகவும் ஐந்தாவது கேட்டுக்கு வருகிறேன் என்றும் சொன்னார். உதவிய நண்பரை வழி அனுப்பி வைத்துவிட்டு அவருக்குக் காத்திருந்தேன்.

ஐந்து நிமிடத்தில் வந்து விட்டார் ஜெகே. இது அனைத்தும் நடந்து முடிய 45 நிமிடங்கள் ஆகி இருந்தன. அந்த 45 நிமிடங்களில் என்னை நானே நினைத்து நொந்து கொண்டேன். ஒழுங்காக ஒரு டைரியில் ஃபோன் என்னை எழுதி வைத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் அத்தனை பிரச்சினைகளும் ஒரே நொடியில் தீர்ந்திருக்கும்.

என் ஃபோன் செத்தது செத்ததுதான். எனக்கு எல்லாமே கைவிட்டுப் போனது போல் இருந்தது. அந்த ஃபோனை நம்பித்தான் நான் அபுதாபிக்கே வந்திருந்தேன். என்னுடைய ஃபோன் இன்பினிக்ஸ் ஃபோன். இன்பினிக்ஸ் இங்கே அனுமதி இல்லையாம்.

நாங்களும் இந்த ஃபோனை சரி செய்ய நான்கு ஐந்து கடைகளுக்கு ஏறி இறங்கினோம். யாருமே சரி செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். ஃபோன் ஆன் செய்தால் ஸ்கிரீனில் ஒரு மெசேஜ் வந்தது. இப்படிச் செய்தால் உங்கள் ஃபோனை சரி செய்யலாம் என்றது. அதற்கு ஃபோனின் ஆதி முதல் அந்தம் முறை அனைத்தையும் கேட்டார்கள். எப்போது வாங்கியது எங்கே வாங்கியது அதன் இன்வாய்ஸ் எனது போர்டிங் பாஸ் என எல்லாவற்றையும் கேட்டார்கள். எப்படியோ சகலத்தையும் கொடுத்து, அன்லாக் கிளிக் செய்தேன். காத்திருங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

தினமும் மூன்று முறை அன்லாக் ஆகிவிட்டதா என செக் செய்வேன். ஃபோன் அப்படியே பிளாக் மெசேஜை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கும். எரிச்சலாகிப் போனது.

மூன்று நாட்கள் பெரும்பாடாகிவிட்டது. ஜெயக்குமாரின் இன்னொரு ஃபோனை எடுத்துக்கொண்டு அதில் எனது நம்பரை போட்டு, மூன்றாவது ஃபோனில் லோக்கல் யு ஐ ஈ நம்பரைப் போட்டு எப்படியோ அடித்துப் பிடித்துச் சமாளித்தேன்.

மூன்று நாள் கழித்து நான்காவது நாள் இன்று எனது ஃபோனை எரிச்சலுடன் ஆன் செய்த போது, அது அன்லாக் செய்யப்பட்டிருக்கிறது. இன்று தான் உயிர் வந்தது போல் இருக்கிறது. இப்போது ஃபோன் பேக்கப் ஆகிக் கொண்டு இருக்கிறது.

ஏன் இந்தப் பைத்தியக்காரத்தனமான நடைமுறை எனப் புரியவில்லை. நான் முன்பே துபாயில் நான்கு வருடம் இருந்திருக்கிறேன் என்பதாலும் அபுதாபியில் எப்படியும் ஜெகேவுடன் பேசி விடலாம் என்ற தைரியம் இருந்தாலும் எனக்குப் பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் இப்படி அமையாது. இதே போல் ஒரு பெண் அல்லது முதல்முறை வருபவர்கள் தனியாக வந்து மொழி தெரியாத ஊரில் மாட்டிக் கொண்டிருந்தால் உண்மையில் நொந்து போய் இருப்பார்கள். இன்பினிக்ஸ் போன் வைத்திருப்பவர்கள் அல்லது வேறு பிராண்ட் போன் வைத்திருப்பவர்கள் அமீரகத்துக்குள் வரும்போது கவனமாக இருங்கள்.

தமிழ்நாட்டின் பொக்கிஷமான எனக்கே இந்தக் கதி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Share

Pradhosha and Makudesuvaran

பிரதோஷம் என்பதற்கு மகுடேசுவரன் அளித்த விளக்கம் தொடர்பான பரிமாற்றங்களைப் பார்க்கிறேன்.

மகுடேசுவரன் முக்கியமான தமிழ் அறிஞர். 2000ம்களில் சுஜாதாவுடனான மின்னம்பலம் அரட்டையின்போதே அவர் பல ஆங்கில வார்த்தைகளுக்குத் தமிழ் வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டிருப்பார். பல எனக்குச் சிரிப்பாக இருக்கும். ஆனாலும் அவர் எந்தக் கிண்டலையும் பொருட்படுத்தாமல் அவர் மனதுக்குப் பட்டதைச் சொல்லிக்கொண்டே இருப்பார். இது மிக முக்கியமான உந்துசக்தி. தேவையான ஒன்று. இது இல்லாவிட்டால் யாராலும் சாதிக்க முடியாது.

ஸ்டம்புக்கு முக்குச்சி, ஃபேஸ்புக்கிற்கு முகப் புத்தகம் போன்றவை எனக்கு ஒவ்வாதவை. அதேசமயம், இது போன்ற தனித் தமிழ் தீவிர ஆர்வலர்கள் இல்லாவிட்டால் தமிழ் மொத்தமாக அழிந்துவிடும் அபாயம் உண்டு என்பதாலும், இவர்கள் தோற்றுவிக்கும் பல வார்த்தைகளில் சில ஊன்றி நின்றாலும் (பேருந்து, தொடர்வண்டி போன்றவை) அவை தமிழுக்குச் செழுமை சேர்ப்பவை என்பதாலும், இவர்கள் மீது எனக்கு எப்போதும் (கிண்டலைத் தாண்டிய) மரியாதை உண்டு. பல முறை இதைச் சொல்லி இருக்கிறேன். மகுடேசுவரன் மீதும் அப்படியே.

ஆனால் பிரதோஷம் என்கிற வார்த்தை குறித்து மகுடேசுவரன் சொல்லி இருப்பது தவறான விளக்கம். அதைச் சரியாக மற்றவர்கள் சுட்டிக் காட்டும்போது, அதில் ஓர் ஏளனத் தொனி கலந்துவிட்டது உண்மைதான் என்றாலும், அந்தத் தொனியைக் கண்டிக்கவேண்டியது மகுடேசுவரனின் தனிப்பட்ட உரிமைதான் என்றாலும், அதைத்தாண்டி, விளக்கத்தை ஏற்றுக்கொள்வது அவசியம்.

பற்பல வார்த்தைகளுக்குத் தமிழில் அருவி போலக் கொட்டிக்கொண்டிருக்கும் போது ஒன்றிரண்டு தவறுவது இயல்பு. அதை ஏற்றுக் கொள்வதே சிறப்பு.

எனக்கு வருத்தம் தந்தது அல்லது ஆச்சரியம் தந்தது அல்லது எரிச்சல் தந்தது, மகுடேசுவரனின் சிறிய சறுக்கல அல்ல, அதற்கான ஆதாரமாக தினமலர் யூடியூவை அவர் காட்டியதுதான். மகுடேசுவரன் தனது திறமையும் உயரமும் என்ன என்பதை அவரே இன்னும் உணரவில்லை என்று நினைக்க வைத்துவிட்டது.

பாலகுமாரன் ஒரு கதையில் எழுதிய நினைவு. தமிழ் தெரியாத ஒரு பத்திரிகையாளர் திருமனம் என்று எழுத, அது திருமனம் அல்ல, திருமணம் என்று பலர் சுட்டிக்காட்ட, பத்திரிகையாளர் அதற்கு விளக்கமாக, “திருமணம் என்பது சரியாக இருக்க முடியாது. இரு மனங்கள் இணைவது என்பதால் திருமனம் என்பதே சரியாக இருக்கமுடியும்” என்றாராம்.

சிறிய தவறை அப்போதே ஒப்புக்கொண்டு அதைத் தாண்டிப் பல தூரம் பறப்பதே அறிஞர்களுக்கு அழகு.

Share